arrow_back

கைலாசமய்யர் காபரா

கைலாசமய்யர் காபரா

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள் "அச்சமில்லை; அச்சமில்லை" என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டுக் கைலாசமய்யர் பயந்து கட்டிலிருந்து கிழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்!