கணையாழியின் கனவு
அமரர் கல்கி
கனவுதான்; ஆனாலும், எவ்வளவு இன்பகரமான கனவு! அசோக வனத்திலிருந்த சீதையிடம் திரிஜடை தான் கண்ட கனவைக் கூறி வந்தாள். சீதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாகத் திரிஜடை, "....இராவணனுடைய மாளிகையிலிருந்து செந்தாமரையாள் ஆயிரம் முகமுடைய திருவிளக்கைக் கையில் ஏந்திக் கிளம்பி வந்து விபீஷணன் மனையில் புகக் கண்டேன். ஜானகி! இத் தருணத்தில் நீ என்னை எழுப்பவே கண் விழித்தேன்" என்று கூறி முடித்தாள். அப்போது சீதை, "அம்மா! மறுபடியும் தூங்கு, அந்தக் கனவின் குறையையும் கண்டுவிட்டு எனக்குச் சொல்லு" என்று வேண்டிக் கொண்டாள்.