arrow_back

நாடகக்காரி

நாடகக்காரி

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன் சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர் அதைக் 'கடவுளின் கருணை மழை' என்றார்கள். வேறு சிலர், "இப்படிப் பயங்கரமான புயலில் ஏறிக் கொண்டுதானா வர வேண்டும்? இனிய செந்தமிழையொத்த மெல்லிய தென்றல் காற்றிலே மிதந்து வரக் கூடாதா?" என்றார்கள். அவரவர்களுக்கு நேர்ந்த சௌகரிய - அசௌகரியங்களைப் பொறுத்து எதையும் முடிவு செய்வது தான் மானிட இயற்கை. எனக்கு அச்சமயம் கடவுளின் கருணையின் பேரில் வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில், அக்கருணையின் காரணமாக நான் நள்ளிரவில் மாயவரத்துக்கும் சீர்காழிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும்படி நேர்ந்தது.