ஒரு வெறுப்பின் மறுபுறம்
என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த வெறுப்பு அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. அந்த வெறுப்பின் காரணத்தையோ மூலத்தையோ அவர் ஆராய்ந்ததில்லை.
சமய சந்தர்ப்பங்களும் அவள் காண்பித்த திறமைகளும் கூட அந்த வெறுப்பைத் தளர்த்தவோ மாற்றி அமைக்கவே முடியவில்லை. அவளது அபரிதமான அழகையும் மிஞ்சிய வெறுப்பாயிருந்தது அது. ஒரு பிரபலமான தினசரியில், திரைப்படம், நாடகம், நாட்டியம் போன்ற நுண்ணிய கலைகளுக்கு விமர்சனம் எழுதும் 'ஆர்ட் க்ரிடிக்' அவர். அவருடைய விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. அவர் இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து எழுத மாட்டாரா என்ற ஏக்கமும் கலைஞர்களிடையே இருந்து வந்தது. பெரும்பாலான கலைஞர்கள் அவரை அண்ணா என்றே பவ்யமாக அழைத்தனர்.
அதற்கு அவர் எழுதி வந்த தினசரியும் ஒரு காரணம். தேசீய அளவில் பரந்த செல்வாக்கும், சர்வ தேச மரியாதையும் உள்ளதாயிருந்தது அது. அவரும் மூத்த அநுபவசாலியாயிருந்தார்.
புதிதாக வந்த சுகுணகுமாரியின் மேல் மட்டும் அவர் ஏன் அத்தனை வெறுப்பைக் காண்பித்து வந்தார் என்பது பெரும் புதிராயிருந்தது. பலருக்கு அது விளங்கவே இல்லை. படிப்படியாக முன்னேறிச் சுகுணகுமாரி நாடகத்தில் நடித்த போது, "இவள் நடிப்பது நாடகக் கலைக்கே அவமானம் உண்டாக்கக் கூடியது" என்று எழுதினார் அவர்.
பின்பு அவள் நடனம் கற்று அரங்கேறியபோது, "காக்கை வலிப்பு வந்த மாதிரி மேடை மேல் உதறி நடுங்கிக் கை கால்களை விதிர் விதிர்ப்பது எல்லாம் நடனம் ஆகிவிடுவதில்லை" என்று சுடச்சுட வெளுத்துக் கட்டியிருந்தார்.
நாடக அனுபவம், நாட்டியத் தகுதியாகிய இரண்டும் இளமையும் வனப்பும் கவர்ச்சியும் நிறைந்த உடலழகும் அவளைச் சினிமாவில் நாயகியாக நடிக்க வாய்ப்பளித்த போது, "இன்றைய சினிமா உலகம் எந்தத் தீமையையும் எந்த மோசத்தையும் எந்தச் சுமார் ரகத்தையும் ஏற்க முடியும். அது இப்போது சுகுணகுமாரியையும் ஏற்றிருக்கிறது" என்று கடுமையாக எழுதினார் அவர்.
பிற இளம் விமர்சகர்கள் சிலரும், இளம் கலைஞர்களும், "எல்லாவற்றையும் கடுமையாகத் தாக்கி எழுதினால் மற்றவர்களுக்குத் தம்மேல் பயமும் மரியாதையும் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அவர் தாக்கி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது கூட உண்டு. அவர்கள் தம்மைப் பற்றி அப்படிப் பேசிக் கொள்வது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்கள் அவரை மதித்தனர். அவருக்கு அஞ்சினர்.
சில துணிச்சலான இளம் விமர்சகர்களும் கலைஞர்களும் அவருக்குக் 'கிழட்டுப் புலி' என்று கூட ஒரு பட்டப் பெயர் சூட்டியிருந்தார்கள். சமயா சமயங்களில் தமக்குத் தாமே நினைத்துப் பார்க்கும் போது கூட அந்தக் காரணம் பொய் அல்ல என்று அவருக்கே தோன்றியது. ஆனால் உள்ளூறச் சில சந்தேகங்களும் அவருக்கே உண்டு தான். தாமாகவே மற்றவர்களிடம் பேசும்போது சவடாலாக ஏதாவது சொல்லி வந்தார். தம்முடைய பெருமையையும் மரியாதையையும் உயர்த்திக் கொள்வதற்காகப் பிறருடைய பெருமையைக் குறைத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை. அது ஒரு பழக்கமாகவே கூட ஆகியிருந்தது.