arrow_back

ஊருக்குள் ஒரு புரட்சி

ஊருக்குள் ஒரு புரட்சி

சு. சமுத்திரம்


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க 'யந்திர வாதிகளின்' ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள், இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள் தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு ஓரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், 'ஜாதிக்' குடிசைகளும், 'சேரிக்' குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை, பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கௌதம முனிவரை திசை திருப்பும் 'இந்திர' சேவலல்ல இது. விடியு முன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.