arrow_back

ஒன்பது குழி நிலம்

ஒன்பது குழி நிலம்

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் கிராமத்திலும் அவருக்கு நிலங்கள் உண்டு. ஆடுமாடுகளுக்கும், ஆள் படைகளுக்கும் குறைவில்லை. அவரைவிடப் பெரிய தனவந்தரின் புதல்வியாகிய அவருடைய வாழ்க்கைத் துணைவி அருங்குணங்களுக்கெல்லாம் உறைவிடமாய் விளங்கினாள். செல்வப் பேற்றில் சிறந்த இந்தத் தம்பதிகளுக்கு ஆண்டவன் மக்கட் பேற்றையும் அருளியிருந்தான். மூத்த புதல்வன் சுப்பிரமணியன் சென்னையில் ஒரு கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பற்றிச் சீனிவாசம் பிள்ளை கொண்டிருந்த பெருமைக்கு அளவே கிடையாது. பி.எல். பரீட்சையில் தேறியதும் மைலாப்பூரில் பங்களாவும், 'போர்டு' மோட்டார் வண்டியும் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அவருடைய புகழோ, எங்கும் பரவியிருந்தது. சுற்றிலும் மூன்று தாலுக்காக்களில் கமலாபுரம் பெரிய பண்ணைப் பிள்ளையின் பெயரைக் கேள்விப்படாதவர் எவருமில்லை.