மயில்விழி மான்
அமரர் கல்கி
அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி. பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் சென்று அந்த வண்டிக்குப் பழக்கமாயிருந்தது. ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது மைல் வேகத்துக்குக் குறைவாகப் போக முடியவில்லை.