Paandimaa Thevi

பாண்டிமாதேவி

‘பாண்டி மாதேவி’ என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்திருந்த நேரம்.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

ஆசிரியர் முன்னுரை

'பாண்டிமாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப் போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர்விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப் போய்த் திளைத்திருந்த நேரம்.

நீலக்கண்ணாடிப் பாளங்கள் போல் அலையெழும்பி மின்னி ஓசையிட்டுப் பரந்து தென்படும் கடலும், அதன் கரையும், காலை மேளமும் நாதசுவரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் குமரித் தெய்வத்தின் கோவிலும் - என் மனத்தில் பல்லாயிரம் எண்ணப் பூக்களை மலரச் செய்தன. இப்போது தென் கடலாக மாறிவிட்ட இந்த நீர்ப்பரப்பின் எங்கோ ஒரு பகுதியில், தமிழ் நாகரிகம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வீறெய்திய நினைவு தோன்றிற்று. குமரித் தெய்வம் குன்றா அழகுடன் கன்னிமைக் கோலம் பூண்டு நின்று தவம் செய்யும் தென்பாண்டிச் சீமையின் வரலாற்று வனப்புக்கள் எல்லாம் நினைவில் வந்து நீளப் பூத்தன. 'தென்பாண்டி நாடு', 'புறத்தாய நாடு', 'நாஞ்சில் நாடு' என்றெல்லாம் குறிக்கப்படும் வளம் வாய்ந்த நாட்டின் சூழலை ஒரு வரலாற்று நாவலில் புனைந்து போற்ற வேண்டுமென்ற ஆவல் அன்று அந்தக் காலை நேரத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் என் மனத்தில் எழுந்தது. அதன் பின் சிறிது காலம், அந்த ஆவல் நெஞ்சினுள்ளேயே கனிந்து, கனிந்து ஒரு சிறிய தவமாகவே மாறிவிட்டது. அந்தத் தவத்தோடு பல நூல்களைப் படித்தேன். பலமுறை தென்பாண்டி நாட்டு ஊர்களில் சுற்றினேன். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் படித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே எனக்கு வரலாற்று அழகுகளிலும், அவை தொடர்பான கற்பனைகளிலும் திளைக்கும் ஆர்வம் உண்டு. பின்பு இந்த ஆர்வம் வளர்ந்து பெரிதான காலத்தில் நண்பர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் இதை மேலும் வளர்த்தார்கள்.

கன்னியாகுமரிக் கடற்கரையில் அன்று நான் கண்ட கனவுகள் நனவாகும்படி வாய்ப்பளித்து உற்சாகமூட்டியவர் கல்கி ஆசிரியர் திரு.சதாசிவம் அவர்கள் ஆவார். 'பாண்டிமாதேவி' - என்னும் இந்த வரலாற்று நாவலைக் கல்கியில் ஓராண்டுக் காலம் வரை வெளிவரச் செய்து ஊக்க மூட்டியவர் அவர் தாம். பேராசிரியர் கல்கி அவர்கள் தம்முடைய மாபெரும் சரித்திர நாவல்களால் அழகுபடுத்திய இதழ் கல்கி. அந்த இதழில் 'பாண்டிமாதேவி'யும் வெளியாகி அழகு படுத்தினாள் என்பதை நினைக்கும் போது எனக்குப் பெருமையாயிருக்கிறது. இந்த நாவல் கல்கியில் வெளியான காலத்தில் வாசகர்கள் காட்டிய ஆர்வம் என்னை மிகப் பெரிதும் உற்சாகப் படுத்தியிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து கொடுத்த பெருமை இது! எல்லோரும் சேர்ந்து பங்கு கொள்ள வேண்டிய பெருமை இது! நான் எழுதினேன் என்பதற்கு வெட்கமாக இருக்கிறது, 'என்னைக் கொண்டு பாண்டிமாதேவி தன் கம்பீரமான கதை எழுதிக் கொண்டாள்' - என்று சொல்லி விட்டால் இப்படி ஓர் அகங்காரத்திற்கு இடமே இல்லை. நான் என்னுடைய கடைசிக் கதையை எழுதுகிற வரை, எழுதிக் கையும், மெய்யும், உணர்வும், தளர்ந்து எழுது கோல் கை நழுவி ஒடுங்கும் வரை இப்படி ஒரு அகங்காரம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எக்காலமும் இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கிறேன். கலைத் துறைக்கு அகங்காரம் பெரிய விரோதி. கல்லில் அதன் இறுக்கம் காரணமாகவே எதுவும் முளைத்துத் தழைக்க முடியாமல் போவது போல் அகங்காரம் இரசனையைக் கெடுத்து விடுகிறது. அகங்காரம் என்ற இறுக்கத்தில் எதுவும் முளைக்கவும், தழைக்கவும் முடியாமல் போகிறது. எனவேதான் 'இந்த அகங்காரம்' ஏற்பட்டு விடக்கூடாதென்று நான் அஞ்சுகிறேன். கடலையும் வானத்தையும், மண்ணையும் அதைப் படைத்த படைப்புக் கடவுளே அவற்றுக்காக அகங்காரப் பட்டதாகத் தெரியவில்லை. மகா காவியங்களை எழுதிய கவியரசர்கள் அவற்றுக்காக அகங்காரப்பட்டதாகத் தெரியவில்லை. கேவலம் கதைகளை உரைநடையில் எழுதிப் புகழ் பெறுவதற்காக நான் அகங்காரப்படுவது எந்த வகையில் பொருந்தும்? கலைத்துறையில் என்றும் மாணவனாக இருப்பதற்கே விரும்புகிறேன் என்று கூறிவிட்டு முன்னுரையை மேலே தொடர்கிறேன்.

இனி இந்த நாவலுக்கான சரித்திரச் சாயல்களைப் பற்றிச் சில கூறவேண்டும். திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பாண்டியர் வரலாறு நூலில் 'கி.பி. 900 முதல் 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்' - என்ற தலைப்பின் கீழ் மூன்றாம் இராசசிம்ம பாண்டியனைப் பற்றிக் காணப்படுகிறது. மூன்றாம் இராசசிம்ம பாண்டியனைப் பற்றிய மெய்க் கீர்த்திக் குறிப்புகளும் எனக்கும் பயன்பட்டன. மேலும் கடிதம் எழுதிக் கேட்ட போதெல்லாம் பண்டாரத்தாரவர்கள் சிரமத்தைப் பாராமல் ஐயம் நீக்கி உதவியிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலையைப் பின்புலமாகக் கொண்டு இன்னும் சில இன்றியமையாத குறிப்புகளையும், பாத்திரங்களையும் கதைக்காகப் புனைந்து கொள்ள வேண்டியிருந்தது. கதை நிகழும் முக்கியக் களமாகத் தென்பாண்டி நாட்டை அமைத்துக் கொண்டேன். கதையின் பிற்பகுதியில் ஈழநாட்டுப் பகுதிகளும் பின்புலமாக அமைந்தன.

இந்தக் கதையின் பாத்திரங்களில் என்னை அதிகமாக வேலை வாங்கியவர் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பிதான். வாசகர்களின் அறிவுக்குப் பெரிதும் வேலை கொடுத்து ஒவ்வொரு விநாடியும் சிந்தனையில் பிரமிப்பூட்டிக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அடுத்துத் தமிழ்நாட்டுத் தாய்மைப் பண்பின் புனித வடிவமாகச் சாந்த குணமே இயல்பாய் வானவன்மாதேவி வருகிறார். நிறைவு பெறாத சபலங்களையும், முயற்சிகளையும் கொண்டு வாழவும், ஆளவும், போராடுகிற குமாரபாண்டியன் இராசசிம்மன் வருகிறான். மற்றும் தளபதி வல்லாள தேவன், நாராயணன் சேந்தன், பகவதி, மதிவதனி, விலாசினி, சக்கசேனாபதி போன்றோரும் இந்தக் கதையில் வருகின்றனர்.

தொல்காப்பியம் அரங்கேறுகிற காலத்திருந்த அதங்கோட்டாசிரியரின் வழி முறையினராகக் கருதப் பெறும் பிற்காலத்து அதங்கோட்டாசிரியர் ஒருவரும், பவழக் கனிவாயர் என்பவரும், கதை நிகழ்ந்த காலத்துப் பெரியோர்களாக வருகின்றனர்.

இந்த வரலாற்றுப் பெருங்கதையில் யான் பல ஆண்டுகளாகப் படித்த தமிழ் இலக்கியக் கருத்துக்களையும், அழகான தத்துவங்களையும் அங்கங்கே இணைத்திருக்கிறேன். தமிழ் நாட்டின் பழைய வாழ்க்கை மரபுகளையும், ஒழுகலாறுகளையும் கவனமாகவும், பொருத்தமாகவும், கையாண்டிருக்கிறேன். ஆனால், கதையின் சுவையும், விறுவிறுப்பும் கெடாதவாறு பாலில் குங்குமப்பூ போல அவற்றைக் கரையச் செய்திருக்கிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் எளியேனுடைய இந்தக் கதையை ஆர்வத்தோடு படித்து நேரில் கூப்பிட்டும் ஆசியுரை அருளினார்கள். மறக்க முடியாத பாக்கியம், பெரியவர்களின் இந்த ஆசியுரைதான். இதை எக்காலத்தும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டியவன் நான்.

இறுதியாக, இப்படி ஒரு கதையை எழுதும் திடத்தையும் ஆற்றலையும் அளித்து என்னை யாண்டருளிய இறைவனுக்கு வணக்கம் தெரிவித்து என் முன்னுரையைத் தெய்வத் தியானத்தோடு முடிக்கிறேன்.

அன்பன் நா. பார்த்தசாரதி

1. நீலத் திரைக்கடல் ஓரத்திலே

இன்பம் நிறைந்து பொங்கும் இயற்கையின் மகிழ்ச்சி வெள்ளம் போல் பொன்னிறம் போர்த்ததோர் அழகிய மாலைப் பொழுது, மேலே மஞ்சள் வானம்; கீழே நீலத் திரைக்கடல்; கரைமேல் குமரியன்னையின் ஓங்காரம் முழங்கும் தேவகோட்டம்.

'ஏ! கடலே? சங்கமிருந்து தமிழ் வளர்த்த கபாடபுரத்தையும், தென் மதுரையையும் விழுங்கி உன் தமிழ்ப் பசியைத் தீர்த்துக் கொண்டாய்! இனி உன்னை இந்தத் தமிழ் மண்ணில் அணுகளவு கூடக் கவர விடமாட்டேன்' என்று கடலுக்கு எச்சரிக்கை செய்வது போல் குமரி கன்னியா பகவதியார் கோயிலின் மணியோசை முழங்குகிறது! சங்கொலி விம்முகிறது! ஆயிரமாயிரம் அலைக் குரல்களால் ஓலமிடும் அந்தப் பெருங்கடல் குமரித்தாயின் செந்தாமரைச் சிறு பாதங்களைப் பயபக்தியோடு எட்டித் தொட்டு மீள்வது போல் நீண்ட மதிற்சுவரில் மோதி மீண்டு கொண்டிருக்கிறது.

அந்த மாலைப்பொழுது ஒவ்வொரு நாளும் வந்து போகிற சாதாரண மாலைப் பொழுதுகளில் ஒன்றா? அல்லவே அல்ல! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் செந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் காலத்தால் அழிக்க முடியா நினைவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடமாக அமைந்த மாலைப் பொழுது அது!

தென்பாண்டிப் புறத்தாய நாடாகியா நாஞ்சில் நாட்டின் அரசுரிமையும், அமைதியும், குழப்பமான சூழ்நிலைகளால் அவதியுற்றுக் கொண்டிருந்த போது அதற்கான நல்ல, அல்லது தீய முடிவை உருவாக்க வேண்டிய பொறுப்பு அந்த அழகிய மாலை நேரத்துக்கு ஏற்பட்டிருந்தது. தென் தமிழ்நாட்டின் காவற் பொறுப்பை ஏற்க வேண்டிய பொறுப்பை தம் வாழ்நாளில் அந்தப்புரத்தினின்றும் வெளியேறியறியாத ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்பட வேண்டிய நிலை.

அண்டை நாட்டில், சோழ அரசன் ஆதரவற்ற தென்பாண்டி நாட்டை எப்போது கைப்பற்றலாமென்று படை வசதிகளோடு துடித்துக் கொண்டிருக்கிறான்.

மகா மன்னரும், திருபுவனச் சக்கரவர்த்தியும், சென்ற போரெல்லாம் வெற்றியே அடைந்தவருமான சடையவர்ம பராந்தக பாண்டியர் பள்ளிப்படை எய்தி இறைவனடி சேர்ந்துவிட்டார். பாண்டிய நாடு துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம். பராந்தக பாண்டியரின் புதல்வராகிய இராசசிம்ம பாண்டியன் இளைஞன். காலஞ்சென்ற மகா மன்னரின் கோப்பெருந்தேவியான வானவன்மாதேவியார் கணவனை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. யாராவது படையெடுத்து வந்தாலும் எதிர்த்துப் போர் செய்ய இயலாத இந்த நிலையில் சோழ அரசனும் கொடும்பாளூர்க் குறுநில மன்னனும் படையெடுத்து வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். இளைஞனான இராசசிம்ம பாண்டியன் சோழனாலும், கொடும்பாளூர்க் குறுநில மன்னனாலும் துரத்தப்பட்டு அவர்களுக்கு அஞ்சி இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டான்.

கோப்பெருந்தேவியாகிய வானவன்மாதேவி தென்பாண்டி நாட்டில் பறளியாற்றின் கரையிலிருந்த புறத்தாய நாட்டுக் கோட்டையில் போய்த் தங்கியிருந்தார். கணவனை இழந்த கவலை, போரில் தோற்று இலங்கைத் தீவுக்கு ஓடிய மகனைப் பற்றிய வருத்தம், வடபாண்டி நாட்டை அபகரித்துக் கொண்ட எதிரிகள் தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டுக்கும் படையெடுத்து வந்து விடுவார்களோ என்ற பயம் ஆகியவற்றால் தவித்துக் கொண்டிருந்த வானவன்மாதேவியைத் துணிவான ஒரு முடிவுக்கு வரச் செய்த பெருமை அந்த மாலை நேரத்துக்குத்தான் உண்டு.

புறத்தாய நாட்டுக் கோட்டையில் வந்து தங்கியிருந்த வானவன்மாதேவி தென்பாண்டிக் குலதெய்வமாகிய குமரியன்னையைத் தொழுவதற்காக வந்திருந்தார். பறளியாற்றின் கரையிலிருந்து குமரித்துறை வரையிலும் அங்கங்கே வாழையும், தோரணமும், பாளையும் கட்டி மகாராணியாரின் வருகையில் தங்களுக்குள்ள ஆர்வத்தை அலங்கரித்துக் காட்டியிருந்தனர் நாஞ்சில் நாட்டுப் பெருமக்கள். கோட்டையிலிருந்து இருபுறமும் திறந்த அமைப்புள்ள பல்லக்கில் பயணம் செய்த தேவிக்கு கூட்டத்தைக் கண்டு புதிய ஊக்கம் பிறந்தது. கணவன் மறைந்த சோகமும், மகன் ஓடிப்போன துன்பமும் நினைவின் அடிப்பள்ளத்தில் அமுங்கிவிட்டன.

'புவன முழுதுடைய மகாராணி வானவன்மாதேவி வாழ்க!' என்று நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்களின் பல்லாயிரம் பல்லாயிரம் குரல்கள் வாழ்த்தொலி செய்தபோது, சோகத்தில் புழுங்கிய அரசியின் உள்ளம் பெருமிதமுற்றது.

'எதிரிகள் கைப்படாமல் எஞ்சியிருக்கும் தென்பாண்டி நாட்டை என் உயிரின் இறுதி மூச்சு உள்ளவரையில் அன்னியர் வசமாக விடமாட்டேன்' என்ற சபதத்தைத் தனக்குத் தானே செய்து கொண்டார், மகாராணி வானவன் மாதேவி. கன்னியாகுமரியை வானவன்மாதேவி அடைந்தபோது ஏற்கெனவே வேறு சில முக்கியப் பிரமுகர்கள் அங்கு முன்பே வந்து காத்திருந்தனர். அப்படிக் காத்திருந்தவர்கள் எல்லோரும் நாஞ்சில் நாட்டு அரசியல், கலை, அமைதி ஆகிய பலப்பல துறைகளில் அக்கறையுள்ளவர்கள் ஆவர்.

கோட்டாற்றில் தங்கியிருக்கும் பாண்டியர்களின் தென் திசைப் பெரும் படைக்குத் தளபதியான வல்லாளதேவன், நிலந்தரு திருவிற்பாண்டியன் காலத்திலிருந்து வழிமுறை வழிமுறையாக அறிவுப்பணி புரிந்துவரும் ஆசிரிய மரபில் வந்த அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக்கனிவாயர் முதலிய பிரமுகர்கள் மகாராணியாரைப் பணிவன்புடன் எதிர்கொண்டு வரவேற்றனர்.

கன்னியாகுமரிக் கடலைக் காண வேண்டுமானால் பௌர்ணமி தினத்தின் மாலை நேரத்தில் காண வேண்டும். அன்று தற்செயலாக வாய்த்த ஒரு பெரும் வாய்ப்பைப் போலப் பௌர்ணமியும் வாய்த்திருந்தது.

"மகாராணி! இப்படி வாருங்கள்? உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார் அதங்கோட்டாசிரியர். வானவன்மாதேவியையும் மற்றவர்களையும் கடலோரத்துப் பாறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கிழக்கிலும், மேற்கிலும் சுட்டிக் காட்டினார் அவர்.

மூன்று புறமும் நீல நெடுங்கடல் தரங்கங்கள் என்னும் கரங்கொட்டிப் பண்பாடும் அந்த இடத்தில் அவ்வற்புதக் காட்சியை மகாராணி அதற்குமுன் கண்டதில்லை. "ஆசிரியப் பெருந்தகையே! இது என்ன விந்தை! இந்த இடத்தில் மட்டும் இரண்டு சூரியன்களா?" என்று கிழக்கிலும் மேற்கிலும் தனித்தனியே கடலின் இரு கோடி விளிம்புகளிலும் தெரியும் இரண்டு ஒளி வட்டங்களைப் பார்த்துக் கொண்டே அதங்கோட்டாசிரியரை வியப்புடன் கேட்டார் அரசி.

அந்தக் கேள்வியைக் கேட்டு அதங்கோட்டாசிரியர் சிரித்தார்.

"மகாராணி! இவை இரு சூரியன்கள் அல்ல. ஒன்று சந்திரன்; மற்றொன்று சூரியன். பௌர்ணமி நாட்களில் மட்டும் குமரித்தாய் இந்த அற்புதக் காட்சியை முழு அழகோடு நமக்குக் காட்டுகிறாள். சந்திரோதயத்தையும், சூரியாஸ்தமனத்தையும் ஒரே சமயத்தில் இந்த இடத்தில் நின்று காணலாம். சக்கரவர்த்தி இங்கு வரும்போதெல்லாம் பௌர்ணமி நாளாகப் பார்த்துத்தான் வருவார். எத்தனை முறை பார்த்தாலும் இது அவருக்கு அலுக்காது."

காலஞ்சென்ற கணவரைப் பற்றிய பேச்சைக் கேட்க நேர்ந்ததும் மகாராணியாருக்குக் கண் கலங்கி விட்டது. அதங்கோட்டாசிரியர் உதட்டைக் கடித்துக் கொண்டார். பேச்சுப் போக்கில் தாம் செய்த தவறு அவருக்குப் புரிந்து விட்டது.

"அடாடா, மகாராணியாருக்கு வருத்தத்தை நினைவு கூறும்படியான விதத்தில் அல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி ஞாபகப்படுத்தி விட்டேன்; என்னை மன்னிக்கவேண்டும்" என்று அவர் மெல்லிய குரலில் கூறினார்.

வானவன்மாதேவி கண்களைத் துடைத்துக் கொண்டார். மறுபடியும் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தார். அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் மற்றொரு அதிசயக் காட்சியைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.

எந்தப் பாறையில் நின்று மகாராணியாரும், மற்றவர்களும் கடலில் தென்பட்ட அதிசயத்தை நோக்கிக் கொண்டிருந்தார்களோ, அதன் வடமேற்கு மூலையில் மாட்டுக் கொம்பு போலக் கீழே விரிந்து மேலே நுனிகள் ஒன்று கூடும் பாறைகள் இரண்டு இருந்தன. அந்தப் பாறைகளின் முக்கோண வடிவான இடைவெளியில் இரண்டு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன. பாறையின் மேல் நின்ற மற்றவர்களுக்கு அது கண் பார்வையிலே பட்டிருக்க முடியாது. பாறையின் உயர்ந்த இடம் எதுவோ, அதில் வல்லாளதேவன் நின்று கொண்டிருந்ததனால் தற்செயலாக அது அவன் பார்வையில் பட்டது. தங்களோடு வந்திருந்த பரிவாரத்தைச் சேர்ந்த வீரர்களில் யாராவது இருவர் கடற்காட்சியை வேடிக்கை பார்ப்பதற்காக இறங்கிப் போய் அந்தப் பாறை இடுக்கில் நின்று கொண்டிருக்கிறார்களோ என்ற இயல்பான எண்ணம் தளபதிக்கு உண்டாயிற்று. 'பரிவாரத்து வீரர்கள் கோவில் வாசலிலேயே தங்கிவிட்டார்களே! தவிர அவர்களில் யாரும் சிவப்புத் தலைப்பாகை அணிந்தவர்கள் இல்லையே?' என்று ஐயம் மெல்ல அவன் மனத்தில் எழுந்தது. 'தான், அதங்கோட்டாசிரியர், மகாராணியார், பவழக்கனிவாயர் ஆகிய நால்வரைத் தவிர வேறு வீரர்கள் எவரும் கடற்கரைப் பாறைக்கு வரவே இல்லை' என்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் தளபதியின் சந்தேகம் வலுப்பட்டது. பாறையை ஒட்டித் திடீர் திடீரென்று ஆள் உயரத்துக்கு அலைகள் எழும்போது அந்தத் தலைப்பாகைகள் அவன் கண் பார்வைக்குத் தெரியாமல் மறைந்து விடும். அலைகள் தணிந்த போது மறுபடியும் தெரியும்.

தளபதி வல்லாளதேவன் நீண்ட நேரமாக அந்தப் பாறை இடுக்கையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் தேவியின் ஆலயத்துக்குத் திரும்புவதற்காகப் பாறையிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டனர்.

"என்ன ஐயா, தளபதியாரே! கோவிலுக்கு வரவில்லையா? வீரர்களுக்கு அழகு உணர்ச்சி குறைவு என்று சொல்லுவார்கள். நீர், கடலின் அழகை வைத்த கண் வாங்காமல் காண்பதைப் பார்த்தால் வீரர்களுக்குத்தான் அழகு உணர்ச்சி அதிகமென்று துணிந்து கூறிவிடலாம் போலிருக்கிறதே?" என்றார் அதங்கோட்டாசிரியர்.

"அழகை எங்கே அவர் பார்க்கப் போகிறார்? இந்தக் கடலில் எத்தனை போர்க் கப்பல்களை எப்படி எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பார்," என்றார் பவழக்கனிவாயர்.

"உங்கள் இரண்டு பேருடைய அநுமானங்களுமே தவறு. நான் வேறொரு காரியமாக நிற்கிறேன். சிறிது தாமதமாகலாம். நீங்கள் மகாராணியாரை ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று தளபதி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான்.

அவர்கள் மூவரும் பாறையிலிருந்து இறங்கிச் செல்லத் தொடங்கிய அதே சமயத்தில் கீழே கடற்கரைப் பாறையின் பிளவில் தெரிந்த அந்தச் சிவப்புத் தலைப்பாகைகள் மெல்ல நகர்ந்து அசைவதை வல்லாளதேவன் கண்டான். எண்ணற்ற தீரச் செயல்களைச் செய்து பழக்கப்பட்டவனும், தென்கடற் கோடியில் பல கடற்போர்களில் வாகை சூடியவனுமான தென் திசைத் தளபதியின் மனத்தில் இனம் புரியாத திகில் பரவியது. சந்தேகங்களும், குழப்பங்களும் அடுக்கடுக்காகத் தோன்றின.

மாலை ஒளி குறைந்து பொழுது மங்கிக் கொண்டே வந்தது. ஆனாலும் முழுமதியின் நிலா ஒளியில் அந்த இடத்தை அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய அலை பாய்ந்து வந்து அந்தப் பாறைப் பிளவவ மறைத்தது. வல்லாளதேவன் திரும்பிப் பார்த்தான். கோவில் வாயிலில் கண்ணைக் கவரும் தீபாலங்காரங்களுக்கிடையே அர்ச்சகர்களின் வாழ்த்தொலியும், மங்கள வாத்தியங்களின் இன்னிசையும், அடிகள்மார் பாடும் பண்ணிறைந்த பாட்டொலியுமாக மகாராணியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

ஒரே ஒரு கணம்! அவன் மனத்தில் ஒரு சிறிய போராட்டம்! கோவில் வாயிலுக்குப் போய்க் கோலாகலமான வரவேற்பில் கலந்து கொள்வதா? கீழே இறங்கி அந்தக் கடலோரத்துப் பாறைப் பிளவில் மறைந்து கொண்டிருக்கும் 'தலைப்பாகை'களைப் பின் தொடர்வதா? இன்னும் ஓரிரு விநாடிகள் தாமதித்தாலும் மேடும் பள்ளமுமாக முண்டும் முடிச்சுமாக நெடுந்தூரம் பரவியிருக்கும் அந்தப் பாறை பிரதேசத்தில் குறிப்பிட்ட உருவங்கள் எந்த வழியாகச் சென்று எப்படி மறையுமென்று கூற முடியாது. ஆர அமரச் சிந்தித்து நிதானமாக ஒரு முடிவுக்கு வர அவனுக்கு அவகாசமில்லை.

அரைப் பனை உயரமுள்ள அந்தப் பாறை விளிம்புக்கு வந்து வேகமாகக் கீழே மணற் பரப்பில் தாவிக் குதித்தான். முழங்காலளவு கடல் நீரில் நடந்து சென்றால் தான் அந்தப் பாறைப் பிளவை நெருங்க முடியும். தளபதியின் கால்களில் அதற்கு முன்பில்லாத சுறுசுறுப்பும் விரைவும் ஏற்பட்டன. நீரைக் கடந்து செல்லும் போது குறுக்கிட்ட இரண்டொரு அலைகள் அவனை நன்றாக நனைத்துவிட்டன. வேகமாக வந்து முகத்தில் அறைந்த கடல் நீர் மூக்கின் வழியே வாயில் புகுந்து உப்புக் கரித்தது. கண்கள் காந்தின. எதிரே பார்க்காமல் நடந்ததால் பாறைகளில் இடித்து முழங்காலில் இரத்தம் கசிந்தது.

இடுப்பிலிருந்த உடைவாளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி ஏறி, முன்பு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்த பாறையின் இடைவெளியில் குதித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்; யாரையும் காணவில்லை.

'இதென்ன மாயமா? மந்திரமா? இவ்வளவு வேகமாக அந்த உருவங்கள் எப்படி வெளியேறியிருக்க முடியும்? ஒருவேளை அவை பொய்த் தோற்றமாக நம்முடைய கண்களுக்கு மட்டும் தெரிந்த பிரமையா' என்று எண்ணிக் கொண்டே மற்றொரு வழியாகக் கீழே செல்லும் பாதையில் வேகமாக நடந்தான். இரண்டு மூன்று அடிகளே நடந்திருப்பான்; வழியின் திருப்பத்திலிருந்து இருபுறமும் இரண்டு வாள் நுனிகள் பாய்ந்து நீண்டன!

2. ஆலயத்தில் ஆபத்து

ஆலயத்து வாசலில் மகாராணி வானவன்மாதேவியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்த போது வேறு இரண்டு புதிய பெண்கள் அங்கே பல்லக்கு மூலமாக வந்து சேர்ந்தனர். இந்தக் கதையின் எதிர்கால நிகழ்ச்சிகளில் எத்தனையோ பல மாறுதல்களை உண்டாக்கப் போகும் அழகும் இளமையும் நிறைந்த அந்தப் பெண்மணிகளை இங்கேயே நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி விட வேண்டியது அவசியம் தான். தரைப் பிரதேசத்தின் முடிவிடமாகிய அந்தக் கன்னியாகுமரிக் கோவில் முன்றிலில் வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் மூன்று பெரிய சாலைகள் திரிசூலத்தின் நுனியைப் போல வந்து ஒன்று கூடின.

நேர் வடக்கே செல்லும் சாலை புறத்தாய நாட்டுக் கோட்டை வழியே மதுரைக்கும், அதற்கப்பால் உறையூர், காஞ்சி முதலிய வடபால் நாட்டுத் தலை நகரங்களுக்கும் போவதற்குரிய மிக முக்கியமான இராஜபாட்டையாகும்.

கிழக்கே செல்லும் சாலை அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கோட்டாறு முதலிய நாஞ்சில் நாட்டுக் கீழ்ப்பகுதி ஊர்களுக்குப் போவது.

மேற்கே செல்லும் சாலை, சரித்திர ஏடுகளில் இடந்தோறும் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய பெருமையை உடையது. அதுவே காந்தளூர்ச்சாலை. கடற்கரை ஓரமாகவே மேற்கே சென்று தென் மேற்குக் கோடியிலுள்ள விழிஞம் என்னும் துறைமுகத்தோடு முடிவடைகிறது அது. தென்பாண்டி நாட்டின் படையெடுப்புகளுக்கும், வெற்றி தோல்விகளுக்கும் இந்த முப்பெரும் இராஜபாட்டைகள் எவ்வளவுக்கு எவ்வளவு காரணமாக இருந்திருக்கின்றன என்பதைக் கதைப் போக்கில் நேயர்கள் தெரிந்து கொள்வார்கள்.

மகாராணியாரைக் கோவில் வாயிலில் நிறுத்தி விட்டு நடுவே இந்தச் சாலைகளைப் பற்றிக் கூற நேர்ந்ததற்குக் காரணம், கதையில் புதிதாகப் பிரவேசிக்கும் பெண்கள் இருவரும் முறையே கீழ்ப்புறத்துச் சாலையிலிருந்தும், மேல்புறத்துச் சாலையிலிருந்தும் பல்லக்குகளில் வந்து இறங்குவதுதான்.

கோவிலுக்குள்ளே செல்வதற்கு இருந்த வானவன்மாதேவி, அதங்கோட்டாசிரியர், முதலியவர்கள் இருபுறத்துச் சாலைகளிலிருந்தும் பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தயங்கி நின்றனர்.

சிறிது தொலைவில் அந்தப் பல்லக்குகள் வந்து கொண்டிருக்கும் போதே அவைகளில் வருகிறவர்கள் யாராயிருக்கலாம் என்பதைப் பற்றி அதங்கோட்டாசிரியர் சொல்லிவிட்டார். "மகாராணி! என்னுடைய பெண் அநங்க விலாசினி தங்களைத் தரிசிப்பதற்காகக் காலையிலேயே என்னோடு புறப்பட்டு வருகிறேனென்றாள். நான் காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டியிருந்ததனால் அவளை உடன் அழைத்துக் கொண்டு வர முடியாமற் போய்விட்டது. மேற்கிலிருந்து வருகிற பல்லக்கு அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும். கிழக்கேயிருந்து வருகிற பல்லக்கு வல்லாளதேவனின் தங்கை பகவதியினுடையது. நீங்கள் வருவதற்கு முன் நானும் வல்லாளனும் பேசிக் கொண்டிருந்த போது, தன் தங்கை உங்களைக் காண வரப்போவதாகச் சொன்னான்" என்று அதங்கோட்டாசிரியர் மகாராணி வானவன்மாதேவியிடம் கூறிய அனுமானம் பிழையில்லாமல் இருந்தது.

"மிகவும் நல்லது! தென்பாண்டி நாட்டில் தமிழறிவு பரப்பும் உங்கள் மகளையும், வீரப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் தளபதியின் சகோதரியையும் காணும் பேறு எனக்குக் கிடைத்ததே! அது என்னுடைய பாக்கியம்" என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி வானவன்மாதேவி!

கோவிலுக்கெதிரே கூப்பிடு தூரத்தில் இரண்டு சாலைகளும் ஒன்று கூடுமிடத்தில் பல்லக்குகள் இறங்கி வைக்கப்பட்டன. இரண்டு பெண்களும் கீழே இறங்கி மகாராணிக்கு மரியாதை செய்யும் பாவனையில் அடக்க ஒடுக்கமாக நடந்து வந்தனர். அவர்களில் வலது புறமாக நடந்து வருகிறாளே, செந்தாழை மடல் போன்ற நிறமும், சிரிப்பைச் சிறை பிடித்து வைத்திருக்கும் செவ்வாயுமாக; அவள் தான் அதங்கோட்டாசிரியரின் மகள் அநங்க விலாசினி. கொடி துவள்வது போல ஒற்றை நாடியான உடல்; ஒருமுறை பார்த்தால் எவ்வளவு மறதியுள்ளவர்களுக்கும் நன்றாக மனத்தில் பதிந்து விடக்கூடிய எழில் பொழியும் வட்ட மதிமுகம், அஞ்சனம் தீட்டிய கரு நெடுங்கண்கள், இப்படித்தான் நடக்க வேண்டுமென்று மாதிரிக்கு நடந்து காட்டுவது போல், மானின் குழைவும் அன்னத்தின் மென்மையும் கலந்த ஒருவகை நடையில் அவள் மெல்ல நடந்து வந்தாள். காலடி பெயர்த்து வைக்கும் போதெல்லாம், 'இந்தப் பட்டுப் பாதத்தின் மேல் தொட்டுத் தழுவும் உரிமை எனக்கு இருக்கிறது' என்று தன் பெருமையை வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வது போலச் சிலம்பு ஒலித்தது. கூந்தலைக் கொண்டையாக உயர்த்தி முடிந்து அதில் பெயர் பெற்ற நாஞ்சில் நாட்டு முல்லைப் பூக்களின் சரத்தைப் பிறைச் சந்திர வடிவில் சூடிக்கொண்டிருந்தாள். செம்பொன்னில் வார்த்தெடுத்த உயிர்ச்சிலை ஒன்று நடந்து வருவது போல் அதங்கோட்டாசிரியரின் மகள் வந்து கொண்டிருந்தாள் என்றால் போதும்; அதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை.

இனி அவளுக்கு இடதுபுறம் மாநிறமும் சற்றே உயர்ந்து வாளித்த தோற்றமுமாக நடந்துவரும் தென்பாண்டித் தளபதியின் தங்கை பகவதியைக் காணலாம். அதங்கோட்டாசிரியரின் மகளைப் புனிதமான பாரிஜாதப் பூவின் அழகுக்கு ஒப்பிட்டால், தளபதியின் தங்கையை, மோந்து பார்க்குமளவில் மனத்தை மயக்கிப் போதையூட்டும் குடை மல்லிகைப் பூவுக்குத்தான் ஒப்பிட வேண்டும்.

பாலை பருகினால் கழுத்து வழியே பால் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் என்று சொல்லும்படியான அவ்வளவு சிவப்புடையவள் விலாசினி; பகவதியோ மாநிறத்தாள்; ஆனால் விலாசினியின் அழகிலும் இல்லாத ஒரு வகை மிடுக்கும், கம்பீரமும் பகவதியின் கட்டமைந்த தோற்றத்தில் பொருந்தியிருந்தன. நிமிர்ந்த நடை! நேரான பார்வை; கணீரென்ற பேச்சு; கலீரென்ற சிரிப்பு; இளமைப் பருவத்தின் துடிதுடிப்பு ஒவ்வோர் அணுவிலும் நிறைந்து பொங்கிப் பூரித்து நிற்கும் அமுதக் கலசத்தைப் போன்ற உடல்; கோடு கீறினாற் போன்ற புருவங்களின் கீழே சேல் மீன்களென ஆண்மையின் நெஞ்சாழத்தைக் கிழித்துப் பார்க்கும் கூரிய விழிகள்; நீண்ட நாசி; அலட்சிய பாவமான ஒருவித நெளிவு திகழும் வாயிதழ்கள். பெண் யானை நடந்து வருவது போன்ற நடை.

"சந்தேகமே இல்லை. இவள் ஒரு வீர புருஷனின் தங்கைதான்" என்று பார்த்தவுடனே சொல்லி விடலாம்.

பகவதியும் விலாசினியும், மேகமும் மின்னலும் அருகருகே நடந்து சென்றது போல் சென்று, கோவில் வாசலில் மகாராணியை வணங்கினார்கள்.

"குழந்தைகளே! வாருங்கள்! உங்கள் பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போகாமல் நிற்கிறோம். உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நீங்கள் இருவரும் வருகிற செய்தியை அதங்கோட்டாசிரியர் சொன்னார். வாருங்கள்; கோவிலுக்குள் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு வருவோம்" என்று சொல்லி, அந்த இரு பெண்களையும் தன் இருபுறமும் அணைத்தாற் போலக் கைகளால் தழுவிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் மகாராணி.

"ஆசிரியரே! வல்லாளதேவனை ஏன் இன்னும் காணவில்லை? அந்தப் பாறையில் நின்று கொண்டு இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறானோ?" என்று ஆலயத்துக்குள் நுழையும் போது பவழக்கனிவாயர் அதங்கோட்டாசிரியரின் காது அருகே மெல்லக் கேட்டார்.

"வராமல் எங்கே போகப் போகிறான்? அவனுடைய தங்கை வேறு வந்திருக்கிறாள். ஏதாவது முக்கியமான காரியம் இருக்கும்! விரைவில் வந்துவிடுவான். நீங்கள் வாருங்கள்; நாம் உள்ளே போகலாம்" என்று ஆசிரியர் அவருக்குச் சமாதானம் கூறினார்.

கடற்கரையோரக் கோவிலாகையினால் மிகவும் தணிவாகக் கட்டப்பட்டிருந்தது. மதிற் சுவர்களில் பலகணிகள் அமையப் பெறவில்லை. உள்ளே வெளிச்சம் வருவதற்காக மேற்புறத்து விதான சுவரில் வட்ட வட்டமாக இடைவெளிகள் விடப்பட்டிருந்தன.

காற்று நுழைவதற்கு வசதிகளே இல்லாமலிருந்தும் கடலை ஒட்டி இருந்ததால் குளிர்ச்சியாக இருந்தது. மகாராணியாரின் விஜயத்தை முன்னிட்டுக் கோவிலுக்குள் விசேஷ தீபாலங்காரங்கள் செய்திருந்த போதிலும் மூலை முடுக்குகளில் தேங்கி நின்ற பயங்கர இருளைச் சின்னஞ் சிறு தீபங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கல்பகோடி காலமாக மூன்று மகா சமுத்திரங்களும் ஒன்று சேரும் அந்த இடத்தில் கன்னித் தவம் இயற்றிக் கொண்டிருக்கும் குமரித் தாயின் தரிசனம் வானவன்மாதேவியின் மனத்தில் நிர்மலமானதொரு சாந்தியை உண்டாக்கியது. கர்ப்பக்கிருகத்தில் குமரித் தேவியின் நெற்றியிலிருந்து மின்னல் கீற்றுப் போல் வைர வைடூரியங்களில் இழைத்த திலகம் ஒளி வீசி மின்னியது.

'அரசி! நான் தமிழ் நிலத்தின் எல்லையைக் காக்கும் தமிழ்த்தேவி. நீ தமிழகத்தையே ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதி மன்னனான ஒருவனை மணந்த பாண்டிமாதேவி. அஞ்சாதே! என் அருள் உனக்கு உண்டு' என்று திருநுதலின் புருவங்களுக்கிடையே அருளொளி வீசும் திலகச் சுடர் சொல்லாமல் சொல்லுகிறதோ?

"தேவீ! இந்தச் சந்நிதிக்கு நேரே கடல் தெரியும்படியாக மதிற் சுவரில் ஒரு துவாரம் இருந்ததாம். அன்னையின் திலகச் சுடரொளி கண்டு கவரப்பட்ட எத்தனையோ மரக்கலங்களும், கப்பல்களும் போக வேண்டிய துறை இதுதானோ என மயங்கி வந்து பாறைகளில் மோதிச் சிதைந்ததுண்டாம். இப்போது அந்தத் துவாரத்தை மூடி விட்டார்கள்" என்று கூறினார் பவழக்கனிவாயர்.

பக்திப்பரவசம் நிறைந்த முகபாவத்தோடு சந்நிதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகாராணி பவழக்கனிவாயர் கூறியதைக் கேட்டுத் தலையசைத்தார். தன் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளம் பெண்களைப் பார்த்து ஒருமுறை புன்முறுவல் பூத்தார். பகவதியும் விலாசினியும் பதிலுக்கு மரியாதையாகப் புன்னகை செய்தார்கள்.

அர்ச்சகர் எல்லோருக்கும் குங்குமம், சந்தனம் ஆகிய பிரசாதங்களைக் கொண்டு வந்து அளித்தார். குங்குமம் முதலியவற்றை அர்ச்சகர் கொண்டு வந்த போது மகாராணி கைகூப்பி வணங்கிவிட்டுத் திருநீற்றை மட்டும் எடுத்து அணிந்துகொண்டார்.

"இந்தக் குழந்தைகளுக்கு நிறையக் குங்குமமும் சந்தனமும் கொடுங்கள். இவர்கள் தான் பூவும் குங்குமமுமாகச் சந்தனமும் மஞ்சளும் பூசிப் பெருவாழ்வு வாழ வேண்டியவர்கள். எங்களையெல்லாம் விடக் கன்னியாக்குமரியம்மன் மேல் இவர்களுக்குத்தான் உரிமை அதிகம். அவளைப் போலவே இவர்களும் கன்னிகைகள். ஆனால் என்றைக்குமே அப்படி இருந்து விடமாட்டார்கள்!" என்று மகாராணி சிரித்துக் கொண்டே கூறிய போது எல்லோரும் சிரித்தார்கள். தாழ்வான குறுகிய அந்த முன் மண்டபத்தில் ஏககாலத்தில் அத்தனை சிரிப்பொலிகளும் எதிரொலித்தன. கேலிக்கு ஆளான பகவதியும் விலாசினியும் கன்னஞ் சிவக்க முறுவலித்தவாறு தலை குனிந்தார்கள். குனிந்த தலை நிமிராமலே குங்குமமும், சந்தனமும் எடுத்துக் கொண்டார்கள்.

"குழந்தைகளே! வாருங்கள். கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியிருக்கும் இந்தப் பிரகாரத்தை வலம் வரலாம்" என்று அவர்கள் இருவரையும் இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு பிரகாரத்துக்குள் நுழைந்தார் மகாராணி.

இருண்டு குறுகலாயிருந்த அந்தச் சிறிய பிரகாரத்தில் ஒளி மங்கிய அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மகாராணியாரும் பெண்கள் இருவரும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மண்டபத்திலே நின்று விட்டார்கள். குறுகலான வழியில் எல்லோரும் ஒரே சமயத்தில் நுழைந்தால் இடையூறாக இருக்குமென்று எண்ணி அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் முதலியவர்கள் கூட வெளியே நின்று கொண்டனர்.

விலாசினியிடமும், பகவதியிடமும் ஏதேதோ சிரித்துப் பேசிக் கொண்டே பிரகாரத்தில் நடந்தார் மகாராணி. பிரகாரத்தின் மேற்புறச் சுவரில் மூன்று பாகத்துக்கு ஒரு துவாரமாக வட்டத் துவாரங்கள் இருந்தன.

அந்த வட்ட இடைவெளிகளின் மூலம் நீலவானத்தின் சின்னஞ் சிறு நட்சத்திரப் பூக்கள் பௌர்ணமி நிலா ஒளியில் அழகாகத் தோன்றின.

மகாராணியின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்த பகவதி மேலே பராக்குப் பார்த்தவாறே சென்றாள். விலாசினி தரையைப் பார்த்துக் கொண்டே குனிந்து சென்றாள். அவர்கள் இருவருக்கும் நடுவே தியானத்தினால் குவிந்த கண்ணிமைகளுடனே பரவசத்தோடு மெல்ல நடந்து கொண்டிருந்தார் மகாராணி வானவன்மாதேவி.

பிரகாரத்தின் கிழக்கு மூலையும் வடக்கு மூலையும் சந்திக்கிற திருப்பத்தை நெருங்கிய போது மேலே பார்த்துக் கொண்டே வந்த பகவதி 'வீல்' என்று பயங்கரமாக அலறினாள்! முன்னால் நடந்து கொண்டிருந்த மகாராணியாரையும் விலாசினியையும் குபீரென்று பாய்ந்து நாலைந்தடி பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளினாள் அவள். தள்ளிய வேகத்தில் அவர்களைப் போலவே தானும் நிலை குலைந்து கல் தளத்தில் விழுந்தாள். "என்ன? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று மகாராணியும், விலாசினியும் இரைந்த குரலில் கத்தினார்கள். ஆனால் அவர்களுக்குப் பகவதி பதில் சொல்வதற்கு முன்பே அதன் காரணம் கண் காணத் தெரிந்து விட்டது.

பிரகாரத் திருப்பத்தின் மேற்புறத்துத் துவாரத்தில் கூர்மையான பெரிய வேல் நுனி ஒன்றும் அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் வலிமை வாய்ந்த முரட்டுக் கையும் தெரிந்தன. மறுகணம் படீர் என்ற ஓசையோடு அந்த வேல் கல்தளத்தில் விழுந்து முனை மழுங்கியது.

அவர்கள் தொடர்ந்து சென்றிருந்தால் மூவரில் நடுநாயகமாக நடந்த மகாராணியாரின் மேல் பாய்ந்திருக்க வேண்டிய வேல் அது. வேல் கல்தளத்தில் விழுந்த ஓசை அடங்குவதற்குள் மேலே விதானத்தில் யாரோ ஆள் ஓடும் ஓசை திடுதிடுவென்று கேட்டது.

அதற்குள் பகவதியின் அலறலையும் கல்லில் வேல் விழுந்ததனால் உண்டான ஓசையையும் கேட்டு முன் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அதங்கோட்டாசிரியர் முதலியவர்களும் மற்ற வீரர்களும் பதறியடித்துக் கொண்டு பிரகாரத்துக்குள் வேகமாக ஓடிவந்தனர்!

"என்ன? என்ன? இங்கே என்ன நடந்தது? ஏது இந்த வேல்?" என்ற கேள்விக் குரல்கள் கிளம்பின.

"மேலே இருந்து யாரோ துவாரத்தின் வழியாக வேல் எறிந்து விட்டு ஓடுகிறான். மதில் வழியாக மேலே ஏறிப் பிடியுங்கள் ஓடுங்கள்!" என்று வீரர்களை நோக்கிக் கூச்சலிட்டாள் பகவதி.

3. தளபதி கைப்பற்றிய ஓலை

இதோ இன்னும் ஓரிரு விநாடியில் இறப்பது உறுதி என்று எண்ணி, எல்லாம் ஓய்ந்து தளர்ந்து சாவுக்குத் தயாராகும்படியான சூழ்ச்சிகளெல்லாம் தளபதி வல்லாளதேவனின் வாழ்வில் கணக்கின்றி ஏற்பட்டிருக்கின்றன. தன் எதிரிகள், தன்னைக் கொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுக்கிடையில் கூட வேடிக்கைக்காக வலுவில் போய் மாட்டிக் கொண்டு முடிவில் சிரித்தபடியே தப்பி வருவது அவன் வழக்கம். எதற்கும், எப்போதும் அஞ்சியறியாத நெஞ்சுரம் கொண்ட வல்லாளதேவன் அன்று அந்த இரவில் கடலோரத்துப் பாறைகளின் நடுவில் இரண்டு பக்கமிருந்தும் பாய்ந்து தன் தோள்பட்டையில் உரசும் வாள் நுனிகளைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.

அவன் பாதங்கள் முன்னும் நகரவில்லை; பின்னும் நகரவில்லை. உயிருள்ள ஆளாக இயங்கி நடந்து வந்தவன் திடீரென்று சிலையாக மாறிவிட்டது போல் ஆடாது அசையாது நின்றான். கொஞ்சம் நகர்ந்தாலோ, அசைந்தாலோ வாள்கள் தோளில் அழுந்திவிடும். அவன் இடையிலும்தான் வாள் இருந்தது. இடுப்பில் உறைக்குள் தொங்கும் அந்த வாளை உருவி எடுக்கக் கூட அவன் கைகள் அசைய முடியாது. அப்படிப்பட்ட நிலை!

முகத்தைத் திருப்பாமல் நின்ற வண்ணமே விழிகளின் இருபக்கத்துப் பார்வையும் பக்கவாட்டில் சாய்ந்து நிற்பவர்களைப் பார்க்க முயன்றான் தளபதி. அவன் விழிகள் இரண்டும் காதைத் தொட்டு விட்டன போல் நீண்டன. பார்க்காதது போல் பார்த்த அப் பார்வையிலே ஒரு மிரட்சி இருந்தது.

"தென்பாண்டி நாட்டு வீரத் தளபதியாருக்கு வாள் முனையில் வணக்கம் செலுத்துகிறோம்."

அவர்கள் குரல் தான். ஏளனமும் மமதையும் தொனித்தன அதில். தளபதி பதில் சொல்லாமல் சிரித்தான். கடைக் கண் பார்வையாலேயே இருபுறம் வாளை நீட்டிக் கொண்டு நின்றவர்களைப் பார்த்துக் கொண்டு விட்டான். முன்பு தெரிந்த சிவப்புத் தலைப்பாகைப் பேர்வழிகள் தான் அவர்கள். சாமர்த்தியமும் சமயோசித சாதுரியமும் கொண்டு எத்தனையோ சூழ்ச்சிகளைக் கடந்திருக்கும் அவன் மனத்தில் சிந்தனையலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிப் புரண்டன.

தளபதியின் முகத்தில் மின்னி மறையும் சிந்தனை ரேகைகளையும், அவன் சலனமற்று நிற்பதையும் பார்த்து, அவர்கள் மனத்துக்குள் என்ன நினைத்துக் கொண்டார்களோ? தெரிந்து கொள்ள முடியவில்லை.

"தளபதி அவர்களே! தங்கள் இடையிலிருக்கும் வாளை இப்படிக் கழற்றி வைத்துவிட்டால் நன்றாயிருக்கும். வீணாக நாங்கள் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்காது" என்றனர்.

வல்லாளதேவன், "ஆகா! அதற்கென்ன? இதோ கழற்றி வைத்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே குபீரென இரண்டடி முன்னால் நகர்ந்து கொண்டு இடையிலிருந்த வாளை உருவினான். அவன் இப்படிச் செய்வானென்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 'வாளை உருவிக் கீழே வைப்பதற்குத்தான் குனிகிறான்' என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தளபதி வாளை உருவிக் கொண்டு அவர்கள் மேல் பாய்ந்தான். இரண்டு பேருடைய வாள்களில் அவனது ஒரே வாள் மோதியது.

"தென்பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு இன்று நம்முடைய கையால் முடிவு காலம் போலிருக்கிறது!" என்றான் அந்த வீரர்களில் ஒருவன்.

"ஐயா, தளபதியாரே! இந்த ஏமாற்று வேலைகளெல்லாம் எங்களிடம் வேண்டாம்!" என்று மிகுந்த ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டே வாளைச் சுழற்றி வீசினான் இன்னொருவன்.

"அது சரி! சாவு யாருக்கு என்பதை உங்கள் கைகளிலும், என் கையிலும் சுழலும் இந்த வாள்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்? பாண்டி நாட்டுத் தளபதிக்குச் சாவு நேர்ந்தாலும் அது இன்னொரு உண்மை வீரன் கையால் தான் நேரும். உங்களைப் போல யாரோ ஊர் பேர் தெரியாத ஒற்றர்களின் கைகளால் அல்ல! தெரிந்து கொள்ளுங்கள்!" என்று வீரமொழி கூறி அறை கூவியவாறே வாளை வேகமாகச் சுழற்றினான் வல்லாளதேவன்.

போர்ப் பழக்கம் மிகுந்த தளபதியின் வாள் வீச்சுக்கு முன்னால் அந்த இரண்டு ஒற்றர்களும் திணறிப் போய் விட்டனர். அவர்களில் ஒருவனைப் பாறை விளிம்பு வரையில் துரத்திக் கொண்டு போய்க் கடலுக்குள் தள்ளிவிட்டான் தளபதி. கடலுக்குள் விழுந்தவன் பாறைகளில் மோதி அடிபட்டு மூர்ச்சையாகிக் கீழே பாறைத் திடலின் மேல் கிடந்தான். மற்றொருவனுடைய வாளைத் தண்ணீருக்குள் 'படீர்' என்று தட்டிவிட்ட பின் கையோடு அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

"அடே, பதரே! நீ எந்த நாட்டு ஒற்றன்? என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். பாண்டி நாட்டு வீரர்கள் எப்போதும் உண்மையைத் தான் பேசுவார்கள். மற்றவர்களிடமிருந்தும் உண்மையைத்தான் கேட்பார்கள்."

பிடிபட்டவன் பதில் சொல்லாமல் திருட்டு விழி விழித்தான். "பதில் சொல்கிறாயா? உன்னைச் சொல்ல வைக்கட்டுமா?" என்று கையை ஓங்கினான் தளபதி. பிடிபட்ட ஒற்றனின் உடல் 'கிடுகிடு'வென்று நடுங்கியது. கலக்கமும் சஞ்சலமும் அவன் முகத்தில் பதிந்தன. வாயைத் திறக்காமல் ஊமை நடிப்பு நடித்தான்.

வல்லாளதேவன் தன்னை அதட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று தனது இடுப்புக் கச்சையிலிருந்து ஏதோ ஒரு பொருளை உருவி எடுத்துக் கடலுக்குள் எறிய முயன்றான் அந்த ஒற்றன். அவன் கை இடது பக்கத்து இடுப்பைத் தடவி எதையோ எடுக்க முயல்வதை அவனைப் பிடித்த கணத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த தளபதி, விருட்டென்று எறிவதற்கு ஓங்கிய அவன் கையைப் பிடித்து அதிலிருந்த பொருளைப் பறித்துக் கொண்டான். அது ஒரு திருமுக ஓலை. ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அந்தத் திருமுக ஓலையைக் கண்களுக்கு அருகே கொண்டு போய், நிலா ஒளியில் அதில் என்ன வரைந்திருக்கிறதென்று வாசிக்க முயன்றான்.

ஆனால் அதே சமயத்தில் கோவிலின் மேல் தளத்தில் வீரர்கள் ஏறி ஓடும் ஓசையும், "விடாதே பிடி! மகாராணியின் மேல் வேலை எறிந்து விட்டு ஓடுகிறான்!" என்ற கூக்குரல்களுமாகக் கேட்கவே அவர்கள் இருவருடைய கவனமும் ஒரே சமயத்தில் கோவிலின் பக்கம் திரும்பியது.

அவர்கள் திரும்பிப் பார்த்த சமயத்தில் கோவில் மதிலின் பின்புறமாக உள்ள ஆழமான கடற்பகுதியில் மேல் தளத்திலிருந்து ஓர் உருவம் குதிப்பது மட்டும் தெரிந்தது. மேல் தளத்தில் கேட்ட கூக்குரலும் நடந்த நிகழ்ச்சியும் தன்னை விடத் தன் கையில் பிடிப்பட்டிருந்த ஒற்றனையே அதிகமாகக் கலவரத்துக்கும் திடுக்கிடுதலுக்கும் உள்ளாக்கியிருக்கின்றன என்பதை அவன் முகக் குறிப்புகளால் ஒருவாறு தெரிந்து கொண்டான் வல்லாளதேவன்.

தளபதியின் மனம் நடுங்கியது. "ஐயோ! மகாராணியின் மேல் வேல் எறியப்பட்டு விட்டதா? தளபதி அருகிலிருந்தும் இப்படி நடந்துவிட்டதென்று உலகம் பழிக்குமே! இது என்ன? போதாத காலமோ?" என்று பதறினான். 'மேல் தளத்திலிருந்து வேல் எறிந்து விட்டுக் கடலில் குதித்தவனுக்கும் இந்தச் சிகப்புத் தலைப்பாகை ஒற்றர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?' என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. உடனே தன் கையில் கிடைத்த ஓலையோடும் ஒற்றனோடும் அங்கிருந்து இறங்கிக் கோவிலுக்கு விரைந்தான். "இந்த ஒற்றனைப் பாதுகாத்து வைத்திருங்கள். தப்பிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கூறி, பரிவாரத்து வீரர்களிடம் தன் கையில் பிடிபட்ட ஒற்றனை ஒப்படைத்து விட்டு, திருமுக ஓலையோடு மகாராணியைப் பார்க்க விரைந்து உள்ளே சென்றான்.

மேலே இருந்து விதானத் துவாரத்தின் வழியே வீசி எறியப்பட்ட வேலினால் மகாராணியாருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்று அறிந்து கொண்ட பின்புதான் தளபதிக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. கோவிலின் கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இருந்த மணி மண்டபத்தில் மகாராணி வானவன்மாதேவி, பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், தன்னுடைய தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி ஆகியோர் வீற்றிருக்கும் போது தளபதி வல்லாளதேவன் அங்கே பிரவேசித்தான். "மகாராணி! நான் கேள்விப்பட்டது மெய்தானா? யாரோ வஞ்சகன் வேலை எறிந்து விட்டு ஓடினான் என்றார்களே? இதென்ன கொடுமை? ஆலயத்துக்குள் தெய்வ தரிசனத்துக்காக நுழையும் போது கூடவா அரசியல் சூழ்ச்சிகள்? இத்தகைய பயங்கர நிகழ்ச்சியின் போது மகாராணியாரின் அருகிலிருக்க இயலாமற் போனதற்கு அடியேனை மன்னிக்க வேண்டும். தீய சக்திகள் தென்பாண்டி நாட்டை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. சற்று முன் அடியேன் கடற்கரைப் பாறையில் பின் தங்கி நின்றதன் காரணம் இங்கு ஒருவருக்கும் புரிந்திருக்காது. அதுவும் நம்மைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரச் சதியின் உண்மையைப் புரிந்து கொள்வதற்காகத்தான். இதோ இந்த ஓலையைப் பாருங்கள்" என்று ஒற்றனிடமிருந்து கைப்பற்றிய திருமுக ஓலையை எடுத்து மகாராணிக்கு முன்னால் வைத்தான் தளபதி.

"தளபதியாரே! இன்றைக்கு மகாராணியார் உயிர் பிழைத்தது யாரால் தெரியுமா? உங்கள் தங்கை பகவதியின் வீரச் செயல்தான் தேவியைக் காப்பாற்றியது. ஒரு மகா வீரனின் தங்கை என்பதை உங்கள் சகோதரி நிரூபித்து விட்டார். பாய்வதற்கு இருந்த வேலைப் பார்த்தவுடன் மகாராணியைப் பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளியதால் தான் ஆபத்தில்லாமல் போயிற்று" என்றார் கோவில் அர்ச்சகர்.

அதைக் கேட்டதும், "பகவதி! நீ எப்போது இங்கே வந்தாய்?" என்று தங்கையை விசாரித்தான் தளபதி.

"மகாராணியார் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன்பே நானும் ஆசிரியர் மகள் விலாசினியும் இங்கே வந்து சேர்ந்து கொண்டோம் அண்ணா!" என்று பதில் கூறினாள் பகவதி.

தளபதி கொடுத்த ஓலையைக் கையில் எடுத்த மகாராணி அப்போதே அந்த இடத்தில் அதைப் படித்து அறிந்து கொள்ள விரும்பவில்லை. மண்டபத்தில் இருந்த எல்லோர் முகங்களிலும் ஒருவகைக் கலவரத்தின் சாயை படிந்திருந்தது. தளபதி கொண்டு வந்த ஓலையில் அடங்கியிருக்கும் செய்தியை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல் அவர்கள் எல்லோர் பார்வையிலும் இருந்தது. தளபதி கூறிய சில சொற்களிலிருந்து பகைச் சக்திகள் எதிர்ப்பதற்கு ஒன்று கூடுகின்றன, என்று மற்றவர்கள் அநுமானிக்க முடிந்தது.

ஓலையைப் பார்த்துவிட்டு மகாராணி வானவன்மாதேவி என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்க எல்லோரும் காத்திருந்தனர். ஆலயத்துக்குள் அசாதாரணமான அமைதி நிலவியது. வீரர்கள், பரிவாரங்கள், அர்ச்சகர்கள் எல்லோரும் அடங்கி ஒடுங்கி மகாராணியாரின் முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மகாராணியாரோ ஓலையைப் படிக்கவுமில்லை, வாய் திறந்து பேசவுமில்லை. ஊசி விழுந்தாலும் அது தெளிவாகக் கேட்கும் படியான அந்த அமைதி சில விநாடிகள் நீடித்தது. தளபதியின் பார்வையில் தூணோரமாக வளைந்து நெளிந்து கிடந்த வேல் தென்பட்டது. அதுதான் மகாராணியின் மேல் எறியப்பட்ட வேலாக இருக்க வேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டான்.

"தளபதி! கோட்டையிலிருந்து புறப்பட்ட போது ஆலயத்துக்குப் போகிறோம் என்ற அமைதியில் மனக்குழப்பங்களை மறந்து நிம்மதியோடு புறப்பட்டேன். இப்போதோ இங்கு வந்த பின் நடந்த நிகழ்ச்சியல் மனம் குழம்பிப் போயிருக்கிறது. வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத அதிர்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்ன பேசுவது? எதைச் சிந்திப்பது? எதைச் செய்வது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. வரவர அரசாட்சியில் பற்றுக் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று, இந்த அரசையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்காகப் பொய்யும், சூழ்ச்சியும் செய்யும் எதிரிகளிடம் இதை உதறிவிட்டு எங்காவது போய்ப் புத்த மதத்தில் சேர்ந்து பிறவிப் பிணிக்கு மருந்து தேட வேண்டும்; அல்லது ஓடிப்போன இராசசிம்மனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து முடிசூட்டி விட்டு நான் நிம்மதியாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவதொன்று நடந்தாலொழிய என்னால் இப்படியே மதில் மேல் பூனையாக காலங்கழிக்க முடியாது. என்னைப் போல் நாயகனை இழந்த ஒரு பெண்ணை இந்தத் தென்பாண்டி நாட்டுக்குப் பேரரசியாக உரிமை கொண்டாடி, இன்பத்திலும் துன்பத்திலும் எவ்வளவோ ஒத்துழைக்கிறீர்கள். அதற்காக நான் பெருமைப்படத்தான் வேண்டும். ஆனால் இந்தப் பெருமையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும் நெஞ்சு உரம் எனக்கு இல்லை. என் அருமைக் குமாரனும் உங்கள் இளைய சக்கரவர்த்தியுமான இராசசிம்மன் இலங்கைத் தீவில் போய்ச் சுற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். மகாமன்னரான பராந்தக பாண்டியரின் வழி முறையினர்தான் உங்களை ஆளவேண்டுமென்ற உறுதி உங்களுக்கு இருக்குமானால் இலங்கைத் தீவுக்குப் போய் இளைய சக்கரவர்த்தியைத் தேடிக் கொண்டு வாருங்கள். தளபதி! இந்த ஓலையை இப்போது நான் படிக்க விரும்பவில்லை. இது உம்மிடமே இருக்கட்டும்."

உருக்கம் நிறைந்த நீண்ட பேச்சுக்குப் பின் திருமுக ஓலையை வல்லாள தேவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் மகாராணி. பின்பும் அங்கு நிலவிய அமைதி கலையவில்லை. அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும், தளபதியும் ஒன்றும் பேசத் தோன்றாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த தீபச் சுடர்கள் கூட ஆடாமல் ஸ்தம்பித்துப் போனவை போல விளங்கின. மகாராணியார் மனம் வெதும்பி விரக்தியடைந்து போயிருக்கும் அந்த நிலையில் என்ன பேசுவதென்று தெரியாமல் மலைத்துப் போய் அப்படியே நின்றான் தளபதி.

"தளபதி! நாளையே புறத்தாய நாட்டு மகாசபையைக் கூட்டுங்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். நாஞ்சில் நாட்டுக் கூற்றங்களின் பிரதம மந்திராலோசனைத் தலைவராகிய இடையாற்றுமங்கலத்து நம்பியை அழைத்து வாருங்கள். இந்த ஓலையையும், இது சம்பந்தமான எதிரிகளின் சூழ்ச்சிகளையும் கூட நாளை மகாசபைக் கூட்டத்தில் ஆலோசித்துக் கொள்ளலாம். இப்போது நாம் புறப்படலாம்" என்று மீண்டும் உறுதியான குரலில் கூறினார் மகாராணி. அப்போது கோயில் வாயிலில் பரிவாரத்து வீரர்களில் முக்கியமான ஒருவன் தளபதியின் காதருகே வந்து, "பிரபு! நீங்கள் எங்களிடம் ஒப்படைத்திருந்த அந்த ஒற்றன் தப்பிவிட்டான்" என்று மெல்லிய குரலில் கூறினான். தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டான்.

4. இடையாற்றுமங்கலம் நம்பி

இந்தக் கதையை மேலே தொடர்வதற்கு முன்னால் பன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டின் பல்வேறு உட்பிரிவுகளைப் பற்றி இங்கே ஒரு சில செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.

தோவாழைக் கூற்றம், மருங்கூர்க் கூற்றம், பொன்மனைக் கூற்றம், அருவிக்கரை கூற்றம், பாகோட்டுக் கூற்றம் ஆகிய ஐந்து பெருங் கூற்றங்களாக நாஞ்சிற் புறத்தாய நாடு பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கூற்றத்துக்கும் பாண்டியர் ஆட்சியை மேற்பார்க்கும் இராஜப் பிரிதிநிதியாக ஒரு தலைமகன் நியமிக்கப்பட்டிருந்தான். இந்தக் கூற்றத் தலைவர்களின் தொகுதிக்கு நாஞ்சில் நாட்டு மகாசபை என்று பெயர். இந்த மகாசபையின் மந்திராலோசனைத் தலைவராக அறிவினும், திருவினும், ஒழுக்கத்தினும், வயதினும் மூத்த சான்றோர் ஒருவரைப் பாண்டிய மன்னன் தானே தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம். அவருக்குப் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் என்று பெயர்.

திரிபுவனச் சக்கரவர்த்திகளாகிய பராந்தக பாண்டியதேவர் காலத்தில் பாண்டிய சாம்ராஜ்யம் வடக்கிலும் தெற்கிலும் பெரிதாகப் பரந்திருந்தாலும் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த அவரால் தென்கோடி மூலையிலுள்ள நாஞ்சில் நாட்டை நேரடியாகக் கவனித்து ஆள முடியாததாலும் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இந்த ஏற்பாட்டின்படி மருங்கூர்க் கூற்றத்து இடையாற்றுமங்கலம் நம்பி என்ற நாஞ்சில் நாட்டு மேதை மகாமண்டலேசுவரராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பராந்தகச் சக்கரவர்த்திகள் ஆண்ட இருபதாண்டுக் காலமும் அதன் பின்பும் இடையாற்றுமங்கலம் நம்பியே தொடர்ந்து அம் மாபெரும் பொறுப்பை நிர்வகித்து வந்தார். சக்கரவர்த்திகள் தேகவியோகமடைந்து, அமரரான பின்பு வடபாண்டி நாட்டைச் சோழனும், அவனோடு சேர்ந்தவர்களும் கைப்பற்றிக் கொண்டதும், குமார சக்கரவர்த்தி இராசசிம்மன் இலங்கைத் தீவுக்கு ஓடியதும் நேயர்கள் ஏற்கெனவே அறிந்த செய்திகள். அந்தப் பயங்கரமான சூழ்நிலையின் போது மகாராணி வானவன்மாதேவியாரைத் தென்பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்து புறத்தாய நாட்டுக் கோட்டையில் இருக்கச் செய்து மகாராணிக்கு அளிக்க வேண்டிய இராஜ கௌரவமும் மரியாதையும் அளித்தவர் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி அவர்களே.

நாஞ்சில் நாட்டின் உயிர்நாடி போன்ற பகுதி மருங்கூற்றம், கன்னியாகுமரி, சுசீந்திரம், தாணுமாலய விண்ணகரம், தென் திசைப் பெரும்படை தங்கியிருக்கும் கோட்டாற்றுப் படைத்தளம், புறத்தாய நாட்டுக் கோட்டை, மகாமண்டலேசுவரரின் வாசஸ்தலமாகிய இடையாற்றுமங்கலம் ஆகிய எல்லா முக்கிய இடங்களும் மருங்கூர்க் கூற்றத்திலேயே அமைந்திருந்தன. பார்க்குமிடமெங்கும் பரந்து கிடக்கும் நெல்வயல் வெளிகளும், சாலைகளும் நிறைந்த மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டை வடமாகிய முத்துமாலையொன்றை நெளியவிட்டது போல் பஃறுளியாறு என முதற் சங்கக் காலத்து அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஓடுகின்றன.

பறளியாறும், புத்தனாறும் கடலோடு கலக்கும் சங்கம முகத்துவாரத்துக்கு முன்னால் தனித்தனியே விலகிப் பிரிந்து ஒரு சிறிய அழகான தீவை உண்டாக்கியிருக்கின்றன. அதுவே இடையாற்றுமங்கலம். தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரும், முதுபெரும் பேரறிஞருமாகிய நம்பியின் மாளிகை இந்தத் தீவில்தான் அமைந்திருந்தது. இந்தத் தீவின் பெரும்பாகத்தை நிரப்பிக் கொண்டு நின்றது மகாமண்டலேசுவரரின் கம்பீரமான மாளிகைதான் என்றால் அது எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை நேரில் பார்க்காமலே கற்பனை செய்து கொள்ள முடியும். மலைத் தொடர்போல் அந்த மாளிகையைச் சுற்றி வளைந்து செல்லும் பிரம்மாண்டமான கோட்டை மதிற்சுவர்களுக்கு இப்பால் வெட்டப்படாத இயற்கை அகழிகளைப் போல் புத்தனாறும், பறளியாறும் இரு கரையும் நிரப்பி நீர் ஓடிக் கொண்டிருந்தன.

பகல் நேரத்தில் கதிரவன் ஒளியில் இந்த மாளிகையைப் பார்ப்பதற்குப் பதிலாக, நடு இரவில் உலகமே ஆழ்ந்த அமைதியின் மாபெரும் ஒடுக்கத்தினுள் உறங்கிக் கிடக்கும் போது பார்க்கும்படியான அவசர வாய்ப்பை இந்தக் கதை ஏற்படுத்தி விடுகிறது. நடு இரவானால் என்ன? மடல் விரித்த கமுகம் பாளையைப் போலப் பௌர்ணமி நிலா ஒளிக்கதிர்களை உமிழ்ந்து கொண்டிருக்கிறதே! குளிர்ந்த கடற்காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே வளம் நிறைந்த நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் நடந்து செல்வதற்கு சோம்பல் அடைவார்களா?

இடையாற்றுமங்கலத்துக்குச் செல்லும் கீழ்த் திசைச் சாலையில் ஆளரவமற்ற அந்த நடு யாமத்தில் ஒரு வெண்ணிறப் புரவி கன வேகமாகப் பாய்ந்து சென்றது. அதன் மேல் வல்லாளதேவனே வீற்றிருப்பதை நிலா ஒளியில் நன்றாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவன் முகத்தில் அவசர காரியத்தை எதிர்நோக்கிப் பிரயாணம் செய்யும் பரபரப்பைக் காணமுடிந்தது.

வானமும், பூமியும், திசைகளும், திசைக் கோணங்களும் அமைதியில் கட்டுண்டு கிடந்த அந்த யாமப் பொழுதில் யாரோ, மத்தளத்தின் புறமுதுகில் 'தடதட' வென்று தட்டுவது போல் குதிரையின் குளம்போசை எதிரொலித்தது. வாயு வேகம், மனோவேகம் என்பார்களே, அவையெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்! தென் திசைத் தளபதி வல்லாளதேவனின் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்தது!

சாதாரணமாகக் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்றுமங்கலத்துக்கு ஒன்றரை நாழிகை நேரம் குதிரைப் பயணத்துக்கு ஆகும். காரியத்தின் அவசரத்தை முன்னிட்டுக் கொண்டு வந்திருந்த வல்லாளதேவன் ஒரு நாழிகை நேரத்துக்கு முன்னதாகவே இடையாற்றுமங்கலத்தை நெருங்கிவிட்டான்.

மண்டலேசுவரரின் மாளிகைக்குத் தென்புறம் கண்ணுக்கெட்டிய வரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் ஒரே தண்ணீர்ப் பிரவாகமாகத் தெரிந்த பறளியாற்றின் இக்கரையில் வந்து தளபதியின் குதிரை நின்றது. பூமிக்குக் குடை பிடித்தது போல் பரந்து வளர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அவனும் அவன் ஏறிக் கொண்டு வந்த குதிரையும் நின்ற போது, நிலா மேகத்தில் மறைந்து மெல்லிய இருள் பரவியது. கரையோரத்து ஆலமரத்தின் அடர்த்தியால் முன்பே ஒளி மங்கியிருந்த அந்த இடம் இன்னும் அதிகமாக இருண்டது.

ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடினால் நனைந்தாலும் பரவாயில்லையென்று குதிரையையும் பிடித்துக் கொண்டு இறங்கி நடந்து அக்கறையிலுள்ள மாளிகைக்குச் சென்று விட முடியும். ஆனால் ஆற்றில் அப்போது ஆள் இறங்க முடியாத வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. தளபதி தன் குதிரையை மரத்தடியிலேயே நிறுத்திவிட்டுக் கரையில் விளிம்பருகே சென்று ஆற்றின் நிலையை நிதானிக்க முயன்றான். இரு தினங்களாக நாஞ்சில் நாட்டு மலைத் தொடர்களில் நல்ல மழை பெய்திருந்ததால் பறளியாற்றில் நீர் இரு கரையும் நிமிர ஒடிக் கொண்டிருந்தது. இறங்கிப் போவதென்பது சாத்தியமில்லை என்று தெரிந்தது வல்லாளதேவனுக்கு. திரும்பி வந்தான். குதிரையை ஆலமரத்தின் வேரில் கட்டி விட்டு நின்றான்.

இதற்கு முன்பு இத்தகைய திகைப்புக்குரிய அநுபவம் நாஞ்சில் நாட்டுப் படைத்தலைவனுக்கு ஏற்பட்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கே சிறிது தூரம் கரையோரமாகவே நடந்தான். இடையாற்றுமங்கலம் மண்டலேசுவரர் மாளிகைக்குத் தோணி விடும் துறை இருந்தது. தோணித் துறையில் தொண்டாற்றும் அம்பலவன் வேளான் துறையில் இருக்கிறானோ, இல்லையோ! பெரும்பாலும் இரவு ஏழெட்டு நாழிகைக்குள் தோணிப் போக்குவரத்து முடிந்து விடும். அதன் பின் படகுடன் அக்கரையிலேயே தங்கிவிடுவது வேளானின் வழக்கம். பகலில் வந்திருந்தால் இடையாற்றுமங்கலம் போவதற்கு இவ்வளவு அவதிப்பட வேண்டியதில்லை. மாளிகைத் தோணியுடன் அதைச் செலுத்தும் வேளான் காத்திருப்பான். இரவில் அகால வேளையில் வர நேர்ந்ததனால் தான் இவ்வளவு துன்பமும்.

'சரி! எதற்கும் தோணித்துறை வரையில் போய்ப் பார்க்கலாம். நம்முடைய நல்வினைப் பயனாக அம்பலவன் வேளானும் அவன் தோணியும் இக்கரையில் இருந்தால் நல்லதாகப் போயிற்று' என்று நினைத்துக் கொண்டே கரையோரத்துப் புதர் மண்டிய பாதையில் மேற்கே தோணித் துறையை நோக்கி நடந்தான் தளபதி. ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் அடர்த்தியான தாழம்புதர் இருக்குமிடம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும், நதிக்கரைக் குளிர்ச்சியும், நிலாவின் இன்பமும், தளபதியின் மனத்துக்கோ உடலுக்கோ சுகத்தை அளிக்கவில்லை. கவலை நிறைந்த சூழ்நிலையில் கடமையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் அவன்.

கன்னியாகுமரிக் கோவிலிலிருந்து மகாராணியார், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், பகவதி, விலாசினி எல்லோரையும் பரிவாரங்களோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு, தப்பிச் சென்ற ஒற்றனைத் தேடிப் பிடிப்பதற்காகத் தளபதியும் வேறு சில வீரர்களும் அங்கேயே தங்கிவிட்டனர். மகாராணி மனக்குழப்பமடைந்திருக்கும் நிலையைப் புரிந்து கொண்டதால் கடற்கரைப் பாறைகளிடையே, தான் கண்ட ஒற்றர்களைப் பற்றியோ, அவர்களில் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்ததைப் பற்றியோ அவன் கூறவில்லை. ஓலையை மட்டும் கொடுத்தான்; அதையும் அவர் படிக்காமலே திருப்பிக் கொடுத்து விட்டார். மகாராணி முதலியோர் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது தன் காதருகே வந்து பரிவாரத்து வீரன், ஒற்றன் தப்பியதாகக் கூறிய செய்தியையும் அவன் யாருக்கும் அறிவிக்கவில்லை.

"மகாராணி! நீங்கள் எல்லோரும் கோட்டைக்குப் போய் இருங்கள். எனக்கும் இந்த வீரர்களுக்கும் இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது. உங்கள் உத்தரவுப்படியே நாளை மகாசபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன். இன்றிரவே இடையாற்றுமங்கலத்தில் நம்பியைச் சந்தித்து விவரம் கூறிவிடுகிறேன். மற்றக் கூற்றத் தலைவர்களுக்கும் இரவோடிரவாக ஆள் அனுப்பி விடுகிறேன்" என்று கூறினான் தளபதி!

"அப்படியானால் இன்றிரவு நீ கோட்டைக்கு வருவது சந்தேகந்தான். இவ்வளவு வேலைகளையும் செய்ய இரவு முழுவதும் சரியாயிருக்கும்!" என்றார் அதங்கோட்டாசிரியர்.

"எங்கே வரமுடியப் போகிறது? நீங்கள் போய் வாருங்கள். ஒருவேளை இடையாற்றுமங்கலத்திலிருந்து விரைவில் திரும்பினால் உடனே கோட்டைக்கு வந்து விடுகிறேன்" என்று சொல்லித் தளபதி அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் சென்றதும் பிடிபட்ட ஒற்றனை அஜாக்கிரதையாய் தப்ப விட்டு விட்ட வீரர்களைத் திட்டினான். கோபத்தோடு கடிந்து கொண்டான். மறுபடியும் அவர்களை அழைத்துக் கொண்டு பாறை இடுக்குகளிலும், கடலோரத்து இடங்களிலும் கோவிலைச் சுற்றியும் தேடினான். ஏற்கெனவே தளபதியால் அடிபட்டு மயங்கி விழுந்திருந்தவனையும் இப்போது அந்தப் பாறை மேல் காணவில்லை. 'மூன்று பேர்கள் வந்திருக்கிறார்கள். வேலை எறிவதற்காக ஒருவன் கோவில் மேல்தளத்தில் ஏறிக் காத்திருக்கிறான். மற்ற இருவரும் பாறை இடுக்கில் இருந்திருக்கிறார்கள்' - நடந்ததை ஒருவாறு உணர முடிந்தது அவனால்.

'எப்படியானால் என்ன? மூன்று பேர்களுமே தப்பி விட்டார்கள்! நமக்குக் கிடைத்தது இந்த ஓலை ஒன்றுதான்' என்று மேலும் தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு இடையாற்றுமங்கலம் புறப்பட்டான் வல்லாளதேவன். தன்னோடு இருந்த வீரர்களை மகாசபையின் ஐந்து கூற்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே மறுநாள் கூடும் சபையைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்குமாறு இரவோடிரவாக அங்கிருந்தே குதிரைகளில் அனுப்பினான்.

இவ்வளவும் செய்து முடித்து விட்டு அவன் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்றுமங்கலம் புறப்படும் போது இரவு பதினோரு நாழிகைக்கு மேலாகிவிட்டது. அப்படிப் புறப்படுவதற்கு முன் கோவில் தீபத்தின் ஒளியில் தனியாக மீண்டும் ஒரு முறை ஒற்றனிடமிருந்து கிடைத்த அந்த ஓலையைப் படித்த போதுதான் தளபதியின் இதயத்தில் அதன் விளைவான பயங்கரமும் கொடிய சூழ்நிலையும் நன்றாக உறைத்தன. 'மகாராணி இந்தத் திருமுகத்தைப் படிக்காமல் கொடுத்ததும் ஒருவகைக்கு நல்லதுதான். கூடுமானால் மகாமண்டலேசுவரரிடம் கூட இந்த ஓலையைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது நல்லது!" என்ற முடிவான தீர்மானத்தோடு தான் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்குக் கிளம்பியிருந்தான் அவன்.

பறளியாற்றங்கரை ஆலமரத்தடியில் குதிரையைக் கட்டிவிட்டுத் தோணித் துறையை நோக்கித் தாழை மரக்கூட்டத்தின் இடையே வளைந்து வளைந்து செல்லும் குறுகிய பாதையில் நடந்து கொண்டே அன்று மாலையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் மீண்டும் மேற்கண்டவாறு நினைத்துப் பார்த்துக் கொண்டான் தளபதி வல்லாளதேவன்.

தோணித்துறையை நெருங்கியபோது அங்கே தீப்பந்தங்களின் வெளிச்சமும், பேச்சுக் குரல்களும் இருப்பதைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது. தன் நம்பிக்கை வீண் போகாமல் காப்பாற்றியதற்காகத் தெய்வத்துக்கு நன்றி செலுத்திக் கொண்டே துறையில் இறங்கினான். தோணி அக்கரைக்குப் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.

அதில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தபோதுதான் தளபதியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! 'தோணியே இருக்காது இந்த நள்ளிரவில்' என்று அவநம்பிக்கையோடு அங்கு வந்த அவன் தோணியையும் அதைச் செலுத்தும் படகோட்டி அம்பலவன் வேளானையும் மட்டும் பார்த்திருந்தால் கூட அவ்வாறு ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான்.

ஆனால், தோணியில் வீற்றிருந்தவர்கள் யார்? யாரைக் கண்டு தளபதி இவ்வளவு வியப்படைகிறான்?

யாரைத் தேடி வந்தானோ அந்த இடையாற்றுமங்கலம் நம்பியே படகில் உட்கார்ந்திருந்தார். அவரோடு அவருடைய திருக்குமரியாகிய குழல்வாய்மொழி நாச்சியாரும், அவன் இதற்கு முன் பார்த்திராத ஒரு வாலிபத் துறவியும் படகில் அமர்ந்திருந்தனர். தாடி மீசையோடு காட்சியளித்த அந்தத் துறவியின் களை சொட்டும் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. தளபதியின் உருவத்தைத் துறையின் அருகில் கரையின் மேல் கண்டதும் தோணி நின்றது. "யாரது கரையில் நிற்பது? இந்நேரத்துக்கு வேற்றாட்களைத் தோணியில் ஏற்றும் வழக்கம் இல்லை" என்று கூச்சலிட்டான் அம்பலவன் வேளான்.

அதைக் கேட்டு மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டே, "மகாமண்டலேசுவரர்க்குத் தளபதி வல்லாளதேவனின் வணக்கங்கள் உரியனவாகுக!" என்று கூறியவாறு, தீப்பந்த வெளிச்சம் தன் முகத்தில் படும்படி படகு அருகே வந்து நின்று கொண்டான் தளபதி.

கம்பீரமான தோற்றமும், அறிவொளி வீசும் முகத்தில் கூர்ந்து நோக்கும் கண்களும் கொண்ட இடையாற்றுமங்கலம் நம்பி, "யார் வல்லாளதேவனா? ஏது இந்த அர்த்த இராத்திரியில் இப்படி இங்கே திடீர் விஜயம்?" என்றார். அப்பப்பா! என்ன மிடுக்கான குரல்!

"மகாராணியார் ஓர் அவசர காரியமாக அனுப்பி வைத்தார்கள்."

"சரியான சமயத்துக்குத்தான் வந்தாய்! இன்னும் கால் நாழிகை கழித்து வந்திருந்தால் எங்கள் தோணி அக்கரை சென்று அடைந்திருக்கும். வா! நீயும் படகில் ஏறிக்கொள். மாளிகையில் போய்ப் பேசிக் கொள்ளலாம்!"

"தளபதியாரே! வாருங்கள்" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு இடம் கொடுத்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி. படகிலிருந்த மூன்றாவது ஆளாகிய வாலிபத் துறவி 'உம்'மென்றிருந்தார். அவர் பேசவேயில்லை. படகு மறுகரையை அடைகிறவரையில் அவர் பேசவேயில்லை!

5. வானவன்மாதேவியின் விரக்தி

ஆலயத்துக்கு வந்து திரும்பினால் அலை மோதும் துயரம் மறைந்து மனத்தில் சாந்தி பிறக்குமென்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் நிலவு பொழியும் அந்த நீளிரவில் பரிவாரங்களோடு கன்னியாகுமரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது மகாராணி வானவன்மாதேவியாரின் இதயத்தில் கவலைகள் முதிர்ந்து விரக்தி வளர்ந்து கொண்டிருந்தது.

அவர் தனியாகச் செல்லவில்லை. ஆறுதலும் அன்பும் நிறைந்தவர்கள், ஞானமும், அநுபவமும் செறிந்த இரண்டு பெரியோர்கள், குழந்தைகள் போல் சிரித்துச் சிரித்துப் பேசும் நிர்மலமான நெஞ்சம் படைத்த இரண்டு கன்னிகைகள் ஆகிய எல்லோரும் அவரோடு வருகிறார்கள். பரிவாரத்து வீரர்கள் சங்கு, கொம்பு, தமருகம், பேரிகை, முழவு, திருச்சின்னம் ஆகிய பிரயாண கால இன்னிசைக் கருவிகளால் கீத வெள்ளத்தை உண்டாக்குகின்றனர். உடம்பில் பொதியமலைச் சந்தனக் குழம்பை ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அள்ளித் தடவுவது போல் கடல்காற்று வீசுகிறது. ஆனால் அவற்றில் எதுவும் வானவன்மாதேவியின் மனத்துக்குச் சுகத்தை அளிக்கவில்லை. குமரியன்னை கோவிலின் கருப்பக் கிருகத்துப் பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போதே அவர் உடம்பு புல்லரித்தது. ஒரு கணம் தவறியிருந்தால், எவனோ குறி வைத்து எறிந்த அந்தக் கூர்மையான வேல் அவர் நெஞ்சைப் பிளக்காமல் விட்டிருக்குமோ? அப்படி ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் இப்போது பல்லக்கில் சென்று கொண்டிருப்பதற்குப் பதிலாக...? ஐயோ! இந்த மாதிரி எண்ணிப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. வானவன்மாதேவியின் எண்ணங்கள் பல்லக்கைத் தூக்கிச் செல்லும் வீரர்களின் நடையைப் போலவே துரிதமாக மேலெழுந்து சென்றன.

'இந்தத் தென்பாண்டி நாட்டை ஏதோ நான் அரியணையில் அமர்ந்து ஆண்டு கொண்டிருக்கிற மாதிரி அல்லவா எண்ணுகிறார்கள்? இல்லையானால் என்னைச் சுற்றி ஒற்றர்களும் வஞ்சகர்களும் உலாவக் காரணமென்ன? தரிசனத்திற்குப் போன இடத்தில் முன்னேற்பாடாக மறைந்திருந்து என்னைக் கொல்லச் சதி நடக்கிறது. இது எனக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சக்கரவர்த்திகள் காலமான பின் நான் அமங்கலியாக மட்டும் ஆகவில்லை; எவ்வளவு துரதிருஷ்டங்களும் துர்பாக்கியங்களும் உண்டோ, அவ்வளவும் என்னை வந்து சார்ந்துவிட்டன போலிருக்கிறது. கணவனை இழந்தேன், அருமைக் குமாரன் இராசசிம்மனுமா என்னை விட்டு ஓடிப்போக வேண்டும்? போரில் தோற்றுவிட்டால் என்ன? அதற்காகப் பெற்றவளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் இலங்கைக்கும் புட்பகத்துக்குமா ஓட வேண்டும்? பாழாய்ப் போன எதிரிகளுமா வட பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க வேண்டும்? நாடு தான் போயிற்று, இவனும் இப்படி எதற்காக ஓடிப் போனான்?

'எங்காவது சமணப் பள்ளியிலோ, பௌத்தப் பள்ளியிலோ, தீட்சை பெற்று மணிமேகலை, குண்டலகேசி இவர்களைப் போல் எஞ்சிய வாழ்நாளைத் துறவு மார்க்கத்தில் கழித்துவிட எண்ணியிருந்தவளை இந்த மகாமண்டலேசுவரர் ஏன் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாரோ? இந்த இடையாற்றுமங்கலம் நம்பி இருக்கிறாரே, அப்பப்பா! எதையும் சில புன்னகைகளாலும், சில வார்த்தைகளாலும் சாதித்து விடுகிறார். எவ்வளவோ விரக்தியோடு இருந்தவளை மனத்தை மாற்றி இங்கு அழைத்துக் கொண்டு வந்து இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மறுபடியும் இராஜ போகங்களுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் நடுவே சிக்கவைத்துவிட்டாரே! இதிலிருந்து எப்படித் தப்புவது? தப்பாமல் இப்படியே இருக்கத்தான் முடியுமா? மகாமண்டலேசுவரர் எனக்கு அளித்திருக்கும் கௌரவம் மிக மிகப் பெரியதுதான். அதில் சந்தேகமே இல்லை. ஐம்பெருங் கூற்றத் தலைப் பெருமக்களும், மந்திராலோசனைத் தலைவரும் இருக்கும் தென்பாண்டி நாட்டின் அரசியைப் போன்ற மரியாதையை அந்த மகாபுருஷரான இடையாற்றுமங்கலம் நம்பி எனக்கு அளித்திருந்தாலும் இதிலிருந்து நான் தப்பித்துத்தானாக வேண்டும். காலஞ்சென்ற என் நாயகர் மீது நாஞ்சில் நாட்டாருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பினால் மகாமண்டலேசுவரர் இதைச் செய்திருக்கிறார்.

'அதே சமயத்தில் இதன் விளைவு என்ன ஆகுமென்பதை அவர் சிந்திக்காமல் விட்டிருக்கவும் முடியாது. அபாரமான சாணக்கியத் திறமை படைத்த இடையாற்றுமங்கலம் நம்பிக்கா சிந்தனையை நினைவுபடுத்த வேண்டும்?

'தென்பாண்டிப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் நான் இருப்பதால் தான் ஒற்றர்களும் கொலைக்கு ஏவப்பட்டிருக்கலாம்! வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிய எதிரிகள் இங்கே படையோடு நுழைய எவ்வளவு நாட்களாகும்? என் ஒருத்தியின் பொருட்டு அமைதியும், வளமும், அழகுச் செல்வமும் கொழிக்கும் இந்த நாஞ்சில் நாட்டில் போர் ஏற்படத்தான் வேண்டுமா? இன்று மாலை முன்னிரவு நேரத்தில் கன்னியாகுமரியில் நடந்த தீய நிகழ்ச்சிகள் எதைக் குறிக்கின்றன? மகா மேதையான மண்டலேசுவரர் தளபதி மூலமாக அவற்றைக் கேள்விப்பட்ட பின்பாவது, தம் கருத்தை மாற்றிக் கொள்வாரா? அல்லது அவருடைய மௌனத்துக்கும், அமைதிக்கும் வேறு ஏதாவது காரணம் உண்டா? சில சமயங்களில் அவர் பெரிய புதிராக மாறிவிடுகிறாரே? 'இராசசிம்மனைத் தேடி இலங்கைத் தீவுக்கு ஒற்றர்களை அனுப்புங்கள்' என்று மூன்று தினங்களாக அவரிடம் சொல்லி வருகிறேன்; ஓர் ஏற்பாடும் செய்யாமல் தண்ணீருக்குள் போட்ட கல் மாதிரி இருக்கிறார். சமீப காலமாக இங்கேயும் கோட்டைக்கு வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டுப் பதில் சொல்லாமல் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போய்விடுகிறார்.

'வரட்டும்! நாளைய மகாசபைக் கூட்டத்துக்கு அவர் எப்படியும் வந்துதானாக வேண்டும். அப்போது எல்லாவற்றையும் தெளிவாக மனம்விட்டுச் சொல்லி விடுகிறேன். 'மகாமண்டலேசுவரரே! என்னை இந்தப் பெரிய கோட்டையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள். என்னால் இனியும் இங்கிருக்க முடியாது. நான் சமண மதத்தில் சேர்ந்து தீட்சை பெற்றுச் சந்நியாசினியாகப் போகிறேன். என் மகனையும் தேடி அழைத்து வராமல் என்னையும் இந்தக் கௌரவ வலையில் அடைத்து வதைக்காதீர்கள். என் மனம் விரக்தியடைந்துவிட்டது' என்று சொல்லத்தான் வேண்டும்.'

"மகாராணி! என்ன? இன்னும் பல்லக்கினுள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது சிந்தனையோ?" - அதங்கோட்டாசிரியரின் குரலைக் கேட்டு வானவன்மாதேவிக்குச் சுய நினைவு வந்தது. வெளியே பார்த்தார். பல்லக்குகள் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. பகவதியும், விலாசினியும் தங்கள் பல்லக்குகளிலிருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தனர்.

சிந்தனை வேகத்தில் அரண்மனையை அடைந்து விட்டதை உணர்ந்து கொண்டு பல்லக்கிலிருந்து கீழே இறங்கச் சிறிது நேரமாயிற்று வானவன்மாதேவிக்கு. பகவதியும், விலாசினியும் கன்னங்குழியச் சிரித்துக் கொண்டே மகாராணியின் அருகே வந்து நின்று கொண்டனர். முகக் குறிப்பையும் மௌனத்தையும் பார்த்த போது பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் மகாராணியின் மனம் நிம்மதியற்று இருக்கிறதென்று தெரிந்து கொண்டனர். அந்த நிலையில் பேசாமலிருப்பதே நல்லதென்று அவர்களுக்குத் தோன்றியது.

உணவு முடிந்த பின் நிலா முற்றத்தில் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதி அதங்கோட்டாசிரியரின் மனத்தில் ஒருவகை வேதனையை உண்டாக்கிற்று. அங்கே மகிழ்ச்சியும், கலகலப்பும் நிலவுவதற்காக ஏதாவது ஒரு மாறுதலை உடனே உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்.

"மகாராணி! என் குமாரி விலாசினிக்குப் பரத நாட்டியம் முழுதும் கற்பித்திருக்கிறேன். அபிநயமும் நிருத்தியமும் அவளுக்கு அழகாகப் பொருந்தியிருக்கின்றன. திருவாசகம் திருக்கோவையாரிலுள்ள மாணிக்கவாசகரின் அற்புதமான பாடல்களுக்கெல்லாம் அபிநயப் பயிற்சி அளித்திருக்கிறேன். இப்போது எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கிறோம். மகாராணியாரின் நிம்மதியற்ற குழம்பிய மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்" என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார் அதங்கோட்டாசிரியர்.

"மிகவும் நல்லது! உங்கள் பெண்ணின் நாட்டியத்தைப் பார்த்தாவது என் மனக் கவலைகளைச் சிறிது நேரத்துக்கு மறக்க முயல்கிறேன்" என்று கூறினார் மகாராணி. "குழந்தாய், விலாசினி! உனக்கு நடனமாடத் தெரியுமென்று நீ என்னிடம் சொல்லவே இல்லையே? வா இப்படி! ஏதாவதொரு நல்ல பாட்டுக்கு அபியம் பிடித்துக் காட்டு, பார்க்கலாம்" என்று ஆசிரியரின் மகளிடம் திரும்பிக் கூறினார். விலாசினி சிரித்துக் கொண்டே எழுந்திருந்தாள். நிலா முற்றத்துச் சுவரோரமாக மறைவில் சென்று உடையை நாட்டியத்துக்கு ஏற்றபடி வரிந்து கச்சும், தாருமாகக் கட்டிக்கொண்டு வந்தாள்.

"வல்லாளனின் தங்கைக்கு நன்றாகப் பாட வரும் என்று நினைக்கிறேன். அவளே பாடட்டும்" என்று பவழக்கனிவாயர் சும்மா இருந்த பகவதியையும் அதில் சேர்த்து வைத்தார்.

"பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல் ஆயிற்று! இந்த இரண்டு இளம் பெண்களுமாகச் சேர்ந்து நமக்குக் கலை விருந்து அளிக்கட்டும்."

"மகாராணியாரே பார்த்து ஆசிமொழி கூறுவதற்கு முன்வந்திருக்கிற போது எங்கள் கலைக்கு அதைவிடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்?" என்றாள் சிலம்பு குலுங்க நாட்டிய உடையோடு வந்து நின்ற விலாசினி. பகவதி மகாராணியை வணங்கி வீணையை ஏந்திப் பாடுவதற்குத் தயாராக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"தேவி! கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து இந்த விநாடிவரை உங்கள் மனத்தில் ஏற்பட்ட பெரிய கவலைகளால் நிம்மதியற்றுக் குழம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. வல்லாளதேவனின் தங்கையும், அதங்கோட்டாசிரியரின் குமாரியுமாகச் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு உங்கள் கவலையைத் துரத்தப் போகிறார்கள், பாருங்கள்!" என்றார் பவழக்கனிவாயர். மகாராணி அதைக் கேட்டு முகத்தில் மலர்ச்சியையும், உதடுகளில் சிரிப்பையும் வருவித்துக் கொள்ள முயன்றார். ஆனால் அந்தச் சிரிப்பில் இயற்கையின் உயிர்ப்பு இல்லை.

அடுத்த கணம் நிலா முற்றத்தில் சிலம்பும் சலங்கையும் குலுங்கும் ஒலி எழுந்தது. நாட்டியத்துக்கு என்றே படைக்கப்பட்டதைப் போன்ற விலாசினியின் உடல் வளைந்து நெளிந்து அபிநயம் பிடித்த அழகை எப்படி வருணிப்பது? இது என்ன? குயிலின் இனிமை இந்த மானிட நங்கையின் தொண்டைக்கு எப்படிக் கிடைத்தது? பாடுவது வல்லாளதேவனின் தங்கை பகவதிதானா? அல்லது தேவலோகத்துச் சங்கீத தேவதை ஒன்று வீணையை ஏந்தி வந்து இந்த நிலா முற்றத்தில் உட்கார்ந்து பாடுகிறதா?

'சூடகந் தோள்வளை யார்ப்ப வார்ப்ப
தொண்டர் குழாம் எழுந்தார்ப்ப வார்ப்ப
நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப
நாமும் அவர் தம்மை யார்ப்ப வார்ப்ப
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை யன்ன கோவுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும்நாமே!'

திருவாசகத் திருப்பொற் சுண்ணப் பதிகத்திலிருந்து ஒரு பாடலை வரி வரியாக நிறுத்தி, அபிநயத்துக்கு அவகாசம் கொடுத்து, நிதான கதியில் வீணையை மீட்டிப் பாடும் பகவதி அங்கிருந்த எல்லோரையும் முற்றிலும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போய்விட்டாள். விலாசினியின் நடனமோ பாட்டின் ஒவ்வொரு எழுத்தையும் தத்ரூபமாக அபிநயத்தில் சித்தரித்துக் காட்டியது. விரக்தியின் எல்லையில் குமைந்து கொண்டிருந்த மகாராணி சகலத்தையும் மறந்து அந்தப் பாட்டிலும் நடனத்திலும் லயித்துப் போயிருந்தார். ஆனால் உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் அந்தப் பாட்டு இன்னொரு வகையில் அவர் மனத்தை விரக்தி கொள்ளச் செய்தது.

'பார்க்கப் போனால் பொன்னும், பொருளும், அரச போகமும், அதிகார ஆணவங்களும் என்ன பயனைக் கொடுக்கப் போகின்றன? துன்பத்தையும், சூழ்ச்சியையும், குரோதத்தையும் உண்டாக்கவல்லன. போட்டிதான் இவற்றால் உண்டாகின்றன. பரம்பொருளை நினைந்து அல்லும், பகலும் அனுவரதமும் பாடித் திரிவதில் மாணிக்கவாசகர் போன்ற அடியார்களுக்குக் கிடைத்த ஆத்மீகமான இன்பம் என்னைப் போல ஒரு நாட்டின் அரசியே விரும்பினாலும் கிடைக்குமா? இந்தப் பாடலை வீணையோடு இழைத்து பாடும் பகவதியின் குரலையும், இதற்கு அழகாக அபிநயம் செய்யும் விலாசினியின் தோற்றத்தையும் பார்க்கும் போது என் மனத்தில் ஏன் இந்தக் கிளர்ச்சி ஏற்படுகிறது. இந்தக் கிளர்ச்சிக்குப் பொருள் என்ன? கோட்டை, கொத்தளம், அரண்மனை அரசபோகம், எல்லாவற்றையும் விட்டு விட்டு இப்படியே, இப்போதே எழுந்திருந்து எங்காவது ஓடிப்போய் விடலாம் போலத் தோன்றுகிறதே? இது ஏன்? ஏன்?'

மேலே பால் மாரியென முழுநிலா, சீதமாருத மென்காற்று, பாட்டின் குரல் இனிமை, கருத்தாழம், சலங்கை ஒலிக்கும் பாதம், இவையெல்லாம் சேர்ந்து மகாராணியைத் தெய்வீகம் நிறைந்த புனிதமானதொரு மானஸீக பூமிக்குத் தூக்கிக் கொண்டு செல்வதைப் போலிருந்தது.

கிண்கிணிச் சிறுசலங்கையின் ஒலியும் பகவதியின் பாடற் குரலும் நின்ற போதுதான் மகாராணி வானவன்மாதேவி இந்த உலகத்துக்கு வந்து கண்ணைத் திறந்து எதிரே பார்த்தார். பகவதியும் விலாசினியும் பவ்வியமாக அடக்க ஒடுக்கத்துடன் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.

"அற்புதமான நிருத்தியம்! அற்புதமான கீதம்!" என்று சிரக்கம்பம் செய்தார் பவழக்கனிவாயர். தம் முன்னே அழகின் மாசுபடாத பொற்சிலையாக வணங்கி நிற்கும் அந்த யுவதிகளிடம் எந்த வார்த்தைகளைச் சொல்லி எப்படிப் பாராட்டுவதென்றே மகாராணிக்குத் தெரியவில்லை.

"மகாராணி! தங்கள் வாயால் குழந்தைகளை ஆசிமொழி கூறி வாழ்த்த வேண்டும்" என்று அதங்கோட்டாசிரியர் கேட்டுக் கொண்டார்.

"ஆசிரியரே! இந்தக் குழந்தைகளை எப்படி வாழ்த்துவதென்றே எனக்குத் தோன்றவில்லை. ஒரு வேளை இந்த மாபெரும் கலைச் செல்விகளை வாழ்த்துவதற்கு வேண்டிய அவ்வளவு தகுதி கூட எனக்கு இல்லையோ என்று நான் பயப்படுகிறேன். உங்களைப் போல ஆன்றோர்கள் தாம் இம்மாதிரிப் பெருங் கலைகளுக்கு வாழ்த்துவதற்கு உரிமை உடையவர்கள். குழந்தைகளே! என்னை வணங்காதீர்கள். ஆசிரியர் பிரானையும், பவழக்கனிவாயரையும் முதலில் வணங்குங்கள்."

"நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. அன்னை கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடி இந்தத் தென்பாண்டி நாட்டின் மாபெருந்தேவி தாங்கள். உங்கள் மனத்தில் எழுகின்ற அன்பு நிறைந்த வார்த்தைகளால் வாழ்த்துங்கள்" என்றார் அதங்கோட்டாசிரியர்.

"குழந்தைகளே! இப்படி அருகில் வாருங்கள்." பகவதியும் விலாசினியும் அருகே சென்றார்கள். உட்காரச் சொல்லிக் கையமர்த்தினார் மகாராணி. இரண்டு பெண்களும் இருபுறமும் மண்டியிட்டு அமர்ந்தனர். இரண்டு பெண்களையும் முதுகைச் சேர்த்துத் தழுவிக் கொண்டாற் போல் இரு கைகளாலும் பாசத்தோடு அணைத்துக் கொண்டார் மகாராணி வானவன்மாதேவி.

"அருமைக் குழந்தைகளே! உங்களுக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். அறிவும், திருவும் மிக்க நல்ல நாயகர்கள் வாய்க்கட்டும்!"

மகாராணி இப்படி அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்த போது நிலா முற்றத்தின் தென் பக்கம் மதிற்சுவருக்குக் கீழே இருந்த அரண்மனை நந்தவனத்திலிருந்து ஒரு குரூரமான கூப்பாடு எழுந்தது. அதையடுத்துச் சடசடவென்று ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழும் ஓசை கேட்டது. ஆந்தைகள் அலறின. 'திடு திடு' வென ஆட்கள் ஓடும் காலடி ஓசையும், இனம் புரிந்து கொள்ள முடியாத வேறு சில சத்தங்களும் அரண்மனை நந்தவனத்திலிருந்து கிளம்பின. நந்தவனத்தில் மூலைக் கொன்றாகத் தீப்பந்தங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நிலா முற்றத்திலிருந்த மகாராணி உட்பட எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். 'என்ன? என்ன?' என்ற கேள்வி ஒவ்வொருவர் வாயிலிருந்தும் முந்தி எழுந்தது. எல்லோரும் நந்தவனத்தின் பக்கமாக மிரண்ட பார்வையால் திரும்பிப் பார்த்தனர். அங்கே தீப்பந்தங்களோடு வீரர்கள் ஓடுவதும், 'பிடி! விடாதே!' என்ற கூப்பாடுகளும் கண்டு அவர்கள் திகைத்தனர்.

6. யார் இந்தத் துறவி?

தோணித் துறையிலிருந்து இரவின் அகால நேரத்தில் புறப்பட்ட அந்தப் படகு பறளியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளத்தின் வேகமும், சுழிப்பும் மிகுதியாக இருந்ததால் அம்பலவன் வேளான் படகை மெல்லச் செலுத்திக் கொண்டு போனான்.

படகில் சென்று கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரர் தளபதி வல்லாளதேவனிடம் கலகலப்பாகப் பேசினார். அவருடைய திருக்குமரி குழல்வாய்மொழி நாச்சியாரும் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகவும், கலகலப்பாகவும் பேசினாள். படகோட்டி அம்பலவன் வேளானும் பேசினான். குழல்மொழிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபத் துறவிதான் பேசவேயில்லை. எப்படியாவது அந்தத் துறவியைப் பேச வைத்துவிடவேண்டுமென்று தளபதி ஆனமட்டிலும் முயன்றான். வேண்டுமென்றே பேச்சினிடையே துறவிகளைப் பற்றிப் பேசினான். அப்போதாவது அந்த இளம் துறவி வாய் திறந்து பேசுவாரென்று அவன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். உதடுகளை நெகிழ்ந்து மௌனமாக ஒரு புன்னகை செய்துவிட்டுப் பேசாமலிருந்தார் அவர். 'மனிதர் வாய் பேச முடியாத ஊமையோ?' என்று சந்தேகம் உண்டாகிவிட்டது அவனுக்கு.

மகாமண்டலேசுவரராவது அவருடைய புதல்வியாவது அந்தத் துறவியைத் தனக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள் என்று தளபதி எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் அதைச் செய்யவே இல்லை. வேண்டுமென்றே அறிமுகம் செய்யாமலிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. 'இந்தத் துறவி யார்? எங்கிருந்து வருகிறார்? ஏன் இபப்டிப் பேசாமல் ஊமை போல் மௌனமாக உட்கார்ந்து கொண்டு வருகிறார்?' என்று வெளிப்படையாக இடையாற்றுமங்கலம் நம்பியிடம் நேருக்கு நேர் கேட்டுவிடலாம். ஆனால் அந்தத் துறவியையும் அருகில் வைத்துக் கொண்டே அப்படிக் கேட்பது அவ்வளவு சிறந்த முறையாகாது. பண்பற்ற முரட்டு விசாரணையாக முடிந்துவிடும் அது!

அவர்கள் வேண்டுமென்றே பிடிவாதமாக அதைத் தன்னிடம் சொல்ல விரும்பாதது போல் மறைக்கும் போது கேட்பது நாகரிகமில்லை. ஆனால் ஒரு உண்மையைத் தளபதி வல்லாளதேவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. திருமணமாகாத தம் குமாரியை அந்த வாலிப வயதுத் துறவியோடு நெருங்கிப் பழகவிடுவதைக் கண்ட போது, துறவிக்கும் இடையாற்றுமங்கலம் நம்பிக்கும் நெருங்கிய விதத்தில் உறவோ தொடர்போ இருக்க வேண்டுமென்று தெரிந்தது. குழல்மொழி அந்தத் துறவியிடம் நடந்து கொண்ட விதம் எவ்வளவோ நாள் தெரிந்து பழகிய மாதிரி கூச்சமோ, நாணமோ இல்லாமல் இருந்தது. தன் பக்கத்தில் கன்னிப் பருவத்து அழகு பூரித்து நிற்கும் ஓர் இளம் பெண் படகில் உட்கார்ந்திருக்கிறாளே என்று துறவி கூச்சமடைந்ததாகத் தெரியவில்லை. அதே போல் தளதளவென்று உருக்கிய செம்பொன் போன்ற நிறமும், இளமைக் கட்டமைந்த காளை போன்ற உடலும், அழகு ததும்பும் முகத் தோற்றமுமாக ஓர் ஆண் மகன் தன் அருகே உட்கார்ந்திருக்கிறானே என்று மகாமண்டலேசுவரரின் குமாரியும் கூசியதாகத் தெரியவில்லை. அவள் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அடிக்கடி சிரித்துக் கொண்டே துறவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்! இவற்றையெல்லாம் பார்த்துத்தான் தளபதி மனம் குழம்பினான். படகு மேலே முன்னேறிச் சென்று கொண்டிருந்தது.

ஆண்பிள்ளையாகிய வல்லாளதேவனையே அந்த இளந்துறவியின் தோற்றம் மயக்கியது. 'இந்த முகத்தை இன்னொரு முறை பார்!' என்று பார்த்தவன் அல்லது பார்த்தவளை மீண்டும் மீண்டும் தூண்டக்கூடிய அதிசயமானதோர் அழகு துறவியின் முகத்தில் இருந்தது.

தங்கத் தாம்பாளத்தில் அரைக்கீரை விதையைக் கொட்டி வைத்தாற்போல் அந்தப் பொன்னிற முகத்தில் கருகருவென்று வளர்ந்திருந்த தாடி எடுப்பாக இருந்தது. தளபதி மீண்டும் நிலா ஒளியில் படகுக்குள் தன் எதிரே உட்கார்ந்திருக்கும் துறவியைப் பார்த்தான்.

அந்தக் கம்பீரமான பார்வை, அழகிய கண்கள், நீண்ட நாசி, புன்னகை தவழும் சிவந்த உதடுகள் இவற்றையெல்லாம் இதற்கு முன் எங்கோ, எப்போதோ, பல முறைகள் பார்த்திருப்பது போல் ஒரு பிரமை. ஒரு தற்செயலான நினைவு திடீரென்று வல்லாளதேவனின் மனத்தில் ஏற்பட்டது.

மாளிகைக் கரையிலுள்ள துறையில் போய்த் தோணி நிற்கிறவரை இடையாற்றுமங்கலம் நம்பியும், அவருடைய பெண்ணும் எதை எதையோ பேசினார்கள். மகாராணியாரின் உடல்நலம், வடபாண்டி நாட்டின் அரசியல் நிலைமை, துறைமுகத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு மரக்கலங்கள், கோட்டாற்றிலுள்ள தென்பாண்டிப் பெரும் படைகளின் நிலைமை என்று எத்தனையோ செய்திகளைப் பற்றி விரிவாக விவாதித்துப் பேசினார்கள். ஆனால் தப்பித் தவறிக் கூட அந்த வாலிபத் துறவியைப் பற்றிப் பேசவில்லை.

'இந்த அகால வேளையில் இவர்களோடு எங்கே போய்விட்டு மாளிகைக்குத் திரும்புகிறார் இடையாற்றுமங்கலம் நம்பி?' என்று இன்னொரு சந்தேகமும் தளபதிக்கு ஏற்பட்டது. கரையில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் செய்த முதல் காரியம் வீரத்தளபதி வல்லாளதேவனுடைய சந்தேகத்தை மேலும் வளர்ப்பதாகவே இருந்தது.

"குழல் மொழி! தளபதி ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவரோடு நான் தனியாகப் பேச வேண்டும். நீ 'சுவாமி'களை அழைத்துக் கொண்டு போய் வசந்த மண்டபத்தில் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடு" என்று தீவின் மேற்குக் கோடியிலிருந்த வசந்த மண்டபக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டினார் மகாமண்டலேசுவரர். "ஆகட்டும் அப்பா! 'இவரை' நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் தளபதியாரை அழைத்துக் கொண்டு போய் உங்கள் காரியத்தைக் கவனியுங்கள்" என்று சொல்லிவிட்டு, அவருடைய பெண் குழல்மொழி அந்த இளந்துறவியை அழைத்துக் கொண்டு அதே நேரத்தில் தனியே வசந்த மண்டபத்தை நோக்கி நடந்ததைப் பார்த்த போது தளபதி திகைத்துப் போய் நின்றுவிட்டான். அவன் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த மர்மக் குழப்பம் இன்னும் ஒரு படி அதிகமாகிவிட்டது.

"என்ன தளபதி? நாம் போகலாமா? அந்தரங்க மண்டபத்தில் போய் நாம் பேசவேண்டியதைப் பேசுவோம்" என்று கூறிக் கொண்டே முன்னால் நடந்தார் இடையாற்றுமங்கலம் நம்பி. தளபதி வசந்த மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அந்தத் துறவியையும், பூங்கொடி அசைந்து துவள்வது போல் அவர் அருகே நடை பயிலும் குழல்மொழியையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மகாமண்டலேசுவரரைப் பின்பற்றி நடந்தான்.

"தளபதி! வழியைப் பார்த்து நடந்து வா! மழை பெய்த ஈரம்; வழுக்கி விடப் போகிறது. எங்கேயோ பார்த்துக் கொண்டு நடக்கிறாயே?" என்று அவர் குறிப்பாகத் தன் செயலைக் கண்டித்த போது தான் திரும்பிப் பார்ப்பதை வல்லாளதேவன் நிறுத்திக் கொண்டான். அப்போது மகாமண்டலேசுவரரும் தானும் தனியாக இருப்பதால் அந்தத் துறவியைப் பற்றி அவரிடம் விசாரிப்பது தவறில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

"மகாமண்டலேசுவரரிடம் அடியேன் ஒரு சந்தேகம் கேட்கலாமோ?" என்றான்.

முன்னால் 'விறுவிறு' வென்று விரைந்து நடந்து கொண்டிருந்த இடையாற்றுமங்கலம் நம்பி நின்று அவனைத் திரும்பிப் பார்த்தார். இமையாமல் அவர் பார்த்த அந்தப் பார்வையில் ஆத்திரமா? திகைப்பா? வெறுப்பா? கோபமா? - எது நிறைந்திருந்தது என்பதை வல்லாளதேவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

"சந்தேகமா! என்ன சந்தேகம்?" நிதானமான குரலில் பதற்றமில்லாமல் வெளி வந்தது அவருடைய கேள்வி.

மகாமண்டலேசுவரர் திரும்பிப் பார்த்த விதத்தையும் கேட்ட கேள்வியையும் பார்த்து ஒரு கணம் அப்படியே அயர்ந்து போய் நின்றுவிட்டான் வீரத்தளபதி. தான் கேட்க நினைத்ததை கேட்காமலே இருந்து விடலாமா என்று ஒருவிதத் தயக்கம் கூட அவனுக்கு உண்டாயிற்று. அறிவிலும், அநுபவத்திலும், சூழ்ச்சியிலும், எதையும் ஆளும் திறமையிலும் மலை போல் உயர்ந்த மகாமண்டலேசுவரரிடம் எதையும் மறைக்க முடியாது. ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு பார்வையிலும், ஒவ்வொரு அசைவிலும் மனத்தின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் அதற்கு மூலமான எண்ணத்தை ஊடுருவி அறியக்கூடியவர் இடையாற்றுமங்கலம் நம்பி. எனவே கேட்க நினைத்ததை மறைக்காமல் கேட்டு விடுவதென்று உறுதி செய்து கொண்டு, "நம்மோடு படகில் வந்தாரே, அந்தத் துறவி..." என்று தொடங்கி, அவன் தன் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே அவர் இடைமறித்துப் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.

"அவர் இன்னாரென்று அறிவதற்காகப் படகு புறப்பட்ட போதிலிருந்து நீ துடிதுடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். வல்லாளா! அவரை வாய் திறந்து பேச வைப்பதற்காக நீ செய்த சாகஸங்களை யெல்லாம் பார்த்து உள்ளூரச் சிரித்துக் கொண்டுதான் வந்தேன் நான். அவரைப் பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போது வேண்டாம், அதற்கொரு சமயம் வரும்" என்று சொல்லிவிட்டுக் குறும்புத்தனமானதொரு சிரிப்பை இதழ்களில் மலரச் செய்தார் இடையாற்றுமங்கலம் நம்பி.

தன் கேள்விக்கு விடை சொல்லாமல் அவர் சாமர்த்தியமாக அதை மறுத்த விதம் தளபதியை அதிர்ச்சியடையச் செய்தது. "வல்லாளதேவா! நீ வந்திருக்கிற நேரத்தையும் அவசரத்தையும் பார்த்தால் மிக மிக இன்றியமையாத காரியமாகத்தான் வந்திருப்பாய் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தத் துறவியைப் பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதே. வந்த காரியத்தைப் பேசுவோம், வா!" என்று சொல்லிக் கொண்டே மாளிகையின் அந்தரங்க அறை வாசலில் வந்து நின்றார் மகாமண்டலேசுவரர்.

அங்கிருந்த சேவகன் ஒருவன் ஓடி வந்து அந்தரங்க அறையின் மணிகள் பொருத்தப்பட்ட கதவுகளைத் திறந்து விட்டான். கதவுகளில் தொங்கிய மணிகள் அமைதியான இரவில் கலகலவென்று ஒலித்தன. உள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களைத் தூண்டி விட்டான். தூப கலசங்களிலிருந்த அனலை ஊதிக் கனியச் செய்து அதில் அகில் பொடியைத் தூவினான். தீபங்களின் ஒளியும், தூபங்களின் நறுமணமுமாக அற்புதச் சோபையுடன் விளங்கிய அந்த அறைக்குள் இருவரும் நுழைந்தவுடன் சேவகன் வெளிப்புறமாக வந்து நின்று கொண்டு கதவுகளை இழுத்துச் சாத்தினான். மறுபடியும் ஒரே சமயத்தில் இரு கதவுகளிலும் இருந்த எல்லா மணிகளும் ஒலித்து ஓய்ந்தன. சேவகன் அங்கேயே காவலாக நின்று கொண்டான்.

இடையாற்றுமங்கலம் மாளிகை கடல் போல் பெரியது. சொல்லப் போனால் இரண்டு ஆறுகளுக்கு நடுவே நதிகளின் செல்லப் பிள்ளை போல் அமைந்திருந்த அந்தத் தீவின் முக்கால் பகுதி இடம் அந்த மாபெரும் மாளிகைதான். கடலுக்கு அடியில் எத்தனை இரகசியங்கள் மர்மங்கள் அபூர்வப் பொருள்கள் மூழ்கிக் கிடக்கின்றனவோ தெரியாது. ஆனால் இடையாற்று நாஞ்சில் அரசியலில் எண்ணற்ற மர்மங்கள் மறைந்திருக்கின்றன என்பார்கள்.

மாளிகையின் முக்கியமான அறைகளின் கதவுகளிலெல்லாம் நிச்சயமாக மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். எவ்வளவு மெதுவாகக் கதவைத் திறக்க முயன்றாலும் சிறு சிறு வெண்கல மணிகள் நாவு அசைந்து கணீரென்று ஒலியைக் கிளப்பிவிடும். தனியாக உட்கார்ந்து அந்தரங்கமான செய்திகளைப் பேசும்போதோ மந்திராலோசனையில் இருக்கும் போதோ அன்னியர் எவரும் முன்னறிவிப்பின்றி உள்ளே நுழைந்து விட முடியாதபடி கதவுகளை இப்படி நுணுக்கமாக அமைத்திருந்தார் இடையாற்றுமங்கலம் நம்பி.

அரசியல் மேதையும், அறிவுச் செல்வரும், இராஜ தந்திரங்களின் இருப்பிடமுமான இடையாற்றுமங்கலம் நம்பியின் எண்ணங்களையும் செயல்களையும், மனத்தையும் வல்லாளதேவன் எப்படி முழு அளவில் இன்றுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையோ, அதே போல் அந்த மாளிகையிலும் தெரிந்து கொள்ளாத அல்லது தெரிந்து கொள்ள முடியாத இன்னும் எத்தனை எத்தனையோ விசித்திரமான இடங்கள் இருந்தன.

வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கு நடுவே போர்க்களத்தில் நின்று அஞ்சாமல் கட்டளைகளை இட்டும், கையில் வாளேந்தியும், ஒரு பெரும் படையினை முன்னின்று நடத்தி வெற்றி பெறும் திறன் அவனிடம் இருந்தது. ஆனால் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் செய்ய நினைக்கும் செயல்களையும் எண்ணங்களையும் துணிந்து முன்னின்று ஆராயும் இதயத் திடம் அவனுக்கு இல்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மனம் இந்த நொடி வரை பலவீனம் என்ற எல்லைக்கோட்டை மீறி அப்பாற் சென்றதே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே உட்கார்ந்து பேசும் போது இதயத்தை மறைத்து எந்தப் பொய்யையும் பேசமுடியாது. உயர்ந்தோங்கி, வானமண்டலத்தை அணைந்து நிற்கும் பிரமாண்டமான ஒரு மலைச்சிகரத்தைக் கண்ணெதிரே பார்க்கிற உணர்ச்சி உண்டாகும், அந்த மனிதரின் முகத்தை பார்க்கும் போது. ஆகவே எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் உண்மைதான் வாயில் வரும். தன்னிடம் யார் பேசிக் கொண்டிருந்தாலும் வேறெங்காவது பராக்குப் பார்த்துக் கொண்டு அந்தப் பேச்சைக் கேட்கும் வழக்கம் அவரிடம் கிடையவே கிடையாது. பேசுகிறவனின் முகத்தையும் அதிலுள்ள கண்களையும் பார்த்துக் கொண்டே தான் பேச்சைக் கேட்பார். அந்தப் பார்வை பேசுகிறவனின் மனத்தில் புதைந்து கொள்ள முயலுகிற உண்மைகளையெல்லாம் குத்தி இழுத்து வெளியே கொண்டு வந்து விடும். அவ்வளவு கூர்மை அதற்கு!

அவசியம் ஏற்பட்டாலொழிய இடையில் குறுக்கிட்டு எதையும் கேள்வி கேட்காமல், எதிராளியின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டே போவார்.

அவரிடம் இப்படிப் பலமுறை அநுபவப்பட்டிருந்த தளபதி வல்லாளதேவன் அன்று அந்தரங்க அறைக்குள் அவரோடு நுழைந்த போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அவசியமானவற்றைத் தவிர வேறெதையும் பேசக் கூடாதென்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தான் நுழைந்தான். கன்னியாகுமரியில் கைப்பற்றிய ஓலையைப் பற்றி அவரிடம் வாய் தவறி உளறி விடக்கூடாதென்று தீர்மானித்துக் கொண்டான் வல்லாளதேவன்.

ஆனால், இடையாற்றுமங்கலம் நம்பியிடம் பேசத் தொடங்கிவிட்டதும் தளபதி வல்லாளதேவன் எதை எதை மகாமண்டலேசுவரரிடம் சொல்லக் கூடாதென்று நினைத்துக் கொண்டிருந்தானோ, அவையெல்லாம் அவனையறியாமலே அவன் வாயில் வந்து விட்டன. அவர்கள் உட்கார்ந்திருந்த அந்தரங்க அறை ஒளிமயமாக இருந்தது. தூபப் புகையின் நறுமணம்! அன்னக்கொடி விளக்குகளின் ஒளி! நாற்புறமும் சுவர்களில் அழகான ஓவியங்கள்! அறை முழுவதும் கட்டித் தொடங்க விடப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரங்கள்! பூ மணமும் அகிற்புகையும், தீப ஒளியும், எதிரே நிமிர்ந்து உட்கார்ந்து தன்னையே இமைக்காமல், பார்த்துக் கொண்டிருக்கும் இடையாற்றுமங்கலம் நம்பியின் பார்வையும் ஒன்று சேர்ந்து தளபதியை என்னவோ செய்தன!

புறத்தாய நாட்டுக் கோட்டையிலிருந்து மகாராணியார் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டது, பாறையிடுக்கில் ஒற்றர்களைச் சந்தித்தது, தரிசனத்தின் போது மகாராணிக்கு ஏற்பட்ட ஆபத்து, மறுநாள் நாஞ்சில் நாட்டு மகாசபையைக் கூட்டுமாறு மகாராணி ஆணையிட்டிருப்பது ஆகிய எல்லா விஷயங்களையும் மகாமண்டலேசுவரரிடம் அவன் கூறினான். ஒற்றர்களிடமிருந்து கைப்பற்றிய ஓலையைப் பற்றி மட்டும் அவன் சொல்லவே இல்லை.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மகாமண்டலேசுவரர் சிரித்தார். "தளபதி! எல்லாம் சரி. உன்னுடைய இடுப்பிலிருக்கும் அந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதை என்னிடம் எடுத்துக் காட்டி விடுவதுதான் முறை!" என்றார்.

இதைக் கேட்டதும் வல்லாளதேவன் வெலவெலத்துப் போனான். அவன் உடல் நடுங்கியது. மகாமண்டலேசுவரர் அவனை நோக்கி வெற்றிப் புன்னகைப் பூத்தார். அதே சமயம் கதவுகளின் மணிகள் மெல்ல ஒலித்தன.

7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்

நிலா முற்றத்துப் படிகளில் வேகமாக இறங்கி எல்லோரும் கீழே சென்றனர். அத்தனை பேருடைய மனத்திலும் திகில் சூழ்ந்திருந்தது. வேற்றவர் நுழைய முடியாத புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் அமைதியான நள்ளிரவில் நந்தவனத்தில் அப்படி ஒரு பயங்கரக் குழப்பம் ஏற்பட்டால் யாருக்குத்தான் திகில் உண்டாகாது?

மகாராணி வானவன்மாதேவியாரின் மனம் காரணமின்றி நடுங்கியது. 'இன்று மாலை கன்னியாகுமரிக்குப் புறப்பட்டதிலிருந்து என்னுடைய போதாத காலமும் என்னோடு புறப்பட்டுவிட்டது போலிருக்கிறது. இன்றைக்குக் குறை இரவு கழிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றனவோ? ஐயோ! இடையாற்றுமங்கலம் நம்பியின் வார்த்தைகளைக் கேட்டு இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு எதற்காக வந்து தங்கினேன் என்று எண்ணி அவர் மனம் வாடினார். பகவதியும், விலாசினியும் மிரண்டு போய் உடன் நடந்தனர். ஆடவர்களான பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் வேகமாக நந்தவனத்தை நோக்கி ஓடினர். 'நடக்கிற கலவரம் என்ன என்று நந்தவனத்துக்கு நேரில் போய் விசாரித்து அறிய வேண்டும்' என்ற ஆவல் மகாராணியின் உள்ளத்தில் அணுவளவும் இல்லை. 'என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்! எது நடந்தால் எனக்கென்ன? நாளைக்கு மகாசபைக் கூட்டம் நடந்து முடிகிற வரை பல்லைக் கடித்துக் கொண்டு முள்ளின் மேலிருப்பது போல் இந்த மாளிகையில் இருந்து தீர வேண்டியதுதான். அப்புறம் எந்தத் தவப் பள்ளியில் போய் எப்படி வாழ்வின் எஞ்சியிருக்கும் பாவ நாட்கள் கழியப் போகின்றனவோ?' என்ற பழைய விரக்திதான் மகாராணியின் உள்ளத்தில் உறுதிப்பட்டது.

அந்த இரண்டு பெண்களையும் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, தான் பெற்ற மக்களை அழைத்துச் செல்வதைப் போல் பரிவோடும் பாசத்தோடும் அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றார் மகாராணி.

இனி நிலாமுற்றத்தில் நடனமும், பாடலும் நிகழ்ந்து முடியும் தறுவாயில் ஏற்பட்ட அந்தக் குழப்பம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏற்கெனவே நமக்குத் தெரியாமல் இந்தக் கதையில் நடந்து முடிந்து விட்ட சில முன் நிகழ்ச்சிகளையும் இங்கே தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டால் கதை தொடர்விட்டுப் போகாமல் விளக்கமாகப் புரிவதற்கு இயலும்.

'மகாராணி வானவன்மாதேவி கன்னியாகுமரி ஆலயத்துக்கு வந்திருந்த அன்றைய தினம் மாலையில் நாஞ்சில் நாட்டின் தளபதி வல்லாளதேவன், பெரும் புலவராகிய அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக்கனிவாயர் ஆகிய எல்லோரும் ஆலயத்துக்கும் வந்திருந்தார்களே! மகாமண்டலேசுவரராகிய இடையாற்றுமங்கலம் நம்பியும் அவருடைய புதல்வியும் மட்டும் ஏன் வரவில்லை' என்ற சந்தேகம் நேயர்களுக்கு உண்டாகவில்லையா? இந்தச் சந்தேகம் இதுவரை நேயர்களுக்கு ஏற்படவில்லையானால், 'உடன் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்று வற்புறுத்திவிட்டு மேலே தொடருகிறேன்.

அதே தினம் மாலையில் மகாமண்டலேசுவரரும் அவருடைய புதல்வி குழல்வாய் மொழியும், இன்னும் இந்தக் கதையில் இதுவரை நமக்கு அறிமுகமாகாத ஒரு புதிய பாத்திரமும் தென்பாண்டி நாட்டின் மேல்புறம் மேலை மண்டலக் கடற்கரையின் முக்கியத் துறைமுகப் பட்டினமாகிய விழிஞத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சாரி சாரியாக ஏற்றுமதிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகள், கொற்கை முத்துச் சலாபத்திலிருந்து முத்திரையிட்டுக் கொண்டு வரப்பட்டிருந்த முத்து மூட்டைகள், ஏலக்காய், இலவங்கம், சாதிக்காய், கிராம்பு ஆகிய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொதிகள் எல்லாம் கிடந்தன அந்தத் துறைமுகத்தில். நாஞ்சில் நாட்டு அரசாங்க இலச்சினையாகிய மேழியோடு கூடிய கலப்பையும், அதன் ஒரு மூலையில் பாண்டியர் மீன் இலச்சினையும் பதித்த பெரிய பெரிய கொடிகள் மரக்கலங்கலின் கூம்பில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பல தேசத்து வியாபாரிகளின் கூட்டமும், பிரயாணம் செய்து வந்து இறங்கியவர்கள், பிரயாணம் செய்வதற்காகக் கப்பலேற வந்திருப்பவர்களின் கூட்டங்களுமாகத் துறைமுகம் கலகலப்பாக இருந்தது.

இடையாற்றுமங்கலம் நம்பியும், அவர் மகளும், அவர்களோடு இருந்த குட்டையான ஓர் இளைஞனும், துறைமுகத்துக்கு வந்து சேர வேண்டிய கப்பலொன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைப் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு இருந்த அந்த இளைஞன் பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தை உடையவனாக இருந்தான். 'தமிழ் முனிவர் அகத்தியரைப் பார்த்திருந்தால் இவனைப் பார்க்க வேண்டாம்' - என்று சொல்லத் தக்க குட்டையான தோற்றம், பீமசேனனைப் போலக் கட்டமைந்த உடல், உருண்டை முகம், மூக்கும் விழியுமாக எடுப்பான தோற்றம். நெற்றியில் தீபச் சுடர்போல் சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தூரக் கீறல் - இது அவன் இட்டுக் கொண்டிருந்த திலகம். செவிகளில் சங்கு சக்கர வடிவமாக முத்துகள் பதிக்கப் பெற்ற இரண்டு முத்துக் கடுக்கன்கள் மின்னின. மூலத்தாராகக் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த ஆடை முழங்காலுக்கு மேல் தொங்கியது. அடிக்கடி எதையாவது சொல்லிக் கொண்டே இடி இடியென்று சிரித்துக் கொண்டிருந்தான் அவன். அப்படிச் சிரிக்கும் போது முன்புறமாக முடிந்திருந்த அவன் தலையின் சிறிய குடுமி ஆடுவது காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அவன் கூறுவனவற்றைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அவ்வளவாக இரசித்து சிரிக்கவில்லையானாலும் அவருடைய குமாரி குழல்மொழி தன் முல்லைப் பற்கள் தெரியச் சிரித்து அநுபவித்துக் கொண்டிருந்தாள். அதிகமாகச் சொன்னாலும் இருபத்தெட்டு வயதுக்கு மேல் மதிப்பிட்டுச் சொல்ல முடியாது அந்த இளைஞனுக்கு. அவனுடைய வைதிகமான இந்த எளிய கோலத்துக்கு ஒரு சிறிய விதிவிலக்குப் போல் இடையில் ஒரு வாள் உறையோடு தொங்கியது.

அவர்கள் நின்று கொண்டிருந்த வழியாக வந்து போய்க் கொண்டிருந்த கூட்டத்தினரில் அந்த இளைஞனின் விசித்திரத் தோற்றத்தையும், அவன் சிரித்துச் சிரித்துப் பேசும் வேடிக்கையான காட்சியையும் ஒரு கணம் நின்று வியப்புடன் பார்த்துவிட்டுப் போகாதவர்களே இல்லை. மகாமண்டலேசுவரர் தென்மேற்குத் திசையில் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த இளைஞனின் பக்கமாகத் திரும்பி, "சேந்தா! கிளம்பு. இன்று மாலை மகாராணியார் கன்னியாகுமரிக்கு வரப் போவதை மறந்து விட்டாயா? இங்கே நின்று கொண்டு உன் சிரிப்பொலியால் கடற்கரையையே அதிர அடித்துக் கொண்டிருக்கிறாயே! கப்பல் வந்ததும் நானும், குழல்மொழியும் அவரை மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போகிறோம். எவ்வளவு நாழிகையானாலும் நாங்கள் இங்கே இன்றிரவு தங்க மாட்டோம். மாளிகைக்கு வந்து சேர்ந்து விடுவோம். அதே போல் நீயும் மாளிகைக்கு வந்துவிடு. உனக்காகத் தென்கரையில் அம்பலவன் வேளானைத் தோணியோடு காத்திருக்கச் செய்வேன். மகாராணி கன்னியாகுமரியிலிருந்து கோட்டைக்குத் திரும்பிப் போய்ச் சேர்கிறவரை என்னென்ன நடக்கிறது என்பதை ஒன்று விடாமல் கவனித்துக் கொண்டு வந்து சொல்ல வேண்டும். நீ அங்கே சென்று கவனிப்பதை வேறு யாரும் தெரிந்து கொள்ளாதபடி மறைந்து கவனிக்க வேண்டியது மிக முக்கியம். நீ வந்து தகவல்களைக் கூறுகிற வரையில் நான் உறங்காமல் உனக்காக விழித்துக் கொண்டு காத்திருப்பேன்."

மகாமண்டலேசுவரரின் இந்தக் கம்பீரமான கட்ட்டளையைக் கேட்டதும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் குடி கொண்டன.

"அப்படியே செய்கிறேன் பிரபு" என்று சொல்லிக் கைகூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான் அவன்.

"சேந்தா! கொஞ்சம் இப்படி அருகே வா. இதையும் கேட்டுக் கொண்டு போ." சிறிது தூரம் நடந்து சென்று விட்ட அவனை மீண்டும் கை நீட்டிக் கூப்பிட்டார், இடையாற்றுமங்கலம் நம்பி. அவன் திரும்பி நடந்து வந்தான்.

நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் நெல் போட்டு வைத்திருக்கப் பயன்படுத்தும் குறுகிய தாழி ஒன்று உருண்டு உருண்டு வருவது போல் அந்தக் குட்டை இளைஞன் நடப்பது பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை மூட்டியது.

"சேந்தா! நானும் குழல்மொழியும் இங்கே விழிஞத்துக்கு வந்திருக்கும் செய்தியை வேறு யாரிடமும் சொல்லி விடாதே. எச்சரிக்கையாக நடந்து கொள்! நானும் குழல்மொழியும், 'கப்பலில் வருகின்றவரும்' திரும்பிச் செல்கிற வழியில் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் சிறிது நேரம் தங்கித் தரிசித்துவிட்டு போகலாம் என்று நினைத்திருக்கிறேன். இரவு மாளிகைக்கு வருவதற்கு முன்பே அவசரமான செய்தி ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டியிருந்தால் சுசீந்திரத்துக்கு ஒரு நடை வந்து சொல்லிவிட்டுப் போ" என்று அவன் காதருகே குனிந்து தணிந்த குரலில் கூறினார் அவர். அவனுடைய உருண்டைத் தலையும் அதில் முடியப்பட்டிருந்த குடுமியும் சம்மதத்துக்கு அறிகுறியாக அசைந்தன. "சரி! அவ்வளவுதான். போய்வா" என்றார் அவர்.

துறைமுகத்தின் சுங்கச் சாவடிக்கு அருகில் கட்டியிருந்த தன் குதிரையை அவிழ்த்து அதன் மேல் தாவி ஏறிக் கொண்டான் அந்தக் குட்டை இளைஞன். குதிரை சாலையில் திரும்பி வேகமாகச் சென்றது. வாமனாவதாரம் போன்ற அந்தக் குறள் வடிவ இளைஞன் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யும் காட்சியைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் வியப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது.

வியப்புக்கும், விந்தைக்கும் காரணமான இந்த இளைஞன் யார், தெரியுமா? மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பியைத் தெரிந்தவர்களுக்கு இவனையும் தெரிந்திருக்க வேண்டும். 'நாராயணன் சேந்தன்' என்னும் பெயரையுடைய இந்தக் குட்டை இளைஞன் மகாமண்டலேசுவரருக்கு வலது கையைப் போல உதவி வருபவன்.

'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந் தேர்க்(கு)
அச்சாணி யன்னா ருடைத்து.'

என்ற திருவள்ளுவ நாயனார் கூறியருளிய திருக்குறலுக்குப் பொருத்தமானவன் நாராயணன் சேந்தன். 'நாடக அரங்கில் வந்து போகின்ற விதூடகனைப் போலத் தோன்றும் இந்தக் குட்டை மனிதனால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கும் மகாமண்டலேசுவரருக்கு என்ன ஆகப் போகிறது?' என்று யாராவது நினைத்தால் அது முதல் தரமான தவறு. நாஞ்சில் நாட்டுக்கும் அதன் அரசாட்சி அமைப்புக்கும் இடையாற்றுமங்கலம் நம்பி எவ்வளவு முக்கியமானவரோ அவ்வளவுக்கு அவருக்கு முக்கியமானவன் இந்த நாராயணன் சேந்தன். இவனை அவருடைய உதவி ஆள் என்பதா, அந்தரங்க ஒற்றன் என்பதா, நண்பன் என்பதா, மாணவன் என்பதா என்றெல்லாம் தனித்தனியே ஆராய்ந்து கொண்டிருப்பதை விடச் சுருக்கமாக ஒன்றுச் சொல்லிவிடலாம். எந்தெந்தச் சமயங்களில் எப்படி எப்படியெல்லாம் பயன்பட முடியுமோ, அப்படிச் சமய சஞ்சீவியாகப் பயன்படுபவன் இவன்.

இவன் உடலின் உயரத்தை விட அறிவின் உயரம் அதிகம். பார்ப்பதற்குப் பாமரனைப் போல் தான் இடி இடியென்று சிரித்துப் பேசிக் கொண்டிருப்பான்; ஆனால் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்கி விட்டாலோ இவன் சூரப்புலிதான்.

'நாராயணன் சேந்தனால் செய்ய முடிந்த காரியத்துக்கு நாராயணன் சேந்தனைத் தவிர வேறு யாரையும் அனுப்ப முடியாது' என்று இடையாற்றுமங்கலம் நம்பி அடிக்கடி அவனைப் புகழுவதுண்டு. அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான் அவன்.

அன்று மாலை 'விழிஞம்' துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தன், மகாராணியாரும் அவருடைய பரிவாரமும் கன்னியாகுமரியை அடைவதற்கு முன்பே தான் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டான். குதிரையோடு ஆலயத்தருகே போய் இறங்கினால் தன் வரவை வெளிப்படையாகப் பலருக்கு அறிவித்தது போல் ஆகிவிடுமென்று அவன் அறிவான். கூடியவரை தன்னை அங்கே யாரும், எதற்காகவும் தெரிந்து கொள்ளக் கூடாது; ஆனால், தான் எல்லாவற்றையும் எல்லோரையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது அவனுடைய நோக்கம். கோவிலின் மேற்குப் புறமாகக் கடற்கரையோரத்தில் இருந்த புன்னைமரச்சோலை ஒன்றுக்குள் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் குதிரையைக் கட்டினான்.

பின்பு சிறிது நேரம் அந்தச் சோலையிலேயே இங்கும் அங்குமாகச் சுற்றிய போது, ஒரு பெரிய மரத்தின் அடியில் சில ஆடைகளும், அங்கிகளும், மூன்று சிவப்புத் தலைப்பாகைகளும் களைந்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.

'இவைகளை யார் இங்கே வைத்திருக்கக்கூடும்?' என்ற சந்தேகத்தோடு நாராயணன் சேந்தன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். புன்னைமரத் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் கடலில் கரையோரமாக மூன்று மனிதர்கள் நீராடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டான். மரத்தடியில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த உடைகளும் தலைப்பாகைகளும், அவர்களுடையனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நாராயணன் சேந்தன் புரிந்து கொண்டான். சாதாரண மனிதர்கள் அணியக்கூடிய உடைகளாகத் தெரியவில்லை அவை. அரசாங்கப் பணி புரியும் வீரர்களோ, சேவகர்களோ, அணியக்கூடிய உடையாகத் தோன்றின அவை. புறத்தாய நாட்டு வீரர்களும் வழக்கமாக அணியக்கூடிய உடை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் புன்னை மரத்தடியில் கண்ட உடைகளும் அப்படி இருந்திருந்தால், 'சரிதான்! யாரோ பாண்டி நாட்டு வீரர்கள் உடைகளைக் கழற்றி வைத்து விட்டு நீராடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டு போயிருப்பான். ஆனால் அந்த மாதிரி உடையணிந்த வீரர்களை அவன் பாண்டி நாட்டுப் படையில் எங்கும், எப்போதும் கண்டதே இல்லை. ஆகவே, அருகில் நெருங்கி உற்றுப் பார்த்தான். தலைப்பாகைகள் மூன்றில் ஒன்றுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்த ஓர் ஓலை நாராயணன் சேந்தனின் கூரிய விழிகளில் தென்பட்டது. சட்டென்று குனிந்து அதைக் கையில் எடுத்தான்.

அந்த ஓலையைப் படிப்பதற்குள் வேலிக்கு அப்பால் மணலில் ஆட்கள் நடந்து வரும் ஒலி கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று வீரர்களும் தங்கள் உடைகளை அணிந்து கொள்வதற்காக மரத்தடிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கையில் எடுத்த ஓலையை அது முன்பிருந்தபடியே தலைப்பாகைக்குள்ளேயே வைத்து விட்டு வேலி ஓரமாகப் பதுங்கினான் நாராயணன் சேந்தன்.

அதன்பின் அன்று கன்னியாகுமரியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் மறைந்திருந்து கவனித்தான். மகாராணியார் கடற்கரைக் காட்சியைக் கண்டது, தளபதி ஒற்றர்களோடு போரிட்டது. ஓலையைக் கைப்பற்றியது, கன்னியாகுமரி அம்மன் ஆலயத்தில் வானவன்மாதேவிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகியவையெல்லாம் ஒன்று விடாமல் தெரிந்து கொண்டான்.

மகாராணியாரும் பரிவாரமும் ஆலயத்திலிருந்து கோட்டைக்குத் திரும்பிய போது அவனும் பின்னாலேயே புறப்பட்டு விட்டான். சுசீந்திரத்தை அடைந்தவுடன் மகாமண்டலேசுவரர் தம்மைச் சுசீந்திரத்தில் சந்திக்கச் சொல்லியிருந்தது, அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே மகாராணியாரைக் கோட்டைக்குப் போகும் சாலையில் பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு, சுசீந்திரம் கோவிலுக்குத் திரும்பிப் பிரிந்து சென்றான் அவன். சுசீந்திரம் கோவிலில் இடையாற்றுமங்கலம் நம்பியும் அவர் புதல்வி குழல்மொழியும் அவர்களோடு மூன்றாம் மனிதரான ஓர் இளம் வயது துறவியும் நாராயணன் சேந்தனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, "சேந்தா! இப்போது நீ மகாராணியாரைப் பாதியில் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். நீ கூறியதிலிருந்து வானவன்மாதேவியாரை ஏதோ தீய சக்திகள் சூழ்வதாகத் தெரிகிறது. இப்போது நீ மீண்டும் பின் தொடர்ந்து செல். முடியுமானால் இன்றிரவு கோட்டையிலேயே யாரும் அறியாமல் தங்கியிருந்து கவனி, உடன் போ!" என்று அவனை அங்கிருந்து அனுப்பி விட்டார் மகாமண்டலேசுவரர்.

நாராயணன் சேந்தன் மகாராணியாரும் பரிவாரங்களும் சென்ற நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் போகாமல் வேறொரு கிளைச்சாலை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அந்தக் கிளை வழி ஓரிடத்தில் நெடுந்தூரத்துக்கு ஒரு பாதிரித் தோட்டத்துக்கு நடுவிலே புகுந்து சென்றது. குறுகலான அவ்வழியில் நாராயணன் சேந்தனின் புரவி மெல்லச் சென்றது. நெடிதுயர்ந்த பாதிரி மரக் கிளைக்கு இடையே வழியின் மேல் அங்கங்கே நிலவின் ஒளி பரவியது. சில இடங்களில் மரக்கிளைகளின் அடர்ந்த நிழல் பட்டு இடைவழி தெரியாமல் இருண்டாற் போலவும் இருந்தது.

ஓர் இடத்தில் பாதையோரமாக யாரோ இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பதைத் தூரத்தில் வரும்போதே அவனுடைய கூரிய கண்கள் பார்த்து விட்டன. அதைப் பொருட்படுத்தாமல், 'யாரோ வழிப் போக்கர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று நினைத்துக் குதிரையை விட்டுக் கொண்டு போக முயன்றான்.

ஆனால் அவனுடைய குதிரை அந்த இடத்தை அடைந்ததும், சாலையோரத்து இருளில் உட்கார்ந்திருந்த அந்த மூன்று ஆட்களும் குபீரென்று எழுந்து பாய்ந்து மறித்த போதுதான், நாராயணன் சேந்தன் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொள்ள முடிந்தது. நிலவொளியில் தெரிந்த சிவப்புத் தலைப்பாகைகளைக் கண்டதும் குதிரையை நிறுத்தாமல், கடிவாளத்தைச் சுண்டி நாலுகால் பாய்ச்சலில் ஓடச் செய்தான்.

8. நாராயணன் சேந்தன்

குதிரை பாய்ந்தோடுவதற்காக முன் கால்களைத் தூக்கிய வேகத்தில் வழியை மறிக்க வந்த மூவரில் ஒருவன் அடிபட்டுத் தடுமாறிக் கீழே உருண்டான். நல்ல வேளையாக மற்ற இரண்டு பேர்களும் ஒதுங்கி நின்று கொண்டு வழியை விட்டு விட்டார்கள். இல்லையானால் அவர்களுக்கும் மற்றவனுக்கு நேர்ந்த கதிதான் நேர்ந்திருக்கும். சேந்தன் குதிரையைச் செலுத்துவதில் சில சூட்சுமங்கள் வைத்திருப்பான். இம்மாதிரி அபாயகரமான சந்தர்ப்பங்களில் குதிரையை வாயுவேகமாகப் பறக்கச் செய்யும் தந்திரம் அவனுக்கா தெரியாது?

தான் அவ்வாறு விரைவாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு ஓடிவந்த போது அந்த மூன்று சிவப்புத் தலைப்பாகை அணிந்த வீரர்களும் பின்னால் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்களா, இல்லையா என்பதைக் கூட நாராயணன் சேந்தன் திரும்பிக் கவனிக்கவில்லை. அங்கே குதிரையை முடுக்கின முடுக்கில் புறத்தாய நாட்டுக் கோட்டையின் தென்மேற்கு மூலையிலுள்ள ஏரியின் கரையில் போய்த்தான் நிறுத்தினான்.

பிரதான வாசல் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்து சென்றால் தன் வரவைப் பலரும் தெரிந்து கொள்ளும்படி ஆகிவிடும் என்று அவன் பயந்தான். ஏரிக்கரையில் குதிரையை நிறுத்திவிட்டுக் கோட்டைக்குள் எப்படி நுழைவதென்று அங்கே நின்று சிந்தித்தான். அவன் மனத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் மாறிமாறித் தோன்றின. கன்னியாகுமரியிலிருந்து தப்பிய அந்த வீரர்கள் சுசீந்திரம் பாதிரித் தோட்டத்துக் கிளை வழியில் எப்படி வந்து சேர்ந்தார்கள்? எப்போது வந்து சேர்ந்தார்கள்? அவர்கள் தன் குதிரையை ஏன் மறிக்க வேண்டும்? சிந்திக்கச் சிந்திக்க மனம் தான் குழம்பிற்றே தவிர வேறொன்றும் விளங்கவில்லை.

அங்கே அந்த இரவின் தனிமையில் நின்று மனம் குழம்பிக் கொண்டிருப்பதை விட உடனே கோட்டைக்குள்ளே செல்ல முயன்றால் பயனளிக்கும் என்று அவன் நினைத்தான். சுற்றுமுற்றும் கோட்டை மதிலைப் பார்த்தபோது அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தென்மேற்குப் புறத்திலிருந்த ஏரியிலிருந்து கோட்டைக்குள்ளே இருக்கும் நந்தவனத்துக்கு உபயோகப்படுவதற்காக ஒரு சிறிய தண்ணீர்க் கால்வாய் பிரிந்து போயிற்று. கனத்த மதிற் சுவரில் அரைவட்ட அளவில் அந்தக் கால்வாய்த் தண்ணீர் உள்ளே நுழைந்து போவதற்காக ஒரு சிறிய வாய்க்கால் வழி உண்டாக்கியிருந்தார்கள்.

தன்னைப் போன்ற குட்டை மனிதன் நுழைவதற்கே உயரமும், அகலமும் போதாது போல் தோன்றிய அந்தக் கால்வாய் வழியில் நீரோட்டத்தின் வேகத்தையும் சமாளித்துக் கொண்டு எப்படி உள்ளே நுழைவதென்று மலைத்தான் அவன். அப்போது மிக அருகில் ஆட்கள் ஓடி வரும் காலடியோசை கேட்டது. அவன் மனத்தில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன. ஒருவேளை பாதிரித் தோட்டத்துக் கிளை வழியில் தன்னிடம் வம்பு செய்த அந்த முரடர்களாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான்.

அவனுடைய சந்தேகம் சரியாகவே இருந்தது. கிளை வழிச் சாலை ஏரிக்கரையை அடையும் திருப்பத்தில் நிலா ஒளியில் அவர்கள் வெகு வேகமாக ஓடி வந்து கொண்டிருப்பதை அவன் கண்டான். அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் நன்றாக அடையாளம் தெரிந்தன.

நாராயணன் சேந்தனுக்கு யோசிக்க நேரமில்லை. குபீரென்று கால்வாயில் குதித்தான். மார்பளவு தண்ணீர் திமுதிமுவென்று உட்புறம் பாய்ந்து கொண்டிருந்தது. உள்ளே நந்தவனம் இருந்த பகுதி வெளிப்புறத்தை விடச் சிறிது பள்ளமாக இருக்க வேண்டும். இல்லையானால் வெள்ளம் இழுத்துக் கொண்டு போவது போல் அப்படி ஆளை இழுத்துப் பறிக்குமா? நிமிர்ந்தால் தலை மேலே மதிற்சுவரின் அடிப்பாகத்தில் இடித்தது. இரண்டு விலாப்புறமும் பக்கச் சுவர்களில் உரசின. பருத்த தேகத்தை உடைய அவனுக்கு மூச்சுத் திணறியது, விழிகள் பிதுங்கின. 'ஐயோ, மறுபுறம் போய்க் கரையேறுவதற்குள் மூச்சுத் திணறிச் செத்துப் போய்விடுவேன் போலிருக்கிறதே. இந்தப் பாழாய்ப் போன கால்வாய் வழியாக உள்ளே போக வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏன் தான் உண்டாயிற்றோ? இடைவழியிலேயே இந்த இருண்ட கால்வாய்க்குள் நம்முடைய உடல் செருகிச் சிக்கிக் கொண்டாலும் ஏனென்று கேட்பார் இல்லையே?' என்று தனக்குள் எண்ணித் துணுக்குற்றான் அவன். வேகமாக உள்நோக்கிப் பாயும் நீரோட்டம் ஓர் இடத்திலும் பாதங்களை ஊன்றி நிற்க விடாமல் அவனை இழுத்துத் தள்ளிக் கொண்டு போயிற்று.

நாராயணன் சேந்தன் மதிலின் உட்புறம் நந்தவனத்தில் வந்து கரையேறிய அதே சமயத்தில் வெளிப்புறம் கால்வாய் தொடங்குமிடத்தில் 'திடும்திடு'மென்று தண்ணீரில் ஆட்கள் குதிக்கின்ற ஓசை உட்புறமிருந்த அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தன்னை துரத்திக் கொண்டு வந்தவர்கள் தான் குதித்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் உடனே நந்தவனத்திலிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அது ஒரு மகிழ மரம். அதில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த கிளை அரண்மனை நிலாமுற்றத்தை தொடுவது போல் நெருக்கமாகப் படர்ந்திருந்தது. அந்தக் கிளையில் அமர்ந்து கால்வாயை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வழியே தன்னைப் பின் தொடர்ந்து குதித்து வந்த மனிதர்களின் வரவை எதிர்பார்த்து, அந்தத் திசை நோக்கி இமைக்காமல் காத்திருந்தன அவன் விழிகள். அந்த நடு இரவில் நிலா முற்றத்தில் பாட்டொலியும், நடன ஒலியும் கேட்பதை அவன் செவிகள் கூர்ந்து கவனித்தன. மேலே நிலா முற்றத்தில் மகாராணியாரும், வேறு சிலரும் அமர்ந்து கொண்டு ஆடல் பாடலை அநுபவிக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வந்த குரல்களால் அவன் தெரிந்து கொண்டான்.

மதிலோரமாகக் கால்வாயிலிருந்து உட்புறம் பிரவேசிக்கும் வழியில் நிழல்போல் உருவங்கள் ஆடின. நீர்ப் பரப்பில் காலடி பெயர்த்து வைக்கும் ஓசை கேட்டது. தான் மகிழ மரக் கிளையில் உட்கார்ந்திருப்பது உள்ளே வரும் அவர்களுக்குத் தெரிந்து விடாத வண்ணம் கிளைகளின் அடர்த்தியில் தன்னை மறைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன். சிவப்புத் தலைப்பாகைகள் கால்வாய்த் துவாரத்தின் வழியே நிலா ஒளியில் நன்றாகத் தெரிந்தன. துணிவு மிகுந்தவனும், ஆபத்துகளைச் சாதாரண விளையாட்டாக வரவேற்கும் இயல்புடையவனுமாகிய நாராயணன் சேந்தனுடைய மனத்தில் ஒரு விநாடி இனம் புரியாத பயத்தின் சாயை படிந்தது. அவர்கள் எதற்காகத் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தன்னால் ஆனமட்டிலும் சிந்தித்து முடிவு செய்ய முயன்றான் அவன். ஆனால் அது அவனால் முடியவில்லை.

ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்து விட்டது. சிவப்புத் தலைப்பாகையோடு கூடிய அந்த மூன்று முரட்டு ஒற்றர்களும் நல்ல எண்ணத்துடனோ அல்லது நல்ல காரியத்தைச் செய்வதற்காகவோ, தென்பாண்டி நாட்டிற்குள் நுழைந்திருக்க முடியாது என்பதுதான் அது. கன்னியாகுமரிக் கடற்கரையில் புன்னைமரச் சோலைக்கருகில் அவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது முதல் முதலாகப் பார்த்தவுடனே அவன் மனத்தில் இந்த எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. பின்னால் கன்னியாகுமரி ஆலயத்தில் நடந்தவை, பாதிரித் தோட்டத்து வழியில் மறிக்க முயன்றது ஆகிய நிகழ்ச்சிகளால் நாராயணன் சேந்தன் அந்த முரட்டுச் சிவப்புத் தலைப்பாகை ஆட்களைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.

இப்போது அவர்கள் தன்னைப் பின்பற்றிக் கோட்டைக்குள்ளேயும் நுழைந்துவிட்டதைப் பார்த்த அவனுக்கு உடம்பு புல்லரித்தது.

அவனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறவர்களைப் போலக் கால்வாய் வழியாக உட்புறம் வந்து கரையேறிய அந்த மூவரும் அவன் ஏறி உட்கார்ந்திருந்த அதே மகிழ மரத்தை நோக்கி நடந்து வந்தனர். நிலா ஒளி தன்னை அவர்களுக்குக் காட்டி கொடுத்து விடக் கூடாதே என்ற திகில் நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்டது. நிலா முற்றத்துச் சுவரின் நிழலும் மகிழ மரத்தின் அடர்த்தியும் அவனுக்கு அபயமளித்தன. மிக அருகில் மரத்தின் அடர்த்தியின் கீழே அம் மூவரும் வந்து நின்ற போது அவனால் அவர்களை நன்றாகப் பார்ப்பதற்கு முடிந்தது. பீமசேனர்களைப் போல் மூவரும் பருத்த ஆகிருதியுடையவர்கள். ஒருவனது முகத்திலும், கை கால்களிலும் சிராய்த்து இரத்தக் காயங்கள் தென்பட்டன. அந்த ஆள் இன்னாரென்று நாராயணன் சேந்தன் தெரிந்து கொண்டு விட்டான். கன்னியாகுமரியில் தளபதி வல்லாளதேவனை வழியில் மடக்கி எதிர்த்து அவனிடம் நன்றாக அடிபட்டுப் பாறையிடுக்கில் விழுந்து மூர்ச்சை அடைந்தவனே அவன்.

கீழே அவர்கள் வந்து நின்ற நிலையும், சுற்றிலும் ஏதோ தேடுகிறவர்களைப் போல அவர்கள் பார்த்த விதமும் மரக்கிளையில் பதுங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தன் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கின. மகிழ மரத்துப் பொந்தில் நெருப்புக் கங்கு போன்ற விழிகளோடு உட்கார்ந்து கொண்டிருந்த கோட்டான் ஒன்று குரூரமாகக் கத்தியது. மேற்புறம் நிலா முற்றத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்டிய ஒலியும், இனிய பாடற் குரலும் அந்தக் கோட்டானின் அலறலில் கலந்து விகாரமடைந்தன.

நாராயணன் சேந்தன் பாதங்களை மரக் கொம்பில் அழுத்திக் கிளையைப் பற்றியிருந்த கைகளின் பிடியை இறுக்கினான். அவன் உட்கார்ந்திருந்த கிளை குலுங்கியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களின் கவனம் ஒரு கணம் அந்தச் சிறிய சலனத்தால் கவரப்பட்டது. அவர்கள் தங்களுக்குள் இரகசியமாக ஏதோ பேசிக் கொள்ளத் தொடங்கவே நாராயணன் சேந்தன் மறைந்திருந்தபடியே அவற்றை உற்றுக் கேட்டான்.

"ஏண்டா செம்பியன், இதென்ன வேடிக்கை! இதுவரை ஆடாமல் அசையாமல் இருந்த மரக்கிளை ஏன் இப்படித் திடீரென்று குலுங்குகிறது?" - மூவரில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து இப்படிக் கேட்கவும், மற்ற இருவரும் குறும்புத்தனமாகச் சிரித்தனர்.

"முத்தரையா! மேலே நிலா முற்றத்தில்தான் மகாராணியார் இருக்கிறார் போலிருக்கிறது! இதோ இந்த ஒலிகளைக் கவனித்தாயா?" என்று, முதலில் கேட்டவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமலே வேறொரு கேள்வியை எழுப்பினான் இன்னொருவன்.

"இரும்பொறை! அப்படியானால் நம்முடைய முயற்சியை இங்கே தொடர்ந்து செய்தால் என்ன? நமக்கு முன்னால் குதிரையில் வந்த அந்தக் குட்டைத் தடியன் கூட இங்கே தான் எங்கேயாவது இருபபன். கன்னியாகுமரிக் கோவிலில் நிறைவேறாத நமது எண்ணம் இங்கே நிறைவேறினாலும் நிறைவேறலாம். இந்த மகிழ மரத்துக் கிளை வழியாகவே நாம் நிலா முற்றத்தில் ஏறிக் குதிக்க முடியுமென்று தோன்றுகிறது." - இப்படி அதுவரை பேசாமல் நின்றிருந்த மூன்றாமவன் கூறிய போது மரக்கிளையில் பதுங்கியவாறே இவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனின் உடல் 'வெடவெட'வென்று ஆடி நடுங்கியது. 'குட்டைத் தடியன்' என்று கீழே நின்று பேசியவன் குறிப்பிட்டது தன்னைத்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது.

அந்தச் சிவப்புத் தலைப்பாகை ஒற்றர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட பேச்சிலிருந்து அவர்கள் மூவருடைய பெயரையும் கூட அவன் ஒருவாரு தெரிந்து கொண்டான். செம்பியன், முத்தரையன், இரும்பொறை - கீழே நிற்கும் அவர்களுடைய இந்தப் பெயர்கள் பாண்டிய நாட்டுப் பெயர்களாகவே தோன்றவில்லை. அவர்களுடைய பேச்சின் உட்கருத்தை உணர்ந்த போது, இரண்டாவது முறையாக வானவன்மாதேவியின் உயிரைக் குறி வைத்துக் கொண்டு அவர்கள் வந்திருப்பதை அறிந்தான் சேந்தன்.

கோட்டான் இன்னொரு முறை அதி பயங்கரமாக அலறியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களில் 'முத்தரையன்' என்று அழைக்கப்பட்டவன் ஒரு கூரிய குத்துவாளை தன் இடுப்பிலிருந்து வெளியே எடுத்து நிலா ஒளியில் தூக்கிப் பிடித்தான். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நுனி நாக்குப்போல் அது 'பளீர்' என்று மின்னிப் பளபளத்தது.

மறுகணம் கையில் அந்த வாளைப் பிடித்துக் கொண்டே அவன் மகிழ மரத்தில் தாவி ஏறத் தொடங்கிய போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. அப்படியே நிலா முற்றத்தில் குதித்துத் தப்பி ஓடி விடலாமா என்று நினைத்தான் அவன். வரிசையாகக் கீழே நின்றிருந்த மூவருமே ஒருவர் பின் ஒருவராக மரத்தில் ஏறுவதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைந்தான். அவர்கள் மேலே ஏறி வந்துவிட்டால் கிளையில் பதுங்கிக் கொண்டிருக்கும் தன்னைக் கண்டு கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அந்த மரத்தில் ஒரே கிளை மட்டும் தான் நிலா முற்றத்தின் மேல் தளம் வரை நெருங்கி வளர்ந்திருந்தது. அதுதான் நாராயணன் சேந்தன் உட்கார்ந்திருந்த கிளை. ஏறிக்கொண்டிருந்த மூவரும் மேலே ஏறி வந்தவுடன் அதே கிளையில் காலை வைத்தபோது நாராயணன் சேந்தன் திடுக்கிட்டான். முன்னை விட அதிகப் பரபரப்படைந்தான்.

கடைசி நம்பிக்கையாக, அவர்கள் தன்னை நெருங்காமல் இருப்பதற்காக ஒரு தந்திரம் செய்து பார்த்தான் அவன். இரண்டு கைவிரல்களையும் வாயருகே குவித்து மயிர் சிலிர்க்க வைக்கும் பயங்கரக் கூச்சல் ஒன்றை உண்டாக்கினான். தன்னுடைய அந்தக் கூச்சலைக் கேட்டு பயந்தாவது அவர்கள் மரத்திலிருந்து கீழே இறங்கி, 'பேயோ பிசாசோ' என்று நினைத்துக் கொண்டு திரும்பிப் போய் விடட்டும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால், நடந்ததோ முற்றிலும் எதிர்பாராத வேறொரு நிகழ்ச்சி.

அந்தக் கூப்பாட்டினால் அதிர்ச்சியடைந்த மூன்று ஒற்றர்களும் கிளை நுனிக்கு வேகமாக ஓடி வந்து நிற்கவே சுமை அதிகமாகி நாராயணன் சேந்தன் உட்கார்ந்து கொண்டிருந்த அந்தக் கிளை 'மடமட'வென்று முறிந்தது.

தான் நின்று கொண்டிருந்த கிளைக்கு மேலே வேறொரு கிளையில் தாவியதால், நாராயணன் சேந்தன் முறிந்து விழுந்த கிளையோடு கீழே விழாமல் பிழைத்தான். ஆனால் மற்றவர்கள் கிளை முறிந்து கீழே விழுவதற்குள் தாங்களாகவே குதித்து விட்டனர்.

அரண்மனை நந்தவனத்தில் கூப்பாடும், குழப்பமும், மரம் முறிந்து விழும் ஓசையும் கேட்டுக் கோட்டைக்குள்ளேயிருந்த வீரர்கள் தீவட்டியும் கையுமாக ஓடி வரவே, புதிதாகப் புகுந்திருந்த ஒற்றர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர்; மறுபடியும் கால்வாயில் இறங்கி மதிலுக்கு வெளியே போகாவிட்டால் அகப்பட்டுக் கொள்ள நேரிடுமென்று அவர்களுக்குத் தெரியாதா, என்ன? மரத்தில் திரிசங்குவைப் போலத் தொங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனுக்குத் தான் தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாக ஆகிவிட்டது! அவனால் கீழேயும் குதிக்க முடியவில்லை. மேலேயும் பிடித்துக் கொள்வதற்குச் சரியான ஆதாரமில்லை. அவன் அந்தக் கோட்டைக்கோ அரண்மனைக்கோ அந்நியனில்லை, மகாமண்டலேசுவரருக்கு அந்தரங்க மனிதன். ஆனால் அப்போதுள்ள சூழ்நிலையில் அவன் அகப்பட்டுக் கொண்டால் பலவிதமான கேள்விகள் எழுவதற்கு இடம் ஏற்பட்டுவிடும் அல்லவா?

'எப்படி வந்தான்? எதற்காக வந்தான்? நந்தவனத்துக்குள் யாருமறியாமல் நுழைந்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன?' என்பது போன்ற கேள்விகள் பிறந்தால் அந்த நிலையில் அவற்றுக்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? பதில் சொன்னால் இடையாற்றுமங்கலம் நம்பியையே காட்டிக் கொடுப்பது போல் ஆகும்.

'உண்மையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியவர்கள் யாரோ அவர்களே தப்பி ஓடிவிட்டார்கள். நான் எதற்காக அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? வந்த சுவடு தெரியாமல் இங்கிருந்து போய் விடுவது நல்லது!' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்ட நாராயணன் சேந்தன் கிளையில் தொங்கிக் கொண்டே நுனிவரை வந்து, அப்படியே நிலா முற்றத்துத் தளத்தில் இறங்கினான்.

அவனுடைய நல்ல காலமாக நிலா முற்றத்தில் அப்போது வேறு யாரும் இல்லை. நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மகாராணி வானவன்மாதேவியார் உள்பட யாவரும் பரபரப்படைந்து கீழே சென்றிருந்தனர்.

'இந்த மரம் முறிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. இல்லையானால் அந்தப் பாவிகள் இரண்டாவது முறையாக மகாராணியாரின் மேல் குறி வைத்திருப்பார்கள்' என்று எண்ணித் திருப்திப்பட்டான் சேந்தன். வெகுநேரம் கழித்து கோட்டையில் சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வந்த வழியே வெளியேறி இடையாற்றுமங்கலத்துக்குப் புறப்பட்டான் அவன்.

9. ஓலையின் மர்மம்

தானும் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியும், அந்தரங்க அறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது வெளிப்புறம் யாரோ கதவைத் தட்டும் மணியோசை கேட்டவுடன் தளபதி வல்லாளதேவனால் அது யாராயிருக்கக் கூடுமென்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியோ, கதவு திறக்கப்படுவதற்கு முன்பே மெதுவாகச் சிரித்துக் கொண்டு வெளியே நிற்பவனை அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்.

"யார், நாராயணன் சேந்தன் தானே? வா, அப்பா! கதவைத் திறந்து கொண்டு உள்ளே வா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று அவர் கூறிய போது தளபதி அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.

மணிகள் ஒலிக்குமாறு கதவைத் திறந்து கொண்டு நாராயணன் சேந்தன் உள்ளே பிரவேசித்தான். அவன் அணிந்திருந்த ஆடைகள் நனைந்திருந்தன. உடம்பில் சேறும், சகதியுமாக இருந்தது. தலை முடியில் இரண்டொரு பழுப்படைந்த மகிழ இலைகளும், பூக்களும் செருகிக் கொண்டு கிடந்தன.

இந்தக் கோலத்தோடு உள்ளே வந்து நின்ற அவனை ஏற இறங்கப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி. "இது என்னப்பா தோற்றம்? உன்னுடைய அழகான கேசத்துக்கு மகிழம்பூச் சூட்டிக் கொள்ளவில்லை என்றால் அடிக்கிறதோ?" என்று அவர் கேட்ட போது அவனுக்கே ஆச்சரியமாகி விட்டது.

"என்னது! மகிழம் பூவா? என் தலையிலா?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அவன் தலையைத் தடவி உதறினான். இலைகளும் பூக்களும் கீழே உதிர்ந்தன.

"சேந்தா! நீ சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் என்னைச் சந்தித்துக் கூறியதெல்லாம் உண்மைதானே? இதோ உட்கார்ந்திருக்கும் தளபதி ஓரே ஓர் உண்மையை மட்டும் ஏனோ மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த மூன்று ஒற்றர்களிடம் ஏதோ ஓர் ஓலை இருந்ததென்றும், அந்த ஓலையைத் தளபதி அவர்களோடு போரிட்டுக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பதாகவும் நீ கூறினாய். இவர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்; ஆனால் அதை மட்டும் சொல்லவில்லை. நானாகவே இப்போதுதான் வலுவில் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் நீயும் வந்திருக்கிறாய்!"

"சுவாமீ! என் கண்களால் கண்ட உண்மையைத் தான் அடியேன் சுசீந்திரத்தில் தங்களிடம் தெரிவித்தேன். புலி இலச்சினையும், பனை இலச்சினையும் ஆகிய அரசாங்க முத்திரைகள் அந்த ஓலையில் அடுத்தடுத்து வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன. என் கையாலேயே அதை எடுத்துப் பார்க்கும் வாய்ப்புக் கூட எனக்குக் கிட்டியது. துரதிருஷ்டவசமாக என்னால் அதைப் படித்துப் பார்க்க முடியாமல் சந்தர்ப்பம் கெடுத்து விட்டது. ஆனால் கடற்கரைப் பாறைகளுக்கு நடுவே தளபதி எதிரிகளோடு வாட்போர் செய்ததையும் ஓலையை வைத்துக் கொண்டிருந்தவன் அதைக் கடலில் எறிவதற்குப் போன போது அவன் கையை மறித்து அவர் அதைப் பறித்துக் கொண்டதையும் என் கண்களால் கண்டேன்."

"நீ இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய். அவர் அதைப் பற்றி வாய் திறக்கவே பயப்படுகிறாரே!" என்று புன்னகையோடு அருகில் அமர்ந்திருந்த வல்லாளதேவனைச் சுட்டிக் காட்டினார் மகாமண்டலேசுவரர்.

"ஒரு வேளை அந்த ஓலையில் அடங்கியிருக்கும் செய்தி இவரை இப்படி மௌனம் சாதிக்கச் செய்கிறதோ என்னவோ?" என்றான் நாராயணன் சேந்தன். தளபதி வல்லாளதேவன் திக்பிரமையடைந்து போய் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மனத்தில் கீழ்க்கண்ட எண்ணங்கள் ஓடின.

'ஆகா! இந்த இடையாற்று மங்கலம் நம்பி யாருக்கும் தெரியாமல் எவ்வளவு அந்தரங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்! நாட்டில் நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் அறிந்து கொண்டு வந்து கூற இவரைப் போலவே இவருக்கு ஒரு தந்திரசாலியான ஒற்றன்! இவருக்குத் தெரியாது என்றோ, தெரியவிடக் கூடாது என்றோ எதையும் எவராலும் மறைத்து வைக்க முடியாது போலிருக்கிறதே! எவ்வளவு முன் யோசனை எவ்வளவு சாமர்த்தியம்' என்று அவரைப் பற்றிய வியப்பான நினைவுகளில் ஆழ்ந்து போய் உட்கார்ந்திருந்தான்!

"வல்லாளதேவா! இதோ நிற்கிறானே நாராயணன் சேந்தன், இவனை உனக்குத் தெரியுமல்லவா? இவன் யாரிடம் பொய் சொன்னாலும் என்னிடம் பொய் சொல்ல மாட்டான்."

இடையாற்று மங்கலம் நம்பி சொற்களை ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னார். இதுவரை அவருக்கு எடுத்துக் காட்டாமல் மறைத்து வைத்திருந்த ஓலையை வெளியே எடுத்தான்.

"மகாமண்டலேசுவரர் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு காரணத்துக்காக நான் இந்த ஓலையைக் கைப்பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமலிருப்பது நல்லதென்று மறைத்தேன். வேறு விதத்தில் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது" என்று பவ்வியமான குரலில் சொல்லிக் கொண்டே மடங்கிச் சுருண்டிருந்த அந்த ஓலையை எடுத்து அவர் கையில் கொடுத்தான்.

"ஆ! இந்த ஓலைதான்..." என்று அதைப் பார்த்ததும் அருகில் அடக்கமாக நின்று கொண்டிருந்த நாராயணன் சேந்தன் வியந்து கூவினான்.

அந்த ஓலை, அதில் இடப்பட்டிருந்த புலி, பனை ஆகிய முத்திரைகள் இவற்றையெல்லாம் பார்த்த பின்பும் வியப்போ, அதிர்ச்சியோ அடையாத நிதானமான முகக் குறிப்புடன் அதைப் படித்தார் இடையாற்று மங்கலம் நம்பி. அந்த ஓலை அவர் பெயருக்குத்தான் எழுதப்பட்டிருந்தது. அதில் அடங்கியிருந்த செய்தியும் சாதாரணமான செய்தியல்ல.

"மகாமண்டலேசுவரரான புறத்தாய நாட்டு நாஞ்சில் மருங்கூர்க் கூற்றத்து இடையாற்று மங்கலம் நம்பி அவர்கள் திருச் சமூகத்துக்கு, வடதிசைப் பெருமன்னரான சோழன் கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளூர்க் குறுநில மன்னனும், அரசூருடையானும் ஆகிய மூவரும் எழுதிக் கொண்ட திருமுகம். இந்தத் திருமுக ஓலை தங்கள் கையை அடைவதற்கு முன் தங்களால் புறத்தாய நாட்டுக் கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வருபவரும், நாஞ்சில் நாட்டு மகாராணியாருமாகிய, காலஞ்சென்ற திரிபுவனச் சக்கரவர்த்திகளான பராந்தக பாண்டிய தேவரின் திருத்தேவி வானவன்மாதேவியார் விண்ணுலக பதவி அடைந்திருப்பார்; அல்லது நாங்கள் செய்திருக்கும் ஏற்பாடு அவருக்கு அந்தப் பதவியை அளித்திருக்கும்.

எனவே, மகாமண்டலேசுவரராகிய தங்களையும், தங்களுடன் இருக்கும் நாஞ்சில் நாட்டுக் கூற்றத் தலைவர்களையும் உடனே வடதிசைப் பேரரசுக்கு அடிபணியுமாறு வேண்டிக் கொள்ளுகிறோம். நாளை மறுநாள் சோழ நாட்டுத் திருப்புறம்பியத்தில் நாங்கள் மூவரும் உங்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த ஏற்பாட்டுக்கு இணங்காவிட்டால் உடனே வடதிசை மும்மன்னர்கள் பெரும் படையோடு நாஞ்சில் நாட்டைத் தாக்குவதற்கு நேரிடும்.

1. பராந்தக சோழன்

2. கொடும்பாளூர்க் குறுநில மன்னன்

3. அரசூருடையான் சென்னிப் பேரரையன்."

இந்தச் செய்தியைப் படித்து முடித்த போது, மகாமண்டலேசுவரரின் இதழ்களில் அலட்சிய பாவம் நிறைந்ததொரு புன்னகை மிளிர்ந்தது. அவர் தலையை நிமிர்த்தித் தளபதி வல்லாளதேவனை உற்றுப் பார்த்தார். அருகிலிருந்த நாராயணன் சேந்தனை ஒரு தடவை பார்த்தார்.

"சுவாமி! இந்த விநாடி வரை மகாராணியாருக்கு ஒரு துன்பமும் இல்லை. அடியேன் இப்போது கூட அங்கே கோட்டையிலிருந்துதான் நேரே வருகிறேன்" என்று அவருடைய பார்வையில் பொதிந்திருந்த கேள்வியைக் குறிப்பினால் புரிந்து கொண்டு பதில் கூறினான் சேந்தன்.

"தளபதி! இந்த ஓலையை நீ என்னிடம் காட்டத் தயங்கியதற்குச் சிறப்பாக வேறு காரணம் ஏதோ இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. அதை எனக்குச் சொல்லலாம் அல்லவா? தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்" என்றார் மகாமண்டலேசுவரர். தன் மனத்தில் யாருக்கும் வெளிப்படுத்திச் சொல்ல இயலாத அந்தரங்கமான இடத்தில் மறைந்திருந்த ஓர் உண்மையை அவருடைய கேள்விக்கு பதிலாகச் சொல்ல வேண்டியிருந்ததால் தளபதி வல்லாளதேவன் தயங்கினான்.

ஒருவேளை நாராயணன் சேந்தன் அருகில் இருப்பதால் தான் தளபதி சொல்லத் தயங்குகிறானோ என்று நினைத்தார் மகாமண்டலேசுவரர்.

"சேந்தா! ஆற்று நீரிலும் சேற்றிலும் சகதியிலும் புரண்டுவிட்டு ஈர உடையோடு நின்று கொண்டிருக்கிறாயே. போய் உடை மாற்றிக் கொண்டு வா," என்று சொல்லி நாராயணன் சேந்தனை அங்கிருந்து அவர் அனுப்பி வைத்தார்.

ஆனால் அதன் பின்பும் தளபதி வாய் திறக்கவில்லை. "வல்லாளதேவா! உன் மனத்தில் இருப்பதை நீ என்னிடம் சொல்லத் தயங்குகிறாய்; பரவாயில்லை. நீ சொல்லவே வேண்டாம். பல நூறு காத தொலைவிலிருக்கும் வடதிசை மும்மன்னரும் இந்தக் கணத்தில் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட என்னால் இங்கிருந்தே சொல்லிவிட முடியும். நீ நினைப்பதைத் தெரிந்து கொள்வது பெரிய காரியமில்லை. இதோ சொல்கிறேன் கேள்! இந்த ஓலையைப் படித்ததும் உன் மனத்தில் என்ன தோன்றியது தெரியுமா? 'மகாமண்டலேசுவரரே வடதிசை மூவேந்தர்களுக்கு உள்கையாக இருப்பார் போலிருக்கிறது. இல்லையானால் இந்த ஓலை அவர் பெயருக்கு எழுதப்படுமா? ஆகா! இது எவ்வளவு அநியாயம்! வானவன்மாதேவியைக் கொலை செய்வதற்கு ஒற்றர்களை அனுப்புமாறு இவரே வடதிசைப் பேரரசருக்குத் தெரிவித்திருக்க வேண்டும். திருப்புறம்பியத்தில் அவர்களை வந்து சந்திப்பதாக இவரே சொல்லியிருப்பார். மகாமண்டலேசுவரரே இப்படிச் சதி செய்தால் இந்த நாடு எங்கே உருப்படப் போகிறது?' என்றெல்லாம் உன் மனத்தில் தோன்றியது உண்டா, இல்லையா?" என்று கேட்டுவிட்டு நகைத்தார் அவர்.

தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டுப் போனான். இந்த மனிதர் என்ன மந்திரவாதியா? இவருக்கு ஏதாவது குறளி வித்தை தெரியுமா? என்னுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை அப்படியே கண்டுபிடித்துச் சொல்லி விட்டாரே! என்று வியந்தான்.

"என்ன தளபதி! உண்மைதானா?"

தன் நினைவில்லாமலே அவருடைய கேள்விக்கு 'ஆம்' என்று பதில் சொல்வது போல் அவன் தலை அசைந்தது.

"நீ இப்படி நினைத்ததை நான் ஒரு பிழையாகக் கருதவில்லை. சந்தர்ப்பத்தின் கோளாறு உன்னை இப்படி நினைக்கச் செய்திருக்கிறது. ஆனால் வல்லாளதேவா! இந்த ஓலையையும் இது கிடைத்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து எண்ணி மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. இப்போதே மறந்து விடு!" இதுவரையில் அமைதியாகத் தலை குனிந்து அவர் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தளபதி தலை நிமிர்ந்து ஒரு கேள்வி கேட்டான்.

"மகாமண்டலேசுவரர் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மகாராணி வானவன்மாதேவியாரைக் கொலை செய்வதற்காகப் பயங்கரமான சதி முயற்சிகள் என் கண்காணவே நடக்கும் போது கடமையும் பொறுப்புமுள்ள நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது நீதியல்லவே?"

"தளபதி! உன்னுடைய பதவிக்கு இந்தப் பொறுப்பு உணர்ச்சி அவசியமானதுதான். ஆனால் மகாராணியாரைக் கொலை செய்வதும், புறத்தாய நாட்டைக் கைப்பற்ற முயல்வதும் யாராலும் எளிதில் முடியாத காரியங்கள். அப்படியே முடிவதாக இருந்தாலும் அதனை நீயும் உன்னைச் சேர்ந்த படைவீரர்களும் மட்டும் தடுத்துவிட முடியுமென்று எண்ணுவது பேதமை! உன்னைக் காட்டிலும் உன் சாமர்த்தியம், பொறுப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்கு வலிமை வாய்ந்த சக்தி ஒன்று மகாராணி வானவன்மாதேவியை அல்லும், பகலும், அனவரதமும் இடைவிடாமல் காத்து வருகிறதென்பது உனக்குத் தெரியுமா?"

அவருடைய இந்தச் சொற்களிலிருந்து ஏதோ ஒரு கூர்மையான முள் தன் மனத்தில் தைத்துவிட்டது போலிருந்தது வல்லாளதேவனுக்கு. அவர் தன்னையும் தன் சக்தியையும் ஏளனம் செய்யவேண்டும் என்பதற்காக அப்படிப் பேசுகிறாரா, அல்லது மறைமுகமாகக் குத்திக் காட்டுகிறாரா என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினான் அவன். குபீரென்று அவன் மனத்தில் ஆத்திரம் புகைந்தது. ஒரே ஒரு விநாடிக்குள் உணர்ச்சி வசப்பட்டு அவரை எதிர்த்துப் பேசிவிடத் துணிந்து விட்டான் வல்லாளதேவன்.

அவன் நிலையைப் பார்த்துப் புரிந்து கொண்ட அவர் உள்ளூரச் சிரித்துக் கொண்டே, "வல்லாளதேவா! உனக்கு வருகிற கோபத்தைப் பார்த்தால், இப்போதே வாளை உருவிக் கொண்டு என்மேல் பாய்ந்து விடுவாய் என்று தோன்றுகிறது. பொறு! ஆத்திரப்படாதே. மகாராணியாரின் நலத்திலும் நாஞ்சில் நாட்டின் அமைதியிலும் மிக அதிகமான பொறுப்பு எனக்கும் இருக்கிறது" என்று நிதானமாகக் கூறினார்.

"மகாமண்டலேசுவரரின் ஆற்றலையோ, ஆணைகளையோ அடியேன் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை. ஆனாலும் அடியேனிடம் அவர் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வாரென்றும் எதிர்பார்க்கவில்லை. நாளை நாஞ்சில்நாட்டு மகாசபையைக் கூட்ட வேண்டுமென்று மகாராணியார் தெரிவிக்கச் சொன்னதனால் தான் இங்கு வந்தேன். இல்லையானால் இங்கு வந்து தங்களுக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்க மாட்டேன்." தளபதி அமைதியாகப் பேச முயன்றாலும் வேகமாக வந்த கோபத்தை வலுவில் அடக்கிய சாயல் அவன் சொற்கள் ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கச் செய்தன.

அவன் கூறியதைக் கேட்டுவிட்டு, ஏதோ பதில் கூறுவதற்காக இடையாற்று மங்கலம் நம்பி வாய் திறந்தார். அதே நேரத்துக்கு ஈர உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பிய நாராயணன் சேந்தன் அந்தரங்க அறைக்குள் நுழைந்து விட்டான்.

இரவுப் போது நடுச்சாமத்துக்கும் மேலாகிவிட்டது. மகாமண்டலேசுவரரின் அழகிய பெரிய மாளிகையில் அந்த ஒரே ஒரு அறையைத் தவிர மற்றெல்லாப் பகுதிகளும் நிலவொளியின் அமைதியில் அடங்கிக் கிடந்தன. பறளியாற்றில் 'கலகல'வென்று தண்ணீர் பாயும் ஒலி, மரப்பொந்துகளிலுள்ள ஆந்தைகளின் குரல் இவை தவிர இடையாற்று மங்கலம் தீவு நிசப்தமாகி விட்டது.

தளபதி வல்லாளதேவனின் அப்போதைய மனநிலை எவ்வளவு நேரமானாலும் அந்தத் தீவை விட்டு அக்கரைக்குப் போய் அரண்மனைக்குச் சென்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தது. அன்றைக்கு மட்டுமே அதற்கு முன் அவனுடைய மனத்தில் ஏற்பட்டிராத சில பயம் நிறைந்த உணர்வுகள் ஏற்பட்டன. அந்தத் தீவு, அந்த மாளிகை, அவனெதிரே ஊடுருவும் விழிப்பார்வையோடு பொதியமலை சிகரமெனக் கம்பீரமாக வீற்றிருக்கும் மகாமண்டலேசுவரர், அவர் அருகில் நிற்கும் நாராயணன் சேந்தன் என்ற அந்தக் குள்ளன், எல்லோரும், எல்லாப் பொருளும், ஏதோ ஒரு பெரிய மர்மத்தின் சின்னஞ்சிறு பிரிவுகளைப் போல் தோன்றினார்கள்.

'படகு விடும் அம்பலவன் வேளான் மட்டும் உறங்காமல் துறையில் விழித்திருப்பானானால் எப்படியும் இவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விடலாம். இவர் என்னிடமிருந்து எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொண்டு விட்டார். ஆனால் இவரிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்று மாலை கன்னியாகுமரியில் நடந்த எல்லாச் சம்பவங்களையும் எனக்குத் தெரியாமலே இவருடைய ஒற்றனான இந்தக் குட்டையன் மறைந்திருந்து கண்காணித்திருக்கிறான். நானோ மகாமண்டலேசுவரருக்கு ஒன்றும் தெரிந்திருக்கக் காரணமில்லை என்று பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஒரு கோடியிலுள்ள இந்தத் தீவின் மாளிகையில் இருந்து கொண்டு நாஞ்சில் நாட்டு மூலை முடுக்குகளில் நடப்பதைக் கூட ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்!' - பயமும் மலைப்பும் கலந்த இது போன்ற திகைப்பூட்டும் நினைவுகள் தாம் வல்லாள தேவனின் மனத்தில் கிளர்ந்தன.

"சரி! அப்படியானால் நாளைக்கு மகாசபை கூட்டுவதைப் பற்றிக் கூறுங்கள். அதைத் தெரிந்து கொண்டு நான் இங்கிருந்து விடைபெற்றுக் கொள்ளுகிறேன். அரண்மனையில் மகாராணியார் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் காத்திருப்பார்" என்று அவன் இப்படிக் கேட்டதும் அவர் மறுபடியும் அவனை நோக்கிச் சிரித்தார். அவருடைய அந்தச் சிரிப்புகளில் அப்படி என்னதான் மறைந்து கொண்டிருக்கின்றன? ஒவ்வொரு சிரிப்புக்கும் ஓர் உள்ளர்த்தம் இருப்பது போல் அல்லவா அவனுக்குத் தோன்றியது!

"சேந்தா! தளபதி திரும்பிப் போவதற்கு எவ்வளவு அவசரப்படுகிறார் பார்த்தாயா? அவருக்கு இங்கே இருப்பதற்கே பயமாக இருக்கிறது. நாமெல்லாம் சிங்கம், புலி, கரடிகள் என்று நினைக்கிறார் போலும்" என்று தளபதிக்குப் பதில் சொல்லாமல் சேந்தனை நோக்கிக் கூறுபவர் போலக் கூறினார் மகாமண்டலேசுவரர்.

"சுவாமீ! இவர் போக வேண்டுமென்றாலும் இப்போது போக முடியாது. என்னை இக்கரைக்குக் கொண்டு வந்து விட்ட பின் அம்பலவன் வேளான் தோணியைத் துறையில் கட்டிவிட்டு, உறங்கப் போய்விட்டான். இனி நாளைக்கு வைகறையில் தான் தோணி போகும்" என்று சேந்தன் கூறினான்.

"கேட்டுக் கொண்டாயா, தளபதி! உன்னை இங்கே யாரும் விழுங்கிவிட மாட்டார்கள். இன்றிரவு இங்கே தங்கிவிட்டுக் காலையில் போகலாம். மகாசபைக் கூட்டத்துக்காக நானும் அரண்மனைக்கு வரவேண்டியிருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்தே போகலாம். மற்ற கூற்றத் தலைவர்களையெல்லாம் நேரே அரண்மனைக்குப் புறப்பட்டு வரும்படி தானே சொல்லி அனுப்பியிருக்கிறாய்?"

"ஆம்! அவர்கள் யாவரும் நாளைக் காலையில் நேரே அரண்மனைக்குத் தான் புறப்பட்டு வருவார்கள்."

"நல்லது! இப்போது உன்னிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுக்கப் போகிறேன். இந்த வேண்டுகோள் என்னுடைய சொந்த நன்மைக்காக மட்டும் அல்ல, எத்தனையோ வகையில் இந்தத் தேசத்தின் நன்மைகள் இந்த வேண்டுகோளுக்குள்ளே பொதிந்திருக்கலாம். அவற்றையெல்லாம் விளக்கவோ விவரித்துச் சொல்லவோ இது நேரமில்லை" என்றார் நம்பி.

"மகாமண்டலேசுவரரின் பலமான அடிப்படையைப் பார்த்தால் அது எத்தகைய வேண்டுகோளாக இருக்குமோ என்று அடியேனுக்கு உண்மையிலே பயமாகத்தான் இருக்கிறது" என்று தளபதி இடைமறித்துக் கூறினார்.

"பயப்படுவதற்கு இதில் அப்படி ஒன்றும் இல்லை. இந்த ஓலையை இப்போது நான் உன்னிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. நான் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேனோ என்று நினைக்கிறாய் அல்லவா? அப்படியும் செய்யப் போவதில்லை. பின் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? இதோ நீயே பார்த்துத் தெரிந்து கொள்" என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாராயணன் சேந்தனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டு ஏதோ மெல்லக் கூறினார்.

அவன் உடனே அந்த அறைக்குள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களில் ஒன்றை எடுத்து வந்து அவருக்கு முன்னால் ஏந்திப் பிடித்துக் கொண்டு நின்றான். தளபதி வல்லாளதேவனுக்குப் பகீரென்றது. "ஐயோ இதென்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று மகாமண்டலேசுவரரின் கையைப் பிடித்துத் தடுக்க எழுந்தான் அவன்.

"நில், அப்படியே! செய்ய வேண்டியதைத்தான் செய்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஓலையைச் சுடரில் காட்டினார் இடையாற்று மங்கலம் நம்பி. அந்த ஓலையில் தீப்பற்றியது.

10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை

இந்தக் கதையின் ஆரம்பத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் சந்தித்த பயங்கர ஒற்றர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நேயர்களுக்கு இருக்கும் அல்லவா? அந்த ஒற்றர்கள் வந்த நோக்கம், அனுப்பப்பட்ட விதம் இவை பற்றி இதற்குள்ளேயே ஒரு மாதிரி அநுமானித்துக் கொள்ள முடிந்தாலும் இங்கே அதைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறிவிட வேண்டியது அவசியம் தான்.

மன்னாதி மன்னரும், தென் திசைப் பேரரசருமாகிய பராந்தக பாண்டியர் காலமான பின் வட திசை மன்னர் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்ததும், குமார பாண்டியனாகிய இராசசிம்மன் ஈழத்தீவுக்கு ஓடிப் போனதும், வட பாண்டி நாடு எதிரிகளின் வசப்பட்டதும், ஏற்கனவே நேயர்கள் அறிந்து கொண்ட நிகழ்ச்சிகள்.

வடதிசை வேந்தர்களின் ஆசை வட பாண்டி நாட்டை வென்றதோடு அடங்கி விடவில்லை; அவர்கள் தென் பாண்டி நாட்டையும் கைப்பற்ற விரும்பினார்கள். முக்கியமாக அந்த விருப்பத்துக்கு மூன்று காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், பராந்தகனின் கோப்பெருந்தேவி உயிருடன் தப்பிச் சென்று தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் பாதுகாப்பில் வாழ்கிறாள் என்று அவர்கள் தெரிந்து கொண்டது. அவள் உயிருடன் இருக்கிறவரை என்றாவது எப்படியாவது தன் புதல்வன் இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வந்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவள் முயன்று விடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. இடையாற்று மங்கலம் நம்பியும் தென்புறத்தாய நாட்டுப் பெரும் படையும் வானவன் மாதேவியோடு ஒத்துழைத்து அப்படிச் செய்ய முற்படுவதற்குள் சில சதித்திட்டங்களின் மூலம் தங்களுடைய ஆசையை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டனர் வடதிசை மும்மன்னர்கள். அதற்காகச் சோழன் கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளூர் மன்னனும், அரசூருடையானும் உறையூர்க் கோட்டையில் ஓர் இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். வடதிசை மும்மன்னர்களும் தங்களுடைய முக்கியமான இராஜாங்க அதிகாரியோடு உறையூருக்கு வந்திருந்தனர்.

சோழன் கோப்பரகேசரி பராந்தகனின் உறையூர் அரண்மனையில் மந்திராலோசனை சபையின் கூட்டம் கூடியது. அழகும், இளமையும், வீரமும், ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுபட்ட உருவம் போல் சோழனும், பிடரி மயிரோடு கூடிய சிங்கத்தைப் போன்ற கம்பீரமான தோற்றத்தையுடைய அரசூருடையானும், காண்பவர்களைப் பயமுறுத்தும் வளமான அடர்ந்த மீசையும், நெருப்பு வட்டங்களைப் போல் சுழலும் கண்களும், யானை போல் பருத்த தோற்றத்தையுமுடைய கொடும்பாளூர் மன்னனும் அருகருகே மூன்று சிம்மாசனங்களில் வீற்றிருந்தனர். திருமந்திர ஓலைநாயகர்களும் அமைச்சர் பிரதானிகளும் சுற்றிலும் இடப்பட்டிருந்த மற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

"இந்த மந்திராலோசனைக் கூட்டம் வடபால் நாட்டுப் பெரு மன்னர்களாகிய நமக்குள் ஓர் அவசியமான தீர்மானத்தை ஏற்படுத்தி முடிவு செய்து கொள்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. நாம் மூவரும், நம்முடைய படைகளுமாகச் சேர்ந்து சமீபத்தில் பாண்டி நாட்டின் வடபகுதியை வெற்றி கொண்டோம். சிறு பிள்ளையாகிய பாண்டிய இளவரசன் இராசசிம்மன் நமக்கு அஞ்சிக் கடல் கடந்த நாட்டுக்கு ஓடிவிட்டான். அவனைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் காலஞ்சென்ற பராந்தக பாண்டியனின் கோப்பெருந்தேவியும், இராசசிம்மனின் தாயுமான வானவன்மாதேவி தென்பாண்டி நாட்டில் போய் வலிமைமிக்க ஆதரவுகளோடு வாழ்ந்து வருகிறாள். அதனால் நமக்கு ஓரளவு நிம்மதிக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மூவரும் நன்கு உணர்வோம்" என்று சோழன் பேச்சைத் தொடங்கி வைத்தான். அதுவரையில் ஏதோ சொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருந்த அரசூருடையான் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு முற்பட்டான்.

"நண்பர்களே! தென்பாண்டி நாட்டையும் அங்கே மகாராணி வானவன்மாதேவிக்குக் கிடைத்திருக்கும் பலமான ஆதரவையும் சாதாரணமாக மதிப்பிட்டு விட்டு நாம் பேசாமல் இருந்துவிட முடியாது. அமர பதவி அடைந்து விட்ட பராந்தகனின் வீரம் உங்களுக்குத் தெரியாததன்று. அந்த வழிமுறையில் இரண்டு கொழுந்துகள் எஞ்சியிருக்கின்றன. மகாராணியையும், குமார பாண்டியனையும் தான் இப்படிக் குறிப்பிடுகிறேன். மதிநுட்பமும் அறிவாற்றலும் உடையவரான தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் சிந்தனையும், நாஞ்சில் நாட்டுப் பெரும்படைத் தளபதியான வல்லாளதேவனின் வீரமும் ஒன்று சேர்ந்தால் பின்பு நம்மையே கதிகலங்கச் செய்து விடுவார்கள்."

பேசும்போது அரசூருடையான் கண்களில் உறுதியான ஒளி மின்னியது. குரலில் அழுத்தம் தொனித்தது. "அன்புக்குரிய சோழ வேந்தரே! அரசூருடைய சென்னிப் பேரரசரே! நீங்கள் இருவரும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டே கழிப்பதால் என்ன பயன்? செயலை நிறைவேற்ற வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு வழி சொல்லுங்கள்."

இப்படிக் கூறியவன் கொடும்பாளூர் மன்னன். அப்பப்பா! அவன் தோற்றத்தைப் போலவே குரலும் கடுமையாகத்தான் இருக்கிறது. இடி முழக்கத்தைப் போல கையைத் தூக்கி ஆட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான் அவன். அந்தச் சுருக்கமான பேச்சிலும், முக பாவத்திலுமே 'இவன் அதிகம் பேசுவதை விரும்பாத காரியப் புலி' என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

"முன்பு செய்தது போலவே நாம் மூவரும் ஒன்று சேர்ந்து நாஞ்சில் நாட்டின் மேல் படையெடுத்து விடலாம்" என்றான் அரசூருடையான்.

மற்ற இருவரும் அதற்கு இணங்கவில்லை. "இப்போதுதான் ஒரு பெரிய போரில் ஈடுபட்டு அலுத்துப் போன படைகளை மறுபடியும் உடனடியாகத் துன்புறுத்த முடியாது. போரைத் தவிர வேறு தந்திரமான வழிகள் எவையேனும் இருந்தால் பார்க்கலாம்" என்று கோப்பரகேசரியும் கொடும்பாளூரானும் ஒரு முகமாக மறுத்துவிட்டனர். அங்கிருந்த மூவரசரின் அமைச்சர் பிரதானிகளும் போர் யோசனையை அவ்வளவாக வரவேற்கவில்லை.

"நான் ஒரு வழி சொல்லுகிறேன். ஆனால் அது கடுமையான வழி. பயங்கரமும் இரகசியமுமாக இருக்க வேண்டியது ஆகும் அது!" என்று சொல்லியவாறே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து மேலே சொல்வதற்குத் தயங்கினான் கொடும்பாளூர் மன்னன். அவனுடைய தயக்கம் நிறைந்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை அரசூருடையானும் சோழ கேசரியும் புரிந்து கொண்டு விட்டனர்.

உடனே சோழன் கோப்பரகேசரி அங்கிருந்த மற்றவர்களுக்குச் சைகை செய்தான். அவர்கள் மௌனமாக எழுந்து மந்திராலோசனை மண்டபத்துக்கு வெளியே சென்றார்கள். மண்டபத்துக்குள் அரசர்கள் மூவரும் தனியே விடப்பட்டனர். பரகேசரியும் அரசூருடையானும் கொடும்பாளூர் மன்னனின் பக்கத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்தனர்.

கொடும்பாளூரான் வெறிச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய கோரம் நிறைந்த பயங்கர முகத் தோற்றத்தையும் அந்தச் சிரிப்பையும் ஒன்று சேர்த்துப் பார்த்த போது, அது உடனிருந்த மற்ற இருவருக்குமே அச்சமூட்டியது. அவன் வாயிலிருந்து வெளிவரப் போகும் முடிவு என்னவென்று அறியும் ஆவலுடன் இருவரும் காத்திருந்தனர்.

ஆனால் அவனோ அவர்களுடைய ஆவலை மேலும் சோதிக்கிறவனைப் போல ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஓலைகளில் எழுத்தாணியால கைபோன போக்கில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான். அரசூருடையானும் கோப்பரகேசரியும் வியப்படைந்து திகைத்தனர். அவன் என்ன செய்கிறான் என்பதையே அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பார்த்துக் கொண்டே மலைத்துப் போய் அமர்ந்திருந்தனர். சில விநாடிகளுக்குள் ஆச்சரியகரமானதொரு காரியத்தைச் செய்து காட்டினான் கொடும்பாளூர் மன்னன்.

எழுத்தாணி கொண்டு மூன்று ஓலைகளிலும் கோடுகளால் சில படங்களை வரைந்து விட்டான் கொடும்பாளூர் மன்னன். சில எழுத்துகளும் அவற்றில் தென்பட்டன. தன் மனக் கருத்தை அவன் வெளியிட்ட சாமர்த்தியமான முறை அவர்களைப் பிரமிக்கச் செய்துவிட்டது.

"இதோ, இவற்றைப் பாருங்கள்! என் கருத்து விளக்கமாகப் புரியும்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த ஓலைகளை அவர்களிடம் நீட்டினான் அவன். கொடும்பாளூர் மன்னனின் முரட்டுக் கையில் அவ்வளவு நளினம் மறைந்து கொண்டிருக்குமென்று அரசூருடையானோ, அல்லது பரகேசரியோ கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் இருவரும் அவன் கொடுத்த அந்த ஓலைகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.

முதல் ஓலையில் மகாராணி வானவன்மாதேவியைப் போல் ஓர் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவத்தின் கழுத்துக்கு நேரே ஆறு முரட்டுக் கைகள் ஒரு கூர்மையான வேலை எறிவதற்குக் குறி வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. உருவத்தின் கீழே வானவன்மாதேவியார் என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது ஓலையில் கடலின் மேல் ஒரு பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வது போல் வரைந்திருந்தது. அதன் அருகில் குமார பாண்டியன் இராசசிம்மனைப் போல் ஓர் இளைஞனின் உருவம் சித்தரிக்கப்பட்டு, முதல் ஓலையில் கண்டபடியே கப்பலிலிருந்து ஆறு கைகள் நீண்டு ஒரு வேலை அந்த இளைஞனின் நெஞ்சில் பாய்ச்சுவதற்குத் தயாராக இருப்பது போல் வரையப்பட்டு உருவின் கீழே 'பாண்டிய குமாரன் இராசசிம்மன்' என்று எழுதியிருந்தது.

எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத மன குழப்பத்தோடு மூன்றாவது ஓலையைக் கையிலெடுத்துப் பார்த்தனர் அரசூருடையானும், கோப்பரகேசரியும். அந்த மூன்றாவது ஓலையில் அவர்களுடைய இதயத்தைக் குழப்பும் மூன்றாவது புதிர் மறைந்திருந்தது. அதையும் பார்த்துத் திகைத்து விட்டனர் இருவரும்.

மூன்றாவது ஓலையில் இரண்டு ஆறுகளுக்கு இடையே ஒரு சிறு தீவு போலவும், அதில் ஒரு மாளிகை போலவும் வரையப்பட்டிருந்தது. மாளிகை வாசலில் இடையாற்று மங்கலம் நம்பி என்று பெயர் எழுதப்பட்ட ஓர் உருவமும் வரையப்பட்டிருந்தது. இந்தப் படத்திலும் ஆறு கைகள் இருந்தன. ஆனால் முன் ஓலைகள் இரண்டுக்கும் இந்த ஓலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இருந்தது.

மூன்று ஓலைகளிலும் கொடும்பாளூர்க் குறுநில மன்னன் அவசரம் அவசரமாகக் கிறுக்கியிருந்த சித்திரங்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு அரசூருடையானும், பரகேசரியும் தலை நிமிர்ந்தனர். எதையும் விளக்கமாகப் புரிந்து கொண்டாற் போன்ற தெளிவு அவர்கள் முகத்தில் துலங்கவே இல்லை.

அதுவரையில் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த கொடும்பாளூரான், "என்ன? புரிந்து கொண்டீர்களல்லவா?" என்று மிகுந்த ஆர்வத்தோடு வினவினான்.

"கொடும்பாளூர் வேந்தர் இவ்வளவு பெரிய ஓவிய வல்லுநராக இருப்பார் என்று இதுவரையில் எனக்குத் தெரியவே தெரியாது!" என்றான் அரசூருடையான்.

"ஓவியம் மட்டுமா? சொல்ல வேண்டிய செய்திகளைக் குறிப்பாக அறிவுறுத்த முயன்றிருக்கிறீர்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் அது அவ்வளவாகப் பொருள் விளங்கவில்லை. நீங்கள் எங்கள் சந்தேகத்தைப் போக்கி விட்டால் நல்லது!" என்று சந்தேகத்தை மனம்விட்டுக் கேட்டான் பரகேசரி.

உடனே கொடும்பாளூர் மன்னன் அந்த ஓலைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நடுவில் வந்து நின்றவாறு ஒவ்வொன்றாக விளக்கிக் கூறலானான். கால் நாழிகை நேரம் அவனுடைய விளக்கவுரை தொடர்ந்தது. அந்த விளக்கவுரையிலிருந்து அரசூருடையானும், கோப்பரகேசரியும் புரிந்து கொண்ட விவரங்கள் வருமாறு: நாஞ்சில் நாட்டு மகாமண்டலேசுவரரின் ஆதரவில் புறத்தாய நாட்டுக் கோட்டையில் தங்கியிருக்கும் மகாராணி வானவன்மாதேவியைக் கொலை செய்துவிடுவது முதல் திட்டம். இலங்கைத் தீவுக்கு ஓடியிருப்பதாக எண்ணப்படும் குமார பாண்டியன் இராசசிம்மனையும், சில அந்தரங்கமான ஆட்களைக் கப்பலில் அனுப்பி அங்கிருந்து திரும்பவோ திரும்பக் கருதவோ அவகாசமின்றி அங்கேயே யாருமறியாது தீர்த்து விடவேண்டுமென்பது இரண்டாவது திட்டம். யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியைப் பகைத்துக் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது. புறத்தாய நாட்டுப் பகுதியைக் கைப்பற்றவோ, ஆளவோ அந்த மனிதரின் தயவு நிச்சயமாக வேண்டும். மகாராணியாரையும், குமார பாண்டியனையும் கொலை செய்த பின்னரும், மகாமண்டலேசுவரரைத் தங்கள் மனிதராக்கிக் கொண்டு தன்மையாகத் தழுவி வைத்துக் கொண்டாலொழியத் தாங்கள் மூவரும் அந்தப் பிரதேசத்தில் காலடியெடுத்து வைக்க முடியாது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே இடையாற்று மங்கலம் நம்பியை மட்டும் தங்களுடைய பாராட்டு வலையில் வீழ்த்தித் தொடர்ந்து மகாமண்டலேசுவரராக இருக்கச் செய்ய வேண்டும் என்பது மூன்றாவது ஓலையில் கண்ட திட்டம்.

இப்படி மூன்று ஓலைகளிலும் கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மூன்று பேருடைய பங்கும் இருப்பதனால் ஆறு கைகளை ஒவ்வொரு படத்திலும் வரைந்திருப்பதாகத் தன் திட்டங்களைக் காரண காரியங்களோடு அவர்களுக்குச் சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.

"எல்லாம் சரிதான்! ஆனால் மகாராணியையும், குமார பாண்டியனையும் கொலை செய்ய வேண்டுமென்பதுதான் நம்முடைய பெருந்தன்மைக்குப் பொருத்தமான காரியமாகப் படவில்லை எனக்கு" என்று அலுத்துக் கொள்வது போன்ற குரலில் மற்ற இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே சொன்னான் அரசூருடையான்.

"அரசூருடையார் கூறுவது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. இடையாற்று மங்கலம் நம்பியை வேண்டுமானால் நம்முடைய சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரே நமக்கு ஒத்துழைக்க இணங்கிவிட்டாரானால் எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து கிடக்கும் பயந்தாங்கொள்ளி இராசசிம்மனும், வானவன்மாதேவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்? உயிரோடிருந்தாலும் அவர்கள் நடைப்பிணம் போன்றவர்களே. அப்படியிருக்கும் போது அவர்களைக் கொலை செய்வதற்காக நாம் நம்முடைய நேரத்தை வீணாகச் செலவழிப்பானேன்?" என்று பரகேசரியும் கொடும்பாளூர் மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

அரசூருடையான், பரகேசரி இருவரையும் பார்த்து கொடும்பாளூரான் சிரித்தான். "நண்பர்களே! காரியத்தைச் சாதித்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த அநாவசியமான கருணையெல்லாம் இருக்கக்கூடாது. மேலும் நாம் நினைப்பதைப் போல இடையாற்று மங்கலம் நம்பி அவ்வளவு விரைவில் நம்முடைய சூழ்ச்சிக்கு வசப்பட்டுவிட மாட்டார். இராசசிம்மனும், மகாராணியும் தொலைந்து விட்டால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைக் கூடப் பொருட்படுத்தாமல் காரியங்களைச் செய்கிற துணிவு நமக்கு ஏற்பட்டு விடும்" என்று மேலும் அவன் வற்புறுத்திக் கூறினான்.

அரசூருடையானும், பரகேசரியும் எத்தனையோ விதங்களில் விவாதித்தனர், மறுப்புக் கூறினர். புறத் தோற்றத்தைப் போலவே அகத் தோற்றத்திலும் முரட்டுத்தன்மையும் பிடிவாதமும் உள்ள கொடும்பாளூர் மன்னன் தன்னுடைய கருத்தையே நிலைநிறுத்திப் பேசினான். அவனுடைய பேச்சின் போக்கைப் பார்த்தால் விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு அணுவளவும் இடம் இருப்பதாகப் படவில்லை.

அரசூருடையானும், பரகேசரியும் தங்களுக்குள் எப்போதும் ஒத்துப் போகும் தன்மையுடையவர்கள். கொடும்பாளூரானின் பிடிவாத குணம் அவர்களுக்கு முன்பே தெரிந்ததுதான். கேவலம், இந்தச் சிறிய விஷயத்துக்காக மனம் வேறுபட்டுப் பிரியவோ, ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திக் கொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை. விந்திய மலைக்குத் தென்பால் குமரிக் கடல் ஈறாகவுள்ள சகல பிரதேசங்களிலும் தங்கள் மூவருடைய கொடிகளும் பறக்க வேண்டுமென்பதுதான் அவர்களுடைய ஆசை. அந்த மாபெரும் ஆசையை எந்த வழியில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமானாலும் அதற்கு அவர்கள் சித்தமாகத்தான் இருக்கிறார்கள். "என்ன சொல்கிறீர்கள்? இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் ஒத்து வந்தால் தான் நான் உங்களோடு சேர்ந்தவன். இல்லையானால் என்னுடைய வழியை நான் தனியே வகுத்துக் கொண்டு போக வேண்டியதுதான்" என்றான் கொடும்பாளூர் மன்னன்.

அரசூருடையானும், பரகேசரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தனர் சிறிது நேரம். "நீங்கள் கற்சிலைகளைப் போல் வாய் திறவாமல் இப்படி மௌனமாக உட்கார்ந்திருப்பதற்காகவா நான் சிரமப்பட்டு இந்த ஓலைகளை எழுதினேன்? எனக்கு வேண்டும்!"

உள்ளங் கைகளைத் தட்டிப் புடைத்து மீசை துடிதுடிக்க ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் முன்கோபியான கொடும்பாளூர் மன்னன்.

"கொடும்பாளூர் மன்னரே! கவலைப்படாதீர்கள். எதற்காக ஆத்திரமடைகிறீர்கள்? உங்களுடைய யோசனையை எதற்காகவேனும், எப்பொழுதேனும் நாங்கள் மறுத்திருக்கிறோமா? உங்கள் திட்டப்படியே செய்வோம்" என்று பரகேசரி கூறிய பின்பு தான் கொடும்பாளூரானின் முகத்தில் தோன்றிய கடுகடுப்பும், ஆத்திரமும் மறைந்தன.

"மிகவும் நல்லது! உங்கள் திட்டப்படியே யாவும் நடைபெறட்டும்! நானும் பரகேசரியும் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். இப்போது மேலே செய்ய வேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள். குமார பாண்டியனையும், வானவன்மாதேவியையும் ஒழிப்பதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?" அரசூருடையானின் இந்தக் கேள்வி சற்றுத் தணிந்திருந்த கொடும்பாளூர் மன்னன் கோபத்தை உடனே மீண்டும் கிளப்பி விட்டுவிடும் போலிருந்தது.

"என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னை மட்டும் பார்த்துக் கேட்கிறீர்களே? யோசனையை நான் சொல்லிவிட்டேன். இனிமேல் செய்ய வேண்டியதை மூன்று பேர்களுமாகச் சேர்ந்துதான் செய்ய வேண்டும். அரசூருடையார் என்னை மட்டும் 'நீங்கள் நீங்கள்' என்று சுட்டிக் காட்டிப் பேசுவதில் பயனில்லை!" என்று சீறி விழுவது போல் இரைந்தான் கொடும்பாளூர் மன்னன்.

அதன் பின்னர் அவனைச் சுய நிலைக்குக் கொண்டு வந்து பேசி முடிப்பதற்குள் ஒரு மத யானையை அடக்குவதற்குப் பட வேண்டிய அவ்வளவு சிரமங்களையும் அநுபவித்து விட்டனர் சோழன் பரகேசரியும் அரசூருடையானும்.

உறையூரில் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த மறுதினம் மாலை நாகைப்பட்டினத்துக் கடல் துறையில் ஒரு காட்சியைக் காண்கிறோம். கரையில் ஒரு பெரிய பாய்மரக் கப்பல் ஈழ நாட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாராக நிற்கிறது. பாய்மரத்தின் கூம்பில் கப்பலுக்கே அழகு செய்வது போலப் புலி, பனை ஆகிய சின்னங்கள் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

கரையில் கொடியிலே கண்ட அந்தச் சின்னங்களுக்குரிய மாபெரும் வேந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆம்! நாம் உறையூர் அரண்மனையில் சந்தித்த அந்த மூவரும் தான். அவர்களுக்கு எதிரே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ஆறு வீரர்கள் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். கொடும்பாளூர் மன்னன் அந்த வீரர்களிடம் உபதேசம் செய்வது போலக் கைகளை ஆட்டியும், கண்களைச் சுழற்றிப் புருவத்தை வளைத்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னதான் முக்கியமான செய்தியை அவர்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றான்? அருகில் நெருங்கிச் சென்று நாமும் தான் அந்தச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்வோமே!

"அடே! நீங்கள் மூவரும் பரம ஜாக்கிரதையாக இந்தக் காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பி வரவேண்டும். முத்தரையா! இரும்பொறை! செம்பியா! நீங்கள் ஏறிச் செல்லுகிற இந்தப் பாய்மரக் கப்பல் நேராக மேல் கடற்கோடியிலுள்ள 'விழிஞம் துறைமுகத்தில் கொண்டு போய் உங்கள் மூவரையும் இறக்கி விட்டு விட்டு அப்புறம் தான் ஈழத்துக்குப் போகும். உங்களோடு வருகின்ற மற்ற மூவரும் கப்பலோடு அப்படியே ஈழ நாட்டுக்குச் சென்று விடுவார்கள். உங்களைப் போலவே அவர்கள் ஈழத்தில் போய் ஒரு செயலை முடித்துக் கொண்டு வெற்றிகரமாகத் திரும்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் செயலை முடிப்பதற்கு முன் நான் கொடுத்த ஓலையை இடையாற்று மங்கலம் நம்பியிடம் சேர்த்து விடக் கூடாது!" என்று எச்சரித்தான் கொடும்பாளூர் மன்னன்.

அந்த வீரர்கள் அவன் கூறியவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு மரியாதை செலுத்துகிற பாவனையில் தலை வணங்கினர்.

அப்போது அந்தப் பாய்மரக் கப்பலைச் செலுத்தும் மாலுமி வந்து கும்பிட்டான். "பிரபூ! கடலில் காற்று அதிகமாக இருக்கும் போதே புறப்பட வேண்டும். இல்லையானால் எத்தனை பாய்களை விரித்தாலும் பயனில்லை. நேரமாகிறது. இவர்களை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறேன். எங்களுக்கு விடை கொடுங்கள்" என்று கொடும்பாளூர் மன்னரிடம் பணிவான குரலில் அவன் வேண்டிக் கொண்டான்.

சற்றுத் தள்ளித் தங்களுக்குள் ஏதோ பேசியவாறு நின்று கொண்டிருந்த அரசூருடையானும், சோழன் பரகேசரியும் நெருங்கி வந்தனர்.

கிங்கரர்களைப் போலத் தோற்றமளித்த அந்த ஆறு வீரர்களும் பாய்மரக் கப்பலின் முதல் தளத்தில் ஏறி நின்று கொண்டனர். கரையில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த அரசர்கள் மூவரையும் கடைசி முறையாக வணங்கினர்.

அதே சமயத்தில் தேர் வடம் போல் இழுத்துக் கட்டியிருந்த நங்கூரக்கயிறு அவிழ்க்கப்பட்டது. சிகரத்தில் அசைந்தாடும் கொடியுடனே மிகவும் பெரிய வெண்ணிறப் பாவை ஒன்று தண்ணீர்ப் பரப்பை ஒட்டினாற் போலச் சிறகுகளை அடித்துக் கொண்டு பறப்பது போல் கப்பல் கடலுக்குள் நகர்ந்தது.

"நண்பர்களே! இன்னும் பதினைந்தே தினங்கள் தான். நம்முடைய மனோரதம் நிறைவேறிவிடும்!" என்று கொடும்பாளூர் மன்னன் அரசூருடையானையும் பரகேசரியையும் பார்த்துக் கூறினான்.

11. முன்சிறை அறக்கோட்டம்

செல்வச் செழிப்பும், வேளாண்மை வளமும் மிக்க அந்நாளைய நாஞ்சில் நாட்டில் மூலைக்கு மூலை, ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், அறக்கோட்டங்களும், ஆலயங்களும், வழிப்போக்கர் தங்கக்கூடிய மன்றங்களும் இருந்தன.

'அறத்தால் விளங்கி ஆன்ற கேள்விப் புறத்தாயநாடு' என்று புலமைவாணர்கள் புகழ்ந்த பெருமை அதற்கு உண்டு. மகாமன்னர் பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய தர்மசிந்தனை மிகுந்த உள்ளத்தினாலும், மகாமண்டலேசுவரரின் நிர்வாகத் திறமையினாலும் புதிய தர்மசாலைகள் பல தென்பாண்டி நாடு முழுவதும் உண்டாயின.

அப்போது தென்பாண்டிப் பகுதியிலேயே முதன்மையானதும் பெரியதுமான அறக்கோட்டமொன்று முன்சிறையில் அமைக்கப்பட்டது. துறைமுகப் பட்டினமான விழிஞத்தில் பல தேசத்துக் கப்பல்களில் வரும் வணிகர்கள் தங்குவதற்கு முன்சிறை அறக்கோட்டத்துக்கு வந்து சேர்வது வழக்கம். கீழ்ப்புறத்தாய நாட்டையும், மேலப்புறத்தாய நாட்டையும் இணைக்கும் இராஜபாட்டையில் கிளை வழி பிரிகின்றதொரு திருப்பத்தில் முன்சிறை நகரம் இருந்ததால் கடல் வழியே கப்பலில் வருவோர், தீர்த்த யாத்திரைக்காக வடபால் நாடுகளிலிருந்து வருவோர், புனிதம் நிறைந்த குமரிக் கடலில் நீராடிப் போக வருவோர் ஆகிய யாவருக்கும் எப்போதும் தங்குவதற்கு வசதி நிறைந்ததாக முன்சிறை அறக்கோட்டம் கேந்திரமான இடத்தில் வாய்த்திருந்தது.

நாகப்பட்டினத்துத் துறைமுகத்தில் பாய்மரக்கப்பல் புறப்பட்ட பின் ஒரு நாள் இரவு மூன்றாம் யாமத்தில் முன்சிறை அறக்கோட்டத்தில் ஓர் அதிசயமான சம்பவம் நடந்தது. சத்திரத்து மணியக்காரனான அண்டராதித்த வைணவனும் அவன் மனைவியும் அங்கேயே ஒரு பகுதியில் குடியிருந்து வந்தனர். சாதாரணமாக, முதல் யாமம் முடிவதற்கு முன்பே மணியக்காரன் பிரதான வாசலை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுவான். அவனுடைய குடியிருப்பு வீடும் உட்புறமே கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.

முன்சிறை அறக்கோட்டத்தின் அமைப்பை மானஸீகக் கண்ணால் நோக்கிப் பார்த்தால் தான் நேயர்களால் இவற்றையெல்லாம் நன்கு விளங்கிக் கொள்ளமுடியும். வாருங்கள்! 'இரவு நேரமே' என்று தயங்காமல் முன்சிறைக்குப் போவோம். இப்போது நாழிகை என்ன? நாழிகையைப் பற்றி நமக்கு என்ன கவலை? இன்னும் முதல் யாமம் முடியவில்லையாதலால் அறக்கோட்டத்தின் கதவை இதற்குள் அடைத்திருக்க மாட்டார்கள்.

ஆ! இதோ வந்துவிட்டோம். எதிரே தெரிகிறது பாருங்கள், உயரமான மருதமரக் கூட்டத்துக்கு நடுவே காவி நிறக் கட்டடங்கள். கோட்டை வாசல் கதவுகளைப் போன்ற அந்த முன்வாசல் கதவருகே யாரோ தீவட்டியும் கையுமாக நின்று கொண்டிருப்பது தெரிகிறது! நிற்பது யார்? சற்று அருகில் நெருங்கிப் போய் அவர்களைப் பார்ப்போம்.

அடாடா! முதல் யாமம் முடிகிற நேரம் நெருங்கிவிட்டது போலிருக்கிறது. தீவட்டியோடு நிற்பவன் வேறு யாருமில்லை, மணியக்காரனான அண்டராதித்த வைணவன் தான். கதவுகளை அடைப்பதற்காக வந்து நின்று கொண்டிருக்கிறான். ஆகா! இந்த மாதிரி கட்டை குட்டையான தோற்றத்தையுடைய ஆளை இதற்கு முன்பே பல தடவைகள் பார்த்திருப்பதைப் போல் ஒரு பிரமை உண்டாகிறதே!

ஆமாம்! இப்போது நினைவு வருகிறது. கையில் தீப்பந்தத்தோடு கதவைச் சாத்துவதற்காக நிற்கும் இந்த மனிதன் அசைப்பில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமன நாராயணன் சேந்தனைப் போல் அல்லவா இருக்கிறான்? அதே போலக் குடுமி! அதே போல நெற்றியில் கீற்றுத் திலகம்! அகத்திய வடிவம்!

இங்கே மணியக்காரனாக இருக்கும் இந்த அண்டராதித்த வைணவன் வேறு யாருமில்லை. நம்முடைய சாட்சாத் நாராயணன் சேந்தனின் சொந்தத் திருத்தமையன் தான். முன்சிறைத் தர்மசாலையின் எல்லா நிர்வாகப் பொறுப்புகளும் இவன் கையில்தான். ஆனால் இவனையும், இவனுடைய நிர்வாகங்களையும் மொத்தமாகச் சேர்த்து மேய்க்கும் பொறுப்பு இவனுடைய மனைவியான கோதை நாச்சியாரிடம் இருந்தது.

தன் தம்பி மகாமண்டலேசுவரரிடம் மிக முக்கியமான பதவியை வகிக்கிறான் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதில் அண்டராதித்த வைணவனுக்குத் தனிப் பெருமை. தன் மனைவி எப்போதாவது தன்னைக் கண்டிப்பது போல் இரைந்து பேசினால் அவள் வாயை அடக்குவதற்கு அவன் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரமும் இதுதான்.

"இந்தா, கோதை! என் தம்பி இந்தத் தென்பாண்டி மகாமண்டலேசுவரருக்கு எவ்வளவு அந்தரங்கமானவன் தெரியுமா? அவன் இல்லாவிட்டால் அவருக்கு ஒரு காரியமும் ஓடாது. அவன் சுட்டு விரலை அசைத்தால் போதும், பெரிய பெரிய காரியங்களைச் சாதித்து விடுவான். அப்படிப்பட்டவனுக்கு மூத்தவனாகப் பிறந்துவிட்டு நான் உன்னிடம் மாட்டிக் கொண்டு இந்தப் பாடுபடுகிறேனே!" என்று தன் மனைவியிடம் கூறுவான் அண்டராதித்த வைணவன்.

"ஏன் சும்மா இருக்கிறீர்களாம்? உங்கள் தம்பியிடம் சொல்லிச் சுட்டு விரலை ஆட்டச் செய்து என்னையும் அடக்குவதுதானே?" என்பாள் அவள்.

இந்த வேடிக்கைத் தம்பதிகளால் அந்தச் சத்திரத்து நிர்வாகம் குறைவில்லாமல் நடந்து இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் அங்கே வந்து செல்லும் நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை. மூத்தவனான அண்டராதித்த வைணவனுக்கும், இளையவனான நாராயணன் சேந்தனுக்கும் சுபாவத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. துணிவும், சாமர்த்தியமும், சூழ்ச்சிகளைப் பழகிய இராஜதந்திரமும் தேர்ந்தவனான நாராயணன் சேந்தன் எங்கே? பயந்த சுபாவம், எளிதில் பிறருக்கு அடங்கிவிடுகிற இயல்பு, ஒளிவு மறைவில்லாத எண்ணம், அப்படியே பேச்சு, அப்படியே செயல் எல்லாம் அமைந்த அண்டராதித்த வைணவன் எங்கே?

இப்படிக் குண ரீதியாகப் பார்த்தால் நாராயணன் சேந்தனை மூத்தவனென்றும், அண்டராதித்த வைணவனை இளையவனென்றும் மாற்றிச் சொல்ல வேண்டியதாக நேரிட்டுவிடும். போகட்டும், கதை நிகழ்ச்சிக்கு வருவோம்.

முதல் யாமம் முடியப் போகிற தருவாயில் அண்டராதித்த வைணவன் கதவைச் சாத்துவதற்காக அறக்கோட்டத்தின் வாசலில் வந்து நின்றானல்லவா? அப்போது தென்கிழக்குத் திசையிலுள்ள கிளை வழியிலிருந்து யாரோ இரண்டு மூன்று ஆட்கள் சத்திரத்தை நோக்கி வருவது போல் தோன்றியதால் தான் அவன் கதவை அடைக்காமல் தயங்கி நின்றான்.

"கதவை அடைத்துவிட்டு உள்ளே வரப் போகிறீர்களா இல்லையா? குளிர் வாட்டி எடுக்கிறது!" என்று அதட்டுவது போன்ற தொனியில் வினவிக் கொண்டே நடுத்தர வயதுள்ள கோதை நாச்சியார் உட்புறத்தில் இருந்து வெளியே வந்தாள்.

"கொஞ்சம் பொறு, கோதை! கிழக்கே துறைமுகச் சாலையிலிருந்து யாரோ ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாவம்! எவராவது வெளி தேசத்திலிருந்து கப்பலில் புதிதாக வந்து இறங்கியிருப்பார்கள். நாம் கதவை அடைத்துக் கொண்டு போய்விட்டால் தங்குவதற்கு இடமின்றி அவர்கள் திண்டாடப் போகிறார்கள்" என்றான்.

"ஐயோ! என்ன கருணை! என்ன கருணை! மகாமண்டலேசுவரர் சத்திரத்து மணியக்காரர் பதவிக்குச் சரியான ஆளாகப் பிடித்துத்தான் நியமித்திருக்கிறார்" என்று அழகு காட்டினாள் அவன் மனைவி கோதை நாச்சியார்.

"இதோ பார், தாயே! பரதேவதை! உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு! வருகிறவர்களுக்கு முன் என் மானத்தை வாங்காதே. தயவு செய்து உள்ளே போ, கோதை!" என்று அவள் அருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில் கெஞ்சினான் அவன்.

"ஆள் இனம் தெரியாமல் கண்டவர்களுக்கெல்லாம் சத்திரத்தில் தங்க இடம் கொடுக்காதீர்கள். சத்திரத்துப் பொருள்கள் அடிக்கடி மாயமாக மறைந்து விடுகின்றன. களவு போவதற்கு இடம் கொடுப்பது உங்களால் வருகிற வினைதான்!" என்று உரிமையோடு கணவனை எச்சரித்துவிட்டு உட்புறம் இருட்டில் மறைந்தாள் கோதை நாச்சியார்.

"ஐயா! இதுதானே முன்சிறை அறக்கோட்டம்?" உள்ளே செல்லும் மனைவியின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற அண்டராதித்த வைணவன் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பரபரப்படைந்து திரும்பிப் பார்த்தான்.

சத்திரத்து வாசற்படியில் பருத்த தோற்றமுடைய மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கையிலிருந்த தீப்பந்தத்தை அவர்கள் முக்த்துக்கு நேரே பிடித்துப் பார்த்த அண்டராதித்தன், "உங்களுக்கு எந்த தேசம்? என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?" என்று வினவினான் மூவரையும் பார்த்து.

"முதலில் நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!"

அதிகாரம், அல்லது அதையும் மிஞ்சிய கடுமை அவர்களுடைய குரலில் ஒலித்ததைக் கேட்டு அண்டராதித்தன் சிறிது சினமடைந்தான்.

முதலாவதாக அவர்களுடைய தோற்றமே அவன் மனத்தில் நல்ல எண்ணத்தை உண்டாக்கவில்லை. காளிகோவில் பூசாரிகள் உடுத்துக் கொள்வது போன்று இரத்த நிறச் சிவப்புத் துணியில் தலைப்பாகையும் அமைதி இல்லாமல் நாற்புறமும் சுழலும் விழிப் பார்வையுமாகச் சத்திரத்து அதிகாரியான தன்னிடமே அதிகாரம் செய்து கேள்வி கேட்கும் அவர்கள் யாராயிருக்கலாம் என்று எண்ணியவாறு முகத்தைச் சுளித்து அவர்களைப் பார்த்தான் அவன்.

"அடேடே! இவன் என்ன நம்மை இப்படிக் கடுமையாகப் பார்க்கிறான்? காமனையும், நக்கீரனையும் நெற்றிக் கண்ணால் எரித்து வாட்டிய சிவபெருமான் என்று எண்ணம் போலிருக்கிறது இவனுக்கு" என்று வந்தவர்களில் ஒருவன் தன் பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் எகத்தாளமாகக் கேட்டான்.

"அட, அது இல்லை அப்பா! இந்த மனிதன் நம்மைப் பார்த்ததும் ஊமையாகிவிட்டான்" என்றான் மற்றவன்.

தன் கேள்விக்குப் பதில் சொல்லாமலே தன்னைப் பற்றித் தன் முன்பே அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு போவதைக் கண்டு அண்டராதித்தன் கைகள் துடித்தன. கையிலிருக்கும் தீப்பந்தத்தால் அந்த மூன்று முரடர்களையும் அப்படியே மூக்கு, முகம் பாராமல் வாங்கு வாங்கென்று வாங்கிவிடலாம் என்று தோன்றியது.

"மரியாதை தெரியாத மனிதர்களுக்கு இங்கே பதில் சொல்கிற வழக்கம் இல்லை" என்று சுடச்சுடப் பதில் கூறினான் அண்டராதித்தன்.

"ஓகோ! இனிமேல் உங்களிடம் தான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்."

"பண்பாடற்ற தடியர்களுக்கு இந்த நாட்டில் யாரும் எதையும் கற்பிக்க விரும்புவதில்லை."

இப்படியே பேச்சு முற்றியது. அண்டராதித்தன் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்ல அறக்கோட்டத்து வாசலில் ஒரே கூப்பாடாகி விட்டது.

உள்ளே ஒதுங்கி நின்று அந்தக் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டராதித்தன் மனைவி கோதை நாச்சியார் பொறுமையிழந்து, "அது யார் அங்கே வந்திருக்கிறார்கள்? என்ன கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்?" என்று இரைந்து கொண்டே வெளியில் வந்தாள்.

கண்களில் கனல் பொறி பறக்க வந்து நின்ற கோதை நாச்சியாரைப் பார்த்து, "யாரா? யாரென்று நீயே வந்து கேள்! இவர்கள் பேசுவதைக் கேட்டால் மனிதர்கள் பேசுவது போல் தெரியவில்லை" என்று பதில் கூறினான் மணியக்காரன்.

ஒரு பெண்ணுக்கு முன்னால் துச்சமான சொல்லுக்கோ செயலுக்கோ ஆளானால் அது யாருக்குத்தான் பொறுக்கும்?

"அப்பனே! ஒழுங்காகப் பேசு!" என்று சொல்லிக் கொண்டே கையை ஓங்கிக் கொண்டு அண்டராதித்தன் மேல் பாய்ந்தான் ஒருவன்.

"அருகில் நெருங்கினாயோ பொசுக்கி விடுவேன் பொசுக்கி!" என்று தீப்பந்தத்தை ஓங்கினான் அண்டராதித்தன். உடனே இன்னொருவன் இடையிலிருந்த வாளை உருவினான். மற்றொருவன் கையிலிருந்த வேலை நீட்டினான். 'ஐயோ! இந்தக் குண்டர்களிடம் எதற்காக வம்பு செய்தோம்? இவர்கள் ஆயுத பாணிகளாக வந்திருக்கிறார்களே' என்று அப்போதுதான் மனத்தில் பயம் உறைத்தது அவனுக்கு. கொடுமை தவழும் அவர்களுடைய கண்களைக் கவனிக்கையில் 'இவர்கள் எந்தத் தீமையையும் கூசாமல் செய்துவிடக் கூடியவர்கள்' என்று தோன்றியது.

"இதுதானா சத்திரம் என்று கேட்டால் பதில் சொல்வானா? தீவட்டியை ஓங்கிக் கொண்டு வருகிறான் மடையன்" என்று வந்தவர்களில் ஒருவன் தன் கடைசி வசை புராணத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில், "இதுதான் சத்திரம்! யார் ஐயா நீங்கள்? அகால வேளையில் வந்து கலவரம் செய்கிறீர்கள்? என்ன வேண்டும்?" என்று வினவிக் கொண்டு பெண் புலி போல் கணவனுக்கு முன் வந்தாள் கோதை.

பெண்ணின் முகத்துக்கு இந்த உலகத்தில் எப்போதும் இரண்டு பெரிய ஆற்றல்கள் உண்டு. பிறரைக் கவருவது; பிறரை அடக்குவது. கோதை நாச்சியார் வந்து நின்றவுடன் வாளையும், வேலையும் பார்த்துப் பயந்து சிறிதே நடுங்கிக் கொண்டிருந்த அண்டராதித்த வைணவனுக்குத் தெம்பு உண்டாயிற்று.

"அப்படிக் கேள், சொல்கிறேன்! இந்த மாதிரி முரடர்களுக்காகவா சத்திரத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள்?" என்று அவளோடு ஒத்துப் பாடினான் அண்டராதித்தன்.

"அம்மணீ! இதுவரை இந்த அசட்டு மனிதரிடம் சண்டை பிடித்ததுதான் பலன். நீங்கள் மிகவும் நல்லவர் போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் வெளிதேசத்திலிருந்து வந்தவர்கள். விழிஞத்தில் வந்து இறங்கினோம். முன்சிறைச் சத்திரத்துக்குப் போனால் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்று கூறினார்கள். அதனால் தான் இங்கு வந்து சேர்ந்தோம்" என்று குழைந்து கொண்டு பேசினான் ஒருவன்.

"அது சரி! நீங்கள் மூவரும் யாரென்று முதலில் சொல்லுங்கள். வருகிறவர்களை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் இங்கு யாருக்கும் இடம் கொடுப்பது வழக்கமில்லை" என்றாள் கோதை நாச்சியார்.

வாசற்படியில் நின்ற அந்த மூவரும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆந்தையைப் போல் பேந்தப் பேந்த விழித்தனர்.

"ஒரு வேளை நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாதோ?" மனைவி பக்கத்தில் நிற்கிற தெம்பில் குத்தலாக இப்படி ஒரு போடு போட்டான் அண்டராதித்த வைணவன்.

"ஏய்! குடுமிக்காரச் சோழியா! இனிமேல் நீ குறுக்கே பேசினால் மண்டையைப் பிளந்துவிடுவோம்" என்று சினம் அடைந்து கத்தினான் ஒருவன்.

"யாராயிருந்தால் உங்களுக்கு என்ன? சத்திரத்தில் தங்க இடம் கேட்டால் பூர்வோத்ரமெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமா?" என்றான் இன்னொருவன்.

கோதை நாச்சியார் அவர்களை ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். அவர்கள் விவாதமும் குயுக்தியும் அவளுடைய மனத்தில் பல மாதிரியான சந்தேகங்களைக் கிளப்பின.

"ஐயா! உலகத்தில் தங்களை இன்னாரெனச் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்தான் - திருடினவர்கள், திருட வந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொலை செய்யப் போகிறவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள் அல்லது மானம் இழந்தவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தாம் தங்களை இன்னாரென்று சொல்லிக் கொள்ளுவதற்கு நாணம் அடைய வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் குறும்புத்தனமான சிரிப்பொன்றை நெளியவிட்டாள் அவள்.

"என்ன சொன்னாய்? எவ்வளவு திமிர் உனக்கு!" என்று சொல்லிக் கொண்டே மூன்று பேர்களும் சத்திரத்து வாசற் படியின் மேலே ஏறினர்.

"ஆமாம்! சொன்னேன், சோற்றுக்கு உப்பில்லை என்று, சீ! போங்கள் வெளியே" என்று சொல்லிக் கொண்டே கணவனை உட்புறம் இழுத்துக் கொண்டு முகத்தில் அறைந்தாற் போல் வாசல் கதவைப் படீரென்று அடைத்துத் தாழிட்டாள் கோதை.

கதவு முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் அதிர்ச்சியடைந்து பின்னுக்கு நகர்ந்த மூவரும் வாசற்படிகளில் தடுமாறி நிலைகுலைந்து வீழ்ந்தனர்.

"அயோக்கியப் பெண்பிள்ளை! என்ன பேச்சுப் பேசி விட்டாள்" என்று கறுவிக் கொண்டான் ஒருவன்.

"வரட்டும்! வரட்டும்! எங்கே போய்விடப் போகிறாள்? நாமும் சில நாட்கள் இந்தப் பிரதேசத்தில் தானே இருக்கப் போகிறோம்? இந்த அம்மையைக் கவனித்துக் கொள்ளலாம்" என்று சூளுரை கூறினான் இன்னொருவன்.

"அந்த ராணியைத் தீர்த்துவிட்டுப் போகிற போக்கில் இந்தச் சத்திரத்து ராணியையும் தீர்த்துவிட வேண்டியதுதான்!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு உறுமினான் மூன்றாமவன்.

அப்போது மேலேயிருந்து மூன்று பேர்களின் தலையிலும் அருவி கொட்டுவது போல் மாட்டு சாணம் கரைத்த தண்ணீர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மேல் மாடத்தில் அந்தப் பெண் கோதை கலகலவென்று சிரித்துக் கொண்டு நின்றாள். அவள் தன் கையிலிருந்த செப்புக் கொப்பரையை அவர்கள் தலைகளுக்கு நேரே கவிழ்த்தாள். அந்த மூன்று ஆண்பிள்ளைகளின் நரம்புகள் யாவும் முறுக்கேறித் துடித்தன.

12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்

கன்னியாகுமரியிலிருந்து எவ்வளவோ அருமையாகப் பாதுகாத்துக் கொண்டு வந்த அந்த ஓலை கடைசியில் மகாமண்டலேசுவரர் மாளிகையின் அந்தரங்க அறையில் எரிந்து சாம்பலாகப் போகும்படி நேரிடுமென்று தளபதி வல்லாளதேவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

ஓலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்ட பெருமையோ என்னவோ, இடையாற்று மங்கலம் நம்பி அவனைப் பார்த்து மிக அலட்சியமாகச் சிரித்தார்.

"என்ன தளபதி? நான் இப்படித் திடீரென்று உன்னுடைய அனுமதியில்லாமலே நீ கொண்டு வந்த ஓலையை அழித்துவிட்டேன் என்ற வருத்தமா? ஏன் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருக்கிறாய்? கவலையை விட்டுவிட்டு உறங்கச் செல், மற்றவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம்."

அவருக்கு அவன் ஒரு பதிலும் சொல்லவில்லை. அதற்குள் அவரே மேலும் கூறினார்: "சேந்தா! பாவம், தளபதி இன்று மாலையிலிருந்து அடுத்தடுத்துப் பல அதிர்ச்சிகளுக்கு ஆளாகித் தொல்லைப் பட்டிருக்கிறார். மிகவும் களைத்துப் போயிருப்பார். விடிந்தால் மந்திராலோசனைக் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் போயாக வேண்டும். சிறிது நேரமாவது அவர் உறங்கட்டும். போ! விருந்தினர் மாளிகையில் கொண்டு போய்ப் படுக்கை ஒழித்துக் கொடு, வேண்டிய வசதிகளைக் கவனித்துக் கொள்" என்று நாராயணன் சேந்தனை நோக்கிக் கூறிவிட்டு, வல்லாளதேவன் பக்கமாகத் திரும்பி, "போ, வல்லாளதேவா! போய் ஓய்வெடுத்துக் கொள்" என்று சொன்னார். அவருடைய பேச்சின் விரைவும் அவசரமும் கண்டு அவனுக்கு மனத்தில் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது.

எதற்காகவோ தன்னை அந்த இடத்திலிருந்து அவர் விரைவில் அனுப்பிவிட விரும்புகிறாரென்று அனுமானம் செய்தது அவனுடைய மனம்.

"நான் வருகிறேன் சுவாமி!" என்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அங்கிருந்து எழுந்திருந்து நாராயணன் சேந்தனைப் பின்பற்றி விருந்தினர் மாளிகைக்கு நடந்தான் அவன். விருந்தினர் மாளிகை வசந்த மண்டபத்துக்கு அருகில் இருந்தது.

தூக்கம்? அது அன்றிரவு மட்டுமல்ல, அதற்கு அப்புறமும் பத்து இரவுகளுக்குத் தன்னை நெருங்க முடியாத அவ்வளவு கவலைகளாலும், ஐயங்களாலும், குழப்பங்களாலும் மண்டை கனத்துப் பாரமாகி வெடித்துவிடும் போலத் தோன்றியது தளபதிக்கு. விருந்தினர் மாளிகையில் கொண்டு வந்து விட்டு விட்டு நாராயணன் சேந்தன் போய்விட்டான். தளபதி வல்லாளதேவனைச் சுற்றி அவனுக்குத் துணை இருந்தவை இருளும் தனிமையும் தாம்.

சேர நாட்டு யானைத் தந்தத்தில் இழைத்துச் செய்த விருந்தினர் மாளிகையின் அழகான கட்டிலில் எண்ணெய் நுரையைப் போன்ற பஞ்சணை மெத்தையின் மேல் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் வல்லாளதேவன்.

மாளிகையின் பின்புறத்துச் சுவரில் பறளியாற்று நீர் அலைகள் மோதும் ஒலி, சுவர்க்கோழிகளின் 'கொய்' என்ற ரீங்காரம் இவற்றைத் தவிர எங்கும் நிசப்தம் சூழ்ந்திருந்தது. அவன் கட்டிலில் புரண்டதைப் போலவே அவன் மனத்திலும் பலப் பல எண்ணங்கள் புரண்டு கொண்டிருந்தன.

'எவ்வளவு அரும்பாடுபட்டு ஒற்றர்களிடமிருந்து நாம் அந்த இரகசிய ஓலையைக் கைப்பற்றினோம்? அதனுள் அடங்கியிருந்த செய்திதான் எவ்வளவு முக்கியமானது? பார்க்கப் போனால் எவ்வளவு பயங்கரமானது? நமது திடமான உள்ளத்தின் நம்பிக்கையையே எரிப்பது போல் அல்லவா மகாமண்டலேசுவரர் அந்த ஓலையை எரித்துவிட்டார்! அவருக்கு எவ்வளவு நெஞ்சுரம்? ஒருவேளை அவரே வடதிசைப் பேரரசர்களுக்கு உள் கையைப் போல இருந்து கொண்டு சதி செய்கிறாரோ? அதனால் தான் அந்த ஓலையை மகாராணியாரோ கூற்றத் தலைவர்களோ பார்க்கக் கூடாதென்று எரித்து விட்டாரோ?'

மகாமண்டலேசுவரரைப் பற்றித் தென்பாண்டி நாட்டுத் தளபதி பதவியை ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து அவனுடைய மனத்தில் தோன்றியிராத சந்தேகங்களெல்லாம் இப்போது ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.

எதை எதையோ நினைத்துக் கொண்டு படுக்கையில் தவித்துக் கொண்டு கிடந்தவன் குபீரென்று வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளி எழுந்தான். அந்த மாளிகையின் இருட்டில் அவனுடைய செவிகள் எந்த ஒலியையோ கூர்ந்து கேட்பதற்கு முயன்றன. அவன் உடலில் நடுக்கமும் ரோமாஞ்சலியும் உண்டாயின. உற்றுக் கேட்டான். இதுவரை இயற்கையாகக் கேட்ட பறளியாற்றுத் தண்ணீர் பாயும் ஓசையோ, சில வண்டுகளின் சப்தமோ அல்ல அது. அவனுடைய கட்டிலுக்கு அடியில் தளத்தின் மேல் யாரோ திடும் திடுமென்று கால் வைத்து நடப்பது போலக் கேட்டது. மாளிகைக்கு வெளியே நிலா ஒளி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தாலும், உள்ளே இருட்டாகத்தான் இருந்தது. சாளரங்களெல்லாம் சுவரில் மிக உயரத்தில் இருந்ததனால் உள்ளே ஒளியைத் தர முடியவில்லை. அந்த அகால வேளையில் இருட்டில் அப்படிப்பட்ட ஓசையைக் கேட்ட போது தன் படுக்கைக்கு எதிரே நிற்கும் பெரிய வடிவுடன் கூடிய தூண்களெல்லாம் கருநெடும் பூதங்களாக மாறிக் கால்பெற்று மெதுவாக நடப்பன போல ஒரு பயங்கரப் பிரமை உண்டாயிற்று அவனுக்கு.

ஒரு விதமாக இடையிலிருந்த வாளை உருவிக் கையில் வைத்துக் கொண்டு வேகமாக அடித்துக் கொள்ளும் இதயத்துடன் படுக்கையிலிருந்து கீழே இறங்கினான் தளபதி. தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அந்த ஒலி மெல்ல மெல்லத் தேய்ந்து மங்கியது. படுக்கையின் கீழே கேட்ட ஒலி இப்போது மேற்கு நோக்கிச் செல்லுவது போல் திசை மாறியது. அந்த ஒலி கேட்ட இடங்களிலெல்லாம் விருந்தினர் மாளிகையின் தரையே அதிர்வது போல் ஒருவகைச் சலனம் உண்டாயிற்று. வல்லாளதேவனும் பொறுமை இழக்காமல், இருட்டில் தூண்களிலும், படிகளிலும் மோதித் தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து அந்த ஒலியைப் பின்பற்றிச் சென்றான்.

மாளிகை முற்றத்தின் கடைசிச் சுவர்வரை அந்த ஒலியைப் பின் தொடர முடிந்தது. அப்பால் முற்றத்துக் கதவைத் திறந்த போது கதவு நிலையின் கீழே வாசற்படியைத் தழுவினாற்போல் பறளியாறு பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

நிலா ஒளியின் மோகன மயக்கத்தில் வானுலகத்து அமுதக் குழம்பே பொங்கிப் பாய்வது போலிருந்த ஆற்றின் அழகை அப்போது அவன் கண்கள் அநுபவிக்க முடியவில்லை.

'இந்த மாளிகையில் இரவு வேளைகளில் ஏதாவது பிசாசு நடமாட்டம் இருக்குமோ?' என்று முதலில் ஓர் எண்ணம் எழுந்தது. 'சை! இதென்ன சுத்த அசட்டுத்தனமான எண்ணம்? பிசாசாவது நடமாடுகிறதாவது? நாம் தான் இந்த அர்த்த ராத்திரிப் பொழுதுக்கு மேலே இந்த இருண்ட மாளிகையில் பிசாசு போல் அலைந்து கொண்டிருக்கிறோம்' என்று முதலில் தோன்றிய அந்த எண்ணத்தை அழிக்க முயன்றான்.

'புது இடம்! எவ்வளவு களைப்பாக இருந்தாலும் உறக்கம் வராது' என்று அவன் நினைத்தான். அதுவோ வெறும் புது இடமாக மட்டும் இருக்கவில்லை. புதுமைகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த இடமாகவும் இருந்தது.

'எப்படியாவது இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும், நான் போய்ப் படுக்கையில் புரண்டு இந்த இரவைக் கழித்து விடுகிறேன்' என்று தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக முற்றத்துக் கதவை மறுபடியும் வேகமாகச் சாத்திவிட்டுத் திரும்பிப் படுக்கையில் வந்து உட்கார்ந்தான்.

ஒரு சில விநாடிகளே கழிந்திருக்கும். மீண்டும் அதே ஓசை! அதே இடத்திலிருந்து தொடங்கி மேற்கு நோக்கிச் சென்றது. இப்போது பாதாளக் கிணற்றுக்குள்ளேயிருந்து கேட்கிறமாதிரி 'கசுமுசு'வென்று பேச்சுக்குரலும் கேட்பது போலிருந்தது. 'மனப்பிரமைதானோ?' என்று தன்னை நம்புவதற்கே மறுத்தது அவன் மனம். 'இது உண்மையா? அல்லது நமக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மனப்பிரமையா? நாராயணன் சேந்தனைப் போய் அழைத்துக் கொண்டு வந்து இந்த மர்மத்தைச் சோதித்துப் பார்த்துவிட்டால் என்ன? இதற்கு முன்பு பகலில் எவ்வளவோ தடவைகள் இந்த மாளிகையில் வந்து தங்கியபோது இம்மாதிரி மர்மமான அனுபவம் எதுவும் ஏற்பட்டதில்லையே! என்ன ஆனாலும் சரி! நம்பியும், நம்பாமலும் இப்படித் தவிப்பதற்கு நானே எழுந்திருந்து போய் நாராயணன் சேந்தனைக் கூப்பிட்டு வந்து விடுகிறேனே?' என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக, விருந்தினர் மாளிகைக் கட்டிலிலிருந்து இறங்கி வெளியேறினான் அவன்.

இருட்டில் நிதானமாக நடந்து மாளிகையின் வாசற்படிக்கு அவன் வந்த போது ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். எதிரே கையில் தீபத்துடன் நாராயணன் சேந்தனே அங்கு வந்து கொண்டிருந்தான். 'இதென்ன விந்தை! நெல் அளக்கும் தாழியைவிடக் குட்டையான இந்த மனிதன் ஏதாவது மாயம், மந்திரம் தெரிந்தவனா? இவனைச் சந்திக்கப் போனால் இவன் விழித்துக் கொண்டிருப்பானோ, அல்லது குறட்டை விட ஆரம்பித்திருப்பானோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே நான் புறப்படுகிறேன். இவனோ நினைப்பதற்கு முன்னால் தானே கையில் சுடர்விடும் விளக்கோடு என் முன்னால் வந்து நிற்கிறானே.'

இவ்வாறு எண்ணிக் கொண்டு மாளிகையின் வாசலிலேயே நின்றுவிட்டான் வல்லாளதேவன். ஆனால் மறுவிநாடியே தன் அநுமானம் தவறு என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் ஏமாற்றமடைந்தான். அவன் நாராயணன் சேந்தன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றானே தவிர, வந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் அவன் நின்று கொண்டிருப்பதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேரே விருந்தினர் மாளிகையை நோக்கித்தான் அவன் வந்து கொண்டிருக்கிறானென்று வல்லாளதேவன் நினைத்தான்.

ஆனால் மாளிகைக்கு மிகப் பக்கத்தில் வந்ததும், சட்டென்று வலது பக்கமாகத் திரும்பி அங்கிருந்த கொடி மண்டபத்துக்குள் நுழைந்து விட்டான் நாராயணன் சேந்தன்.

"ஓ! சேந்தா! இப்படிக் கொஞ்சம் வந்துவிட்டுப் போயேன்!" சொற்கள் நுனி நாவரைக்கு வந்துவிட்டன. என்ன தோன்றியதோ, தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தளபதி உடனடியாக அடக்கிக் கொண்டு விட்டான். நின்ற இடத்திலிருந்தே நிலவின் ஒளியில் மரகதக் குன்றமெனக் காட்சியளிக்கும் அந்தக் கொடிமண்டபத்தை நன்றாகப் பார்த்தான் தளபதி. அதற்குள்ளிருந்து முரசடிப்பது போல் ஒலி வந்தது.

மல்லிகை, முல்லை, மாதவி ஆகிய கொடிகளை இயற்கையாக அந்த இடத்தில் மரங்களில் படரச் செய்து முற்றிலும் பசுங்கொடிகளாலானதோர் கட்டடம் போலவே காட்சி தருமாறு அமைக்கப்பட்டிருந்தது லதா மண்டபமெனப்படும் அந்தக் கொடி மணடபம்.

'மழைக் குளிரும், ஈரம் மிகுந்திருக்கும் சூழலுமுள்ள அந்தச் சமயத்தில், உலகம் உறங்கும் நடு இரவில் நாராயணன் சேந்தனுக்கு அங்கே என்ன வேலை? பால் போல் நிலா ஒளி பரவியிருக்கும் போது அவனுக்கு விளக்கு எதற்கு?' என்று சிந்தித்துத் திகைத்தான் வல்லாளதேவன். 'ஏ, அப்பா! இந்தக் குள்ளனும், இவனை ஆட்டி வைக்கும் இடையாற்று மங்கலம் நம்பியும் எவ்வளவு மர்மங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவைகளை முழுவதும் தெரிந்து கொள்வதற்கு வீரமும், வாளும், ஆள்பலமும் மட்டும் போதாது போலிருக்கிறது. அறிவு நுட்பத்தினால் சொந்தச் சாமர்த்தியம் சாதுரியம் இவைகளால் மாத்திரமே சாதிக்க முடிந்த காரியங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன. மகாமண்டலேசுவரரின் செயல்களெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை.' ஏனோ தெரியவில்லை இடையாற்று மங்கலம் நம்பியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவனுடைய மனக்கண்ணுக்கு முன் உருவெளியில் உயரமும், அகலமும் பருமனும் அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் மாபெரும் மலைச்சிகரமொன்று தோன்றியது.

லதா மண்டபத்துக்குள் நுழைந்த நாராயணன் சேந்தன் வெகு நேரமாகியும் வெளியே திரும்பி வரவில்லை. 'அங்கே அவன் என்ன தான் செய்து கொண்டிருக்கிறான்? போய்ப் பார்ப்போமே' என்று வல்லாளதேவன் விருந்தினர் மாளிகை வாசலிலிருந்து பதுங்கிப் பதுங்கி நடந்து லதா மண்டபத்துக்குள் புகுந்தான். அவனுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. லதா மண்டபத்தில் நாராயணன் சேந்தன் இல்லை. 'வந்த வழியே திரும்பாமல் இந்தக் கொடி மண்டபத்திலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி ஏதேனும் இருக்குமோ? அப்படி இருக்குமானால் அந்த வழியாகச் சேந்தன் வெளியேறியிருப்பானோ? எதற்கும் சந்தேகமற சுற்றிப் பார்த்துவிடலாம்' என்று எண்ணியவனாய் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையை நெருங்கினான்.

பளிங்கு மேடையில் ஓரிடத்தில் தீபத்தைக் கீழே வைத்து எடுத்ததற்கு அடையாளமாகிய எண்ணெய்க் கறை படிந்திருப்பது இலேசாகத் தெரிந்தது.

பளிங்கு மேடையின் நட்ட நடுவில் உட்கார்ந்த கோலத்தில் திருமகள் சிலை ஒன்று செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கையிலிருந்த தாமரை மொட்டின் மேலும் கீழே படிந்திருந்தது போல் எண்ணெய்க் கறையின் தழும்பு தெரிந்தது. யாரோ எண்ணெய்பட்ட விரல்களால் தொட்டிருக்க வேண்டுமென்று சிரமம் இல்லாமல் ஊகிக்க முடிந்தது.

நாராயணன் சேந்தன் தன் கையில் கொண்டு வந்த எண்ணெய்த் தீபத்தைப் பளிங்குத் தரையில் வைத்துவிட்டு அந்தக் கைவிரல்களால் திருமகள் சிலையின் கையிலுள்ள தாமரை மொட்டையும் தொட்டிருக்கிறான்.

தளபதி வல்லாளதேவனுக்கு மின்வெட்டும் நேரத்தில் ஒரு யோசனை உண்டாயிற்று. நடுங்கும் கையால் திருமகள் சிலையின் வலது புறத்துத் தாமரை அரும்பைத் தொட்டான். தொட்ட வேகத்தில் அது நன்றாகத் திருகுவதற்கு வந்தது. அது தானாகத் திருக முடியாமல் இறுதி நிற்கிறவரையில் அதைத் திருகினான் தளபதி.

பன்னிரண்டாவது முறையாக அவன் கைவிரல்கள் அந்த மலர் அரும்பைத் திருகுவதற்கு நெருடியபோது அவனுடைய உடலைச் சுமந்து கொண்டிருந்த பளிங்கு மேடை பூகம்பமடைந்தது போலக் கிடுகிடுவென்று ஆடியது. அடுத்த கணம் அந்தக் கருங்கல்லாலான திருமகள் சிலை யாரோ பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப் போலக் கிறுகிறுவென்று பின்னால் நகர்ந்தது. அது இருந்த இடத்தில் நாலு கோல் நீளமும் நாலு கோல் அகலமுமுள்ள சதுரமான இடைவெளி ஒன்று ஏற்பட்டது. மிரளும் கண்களால் குனிந்து பார்த்தான் அவன். வரிசையாகப் படிகள் தெரிந்தன. அதற்கப்பால் 'கருங்கும்' என்று ஓர் இருட்டுக் குகையாக இருந்தது. தன்னைச் சுற்றிலும் நாலுபுறமும் ஓர் பார்வை பார்த்துவிட்டு அந்தச் சுரங்கத்துக்குள் துணிந்து இறங்கினான் அவன்.

பத்துப் பதினைந்து படிகள் இறங்கி உள்ளே சென்றதும் மேலே பார்த்தது போலவே ஒரு திருமகள் சிலை. சிலையின் இடது கைத் தாமரை அரும்பைத் திருகினான் அவன். தளபதியின் எண்ணம் சரியாக இருந்தது. அவன் அதைத் திருகி முடிந்ததும் மேலே சுரங்க வாயில் நகர்ந்து மூடிக் கொண்டுவிட்டது. வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த சிறிதளவு நிலா ஒளியும் அடைபட்டுப் போகவே, மைக்குழம்பை வழித்து அப்பினாற் போல் இருட்டு கோரமாயிருந்தது.

எங்கோ ஒரு மூலையில் சிறு மின்மினிப் பூச்சி போல் சுரங்கப் பாதையில் தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் சிறிது சிறிதாக நகர்ந்து மேலே சென்று கொண்டிருந்ததனால் நாராயணன் சேந்தன் தீபம் ஏந்திய கையுடன் முன்னே சென்று கொண்டிருக்கிறானென்று உய்த்துணர முடிந்தது.

தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக் கொண்டு தளபதி மேலே நடந்தான். சிறிது தூரம் சென்றதும் கீழே பாறையும் மணலுமாக இருந்தன. அங்கே சலசலவென்று தண்ணீர் கசிந்து இனிய ஜலதரங்க நாதத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக, வருகிறவர்கள் நடப்பதற்குக் கல்தூண்களை நிறுத்தி அவற்றின் மேல் வரிசையாக மரப்பலகைகளைப் பாலம் போலப் பிணைத்திருந்தார்கள். அதன் மேல் நடக்கும் போது 'திடும்' 'திடும்' என்ற ஓசை உண்டாயிற்று. அது விருந்தினர் மாளிகையில் தான் படுத்திருந்த பகுதிக்கு அடியில் இருக்க வேண்டுமென்று வல்லாளதேவன் நினைத்தான். தான் படுத்திருந்த இடத்தில் அந்த மாதிரி ஓசை உண்டானதற்குக் காரணம் அந்தச் சமயத்தில் சுரங்கத்துக்குள் அதே மரப் பாலத்தில் யாரோ நடந்து சென்றிருக்கிறார்களென்று அவனுக்குத் தோன்றியது. பறளியாற்றில் நீர் நிறைந்து பாய்வதால் அந்தச் சுரங்கத்துக்குள் நீர் ஊறிக் கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்து கொள்ள முடிந்தது.

முன்னால் விளக்குடன் போய்க் கொண்டிருக்கிற நாராயணன் சேந்தன் தான் நடக்கிற ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக, மரப்பாலத்தில் பாதங்களை அழுத்தி ஊன்றாமல் மெள்ள நடந்து சென்றான் வல்லாளதேவன். கால் நாழிகை நடைக்குப் பின் பூமிக்கு அடியிலேயே கட்டப்பட்டிருந்த ஒரு விசாலமான மண்டபம் போன்ற இடம் அவனுடைய கண்பார்வையில் பட்டது.

அந்த மண்டபத்தில் வெளிச்சமாக இருந்தது. பேச்சுக் குரல்கள் கேட்டன. சுரங்கப் பாதையின் முடிவில் மண்டபத்துக்குள் நுழையும் இடத்தில் சுவரோடு சுவராகப் பதுங்கி நின்று கொண்டு பார்த்தான் வல்லாளதேவன்.

அந்தப் பாதாள மண்டபத்தின் நாற்புறத்து இருண்ட மூலைகளிலும் அம்பாரம் அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த வாள்களையும் வேல்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும் கவசங்களையும் பார்த்த போது அவனுக்குத் திகைப்பு ஏற்பட்டது.

சற்று முன் அந்தரங்க மண்டபத்திலிருந்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிய மகாமண்டலேசுவரர் இப்போது அந்தப் பாதாள மண்டபத்துக்குள் நின்று கொண்டிருந்தார். அவருடைய திருப்புதல்வி குழல்மொழி நாச்சியாரும் இருந்தாள். இருட்டில் கொள்ளி ஏந்தி நிற்கும் குட்டைப் பேயற் போல் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான். அவர்கள் மட்டும் அங்கே அப்போது இருந்திருந்தால் தளபதிக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லையே!

வடதிசை மூவரசருக்கும், அரச பாரத்தைத் தாங்கும் சுமைக்கும் பயந்து இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டதாக நினைக்கப்பட்ட குமார பாண்டியன் இராசசிம்மனும் அங்கே அவர்களோடு நிற்பது போல் தளபதிக்கு ஒரு பிரமை கண்களில் ஏற்பட்டது. ஆனால் அந்த பிரமை மறுகணமே நீங்கிவிட்டது. அவனுக்குக் குமார பாண்டியரைப் போல் காட்சியளித்து அவன் கண்களை ஒரு கணம் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது அந்த இளம் துறவியின் தோற்றம் தான். படகில் வரும் போது துறவியை எங்கோ கண்டிருப்பது போல் வந்த நினைவு மனத்தில் இப்போது உறுதிப்பட்டது.

"சேந்தா! அது என்ன? அந்த மூலையில் யாரோ ஒளிந்து நிற்பதுபோல் தெரிகிறதே? இப்படி விளக்கைக் கொண்டு வா" என்று மகாமண்டலேசுவரர் தளபதி நின்ற மூலையைச் சுட்டிக் காட்டினார்.

உடனே சேந்தன் விளக்கோடு வர, மகாமண்டலேசுவரர் அவனைப் பின்பற்றித் தளபதி நின்று கொண்டிருந்த மூலைக்கு வேகமாக வந்தார்.

சுவரோரமாக நின்று கொண்டிருந்த தளபதிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது.

13. பகவதி காப்பாற்றினாள்

மேல் மாடத்து நிலா முற்றத்தில் எதிர்பாராத நிகழ்ச்சியால் அரைகுறையாக முடிந்த நாட்டியத்துக்குப் பின் மகாராணியாரும் அவரோடு இருந்த பெண்களும் பரபரப்படைந்து அந்தப்புரத்துக்குச் சென்றார்களல்லவா? அதன் பின் அங்கு நடந்த தொடர்பான நிகழ்ச்சிகளைக் கவனிப்போம்.

திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தினால் சூதுவாதறியாத அந்தக் கன்னிப் பெண்களின் மனத்தில் தன்னைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்று மகாராணி வானவன்மாதேவி கலக்கமுற்றார். இந்தப் பரந்த உலகத்தில் எத்தனை கொடுமைகளைச் செய்தாலும் அவற்றிலிருந்து தப்பலாம். கள்ளங் கபடமற்ற நல்ல மனங்களில் தீமையை விதைத்தவர்கள் எந்த விதத்திலும் தப்ப முடியாது. மகாராணி வானவன்மாதேவியின் மனத்தில் எப்போதும் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய சிந்தனையில் இதுவும் ஒன்று.

"குழந்தைகளே! பகவதி! விலாசினி! உங்களுடைய ஆடல் பாடல்களை இன்னும் சிறிது நேரம் காணவும், கேட்கவும் ஆவலாயிருந்தேன். என்னுடைய எத்தனை, எத்தனை கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன தெரியுமா? ஒரு தேசத்தின் மகாராணியாக இருந்து காணுகிற சுகத்தை விட உங்களைப் போல் இரண்டு பெண்களின் தாயாக ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருந்தேனானால் இன்னும் எவ்வளவோ சுகத்தையும், நிம்மதியையும், கண்டிருப்பேன்" என்று கூறினார் வானவன்மாதேவி.

"மகாராணியாரின் திருவாயிலிருந்து இத்தகைய வார்த்தைகளைக் கேட்க நேரிடுவது எங்கள் பெரும் பாக்கியம்! தாங்கள் சாதாரணக் குடும்பத்துத் தாயாகப் பிறந்திருந்தால் நாங்களெல்லாம் அஞ்சலி செய்யும் மதிப்புக்குரிய பாண்டிமாதேவியாகத் தங்களை அடைந்திருக்க முடியுமா?" என்று உபசாரமாக மறுமொழி கூறினாள் விலாசினி.

"எங்களுடைய ஆடலும், பாடலும் எங்கே ஓடிப்போய் விடப் போகின்றன? மகாராணியாருடைய அன்புக் கட்டளை எந்த விநாடியில் கிடைத்தாலும் ஓடி வந்து ஆடவும், பாடவும் காத்திருக்கிறோம். கலைகளை அர்ப்பணம் செய்ய வேண்டிய இடமே இதுதானே?" என்று விநயமாகக் கூறினாள் பகவதி.

அவர்கள் இருவரும் கூறியவற்றைக் கேட்ட வானவன்மாதேவியின் வதனத்தில் எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற அற்புதமான புன்னகை ஒன்று மலர்ந்தது. உலக அநுபவங்களின் வாசனையை அதிகம் நுகர்ந்தறியாத அந்த இளம் பெண்களுக்கு மகாராணியின் சிரிப்புப் புரியவா போகிறது?

"குழந்தைகளே! இந்த வயதில் உங்களைப் போன்றவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். பதவி, படாடோபம், இராஜபோகம் எல்லாவற்றாலும் கிடைக்கக்கூடிய ஆடம்பரம் இணையற்ற பெரும் பேறு என்று நினைப்பீர்கள். ஆனால் அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கக்கூடிய துன்பங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியாதவை, விலாசினி! உன் தகப்பனார் உனக்குச் சிலப்பதிகாரம் கற்பித்திருப்பாரே? தொல்காப்பியத்தை அரங்கேற்றிய மாபெரும் அதங்கோட்டாசிரியரின் வழியில் வந்து இன்று தாமும் அதே பேர் பூண்டு விளங்கும் உன் தந்தை தமிழ் இலக்கியக் கடல். அவரிடம் அநேகமாக நீ எல்லா நூல்களையும் கற்றுக் கொண்டிருப்பாய். என்ன, நான் நினைப்பது சரிதானா?"

"ஆமாம், தேவி! என் தந்தை குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வற்புறுத்தி ஆவலோடு அவற்றையெல்லாம் எனக்குக் கற்பித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தைப் பலமுறை அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். அந்த முத்தமிழ்க் காவியம் என் மனத்தைக் கவர்ந்ததைப் போல் வேறு எதுவும் கவரவில்லை" என்றாள் விலாசினி.

"அந்த மகா காவியத்தில் ஓர் அருமையான கட்டம் எனக்கு நினைவுக்கு வருகிறது. குழந்தாய்! மதுரையில் கண்ணகிக்கு தவறிழைத்த பாண்டியன் உயிர் துறந்த செய்தியைச் சாத்தனார் என்ற புலவர், சேர நாட்டில் பேராற்றங்கரைப் படுகையில் செங்குட்டுவன் வந்து தங்கியிருக்கும் போது அவனுக்குக் கூறுகிறார். அந்த அவலச் செய்தியைக் கேட்ட செங்குட்டுவன் இதயத்தில் பெருந்தன்மையான முறையில் அநுதாபம் சுரக்கிறது. அந்த அநுதாபத்தைச் சேரர் பெருவேந்தனான செங்குட்டுவன் எவ்வளவு நாகரிகமாக வெளியிடுகிறான், தெரியுமா?

'ஆகா! என்னைப் போல் சக அரசனாகிய பாண்டியன் ஒரு பெண்ணுக்குத் தவறாக நியாயம் வழங்கியதற்கு நாணித் தன் உயிரையே விட்டுவிட்டான். அரசாளுகிற பரம்பரையில் பிறப்பது மகத்தான அதிர்ஷ்டம் என்று எத்தனை பேர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். மழை பெய்யாமற் போனால், 'அரசன் சரியில்லை; மழை தவறிவிட்டது' என்பார்கள். மழை அதிகமாகப் பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுவிட்டாலோ அப்போதும், 'அரசன் சரியில்லை' என்பார்கள். நியாயம் தவறி ஓர் உயிரைக் கொன்று விட்டால் பெரும்பழியை அரசன் சுமக்க நேரிடும். ஓர் அரசனுடைய தோளில் இத்தனை துன்பச் சுமைகள். அப்படி இருந்தும், அரசாளும் குடியில் பிறக்கவில்லையே என்று இந்த அசட்டு மனிதர்கள் வீணாக ஏங்குகிறார்களே!' என்று செங்குட்டுவன் சாத்தனாரிடம் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது."

"தேவி! இந்த இடத்தில் புலவர் பெருந்தகையான இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இதயப் பண்பை மிக அருமையாகச் சித்தரித்திருக்கிறார்; உயர்ந்த காவியப் பண்புக்காகப் பாராட்டுவதாக யிருந்தால் இதை அல்லவா பாராட்ட வேண்டும்?"

"பெண்ணே, விலாசினி! உங்கள் புகழ்ச்சியும், மகாராணிப் பட்டமும், இந்தக் கோட்டை கொத்தளம் முதலிய அரசபோக ஆடம்பரங்களும் எனக்குச் செங்குட்டுவன் கூறிய இந்தக் கருத்தை ஞாபகப்படுத்தின."

மகாராணி இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த போது நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்த பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் அங்கே திரும்பி வந்து சேர்ந்தனர்.

"என்ன! செங்குட்டுவனைப் பற்றி ஏதோ பேச்சு நடக்கிறாற் போலிருக்கிறதே? மகாராணியாரின் சுவாரஸ்யமான இலக்கியச் சம்பாஷணையில் நாங்களும் கலந்து கொள்ளாமல்லவா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அதங்கோட்டாசிரியர்.

"நான் எதையும் உங்களைப் போல வகை தொகையாக விவரித்துச் சொல்ல முடியுமா? அதெல்லாம் சரி! நந்தவனத்திலிருந்துதானே வருகிறீர்கள்? அது என்ன குழப்பம் அங்கே? விவரம் தெரிந்து கொண்டு வந்திருப்பீர்களே! சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்" என்று மகாராணியார் அதங்கோட்டாசிரியரை நோக்கிக் கேட்டார். உடனே அதங்கோட்டாசிரியர் பக்கத்தில் திரும்பி, "பவழக்கனிவாயரே! மகாராணியாருக்குச் சொல்லும். நீர் தான் இம்மாதிரி விஷயத்தை நன்றாக வருணித்துச் சொல்லமுடியும்" என்று தம் சமீபத்திலிருந்த பவழக்கனிவாயரைத் தூண்டினார்.

"கலகத்தைப் பற்றிச் சொல்ல நான் தான் சரியான ஆள் என்று தீன்மானித்து விட்டீராக்கும். பரவாயில்லை! நானே சொல்லுகிறேன்," என்று சிரிப்போடு பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினார் பவழக்கனிவாயர்.

"மகாராணி! கோட்டைக்கு வெளியிலிருக்கும் ஏரியிலிருந்து அரண்மனை நந்தவனத்துக்குத் தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் வழியாக யாரோ நந்தவனத்துக்குள் புகுந்திருக்கிறார்கள். அப்படிப் புகுந்தவர்கள் யார், என்ன நோக்கத்தோடு புகுந்தார்கள், என்பனவெல்லாம் தெரியவில்லை. நிலா முற்றத்துச் சுவரை ஒட்டினாற்போல் இருக்கும் மகிழ மரக்கிளையில் வந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்தை உத்தேசித்து ஏறியிருக்க வேண்டும். அதனால் தான் சுமை தாங்காமல் அந்தக் கிளை முறிந்திருக்கிறது."

"இதென்ன? எல்லாம் அநுமானம் தானா? நேரடியாக ஒன்றும் பார்த்துத் தெரிந்து கொண்டு வரவில்லையா நீங்கள்?" என்று வானவன்மாதேவி குறுக்கிட்டுக் கேட்டார்.

"தேவீ! நாங்கள் என்ன செய்ய முடியும்? வந்தவர்களில் எவரும் பிடிபடவில்லை. வீரர்கள் அரண்மனை நந்தவனத்தில் சல்லடைக் கண் இடமும் விடாமல் தேடிப் பார்த்து விட்டார்கள். நந்தவனத்து ஈர மண்ணிலும், கால்வாய்க் கரையில் தரையில் பதிந்திருக்கும் அடிச்சுவடுகளிலிருந்தும் ஒருவன் தனியாக வரவில்லை என்று தெரிகிறது. அதைத் தவிர மகிழ மரத்தடியில் ஒரு குத்துவாளும், கால்வாய்க் கரைப் படியில் ஒரு தலைப்பாகையும் விழுந்து கிடந்தன. கோட்டை மெய்க்காப்பாளர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு போய்ப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒருவேளை இந்த இரண்டு பொருள்களையும் கொண்டு வந்தவர்களைக் கண்டுபிடிக்க முயன்றால் வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும்" என்று பவழக்கனிவாயர் கூறி முடித்த போது, கேட்டுக் கொண்டிருந்த வானவன்மாதேவியின் முகத்தில் சிரிப்பில் மலர்ச்சி ஒளிர்ந்தது.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"சிரிக்க வேண்டிய காரணம் இருந்தது சிரித்தேன். பவழக்கனிவாயரே! உலகியல் அறிவையும், ஞானச் செல்வத்தின் விளைவையும் வளர்க்கக் கூடிய காந்தளூர் மணியம்பலத்தின் தலைவராகிய உமக்குக் கூடவா இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது?"

"இதில் எல்லாம் என்றால்...?"

"கோட்டையின் உயரமான பெரிய சுவர்கள், அவைகளைச் சுற்றிலும் ஆழமான அகழி, போதும் போதாதற்கு வாளும், வேலும் சுமந்த மெய்க்காவல் வீரர்கள், சீவல்லப மாறனைப் போல அவர்களுக்கு ஒரு தலைவன் - எல்லாம் எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. கேவலம் ஐம்புலச் செங்கற்களால் உருவான நிலையற்ற இந்த உடற்கோட்டையைப் பாதுகாக்க இவ்வளவு ஏற்பாடுகளா? எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மனிதர்களுக்கு ஆத்மபலம் குறையும் போது புறக்கருவிகளின் துணையால் கிடைக்கும் பாதுகாப்பில் நம்பிக்கை விழுகிறது. உண்மையில் இந்த ஏற்பாடுகளால் என்னுடைய ஆத்ம பலத்தை நலியச் செய்கிறீர்கள் நீங்கள்! கோட்டைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள் கன்னியாகுமரியில் என்னைக் கொலை செய்ய முயன்று முடியாமல் ஏமாந்து போனவர்களாகவே இருக்கலாம். அவர்களைப் போன்ற ஒரு சிலரின் கையால்தான் எனக்குச் சாவு என்றிருக்குமானால் அதை உங்களால் தடுத்துவிட முடியுமா?"

"தேவீ! இன்று மாலையிலிருந்து உங்கள் பேச்சு பற்றற்ற விரக்தி நிலையையே காட்டுகிறது. இவ்வளவு நம்பிக்கை இழக்கும்படியான பெருந் துன்பங்கள் எவையும் வரவில்லையே?" என்று உருக்கம் நிறைந்த தொனியில் விசாரித்தார் அதங்கோட்டாசிரியர்.

"ஆசிரியரே! இதுவரையில் வந்த துன்பங்கள் போதாதா? இன்னும் என்ன வரவேண்டும்?"

"ஒரு துன்பமுமில்லை! நீங்களாகவே என்னென்னவோ நினைத்துக் கொள்கிறீர்கள். குமரித் தெய்வத்தின் அருளும் தென்பாண்டி நாட்டு மக்களின் குறைவில்லாத அன்பும் இருக்கிறவரை உங்களுக்கு எவராலும் கேடு சூழ முடியாது. தங்களுடைய அருமந்தப் புதல்வரும் குமாரபாண்டியருமான இளவரசர் அருகில் இல்லையே என்று கவலைப்படலாம். நாளைக் காலையில் நடக்க இருக்கும் மகாசபைக் கூட்டத்தில் செய்யப் போகிற ஏற்பாடுகளின் மூலம் அந்தக் கவலையையும் போக்கிவிடுகிறோம். இளவரசர் எங்கிருந்தாலும் அவரை உடனே அழைத்துக் கொண்டு வருவதற்கு வேண்டிய செயல் திட்டங்களெல்லாம் நாளைக் கூட்டத்தில் உருவாகிவிடும்" என்றார் ஆசிரியர்.

"அதோடு விட்டு விடமாட்டோம். இளவரசர் திரும்பி வந்ததும் உடனடியாக மகுடாபிஷேகத்தையும் கூடவே திருமணத்தையும் செய்து முடித்து விட்டால் தான் மகாராணியாருக்குப் பூரணமாகத் திருப்தி ஏற்படும்" என்று பவழக்கனிவாயர் கூறியபோது அங்கே அவர்களோடு உட்கார்ந்திருந்த விலாசினியும், பகவதியும் தலை குனிந்து கொண்டனர். அந்த இளம் பெண்களின் கன்னங்களில் ஏன் அந்தச் சிரிப்பு; கண்களில் மின்னும் அந்த ஒளிக்கு என்ன பெயர் சொல்லுவது?

எப்போதோ, சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனையில் கண்டிருந்த குமார பாண்டியரின் சுந்தரத் தோற்றம், அவர்கள் நினைவில் அப்போது காட்சியளித்திருக்க வேண்டும். பெண்களுக்கு நாணம் எவ்வளவு அழகாக இருக்கிறது! எத்தனையோ சமயங்களில் எத்தனையோ காரணங்களுக்காகப் பெண்களுக்கு நாணம் ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் நாணத்தில் முழுமையான கனிவைக் காண முடிகிறது. திருமணமாகாத இளம் பெண்களுக்கு நடுவில் திருமணத்தைப் பற்றிப் பேசினால், உண்டாகிற நாணம் இருக்கிறதே அதற்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை.

மேலும் சிறிது நேரம் வானவன்மாதேவிக்கு ஆறுதலை உண்டாக்குகிற விதத்தில் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் உறங்குவதற்குச் சென்றனர். போகும்போது பகவதியையும், விலாசினியையும் தனியே அழைத்து, "பெண்களே! இன்று மகாராணியின் மனநிலை சரியில்லை. கசப்பும், விரக்தியும் அடைந்த நிலையில் புண்பட்டு நொந்து போயிருக்கிறார். எந்த விநாடியில் அவருக்கு என்ன தோன்றுமென்று ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் இங்கேயே மகாராணியோடு படுத்துக் கொள்ளுங்கள். ஆடவர்களாகிய நாங்கள் இவ்வளவு நாழிகைக்கு மேலும் இங்கே அந்தப்புரப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருப்பது முறையல்ல. கீழே மாளிகையில் போய்ப் படுத்துக் கொள்கிறோம். நீங்கள் இருவரும் மகாராணியைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி எச்சரித்து விட்டுச் சென்றனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. அந்தப்புரத்துப் பணிப்பெண்கள் தீபங்களை அணைத்துக் கதவுகளை ஒவ்வொன்றாக அடைத்துக் கொண்டிருந்தனர்.

சயனக் கிருகங்களின் தூப கலசங்களிலிருந்து கிளம்பிய அகிற்புகையின் நறுமணம் காற்றோடு இழைந்து எங்கும் பரவிக் கொண்டிருந்தது.

வானவன்மாதேவியின் பள்ளியறையில் விளக்கு ஒன்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மூன்று மஞ்சங்களில் இரண்டில் கொடிகள் துவண்டு நெளிந்து கிடப்பது போல் பகவதியும், விலாசினியும் படுத்துக் கொண்டிருந்தனர். நடுவாக இருந்த மூன்றாவது மஞ்சத்தில் வானவன்மாதேவி உட்கார்ந்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். "தேவீ! இப்படியே விடிகின்றவரை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறீர்களா? களைப்புத்தீர உறங்கினால் என்ன?" என்றாள் பகவதி.

"தூக்கம் வரவில்லையே, குழந்தாய்! நான் என்ன செய்வேன்? நீ தூங்கு!" என்று பதில் கூறினார் மகாராணி. விலாசினியோ படுத்த சில வினாடிகளுக்குள்ளேயே ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டு விட்டாள்.

பகவதி அதற்கு மேல் மகாராணியை வற்புறுத்தும் உரிமை தனக்கு இல்லையென்று கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்தாள். நன்றாக உறங்கவுமில்லை. நன்றாக விழித்துக் கொண்டிருக்கவுமில்லை. இரண்டுக்கும் நடுப்பட்ட ஒரு நிலையில் அவள் படுக்கையில் கிடந்தாள்.

உறக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே ஒருவகைச் சாதாரண ஓய்வில் கிடந்த பகவதி சிறிது நேரத்துக்குப் பின் தற்செயலாகக் கண் விழித்தாள். விழித்துக் கொண்டவள் மகாராணியைக் காணவில்லை. மஞ்சத்தின் மேல் விரித்திருந்த விரிப்புகள், திண்டுகள், அணைகள் எல்லாம் அப்படியே இருந்தன. வாயிற் கதவுப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்! அது இலேசாகத் திறந்திருந்தது. அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் எச்சரித்து விட்டுப் போனது அவளுடைய நினைவில் மின்னலைப் போல் தோன்றியது. உடனே எழுந்திருந்து கதவைத் திறந்திருந்த வழியாகப் பகவதியும் கீழே இறங்கினாள். அந்த அறையின் வெளியே அந்தப்புரத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்லும் இரண்டு மூன்று வழிகள் பிரிந்தன. படிக்கட்டில் இறங்கிக் கீழே வந்த பகவதி ஒரு கணம் வழிகள் பிரியும் இடத்தில் தயங்கி நின்றாள். அந்த அர்த்த ராத்திரி வேளையில் என்ன நோக்கத்தோடு, எந்த வழியில் மகாராணி சென்றிருக்கக் கூடும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை. 'திகைத்து நின்று கொண்டிருப்பதைக் காட்டிலும் மனத்துக்குத் தோன்றிய ஏதாவது ஒரு வழியில் போய்ப் பார்க்கலாமே! நம்முடைய நல்லகாலமாக மகாராணியாரும் அதே வழியாகச் சென்றிருக்கலாமல்லவா?' என்று நினைத்தவளாய் நேரே செல்லும் வழியில் நடந்தாள். தீபங்களெல்லாம் அணைக்கப்பட்டிருந்ததனால் இருள் சூழ்ந்திருந்தது. வழி வளைந்து வளைந்து கீழ் நோக்கி இறங்கியது. அந்த இருளில் அம்மாதிரிப் பழக்கமில்லாத பாதையில் பகவதியைத் தவிர வேறு எந்தப் பெண்ணாலும் அவ்வளவு துணிவாக நடந்து சென்றிருக்க முடியாது. அதை ஒரு சாகஸம் என்று தான் சொல்ல வேண்டும்.

கடைசியாக, அவளைக் கோட்டைக்குள் ஒரு திறந்த வெளியான இடத்தில் கொண்டு போய் விட்டது. அந்த வழி, 'கம்'மென்று பவழ மல்லிகைப் பூக்களின் மணம் கமழ்ந்தது.

அது அரண்மனைப் பெண்கள் நீராடும் பகுதி. சிறுசிறு குளங்கள். அவற்றில் நிலா ஒளியையும் வானையும் பிரதிபலிக்கும் தெளிவான நீர். குளங்களின் நடுவே நீராழி மண்டபங்கள். சுற்றிலும் அடர்ந்த பவழ மல்லிகை மரங்கள். நிலாத் திகழும் வானவொளியின் நட்சத்திரங்களெல்லாம் அந்த மரக் கிளையில் வந்து அப்பிக் கொண்டது போல் வெண்ணிற மலர்கள் மலர்ந்திருந்தன. 'கீ' என்ற ஓசை நிறைந்திருந்தது. அதோடு யாரோ மெல்லிய குரலில் விசும்பி அழுகிற ஒலி! - பகவதி நாலா பக்கமும் மிரண்டு பார்த்துக் கொண்டே அந்த ஒலி வருகிற இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகச் சுற்றிச் சுற்றி வந்தாள்; பவழ மல்லிகை மரங்களையும் நீராழி மண்டபத்தையும் கடந்து தென் கோடியில் வந்து பார்த்தாள். கோட்டைச் சுவரை ஒட்டினாற் போலிருந்த ஒரு பாழுங் கிணற்றின் விளிம்பில் மகாராணி விரித்த கூந்தலும் அழுத கண்களுமாக அமர்ந்து கொண்டிருந்தார். ஓசைப்படாமல் பின்புறமாக மெதுவாக நடந்து போய் மகாராணி வானவன்மாதேவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் பகவதி.

14. முரட்டுக் கரம்

அன்றொரு நாள் இரவு முன்சிறை அறக்கோட்டத்தில் வந்து அண்டராதித்தனுடன் வம்பு செய்த பின் அவன் மனைவியால் அவமானப்படுத்தப்பட்டுத் திரும்பியவர்கள் இன்னாரென்பதை நேயர்கள் இதற்குள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்கள்.

நாகைப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு விழிஞத்தில் வந்திறங்கிய ஒற்றர்களே அந்த ஆட்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் திண்டாடிய அந்த இரவுக்குப் பின் அவர்கள் தென்பாண்டி நாட்டில் இரண்டொரு நாட்களை ஒளிவு மறைவாகக் கழித்து விட்டார்கள். நாஞ்சில் நாட்டு அரசாட்சி நிலைகளைப் பற்றியும் மகாராணி வானவன் மாதேவியைப் பற்றியும் எத்தனையோ செய்திகளை அறிந்து கொண்டார்கள். தாங்கள் அங்கே வந்த மறுநாளைக்கு மறுநாள் மகாராணி பௌர்ணமி தினத்தன்று கன்னியாகுமரியில் தரிசனத்துக்காக வரப்போகும் செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது.

தங்களின் எந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார்களோ அதை நிறைவேற்றுவதற்கு மகாராணியின் கன்னியாகுமரி விஜயத்தை பயன்படுத்திக் கொள்வதென்று தீர்மானித்தனர். அங்கே இங்கே தங்குவதற்கு இடம் தேடாமல் நேரே கன்னியாகுமரிக்கே போய்ச் சேர்ந்துவிட்டனர். அங்கேயும் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. கடற்கரையோரத்துச் சோலைகளிலும், தோட்டங்களிலும் தங்குவதை மட்டும் யாரும் தடுக்க முன் வரவில்லை.

மகாராணி விஜயம் செய்வதற்கு முன் தினமே கன்னியாகுமரிக்குச் சென்று விட்டதால் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருந்தது. எங்கே ஒளிந்திருப்பது? தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது? எப்படித் தப்புவது? என்பது போன்ற முன்னேற்பாடுகளைப் பக்குவமாகச் செய்து வைத்துக் கொண்டு விட்டனர், வடதிசைப் பேரரசரின் அந்த ஒற்றர்கள். இதன் விளைவாக ஏற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த அத்தியாயங்களில் தெரிந்து கொண்டு விட்டோம். அந்த ஒற்றர்கள் எண்ணியபடியோ, திட்டமிட்டபடியோ எதுவும் நடக்கவில்லை. கன்னியாகுமரியிலிருந்து தப்பி வருவது பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது அவர்களுக்கு. அன்றைய தினம் இரண்டு பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டனர் அவர்கள். ஒன்று அவர்கள் மூவரும் திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தபடி குமரிக் கோவில் பிரகாரத்தில் வானவன் மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முடியாமற் போனது; மற்றொன்று இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்கப்பட வேண்டிய திருமுகவோலை, அந்த ஓலையில் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சிகளைச் செய்து முடிப்பதற்கு முன்பே தளபதி வல்லாளதேவனின் கையில் சிக்கியது.

இந்த இரண்டு எதிர்பாராத அதிர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டுத் தாங்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றித் திரும்பவில்லையானால் ஆத்திரக்காரனான கொடும்பாளூர் மன்னன் தங்கள் தலையை வாங்கி விடுவான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வது என்று திகைத்தனர், அந்த மூன்று ஒற்றர்களும்.

"முத்தரையா! ஊருக்குத் திரும்பின பின் நாம் உயிரோடு இருப்பதும் இல்லாததும் சொல்லிவிட்ட காரியத்தை முடித்துக் கொண்டு போகிறோமா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஆகவே இன்னும் காலம் கடந்து விடவில்லை. இன்று மீதமிருக்கும் இந்த இராப்போது முடிந்து, நாளைப் பொழுது விடிவதற்குள் நூறு கொலைகளைச் செய்யலாம். நூறு ஓலைகளை எழுதலாம்" - என்றான் செம்பியன் என்னும் ஒற்றன்.

"எனக்கு அப்போதே தெரியும். புன்னை மரத்துத் தோட்டத்தில் நாம் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டுக் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அந்தக் குட்டைத் தடியன் வந்து பார்த்தானே; அப்போதே ஏதோ கோளாறு நடக்கப் போகிறதென்று என்னுடைய மனத்தில் குறளி சொல்லிவிட்டது" என்றான் முத்தரையன்.

"நடந்ததைப் பேசி என்ன ஆகப் போகிறது? அந்தக் குடுமிக்காரத் தடியனை மறுபடியும் எங்காவது காண நேர்ந்தால் உடனே வெட்டிப் போடுவோம். இப்போது நடக்க வேண்டியதைக் காண்போம். செம்பியா! உன்னுடைய யோசனையைச் சொல். ஏதோ கூறினாயே?" என்றான் இரும்பொறை.

"நான் சொல்கிற வழியைக் கேட்டால் தான் கொடும்பாளூர் மன்னரின் கோபத்துக்கு ஆளாகிச் சாகாமல் தப்ப முடியும். முதலில் ஒரு போலி ஓலை தயார் செய்ய வேண்டும். தளபதி நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஓலையில் என்ன எழுதியிருந்ததோ, அதை அப்படியே இந்தப் புது ஓலையில் எழுதி விடுவோம். ஓலையில் வடதிசை மூவரசரின் அடையாளச் சின்னங்களையும் எழுத்தாணியால் வரைந்து கொள்ளலாம். அந்த ஓலையைப் பத்திரமாக வைத்துக் கொண்டு புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போவோம். எப்படி நம்மால் கோட்டைக்குள் நுழைய முடியும்? எந்த விதத்தில் மகாராணியை நெருங்கிக் கொலை செய்ய முடியும் என்பதையெல்லாம் இப்போது நான் விவரித்துச் சொல்ல முடியாது. இந்த நள்ளிரவில் வேற்று நாட்டு ஒற்றர்களான நாம் கோட்டைக்குள் நுழைவதும், குறிக்கோளை முடித்துக் கொள்வதும் நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்திருக்கின்றன. இது நம்முடைய கடைசி விநாடி முயற்சிகள்" - என்று செம்பியன் ஆணித்தரமாகக் கூறிய போது மற்ற இரண்டு பேர்களும் மறுக்க முடியவில்லை.

"முதலில் இப்போது ஓலைக்கும் எழுத்தாணிக்கும் எங்கே போவது?"

"ஆ! போவதற்கு ஓர் இடம் இருக்கிறது. எனக்கு இப்போதுதான் நினைவு வருகிறது. முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் இப்போது ஓலையும் எழுத்தாணியும் தயாரித்து விடலாம். அந்தச் சத்திரத்து மணியக்காரன் கணக்கெழுதுவதற்காக ஓலை எழுத்தாணி நிச்சயம் வைத்திருப்பான். அதோடு அந்தத் தடியனும், அவன் மனைவியான அந்தத் துடுக்குக்காரியும் அன்று நம்மை அவமானப்படுத்தினதற்குச் சரியானபடி பழிவாங்கி விடலாம்" என்று இரும்பொறை யோசனை கூறிய போது, "பாராட்டுகிறேன் இரும்பொறை! உன்னுடைய மண்டைக்குள்ளே இவ்வளவு ஞாபகசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதென்பது எங்களுக்கு இதுவரையில் தெரியாமல் போய் விட்டதே!" என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தனர் செம்பியனும் முத்தரையனும்.

இந்தத் தீர்மானத்துக்குப் பின் அவர்கள் மூவரும் வேகமாக முன்சிறை அறக்கோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்படிச் செல்லும் போது எங்காவது, யாரிடமாவது அகப்பட்டுக் கொண்டு விட நேரிடுமோ என்ற பயத்தினால் ஊர்களுக்கும், நகரங்களுக்கும் ஊடே செல்லும் நாட்டுப் புறத்துச் சாலைகளிலோ, வழிகளிலோ செல்லாமல் காட்டுப் பாங்கான கிளை வழிகளிலே மறைந்து சென்றனர்.

இந்த முவரும் இப்படி முன்சிறை அறக்கோட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் தளபதி வல்லாளதேவன் கன்னியாகுமரியில் தன் வீரர்களோடு இவர்களைத் தேடிக் கொண்டிருந்தான். நாராயணன் சேந்தன் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் மகாமண்டலேசுவரரைச் சந்தித்துக் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதற்காகக் குதிரைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சுசீந்திரம் தாணுமாலயம் பெருமாள் கோவிலில் தம்முடைய செல்வக் குமாரி குழல்மொழியுடனும் விழிஞத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த இளந்துறவியுடனும் நாராயணன் சேந்தனையும் அவன் கொண்டு வரப்போகும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். மகாராணி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் குமரிக் கடற்கரையிலிருந்து புறத்தாய நாட்டுக் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

முன்சிறை அறக்கோட்டத்தில் முதல் யாமம் முடிவதற்குள்ளேயே அன்று அசாதாரணமான அமைதி நிலவியது. 'பௌர்ணமி' தினமாகையினால் சத்திரத்தில் வந்து தங்கியிருந்த யாத்திரீகர்களில் பெரும்பாலோர் கன்னியாகுமரிக்கும் சுசீந்திரத்துக்குமாகத் தரிசனத்துக்குச் சென்று விட்டனர். யாத்திரை வந்தவர்கள் பௌர்ணமி என்பதற்காக மட்டும் அன்று கன்னியாகுமரி செல்லவில்லை. அன்றைக்குச் சென்றால் உலகமாதேவியாகிய கன்னியாகுமரி அம்மனின் தரிசனத்தோடு பாண்டிமாதேவியாகிய மகாராணியின் தரிசனமும் அங்கேயே கிடைக்கும் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மகாராணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கட்டுக் கடங்காமல் இருந்ததால் அவர்கள் அண்டராதித்த வைணவனை வழிகாட்டியாகத் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

சத்திரத்தைப் பார்த்துக் கொள்வதற்கு வேறு யாராவது ஆள் இருந்தால் கோதை நாச்சியாரிடம் சொல்லி வற்புறுத்தி அவளையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போயிருப்பான் அண்டராதித்தன். ஆனால் அதற்கு வழியில்லாமல் இருந்தது நிலைமை. யாத்ரீகர்களும், தானும் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது சாப்பிடுவதற்கு உணவு தயாரித்து வைத்திருக்க வேண்டும். கோதையோ, தானோ இருந்தால் தான் அதை நிறைவேற்ற முடியும்.

"கோதை! இந்த யாத்ரீகர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நீ கன்னியாகுமரிக்குப் போய்விட்டு வா. நான் இங்கே இருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொள்கிறேன்" என்று அவன் அவளிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் அதற்கு இணங்கவில்லை. அதற்கு மேல் இன்னும் வற்புறுத்தியிருந்தால் இணங்கியிருப்பாளோ என்னவோ? அவன் வற்புறுத்தவில்லை. தானே யாத்ரீகர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

"கோதை! யாருக்கென்ன வந்ததென்று நீ பாட்டுக்குச் சத்திரத்துக் கதவை அடைத்துக் கொண்டு தூங்கிவிடாதே. நாங்கள் இரண்டாவது யாமம் முடிவதற்குள் எப்படியும் திரும்பி வந்துவிடுவோம். வயிற்றைக் காயப்போட்டு விடாதே" என்று போகும் போது சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டுப் போனான் அண்டராதித்தன்.

கோதையின் கணவனும், சத்திரத்தில் தங்கியிருந்தவர்களும் மாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க முடியும் அளவுக்குப் பெரும் பரப்புள்ள அந்தச் சத்திரத்தில் இப்போது மூன்றே மூன்று பெண்கள் மட்டும் தனித்திருந்தனர். சத்திரத்து மடைப்பள்ளிகளில் சமையல் வேலை செய்யும் இரண்டு பணிப்பெண்கள் தவிரக் கோதை நாச்சியார் ஒருத்தி ஆக மொத்தம் மூன்று பேர்கள் தான். பணிப்பெண்கள் இரவுச் சாப்பாட்டுக்காக அடுப்பு மூட்டிச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். கோதை நாச்சியார் சமையலுக்கு வேண்டிய படித்தரப் பொருள்களை உக்கிராணத்துக் கட்டளை அறையிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டு மேற்பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்கள் இரண்டு பேரும் கோதையின் நகைச்சுவையில் ஈடுபட்டு அடிக்கடி குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குபவர்களுக்குச் சுவையான வசதிகள் இரண்டு. ஒன்று: அங்கே வருவோரை உபசரிக்க விருந்தோம்புகிற முறை. இரண்டாவது: அந்த அறக்கோட்டத்தை நிர்வாகம் செய்யும் அண்டராதித்தன் - கோதை - இந்தத் தம்பதியின் நகைச்சுவை நிறைந்த சரளமான வேடிக்கைப் பேச்சு.

அதுவும் கோதை பேசத் தொடங்கிவிட்டால் ஒரே கொண்டாட்டம் தான். மடைப்பள்ளியில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள் தங்கள் கைக் காரியங்களையெல்லாம் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கோதையின் நகைச்சுவைப் பேச்சு வெள்ளத்தில் மூழ்கியிருந்த பணிப்பெண்கள் ஒரு பெரிய விபரீதமான காரியத்தையே செய்து விட்டார்கள். அதாவது சர்க்கரைப் பொங்கலில் போடவேண்டிய வெல்லத்தைப் புளிக் குழம்பிலும் புளிக்குழம்பில் போட வேண்டிய உப்பு, காரம் முதலியவற்றைச் சர்க்கரைப் பொங்கலிலும் போட்டுச் சமையல் செய்து வைத்து விட்டார்கள். அதன் விளைவாக அன்றைக்குச் சத்திரத்தில் சாப்பிட உட்கார்ந்த அத்தனை பேரும் அவதிப்பட்டனர். "இந்தா, கோதை! இனிமேல் மடைப்பள்ளியில் வேலை நடந்து கொண்டிருக்கும் போது பணிப்பெண்களிடம் போய் பேச்சுக் கொடுத்தாயோ தெரியும் சேதி!" என்று அன்றைக்கு அவளைக் கடுமையாகவும் வேடிக்கையாகவும் எச்சரித்து வைத்தான் அண்டராதித்த வைணவன்.

இதனால் பணிப்பெண்கள் கோதையோடு பேசிக் கொண்டே மடைப்பள்ளி காரியங்களைக் கவனிக்க நேர்ந்தால் உஷாராக வேலை செய்வது வழக்கம். கோதை ஏதோ பேச ஆரம்பித்ததும், "அம்மணீ! தயவு செய்து இப்போது நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் மடைப்பள்ளி வேலைகளை முடித்துவிட்டு வருகிறவரை பொறுத்துக் கொள்ளுங்கள்" என்றார்கள்.

"சரிதான்! நீங்கள் வேலையைக் கவனியுங்கள். நான் போய்ச் சத்திரத்தின் அந்தி விளக்குகளை ஏற்றுகிறேன். இருட்டுகிற சமயமாகிவிட்டது" என்று கூறிவிட்டு மடைப்பள்ளியிலிருந்து வெளியில் வந்தாள் கோதை நாச்சியார்.

தீபங்களை ஏற்றிய பின் வாசற்புறத்துக்கு அருகில் உள் பக்கமாக இருந்த சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து ஓலைச் சுவடியை எடுத்து அன்றையப் படித்தரக் கணக்கு விவரங்களை அதில் எழுதிடலானாள். அவளுடைய கணவன் அன்றாடம் செய்ய வேண்டிய வழக்கமான வேலை அது. அன்று அவன் வெளியே சென்றிருந்ததால், தான் கொடுத்திருந்த படித்தரத்துக்குத் தானே கணக்கு எழுதினாள்.

அடிக்கடி எழுதிப் பழக்கப்படாத அவள் கை எழுத்தாணியைப் பிடித்து ஒவ்வொரு எழுத்தாக ஓலையில் எழுதிக் கொண்டிருந்தது. ஏதோ கேட்பதற்காக அப்போது அங்கு வந்த மடைப்பள்ளிப் பணிப்பெண், "என்ன அம்மா! ஓலையில் ஏதாவது சித்திரம் வரைகிறீர்களா? இவ்வளவு மெதுவாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே?" என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனாள்.

"சரி! சரி! போய்க் காரியத்தைச் செய். நான் எழுதி விட்டு வருகிறேன்" என்று அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு மேலும் குனிந்து கொண்டே எழுதலானாள் கோதை.

பக்கத்தில் காலடி ஓசை கேட்டது. பணிப்பெண்கள் தாம் ஏதாவது கேட்டுப் போக வந்திருப்பார்கள் என்று தலை நிமிராமல் எழுதிக் கொண்டேயிருந்தாள் அவள்.

குபீரென்று விளக்கை நோக்கி வாயால் ஊதும் காற்றோசை. விளக்கு உடனே அணைந்தது. "சீ! இதென்னடி உங்களுக்கு இந்தத் திமிர்? எது விளையாடுகிற நேரம் என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று சொல்லிக் கொண்டே தலை நிமிர்ந்த கோதை எதிரே தனக்கு முன் இருட்டில் நின்றவர்களைப் பார்த்து 'வீல்' என்று அலறுவதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் அவளுடைய வாயிலிருந்து அலறல் வெளி வருவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்தது. எவ்வளவோ முயன்றும் ஒரு சிறு முனகல் கூட அவள் வாயிலிருந்து வெளிப்பட இயலாமற் போய்விட்டது. இன்னொரு முரட்டுக் கை அவள் கையிலிருந்து ஓலையையும் எழுத்தாணியையும் பறித்துக் கொண்டது. கோதை கை கால்களை உதைத்துக் கொண்டு திமிறினாள். அவள் முகத்துக்கு மிக அருகில் இருளில் ஒரு மின்னல் மின்னியது. கோதை மூச்சுத் திணறிப் பிதுங்கும் விழிகளால் பார்த்தாள். பார்வை கூசியது. அது மின்னலல்ல. ஒரு கத்தி! மறு விநாடி அந்தப் பெண் மூர்ச்சையாகித் துவண்டு விழுந்தாள்.

15. தளபதிக்குப் புரியாதது!

நாராயணன் சேந்தனும், மகாமண்டலேசுவரரும் விளக்கோடு தான் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பிய போது, 'ஐயோ இப்போது இங்கே இவர்கள் பார்ப்பதைக் காட்டிலும் இந்தச் சுரங்கத்துக் கற்பாறைகள் மேலிருந்து மொத்தமாக இடிந்து விழுந்து என்னை இப்படியே அமுக்கி விட்டாலும் பரவாயில்லையே! அகப்பட்டுக் கொண்டால் மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்? நான் தான் அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்? எதற்காக எந்த விதத்தில் இந்தச் சுரங்கப் பாதைக்குள் இறங்க நேர்ந்ததென்று சமாதானம் சொல்லிச் சமாளிப்பேன்? நான் என்ன சொன்னால்தான் என்ன? நம்பவா போகிறார்கள்?' என்று இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் தளபதி வல்லாளதேவனின் மனத்தில் தோன்றின தெரியுமா?

இவ்வளவு தூரத்துக்கு அவர்கள் நெருங்கி வந்து விட்ட பின் தப்ப முடியுமென்ற நம்பிக்கையே செத்துவிட்டது அவன் மனத்தில். அந்த நிலையிலும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகின்ற தற்காப்பு உணர்ச்சியையும், பயத்தின் தூண்டுதலும் தருகின்ற சுயபலமும் அவனைக் கைவிட்டு விடவில்லை.

தன்னையறியாமலே மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்து கொண்டிருந்தான் அவன். பத்துப் பன்னிரண்டு பாகதூரம் பின்னுக்கு நகர்ந்த பின் ஒரு பாறை இடுக்கில் வல்லாளதேவன் ஒட்டிப் பதுங்கிக் கொண்டான்.

சுரங்கப் பாதை திருப்பத்துக்கு வந்ததுமே நாராயணன் சேந்தனும் மகாமண்டலேசுவரரும் நின்றுவிட்டனர். "இந்த இடத்தில்தான் யாரோ நிற்பது போலத் தெரிந்தது. இப்போது பார்த்தால் ஒருவரையும் காணோம். ஒரு வேளை என் கண்களுக்கு மட்டுமே தெரிந்த வெறும் பிரமையோ?" என்றார் இடையாற்றுமங்கலம் நம்பி.

"சுவாமி! அப்படி நம்மைத் தவிர வேற்றவர் எவரும் இந்த மாளிகையில் நுழைந்திருக்க வழியில்லை!" என்று நாராயணன் சேந்தன் அவருக்குப் பதில் கூறினான்.

"எனக்கொரு சந்தேகம் சேந்தா! தளபதி வல்லாளதேவனை விருந்தினர் மாளிகைக்குக் கொண்டு போய் தங்கச் செய்தாயே? அவன் நீ அங்கிருக்கும் போதே படுத்து உறங்கத் தொடங்கி விட்டானோ? அல்லது விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தானோ?" என்று இருந்தாற் போலிருந்து எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவர் போல் கேட்டார் இடையாற்றுமங்கலம் நம்பி.

"சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் பற்றி நீங்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டாம். அவர் இந்நேரத்தில் விருந்து மாளிகையில் சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்!" என்று நாராயணன் சேந்தன் பதில் கூறிய போது மறைவாகப் பதுங்கியபடி அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த தளபதிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.

"சரி அப்படியானால் இங்கே தளபதி வந்து நிற்பது போல் என் கண்களுக்குத் தென்பட்ட தோற்றம் வெறும் பிரமையாகத்தான் இருக்கும். வீண் மனச் சந்தேகத்தால் ஏற்பட்ட நிழல் உருவம் தான். அப்படியே இங்கே ஆள் வந்திருந்தாலும் அதற்குள் நம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கே ஓடியிருக்க முடியும்?" என்று கூறிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி.

அவர்கள் அந்தச் சுரங்கப் பாதையின் திருப்பத்திலிருந்து திரும்பி முன்பு நின்று கொண்டிருந்த அந்த இடத்துக்குப் போன போதுதான் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டிருந்த தளபதியின் நெஞ்சு சுபாவ நிலைக்கு வந்தது. 'இந்த நாராயணன் சேந்தன் நீடூழி வாழ்க! நான் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாக இவன் மட்டும் சொல்லியிராவிட்டால் மகாமண்டலேசுவரரின் சந்தேகம் இலேசில் அவரை விட்டு நீங்கியிருக்காது. சுரங்கப் பாதை முழுவதும் விளக்கோடு தேடி என்னைக் கண்டிருப்பார்!' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

இப்படி மகிழ்ந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு சந்தேகமும் பீதியும் அவன் மனத்தில் கிளம்பி அவனைப் பயமுறுத்தத் தொடங்கிவிட்டன. 'இடையாற்றுமங்கலம் நம்பி முதலியவர்கள் இந்தப் பாதாள மண்டபத்திலிருந்து மேலே ஏறிப் போவதற்கு நீ நின்று கொண்டிருக்கும் இதே வழியாகத்தானே திரும்பி வருவார்கள்! அப்போது என்ன செய்வாய்? அதற்குள் நீ வந்த வழியே திரும்பி மேலே போகாவிட்டால் நிச்சயமாக அவர்கள் உன்னைப் பார்த்துவிடப் போகிறார்கள். நீ அவர்களிடம் நிச்சயம் அகப்பட்டுக் கொள்ளத்தான் போகிறாய்' என்று தளபதி வல்லாளதேவனுடைய உள் மனம் அவனை எச்சரித்தது.

'அடாடா! இதுவரை இந்த யோசனையே நமக்கு ஏற்படவில்லையே. நான் நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு அவர்கள் திரும்பி வருவதற்குள் நான் மேலே ஏறிப் போய்விட வேண்டும்' என்று எண்ணியவனாய்ப் பதுங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்தான் தளபதி வல்லாளதேவன்.

அவன் அப்படி எழுந்திருந்து திரும்புவதற்குத் தயாரான நிலையில், கடைசி முறையாக அவனுடைய விழிகள் பாதாள மண்டபத்துப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தன. அப்போது சிறிது நேரத்துக்கு முன் தன் மனம் எண்ணியதற்கு மாறாக அவர்கள் வேறோர் புதுப் பாதை வழியே மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதை அவன் கண்டான்.

அவன் நின்று கொண்டிருந்த இடம் பாதாள மண்டபத்தின் கிழக்குக் கோடி மூலை. அந்த மூலையின் மேலே பளிங்கு மேடையில் திருமகள் சிலைக்கருகே கொண்டு போய் விடும் சுரங்கப்பாதை ஆரம்பமாகிறது.

மறுபக்கம் மேற்குக் கோடி மூலையில் அதே போல் ஒரு படிக்கட்டு சரிவாக மேலே நோக்கி ஏறிச் சென்றது. அந்தப் படியில் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக் கொண்டு முன்னால் செல்ல, அவனுக்குப் பின் இடையாற்று மங்கலம் நம்பி, குமார பாண்டியர் போல் அவன் கண்களுக்குப் பிரமையளித்த துறவி, அவருக்கு அருகில் சிரித்துப் பேசிக் கொண்டு செல்லும் குழல்மொழி - ஆக நால்வரும் மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதைத் தளபதி வல்லாளதேவன் பார்த்தான்.

மேல் கோடியிலிருந்து உயரச் சொல்லும் அந்தப் படிக்கட்டு வழி எங்கே கொண்டு போய் விடுவதாயிருக்கும் என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அந்த ஒரு கணத்தில் அவனுடைய மனம் முழுவதும் நிறைந்திருந்த ஆவல் ஒன்றே ஒன்றுதான். அங்குள்ள மர்மங்களையும் இரகசியங்களையும் ஒரேயடியாகப் புரிந்து கொண்டு விட வேண்டுமென்ற ஆசைதான் அது.

அவர்கள் கண்பார்வைக்கு மறைகின்ற வரையில் பொறுத்திருந்துவிட்டு அடக்க முடியாத ஆசையுடன் பாதாள மண்டபத்துக்குள் அடியெடுத்து வைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி அப்போது அங்கே எதையும் பார்க்க முடியவில்லை. அங்கே இருந்த ஒரே ஒரு தீபத்தையும் நாராயணன் சேந்தன் போகும் போது மேலே எடுத்துக் கொண்டு போய் விட்டதனால் மண்டபம், அதிலிருந்து கிழக்கேயும் மேற்கேயும் செல்லும் வழிகள் யாவும் பழையபடி பயங்கர அந்தகாரப் போர்வையில் மூழ்கிவிட்டிருந்தன.

'இந்த மகாமண்டலேசுவரர் மாளிகையில் வந்து என்னுடைய மூளையே குழம்பிப் போய்விட்டதா? முன் யோசனையோ, விளைவோ தெரியாமலே ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டு போகிறேனே! பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக அல்லவா முடிந்து விட்டது? வெளியேறுவதற்கு வழிகூடத் தெரியாத மையிருட்டில் இந்த மண்டபத்துக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டேனே' என்ற மனத்தவிப்புடன் இருட்டைத் துழாவினான் வல்லாளதேவன்.

ஒருமுறை அங்கே குவிந்திருந்த கேடயங்களின் குவியலில் மோதி நிலை குலைந்து தடுமாறினான் அவன். அப்போது நூறு வெண்கலக் கடைகளில் ஆயிரமாயிரம் மத யானைகள் புகுந்து அமளி செய்தாற் போன்ற அவ்வளவு ஒலியும் எதிரொலியும் அங்கே உண்டாயின. தளபதி நடுங்கிப் போனான். இவ்வளவு பெரிய ஓசை மேலே இருப்பவர்களுக்குக் கேட்காமலா போகும்? அவன் மனக்கண்களுக்கு முன்னால் அவனாகவே ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தான்.

அந்த ஓசையைக் கேட்டு நாராயணன் சேந்தனும் எமகிங்கரர்களைப் போன்ற நாலைந்து வீரர்களும் கையில் உருவிய வாள்களோடு சுரங்கத்துக்குள் இறங்கி ஒடிவருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும், 'ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. தெரியாமல் இதற்குள் இறங்கி வந்து விட்டேன். தயவு செய்து இது மகாமண்டலேசுவரருக்குத் தெரிய வேண்டாம்!' என்று நாராயணன் சேந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அபயக் குரலில் கெஞ்சுகிறான் அவன்.

குட்டைக் கரும் பேய் போல் குரூரமாகத் தன் பெரிய கண்களை விழித்துப் பார்க்கும் நாராயணன் சேந்தன், 'அதெல்லாம் முடியாது! தளபதியாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இங்கிருந்து உயிரோடு தப்ப விடுகிற வழக்கம் எங்கள் மகாமண்டலேசுவரரிடம் கிடையவே கிடையாது!' என்று நிர்த்தாட்சண்யமான கடுமை நிறைந்த குரலில் பதில் சொல்லுகிறான். இந்தக் கற்பனையை நினைக்கும் போதே பயமாக இருந்தது தளபதிக்கு.

அந்தப் பாதாள மண்டபத்தில் ஊசி நுனி இடமும் விடாமல் சுற்றிப் பார்த்து எல்லா மர்மங்களையும் தெரிந்து கொண்டு விட வேண்டுமென்று அவன் மனத்தில் பொங்கி எழுந்த ஆவல் இப்போது இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது.

ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? அந்த வழியின் படிக்கட்டு இருந்த திசை புரியாமல் மண்டபத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான் அவன். 'சரி! விடிகிற வரை இப்படியே சுற்றி அலைக்கழிந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! விடிந்தால் மட்டும் என்ன? இதற்குள் வெளிச்சமா வரப்போகிறது. இதற்குள் பகலானாலும், இரவானாலும் ஒரே மாதிரிதான் இருக்கப் போகிறது' - என்று எண்ணிப் பரிதவிப்பின் எல்லைக்கு அவன் மனம் வந்துவிட்ட போது அந்த வழி அவன் கால்களில் இடறியது. 'அப்பா! பிழைத்தோம்!' என்று எண்ணி மேலே ஏறிச் சென்றான்.

அந்தச் சுரங்கப் பாதையில் தவித்துத் தடுமாறி இறுதியாக வசந்த மண்டபத்துத் தோட்டத்திலுள்ள இடிபாடடைந்த கோவிலுக்குள் வந்து நின்றான். அந்த வழி அவனை அங்கேதான் கொண்டு வந்து விட்டது.

தனக்கு முன்னால் மகாமண்டலேசுவரர், சேந்தன் ஆகியோர் ஏறி வந்த வழி அதுதானா? அல்லது அவர்கள் ஏறிச் சென்ற வழி வேறொன்றா? என்று சந்தேகமாயிருந்தது அவனுக்கு. அங்கு நின்று சிந்தனையில் லயித்துத் தடுமாறியது அவன் உள்ளம்.

'எதற்காக இந்த ஏற்பாடுகள்? இவ்வளவு மறைவாக ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் மகாமண்டலேசுவரர் சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களுக்கும், படைகளுக்கும் பொறுப்பாளியாக இருக்கும் எனக்கும், மகாராணியாரைப் போன்று நாட்டின் உரிமையைச் சொந்தமாகக் கொண்டிருப்பவருக்கும் தெரியாமல் இவ்வளவு மறைவான காரியங்களை எந்த ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இவர் செய்து கொண்டிருக்க முடியும்? இவைதான் போகட்டும்! இவற்றுக்காகவெல்லாம் கூட இந்த மனிதரை மகாராணி வானவன்மாதேவியாரின் பெருந்தன்மை மிகுந்த உள்ளம் மன்னித்து விடுவதற்கு தயங்காது.

'ஆனால் மகாராணியாரின் உயிருக்குயிரான புதல்வராகவும் எதிர்காலத்தில் முடிசூடி இந்த நாட்டை ஆளவேண்டியவராகவும் இருக்கும் குமார பாண்டியர் ஈழத் தீவுக்குள் ஓடிவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரவவிட்டு அதைத் தாமும் நம்புவது போல் நடித்துக் கொண்டிருக்கும் இந்த மனிதர் அதே இளவரசரைப் போல் தோன்றும் ஒரு துறவியை உலகத்துக்குத் தெரியாமல் தம்முடன் வைத்திருக்கும் மர்மம் என்ன? துறவி மகாமண்டலேசுவரருக்குக் கட்டுப்பட்டு விருப்பத்தோடு இங்கே தங்கியிருக்கிறாரா? அல்லது பயந்த சுபாவமுடையவராக இருந்து பயமுறுத்திச் சிறைப்படுத்தி வைத்திருப்பது போல் இவர் தம்முடைய வசந்த மண்டபத்திலும் பாதாள மண்டபத்திலும் அடைத்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறாரோ? உண்மை எதுவோ?

'ஐயோ! வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் இயல்புடையவராகிய நம் மகாராணியார் இந்த இடையாற்றுமங்கலம் நம்பியின் மேல் எவ்வளவு நம்பிக்கையும், பயபக்தி விசுவாசமும் கொண்டிருக்கிறார்? இவரோ, உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாரே! இவரையே நம்பியிருக்கும் மகாராணியாருக்கு இவர் செய்து கொண்டிருக்கிற துரோகம் எவ்வளவு பெரியது? இது தெரிந்தால் மகாராணியின் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு வேதனை ஏற்படும்? என்னுடைய மனமே இந்தப் பாடுபடுகின்றதே?

'ஆகா பசுத்தோல் போர்த்துக் கொண்டு திரியும் வேங்கையைப் போல் இந்த மகாராணியாரைப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு அழைத்து வந்ததும், ஆதரவளித்ததும் இதற்குத்தானா? இது தெரியாமல் ஊர் உலகமெல்லாம் இது இவருடைய ராஜபக்தியைக் குறிப்பதாக எண்ணிப் பெருமை கொண்டாடுகிறதே? பேருக்கு மகாராணியைப் 'பாண்டிமாதேவி' என்று இங்கே கொண்டு வந்து உட்கார்த்தி விட்டு ஈழத் தீவுக்கு ஓடிவிட்டதாக நாட்டிலுள்ளவர்கள் எண்ணிக் கொள்ளும்படி செய்த குமாரபாண்டியனைப் பயமுறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். வடதிசைப் பேரரசர்களுக்கு உதவி செய்து இந்தத் தென்பாண்டி நாட்டையும் அவர்களிடம் பறித்துக் கொடுத்து விட்டு அவர்கள் தயவால் தாமே இந்நாட்டுக்கு மன்னராகி விடலாம் என்று இவர் கனவு காண்கிறாரோ?'

'இல்லையானால் இவர் செயல்களுக்கு என்னதான் பொருள்? இவர் தான் மர்மமாக இருக்கிறார் என்றால் இவரிடம் வருகிற ஆட்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். நம்மோடு படகில் வந்தானே, அந்தத் துறவி, அந்த மனிதன் வாய்திறந்து பேசிவிடாதபடி அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது கூட மகாமண்டலேசுவரரின் சாகஸம்தான். எனக்கு உண்டாகும் பிரமையின்படி அவன் குமாரபாண்டியனாக இல்லாத பட்சத்தில் அந்தத் துறவி யாராவது ஒற்றனோ, வடதிசை மூவரசரால் இவருக்கு தூதனுப்பப்பட்ட கபட சந்நியாசியோ? அவன் எவ்வளவு அழுத்தமான ஆள்! சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுத்தானே ஒழிய ஒரு வார்த்தையாவது பேசினானா? உண்மையில் அவன் யாரோ முக்கியமான ஆளாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னிகைப் பருவத்துப் பெண்ணான தம் புதல்வியிடம் அவ்வளவு நெருங்கிப் பழக அனுமதிப்பாரா! அடடே! அவன் கூட இந்த வசந்த மண்டபத்தில்தானே தங்கப் போவதாகச் சொன்னார்? இங்கே அவன் எப்பகுதியில் தங்கியிருக்கிறானோ தெரியவில்லையே? பார்க்கலாம்' என்று வெகுநேரமாக அந்தப் பாழுங் கோவில் வாசலில் நின்று இவ்வளவு சிந்தித்த தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தின் உட்பகுதி நோக்கி விரைந்து நடந்தான்.

அவன் மனத்தில் புதிய தெம்பும், எல்லா உண்மைகளையும் உடைத்துத் தெரிந்து கொண்டுவிடும் ஆத்திரமும் உண்டாகியிருந்தன. மலைச்சிகரம் போல் பெருமிதமாக யாரைப் பற்றி எண்ணி வந்தானோ அந்த இடையாற்றுமங்கலம் நம்பி இப்போது அவனுக்கு ஒரு குரூரமான சூழ்ச்சியோடு கூடிய சுயநலவாதியாகத் தோன்றினார். எத்தனையோ ஆண்டுகளாக எண்ணி வந்த மதிப்பான எண்ணத்தைச் சில நாழிகை நேரத்துச் சம்பவங்கள் மிகவும் எளிதாக மாற்றி வைத்து விட்டன.

சிற்பங்களும் ஓவியங்களும் செய்குன்றங்களும் பூங்கொடிப் பந்தல்களும் நிறைந்த அழகான வசந்த மண்டபம் இரவின் நிலா ஒளியில் மயன் சமைத்த வித்தியாதர உலகத்து மணி மண்டபம் போலக் காட்சியளித்தது. அதற்குள் நுழைந்த வல்லாளதேவன் நடு மையத்தில் இருந்த அலங்காரக் கிருகத்துக்குள்ளேயிருந்து தீப ஒளி தெரிவதைக் கவனித்தான். தூபப் புகையின் நறுமணமும் காற்றில் கலந்து வந்தது. அவன் மெதுவாக நடந்து சென்று அலங்காரக் கிருகத்தில் பலகணி வழியே உள்ளே எட்டிப் பார்த்தான்.

பொன் தகடுகள் பதிக்கப்பெற்று ஒளி நிறைந்த முத்துச் சர விதானமும் பட்டு மெத்தையுமாக விளங்கிய சப்ரமஞ்சக் கட்டில் ஒன்றில் அந்த இளம் துறவி நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். தலைப்பக்கத்தில் வைரக்கற்கள் இழைத்த பிடியோடு கூடிய கவரி, ஆலவட்டம், தண்ணீர்க்குடம் முதலியன இருந்தன.

'சந்நியாசிக்கு இவ்வளவு சுகம் கேட்கிறதா?' என்று எண்ணிய தளபதி வல்லாளதேவனின் மனத்துக்கு அந்தத் துறவியைப் பற்றிப் பூரணமாக எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

16. கூற்றத் தலைவர் கூட்டம்

இருட்டில் திடீரென்று பின்புறமிருந்து யாரோ தன் கையை இறுக்கிப் பிடித்ததைக் கண்டு மகாராணி பயந்து கூச்சலிட்டு விடுவதற்கிருந்தாள். "மகாராணி! நான் தான் பகவதி!" என்று பகவதி மெல்லக் கூறியதைக் கேட்ட பின்பே வானவன்மாதேவியின் அதிர்ச்சி நீங்கியது. தலைவிரி கோலமாக அழுது கொண்டு நீராழி மண்டபத்துக்கருகே இருந்த பாழுங்கிணற்று விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த வானவன்மாதேவி சற்றும் எதிர்பாராத நிலையில் பகவதியை அங்கே கண்டதும் சிறிது நாணமடைந்து விட்டாள்.

"பெண்ணே! நீ எப்போது இங்கே வந்தாய்? நான் எழுந்திருந்து வந்தது உனக்கு எப்படித் தெரியும்? நீதான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாயே?" - மகாராணியின் குரலில் வெகு நேரம் அழுது கொண்டிருந்ததைக் காட்டும் கரகரப்பு இருந்தது.

"தேவி! இன்றறக்கு உங்கள் மனநிலை சரியில்லை. இப்படி ஏதாவது செய்ய முற்படுவீர்கள் என்று எதிர்பார்த்தே உறங்காமல் இருந்தேன். என்னையும் மீறிக் கண்கள் சிறிது அயர்ந்து விட்டேன். நான் விழித்துக் கொண்ட போது உங்களைப் படுக்கையில் காணவில்லை. எழுந்திருந்து ஓடி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீங்கள் பெரிய அநியாயத்தைச் செய்வதற்கு இருந்தீர்கள். இப்படிச் செய்யலாமா தாயே? இந்தத் தென்பாண்டி நாட்டு மக்கள் மாமன்னரான பராந்தகச் சக்கரவத்தியை இழந்து விட்டார்கள். குமார பாண்டியர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. மக்களெல்லாம் கைகூப்பி வணங்கத்தக்க தென்பாண்டி மாதேவியாக கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறீர்கள். தாங்களும் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த மாதிரிப் போக முயற்சி செய்தால் நாங்கள் யாரைத் தாயே கைகூப்பி வணங்கிப் பெருமைப்படுவோம்" என்று உருக்கமாகப் பேசினாள் பகவதி.

"குழந்தாய்! சாகத் துணிந்து விட்டவளுக்குச் சமுத்திரத்தின் ஆழத்தைப் பற்றி என்ன கவலை. மனத்தில் அளவற்ற வெறுப்பு ஏற்பட்டு விட்டால் எதைச் செய்யவும் துணிவு வந்து விடுகிறது. இதோ இன்னும் சில நொடிப் போது நீ இங்கே வராமலிருந்தால் என்னுடைய துன்ப உடல் கூடு நாளை இந்தப் பாழுங்கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் எவற்றை வேண்டுமானாலும் இவ்வுலகில் நம் விருப்பப்படியே செய்து கொண்டு போவதற்கு இடமில்லை. 'இறைவன் சித்தம்' என்று ஒன்றிருக்கிறது. சாவதோ, பிழைப்பதோ, அந்தச் சித்தப்படிதான் நடக்கிறது. இதோ என் சொந்த அநுபவத்தைத்தான் பாரேன்! இன்று மாலையிலிருந்து நான் படும் கவலைகளுக்கு ஒரு முடிவும் காண முடியாமல் இந்த முடிவுக்கு வந்தேன். நீ பின் தொடர்ந்து வந்து இதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் செய்துவிட்டாய்."

"எவ்வளவு புண்ணிய பலன் இது? நான் மட்டும் விழித்துக் கொண்டு தேடிப் பின் தொடர்ந்து வந்திருக்கவில்லையானால் நாளைக் காலை இந்த நாடு முழுவதுமே கதிகலங்கிப் போய் அலறிப் பதைபதைக்கும் படியான காட்சியையல்லவா காண நேர்ந்திருக்கும்?"

"உனக்குப் புண்ணியமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் இது பாவக் கணக்குத்தான். தண்ணீர் தேங்கத் தேங்க அழுகி நாறுவதைப் போல் இந்த உலகத்தில் வாழும் நாட்கள் பெருகப் பெருகப் பாவச் சுமையை அதிகமாகக் கட்டிக் கொள்கிறோம்."

"தேவி! தாங்கள் அறியாத ஞான நூல்களையும் கருத்துக்களையும் நானா உங்களுக்குச் சொல்லப் போகிறேன்? 'இந்த உலகில் பிறருக்குப் பயன்படுமாறு வாழ்வதனால் பாவமோ துன்பமோ பெருகுமானால் அத்தகைய துன்பத்தை விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்ள வேண்டும்' என்று நம்முடைய திருவள்ளுவப் பெருமான் கூறியருளிய கருத்து தங்களுக்குத் தெரியாததல்லவே?"

"ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து."

என்ற குறளின் கருத்தால் மகாராணியைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போக முயன்றாள் பகவதி! சிறிது நேரத்துத் தர்க்க விவாதங்களுக்குப் பின், "வா, குழந்தாய்! சரியானபடி மடக்கிவிட்டாய் நீ. போகலாம் வா" என்று பகவதியின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குத் திரும்பினார் மகாராணி வானவன்மாதேவி.

அரண்மனை நிகழ்ச்சியை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒரு நாள் மாலைப் பொழுதுக்குப் பின் வந்த இரவில் வேறோர் பகுதியிலே நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் கவனிப்போம்.

யாத்திரீகர்களை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியிலிருந்து திரும்பிய அண்டராதித்த வைணவன் முன்சிறைக்குத் திரும்பும் போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அவர்களெல்லோரும் சத்திரத்து வாசலை அடைந்த போது அங்கே மடைப்பள்ளியில் வேலை செய்யும் பணிப் பெண்கள் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அவ்விருவர் முகத்திலும் கவலையும், பரபரப்பும் தோன்றின.

"பெண்களே! என்ன நடந்தது? ஏன் இப்படிக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறீர்கள்? கோதை எங்கே? அதற்குள் தூங்கிவிட்டாளா? எனக்குத் தெரியுமே, அவள் சோம்பேறித்தனம்!" என்று தன் வழக்கப்படி வேடிக்கையாகப் பேச்சை ஆரம்பித்த அண்டராதித்த வைணவன் அந்தப் பெண்களின் முகம் போன போக்ககப் பார்த்துத் திடுக்கிட்டான். ஏதோ நடக்கத் தகாதது நடந்திருக்கிறதென்று அவன் மனதில் பட்டுவிட்டது.

"ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்ன நடந்தது? சொல்லுங்களேன். வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது?" என்று இரைந்தான். அவனோடு நிற்கும் யாத்திரீகர்களின் கூட்டத்தைப் பார்த்து அந்தப் பணிப்பெண்கள் சிறிது தயக்கமடைந்தனர்.

அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்ட அண்டராதித்தன் வாயிற் கதவு முழுவதையும் நன்றாகத் திறந்துவிட்டு, "நீங்கள் உள்ளே செல்லுங்கள். நான் இதோ இவர்களிடம் என்னவென்று விவரம் கேட்டுக் கொண்டு வருகிறேன்." அருகில் இருந்தவர்களிடம் கூறி அவர்களை உள்ளே அனுப்பினான்.

அந்தப் பணிப்பெண்கள் அவன் பக்கத்தில் வந்து நெருங்கி நின்று கொண்டு பயத்தால் ஒடுங்கிப் போன குரலில், "ஐயா! திடீரென்று அம்மாவைக் காணவில்லை. இருட்டி இரண்டு நாழிகை இருக்கும். தீபங்களை ஏற்றிவிட்டு இங்கே சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து கொண்டு ஓலையில் படித்தரக் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து நாங்கள் வந்து பார்த்த போது அம்மாவைக் காணவில்லை. இங்கிருந்த ஓலை எழுத்தாணி ஆகியவற்றையும் காணோம். தீபம் அணைக்கப்பட்டு இருளடைந்திருந்தது. மறுபடியும் தீபத்தை ஏற்றிக் கொண்டு வந்து இங்கே பார்த்த போது இந்த உடைந்த வளையல் சில்லுகள் தான் கிடந்தன" என்று அவனிடம் அவற்றைக் காட்டினர் பணிப்பெண்கள்.

அவன் திகைத்தான்! துணுக்குற்றான். கோதை காணாமற் போய் விட்டாள் என்ற போது அவன் மனத்தில் பலவிதமான ஐயப்பாடுகள் உண்டாயின.

அண்டராதித்தன் உணர்ச்சிமயமானவன். இம்மாதிரி சமயங்களில் நிதானமாகச் சிந்தித்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியாது. 'தம்பி நாராயணன் சேந்தனைப் போய்ச் சந்தித்தால் அவன் ஏதாவது உருப்படியான வழியைக் கூறுவான்; உதவியும் செய்வான். தம்பியைத் தவிர வேறு யாரிடமும் இந்தச் செய்தியைச் சொல்லி உதவி கேட்கப் போவதே வெட்கக் கேடு' - என்று நினைத்தான்.

"பெண்களே, இந்தச் செய்தி உங்களோடு இருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். யாராவது கேட்டால் கோதையை அழைத்துக் கொண்டு நான் அவசர காரியமாக இடையாற்று மங்கலம் போயிருக்கிறேனென்றும், திரும்பி வருவதற்குச் சில நாட்கள் ஆகுமென்றும் சொல்லுங்கள்! இப்போது நான் அவளைத் தேடிக் கொண்டு போகிறேன். சத்திரத்துக் காரியங்களை ஒன்றும் குறைவில்லாமல் நீங்கள் தான் இன்னும் சில நாட்களுக்குக் கவனித்துக் கொள்ள வேண்டும்."

"நீங்கள் சாப்பிடவில்லையே! சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்று பணிப்பெண்கள் கூறினர்.

"இல்லை. யாத்திரீகர்களைக் கவனியுங்கள். நான் புறப்படுகிறேன்" என்று சத்திரத்திற்குள்ளே காலை வைக்காமல் அப்படியே திரும்பி நடந்தான் அண்டராதித்த வைணவன். அவன் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது. என்ன செய்யலாம்? உலகத்தில் எந்தப் பொருள் காணாமற் போனால் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குக் கூட வெட்கப் பட வேண்டுமோ, அந்தப் பொருளைக் காணவில்லை யென்றால் மன வேதனையை என்னவென்று சொல்ல முடியும்! ஏற்கெனவே நடந்து நடந்து ஓய்ந்து போயிருந்த அவன் கால்கள் அந்தக் களைப்பையும் மறந்து இடையாற்று மங்கலத்திற்குச் செல்லும் கிளை வழியில் வேகமாக நடந்தன. சுசீந்திரம் வரையில் வழி ஒரே சாலையாகச் சென்று பாதிரித் தோட்டத்துக்குத் தெற்கே விழிஞம், குமரி, இடையாற்று மங்கலம் என்று மூன்று இடங்களுக்கும் தனித்தனியே பிரிகிறது.

ஜனசஞ்சாரமற்ற, ஓசை ஒலிகள் அடங்கிப் போன அந்த நள்ளிரவில் தன்னந்தனியாக மனத்தில் கவலைகளையும், குதிகாலில் களைப்பையும் சுமந்து கொண்டு நாராயணன் சேந்தனைக் கண்டு ஒரு வழி செய்யலாம் என்ற ஒரே நம்பிக்கையோடு அண்டராதித்தன் நடந்து கொண்டிருந்தான்.

பாதிரித் தோட்டத்தை நெருங்கிய போது சாலையில் அவன் மேலே நடந்து செல்ல முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது. யாரோ ஓர் ஆள் அசுர வேகத்தில் குதிரையை விரட்டிக் கொண்டு வந்தான். குதிரை பாய்ந்தோடிச் சென்ற வேகத்தில் அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவனின் தோற்றத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அடுத்து அந்தக் குதிரைக்குப் பின்னால் தலைதெறித்துப் போகிறாற் போன்ற வேகத்தில் இரண்டு மூன்று ஆட்கள் துரத்திக் கொண்டு ஓடுவதையும் அவன் பார்த்தான். சாலையோரத்தில் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டு அவர்கள் செல்கிற வரை தாமதித்தான் அண்டராதித்த வைணவன்.

சாலையில் ஏற்பட்ட புழுதி அடங்குவதற்காகக் கண்களை மூடிக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்றவன், 'சரி! யார் குதிரையில் போனால் என்ன? எனக்கு என்ன வந்தது?' என்று நினைத்தவனாய் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு மேலே நடப்பதற்காக அடி எடுத்து வைத்த போது சாலையோரத்து மரத்தடியில் யாரோ முனகுவது போல் தீனக்குரலில் ஒலி எழுந்தது.

"யார் அங்கே?" என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே மரத்தடிக்குத் திரும்பிச் சென்றான் அண்டராதித்தன். அவன் உடல் நடுங்கியது! மனத்தில் பயமும் பதற்றமும் ஏற்பட்டன. பக்கத்தில் சென்ற போது வாயில் துணியை அடைத்து யாரோ ஓர் ஆளை அடி மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்திருப்பது போல் தெரிந்தது. இன்னும் நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்ததில் அப்படிக் கட்டி வைக்கப்பட்டிருந்தது ஒரு பெண்பிள்ளை என்று அறிந்தான். மரக்கிளைகளின் அடர்த்தியாலும், இலைகளின் செறிவாலும் அந்த இடத்தில் நிலா ஒளி படரவில்லை.

'என்ன அக்கிரமம் பெண்பிள்ளையை மரத்தில் கட்டிப் போட்டுத் துன்புறுத்திக் கொள்ளையடிக்கிற அளவுக்கு இந்த நாட்டில் கொள்ளைத் தொழில் கேவலமான முறையில் வளர்ந்து விட்டதா?' என்று எண்ணிக் கொண்டே பரபரப்படைந்து அந்தப் பெண்ணை அவிழ்த்து அவளுடைய மென்மையான உடலைத் தன் கைகளால் தாங்கிக் கொண்டு வந்து வெளிச்சத்தில் வைத்தான். நிலா ஒளியில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அவன் வாயிலிருந்து, "ஆ! கோதை! நீயா?" என்ற அலறல் கிளம்பிப் பாதிரித் தோட்டத்துப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது. ஆம்! அவள் அவனுடைய மனைவி, காணாமற் போன கோதையேதான்!

அண்டராதித்தன் பதறிப் போய் அவளுடைய வாயை மூடிக் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்த்து எடுத்தான். தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மயக்கத்தைப் போக்கினான். கோதைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்ததுடன் தன் பக்கத்தில் கணவனைப் பார்த்த போது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. "கோதை! என்ன நடந்தது? எப்படி இங்கு வந்தாய்? யார் உன்னை இந்த மரத்தில் கட்டிப் போட்டார்கள்?" அண்டராதித்தன் கொதிப்படைந்த உள்ளத்துடன் இந்தக் கேள்வியை அவளிடம் கேட்டான். அவள் கண்களில் நீர் துளிர்த்தது. தான் சத்திரத்துக் குறட்டில் கணக்கெழுதிக் கொண்டிருந்த போது நடந்தது மட்டும் தான் அவளுக்கே தெளிவாக நினைவில் இருந்தது. அதைக் கணவனிடம் கூறினாள்.

"அப்படியானால் உன்னிடமிருந்து அவர்கள் ஆபரணங்களைத் திருடவில்லை. வேறு எந்த விதத்திலும் உன்னைத் துன்புறுத்தவில்லை. உன் கையிலிருந்த ஓலையையும் எழுத்தாணியையும் மட்டும் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று தானே சொல்லுகிறாய்?"

"ஆமாம்! அப்போது நான் கூச்சலிட முயன்றேன். அவர்கள் என் வாயில் துணியைத் திணித்துத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். நான் மூர்ச்சையடைந்து விட்டதால் அதற்குப் பின் நடந்ததொன்றும் தெரியாது. இப்போது தான் தெளிவடைந்து இங்கே உங்களை என் கண் முன்னால் காண்கிறேன்" என்றாள் கோதை.

"அப்படியானால் அந்த ஆட்கள் உன்னை அநாவசியமாக இவ்வளவு தூரம் தூக்கி வந்து இந்த மரத்தில் ஏன் கட்டிப் போட்டிருந்தார்கள்?"

"அதுதான் எனக்கும் விளங்கவில்லை! ஓலைகளையும், எழுத்தாணிகளையும் திருடுவதற்காகக் கூடச் சில ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் வேறொரு சந்தேகமும் உண்டாகிறது!" என்று கோதை சொல்லவும், "என்ன சந்தேகம்? சொல்லேன்" என்றான் அண்டராதித்தன்.

"விளக்கை வாயால் ஊதி அணைத்து விட்டார்கள். அதனால் அந்தத் தடியர்களை இருட்டில் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அன்றொரு நாள் இரவு சத்திரத்துக் கதவை அடைக்கிற நேரத்துக்கு வந்து வம்பு செய்தார்களே, அவர்களாக இருக்கலாமோ?"

"இருந்தாலும் இருக்கும். நீ செய்ததும் வம்புதானே? கதவை அடைத்து, 'இடங்கொடுக்க மாட்டோம்' என்று சொன்னது சரி. அதோடு போகாமல் மேலே நின்று கொண்டு சாணத்தை வேறு கரைத்துக் கொட்டினாய். எல்லாம் உன்னால் வருகிற வினைதான். உன் துடுக்குத் தனத்தால் எனக்கு இல்லாத வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வைக்கிறாய்."

"சரி! நீங்கள் எப்படி இவ்வளவு கணக்காக இந்த இடத்துக்குத் தேடி வந்தீர்கள்?" என்று கேட்டாள் கோதை. நடந்ததையெல்லாம் அவளுக்கு விவரித்துக் கூறினான்.

"எப்படியானால் என்ன? எப்படியோ என்னைக் கண்டு பிடித்து விட்டீர்கள். உங்கள் தம்பியின் ஆலோசனையும், உதவியும் இல்லாமலே நீங்கள் அடைந்த முதல் வெற்றியாகட்டும் இது. வாருங்கள், சத்திரத்துக்குப் போகலாம்! இந்த இரவில் இப்படி நடுக்காட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பானேன்?" என்று அவனையும் கூப்பிட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் கோதை.

மறுநாள் காலை புறத்தாய நாட்டுக் கோட்டையில் நாஞ்சில் நாட்டின் கூற்றத் தலைவர்கள் வந்து கூடிவிட்டனர். தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர், பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால மாறினார், அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள் முதலிய நாஞ்சில் நாட்டுப் பெருமக்களில் முதன்மையாளர்களெல்லாம் மகாராணி வானவன்மாதேவியாரின் அவசரக் கட்டளையை மதித்து ஓடோடியும் வந்து கூடியிருந்த்னர்.

அவ்வளவு அவசரமாக மகாசபையைக் கூட்டுவதின் நோக்கம் என்னவாக இருக்குமென்று புரிந்து கொள்ளூம் ஆவல் நிரம்பிய மனத்தோடு காத்திருந்தனர் அவர்கள்.

ஆனால் மகாசபைக் கூட்டம் எந்த இருவர் இல்லாவிடின் நிச்சயமாக நடக்க முடியாமல் போய்விடுமோ, அந்த இருவரும் அதுவரையில் வந்து சேரவே இல்லை. முடிந்தால் முதல் நாள் இரவே வந்து விடுவதாகச் சொல்லி விட்டுப் போயிருந்த தளபதி வல்லாளதேவன் மறுநாள் காலை விடிந்து பத்து நாழிகைக்கு மேலாகியும் இடையாற்று மங்கலத்திலிருந்து திரும்பி வரவில்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியும் வரவில்லை. கூற்றத் தலைவர்களும், மகாராணியும், பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் முதலிட்டோரும் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்

தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் இடையாற்றுமங்கலம் மாளிகையில் மறுநாள் பொழுது புலர்ந்த போது இந்தக் கதையைப் படிக்கின்ற நேயர்கள் ஏற்கனவே எதிர்பார்த்த சில நிகழ்ச்சிகளும், முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத சில நிகழ்ச்சிகளும் நடந்தன.

பாதாள மண்டபத்துச் சுரங்கத்திலிருந்து வெளியேறிய தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தில் பிரவேசித்ததும், அலங்காரக் கிருகத்தில் பொன்னாலும், மணியாலும் இழைத்த சப்ரமஞ்சக் கட்டிலில் உடலுக்குச் சுகம் தேடுவதைக் கொடுந்தவறாக எண்ண வேண்டிய துறவி கொண்டாட்டத்தோடு படுத்துத் தூங்குவதைக் கண்டதையும், வியந்து நினைத்ததையும், சென்ற பகுதிகளில் கண்டோம்.

அதன் பின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்று முன்பு படுத்திருந்த விருந்து மாளிகைக் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டான். உறக்கம் கண்களைச் செருக வைக்கும் நேரத்தில் யாரோ விளக்கும் கையுமாக உள்ளே நுழையவே ஒளி கண்களில் உறுத்தி விழித்துக் கொண்டான்.

விழித்துக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பார்த்த போது, நாராயணன் சேந்தன் விளக்கோடு எதிரே நின்று கொண்டிருந்தான். "யார்? சேந்தனா? வா, அப்பா! ஏது இந்த நேரத்துக்கு இப்படி மறுபடியும் வந்தாய்? தளபதி நன்றாகத் தூங்குகிறாரா, இல்லையா என்று பார்த்து விட்டுப் போக வந்தாயோ? அல்லது மகாமண்டலேசுவரரே போய்ப் பார்த்துவிட்டு வா என்று அனுப்பினரா?" என்று சிரித்துக் கொண்டே சற்றுக் குத்தலாகக் கேட்டான் வீரத் தளபதி வல்லாளதேவன்.

நாராயணன் சேந்தனும் பதிலுக்கு ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டே, "தளபதி! உங்கள் கேள்வி விசித்திரமாக அல்லவா இருக்கிறது? 'தூங்குகிறவர்களைத் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா?' என்று பரிசோதனை செய்ய இங்கிருப்பவர்கள் இன்னும் பித்தர்களாகி விடவில்லை. நானும் இந்த மாளிகையில் தான் படுத்துறங்குவது வழக்கம். இப்போதுதான் படுக்க வந்திருக்கிறேன். நீங்கள் தூங்குகிறீர்களா, தூங்கவில்லையா என்பதைப் பார்ப்பதற்காக வரவில்லை" என்று குத்தலாகவே மறுமொழி கூறினான்.

"எங்கே அப்பா! இந்த இடையாற்று மங்கலம் மாளிகையில் சுலபமாக அப்படி எதையும் நம்பி விடவா முடிகிறது? இங்கே தூங்கி விட்டதாக நினைக்கப் படுகிறவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில் தூங்காமலோ அல்லது தூங்க முடியாமலோ செய்ய வேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்களெல்லாம் மகாமண்டலேசுவரரின் நிர்வாகத்தில் இருக்கலாம்?" வேண்டுமென்றே தான் மறுபடியும் நாராயணன் சேந்தனின் வாயைக் கிளறினான் தளபதி. ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் நாராயணன் சேந்தன் விசேடமான பதில் எதையும் சொல்லவில்லை.

"தளபதி! நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது. நான் படுத்துத் தூங்கப் போகிறேன்" என்று சொல்லி மழுப்பிவிட்டுத் தீபத்தின் ஒளியைக் குறைத்து ஒரு மூலையில் வைத்த பின் எதிர்ப்புறமிருந்த மற்றோர் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு விட்டான் அவன். உடனே தூங்கியும் விட்டான். சில விநாடிகளுக்குள் விருந்து மாளிகையின் பலமான சுவர்கள் பிளந்து விழுந்து விடும் போல் 'கர்புர்' என்று பிரமாதமான குறட்டை ஒலி நாராயணன் சேந்தனின் கட்டிலிலிருந்து கிளம்பியது.

வல்லாளதேவன் அந்த ஓசையைச் சகித்துக் கொள்வதற்காக இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டான். அப்படியும் அந்த ஒலி செவிக்குள் புகுந்து துளைத்தது. அப்படியே எழுந்திருந்து போய்க் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் அந்தக் குட்டைத் தடியனின் உச்சிக் குடுமியை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் மொத்துமொத்தென்று மொத்தி விடலாமா என்று தோன்றியது அவனுக்கு. வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காகத் தனக்குக் காவலைப் போலத் தன்னருகே படுத்துக் கொள்ளச் சொல்லி மகாமண்டலேசுவரர் அவனை அங்கே அனுப்பியிருக்கலாமென்று தளபதி வல்லாளதேவனின் மனத்தில் ஒரு சந்தேக எண்ணம் உறைக்க ஆரம்பித்தது.

'துறவிக்கு மகாமண்டலேசுவரர் தம்முடைய மாளிகையிலேயே எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார் போலிருக்கிறது? இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? கிளியைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைத்து வைத்துத் தம் சொந்த இன்பத்துக்காக அதற்குப் பாலும் பழமும் கொடுக்கின்ற மனிதர்களைப் போல ஏதோ ஒரு பெரிய சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் துறவியை இடையாற்று மங்கலம் தீவுக்குள் உலகத்துக்குத் தெரியாமல் இவர் ஒளித்து வைத்திருக்கிறார்.

'மகா மேதையாகவும் குல தெய்வமாகவும் இவரை எண்ணிக் கொண்டிருக்கும் மகாராணியிடம் இந்த இரகசியங்களைக் கூறினால் நம்பக்கூடத் தோன்றாது. காலம் வரும். அப்போது ஆதாரப் பூர்வமான சான்றுகளோடு எல்லா உண்மைகளையும் விவரமாக வெளிப்படுத்துகிறேன்.'

நாராயணன் சேந்தனின் குறட்டை ஒலியால் தூக்கத்தை இழந்த வல்லாளதேவன் மேற்கண்டவாறு பலவகைச் சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்.

'அட என்னதான் ஆசை இருக்கட்டுமே! மனிதருக்கு மானம், வெட்கம் ஆகிய பண்புகள் கூடவா ஆசை வந்தால் இல்லாமல் போய்விடும்? யாரோ ஒரு சாமியாரை மயக்குவதற்கு சொந்த மகளை அவனோடு சிரித்துப் பேசுமாறு செய்கிறார். பிறரை மயக்கிக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் மகளின் சிரிப்பும், பேச்சும் தான் இவருக்குச் சரியான சாதனம் போலும்! இவ்வளவு படித்தவருக்குப் பெண்களுக்கென்று இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடு, பண்பு, ஒழுக்கம் எல்லாம் மறந்தா போய்விட்டன? ஐயோ இந்த மனிதருடைய அந்தரங்க வாழ்க்கையை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருக்கிறது. இவ்வளவும் ஆசை படுத்துகிற பாடு அல்லவா?'

இப்படியே இன்னும் என்னென்னவோ சிந்தித்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த தளபதி வல்லாளதேவன் பொழுது விடிவதற்குள் ஏதோ ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தவனாகச் சட்டென்று எழுந்திருந்தான்.

எவ்வளவு முக்கியமான காரியங்கள் குறுக்கிட்டாலும் தம்முடைய தினசரி வழக்கங்களைக் குன்றாமல் கடைப்பிடிப்பவர் இடையாற்று மங்கலம் நம்பி. புலரிப் பொழுதாகிய வைகறையின் பனிக்காற்று நீங்குவதற்கு முன்பே எழுந்து போய்ப் பறளியாற்றில் நீராடி விடுவார். ஈர ஆடைகளைக் களையாமல் நந்தவனத்துக்குச் சென்று தம் கையாலேயே மலர்களைக் கொய்து கொண்டு வருவார். கிழக்கே கதிரவனின் செங்கிரணங்கள் பொன் வண்ணக்கோலமிடத் தொடங்கும் நேரத்தில் தான் அவர் பூஜையை முடித்துக் கொண்டு மாளிகையிலுள்ள சிவன் கோவிலிலிருந்து வெளிவருவார். அப்போது அவரைப் பார்த்தால் கோவில் வாயிலில் ஒளி மயமான மற்றொரு சூரியன் உதித்து நடந்து வருவது போலிருக்கும். சிவந்த கம்பீரமான நெடிதுயர்ந்த மேனியில் வெள்ளிக் கம்பிகள் பதித்தாற் போலத் திருநீற்றுக் கீற்றுகளும் வெண்ணிற ஆடையும் விளங்க அவிழ்ந்து முடிந்த ஈரத் தலையோடு அவர் நடந்து வருவது அற்புதமான காட்சியாக இருக்கும். எவ்வளவு தலைபோகிற காரியமானாலும் இந்த அன்றாட அனுட்டானங்களில் குறைவே ஏற்படாது, மாறுதலும் நிகழாது.

அன்றைக்கு மகாசபைக் கூட்டத்துக்காகப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போகவேண்டுமென்ற நினைவு இருந்ததனால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்து விட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் தம்முடைய நித்திய கர்மானுட்டானங்களை முடித்துக் கொண்டு வெளிவந்த போது, நாராயணன் சேந்தன் விருந்து மண்டபத்திலிருந்து பரபரப்பாக ஓடி வந்தான்.

"என்ன சேந்தா? இப்போதுதான் திருப்பள்ளி எழுச்சி ஆயிற்றா! தளபதி வல்லாளதேவன் இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறான்?" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் மகாமண்டலேசுவரர்.

"சுவாமி! நேற்றிரவு நான் விருந்து மண்டபத்துக்குப் படுத்துக் கொள்ளச் சென்ற போது கூடத் தளபதி அங்கே தான் உறங்கிக் கொண்டிருந்தார். நான் சென்றதும் விழித்துக் கொண்டு சிறிது நேரம் என்னோடு பேசிக் கொண்டும் இருந்தார். இப்போது காலையில் எழுந்திருந்து பார்த்தால் ஆளைக் காணவில்லை" என்று மூச்சுவிடாமல் பதற்றத்தோடு தான் சொல்ல வந்த செய்தியைக் கூறி முடித்தான் நாராயணன் சேந்தன்.

இடையாற்று மங்கலம் நம்பி அதைக் கேட்டுச் சிறிதும் திகைப்படையவில்லை. "ஏன் இவ்வளவு பதறுகிறாய், சேந்தா? பக்கத்தில் எங்காவது எழுந்திருந்து போயிருப்பான். சிறிது நேரத்தில் தானாக வந்து விடுவான். இன்றைக்கு மகாசபை கூடுகிறது. கோட்டைக்குப் போக வேண்டும். இருவரும் இங்கிருந்து புறப்பட்டுச் சேர்ந்தே போகலாம் என்று அவனிடம் நேற்றிரவே நான் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்கும் போது அவன் என்னிடம் சொல்லாமல் போவானா?" என்றார்.

"இல்லை, சுவாமீ! அநேகமாக இடையாற்று மங்கலம் தீவு முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். கால் கடுக்கச் சுற்றியாகி விட்டது. காலையில் எழுந்ததிலிருந்து இதே வேலை தான். ஆனால் அந்த மனிதரைக் காணவில்லை. மாளிகைக்குள் இருந்தால் தான் உண்டு. ஆனால் இங்கும் அவர் இல்லையென்று தெரிகின்றது."

"சேந்தா! தளபதி எப்படிப் போயிருக்க முடியும்? என்னிடம் அவ்வளவு உறுதியாகச் சொல்லியிருந்தவன் போவானா? எதற்கும் படகோட்டி அம்பலவன் வேளானுடைய குடிசைக்குப் போய்க் காலையில் யாருக்காவது அவன் படகு செலுத்திக் கொண்டு போனானா என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு வா. பறளியாற்றில் தண்ணி அதிகமாகப் போய்க் கொண்டிருப்பதனால் அம்பலவன் வேளானின் உதவியில்லாமல் யாரும் அக்கரைக்குச் சென்றிருக்க முடியாது."

நாராயணன் சேந்தன் படகோட்டியைக் கண்டு விசாரித்து வருவதற்காக அவன் குடிசையை நோக்கிப் புறப்பட்டான். அதுவும் மகாமண்டலேசுவரரின் சொற்களைத் தட்டக்கூடாதே என்பதற்காகத்தான். அவன் மனத்தைப் பொறுத்த வரையில் தளபதி வல்லாளதேவன் அப்போது அந்தத் தீவிலேயே இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. தளபதி முதல் நாள் இரவு படுத்துக் கொள்ளச் சென்ற போது தன்னிடம் குத்தலாகக் கேட்ட கேள்விகளை நினைத்துப் பார்த்த போது அவன் எண்ணம் வலுப்பட்டது. ஏதேனும் ஒரு விதத்தில் தளபதி வல்லாளதேவனுக்கு மகாமண்டலேசுவரரிடம் அவநம்பிக்கையோ அதிருப்தியோ ஏற்பட்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாக இப்படித் தனக்கு ஏற்படுகிற சந்தேகங்களை உடனே இடையாற்று மங்கலம் நம்பியிடம் தெரிவித்து விடுவது அவன் வழக்கம். அன்று ஏனோ தளபதியைப் பற்றித் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டுமென்ற எழுச்சியோ ஆர்வமோ அவனுக்கு உண்டாகவில்லை.

படகோட்டி அம்பலவன் வேளானின் குடிசை தோணித்துறைக்கு அருகே பறளியாற்றின் கரையில் அமைந்திருந்தது. எண்ணங்களின் சுமை கனக்கும் மனத்துடன் தன் போக்கில் அம்பலவன் வேளானின் இருப்பிடத்துக்கு நடந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் எதிரே வந்த யார் மேலேயோ 'பட்'டென்று மோதிக் கொள்வதற்கு இருந்தான்.

"ஐயா! எங்கே இப்படி? அதிகாலை நேரத்தில் கிளம்பி விட்டீர்கள்?" என்று எதிரே வந்த ஆள் விலகி நின்று கேட்ட போது, அது அம்பலவன் வேளான் குரல் தான் என்பதைப் புரிந்து கொண்டு நிமிர்ந்தான் நாராயணன் சேந்தன். "நல்லவேளை! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நீயே வந்துவிட்டாய்! உன்னைத்தான் அப்பா தேடிக் கொண்டு புறப்பட்டேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் விசாரிக்க வேண்டும்" என்று தணிந்த குரலில் அவனிடம் கூறினான் சேந்தன். அதைக் கேட்டுக் கொண்டே, "ஐயா! இந்த அநியாயத்தைக் கேட்டீர்களா? நான் என்ன செய்வேன்? யாரிடம் போய்ச் சொல்வேன்? நேற்றிரவு துறையில் இழுத்துக் கட்டிவிட்டு வந்த தோணியைக் காலையில் எழுந்திருந்து போய்ப் பார்த்தால் காணவில்லை" என்று பதற்றமும் நடுக்கமும் செறிந்த குரலில் சொன்னான் அம்பலவன் வேளான். வேளான் கூறியதைக் கேட்டுச் சேந்தன் மேலும் வியப்பில் மூழ்கினான்.

"ஐயா! நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி சொல்ல வேண்டும். இன்றைக்கு மகாமண்டலேசுவரரும் தளபதியும் காலையில் அக்கரைக்குப் போய்க் கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்று கூறியிருந்தார்கள். கோட்டையில் இன்று காலை மகாசபைக் கூட்டமாமே? இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் துறைக்கு வந்து 'படகு எங்கே?' என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? ஐயோ இன்றைக்கென்றா இப்படி நடக்க வேண்டும்? எல்லாம் என் தலையெழுத்து" என்று அலுத்துக் கவலைப்பட்டுக் கொண்டான் படகோட்டி அம்பலவன் வேளான்.

"இன்று காலையில், எப்போது போய்ப் பார்த்தாய்?" என்று நாராயணன் சேந்தன் கேட்டான்.

"இப்போதுதான். சிறிது நேரத்துக்கு முன்பு போய்ப் பார்த்தேன். தோணியைக் காணவில்லை என்று தெரிந்ததும் பதறிப் போய் உடனே உங்களைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டேன். நீங்களே எதிரில் வந்து விட்டீர்கள்."

"அது சரி! நேற்றிரவு துறையில் தோணியைக் கட்டிவிட்டு வரும் போது துடுப்புகளையும் அதற்குள்ளேயே போட்டுவிட்டு வந்திருந்தாயோ?"

"ஆமாம், ஐயா! துடுப்புகளை எப்போதும் தோணிக்குள்ளே போட்டு வைத்துவிட்டு வருவதுதான் வழக்கம். அது போலவே நேற்றும் செய்தேன்."

"ஆகா! நான் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது" என்றான் சேந்தன்.

"என்ன நினைத்தீர்கள் ஐயா! படகை யார் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா?" என்ற ஆவல் துடிக்கும் தொனியில் நம்பிக்கையின் சாயை மலர வினவினான் படகோட்டி அம்பலவன் வேளான்.

"அப்பா! அதை இப்போது உன்னிடம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஒரு தினுசாக எனக்குள் தீர்மானித்திருக்கிறேன். படகைக் கொண்டு போனவர்கள் யாராக இருக்கலாம் என்பது பற்றிப் பின்பு ஆராயலாம். வா! முதலில் மகாமண்டலேசுவரரிடம் போய்ப் படகு காணாமற் போன செய்தியைத் தெரிவிப்போம்" என்று கூறி வேளானையும் உடன் அழைத்துக் கொண்டு திரும்பினான் சேந்தன்.

சிவ பூஜை செய்து விட்டு நிர்மலமான மனமும், உடலுமாக மாளிகை வாசலில் வந்து நின்ற இடையாற்றுமங்கலம் நம்பிக்கு நாராயணன் சேந்தன் வந்து கூறிய செய்தியைக் கேட்டு சஞ்சலமும் சிந்தனையும் உண்டாயிற்று. "வல்லாளதேவன் காலை வரை தங்கியிருந்து தன்னோடு உடன் புறப்படுவதாகச் சொல்லியிருந்தும் அம்மாதிரி மோசம் செய்வானா?" என்று சிந்தித்தார். 'ஒரு வேளை அப்படியே அவன் புறப்பட்டுப் போயிருந்தாலும் கோட்டையைத் தவிர வேறெங்கே போயிருக்க முடியும்? போனதை ஒரு குற்றமாகச் சொல்லிவிட முடியாது. போகும் போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கக் கூடாதோ?' என்று சமாதானமும் அடைந்தார். 'தளபதி இல்லாவிட்டால் என்ன? படகுக்குச் சொல்லியிருந்த நேரத்தில் வேளானை வரச் சொல்லி நாராயணன் சேந்தனையும் உடன் அழைத்துக் கொண்டு நாம் தனியே புறப்பட வேண்டியதுதான்' என்று தமக்குள் அவர் ஒரு முடிவுக்கு வந்த போது அம்பலவன் வேளானும், நாராயணன் சேந்தனும் வந்து, 'படகு காணவில்லை' என்ற அந்தச் செய்தியைக் கூறியதால் அவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். வேறு படகுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

18. தென்னவன் ஆபத்துதவிகள்

இன்னவென்று புரியாத எண்ணங்களாலும், அந்த இரவில் இடையாற்றுமங்கலம் மாளிகையில் நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளாலும் தளபதியின் உள்ளம் குழப்பமடைந்திருந்தது. நாராயணன் சேந்தன் ஏற்றிக் கொண்டு வந்து வைத்திருந்த சிறிய அகல் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒளியில் சேந்தனைப் பார்த்தான் தளபதி. சேந்தன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். தளபதிக்கு உறக்கம் வரவில்லை. அங்கு இருப்புக் கொள்ளவும் இல்லை. பயமும், கலவரமும் நிறைந்ததொரு உணர்வு அந்த இருளிலேயே அங்கிருந்து வெளியேறி விடுமாறு அவனைத் தூண்டியது.

விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டுப் பறளியாற்றின் கரையிலுள்ள படகுத் துறையை நோக்கி நடந்தான் அவன். துறைக்கு அருகேயிருந்த குடிசையின் முகப்பில் யாரோ கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைத் தளபதி கண்டான். பக்கத்தில் நெருங்கிச் சென்று பார்த்த போது படுத்திருப்பது படகோட்டி அம்பலவன் வேளான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. தளபதி சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னை அப்போது அந்த நிசி வேளையில் இடையாற்று மங்கலம் தீவிலுள்ள யாருடைய விழிகளும் எந்த இடத்திலிருந்தும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கரையோரத்துப் புன்னை மரத்தில் இழுத்துக் கட்டியிருந்த படகை ஓசைப்படாமல் அவிழ்த்தான். நல்ல வேளையாகத் துடுப்புகளையும் படகிலேயே வைத்து விட்டுப் போயிருந்தான் வேளான். அப்போது பறளியாற்றில் கரை நிமிர ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்துத் தன்னால் படகைச் செலுத்த முடியுமா? - என்று எண்ணித் தயங்கிக் கொண்டிருக்கவில்லை அவன். கேவலம், ஒரு சாதாரணப் படகோட்டியான அம்பலவன் வேளானின் கைகளுக்குள்ள வன்மை, புறத்தாய நாட்டின் மாபெரும் படைத் தலைவனின் கைகளுக்கு இல்லாமலா போய் விடும்? தளபதியின் கைகள் துடுப்பை வலித்தன. படகு அக்கரையை நோக்கி மெல்ல நகர்ந்தது. வெள்ளத்தின் வேகத்தையும், இழுப்பையும் சமாளிப்பது கடினமாகத்தான் இருந்தது. இளமையும், வளமையும், தோற்றமும், ஏற்றமும் உள்ள நூற்றுக்கணக்கான செந்நிறக் குதிரைகள் ஒரே திசையில் கால்கள் போனபடி தறிகெட்டுப் பாய்ந்து வெறி கொண்டு ஓடினால் என்ன வேகம் இருக்குமோ, அந்தப் பயங்கர வேகத்தைத்தான் அப்போதைய பறளியாற்று வெள்ளத்துக்கு உவமை கூற வேண்டும்.

புறப்பட்ட இடத்திலிருந்து நேரே அம்பு பாய்வது போல் அக்கரைக்குப் போக முடியவில்லை. வெள்ளத்தின் போக்கில் இழுபட்டு ஒருபுறமாகச் சாய்ந்து மெதுவாகவே சென்றது படகு. அவர்கள் வரும் போது இருந்ததை விட வெள்ளத்தின் வேகம் இப்போது அதிகரித்திருந்தது. தளபதி வல்லாளதேவன் அக்கரையை அடைந்த போது வெகு நேரமாகிவிட்டது. பொழுது விடிவதற்கு இன்னும் நான்கைந்து நாழிகைகளே இருந்தன. நிலா ஒளி சற்று மங்கியிருந்தது.

அங்கிருந்த மரமொன்றில் படகை இழுத்துக் கட்டிவிட்டுக் கரையோரமாக நடந்து முன்னிரவில் தான் குதிரையை விட்டிருந்த மரத்தடியை அடைந்தான். பின்னிரவு நேரத்தின் குளிர்ந்த காற்றும், கரையோரத்துத் தாழம் புதர்களில் இருக்குமிடம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும் சோர்ந்திருந்த தளபதி வல்லாளதேவனின் உடலுக்கும், மனத்துக்கும் புத்துணர்ச்சி ஊட்டின.

மரத்தடியில் அவன் குதிரை துவண்டு போய்ப் படுத்திருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மரத்தடியில் ஆளரவம் கேட்டுக் கிளைகளைச் சரணடைந்திருந்த பறவைகள் சிறகுகளை அடித்தும், ஒலிகளைக் கிளப்பியும் தங்கள் இருப்பைப் புலப்படுத்தின. தளபதி குதிரையைத் தட்டி எழுப்பினான். குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்று உடலைச் சிலிர்த்தது. ஓசை ஒலியடங்கிய பேரமைதி செறிந்த அந்தப் போதில் பயங்கரமாகப் பறளியாற்றங்கரை எங்கணும் எதிரொலித்தது அந்தக் கனைப்பொலி.

'சூழ்நிலை இருக்கிற விதத்தைப் பார்த்தால் இன்றும் இனி வரும் சில நாட்களிலும், புறத்தாய நாட்டுக் கோட்டையைச் சுற்றி மகாராணியாருக்கு என்னென்ன ஆபத்துகள் காத்திருக்குமோ? என்னைக் காட்டிலும் பொறுப்புள்ள பதவியும், அதிகாரங்களும் மகாமண்டலேசுவரருக்கு இருக்கலாம். ஆனால் பாதுகாப்புக் குறைவினால் மகாராணியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அந்தப் பழியைத் தளபதியின் தலையில் தான் சுமத்துவார்கள். எதற்கும் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.' இவ்வாறு தளபதி நினைத்தான். பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகக் குதிரையில் ஏறிப் புறப்பட்டான். குதிரை கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும்படையின் கோட்டையை நோக்கிச் சென்றது.

சாலையோரத்து மரப்பொந்துகளில் நெருப்புக் கங்குகளைப் போன்ற விழிகளை உருட்டிக் கொண்டு பதுங்கியிருந்த கோட்டான்கள் இடையிடையே எழுப்பிய குரூரமான ஒலிகள் தவிர முற்றிலும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் குதிரைக் குளம்புகளின் ஒலி அளவாக வரிசையொத்துத் தொடர்ந்து ஒலிப்பது என்னவோ போலிருந்தது.

பூ சிறிது சிறிதாக மலர்ந்து இதழ்களின் நறுமணமும், அழகும் பரவுவது போல் ஒளியின் மலர்ச்சியை நோக்கி இருள் தோற்று நைந்து கொண்டிருக்கும் அந்தப் பின்னிரவு நேரத்தில் மண்ணும், விண்ணும், மரங்களும், செடி கொடிகளும் தன்னைச் சுற்றியுள்ள எங்கும் எதுவும் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் சிக்காத ஒரு பேரழகில் தோய்ந்தெழுந்து கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றியது.

தென் பாண்டி நாட்டுப் படைத் தலைவனுக்கு வாள் முனையில் போரிடும் வீரச்சுவை ஒன்று மட்டும் தான் கை வந்த பழக்கம் என்பதில்லை; ஆண்மையும், பருவமும், பொறுப்பும் வந்த பின்பு கற்றுத் தெரிந்து கொண்ட சுவை அது. இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாகத் தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவியிலேயே வல்லாளதேவனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றன. எத்தகைய குழப்பமும் கலவரமும் தன்னையும், தன் பொறுப்பையும் சூழ்ந்திருந்தாலும் சுற்றுப்புறத்தின் அழகில், அந்த அழகு உண்டாக்கும் சிந்தனைகளில் தோயும் வழக்கம் மனப் பண்பால் அவனுக்கு இருந்தது.

தளபதி கோட்டாற்றை அடைந்து படையிருப்பினுள் நுழையும் போது கீழ்த்திசை வெளுத்துவிட்டது. விடிந்ததும் விடியாததுமாகத் திடீரென்று தளபதி கோட்டைக்குள் வரவே அங்கிருந்த பலவகைப் படைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பரபரப்புக்கு உள்ளானார்கள். 'என்னவோ? ஏதோ? படைத் தலைவருடைய திடீர் வருகையின் விளைவு யாதாயிருக்குமோ?' என்று வீரர்கள் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். நால்வகைப் பெரும்படைகளும், ஆயுதச் சாலைகளும், யானைகளும், குதிரைகளும் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கொட்டங்களும் நிறைந்த அப்பெரிய கோட்டையில் மிகச் சில விநாடிகளுக்குள் ஒரு புதிய சுறுசுறுப்புப் பரவிவிட்டது. எதையோ எதிர்பார்த்து ஆவலோடு துடித்து நிற்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தது. தளபதியின் கீழ் உள்ள படை அணிகளின் தலைவர்களெல்லாம் விழிப்பும், தூக்கமும் ஒன்றோடொன்று போரிடும் சோர்ந்த கண்களோடு ஓடோடி வந்து அவனை வரவேற்றனர். அவனது கட்டளையை எதிர்நோக்கிக் கட்டிக் காத்து நின்றனர் அவர்கள்.

தளபதியின் கண்கள் அவர்களுள் யாரோ ஒருவரை மட்டும் குறிப்பிட்டுத் தேடுவது போல் சுழன்றன. ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்த அவன் பார்வை ஆபத்துதவிகளின் படைக்குத் தலைவனான மகர நெடுங்குழைக்காதனின் மேல் ஒரு கணம் நிலைத்தது. அந்தப் பார்வையின் குறிப்பைப் புரிந்து கொண்டு ஓரிரு அடிகள் முன் வைத்து நடந்து வந்து வணங்கினான் மகர நெடுங்குழைக்காதன்.

"குழைக்காதரே! ஆபத்துதவிகள் படையைச் சேர்ந்த வீரர்களெல்லாம் கோட்டைக்குள் தானே இருக்கிறார்கள்?" என்று கேட்டான் தளபதி.

"ஆம்! எல்லோரும் கோட்டைக்குள்ளே இருக்கிறார்கள்?"

"நல்லது! மற்றவர்கள் போகலாம்! குழைக்காதரும் நானும் தனிமையில் சிறிது நேரம் பேச வேண்டும்..."

குழைக்காதனைத் தவிர அங்கு நின்று கொண்டிருந்த மற்றவர்கள் வெளியேறினர். தென்னவன் ஆபத்துதவிகள் என்பார் படைகளுள் ஒரு முக்கியமான பிரிவினர். தென்பாண்டி நாட்டு அரசமரபினரின் உயிருக்குக் கவசம் போன்றவர். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ ஆபத்துதவிகளின் காவல் இருந்து கொண்டிருக்கும். ஆட்சியில் குழப்பம், சூழ்ச்சி, சதி இவற்றில் ஏதாவது ஏற்பட்டாலோ, ஏற்படுவதாகத் தெரிந்தாலோ தளபதி ஆபத்துதவிகளைப் பயன்படுத்தலாம்.

ஆபத்துதவிகளைப் பயன்படுத்த வேண்டிய அத்தகைய நெருக்கடி இப்போது தளபதி வல்லாளதேவனுக்கு ஏற்பட்டிருந்தது. யாரால் எப்போது என்ன ஏற்பட முடியுமென்று அவனால் சிந்திக்கவோ, சொல்லவோ முடியவில்லை. இரவு நடந்தவற்றை நினைத்தால் இடையாற்று மங்கலம் நம்பியின் மேலேயே அவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு ஆறுகளுக்கு நடுவேயுள்ள அந்தச் சின்னஞ்சிறு தீவில் மகாமண்டலேசுவரரின் உள்ளத்திலும், மாளிகையிலும் நிறைந்து கிடந்த சூழ்ச்சிகளை எண்ணியபோது அவன் திகைத்தான். 'ஒரு பெரிய இரவின் சிறிய சில நாழிகைகளுக்குள் இடையாற்று மங்கலத்தில் இவ்வளவு மர்மங்களைப் புரிந்து கொள்ள முடியுமானால் சில நாட்கள் இரவும் பகலும் எந்நேரமும் அங்கேயே முழுமையாகத் தங்கியிருந்தால் இன்னும் எவ்வளவோ தெரிந்து கொள்ள முடியும்?' என்று எண்ணினான் அவன்.

தளபதியின் முகத்தில் தோன்றி மறையும் ஆழ்ந்த சிந்தனைகளின் சாயையைப் பார்த்துக் கொண்டே பயபக்தியோடு எதிரில் நின்று கொண்டிருந்தான் மகர நெடுங்குழைக்காதன்.

"ஓ! உங்களை நிறுத்தி வைத்துக் கொண்டு நான் ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டேன்!"

"பரவாயில்லை! நான் காத்திருப்பேன்" என்று அடக்கமாகக் கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.

"குழைக்காதரே! நேற்று மாலை குமரித் துறையில் மகாராணியார் வழிபாட்டுக்கு வந்திருந்த போது நடந்த நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தென்பாண்டி நாட்டுக்கு இது ஒரு சோதனைக்காலம். நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றிச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறிது காலத்துக்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவின் பலத்தையோ, சிந்தனையின் வன்மையையோ கொண்டு மட்டும் இவற்றைச் சமாளித்து விட முடியாது. இப்போது நான் சொல்வதை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கேட்க வேண்டும். ஆபத்துதவிப் படைகள் இன்னும் சிறிது காலத்துக்குப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மகாராணியாரைச் சுற்றி இருப்பது நல்லது. கூடியவரையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு வெளியில் அதிகம் பரவித் தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மகாராணியாரைச் சுற்றியோ, அல்லது கோட்டைப் பகுதிகளிலோ சந்தேகத்துக்குரிய ஆட்கள் யார் நடமாடினாலும் கண்காணித்து எனக்குத் தகவல் அனுப்பவேண்டும்."

"இப்போதே ஆபத்துதவிகளோடு புறப்படுகிறேன்."

"புறப்படுவது சரி! இன்றைக்கு அங்கே தென்பாண்டி மண்டலக் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக இடையாற்று மங்கலம் நம்பி அங்கு வர இருக்கிறார். அவர் போய்ச் சேருவதற்கு முன்பே நீங்களும் ஆபத்துதவிப் படைகளும் அங்கே போய்ச் சேர்ந்து விட வேண்டும்."

"அப்படியே செய்கிறோம்."

"இடையாற்று மங்கலம் நம்பி இன்று அல்லது நாளை வரை அரண்மனையில் தங்குவார். நீங்கள் முடிந்த மட்டில் அவருடைய பார்வையில் தென்படாமல் இருக்கவே முயலுங்கள்."

"எங்களால் இயன்றவரை அவருடைய கவனத்துக்கு ஆளாகமலே இருக்க முயல்கிறோம்."

"நீங்கள் புறப்படலாம், தாமதம் செய்யாதீர்கள்" - தளபதி வல்லாளதேவன் ஆபத்துதவிகள் படைத்தலைவனான மகர நெடுங்குழைக்காதனுக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

பொழுது விடிந்து நன்றாக வெயில் பரவிவிட்டது. அங்கேயே நீராடிவிட்டுக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கூற்றத் தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தானும் கோட்டைக்குப் புறப்பட்டுச் செல்ல நினைத்தான் அவன். இவ்வாறு நினைத்துக் கொண்டே படைக் குடியிருப்பின் வாயிற்புறமாக வந்து மேற்கே சாலையில் ஆபத்துதவிப் படைகள் அணிவகுத்துக் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான். படைத் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் புறப்படுவதற்கு முன்னால் இறுதியாகத் தளபதி வல்லாளதேவனுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தான்.

"நீங்கள் போகலாம். நான் கூட இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவேன்" என்று சொல்லி அனுப்புவதற்காகத் தளபதி வாய் திறந்த போது கீழ்ப்புறம் இடையாற்று மங்கலத்துக் கிளை வழியில் குதிரை வரும் ஒலி கேட்டது. வல்லாளதேவன் வியப்போடு திரும்பிப் பார்த்தான். குதிரை மேல் வந்து கொண்டிருந்த வீரன் அவர்களை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது.

"நீங்கள் புறப்படுங்கள்! தாமதிக்க வேண்டாம்" என்று குழைக்காதனைத் துரிதப்படுத்தினான் தளபதி. "யாரோ வருகிறாற் போலிருக்கிறதே!" என்று சொல்லித் தயங்கினான் குழைக்காதன்.

"வரட்டும்! நான் பார்த்து விசாரித்துக் கொள்கிறேன். நீங்கள் நிற்கக் கூடாது. உடனே புறப்பட்டு விடுங்கள்." தளபதியின் குரலிலிருந்த அவசரத்தைப் புரிந்து கொண்டு குழைக்காதன் படைகளுடன் கிளம்பினான். அவனும் படைகளும் மேற்கே சிறிது தூரம் சென்று மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான் தளபதி வல்லாளதேவன். யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது.

"என்ன தளபதி? ஆபத்துதவிகளை அனுப்பியாயிற்றல்லவா?" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டவாறு குதிரையிலிருந்து இறங்கினான் நாராயணன் சேந்தன்.

19. துறவியின் காதல்

இடையாற்று மங்கலம் தீவில் வைகறையின் அழகிய சூழ்நிலையில் வசந்த மண்டபத்துப் பொழிலிலுள்ள மரங்கள் அசைந்தன. இலைகளிலும், பூக்களிலும், புல் நுனிகளிலும் முத்துப் போல் திரண்டிருந்த வெண்பனித் துளிகள் இளகி உதிர்ந்தன. பொழிலில் மலர்ந்திருந்த சண்பகம், கோங்கு, வேங்கை, மல்லிகை, முல்லை மலர்களின் நறுமணத்தைத் தென்றல் காற்று வாரிக் கொண்டு வந்தது. வாவிகளிலும் சித்திரப் பூங்குளத்திலும், செம்மையும், வெண்மையுமாக ஆம்பலும், தாமரையும் அலர்ந்து விரிந்து, வண்டுகளை விருந்துக்கு அழைத்தன. காதலனின் பருத்த தோளைத் தன் மெல்லிய கைகளால் அணைத்துத் தழுவும் காதலியைப் போல் கரையோரத்து மரங்களின் பருத்த அடிப்பகுதியைப் பறளியாற்று நீர்த்தரங்கள் தழுவிச் சென்றன. இலைகளிலும், பூக்களிலும், குங்குமக் கரைசல் போல் பொங்கிவரும் செந்நீர்ப் பரப்பிலும், இளங் கதிரவனின் ஒளிக் கதிர்கள் மின்னின. வசந்த மண்டபத்து விமான மதிற்சுவர்களின் மாடங்களில் அடைந்து கிடந்த மணிப்புறாக்கள் கூட்டமாக வெளிப்பட்டுப் பறந்தன.

பொழுது புலர்ந்து விட்டது. ஒளியின் ஆட்சிக்கு உரியவன் கிழக்கே அடிவானத்தைக் கிழித்துக் கொண்டு கிளர்ந்தெழுந்து விட்டான். ஆனால் வசந்த மண்டபத்துப் பள்ளியறையின் பொற்கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்புகளின் மேல் படுத்துக் கொண்டிருந்த அந்த இளம் துறவி மட்டும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. ஐயோ, பாவம்! நன்றாக அயர்ந்து தூங்குகிறார் போலிருக்கிறது. பள்ளியறையின் அழகிய ஓவியப் பலகணி வழியே ஒளிக்கதிர்கள் கட்டிலின் விளிம்பில் பட்டும் அவர் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

அப்போது அந்தப் பள்ளியறையின் கதவுகளைச் செந்தாமரை மலர் போன்ற அழகும், செண்பக அரும்பு போன்ற விரல்களும் பொருந்திய அந்தப் பெண் கரம் திறந்தது. முன் கையில் வெண்மையான சங்கு வளையல்களையும் விரல்களில் பொன் மோதிரங்களையும் அணிந்திருந்தது.

வனப்பு நிறைந்த அந்த மலர்க் கரத்துக்கு உரியவள் யார்? அருகில் நெருங்கிப் பார்க்கலாம். ஆ! இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி குழல்வாய்மொழி அல்லவா இவள்? அடடா? இந்த விடியற்காலை நேரத்தில் இவ்வளவு அழகான பூம்பொழிலின் இடையே அலங்காரமான வசந்த மண்டபத்தின் கதவருகே தங்கப் பதுமை ஒன்று உயிர் பெற்று நிற்பது போல் அல்லவா நிற்கிறாள்? நீராடி, அகிற்புகையூட்டிய கூந்தல் மேகக் காடு போல் விளங்கியது. அந்த மேகக் காட்டில் மின்னும் பிறைமதி போல் கொடை மல்லிகைச் சரத்தை அள்ளி முடித்திருந்தாள். சுழலும் கரு வண்டுகள் போல், பிறழும் கெண்டை மீன்கள் போல் மலர்ந்த விழிகளும், சிரிக்கும் செம்பவழ இதழ்களுமாகக் கதவருகே தயங்கி நின்றாள் குழல்மொழி.

உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பிவிட வேண்டுமென்றும் ஆசை; அதே சமயத்தில் கதவைப் பலமாகத் தட்டி ஓசை உண்டாக்குவதற்கும் பயமாக இருந்தது. தயங்கித் துவண்டு மின்னலோ எனச் சிறிய இடை நெளிய அவள் நின்ற தோற்றம் நெஞ்சத்தைச் சூறையாடுவதாக இருந்தது.

பலகணியின் வழியே எட்டிப் பார்த்து, "அடிகளே!" என்று கிளி மிழற்றுவது போல் மெல்லக் கூப்பிட்டாள் அவள். பள்ளியறைக் கட்டிலில் படுத்திருந்த இளந் துறவி புரண்டு படுத்தார்.

"அடிகளே! இன்னும் உறக்கத்தை உதறிவிட்டு எழுந்திருப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையா? பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதே?" இரண்டாவது முறையாகச் சற்று இரைந்தே கூப்பிட்டாள் குழல்மொழி. அதனோடு கதவிலும் தட்டவே, தட்டிய ஒலி, அதைச் செய்த மென்பூங்கைகளில் செறிந்திருந்த வளைகளின் ஒலி - எல்லாமாகச் சேர்ந்து துறவியின் உறக்கத்துக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டன. துறவி கண் விழித்தார். மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தார். விரத நியமங்களாலும், தவத்தாலும் வருந்திய ஒரு துறவியின் உடம்பு போலவா தோன்றுகிறது அது? ஆகா! என்ன கட்டழகு? தீக்கொழுந்து போல் எவ்வளவு சிவப்பான நிறம்? வாலிபத்தின் அழகு முழுமையாய் நிறைந்து, ஆசையைக் களையும் தவத்தொழிலில் இருந்து தம்மைக் காண்போர் கண்களின் ஆசையை வளர்த்துவிடும் போலிருக்கிறதே இந்தத் துறவியின் தோற்றம்!

"ஓ! நீயா? இந்த நேரத்துக்குள் எழுந்து நீராடி, பூச்சூடி அலங்கரித்துக் கொண்டு என்னையும் எழுப்புவதற்கு வந்து விட்டாயே?" எழுந்து உட்கார்ந்த துறவி அவள் வெளியே நின்று கொண்டு தம்மை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைக் கண்டு இவ்வாறு கூறினார்.

"ஆமாம்! அதிகாலையில் எழுந்திருந்து தவக் கடன்களையும், நியம ஒழுக்கங்களையும் தவறாமல் செய்ய வேண்டிய துறவிகளே இப்போதெல்லாம் அதிக நேரம் தூங்கத் தொடங்கி விட்டார்கள். அதன் கதி என்ன ஆவது?" - அவள் வேண்டுமென்றே குறும்பாகப் பேசினாள். நீண்ட முகமும், கூரிய நாசியும், பிறரை மயக்கும் வசீகர விழிகளும் பொருந்திய அந்தத் துறவி ஓரிரு கணங்கள் அவளையே உற்றுப் பார்த்தார். அவருடைய இதழ்களில் மோகனப் புன்னகை அரும்பியிருந்தது. தோள்களையும் மார்பையும் சேர்த்துப் போர்த்திக் கொண்டிருந்த மெல்லிய காவித் துணி விலகி நழுவியது. அடியில் சிறுத்து மேலே பரந்து அகன்ற பொன் நிற மார்பு, உருண்டு திரண்ட வளமான தோள்கள், அவற்றைக் குழல்மொழி கடைக் கண்களால் திருட்டுப் பார்வை பார்த்தாள். பிறகு அவள் தரையைப் பார்த்தாள். கன்னங்கள் சிவந்தன. 'இவர் துறவியா? அல்லது நம் போன்ற பேதைப் பெண்களிடம் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்வதற்கு குமாரவேள் கொண்ட மாறு வேடமா?' என்று எண்ணி எண்ணி உள்ளம் உருகினாள் குழல்மொழி.

"பெண்ணே நீ என் மேல் வீணாகப் பழி சுமத்துகிறாய்! மான் தோலில் படுத்துத் தூங்கும் துறவியைப் பஞ்சணைகளோடு கூடிய மஞ்சத்தில் உறங்க வைத்தால் அவன் அந்தப் புதிய சுகத்தில் தன்னையும் மறந்து நேரத்தையும் மறந்து விடுவது தானே இயற்கை?"

"பரவாயில்லை! துறவியை நாங்கள் மன்னித்து விடத் தயாராக இருக்கிறோம். எழுந்திருந்து வாருங்கள். நீராடுவதற்குப் போகலாம்."

"நீராடுவதற்கு வேறு எங்கே போகவேண்டும்? இதோ இங்கேயே வசந்த மண்டபத்துக்குப் பின்னால் பறளியாற்றுப் படித்துறை இருக்கிறது. நீ சிரமப்பட வேண்டாம். நான் இங்கேயே நீராடிக் கொள்கிறேன்."

"ஐயோ! கூடாது. அப்பா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பறளியாற்றில் புதுத் தண்ணீர் பாய்கிறது. உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. நீங்கள் பேசாமல் என்னோடு எழுந்து வாருங்கள். நான் சொல்கிறபடி கேளுங்கள். நீங்கள் இருக்கிற வரை உங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சிறிது நேரத்துக்கு முன்பு தான் அப்பா கூறிவிட்டுப் போனார்" என்றாள் குழல்மொழி.

"அப்படியானால் மகாமண்டலேசுவரர் இப்போது இங்கு இல்லையா?" என்றார் துறவி.

"இல்லை! மகாராணியாரைச் சந்திப்பதற்காகப் போயிருக்கிறார்."

"என்ன காரியமாகப் போயிருக்கிறாரோ? என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாரே!"

"எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது! அவர் திரும்பி வருகிற வரை தங்களுக்கு இங்கு ஒரு குறைவும் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எனக்கு உத்தரவு."

துறவி ஒன்றும் மறுமொழி கூறாமல் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.

கருகருவென்று அடர்ந்து வளர்ந்திருந்த இளந் தாடிக்கு மேல் சிவந்த உதடுகள் நெகிழ அவர் சிரித்த சிரிப்பு குழல்மொழியைக் கிறங்க வைத்தது. துறவி நீராடப் புறப்படுவதற்காக எழுந்தார். இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே தூக்கிச் சோம்பல் முறித்த போது, மூங்கிலின் மேல்புறம் போல மின்னிய அந்த வளமான புஜங்களின் அழகு மகாமண்டலேசுவரருடைய புதல்வியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

"வாருங்கள் நேரமாகிறது. அடிகளை அரண்மனை நீராழி மண்டபத்தில் கொண்டு போய் விட்டுவிட்டுப் பூசைக்காக நான் மலர் கொய்து வரவேண்டும்" என்று குழல்மொழி துறவியை அவசரப் படுத்தினாள்.

அவர் சிரித்துக் கொண்டே அவளைப் பின்பற்றி நடந்தார். குழல்மொழி அன்னம் போல் நடந்து சென்ற நடையின் அழகைக் கவியின் கண்களோடு பார்த்தார் துறவி. பாம்புப் படம் போல் விரிந்து சுருங்கிய அந்த நடையின் பின்புறக் காட்சி, மலர் சூடிய கரிகுழல், ஆமையின் புறவடிபோல் செவ்விய பாதங்கள் பெயர்த்து நடந்த பெருமை, அத்தனை அழகையும் கண்குளிர நோக்கிக் கொண்டே அவளுக்குப் பின்னால் மெல்லச் சென்றார் அவர்.

வழியில் ஒரு முறை பின்னால் திரும்பி அவரைப் பார்த்தாள் அவள். அவர் முறுவல் புரிந்தார். காரணமில்லாமல் சும்மா பார்த்ததாக அவர் எண்ணிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, "அடிகளே! தாங்கள் வழக்கமாக எந்த மலர்களைக் கொண்டு பூசையில் வழிபடுவீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.

"பயப்படாதே, பெண்ணே! இந்த இடையாற்று மங்கலம் தீவில் இல்லாத மலரின் பெயரெதையாவது சொல்லி உன்னைத் திண்டாட வைத்து விட மட்டேன் நான்."

"ஏன்? அடிகள் கேட்டுப் பார்ப்பதுதானே? இந்தத் தீவில் இல்லாத மலர்களே கிடையாதென்பது அடிகளுக்குத் தெரியாது போலும்!"

"இதோ, எனக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே, இந்த மலரையும் சேர்த்துத்தானே சொல்கிறாய்?" துறவி குறும்புப் பார்வையோடு சுட்டு விரலை அவள் பக்கமாக நீட்டிக் காட்டினார். குழல்மொழி விருட்டென்று திரும்பினாள். இரு விழிகளும் மலர்ந்து விரிய அவருடைய முகத்தைப் பார்த்தாள்.

"நீ கோபித்துக் கொள்ளாதே. தவறாக வேறொன்றும் கூறிவிடவில்லை. உன்னை ஒரு மலராக உருவகம் செய்து கூறினேன்" என்றார் துறவி.

"ஓகோ! உருவகம், உவமை - இந்த மாதிரிக் கவிதைத் துறையில் கூட அடிகளுக்கு அனுபவம் அதிகமோ?"

"எல்லாம் சூழ்நிலையின் சிறப்பு. இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி அருகே இருந்தால் கல்லும் மரமும் கூடச் சொல்லுமே கவி? என்னைப் போல் ஒரு வயதுத் துறவி ஏதோ ஒரு வார்த்தை சொல்லி விட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்."

"ஏதேது? அடிகளைப் பேச விட்டுவிட்டால் விநயமாக நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே இருப்பீர்கள் போல் தோன்றுகிறதே."

"எல்லோரிடமும் அப்படிப் பேசி விட முடியுமா? ஏதோ உள்ளத்தில் பேச வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது, பேசினேன்."

இப்படிக் கூறியதும் மறுபடியும் அவள் தன் அகன்ற நீண்ட கருவிழிகளால் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். துறவியும் முன்போலவே அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.

பேசிக் கொண்டே இருவரும் அரண்மனைக்குள் நீராழி மண்டபத்தின் கரையருகே வந்து நின்றனர். துறவி நீராடுவதற்குத் தயாரானார். "நீராடித் தயாராக இருங்கள். நான் நந்தவனத்தில் போய்ப் பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்து கொண்டு வருகிறேன்" என்று புறப்பட்டள் குழல்மொழி.

அவள் நந்தவனத்து வாசலில் நுழைய இருந்த போது ஆற்றின் கரையிலுள்ள படகுத் துறைப்பக்கமிருந்து படகோட்டி அம்பலவன் வேளான் வந்து கொண்டிருந்தான். அவன் அவளை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது. அவசரமும் பரபரப்பும் அவன் வருகையில் தெரிந்தன.

"என்னைத் தேடித்தான் வருகிறாயா?" என்று அவள் கேட்டாள்.

"ஆமாம், அம்மா! போகும் போது உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி மகாமண்டலேசுவரர் இரகசியமாக ஒரு செய்தி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைச் சொல்லுவதற்காகத்தான் இவ்வளவு அவசரமாக வந்தேன்" என்று கூறிக் கொண்டே அவளை நெருங்கினான் படகோட்டி அம்பலவன் வேளான்.

20. கோட்டையில் நடந்த கூட்டம்

நாராயணன் சேந்தன் கேட்ட கேள்வியைச் செவியுற்றதும் தளபதி வல்லாளதேவன் திகைத்துப் போனான்.

"என்ன கேட்டாய்?" - மீண்டும் சந்தேகத்தோடு வினவினான் தளபதி.

"ஒன்றுமில்லை! நேற்று இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நீங்களாகவே படகைச் செலுத்திக் கொண்டு அவ்வளவு அவசரம் அவசரமாய் ஓடி வந்தீர்களே! வந்த காரியத்தைச் செய்தாயிற்றோ இல்லையோ என்று தான் கேட்டேன்."

தளபதி சேந்தனைச் சந்தேகத்தோடு பார்த்தான். அந்தக் குட்டையன் தன்னை வெற்றி கொண்டு விட்டது போல் எண்ணிச் சிரித்த சிரிப்பு தளபதி வல்லாளதேவனின் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது.

"எனக்கு அங்கே உறக்கம் வரவில்லை. படகுத் துறைக்கு வந்து பார்த்தேன். படகு தயாராக இருந்தது. எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்; அவ்வளவுதான். நான் அங்கிருந்து புறப்பட்டதற்கு வேறு எந்த முக்கியமோ அவசரமோ இல்லை" என்றான் தளபதி.

நாராயணன் சேந்தன் இதைக் கேட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

"தளபதி! கொல்லர் தெருவிலேயே ஊசி விற்க நினைக்கிறீர்கள் நீங்கள். ஆபத்துதவிப் படைகளைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென்பதற்காகவே நீங்கள் இங்கு வந்ததும் எனக்குத் தெரியும். இப்போது அனுப்பிவிட்டுத்தான் இங்கே நிற்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்."

தளபதி ஆத்திரத்தோடு சேந்தனை உற்றுப் பார்த்தான். நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் விதை நெல்லைச் சேர்த்து வைக்கும் நெல்லுக்குதிர் போன்ற உருவத்தையுடைய சேந்தனைக் கோபம் தீர உதைத்து விட வேண்டும் போல் கை துறுதுறுத்தது தளபதிக்கு. 'இடையாற்று மங்கலம் நம்பியைப் போன்ற ஒரு மாபெரும் இராஜதந்திரிக்கு ஒற்றனாக வேலை செய்ய இவன் முற்றிலும் தகுதியானவன் தான். அவருடைய திறமையான அரசியல் நிர்வாகத்தின் வெற்றியில் சரிபாதி இந்த ஒற்றனுக்கு உரியது' என்று தன் மனத்தில் எண்ணி வியந்து கொண்டான்.

'அவன் அந்த அதிகாலையில் தன்னைத் தேடிக் கொண்டு எதற்காக அங்கு வந்தான்? தான் அங்கிருப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டான்? ஆபத்துதவிப் படைகளை அனுப்புவதற்காகத் தான் அங்கே வந்திருக்கும் நோக்கத்தை அவன் எப்படிப் புள்ளி பிசகாமல் அனுமானிக்க முடிந்தது?' என்று பலவிதமாக எண்ணி மனம் குழம்பினான் தளபதி வல்லாளதேவன்.

"தென் திசைப் பெரும் படையின் மகா சேனாதிபதியும் இளமைப் பருவத்திலேயே பல போர்களில் வெற்றிவாகை சூடியவரும், சூழ்ச்சித் திறன் மிக்கவருமாகிய தங்களையும் கூற்றத் தலைவர் கூட்டத்துக்கு அழைத்து வரச் சொல்லி மகாமண்டலேசுவரர் அடியேனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதை நிறைவேற்றவே இங்கு வந்தேன்."

நாராயணன் சேந்தன் இதைக் கூறிய போது அவன் சாதாரணமான விநயத்தோடு தான் அப்படிப் பேசுகிறானா? அல்லது தன்னைக் குத்தலாகக் கேலி செய்கிறானா? என்று தளபதிக்குச் சந்தேகமாக இருந்தது. அந்தச் சந்தேகத்தை மனத்துக்குள் அடக்கிக் கொண்டு, "சேந்தா! நீ என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதும், அதற்காக மகாமண்டலேசுவரர் உன்னை என்னிடம் அனுப்பியதும் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வழக்கமாகக் கூட்டத்துக்கு வரவேண்டியவன் தானே நான்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

"அப்படி இல்லை! நீங்கள் நேற்றிரவு திடீரென்று அங்கிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டதால் கூட்டத்துக்கு வருவீர்களோ, வரமாட்டீர்களோ என்று அவருக்குச் சந்தேகம்!"

"சில நாட்களாக மகாமண்டலேசுவரருடைய சந்தேகத்துக்கு யாரும் எதுவும் தப்ப முடிவதில்லை போலிருக்கிறது!" வேண்டுமென்றே சேந்தனின் வாயைக் கிண்டுவதற்காகத் தான் அவன் இவ்வாறு கூறினான். ஆனால் தளபதியின் பேச்சை விழிப்போடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேந்தன் சுடச்சுடப் பதில் சொன்னான்.

"ஆமாம்! ஆமாம்! இப்போதெல்லாம் தென்பாண்டி நாட்டு அரசாட்சியைத் தங்கள் பலத்தினால் மட்டுமே காப்பதாக எண்ணிக் கொண்டு மகாமண்டலேசுவரர் மேலேயே சிலர் சந்தேகப் படுகிறார்களாமே!"

சேந்தன் தன்னைத்தான் குத்திக் காட்டுகிறான் என்று தளபதிக்குப் புரிந்து விட்டது. ஆனாலும் அதைப் புரிந்து கொள்ளாதது போல் வேண்டுமென்றே அவன் சிரித்து மழுப்பினான்.

அதன் பின் அவர்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தளபதி வல்லாளதேவன் நீராடிக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வருகிறவரை சேந்தன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இருவரும் கூற்றத்தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்ட போது பொழுது நன்றாகப் புலர்ந்து வெயில் பரவிவிட்டது. படைப்பள்ளியிலிருந்து சிறிது தொலைவு சென்றதும் நேரே புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்லும் வழியை விட்டுவிட்டுச் சுற்றி வளைத்துத் திருநந்திக் கரை வழியே அரண்மனை செல்லும் சாலையில் குதிரையை செலுத்தினான் சேந்தன். அந்தப் பாதையில் போகாமல் தளபதி குதிரையின் கடிவாளத்தைச் சுண்டி இழுத்து நிறுத்தினான். தளபதி பின் தங்கியதைப் பார்த்துச் சேந்தனும் குதிரையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு திரும்பி, "என்ன தளபதி ஏன் நின்று விட்டீர்கள். நேரமாகவில்லையா?" என்று கேட்டான்.

"நீ போகிற பாதையாகப் போனால் கூட்டமெல்லாம் முடிந்த பின்புதான் அரண்மனைக்குப் போய்ச் சேரலாம். இதோ அரண்மனைக்கு நேர்பாதை இருக்கும் போது ஏன் திருநந்திக் கரையைச் சுற்றிக் கொண்டு போக வேண்டுமென்கிறாய்?" என்று தளபதி வல்லாளதேவன் சற்றுச் சினத்தோடு நாராயணன் சேந்தனை வினவினான்.

"பறளியாற்றில் உடைப்பெடுத்து வெள்ளம் அந்தச் சாலையில் பெரும் பகுதியை அழித்து விட்டதே! அது உங்களுக்குத் தெரியாதா? காலையில் மகாமண்டலேசுவரர் கூடத் திருநந்திக் கரைவழியாகச் சுற்றித்தான் அரண்மனைக்குப் போயிருக்கிறார்."

"ஓஹோ! அதுவா செய்தி? அப்படியானால் சரிதான். திருநந்திக் கரை வழியே போகலாம். விடு குதிரையை" - தளபதியின் குதிரை திருநந்திக் கரைச் சாலையில் திரும்பியது.

தளபதி வல்லாளதேவனையும், இடையாற்று மங்கலம் நம்பியின் ஒற்றனான நாராயணன் சேந்தனையும் இப்படியே திருநந்திக்கரை போகும் நெடுஞ்சாலையில் செல்லவிட்டு நாம் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் சென்று அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைச் சிறிது கவனிப்போம்.

வேறு வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கூற்றத் தலைவர்கள் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் கூடியிருந்தார்கள். கூட்டத்துக்கு முக்கியமான இருவர் யாரோ அவர்கள் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலத்திலிருந்தே இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் தமக்குச் சொல்லியனுப்பினால் தாம் உடனே புறப்பட்டு வந்துவிடுவதாக மகாராணி வானவன்மாதேவி அந்தப்புரத்திலிருந்து சொல்லியனுப்பியிருந்தார். தனிமையாக மண்டபத்தில் அமர்ந்திருந்த கூற்றத் தலைவர்கள் தங்கள் மனம் போன போக்கில் பேசித் தென்பாண்டி நாட்டு அரசியல் நிலைமை பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அப்போது அங்கே கூடியிருந்த கூற்றத் தலைவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாத இரகசியங்களைக் கூட அவர்கள் பேசினார்கள். அப்போது அந்த இடத்தில் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றி அவர்கள் தாராளமாகப் பேசியதற்குக் காரணம் தனிமைதான். தங்களை விடப் பெரியவர்கள், தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் அப்போது யாரும் இல்லை என்ற துணிவுந்தான். அவர்கள் எல்லோரும் நன்றாகத் தமிழ் நூல்களைக் கற்றுத் தன்னடக்கமும், பண்பும் நன்றாக வாயக்கப் பெற்றவர்தாம். பொறுப்பின்றி வாய்க்கு வந்தபடி பேசுதல், அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் இவற்றால் விளையும் கேடுகளைத் திருக்குறளில் படித்திருந்தார்கள்.

'நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க் கிறுதி யாகிவிடும்.'

என்றெல்லாம் படித்திருந்தால் மட்டும் போதுமா? மந்திராலோசனை மண்டபத்தின் அரங்கத்தைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் திரைச் சீலைக்குப் பின்னல் மறைந்து நின்று செவிப்புலனின் உணர்வைக் கூர்மையாக்கிக் கொண்டு ஒன்று விடாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனித உருவத்தைப் பார்த்திருந்தால் அவர்கள் அப்படிப் பேசியிருக்க மாட்டார்கள்.

"இந்தத் தென்பாண்டி நாட்டுக்கு ஒரு பொல்லாத சோதனைக் காலம். தேசத்தின் பெரிய பெரிய அரசியல் பொறுப்புகள் தாய் இழந்த பிள்ளைகளைப் போல் ஆகிவிட்டன. எவனோ ஊர் பேர் தெரியாத ஒற்றன் மகாராணியாரை வேல் எறிந்து கொல்லத் துணிந்து விட்டான் என்றால் நம்முடைய வீரத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்?" என்றார் தோவாழைக் கூற்றத்து நன்கனிநாதர்.

"மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் தீவை விட்டு அந்தப்புறம், இந்தப்புறம் அசையாமல் நாட்டு நிலையைப் பற்றிக் கவலையே இன்றி உட்கார்ந்திருக்கிறார். தென் திசைப் படைகளும் படைத் தலைவர்களும் வேளை தவறாமல் உடல் கொழுக்கத் தின்று விட்டுப் பொழுது போகாமல், படைப்பள்ளியில் தாயமும், சதுரங்கமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாமே? இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?" என்று ஆத்திரத்தோடு சொல்மாரி பொழிந்தார் பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள்.

"அது சரி, ஐயா! தளபதி என்று ஒருவர் மகா சேனாதிபதிப் பட்டம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே! அவருக்குக் கண் அவிந்து போயிற்றா? அரச குடும்பத்தாருக்குப் பயங்கரமான ஆபத்துகள் ஏற்படுகிற சூழ்நிலையை அறிந்தும் ஆபத்துதவிப் படைகளை அனுப்பாமல் இருக்கலாமா? இப்படிப்பட்ட சமயங்களில் கூட உதவி செய்ய முடியாமல் அவர்கள் எதற்காகத்தான் இருக்கிறார்கள்?" என்று பொன்மானைக் கூற்றத்துக் கழற்கால் மாறானார் தம்முடைய மனக் கொதிப்புப் புலப்படும்படி பேசினார்.

"காணாமற் போன குமார சக்ரவர்த்தியைத் தேடுவதற்காக இதுவரை மகாமண்டலேசுவரரோ, தளபதியோ ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா? பொறுப்புள்ளவர்களே இப்படி இருந்தால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்? இளவரசர் இராசசிம்ம பாண்டியர் கடல் கடந்து ஈழ நாட்டில் மறைந்து வசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இளவரசர் பகைவர்களுக்காகப் பயந்து தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேயே மறைந்து வசிக்கிறார் என்கிறார்கள். எது உண்மையென்று நமக்குத் தெரியவில்லை. இன்றையக் கூட்டத்தில் இதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்!" என்று தம்முடைய கருத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஆனால் அழுத்தமாகவும் எடுத்துக் கூறினார் அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார்.

"இந்தக் குழப்பமான சூழ்நிலைகளால் மகாராணி மனம் நொந்து விரக்தியடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மகாராணி வானவன்மாதேவி இந்த நாட்டில் கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடியாக மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவர்கள். அவர் மனம் கலங்குமாறு செய்வது நம்முடைய பெருந்தன்மைக்கே இழுக்கு" என்று உணர்ச்சி நிறைந்த உருக்கமான குரலில் மீண்டும் அழுத்திக் கூறினார் முதலில் பேச்சைத் தொடங்கிய நன்கனிநாதர்.

"தாம் அமர பதவி அடைந்த பின்னர் இப்படியெல்லாம் நம்முடைய நாட்டுக்கும், புதல்வனுக்கும், பட்டத்தரசி வானவன்மாதேவியார்க்கும் துன்பங்களும், தொல்லைகளும் ஏற்படுமென்று பராந்தக பாண்டியச் சக்ரவர்த்தி கனவிலாவது எண்ணியிருப்பாரா? அவர் இருந்தால் தான் இப்படிப்பட்ட நிலைகள் ஒன்றும் ஏற்பட்டிருக்க முடியாதே?" என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறிப் பெருமூச்சு விட்டார் மற்றொரு கூற்றத் தலைவர்.

அவர்கள் இப்படி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த போது மந்திராலோசனை மண்டபத்து வாசலில் யாரோ பலர் பேசிக் கொண்டே உள்ளே வரும் ஒலி கேட்டது. ஒரு சேவகன் முன்னால் வேகமாக ஓடி வந்து, "மகாமண்டலேசுவரரும், மகாராணியும் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூற்றத் தலைவர்களுக்கு முன் தகவல் கொடுத்தான். மூலைக்கொருவராகத் தங்களுக்குத் தோன்றியபடி இருக்கைகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள் மரியாதையாக எழுந்து நின்றனர். தங்களை விட அதிகாரமும், மதிப்பும், பெருமையும் உள்ளவர்களை எதிர்பார்த்துச் சாதாரணமான மனிதர்கள் காத்திருக்கும் போது ஏற்படும் ஒரு வகை அமைதி அங்கே திடீரென்று நிலவியது. வேலேந்திய வீரர் ஒடுக்கமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.

மகாராணி வானவன்மாதேவியாரும், இடையாற்று மங்கலம் நம்பியும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் அதங்கோட்டாசிரியர் பிரானும், பவழக்கனிவாயரும் வந்தனர். மகாராணியோடு ஆசிரியர் மகள் விலாசினியும், தளபதியின் தங்கை பகவதியும் உடன் வந்திருந்தனர். மண்டபத்தில் இருந்த கூற்றத் தலைவர்கள் எல்லோரையும் வணங்கி எதிர்கொண்டு வரவேற்றனர்.

"தளபதி வல்லாளதேவன் எங்கே? அவனை அழைத்து வரச் சொல்லி சேந்தனை அனுப்பினேனே! இன்றைய கூட்டத்தில் அவன் கலந்து கொள்வது அவசியமாயிற்றே? இன்னும் வரவில்லையோ?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. "வரவில்லை" என்று அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. மண்டபத்தின் நான்கு புறமும் கண்களைச் செலுத்திச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர்.

"இதென்ன? இந்த மண்டபத்தில் ஏற்கெனவே காற்றுக் குறைந்து புழுக்கமாக இருக்கிறது. இந்தப் பட்டுத் திரைகள் எதற்கு? இவற்றை அகற்றி விடுங்கள்" என்று அங்கு நின்றிருந்த மெய்க்காப்பாளர்களை நோக்கித் திடீரென்று ஒரு கட்டளை பிறப்பித்தார் அவர். அப்போது திரைக்குப் பின்னால் யாரோ அவசரமாக நடந்து செல்லும் ஒலி கேட்டது.

21. சேந்தன் செய்த சூழ்ச்சி

பறளியாற்று வெள்ளம் காரணமாகச் சுற்று வழியில் அரண்மனைக்குப் புறப்பட்டிருந்த சேந்தனும், தளபதியும் திருநந்திக்கரையை அடையும் போது ஏறக்குறைய நடுப்பகல் ஆகிவிட்டது. வல்லாளதேவனின் உடல் தான் குதிரை மேல் திருநந்திக்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்ததே யொழிய உள்ளம் முழுவதும் அரண்மனையில் நடந்து கொண்டிருக்கும் கூற்றத் தலைவர் கூட்டத்தில் லயித்திருந்தது.

'அடடா! இந்தப் பாழாய்ப்போன பறளியாற்று வெள்ளம் நம்முடைய திட்டத்தையே மாற்றிவிட்டதே? இன்னுமா அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்தைத் தொடங்காமல் இருக்கப் போகிறார்கள்? நேர்வழியாகப் புறப்பட்டுப் போயிருந்தால் இதற்குள் நாமும் ஒழுங்காக அரண்மனைக்குப் போய்க் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். நாம் போகவில்லை என்பதற்காகக் கூட்டம் நின்று விடவா போகிறது? நமக்குத்தான் பல விதத்தில் நஷ்டம்! இப்போதுள்ள தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலையில் மாறுதலைச் செய்வதற்கான முக்கியமான பல செய்திகளைக் கூட்டத்தில் விவாதித்திருப்பார்கள். போய்க் கலந்து கொண்டிருந்தால் கூற்றத் தலைவர்களும், மகாமண்டலேசுவரரும் எந்த நோக்கத்தில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஊம்! நினைத்துப் பயன் என்ன? கூட்டம் முடிவதற்குள் அங்கு எப்படிப் போக முடியும்!'

இத்தகைய நினைவுகளோடு குதிரையில் சென்று கொண்டிருந்த வல்லாளதேவன் அடிக்கொருதரம் பெருமூச்சு விட்டான். பக்கத்தில் குதிரையை மெதுவாகச் செலுத்தியவாறே வந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் தளபதியின் முக மாறுதல்களையும் பிற செயல்களையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அக்காலத்தில் திருநந்திக்கரையும், அதைச் சூழ அமைந்திருந்த இடங்களும் பூதப்பாண்டி முதலிய சிற்றூர்களும் சமணர்களும் அவர்களுடைய திருமடங்களும், தவப்பள்ளிகளும் நிறைந்துள்ள பிரதேசமாக இருந்தன. காலஞ்சென்ற பேரரசர் பராந்தக பாண்டியர் சைவ சமயத்தைப் போற்றி வளர்த்தாலும் ஏனைய சமயங்கள் வளரவும் உறுதுணை புரிந்தார். தமது அரசாட்சிக் காலத்தில் திருநந்திக்கரையிலுள்ள சமணப் பெரும்பள்ளிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக அவர் அளித்த பள்ளிச் சந்தப்பங்கள் பல. சமணர்கள் சீராக வாழ்ந்த காலத்தில் திருநந்திக்கரை மலைப் பகுதிகளில் அற்புதமான குகைக் கோவில்களைக் குடைந்தார்கள். சமண மதம் இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு சிறப்போடில்லையானாலும் அதன் பெருமைக்குரிய அடையாளங்கள் அங்கங்கே தென்படத்தான் செய்தன.

சமணர் திருமடங்களும், பெருந்தவப் பள்ளிகளும் நிறைந்த ஒரு பகுதியில் தளபதியும், சேந்தனும் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றனர். அழுக்கடைந்த ஆடையும் மயிற்பீலி தாங்கிய கையுமாக சமணத் துறவிமார்கள் வீதியில் அங்கும் இங்குமாகப் போய் வந்து கொண்டிருந்தனர்.

"சேந்தா! தண்ணீர் வேட்கை அதிகமாக இருக்கிறது. இங்கே பருகுவதற்கு நீர் கிடைக்குமா?" என்று ஒரு சமணப் பள்ளியைச் சுட்டிக் காட்டிச் சேந்தனிடம் கேட்டான் தளபதி.

"கிடைக்கும்! இறங்கி உள்ளே போய்க் கேளுங்கள். அதுவரை நான் குதிரையைப் பார்த்துக் கொண்டு இங்கே இருக்கிறேன்" என்றான் நாராயணன் சேந்தன்.

தளபதி குதிரையிலிருந்து இறங்கிச் சமணப் பள்ளியினுள் நுழைந்தான். அங்கே உட்புறம் உட்கார்ந்து ஏதோ பழைய சுவடியைப் படித்துக் கொண்டிருந்த வயது முதிர்ந்த துறவி ஒருவர் அவனைப் முன்முறுவல் செய்து வரவேற்றார். அவனுடைய தோற்றத்தையும், உடைகளையும் பார்த்தவுடனேயே அவன் பெரிய பதவியிலுள்ளவனாக இருக்க வேண்டுமென்பதை அந்தச் சமணத் துறவி தெரிந்து கொண்டார்.

"வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று அன்புடனே விசாரித்தார் அவர்.

"சுவாமி! தாகம் அதிகமாயிருக்கிறது. பருகுவதற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்" என்றான் வல்லாளதேவன். துறவி எழுந்து சென்று அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அவன் வேண்டிய மட்டும் பருகித் தாகத்தைத் தணித்துக் கொண்டான்.

"வெகு தூரம் பிரயாணம் செய்து அலுப்படைந்தவர் போல் தென்படுகிறீர்கள். இப்படிச் சிறிது படுத்திருந்து பிரயாணக் களைப்புத் தீர ஓய்வு எடுத்துக் கொள்ளுங்களேன்" என்று பரிவாக உபசரித்தார் அந்தத் துறவி.

"இல்லை. நான் அவசரமாகப் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்ல வேண்டும். தங்க நேரமில்லை" என்று அவன் கூறவும் வியப்புடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த துறவி, "அடாடா! இவ்வளவு தூரம் வீணாக அலைந்திருக்கிறீர்களே? அரண்மனைக்குச் செல்லப் பறளியாற்றின் கரையை ஒட்டினாற் போலக் குறுக்குச் சாலை ஒன்று செல்கிறதே. அதன் வழியாகப் போயிருந்தால் இதற்குள் அரண்மனை போய்ச் சேர்ந்திருக்கலாமே. அதை விட்டு விட்டு இவ்வளவு தொலைவு அலைந்திருக்கிறீர்களே?" என்றார்.

"சுவாமீ! அந்த வழி எனக்கும் தெரியும்! ஆனால் பறளியாற்றில் வெள்ளம் வந்து நேற்று இரவே அந்தக் குறுக்கு வழியெல்லாம் உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாமே? அதனால் தான் சுற்று வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நானும் என் நண்பனும் இப்படி வந்தோம்."

"அப்படியா! வெள்ளம் உடைத்துக் கொண்டு போய் விட்டதென்று உங்களுக்கு யார் அப்படிச் சொன்னார்கள்?" என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.

"ஏன்? என்னுடன் பிரயாணம் செய்யும் ஒரு நண்பன் தான் சொன்னான்."

"நான் இன்று காலையில் தானே அதே பாதையாக இங்கு வந்து சேர்ந்தேன்! பறளியாற்றில் வெள்ளம் போவது உண்மைதான். ஆனால் பாதை உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாக உங்கள் நண்பன் சொல்லியிருந்தல் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும்."

தூய்மை திகழும் அந்தத் துறவியின் முகத்தைப் பார்த்த போது அவர் கூறுவது பொய்யாக இருக்காது என்று தோன்றியது அவனுக்கு. திடீரென்று தளபதியின் சந்தேகம், கோபம் எல்லாம் நாராயணன் சேந்தன் மேல் திரும்பின. அவன் எதற்காகவோ, தன்னிடம் பொய் சொல்லித் தன்னைச் சுற்றி வளைத்து இழுத்தடிப்பதாகத் தோன்றியது. "சுவாமீ! ஒரு வேளை நீங்கள் வரும் போது ஆற்றில் வெள்ளம் குறைவாக இருந்திருக்கலாம். அதன் பின்பு அதிகமாகிச் சாலைகளை மூழ்கச் செய்திருக்கலாம் அல்லவா?" என்று தன் சந்தேகத்தை உறுதி செய்து கொள்வதற்காக மறுபடியும் கேட்டான் தளபதி. அவர் கலகலவென்று சிரித்தார். "ஐயா! நீங்கள் சிந்தனை உணர்வே இன்றிக் கேள்வி கேட்கின்றீர்கள். நான் இங்கு வந்து சில நாழிகைப் போதுக்கு மேல் ஆகியிருக்காது. பறளியாறு மிகவும் பள்ளமான இடத்தில் ஓடுகிறது. அரண்மனைக்குச் செல்லும் சாலையோ கரைமேல் மலைச்சிகரம் போல் மேடான இடத்தில் போகிறது. என்ன தான் வெள்ளம் வரட்டுமே, இந்த சில நாழிகை நேரத்தில் சாலைகளெல்லாம் அழிந்து மூழ்கியிருக்க முடியுமென்பதை என்னால் நம்பமுடியவில்லை."

நிதானமாகச் சிந்தித்த போது அவர் கூறுவது நியாயமாகவே பட்டது அவனுக்கு. தன் உணர்ச்சிகளையோ, கோபதாபங்களையோ அங்கே அந்தத் துறவிக்கு முன் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவன். "சரி! நான் வருகிறேன் சுவாமீ! இவ்வளவு தொலைவு அலைந்தது அலைந்தாயிற்று. இனி எந்த வழியாகப் போனால் என்ன?" என்று அவரிடம் வணங்கி விடைபெற்றுக் கொண்டான்.

'இந்த ஊர் எல்லை கடக்கிறவரை நாராயணன் சேந்தனிடம் எதுவும் கேட்கக் கூடாது. எல்லை கடந்தவுடன் அந்தத் திருட்டுக் குள்ளநரியைக் குதிரையிலிருந்து கீழே பிடித்துத் தள்ளி இரண்டு கன்னங்களிலும் பூசைக்காப்புக் கொடுத்து, 'ஏனடா நாயே! என்னைப் பொய் சொல்லியா ஏமாற்றினாய்?' என்று கேட்க வேண்டும்!' இவ்வாறு மனக் கொதிப்புடன் எண்ணிக் கொண்டே திருநந்திக்கரைச் சமணப் பெரும் பள்ளியிலிருந்து வெளி வந்தான் தளபதி வல்லாளதேவன். படிகளில் இறங்கித் தெருவைப் பார்த்ததும் அவனுக்குப் பகீரென்றது. அங்கே நாராயணன் சேந்தன் இல்லை. நிறுத்திவிட்டுப் போயிருந்த தளபதியின் குதிரையும் இல்லை. வல்லாளதேவன் திகைத்தான். ஒரு விநாடி அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. நெற்றி சுருங்கியது, புருவங்கள் வளைந்தன. விழிகள் சிவந்தன. தோள்கள் விம்மிப் புடைத்தெழுந்தன. வார்த்தைகளில் அடக்கி விவரிக்க முடியாத ஆத்திரம் அவனுள் குமுறியது. சேந்தன் தன்னை வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காக திட்டமிட்டு முட்டாளாக்கி விட்டது போல் இருந்தது அவனுக்கு. தான் அன்றையக் கூட்டத்தில் கலந்து கொள்ள அரண்மனைக்கு உரிய நேரத்தில் போய்விடாமல் தடுத்து அலைக்கழிக்கவே சேந்தன் தொடக்கத்திலிருந்து சூழ்ச்சி புரிந்து வந்திருக்கிறான் என்பதும் அவனுக்கு ஒருவாறு புரிந்தது. அப்போது மட்டும் தப்பித் தவறி நாராயணன் சேந்தன் அவனுக்கு முன்னால் அகப்பட்டிருந்தால் பழி பாவம் வந்தாலும் பரவாயில்லை என்று கொலை செய்வதற்குக் கூடத் துணிந்திருப்பான் அவன்.

'சேந்தன் எந்தப் பக்கமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான்? எப்போது போனான்?' என்று அக்கம் பக்கத்தில் யாரிடமாவது விசாரிக்கலாமென்று எண்ணியவனாய்ச் சுற்றும் முற்றும் பார்த்தான் தளபதி.

சமணப் பள்ளியின் வாயிற்புறத்து மேடையில் இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருத்தி பூ விற்றுக் கொண்டிருந்தாள். அவள் கையில் பூக்கூடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கையிலே பூமாலை ஒன்றை வைத்துக் கொண்டிருந்தாள். கூடையில் ஆம்பல், தாமரை, மல்லிகை, முல்லை, சண்பகம், கோங்கு, வேங்கை முதலிய பல நிறங்களையும், பலவகையையும் சேர்ந்த புது மலர்கள் குவிந்திருந்தன. தான் தண்ணீர் குடிப்பதற்காகச் சமணப் பள்ளிக்குள் நுழைந்த போதும் அந்தப் பெண் அங்கே உட்கார்ந்திருந்ததாக நினைவிருந்தது வல்லாளதேவனுக்கு. அவளைக் கேட்டால் சேந்தன் எங்கே போனான் என்ற விவரம் தெரியலாம் என்று நினைத்தான்.

அந்தப் பூக்காரப் பெண் நல்ல அழகியாகக் காட்சியளித்தாள். அந்த நிலையில் மலர் குவியல்களுக்கிடையே அவளை எவனாவது ஒரு கவிஞன் பார்த்திருந்தால், "மலர்களுக்கிடையே - சாதாரணமான வெறும் மலர்களுக்கு இடையே - இளமையும், மோகமும், செறிந்த புதிய பெருமலர் ஒன்று பூத்துப் பொலிவுடன் வீற்றிருக்கிறது" என்ற கருத்து அமையும் படி ஒரு கவிதையே இயற்றியிருப்பான். செந்தாழை நிறமும், செங்குமுத இதழும் கருமேகக் கூந்தலுமாகப் பூப்போன்ற கையில் இருவாட்சி பூப்போன்ற விரல்களைக் கொண்டு பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். சண்பகம் மொட்டுக்களைப் போன்ற அவளுடைய விரல்களில் ஒளிந்து கொண்டிருந்த திறமை உதிரிப் பூக்களை ஊழ்வினையை வரிசைப்படுத்தும் பரம்பொருள் நியதி போல் வரிசைப்படுத்தி வேகமாகவும் நளினத்துடனும் தொடுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் தன்னுடைய சொந்தக் கவலைகளையும் மறந்து அந்த விரல்களின் நளினத்தை விரல்களுக்குரியவளின் வனப்பை அனுபவித்து நோக்கினான் தளபதி. பின்பு தன் நினைவு வரப்பெற்றவனாய் மெல்ல நடந்து அவள் அருகில் சென்று, "பெண்ணே! சிறிது நேரத்துக்கு முன் இந்த மடத்து வாசலில் இரண்டு குதிரைகளும் ஒரு குட்டை மனிதனும் இருந்தார்களே, அவன் குதிரைகளைச் செலுத்திக் கொண்டு எந்தப் பக்கமாகப் போனானென்று உனக்குத் தெரியுமா?" என்று தன்னுடைய குரலில் கனிவையும், இனிமையையும் வரவழைத்துக் கொண்டு விசாரித்தான்.

கீழே குனிந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒருவித உணர்ச்சியும் தென்படவில்லை. உதடுகள் அசைந்து கோணின. பதில் சொல்லவில்லை.

"உன்னைத்தான் அம்மா கேட்கிறேன். பதில் சொல்லேன்" என்று சிறிது உரத்த குரலில் இரைந்தான் தளபதி. அப்போதும் அவள் வாயிலிருந்து பதில் வரவில்லை. "ஐயா உங்களுக்கு என்ன வேண்டும். அந்தப் பெண்ணுக்குப் பேச வராது. அவள் பிறவிச் செவிடு - பிறவி ஊமை." பின்னாலிருந்து குரல் வந்தது.

தளபதி திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண்ணின் தந்தைபோல் தோன்றிய வயதான கிழவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். கேள்விப்பட்ட உண்மையில் ஏற்பட்ட அதிர்ச்சி, தான் கேட்க வேண்டிய கேள்வியைக் கூட மறந்து போகச் செய்து விட்டது. 'அவளா ஊமை? அமுதக் குடம் போல் பருவத்தின் அழகு மெருகு செய்திருக்கும் அந்தப் பொற் சித்திரப் பாவையா ஊமை?'

தளபதி பரிதாபத்தோடு அவளைப் பார்த்தான். 'படைப்புக் கடவுள் பொல்லாதவன், மிகமிகப் பொல்லாதவன்!' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.

"என்ன ஐயா? பூ எதாவது வேண்டுமா? வேண்டுமானால் சொல்லுங்கள். தரச் சொல்கிறேன்" என்று அந்தக் கிழவன் தொண தொணத்தான்.

"ஒன்றும் வேண்டாம்! இங்கே வாசலில் என் நண்பன் ஒருவன் குதிரைகளோடு நின்று கொண்டிருந்தான். நான் மடத்துக்குள் சென்று திரும்புவதற்குள் திடீரென்று எங்கோ போய்விட்டான். அவன் எந்தப் பக்கமாகப் போனான் என்று எனக்குத் தெரிய வேண்டும்."

"எனக்குத் தெரியாது! நான் பார்க்கவேயில்லை, ஐயா!" என்று கையை விரித்து விட்டான் கிழவன். 'இங்கே இவர்களிடம் விசாரித்துப் பயன் இல்லை' என்று எண்ணிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான் தளபதி.

போகும் போது கடைசி முறையாக அந்தப் பூக்காரப் பெண்ணை அவன் கண்கள் ஏக்கத்தோடு பார்க்கத் தவறவில்லை. தன்னை ஏமாற்றிய சேந்தன், அவனுடைய சூழ்ச்சிகள் வேறு எத்தனையோ முக்கியமான சிந்தனைகள் - எதுவும் அப்போது தளபதியின் உள்ளத்தில் மேலெழுந்து நிற்கவில்லை. கால் போன போக்கில் நடந்து கொண்டே, பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத அழகை வைத்து விடும் படைப்பின் முரண்பாட்டைச் சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்தான். எங்கே போகிறோம் என்ற நினைவே இல்லை அவனுக்கு.

22. அடிகள் கூறிய ஆருடம்

துறவியை நீராடச் சொல்லிவிட்டு அவருடைய பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்வதற்காக நந்தவனத்துக்குச் சென்ற குழல்மொழியை அம்பலவன் வேளான் சந்தித்தான் அல்லவா? மகாமண்டலேசுவரர் உங்களிடம் சொல்லும்படி முக்கிய செய்தி கூறியனுப்பியிருக்கிறார் என்று வேளான் கூறவும், "என்ன அவசரச் செய்தியோ?" எனப் பதறிப் போனாள் அவள்.

"அம்மா! வசந்த மண்டபத்தில் தங்கியிருக்கும் துறவியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளச் சொன்னார். அடிகள் மாபெரும் சித்துவித்தைகள், மந்திர தந்திரங்கள் எல்லாம் கைவரப் பெற்றவராம். சிறிது மனங்கோணினாலும் சொல்லாமல் இங்கிருந்து மறைந்து விடுவாராம். அவர் இங்கிருந்து மறைந்து விட்டால் அதனால் தென்பாண்டி நாட்டுக்கே பலவிதத்திலும் தீங்குகள் உண்டாகுமாம். கண்ணை இமை காப்பது போல் இந்தத் தீவிலிருந்து வெளியேறி விடாமல் அவரைப் பத்திரமாக காக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்" என்றான் படகோட்டி அம்பலவன் வேளான்.

இதைக் கேட்டதும் குழல்மொழிக்கு நிம்மதி ஏற்பட்டது. "அப்பா! இவ்வளவுதானா? என்ன பிரமாதமான செய்தியோ என்று பயந்து போனேன். இதைத்தானா திரும்பவும் அப்பா உன்னிடம் சொல்லிவிட்டுப் போனார். ஏற்கனவே என்னிடம் அவர் கூறிய செய்திதானே!" என்று அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு நந்தவனத்துக்குள் நுழைந்தாள் அவள்.

வேளான் வந்த வழியே திரும்பிப் படகுத்துறைக்குப் போய்ச் சேர்ந்தான். இடையாற்று மங்கலம் அரண்மனை நந்தவனத்தில் இல்லாத மலர் வகைகள் தென்பாண்டி நாட்டிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். தீவின் நிலப் பரப்பில் கட்டடங்களும் மாளிகைகளும் அமைந்திருந்த பகுதி போக எஞ்சிய பகுதி முழுவதும், வானளாவிய மரங்களும், மலர்ச் சோலைகளும், பசும் புல்வெளிகளும், மலர் வாவிகளும் நிறைத்துக் கொண்டிருந்தன. நந்தவனத்துக்குள் சென்ற குழல்மொழி கால் நாழிகைக்குள் பலவகை மலர்களாலும் குடலையை நிரப்பிக் கொண்டு திரும்பி விட்டாள்.

அடிகள் நீராடி வழிபாடுகளை முடித்துக் கொண்ட பின் குழல்மொழி அவரை அட்டிற்சாலை சமையலறைக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினாள். உணவு முடிந்ததும் குழல்மொழி அவரை நோக்கி, "அடிகளே! தாங்கள் இனி வசந்த மண்டபத்தில் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மாலையில் நான் அங்கு வருவேன். வேளானிடம் சொல்லிப் படகில் சிறிது நேரம் பறளியாற்றில் சுற்றி வரலாம்" என்றாள்.

"பெண்ணே! பகலில் உறங்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. இப்போது நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். இந்த இடையாற்று மங்கலம் மாளிகையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது. நீ என்னோடு கூட வந்து சுற்றிக் காட்ட முடியுமா?" என்றார் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே.

அவருடைய விருப்பத்தைக் கேட்டுக் குழல்மொழி திகைத்தாள். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினாள். அவர் வெளியிட்ட விருப்பம் அத்தகையதாக இருந்தது. தென்பாண்டி நாட்டின் படைத் தலைவனான தளபதி வல்லாளதேவன் கூட வெளியிட முடியாத விருப்பம் அது. இன்று வரை இடையாற்று மங்கலம் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் குறைவின்றி முழுமையாகப் பார்த்தவர் மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் புதல்வியான குழல்மொழிக்கும் அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் கூடத் தெரியாத இரகசியப் பகுதிகள், பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள் எத்தனையோ அந்த மாளிகையில் உண்டு. அப்படி இருக்கும் போது ஊர் பேர் தெரியாத இந்தத் துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டுவது எப்படி முடியும்? 'சுற்றிக் காட்டலாம் என்றே வைத்துக் கொண்டாலும் எவற்றைக் காட்டுவது? எவற்றை மறைப்பது?' குழல்மொழி இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.

"நீ தயங்குவதைக் கண்டால் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஏதோ சில இடையூறுகள் இருப்பதாக அல்லவா தெரிகிறது? முடிந்தால் சுற்றிக் காட்டலாம். இல்லாவிட்டால் நான் வற்புறுத்தவில்லை" என்று தணிவான குரலில் மன்னிப்புக் கேட்பது போன்ற தொனியில் கூறினார் துறவி.

"இடையூறுகளா? அப்படி ஒன்றுமில்லை. இந்த மாளிகையைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தை சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் வைத்திருக்கிறார்."

"என்ன கட்டுப்பாடுகளென்று நான் அறியலாமோ?"

"எல்லா இடங்களையும் எல்லோருக்கும் சுற்றிக் காட்டுவதில்லை! அரண்மனையில் இருப்பவர்களும் சரி, வந்து போகிற விருந்தினர்களும் சரி, இன்னார் இன்ன பகுதிகளில் தான் பழக வேண்டுமென்று கடுமையான கட்டுக்காவல் வைத்திருக்கிறார்."

அவள் கூறியதைக் கேட்டுத் துறவி மறுமொழி கூறாமல் இலேசாகப் புன்முறுவல் செய்தார்.

"என்ன நீங்களாகவே சிரித்துக் கொள்ளுகிறீர்கள்?"

"மகாமண்டலேசுவரரின் கூர்மையான அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறதென்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது."

"பரவாயில்லை அடிகளே! உங்கள் விருப்பத்தை நான் கெடுக்கக் கூடாது. எழுந்து வாருங்கள். இந்த மாளிகையில் எந்த இடங்களையெல்லாம் காட்ட முடியுமோ அவற்றைக் காட்டுகிறேன்."

"நீ காட்டாத இடங்களையெல்லாம் நான் என்னுடைய தவ வலிமையைக் கொண்டு ஞான நோக்கத்தால் பார்த்து விட்டால் என்ன செய்வாய்?"

"அப்படி ஞான நோக்கத்தால் பார்க்கிற சாமர்த்தியமுள்ளவர் எல்லா இடங்களையும் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொள்ளலாமே?" என்று பச்சைக் குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து அவரைக் கேலி செய்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி.

"நீ பெரிய குறும்புக்காரப் பெண்! உன் தந்தையின் சூழ்ச்சி, சாதுரியம் ஆகியவற்றில் முக்கால் பங்கு உனக்கு வந்திருக்கிறது" என்று சிரிப்புக்கிடையே கூறிக் கொண்டே சுற்றிப் பார்ப்பதற்காக எழுந்திருந்தார் துறவி.

குழல்மொழி அவரை அழைத்துக் கொண்டு அவருக்கு முன் நடந்தாள்.

"அடிகளே! துறவிகளுக்கு முக்காலமும் உணரும் திறன் உண்டென்று கேள்விப் பட்டிருக்கிறேன். இத் தென்பாண்டி நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சில முக்கியமான செய்திகளைப் பற்றி நான் உங்களிடம் ஆருடம் கேட்கப் போகிறேன்."

"ஆகா தாராளமாகச் சொல்கிறேன். எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கப் போகிறது. வெற்றிகளும், செல்வங்களும் விளையப் போகின்றன. மாதந் தவறாமல் மூன்று மழை பொழியப் போகிறது..."

"போதும்! போதும்! நிறுத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் முதல் சோதியுடன் பிறந்ததிலிருந்து இன்று வரை பொதுவாக எல்லோரும் வைத்துக் கொண்டிருக்கிற நாலைந்து புளுகு மூட்டைகளையே நீங்களும் அவிழ்த்து விடுகிறீர்களே? மாதம் மூன்று மழை பெய்வதை இன்னொருவர் கூறியா அறிந்து கொள்ள வேண்டும்? வளத்துக்கு இருப்பிடமான நாஞ்சில் நாட்டில் மாதம் முப்பது நாளும் எங்கேயாவது மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது..." முன்னால் நடந்து கொண்டிருந்த குழல்மொழி திரும்பி நின்று அவரைக் கேலி செய்தாள்.

அப்போது அவர்கள் இருவரும் இடையாற்று மங்கலம் மாளிகையில் தெற்கு மூலையில் ஒரு முக்கியமான பகுதிக்கு வந்திருந்தார்கள். கண்ணாடி போன்ற சுவர்களில் தீட்டியிருந்த உயிர்க்களை சொட்டும் ஓவியங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தார் துறவி. மகாமன்னராகிய பராந்தகப் பாண்டியரின் வீரச் செயல்கள் அந்த ஓவியங்களில் தீட்டப்பட்டிருந்தன. இன்னும் தென்பாண்டி நாட்டின் அரச மரபைச் சேர்ந்த வீரர்களின் போர் செயல்கள், வாழ்க்கைக் காட்சிகள், அறச் செயல்கள், திருப்பணிகள் எல்லாம் தீட்டப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை நிமிர்ந்து பார்க்கும் போது இளந் துறவியின் மயக்கும் முகத்தில் பெருமிதச் சாயல் படர்ந்தது. விரிந்து அகன்ற வீர மார்பும், செறிந்து உயர்ந்த தோள்களும் விம்மிப் புடைத்தன. விழிகளில் அற்புதமானதொரு ஒளி மின்னியது. துறவிக்கு மனதில் சுய நினைவு, சூழ்நிலைகளை மறந்த ஒரு பெரும் பரவசம் உண்டாயிற்று. தன்னோடு குழல்மொழி என்ற பெண் வந்து கொண்டிருப்பது கூட அவருக்கு மறந்து போய்விட்டது. சுவர்ப்பரப்பில் துடிக்கும் உயிர்களாக நின்ற அந்த ஓவியங்களில் பந்த பாசங்கள் இல்லாத துறவியின் உணர்ச்சியைக் கவர அப்படி என்னதான் இருந்ததோ? எதிரே பார்க்காமல் சுவரைக் கண்டு கொண்டே நடந்தவரை "நில்லுங்கள்! இதற்கு மேல் போகக் கூடாது. இனிமேல் கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட இடம்" என்று குறுக்கே கை நீட்டி வழிமறித்தாள் குழல்மொழி.

சுவர்ச் சித்திரங்கள் என்ற கனவுலகத்திலிருந்து விடுபட்டு எதிரே பார்த்தார் துறவி. அந்த இடத்துக்கு எதிரே இருந்த அறை வாயிலில் தூய வெள்ளைத் திரை தொங்கியது. திரையில் பாண்டிப் பேரரசின் அடையாளச் சின்னமாகிய மீனின் உருவமும் நாஞ்சில் நாட்டுக் கலப்பை, மேழி வடிவங்களும் பெரிதாக வரையப்பட்டிருந்தன. திரைக்கு இப்பால் மின்னல் தண்டு போல் ஒளி வீசும் உருவிய வாள்களுடன் இரண்டு யவன வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர். 'அடல் வாள் யவனர்' என்ற சங்கத் தமிழ் நூல்களின் வர்ணனைக்கு ஏற்பக் கருமெழுகில் பிடித்துப் பிடித்து உருவாக்கிய இரண்டு பயங்கரச் சிலைகள் நிற்பது போல் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருந்தனர் அந்த யவன நாட்டுக் காவல் வீரர்கள்.

"ஏன் இதற்கு மேல் போகக்கூடாது என்கிறாய்? போனால் என்னவாகிவிடும்?" என்று கேட்டார் துறவி.

"நான் தான் முன்னமேயே சொன்னேனே! இந்த மாளிகையில் என் தந்தையாரின் விருப்பத்துக்கு இணங்கத்தான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். அவருடைய உத்தரவை மீறினால் அவருக்குக் கோபம் வந்து விடும். என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது."

"யாரும் பார்க்கக் கூடாத அறைகளில் இதுவும் ஒன்றோ?"

"ஆமாம்!"

"அப்படியானால் சரி! இதற்கு மேல் நாம் போக வேண்டாம். உன் வார்த்தைக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் அந்தத் திறைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாமோ?" - துறவி கேட்டார்.

குழல்மொழி கொற்கைத்துறை ஒளி முத்துக்களைப் போன்ற தன் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்தாள். "அடிகளே! நீங்கள் பெரிய தந்திரக்காரர். அந்த இடத்துக்கே போகக்கூடாதென்று நான் சொல்கிறேன். நீங்களோ அங்கே என்ன இருக்கிறதென்று கேட்கிறீர்கள்? கெட்டிக்கார மனிதர்தாம் நீங்கள்."

"சொல்லாவிட்டால் போயேன். நான் ஆருடத்தால் கண்டு பிடித்துத் தெரிந்து கொண்டால் அப்போது என்ன செய்வாய்? இதோ கண்டு பிடித்து விடுகிறேன் பார்!" என்று சொல்லி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கிறவர் போல் பாவனை செய்தார்.

"அடே அப்பா! கண்டுபிடித்து விடுவீர்களோ? எங்கே, கண்டுபிடித்துச் சொல்லி விடுங்களேன், பார்ப்போம்."

"இதோ கேட்டுக் கொள், தென்பாண்டி வேந்தர் மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் ஆகிய அரசுரிமைச் சின்னங்கள் இருக்கின்றன அங்கே."

துறவியின் ஆருடத்தைக் கேட்டு அதிர்ந்து போய் நின்ற குழல்மொழியின் முகத்தில் ஈயாடவில்லை.

23. ஊமை பேசினாள்

திருநந்திக்கரைச் சமணப் பெரும்பள்ளியின் வாசலில் அந்தப் பூக்கார ஊமைப் பெண்ணிடம் சேந்தனைப் பற்றி விசாரித்து விட்டுத் தளபதி வல்லாளதேவன் சாலையில் இறங்கிச் சென்ற சில கணங்களுக்குப் பின் ஓர் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. அதிசயமென்றால் வெறும் அதிசயமா அது? வியப்பையும், திகைப்பையும் ஒருங்கே உண்டாக்கக் கூடிய அதிசய நிகழ்ச்சி அப்போது அங்கே நடைபெற்றது.

சமணப் பள்ளியின் கிழக்குப் புறம், இருபது முப்பது அடி பள்ளத்தாக்கு நிலமாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் சிறிய காட்டாறு ஒன்றின் கிளைக் கால்வாய் பாய்ந்து கொண்டிருந்தது. கால்வாய்க்கு அப்பால் சமவெளி நிலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. பாக்கு மரங்களின் தூரில் மினுமினுவென்று மின்னும் முக்கோண வடிவப் பச்சை இலைகளும், கொத்துக் கொத்தாக மிளகுக் கொடிகளும் தழுவிப் படர்ந்திருந்தன.

தளபதியின் தலை மேற்கே திருநந்திக்கரைச் சாலையின் திருப்பத்தில் மறைந்ததோ இல்லையோ, தரையின் இடைவெளி தெரியாமல் படர்ந்து கிடந்த கீழ்ப்புறத்துப் பள்ளத்தின் பசுமையிலிருந்து இரண்டு செந்நிறக் குதிரைகளும் ஒரு குட்டை மனித உருவமும் மெதுவாக வெளியேறி மேட்டுக்கு வந்தன. அந்த உருவமே நாராயணன் சேந்தன்.

அப்போதும் அந்தப் பூக்காரப் பெண்ணுடன் அவள் தந்தையும் அங்கே தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்? எந்த ஓர் அழகிய பெண்ணைப் பிறவிச் செவிடு என்றும் பிறவி ஊமை என்றும் தளபதி எண்ணி, படைத்தவன் கைகளைத் தூற்றிக் கொண்டு போனானோ, அந்தப் பெண் இப்போது நாராயணன் சேந்தனிடம் வாய் திறந்து பேசினாள். "ஐயா! நீங்கள் கூறியபடியே அந்த மனிதரிடம் நடித்து ஏமாற்றி அனுப்பி விட்டோம். நான் ஊமையாகவே நடித்து விட்டேன். என் தந்தையும் தமக்கு ஒன்றும் தெரியாதென்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்" என்று குயிலின் இனிமையும் யாழின் நளினமும் செறிந்த குரலில் நாராயணன் சேந்தனிடம் கூறினாள் அந்தப் பூக்காரப் பெண்.

"மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்! உனக்கும் உன் தந்தைக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், பெண்ணே!" என்று சொல்லிக் கொண்டே தன் இடுப்புக் கச்சையை அவிழ்த்து இரண்டு பொற்காசுகளை அந்தப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தான் நாராயணன் சேந்தன். வட்டமாக இருந்த அந்தக் காசுகளின் ஒருபுறம் மகர மீன் வடிவம், இன்னொரு புறம் யானையின் உருவம் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் பராந்தகனின் இறுதிக் காலத்தில் வெளியிடப் பெற்ற நாணயங்கள் அவை.

காசுகளைப் பெற்றுக் கொண்டு மலர்ந்த முகத்தோடு கை கூப்பி வணங்கினாள் அவள்.

"ஐயா! நீங்கள் அடிக்கடி இந்தப் பக்கம் குதிரையில் வந்து போக வேண்டும்!" உபசாரத்துக்காகச் சொல்லுகிறவனைப் போலக் கிழவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.

உடனே நாராயணன் சேந்தன் முகத்தில் குறும்பு மிளிரச் சிரித்துக் கொண்டே கிழவனையும் அவன் பெண்ணையும் பார்த்து, "ஆகா! அதற்கென்ன? அடிக்கடி வருவதற்கு தடையில்லை. ஆனால் அடிக்கடி என்னிடத்தில் இரண்டு பொற்காசுகள் இருக்காதே?" என்று குத்தலாக ஒரு போடு போட்டுவிட்டுப் புறப்பட்டான்.

அவன் புறப்படுகிற சமயத்தில், "கொஞ்சம் பூக்கள் தருகிறேன். உங்கள் இல்லத்துக்குக் கொண்டு செல்லுங்கள்" என்று கூறிப் பூக்களை அள்ளினாள் அவள். "அதற்குப் பயனே இல்லை. நான் இன்னும் ஒற்றைக் கட்டைதான்!" என்று கூறி நகைத்தான் நாராயணன் சேந்தன்.

"இன்னுமா உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை?" என்று கேட்டார் கிழவர்! "உங்கள் மகளைப் போல ஓர் அழகான நல்ல பெண் கிடைக்கிற வரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஓரக்கண்ணால் அந்தப் பூக்காரப் பெண்ணை நோக்கினான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"வருகிறேன், பெரியவரே!" என்று ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு இன்னொன்றின் கடிவாளக் கயிற்றைப் பிடித்தவாறே பக்கத்தில் நடத்திக் கொண்டு புறப்பட்டான் சேந்தன்.

வந்த வழியே திரும்பிச் சென்று முன்பு எந்தச் சாலையில் பறளியாற்று வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தளபதியிடம் சொல்லி அவனைச் சுற்று வழியில் இழுத்தடித்தானோ அதே சாலையில் தான் இப்போது சென்றான் சேந்தன். கூற்றத் தலைவர் கூட்டத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சேந்தனும் அரண்மனைக்குப் போகிறான் போலிருக்கிறது. போகட்டும். அவனுக்கும் முன்பே நேயர்களை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கு நடக்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளைக் காண்பித்து விட விரும்புகிறேன் நான். திருநந்திக்கரைச் சமணப்பள்ளியில் சேந்தனால் ஏமாற்றப்பட்டு மனம் சோர்ந்து கால்நடையாகக் கிளம்பிய தளபதி வல்லாளதேவனும், ஏமாற்றிவிட்டுக் குதிரையில் கிளம்பிய சேந்தனும் புறத்தாய நாட்டு அரண்மனைக்கு வந்து சேர வெகு நேரம் செல்லுமாகையினால் நாம் முந்திக் கொண்டு விடலாம்.

"திரையை அகற்றி விடுங்கள்" என்று மகாமண்டலேசுவரர் கூறியவுடனே திரைக்குப் பின்னாலிருந்து ஆள் நடந்து செல்லும் அரவம் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் பரபரப்படைந்தார்கள். "பிடி! பிடி! யாராயிருந்தாலும் ஓடி தப்பி விடக்கூடாது" என்று அங்கிருந்த காவல் வீரர்களைப் பார்த்துக் கூச்சலிட்டார் மகாமண்டலேசுவரர். அங்கு நின்று கொண்டிருந்த மெய்க்காப்பாளர்களும், காவல் வீரர்களும் வாள்களை உருவிக் கொண்டும், கூர்மையான வேல்களை ஓங்கிக் கொண்டும் தடதடவென்று ஓசையுண்டாகும்படித் திரைக்குப் பின்னால் பாய்ந்தோடினர். திரைக்குப் பின்னாலிருந்த பகுதியில் சாளரங்களோ, கதிர்மாடங்களோ, பலகணிகளோ இல்லாததால் பகல் நேரத்திலேயே இருண்டு கிடந்தது. அதன் காரணமாகத் தேடிச் சென்றவர்களே ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொண்டனர். கண்டுபிடிக்க வேண்டிய ஆள் மட்டும் அகப்படவே இல்லை. மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறம் சுவரோரமாக ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கிச் சென்றது. அது அரண்மனையின் நிலவறைக்குச் செல்லும் பாதை. புறத்தாய நாட்டு அரண்மனையின் பல பகுதிகளில் அமைந்திருந்த நிலவறைகளில் முக்கியமானது அதுதான். போர்க் காலங்களிலும், அரசியல் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும் காலத்திலும், அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த கலைப்பொருள்கள், சிலைகள், முன்னுள்ள வேந்தர்கள் வழங்கிய நாணயங்கள், உபயோகித்த ஆயுதங்கள், கவசங்கள் இவற்றையெல்லாம் அந்த நிலவறையில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.

திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் தப்பிச் சென்றிருந்தால் கீழே நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டைத் தவிர வேறெந்த வழியினாலும் தப்பிச் சென்றிருக்க முடியாது. சிலர் நிலவறைக்குள் போகும் வழியிலும் சிறிது தூரம் சென்று தேடினார்கள். ஆள் அகப்படவில்லை. படிக்கட்டு ஆரம்பமாகும் இடத்தில் ஒரு சிறிய சதுரமான வெள்ளைப் பட்டுத் துணி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தார்கள்.

"ஆள் அகப்படவில்லையா?" என்று சினம் பொங்கும் குரலில் அதட்டிக் கேட்டார் அவர்.

"நிலவறைக்குள் போய்த் தப்பிச் சென்றிருக்கலாமென்று தெரிகிறது. படி இறங்கும் வழியில் இந்தப் பட்டுத் துணி கிடந்தது" என்று சொல்லி துணியை அவரிடம் கொடுத்தார்கள் தேடிச் சென்று திரும்பியவர்கள்.

"உடனே ஓடிப் போய்க் கீழே நிலவறைக்கு இறங்கும் வழியின் கதவை அடைத்து முன்புறமாகத் தாழிட்டு விடுங்கள்" என்று கூறி அவர்களை மறுபடியும் துரத்தினார் மகாமண்டலேசுவரர். அவர்கள் கதவை அடைக்கச் சென்றதும் அங்கு கூடியிருந்த அத்தனை பேருக்கும் நடுவில் அந்தப் பட்டுத் துணியை விரிக்காமல் ஒரு மூலையில் தூணின் மறுபுறம் மறைவில் போய் நின்று கொண்டு அதை விரித்துப் பார்த்தார். பயமும் கலவரமும் அடைந்த பீதியின் நிழல் பதிந்த முகங்களால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மகாராணியாரும் கூற்றத் தலைவர்களும் மந்திராலோசனை மண்டபத்து இருக்கைகளில் வீற்றிருந்தனர். மெய்க் காப்பாளர்களும், வீரர்களும் நிலவறைக்குச் செல்லும் வழியை அடைப்பதற்காக அதன் கனமான பெரிய மரக்கதவை இழுத்து மூடும் ஓசை மண்டபம் எங்கும் எதிரொலித்தது.

மகாமண்டலேசுவரர் விரித்துப் பார்த்த அந்தப் பட்டுத் துணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட குழிவினருக்கு அடையாளச் சின்னம் போன்றதொரு சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.

ஒரு வீர இளைஞன் தன் வலது கையில் உருவி ஏந்திய வாளினால் தனது தலையை அரிந்து குருதி ஒழுக இடது கையால் தாங்கி நிற்பது போல் அந்த ஓவியம் அமைந்திருந்தது. அந்த இளைஞர்களின் தலைபுறமாக மகரமீன் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஓவியத்தைக் கவனமாகப் பார்த்தார். பட்டுத் துணியில் வரையப் பெற்றிருந்த அந்த அடையாளச் சின்னம் அவருக்குப் புதியதல்ல. தென்னவன் ஆபத்துதவிகளின் அடையாளம் அது. ஆபத்துதவிப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அந்த மாதிரித் துணியை இடுப்புக் கச்சையாக அணிந்து கொள்வது வழக்கம்.

பட்டுத் துணியை மடித்து வைத்துக் கொண்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் மனத்தில் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின.

'ஆபத்துதவிப் படைகளைச் சேர்ந்த யாவரும் இப்போது கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும் படையின் குடியிருப்பில் அல்லவா தங்கியிருக்கிறார்கள்? அவர்களோ அல்லது அவர்களில் ஒருவனோ இப்போது இங்கே எப்படி வந்திருக்க முடியும்? திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் ஆபத்துதவிகளில் ஒருவன் தானோ? அல்லது என்றைக்காவது தென்னவன் ஆபத்துதவிகள் இங்கே அரண்மனைக்கு வந்திருந்த போது நிலவறைக்கு அருகில் இதைத் தவறிப் போட்டு விட்டார்களா? இந்தப் பொருள் நிலவறைக்கருகில் கிடந்ததனால் மட்டும் நாம் ஆபத்துதவிகளின் மேல் சந்தேகப்பட்டு விடுவதற்கில்லை. வேறு எவனாவது நம்முடைய பகைவர்களின் கையாளாகிய ஒற்றன் வந்து ஒட்டுக் கேட்டு விட்டுப் போயிருக்கலாம். நாம் இந்தத் துணி ஒன்றை மட்டும் சான்றாகக் கொண்டு யாரையும் குற்றவாளியாக முடிவு எய்து விடுவதற்கு இயலாது' - என்று சிந்தித்து முடிவு செய்து கொண்டார் மகாமண்டலேசுவரர்.

அவர் தூண் மறைவிலிருந்து மறுபடியும் மந்திராலோசனை மண்டபத்தின் நடுவில் வந்து நின்ற போது அவருடைய உத்தரவுப் படியே நிலவறைக் கதவை அடைத்து விட்டதாக வீரர்கள் வந்து கூறினார்கள்.

எல்லாருடைய கண்களும் அவருடைய முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.

"சந்தேகப்பட்டுக் கொண்டே இந்த இடத்தில் கூட்டத்தை நடத்தக் கூடாது. அவசியமானால் நிலவறையைத் திறந்து தீபங்களோடு உள்ளே சென்று தேடிப் பார்த்து விடலாம். இந்த மந்திராலோசனை மண்டபத்தை சுற்றியும் வெளிப் பகுதிகளில் சந்தேகப்படத் தக்க புதிய மனிதர்கள் யாரும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூற்றத்தலைவர் கூட்டத்தை இங்கே தொடங்குவது நன்றாயிராது" என்று தம் கருத்தைக் கூறினார் பவழக்கனிவாயர்.

ஏதோ கவலையில் ஆழ்ந்து போய் அமர்ந்திருப்பவர் போல் தலைகுனிந்து ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவியார்.

"பவழக்கனிவாயர் கூறுவது சரியே! 'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்' - என்று தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் கூறியிருப்பதைப் படிக்காதவர்கள் நம்மில் யாருமில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் இரகசியங்களை அறிவதற்காக யார் யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையானால் அந்தரங்க மந்திராலோசனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடத்தில் நமக்கு மிக அருகில் வந்து ஒளிந்திருக்கும் அளவுக்கு ஒரு மூன்றாவது மனிதனுக்குத் துணிவு ஏற்படுமா?" என்றார் பல்லாயிரங் காலத்துப் பயிர் போலச் சிறந்த தொன்மை வாய்ந்த அதங்கோட்டாசிரியர் குடும்பத்தில் பிறந்த ஆசிரியர். படிப்பின் பெருமிதமும் கலையின் எழிலும் ஒருங்கு தென்படும் அவருடைய ஒளி பொருந்திய முகமண்டலத்தில் இதைச் சொல்லும்போது கவலை இருள் சூழ்ந்திருந்தது.

"மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் இங்கு வருவதற்கு முன் நாங்கள் இதே இடத்தில் நீண்ட நேரமாகப் பல செய்திகளையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் யாரும் ஒளிந்திருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லையே" என்றார் கூற்றத் தலைவர்களுள் ஒருவராகிய கழற்கால் மாறனார்.

"ஒளிந்திருக்கவில்லை என்று நீங்களும் நானும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஒரு வேளை, பேச்சில் கவனமாக இருந்த நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். திரைக்குப் பின்னால் இருப்பதை இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நாம் எப்படிக் கவனித்திருக்க முடியும்? நம் பேச்சையே தப்பி ஓடினவன் முழுவதும் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்று கழற்கால் மாறனாரின் கருத்தைத் திருத்தினார் நன்கனிநாதர்.

"இந்த மந்திராலோசனைக் கூட்டத்தை இவ்வளவு நடந்த பின்பும் இன்றே நிகழ்த்துவானேன்? நாளைக்குத் தள்ளிவைத்து விடலாமே!" என்றார் அதுவரை ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த வானவன்மாதேவியார்.

"ஆம்! அப்படிச் செய்வதுதான் நல்லது" என்ற குரல் எல்லோருடைய வாயிலிருந்தும் ஒலித்தது. ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி மட்டும் வாயைத் திறக்கவே இல்லை. அவருடைய மௌனத்தை மகாராணி கவனித்து விட்டார்.

"மகாமண்டலேசுவரருடைய கருத்து என்னவோ?" என்று மெல்லக் கேட்டார் மகாராணி.

"கூட்டத்தை இன்றே நடத்தி விட வேண்டுமென்பதுதான் என் கருத்து. வேண்டுமானால் இந்த இடத்தில் நடத்தாமல் வேறோர் இடத்தில் நடத்தலாம். இன்றைக்கு என்று குறிப்பிட்ட கூட்டத்தை இன்றே நடத்தலாம். நடத்தாமல் போவதால் எத்தனையோ புதிய தொல்லைகள் உண்டாகலாம்" என்று அவர் உறுதிமொழி கூறிய போது அதில் தீர்மானமான பிடிவாதம் ஒலித்தது.

24. கரவந்தபுரத்துத் தூதன்

இந்த அத்தியாயத்தின் கதை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னால் நேயர்களுக்கு ஒரு சில சரித்திர உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர் அரச மரபு பற்றியும், அவர் வீரச் செயல்கள் பற்றியும் சிறிது அறிந்து கொண்டால் கதையின் மேற்பகுதிகளை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு முடியும்.

அளவற்றுப் பரந்த, காலத்தின் பேரெல்லைக்கும் எட்டாமல் விரிந்து கொண்டே போகின்ற பழமையைத் தன் குலச் செல்வமாகக் கொண்ட பாண்டியர் மரபின் முதலரசன் வடிவம்பலம் நின்ற பாண்டியன். நிலந்தரு திருவின்நெடியோன் எனவும், மாகீர்த்தி எனவும் சிறப்புப் பெயர்கள் பூண்டிருந்தான் இம் மன்னன். தமிழ் மொழியின் முழு முதல் தனி நூலாகவும், இலக்கணக் களஞ்சியமாகவும் விளங்கும் தொல்காப்பியம், இவன் அவையில் பெரும் புலவராக விளங்கிய அதங்கோட்டாசிரியர் தலைமையில் தான் அரங்கேற்றம் பெற்றது. அதங்கோட்டாசிரியன் வழிமுறையினரான ஒவ்வொருவரும் பிற்காலத்தே பன்னூறாயிரம் ஆண்டுகள் அதே குடிப்பெயர் கொண்டு தமிழின் புகழ் பரவ வாழ்ந்திருக்கலாம். இந்தக் கதையில் வரும் அதங்கோட்டாசிரியர் பழைய அதங்கோட்டாசிரியரின் பிற்காலத் தலைமுறையினரில் ஒருவராக இருக்க வேண்டுமென்று கொண்டு இந்தக் கதைக்காகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரமாவார்.

வடிவம்பலம் நின்ற பாண்டியன் (இந்தக் கதை நிகழும் காலத்தின் தென்பாண்டி நாட்டின் வற்றாத நீர் வளத்துக்குக் காரணமாக இருக்கும் பறளியாறு எனப்படும் பஃறுளியாற்றை முன்பு முதன்முதலாக வெட்டுவித்தான். கடல் தெய்வத்தை வழிபட்டுக் கொண்டாடும் 'முந்நீர் விழா' என்ற விழாவை ஏற்படுத்தினான். தலைச்சங்கத்தின் இறுதியில் ஆண்ட பெரும் பேரரசனான இவன் காலத்துக்குப் பின் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் குற்ப்பிடத்தக்கவன்.

இவர்கள் காலத்துக்குப் பின் கடைச்சங்க காலத்துக்கு முன்னுள்ள கால இடைவெளி பாண்டியர் வரலாற்றின் இருள் சூழ்ந்த பகுதியாகும். கடைச் சங்கத்தின் முதல் பாண்டிய மன்னாகிய முடத்திருமாறன் காலத்தில் குமரிமலைத் தொடரும், குமரியாறும், குமரி நாடும் - ஆகிய தென்பாண்டி நாட்டின் தென்கோடி நிலப்பரப்பு முழுவதும் கடல்கோளால் அழிந்தது. இனிய பெருங்கனவு போல், அழகிய சுவைக் காவியம் போல், சிறந்து இலங்கிய கபாடபுரம் என்ற நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது.

முடத்திருமாறனுக்குப் பின் பதினைந்து பாண்டிய அரசர்களின் வழிமுறைக்கு அப்பால் இறுதி மன்னனாகிய நம்பி நெடுஞ்செழியனோடு கடைச்சங்கப் பாண்டியர் மரபு முடிந்து விடுகிறது. நம்பி நெடுஞ்செழியனுக்குப் பின் பாண்டிய நாட்டில் களப்பிரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கடுங்கோன் தலையெடுத்த பின்பே பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி ஒழிந்தது.

"தன்பாலுரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
கடுங்கோ னென்னும் கதிர்வேல் தென்னன்"

என்று அவன் புகழை வேள்விக் குடிச் செப்பேடு போற்றிப் பாடியது. கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர் வழியில் கோச்சடையன், இரணதீரன், நெடுஞ்சடையன் பராந்தகன் முதலிய புகழ்பெற்ற அரசர்களெல்லாம் ஆண்டு முடித்த பின் வரகுண மகாராசன் என்னும் ஈடு இணையற்ற பேரரசன் முடிசூட்டிக் கொண்டான். பிறவிக் கடலைக் கடக்கும் ஞானத்தோணியாம் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் இவ்வரசன் காலத்திலேயே வாழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளின் தொகுப்பாசிரியராகிய நம்பியாண்டார் நம்பி தம்முடைய கோயில் திருப்பண்ணியார் விருத்தத்தில் வரகுண மகாராசனைப் புகழ்ந்திருக்கிறார்.

வரகுணனின் புதல்வனான சீமாறன் சீவல்லபன் தன் இரு மக்களுள் மூத்தவரான வரகுண வர்மனுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான்; இவனுக்கும் வானவன்மாதேவி என்னும் பட்டத்தரசிக்கும் பிறந்த முதல்வனே இந்தக் கதையில் வரும் இராசசிம்மன்.

இனி இங்கே தலைப்பில் காணும் கரவந்தபுரம் பற்றிக் காண்போம். தென்பாண்டி நாட்டுக்கும் வடபாண்டி நாட்டுக்கும் நடுவே நெல்வேலிக் கோட்டத்துத் தென்கோடியில் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒன்று இருந்தது. கோட்டையும் கொத்தளமுமாகப் பாதுகாப்பு அமைப்புடன் கரவந்தபுரம் என்ற பெயர் கொண்டு புகழ் பரப்பியது. இந்தக் கதையில் வரும் இராசசிம்மனின் தந்தையான சடையவர்ம பராந்தகனின் காலத்தில் கரவந்தபுரத்துக் கோட்டையும் அதன் ஆட்சி உரிமையும் உக்கிரன் என்னும் குறுநிலவேள் கையிலிருந்தது. செருக்கின் காரணமாக உக்கிரன் பாண்டியப் பேரரசை அவமதித்தான். அதனால் பெருமன்னரான பராந்தக பாண்டியர் அவனை அடக்கிச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார். பாண்டியனின் சிறையில் சில திங்கள் துன்புற்ற பின் ஒப்புக் கொண்டு மீண்டும் தன் கோட்டையைப் பெற்றான் உக்கிரன். அதிலிருந்து கரவந்தபுரத்து ஆட்சியும் உக்கிரன் கோட்டையும் பாண்டியப் பேரரசின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தன. கரவந்தபுரத்துக் கோட்டை உக்கிரனுடைய மகன் உரிமையாயிற்று.

இதன் பின் பாண்டி நாட்டு அரசியலில் இளவரசனான இராசசிம்மனுக்கும், அவன் தாய் வானவன்மாதேவிக்கும் ஏற்பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளையும், வடபாண்டி நாட்டையும், மதுரையையும், வடதிசை மன்னர் வென்று கைப்பற்றியதையும், இராசசிம்மன் தலைமறைவாகச் சென்றதையும், கதையைப் படித்து வரும் நேயர்கள் அறிவார்கள். எஞ்சிய தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது கரவந்தபுரமே. தென்பாண்டி நாட்டுக் கோட்டையில் கூற்றத் தலைவர்கள் கூடியிருந்த அதே நாளில் கரவந்தபுரத்துக் கோட்டையின் வடக்கே பயங்கரமான சில சங்கேத நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் சிற்றரசனாக இருந்த பெரும் பெயர்ச் சாத்தன் அதிர்ச்சியடைந்து போய் உடனே அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து விவரங்களை அறிவிப்பதற்காக ஒரு தூதனை அவசரமாகவும் பரம இரகசியமாகவும் அனுப்பினான். இனிமேல் கதையைப் படியுங்கள். சரித்திரச் சூழ்நிலை ஒருவாறு விளங்கியிருக்கும்.

திருநந்திக்கரையிலிருந்து கால்நடையாகப் புறப்பட்ட தளபதி எப்படியும் அன்று இரவுக்குள் அரண்மனைக்குப் போய்விட வேண்டுமென்று துடியாய்த் துடித்தான். அவன் உள்ளம் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது. திருநந்திக் கரையிலோ, அதைச் சார்ந்துள்ள இடங்களிலோ பிரயாணத்துக்கு குதிரை கிடைக்குமென்று தோன்றவில்லை. 'முக்கியமான பல செய்திகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டியிருப்பதனால் மகாமண்டலேசுவரரோ, கூற்றத் தலைவர்களோ, காலையிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு ஊர்களுக்குத் திரும்பியிருக்க முடியாது. என்ன அவசரமாயிருந்தாலும் நாளைக்குத் தான் அரண்மனையிலிருந்து புறப்படுவார்கள். இப்போதே இங்கு எங்காவது குதிரை மட்டும் கிடைத்தால் பொழுது மங்குவதற்குள் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்!' இப்படிப் பலவாறு சிந்தித்த பின் கால்நடையாகவே முன்சிறைவரை செல்வதென்றும் அங்கே யாரிடமாவது தேடிப் பிடித்துக் குதிரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு முடிவான தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டான் வல்லாளதேவன்.

சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் அளவையும் சேர்த்து வெயில் வாட்டிப் பிழிந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் தளபதி நடந்து சென்றிருக்கவே முடியாது. நாஞ்சில் நாட்டின் சிறப்புகளிலெல்லாம் சிறப்பு அதன் அற்புதமான சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். சத்தியத்தின் முன்னும் பின்னும் அறம் காரணத்துணையாக நிற்பது போல் சாலையின் இருபுறமும் சிறிதும் வெயில் நுழைய முடியாதபடி அடர்ந்த மரங்கள் பசுமைக் குடையாக நின்றனவென்றால் நிழலுக்குக் கேட்கவா வேண்டும்?

முன்சிறையை நோக்கிச் சாலையில் நடந்து கொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டான் தளபதி. பச்சைப் பசும்பாய் விரித்தாற் போன்ற நெல் வயல்கள், அவற்றின் இடையேயுள்ள நீர்ப் பள்ளங்களில் தீப்பிடித்தது போல் மலர்ந்துள்ள பல செந்நிற மலர்கள், கரும்புத் தோட்டங்கள், கதலிக்காடுகள், கன்னிப் பெண்ணைப் போல் கலகலத்துப் பாயும் சிற்றோடைகள்! என்ன வளம்! என்ன அழகு! வாழ்நாள் முழுவதும் அந்தத் தென்பாண்டி நாட்டு காட்சிகளில் ஒரு புதிய அழகு பிறந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்தில் ஒருசிறைப் பெரியனார் என்ற புலவர் நாஞ்சில் நாட்டைப் பற்றி வருணித்துப் பாடியிருக்கும் புறநானூற்றுப் பாடலின் அழகிய கருத்துகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன.

'விதைத்த வித்துகள் தண்ணீர் இல்லையே என்பதனால் முளைக்காமற் போகமாட்டா. முளைத்துச் செழித்துக் கரும்பு போல் வளரும். கோடைக் காலத்தில் எங்கும் வறட்சி தென்படும் போது பெண்களின் கண்களை ஒத்த கருங்குவளை மலர்கள் பாருக்குமிடமெல்லாம் வளமாகப் பூத்துக் கிடக்கும். கறுப்பு நிற அடி மரத்தையுடைய மலர்கள் உதிர்ந்து மிதக்கும்படி நீர்க் கால்கள் கடலை நோக்கி ஓடும்.'

'ஆகா! இந்தப் புலவருக்குக் கருங்குவளைப் பூக்களை நினைக்கும் போதே பெண்களின் கண்கள் தானே நினைவுக்கு வருகிறதே! உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும்! அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும் போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ?'

தன்னை அறியாமலே திருநந்திக்கரையில் பூ விற்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் எழில் முகம், நினைவுகள் ஓடி மறையும் அழகிய தடக்கண்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.

தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். 'சற்று முன் அந்தப் புலவரைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணினேன்! எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது? உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ?'

சிந்தித்தவாறே முன்சிறையை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் கால் நாழிகைத் தூரம் நடந்தால் முன்சிறையை அடைந்து விடலாம். தொலைவில் தென்படும் ஓவியம் போல் அவன் நடந்து கொண்டிருந்த சாலையிலிருந்து பார்க்கும் போது ஊர் மங்கலாகத் தெரிந்தது. எந்த ஊரையும் தொலைவிலிருந்து பார்க்கும் போது கோவிலும், கோபுரமும், வீடுகளும், மரங்களுமாக அதன் அழகே தனிக்கவர்ச்சி மிகுந்து தோன்றும். அருகில் நெருங்கி உள்ளே நுழைந்து விட்டால் அந்தக் கவர்ச்சி இருப்பதில்லை. நுழைந்து பார்க்கும் போது கவலையும், துன்பமும், வேதனையும், வஞ்சனையும் தான் அவற்றுள் தெரிகின்றன.

ஊர் நெருங்க நெருங்கத் தளபதியின் மனத்தில் சிந்தனைகள் குறைந்து சொந்தக் கவலைகள் எழுந்தன. 'முன்சிறையில் எங்கே போய்த் தேடி யாரிடம் குதிரை கேட்பது? குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே? காலையிலிருந்து கூற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ? அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்து கொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றி விட்டானே? இனி நான் இரவில் அரண்மனைக்குப் போனாலும் அந்தரங்கக் கூட்டத்தில் நடந்தது பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இயலாது. என்ன நடக்கிறதோ பார்க்கலாம். எண்ணத்தில் அவநம்பிக்கை கலந்திருந்தாலும், வல்லாளதேவனுக்கு அதனிடையே ஒரு சிறு நம்பிக்கையும் இருந்தது. 'வைகறையிலேயே ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தன் கூட்டத்தோடு அரண்மனைக்குச் சென்றிருப்பதனால் அவன் மூலமாக ஏதாவது நடந்த செய்திகள், பேசப்பட்ட விவரங்கள், குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தெரியலாம்' என நம்பினான் தளபதி. மந்திராலோசனைக் கூட்டம் நடக்கிற இடத்தில் எல்லோரையும் உள்ளே இருக்கவிட மாட்டார்கள். ஆனால் குழைக்காதன் குறிப்புத் தெரிந்தவன். சமயத்துக்கேற்றாற் போல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள அவனுக்குத் தெரியும் என்று எண்ணித் தற்காலிகமாகத் திருப்தியடைந்தான் தளபதி.

'நேரே முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் அங்கே பகல் உணவை முடித்துக் கொள்ளலாம். அறக்கோட்டத்தில் இருப்பவன் கூட நாராயணன் சேந்தனின் தமையனான அண்டராதித்த வைணவன் தானே? அவனிடமே அவனுடைய தம்பி செய்த வஞ்சனையை விவரித்து நம்முடைய அவசர நிலையையும் கூறி குதிரை சம்பாதித்துத் தருமாறு கேட்கலாம். நாராயணன் சேந்தனைப் போல் அடங்காப்பிடாரி இல்லை அவன் தமையன். பரம சாது, அப்பாவி மனிதனுங் கூட. நாம் சொன்னால் உடனே கேட்பான்' என்று எண்ணியவனாக ஊருக்குள் நுழைந்து அறக்கோட்டத்துக்குச் செல்லும் பகுதியில் நடந்தான் வல்லாளதேவன்.

அறக்கோட்டத்து வாசலை அவன் நெருங்கிய போது அங்கே அண்டராதித்த வைணவனும், அவன் மனைவி கோதையும் நின்று கொண்டு யாரோ ஒரு குதிரை வீரனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். குதிரையின் மேல் வீற்றிருந்தவன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தான்.

திடீரென்று தளபதி வல்லாளதேவன் கால்நடையாக அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. குதிரையின் மேல் இருந்தவன் பரபரப்படைந்து உடனே கீழே குதித்துத் தளபதியை வணங்கினான். அண்டராதித்தனும் கோதையும் கூட வணங்கினர்.

"கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச் சாத்தனிடமிருந்து வருகிறேன். அவசர ஓலை ஒன்றுடன் அரண்மனைக்குத் தூதனுப்பப் பட்டிருக்கிறேன்" என்று தளபதி வல்லாளதேவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் புதியவன்.

25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை

திருநந்திக்கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும் போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்று கொண்டிருந்தனர். தான் ஏறி வந்த குதிரை, கைப்பற்றிக் கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்பு தான் கோட்டைக்குள் நுழைந்தான் சேந்தன்.

அரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன.

கோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது.

முதல் வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற் சுவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்று கொண்டிருந்த வீரர்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு, வாயிலை நெருங்கிய போது தான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வந்தது.

அவனுக்குப் பின்புறம் 'சுரிகை' எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மௌனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, "ஏன் என்னைப் பின் தொடருகிறீர்கள்? நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே?" என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன.

ஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன்? அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்க வேண்டுமே. அது கூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர்.

சேந்தன் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகமே வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களைப் பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு.

'வந்தது வரட்டும்! இவர்களிடம் கேள்வி கேட்டு கெஞ்சிக் கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்' என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்கு மேல் அவர்கள் அவனைப் பின் தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில் அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், "காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை" என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்து விட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகி விட்டது. 'ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே!' என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப் போக இவர்கள் தடுத்துவிட்டார்களே! என்று தயங்கி நின்றான் சேந்தன்.

"காவல் வீரர்களே! உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்தி விடலாமா? நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாக வேண்டுமே! என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது? உங்களிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளே விட மறுத்த குற்றத்துக்காக நீங்கள் தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது? நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்" என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான்.

அவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன.

"ஐயா! இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு? உங்கள் பெயரைச் சொல்லுங்கள். உள்ளே போய் மகாமண்டலேசுவரரிடமே சொல்லி அனுமதி பெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்" என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக் கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான். கோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்த போது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன்.

உள்ளே போனவன் திரும்பி வருகிற வரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அமுத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிடமிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு.

அதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். "மகாமண்டலேசுவரர் உங்களை அழைத்து வரச் சொன்னார்."

"நானே போய்க் கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்" என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன்.

அரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 'அந்தரங்க மந்திராலோசனைக் கென்றே தனி மண்டபம் இருக்கும் போது அரசவை பட்டிமண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள்?' என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண்டாயிற்று. பட்டிமண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன்.

சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். "என்ன செய்தி? இப்பொழுதுதான் வருகிறாயா?" என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். "சுவாமீ! தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றி விட்டேன்" என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன்.

"அதெல்லாம் சரிதான் சேந்தா! இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப் போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறாய்? உன்னால் முடியுமா? முடியாதா?" என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர்.

'ஐயோ! நான் மட்டும் தனியாகவா?' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனி வரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் 'ஆகட்டும்' என்பது போல் தலையை ஆட்டினான்.

"போ! முதலில் அதைக் கவனி! வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே! நீ மட்டும் தனியாகவே போ!" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர்.

"சுவாமி! இன்னொரு இரகசியம். உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்" என்றான் சேந்தன்.

"என்ன சொல்லேன்?"

"அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?"

"அது எனக்கு முன்பே தெரியும்! நீ போய் உன் காரியத்தைப் பார்."

சேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்த போதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடிப் பார்த்து விடக்கூடிய நிலவறையா அது? விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே! வேறு யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக் கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகாமண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா?

வெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்து கொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது.

படிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்த பின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான்.

வலது புறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவது போல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொரு புறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள் குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இப்போது பயன்படாமல் போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறி விடுகிறது? நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மௌனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றின.

வலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக் கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்து விட்டுப் போகட்டுமென்று அவ்விடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.

அப்போது இருந்தாற் போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவது போல் கருப்பாக ஏதோ அசைந்தது.

"நில் அங்கேயே! ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை" என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக் கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற் போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ?' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில் மிகமிக அருகில் கேட்டது.

"யார் அது சிரிப்பது? மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்கு நேர் வந்து நிற்க வேண்டும்." பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால் பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப் பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாக சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்க வேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வௌவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது.

உயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்களின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக் கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது.

பதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு லேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒலிக் குழப்பம் அங்கு உண்டாயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்து விட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை ஒரே நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்து விட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஓடும் காலடியோசை கேட்டது.

26. வேடம் வெளிப்பட்டது

குழல்மொழியின் முகத்தில் தென்பட்ட வியப்பைக் கண்டு துறவி சிரித்தார். "இந்த அறைக்குள் இருப்பதை நான் எப்படி இவ்வளவு சரியாகக் கண்டு பிடித்துக் கூறினேன் என்று தானே நீ வியப்படைகிறாய்?"

குழல்மொழி அவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் ஒரு கணம் அவருடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"ஏன் அப்படி என்னையே பார்க்கிறாய்? என்னுடைய ஆருடத் திறமையைப் பரிசோதிப்பது போல் நீ கேள்வி கேட்டாய். நான் பதில் கூறினேன். இத்தனைக் கட்டுக் காவல்களையும் கடந்து யவன வீரர்கள் வாளேந்தி நின்று அயராமல் காக்கும் இந்த இடத்துக்குள் இருப்பதைப் புள்ளி பிசகாமல் தெள்ளத் தெளிய அடிகள் எப்படிக் கூறினாரென்று சிந்தித்துப் பார்க்கிறாயா?"

அடிகளின் கேள்விகளைக் கவனிக்காதது போல் இருந்து விட்டு, "சரி! வாருங்கள். மேலே சுற்றிப் பார்க்கலாம்" என்று கூறி அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் குழல்மொழி.

"முடியாது பெண்ணே! நான் ஏமாற மாட்டேன். இந்த யவன வீரர்களின் காவலுக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளாமல் நான் இங்கிருந்து ஓர் அடி கூட நகர மாட்டேன்!" என்று கூறி அவர் பிடிவாதமாக அங்கிருந்து புறப்பட மறுத்தார்.

"அதுதான் அங்கிருப்பதை உங்கள் ஆருடத்தினால் சொல்லி விட்டீர்களே?"

"சொன்னால் மட்டும் போதுமா? எங்களுடைய முன்னோர் சுந்தர முடியையும், வீர வாளையும் நான் ஒரு முறையாவது கண் குளிரக் காண வேண்டாமா?" துறவி உருக்கமான குரலில் அவளைக் கெஞ்சினார்.

"அதென்ன? 'எங்களுடைய முன்னோர்' என்கிறீர்கள்? அடிகளுக்குத் தமிழில் தன்மை, முன்னிலை, படர்க்கை வேறுபாடொன்றும் தெரியவே தெரியாதோ? நீர் தான் பாண்டிய மரபின் இறுதி வாரிசு போலல்லவா பேசுகிறீர்?" என்று திருப்பிக் கேட்டாள் இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி.

"ஏன்? அப்படி இருக்க முடியாதோ? உனக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். இதோ ஒரு கணம் பொறுத்திரு" என்று சொல்லிவிட்டு அங்கே பக்கத்திலிருந்த வேறோர் மண்டபத்தில் நுழைந்து மறைந்தார் அடிகள். அவர் என்ன செய்யப் போகிறார் என்று அறியும் ஆவலோடு அந்த மண்டபத்தின் வாயிலையே பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் குழல்மொழி.

சிறிது நேரம் கழித்து மண்டபத்துக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது அவள் அப்படியே அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இளவரசன் இராசசிம்ம பாண்டியன் அவள் முன்பு வந்து நின்றான். அவனுடைய கவர்ச்சிகரமான கண்களிலும், சிரிப்புக் குடியிருக்கும் செவ்விதழ்களிலும் குறும்புத்தனம் குமிழியிட்டது. வியப்பும், பயமும், வெட்கமும் ஆகிய அத்தனை உணர்ச்சிகளும் அந்தப் பெண்ணின் பிறைச் சந்திரனையொத்த நெற்றியில் சங்கமமாயின.

"நான் தான் துறவி. துறவி தான் நான். இந்த உண்மை உன் தந்தைக்கும் அவருடைய அந்தரங்க ஒற்றனான நாராயனன் சேந்தனுக்கும் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே உனக்கு மட்டும் தெரியவிடாமல் மறைத்துக் கொண்டேன் நான். இப்போது நீயும் தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வந்துவிட்டது. தெரிந்து கொள்" என்றான் இராசசிம்மன்.

துறவியாக வேடம்போட்டு இளவரசராக மாறித் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி நிற்கும் அவரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தாள் அவள்.

"இப்போதாவது சொல்! எதிர்காலத்தில் யாருடைய தலையில் சூடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் கூடவா தனது முன்னோர் பயன்படுத்திய சுந்தர முடியையும் வீரவாளையும் பார்க்கக் கூடாது?"

"இனி உங்களைத் தடுக்க நான் யார்? அதோ அந்த பயங்கரமான அந்த யவனக் காவல் வீரர்களே இன்னாரென்று தெரிந்து கொண்டவுடன் உருவிய வாளை உறைக்குள்ளே போட்டுக் கொண்டு வணங்கி நிற்கிறார்களே?" என்று அதுவரையில் வாய் திறவாமல் இருந்த குழல்மொழி வாய் திறந்து மறுமொழி சொன்னாள்.

"அந்த வாள்களுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்; இதோ குறுகுறுவென்று வண்டு சுழல்வது போல் என்னைப் பார்க்கின்றனவே இந்த வாள்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன" என்று நகைத்துக் கொண்டே அவள் கண்களுக்கு அருகில் சுட்டு விரலை நீட்டிக் காட்டினான் இராசசிம்மன்.

குழல்மொழியின் பொன்னிறக் கன்னங்களில் குங்குமக் கோடுகள் படர்ந்தன. கண்களின் விழித்திரைகளில் இன்ப நிறைவு பொங்கும் உணர்ச்சிகளின் சாயல்கள் ஓடி மறைந்தன.

"வேடம் மாறியதற்கு ஏற்பப் பேச்சும் மாறுகிறாற் போலிருக்கிறதே? இளவரசர் தலைமறைவாக இருந்த காலத்தில் படித்துக் கொண்ட பேச்சுக்கள் போலிருக்கின்றன இவையெல்லாம்?" என்றாள் அவள்.

"எல்லாம் அந்த நாளிலிருந்தே உன்னைப் போன்ற பெண்களிடம் படித்துக் கொண்ட பேச்சுத்தானே? பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனை நந்தவனத்தில் சிறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்போமே, அப்போது நடந்ததெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா குழல்மொழி? உங்களுக்கெல்லாம் அப்போது ஏழெட்டு வயது கூட இருக்காது. பட்டுப் பாவாடை மண்ணில் புரள நீ, தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி இன்னும் இரண்டு மூன்று சிறுமிகள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனை நந்தவனத்துக்குப் பூப்பறிக்க வருவீர்கள். நான் அப்போது பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன். வாட்போர் கற்றுக் கொண்டிருந்த சமயம் அது. வேடிக்கையாக வாளை உருவிச் செடிகளை வெட்டுவேன். உங்கள் பூக் கூடைகளைத் தட்டி விடுவேன். உங்களுக்கு அப்போது எப்படிக் கோபம் வரும்? என்னை என்னென்ன பேச்சுப் பேசுவீர்கள்?" பழைய இளமை நினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது ஏற்படும் ஒருவித ஏக்கம் மிகுந்த குரலில் பேசினான் இராசசிம்மன்.

"ஏ, அப்பா! உங்களுக்குத்தான் எவ்வளவு நினைவாற்றல்? நாங்கள் கூட மறந்து விட்டோம். சிறு வயதில் நடந்தவற்றையெல்லாம் மறந்து விடாமல் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறீர்களே?" என்று சொல்லிச் சிரித்தாள் குழல்மொழி. சொல்லி முடித்ததும் அவள் நெஞ்சம் மேலெழுந்து தணிய ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் உள்ளத்திலும் துள்ளித் திரிந்த காலமான அந்தப் பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகள், அவற்றைப் பற்றிய நினைவு அலைகள், கழிவிரக்கங்கள் எல்லாம் குமுறி எழுந்தன.

"வயது ஆக ஆக மனிதனுக்கு எது தன்னுடைய சொந்தக் கணக்கில் மீதமாகிறது தெரியுமா, குழல்மொழி? பழைய இளமை நினைவுகள் மட்டும் தான். இதோ என்னைப் பார், எத்தனை அரசியல் குழப்பங்கள், வெற்றிகள், தோல்விகள், சூழ்ச்சிகள், சோதனைகள் எல்லாம் வயதான பிறகு என்னைப் பிடித்துக் கொண்டன! தெரிந்தோ, தெரியாமலோ என் வயதையும் பொறுப்பையும் இவை அதிகப்படுத்தி விட்டன. அந்தப் பிள்ளை மனம், அந்த விளையாட்டுத் தனமான குறும்புகள் எல்லாம் இப்போது கல்லாக முற்றி விட்டன."

தன் உள்ளத்தின் அடக்க முடியாத துன்ப உணர்ச்சிகளின் தடுக்க முடியாத வெள்ளத்தையே உடைத்து விடுவது போல் அவளிடம் மனம் திறந்து பேசினான் அவன்.

பேசிக் கொண்டே இருந்தவன் பேச்சை நிறுத்திவிட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த போது மென்மையான சோகம் படிவதைப் போன்ற கண்களின் கடைக்கோடியில் இரு நீர் முத்துகள் உதிர இருந்தன. அவன் பார்த்ததும் திடுக்கிட்டவள் போலத் தன் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் குழல்மொழி.

"அடடா! உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ பேசி உன் துன்பத்தைக் கிளறி விட்டுவிட்டேன் போலிருக்கிறது. இதுவரை நான் கூறியவறை மறந்து விடு. வா! உள்ளே போய் அந்தச் சுந்தரமுடியையும் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும் இருவருமே பார்த்துவிட்டு வருவோம்."

"நான் வரவில்லை! நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்."

"பரவாயில்லை! நீயும் வா!" இராசசிம்மன் அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.

ஆகா! அந்த அறைக்குள் தான் என்ன ஒளி! என்ன அழகு! தாமரைப் பூவைப் போல் வட்டமாகப் பளிங்கு மேடை! அந்த மேடையின் மேல் ஒரு நீண்ட, பெரிய தந்தப் பேழை, பக்கத்தில் பட்டு உறையினால் பொற் சிம்மாசனம் மூடி வைக்கப்பட்டிருந்தது. தரைப் பரப்பின் மேல் குங்குமச் சிவப்பில் ஒளி நிறைந்த இரத்தினக் கம்பளங்களை விரித்திருந்தார்கள். கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் நிற்பதைப் போன்று பயபக்தியோடு தந்தப் பேழைக்கு முன் வந்து நின்றனர் இராசசிம்மனும் குழல்மொழியும். அறை முழுவதும் பரிமளமான மணங்கள் கலந்து நிறைந்திருந்தன. தெய்வச் சிலைக்கு முன் நின்று மரியாதை மிளிரும் கண்களால் பார்ப்பது போல் அந்தப் பேழையை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான் இராசசிம்மன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" அவள் கேட்டாள்.

"பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? ஊழி ஊழியாகப் பொதியமலைத் தென்றலையும் முதிய தமிழ்ப் புலமையையும் போற்றிப் பாராட்டி அசைந்த முடி எதுவோ அது இப்போது இந்த நான்கு முழ நீளமுள்ள தந்தப் பேழைக்குள் அடங்கி விட்டதே!" என்று இரங்கிய குரலில் கூறிக் கொண்டே பிறகு அருகில் நெருங்கி அந்தப் பேழையைத் திறந்தான் அவன். உள்ளிருந்து ஒரு நட்சத்திர மண்டலமே எட்டிப் பார்ப்பது போல் ஒளிக்கீற்றுகள் பாய்ந்தன. மஞ்சள் நிறப் பட்டு விரிப்பின் மேல் அந்த மின்னல் முடி வெண்ணிலா விரித்தது. அதனருகே பேழையின் நீளத்துக்குச் சரியாக வைரக் கற்களும், வெண் முத்துக்களும் விரவிப் பதித்த உறைக்குள் வீரவாள் ஒன்று மறைந்து கொண்டிருந்தது.

'மகாமன்னரான என் தந்தைக்குப் பின்னர் இந்த ஒளி முடியும், வீரவாளும் இப்படியே பேழையில் உறங்க வேண்டியதுதானா? இவற்றைப் பேழைக்குள் பார்க்கும் போது, கண்ணின் நடுமையத்துக் கருவிழிகளைக் கூச வைக்கும் இந்த ஒளியைப் பார்க்கும் போது, என் உள்ளம் ஏன் இப்படிப் பொங்கி மேலெழுகிறது? உணர்ச்சிகளில் ஏன் புதிய வேகம் உண்டாகிறது? வெறும் முடியும், வாளும் மட்டுமா இதற்குள் அடைபட்டிருக்கின்றன? என் கண்களுக்கு இவை வேறொரு விதமாகவும் தோன்றுகின்றனவே! என் தந்தையின் தலைமுறைக்குப் பாண்டியப் பேரரசின் புகழும், வீரமுமே இப்படிச் சிறைப்பட்டு விட்டனவா?' அவனுடைய உள்ளத்தில் அலை அலையாகச் சிந்தனைகள் எழுந்தன.

இரண்டு கைகளாலும் அவற்றைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். குழல்மொழி எதுவும் பேசத் தோன்றாமல் மருண்ட விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் பேழையை மூடிவிட்டுக் கடுமையான காவலுக்கு உட்பட்ட அந்தச் சிறிய அறையைச் சுற்றிலும் தன்னுடைய விழிகளைச் சுழற்றினான்.

பின்பு, "போகலாம் வா!" என்று குழல்மொழியையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். யவன வீரர்கள் மறுபடியும், வணக்கத்தோடு வழிவிட்டு விலகி நின்று கொண்டனர்.

மாளிகையின் மற்றப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் போது குழல்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் தன் தோற்றத்தைப் பழையபடி துறவிபோல் மாற்றிக் கொண்டு விட்டான் அவன்.

கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் நிலா முற்றத்தின் திறந்த வெளியில் வந்து நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த மாளிகையிலேயே உயர்ந்த இடம் அதுதான். அங்கிருந்து கீழே நாற்புறத்துக் காட்சிகளும் அற்புதமாகத் தெரிந்தன. இடையாற்று மங்கலம் என்ற பசுமைப் போலப் பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது. வர்ணக் கலவைகளை வாரி இறைத்தது போல அரண்மனை நந்தவனத்தில் பல நிற மலர்கள் தெரிந்தன.

"உலகத்தின் சாதாரணமான அழகை உலக நிலைக்கும் மேலே இருந்து கண்டால் எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்த்தாயா?" என்று சிரித்துக் கொண்டே கூறினான் இராசசிம்மன்.

"உண்மைதான்! எந்தச் சாதாரணப் பொருளின் நிலையையும் நன்றாக உணர வேண்டுமானால் அதை விட உயர்ந்த நிலையிலிருந்து தான் காண வேண்டும்." குழல்மொழி பேச்சில் தத்துவத்தைக் கொண்டு வந்து புகுத்தினாள்.

ஆனால் இராசசிம்மன் அவளுடைய பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வேறொரு காட்சியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

"இதென்ன? என்னிடம் பேச்சைக் கொடுத்துவிட்டு இதைக் கவனிக்காமல் எங்கே பார்க்கிறீர்கள்?" என்று சிறிது சினத்துடனே கடிந்து கொண்டு அவன் பார்வை சென்ற திசையில் தானும் பார்த்தாள் குழல்மொழி.

பறளியாற்றின் நடுவில் ஒரு படகு வேகமாக அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தது. படகில் வீற்றிருந்தவர்கள் நன்றாகத் தெரியாவிட்டாலும் வேளான் தான் அதைச் செலுத்திக் கொண்டு வருகிறான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. படகில் இருந்த மற்ற மனிதர்களை இன்னாரென்று குழல்மொழியால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த திசையில் பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் இராசசிம்மனின் முகத்தில் வியப்பு மலர்வதை அவள் கவனித்தாள்.

"இவ்வளவு அவசரமாக வேளான் யாரைப் படகில் ஏற்றிக் கொண்டு வருகிறான்?" என்று இராசசிம்மனிடமே கேட்டாள் குழல்மொழி.

"ஆம், அவசரம் தான். நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதன் என்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறான். நீ சிறிது நேரம் இங்கேயே இரு. அவனைச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே மேல்மாடத்திலிருந்து இறங்கிச் சென்று விட்டான் இராசசிம்மன். அவன் நின்று பதில் சொல்லாமல் வேகமாகச் செல்வதைக் கண்டு திகைத்துப் போய் நின்றாள் குழல்மொழி.

27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்

நிலவறையிலிருந்து ஆள் தப்பித்துக் கொண்டு மேலே ஓடும் காலடியோசை கேட்டதும் நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்று விடும் போலிருந்தது. அப்படியே இருட்டில் தாவிப் பாய்ந்து ஓடிப் பிடிக்கலாமென்றால் காலடியில் அவனைச் சுற்றிக் கூர்மையான வாள்கள் சிதறிக் கிடந்தன.

அவற்றை மிதியாதபடி பதறாமல் கீழே குனிந்து உட்கார்ந்து கொண்டு கை விரல்களை அறுத்து விடாமல் சிதறியிருந்த வாள்களை ஒதுக்கி வழி உண்டாக்கிக் கொண்டான். பின்பு தப்பிச் சென்றவனைத் துரத்திக் கொண்டு படியேறி ஓடினான். ஆனால் தப்பித்தவன் போகிற போக்கில் தாழிட்டுக் கொண்டு போயிருப்பதைக் கண்டதும் சேந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பலங்கொண்ட மட்டும் கதவைத் தன் கைகளால் ஓங்கித் தட்டினான். நீண்ட நேரமாக அப்படித் தட்டிக் கொண்டே இருந்தான். கைகள் தான் வலித்தன. "சரிதான்! வகையாக மாட்டிக் கொண்டு விட்டேன். இந்த முரட்டுக் கதவை விடிய விடியத் தட்டினாலும் யாருக்குக் கேட்கப் போகிறது? இந்த இருட்டுக் கிடங்கில் பட்டினி கிடந்து சாக வேண்டுமென்று தான் என் தலையில் எழுதியிருக்கிறதோ என்னவோ?" என்று கதவடியில் கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான். காலையில் இடையாற்று மங்கலத்திலிருந்து கோட்டாற்றுக்கும், கோட்டாற்றிலிருந்து தளபதியை அலைக்கழிப்பதற்காகத் திருநந்திக்கரைக்கும் அலைந்து களைத்திருந்த நாராயணன் சேந்தன் உட்கார்ந்தவாறே தூங்கத் தொடங்கி விட்டான்.

மறுபடியும் அவன் கண் விழித்த போது அவனுக்காகவே திறந்து வைக்கப்பட்டிருந்தது போல் நிலவறையின் மேற்கதவு திறந்திருந்தது. கதவுக்கு அப்பால் மந்திராலோசனை மண்டபத்தில் யாரோ பெண்களின் சிரிப்பொலியும் பேச்சொலியும் கேட்டன. அதற்குள் ஒரு குட்டித் தூக்கம் தூங்கி முடித்திருந்த சேந்தன் மேலே எழுந்து வந்தான். 'யார் கதவைத் திறந்து வைத்திருக்கக் கூடும்?' என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. 'தான் கைவலிக்கத் தட்டியபோது ஒருவரும் திறக்கவில்லை. அலுப்பினால் கண் அயர்ந்து விட்ட போது யாரோ பூனை போல் மெல்ல வந்து கதவைத் திறந்திருக்கிறார்கள். திறந்ததுதான் திறந்தார்கள், கீழே கதவருகில் உட்கார்ந்து கொண்டிருந்த என்னைக் கவனிக்கவில்லையே!' என்று அவன் நினைத்தான்.

உள்ளிருந்து வெளியேறி மேலே வந்த பின் கதவை முன் போலவே அடைத்துத் தாழிட்டு விட்டு மந்திராலோசனை மண்டபத்தில் கும்மாளமடிக்கும் அந்தப் பெண்கள் யார் என்று பார்க்க வந்தான்.

தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, மகாராணியாரின் உடன் கூட்டத் தோழிகளைச் சேர்ந்த இன்னும் இரண்டு மூன்று பெண்கள் - எல்லோரும் அங்கு உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டினிடையே இலக்கியச் சர்ச்சையும் நடந்து கொண்டிருந்தது.

"ஏண்டி, விலாசினி? தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரா? அல்லது அதங்கோட்டாசிரியரின் மாணவரா?" என்றாள் பகவதி.

"சதுரங்க விளையாட்டினிடையே இந்தச் சந்தேகம் உனக்கு எங்கிருந்து முளைத்தது...?" விலாசினி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலா நாராயணன் சேந்தன் அங்கே தலையைக் காட்ட வேண்டும்?

"ஆ! அதோ, அகத்தியரே நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவரையே நேரில் கேட்டு விடலாம்" என்று நாராயணன் சேந்தன் குட்டையாயிருப்பதைச் சொல்லாமல் சொல்லிக் கேலி செய்தாள் ஒருத்தி.

"ஓ! இந்த அகத்தியரா? இவருக்கு உளவறியும் வேலையைத் தவிர எதுவும் தெரியாதே. பாவம்! இந்த உலகத்தில் எல்லோருடைய உடம்பும் மேல் நோக்கி வளருகின்றன என்றால் இவருடைய உடம்பு மட்டும் கீழ் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது" என்று சேந்தன் காதில் கேட்டு விடாமல் மெல்லச் சொல்லிச் சிரித்தாள் ஒருத்தி.

"நிலவறைக் கதவைத் திறந்தது நீங்கள் தானா?" என்று கடுமையான குரலில் அவர்களைக் கேட்டான் சேந்தன்.

விளையாட்டை நிறுத்திவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். அவர்கள் பதில் சொல்லாமலிருந்தது அவனுடைய கடுமையை அதிகப்படுத்தியது.

"பெண்களாகச் சேர்ந்து கொண்டு விளையாட்டாக ஏதாவது செய்து விடுகிறீர்கள். அதனால் பெரிய பெரிய காரியங்கள் கெட்டுப் போய்விடுகின்றன."

"ஐயா! ஒற்றர் பெருமானே! உமக்குக் கோடி வணக்கங்கள் செலுத்துகிறேன். எங்களிடம் வம்புக்கு வராமல் போய்ச் சேருங்கள். உள்ளே இருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது. 'திறக்கலாமா, வேண்டாமா?' என்று நீண்ட நேரம் யோசித்தோம். கடைசியில் நாங்கள் திறந்த போது யாரும் உள்ளேயிருந்து வெளியில் வரவில்லை. நிலவறைக்குள் எட்டிப் பார்த்ததில் படியருகில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. இரண்டு மூன்று முறை 'யார்? யார்?' என்று இரைந்து கேட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நிலவறைக்குள் இருட்டாக இருந்ததனால் எங்களுக்குப் பயமாக இருந்தது. பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்" என்று பகவதி அவனுக்குப் பதில் கூறினாள்.

சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து சென்றான். அவன் மனத்தில் சந்தேகங்களும், வயிற்றில் பசியும், உடம்பில் அலுப்பும் வளர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையே வேறொரு வகைப் பயமும் அவனுக்கு ஏற்பட்டது. 'முன்கோபக்காரனும், செல்வாக்கு மிகுந்தவனுமான தளபதி வல்லாளதேவனிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டேனே, அதன் விளைவு என்ன ஆகுமோ?' என்று உள்ளூர அஞ்சிக் கொண்டிருந்தான்.

'திருநந்திக்கரையிலிருந்து அரண்மனைக்கு வந்து சேருவதற்குத் தளபதிக்குக் குதிரை கிடைக்கப் போவதில்லை. தளபதி கோட்டாறிலுள்ள படைச்சாலைக்குச் சொல்லி அனுப்பிக் குதிரை வரவழைக்க வேண்டும். அல்லது கடல் துறையிலிருந்து மிளகுப் பொதி ஏற்றிவிட்டுத் திரும்பும் வணிகப் பெருமக்களின் வாகனங்களில் ஏதாவதொன்றில் இடம்பிடித்து வரவேண்டும். இந்த இரண்டு வழியுமே சாத்தியப் படாவிட்டால் இன்றிரவிற்குள் இங்கே வந்து சேர முடியாது.' இந்த ஒரே ஒரு சமாதானம் தான் சேந்தனுக்கு தற்காலிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

'இன்னும் கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்குள் எங்கே முடிந்திருக்கப் போகிறது?' என்ற எண்ணத்தினால் மகாமண்டலேசுவரர் பட்டி மண்டபத்தில்தான் இருப்பாரென்று கருதிக் கொண்டு அங்கே சென்றான். ஆனால் பட்டிமண்டபத்தில் யாருமில்லை. கூட்டமும் முடிந்து அவரவர்கள் தங்கும் இடங்களுக்குப் போயிருந்தார்கள். சேந்தனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

பட்டிமண்டபத்திலிருந்து அவன் திரும்பிய போது பின்புறம் தோள்பட்டையின் வலதுபுறம் ஒரு கை அழுத்தித் தொட்டது. நாராயணன் சேந்தன் அலறிவிட இருந்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பயத்தை அடக்கியவனாகத் திரும்பிப் பார்த்தான். பட்டிமண்டபத்துத் தூண் ஒன்றின் மறைவிலிருந்து ஆபத்துதவிகளின் படையணியின் தலைவனான மகரநெடுங்குழைக்காதன் சேந்தனுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் அப்போதிருந்த நிலையைப் பார்த்த போது சேந்தனுக்கு வியப்பு மட்டும் ஏற்படவில்லை. பயம் தான் அதிகமாக ஏற்பட்டது. மகர நெடுங்குழைக்காதனின் கண்கள் நெருப்புத் துண்டங்களைப் போலச் சிவந்திருந்தன. அங்கியும், மேலாடையும், அங்கங்கே தூசியும் அழுக்கும் பட்டுக் கிழிந்திருந்தன. முகத்திலும் கை கால்களிலும் சிராய்த்து இரத்தக் கசிவு தெரிந்தது. அந்த நிலையில் நாராயணன் சேந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் சிரிக்க வேண்டுமென்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தது போலிருந்தது. பயங்கரமாகவும் இருந்தது அந்தச் சிரிப்பு.

"என்ன ஐயா? இங்கே பட்டிமண்டபத்துத் தூண்மறைவில் நின்று கொண்டு என்ன செய்கிறீர்?" என்று கேட்டான் சேந்தன். குழைக்காதன் சேந்தனுக்குப் பதில் சொல்லாமல் அவன் முகத்தை உற்றுப் பார்த்து மெல்லச் சிரித்தான். இயற்கையாகச் சிரிக்கிற சிரிப்பாக இல்லை அது.

"ஆபத்துதவிகளின் செயல் மட்டும் தான் கடுமையானதென்று இதுவரையில் கேள்விப்பட்டிருந்தேன். அவர்களுடைய பார்வையும், சிரிப்பும் கூட அல்லவா கடுமையாக இருக்கின்றன!"

சேந்தன் அதோடு பேச்சை விடவில்லை. மேலும் தொடர்ந்தான். "உங்கள் திருமேனியில் தென்படும் விழுப்புண் (காயங்கள்)களையும், கிழிசல்களையும் பார்த்தால் யாருடனோ போரிட்டுவிட்டு வந்திருப்பது போல் தோன்றுகிறதே?"

"அப்பனே! என் உடம்பைப் பற்றிச் சொல்ல வந்து விட்டாய். உன்னையே கொஞ்சம் நிதானமாகப் பார்த்துக் கொள். நீ எப்படியிருக்கிறாய் என்பது தெரியவரும்." எதையோ மறைத்துக் கொண்டு சிரிக்கிறாற் போன்ற அந்த மர்மச் சிரிப்பு, அது ஆபத்துதவிகள் படைத்தலைவனுக்கே உரியது போலும். பேச்சின் இறுதியில் கடைசி வார்த்தை அவன் வாயிலிருந்து வெளிவந்து முடிந்த பின் அந்தச் சிரிப்பு மலர்ந்தது. குழைக்காதன் கூறிய பின்புதான் சேந்தன் தன் தோற்றத்தைத் தானே பார்த்துக் கொண்டான். ஏறக்குறைய தன் நிலையும் அதே போல் இருந்ததைச் சேந்தன் அப்போதுதான் உணர்ந்தான். 'அடடே! இந்தத் தோற்றத்தோடு மகாமண்டலேசுவரரைப் பார்ப்பதற்கு வேறு கிளம்பி விட்டேனே! நல்லவேளை, இவன் இதைக் கண்டு சொல்லியிராவிட்டால் இப்படியே போய் அவருக்கு முன்னால் நின்றிருப்பேன்' என்று எண்ணியவனாய் மகரநெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு உடைமாற்றி வருவதற்குக் கிளம்பினான்.

நாராயணன் சேந்தனின் தலைமறைந்ததோ இல்லையோ, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் பட்டிமண்டபத்துக்குள் நுழைந்து மந்திராலோசனைக் கூட்டம் நடந்த இடத்தில் எதையோ தேடினான் ஆபத்துதவிகள் தலைவன். அங்கே அவன் தேடிய பொருள் எதுவோ அது கைக்குக் கிடைப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. அவன் எடுத்துக் கொண்டு போவதற்காகவே அங்கு வைக்கப்பட்டிருந்தது போல் சுலபமாகக் கிடைத்துவிட்டது.

பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த போது மகாமண்டலேசுவரர் எந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாரோ, அதன் கீழே தான் அந்தப் பொருள் அவனுக்குக் கிடைத்தது. அது வேறொன்றுமில்லை, ஆபத்துதவிகளின் முத்திரைச் சின்னம் பொறித்த ஒரு பட்டுத்துணி. கீழே குனிந்து எடுப்பதற்கு முன் அதைத் தான் எடுப்பதை எங்கிருந்தாவது யாராவது பார்க்கிறார்களா என்று அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கும் போலும்! ஒரு வேளை தன்னைச் சோதிப்பதற்காகத்தான் அதைத் தேடி வருவதைப் பார்ப்பதற்காகவே அவ்வளவு சுலபமாகப் போட்டு வைத்திருக்கலாமே என்று அவன் பயந்திருக்க வேண்டும்.

அதனால் தான் அவ்வளவு தயக்கத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு அவன் அதை எடுத்தான். ஆனால் தன்னுடைய நிதானமும் முன்யோசனையும் தன்னை ஏமாற்றிவிட்டன என்பதை அந்தத் துணியை எடுத்து வழக்கம் போல் இடுப்பில் அணிந்து தலை நிமிர்ந்த போது அவன் தெரிந்து கொண்டான்.

மேலேயிருந்து இரண்டு பெரிய குடை மல்லிகைப் பூக்கள் அவனுடைய முன் தலையில் உதிர்ந்து நெற்றியில் நழுவி விழுந்தன. அந்தப்புரத்து நங்கையர்கள் தங்கள் அளக பாரத்திற்குப் பூசும் வாசனைத் தைலத்தின் மணம் அந்தப் பூவின் மணத்தில் விரவியிருந்தது. மகரநெடுங்குழைக்காதன் திடுக்கிட்டு மேலே நிமிர்ந்து பார்த்தான்.

மேலே அந்த இடத்துக்கு நேரே அந்தப்புரத்தின் மாடத்தில் ஒரு பெண் முகம் விருட்டென்று திரும்பி மறைந்தது. திரும்பும் போது கருநாகம் போன்ற அந்தப் பெண்ணின் சடை சுழன்று அதிலிருந்து மல்லிகைப் பூக்களில் மேலும் சில அவன் மேல் உதிர்ந்தன. இளம் பெண் முகமாகத்தான் தெரிந்தது. திரும்பிய வேகத்தில் அவனால் முகத்தை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கு முடியவில்லை. 'எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு நான்கு புறமும் பார்த்தேன்! மேலே பார்க்கத் தவறி விட்டேனே!' என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் மகரநெடுங்குழைக்காதன். சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டு அங்கேயே நின்றான். கீழே கிடந்த அந்தக் குடை மல்லிகைப் பூக்களை ஒன்று விடாமல் பொறுக்கித் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

அவன் புறப்பட்டுச் சென்றதும் அங்கு மற்றோர் ஆச்சரியம் நிகழ்ந்தது. உடை மாற்றிக் கொண்டு மகாமண்டலேசுவரரைச் சந்திக்கச் சென்று விட்டதாக நாம் யாரைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அவன் பட்டிமண்டபத்து மேல் கோடித் தூண் ஒன்றின் மறைவிலிருந்து வெளிவந்தான். உண்மையில் நாராயணன் சேந்தன் மகரநெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு போவது போல் போக்குக் காட்டினானே ஒழிய அங்கிருந்து போய் விடவில்லை. பட்டிமண்டபத்தில் ஆபத்துதவிகள் தலைவன் அலங்கோலமான நிலையில் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே சேந்தனைப் போல் அறிவுக் கூர்மையுள்ள ஒற்றனுக்குச் சந்தேகங்கள் ஏற்படாமலிருக்குமா? தெளிவற்ற பல குழப்பமான எண்ணங்களும், சந்தேகங்களும் அவனுக்கு உண்டாயின. 'ஆபத்துதவிகள் தலைவன் பட்டிமண்டபத்தில் தனியாக என்ன செய்கிறான்?' என்பதைப் பார்த்து வைத்துக் கொண்டால் பின்பு மகாமண்டலேசுவரர் கேட்கும் போது கூறுவதற்கு வசதியாக இருக்குமென்று தான் அவன் மறைந்திருந்து அதைக் கண்காணித்தான்.

அதன் பின் சேந்தன் பட்டிமண்டபத்திலிருந்து வெளியேறிப் பராந்தகப் பெரு வாயிலுக்கு வந்து நின்றான். பராந்தகப் பெரு வாயிலிலிருந்து மேற்கு நோக்கி இரண்டாங் கோட்டை வாசல் திருச்சுற்றினுள்ளே சென்றால் அரண்மனை விருந்தினர் மாளிகைகள் பூந்தோட்டத்துக்கு நடுவே இருந்தன. அந்த மாளிகையில் ஒன்றில் தான் மகாமண்டலேசுவரர் தங்கியிருக்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும்.

கோட்டைக்குள் யாரோ குதிரையில் வரும் ஒலி கேட்டு சேந்தன் பராந்தகப் பெருவாயிலின் முகப்பில் தயங்கி நின்றான். வருவது யார் என்று பார்த்து விட்டு அதன் பின் விருந்தினர் மாளிகைக்குப் போகலாமென்பது அவன் எண்ணம். ஒரே குதிரையில் இரண்டு பேர்கள் ஏறிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. முன்னால் உட்கார்ந்திருந்தவன் இன்னாரென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. தோற்றத்திலுள்ள நிலையைக் கொண்டு பார்த்தால் ஏதோ அரசாங்கத் தூதன் மாதிரி இருந்தது. குதிரை அருகில் வந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டாவது ஆளின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் பயத்தோடு சரேலென்று பூந்தோட்டத்தின் அடர்ந்த பசுமைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டான் சேந்தன். கோட்டைக்குள் வந்த குதிரையில் வீற்றிருந்த இரண்டாவது ஆள் வல்லாளதேவன்.

28. நள்ளிரவில் நால்வர்

முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் எதிர்பாராத விதமாகக் கரவந்தபுரத்துத் தூதுவனைச் சந்திக்க நேர்ந்தது இரண்டு வகையில் நன்மையாக முடிந்தது தளபதி வல்லாளதேவனுக்கு. ஒன்று அந்தத் தூதுவன் கொண்டு வந்திருந்த அதிமுக்கியமான அவசரச் செய்தியைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றொரு நன்மை, 'அரண்மனைக்குப் போவதற்குக் குதிரையில்லையே?' என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் தூதுவனுடைய குதிரையிலேயே இருவரும் போய்விடலாம். பசி தீர அறக்கோட்டத்தில் சாப்பிட்டுவிட்டுப் பின்பு அரண்மனைக்குப் புறப்படலாம் என்று தான் முதலில் தளபதி நினைத்திருந்தான். ஆனால் தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தியின் அவசரத்தை அறிந்த போது பசி, களைப்பு எதுவுமே அவனுக்கு மறந்து போய்விட்டன. தூதுவனின் குதிரையிலேயே பின்புறமாகத் தாவி ஏறி உட்கார்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான்.

"மகா சேனாதிபதி எங்களுடைய அறக்கோட்டத்தையும், எங்களையும் இப்படி ஒரேயடியாக அவமதித்து விட்டுப் போவது கொஞ்சம் கூட நன்றாயில்லை. இன்னும் ஓரிரண்டு நாழிகைகள் தங்கி உணவருந்தி எங்கள் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு போகலாமே!" என்று முன்சிறை அறக்கோட்டத்திலுள்ள அண்டராதித்த வைணவனும் அவன் மனைவி கோதையும் மரியாதையாக வேண்டிக் கொண்டதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

பதில் சொல்லாமலே அவன் குதிரையை விட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்து, 'தளபதிக்குத் தம் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது?' என்று எண்ணிக் கொண்டு மேலும் வற்புறுத்திச் சொல்லாமல் பயந்து போய் நின்று விட்டனர் வைணவனும் அவன் மனைவி கோதையும்.

"தூதுவனே! நீ கொண்டு வந்திருக்கும் செய்தி மட்டும் மெய்யாக இருக்குமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மைப் போல் பரிதாபப்படத் தக்கவர்கள் வேறு யாருமில்லை. நல்ல சமயத்தில் நீ வந்திருக்கிறாய். இப்போது அரண்மனையில் மகாமண்டலேசுவரர் உள்படக் கூற்றத் தலைவர்கள் எல்லோரும் இருப்பார்கள். நாம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி எல்லோரிடமும் கலந்து பேசிவிடலாம். குதிரையை மட்டும் இன்னும் சிறிது வேகமாகவே செலுத்திக் கொண்டு போ" என்று தூதுவனைத் துரிதப்படுத்தினான் தளபதி. தூதுவனும் தன்னால் இயன்ற அளவு குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.

பட்டி மண்டபத்தில் நடந்த கூற்றத் தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த எதிர்காலத் தீர்மானங்களை உருவாக்கியிருந்தார்கள்.

அன்று கூற்றத் தலைவர்களுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் முன்னால் தன் நிலையைப் பற்றி விவரிக்கும் போது மகாராணி வானவன்மாதேவிக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.

"மகாமன்னர் இறந்த பிறகு மகாமண்டலேசுவரரும் நீங்களும் எனக்குப் பெரும் பதவியையும் மரியாதையையும் அளித்திருக்கிறீர்கள். ஆனால் இந்த அரசபோக ஆடம்பரங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்கும் பொறுமை எனக்கு இல்லை. என் அருமைப் புதல்வன் எங்கே இருக்கிறானென்றே நான் அறிய முடியவில்லை. என்னைச் சுற்றிலும் துன்பங்களையும், சூழ்ச்சிகளையும் காண்கிறேன். எனது பிறந்தகமாகிய சேர நாட்டுக்காவது சென்று அமைதியாக வாழ்வேன். அதையும் செய்ய விடாமல் உங்கள் அன்பு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மகாமன்னரையும் இழந்து யாருக்காக இங்கு வாழ வேண்டும்? இப்படி நான் வாழ்வது கூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. என்னையே அழித்து விடுவதற்குக் கூடச் சூழ்ச்சிகள் நடக்கின்றன."

இப்படி மகாராணி வானவன்மாதேவியார் பேசிக் கொண்டு வரும்போதே, "மகாராணியார் அப்படி அஞ்சக் கூடாது. தென்பாண்டி நாட்டு வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், கைகளில் வலிமையும், வாளில் ஒளியும் இந்த விநாடி வரை குன்றிவிடவில்லை. மகாராணியாரை அழிக்க எந்தத் தீய சக்தியாலும் முடியாது" என்று ஆவேசம் பொங்கும் குரலில் உறுதியாகக் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி. அதை ஆமோதிப்பது போல் அங்கிருந்த மற்றவர்களும் சிரக்கம்பம் செய்தனர்.

"அது சரிதான்! குமார பாண்டியர் எங்கேயிருக்கிறார் என்றறிவதற்கு நாமாகவே ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா? இப்படி வாளாவிருந்தால் அவரைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள முடியும்?" என்று மகாமண்டலேசுவரர் பக்கமாகத் திரும்பி ஒரு கேள்வியைக் கேட்டார் சுழற்கால் மாறனார்.

மகாமண்டலேசுவரர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பே, மற்றவர்களும் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.

"இளைய சக்கரவர்த்தியை உடனே அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டாமா?" என்று கேட்டார் ஒருவர்.

"மகாராணியாரின் கவலைகள் குறைந்து நிம்மதியும், அமைதியும் உண்டாக வேண்டுமானால் குமார பாண்டியர் எங்கிருந்தாலும் தேடிக் கொண்டு வந்து முடிசூட்டி விடுவதே முறை" என்றார் மற்றொருவர்.

"எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள். என்னுடைய கருத்தை விரிவாகச் சொல்லி விடுகிறேன். இதுவரை இந்த எண்ணங்கள் எல்லாம் எனக்குத் தோன்றாமல் போய்விடவில்லை. அல்லது தோன்றியும் எவற்றையும் செயல்படுத்தக் கூடாது என்பதற்காக நான் பேசாமல் இருக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு தயக்கத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும். இளவரசர் எங்கேயிருக்கிறார் என்று தேடுவதோ, தேடிக் கண்டுபிடிப்பதோ எனக்குக் கடினமான காரியமில்லை. நினைத்தால் இப்போதே கொண்டு வந்து நிறுத்தி விட முடியும் என்னால். ஆனால் நான் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறேன். தென்பாண்டி நாட்டு அரசியலில் ஒழுங்கையும் அமைதியையும் ஏற்படுத்தி விட்டால் நமக்கு இருக்கும் பிற பகைகள் நீங்கும். அதன்பின் குமார பாண்டியருக்கு முடிசூட்டலாமென்பது என் எண்ணம்" என்று அவர் கூறிய சமாதானத்தைக் கேட்ட போது மற்றவர்களுக்கு அவரை எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

"அலை ஓய்ந்து நீராட முடியாது. பகைவர்களை எண்ணிக் கொண்டே எவ்வளவு நாட்களுக்குப் பேசாமல் இருக்க முடியும்? தவிர முடிசூட்டுவதற்கும் இளவரசரைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தம்? முடி சூட்டுவதைப் பின்னால் வைத்துக் கொண்டாலும், இளவரசர் இப்போதே இங்கு வந்து இருக்கலாமே! அவ்வாறு இருப்பது மகாராணியாருக்கும் ஆறுதல் அளிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று துணிந்து இடையாற்று மங்கலம் நம்பியை நோக்கி நேருக்கு நேர் கூறினார், அதுவரை ஒன்றும் பேசாமல் அமைதியாக வீற்றிருந்த அதங்கோட்டாசிரியர்.

"வடதிசை மன்னர்களின் படையெடுப்பு இந்தச் சமயத்தில் நேரலாமென்று மகாமண்டலேசுவரர் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. குமார பாண்டியர் இங்கு வந்திருந்தால் படையெடுப்பைச் சமாளிக்க நமக்கு உதவி கிடைக்கும். குமார பாண்டியரின் தாய்வழி மாமன்மார்களும், மகாராணியாரின் பிறந்த வீட்டுச் சகோதரரும் ஆகிய சேரர் படை உதவியை நாம் பெறலாம். சேர வேந்தரிடம் அவர் படை உதவி செய்வதற்கு மறுக்க இயலாதபடி அவருடைய மருமகராகிய குமார பாண்டியரையே தூதனுப்பலாம். இதையெல்லாம் மகாமண்டலேசுவரர் நன்றாகச் சிந்தித்திருந்தால் இளவரசரைத் தேடி உடனே இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கலாமே!" என்று பவழக் கனிவாயரும் அதங்கோட்டாசிரியரோடு சேர்ந்து கொண்டார்.

பேசுவதற்கு அஞ்சி உட்கார்ந்திருந்த கூற்றத் தலைவர்களும் சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக அதே கருத்தை ஆதரித்துப் பேசத் தலைப்பட்டனர். மகாராணியாரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை இடையாற்று மங்கலம் நம்பி குறிப்பாகப் புரிந்து கொண்டார். பல்லாண்டுகளாக நிமிர்ந்து நின்று பிடிவாதத்தாலும், அறிவுத் திறனாலும், தம் எண்ணமே எல்லாருடைய எண்ணமாகவும், தம் சொல்லே எல்லோருடைய சொல்லாகவும், தம் செயலே எல்லோருடைய செயலாகவும் - வெற்றி பெற்று வந்த அவருடைய அரசியல் வாழ்வில் முதல் முதலாக ஒரு வளைவு ஏற்பட்டது. மற்றவர்களை மாற்றி அவர்களைத் தம் வழிக்குக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியமான கலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அவர் முதன் முதலாக மற்றவர்களுக்காக மாறிக் கட்டுப்படும் நிலையை அடைந்தார். எதற்கும் எவராலும் அசைந்து விட முடியாமல் கல்லாய் முற்றிப் போயிருந்த அந்த உள்ளத்தில் சற்றே தளர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அந்தத் தளர்ச்சி வெளிப்பட்டு விடாமல் மிகத் தந்திரமாக மறைத்துக் கொண்டார் அவர். ஒரு நளினமான சிரிப்பினால் மட்டுமே அதை அவரால் மறைக்க முடிந்தது.

"நல்லது! இன்றைய தினம் உங்கள் எல்லோருடைய கருத்தையும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும், தெளிவாக மறைக்காமல் என்னிடம் கூறிவிட்டீர்கள். நான் ஒப்புக் கொள்கிறேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் குமார பாண்டியரை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்."

மகாமண்டலேசுவரருடைய இந்தப் பேச்சில் அதங்கோட்டாசிரியர் மறுபடியும் குறுக்கிட்டார்.

"மகாமண்டலேசுவரரை யாரும் வற்புறுத்தவோ, அவசரப்படுத்தவோ விரும்பவில்லை. நான்கு நாட்களில் தேடிக் கொண்டு வர வேண்டுமென்று அவசரப்பட்டுத் துன்பமுற வேண்டாம். வேண்டிய நாட்களை எடுத்துக் கொண்டு பதறாமல் தேடிப் பார்க்கலாமே!" என்றார் ஆசிரியர் பிரான்.

"தேவையில்லை! நான்கு நாட்களே அதிகம். விரும்பினால் நான்கு நாழிகைக்குள் இளவரசரை அழைத்து வர என்னால் முடியும்?" என்று முகத்தில் அடித்தாற் போல் அதங்கோட்டாசிரியருக்குப் பதில் சொல்லிவிட்டார் இடையாற்றும் மங்கலம் நம்பி.

"முடிந்தால் செய்யுங்கள்!" என்று படித்தவருக்கே உரிய அடக்கத்தோடு பேச்சை முடித்து விட்டார் ஆசிரியர். 'ஏனடா இந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தோம்' என்று ஆகிவிட்டது அவருக்கு. தம் மேல் மகாமண்டலேசுவரருக்கு உள்ளூரச் சிறிது கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவருடைய பேச்சிலிருந்தே அதங்கோட்டாசிரியர் புரிந்து கொண்டார்.

இளவரசர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டதும் மற்றொரு கூற்றத் தலைவர் கூட்டம் நடத்துவதென்றும், அதில் மற்ற விஷயங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுவதென்றும் தீர்மானித்த பின் அன்றையக் கூட்டம் அதோடு முடிந்து விட்டது.

பட்டி மண்டபத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது நாராயணன் சேந்தன் வந்ததும், மகாமண்டலேசுவரர் அவனை இரகசியமாக நிலவறைக்கு அனுப்பியதும் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் அவரவர்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிகளுக்குச் சென்று விட்டனர். மகாமண்டலேசுவரர் மட்டும் தாம் நிலவறைக்கு அனுப்பியிருந்த சேந்தன் திரும்பி வருவானென்று எதிர்பார்த்துச் சிறிது நேரம் அங்கே தாமதித்தார். இடையே மற்றொரு காரியத்தையும் அங்கிருந்தவாறே முடித்துக் கொண்டார். அவர் அங்கே சேந்தனுக்காகத் தாமதித்துக் கொண்டு நின்ற போது அந்தப் பட்டி மண்டபத்தின் மேலே இருந்த அந்தப்புரத்து மடத்தில் புவன மோகினி என்ற வண்ண மகளின் உருவம் தெரிந்தது. புவன மோகினி அந்த அரண்மனையில் வண்ண மகளாகப் பணி புரிபவள். வண்ண மகளின் வேலை அந்தப்புரத்திலும், கன்னி மாடத்திலும் உள்ள அரச குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரம் செய்வதாகும். மற்றவர்களுக்கெல்லாம் அவள் அலங்காரம் செய்து விட்டால்தான் அழகு பிறக்கும். ஆனால் அவளுக்கோ யாரும் அலங்காரம் செய்யாமலே அபூர்வமான அழகும் இளமையும் வாய்த்திருந்தன. உண்மையில் புவன மோகினி என்ற பெயருக்கு அவள் பொருத்தமானவள் தான். பின்னிவிட்ட சடை அசையப் பிறைமதி போல் மல்லிகைச் செண்டு சூடி நடந்தாளானால் பார்க்கிறவர்களின் உள்ளமெல்லாம் பறிபோக வேண்டியதுதான்.

கீழே நின்று கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் புவன மோகினியைக் கைதட்டிக் கூப்பிட்டார். மதிப்புக்குரிய மகாமண்டலேசுவரருடைய அழைப்புக்குப் பணிந்து கீழே இறங்கி ஓடோடி வந்தாள் புவன மோகினி.

"பெண்ணே! எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும். இதோ இந்த ஆசனத்தின் கீழே இந்தப் பட்டுத் துணியைப் போட்டு விட்டுப் போகிறேன். இன்னும் சிறிது நேரத்துக்குள் இதை எடுத்துச் செல்ல வரும் மனிதனை நீ மேலேயிருந்து கவனித்து வைத்துக் கொள். அப்புறம் வந்து என்னிடம் சொல்" என்று கூறிவிட்டுத் தம் இடுப்பிலிருந்து ஒரு சிறு பட்டுத் துணியை எடுத்துத் தாம் உட்கார்ந்திருந்த ஆசனத்தின் கீழே போட்டுவிட்டுச் சென்றார் மகாமண்டலேசுவரர். புவன மோகினி அவர் கூறியபடியே செய்ய ஒப்புக் கொண்டு மாடத்தில் போய் நின்று கீழே கவனித்தாள். இதே சமயத்தில் விலாசினி, பகவதி முதலியவர்கள் மந்திராலோசனை மண்டபத்துப் பக்கமாகச் சதுரங்கம் விளையாடச் சென்று விட்டதனால் புவன மோகினி அந்தப்புரத்தில் தனியாகவே இருந்தாள். அதனால் அவர் தன்னிடம் ஒப்புவித்துச் சென்றிருந்த உளவறியும் வேலையை அவள் சரியாகச் செய்ய முடிந்தது. கூடிய வரையில் தான் அங்கே நின்று கண்காணிப்பது கண்காணிக்கப் படுகிறவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவள் குனிந்து பார்த்த போது அவளுடைய தலையில் அணிந்திருந்த குடை மல்லிகைப் பூக்கள் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தப் பாழாய்ப் போன பூக்கள் கீழே உதிர்ந்து அவள் எண்ணத்தில் கலக்கத்தை உண்டாக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

புவன மோகினி உடனே ஓடிப்போய் இடையாற்று மங்கலம் நம்பியிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு வந்திருந்தாலும் அவள் மனத்தில் பயம் ஏற்பட்டது. ஆபத்துதவிகள் தலைவனின் நெருப்புப் போன்ற விழிகளும், குரூரமான முகமும் அடிக்கடி தோன்றி அவளைப் பயமுறுத்தின. 'மகரநெடுங்குழைக்காதன் தான் அவனை மேலேயிருந்து கண்காணித்த போது தன்னைப் பார்த்திருப்பானோ?' என்ற பயத்தினால் அன்றிரவு தூக்கமே அவளை அணுகுவதற்கு மறுத்தது. பழி பாவத்துக்கு அஞ்சாதவன், ஈரமற்றவன், கல் மனமுடையவன் என்று ஆபத்துதவிகள் தலைவனைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த செய்திகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவளை மிரட்டிக் கொண்டிருந்தன.

புவன மோகினி, ஆபத்துதவிகள் தலைவனை எண்ணி நடுங்கி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாராயணன் சேந்தன் தளபதி வல்லாளதேவனை எண்ணி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

'ஐயோ! நான் தளபதியிடம் சிக்கி அடிபட வேண்டுமென்றுதான் என் தலையில் எழுதியிருக்கிறது போலும். இவ்வளவு தூரம் ஏமாற்றி திருநந்திக்கரை வரையில் இழுத்தடித்தும் எவன் குதிரையிலோ இரவல் இடம் பிடித்து அரண்மனைக்கு வந்துவிட்டானே. அவனோடு போகாமல் யாரோ ஒரு தூதுவனையும் அல்லவா அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான்? என்ன ஆகப் போகிறதோ?' என்று கவலை கொண்டு தூக்கம் இழந்தான் சேந்தன்.

அந்தப்புரத்து மேல் மாடத்திலிருந்து தன் மேல் உதிர்ந்த பூக்களை வைத்துக் கொண்டு தன்னைக் கண்காணித்த பெண் புலி யாரென்று தூக்கமில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான் குழைக்காதன். 'முதல் முதலாகக் கூற்றத் தலைவர் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாமல் தோற்றுப் போய்விட்டதே!' என்று மனம் புழுங்கிக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அன்று நள்ளிரவு வரையில் இவர்கள் நால்வரும் உறங்கவே இல்லை.

29. கொள்ளையோ கொள்ளை!

இராசசிம்மன் அப்படி நடந்து கொண்டது குழல்மொழிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. 'அக்கரையிலிருந்து படகில் வருபவர் யாராக இருந்தால் தான் என்ன! எவ்வளவு அவசரமாக இருந்தால் தான் என்ன? அதற்காக ஒரு பெண்ணிடம் தனிமையில் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தவர் இப்படியா முகத்தை முறித்துக் கொண்டு போவது போல் திடீரென்று போவார்?' என்று எண்ணி நொந்து கொண்டாள். வந்தவர்களோடு விரைவில் பேசி முடித்து அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து விடுவார் என்று நிலா முற்றத்துத் திறந்த வெளியிலேயே அவள் இராசசிம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் அவன் திரும்பி வராமற் போகவே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கீழே இறங்கி வந்துவிட்டாள்.

அவள் கிழே இறங்கி வந்த சமயத்தில் படகோட்டி அம்பலவன் வேளான் வசந்த மண்டபத்துப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். முதலில் படகில் வந்தவர்களை அழைத்துக் கொண்டு இராசசிம்மன் முன்பே வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருந்த இடத்துக்குப் போயிருக்க வேண்டுமென்று குழல்மொழி அனுமானித்து உணர்ந்து கொண்டாள்.

'வந்திருப்பவர்கள் யார்? என்ன காரியத்துக்காக வந்திருக்கிறார்கள்?' என்று அவனிடம் கேட்கலாம் என்று எண்ணி வேளான் வருவதை எதிர்பார்த்து நின்றாள் குழல்மொழி.

சிறிது நேரத்தில் வசந்த மண்டபத்திலிருந்து மாளிகைக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் வேளான் வருவது தெரிந்தது. அவன் தான் நின்று கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து சேருகிற வரை ஆவலை அடக்கிக் கொள்ளும் பொறுமை கூட அவளுக்கு இல்லை. மான் துள்ளி ஓடுவது போல் வேகமாக ஓடிச் சென்று அவனை எதிர்கொண்டு, "வேளான்! வந்திருப்பவர்கள் யார்? எதற்காக இவ்வளவு அவசரமாய் அடிகளைச் சந்திக்க வந்திருக்கிறார்கள்?" என்று அவனை நடுவழியிலேயே மறித்துக் கொண்டு கேட்டாள். வேளான் சிறிது தயங்கி நின்று விட்டுப் பின்பு கூறலானான். "அம்மா! அவர்கள் இன்னாரென்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அக்கரையிலிருந்து வசந்த மண்டபம் வரை என்னுடன் வந்தார்கள் என்று பெயரே ஒழிய என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 'இந்தத் தீவில் மகாமண்டலேசுவரரின் விருந்தினராக ஒரு துறவி வந்து தங்கியிருக்கிறாரே, அவரை நாங்கள் சந்திக்க வேண்டும்' என்று சுருக்கமாக என்னிடம் கூறினார்கள். ஆனால் வந்திருப்பவர்களுடைய பேச்சையும் நடையுடை பாவனைகளையும் கூர்ந்து கவனித்தால் நம்முடைய முத்தமிழ் நாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்தவர்களாகத் தெரியவே இல்லை. துறவிக்கு அவர்கள் மிகவும் வேண்டியவர்கள் போலிருக்கிறது. எல்லோருடனும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறு யாரையும் தப்பித் தவறிக் கூட அந்தப் பக்கம் விட்டுவிடக் கூடாதென்று எனக்குக் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்."

வேளானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குழல்மொழி, "என்னைக் கூடவா உள்ளே விடக்கூடாதென்று உத்தரவு?" என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகக் கேட்டாள். "ஆம்! உங்களையும் தான் விடக் கூடாதென்றிருக்கிறார்" என்று வேளான் சொல்லியதும், அவளுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்த மாதிரி இருந்தது. ஏதோ விளையாட்டுத்தனமாகக் கேட்டாளேயன்றி அந்தப் பதிலை எதிர்பார்த்துக் கேட்கவில்லை. அந்தப் பதிலை அவனிடமிருந்து கேட்டதும் அவள் கண்களில் சினம் கொண்ட சாயல் ஒளிர்ந்தது. புருவங்கள் நெளிந்து வளைந்தன. "பரவாயில்லையே! வந்து ஒரு நாள் கழிவதற்குள் அடிகளுக்கு இவ்வளவு அதிகாரம் செய்யும் உரிமை வந்து விட்டதா?" என்று வெடுக்கென்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள் அவள். அவ்வளவு கோபத்திலும் இராசசிம்மன் தான் அடிகளாக நடிக்கிறான் என்ற உண்மையைப் படகோட்டியிடம் கூறத் துணிவு வரவில்லை அவளுக்கு. 'நான் கூட வரக்கூடாதாமே? அப்படி என்ன தான் இரகசியம் பேசுகிறார்களோ? வரட்டும், சொல்கிறேன்" என்று இராசசிம்மன் மேல் ஊடலும், பொய்க்கோபமும் கொண்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டாள் குழல்மொழி. இராசசிம்மன் வசந்த மண்டபத்துக்கு வரக்கூடாதென்று சொல்லிவிட்டதனால் இடையாறு மங்கலம் அரண்மனையில் போவதற்கு இடமோ, பேசுவதற்குத் தோழிகளோ இல்லாமலா போய்விட்டார்கள் அவளுக்கு!

அதன் பின் அன்று அவள் வசந்த மண்டபத்துப் பக்கம் வரவேயில்லை. துறவியும் அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களும் கூட வசந்த மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை. படகோட்டி அம்பலவன் வேளான் யாரையும் உள்ளே விட்டு விடாமல் பாதுகாப்பாக வசந்த மண்டபத்துப் பாதை தொடங்கும் இடத்தில் காவலுக்கு உட்கார்ந்து கொண்டான்.

இருட்டியதும் வழக்கமாகத் துறவியை உணவுக்கு அழைத்துக் கொண்டு போக வருவாள் குழல்மொழி. அன்று அதற்காகவும் அவள் வரவில்லை. "நீ போய் அவர்களைச் சாப்பிட அழைத்துக் கொண்டு வா!" என்று ஒரு தோழியை வசந்த மண்டபத்துக்கு அனுப்பினாள். அந்தத் தோழி அடிகளைத் தேடிக் கொண்டு வசந்த மண்டபத்துக்குச் செல்லும் போது இருட்டி நான்கைந்து நாழிகைகள் ஆகியிருக்கும். துறவியும் அவரைத் தேடிப் புதிதாக வந்திருப்பவர்களும் கூடியிருப்பதால் தீபாலங்காரங்களினால் ஒளி மயமாகவும், பலருடைய பேச்சுக் குரல்களால் கலகலப்பாகவும் இருக்குமென்று நினைத்துக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்த தோழி அங்கிருந்த நிலைமையைக் கண்டு திகைத்துப் போனாள். வசந்த மண்டபம் இருண்டு கிடந்தது. அங்கே எவருடைய பேச்சுக் குரலும் கேட்கவில்லை. இருளும், தனிமையும் ஆட்சி புரிந்த அந்த இடத்தில் நிற்பதே பயமாக இருந்தது தோழிக்கு. அவள் வசந்த மண்டபத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகச் சுற்றிப் பார்க்காமல் முகப்பிலேயே பயந்து கொண்டு திரும்பி விட்டாள். வசந்த மண்டபத்தின் பின்புறமிருந்த தோட்டத்துக்குள் சென்று பார்த்திருந்தால் ஒரு சிறிய தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் துறவியும், அவரைத் தேடி வந்தவர்களும் ஏதோ சதிக்கூட்டம் நடத்துகிறவர்களைப் போல் அந்தரங்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் தோழிக்குத்தான் அவ்வளவுக்குப் பொறுமையில்லாமல் போய்விட்டதே!

"அம்மா! துறவியையும் அவரோடு வந்திருந்தவர்களையும் வசந்த மண்டபத்தில் காணவில்லை" என்று குழல்மொழியிடம் திரும்பி வந்து சொல்லிவிட்டாள் அந்தத் தோழி.

"வசந்த மண்டபத்துக்குப் போகிற பாதையின் தொடக்கத்தில் அம்பலவன் வேளான் காவலுக்கு உட்கார்ந்திருப்பானே? அவனைக் கூடவா காணவில்லை!"

"ஆம்! அவனையும் காணவில்லை!"

"சரிதான், படகில் அக்கரைக்குப் போயிருப்பார்கள். அடிகளுக்குத் திடீரென்று சுசீந்திரத்துக்குப் போய்த் தாணுமாலய விண்ணகரத்தில் தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசை உண்டாகியிருக்கும். நமக்கென்ன வந்தது? எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாம் தூங்கலாம்" என்று சுவாரஸ்யமில்லாமல் பேசினாள் குழல்மொழி.

அதன் பின் அடிகள் உணவு கொள்ள வரவில்லையே என்று அங்கு யாரும் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. இரவு பத்துப் பதினொரு நாழிகைக்கெல்லாம் இடையாற்று மங்கலம் மாளிகையில் பூரண அமைதி நிலவியது. மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வியும், மாளிகையிலிருந்த மற்றப் பணிப் பெண்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கன்னிமாடப் பகுதிக்குப் போய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.

இரவின் நாழிகைகள் ஒவ்வொன்றாக வளர்ந்து கொண்டிருந்தன. நடுச்சாமத்தை எட்டிப்பிடித்து விட்ட போது வானமும், நட்சத்திரங்களும் சோகை பிடித்த மாதிரி வெளுத்து ஒளி மங்கிக் கொண்டு வந்தன. மாளிகையில் அங்கங்கே அவசியமான இடங்களில் காவல் வைக்கப்பட்டிருந்த வீரர்களெல்லாம் கூடச் சோர்ந்து கண் மயங்கும் நேரம் அது.

அந்த நேரத்தில் வசந்த மண்டபத்தின் பின்புறத்துத் தோட்டத்திலிருந்து அடிகளும் மற்ற மூவரும் புறப்பட்டனர். மாளிகையின் பிரதான வாசலில் கொண்டு போய் விடும் ஒற்றையடிப் பாதையில் வந்து படகோட்டியின் குடிசையருகே தயங்கி நின்றனர். அன்று குளிர் அதிகமாக இருந்ததனால் படகோட்டி அம்பலவன் வேளான் குடிசைக்குள்ளேயே படுத்திருந்தான்.

வசந்த மண்டபத்திலிருந்து வந்து நின்றவர்களில் ஒருவன் படகோட்டியின் குடிசைக் கதவருகே வந்தான். ஓசைப்படாமல் கதவை வெளிப்பக்கமாக இழுத்துத் தாழிட்டான்.

"அடே! படகை அவிழ்த்து வைத்துக் கொண்டு புறப்படுவதற்குத் தயாராக நீ துறையிலேயே இரு. நாங்கள் விரைவில் காரியத்தை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்" என்று மற்றவர்கள் அவனைத் துறையில் இருக்கச் செய்துவிட்டு மாளிகையை நோக்கி விரைந்தனர். குரல் தான் கேட்டதே ஒழிய இருளில் அவர்கள் முகங்கள் சரியாகத் தெரியவில்லை. அதன் பின் அன்றிரவு நடுச் சாமத்துக்கு மேல் இடையாற்று மங்கலம் மாளிகையில் எந்தப் பகுதியில் என்ன நடந்ததென்று எவருக்கும் தெரியாது.

பொழுது விடிந்த போது அலறிப் புடைத்துக் கொண்டு குழல்மொழியின் கன்னிமாடத்து வாசலில் வந்து கூக்குரலிட்டனர் யவனக் காவல் வீரர்கள். மாளிகை முழுவதும் கூச்சலும் ஓலமுமாக ஒரே குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பங்களாலும், கூப்பாடுகளாலும் தூக்கம் கலைந்த குழல்மொழி எழுந்திருந்தவுடன் அந்த யவனக் காவல் வீரர்களின் முகத்தில்தான் விழித்தாள். அவர்கள் ஒன்றும் விளக்கிச் சொல்லத் தோன்றாமல் 'ஓ'வென்று வீறிட்டு அலறி அழத் தொடங்கினர்.

"ஏன் அழுகிறீர்கள்? விடிந்ததும் விடியாததுமாக இப்போது என்ன நடந்து விட்டது? விவரத்தைச் சொல்லுங்கள். இதென்ன? மாளிகை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறதே!" என்று பதறிப் போய் அதிர்ச்சியடைந்து கேட்டாள் குழல்மொழி. அதே சமயம் மாளிகையின் எதிர்ப்புறம் பறளியாற்றுப் படகுத் துறையில் 'தடால், தடால்' என்று ஏதோ இடிபடும் ஓசை கேட்டது. நாலைந்து வீரர்கள் என்னவென்று பார்ப்பதற்காக அங்கே ஓடினார்கள். போய்ப் பார்த்த போது அம்பலவன் வேளான் தன் குடிசைக்குள்ளிருந்து வெளிப்புறமாகத் தாழிட்டிருந்த கதவைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்டு அங்கே போன வீரர்களில் ஒருவன் கதவைத் திறந்து விட்டான். இல்லையானால் கதவு பிழைத்திருக்காது. வேளான் வெளியே வந்து பார்த்த போது துறையில் கட்டியிருந்த படகைக் காணவில்லை. "ஐயோ! படகைக் காணவில்லையே?" என்று கூச்சலிட்டான் அவன்.

"போ, ஐயா! உன் ஓட்டைப் படகு போனதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. கொள்ளை போகக்கூடாத மாபெரும் ஐசுவரியம் நேற்றிரவு இந்த மாளிகையிலிருந்து கொள்ளை போய்விட்டது. மகாமண்டலேசுவரர் கண்ணுக்குக் கண்ணாக வைத்துப் பாதுகாத்து வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் காணாமல் போய் விட்டனவே!" என்று வேளானின் வாய்க் கூச்சலை அடக்கினான் ஒருவன்.

30. புவன மோகினியின் பீதி

நள்ளிரவு வரை இடையாற்று மங்கலம் நம்பிக்கு ஒற்றறிந்து கூறியதற்காக ஆபத்துதவிகளின் தலைவன் தன்னை எப்போது எப்படித் துன்புறுத்துவானோ என்று அஞ்சி மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்த புவன மோகினி அரண்மனை நாழிகை மன்றத்தில் ஒவ்வொரு யாம முடிவிலும் அடிக்கும் மணி அடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் தன்னையறியாமலே துயில் வயப்பட்டாள். நன்றாக அயர்ந்து தூங்கி விடவில்லையானாலும் உடல் சோர்வடைந்து தன்னுணர்வை இழந்திருந்தது. தூக்கத்தில் ஒரு முறை புரண்டு படுத்தாள்.

புரண்டு படுத்த சிறிது நேரத்தில் கழுத்தின் பின்புறம் பிடரியில் ஏதோ வெப்பமான மூச்சுக்காற்று உரசிச் செல்லுவது போலிருந்தது. தலையில் பூச்சூடிக் கொண்டிருந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெப்பக் காற்றுப் பட்டு உறைப்பது போலிருந்தது.

உண்மைதானா? அல்லது தூக்கக் கலக்கத்தில் ஏதாவது சொப்பனம் காண்கிறோமா? என்று சந்தேகப்பட்டு மெல்லக் கண்களைத் திறந்தாள் புவன மோகினி. தலையருகே யாரோ குனிந்து பூவை முகர்ந்து பார்ப்பது போல் ஒரு பிரமை, ஒரு குறுகுறுப்பு அவள் மனத்தில் உண்டாயிற்று. தலைப்பக்கம் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. தலைமாட்டில் ஆள் நின்று கொண்டிருந்தால் திரும்பிப் பார்த்துத்தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. சுவரில் நிழல் நன்றாக விழும். புவனமோகினி எதிர்பார்த்தது வீண் போகவில்லை. எதிர்ச் சுவரில் ஓர் உருவத்தின் கரிய நிழல் பயங்கரமாகப் படிந்திருந்தது. கண்களைத் திறந்து அந்த நிழலைப் பார்த்ததும், பீதியினால் 'வீல்' என்று அலறி விட்டாள் அவள். அந்த அலறல் அவள் வாயிலிருந்து முழுமையாக வெளிப்பட்டு விடாமல் ஒரு முரட்டுக் கை தலைப் பக்கத்திலிருந்து அவள் வாயைப் பொத்தியது. அச்சத்தினால் மை தீட்டிய அவள் கண் இமைகளுக்குக் கீழே விழிகள் பிதுங்கின. முகம் வெளிறியது. படுத்திருந்தாலும் பயத்தினால் உடம்பு 'வெட வெட'வென்று நடுங்கியது. நெஞ்சங்கள் திடீரென்று மலைகளாக மாறிக் கனத்து இறுகி அழுத்துவது போல் மூச்சு அடைத்தது. பயத்தோடு பயமாக தலையை ஒருக்களித்துத் திருப்பி மிரளும் விழிகளால் தலைப் பக்கம் பார்த்தாள். தூண்டா விளக்கின் மங்கலான ஒளியில் ஆபத்துதவிகள் தலைவனின் முகத்தைக் கண்டாள் புவன மோகினி. அவள் நெஞ்சு 'படக் படக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. வலிமை பொருந்திய அவனது இரும்புக் கை அவள் வாய்க்குக் கவசம் போட்டுப் பூட்டியது போல் அழுத்திப் பொத்திக் கொண்டிருந்தது. ஆபத்துதவிகள் தலைவனின் மற்றொரு கை அவள் கழுத்துக்கு நேர் உயரப் பாம்பு நெளிவது போன்ற சிறு குத்துவால் ஒன்றை ஓங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்தச் சமயத்தில் எதிர்ச் சுவரில் தெரிந்த அவன் நிழல் கூடப் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே கழிந்தது. அவள் கழுத்துக்கு நேரே ஓங்கியிருந்த கத்தியாலேயே விளக்கின் திரியை நசுக்கி அணைத்தான் அவன். சுடர் நாற்றமும், திரி கருகிய புகையும் மூச்சில் கலந்து நெஞ்சைக் குமட்டின. விளக்கு அணைந்து இருள் பரவியவுடன் புவன மோகினியின் பயம் அதிகமாயிற்று. பலங்கொண்ட மட்டும் அவன் கையைப் பிடித்துத் தள்ளித் திமிறி எழுந்து மீண்டும் கூச்சலிட்டாள் அவள். இருட்டில் அவன் ஓடிவிட்டான்.

அவள் போட்ட கூச்சலைக் கேட்டு விளக்கோடும் தீப்பந்தங்களோடும், அந்தப்புரத்துப் பெண்களும், காவல் வீரர்களும் அங்கு ஓடி வந்த போது யாரும் வந்து போன சுவடே தெரியவில்லை. அவ்வளவு விரைவில் வந்த ஆள் தப்பி விட்டான். புவன மோகினி கூறியதை அவர்களில் எவருமே நம்பத் தயாராயில்லை. "அடி, பைத்தியக்காரப் பெண்ணே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? உன் கூச்சலால் அந்தப்புரத்தையே அதிரச் செய்துவிட்டாயே? என்னதான் பயங்கரமாகச் சொப்பனம் கண்டாலும் இப்படியா கூச்சல் போடுவார்கள்?" என்று வண்ண மகள் புவன மோகினியை விலாசினியும், பகவதியும் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். புவன மோகினி தன் அனுபவம் உண்மை என்பதைக் கடைசி வரை அவர்கள் நம்பும்படி செய்ய முடியவில்லை. அவள் கனவு தான் கண்டிருக்க வேண்டுமென்று பிடிவாதமாகச் சாதித்தார்கள் அவர்கள். அதன் பின் அன்றிரவு அவளைச் சுற்றிப் பன்னிரண்டு தோழிப் பெண்களைப் பக்கத்துக்கு மூன்று பேர்கள் வீதம் நான்கு பக்கமும் துணைக்கு காவலாகப் படுத்துக் கொள்ள செய்த பின்பே படுக்கையில் படுத்தாள். இங்கே இது நடந்த நேரத்தில் தான் இடையாற்று மங்கலத்து மாளிகையில் அந்தப் பயங்கரக் கொள்ளையும் நடந்திருக்கிறது. ஒரே இரவில் ஒரே நேரத்தில் இரண்டு குழப்பங்கள் நடந்து விட்டன.

மறுநாள் பொழுது புலர்ந்த போது தென்பாண்டி நாட்டின் அரசியல் வாழ்வுக்கு அதிர்ச்சி தரும் உண்மைகளும் வந்து சேர்ந்தன. மகாமண்டலேசுவரர் கண் விழுத்து எழுந்தவுடன் கரவந்தபுரத்திலிருந்து வந்திருந்த தூதுவனை அவருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான் தளபதி வல்லாளதேவன். அதற்கு முன்பே முதல் நள்ளிரவு புவன மோகினியின் பள்ளியறையில் நடந்த கலவரம் அவர் காதுக்கு எட்டியிருந்தது. கரவந்தபுரத்துத் தூதுவன் தான் கொண்டு வந்திருந்த முத்திரையிட்டு ஜாக்கிரதையாகப் பத்திரப்படுத்திய ஓலையை மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தான்.

அவசர அவசரமாக அதன் மேலிருந்த அரக்கு முத்திரைகளைக் கலைத்து உதிர்த்துவிட்டு ஓலையைப் பிரித்துப் படித்தனர்.

"தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர் திருச்சமூகத்துக்குக் கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுசில் வேள் பெரும்பெயர்ச்சாத்தன் பல வணக்கங்களுடன் அவசரமாய் எழுதும் திருமுகம்.

"வடபாண்டி நாட்டு மதுரை மண்டலம் முழுதும் வென்று கைப்பற்றியதோடு ஆசை தணியாமல் கோப்பரகேசரி பராந்தக சோழன் தென்பாண்டி நாட்டின் மீது தக்கவர்களின் படைத் துணையோடு படையெடுக்கக் கருதியுள்ளான். இந்தப் படையெடுப்பு நாம் எதிர்பாராமலிருக்கும் போது மிக விரைவில் திடீரென்று நம்மேல் நிகழும் என்று தெரிகிறது. சில நாட்களாக இங்கே உக்கிரன் கோட்டையிலும், இதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சோழ மண்டலத்து ஒற்றர்களும், உளவறிவோரும் இரகசியமாக உலாவக் காண்கிறேன். மிக விரைவில் வடதிசை மன்னர் படையெடுப்பால் - நாம் தாக்கப்படுவோம் என்பதற்குரிய வேறு சில சங்கேதமான நிகழ்ச்சிகளை நமது வட எல்லைப் பிரதேசங்களில் அடிக்கடி காண முடிகிறது. கீழைப்பழுவூர்ச் சிற்றரசன் பழுவேட்டரையன் கண்டன் அமுதனும், சோழமண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும், கொடும்பாளூர் மன்னனும், பரதூருடையானும், இப்படையெடுப்பில் பராந்தக சோழனுக்கு உறுதுணையாயிருப்பார்களென்று தெரிகிறது. தென்பாண்டி மண்டலத்தின் வட எல்லைக் காவல் பொறுப்பு அடியேனிடம் ஒப்புவிக்கப்பட்டிருப்பதால் இந்தச் செய்தியை உடனே தங்களுக்கும், மகாராணி வானவன்மாதேவியாருக்கும் அறிவித்து விட வேண்டுமென்று இத்திருமுகம் எழுதலானேன்.

"கட்டளைப்படி இத் திருமுகம் கொண்டு வருவான் மானகவசனென்னும் உத்தமதேவன் பால் மறுமொழியும் படையெடுப்பைச் சமாளிக்கும் ஏற்பாட்டு விவரங்களும் காலந் தாழ்த்தாது அறிவித்து அனுப்புக.

"இங்ஙனம் தென்பாண்டி மண்டலப் பேரரசுக்கு அடங்கிய குறுநிலவேள்." பெரும்பெயர்ச்சாத்தனின் திருமுகத்தைப் படித்து முடித்ததும் இடையாற்று மங்கலம் நம்பி மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானார். இவ்வளவு சீக்கிரமாக இந்தப் படையெடுப்பு நேருமென்று கனவிற் கூட எதிர்பார்க்கவில்லை அவர். உடனே தளபதியையும் கரவந்தபுரத்துத் தூதுவனையும் அழைத்துக் கொண்டு மகாராணியாரைச் சந்திப்பதற்காக அந்தப்புரத்துக்குச் சென்றார் அவர். செய்தியை மகாராணியாரிடம் படித்துக் காட்டியபோது அவரும் அதிர்ச்சிக் குள்ளானார். "மகாமண்டலேசுவரரே! ஒரே ஒரு வழிதான் எனக்குத் தோன்றுகிறது. அவசரமாக விரைவில் நீங்கள் இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வந்தால் அவனையே சேர நாட்டுக்குத் தூதனுப்பலாம். அவனே நேரில் போனால் மாமன்மாராகிய சேரர்கள் படை உதவி செய்ய நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள். சேரர் படை உதவி கிடைத்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். இப்போது இதைத் தவிர வேறு ஒரு வழியும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் உடனே இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார் மகாராணியார்.

"மகாராணியார் என்னை மன்னிக்க வேண்டும். ஓர் இரகசியத்தை இந்தக் கணம் வரை உங்களிடம் சொல்லாமலே மறைத்து வந்திருக்கிறேன். குமாரபாண்டியர் சில நாட்களாக என் விருந்தினராக இடையாற்று மங்கலம் வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருக்கிறார். இப்போதே சென்று இங்கு அழைத்து வரச் செய்கிறேன்."

"உண்மையாகவா?" மகாராணியின் குரலில் அவநம்பிக்கையும், வியப்பும் போட்டியிட்டன. தளபதி வல்லாளதேவனின் முகத்தில் ஆச்சரியத்தின் உணர்வுச் சாயைகள் கோடிட்டன. அன்று இடையாற்று மங்கலத்து நிலவறையில் அந்தத் துறவியைப் பார்த்துக் குமாரபாண்டியரோ எனத் தான் அடைந்த பிரமை அவனுக்கு நினைவு வந்தது. தூதுவன் திகைத்துப் போய் நின்றான். "உண்மைதான்! சில நாட்களுக்கு முன்பு தான் கடல் கடந்த நாட்டிலிருந்து இளவரசரை இரகசியமாக இங்கு வரவழைத்தேன். யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்பதற்காக அவரை மாறுவேடத்திலேயே விழிஞம் துறைமுகத்திலிருந்து இரவோடிரவாக அழைத்துச் சென்றேன். இடையாற்று மங்கலத்தில் இப்போதும் இளவரசர் துறவி போல் மாறுவேடத்திலேயே தங்கியிருக்கிறார். ஒரு சில முக்கியமான அரசியல் காரணங்களுக்காக இளவரசர் வரவைத் தங்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் எவ்வளவு முன்னேற்பாடாகவும், பரம இரகசியமாகவும் இதை மறைத்தேனோ, அவ்வளவு எதிர்பாராத விதமாக சிலருக்கு இந்த இரகசியம் புரிந்து விட்டது" என்று கூறிக் கொண்டே சிரித்துவிட்டுத் தளபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் அவர். ஏற்கெனவே அவர் மேலே சிறிது மனக்கசப்போடு இருந்த தளபதி, "மற்றவர்களுக்கும் சாமர்த்தியம், அறிவு, சூழ்ச்சித்திறன் எல்லாம் இருக்க முடியும் என்பதைச் சில சமயங்களில் தாங்களும் தங்களுடைய அந்தரங்க ஒற்றனும் மறந்து விடுகிறீர்கள்" என்று குத்தலாக அவருக்குப் பதில் சொன்னான்.

"சேந்தன் அசட்டுத்தனமாக எதையாவது செய்திருப்பான். அதையெல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாதே தளபதி!" அவனைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்கிறவர் போல் குழைந்து பேசினார் இடையாற்று மங்கலம் நம்பி.

"ஓகோ! அசட்டுத்தனத்தைக் கூடத் திட்டமிட்டுக் கொண்டு செய்வது தான் தங்களுக்கும், தங்கள் ஒற்றனுக்கும் வழக்கம் போலிருக்கிறது. இன்றுதான் எனக்கு உங்களைச் சரியாகப் புரிகிறது" என்று சுடச்சுடப் பதில் கொடுத்தான் தளபதி. அதற்கு மேலும் அவரை வம்புக்கு இழுக்க வேண்டுமென்று அவன் ஆத்திரம் அவனைத் தூண்டியது. மகாராணியாரின் முன்னிலையில் அப்படிச் செய்வது மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்று அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான். தளபதியும், மண்டலேசுவரரும் பேசிக் கொண்ட விதத்தைக் கவனித்ததில் அவர்களுக்குள் ஏதோ பிணக்கு இருக்கிறது என்ற குறிப்பு மட்டும் மகாராணியாருக்குப் புரிந்தது. 'அது என்ன பிணக்கு?' என்பதை அவர்களிடமே வற்புறுத்தித் தூண்டிக் கேட்க விரும்பவில்லை. "மகாமண்டலேசுவரரே! இன்னும் எதைச் சிந்தித்துக் கொண்டு நேரத்தைக் கழிக்கிறீர்கள்? தூதுவன் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பதில் ஓலை கொடுத்து அனுப்பி வையுங்கள். உடனே இடையாற்று மங்கலம் சென்று வடதிசை மன்னர் படையெடுப்பு விவரங்களைக் கூறிக் குமாரபாண்டியனை இங்கே அழைத்து வாருங்கள். இன்று இரவிலேயே மறுபடியும் கூற்றத் தலைவர்களைக் கூட்டி இளவரசனையும் உடன் வைத்துக் கொண்டு கலந்து ஆலோசிப்போம். உடனே புறப்படுங்கள். தாமதத்துக்கு இது நேரமில்லை" என்று வானவன்மாதேவியார் அவரைத் துரிதப்படுத்தினார்.

"தளபதி, உனக்கும் எனக்கும் என்னுடைய ஒற்றனுக்கும் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாக எத்தனையோ உட்பகைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் இந்தச் சமயத்தில் நாம் மறந்து விட வேண்டும்" என்று அவனிடம் கெஞ்சுவது போல் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி.

இந்தச் சமயத்தில் ஒரு வீரன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து, "மகாமண்டலேசுவரரைத் தேடிக் கொண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து அவசரமாக ஓர் ஆள் வந்திருக்கிறான்" என்று தெரிவித்தான். "அவனை உடனே இங்கு அழைத்துக் கொண்டு வா" என்று உத்தரவிட்டார் மகாமண்டலேசுவரர்.

படகோட்டி அம்பலவன் வேளான் உள்ளே வந்து நின்றான். அவன் முகம் பேயறைபட்டது போல் வெளிறிப் போயிருந்தது.

"சுவாமி! மாளிகையில் நடக்கக்கூடாத அநியாயம் நடந்து விட்டது. எந்தப் பொருள்களை உயிரினும் மேலானவையாகக் கருதிப் பாதுகாத்து வந்தோமோ, அந்தப் பொருள்கள் நேற்றிரவு கொள்ளை போய்விட்டன. பாண்டிய மரபின் சுந்தர முடியையும் வீர வாளையும் பொற் சிம்மாசனத்தையும் பறிகொடுத்து விட்டோம். இன்று காலையில் தான் தெரிய வந்தது. கொள்ளை நடந்த பின் வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருந்த அந்தச் சாமியாரையும், நேற்றுக் காலை அவரைத் தேடி வந்து அவரோடு தங்கியிருந்த ஆட்களையும் தீவின் எல்லையிலேயே காணவில்லை." படகோட்டி மூச்சுவிடாமல் கூறிக் கொண்டே போனான். அங்கிருந்தவர்கள் அனைவரும் கல்லாய்ச் சிலையாய்ச் சமைந்து நின்றார்கள்.

31. செம்பவழத் தீவு

இடையாற்று மங்கலம் மாளிகையில் பாண்டிய மரபின் மரியாதைக்குரிய மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போன மறுநாள் அங்கே ஒருவகைப் பயமும் திகைப்பும் பரவி விட்டன. சாவு நிகழ்ந்த வீடு போல், மழையைக் கொட்டித் தீர்த்து விட்ட வானம் போல், ஓர் அமைதி. பறிகொடுக்கக்கூடாத பொருளைப் பறிகொடுத்து விட்டால் ஏற்படுமே அந்த அமைதி, இடையாற்று மங்கலத்தில் சோகம் கலந்து சூழ்ந்திருந்தது.

அமைதியும், துயரமும் கலந்த இந்தச் சூழ்நிலையிலிருந்து நேயர்களை அழகான கடல் பகுதிக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். தென் மேற்குக் கோடியில் அலைகொட்டி முழக்கும் மேலைக் கடலின் நுழைவாயிலெனச் சிறந்து விளங்கும் விழிஞம் துறைமுகத்தைப் பற்றி நம் நேயர்கள் முன்பே அறிந்து கொண்டிருப்பார்கள். அந்தத் துறைமுகத்தில் தானே நாராயணன் சேந்தன் என்ற அபூர்வமான மனிதனை நேயர்களுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தேன்!

இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன மறுநாள் நண்பகல் உச்சி வேளைக்கு விழிஞம் துறைமுகத்துக்குத் தெற்கே ஐந்து காத தூரத்தில் ஒரு வனப்பு மிக்க தீவின் கரையோரமாகக் கடலில் மிதக்கும் வெண்தாமரை போல் அழகிய கப்பலொன்று விரைந்து செல்வதைக் காண்கிறோம். ஆ! அதென்ன உச்சிவேளையின் ஒளிக்கதிர்களில் அந்த மரக் கலத்தின் பாய்மரக் கூம்பில் ஆண் சிங்கம் ஒன்று பாய்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சி தெரிகிறதே! அல்ல! அல்ல! அது ஒரு கொடி தான். அந்தக் கொடி காற்றில் ஆடி அசையும் போதெல்லாம் அதில் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் சிங்கத்தின் உருவம் உயிர்ப்பெற்றுப் பாய்வது போல் பார்க்கிறவர்களின் கண்களில் ஒரு பிரமையை உண்டாக்கி விடுகிறது. தீவின் பெயர் தான் அப்படியென்றால் அவர்களுடைய நிறம் கூடவா செம்பவழம் போலிருக்க வேண்டும்? கூந்தலில் அடுக்கடுக்காக மயில் தோகைகளையும், முழு நீளத் தாழை மடல்களையும் சூடிக் கொண்டு அன்னமும், கிளியும், குயிலும், மானும் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தாற் போலத் துள்ளி ஓடி வரும் அந்தத் தீவின் யுவதிகளை எப்படி வருணிப்பது? அந்த மாதிரி ஒளியும் வசியமும் நிறைந்த கரிய கண்களை அவர்களுக்கு மட்டும் தான் அமைக்க வேண்டுமென்று படைத்தவன் தீர்மானம் செய்து வைத்துக் கொண்டிருந்தானோ? அவ்வளவுதான். அடடா? அந்தத் தீவில் தான் என்ன எழில், எவ்வளவு இயற்கைக் கவர்ச்சி. தீவுக்கு என்ன பெயர் என்று சொல்லவும் வேண்டுமோ? கரையோரமாக இரத்தக் காடு முளைத்தது போல படர்ந்து கிடக்கும் செம்பவழத்தீவு! எத்தனை இனிமையான பெயர். மேலைக் கடலில் மூலைக்கு மூலை பரவிக்கிடக்கும் பன்னீராயிரம் 'முந்நீர்ப் பழந்தீவு'களில் அதுவும் ஒன்று.

கொத்துக் கொத்தாகக் கடலை நோக்கித் தொங்குவது போல் மேகங்கள், தீவின் பசுமை, கப்பல் செல்லும் அழகு, கடல் மக்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசியது போல் பவழக் கொடிகள் - ஆகிய இவற்றின் அழகில் மயங்கி, அந்தக் கப்பலில் பிரயாணம் செய்வோர் யார்? எதற்காகப் பிரயாணம் செய்கின்றனர்? எங்கே பிரயாணம் செய்கின்றனர்? என்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாதல்லவா?

அதோ கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிற்கிறது. பயங்கரமான மீசையோடு காட்சியளிக்கும் ஒரு முரட்டு மீகாமன் (மாலுமி) கீழே குதித்துத் தீவின் கரையோரத்துத் தென்னைமரம் ஒன்றில் கப்பலை நங்கூரம் பாய்ச்சுகிறான். ஏதோ, தேர், திருவிழா அதிசயங்களைப் பார்க்க ஓடி வருகிறவர்களைப் போல் அந்தத் தீவில் ஆண்களும், பெண்களும் கப்பலைப் பார்க்க ஓடி வருகிறார்கள். ஆகா! அந்தத் தீவின் மக்கள் தான் என்னென்ன விநோதமான முறைகளில் உடையணிந்திருக்கிறார்கள்.

முகத்திலும், விழிகளிலும், வியப்பும், புதுமையும் இலங்கக் கப்பல் நின்ற இடத்தைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர்கள். மீகாமன் அவர்களை வழிவிட்டு ஒதுங்கி நின்று கொள்ளுமாறு அதட்டினான்.

இப்போது அந்தக் கப்பலிலிருந்து செம்பவழத் தீவின் கரையில் இறங்கப் போகிறவர்களைப் பார்க்கலாம்.

உள்ளேயிருப்பவர்கள் கரையில் இறங்குவதற்காகத் தூக்கிக் கட்டியிருந்த மரப் படிக்கட்டைத் தணிவாக இறக்கி வைத்தான் மீகாமன்.

முதலில் குமார பாண்டியன் இராசசிம்மன் சிரித்த முகத்தோடு கீழே இறங்கினான். தாடி மீசையோடு கூடிய பழைய துறவித் தோற்றத்துக்கும் இப்போதைய இளமைத் தோற்றத்துக்கும் தான் எவ்வளவு வேற்றுமை? அடுத்து முதல் நாள் அவனைத் தேடி இடையாற்று மங்கலத்துக்கு வந்திருந்தவர்களும் கப்பலிலிருந்து இறங்கினார்கள்.

"சக்கசேனாபதி! இந்நேரத்துக்குள் செய்தி தென்பாண்டி நாடு முழுவதும் பரவியிருக்கும். அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போய் தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரருக்கு இடையாற்று மங்கலத்திலிருந்து கொள்ளை போன தகவல் கூறி அனுப்பப்பட்டிருக்கும்." தன்னோடு கப்பலிலிருந்து இறங்கியவர்களின் மூத்தவரும், வீரகம்பீரம் துலங்கும் தோற்றத்தை உடையவருமான ஒருவரைப் பார்த்து இராசசிம்மன் நகைத்துக் கொண்டே இவ்வாறு கூறினான்.

"இளவரசே! திருடினவர்கள் திருட்டுக் கொடுத்தவர்களுக்காக அனுதாபப்படுவது உண்டோ?" என்றார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! இந்த இடத்தில் பயனப்டுத்தத் தகுதியற்ற ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள். யார் திருடினவன்? யார் திருட்டுக் கொடுத்தவன்? என்றோ ஒரு நாள் என் தலையில் சூட்டிக் கொள்ளப் போகிற முடியையும், இடையில் அணிபெற வேண்டிய வாளையும் இன்றே பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் மறைத்து வைக்கப் போகிறேன். பொருளுக்கு உரியவர்கள் பொருளை எடுத்துச் சென்று பத்திரப்படுத்துவதைத் திருட்டு என்று கூறக் கூடாது."

சக்கசேனாபதி சிரித்தார். கம்பீரமான ஆண் சிங்கம் போன்ற அவருடைய முகத் தோற்றத்திலும், பார்வையிலும் ஒருவித மிடுக்கு இருந்தது. அவர் முகத்தைப் பார்க்கும் போது பிடரி மயிரோடு கூடிய ஓர் ஆண் சிங்கத்தின் நிமிர்ந்த பார்வை நினைவுக்கு வராமற் போகாது. வீரத்தின் மதர்ப்பும் ஆண்மையும் விளங்கும் பருத்த, உயர்ந்த தோற்றம் அவருடையது. இந்தக் கதையில் மேற்பகுதிகளில் இன்றியமையாத சில நிகழ்ச்சிகளுக்கும், மாறுதல்களுக்கும் காரணமாக இருக்கப் பொகிறவர் சக்கசேனாபதி.

அவர் ஈழ மண்டலப் பேரரசின் மகா சேனாபதி. குமார பாண்டியனின் உற்ற நண்பரும் இலங்கைத் தீவின் புகழ்மிக்க வேந்தருமாகிய காசிப மன்னரின் படைத்தலைவர். தந்தை காலஞ்சென்ற நாளிலிருந்து இராசசிம்மனின் இளமைக் காலத்தில் அவனுக்கு எத்தனையோ முறை கடல் கடந்து சென்று ஒளிந்து கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவளித்து உதவி செய்தது இலங்கைப் பேரரசே. அவன் மனச் சோர்வோடு கடல் கடந்து சென்ற போதெல்லாம் வரவேற்று ஆதரவளித்தவர்கள் சக்கசேனாபதியும், காசிபனும் தான். தென்பாண்டி நாட்டு இளவரசன் தன் அரசியல் வாழ்க்கையின் துன்பம் நிறைந்த சூழலில் கழித்த சந்தர்ப்பங்கள் கணக்கற்றவை. வளமான கடற்கரை, அழகான மலைத்தொடர், இளமரக் காடுகள், குளிர்பொழிற் சோலைகள் அத்தனையும் நிறைந்த ஈழ நாட்டின் சூழலில் சொந்தத் துயரங்களை மறந்து விடுவான் இராசசிம்மன். அனுராதபுரத்துக் கற்கனவுகளைக் காணும் போதெல்லாம் சோர்வும் ஏமாற்றமும் நிறைந்த அவன் உள்ளத்தில் ஆயிரமாயிரம் திடம் வாய்ந்த எண்ணங்களும், நம்பிக்கைகளும் முகிழ்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் துன்பங்களைத் தமிழ்நாட்டிலும் அவைகளை மறக்கும் இன்பங்களை ஈழநாட்டிலும் அனுபவித்தான் இராசசிம்மன்.

இப்போதும் ஈழநாட்டின் படைத்தலைவர் இந்த மரக்கலத்தில் அவனை அங்கே தான் அழைத்துக் கொண்டு போகிறார். இடைவழியில் சிறிது தங்கிச் செல்வதற்காக அந்தத் தீவில் இறங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கரையில் இறங்கி நின்று பேசிக் கொண்டிருந்த நேரத்துக்குள் அந்தக் கப்பலில் அவர்களோடு வந்திருந்த ஆட்கள் தீவின் கரையில் இரத்தினக் கம்பளங்களையும் சித்திரத் துணிகளையும் கொண்டு தங்குவதற்கு ஓர் அழகான கூடாரம் அமைத்து விட்டார்கள். தென்னை மரக் கூட்டங்களின் இடையே காற்றில் ஆடி அசையும் பசுந் தோகைகளின் கீழே எழும்பி நின்ற அந்தச் சித்திரக் கூடாரம் மண்ணைப் பிளந்து கொண்டு தானே மேலே வந்து தோன்றும் மலர் வீடு போல் காட்சியளித்தது. அன்றைய இரவு முடிய அங்கே பொழுதைக் கழித்து விட்டு மறுநாள் காலை மறுபடியும் கடற் பயணத்தைத் தொடரலாம் என்பது சக்கசேனாபதியின் திட்டம். தங்குவதற்கு அத்தியாவசியமான பொருள்கள் மட்டும் கப்பலிலிருந்து கூடாரத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டன. நீராடி உணவு முடிந்ததும் அன்று பகல் முழுவதும் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் கூடாரத்தில் ஓய்வு பெற்று நிம்மதியாக உறங்கினர்.

கதிரவன் மலைவாயில் விழுகிற நேரத்துக்குக் குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த அழகிய தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டனர். உடனிருந்த ஆட்கள் கப்பலுக்கும் கூடாரத்துக்கும் காவலாக இருந்தனர். மாலை நேரத்தில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு மிகுதியாகத் தோன்றியது. வானப் பரப்பு முழுவதும் குங்குமக் குழம்பும், கீழே கடலில் மிதக்கும் பசுமைக் கனவு போல் அந்தத் தீவும் இருந்தது.

விந்தையும் விநோதமும் பொருந்திய கடல்படு பொருள்களான சங்கு, முத்து, சிப்பிகள், சலங்கைகள், பல நிறம் பொருந்திய கடற்பாசிக் கொத்துகள் இவற்றையெல்லாம் குவியல் குவியலாகக் குவித்து விற்கும் தீவின் கடைவீதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.

சக்கசேனாபதியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கடைகளில் ஒன்றை நெருங்கினான் தென்பாண்டி நாட்டு இளவரசன் இராசசிம்மன்.

வனப்பும், வாளிப்பும் நிறைந்த உடலோடு சிரிப்பும் மலர்ச்சியும் கொஞ்சும் முகத்தையுடைய இளம் பெண் ஒருத்தி அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். முற்றிலும் கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள்களாலேயே அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் முத்து மாலை, செவிகளில் முத்துக் குண்டலம், நெற்றியில் முத்துச் சுட்டி, கைகளில் சங்கு வளையல், கால்களில் முத்துச் சிலம்பு, அள்ளி முடிந்த அளகபாரத்தில் இரண்டொரு மயில் கண்களைத் தோகையிலிருந்து பிரித்துச் செருகியிருந்தாள்.

அவர்களைக் கண்டதும் தோகையை விரித்துக் கொண்டு எழுந்திருக்கும் இளமயில் போல் பாதங்களில் சிலம்பு ஒலிக்க எழுந்து நின்று அவள் வரவேற்றாள். அடடா! அப்போது அந்தப் பெண் சிரித்த சிரிப்புக்குத்தான் எவ்வளவு கவர்ச்சியும் ஆற்றலும் இருந்தன.

"சக்கசேனாபதி! இந்தத் தீவின் கடலில் சிப்பிகளில் மட்டும் முத்தும் பவழமும் விளையவில்லை. இங்குள்ள பெண்களின் வாய் இதழ்களிலும், வாய்க்குள்ளும் கூடப் பவழமும், முத்தும் விளைகின்றன போலும்!" என்று மெல்ல அவர் காதருகில் சிரித்துக் கொண்டே சொன்னான் குமார பாண்டியன். அவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

சிறிய செவ்விளநீர் அளவுக்கு வலப்பக்கமாக வளைந்து செந்நிறத்தோடு அழகாக விளங்கிய ஒரு சங்கைக் கையில் எடுத்தான் இளவரசன். பவழத்தில் கைப்பிடியும், முத்துக்களில் விளிம்பும் கட்டி வைத்திருந்த அந்தச் சங்கு அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

ஆனால் இதென்ன? அவன் அதைக் கையில் எடுத்ததைப் பார்த்ததும், கண்களில் கலவரமும், முகத்தில் பதற்றமும் தோன்ற நின்ற இடத்திலிருந்து ஓடி வந்து அந்தப் பெண் அவனுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இளவரசனுக்குச் சிரிப்பு வந்தது. சிறிது சினமும் உண்டாயிற்று! பூவைக் காட்டிலும் மென்மையான அந்தப் பட்டுக் கைகள் தன் மேல் தீண்டியதால் ஏற்பட்ட உணர்வு அவன் உடலில் பாதாதி கேச பரியந்தம் பரவியது. சிரிப்பு, சினம், சிருங்காரம் மூன்று உணர்ச்சிகளும் பதிந்த பார்வையால் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன்.

அப்போதுதான் பூத்த கருங்குவளைப் பூக்களைப் போல் நீண்டு குறுகுறுவென்றிருக்கும் அவள் கண்களில் பயத்தையும், பரபரப்பையும் அவன் கண்டான்.

அந்த நிலையில் ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைக் கண்டு விட்டவர் போல் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் குலுங்கக் குலுங்கச் சிரித்தார் சக்கசேனாபதி. ஒரு கணம் இராசசிம்மன் தயங்கினான். அந்தப் பெண்ணின் கைகளிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வதென்று திகைத்தான்.

"ஏதேது? இந்த செம்பவழத் தீவில் பெண்களெல்லாம் பெரிய வம்புக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே?" அவன் சக்கசேனாபதியைப் பார்த்துக் கூறுகிறவனைப் போல் இதழ்களில் குறும்புநகை நெளிய அவளைப் பேச்சுக்கு இழுத்தான்.

"வருகிறவர்கள் அளவுக்கு மீறித் துணிச்சல் உள்ளவர்களாயிருக்கும் போது நாங்கள் வம்புக்காரர்களாக மாறுவது வியப்பில்லையே!"

"நீ சங்கு விற்கிறவள். நான் வாங்கப் போகிறவன். வாங்க இருக்கும் பொருளை எடுத்துப் பார்ப்பதற்குக் கூட நான் உரிமையற்றவனா?"

"சங்கு என்றால் ஒரு பொற்கழஞ்சுக்கு ஐந்தும், ஆறுமாக அள்ளிக் கொடுக்கின்ற சாதாரணச் சங்கு இல்லை இது! வலம்புரிச் சங்கு! இதன் விலை ஆயிரம் பொற்கழஞ்சுகள். இந்தத் தீவின் எல்லையிலேயே இந்த மாதிரிச் சங்கு ஒன்று தான் இருக்கிறது. இதை விற்க வேண்டுமானால் யாராவது பேரரசர்கள் வாங்க வந்தால் தான் முடியுமென்று என் தந்தை சொல்லியிருக்கிறார்!"

"பெண்ணே! பேரரசர்கள் கிடக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் பேருக்குத்தான் அரசர்கள். நான் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் தருகிறேன். இந்தச் சங்கை எனக்கு விற்பாயா?"

"இல்லை, பொய் சொல்கிறீர்கள் நீங்கள். உங்களைப் பார்த்தால் உங்களிடம் இரண்டு பொற்கழஞ்சுகள் கூட இருக்காது போல் தோன்றுகிறது. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். மரியாதையாக சங்கை வைத்துவிட்டுப் போகிறீர்களா...? இல்லையானால்...?"

"அடேடே! உன் கோபத்தைப் பார்த்தால் என்னை இப்போதே அடித்துக் கொன்று விடுவாய் போலிருக்கிறதே? வேண்டாம்! இதோ வாங்கிக் கொள்..." இப்படிச் சொல்லிக் கொண்டே சக்கசேனாபதியின் பக்கமாகத் திரும்பினான் இராசசிம்மன்.

அவர் இடுப்பிலிருந்து தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்த இரண்டு பட்டுப்பை முடிப்புகளை அவன் கையில் கொடுத்தார். அவன் அதை வாங்கி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான்.

பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாய் அடைத்துப் போய் நின்றாள். பை நிறையப் பொற்கழஞ்சுகள் மின்னின. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தலைநிமிர்ந்து பார்த்த போது அவர்களைக் காணவில்லை.

தொலைவில் கடைவீதி திரும்பும் மூலையில் கையில் வலம்புரிச் சங்கோடு அந்த இளைஞனும் அவனோடு வந்த முதியவரும் வேகமாகச் செல்வது தெரிந்தது. அளவொத்து மேலெழும்பித் தணியும் இரு செவ்விளநீர்க் காய்கள் போல் நெஞ்சங்கள் நிமிர்ந்து தணியக் கடைவீதி மூலையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் அந்தப் பெண்.

32. மதிவதனி விரித்த வலை

இருட்டி வெகு நேரமாகிவிட்டது. தென்னை மரங்களின் தோகைகள் காற்றில் ஆடும் ஓசையும், கடல் அலைகளின் இரைச்சலும் தவிரச் செம்பவழத் தீவு அமைதி பெற்றிருந்தது. பாலில் நனைத்து எறிந்த நீலத்துணி நெடுந்தூரத்துக்கு விரித்துக் கிடப்பது போல் கடல் நிலா ஒளியில் மிக அழகாகத் தெரிந்தது. தென்னங் கீற்றுகளிடையே நுழைந்து நிலவுக் கதிர்கள் நிழலினிடையே தரை மகளின் செம்மேனியின் மேல் விழுந்தது போல் எவ்வளவு அழகாகப் பதிகின்றன?

கூடாரத்தின் வாயிலில் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். இராசசிம்மனின் மடியில் மாலையில் வாங்கிய அந்த வலம்புரிச் சங்கு இருந்தது.

"சக்கசேனாபதி! இந்தச் சங்குதான் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா!" அதன் வழவழப்பான மேல் பாகத்தை விரல்களால் தடவியபடியே கூறினான் இராசசிம்மன்.

சக்கசேனாபதி அவன் முகத்தை உற்றுப் பார்த்து விஷமத்தனமாகக் கண்களைச் சிமிட்டினார்.

"சங்கு மட்டும் தானா அழகாக இருக்கிறது! அதைக் கொடுத்த..." சொல்ல வந்ததை முழுவதும் சொல்லி முடிக்காமல் மறுபடியும் சிரித்தார் அவர்.

"சரிதான்! நீங்களே என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?"

"கேலியில்லை, இளவரசே! அந்தப் பெண் உண்மையிலேயே..."

"போதும் வருணனை! உங்களுக்குத் தலை, மீசை எல்லாமே நரைத்திருப்பது மறந்து போய்விட்டது போலிருக்கிறது."

அவர் தன்னை வம்புக்கு இழுப்பதைத் தடுப்பதற்காக அவரையே வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன்.

"தலை, மீசை நரைத்து விட்டால் பெண்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று எந்த அறநூலில் சொல்லியிருக்கிறது? அந்தப் பெண் என் கைகளையா ஓடி வந்து பிடித்துக் கொண்டாள்? இளவரசருடைய வாலிபக் கைகளைத் தானே அவள் வலுவில்..."

"எவனோ அன்னக்காவடிப் பயல் ஆயிரக்கணக்கில் விலை பெறக்கூடிய சங்கைத் தூக்குகிறானே என்று பயந்து போய்க் கையைப் பிடித்திருக்கிறாள்?"

"நியாயந்தானே? அவளுக்குத் தெரியுமா, நீங்கள் தென்பாண்டி நாட்டு இளவரசர் என்று?"

"தெரிந்திருந்தால்...!"

"கையைப் பிடித்திருக்க மாட்டாள். அப்படியே காலடியில் விழுந்து வணங்கியிருப்பாள்!"

"அப்படியானால் தெரியாததே நல்லதாகப் போயிற்று." இராசசிம்மன் சிரித்தான். சக்கசேனாபதி அவனுக்குப் பயந்து பெரிதாக வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

"இளவரசே! நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. இந்தத் தீவில் எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் இருக்கிறார்கள்..."

"சக்கசேனாபதி அவர்களே! மறுபடியும் நினைவூட்டுகிறேன். உங்களுக்குத் தலை நரைத்து விட்டது. நீங்கள் இந்தப் பேச்சுப் பேசாதீர்கள்."

"ஏன் சொல்லமாட்டீர்கள் இளவரசே? ஐம்பதுக்கு மேல் வயது ஆகிவிட்டதென்ற தெம்பில்தானே என்னை இப்படிக் கேலி செய்கிறீர்கள்? நானும் உங்களைப் போல் வயதுப் பிள்ளையாக இருந்தால்...!"

"இருந்தால் என்ன? அப்படி ஆவதற்கு வேண்டுமானால் காயகல்ப மருந்து சாப்பிட்டுப் பாருங்களேன்." இளவரசனின் கேலிச் சிரிப்பு பலமாக ஒலித்தது.

"எனக்கு உங்களோடு 'வாலிபப் பேச்சு' பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. காலையில் அருணோதயத்துக்கு முன்பே கப்பல் புறப்பட வேண்டும். ஆக வேண்டியவைகளைக் கவனிக்கிறேன்" என்று எழுந்திருந்தார் சக்கசேனாபதி.

பகலில் அலுப்புத் தீர நன்கு உறங்கியிருந்ததனால் இராசசிம்மனுக்கு உறக்கம் வரவில்லை. நிலா ஒளியில் தீவின் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பலாமென்று எண்ணினான். சேனாபதியும், மற்ற ஆட்களும் கூடாரத்திலிருந்து சாமான்களைக் கப்பலில் ஏற்றுவதும், கப்பல் இயந்திரங்களைச் சரிபார்ப்பதுமாக வேலையில் மும்முரமாக முனைந்திருந்தார்கள்.

இராசசிம்மன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கையில் அந்தச் சங்கையும் எடுத்துக் கொண்டு கரையோரமாக நடந்தான். சில இடங்களில் கடலுக்கு மிக அருகிலே அலை நீர்த்துளிகள் மேலே தெளிக்கும்படி பாதை கடலைத் தொட்டாற்போல் இருந்தது. இன்னும் சில இடங்களில் தாழை மரங்களும், புன்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து பக்கத்தில் கடல் இருப்பதே தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தன. சுழித்துச் சுழித்து வீசும் காற்றுக்கும் அலை இறைச்சலுக்கும் நடுவில் தனியனாக நடந்து சென்று கொண்டிருந்த இராசசிம்மனுக்கு, மனத்தில் எத்தனையோ விதமான சிந்தனைகள் உண்டாயின. அழகான இடங்களைப் பார்த்தால் உள்ளத்தில் அழகான ஆழமான சிந்தனைகள் உண்டாகின்றன. சிந்தித்துக் கொண்டே நீண்ட தூரம் நடந்து விட்டான் இராசசிம்மன்.

அந்த இடத்தில் கரையின் தரைப் பரப்பு வளைந்து தெற்கு முகமாகத் திரும்பியது. திருப்பத்தில் ஒரு வேடிக்கையான காட்சியை இராசசிம்மன் கண்டான். கடலுக்கு மிக அருகில் சற்றே தாழ்வான பள்ளம் ஒன்றில் அழுத்தமாகவும், நெருக்கமாகவும் இரும்புக் கம்பிகளால் பின்னப்பட்டிருந்த வலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. வலையின் நான்கு முனைகளிலும் கட்டப்பட்டிருந்த தேர்வடம் போன்ற கயிறுகள் மேலே உள்ள புன்னை மரத்து உச்சியில் தேர்ச்சக்கரம் போன்ற ஒரு மர இராட்டினத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இராட்டினத்தைச் சுற்றினால் வலை சுருட்டிக் கொண்டு மேலே எழும்பி விடும். இராட்டினத்துக்குப் பக்கத்தில் மரத்தின் அடர்த்தியில் யாரோ உட்கார்ந்து கொண்டிருப்பது போலிருந்தது. இராசசிம்மன் அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துவிட்டுத் தெற்குப் புறமாகத் திரும்பி நடந்தான்.

திருப்பத்தில் கரையோரமாக இன்னொரு பாய்மரக் கப்பல் நின்று கொண்டிருப்பது அவன் பார்வையில் பட்டது. அதைப் பார்த்ததும் அவன் வேறுவிதமாகச் சந்தேகப்பட்டான். வழி தெரியாமல் சுற்றி வளைத்துத் தீவை வலம் வந்து பழையபடி தங்கள் கப்பல் நின்று கொண்டிருந்த இடத்துக்கே வந்து விட்டோமோ என்று மலைத்தான் அவன்.

ஆனால் அந்தக் கப்பலின் பாய்மரத்து உச்சியில் பறந்து கொண்டிருந்த கொடி அவன் சந்தேகத்தைப் போக்கியது. புலியும் பனைமரமும் ஆகிய இலச்சினைகள் பொறித்த கொடி அது.

இராசசிம்மன் சிறிது அருகில் நெருங்கி அந்தக் கப்பலைப் பார்த்தான். 'அந்தக் கப்பல் எப்போது வந்தது? ஏன் அப்படி ஒதுக்குப்புறமான இடத்தில் நிற்கிறது?' என்று சிந்தித்தான் அவன்.

"யார் ஐயா அது கரையில் நிற்கிறது?" என்று அதட்டுகிறாற் போன்ற குரலில் கேட்டுக் கொண்டே அந்தக் கப்பலின் மேல் தளத்திலிருந்து யாரோ இரண்டு மூன்று பேர்கள் இறங்கி வந்தார்கள்.

"நான் ஒரு வழிப்போக்கன், ஐயா! சும்மா கப்பலை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்" என்று அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இராசசிம்மன் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றான். அந்தக் கப்பலில் இருப்பது யாராக இருந்தாலும் அப்போது அவர்கள் பார்வையில் தான் படக்கூடாது என்பது அவன் நினைவு. ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. கப்பலிலிருந்து இறங்கி வந்தவர்கள் அவன் நாலைந்தடி தூரம் நடப்பதற்குள் அவனை நெருங்கி விட்டார்கள்.

இராசசிம்மன் நடையை வேகமாக்கிக் கொண்டு முந்திவிட முயன்றான். அவர்கள் அவனை முந்த விடவில்லை. "இந்தா, ஐயா! கொஞ்சம் நில்!"

அவன் நின்றான்! கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களில் சற்றுப் பருமனான தோற்றத்தையுடைய ஒருவன் அருகில் வந்து இராசசிம்மனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். தன்னோடு வந்த மற்ற இரண்டு பேர்களையும் பார்த்து ஏதோ ஒரு குறிப்புப் படச் சிரித்தான். பின்பு இராசசிம்மனைப் பார்த்துக் கேட்டான். "ஐயா! நீங்கள் யார்?"

இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் இராசசிம்மனுடைய உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. "நான் யாரென்றால்... நான் நான் தான்!"

"அது தெரிகிறது! உங்கள் பெயர்?"

"எனக்கு ஒரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் அது உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் என்ன?" இராசசிம்மனுடைய குரலில் கடுமை இருந்ததை அவர்கள் உணர்ந்தனர்.

கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களும் அவனுடைய வழியை மறித்துக் கொண்டு நிற்பவர்களைப் போல் குறுக்கே நின்றார்கள். அவர்களில் ஒருவன் அவனுடைய கையிலிருந்த அந்த வலம்புரிச் சங்கைப் பார்த்துவிட்டு, "இந்தச் சங்கு உங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்டான்.

அவர்கள் ஏதோ காரணத்துக்காகத் தன்னை வம்பு பேசி வழிமறிக்கிறார்கள் என்பது இராசசிம்மனுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தற்காப்பாக உடைவாள் கூட இன்றிப் பழக்கமற்ற புதிய தீவில் தனியே இரவில் உலாவப் புறப்பட்ட தவறு அப்போதுதான் அவன் மனத்தில் உறைத்தது.

"நான் போக வேண்டும். என் வழியை விடுங்கள்" என்று அவர்களை விலக்கிக் கொண்டு முன்னோக்கிப் புறப்பட்டான் அவன். பின்னால் எக்காளமிட்டுச் சிரிக்கும் வெடிச் சிரிப்பொலி எழுந்தது!

"தென்பாண்டி நாட்டு இளவரசரை இவ்வளவு சுலபமாக தப்பிப் போகவிட்டு விடுகிற நோக்கம் இல்லை."

எக்காளச் சிரிப்பும், இந்த எச்சரிக்கைக் குரலும் இராசசிம்மன் காதுகளில் நாராசமாய் ஒலித்தன. அவன் ஓட்டமும் நடையுமாக அவர்களிடமிருந்து தப்பும் நோக்கத்துடன் விரைந்தான். திருப்பத்தில் திரும்பி இரும்புவலை விரித்திருந்த அந்தப் பள்ளத்தை அவன் நெருங்கவும் அந்த மூன்று ஆட்களும் அவனைத் துரத்திக் கொண்டு வேகமாக ஓடி வரவும் சரியாக இருந்தது.

பயத்தில் அதிர்ச்சியடைந்த இராசசிம்மன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். அடுத்த கணம் அவனுடைய உடலை ஏதோ ஒன்று வேகமாகச் சுருட்டிக் 'கிறு கிறு'வென்று மேலே தூக்கியது. மர இராட்டினம் வேகமாகச் சுழலும் ஓசை பெரிதாக ஒலித்தது.

ஓடி வந்த அவசரத்தில் பள்ளத்தில் விரித்துக் கிடந்த இரும்புக் கம்பி வலைக்குள் அகப்பட்டுக் கொண்டோமென்று விளங்கிக் கொள்ள அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது. அதை உணர்ந்து கொண்ட போது அவனுடைய உடல் மிகவும் பத்திரமாக ஒற்றைப் பனை உயரத்துக்கு மேலே புன்னைமரக் கிளை வரை வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகப்பட்டு விட்டது.

கீழே துரத்திக் கொண்டு வந்தவர்கள் அவனைக் குறி வைத்து எறிந்த கூர்மையான வேல் பக்கத்து மரத்தில் பாய்ந்து ஆழப் பதிந்து கொண்டு அப்படியே நின்றது. துரத்திக் கொண்டு வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அனுமானிக்கக் கூட நேரமில்லை. இரும்பு வலை கீழே கிடந்ததும், மின்னல் மின்னுகிற நேரத்துக்குள் இராசசிம்மனை மேலே மர உச்சிக்குத் தூக்கிக் கொண்டு சென்றதும் அவர்களுக்குத் தெரியாது. இராசசிம்மன் எப்படியோ மாயமாகத் தங்களிடமிருந்து தப்பி விட்டானே என்று வியந்து அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்த தாழம் புதர்களைக் குடைந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அவனைத் தாழம் புதரில் தேடிக் கொண்டிருந்த அதே சமயத்தில் புன்னை மரத்தின் உச்சிக் கிளையில் வளை குலுங்கும் அழகிய பெண் ஒருத்தியின் இரண்டு கரங்கள் அவனை வலையிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தன.

"ஐயா கவலைப்படாதீர்கள். எல்லாம் நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக நீங்கள் வலையின் குறுக்கே விழுந்து ஓடினீர்கள். இல்லையானால் உங்களை நான் காப்பாற்றியிருக்க முடியாது" என்றாள் அந்தப் பெண்.

மரக் கிளையில் மங்கலான ஒளியில் அவள் முகத்தைப் பார்த்த இராசசிம்மன், "நீயா?" என்று வியப்பு மேலிட்டுக் கூவினான். அவள் தன் சண்பக மொட்டுப் போன்ற விரல்களால் அவன் வாயைப் பொத்தினாள். "இரையாதீர்கள். கீழே அந்த வேட்டை நாய்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன" என்று மெல்ல அவன் காதருகே கூறினாள் அவள்.

மரக்கிளையில் உட்கார்ந்து அவனை வலை மூலம் தூக்கிக் காப்பாற்றிய அந்தப் பெண் வேறு யாருமில்லை. அன்று மாலை அவனுக்குச் சங்கு விற்ற பெண் தான் அவள். இரவில் கரைக்கு வரும் முதலைகளைப் பிடிப்பதற்காக அப்படி வலை விரிப்பது வழக்கமென்றும் அன்று அந்த வலை அவனைக் காப்பாற்ற உதவியதற்காகத் தான் பெருமைப்படுவதாகவும் அந்தப் பெண் அவனிடம் கூறினாள்.

"பெண்ணே! உன் பெயரை நான் அறிந்து கொள்ளலாமோ?" என்று அவளுடைய வளைக் கரங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு நன்றி சுரக்கத் தழுதழுக்கும் குரலில் கேட்டான் இராசசிம்மன்.

செந்தாமரைப் பூக்கள் போன்ற அந்தப் பெண்ணின் புறங்கைகளைத் தென்பாண்டி நாட்டு இளவரசன் சிந்திய ஆனந்தக் கண்ணீர் துளிகள் நனைத்தன.

"என் பெயர் மதிவதனி" என்று தலை குனிந்து நாணத்தோடு சொன்னாள் அந்தப் பெண்.

"மதிவதினி! மாலையில் ஈராயிரம் பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு இந்த ஒரு வலம்புரிச் சங்கை எனக்குக் கொடுத்தாய்! இப்போதோ எத்தனை ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்தாலும் ஈடாகாத என் உயிரையே எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறாய்!"

"ஐயா! பொற்கழஞ்சுகளுக்காகவே எல்லாக் காரியங்களையும் மனிதர்கள் செய்து விடுவதில்லை. இதயத்துக்காக - மனிதத் தன்மைக்காகச் செய்து தீரவேண்டிய சில செயல்களும் உலகில் இருக்கின்றன!" மதிவதனியின் குரலில் உருக்கம் நிறைந்திருந்தது.

அவர்கள் புன்னை மரத்தின் அடர்ந்த கிளையிலேயே அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கீழே தாழம் புதர்களில் தேடிக் கொண்டிருந்தவர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போய்விட்டார்கள்.

"ஐயா! இனி நாம் கீழே இறங்கலாம்" என்றாள் மதிவதனி. இராசசிம்மன் மிரண்ட பார்வையால் அவள் முகத்தைப் பார்த்தான்.

மதிவதனி அவனுடைய பயம் நிறைந்த பார்வையைக் கண்டு சிரித்தாள்.

அதே சமயத்தில் மரத்தடியில், "மதிவதனீ!... மதிவதனீ! எங்கே, எங்கேயிருக்கிறாய்? மரக் கிளையிலேயே உறங்கிவிட்டாயா?" என்று கீழே ஓர் ஆண் குரல் இரைந்து கூப்பிட்டது.

33. மகாமண்டலேசுவரர்

இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியை அம்பலவன் வேளான் வந்து கூறிய போது எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியோ அதிர்ச்சியை விட அதிகமாக விழிப்பும், முன்னெச்சரிக்கையும் பெற்றார். தாம் பொறுப்பும், திறமையும், சூழ்ச்சியும் ஒருங்கே அமைந்த ஒரு மகாமண்டலேசுவரர் தான் என்பதை அந்த விநாடியில் அவர் செய்த காரியத்தால் நிரூபித்து விட்டார்.

அம்பலவன் வேளான் செய்தியைத் தெரிவித்த போது அவர்களெல்லாம் எந்த இடத்தில் இருந்தார்களோ அந்த இடத்தின் வெளிவாயிற் கதவுகளை உடனே அடைத்து உட்புறமாகப் பூட்டிக் கொண்டு வருமாறு நாராயணன் சேந்தனை அனுப்பினார் இடையாற்று மங்கலம் நம்பி. அவருடைய செயல் எல்லாருக்கும் வியப்பை அளித்தது. சிலருக்கு அர்த்தமற்றதாகவும் பட்டது? சிலருக்குப் பயமாகவும் இருந்தது. நம்பியின் கட்டளைப்படி உடனே கதவைப் பூட்டிக் கொண்டு வந்து விட்டான் சேந்தன். மகாமண்டலேசுவரர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எல்லாரும் அவருடைய முகத்தையே பார்த்தார்கள். அந்த முகத்திலும், கண்களிலும் ஆழம் காணமுடியாத அமைதி தெரிந்தது.

மகாராணி வானவன்மாதேவி, தளபதி வல்லாளதேவன், நாராயணன் சேந்தன், கரவந்தபுரத்திலிருந்து வந்த தூதன், இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியைக் கூற வந்த அம்பலவன் வேளான் முதலிய முக்கியமான ஆட்களே அப்போது அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் நின்று நிதானித்துத் தனித் தனியே ஏறிட்டுப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி. மேலோட்டமாகப் பார்க்கின்ற சாதாரணப் பார்வையன்று அது! முகத்தை, கண்களை, அவை இரண்டின் மூலமாக உள்ளத்தைப் பார்க்கின்ற அழுத்தமான பார்வை அது. மழை பெய்வதற்கு முன் பூமியில் ஏற்படுகின்ற ஒருவகைப் புழுக்கம் போல் பெரிய பேச்சுகளை எதிர்பார்த்து நிற்கும் சிறிய அமைதி அங்கே நிலவியது. ஆனால், அந்த அமைதியின் கால எல்லை சில விநாடிகள் தான். அதைக் கலைத்துக் கொண்டு மகாமண்டலேசுவரரின் கணீரென்ற குரல் எழுந்தது. "மகாராணியின் முன்னிலையில் இவர்களுக்கெல்லாம், இவர்களுக்கு மட்டுமென்ன? எனக்கும், தங்களுக்கும் கூட எச்சரித்து அறிவுறுத்த வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு."

இதைச் சொல்லிவிட்டு நம்பி சிறிது நிறுத்திக் கொண்டு எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். பின், மீண்டும் தொடர்ந்தார். "தேசத்தைக் காப்பாற்றுவதற்கு முன்னால் இரகசியங்களைக் காப்பாற்றுவதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் தோல்விகள், பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்முடைய எதிரிகள் அறிந்து கொள்ளும்படியாக விட்டு விடக்கூடாது. இப்போது நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான். இடையாற்று மங்கலத்தில் அரசுரிமைப் பொருள்கள் களவு போன செய்தி நம்மைத் தவிர மற்றவர் செவிகளில் பரவவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். கரவந்தப்புரத்திலிருந்த வந்த செய்தியும் அப்படியே. களவைக் கண்டுபிடிக்கவும், பகைவர் படையெடுப்பைச் சமாளிக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் எல்லா ஏற்பாடுகளும் நமக்குள் இருக்க வேண்டும். இப்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடத்தின் வாயிற் கதவுகளை நான் அடைக்கச் சொல்லிவிட்டேன். பிறரிடம் செய்தியைச் சொல்லிவிட மனத்தில் ஏற்படும் ஆவலையோ வாய்த்துடிப்பையோ நான் அடைக்க முடியாது. நீங்கள் எல்லோரும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்."

"மகாமண்டலேசுவரருடைய இந்த வேண்டுகோள் நம்முடைய நன்மைக்காகவே என்பதை நீங்கள் எல்லோரும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். வயதும், அனுபவமும் உள்ள அவர் கட்டளைகளை என் கட்டளைகளாகவே நினைத்துப் போற்ற வேண்டியது உங்கள் கடமை" என்று அதையடுத்து மகாராணி வானவன்மாதேவியார் கூறினார். எல்லோரும் சிலை போல் அடக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். மகாமண்டலேசுவரரை எதிர்த்து மடக்கி என்னென்னவோ குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவனுக்குக் கூட அப்போது பேச நா எழவில்லை.

எப்போதும், எவர் முன்னிலையிலும், சிரிப்பும் குறும்புமாகத் தன் பேச்சுகளால் பாதி - தன் தோற்றத்தால் பாதி என்று நகைச்சுவையலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நாராயணன் சேந்தன் இருக்குமிடம் தெரியாமல் நின்று கொண்டிருந்தான். எதிரே இருப்பவர்களின் வாயையும், புலன் உணர்வுகளையும் கட்டி விடுகிற ஆற்றல் உலகத்தில் மிகச் சிலருடைய கண் பார்வைக்கே உண்டு. அப்படிப்பட்ட கண்களைப் பெற்றவர்கள் வாயில் வீரமொழிகளும், கையில் வாளும் இல்லாமலே கண்களால் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். கண்கள் என்ற ஒரே புலனுணர்வால் மட்டுமே உலகத்தை அளந்து எடை போட்டு நிறுத்திவிடும் மகாசாமர்த்தியக்காரர்கள் அவர்கள். அந்தச் சாமர்த்தியத்தின் சாயல் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரிடம் இருந்தது.

"நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற."

என்று மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களை நினைத்துத்தான் திருவள்ளுவப் பெருந்தகையார் அழகாகப் பாடிவைத்தார் போலும்.

மழைக்காலத்து மங்கிய நிலவு போல் மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் கவலைகள் தேங்கி நின்றன. அந்த முகத்தில் ஏற்கனவே நிரந்தரமாகத் தேங்கிவிட்ட கவலை ஒன்று உண்டு. அது கைம்மைக் கவலை. கணவனை இழந்த கவலை. சுட்டுவிரலால் கீறிய கறுப்புக்கோட்டை மேலும் கட்டை விரலால் கீறிப் பெரிதாக்கினாற் போல் அந்தப் பழைய கவலை புதிய கவலைகளால் விரிவடைந்திருந்தது. ஏதோ ஒரு சோகக் கனவில் ஆழ்ந்திருப்பது போல் மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக் கொண்டு வீற்றிருந்த மகாராணியைத் தம் பேச்சுக் குரலால் கவனம் திரும்பும்படி செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி.

"மகாராணி! இது பலவகையிலும் சோதனைகள் நம்மைச் சூழ்கின்ற காலம். இந்த நாட்டின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற எதையும் செய்கின்ற அதிகாரங்களை முன்பே நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த வேண்டிய சமயம் என்னை நோக்கி வந்திருக்கிறது."

"மகாமண்டலேசுவரருக்கு எந்த உரிமையையும் எப்போதும் நான் மறுத்ததில்லையே?" வானவன்மாதேவியிடமிருந்து சுருக்காமாகவும் விநயமாகவும் மறுமொழி பிறந்தது.

"தங்கள் அன்புள்ளம் மறுப்பறியாததென்று நான் அறிவேன். இருந்தாலும் நிலைமையைக் கூறிவிட வேண்டியது என் கடமை." இந்தச் சொற்களைச் சொல்லும் போது புன்னகை - அல்ல, புன்னகை செய்வது போன்ற சாயல் மகாமண்டலேசுவரரின் முகத்தில் நிலவி நின்றது.

மகராணி மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். தயக்கத்தோடு கேட்டார்: "மகாமண்டலேசுவரரே! இராசசிம்மனை இடையாற்று மங்கலத்திலிருந்து உடனே அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினீர்களே...?"

வானவன்மாதேவியின் இந்தக் கேள்வி அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவர் தயங்கினார். மிடுக்கு நிறைந்த அவருடைய நிமிர்ந்த பார்வையில் சற்றே சோர்வு நிழலாடி மறைந்தது.

"மகாராணி! நான் அதைப் பற்றித் தங்களிடம் தனிமையில் சிறிது நேரம் பேச வேண்டும். புதிதாக வந்த செய்திகள் சிறிது குழப்பத்தை உண்டாக்கிவிட்டன...!"

"இந்தச் செய்திகளுக்கும் நீங்கள் இராசசிம்மனை அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தமோ?"

"இப்போது இந்த இடத்தில் இந்தச் சூழலில் தங்களிடம் அதைப் பேச இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து என்னைப் பொறுத்தருள வேண்டும். நாம் தனிமையில் மட்டும் தான் பேச முடிந்த செய்தி அது!"

மகாராணி பதில் பேசவில்லல.

"சேந்தா! கதவு மூடியிருக்க வேண்டிய அவசியம் இனி மேல் இல்லை. கதவைத் திறந்துவிடு."

மகாமண்டலேசுவரரின் ஆணைப்படி மூடிப் பூட்டிய கதவுகளைச் சேந்தன் அவசர அவசரமாகத் திறந்து விட்டான்.

"மகாராணி! இதோ நம்மைச் சுற்றி நிற்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பைப் பேசி ஒப்படைத்து அனுப்பிவிட்டு நான் மறுபடியும் இங்கே வருகிறேன். குமார பாண்டியரைப் பற்றி அப்போது நாம் பேசலாம்."

வானவன்மாதேவி மகாமண்டலேசுவரருடைய பேச்சைக் கேட்டுத் தலையசைத்தார். உணர்ச்சியும், விருப்பமும், நம்பிக்கையின் மலர்ச்சியும் இல்லாத வெற்றுத் தலையசைப்பாக அது இருந்தது.

அங்கிருந்தவர்களில் மகாராணியாரைத் தவிர மற்றவர்கள் பின் தொடர அரண்மனையில் தாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டார் மகாமண்டலேசுவரர். தயங்கித் தயங்கிப் பின் தொடரும் ஆட்களோடு அவர் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்ற காட்சி நிமிர்ந்த பார்வையும் இராஜ கம்பீரமும் பொருந்திய வயதான கிழட்டுச் சிங்கமொன்று சில இளம் புலிகள் பின் தொடர அவற்றை எங்கோ அடக்கி அழைத்துச் செல்லுவது போலிருந்தது.

அந்தப்புரத்திலும், கன்னிமாடத்திலும் இருந்த அரண்மனைப் பெண்கள் கூட்டமாகப் பலகணித் துவாரங்களின் வழியாகவும், மேல்மாடங்களில் நின்று கொண்டும் இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தனர். விடிந்ததும் விடியாததுமாக மகாமண்டலேசுவரர், தளபதி முதலிய பெரிய பெரிய ஆட்களெல்லாம் அந்தப்புரத்துக்குத் தேடிவந்து அவசரமாக மகாராணியைச் சந்தித்துவிட்டுத் திரும்பவேண்டுமென்றால் விஷயம் ஏதோ பெரியதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. தளபதியின் தங்கை பகவதியும் அதங்கோட்டாசிரியரின் மகள் விலாசினியும் கூட அந்தக் காட்சியைப் பரபரப்புடன் பார்த்தார்கள்.

இவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பைப் போல் அல்லாமல் முன்பே சில இரகசியங்கள் தெரிந்திருந்த காரணத்தால் வண்ணமகள் புவன மோகினிக்கு அதிகமான பரபரப்பும், பீதியும் ஏற்பட்டிருந்தன. தமையன் அரண்மனையிலிருந்து எங்கேயாவது வெளியேறிச் சென்று விடுவதற்குமுன் அவனை ஒருமுறை சந்திக்க வேண்டும் போல் இருந்தது தளபதியின் தங்கை பகவதிக்கு.

இப்படியாக, அதிகாலையில் அந்தப்புரத்தில் மகாராணியின் தனி மாளிகையில் நடந்த கூட்டத்தில் என்ன பேச்சுகள் நடந்தன என்ற செய்தி எங்கும் பரவாவிடினும், ஒரு பரபரப்பும் மர்மமான பீதியும் அரண்மனையில் பரவிவிட்டிருந்தன. முக்கியமானவர்கள், முக்கியமில்லாதவர்கள், காவல் வீரர்கள், சாதாரணப் பெண்கள் எல்லாரும் அரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இதைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். காதும் காதும் வைத்தாற் போல் வாய்களும், காதுகளும் இந்தச் செய்தியைப் பரப்பி விட்டன.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு விருந்து மாளிகைக்குச் சென்ற இடையாற்று மங்கலம் நம்பி இரண்டொரு நாழிகைக்குப் பின் ஒவ்வொருவரையும் ஓரோர் காரியத்துக்காக வெளியே அனுப்பினார். மகாமண்டலேசுவரருடைய ஆணை பெற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிய ஒவ்வோர் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியின் சாயல் படிந்திருந்தது. சிரிப்பு, சீற்றம், கடமை, பணிவு - இன்னும் அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கங்களும், சென்ற திசைகளும் போலவே அவர்களுடைய நெஞ்சத்து எண்ணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டனவாக இருந்தன.

மகாமண்டலேசுவரருடைய கட்டளைப்படி எல்லோரும் அவரவர்கள் அனுப்பிய இடத்துக்கு உடனே புறப்பட்டு விட்டனர். ஆனால் தளபதி வல்லாளதேவன் மட்டும் உடனே புறப்படவில்லை. மகாமண்டலேசுவரர் தன்னை அனுப்பிய வேலை அவசரமாயினும் அவசரமாக அவன் கிளம்பவில்லை. அந்தப்புரத்திலிருந்த தன் தங்கை பகவதியையும், அரண்மனையில் மறைந்திருந்த ஆபத்துதவிகள் தலைவனையும் அந்தரங்கமாகச் சந்தித்து ஏதோ பேசிய பின்பே அவன் கிளம்பினான்.

34. கனவு கலைந்தது

அன்றைக்குப் பொழுது புலர்ந்த போது இடையாற்று மங்கலம், இடையாற்று மங்கலமாக இல்லை. அந்தத் தீவில் சோகமும், ஏமாற்றமும், ஏக்கமும் ஒன்று சேர்ந்து நிரம்பிவிட்டது போல் ஒருவகை அமைதி பரவியிருந்தது. மகாமண்டலேசுவரரின் மாளிகை, சாவு நடந்து விட்ட வீடு போல் களையில்லாமல் காட்சியளித்தது. வைகறையில் அங்கு ஒலிக்கும் வழக்கமான இன்னிசைக் கருவிகளின் மங்கல ஒலி கேட்கவில்லை. மாளிகையிலுள்ள சிவன் கோவிலில் அடிகள்மார் ஊனும், உயிரும் உருகும் வண்ணம் பாடும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் பூபாளப் பண்ணொலி கேட்கவில்லை. மாளிகையைச் சுற்றியிருந்த நந்தவனங்களில் பூத்திருந்த பூக்கள் யாரும் கொய்வாரின்றிக் கிடந்தன.

பெண்களின் கைவளை ஒலி, பாதங்களின் சிலம்பொலி, கதவுகளைத் திறந்து மூடும் ஓசை, முரசுகளின் முழக்கம், சங்குகளின் ஒலி, கன்னி மாடத்துக் குமரி நங்கையரின் குதூகலமான கலகலப்பு - எதுவும், எங்கும் இன்று அளவிட முடியாத துன்பத்துள் அடங்கி ஒடுங்கி முழுகி விட்டது போலிருந்தது தீவு முழுவதும். கன்னி மாடத்து வாசற்படியில் கன்னத்தில் கையூன்றித் துயரமே உருவாக வீற்றிருந்தாள் குழல்மொழி. தூங்கி விழித்த சோர்வு கூட இன்னும் மாறவில்லை அவள் முகத்தில். தூக்கத்தில் கலைந்திருந்த கரிகுழல் காதோரங்களிலும், முன் நெற்றியிலும் சுருண்டு வளையமிட்டிருந்தது. உறங்கி விழித்த இளஞ்சிவப்புப் படிந்த கண்களின் செருகினாற் போன்ற ஒடுங்கிய பார்வையில் அலுப்பும் ஓர் அழகு மயக்கத்தை உண்டாக்கியது. பகலின் ஒளி மருவி உறவாடிய அந்தித் தாமரை போல் சோகம் மருவித் துவண்ட அந்த முகத்தில் இனம் புரியாத ஏக்கம் தெரிந்தது. அதை விட அதிகமாக ஏமாற்றம் தெரிந்தது.

புறத்தாய நாட்டு அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போயிருந்த தன் தந்தைக்கு அம்பலவன் வேளான் மூலமாக நடந்த செய்தியைச் சொல்லி அனுப்பிவிட்டு மேலே என்ன செய்வதென்று திகைத்து வீற்றிருந்தாள் அவள். இதயம் எண்ணங்களின் சுமைகளால் கனத்தது. இன்ப துன்ப உணர்ச்சிகளெல்லாம் பாழாய்ப் போன மனித இதயத்துக்குத்தான் உண்டு போலிருக்கிறது. அவள் கண் பார்வைக்கு முன்னால் நேற்றைக்கு இருந்தது போலவே இன்றும் பறளியாறு கவலையின்றி ஓடிக் கொண்டிருந்தது. கரையோரத்துக் கொன்றை கொத்துக் கொத்தாகப் பொன் பூத்திருந்தது. மரக்கிளையில் பறவைகள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. 'நேற்றிரவு கொள்ளை போனதைப் பற்றி இவை சிறிதாவது பொருட்படுத்தினவா? சிறிதாவது கவலைப்பட்டனவா?' - குழல்மொழி நெடு மூச்சு விட்டாள். 'உணரத் தெரிந்த உள்ளத்துக்குத் தான் துன்பமெல்லாம்!' தனக்குள் அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.

அவள் இருந்த நிலையைப் பார்த்த போது அருகில் நெருங்கவோ, ஆறுதல் கூறவோ, துணிவின்றி அஞ்சினார்கள் உடனிருந்த பணிப்பெண்கள்.

சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் கொள்ளை போன துயரத்துக்கு மேல் தன்னுடைய உள்ளம் கொள்ளை போன துயரம் பெரிதாக இருந்தது அவளுக்கு. துறவுக் கோளத்தில் மறைந்து நின்ற அந்த இளமையின் சிரிக்கும் முகத்தை, திரண்ட தோள்களை, பரந்த மார்பை, உருவெளியில் ஒன்றாக்கி நிறுத்திக் கண்களை மூடிக் கொண்டு பார்க்க முயன்றாள் குழல்மொழி. கண்முன் இருப்பவரை விழித்துக் கொண்டால் தான் பார்க்க முடியும்! கண்முன் இல்லாதவரையோ கண்கள் மூடிக் கொண்டால்தானே பார்க்க முடிகிறது? புறக்கண்ணால் எதிரில் இருப்பவரைப் பார்க்கும் போது அகக்கண் மூடுகிறது. அகக்கண்ணால் எங்கோ இருப்பவரை நினைவில் கொணர்ந்து பார்க்க முயலும் போது புறக்கண்கள் தாமே மூடிக் கொள்கின்றன. தியானம் செய்யும் போது தன் தந்தை கண்களை மூடிக் கொள்ளும் காட்சி குழல்மொழிக்கு நினைவு வந்தது. துறவியாக வந்தவர் யார் என்று தன் உள்ளத்துக்குப் புதிதாகத் தெரிந்த உண்மையோடு அவர் அழகையும் இணைத்து எண்ணிப் பார்த்த போது அவளுக்கும் ஏக்கம் ஏக்கமாக வந்தது. சொந்தக்காரன் தனக்குச் சொந்தமான பொருள்களை எடுத்துக் கொண்டு போனதைக் கொள்ளை என்று ஒப்புக் கொள்ள அவள் மனம் தயாராயில்லை. சொந்தமில்லாத அவள் உள்ளத்தையும் புதிதாகச் சொந்தமாக்கிக் கொண்டு போனதைக் கொள்ளை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? எப்படிக் குறிப்பிடுவது? தன் தந்தை கூற்றத் தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனபின் துறவிக்கும், தனக்கும் இடையே நடந்த பேச்சுக்களை - நிகழ்ச்சிகளைக் கூடியவரை அவரிடம் கூறாமல் மறைத்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் அவள். துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டியது, அப்படிச் சுற்றிக் காட்டும் போது அவரைப் பற்றித் தான் அறிந்த ஒரு பெரிய உண்மை, அதன் பின் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றது ஆகிய நிகழ்ச்சிகளையெல்லாம் தன் தந்தையிடம் கூறினால் அவர் தன்னையே கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம் உள்ளூர அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

'துறவி இன்னாரென்ற உண்மை தனக்கும் முன்பே தன் தந்தைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று விழிஞத்திலிருந்து அழைத்து வரும் போதே அவருக்கு அது தெரிந்து தான் இருக்கும். வேண்டுமென்றே என்னிடம் அவர் அதை மறைத்திருக்கலாம்!' - நினைக்க நினைக்க என்னென்னவோ செய்தது, மனம் குழம்பியது குழல்மொழிக்கு.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, சிந்தனையைக் குழப்பிக் கொண்டிருந்த அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. கவலைகளும், மனக் குழப்பமும், அதிகமாக உள்ள சமயங்களில் பசுமையான சோலைகள், மலர்க்கூட்டங்கள், நீர்ப்பிரவாகங்கள் இவற்றைப் பார்த்தால் சிறிது நிம்மதி உண்டாகும். சிறு பருவத்திலிருந்தே அப்படி ஒரு பழக்கம் அவளுக்கு. தந்தை எதற்காவது அவளைக் கண்டித்தால், தோழிகளோடு எந்தக் காரணத்திலாவது பிணக்கு ஏற்பட்டால், நந்தவனத்துக்கோ, பறளியாற்றங் கரைக்கோ போய்த் தனியாக உட்கார்ந்து விடுவாள் அவள். கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையை, நீர்ப்பரப்பை அல்லது மலைத்தொடரைப் பார்த்துக் கொண்டு இருந்தால் அவை மனத்தைப் புதுமையாக்கி அனுப்பிவிடுகின்றன. பித்துப் பிடித்தாற் போல் கன்னிமாடத்து வாசலில் அமர்ந்திருந்த குழல்மொழி எழுந்திருந்து வெளியே நடந்தாள். மாளிகையை சுற்றியிருந்த தோட்டங்களில், மலர் வனங்களில், மண்டபங்களில், ஆற்றங்கரையில், இன்னும் எங்கெங்கோ தன் மன நிம்மதியைத் தேடி உலாவினாள் அவள். அகத்தின் நிம்மதி புறத்தில் கிடைப்பதற்குப் பதிலாக ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு நினைவை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

வசந்த மண்டபம் கண்களில் தென்பட்ட போது அவர் அங்கே தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. நீராழி மண்டபத்தினருகே அவள் சென்ற போது அவர் அங்கே நீராடியதை நினைத்தாள். நந்தவனத்தில் நுழைந்து மலர்களைப் பார்த்த போது அவருடைய வழிபாட்டுக்காக மலர் கொய்ததை நினைத்துக் கொண்டாள். வசந்த மண்டபத்து மலர்ச்சோலை வழிகளில் அவரோடு விளையாட்டுத்தனமாகப் பேசிக் கொண்ட பேச்சுக்களையெல்லாம் எண்ணினாள்.

நண்பகலின் உச்சி வெயில் மேலேறிக் காயும் வரையில் அப்படியே தன் நினைவின்றித் திரிந்து கொண்டிருந்தாள் அந்தப் பேதைப் பெண். இனிமையான, நல்ல கனவு ஒன்றைக் கண்டு கொண்டிருந்த போது யாரோ முரட்டுத் தனமாக அடித்துத் தட்டி எழுப்பிக் கலைத்து விட்டது போன்றிருந்தது அவளுடைய நிலை.

அதற்கு மேல் பணிப்பெண்கள் வந்து வற்புறுத்தி அழைத்துச் சென்று நீராடச் செய்தனர். உணவு கொள்ளச் செய்தனர். தன் விருப்பமின்றி அவர்களுடைய வற்புறுத்தலுக்காக அவள் நீராடினாள்; உண்டாள். வீரர்களும் மெய் காவற் பணிபுரிவோரும் அரசுரிமைப் பொருள்கள் களவு போய்விட்டனவே என்று கலங்கிப் போய்ச் செய்வதறியாது திகைத்திருந்தனர். அவளோ உள்ளம் களவு போய்விட்டதே என்று உன்மத்தம் பிடித்தவள் போலிருந்தாள்.

நீண்ட பகல் நேரம் எப்படியோ சிறிது சிறிதாகக் கழிந்தது. பால் வாய்ப் பிறைப் பிள்ளையை இடுப்பில் எடுத்துக் கொண்டு பகல் என்னும் கணவனைப் பறிகொடுத்த மேற்றிசைப் பெண் புலம்பும் மாலை நேரம் வந்தது. இருள், ஒளியைச் சிறிது சிறிதாக விழுங்கத் தொடங்கியிருந்தது. முதல் நாளிரவு நடந்துவிட்ட கொள்ளையால் அரண்டு போயிருந்த காவல் வீரர்கள் அன்றும் பயந்து போய் ஏராளமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். மாளிகையின் எல்லாப் பகுதிகளிலும் வசந்த மண்டபம் உட்படச் சிறிதும் இருளின்றித் தீபங்களை எரிய விட்டிருந்தார்கள். பொழுது விடிகிறவரை அவற்றை எவரும் அணைக்கக் கூடாதென்று முன் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

மாளிகையின் நான்கு புறமும் பறளியாற்றங்கரையை ஒட்டினாற் போல் சுற்றிலும் ஆயுதபாணிகளாக வீரர்கள் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். வழக்கமான மாளிகைப் படகைத் தவிர புதிய படகுகளோ, ஆட்களோ அனுமதிக்கப்படக் கூடாதென்று கடுமையாக உத்தரவிடப் பட்டிருந்தது.

களவு போனபின் மறுநாள் செய்யப்படும் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்த போது குழல்மொழிக்குச் சிரிப்புத்தான் வந்தது. காவலுக்கு ஆட்கள் நிறுத்தி வைக்கப்படாத இடங்கள் பறளியாற்று நீர்ப்பரப்பும், கரைமேலிருந்த உயரமான மரங்களின் உச்சிகளும் தான். கரையோரமாக இரண்டு மூன்று பாக தூரத்துக்கு ஒருவராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வீரர்கள் வெளிச்சத்துக்காகப் பிடித்துக் கொண்டிருந்த தீப்பந்தங்கள் தீவைச் சுற்றிக் கரை நெடுகக் கார்த்திகைச் சோதி எடுத்தது போல் தூரப் பார்வைக்குத் தோன்றியது. வீரர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து கொள்ளுகிற பாராக் குரலோசை இரவின் அமைதியில் அலை அலையாகப் பரவி எதிரொலித்தது.

உறக்கம் வராத குழல்மொழி கன்னிமாடத்து முகப்பில் அமர்ந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். காலை அரும்பி பகலெல்லாம் நினைவாகி மாலை மலர்ந்த நோய் அவள் துயிலைக் கெடுத்து உட்காரச் செய்திருந்தது. உட்கார்ந்திருந்ததும் வீண் போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பணிப்பெண் ஓடி வந்து "நாராயணன் சேந்தனும், அம்பலவன் வேளானும் தங்களைப் பார்ப்பதற்காக அரண்மனையிலிருந்து வந்திருக்கிறார்கள்" என்று கூறினாள்.

"எப்போது வந்தார்கள்?" என்று வியப்புடன் அந்தப் பெண்ணைக் கேட்டாள் குழல்மொழி.

"இப்போதுதான் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை அவசரமாகச் சந்திக்க வேண்டுமாம்."

"இப்போது எங்கே இருக்கிறார்கள்?"

"மாளிகையின் கீழ்ப்பகுதியில் மெய்க்காவல் வீரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு நிற்கிறார்கள்."

"அங்கேயே இருக்கச் சொல்! இதோ நானே வருகிறேன்."

பணிப்பெண் இதைப் போய்ச் சொல்வதற்குக் கீழே இறங்கிச் சென்றாள். சில விநாடிகளில் குழல்மொழியும் கீழே இறங்கிச் சென்றாள்.

பாதி இறங்கிச் சென்று கொண்டிருக்கும் போதே நாராயணன் சேந்தன் யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருப்பது அரைகுறையாக அவள் காதில் விழுந்தது.

"யாரைச் சொல்லி என்ன ஐயா குற்றம்? மகாமண்டலேசுவரரின் புதல்விக்கு அவர் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்து விட்டதால் வந்த வினைதான் இவ்வளவும்" - சேந்தனுடைய இந்தச் சொற்களைக் கேட்டு நடந்து கொண்டிருந்தவள் அப்படியே திகைத்துப் போய் நின்றாள்.

35. நெஞ்சமெனும் கடல் நிறைய...

கிழே மணற் பரப்பிலிருந்து மதிவதனியின் பெயரைச் சொல்லி யாரோ அழைக்கும் குரலைக் கேட்டு முகத்தில் கலவரம் தோன்ற அவளைப் பார்த்தான் குமாரபாண்டியன். 'இரவு நேரத்தில் கடலோரத்துத் தனிமையில் உயரமான மரக்கிளையின் மேல் அப்படி ஓர் அழகிய பெண்ணோடு நிற்கும் இளைஞனை மூன்றாவது மனிதன் பார்த்தால் எவ்வளவு தவறாகக் கற்பனை செய்து கொள்ள முடியும்?' இதை நினைக்கும் போது ஒரு துன்பத்திலிருந்து நீங்கி இன்னொரு துன்பத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் அஞ்சினான். அந்த அச்சம் அவனுடைய முகத்தில், பார்வையில், பேச்சில் வெளிப்பட்டுத் தெரிந்தது.

"மதிவதனி! கீழேயிருந்து யாரோ உன்னைக் கூப்பிடுகிறார்களே?"

"வேறு யாருமில்லை. என் தந்தை தான். நேரமாயிற்றே என்று என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்."

"ஐயோ! இந்த நிலையில் உன்னோடு என்னை இங்கே பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்?"

அவனுடைய கேள்வியின் உட்பொருள் விளங்காதவள் போல் அவன் முகத்தைச் சாதாரணமாகப் பார்த்தாள் அவள். பின்பு மெல்லச் சிரித்தாள். சிறிது சிறிதாகச் செந்நிற மலர் போல் நடு இதழில் மலர்ந்த அந்தச் சிரிப்பு இதழ் முடியும் இடத்தில் வலது கன்னத்தில் ஒரு சிறு குழியாகத் தேங்கி மறைந்தது. அவள் சிரிக்கும் போதெல்லாம் தென்படும் அந்த நளினச் சுழிப்பு சிரிப்பின் இங்கிதங்களையெல்லாம் மொத்தமாக ஒன்று சேர்த்துக் காட்டும் இறுதி முத்திரையாக அமைந்தது. எதிரே நின்று காண்பவரின் எண்ணங்களைத் தேக்கிச் சிறைப்பிடிக்கும் அந்த இங்கிதச் சிரிப்பில் சற்றே கிறங்கி நின்றான் இராசசிம்மன்.

அப்போது இரண்டாவது முறையாகக் கீழேயிருந்து அவள் தந்தை அவளை இரைந்து கூப்பிடும் ஒலி எழுந்தது.

"மதிவதனீ! பேசாமல் நீ மட்டும் கீழே இறங்கிப் போய்விடு. நான் இப்படியே மரக்கிளையில் ஒளிந்து கொண்டு விடுகிறேன்."

அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தையும், பதற்றத்தையும் உணர்ந்து அவள் மீண்டும் புன்முறுவல் பூத்தாள். அவனுக்கோ இரைந்து பேசவே நா எழவில்லை. அவன் பயந்தான்.

"ஏன் தான் இப்படிப் பயப்படுகிறீர்களோ நீங்கள்? மரியாதையாக என்னோடு கீழே இறங்கி வரப்போகிறீர்களா? அல்லது நான் கீழே இறங்கிப் போய் 'மரத்தில் ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்' என்று என் தந்தையிடம் சொல்லட்டுமா?"

"ஐயோ வேண்டாம் பெண்ணே! நானே வந்து விடுகிறேன்."

முதலில் மரக்கிளையிலிருந்து கீழே இறங்கிக் கால் வைத்துக் கொண்டு கையை நீட்டிக் குமாரபாண்டியனை இறக்கி விட்டாள் அவள்.

மரத்திலிருந்து முன்பின் அறிமுகமில்லாத இளைஞன் ஒருவனோடு தம் பெண் இறங்குவதைக் கண்டு ஒன்றும் விளங்காமல் திகைப்பும் சிறிது சினமும் அடைந்தார் கீழே நின்று கொண்டிருந்த மதிவதனியின் தந்தை.

"அப்பா! இவர் தான் நமது வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கியவர்" என்று அவனை இழுத்துக் கொண்டு போய்த் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சிறு குழந்தை வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் கண்டெடுத்த விளையாட்டுப் பொம்மையை அடக்க முடியாத ஆசைத் துடிப்போடு பெரியவர்களிடம் கொண்டு போய்க் காட்டுவது போன்ற மகிழ்ச்சித் துள்ளல் மதிவதனியிடம் இருந்தது. முதலைக்கு வலை விரித்துக் கொண்டு மரத்தின் மேல் காத்திருந்தது, அப்போது அவன் எவராலோ துரத்தப்பட்டு வலையின் குறுக்கே ஓடி வந்தது, அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் வலையைத் தூக்கியது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரே மூச்சில் தன் தந்தையிடம் சொல்லிவிட்டாள் அவள்.

விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் அந்த மனிதருடைய முகத்தில் மலர்ச்சியைக் காண முடிந்தது.

"விலைமதிப்பற்ற இந்தச் சங்கை வாங்குவதற்கு யார் வரப் போகிறார்கள் என்று நெடுநாட்கள் காத்திருந்தோம். இத்தனை நாட்களுக்குப் பிறகு நீங்கள் அந்தப் பாக்கியத்தை அடைந்திருக்கிறீர்கள்" என்று சொல்லிக் கொண்டே குமாரபாண்டியனின் கையிலிருந்த சங்கை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தார். பின்பு அந்தச் சங்கை வைத்திருப்பவருக்கு அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விவரித்துவிட்டு அதை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

கணக்குப் பாராமல் பொற்கழஞ்சுகளை அள்ளிக் கொடுத்து வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிய அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன், எந்த நகரத்தில் வசிப்பவன், என்ன பெயரினன் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார் மதிவதனியின் அருமைத் தந்தை.

'காவிரிப்பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு பெரிய பொன் வணிகரின் புதல்வன்' என்று அவர் நம்பும் விதத்தில் பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டான் குமாரபாண்டியன். மேலும் தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு பொய்யாக மனத்துக்குள் உருவாக்கித் தடுமாற்றமின்றி வெளியிட்டுக் கொண்டிருந்தான் அவன். பழகிவிட்டால் பொய்யைக் கூட அழகாகச் சொல்ல முடிகிறது. மாபெரும் கற்பனைக் காவியங்களைப் படைத்த மகா கவிகளே அந்த வேலையைத் திறம்படச் செய்திருக்கும் போது தென்பாண்டித் தமிழ் இளவரசனால் மட்டும் முடியாமல் போய்விடுமா?

"திருட்டுப் பயமே இல்லாத இந்தத் தீவில் உங்களை யார், எதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள்? அவர்களால் உங்களுக்கு எத்தகைய துன்பம் நேர இருந்தது?" என்று மதிவதனியின் தந்தை அவனைக் கேட்ட போது, "தீவின் கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். என் கையிலிருந்த இந்தச் சங்கைப் பறிப்பதற்காகவோ என்னவோ, யாரோ சிலர் என்னைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். உங்கள் பெண் மட்டும் என்னைக் காப்பாற்றியிரா விட்டால் நான் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும். உங்கள் பெண் மதிவதனிக்கும் நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவரிடம் கூறினான் அவன். அப்போது அவன் கண்களின் கடையோரத்தில் மிதந்த கள்ளக் குறும்புப் பார்வை அவள் மேல் சென்றது. அந்தப் பார்வையின் விளைவாக அவள் பூத்த புன்னகை படர்ந்து இதழ்க் கோடியில் சுழித்து மறைந்தது.

"ஐயா! பெரியவரே! உங்கள் பெண் துணிவு மிகுந்தவள்" என்று அவளையும் அருகில் வைத்துக் கொண்டே அவரிடம் பிரமாதமாகப் புகழத் தொடங்கினான் குமாரபாண்டியன்.

"சிறு வயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்தவள். இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை. துடுக்குத்தனம் அதிகமாக இருக்கிறது. நினைவு தெரிந்து பொறுப்பு வர வேண்டுமே என்று தான் எனக்கு இடைவிடாத கவலை."

பெரியவர் அவனிடம் குறைபட்டுக் கொண்டார். பேசிக் கொண்டே மூவரும் அங்கிருந்து நடந்தார்கள்.

தன் தந்தைக்குப் பக்கத்தில் துள்ளிக் குதித்து நடந்து வந்த அவள், தாய் மானுக்குப் பக்கத்தில் வரும் குட்டி மான் போல் தோன்றினாள்.

"அப்பா, முதலைக்காக வலை விரித்துக் காத்திருந்தது தான் மீதம். ஒரு முதலை கூட வரவில்லை. இந்த மனிதர் வலையில் விழுந்து நேரத்தை வீணாக்கியிராவிட்டால் ஒரு முதலையாவது தப்பித் தவறி வந்திருக்கும்." பேசாமல் நடந்து கொண்டிருந்த அவனைப் பேச வைக்க நினைத்த மதிவதனி தன் சொற்களால் வம்புக்கு இழுத்தாள்.

"தான் செய்த குற்றத்துக்கு பிறர் மேல் பழி சுமத்துவது தான் செம்பவழத் தீவின் நடைமுறை வழக்கமோ? தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தவனை வலைக்குள் இழுத்துச் சுருக்கி மேலே தூக்கியது அல்லாமல் என் மேல் பழி கூறவும் செய்கிறாயே?"

"அடே அப்பா! ஒரு வார்த்தை சொல்வதற்குள் இவருக்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள் அப்பா!"

"போதும்! விளையாட்டுத்தனமாக எதையாவது பேசிக் குறும்பு செய்வதே உனக்கு வழக்கமாகப் போயிற்று."

தந்தையின் வார்த்தைகளிலிருந்த கண்டிப்பின் கடுமை அவள் பேச்சுக்கு அணையிட்டது. மூவரும் பேசாமல் கரையோரமாகவே நடந்தார்கள்.

"நீங்கள் எந்த இடத்துக்குப் போக வேண்டும்? உங்களுக்கு வழி தெரியாவிட்டால் நாங்கள் உடன் வந்து காண்பித்துவிட்டுப் பின்பு வீடு செல்வோம்" என்றார் பெரியவர்.

"வேண்டாம் நானே போய்க் கொள்வேன். அதோ கடலோரத்தில் நிற்கிறதே ஒரு கப்பல், அதற்கு அருகில் கரையில் எங்கள் கூடாரம்" என்று கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானான் குமாரபாண்டியன். கடைசியாக அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை காணும் அவாவோடு அவன் கண்கள் திரும்பிய போது அவள் கண்கள் அதற்காகவே காத்திருப்பது போல் அவனைப் பருகிக் கொண்டிருந்தன. "இங்கிருந்து என்றைக்கு உங்கள் கப்பல் புறப்படுகிறது?" என்று பெரியவர் கேட்டார்.

"நாளை வைகறையில் நாங்கள் புறப்படுகிறோம்."

"மறந்து விடாதீர்கள். எத்தனையோ எண்ணங்களுக்கு நடுவே எங்களையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். திரும்பும் போது உங்கள் கப்பல் இந்தப் பாதையாக வந்தால் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை எங்களுக்கு அளியுங்கள்" - பெரியவர் தழுதழுக்கும் குரலில் வேண்டிக் கொண்டார்.

"உங்களை நினைப்பதற்காக நான் அதிகம் துன்பப்பட வேண்டியதேயில்லை, பெரியவரே! இந்தச் சங்கு என் கையில் இருக்கிற வரையில் உங்களையும் உங்கள் பெண்ணையும் நான் நினைக்காமல் இருக்க முடியாது. இதைக் காணும் போது, தீண்டும் போது, ஒலிக்கும் போது உங்களை நினைத்து மகிழ்வேன்."

"அதுதான் எங்களுக்குப் பெருமை! போய் வாருங்கள். வணக்கம்." பெரியவரும், மதிவதனியும் கைகூப்பி வணங்கி விடை கொடுத்தனர். நீண்ட செம்மையான தாமரைப் பூக்கள் இரண்டு அளவாக, அழகாக ஒன்றுபட்டுக் குவிந்தது போல் குவிந்த மதிவதனியின் கூப்பிய கரங்களை, அவற்றின் காட்சியை அப்படியே தன் நினைவில் பதித்துக் கொண்டு திரும்பி நடந்தான் குமாரபாண்டியன். போகும் போது கையிலிருந்த சங்கை மார்போடு அணைத்துக் கொண்டான். அவன் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு அதைச் செய்தானோ? இரண்டு வழிகளிலும் சென்ற நான்கு கண்கள் சிறிது தொலைவு செல்வதற்குள் எத்தனை முறைகள் திரும்பிப் பார்த்துக் கொண்டன என்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது.

குமாரபாண்டியனுக்கும், மதிவதனிக்கும் தரையில் நடப்பதாகவே நினைவில்லை. வானில் நிலவில் மிதப்பது போல் ஒரு பூரிப்பு. அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்ட அந்தச் சில விநாடிகள் என்றுமே நிலைக்கும் விநாடிகள்; மகாகவிகளைப் பாடவைக்கும் விநாடிகள் அவை.

எதிரே சக்கசேனாபதி தேடிக் கொண்டு வந்திருக்கா விட்டால் குமாரபாண்டியனுக்குச் சுய நினைவு வர இன்னும் எவ்வளவு நேரமாகியிருக்குமென்று சொல்ல முடியாது.

"இளவரசே! நீங்கள் நாளைக் காலையில் பயணம் செய்ய வேண்டியதை மறந்து இப்படிச் சுற்றிக் கொண்டிருந்தால் உடல் என்ன ஆகும்? போகும் போது சொல்லிக் கொள்ளாமல் வேறு போய் விட்டீர்கள். இரவில் நேரங்கெட்ட நேரத்தில் நான் எங்கே வந்து உங்களைத் தேடுவேன்?"

"கடல் ஓரமாகச் சிறிது தொலைவு உலாவி விட்டு வந்தேன். பகலில் உறங்கி விட்டதால் எனக்கு உறக்கம் வரவில்லை."

போன இடத்தில் நடந்த நிகழ்ச்சியை அவன் சக்கசேனாபதியிடம் கூறவில்லை. இருவரும் கூடாரத்தில் போய்ப் படுத்துக் கொண்டார்கள்.

இரவு நேரங்கழித்துப் படுத்துக் கொண்டதனால் காலையில் விடிந்த போது பொழுது வழக்கத்தை விட விரைவாகவே புலர்ந்து விட்டது போலிருந்தது. சக்கசேனாபதி விரைவாகவே பயண ஏற்பாடுகளையெல்லாம் முழுமையாகச் செய்து வைத்திருந்தார். பொழுது புலர்ந்தும், புலராமலும் மங்கலமாக இருந்த நேரத்தில் அவர்களுடைய கப்பல் புறப்பட்டது. காலை நேரத்தின் மணத்தோடு கூடிய ஒரு வகைக் குளிர்க்காற்று செம்பவழத் தீவின் உயிர்க் குலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் கப்பலின் மேல் தளத்துத் திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். மேலே வைகறையின் வானவெளி வெண்ணீலப்பட்டு விரிப்பைப் போல் படர்ந்து கிடந்தது. அந்த வெண்ணீலத் துணியின் கீழே அடியோரத்து நெருப்பு நிறத்தில் சிவப்புச் சரிகை மினுமினுப்பது போல் சூரியன் உதயமாகியது.

இளவரசன் இராசசிம்மனின் கையிலிருந்த பொன்னிற வலம்புரிச் சங்கு அடிவானத்து ஒளியை வாங்கி உமிழ்ந்து வண்ணம் காட்டியது. ஆட்டமின்றி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் கப்பலின் தளத்தில் நின்று கொண்டு அந்த அழகைச் சுவைப்பதற்கு ஆசையாக இருந்தது அவனுக்கு.

அந்தச் சங்குதான் அவன் மனதுக்கு எவ்வளவு நினைவுகளைக் கொடுத்து உதவுகிறது? அதன் நிறத்தை மட்டும் பிரித்து நினைத்தால் அவனுக்கு மதிவதனியின் நிறம் நினைவுக்கு வருகிறது. அதில் பதிந்துள்ள முத்துகள் அவள் சிரிப்பு. பவழங்கள் அவள் இதழ்கள். சங்கு வளைந்து திருகும் இடத்திலுள்ள சுழிப்பு அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் சுழிப்பு. அதன் கூம்பிய தோற்றம் அவள் கைகள் செலுத்திய வணக்கம். அந்தச் சங்கை ஏந்தி நிற்கும் அவன் உள்ளங்கைகளுக்கு அவளையே ஏந்திக் கொண்டிருப்பதாக ஓர் இனிய பிரமை.

கரையிலிருந்து யாரோ கைதட்டிக் கூப்பிடும் ஒலி மங்கலாகக் கேட்டது. சங்கை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராசசிம்மன் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். தீவின் கரையிலிருந்து மணல் திட்டு ஒன்றில் மதிவதனி இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு நின்றாள். அவள் தெரிந்தாள். அவளுடைய சொற்கள் அவனுக்குக் கேட்கவில்லை. அவள் தனக்கு விடை கொடுக்க வந்ததைத் தான் கண்டு கொண்டதை எந்தக் குரலால், எந்த அடையாளத்தால் அவளுக்குத் தெரிவிப்பதென்று தெரியாமல் தயங்கினான் இராசசிம்மன். கப்பல் நகர நகர அவள் உருவம் சிறிது சிறிதாக மங்கியது.

அதே போல் அவன் உருவமும் அவள் கண்களுக்கு மங்கியிருக்கும். அவன் உயிரைக் காப்பாற்றி உதவிய அந்தப் பேதைப் பெண் தன் நெஞ்சின் அன்பையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து அவனுக்கு விடை கொடுக்கிறாள். அதை ஏற்றுக் கொண்ட நன்றியை அவன் எப்படித் தெரிவிப்பது? வார்த்தைகளில் கூறினால் அந்த ஒலி அவள் செவிகளில் அடைவதற்கு முன் கடல் காற்று வாரிக்கொண்டு போய் விடும். அவளைப் போல் கைகளை ஆட்டித் தெரிவிக்கலாமென்றால் அதைப் பார்த்து, "திரும்பிப் போ!" என்று அவளைத் துரத்துவதாக அவள் தப்பர்த்தம் செய்து கொள்வாளோ என்ற பயம் உண்டாயிற்று அவனுக்கு.

குமாரபாண்டியன் இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கு அவனுக்குச் சமய சஞ்சீவியாகப் பயன்பட்டது. அதன் ஊதுவாயில் தன் இதழ்களைப் பொருத்தி, மூச்சை அடக்கிப் பலங்கொண்ட மட்டும் ஊதினான். அந்தச் சங்கொலி கரையை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவனை நினைத்து நெஞ்சில் ஆழம் வரை வற்றிக் கொண்டிருக்கும் ஒரு பேதை பெண்ணின் உள்ளக் கடலை அந்தச் சங்கொலி பரிபூர்ணமாக நிறைத்துப் பொங்கச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கப்பல் வெகு தூரம் வந்து செம்பவழத் தீவின் தோற்றம் மங்கி மறைந்த பின்னும், 'நான் இன்னும் பலமுறை இந்தத் தீவுக்கு வர வேண்டும். எந்த வகையிலோ நான் தள்ள முடியாத, தவிர்க்க முடியாத ஒரு கவர்ச்சி என்னை இந்தத் தீவுக்கு மறுபடியும் வரவேண்டுமென்று நினைக்கச் செய்கிறது' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான் குமாரபாண்டியன். "இளவரசே! வெய்யில் அதிகமாகுமுன் கீழ்த் தளத்துக்குப் போய் விடலாம், வாருங்கள்" என்றார் சக்கசேனாபதி.

1. பொருநைப் புனலாட்டு விழா

அன்றைக்குக் காலையில் பொதிய மலைக்குக் கிழக்கே கரவந்தபுரக் கோட்டத்தில் பொழுது புலரும் போது கதிரவனுக்கு அடக்க முடியாத ஆவல் உண்டாகியிருக்க வேண்டும். வைகறையில் வழக்கத்தை விடச் சற்று முன்பாகவே உதயம் ஆகிவிட்டது போலிருந்தது.

சில நாட்களாக இடைவிடாத மழை. பொதிய மலையின் எழிலார்ந்த நீலக் கொடுமுடிகளைக் காண முடியாதபடி எப்போதும் கருமேகங்கள் திரையிட்டுக் கவிந்திருந்தன. ஆவேசம் பிடித்து ஓடும் பேய் கொண்ட பெண்களைப் போல் ஆறுகளெல்லாம் கரைமீறிப் பொங்கி ஓடிக் கொண்டிருந்தன. சந்தனமும், செந்தமிழும், மந்தமாருதமும் எந்தப் பொதிய மலையில் பிறந்தனவோ அதே பொதிய மலையில் தான் பொருநையும் பிறந்தாள். அருவிகளாக இறங்கும் வரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் கன்னிப் பெண் போலிருந்தாள் அவள். தரையில் இறங்கிய பின்போ, புக்ககம் செல்லும் மணப்பெண்ணின் அடக்கமும், ஒரே நெறியை நோக்கி நடக்கும் பண்பும் அவளுக்கு வந்து விட்டன. கணவன் வீடாகிய கடலை அடைவதற்கு முன் அவள் தான் இரு கரையிலும் எத்தனை காட்சிகளைக் காணப் போகிறாள்? விண் முகட்டை நெருடும் கோபுரங்கள், மண்ணில் புதையும் குடிசைகள், பெரிய மரங்கள், சிறிய நாணற் புதர்கள், அழுக்கு நிறைந்த மனிதர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ? போகிற வழியில், குற்றாலத்து மலை முகட்டிலிருந்து குதித்துக் குறும் பலாவை நனைத்து வரும் சித்திராநதித் தோழி பொருநையைத் தழுவிக் கொள்கிறாள். பொருநைக்குப் போகும் வழிக்குத் துணை கிடைத்து விடுகிறது.

போகிற வழியெல்லாம் பொருநைக்கு நல்ல வரவேற்புதான். மலரும் மாலையும் தூவுவோர், மங்கல வாழ்த்தெடுப்போர், வாசனைத் தூள்களை வாரியிறைப்போர், எல்லோரும் அவளைப் போற்றினார்கள். அது புனலாட்டு விழாக் காலம். பருவத்தில் பெய்த அந்த மழையால் தான் எவ்வளவு நன்மைகள். அந்த மேல் மழை பெய்திராவிட்டால் கொற்கைத் துறையில் முத்துச் சிப்பிகள் விளைவெய்தாமல் போயிருக்கும். சிப்பிகள் விளைவின்றிச் சலாபத்தில் (முத்துக்குளி நடைபெறும் இடம்) முத்துக்குளி நின்று போனால் தென்பாண்டிப் பேரரசுக்கு வருவாய் குறையும். கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுநிலவேள் தென்பாண்டிப் பேரரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக் கொண்ட நாளிலிருந்து கொற்கைத் துறையையும், முத்துச் சலாபத்தையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு அவனிடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுதோறும் பொருநையில் புதுப்புனல் பெருகி அது பாயும் பகுதியெல்லாம் பசுமையும், வளமும் பரவி நிற்கும் நல்ல பருவத்தில் கொற்கை முத்துக்குளி விழா தொடங்கும். அன்று கரவந்தபுரத்துச் சிற்றரசன் தன் பரிவாரங்களோடு கொற்கைக்கு வருவான். சுற்றுப்புறங்களிலிருந்து திரள்திரளாக மக்கள் கூடுவார்கள். உள்நாட்டிலிருந்தும் கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்தும் பெரிய பெரிய வாணிகர்கள் முத்துக்களை விலை பேசி வாங்கிச் செல்ல வருவார்கள். கொற்கையில் திருவிழாக் கூட்டம் பெரிதாகக் கூடி விடும்.

'கடலாடி மலையேறுதல்' என்று ஒரு பழைய மரபு. கொற்கையின் முத்துக்குளி முடிந்ததும், கரவந்தபுரத்தார் பொதியமலைச் சாரல்வரை சென்று பொருநையில் நீராடி மீள்வது வழக்கம். பொருநை கடலோடு கலக்கும் இடத்துக்குச் சற்று வடக்கே கொற்கை முத்துச் சலாபம் அமைந்திருந்தது.

கொற்கைத் துறையில் கரையின் மணற்பரப்பே தெரியாமல் கூடாரங்களும் மக்கள் கூட்டமும் நிறைந்திருந்தன. இன்னிசைக் கருவிகள் முழங்கின. வாழ்த்தொலி அதிர்ந்தது. முத்துக் குளிப்புக்கெனக் குறித்த மங்கல வேளையும் வந்தது. துறையின் முன்புறத்தில் சலாபத்துக்கு அருகே கரவந்தபுரத்துச் சிற்றரசன் பெரும்பெயர்ச்சாத்தன் நின்றான். அவன் பக்கத்தில் அவனுடைய பட்டத்தரசி அடக்க ஒடுக்கமாக நின்றாள். அரச பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சூழ நின்றார்கள். விலை பேச வந்திருக்கும் பெருஞ்செல்வர்களான வணிகர்கள் இன்னும் சிறிது தள்ளி நின்றார்கள். பல விதமான தோற்றத்தோடு கூடிய, பலமொழிகள் பேசும், பல தேசத்து வணிகர்கள் அங்கே நிறைந்திருந்தனர். கடல் ஓசையும், வாத்தியங்களின் ஒலியும், பலமொழிக் குரல்களும் கலந்து ஒரே ஒலிக் குழப்பமாக இருந்தன. தண்ணீருக்குள் மூச்சை அடக்கும் ஆற்றல் வாய்ந்த கட்டிளங் காளைகளான இளைஞர்கள் வாட்டசாட்டமான தோற்றத்தோடு வரிசையாக நின்றார்கள். அவர்கள் தாம் முத்துக் குளிக்காகக் கடலில் மூழ்கும் பரதவ வாலிபர்கள். பளிங்கால் இழைத்தெடுத்துப் பொருந்தினது போல் உடற்கட்டுள்ள அவர்கள் தோற்றம் மனத்தைக் கவர்ந்தது.

சலாபத்துக்குப் பக்கத்தில் இருந்த சிறிய கோவிலில் முத்துக் குளிப்பதற்கு முன் அவர்கள் வழக்கமாக வழிபடும் கடல் தெய்வத்தின் சிலை இருந்தது. முறைப்படி அதை வழிபட்ட பின் பரதவ இளைஞர்கள் அரசனை வணங்கிவிட்டு ஒவ்வொருவராகக் கடலில் குதித்தனர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பெயர்ச்சாத்தனின் பட்டத்தரசி, "எவ்வளவு துணிவு இந்த வாலிபர்களுக்கு?" என்று வியப்புடன் கணவனை நோக்கிக் கூறினாள். பெரும்பெயர்ச்சாத்தன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான்.

"இப்படிச் சில ஆண்பிள்ளைகள் துணிந்தால் தான் உங்களைப் போன்ற பெண்களின் கழுத்தில் முத்து மாலை இருக்க முடியும்." அவன் அவள் கழுத்தை வளைத்துக் கிடந்த முத்து மாலையைச் சுட்டிக் காட்டிச் சொன்னான்.

"ஓகோ! பெண்களை மட்டம் தட்டியா பேசுகிறீர்கள்?"

"அப்படி ஒன்றுமில்லை! உலகத்தில் ஆண் பிள்ளைகள் அதிகத் துன்பத்தின் பேரில் அடைய வேண்டிய பொருள்களெல்லாம் பெண்களின் தேவைகளாயிருக்கின்றன என்று தான் சொல்ல வந்தேன்."

"அழகுள்ளவர்களுக்குத்தானே அழகான பொருள்கள் தேவை?" என்று தன் கணவனைப் பேச்சில் வென்றாள் அந்தப் பட்டத்தரசி. சுற்றிலும் இருந்த உயர்தர அரசாங்க அதிகாரிகள் அரசனுக்கும் அரசிக்கும் இடையே நிகழ்ந்த இந்த நகைச்சுவைப் பேச்சைத் சிரித்து வரவேற்றனர்.

கடலில் மூழ்கிய இளைஞர்கள் கிடைத்தமட்டில் முத்துச் சிப்பிகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மறுபடியும் மறுபடியும் உடல் அலுப்பு அடைகின்ற வரையில் மூழ்கிக் கொண்டே இருந்தார்கள். முத்து வணிகத்துக்காக வரும் அயல்நாட்டு வணிகர்களின் கப்பல்கள் மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தன. துறையில் கப்பல்கள் நிறுத்தப் போதுமான இடமின்றி ஒரே நெருக்கமாக இருந்தது. எனவே கடலில் கண்ணுக்குத் தென்பட்ட தொலைவு வரை கப்பல்களின் பாய்மரக் கூம்புகள் தெரிந்தன. பல நாட்டுக் கொடிகள், பலவிதச் சின்னங்களோடு, பல நிறத்தில் அவற்றின் உச்சியில் பறந்தன. வானில் வட்டமிடும் பறவைக் கூட்டங்களுக்கும் அந்தக் கொடிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் பார்க்கிறவர்கள் மயக்கமுறும் வண்ணம் அவை அதிகமாயிருந்தன.

ஐந்தாறு நாழிகைகளுக்குப் பின் முத்துக்குளி நின்றது. அது வரையில் எடுத்த சிப்பிகள் அரசனுக்கு முன்னால் வரிசையாக குவிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து உயர்ந்த முத்துக்களை எடுத்து அரசனிடம் கொண்டு வந்து கொடுத்து வணங்கினான் ஒரு வயது முதிர்ந்த பரதவன். அது ஒரு வழக்கமான மரியாதை. அந்த முத்துக்களைப் பெற்றுக் கொண்டு அரசன் ஏதோ ஒரு குறிப்பை நினைப்பூட்டும் புன்னகையோடு தன்னுடைய பட்டத்தரசியின் கையில் அவைகளைக் கொடுத்தான்.

"ஆண் பிள்ளைகள் அதிகத் துன்பப்பட்டு அடையும் பொருள்களெல்லாம் பெண்களுக்கே வந்து சேர்கின்றன!" - அவற்றை வாங்கிக் கொண்டு அவள் குறும்பாகப் பேசினாள்.

"என்ன செய்யலாம்? உலகம் பரம்பரையாக அப்படிக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது!" - அவன் வருத்தப்பட்டுச் சொல்வது போல் இந்த வார்த்தைகளைச் சொல்லி நடித்தான்.

சுற்றி நின்றவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் இரைந்தே சிரித்து விட்டார்கள். பட்டத்தரசி சிறிது நாணத்தோடு தலையைக் குனிந்து கொண்டாள்.

சிப்பிகளை விலை பேசும் நேரம் வந்தது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வாணிகர்கள் நூற்றுக் கணக்கில் கூடினார்கள். பெரும்பெயர்ச்சாத்தனும் அவன் மனைவியும் கரவந்தபுரத்து அரண்மனையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் சிப்பிகளுக்கு அருகே இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

மன்னர்களுக்கு ஈடான செல்வச் செருக்குள்ள சில பெரிய வாணிகர்கள் மட்டும் முன்வந்து தைரியமாக விலை கேட்க ஆரம்பித்தனர். அப்படி முன் வந்த பெரிய வாணிகர்களின் தொகை பத்துப் பன்னிரண்டு பேருக்கு மேல் இருக்காது. அவர்களில் இருவர் விலை கேட்கத் தொடங்கிய விதம், கேட்கும் போது வார்த்தைகளை வெளியிட்ட முறை - எதுவும் மரியாதையாகத் தெரியவில்லை. எடுத்தெறிந்த பேச்சும், குதர்க்கமும் அவ்விருவரும் வியாபாரத்துக்குப் புதியவர்களோ என்று நினைக்கச் செய்தன. எல்லோருடைய கவனமும் அந்த இருவர் மேல் நிலைத்தன. அப்படி நடந்து கொண்டார்கள் அவர்கள். இதையெல்லாம் பார்த்த பெரும்பெயர்ச்சாத்தன் பொறுமையாக இருந்தான்.

"எங்கள் நாட்டிலும் முத்துக்குளிக்கிறோம்! ஆனால் இவ்வளவு அநியாய விலைக்கு விற்றுக் கொள்ளையடிப்பதில்லை."

"நீங்கள் எந்த நாடு?"

"ஏன் அதைச் சொன்னால் தான் எங்களுக்கு முத்து விற்பீர்களோ?"

"அப்படி இல்லை. முத்துக்களைப் புளியங்கொட்டை போல் மலிவாக விற்கும் நாடு எது என்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது எனக்கு."

"நாங்கள் இருவரும் சோழநாட்டினர். எங்கள் நாட்டிலும் புகார்த் துறைக்கு அருகில் சில இடங்களில் முத்துக் குளிக்கிறர்கள், தெரியுமா?"

"தெரியும்! சோழநாட்டு முத்துக்களை என்றுமே உலகம் முத்துக்களாக ஒப்புக் கொண்டதில்லை. எங்கள் கொற்கைதான் உலகம் போற்றும் முத்துச் சலாபம். இதை நீங்கள் மறுக்க முடியாது." சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்துக் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்து விட்டான் கரவந்தபுரத்துச் சிற்றரசன். அது அந்த இருவருக்கும் பொறுக்கவில்லை.

"இதே கொற்கைப் பகுதி இதற்கு முன்பும் பலமுறைகள் சோழநாட்டு ஆட்சிக்கு உட்பட்டதுண்டு. இனிமேலும் அப்படி ஆகாதென்று யார் சொல்ல முடியும்? அதை நீங்கள் மறந்து பேசுகிறீர்களே."

பெரும்பெயர்ச்சாத்தனுக்குச் சினம் மூண்டது. "நீங்கள் முத்து வாணிகத்துக்கு வந்திருக்கிறீர்களா? அல்லது அரசியல் பேசி வம்பு செய்ய வந்திருக்கிறீர்களா?" என்று ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் அவன்.

பெரும்பெயர்ச்சாத்தனது சுடுசொற்களைக் கேட்டதும், இருவரும் கதிகலங்கி விட்டனர். தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற கவலை அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாக அங்கிருந்து நழுவி விடுவது என்று சமிக்ஞை மூலம் திட்டமிட்டுக் கொண்டனர். அது இன்னும் சந்தேகத்தை விளைவித்து விடுமே என்று அப்பொழுது அவர்களுக்குத் தோன்றவில்லை. எனவே, அந்த இருவரும் வாணிகர் கூட்டத்திலிருந்து வெளியேறி மெல்ல நழுவி விட்டனர். அவர்கள் நடந்து கொண்ட முறையையும், சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிட்டதையும் காணப் பெரும்பெயர்ச்சாத்தனின் சந்தேகம் வலுத்தது. தன் அருகில் நின்ற 'மானகவசன்' என்னும் மெய்க்காவலனை அழைத்து, இருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் பின்பற்றிச் சென்று கண்காணிக்குமாறு இரகசியமாகச் சொல்லி அனுப்பினான். அவனுடைய மனத்தில் பலத்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். ஏற்கனவே வடபுறம் எல்லைக் காவல் வீரர்களிடமிருந்து அவனுக்குச் சில செய்திகள் வந்திருந்தன. கடந்த இரு வாரங்களுக்குள் சோழநாட்டு ஒற்றர்களாகச் சந்தேகிக்கப்பட்டவர்கள் இருபது முப்பது பேருக்கு மேல் உக்கிரன் கோட்டைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டி நாட்டு எல்லைக்குள் அந்நியர்களை எச்சரிக்கையாகக் கவனித்து அனுமதிக்குமாறு அங்கங்கே எல்லைப்புறக் காவல் வீரர்கள் ஆணையிடப்பட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாணிகர்களைப் போல், துறவிகளைப் போல், யாராவது வந்து கொண்டு தான் இருந்தார்கள்.

முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் பொதியமலைச் சாரலில் பொருநை நதியில் புனலாட்டு விழாவிற்குச் சென்ற போது அங்கும் அந்த முத்து வாணிகர் இருவரைச் சந்தித்தான் பெரும்பெயர்ச்சாத்தன். மூன்றாம் நாள் கரவந்தபுரம் திரும்பியபின் ஒரு மாலைப் போதில் மேல் மாடத்திலிருந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பெயர்ச்சாத்தனின் பட்டத்தரசி அதே ஆட்கள் தெருவில் நடந்து சென்றதைக் கண்டதாகக் கூறினாள். பொறுமை இழந்து பெரும்பெயர்ச்சாத்தன் மானகவசனைக் கூப்பிட்டு, "இனியும் அவர்களைப் பின்பற்ற வேண்டாம். பிடித்துச் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்" என்று கடுமையாக உத்தரவிட்டான். ஆனால் அந்த இருவரும் அகப்படவே இல்லை!

கரவந்தபுரத்து எல்லையிலேயே தென்படாமல் மறைந்து விட்டார்கள். பாண்டிய நாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் சிறு களவுகள், கலவரங்கள், அடிபிடிகள் நடக்கும் செய்திகள் வளர்ந்தன. இந்த அடையாளங்களெல்லாம் எதற்கு முன் அறிவிப்பு என்பது பெரிம்பெயர்ச்சாத்தனுக்குப் புரிந்து விட்டது.

'இனியும் மூடி மறைப்பதில் பயனில்லை. செய்தியை மகாமண்டலேசுவரருக்கும், மகாராணியாருக்கும் எட்டவிட வேண்டியதுதான்' என்று தீர்மானத்துக்கு வந்தான். அந்தத் தீர்மானத்தை உடனே செயலாற்றியும் முடித்து விட்டான்.

2. கொற்கையில் குழப்பம்

சிவந்த வாயும், வெள்ளிய நகையும், பிறழும் கண்களும், சுருண்ட கூந்தலும், துவண்ட நடையுமாக முத்துச் சலாபத்து அருகிலிருந்த கடல் துறையில் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வேறு சில சிறுமிகள் கடற்கரை ஈரமணலில் வீடுகட்டி விளையாடினர். அவர்களுடைய மணல் வீட்டைக் கடல் அலை அழித்தது. அதைக் கண்ட நினைவு மலராப் பருவத்தையுடைய அந்தச் சிறுமிகளுக்குக் கடலின் மேல் சினம் மூண்டது. "ஏ, கடலே! இரு, இரு! என் அம்மாவிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்கிறேன்" என்று கடலைப் பயமுறுத்தி விட்டு ஆத்திரமும் அழுகையுமாக வெறுப்போடு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அறுத்துச் சிதறி அடம் பிடித்தாள் ஒரு சிறுமி. கடற்கரையோரத்துப் புன்னை மரத்திலிருந்து உதிர்ந்த அரும்புகளுக்கும் இப்படிச் சிதறப்பட்ட முத்துக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அந்தப் பக்கம் நடந்து வருவோர் திகைத்தனர்.

கொற்கைக் கடலில் இளம் பெண்கள் நீராடி மகிழ்வதே ஒரு தனி அழகு. இளம்பெண் ஒருத்தி தன் தோழியின் தோள் மேல் வாரி இறைப்பதற்காக இரண்டு உள்ளங் கைகளிலும் நீரை அள்ளினாள். அதில் அவள் கண்கள் தெரிந்தன. 'ஐயோ மீன்!' என்று தண்ணீரை விட்டுக் கரையேறிப் பயந்து போய் மணலில் உட்கார்ந்து விட்டாள் அந்தப் பெண்.

"தொக்குத் துறைபடியும் தொண்டை அம்
செவ்வாய் மகளிர் தோள்மேற் பெய்வான்
கைக்கொண்ட நீருள் கருங்கண்
பிறழ்வ கயலென் றெண்ணி
மெய்க் கென்றும் பெய்கல்லார் மீண்டு
கரைக்கே சொரிந்து மீள்வார் காணார்
எக்கர் மணங்கிளைக்கும் ஏழை
மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை."

என்று இப்படியெல்லாம் முத்து விளையும் கொற்கைத் துறையைப் பற்றி முத்து முத்தான தமிழ்ப் பாடல்களைப் பழம் புலவர்கள் பாடியிருந்தார்கள். பல்லாயிரங் காலத்துப் பயிர் அந்தப் பெருமை. மானமும், வீரமும், புகழும், மாண்பும், பாண்டிய மரபுக்குக் கொடுத்த பெருமை அது! பாண்டிய நாட்டு மண்ணைத்தான் தங்கள் மறத்தினாற் காத்தனர் பாண்டியர். ஆனால் முத்து விளையும் கொற்கைக் கடலை அறத்தினாற் காத்தார்கள்.

"மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறைமுத்து."

என்று எவ்வளவு நன்றாகச் சங்கநூற் கவிஞர் அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டியிருக்கிறார்!

இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தப் பாராட்டெல்லாம் வெறும் பழம் பெருமையாகி விட்டனவே. அறத்தினால் காத்த கொற்கையை மறத்தினாற் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பகைமையும் பூசலும் வளரும் போது உலகத்தில் எந்தப் பொருளையுமே அறத்தினால் காக்க முடிவதில்லை. தங்க நகையை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது போல் மெய்யைக் கூட பொய்யால் தான் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. வலிமையுள்ளவனுக்கு ஆசைகள் வளரும் போது வலிமை அற்றவன் தன் பொருள்களை அறத்தினால் எப்படிக் காக்க முடியும்?

முடியாதுதான்! முடியவும் இல்லை. முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் கொற்கையில் நடந்த குழப்பங்கள் இந்த உண்மையை விளக்கிவிட்டன. கரவந்தபுரத்து அரசனும், அரசியும், பரிவாரங்களும் விழாவன்றைக்கு மாலையிலேயே பொருநைப் புனலாட்டு விழாவுக்காகத் திரும்பிச் சென்று விட்டனர். முத்துச் சலாபத்தில் நடைபெற வேண்டிய வாணிபத்தை மேற்பார்வை செய்வதற்குக் கரவந்தபுரத்து அரசாங்கப் பிரதிநிதிகளாகக் 'காவிதி'ப் பட்டம் பெற்ற அதிகாரி ஒருவரும், 'ஏனாதி'ப் பட்டம் பெற்ற கருமத்தலைவர் ஒருவரும், 'எட்டி'ப் பட்டம் பெற்ற வணிகர் ஒருவரும் கொற்கையில் தங்கியிருந்தார்கள். பாண்டிய மன்னர்கள் இளவரசர்களாக இருக்கும் காலத்தில் வந்து தங்கியிருப்பதற்காகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரசு மாளிகை ஒன்று கொற்கையில் உண்டு. அது கடல் துறையிலிருந்து சிறிது தொலைவு தள்ளி இருந்தது.

முத்துச் சலாபத்தை மேற்பார்வையிடக் கொற்கையில் இருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் அந்த அரச மாளிகையில் தான் தங்கியிருந்தனர்.

காலையில் விழாவுக்காக வந்து கூடியிருந்த கூட்டம் இப்போது இல்லை. அரசன் புனலாட்டு விழாவுக்காகப் பொதிய மலைச் சாரலுக்குத் திரும்பியதும் கூட்டமும் கலைந்திருந்தது. ஆனாலும் அதனாற் கொற்கைத் துறையின் கலகலப்புக் குறைந்து விடவில்லை. ஈழம், கடாரம், புட்பகம், சாவகம், சீனம், யவனம் முதலிய பலநாட்டு வாணிகர்களும், கப்பல்களும் நிறைந்திருக்கும் போது கொற்கைத் துறையின் ஆரவாரத்துக்கு எப்படிக் குறைவு வரும்?

பேரரசன் மறைந்த பின், குறும்பு செய்யத் தலையெடுக்கும் சிறு பகைவர்களைப் போல் கதிரவன் ஒளியிழந்த வானில் விண்மீன்கள் மினுக்கின. சுற்றுப்புறம் இருண்டது. மணற்பரப்பில் தெரிந்த வெண்மையான கூடாரங்களின் தீபங்கள் ஒளிபரப்பத் தொடங்கும் நேரம். கப்பல்களைக் கரையோரமாக இழுத்து நங்கூரம் பாய்ச்சுவோர் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக ஒருவகைப் பாட்டுப் பாடுவார்கள். துறைமுகப் பகுதியில் அந்தப் பாட்டொலி எப்போதும் ஒலித்த வண்ணம் இருக்கும். அது கூட அடங்கிவிட்டது. துறைப் பக்கமாகச் சிறு கோபுரம் போல் உயர்ந்திருந்த கலங்கரை உச்சியில் தீ கொழுந்து விட்டுக் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. வரிசையாக நின்ற பாய்மரக் கப்பல்களில் காற்று உரசும் போது ஒருவகை அழுத்தமான ஓசை உண்டாயிற்று. மற்றபடித் துறையின் ஆரவாரத்தை இரவின் அமைதி குறைத்து விட்டிருந்தது!

ஆனால் வணிகர்களின் கூடாரங்கள் இருந்த பகுதிகளில் இதற்கு நேர்மாறாகப் பாட்டும், கூத்துமாய் ஆரவாரம் அதிகரித்திருந்தது. நீண்ட தொலைவு பயணம் செய்து வியாபாரத்துக்காக வந்து தங்கியுள்ள இடத்திலும் தங்கள் இன்பப் பொழுதுபோக்குகளை, அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. அவர்களுடைய கூடாரங்களிலெல்லாம் விளக்கொளி இரவைப் பகலாக்கியது. பூக்களின் நறுமணமும் அகிற்புகையின் வாசனையும், யாழிசையும், நாட்டியக் கணிகையரின் பாதச் சிலம்பொலியும், மனத்தை முறுக்கேற்றித் துள்ள வைக்கும் பாடல்களும் காற்று வழியாகக் கலந்து வந்து கொண்டிருந்தது. எங்கும் எதற்காகவும் தங்கள் சுகபோகங்களைக் குறைத்துக் கொள்ளாத அளவுக்கு வளமும் வசதியுமுள்ள துறையில் பணிபுரிவோர் வசிக்கும் மற்றோர் பகுதி இருளில் மூழ்கியிருந்தது. இவை தவிர முத்துக்குளி விழாவைக் காணவந்து, மறுநாள் காலை ஊருக்குத் திரும்பிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்ட மக்களும் இருந்தனர். அவர்களும் கூடாரங்கள் அமைத்தே தங்கியிருந்தனர்.

அந்த மாதிரிச் சாதாரண மனிதர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து நமக்கு முன்பே பழக்கமானவர்களின் பேச்சுக் கேட்கிறது. ஒன்று, அடங்கிய ஆண் குரல்; மற்றொன்று துடுக்குத்தனம் நிறைந்த பெண் குரல். 'யார் இவர்கள்?' என்று அருகில் நெருங்கிப் பார்த்ததும் வியப்படைகிறோம்.

அந்த ஆடம்பரமற்ற எளிமையான சிறிய கூடாரத்தின் உட்புறம் அகல் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நமக்கு முன்பே பழக்கமான முன்சிறை அறக்கோட்டத்து மணியக்காரன் அண்டராதித்த வைணவனையும், அவன் மனைவி கோதையையும் காண்கின்றோம். அந்த வேடிக்கைத் தம்பதிகள் வழக்கம் போல் உலகத்தையே மறந்து நகைச்சுவை உரையாடலில் மூழ்கியிருக்கின்றனர்.

"உன்னுடைய ஆவல் நிறைவேறிவிட்டதா? முத்துக்குளி விழாப் பார்க்க வேண்டுமென்று மூன்று ஆண்டுகளாக உயிரை வாங்கிக் கொண்டிருந்தாய். கொண்டு வந்து காண்பித்தாகி விட்டது; இனி நான் நிம்மதியாயிருக்கலாம்."

"அதுதான் இல்லை; நாளைக் காலையில் நாம் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீங்கள் எனக்கு ஒரு முத்து மாலையை வாங்கித் தர வேண்டும். இவ்வளவு பிரமாதமான முத்துக்களெல்லாம் விளைகின்ற கொற்கைக்கு வந்து விட்டு வெறுங் கையோடு போவது நன்றாயிருக்காது!" கோதை இதைக் கூறிவிட்டு மெதுவாக நகைத்தாள்.

"அதெல்லாம் மூச்சு விடக்கூடாது. பொழுது விடிந்ததும் ஊருக்குக் கிளம்பி விட வேண்டும். இரண்டு பேருமே இங்கு வந்துவிட்டோம். அறக்கோட்டத்தில் ஆள் இல்லை. நாட்டு நிலைமையும் பலவிதமாகக் கலவரமுற்றிருக்கிறது."

"முத்து மாலை வாங்கிக் கொள்ளாமல் ஓர் அடி கூட இங்கிருந்து நான் நகர மாட்டேன். முத்து விளையும் கொற்கைக்கு வந்து விட்டு முத்து வாங்காமற் போனால் மிகவும் பாவமாம்?"

"அடடே! அப்படிக்கூட ஒரு சாஸ்திரம் இருக்கிறதா? எனக்கு இதுவரையில் தெரியாதே?"

கோதை அண்டராதித்தனுக்கு முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டிவிட்டுச் சிரித்தாள்.

"பெண்ணே! நீ சிரிக்கிறாய், அழகு காட்டுகிறாய்; முத்து மாலை வாங்கிக் கொடு, வைரமாலை வாங்கிக் கொடு என்று பிடிவாதம் செய்கிறாய்; நான் ஓர் ஏழை மணியக்காரன் என்பதை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறது."

"ஆகா! இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. உங்கள் உடன் பிறந்த தம்பி இந்த நாட்டு மகாமண்டலேசுவரருக்கு வலது கை போன்றவர். அவர் மனம் வைத்தால் எதை எதையோ செய்ய முடிகிறது. உங்களை இந்த அறக்கோட்டத்து மணியக்காரர் பதவியிலிருந்து வேறு பதவிக்கு உயர்த்த மட்டும் அவருக்கு மனம் வரவில்லை."

"அவன் என்ன செய்வான்? அவனுக்கு எத்தனையோ அரசாங்கக் கவலைகள். அவனுக்கு இருக்கிற நேரத்தில் அவன் மகாமண்டலேசுவரருக்கு நல்ல பிள்ளையானால் போதும்."

"விநாடிக்கு ஒரு தரம் தம்பியின் பெயரைச் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்வதில் ஒன்றும் குறைவில்லை."

"இதற்காக அதை நான் விட்டு விட முடியுமோ, கோதை?" அவள் கையைப் பற்றிக் கெஞ்சும் பாவனையில் சமாதானத்துக்குக் கொண்டு வர முயன்றான் அண்டராதித்த வைணவன்.

அதே சமயம் முத்துச் சலாபம் இருந்தப் பகுதியிலிருந்து பெருங் கூப்பாடு எழுந்தது. கோதையும், வைணவனும், பதற்றமடைந்து என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்தார்கள். சலாபத்தைச் சுற்றிலும் இருந்த கூடாரங்கள் தீப்பற்றிப் பெரிதாக எரிந்து கொண்டிருந்தன. மணற்பரப்பில் குதிரைகள் பாய்ந்து வரும் ஓசையும், வாளோடு வாள் மோதும் ஒலிகளும், ஓலங்களும், கடல் அலைகளின் ஓசையும் உடன் சேர்ந்து கொண்டதனால் ஒன்றும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. யார் யாரோ திடுதிடுவென்று இருளில் ஓடினார்கள், போனார்கள், வந்தார்கள்.

"ஏதோ பெரிய கலவரம் நடக்கிறாற் போலிருக்கிறது" என்றான் வைணவன்.

"கூடாரத்துக்குள் வாருங்கள், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளலாம்" என்றாள் கோதை.

அவர்கள் கூடாரத்துக்குள் திரும்ப இருந்த போது அந்தப் பக்கமாக யாரோ ஓர் ஆள் தீப்பந்தத்தோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. பின்னால் கூட்டமாகச் சிலர் அப்படி ஓடி வந்த ஆளைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஓடி வந்தவன் எப்படியாவது தப்பினால் போதுமென்ற எண்ணத்துடன் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கோதையும், வைணவனும் நின்று கொண்டிருந்த பக்கமாக வந்த போது அவ்விருவரும் அவனுடைய முகத்தைத் தீவட்டி வெளிச்சத்தில் ஒரு கணம் நன்றாகப் பார்க்க முடிந்தது.

"ஐயோ! இந்தப் பாதகனா?" என்ற வார்த்தைகள் கோதையின் வாயிலிருந்து மெதுவாக ஒலித்தன. வைணவனுக்கும் அவன் இன்னாரென்று புரிந்து விட்டது. உடல் ஒரு விநாடி மெதுவாக நடுங்கியது. புல்லரித்து ஓய்ந்தது. "கோதை! உள்ளே வந்துவிடு. துரத்திக் கொண்டு வருகிறவர்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு எதையாவது விசாரித்துத் தொந்தரவு செய்யப் போகிறார்கள்" என்று அவள் கையைப் பற்றி பரபரவென்று இழுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டான். உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கையும் அணைத்து விட்டான். ஓடிவந்தவன் வேறு யாரும் இல்லை. முன்பொரு நாள் முன்சிறை அறக்கோட்டத்தில் நடு இரவில் வந்து தங்க இடம் கேட்டு வம்பு செய்த மூன்று முரட்டு ஆட்களில் ஒருவன் தான் அவன்.

என்ன நடந்தது? அவனை ஏன் துரத்திக் கொண்டு வருகிறார்கள்? சலாபத்துக்கு அருகில் கூடாரங்கள் ஏன் தீப்பற்றி எரிகின்றன? - இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையுமாகக் குழம்பிக் கலவரமுற்ற மனநிலையோடு விடிகிற வரை அந்தக் கூடாரத்து இருளிலேயே அடைபட்டுக் கிடந்தனர் அவர்கள் இருவரும்.

இரவின் நீண்ட யாமங்கள் எப்படித்தான் ஒவ்வொன்றாக விரைவில் கழிந்தனவோ? பொழுது விடிந்த போது போர் நடந்து முடிந்த களம் போல் எல்லா ஒலிகளையும் விழுங்கித் தனதாக்கிக் கொள்ளும் ஒரு நீண்ட மௌனம் அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்தது.

அண்டராதித்தனும் கோதையும் எழுந்திருந்து ஊருக்குப் புறப்படத் தயாரானார்கள். புறப்படுவதற்கு முன் முத்துச் சலாபமும், துறையின் பிரதான வீதிகளும், சிப்பிகளைக் குவித்து வீரர்கள் காத்து நிற்கும் சிப்பிக் கிடங்குகளும் இருந்த பகுதியில் போய்ப் பார்த்தனர்.

அந்தப் பகுதியில் கூடாரங்கள் எரிந்து சின்னாபின்னமாகிக் கிடந்தன. ஆள் நடமாட்டம் இல்லாமல் களையின்றி ஒளியின்றி இருந்தது அப்பகுதி. கடைகளெல்லாம் மூடி அடைக்கப் பெற்றிருந்தன. கிடங்குகளில் பத்திரமாகக் குவிக்கப்பட்டிருந்த சிப்பிகள் மணற்பரப்பில் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. சில குவியல்களைக் காணவே இல்லை. நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் பயத்துடனும், பதற்றத்துடனும் அவசர அவசரமாகக் கப்பலேறிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவில் பாட்டும் கூத்துமாக அவர்கள் கூடாரங்கள் இருந்த இடத்தில் இப்போது வெறும் மணற்பரப்புத்தான் இருந்தது. கரவந்தபுரத்து வீரர்கள் சிலரும் முத்துக்குளிப்பைத் தொடர்ந்து மேற்பார்வை செய்து நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் சலாபத்துக்கருகே அழிவு நடந்த இடங்களையும் சிப்பிக் கிடங்குகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் கவலை தேங்கியிருந்தது. அங்கே யாரிடமாவது இரவு நிகழ்ந்த குழப்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்று கோதைக்கும் அண்டராதித்தனுக்கும் ஆசை துறுதுறுத்தது.

"பார்த்தீர்களா? இதைக் காணும் போது அந்த முரடனும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த வேலைதானென்றும் தோன்றுகிறது" என்றாள் கோதை.

"பேசாமல் இரு! நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிலைமை சரியில்லை, ஊருக்குப் போய்ச் சேருவோம்" என்று அவள் வாயை அடக்கி அழைத்துக் கொண்டு புறப்பட்டான் அண்டராதித்தன். சுகமாக முன்சிறைக்குப் போய்ச் சேருவதற்குள் இடைவழியில் கலவரங்கள், பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேரவேண்டுமே என்று நினைத்துப் பயப்படுகிற அளவுக்கு குழம்பியிருந்தன, புறப்படும் போது அவர்கள் மனங்கள்.

மறப்போர் பாண்டியர் அறத்தினால் காத்து வந்த கொற்கைப் பெருந்துறையில் மறம் நிகழ்ந்து விட்டது. அலைகள் சங்குகளை ஒதுக்கிக் கரை சேர்த்து விளையாடும் துறையில் அநியாயம் நடந்து விட்டது. கடல் ஓலமிடுதல் தவிர மனிதர் ஓலமிட்டறியாத கொற்கையில் மனிதர் ஓலமிடும் கலவரமும் நடந்து விட்டது.

3. நெருங்கி வரும் நெடும் போர்

அடுத்தடுத்து வந்த பயங்கரச் செய்திகளைக் கேள்விப்பட்டுப் பெரும்பெயர்ச்சாத்தன் பதறிப் போனான். நிலைமையை விவரித்து எழுதிய திருமுகத்துடன் அப்போதுதான் தூதனுப்பியிருந்தான். தூதுவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்குள் கொற்கையிலிருந்து அந்தப் புதிய செய்தி வந்தது.

"இரவில் ஆயுதபாணிகளான முரட்டு வீரர்கள் சிலர் தீப்பந்தங்களோடு கூட்டமாக வந்தார்கள். முத்துச் சலாபத்துக்கு அண்மையிலிருந்த கூடாரங்களுக்குத் தீ வைத்துவிட்டுக் காவலுக்கு இருந்த நம் வீரர்களோடு போரிட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிக் குவியல்கள் சூறையாடப்பட்டு விட்டன. அந்த முரட்டுக் கூட்டத்தில் யாருமே அகப்படவில்லை. சிலரைத் துரத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது." கொற்கையிலிருந்து செய்து கொண்டு வந்த ஆள் இப்படிக் கூறிய போது பெரும்பெயர்ச்சாத்தன் திகைத்துப் போய் விட்டான்.

"தொடர்ந்து முத்துக்குளிப்பு நடைபெறுகிறதோ, இல்லையோ?"

"இல்லை! தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முத்து வாணிபத்துக்காக நெடுந்தொலைவிலிருந்து கடல் கடந்து வந்திருந்த வணிகர்களெல்லாம் பயந்து போய்த் திரும்பிச் சென்று விட்டனர்."

"என்ன ஆனாலும் முத்துக்குளிப்போ, சலாபத்து வேலைகளோ தடைப்பட்டு நிற்கக்கூடாது. நம்மைப் பலவீனப்படுத்த விரும்புகிறவர்களுக்கு முன் நாம் பலவீனமடைவது போல் காட்டிக் கொள்வது நல்லதல்ல. இந்தத் திருமுகம் கொண்டு வரும் தூதனோடு பொறுக்கி எடுத்த வீரர்களாக நூறு பேர் அனுப்பியிருக்கிறேன். இவர்களைக் காவலுக்கு வைத்துக் கொண்டு தொடர்ந்து முத்துக் குளிப்பை நடத்துங்கள். மற்ற ஏற்பாடுகளை இங்கே நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று முக்கியமான ஆள் வசம் ஓர் ஓலையையும் நூறு வீரர்களையும் ஒப்படைத்து உடனே கொற்கைக்கு அனுப்பினான் பெரும்பெயர்ச்சாத்தன்.

பயமும், திகைப்பும், மேலும் மேலும் திடுக்கிடும் செய்திகளும் அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரையில் உறுதியாக இருந்து காரியங்களைச் செய்து வரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் அவன்.

வடக்கு எல்லைப் பகுதியில் பலமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அங்கிருந்தும் சில கலவரச் செய்திகள் காதுக்கு எட்டிக் கொண்டு தான் இருந்தன. எல்லை முடியும் இடத்தில் நடப்பட்டிருந்த கொழுக்குத்துக் கற்கள் (எல்லை பிரியும் இடத்தை விளக்கும் அடையாளக் கற்கள்) இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்து உடைக்கப் பட்டிருந்தனவாம்.

தன்னால் முடிந்த காவல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அரண்மனைக்குச் செய்தி கொண்டு போன மானகவசன் திரும்ப வருவதை எதிர்பார்த்திருந்தான் பெரும்பெயர்ச்சாத்தன். ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வடதிசை ஒற்றர்கள் சிலரைப் பயமுறுத்தியும், துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து ஒரு சில உண்மைகளை அறிய முடிந்திருந்தது.

படையெடுக்க முனைந்திருப்பவர்களை யார் யாரென்றும், அவர்களுடைய நோக்கங்கள் என்னென்னவென்றும் பெரும்பெயர்ச்சாத்தன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அரண்மனைக்கு அனுப்பிய திருமுகத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தான். கரவந்தபுரத்துக் கோட்டை சிறந்த பாதுகாவல் அமைப்புக்களைக் கொண்டது. பராந்தக பாண்டியரும், பெரும்பெயர்ச்சாத்தனின் தந்தை உக்கிரனும் அவர்கள் காலத்தில் வடக்கு எல்லைப் பாதுகாப்பையும் வேறு சில வசதிகளையும் எண்ணித் திட்டமிட்டு உருவாக்கிய கோட்டை அது. ஆழமான அகன்ற அகழி. எந்திரப் பொறிகளும் தந்திரச் செயல்களும் மிக்க உயரமான மதிற்சுவர். சிலப்பதிகாரத்து மதுரைக் கோட்டையை மனத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது கரவந்தபுரத்துக் கோட்டை. கோட்டைக் கதவுகளை அடைத்து, முட்டுக் கொடுப்பதற்கு மூன்று பெரிய கணைய மரங்கள் தேவையென்றால் அதன் பெருமையை வேறு எப்படிக் கூற முடியும்? இப்படியெல்லாம் இருந்தும் பாதுகாப்புக்காக மேலும் கவலை எடுத்துக் கொண்டான் அந்தக் கோட்டையின் சிற்றரசன். மகாமண்டலேசுவரரிடமிருந்தும் மகாராணியிடமிருந்தும் மறுமொழி கிடைப்பதற்கு முன்னால் தன்னால் ஆனவற்றையெல்லாம் தயங்காமல், மயங்காமல் செய்ய வேண்டுமென்ற துடிதுடிப்பு அவனுக்கு இருந்தது.

அன்று மாலைக்குள் மானகவசன் மறுமொழி ஓலையோடு திரும்பி விடுவான் என்று அவன் ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மானகவசன் அன்று மாலை மட்டுமல்ல மறுநாள் காலை வரையில் வரவே இல்லை. வேறு சில செய்திகள் பராபரியாக அவனுக்குத் தெரிந்தன.

கன்னியாகுமரிக் கோவிலில் யாரோ மகாராணியார் மேல் வேல் எறிந்து கொல்ல முயன்ற செய்தியைக் கேட்ட போதே அவன் மிகவும் கலங்கினான். அதன்பின் கூற்றத் தலைவர்கள் அரண்மனையில் ஒன்று கூடித் தென்பாண்டி நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப் போவதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், 'இடையாற்று மங்கலம் மாளிகையில் அந்நியர் அடிச்சுவடு படமுடியாத பாதுகாப்பான இடத்திலிருந்து பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் கொள்ளை போய்விட்டன' - என்ற புதுச்செய்தியை அறிந்த போது அவன் அடைந்த அதிர்ச்சி அவன் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சி.

'அடாடா! வலிமையான தலைமையற்றிருக்கும் இந்த நாட்டுக்குத்தான் ஒரே சமயத்தில் எத்தனை சோதனைகள்? பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப் போகிறாரோ? கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற் போன துயரம், பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போன அவலம். ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியை பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும்? இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும்? தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம் இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது? ஐயோ! ஊழ்வினையே! எங்கள் மகாராணி 'பாண்டிமாதேவி'யின் எண்ணங்களுக்கு நீ என்ன முடிவு வகுத்து வைத்திருக்கிறாயோ?'

இவ்வாறு எண்ணி நெடுமூச்செறிந்த பெரும்பெயர்ச்சாத்தனின் மனக்கண்களுக்கு முன்னால் ஒரு கணம் பாண்டிமாதேவியின் சாந்தம் தவழும் தெய்விக முகமண்டலம் தோன்றி மறைந்தது. ஏனோ, மகாராணி பாண்டிமாதேவியின் திருமுகம் தோன்றிய மறுகணமே அதை ஒட்டித் தோன்றினாற் போல், மணத்தை நுகர்ந்த அளவில் பூவின் உருவை மனம் உரு வெளியில் கற்பித்துக் காண முயலுமே, அப்படிப்பட்ட ஓர் இயல்பு அது.

பெரும்பெயர்ச்சாத்தன் அவன் தந்தையைப் போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன். அவன் தந்தை உக்கிரன் மகாமன்னரான பராந்தக பாண்டியரையே பல முறைகள் எதிர்த்துப் போரிட்டு அதன் பின்னே அவருக்குப் பணிந்து நண்பனானான். அத்தகைய திடமான வீரப் பரம்பரையில் பிறந்திருந்தும் நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைக் காணும் போது அவன் மனம் நெகிழ்ந்து விடுகிறது.

ஒருபுறம் நாட்டின் சூழ்நிலைகளைப் பற்றிய தவிப்பு. மறுபுறம் தூது போன மானகவசன் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை என்ற கவலை. இரண்டும் பெரும்பெயர்ச்சாத்தனைப் பற்றிக் கொண்டு அவன் அமைதியைக் குலைத்தன.

'எதற்கும் இன்னொரு தூதனை அனுப்பிவிட்டால் நல்லது. காரியம் பெரிது. மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மானகவசன் போய்ச் சேர்ந்தானோ, போகவில்லையோ?' என்று நினைத்துப் பார்க்குங்கால் பற்பல விதமான ஐயப்பாடுகள் அவனுக்கு உண்டாயின. உடனே மற்றொரு தூதனிடம் கொற்கையில் நடந்த குழப்பம், வட எல்லையில் கொழுக்குத்துக் கற்கள் உடைபட்ட விவரம் எல்லாவற்றையும் விவரித்து மற்றொரு திருமுகத்தை எழுதிக் கொடுத்து அனுப்பினான். அப்புறமும் பெயர்ச்சாத்தனின் மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. எண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சிந்தனைகளைத் தவிர்க்க முயன்றாலும் மறுபடியும் அவன் மனம் வலுவில் சிந்தனைகளிலேயே போய் ஆழ்ந்தது.

கொற்கையில் புகுந்து குழப்பம் செய்தது போல் இடையாற்று மங்கலத்தில் நடந்த கொள்ளைக்கும் எதிரிகள் தான் காரணமோ என்று நினைத்தது அவன் மனம். 'இவ்வளவெல்லாம் இங்கே குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கின்றன. குமாரபாண்டியர் எங்கிருந்தால் தான் என்ன? ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும்? தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்று மங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய்விட்டன?'

மகாமண்டலேசுவரரை அவன் என்றும் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. புரிந்து கொள்கிற அளவுக்கு அவனை அவர் நெருங்க விட்டதும் இல்லை. சாமர்த்தியமே உருவான ஒரு பெரும் புதிர் என்று அவரைப் பற்றி அவன் முடிவு செய்து வைத்திருந்தான். தளபதி வல்லாளதேவன் கடமையில் கருத்துள்ளவன். சிறிது உணர்ச்சித் துடிப்பு மிகுந்தவன் என்பதும் அவன் அறிந்த விவரமே. மகாராணியாரையும், குமாரபாண்டியரையும் பொறுத்தமட்டில் அவனுக்கு ஒரே விதமான எண்ணம்தான். 'வணக்கத்துக்குரியவர்கள். அன்பும், அனுதாபமும் செலுத்தத் தக்கவர்கள்'... தன் உயிரின் இறுதித் துடிப்பு வரை அந்தப் பேரரசின் வாழ்வுக்குக் கட்டுப்பட்டு உதவ வேண்டுமென்ற அவன் எண்ணத்தை ஊழி பெயரினும் மாற்ற இயலாது. இல்லையானால் அவனைத் தங்களுடையவனாக்கிக் கொள்ள வடதிசை அரசர் பலமுறைகள் முயன்றும் அவன் மறுத்திருக்க மாட்டான்.

மனத்தின் தெளிவற்ற நிலையைச் சரி செய்து கொள்வதற்கு எங்கேயாவது திறந்த வெளியில் காற்றுப் படும்படி உலாவ வேண்டும் போலிருந்தது.

"மானகவசனோ, வேறு ஆட்களோ வந்தால் என்னிடம் அனுப்புங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மேல் மாடத்துத் திறந்த வெளி முற்றத்துக்குச் சென்றான் அவன்.

மேல் மாடத்தில் அந்த மலைக்காற்று சிலுசிலுவென்று வீசியது. 'காலத்தால் அழிக்க முடியாத பேருண்மை நான்' என்று கூறுவது போல் வடமேற்கே பொதியமலை பரந்து கிடந்தது. ஆகாயப் பெருங்குடையை அணைய முயலும் அந்த எழில் நீலப் பேரெழுச்சியை - காலத்தை வென்று கொண்டு நிற்கும் கல்லின் எழுச்சியைத் திறந்த வெளியிடையே பார்க்கும் போது நம்பிக்கை பிறப்பது போல் இருந்தது பெரும்பெயர்ச்சாத்தனுக்கு. 'தன் பக்கத்தில் வடக்கு எல்லையில் போர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே' என்பதைப் பற்றி இந்த மலைக்குச் சிறிதும் வாட்டமிருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாக நினைத்தான். மேல் மாடத்துப் படிகளில் யாரோ வேகமாக ஏறிவரும் காலடியோசை கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். ஒரு சாதாரண வீரன் வந்து வணங்கி நின்றான்.

"என்ன?"

"தூதன் மானகவசன் திரும்பி வந்திருக்கிறான்... ஆனால்..." வந்த வீரன் பதில் சொல்வதற்குத் தயங்குவது போல் தெரிந்தது.

4. கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்

இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியையும், கரவந்தபுரத்திலிருந்து வந்த போர்ச் செய்தியையும் மகாமண்டலேசுவரர் எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாகப் பாதுகாக்க வேண்டுமென்று கருதினாரோ, அவ்வளவுக்கு அவர் நினைக்குமுன்பே அவை பொதுவாக வெளியில் பரவி விட்டிருந்தன. இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளானும், கரவந்தபுரத்திலிருந்து மானகவசனும் செய்திகளை அரண்மனைக்குள் கொண்டு வந்த பின்பே அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை அவருக்கு உண்டாயிற்று. ஆனால் அந்தச் செய்திகள் அரண்மனை எல்லைக்குள் வந்து சேருவதற்கு முன்பே வெளியில் பரவி விட்டன என்பதை அவர் உணரவில்லை.

இடையாற்று மங்கலத்து நிகழ்ச்சி மறுநாள் பொழுது புலரும் போது சுற்றுப் புறங்களுக்கு எட்டிவிட்டது. போர் வரப்போகிறது என்ற செய்தியைச் சூழ்நிலை இருக்கிற விதத்தால் மக்களே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. ஆகவே செய்திகளை வெளியில் தெரியாமல் ஒடுக்கி வைக்க வேண்டுமென்ற ஏற்பாடு அவர் புரிந்து கொள்ள முடியாதபடி அவருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டது.

'அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போய்விட்டன' - என்ற செய்தியை அடுத்து - வசந்த மண்டபத்து துறவியைக் காணவில்லை என்று அம்பலவன் வேளான் கூறுவான் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குமாரபாண்டியர் தன்னிடமே இரகசியமாகத் தங்கியிருப்பதாகவும் உடனே அவரை அரண்மனைக்கு அழைத்து வருவதாகவும் மகாராணியார் முன்னிலையில் அவர் ஒப்புக் கொண்டிருந்தார். நாளை நடக்கப் போவதை மட்டுமல்ல, நாற்பது ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்க முடியும் என்று அனுமானிக்கிற அளவுக்கு அறிவும், சிந்தனையும், உள்ள அவரே இந்த இடத்தில் புள்ளி பிசகிவிட்டார். இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரருடைய கணக்குத் தப்புக் கணக்காகி விட்டது.

குமாரபாண்டியன் இராசசிம்மன் தன்னை மீறி எங்கும் எதற்கும் போகத் துணிவான் என்று அவர் நினைத்ததில்லை. அவன் மீறிச் செல்ல வழியின்றித் தம் அருமைப் புதல்வியையே துணை வைத்துவிட்டு வந்தார். எல்லோரையும் ஏமாற்றி விட்டுத் தனது முன்னோர் செல்வத்தையும் கிளப்பிக் கொண்டு போய்விட்டான் அவன். அவன் தான் அவற்றைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது கூட நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இணைத்துப் பார்த்து அவராக அனுமானித்துக் கொண்டது தான்.

இப்போது மகாராணியாருக்கு என்ன பதில் சொல்வதென்ற திகைப்பு அவருக்கு ஏற்பட்டது. எல்லோரையும் அனுப்பிவிட்டு அவர் மறுபடியும் மகாராணியாரைச் சந்திக்கச் சென்றார். மகாராணியும் அவரையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது போல் அங்கேயே இருந்தார்.

"வாருங்கள்! நீங்கள் குமாரபாண்டியன் இராசசிம்மனைப் பற்றி நாம் தனிமையில் ஏதோ பேச வேண்டுமென்று கூறிவிட்டுப் போயிருந்தீர்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் ஒவ்வொரு கணமும் உங்களை எதிர்பார்த்து இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்."

மகாராணியின் வார்த்தைகளில் தம் புதல்வனைப் பற்றி அறியக் காத்திருக்கும் ஆவல் தொனித்தது.

இடையாற்று மங்கலம் நம்பி எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தார். நல்ல கண்ணாடியில் சிறிது புகை படிந்தாற் போல அவர் முகபாவம் ஒளி மங்கியிருந்தது. எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபின் மகாராணியாருக்கு மறுமொழி கூறத் தொடங்கினார்.

"தேவி! குமாரபாண்டியரை எந்தெந்த உயர்ந்த நோக்கங்களோடு இடையாற்று மங்கலத்தில் என்னிடம் மறைவாகக் கொண்டு வந்து தங்கச் செய்திருந்தேனோ, அவற்றுக்கு முற்றிலும் மாறாக அவர் நடந்து கொண்டு விட்டார்."

"அப்படி என்ன செய்தான் அவன்?"

"அதைத் தங்களிடம் மட்டும் தான் நான் சொல்ல முடியும். எல்லாருக்கும் தெரிந்தால் குமார பாண்டியருடைய பெருமையையே நாம் விட்டுக் கொடுத்தது போலாகிவிடும்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரிதாக ஏதோ செய்து விட்டான் போல் அல்லவா தோன்றுகிறது!"

"பெரிதுதான்! நேற்றிரவு நம்முடைய பாண்டிய மரபின் மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போனதாக இப்போது செய்தி வந்ததே, அதைச் செய்தவர் இடையாற்று மங்கலத்தில் வந்து தங்கியிருந்த தங்கள் குமாரர் இராசசிம்மனேதான்."

"என்ன? இராசசிம்மனா அப்படிச் செய்தான்? இங்கிருந்து கொண்டே அவன் தான் அதைச் செய்தானென்று நீங்கள் எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்?" மகாராணியின் முகத்தில் வியப்பும் கலவரமும் பதிந்தன.

"இன்று நாம் எல்லோரும் கூடியிருந்த இந்த இடத்தில் தான் இடையாற்று மங்கலத்துப் படகோட்டி வந்து அந்தச் செய்தியைச் சொன்னான். கொள்ளை போன செய்தியோடு வசந்த மண்டபத்திலிருந்த துறவியைக் காணவில்லை என்றும் அன்று பகலில் அவரை யாரோ தேடி வந்திருந்ததாகவும் அவன் கூறினான். நீங்கள் எல்லோரும் 'கொள்ளை போயிற்று' என்ற அளவிலேயே அதிர்ச்சியடைந்து அதையடுத்து அவன் கூறிய குறிப்புகளை ஊன்றிக் கவனிக்கவில்லை. வசந்த மண்டபத்தில் தங்கியிருந்த துறவிதான் தங்கள் புதல்வர் குமாரபாண்டியர் என்பதை முன்பே தங்களிடம் குறிப்பிட்டுள்ளேன்."

மகாராணி வானவன்மாதேவி எதுவும் சொல்லத் தோன்றாமல் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"தேவி! கொள்ளை போன செய்தி வேண்டுமானால் என் முன்னெச்சரிக்கையையும் மீறி எங்கும் பரவியிருக்கலாம். ஆனால் அதைச் செய்தவர் குமாரபாண்டியர் தான் என்பது இப்போதைக்கு என்னையும் தங்களையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒரு வேளை என்னுடைய அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் தளபதிக்கும் சிறிது சந்தேகம் இருக்கலாம். வெளிப்படையாக இன்னார் தான் என்று அவர்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை."

"மகாமண்டலேசுவரரே! குமாரபாண்டியன் எந்த நோக்கத்தோடு இதைச் செய்தானோ? ஆனால் 'அவன் தான் இதைச் செய்தான்' என்ற இந்தச் செய்தி வெளியே பரவினால் பொது மக்கள் அவனைப் பற்றி என்னென்ன இழிவான பேச்சுக்களெல்லாமோ பேசி விடுவார்களே. செயலைக் கொண்டு மனிதனை அளக்கிறவர்களே எங்கும் நிறைந்துள்ள உலகம் இது. எண்ணங்களையும் மனப்போக்கையும் மதிப்பிட்டுப் பார்க்க மாட்டார்களே! இதுவும் என் போதாத காலந்தான்!" மகாராணியின் குரல் தழுதழுத்தது.

"தங்களுக்கு அந்தப் பயம் தேவையில்லை! குமாரபாண்டியரின் பெயருக்கு எந்த விதமான களங்கமும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது."

"மகாமண்டலேசுவரரே! உங்களுக்குத் தெரியாததில்லை. இவ்வளவு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் அவனை நம்பித்தான். மறுபடியும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும். அவனை இந்த நாட்டின் அரசனாக உலாவச் செய்ய வேண்டும். என் மகன் காலத்தில் பாண்டிய அரச மரபு இருண்டு அழிந்தது என்ற பழமொழி எதிர்காலத்தில் வந்து விடக் கூடாதே என்பது தான் என் கவலை. ஐயோ! இந்தப் பிள்ளை இப்படி என்னென்னவோ செய்யத் தகாததைச் செய்துவிட்டு நெருங்கி வராமல் விலகி ஓடிக் கொண்டிருக்கிறானே?"

பேசிக் கொண்டே வந்த மகாராணி மெல்லிய விசும்பலோடு பேச்சை நிறுத்தினார். கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்த போது வாய்விட்டு அழுதுவிடுவாரோ என்று மகாமண்டலேசுவரர் பயந்தார். அந்தப் பெருந்தேவி உள்ளங் குமுறி அழுத காட்சியைப் பராந்தக பாண்டியர் அமர பதவி அடைந்த போது ஒரு முறைதான் மகாமண்டலேசுவரர் பார்த்திருக்கிறார். "இந்த அரசப் பெருங்குலத்து அன்னையை எதிர்காலத்தில் இனி என்றும் அழ விடக் கூடாது" என்று அப்போது தம் பொறுப்புடன் எண்ணி வைத்திருந்தார் மகாமண்டலேசுவரர்.

"தேவி! இதென்ன? இப்படித் தாங்களே உணர்ச்சி வசப்படலாமா? யாருடைய கண்ணீரையும் எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்! ஆனால் மகாராணியாகிய தாங்களே கண்ணீர் சிந்தினால் என்ன செய்வது?"

"கண்ணீர் சிந்தாமல் வேறென்ன செய்வது? வடக்கு எல்லையில் 'போர் இதோ வந்து விட்டது' என்கிறார்கள். இராசசிம்மன் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவனோ தன்னோடு போகாமல் இந்த அரசுரிமைப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு அசட்டுத் தனமாக என்னென்னவோ செய்துவிட்டுப் போயிருக்கிறான். எனக்கு ஏது நிம்மதி? என் தாய் கன்னியாகுமரி அன்னையை அடிக்கடி வழிபட்டு என் துயரங்களை மறக்க முயலலாம் என்றால் நான் வெளியில் புறப்படுவதே என் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது."

"கவலைகளையெல்லாம் என்னிடம் விட்டுவிடுங்கள்! அவற்றுக்காகவே நான் இருக்கிறேன். தங்களைப் போன்றவர்களுக்கு அதிகக் கவலைகள் இருந்தால் நிம்மதி இராது. என்னைப் போன்றவனுக்கு அதிகக் கவலைகள் சூழும் போதுதான் சிந்தனை நிம்மதியாகத் திட்டமிடும். உங்கள் மனம் குழம்பியிருக்கிறது. இப்போது உங்களுக்குத் தனிமை தேவை. நான் பின்பு வந்து சந்திக்கிறேன்."

மகாமண்டலேசுவரர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். துயரம் குமுறிக் கொண்டு வரும்போது மிகவும் வேண்டிய மனிதர் எதிரில் இருந்தாலே அழவேண்டும் போலத் தோன்றும். அழுது தணித்துக் கொள்ளவும் துணிவு இருக்காது. தனிமையில் விட்டு விட்டால் ஒருவாறு தணியும் என்று கருதியே அவர் அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பின்பும் நெடுநேரமாக மகாராணி அமைதியாகக் கண்ணீர் வடித்தவாறு அதே இடத்தில் வீற்றிருந்தார். அமைதியோ, நிம்மதியோ ஏற்படுகிற வழியில்லை. கவலைகளை மறக்க, அல்லது மறைக்க ஏதாவது புதிய பேச்சு வேண்டியிருந்தது. கோட்டாற்றிலுள்ள சமணப் பள்ளியில் குணவீர பண்டிதர், கமலவாகன பண்டிதர் என்று இரண்டு சமணத் துறவிகள் இருந்தனர். அவர்கள் எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் மகாராணியாரைச் சந்திக்க வருவதுண்டு. வந்தால் நீண்ட நேரம் சமய சம்பந்தமான தத்துவங்களைப் பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் வந்து பேசிவிட்டுச் சென்ற பின்பு அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனத்தில் அழுக்கைத் துடைத்து வாசனை பூசிய மாதிரி ஒரு சாந்தி, ஒரு நம்பிக்கை, வாழ்க்கை முழுவதும் நல்ல விளையாட்டு என்ற பயமற்ற ஒரு எண்ணம் ஏற்படும். இந்த மாதிரி நாநலம் படைத்தவர்கள் உலகில் அத்தி பூத்தாற் போலத்தான் அகப்படுவார்கள். வாழ்க்கையில் அவநம்பிக்கை ஏற்படும்படி பேசிவிட்டுச் செல்பவர்களே பெரும்பாலோர்.

பேச்சைப் பொறுத்தமட்டில் மகாராணிக்கு எடை போட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. இடையாற்று மங்கலம் நம்பி பேசி விட்டுப் போனால் கேட்டுக் கொண்டிருந்தவர் மனத்தில் அவரை எண்ணிப் பிரமிக்கும்படி செய்துவிட்டுப் போவார். தளபதி வல்லாளதேவன் வெடிப்பாகப் பேசி உணர்ச்சியூட்டுவான். அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் போன்ற பண்டிதர்கள் காரண காரிய ரீதியாக அழுத்தம் படப் பேசுவர். நாராயணன் சேந்தன் குதர்க்கமும் சிரிப்பும் உண்டாக்குவான்.

ஆனால் கோட்டாற்று சமணத் துறவியின் பேச்சு இவற்றோடு மாறுபட்டது. வாடும் பயிருக்குப் பருவமறிந்து பெய்து தழைக்கச் செய்யும் மழை போன்றது அது. சில துயரமான நேரங்களில் மகாராணியே சிவிகையை அனுப்பி அவரை வரவழைப்பதுண்டு. சமீபத்தில் சிறிது காலமாக அந்தத் துறவி யாத்திரை போயிருந்ததால் அரண்மனைப் பக்கம் வரவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அவர் திரும்பி வந்திருப்பதாகக் கூறினார்கள். நிம்மதியற்ற அந்தச் சூழ்நிலையில் அந்தத் துறவியை வரவழைத்துப் பேசினால் மனத் தெளிவு ஏற்படுமென்று அவருக்குத் தோன்றியது. உடனே சிவிகையை எடுத்துப் போய் அவரையும் முடிந்தால் மற்றொருவரையும் அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினார். சில நாழிகைகளில் அவர் வந்து சேரும் வரை தனிமையும், கவலைகளும் மகாராணியாரின் மனத்தை வாட்டி எடுத்து விட்டன. இரண்டு துறவிகளும் வந்திருந்தார்கள். ஒளி தவழும் தூய முகமும், முண்டிதமாக்கப்பட்டு வழுவழுவென்று மின்னும் தலையுமாக அருளொளி கனியும் அந்தத் துறவிகளின் தோற்றத்தைப் பார்த்த போது நிம்மதி வந்துவிட்டது போலிருந்தது. மகாராணி எதிர்கொண்டு எழுந்து சென்று வணங்கி அவர்களை வரவேற்றார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு தன் யாத்திரை அனுபவங்களைச் சிறிது நேரம் கூறினார்கள் அவர்கள் இருவரும். அந்தச் சமயத்தில் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் வேறு அங்கு வந்து சேர்ந்தார்கள். 'சரியான அவை கூடி விட்டது!' என்று நினைத்து மனநிறைவு பெற்றார் மகாராணி! "சுவாமி! கவலைகளை உணர்ந்து கொண்டு கலங்கும் இயல்பு முதன் முதலாக எப்போது மனித மனத்துக்கு உண்டாயிற்று?" என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுக் குணவீர பண்டிதருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தார் மகாராணி.

குணவீர பண்டிதர் தம்மோடு வந்திருந்த கமல வாகனரைப் பார்த்துச் சிரித்தார். பின்பு கூறினார்:

"இன்பங்களை உணர்ந்து மகிழும் இயல்பு ஏற்பட்ட போது!"

மகாராணி இதற்குப் பதில் சொல்வதற்குள் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் குறுக்குக் கேள்வி கேட்டார்கள். பேச்சு அவர்கள் நால்வருக்குள்ளேயே விவாதம் போலச் சுழன்றது. மகாராணி அதன் நயத்தை விலகியிருந்து அனுபவிக்கலானார்.

"சமணர்கள் எப்போதுமே நிலையாமையைத்தான் வற்புறுத்துவார்கள்" - அதங்கோட்டாசிரியர் பிரான் இடையிலே குறுக்கிட்டார்.

"நிலையாமை ஒன்றே நிலைப்பது, நிலைப்பதாகத் தோன்றுவதெல்லாம் நிலையாதது, என்று தானே சமணர்களின் நூல்கள் எல்லாம் கூறுகின்றன?" என்றார் பவழக்கனிவாயர்.

"நீங்கள் எங்களுடைய கொள்கையைத் திரித்துக் கூறுகிறீர்கள். நிலையாமையைக் குறித்து எல்லாச் சமயங்களுமே உடன்படுகின்றன. எங்கள் நூல்கள் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் போது கசப்பாக இருக்கிறது. திருக்குறளும் நிலையாமையைச் சொல்கிறது. எங்கள் சமயத்தார் எழுதிய நாலடியாரும் நிலையாமையைச் சொல்லுகிறது. திருக்குறள், 'வாழ்க்கை நிலையாதது; செல்வம் நிலையாதது; இளமை நிலையாதது; ஆனாலும் வாழ்ந்து பார். மனைவி மக்களோடு அறம் பிறழாமல் வாழு. புகழ் எய்து' என்று நம்பிக்கை யூட்டுகிறது. நாங்கள் சாதாரண மனித இயல்பை மனத்தில் கொண்டு பயமுறுத்திச் சொல்லியிருக்கிறோம்" என்றார் குணவீர பண்டிதர்.

"எங்கே? நிலையாமையைப் பற்றி ஒரு பாட்டுச் சொல்லுங்கள்" என்று அவரைக் கேட்டார், அதுவரையில் பேசாமல் இருந்த மகாராணி.

"இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையுங் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்று மென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொள்மின்!"

குணவீர பண்டிதரின் குரல் கணீரென்று ஒலித்து ஓய்ந்தது.

"இதுதான் எங்கள் தத்துவம். இன்றைக்கு இருப்பது என்றைக்கும் இருக்குமென்று எண்ணி நாங்கள் நம்பி ஏமாறுவதில்லை. என்றைக்கும் இருக்கும் எதுவோ அதைப் பயிர் செய்ய முயலுகிறோம்." - அவரே விளக்கினார்.

"தமிழ் இலக்கியத்திலுள்ள பெரும்பாலான சமணப்பாடல்கள் இதைத் தான் வற்புறுத்துகின்றன" என்று அதங்கோட்டாசிரியர் கூறினார்.

"சித்திரக்காரனுக்கு ஏழு வர்ணங்கள் மேலும் ஒரே மாதிரி அன்புதான். உலகத்திலுள்ள இன்பம், துன்பம் எல்லா உணர்ச்சிகளையும் நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாமே நிலையாதவை என்ற உணர்வில் அடங்கியவை. நிலையாதவற்றை வெறுக்கவில்லை. அனுதாப்படுகிறோம். 'எவ்வளவு நாட்களானாலும் வாடாது' என்ற பேதமை நினைவுடன் கையில் பூச்செண்டை ஏந்திக் கொண்டிருக்கும் குழந்தை மாதிரி உலகம் இருக்கிறது. நாங்கள் தூர இருந்து அந்தக் குழந்தையைப் பார்த்து அனுதாபப்படும் வயதானவர் போலிருக்கின்றோம். காரணம்? 'அந்த பூச்செண்டு வாடிவிடும்' என்ற உண்மை எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது?" என்றார் குணவீரர்.

"விவாத முறைக்கு உங்கள் பேச்சு ஏற்கும்! ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராதே" என்றார் பவழக்கனிவாயர்.

"நடைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அல்லது பயப்படுகிறவர்கள் எந்த இலட்சியங்களையும் நிறுவ முடியாது" என்று பவழக்கனிவாருக்குக் கமலவாகனர் பதில் கொடுத்தார். விவாதம் கருத்துச் செறிவுள்ளதாக இருந்தது. அந்த உரையாடல் வளர்ந்து கொண்டே போன விதத்தில் மகாராணிக்கு ஆறுதல் ஏற்பட்டிருந்தது.

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் குணவீர பண்டிதர் புறப்பட எழுந்தார். எல்லாருமே மரியாதையாக எழுந்து நின்றனர்.

"சுவாமி! ஒரு சிறு விண்ணப்பம்."

"என்ன?"

"தாங்கள் சற்று முன் பாடினீர்களே, அந்தப் பாடலை ஓர் ஓலையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போக இயலுமா?" இருந்தாற் போலிருந்து நினைத்துக் கொண்டு கேட்பவர் போலக் கேட்டார் மகாராணி வானவன்மாதேவி.

"ஆகா! ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொல்லுங்கள். இப்போதே எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறேன்" என்றார் அவர். ஓலையும் எழுத்தாணியும் வந்தன. குணவீரர் வாயால் சொல்ல, கமலவாகனர் ஓலையில் எழுதினார். எழுதி முடித்ததும் மகாராணி அதைப் பயபக்தியோடு வாங்கிக் கொண்டார். அந்தப் பாட்டுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து மகாராணியார் வாங்கிக் கொண்டதைக் கண்டு அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் ஆச்சரியத்தோடு சிறிது அசூயையும் அடைந்தனர்.

5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்

"தென்பாண்டி நாட்டுப் படைகள் விரைவில் வடக்கு எல்லைக்கு அனுப்பப்படும். அதுவரையில் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்கள் சமாளித்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது" என்ற கருத்தடங்கிய திருமுகத்தோடு மானகவசனை அன்று காலையிலேயே அவசரமாகக் கரவந்தபுரத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். மானகவசனும் தாமதமின்றி உடனே புறப்பட்டு விட்டான். வருகிறபோது வந்ததுபோல் முன்சிறைப் பாதை வழியே சென்றான். சரியாக நடுப்பகல் நேரத்துக்கு முன்சிறை போய்விட முடியும். குதிரையை விரைவாகச் செலுத்தினால் அதற்கும் முன்னால் போய்விடலாம். அந்த நேரத்துக்கு அங்கே போவதனால் ஒரு நன்மையும் இருக்கிறது. பகல் உணவை முன்சிறை அறக்கோட்டத்தில் அந்த வேடிக்கைத் தம்பதிகளின் உபசரிப்புக்கு இடையே சுவை நிறைந்ததாக முடித்துக் கொள்ளலாம். கணவனும், மனைவியுமாக ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டே அறக்கோட்டத்துக்கு வந்து செல்வோருக்கெல்லாம் அறுசுவை உணவோடு நகைச்சுவையும் அளிக்கும் அண்டராதித்தனையும், கோதையையும் நினைக்கும் போது அப்போதே அவர்களைக் கண்டுவிட்டது போன்றிருந்தது அவனுக்கு. கரவந்தபுரத்திலிருந்து முக்கியமான திருமுகத்தை அரண்மனைக்குக் கொண்டுவரும் அவசரத்தில் ஒரே ஒரு வேளைதான் அந்த அறக்கோட்டத்தில் தங்கிச் சாப்பிட்டிருக்கிறான் அவன். இருந்தும் அந்த ஒரு வேளைப் பழக்கத்துக்குள்ளே அவர்கள் அவனுடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தார்கள்.

'குழந்தை குட்டிகள் இல்லாமல் வயது மூத்த அந்தத் தம்பதிகள் அதை ஒரு குறைவாக எண்ணிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ வருகிறவர்களையெல்லாம் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்த அவர்களால் முடிகிறது. அறக்கோட்டங்களும், அட்டிற்சாலைகளும் நடத்தினால் மட்டும் போதுமா? உலகம் முழுவதும் சிரிப்பதற்கும், அன்பு செய்வதற்கும், உபசரிப்பதற்கும் ஏற்றது என்று எண்ணும் அண்டராதித்தனும் கோதையும் போன்ற ஆட்கள்தான் அறக் கோட்டத்தை அர்த்தமுள்ள தாக்குகிறார்கள். சேர, சோழ நாடுகளில் எத்தனை அறச்சாலைகள் இருந்தால் என்ன? அங்கெல்லாம் அண்டராதித்தனும், கோதையும் இல்லாதவரை அவை அறச்சாலைகளாக முடியுமா? சிரிப்பதற்கு ஆளில்லாத அறச்சாலைகள் அவை! கடல் கடந்தும், தரை வழியாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து யாத்திரீகர்கள் வந்தாலும் அவர்களையெல்லாம் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறந்தோராக எண்ணும் கோதையும் அண்டராதித்தனும் தான் பார்க்கப் போனால் இந்நாட்டின் உண்மையான பிரமுகர்கள்! 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற தத்துவத்தை மெய்ப்பித்துக் கொண்டு வருபவர்கள் அவர்கள் தாமே?' அன்று ஏனோ, அந்தத் தூதன் மனத்தில் முன்சிறை மணியக்காரனும், அவன் மனைவியுமே நிறைந்திருந்தார்கள். அவர்களைப் பற்றியே அவன் அதிகமாகச் சிந்தித்தான். தான் கொண்டு போகும் அரசாங்கச் செய்தி, அதன் அவசரம் ஆகியவை கூட அவ்வளவாக அவனுடைய மனத்தைக் கவர்ந்து விடவில்லை.

ஆனால் நண்பகலில் அவன் முன்சிறை அறக்கோட்டத்தை அடைந்த போது பெரிதும் ஏமாற்றமடைந்தான். அங்கே அண்டராதித்த வைணவனும் கோதையும் இல்லை. "கொற்கை முத்துக்குளி விழாவைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள்" என்று அறக்கோட்டத்துப் பணியாட்கள் கூறினார்கள். தூதனுக்கு அன்றும் அங்கே பகல் உணவு கிடைத்தது. ஆனால் அண்டராதித்தனும், கோதையும் பக்கத்திலிருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி உபசாரம் செய்து போடுகிற சாப்பாடு மாதிரி இல்லை அது! அங்கு அதிக நேரம் தங்கக் கூட விருப்பமில்லாமல் உடனே புறப்பட்டு விட்டான் அவன். கொற்கையிலிருந்து திரும்பினாலும் தான் செல்லுகிற அதே சாலை வழியாகத்தான் திரும்ப வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குளி விழாவைப் பார்க்கப் போகிறவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்ப மாட்டார்கள் என்று தோன்றியதனால் அவர்களை வழியில் எங்கேயாவது எதிரே சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை அவன் கைவிட்டுவிட்டான்.

அதே நிலையில் இடைவழியில் எங்கும் தங்காமல் பயணத்தைத் தொடர்ந்ததால், அன்று இரவு நடுச்சாமத்துக்குள்ளாக ஒருவாறு அவன் கவந்தபுரத்தை அடைந்து விட முடியும். வெயிலின் மிகுதியையும் வானில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேகக் கற்பாறைகள் மிதப்பதையும் கண்டு மழை வந்து நடுவே பிரயாணத்தைத் தடைப்படுத்தி விடாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாயிருந்தது அவனுக்கு. ஏதாவது ஊர்ப்புறத்தை ஒட்டிச் சென்று கொண்டிருக்கும் போது மழை வந்தால் குதிரையையும் கட்டிவிட்டு எங்கேயாவது தங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தொல்லைதான். முன்சிறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை அந்தச் சாலையில் ஊர்கள் இடையிடையே வரும். அதன் பின் கவந்தபுரம் வரை மலைச்சரிவிலும், அடர்ந்த காடுகளை வகிர்ந்து கொண்டும் செல்கிறது சாலை. எதற்கும் கொஞ்சம் வேகமாகப் போவதே நல்லது என்ற எண்ணத்துடன் குதிரையை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன். சாலையில் எந்த இடங்களில் சிறுசிறு ஊர்கள் இருந்தனவோ, அங்கெல்லாம் கூட அதிகமான கலகலப்பு இல்லை. எல்லோரும் முத்துக்குளி விழாவிற்குச் சென்றிருந்தார்களாதலால் ஊர்கள் அமைதியாக இருந்தன. அனேகமாக அந்தப் பெருஞ்சாலையில் சிவிகைகள், யானைகள், குதிரைகள், கால்நடையாகச் செல்வோர் என்று போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அன்றைக்கோ அதுவும் குன்றியிருந்தது. அவனுடைய குதிரைதான் சாலையை ஏகபோகமாக அக்கிரமித்துச் சுதந்திரமாகச் சென்று கொண்டிருந்தது. மாலையில் சிறு தூறல் இருந்தது. பெருமழையாகப் பெய்யாததால் அதனால் அவனுக்கு அதிக இடையூறு இல்லை. எங்கும் நிற்காமல் சென்று கொண்டிருந்தான். ஆனால் இருட்டுகிற சமயத்துக்குச் சாலை மலைச்சரிவை ஒட்டிச் சென்று கொண்டிருந்த போது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டு விட்டது. மின்னலும் இடியுமாக மேகம் இருட்டிக் கொண்டு இயற்கையான இருளோடு கலந்து கருமைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. வானப் பெருங்குளத்தின் வடிகாற் கண்களை யாரோ உடைத்து விட்டுவிட்ட மாதிரி மழை கொட்டியது. இருளில் வழி அறிவது கூட வரவரக் கடினமாகிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு பாழ்மண்டபம் வழியில் அகப்பட்டால் கூடப் பிரயாணத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு விடலாமென்று அவனுக்குத் தோன்றியது. பெருமழைக் காலங்களில் இடி அதிகமாக இருக்கும் போது காட்டு மரங்களின் கீழே தங்குவது நல்லதல்லவே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.

அந்தச் சமயத்தில் சமய சஞ்சீவி போல் சாலையோரத்தில் ஒரு பாழ்மண்டபம் தெரிந்தது. அதில் காட்டுச் சுள்ளிகளால் நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் சிலர். அந்த வெளிச்சம் இல்லையானால் அப்போதிருந்த இருட்டில் அந்த மண்டபம் அங்கிருப்பதோ, அதில் ஆட்கள் உட்கார்ந்திருப்பதோ அவன் கட்புலனுக்குத் தெரிந்திருக்கவே முடியாது.

அவ்வளவு மழையோசையிலும் அவனுடைய குதிரைக் குளம்பொலி அவர்களுக்குக் கேட்டிருக்க வேண்டும். எல்லோரும் சாலைப்பக்கமாகத் திரும்பிப் பார்த்ததை மானகவசன் கண்டான். குதிரை நனையாமல் மண்டபத்தின் முன்புறத் தூணில் கட்டிவிட்டு, உடைகளைப் பிழிந்து விட்டுக் கொண்டான். உடல் தெப்பமாக நனைந்திருந்தது. மகாமண்டலேசுவரரின் திருமுக ஓலை இடுப்புக்குள் பத்திரமாக இருந்தது. "அந்தக் காலத்தில் இந்தப் பாழ்மண்டபத்தைக் கட்டிய வள்ளல் யாரென்று தெரிந்தால் இப்போது அவனுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல நினைவு மண்டபமே கட்டி வைத்து விடலாம்" என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டே அவர்களுக்குப் பக்கத்தில் தானும் போய்க் குளிர் காய்வதற்கு உட்கார்ந்தான் மானகவசன். அவன் சிரிப்போ, பேச்சோ அவர்களிடையே பதில் சிரிப்புகளையோ, பேச்சுக்களையோ உண்டாக்கவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மானகவசன் அதைப் பொருட்படுத்தா விட்டாலும் மனித இயல்பை மீறியதாக இருந்தது அவர்கள் நடந்து கொண்ட விதம். இந்த மாதிரி சமயத்தில் "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரித்து அறிய முயல்வது தான் சாதாரண மனித இயற்கை. அதற்குக் கூட அவர்கள் முயவில்லை. ஆனால் மானகவசன் அவர்களைப் போல் ஊமையாக இருந்து விடவில்லை.

"ஐயா! நீங்களெல்லாம் யார்? கொற்கை முத்துக்குளி விழா பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது மழையில் அகப்பட்டுக் கொண்டீர்களா? அடடா! எதற்கு இவ்வளவு அவசரமாகத் திரும்பினீர்கள்? நாளைக்குக் காலையில் சாவகாசமாகத் திரும்பியிருக்கக் கூடாதோ?" என்று அன்போடு விசாரித்தான்.

அவர்கள் இந்த விசாரிப்புக்கு பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். மானகவசனுக்கு முகம் சுண்டிப் போயிற்று. பேசுவதை நிறுத்திக் கொண்டான். வேற்று முகம், புது ஆட்கள் என்று வேறுபாடின்றிப் பேசிப் பழகும் அண்டராதித்தன் தம்பதிகள் அவன் நினைவில் மறுபடியும் தோன்றினார்கள். 'மனிதனுக்கு மனிதன் பேசிப் பழகிக் கொள்ளத்தானே மொழி, உணர்ச்சிகளெல்லாம் இருக்கின்றன? அதற்குக் கூடத் தயங்கும் சில பிரகிருதிகள் இப்படியும் இருக்கின்றனவே' என்று எண்ணி வியந்தான் அவன். ஒன்று அவர்கள் ஊமைகளாயிருக்க வேண்டும் அல்லது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே தெரியாதவர்களாயிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

மழையும் விடுகிறபாடாயில்லை. நேரமாகிக் கொண்டிருந்தது. அந்தப் பாழ் மண்டபத்திலேயே எல்லோரும் மூலைக்கு மூலை சுருண்டு படுத்தனர். குளிர் காய்வதற்காக மூட்டியிருந்த தீ அணைந்து மண்டபத்தில் இருள் சூழ்ந்தது. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் மானகவசன் அயர்ந்து தூங்கிவிட்டான்.

நல்ல தூக்கத்தில் யாரோ உடம்பைத் தொட்டு அமுக்குகிற மாதிரி இருந்தது. உடம்பைத் தொட்டு அமுக்கி இடுப்பைக் கட்டுவது போல் உணரவே துள்ளி எழுந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் வரவில்லை. வாய் உளறியது. தன்னை யாரோ பலமாகப் பிடித்துக் கொண்டு, வாயையும் மூடியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அடுத்த கணம் முதுகிலும், தலையிலும் பலமான அடிகள் விழுந்தன. அவனுக்குத் தன் நினைவு தவறியது. அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின்னர் பாழ்மண்டபத்தில் நடந்ததொன்றும் அவனுக்குத் தெரியாது.

பொழுது விடிந்து கதிரவன் ஒளி மேலேறிக் கதிர்கள் மண்டபத்துக்குள் விழுந்த போது வலி பொறுக்க முடியாமல் முனகிக் கொண்டே மெல்ல எழுந்திருக்க முயன்றான் அவன். எழுந்து நடக்க முடியவில்லை. மூட்டுக்கு மூட்டு வலித்தது. அந்த நேரத்தில் தெய்வம் அவனுக்கு ஓர் அருமையான உதவியைக் கொண்டு வந்து சேர்த்தது. இடுப்பிலிருந்து திருமுகமும் மண்டபத்துத் தூணில் கட்டியிருந்த குதிரையும் அவனிடமிருந்து பறிபோயின. கொற்கைத் திருவிழாவுக்குப் போயிருந்த அண்டராதித்தனும், கோதையும் அந்தப் பாதையாகத் திரும்பி வந்தார்கள். அவன் இறைந்து கூச்சலிட்டான்.

'யாரைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ, அவர்களைத் தெய்வம் நம் பக்கத்தில் துணையாகக் கொண்டு வந்து சேர்க்கின்றதென்பது எவ்வளவு பெரிய உண்மை?' என்று அவர்களை அந்தப் பாதையில் கண்டவுடனே எண்ணினான். அவன் மெய்சிலிர்த்தது. அவர்களை அங்கு கொண்டு வந்து சேர்த்த இறைவனை வாழ்த்தினான் மானகவசன்.

அந்தத் தம்பதிகள் அந்நிலையில் அவனை அங்கே கண்டு பதறிப் போனார்கள். நடந்ததையெல்லாம் அவர்களிடம் விவரமாகக் கூறினான் மானகவசன்.

"நாடு முழுவதுமே கெட்டுப் போய்க் கிடக்கிறது அப்பா! நல்லவன் வெளியில் இறங்கி நடக்கவே காலமில்லை இது!" என்று தொடங்கிக் கொற்கையில் நடந்த குழப்பத்தை அவனுக்குச் சொன்னார்கள்.

அடி, உதை பட்டதுகூட அவனை வருத்தத்துக்குள்ளாக்கவில்லை. 'முக்கியமான அரசாங்கத் திருமுகத்தைத் திருட்டுக் கொடுத்து விட்டோமே, என்ன ஆகுமோ - என்ன ஆகுமோ?' என்று எண்ணி அஞ்சினான் அவன்.

"பரவாயில்லை அப்பா? நீ என்ன செய்வாய், உன்னை முதலில் ஊருக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்" என்று கோதையை அவனருகில் துணை வைத்துவிட்டுத் தான் மட்டும் பக்கத்து ஊர் வரை நடந்து போய் ஒரு சிவிகையும் சுமக்கும் ஆட்களும் தயார் செய்து கொண்டு வந்தான் அண்டராதித்த வைணவன். சிவிகை அன்று மாலைப் பொழுது சாயும் நேரத்துக்கு அவனைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது.

6. தமையனும் தங்கையும்

தென்பாண்டி நாட்டின் வீரத் தளபதி வல்லாளதேவன் இந்தக் கதையின் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ஓய்வில்லாமல் அலைந்து கொண்டு தான் இருந்தான். அவனுக்கும் அவன் சிந்தனைக்கும் சில நாழிகைப் பொழுதாவது அமைதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். தன்னையும் தன்னுடையவற்றையும் விடத் தன் கடமைகளைப் பெரிதாகக் கருதும் அந்த உண்மை வீரனுக்கு உடன் பிறந்த தங்கையைச் சந்தித்து மனம் விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதற்குக் கூட இதுவரை ஒழியவில்லை.

இப்போது கூட அவனுக்கு ஒழியாது தான். கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போய் உடனே படை ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு அவனுக்கு அவசரக் கட்டளை இட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அவருடைய கட்டளையின் அவசரத்தை விட, அவசரமாகத் தன் தங்கை பகவதியையும், ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதனையும் சந்திக்க வேண்டியிருந்தது அவனுக்கு.

வெளிப்படையாகச் சந்திக்க முடியாத சந்திப்பு அது. மறைமுகமாகப் பயந்து பயந்து செய்கிற காரியங்களே மகாமண்டலேசுவரருடைய கவனத்துக்கு எட்டி விடுகின்றன. வெளிப்படையாகச் செய்தால் தப்ப முடியுமா? அன்றைய நிகழ்ச்சிகளிலிருந்து இடையாற்று மங்கலம் நம்பியைப் பற்றி அதிக முன்னெச்சரிக்கையும், கவனமும் வேண்டுமென்று அவன் தீர்மானத்துக்கு வந்திருந்தான்.

முதலில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனைக் கண்டு அரண்மனைத் தோட்டத்தின் அடர்த்தியான பகுதி ஒன்றுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தான். குழைக்காதன், தளபதி அரண்மனைக்கு வருவதற்கு முன் அங்கு நடந்த சில நிகழ்ச்சிகளில் தான் கண்ட சிலவற்றை விவரமாகக் குறிப்பிட்டுச் சொன்னான்.

"நீங்கள் முன்பு கோட்டாற்றிலிருந்து என்னை அனுப்பிய போது கூறியபடி கூடிய வரை மகாமண்டலேசுவரருடைய கண்ணுக்கு அகப்படாமல் இருக்க முயன்றேன். ஆனால் கடைசியில் அவர் கண்டு பிடித்து விட்டார்."

"குழைக்காதரே! நீங்கள் நினைப்பது போல் அந்த மனிதரை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது. எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களால் முடிகிறதா இல்லையா என்று சோதிப்பதற்காகவே அப்படிச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்கள் இருந்தால் இரண்டின் பார்வை ஆற்றல் தான் இருக்கும். ஆனால் அவருடைய இரண்டு கண்களுக்கு இருபது கண்களின் ஆற்றல் உண்டு. அப்படி இருந்தும் சில சமயங்கள் அவரைப் பலவீனப்படுத்தி விடுகின்றன!"

"உண்மை! கூற்றத் தலைவர்கள் கூட்டத்தின் போது அவருடைய ஆற்றலையும், பலவீனத்தையும் சேர்ந்து என்னால் காணமுடிந்தது!"

"அது இருக்கட்டும்! இப்போது நீங்கள் எப்படியாவது அந்தப்புரப் பகுதிக்குச் சென்று என்னுடைய தங்கை பகவதியை இங்கே அழைத்து வரவேண்டும்" என்றான் தளபதி.

"இப்போதிருக்கிற சூழ்நிலையில் நான் அந்தப்புரத்துக்குள் நுழைந்தால் ஒரு பெரிய கலவரமே உண்டாகிவிடும். அங்கே புவன மோகினி என்று ஒரு வண்ணமகள் என்னை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். என் தலையை அந்தப்புரத்துக்குள் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டியதில்லை" என்று தொடங்கிப் புவன மோகினியின் மூலம் மகாமண்டலேசுவரர் தன்னைப் பற்றி உளவறிந்த விவரத்தை தளபதிக்கு விளக்கிக் கூறினான் அவன்.

"அப்படியானால் பகவதியை இப்போது இங்கே வரவழைத்துச் சந்திப்பதற்கு வேறு வழி?"

தளபதியின் கேள்விக்கு வழி சொல்ல வகையறியாமல் விழித்தான் குழைக்காதன். அவர்கள் இருவரும் தோட்டத்தில் எந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்த இடமே அந்தப்புரத்துச் சுவரோரமாகத்தான் இருந்தது. மேல் மாடத்தில் தான் பகவதி, விலாசினி முதலிய பெண்கள் தங்கியிருந்தார்கள். மேன்மாடத்திலிருந்த அந்த அறை அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து நான்காள் உயரத்தில் இருந்தது. மேலே இருந்த அந்தப்புரத்து அறைகள் ஒவ்வொன்றின் நிலைக்கு மேலேயும் ஒரு சிறிய வெண்கல மணி தொங்கிக் கொண்டிருந்தது.

இருவரும் அந்த அறைகளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே என்ன விதமாகப் பகவதியைச் சந்திப்பதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

"எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன். நான் நினைக்கிறபடி நடந்தாலும் நடக்கலாம். வேறு மாதிரி ஆகிவிட்டால் ஏமாற்றம் தான்" என்று முகம் மலர்ந்து கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.

"என்ன வழி அது?" தளபதியின் வினாவில் ஆவல் துள்ளி நின்றது.

"இருங்கள், இதோ செய்து பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே தலைக்கு மேலிருந்த மாமரத்தில் கைக்கெட்டுவது போல் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்த மாவடுக்களில் நாலைந்தைப் பறித்தான்.

மேலே பார்த்து குறி வைத்து ஒவ்வொரு மாவடுவாக எறிந்தான். அவன் எறிந்த மூன்றாவது மாவடு அறையின் வாசலில் தொங்கிய மணியின் நாக்கில் பட்டு அசைந்தது. அடுத்த கணம் கணீரென்று மணியின் ஓசை ஒலித்தது.

எதை எதிர்பார்த்து அவன் அப்படிச் செய்தானோ, அது உடனே நடந்தது. அந்த மணியோசை எழுந்ததுமே, "யாரது?" என்று அதட்டிக் கேட்டுக் கொண்டே பகவதி அறைவாசலுக்கு வந்தாள். கீழே குனிந்து மாவடு எறியப்பட்ட திசையைப் பார்த்தாள். மறுகணமே அவள் கோபம் மலர்ந்த சிரிப்பாக மாறியது. கீழே அவள் தமையன் வல்லாளதேவன் மாமரத்து அடர்த்தியிலிருந்து தலை நீட்டிச் சைகை செய்து அவளைக் கூப்பிட்டான். அவள் 'வருகிறேன்' என்பதற்கு அடையாளமாகப் பதில் குறிப்புக் காட்டிவிட்டுக் கீழே இறங்கினாள்.

"நல்ல வேளை! அறைக்குள் உங்கள் தங்கையே இருந்ததனால் என் தந்திரம் பலித்தது! இல்லாவிட்டால் வம்பாகியிருக்கும்" என்றான் மகர நெடுங்குழைக்காதன்.

"குழைக்காதரே! இப்போதுதான் 'ஆபத்துதவி' என்ற உம்முடைய பெயருக்குச் சரியான செயலைச் செய்து விளக்கினீர். பிரமாதமான தந்திரம். அபூர்வமான யோசனை, அபாரமான குறி" எனப் பாராட்டினான் தளபதி வல்லாளதேவன்.

"என்ன அண்ணா இது?என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் அந்தப்புரத்துக்குள் வந்து உரிமையோடு சந்திக்கலாமே? தோட்டத்தில் நின்று இப்படியெல்லாம் தந்திரம் செய்வானேன்?" என்று கேட்டுக் கொண்டே பகவதி அங்கு வந்து சேர்ந்தாள்.

"தந்திரம் என்னுடையதல்ல, பகவதி! நம் குழைக்காதருடையது!" என்று சொல்லிச் சிரித்தான் தளபதி.

"நினைத்தேன்! அவருடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று. குறி தவறாமல் எறிகிறாரே!"

"என் குறி கூடச் சில சமயங்களில் தவறி விடுகிறது அம்மணி!" எதையோ உட்பொருளாக அடக்கி வைத்துப் பேசினான் ஆபத்துதவிகள் தலைவன். அவனுடைய அந்தச் சிலேடைப் பேச்சு தளபதி வல்லாளதேவனுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று.

"குழைக்காதரே! நீங்கள் போய் உங்கள் வேலைகளைக் கவனிக்கலாம். நானும் பகவதியும் தனிமையாகப் பேச வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கியமான செய்திகள் எவையேனும் இருந்தால் பகவதியிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். அவள் உங்களுக்குத் தெரிவிப்பாள் இப்போது நீங்கள் போகலாம்" என்று தளபதி கூறினான்.

"நல்லது, வணக்கம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன்" என்று வணங்கி புறப்பட்டான் குழைக்காதன். தோட்டத்துப் புதர்கள், பதுங்கிப் பதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு வெளியேற அவனுக்கு ஒத்துழைத்தன.

"அண்ணா! நீங்கள் அரண்மனையிலிருந்து வெளியேறிச் செல்லுவதற்கு முன் உங்களை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்று நானே நினைத்துக் கொண்டு தானிருந்தேன்" என்றாள் பகவதி.

"பகவதி! இப்போது இந்த அரண்மனையில் நிலவும் சூழ்நிலையில் அண்ணனும் தங்கையும் தனியே சந்தித்துப் பேசினால் கூட மிகப் பெரிய அரசியல் இரகசியங்களைப் பேசிக் கொள்வதாக எண்ணிக் கொள்வார்கள்."

"மற்றவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் உலகத்தில் எந்தக் காரியத்தையுமே செய்ய முடியாது. அண்ணா! நீங்கள் என்னைக் கூப்பிட்ட காரியத்தைப் பேசுங்கள். நேரம் ஆகிறது" என்று அவனைத் துரிதப்படுத்தினாள் அவன் தங்கை.

"பகவதி! சிறு வயதில் உனக்கு நான் வேடிக்கையாக ஒரு கதையை அடிக்கடி சொல்வேன், அது நினைவிருக்கிறதா?"

"ஏழை வேளான் ஒருவனுக்கு மண் சுவரின் மேல் கூரையால் வேய்ந்த குடிசை தான் வீடு. விடாத அடைமழையால் சுவர்கள் விழுந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய சமயத்தில் குடிசைக்குள் மாடு கன்று போட்டு விடுகிறது. நிறை மாதத்தோடு பிள்ளைப் பேற்றுக்குத் தயாராயிருந்த அந்த ஏழையின் மனைவிக்கு அதே சமயத்தில் இடுப்பில் வலி கண்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடுமோ என்று பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் குடிசையின் ஒரு பக்கத்து மண் சுவர் ஈரம் தாங்காமல் விழுந்து விட்டது. அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த அடிமைச் சிறுவன் ஒருவன் இறந்து போனான். வயல்கள் ஈரப்பதமாகவே இருக்கும் போதே விதை விதைத்துவிட வேண்டுமே என்று வீட்டுத் தலைவன் வயலுக்கு ஓடினான். வழியிலே அவனுக்குக் கடன் கொடுத்தவர் அவனை மறித்துக் கொண்டார். அந்தச் சமயம் பார்த்துப் பக்கத்து ஊரில் அவன் உறவினர் ஒருவர் இறந்து போனதாக இழவு ஓலை கொண்டு வந்தான் ஒருவன். என்ன செய்வதென்றே புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்த போது தள்ளமுடியாத விருந்தினர்கள் இரண்டு பேர்கள் அவன் குடிசையைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அப்போது குடிசையின் பின்புறமிருந்து அவனுடைய மூத்த புதல்வனின் அலறல் கேட்டது. அவன் ஓடிப் போய்ப் பார்த்தான். அங்கே அவன் புதல்வனைப் பாம்பு தீண்டியிருந்தது. அவன் 'கோ'வென்று கதறி அழுதான். அந்தச் சமயத்தில் ஊர்க்கணக்கர் வந்து அவன் நிலவரி செலுத்தவில்லை என்பதை நினைவுபடுத்தினார். அவனுடைய குலகுருவும் அந்த நேரம் பார்த்து அங்கே வந்து 'தட்சிணையைக் கீழே வைத்துவிட்டு மறு வேலை பார்' என்று கேட்க ஆரம்பித்தார்..."

பகவதிக்குச் சிரிப்பு பொறுக்க முடியவில்லை. "ஏதோ தலைபோகிற காரியம் என்று அவசரமாகக் கூப்பிட்டுவிட்டு எதற்கு அண்ணா இந்தக் கதையெல்லாம் அளக்கிறீர்கள்?"

"கதையில்லை! தென்பாண்டி நாட்டின் இப்போதைய சூழ்நிலை ஏறக்குறைய இதுதான். கதையில் அத்தனை துன்பங்களுக்கும் ஒரு மனிதன் இலக்கு. இங்கே ஒரு நாடு இலக்கு."

"கதையா அது? தாங்க முடியாத வறுமைத் தொல்லைகளை அனுபவித்த எவனோ ஒரு புலவன் திரித்த பொய்!"

"கதை பொய்யாகவே இருக்கட்டுமே! இப்போது நம்மைச் சுற்றி நடப்பவைகள் பொய்களல்ல. பாண்டிநாட்டுக் கதவைத் தட்டிக் கூப்பிடும் கவலைகள் கனவுகள் அல்ல!"

"அண்ணா! கதையும் எடுத்துக் காட்டும் சொல்லி உண்மைகளைப் புரியவைப்பதற்கு நான் இன்னும் சிறு குழந்தையா என்ன? சொல்ல வந்ததை நேரடியாகவே சொல்லுங்கள்!"

"பகவதி! நீ என்னுடைய தங்கை! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்!" - பொருள் புரிய நிறுத்தி இடைவெளி விட்டு ஒவ்வொரு சொல்லாகச் சொன்ன பின் புருவங்கள் ஒன்று கூடுமிடத்திற்கு மேல் உணர்ச்சி மேடாகிய அந்த அழகு நெற்றியை இமையாமல் பார்த்தான் தளபதி.

"என்ன அண்ணா, அப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் தங்கை மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?"

"நம்பிக்கைக்கு ஒன்றும் குறைவில்லை! இப்போது உன்னிடம் மனம் திறந்து உரிமையோடு பேசுகிறேன். நான் உடன் பிறந்தவன் என்ற முறையில் இதுநாள் வரை உனக்கு ஒரு குறைவும் வைக்கவில்லை. நம் அன்னையும் தந்தையும் பிரிந்த நாளிலிருந்து நீ என் கண்காண வளர்ந்திருக்கிறாய், பகவதி. என்னுடைய போர்த் தொழிலுக்குப் பயன்படும் சில வீரக் கலைகளிலிருந்து யாழ், இசை முதலிய நளினக் கலைகள் வரை கற்றுக் கொண்டிருக்கும் நீ இதுவரை அரசியல் சூழ்ச்சிக் கலைகளை அதிகம் அறிந்து கொள்ள வாய்த்ததில்லை. நானும் அதற்கு உன்னை விடவில்லை. பவழக்கனிவாயரிடம் நளினக் கலைகளைக் கற்றாய்! ஆசிரியர் பிரானிடம் இலக்கிய அறிவு பெற்றாய்! நான் இப்போது கடைசியாகக் குறிப்பிட்ட கலையை என் மூலமாக எனக்காக நீ கற்றுக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது!"

"என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள்?" என்றாள் பகவதி.

"இப்போதைக்கு அது புதிர்தான்! புதிரை விளங்கிக் கொண்டு வரத்தான் நீ உடனடியாகப் புறப்பட வேண்டும். மிகப் பெரிய அந்தரங்களெல்லாம் இந்தப் புதிருக்குள் தான் அடங்கிப் போயிருக்கின்றன!"

அந்தப் பேச்சிலிருந்து எதுவும் விளங்கிக் கொள்ள முடியாமல் குழப்பத்தோடு அண்ணன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பகவதி. அவனுடைய கண்களில் துணிவின் ஒளி, உறுதியின் சாயை இரண்டையும் அவள் கண்டாள். செய்தே தீர வேண்டிய செயல்களைப் பற்றிப் பிடிவாதமாகப் பேசும் போது அண்ணனுடைய கண்களில் அந்த ஒளியை அவள் கண்டிருக்கிறாள்.

"மென்மையான உன்னுடைய கைகளிலிருந்து வன்மையான செயல்களை எதிர்பார்க்கிறேன், பகவதி! வளை சுமக்கும் கைகளில் பொறுப்பைச் சுமத்த முடியுமா என்று தயங்குகிறேன்!"

"உங்கள் தங்கையின் கைகள் அதற்குத் தயங்கப் போவதில்லை, அண்ணா!"

"இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து வரவழைப்பதற்குத்தான் இத்தனைப் பேச்சும் பேச வேண்டியிருந்தது. இனிமேல் கவலை இல்லை." இவ்வாறு கூறிவிட்டுத் தன் தங்கைக்கு மிக அருகில் நெருங்கிக் காதோடு காதாக மெல்லிய குரலில் ஏதோ கூறத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.

அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த போதே அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளின் நிழல்கள் படிந்து மறைந்தன. நெடுநேரமாக அவள் காதருகில் அவனுடைய உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. வண்டு பூவைக் குடையும் ஓசையை விட மிக மெல்லிய ஓசையில் பேசுவதற்குத் தென்பாண்டி நாட்டுத் தளபதி எங்கே கற்றுக் கொண்டிருந்தானோ?

பகவதியின் முக பாவங்கள் விநாடிக்கு விநாடி அவன் சொற்களைப் புரிந்து கொண்டதற்கு ஏற்ப மாறுபடும் போது எத்தனை எத்தனை உணர்ச்சிக் குழப்பங்களை அந்த வனப்பு மிக்க நெற்றியில் காண முடிகிறது? பிறைச் சந்திரனைக் கவிழ்த்து வைத்தாற் போன்ற நெற்றி அது. தன் தங்கையிடம் அற்புதமான அழகும், வனப்பும் அமைந்திருப்பதாகப் பெருமைப்பட்டதைக் காட்டிலும், துணிவும் சாமர்த்தியமும் பெருக வேண்டுமென்பதற்காகத்தான் அதிகக் கவலைப் பட்டிருக்கிறான் வல்லாளதேவன். அந்தக் கவலையும் அவன் இப்போது கூறிய செயலைச் செய்ய அவள் ஒப்புக் கொண்டதால் அகன்றுவிட்டது.

எல்லாவற்றையும் அவள் காதில் இரகசியமாகக் கூறி விட்டுத் தலை நிமிர்ந்த போது, மேலேயிருந்து சற்றுப் பெரிதான மாவடு ஒன்று தளபதியின் நெற்றிப் பொட்டில் விழுந்தது. விண்ணென்று தெரித்து விழுந்த அது உண்டாக்கிய வலியில் ஒரு கணம் கண் கலங்கிவிட்டது அவனுக்கு.

"ஐயோ, அண்ணா! 'வடு'ப் பட்டுவிட்டதே?" என்று அவன் நெற்றியைத் தடவ நெருங்கினாள் பகவதி.

"அதனாலென்ன? இங்கே வடுப்பட்டால் கவலை இல்லை. நீ போகிற காரியம் வடுப்படாமல் பார்த்துக் கொள் பகவதி!" என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.

7. கடலில் மிதந்த கற்பனைகள்

அடிவானத்து விளிம்பு கடற்பரப்பைத் தொடுமிடத்தில் சிறிதாய், இன்னும் சிறிதாய், மிகச் சிறிதாய் மறையும் அந்தக் கப்பலை திடலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மதிவதனி. இன்னும் அந்தச் சங்கொலி அவளுடைய செவிகளில் புகுந்து மனத்தின் பரப்பெல்லாம் நிறைப்பது போலிருந்தது. பருகுவதற்குத் தண்ணீரே கிடைக்காத பாலை நிலத்தில் பயணம் செய்யப் போகிறவன் சேகரித்து வைத்துக் கொள்ளுகிற மாதிரி அந்த ஒலியையும், அதற்குரியவனின் அழகிய முகத்தையும் மனச் செவிகள் நிறைய, மனக் கண்கள் நிறையச் சேகரித்து வைத்துக் கொள்ள முயன்றாள் அவள். பின்னால் அவளுக்குப் பழக்கமான குரல் ஒலித்தது.

"பெண்ணே! இதென்ன? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா? விடிந்ததும் விடியாததுமாக உன்னை வீட்டில் காணவில்லையே என்று தேடிக் கொண்டு வந்தால், நீயோ மணல் மேட்டில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்!"

தன் நினைவு வரப்பெற்றவளாய்த் திரும்பிப் பார்த்தாள் அவள். மணல் மேட்டின் கீழே அவளுடைய தந்தை நின்று கொண்டிருந்தார்.

"அப்பா! அவருடைய கப்பல் புறப்பட்டுப் போய்விட்டது." எதையோ இழந்து விட்ட ஏக்கம் அவளுடைய சொற்களில் ஒலித்தது.

வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் எண்ணி, பேசி, அனுபவித்து உணர்ந்திருந்த அந்தப் பெரியவர், தம் பெண்ணின் பேதமையை எண்ணி மனத்துக்குள் இலேசாக சிரித்துக் கொண்டே சொன்னார்:

"அதைப் பார்க்கத்தான் சொல்லாமல் கொள்ளாமல் இவ்வளவு அவசரமாக எழுந்திருந்து ஓடி வந்தாயா? அங்கே உன் அத்தை உன்னைக் காணவில்லையே என்று கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறாள்."

மதிவதனி அவருடைய பேச்சைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. "அப்பா, நான் இங்கே கரையில் வந்து நின்றதும் கப்பல் மேல் தளத்திலிருந்து என்னைப் பார்த்துவிட்ட அவர் மகிழ்ச்சியோடு அந்தச் சங்கை எடுத்து ஊதினார் அப்பா!" என்று அந்த மகிழ்ச்சித் திளைப்பிலே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

"சரியம்மா!... போதும் அவருடைய பெருமை! வா, வீட்டுக்குப் போகலாம். இங்கே சிறிது தாமதித்தால் உன் அத்தையே நம் இருவரையும் தேடிக் கொண்டு வந்து விடுவாள்." மகளைக் கடிந்து கொள்பவர் போல் சினத்துடன் பேசி அழைத்துக் கொண்டு சென்றார் அவர். அந்தப் பெண்ணின் கால்கள் தரையில் நடந்தன. எண்ணங்களோ கடலில் மிதந்து சென்ற அந்தக் கப்பலோடு மிதந்து சென்றன.

வீட்டுக்குப் போனதும் அவளுடைய அத்தை வேறு அவளைக் கோபித்துக் கொண்டாள். "வயது தான் ஆகி விட்டது உனக்கு. உன் வயதுக்கு இவ்வளவு அசட்டுத்தனமும், முரட்டுத்தனமும் வேறு எந்தப் பெண்ணுக்காவது இருக்கிறதா பார். யாரோ ஊர் பேர் தெரியாதவன் கடையில் வந்து சங்கு வாங்கிக் கொண்டு போனான் என்றால் இப்படியா அவனையே நினைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்துப் போய் அலைவார்கள்! கிழக்கே ஒரு மூலை விடிவதற்குள் உனக்குக் கடற்கரையில் என்ன வேலை?"

அத்தையின் சீற்றத்துக்கு முன் தலைகுனிந்து நின்றாள் மதிவதனி. கால் கட்டை விரலால் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்ற அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. பக்கத்தில் நின்ற தந்தை அனுதாபத்தோடு அவளைச் சமாதானப்படுத்தினார்.

"அசடே! இதற்காக வருத்தப்படலாமா? அத்தை உன் நன்மைக்காகத்தான் சொல்லுகிறாள்! எவரோ மூன்றாவது மனிதனை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் அவர் நம்மவர் ஆகி விடுவாரா? நீதான் இப்படி நினைத்து நினைத்துக் குமைகிறாய்! இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை அலட்சியமாகத் தூக்கிக் கொடுத்து ஒரு சங்கை வாங்கிக் கொண்டு போகும் செல்வச் சீமான் அந்த இளைஞன். நேற்றிரவு நீ அவன் உயிரையே காப்பாற்றியிருக்கிறாய்! ஆனாலும் என்ன? இந்தத் தீவு பார்வையிலிருந்து மறைந்ததுமே உன்னையும் என்னையும் இந்தத் தீவையும் மறந்து விடப் போகிறான் அவன். செல்வர்களுக்கு நினைவு வைத்துக் கொள்வதற்கு நேரம் ஏது அம்மா!"

'அப்பா! நீங்கள் நினைப்பது தவறு! அவர் என்னையும் இந்தத் தீவையும் ஒரு போதும் மறக்க மாட்டார்' என்று உடனே பதில் சொல்லிவிடத் துடித்தது அவள் நாக்கு. ஆனால் சொல்லவில்லை. தந்தையின் மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. காற்றில் மேலும் கீழுமாக ஆடும் இரண்டு மாதுளை மொட்டுக்களைப் போல் துடித்தன அவள் இதழ்கள். வலம்புரிச் சங்கோடு தன் நெஞ்சையும் கொண்டு போனவனை அவ்வளவு சுலபமாக - அவர் மதிப்பிட்டதை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அடிபட்ட புலி சீறுவது போல் தந்தையை எதிர்த்துச் சீறின அவள் சொற்கள். "'உங்களையும் இந்தத் தீவையும் எந்நாளும் மறக்க மாட்டேன்' என்று நேற்று அவர் நமக்கு நன்றி கூறும் போது நீங்களும் தானே உடன் இருந்தீர்கள் அப்பா?"

பெண்ணின் சினம் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கியது.

"பேதைப் பெண்ணே! மனிதர்கள் சொல்லுகிற வார்த்தைகள் எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மையாக எடுத்துக் கொண்டு ஏமாறக் கூடாது! செல்வந்தர்கள் எதையுமே சீக்கிரமாக மறந்து விடுவார்கள். உலகத்தில் தாங்கள் செல்வர்களாக இருப்பதற்குக் காரணமாக எங்கோ சிலர் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதையே அவர்கள் மறந்து விடும் போது உன்னையும் என்னையுமா நினைத்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?"

"இல்லை! இல்லவே இல்லை. அவர், என்னை மறக்க மாட்டார்" - குழந்தை போல் முரண்டு பிடித்துப் பேசினாள் அவள். என்னவோ தெரியவில்லை, தன்னடக்கத்தையும் மீறிப் பேசும் ஒரு துணிவு, வெறி அவளுக்குள் அந்தச் சமயத்தில் உண்டாகியிருந்தது.

"மதிவதனி! 'அனிச்சம்' என்று ஒரு வகைப் பூ இருக்கிறது. அது மோந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாடிப் போய்விடும். செல்வந்தர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் உறுதிமொழிகளும் அப்படித்தான். அவற்றை உண்மை என்று நம்ப முயலும் போதே அவை பொய்யாகி வாடிவிடும். செல்வந்தனான ஆண்மகன் ஒருவனின் வார்த்தையை நம்பிக் கொண்டு ஏங்கிக் கால வெள்ளத்தில் கரைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். பெயர் சகுந்தலை. அந்த ஆண் மகனோ அவளை மறந்தே போனான். அந்தப் பெண்ணின் ஏக்கத்தை உலகத்துக்கு எடுத்துக் கூற ஒரு மகாகவி தேவையாயிருந்தது. உனக்குத்தான் தெரியுமே, இந்தக் கதை?" - பெரியவர் மறுபடியும் அவளிடம் விவாதித்தார்.

"தெரியாது, அப்பா! தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை." அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பும் எல்லைக்குப் போய்விட்டது அவள் குரல்.

"அண்ணா! இதென்ன? நீங்களும் அவளுக்குச் சரியாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றால் என்ன ஆவது?" என்று மதிவதனியின் அத்தை கூப்பாடு போட்ட பின்பே அவரும் தம்முடைய பேச்சை நிறுத்தினார்.

முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள் மதிவதனி. அந்தப் பெரியவர்களுக்கு அவளை எப்படித் திருப்தி செய்வதென்றே திகைப்பாகிவிட்டது. நயமாகவும், பயமாகவும் அவள் அழுகையைத் தணித்து வழிக்குக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அவள் ஒரே குலக்கொழுந்து, செல்லப் பெண். அந்தப் பெரியவர் வாழ்க்கையில் பல துயர அனுபவங்களைக் கண்டவர். இதோ வளர்ந்து பெரியவளாகி மதிவதனி என்ற பெயருடன் நிற்கும் இப்பெண், சிறு குழந்தையாய் இருந்த போது தாய்மைப் பேணுதல் மட்டும் தான் இல்லாமற் போய்விட்டது. ஏறக்குறைய அதே சமயத்தில் பக்கத்துத் தீவில் ஒரு பரதனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்த அவருடைய இளைய சகோதரி அமங்கலியாக அண்ணனைத் தேடிக் கொண்டு பிறந்த வீடு வந்து சேர்ந்தாள். இந்த இரண்டு துன்பங்களும் அவருக்கு வாழ்க்கையிலேயே பெரிய அதிர்ச்சிகள்.

தங்கை வீட்டோடு இருந்து அவருடைய பெண் குழந்தையைப் பேணி வளர்த்து விட்டாள். அத்தையின் ஆதரவில் மதிவதனி வளர்ந்து உருவாகி விட்டாள். கண்டிப்பும், கண்காணிப்பும் அதிகமாக இருந்தாலும், அவளுடைய கண் கலங்கினால் மட்டும் அவர்களால் பொறுக்க முடியாது.

"மதிவதனி! உனக்கு நல்ல கைராசி இருக்கிறது. நீ போய் உட்கார்ந்து வியாபாரம் செய்தால் கடையிலும் நன்றாக விலை போகிறது. இன்றும் நீயே கடையில் போய் இரு. நான் வேறு வேலையாகக் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்." பெண்ணின் அழுகையையும், கோபத்தையும் தணித்து ஒரு வழியாக அவளைத் தமது கடையில் வாணிகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு அனுப்பி வைத்தார் அந்தப் பெரியவர்.

கடையில் போய் உட்கார்ந்த பின்பும் அவளுடைய நினைவுகள் எல்லையற்ற கடலில் தான் இருந்தன.

மதிவதனியின் சிந்தனைகள் இளவரசன் இராசசிம்மனைச் சுற்றியே வட்டமிட்டன. 'இந்த நேரத்துக்கு அவருடைய கப்பல் எவ்வளவு தூரம் போய் இருக்கும்? எத்தனை தடவை அவர் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்? எத்தனை தடவையாவது? மறந்தால் தானே பல தடவைகள் நினைக்க முடியும்? அவர் தான் என்னை மறந்திருக்கவே மாட்டாரே! அவராக நினைக்காவிட்டாலும் அந்தச் சங்கு அவர் கையிலிருந்து நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும்!' தும்மல் வரும் போதெல்லாம் அவர் தன்னை நினைப்பதாகக் கற்பனை செய்து கொண்டாள் அவள். அத்தையும், தந்தையும் அன்று காலை சொல்லியது போல் அவர் தன்னை உடனே மறந்து விடுவாரென்பதை அவளால் நம்பவே முடியவில்லை! கடலுக்கு அப்பாலிருக்கும் உலகத்தை அறியாத அந்தப் அப்பாவிப் பெண்ணின் மனத்தில் அசைக்க முடியாததொரு நம்பிக்கையை, சிதைக்க முடியாததொரு கனவை வேரூன்றச் செய்து விட்டுப் போய்விட்டான் முதல் நாள் சங்கு வாங்க வந்த அந்த இளைஞன். அவன் ஒருவனுக்காகவே தன் உள்ளமும், உணர்வும் தோற்றுத் தொண்டு பட வேண்டுமென்று தன்னைக் காக்க வைத்துக் கொண்டிருந்தது போல் அவளுக்குத் தோன்றியது. கால ஓட்டத்தில் இறுதிப் பேருழிவரை கழிந்தாலும் அவனை மறுபடியும் அங்கே காணாமல் தன் கன்னிமை கழியாது போல் நினைவு குமுறிற்று அவளுக்கு. 'நீ அவனைக் காணலாம்! பன்முறை காணலாம்... பிறவி, பிறவியாகத் தொடர்ந்து விலாசம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் உயிர்களின் வினைப் பிணிப்புப் போல் விளக்கிச் சொல்ல முடியாததோர் பிணைப்பு உங்களுக்கிடையே இருக்கலாம். இருக்க முடியும்' என்பது போலத் தற்செயலான ஒரு தெம்பு அவள் நெஞ்சில் நிறைந்து கொண்டிருந்தது. அவநம்பிக்கையின் தளர்ச்சியை மறைக்க அவளாக உண்டாக்கிக் கொண்ட நினைவன்று அது. புனல் ஓடும் வழியில் புல் சாய்ந்தாற் போலவும் நீர் வழி மிதவைப் போலவும், துளையிட்ட காசுகள் கயிற்றில் கோவை பெறல் போலவும், தற்செயலான ஒரு தவிர்க்க முடியாத நினைவு என்று அதைக் கூறவேண்டும்.

வட கடலில் இட்ட நுகத்தடி ஒன்று பல்லாண்டுக் காலமாகத் தள்ளுண்டு மிதந்து மிதந்து தென்கடலில் இட்ட துளையுள்ள சுழி ஒன்றில் வந்து பொருந்திக் கொள்வது மாதிரிப் பொருந்திய நினைவு அது.

ஒவ்வொரு நாளும் செம்பவழத்தீவின் கடைவீதியில் கலகலப்புக்கு குறைவே இருக்காது! அன்றும் அவளுடைய கடைக்கு யார் யாரோ வந்தார்கள்! சங்கு வாங்கினார்கள். முத்து, பவழம் வாங்கினார்கள். வருபவர்களுக்கு விற்பதற்காகச் சங்கை எடுத்துக் கொடுக்கும் போது எல்லாம் சங்கோடு சேர்த்துப் பிடித்துக் கொண்ட அந்த ஆண்மகனின் கைகள் நினைவுக்கு வரும். உச்சிமரக் கிளையில் நின்று கொண்டு தன் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி கூறி அவளுடைய வளைக்கரங்களைப் பற்றிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய காட்சி நினைவுக்கு வரும். அந்த நினைவுகளெல்லாம் வரும் போது மதிவதனி தன்னை மறந்து தான் இருக்கும் கடையையும், கடையிலுள்ள பொருள்களையும் மறந்து எங்கோ போய் மீள்வாள்.

நேற்றுக் காலை வரை தன்னையும், தன்னுடையவர்களையும் தன் சூழ்நிலையையும் பற்றித் தான் அவளுக்கு நினைக்கத் தெரிந்திருந்தது. இப்போதோ, நினைப்பதற்கும் நினைவுகளை ஆளுவதற்கும் வேறு ஒரு புதியவன் கிடைத்துவிட்டான். செம்மண் நிலத்தில் மழை பெய்த பின் நீருக்குத் தன் நிறம் ஏது? தன் சுவை ஏது? தன் மணம் ஏது?

மாலையில் அவளுடைய தந்தை கடைக்கு வந்துவிட்டார். "பெண்ணே! கடையை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய அத்தை உன்னை வீட்டுக்கு வரச்சொன்னாள், நீ போ" என்று அவளை வீட்டுக்கு அனுப்பினார். வீட்டுக்குச் செல்வதற்காக அவள் வீதியில் இறங்கி நடந்து கொண்டிருந்த போது அவளுக்குச் சிறிது தொலைவு முன்னால் நடந்து கொண்டிருந்த யாரோ இரண்டு மூன்று பேருடைய பேச்சு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. வேகமாக நடந்து அவர்களைக் கடந்து முன்னே சென்று விடாமல் அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டே பின்பற்றினாள் அவள்.

"அடே! உன்னைப் போல் பெரிய முட்டாள் உலகத்திலேயே இருக்க முடியாதடா? ஆள் தானாக வலுவில் தேடிக் கொண்டு வந்து நிற்பது போல் நின்றான். நீ வம்பு பேசி நேரத்தைக் கடத்தியிருக்காவிட்டால் உடனே அங்கேயே ஆளைத் தீர்த்திருக்கலாம்."

"போடா மடையா! நாம் தீர்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது அவன் தான் உயிர் தப்பினால் போதுமென்று ஓட்டமெடுத்து விட்டானே?"

"நாமும் துரத்திக் கொண்டு தானே போனோம்! ஓடிக் கொண்டிருந்தவன் திடீரென்று மாயமாக மறைந்து விட்டானே? நாம் என்ன செய்யலாம்? பக்கத்துப் புதர்களிலெல்லாம் துருவிப் பார்த்தும் அகப்படவில்லையே?"

"கடலில் குதித்திருப்பானென்று எனக்குத் தோன்றுகிறதடா!"

"எப்படியோ தப்பிவிட்டானே? வேறோருவர் காணாமல் உலாவும் சித்து வித்தை - மாய மந்திரம், வசியம் ஏதாவது அவன் கையிலிருந்த அந்தச் சங்கில் இருந்திருக்குமோ என்னவோ?"

"மாயமாவது, வசியமாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. கடலில் தான் குதித்திருப்பான். அப்படியில்லையானால் இன்று காலையில் விடிந்ததிலிருந்து இவ்வளவு நேரமாக இந்தத் தீவு முழுவதும் சுற்றி அலைந்தும் எங்கேயாவது ஓரிடத்தில் நம் கண்ணில் அகப்படாமல் போவானா?"

"நாகைப்பட்டினத்தில் போய் இறங்கியதும் நம்மை அனுப்பியவர்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்! இல்லையானால் நாம் செய்யாது போன செயலை நமக்கே செய்து விடுவார்களே!"

கடைசியாகப் பேசியவனுடைய குரலில் பயம் மிதந்தது. தெருக்கோடி வரை வீதியில் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருக்கும் மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் இரைந்து பேசிக் கொண்டு நடந்தார்கள் அந்த மூவரும். மதிவதனி தற்செயலாகத் தெருவில் நடந்து செல்பவள் போல் கேட்டுக் கொண்டே சென்றாள். அந்த மூன்று பேரும் ஒரே மாதிரிச் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தனர். பார்ப்பதற்கு முரடர்களாகத் தோன்றினர். அவர்கள் பேச்சைக் கேட்டு எந்தச் சந்தேகத்தோடு அவள் பின் தொடர்ந்தாளோ அது சரியாக இருந்தது. நேற்றிரவு கடற்கரையில் அந்த இளைஞனை அவர்கள் துரத்தும் போதும், அவன் வலை மூலம் தன்னால் மரக்கிளைக்குத் தூக்கப்பட்ட பின் தாழம் புதரில் தேடிய போதும், அந்த முரடர்களுடைய உருவத்தைச் சரியாகக் கொண்டு நினைவு வைத்துக் கொள்ள அவகாசமில்லை அவளுக்கு. இப்போது அவர்களைக் காணும் போது அவளுக்கே அச்சமாக இருந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அனுமானித்துக் கொண்ட உண்மையால் கொலை செய்ய வேண்டுமென்றே அவர்களை யாரோ தூண்டிவிட்டு அனுப்பியிருக்கும் விவரமும் அவளுக்குப் புரிந்தது. வீட்டுக்குப் போவதை மறந்து மேலும் பின் தொடர்ந்தாள் அவள். அவர்கள் உரையாடல் மேலும் வளர்ந்தது.

"ஈழத்தில் போய்ச் செய்ய வேண்டிய கொலையை இடை வழியிலேயே செய்வதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது, தவற விட்டுவிட்டோம்."

"கொல்லாவிட்டால் என்ன? அவன் மட்டும் நமக்குப் பயந்து ஓடிக் கடலில் குதித்திருந்தால் கொன்றது மாதிரிதான். இந்தப் பக்கத்து கடல் ஓரங்களில் முதலைகளின் புழக்கம் அதிகம். அதனால் தான் எங்கு பார்த்தாலும் கரையோரங்களில் இரும்பு வலைகள் விரித்திருக்கிறார்கள். அவன் கடலில் குதித்தது மெய்யானால் நாம் செய்ய வேண்டிய காரியத்தை முதலைகள் செய்திருக்கும்."

மதிவதனி இதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

"நம் கதைதான் இப்படி ஆயிற்றென்றால் நாம் விழிஞத்தில் இறக்கி விட்டு வந்த அந்த மூன்று தோழர்களும் என்ன செய்திருக்கிறார்களோ?"

"என்ன செய்தால் நமக்கென்ன? நாம் திரும்பிவிட வேண்டியதுதான். நமக்கு இனி வேலை இல்லை."

வீதியின் ஆரவாரம் குறைந்து கடற்கரை தொடங்கும் திருப்பத்தில் அவர்கள் திரும்பிவிட்டனர். மதிவதனி சிறிது பின் தங்கினாள். அதுவரை தெருவில் ஆள் நாமாட்டமுள்ள கலகலப்பான பகுதியில் அவர்கள் சென்றதால் ஒட்டுக் கேட்டுக் கொண்டே பக்கத்தில் ஒட்டி நடக்க வசதியாக இருந்தது. இனி அப்படி முடியாது. ஆகவே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.

பொழுது மறையும் நேரத்துக்குத் தான் வலை விரிக்கும் பகுதியை ஒட்டியிருந்த கடற்கரைக்கு அவள் சென்ற போது கடல் திருப்பத்தில் புலிச் சின்னமும், பனைமரச் சின்னமும் உள்ள கொடி உச்சியில் அசைய அந்தக் கப்பல் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் மேல் தளத்தில் அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன.

'ஐயோ! கடலில் எங்கேயாவது அவருடைய கப்பலும் இதுவும் சந்தித்துக் கொண்டால்?' பேதமையான இந்தக் கற்பனை மதிவதனிக்குத் தோன்றிய போது அவள் உடல் நடுங்கியது. அவளுடைய கற்பனைகளோ கையில் சங்கோடு நிற்கும் அவனைச் சுற்றி அவனுடைய கப்பல் போகும் கடலில் மிதந்தன.

8. முடியாக் கனவின் முடிவினிலே...

நான்கு புறமும் திக்குத் திகாந்தரங்களெல்லாம் ஒரே நீல நெடு நீர்ப் பரப்பு. யாரோ சொல்லித் தூண்டி அனுப்புவது போல் அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாய் நிரவி மேலெழுந்து நிமிர்ந்து வரும் அலைகளின் ஆனந்தக் காட்சி. சுழித்து ஓலமிடும் காற்றுக்கும், அலைகளின் ஆர்ப்புக்கும் அஞ்சாமல் அந்தக் கப்பல் சென்று கொண்டே இருந்தது.

"இளவரசே! சோர்ந்து போய்க் காணப்படுகிறீர்களே! மிகவும் களைப்பாக இருந்தால் படுத்துக் கொள்ளலாமே!" என்றார் சக்கசேனாபதி. இராசசிம்மன் உண்மையில் சோர்ந்து தான் போயிருந்தான். அதிக நேரக் கடற் பயணத்தின் அலுப்பு அது.

கண்கள் சிவந்திருந்தன. உடல் நெருப்பாய்க் கொதித்தது. தலை கனத்து வலிப்பது போலிருந்தது. கீழ்த்தளத்தில் ஒரு மரக் கம்பத்தின் அடியில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தான் இராசசிம்மன். அந்த நிலையில் ஒற்றை நாடியான அவன் உடலையும் முகத்தையும் பார்த்தால் குளத்திலிருந்து தண்டோடு வெளியில் பறித்து எறிந்த தாமரை போலத் தோன்றியது. அந்த வாட்டத்தைக் கண்டு சக்கசேனாபதி மனத்தில் வேறு விதமாக நினைத்துப் பயந்தார். 'கடற் காய்ச்சல் மாதிரி ஏதாவது வருவதற்கு முன்னறிவிப்புதான் அந்தச் சோர்வோ?' என்று தோன்றியது அவருக்கு.

கப்பலுக்குள் பொருள்கள் வைத்திருந்த பகுதிக்குப் போய் மெத்தென்றிருக்கும் கனமான விரிப்பு ஒன்றையும் சாய்ந்து கொள்வதற்கு வசதியான தலையணைகளையும் எடுத்துக் கொண்டு வந்தார். தளத்தில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து விரிப்பை விரித்தார். இராசசிம்மனை எழுந்திருக்கச் செய்து கைத்தாங்கலாக நடத்தி அழைத்துக் கொண்டு போய்ப் படுக்க வைத்தார். கையிலிருந்த வலம்புரிச் சங்கையும் படுக்கையிலேயே பக்கத்தில் வைத்துக் கொண்டான் அவன். அந்தச் செயலைப் பார்த்த போது சக்கசேனாபதி மனத்துக்குள் சிரித்துக் கொண்டார். வீரமும், சூழ்ச்சியும் துணைகொண்டு ஒரு நாட்டின் அரியணையில் வீற்றிருக்க வேண்டிய அரச குமாரனுக்கு இவ்வளவு குழந்தை மனமா? தனது விளையாட்டுப் பொருளைத் தான் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கும் சிறு பிள்ளையைப் போன்றல்லவா இருக்கிறது இது?' - அவர் நினைத்தார்.

"இந்த சங்கு எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டுமா? கப்பல் ஆடும் போது உருண்டு எங்கேயாவது போய்விடுமே. நான் இதை உள்ளே கொண்டு போய் வைத்து விடுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே குனிந்து அதைக் கையில் எடுக்க முயன்றார் அவர்.

"வேண்டாம்! அது இங்கேயே இருக்கட்டும்!" படுத்திருந்தபடியே அவருடைய கைகளை மறித்துத் தடுத்து விட்டான் அவன்.

"சரி! தூங்குங்கள்" - இப்படிச் சொல்லிவிட்டு நடந்தவர் எதையோ நினைத்துக் கொண்டவர் போல் மறுபடியும் அவனருகே வந்து முழங்கால்களை மடித்து மண்டியிட்டு அமர்ந்தார். இளவரசனின் மார்பை மூடியிருந்த பட்டு அங்கியை விலக்கி வலது கையால் தொட்டுப் பார்த்தார். பின்பு நெற்றியிலும் கையை வைத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் கவலை வந்து குடிபுகுந்தது.

"கண்கள் எரிச்சலாக இருக்கின்றதா உங்களுக்கு?"

'ஆம்' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் இராசசிம்மன்.

"நீங்கள் கவனமாயிருக்க வேண்டும்! கடற்காய்ச்சலை இழுத்து விட்டுக் கொண்டு தொல்லைப்படக் கூடாது." அவர் எச்சரிக்கை செய்து விட்டுப் போனார். நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. 'தலைமுறை தலைமுறையாக உரிமை கொண்டாட வேண்டிய முடியையும் வாளையும் சிம்மாசனத்தையும் கூட இப்படிப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாதுக்காக்கத் தெரியவில்லை. கப்பலில் ஒரு மூலையிலுள்ள அறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றன அவை. ஏதோ ஒரு தீவில் எவளோ ஒரு பெண்ணிடம் விலைக்கு வாங்கிய இந்தச் சங்குக்கு இவ்வளவு யோகம், புதுப் பொருள் மோகம்.

'ஊம்! யாரை நொந்து கொள்வது? உலகத்தில் பெண் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளுக்கும் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது' என்று தளத்தில் நடந்து கொண்டே முணுமுணுத்தது அவருடைய வாய்.

உடல் தளர்ந்து படுத்துக் கொண்டிருந்த இராசசிம்மனுக்கு கண் இமைகள் சொருகி விழிகள் மேற் கவிந்தன. உடலின் அனுபவங்களுக்கும், உள்ளத்துக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கும் போலும். காலையில் செம்பவழத் தீவிலிருந்து புறப்படுகிறவரை உற்சாகமாக இருந்த அவன் மனமும் இப்போது தளர்ந்திருந்தது. தன் செயல்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பற்றியெல்லாம் கற்பனை செய்து பார்த்தது அவன் உள்ளம். கடுங்குளிர் காலத்தில் வெந்நீருக்குள் உடலை முக்கிக் கொண்டால் இதமாக இருக்குமே! அதுபோல் படுக்கையில் படுத்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு நினைவுகளை எங்கெங்கோ படரவிடுவது சுகமாக இருந்தது அவனுக்கு.

ஒவ்வொருவர் முகமாக, ஒவ்வோர் இடமாக, அவன் முன் தோன்றியது. நினைவு நழுவித் துயில் தழுவும் ஓய்ந்த நிலை. காற்று மண்டலத்தின் எட்ட முடியாத உயரத்துக்கு உடலின் கனம் குறைந்து நுண்ணிய உணர்வுகளே உடலாகி மெல்லப் பறப்பது போன்ற தன் வசமற்றதோர் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது மனம்.

மலையுச்சியும், வான்முகடும், கடல் ஆழமும், நிலப்பரப்பும், இவையனைத்தின் பெருமையும், கம்பீரமும் ஒன்றாய்ச் சமைந்து ஒரு முகமாக மாறி அவன் கண்களுக்கு அருகில் நெருங்கி வருகிறது. பயந்து போய் அவன் கண்களை இறுக்கி மூடிக் கொள்கிறான்.

'இராசசிம்மா! நீ அசட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டாய். என்னென்னவோ பெரிய எண்ணங்களை எண்ணிக் கொண்டு உன்னை வரவழைத்து இடையாற்று மங்கலத்தில் இரகசியமாகத் தங்க வைத்தேன். நான் எதை எதையே திட்டமிட்டுக் கொண்டு செய்தேன். நீயும் எதை எதையோ திட்டமிட்டுக் கொண்டு தான் என்னிடம் வந்து தங்கினாய் என்பது இப்போது புரிகிறது. என்ன செய்யலாம்? எப்படி நடக்குமோ, அப்படி நடத்திக் கொடுப்பதற்கு விதிக்குச் சிறிதும் சம்மதமில்லை."

பெரிய கண்டாமணியின் நாக்கைக் கையின் வலிமை கொண்ட மட்டும் இழுத்து விட்டு விட்டு அடிப்பது போல் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அறையாக அவன் கன்னத்தில் மோதிவிட்டுச் செவிக்குள் புகுந்தது. பயந்து கொண்டே மெல்லக் கண்ணைத் திறக்க முயல்கிறான் அவன். ஆனால் கண்ணைத் திறப்பதற்கு முன்பே மகாமண்டலேசுவரரின் முகம் கண்ணுக்குள்ளேயே புகுந்து வந்து தெரிவதுபோல் அவனுக்குப் புலனாகிறது.

மறுபடியும் சில கணங்கள் காற்று மண்டலத்தில் பறப்பது போல் ஒரு பரவசம் ஏற்பட்டது.

அந்தப் பரவசத்தைக் கலைத்துக் கொண்டு, 'குழந்தாய்!' என்று ஒரு குரல் உலகத்துக் கருணையையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு ஒலித்தது. இராசசிம்மன் தன்னைப் பெற்றெடுத்த அன்னையின் முகத்தைக் கண்டான்; நெஞ்சை நெகிழ்த்தது, 'குழந்தாய்' என்ற அந்தக் குரல். உலகில் தாயின் குரலைத் தவிர வேறு எந்தக் குரலும் ஏற்படுத்த முடியாத நெகிழ்ச்சி அது.

'செல்வா!' இத்தனை வயதும் பொறுப்பும் ஏற்பட்ட பின்பும் உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லையே, அப்பா! யாரிடம் விளையாடலாம், யாரை ஏமாற்றலாம் என்று கூடவா உனக்குத் தெரியாமற் போய்விட்டது? மகாமண்டலேசுவரர் எவ்வளவு பெரியவர்? நம் நலனிலும் நாட்டு நலனிலும் எவ்வளவு அக்கறையுள்ளவர்? அவர் உனக்குக் கெடுதல் செய்ய முற்படுவாரா? அவரைக் கூட நம்பாமல் இப்படி நடந்து கொண்டு விட்டாயே நீ? இடையாற்று மங்கலத்தில் வந்து மறைந்து கொண்டிருந்த போது உன் தாயைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு உன் மனத்தில் ஒரு தரம் கூட ஏற்படவேயில்லையா குழந்தாய்? நீ வந்து பார்க்க வேண்டுமென்று உன் மனத்தில் ஒரு முறையாவது நினைத்திருந்தாலே போதும். அதுவே என் தாய்மைக்கு வெற்றிதான். அரியணை ஏறி அரசாண்டு வீரச் செயல்கள் புரிந்து தென்பாண்டி நாட்டு மக்கள் மனங்களையெல்லாம் கவரவேண்டிய நீ அந்த அரியணையையும் அரசுரிமைப் பொருள்களையுமே கவர்ந்துகொண்டு போய்விட்டாயே! யாருக்கும் தெரியாமல் இப்படிக் கவர்ந்து கொண்டு கள்வனைப் போல் போவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அப்பா? ஆற்றங்கரை மரம் போல் செழித்துக் கொழித்துப் பெரு வாழ்வு வாழ்ந்த உன் தந்தையைப் போல் தென்பாண்டி நாட்டை ஆளும் வீரம், கடகம் செறிந்த உன் கைகளில் இருக்குமென்றுதான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்! நீ என்ன செய்யப் போகிறாயோ?' - அந்தக் குரல் ஒலி நின்று போயிற்று.

'ஐயோ, அம்மா!' என்று அலறி விட வேண்டும் போலிருந்தது குமார பாண்டியனுக்கும். ஆனால் அப்படி அலற முடியாமலும் அழ முடியாமலும் ஏதோ ஓர் உணர்ச்சி அவன் வாயைக் கட்டி விட்டது போலிருந்தது. வாயிருந்தும் நாவிருந்தும், பேசத் தெரிந்தும், அவன் ஊமையானான்.

'நீங்கள் மிகவும் பொல்லாதவர்! உங்களுக்கு இரக்கமே கிடையாது. கல்நெஞ்சு உடையவர்' - முகத்திலும் கண்களிலும் பொய்க் கோபம் துடிக்கக் குழல்வாய்மொழி அவன் முன் தோன்றினாள்.

'குழல்வாய்மொழி! நீ என்னை மன்னித்துவிடு. நான் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன்' என்று எதையோ சொல்வதற்காக அவன் வாயைத் திறந்தான்.

ஆனால் அந்தப் பெண்ணின் பேச்சு அவனை வாயைத் திறக்கவே விடவில்லை. ஆத்திரமடைந்து கூப்பாடு போட்டாள் அவள். 'நீங்கள் பேசாதீர்கள்! போதும், உங்கள் பேச்சு. பேசிப் பேசி என்னை ஏமாற்றினீர்கள். அத்தனையும் வெளிவேடம். உடலுக்கு வேடம் போட்டுக் கொள்ளத்தான் உங்களுக்குத் தெரியுமென்று நினைத்திருந்தேன். நீங்களோ மனத்தில், நினைவில், அன்பில், பேச்சில், எல்லாவற்றிலும் வெளிவேடம் போடுகிறீர்கள். நீங்கள் பெரிய கள்வர், மிகப் பெரிய கள்வர். உலகத்துக் களவர்களுக்கெல்லாம் பொன்னையும், பொருளையும் தான் திருடத் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு அதோடு மனத்தையும் திருடி ஏமாற்றிவிட்டுப் போகத் தெரிகிறது. ஐயா இளவரசே! நீங்கள் கெட்டிக் காரர் என்று உங்கள் மனத்தில் எண்ணமோ?'

படபடப்பாகப் பேச்சைக் கொட்டிவிட்டு மறைந்து விட்டது இடையாற்று மங்கலத்து இளங்குமரியின் மதிமுகம். அப்புறம் சமீபத்தில் அவன் சந்தித்த, சந்திக்காத, யார் யாருடைய முகங்களோ, எந்த எந்த இடங்களோ, அவன் கண்முன் தெரிந்து மறைந்தன. நாராயணன் சேந்தன், தளபதி வல்லாளதேவன், பகவதி, விலாசினி, ஆசிரியர்பிரான், பவழக்கனிவாயர், இடையாற்று மங்கலத்துப் படகோட்டி, பாண்டிநாட்டுக் கூற்றத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவர் முகமும் அவன் பார்வைக்கு முன்னால் தோன்றி மறைந்து ஏசி இரைந்து, சினந்து பேசுவது போல் தோன்றின. கோட்டை, அரண்மனை, இடையாற்றுமங்கலம், பறளியாறு, வசந்த மண்டபம், குமரிக் கோயில், விழிஞம், சுசீந்திரம், மின்னல் மின்னலாக, ஒளிவட்டம் ஒளிவட்டமாக, அந்த இடங்கள் அவன் உணர்வுக்குப் புலனாகி மறைந்தன.

எல்லாவற்றுக்கும் இறுதியில் கடல் முடிவற்றுத் தெரிந்த நீர்ப் பிரளயத்தின் மேல் சக்கசேனாபதி அருகில் துணை நின்று, ஒரு கப்பலில் அவனை எங்கே அழைத்துக் கொண்டு போகிறார். செம்பவழத் தீவு, கடைவீதி, மதிவதனி, வலம்புரிச் சங்கு, உயிருக்கு நேர்ந்த ஆபத்து, முதலை வலையில் சுருண்டு தப்பியது - நினைவுகள் - முகை பிறழாமல் ஒவ்வொன்றாகத் தொடருகின்றன.

சிரித்துக் கொண்டே மதிவதனி அவனுக்கு முன் தோன்றுகிறாள். அவன் ஆவலோடு எழுந்து ஓடிப் போய் அவள் கொடி உடலைத் தழுவிக் கொள்கிறான். அடடா! அந்த இன்ப அரவணைப்பில் தான் என்ன சுகம்? எலும்பும் தோலும் நரம்பும் இணைந்த மனிதப் பெண்ணின் உடல் போலவா இருக்கிறது அது? மலர்களின் மென்மையும், அமுதத்தின் இனிமையும், மின்னலின் ஒளியும் கலந்து கவின் பெற்று இளமை ரசம் பூசிய ஒரு கந்தர்வச் சிலை அவள் உடல்! அவன் தழுவலில் கண்ணொடு கண்ணினை கலப்புற்று நிற்கும் அவள் நாணிக் கண் புதைத்துச் சிரிக்கிறாள். வலது இதழ் முடியுமிடத்தில் சிரிப்பு சுழித்துக் குழியும் சமயத்தில் தன் கையால் குறும்புத்தனமாகக் கிள்ளுகிறான் அவன்.

பொய்க்காக வலிப்பது போல நடிக்கிறாள் அவள். அந்த இனிய நிலை முடிவற்றுத் தடையற்று வளர்ந்து தொடராய் நீண்டு கொண்டே போகிறது.

அப்போது இடையாற்று மங்கலம் நம்பி ஓடி வந்து, 'நீ ஓர் அசடன்?' என்று கூச்சலிடுகிறார். அவனுடைய அன்னை ஓடி வந்து, 'உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை' என்கிறார். குழல்வாய்மொழி ஓடிவந்து, 'நீங்கள் பொல்லாதவர்' என்று பொறாமையோடு கத்துகிறாள். சக்கசேனாபதி சிரித்துக் கொண்டே 'நீங்கள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறீர்களே?' என்று குற்றம் சுமத்துகிறார். அத்தனை குரல்களும் மண்டையைப் பிளப்பது போல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கின்றன. அவன் பயந்து போய் மதிவதனியை இன்னும் இறுக்கித் தழுவிக் கொள்கிறான்.

'ஐயோ! இதென்ன உங்கள் உடல் இப்படி அனலாய்ச் சுடுகிறதே?' என்று பதறிப் போய்ச் சொல்கிறாள் அவள். இராசசிம்மனின் உடல் வெடவெடவென்று நடுங்கியது. 'பெண்ணே! இந்தக் கனவைத் தீர்க்கும் மருந்து நீதான்' என்று அவளைத் தழுவிய கைகளை எடுக்காமலே சொல்லுகிறான் அவன். திடீரென்று யாரோ கைகொட்டிச் சிரிக்கும் ஒலி கடல் ஒலியோடு கலந்து கேட்கிறது. காற்று மண்டலத்தில் நுண்ணுணர்வே உடலாகி மேலே எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்த இராசசிம்மனின் உடல் 'பொத்தென்று' தரையில் வந்து விழுந்ததைப் போல் ஒரு பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு அவன் மெல்லக் கண்களைத் திறக்கிறான். எதிரே கப்பல் தளத்தில் சக்கசேனாபதி அவன் அருகே சிரித்துக் கொண்டு நின்றார். தன் கைகளினால் படுக்கையின் பக்கத்தில் இருந்த வலம்புரிச் சங்கை நெரித்து விடுவது போல் தழுவிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தான் அவன். அவர் சிரிப்பதன் காரணம் புரிந்தது.

அத்தனையும் கனவு! முடியாக் கனவு! என்று தான் அதற்கு முடிவோ! இராசசிம்மன் வெட்கமடைந்து சங்கைப் பற்றித் தழுவிக் கொண்டிருந்த தன் கைகளை எடுத்தான். "தூக்கத்தில் இப்படியா அழுகையும் சிரிப்புமாக மாறி மாறி உளறிப் பிதற்றுவீர்கள்? நான் பயந்தே போனேன். நீங்கள் இந்தச் சங்கை அழுத்திய விதத்தைப் பார்த்தால் உங்கள் பிடியின் இறுக்கம் தாங்காமல் இது உடைந்து விடுமோ என்று அஞ்சிவிட்டேன்" சக்கசேனாபதி கூறினார். அவன் அருகில் குனிந்து உட்கார்ந்து மீண்டும் மார்பையும், நெற்றியையும் தொட்டு நீவிப் பார்த்தார். அவர் முகம் சுருங்கிச் சிறுத்தது.

"உங்களுக்குக் காய்ச்சல் தான் வந்திருக்கிறது! நான் நினைத்தது சரியாகப் போயிற்று" என்று பதட்டத்தோடு கூறிவிட்டுப் போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டார். இராசசிம்மன் அவரைப் பார்த்து மிரள மிரள விழித்தான். கப்பல் அறைக்குப் போய் ஏதோ ஒரு தைலத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் மார்பிலும் நெற்றியிலும் சூடு பறக்கத் தேய்த்துத் தடவிக் கொடுத்தார்.

9. விலாசினியின் வியப்பு

அரண்மனைத் தோட்டத்து மரத்தடியில் தளபதியை அந்தரங்கமாகச் சந்தித்த பின் பகவதிக்குச் சுறுசுறுப்பாகத் திட்டமிட்டுக் கொண்டு செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன. அண்ணன் அவளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த செயல்கள் எத்துணைப் பெரியவை? அவற்றை ஒழுங்காகவும், பிறருக்குத் தெரியாமலும் செய்து முடிப்பதற்கு எவ்வளவு சூழ்ச்சியும், சாதுரியமும் வேண்டும்?

தமையனின் அந்தச் சொற்கள் அவளுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

"நீ என்னுடைய தங்கை...! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்."

நாட்டின் பயங்கரமான சூழ்நிலையை விளக்க அண்ணன் உதாரணமாகக் கூறிய துன்பக் கதையை நினைத்துக் கொண்ட போது அவனுடைய கதை கூறும் திறமையை எண்ணிச் சிரிப்பு வந்தது அவளுக்கு. 'எவ்வளவு இரகசியமாக எவ்வளவு நம்பிக்கையோடு அண்ணன் இந்தக் காரியங்களை அவளிடம் ஒப்படைத்துப் போயிருக்கிறேன்?' இதை எண்ணும் போது மட்டும் ஈடில்லாத பெருமிதத்தை அடைந்தாள் பகவதி. எல்லாப் பொறுப்புகளையும் தன்னுடையதாக இழுத்துப் போட்டுக் கொண்டு செயலாற்ற முந்தும் ஒரு வீரனுக்கு உடன் பிறந்தவள் தான் அப்படிப்பட்ட பெருமிதத்தை அடையலாம்.

அவள் தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பி வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆசிரியர் மகள் விலாசினி அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.

"என்னடியம்மா! திடீரென்று உன்னை இங்கே காணவில்லை? சிறிது நேரத்துக்கு முன்னால் இங்கு வந்தேன். நீ இல்லாததால் திரும்பிப் போய்விட்டேன்" என்றாள் விலாசினி.

"அதங்கோட்டாசிரியர் பிரானின் அருமைப் புதல்வியார் தேடிக் கொண்டு வரப் போகும் விவரம் முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டேன். மன்னித்தருள வேண்டும்" என்று சிரிக்காமல் பேசினாள் அவள். விலாசினி செல்லமாகக் கோபித்துக் கொள்வது போல் பகவதியை உறுத்துப் பார்த்தாள்.

"போதும், கேலிப் பேச்சு! சற்று முன் எங்கே போயிருந்தாய் நீ?"

"கேட்கிற கேள்வியைப் பார்த்தால் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நான் எங்கும், எதற்கும் போய்விட்டு வரக்கூடாது போல் அல்லவா இருக்கிறது?" என்றாள் பகவதி வியப்புடன்.

"போ போ! நன்றாகப் போய்விட்டு வா. எனக்கென்ன வந்தது? உன்னைப் போகக்கூடாது என்று தடுக்க நான் யார்? மகாராணி உன்னைப் பார்த்துக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். அதனால் தான் வந்தேன்!"

ஒரு பிணக்குமில்லாமலே சண்டை போடுவது போல் இப்படிப் பொய்க் கோபத்தோடு பேசிக்கொள்வது அந்த இரு பெண்களுக்கும் பொழுதுபோக்கான ஒரு விளையாட்டு. 'மகாராணி' என்ற பெயரை விலாசினி எடுத்தவுடன் பகவதி கலவரமடைந்தாள். விலாசினிதான் ஏதாவது அரட்டை அடிப்பதற்குத் தேடி வந்திருப்பாள் என்று எண்ணி வம்பு பேசிய பகவதி பரபரப்புற்று, "ஐயோ! மகாராணியா கூப்பிட்டார்கள்? வந்தவுடனே இதைச் சொல்லியிருக்கக் கூடாதா நீ?" என்று அவளைத் துரிதப்படுத்தி வினவினாள்.

"ஏனடி பதறுகிறாய்? ஒன்றும் அவசரமான காரியமில்லை. கோட்டாற்றுச் சமணப் பள்ளியிலிருந்து அந்த மொட்டைத் தலைச் சாமியார்கள் வந்து மகாராணியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து மகாராணி ஏதோ ஒரு பாட்டை எழுதி வாங்கி வைத்துக் கொண்டார். அதை உன் வாயால் பண்ணோடு பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறதாம்!" என்றாள் விலாசினி.

"இவ்வளவுதானா?"

"இவ்வளவேதான் செய்தி. நீ அன்று நிலா முற்றத்தில் என் நடனத்தின் போது பாடிய திருவாசகப் பாட்டைக் கேட்டதிலிருந்தே உன்னுடைய குரலில் மகாராணிக்கு ஒரே மோகம்."

"ஏன்? உன் நாட்டியத்தில் மட்டும் மோகமில்லையாக்கும்?" விலாசினியை எதிர்த்துக் கேட்டாள் பகவதி.

"சரி சரி. நீ வா. மகாராணியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து அப்புறம் நமக்குள் வம்பளக்கலாம்" என்று குரலைக் கடுமையாக்கிக் கொண்டு பகவதியைக் கூப்பிட்டாள் அவள்.

அவசரம் அவசரமாக உடை மாற்றி அலங்கரித்துக் கொண்டு விலாசினியோடு புறப்பட்டாள் பகவதி.

மகாராணி அவர்களை அன்போடு வரவேற்றாள். "பகவதி இன்று என் உள்ளம் பல காரணங்களினால் அலமந்து கிடக்கிறது. இந்த மாதிரிக் கவலைகளை மறக்கத் தெய்வத்தை நினைக்க வேண்டும். அல்லது தீந்தமிழ் இசையைக் கேட்க வேண்டும். கோட்டாற்றுப் பண்டிதர் வந்து கவலைக்கு மருந்தளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரும் போய்விட்டார். உன்னுடைய வாயால் பாடிக் கேட்க வேண்டுமென்பதற்காகவே அவரிடம் இந்தப் பாட்டை நான் எழுதி வாங்கிக் கொண்டேன்."

பகவதியின் கையில் அந்த ஓலையைக் கொடுத்தார் மகாராணி. ஒரு தரம் வாய்க்குள் முணுமுணுத்தாற் போல் பாடிப் பார்த்துக் கொண்டு அதற்கு பண் நிர்ணயம் செய்யச் சில கணங்கள் பிடித்தன அவளுக்கு.

"தேவி! இந்தப் பாடலைப் பழம்பஞ்சுரப் பண்ணிலும் பாடலாம். இந்தளப் பண்ணிலும் பாடலாம்."

"இரண்டிலும் தனித்தனியாகப் பாடிக்காட்டேன். கேட்கலாம்!" மகாராணியிடமிருந்து ஆணை பிறந்தது.

மோனத்தைக் கிழித்துக் கொண்டு பழம்பஞ்சுரம் எழுந்தது. பின்பு இந்தளம் இனிமை பரப்பியது. பகவதியே வீணையும் வாசித்துக் கொண்டாள். பொல பொலவென்று பூக்குவியலை அள்ளிச் சொரிவது போல் ஒரு மென்மையை எங்கும் இழைய விட்டது அவள் குரல். செவிவழிப் புகுந்து பாய்ந்த அந்த இனிமையில் தன்னை மறந்து இலயித்துப் போய்ச் சிலையாய் வீற்றிருந்த மகாராணிக்குச் சுயநினைவு வந்தது. பகவதி பாடல் ஓலையைத் திருப்பி அளித்தாள்.

"குழந்தைகளே! நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா? பேசினால் ஒருவகை இனிமை; பாடினால் ஒரு வகை இனிமை; எழுதினால் ஒருவகை இனிமை. இறைவன் தந்த மொழிக்குள் எத்தனை கோடி இன்பங்களை வைத்திருக்கிறான்!" என்று மகாராணி வியந்து கூறினார்.

பாடற் பண்களின் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சி, நாட்டியத்தில் மெய்பாடு வகைகள் - இவ்வாறு எதை எதையோ பற்றி மகாராணியோடு சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர் அந்தப் பெண்கள் இருவரும். போகும் போது விலாசினி மறுபடியும் பகவதியின் வாயைக் கிண்டினாள். "இப்போது நீயே சொல்! மகாராணிக்கு உன்னுடைய பாடலில் எவ்வளவு ஆசை தெரியுமா?"

"போடி, பைத்தியமே! ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூச் சர்க்கரை மாதிரி தான் நீயும் நானும். ஏதோ ஆளுக்கொரு கலை அறைகுறையாகத் தெரியும். உனக்கு நாட்டியம் தெரிந்த அளவு பாடத் தெரியாது. எனக்குப் பாடத் தெரிந்த அளவு ஆடத் தெரியாது. எல்லாக் கலைகளும் தெரிந்த பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இடையாற்று மங்கலத்து நங்கை குழல்வாய்மொழி - அவளை நீயும் நானும் சிறு வயதில் பார்த்தது, இப்போது அவள் எப்படி இருக்கிறாளாம் தெரியுமா? ஆடல், பாடல், பேச்சு, சிரிப்பு, பார்வை, அத்தனையும் அத்தனைக் கலைகளாம் அவளிடம். அவள் இங்கு வந்து மகாராணியோடு ஒரு நான்கு ஐந்து நாட்கள் நெருங்கிப் பழகி விட்டால் நீயும், நானும் பின்பு இருக்குமிடமே தெரியாது!" - பகவதி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள். திடீரென்று தொடர்பில்லாமல் அவள் இடையாற்று மங்கலம் நங்கையைப் பற்றிப் பேசுவதற்குக் காரணமென்னவென்று விலாசினிக்கு விளங்கவில்லை. அவள் வியப்பு அடைந்தாள்.

"ஏதடி அம்மா? திடீரென்று அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இவ்வளவு பொறாமை?"

"பொறாமையாவது, ஒன்றாவது? அவளைப் பற்றி இன்றைக்குச் சில செய்திகள் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அதே நினைவு!" என்றாள்.

"யாரிடத்தில் கேள்விப்பட்டாயோ?" விலாசினியிடமிருந்து இக்கேள்வியை பகவதி எதிர்பார்க்கவே இல்லை. வாய் தவறிப் பேச்சுவாக்கில் தனக்கு இரகசியமாகக் கூறப்பட்டவற்றை வெளிப்படையாக வெளியிட்டுவிட்டதை எண்ணி உதட்டைக் கடித்துக் கொண்டாள். 'கொஞ்சம் பொறாமை தலைகாட்டினால் என்னைப் போன்ற ஒரு பெண் எவ்வளவு சாதாரணமாக அதைக் காட்டிக் கொண்டு விடுகிறாள்?' என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

"என்னடி பகவதி! கேட்கிறேன். பதில் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாய்?"

பகவதி அவளுடைய கேள்விக்கு பதிலே சொல்லாமல் பேச்சை வேறு திசையில் மாற்றிப் பார்த்தாள். ஆனால் அவள் விடவில்லை. பகவதியைத் துளைத்தெடுத்து விட்டாள்.

"இடையாற்று மங்கலத்துப் பெண்ணைப் பற்றித் தெரியாமல் உன்னிடம் சொல்லி விட்டேனடி அம்மா! நீ என்னைத் தூண்டித் தூண்டி கேள்வி கேட்டு வாயைப் பிடுங்காதே!" என்று சிறிதளவு கடுமையான குரலில் எரிந்து விழுந்தாள் பகவதி. விலாசினிக்கு முகம் சுண்டி விட்டது. பேசுவதற்கு ஒன்றும் தோன்றாமல் வாயடைத்துப் போய் நின்றாள் அவள். அந்த நிலையில் பகவதியோடு அங்கிருப்பதற்கே பிடிக்கவில்லை அவளுக்கு.

"நான் அப்புறம் வந்து சந்திக்கிறேன்! இப்போது உன் மனநிலை சரியில்லை போலிருக்கிறது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள். "விலாசினி! மனநிலையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நீ போகாதே, சிறிது நேரம் இரு; பேசிக் கொண்டிருக்கலாம்" என்று பகவதி கூப்பிட்டும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல் நிற்காமல் போய்விட்டாள் அவள்.

"அடாடா! வீணாக இவள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனே" என்று உள்ளூர வருந்தினாள் பகவதி. பின்பு ஏதோ ஒரு திட்டமான முடிவுக்கு வந்தவள் போன்ற முகபாவத்துடன் தான் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதியின் அறைக்கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டாள்.

அப்படிக் கதவு அடைத்துத் தாழிடப்படுவதைக் கீழே தோட்டத்து வழியாக இறங்கிப் போய்க் கொண்டிருந்த விலாசினி பார்த்துவிட்டுப் போனாள். "இருந்தாற் போலிருந்து பகவதிக்கு என்ன வந்துவிட்டது?" என்ற சிந்தனைதான் அவள் உள்ளத்தில் போகும் போது புரண்டு கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் தன் தந்தை அதங்கோட்டாசிரியரை சந்தித்த போது அவள் அதையும் மறந்து விட நேர்ந்தது.

"விலாசினி! நாளை காலையில் நானும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் புறப்பட ஏற்பாடு செய்திருக்கிறோம். நீ எங்களோடு வருகிறாயா? அல்லது இங்கே அரண்மனையிலேயே இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கப் போகிறாயா? உன் விருப்பம் போல் செய்யலாம். நான் எதையும் வற்புறுத்தவில்லை. நீ இங்கே தங்கியிருந்தால் மகாராணியாருக்கும் ஆறுதலாகவும், துணையாகவும் இருக்கும் போலிருக்கிறது. உன் தோழி பகவதி வேறு இங்கு இருக்கிறாள். உங்கள் இருவரையும் சமீபத்தில் ஊருக்குப் போகவிடும் நோக்கம் மகாராணியாருக்கும் இல்லை என்பதை அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது குறிப்பாக அறிந்தேன்" என்று மகளிடம் கூறினார் ஆசிரியர்பிரான். இங்கிருப்பதா? ஊருக்குப் போவதா? என்று ஒரு சிறு போராட்டம் இரண்டொரு விநாடிகள் அவள் மனத்தில் நிகழ்ந்தது.

"அவசரமில்லை! நிதானமாக யோசித்துச் சொல்லம்மா" என்றார் அவளுடைய அருமைத் தந்தை.

"யோசிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது அப்பா? நான் இருந்தே வருகிறேன். நீங்கள் போய்விட்டு வாருங்கள்!" ஒரு தீர்மானமான முடிவுடன் தந்தைக்கு மறுமொழி கூறிவிட்டாள் அவள்.

"மிகவும் நல்லது! இதைத்தானே நானும் சொன்னேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஆசிரியர்பிரான்.

என்னதான் எடுத்தெறிந்து பேசிவிட்டாலும் பழக்கமானவர்களைச் சந்திக்காமலிருக்க மனம் ஒப்புவதில்லையே? பகவதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மனமுறிவு ஏற்பட்டுத் திடீரென்று தான் அருகிருந்து வந்துவிட்டதை அவள் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் அன்றிரவு படுக்கையில் படுத்த போது மீண்டும் விலாசினியைப் பற்றிக் கொண்டது. அப்போது இரவு பத்துப் பதினொரு நாழிகைக்கு மேலாகியிருக்கும். அரண்மனையில் அமைதி பரவத் தொடங்கியிருந்தது. பகவதியைப் போய்ப் பார்த்து அவளோடு சிறிது போது பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தால் தான் நிம்மதி உண்டாகும் போலிருந்தது. விலாசினிக்கு மிக மென்மையான சுபாவம். பிறர் தன்னை நோகச் செய்தாலும் சரி, தான் அறியாமல் பிறரை நோகச் செய்தாலும் சரி, விரைவில் அதற்காக வாட்டமடைந்து விடுவது அவள் இயல்பு. உறக்கம் வராமல் மஞ்சத்தில் இதே நினைவோடு புரண்டு கொண்டிருந்த விலாசினி, 'போய் அவளைப் பார்த்துப் பேசிவிட்டே திரும்புவது' - என்ற உறுதியுடன் கிளம்பினாள். முன்பெல்லாம் அவர்கள் ஒரே இடத்தில் அருகருகே சேர்ந்து படுத்துக் கொள்வார்கள். தூக்கம் தூங்குவார்கள். இப்போது தனித்தனியே அவரவர்கள் தங்கியிருந்த இடங்களில் படுத்துக் கொண்டதால் 'விலாசினி படுத்துத் தூங்கியிருந்ததால் என்ன செய்வது?' என்ற சந்தேகம் போகும் போது அவளுக்கு ஏற்பட்டது. 'தூங்கியிருந்தால் பேசாமல் திரும்பி வந்து விடுவோம். காலையில் பார்த்துக் கொள்ளலாம்' என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டு மேலே நடந்தாள்.

விலாசினி பகவதியின் அறைவாசலை அடைந்த போது அறைக்குள் விளக்கெரிவது தெரிந்தது. 'தூங்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள் போலும்' என்று தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் விலாசினி. அறையின் கதவு அடைத்து உட்புறமாகத் தாழிட்டிருப்பது போல் தெரிந்தது. விலாசினிக்குக் கதவைத் தட்டலாமா, வேண்டாமா என்று தயக்கம் ஏற்பட்டது. அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டுத் தட்டலாம் என்று அறைக் கதவின் இடப்பக்கம் இருந்த சாளரத்தை நெருங்கி உள்ளே எட்டிப் பார்க்க முயன்றாள் அவள். சுவரில் சாளரம் அவளுடைய உயரத்தை விட அதிகமான உயரமுள்ள இடத்தில் அமைந்திருந்ததனால் எட்டவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பும் வியப்பும் அடைந்து சுற்றும் முற்றும் மருண்டு பார்த்துக் கொண்டு நின்றாள் விலாசினி. அப்போது அங்கே ஒரு மூலையில் கிடந்த மர முக்காலி அவளுக்கு அபயமளித்தது. அந்தப் பகுதியில் விதானத்திலுள்ள, சரவிளக்குகளை ஏற்றவரும் அரண்மனை பணிப்பெண்கள் உயரத்துக்காக அதை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன் மேல் நின்று விளக்கேற்றுவார்கள். விளக்கேற்றியதும் எடுத்துக் கொண்டு போய்விடும் அந்த முக்காலியை அன்று மறந்து போய் அங்கே போட்டுவிட்டுப் போயிருந்தனர். அந்த முக்காலியையும் அங்கே அதை விட்டுப் போன அரண்மனைப் பணிப்பெண்களையும் மனமார வாழ்த்திவிட்டு ஓசைப்படாமல் அதைத் தூக்கிச் சாளரத்தை ஒட்டினாற் போலச் சுவர் அருகே கீழே வைத்தாள்.

கால் சிலம்புகள் கைவளைகள் ஓசைப்பட்டு விடாமல் மெதுவாக முக்காலியின் மேல் ஏறி நின்று உள்ளே பார்த்தாள். அவளுடைய கண்கள் அகன்று விரிந்து செவிகள் வரை நீண்டன. வியப்பின் எல்லையா அது! அறைக்குள் பிரம்மாண்டமான நிலைக்கண்ணாடிக்கு முன்னால் இடையில் வாளும் தலையில் அழகாகத் தலைப்பாகையும் தரித்துப் பெண்மைச் சாயல் கொண்ட முகமுள்ள ஓர் இளைஞன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தான். விலாசினி வியப்பு, திகைப்பு, பயம், சந்தேகம் எல்லா உணர்ச்சிகளையும் ஒருங்கே அடைந்தாள். மேலும் உற்றுப் பார்த்தாள். உண்மை தெரிந்த போது அவளுக்குச் சிரிப்பு வந்தது. முகமும் மலர்ந்தது.

இளைஞனாவது, கிழவனாவது; பகவதிதான் ஆண் வேடத்தில் கண்ணாடிக்கு முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். உற்றுப் பார்த்து அதை நிதானிக்கச் சில விநாடிகள் பிடித்தன அவளுக்கு. உள்ளே பகவதி இருந்த நிலையைப் பார்த்த போது அவள் அந்த வேடத்தோடு எங்கோ கிளம்பத் தயாராகிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

விலாசினி சட்டென்று முக்காலியிலிருந்து இறங்கி அங்கே அதிக இருட்டாயிருந்த ஒரு மூலையில் பதுங்கி நின்று கவனிக்கலானாள். பகவதி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அறைவாசலில் கிடந்த இரண்டு மூன்று மாவடுக்களில் ஒன்றை எடுத்துத் தோட்டத்துப் பக்கமாக எரிந்தாள். அங்கே சலசலப்பு உண்டாயிற்று. மறுகணம் ஆபத்துதவிகள் தலைவனின் தலை மாமரத்துப் புதரிலிருந்து எட்டிப் பார்த்தது. பகவதி ஏதோ சைகை செய்து விட்டுக் கீழே இறங்கிப் போனாள். குழைக்காதனும் ஆண் உடையிலிருந்த பகவதியும் மதிலோரமாகப் பதுங்கிப் பதுங்கி எங்கோ செல்வதை மறைந்து நின்ற விலாசினி கவனித்தாள். பின்பு திரும்பிப் போய்ப் படுத்துக் கொண்டாள். விடிந்ததும் அவள் தந்தை ஊருக்குப் புறப்பட்ட போது, பிடிவாதமாக அவளும் ஊருக்குக் கிளம்பினது கண்டு அவள் தந்தை ஆச்சரியம் அடைந்தார்.

10. அந்தரங்கத் திருமுகம்

ஆத்திரம் கொண்ட போர்வீரனின் கையில் வில் வளைவதைப் போல் குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்தன. அரண்மனையிலிருந்து நாராயணன் சேந்தனும் வேளானும் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவர்களைக் காண்பதற்காக இடையாற்று மங்கலத்து அந்தப்புர மேல்மாடத்திலிருந்து கீழே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் அவள். தன் தந்தை தனக்கு அதிகம் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டதாக நாராயணன் சேந்தன் யாரிடமோ கூறிக் கொண்டிருந்த அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அவனைச் சந்திக்காமலே திரும்பி விடலாம் என்று கூட அவள் எண்ணினாள். அத்தனை கோபம் அவளுக்கு உண்டாயிற்று. 'தன் தந்தைக்கு அந்தரங்கமானவனாக இருக்கலாம். நெருங்கிப் பழகி ஒட்டுறவு கொண்டிருக்கலாம். ஆனால், அதற்காகத் தன்னைப் பற்றி அப்படிப் பேச அவனுக்கு என்ன உரிமை?'

ஆத்திர மிகுதியால் அவனைப் பார்க்காமலே திரும்பிப் போய்விட நினைத்தவள் அப்படிச் செய்யவில்லை. அவனிடமே ஆத்திரம் தீர நேரில் கேட்டு விடுவதென்று வந்தாள். எவ்வளவு கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும் தன்னிடம் சிரித்துப் பேசி அரட்டையடிக்கும் நாராயணன் சேந்தன் அன்று அவ்வாறு பேசியது அவள் உள்ளத்தில் உறைத்தது.

வேகமாகக் கீழே இறங்கிப் போய் ஒன்றும் பேசாமல் சினத்தைக் காட்டும் முகக் குறிப்புடன் அவன் முன் நின்றாள். படகோட்டி வேளானும், சில மெய்க்காவல் வீரர்களும் சூழ நின்று பேசிக் கொண்டிருந்த சேந்தன் அவள் அருகில் வந்து நின்றதும் பேச்சை நிறுத்தினான். குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி, "அம்மணி! வணக்கம்... தங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூற்றத்தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் தவிர்க்க முடியாத காரணங்களால் மகாமண்டலேசுவரர் அரண்மனையிலேயே தொடர்ந்து தங்க நேரிட்டு விட்டது. ஆனாலும் தாங்கள் இங்கே இப்படியெல்லாம் நடக்க விட்டுவிடுவீர்களென்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. தங்கள் தந்தை அதிகமாகக் கவலைப்படும்படியான சூழ்நிலையைத் தாங்கள் உண்டாக்கியிருக்கிறீர்கள்!"

குழல்வாய்மொழி புருவங்களுக்கு மேலே நெற்றி மேடு புடைக்க, முகம் சிவக்க கோபத் துடிப்புடன் இரைந்தாள்.

"ஐயோ! போதும், நிறுத்துங்கள். நீங்கள் மிகவும் பெரியவர். எத்தனையோ குடும்பங்களில் எவ்வளவோ தந்தைமார்களுக்கு அறிவுரைக் கூறிப் பழகியவர். உங்கள் அறிவுரை கிடைக்காததனால் தான் என் தந்தை அநாவசியமாக எனக்குச் செல்லம் கொடுத்துப் பாழாக்கி விட்டார். இனிமேலாவது அவருக்கு தக்க சமயத்தில் அறிவுரை கூறி எனக்கு செல்லம் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்."

அவளிடமிருந்து வார்த்தைகளை வாங்கிக் கட்டிக் கொண்ட நாராயணன் சேந்தன் சிறிது நேரம் அந்தப் பெண்ணின் கோபத்தைப் போக்க வகை தெரியாமல் தயங்கினான். அவளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்ததைப் படியிறங்கி வரும் போது அவள் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது.

"வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள். நான் சற்று முன் தங்களைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருந்ததைத் தாங்கள் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லை. மகாமண்டலேசுவரர் இல்லாத சமயத்தில் இங்கு நடந்திருக்கும் கவலை தரும் நிகழ்ச்சிகளை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு பேசியிருப்பேன். அதை ஒரு தவறாக எடுத்துக் கொண்டு என் மேல் கோபித்துக் கொள்ளக் கூடாது."

"உங்கள் மேல் கோபித்துக் கொள்வதற்கு நான் யார்? அப்படியே கோபித்துக் கொண்டாலும் என்னுடைய கோபம் உங்களை என்ன செய்து விடப் போகிறது?"

குழல்வாய்மொழி சமாதானப்பட்டு வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. கோபம் வரும் போது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும், வீம்பும், முரண்டும் அவளிடமும் இருந்தன. நாராயணன் சேந்தன் குழைந்தான்; கெஞ்சினான்; என்னென்னவோ பேசி அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். வீம்பு நீடித்ததே தவிரக் குறையவில்லை. உலகத்தில் சிரமப்பட்டுத்தான் செய்ய முடியும் என்ற வகையைச் சேர்ந்த காரியங்களில் பெண்களின் வீம்புக் கோபத்தைச் சமாதானப்படுத்துவதும் ஒன்று என அவனுக்குத் தோன்றியது.

கடைசியாக, அவளைச் சமாதானப்படுத்தி முடிந்த போது தான் சேந்தனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.

"நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டால் நான் என்ன செய்வது? உங்கள் தந்தை உங்களை உடன் வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய பெரிய பெரிய செயல்களையெல்லாம் என்னிடம் ஒப்புவித்திருக்கிறார். முக்கியமும், அவசரமும் வாய்ந்த செய்திகளை அனுப்பியிருக்கிறார். நாம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். நீங்கள் முரண்டு பிடித்தால் ஒன்றும் ஆகாது."

"முக்கியமும் அவசரமும் இல்லாத நேரம் அப்பாவுக்கு எப்போதுதான் இருந்தது? நாட்டைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கவலைப்பட்டுத் தம்முடைய உடல் நலத்தைப் பற்றிக் கவலைப் படுவதற்கு நேரம் இல்லையே அவருக்கு. வெளியே யாரிடமும் சொல்லாமல் பொதுக் கவலைகளையும், துன்பங்களையும், மனத்தில் தேக்கி வைத்துக் கொண்டு என்ன சுகம் கிடைத்து விட்டது அவருக்கு?" குழல்வாய்மொழியின் பேச்சு பிடிவாதத்திலிருந்து விலகிப் போய்த் தந்தையின் மேல் அனுதாபமாக வெளிவந்தது.

"உங்களுக்கே அவையெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கின்றனவே, அம்மணி! உங்கள் தந்தைக்கு இருக்கும் பொறுப்புகளையும், கவலைகளையும் சொல்லி நீங்களே இரக்கப்படுகிறீர்கள். தமது மாளிகையில் தம் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போய் விட்டதென்று தெரிந்தால் அவர் எப்படி? அதிர்ச்சியடையாமல் இருக்க முடியும்?" சேந்தனுடைய பேச்சு வளர்கிற விதத்தைக் கண்டு குழல்வாய்மொழிக்கு வேறு வகை அச்சம் ஏற்பட்டது. 'வசந்த மண்டபத்திலிருந்த துறவி காணாமற் போனது பற்றியும் தன்னிடம் அவன் தூண்டித் துளைத்து ஏதாவது கேள்விகள் கேட்பானோ?' என்று சிறிது கலவரமடைந்தது அவன் உள்ளம். இந்தக் கலவரமும், தந்தையிடமிருந்து அவன் கொண்டு வந்திருக்கும் முக்கியச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவள் சினத்தைப் போக்கிவிட்டன.

பிறர் எந்தச் செய்தியைத் தன் வாயிலிருந்து கேட்பதற்கு அதிக ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறார்களோ அந்தச் செய்தியை உடனடியாகச் சொல்லி முடித்து விடாமல் அவர்களுடைய ஆவலைத் தொடரச் செய்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் தந்திரத்தை மேற்கொண்டான் நாராயணன் சேந்தன்.

"மகாமண்டலேசுவரருடைய திருக்குமாரியிடம் அதிகப்படியான கேள்விகளைக் கேட்டுப் புண்படுத்த வேண்டுமென்று நான் கருதவில்லை. அதே சமயத்தில் ஒன்றும் கேட்க விரும்பாமலும் இருக்க முடியவில்லை!"

"கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? இங்கே நடந்தவற்றையெல்லாம் தான் அம்பலவன் வேளான் அங்கு தெளிவாகச் சொல்லியிருப்பானே."

குழல்வாய்மொழியிடமிருந்த் கொஞ்சம் அமைதியாகப் பதில் வந்தது. முன்பிருந்த படபடப்பும் ஆத்திரமும் இல்லை. நாராயணன் சேந்தன் சிரித்துக் கொண்டான். 'ஏ, அப்பா! தங்கம் நிறுக்கும் பெரிய வணிகனைப் போல் மகாமண்டலேசுவரர்தான் ஒரு சொல் மிகாமல், ஒரு சொல் குறையாமல், எண்ணி அளந்து அளந்து பேசுவார் என்றால் அவருடைய புதல்வி அவரைக் காட்டிலும் அழுத்தமாக இருக்கிறாளே' என்று அவன் மனத்துக்குள் நினைத்துக் கொண்ட நினைப்பின் சாயைதான் சிரிப்பாக வெளிப்பட்டு மறைந்தது.

"என்னிடம் எதையெல்லாமோ கேட்டு நேரத்தைக் கடத்துகிறீர்களே தவிர, என் தந்தை உங்களிடம் கூறி அனுப்பியிருப்பதாகச் சொன்ன முக்கியச் செய்திகளைப் பற்றி நீங்கள் கூறப் போவதாகவே தெரியவில்லையே?"

"அவற்றை இந்த அகால நேரத்தில் இங்கு நான் விவரித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நீங்களே படித்துத் தெரிந்து கொள்வது நல்லது. உங்கள் தந்தை உங்களுக்கென்று அந்தரங்கமாக எழுதி அனுப்பியிருக்கும் விரிவான திருமுகத்தை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன். அதைப் படித்து எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். நாளைக் காலையில் விடிந்ததும் உங்களைச் சந்திக்கிறேன்."

சேந்தன் மகாமண்டலேசுவரரின் அந்தரங்கத் திருமுகத்தை அவளிடம் எடுத்துக் கொடுத்துவிட்டுத் தூங்கச் சென்று விட்டான்.

மனத்தில் பெருகும் ஆவலையும், பரபரப்பையும் அடக்கிக் கொண்டு அந்தத் திருமுகச் சுருளோடு தன் தனியறைக்குச் சென்றாள் குழல்வாய்மொழி. அதைப் படித்து அறிந்து கொள்வதற்கு முன் அவள் மனத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தடுமாறின. தந்தை என்ன எழுதியிருப்பாரோ என்று எண்ணும் போதே பயம், பதற்றம், வியப்பு அத்தனையும் அவளைப் பற்றிக் கொண்டன. அவள் இருந்த அறை அவளுடைய கன்னிமாடத்தின் மேற்பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்தது. அவளுடைய அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள், இசைக்கருவிகள் இவையெல்லாம் மறைந்திருந்த அந்தத் தனியறையில் பிறர் அதிகம் பழக முடியாது. பணிப் பெண்கள் வண்ண மகளிர் கூட முன் அனுமதியின்றி அந்த அறைக்குள்ளே வரக்கூடாது.

அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த தீபச் சுடரின் ஒளியைத் தூண்டிவிட்டாள். சுடர் குதித்தெழுந்தது. ஒளியும், வனப்பும் மிக்க அந்த அறையின் பொருட்கள் தீப ஒளியில் கவர்ச்சி செறிந்து காட்சி அளித்தன. எத்தனை விதமான யாழ்கள்? எவ்வளவு வகை மத்தளங்கள்? இன்னும் இசை, நாட்டியக் கலைகளில் பயிற்சியுள்ளவர்கள் பயன்படுத்தும் வகை வகையான நளின கலைக் கருவிகள் நாற்புறமும் அறையில் தென்பட்டன. குழல்வாய்மொழி தீபத்தின் கீழே அமர்ந்து திருமுகத்தைப் பிரித்தாள். தந்தையின் திருமுகத்தையே பார்ப்பது போல் அவள் விழிகளில் பயபக்தி ஒளிர்ந்தது.

'ஒருவர் மற்றொருவருக்கு எழுத்து மூலம் எழுதி அனுப்பும் செய்திக்கு தமிழில் 'திருமுகம்' என்று எவ்வளவு பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்கள்! ஒருவர் எழுதியதைப் படிக்கும் போது படிக்கிறவருக்கு எழுதியவரின் முகம் தானே நினைவுக்கு வருகிறது!'

தந்தையின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்ட போது பெயர்ப் பொருத்தத்தைப் பற்றிய இந்த அழகிய கற்பனையும் அவளுக்குத் தோன்றியது. திருமுகத்தைப் படிக்கலானாள்.

"அருமைப் புதல்வி குழல்வாய்மொழிக்கு, எல்லா நலங்களும் பெருகுக, மங்கலங்கள் யாவும் பொலிக.

செல்வக் குமாரி! என்னுடைய இந்தத் திருமுகத்தை படிக்கத் தொடங்கும் முன், படித்துக் கொண்டிருக்கும் போது, படித்த பின் ஒவ்வொரு நிலையிலும் உன் மனத்தில் எந்தெந்த உணர்ச்சிகள் அலைமோதும் என்பதை இதை எழுதும் முன்னாலேயே இங்கிருந்தே என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆனாலும் எழுத வேண்டியதையெல்லாம் உனக்கு எழுதித்தான் ஆக வேண்டும்.

எப்போதுமே உன் தந்தைக்கு வியப்பு உணர்ச்சி குறைவு என்பது உனக்குத் தெரியும். எதையும் எதற்காகவும் ஆச்சரியமாகக் கருதாமல் சர்வ சாதாரணமாக நினைப்பவனுக்கு அதிசயங்களிலும் அபூர்வ அற்புதங்களிலும் எப்படி ஈடுபாடு இருக்க முடியும்? ஆச்சரியம் எவ்வாறு ஏற்பட முடியும்? உணர்ச்சி மயமாகவே வாழ்பவர்களால் வாழ்க்கையில் எதிலும் ஒட்டிக் கொண்டு கலந்து எதையும் அனுபவிக்க முடிகிறது. உணர்ச்சிகளை வென்று புளியம் பழமும் அதை மூடிக் கொண்டிருக்கும் ஓடும் போல் ஒட்டாமல் வாழ்ந்தால் சமய சமயங்களில் வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆச்சரியப்படத் தெரியாதவன் மற்றவர்களுக்கு ஆச்சரியப் பொருளாகவே ஆகிவிடுகிறான். என்னைப் போன்ற ஒருவன் தன் அறிவால் மட்டுமே வாழ்ந்து பார்க்க முயன்றால் என்னைச் சுற்றியிருக்கும் பல்லாயிரம் பேர்களுக்கு நான் ஒர் ஆச்சரியம், ஒரு புதிர் என்று ஆகிவிடுகிறேன். அப்படி ஆகும் போது சந்தர்ப்பங்கள் என்னைக் காலை வாரி விட ஒவ்வொரு கணமும் நெருங்குகின்றன.

புதல்வி! அம்பலவன் வேளான் வந்து கூறிய செய்திகள் ஆச்சரியப்படத் தெரியாது, அதிர்ச்சியுற அறியாமல் இருந்த எனக்கும் அவற்றை உணர்த்தி விட்டன. மற்றவர்களுக்குத் தெரிந்து விடாமல் நானும் ஆச்சரியப்பட்டேன். நானும் அதிர்ச்சியடைந்தேன். உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்விகள், அவை போகட்டும்! நான் அங்கிருந்து புறப்படும் போது எவ்வளவு எச்சரிக்கை செய்து விட்டுப் புறப்பட்டேன்? 'பெண்ணே! வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருக்கும் 'துறவியை ஒவ்வொரு கணமும் அருகிருந்து கவனித்துப் பேணிக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. அந்நியர்களை அவரோடு சந்தித்துப் பழக விடக் கூடாது' என்று நான் கூறிவிட்டு வந்த அறிவுரையை நீ புறக்கணித்து விட்டாய் போலும்! துறவியாக வந்து தங்கியிருந்தது யார் என்று நீயே தெரிந்து கொண்டிருப்பாய். தெரியாமலிருந்தால் நாராயணன் சேந்தன் விளக்குவான்.

'யாரோ வந்தார்கள், சந்தித்தார்கள், வசந்த மண்டபத்தில் கூடிப் பேசினார்கள். மறுநாள் விடிந்த போது வந்தவர்களையும் காணவில்லை, துறவியையும் காணவில்லை, பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்களையும் காணவில்லை' என்று வேளான் வந்து கூறினான்.

குழல்வாய்மொழி! வடக்கே போருக்கும், பூசலுக்கும் எதிரிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மகாராணி கவலைகளால் மன நிறைவு இழந்து காணப்படுகிறார். கூற்றத்தலைவர்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ கேள்விகளையெல்லாம் கேட்டுத் துளைக்கிறார்கள். தளபதிக்கு என்மேல் இருக்கும் சந்தேகங்களைப் பார்த்தால் அவற்றை இப்போதைக்குப் போக்க முடியாது போலிருக்கிறது. அறிவின் அளவைக் கொண்டு செயல்களைத் திட்டமிட்டு வரும் எனக்கும், உணர்வின் அளவைக் கொண்டு என்னைக் கண்காணித்து வரும் மற்றவர்களுக்கும் நடுவில் இப்படி ஓர் உள்துறை பிளவு இருந்து வருகிறது. நான் என் மனத்துக்குள்லேயே பாதுகாக்க விரும்பும் செய்திகளை அறிந்து கொள்ள முயல்கின்றவர்கள் அதிகமாகி விட்டார்கள். இந்த நிலையில் எனது பலவீனத்தை வளர்ப்பது போன்ற செய்திகளை அம்பலவன் வேளான் வந்து கூறினான். ஆனாலும் நான் இதுவரையில் கலங்கி விடவில்லை. தளர்ந்து விடவில்லை, சோர்ந்து விடவில்லை. எனக்கு என் மேல் என் அறிவின் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

இந்தச் சமயத்தில் உன்னிடமும் நாராயணன் சேந்தனிடமும் ஒரு பொறுப்பை அளிக்கிறேன். இடையாற்று மங்கலத்திலிருந்து நீங்கள் இருவரும் இந்தத் திருமுகத்தைப் படித்த மறுநாள் காலையிலேயே புறப்பட வேண்டும். கொள்ளை போன சுந்தர முடியையும் பொற் சிம்மாசனத்தையும் வீரவாளையும் தேடிக் கண்டுபிடிக்கும் முன்பே அவைகளை ஆள்பவனைக் கண்டுபிடிக்க வேண்டும். என் அனுமானம் உண்மையானால் அவைகளை ஆள்பவனைக் கண்டுபிடித்தால் அவனிடமே அவைகளைக் காணலாம். அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த இளந்துறவியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

உண்மையை மறைத்து எழுதுவானேன்? நம்முடைய வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருந்த இளந்துறவிதான் குமாரபாண்டியன் இராசசிம்மன். நாராயணன் சேந்தனிடம் கேட்டறிவதற்கு முன் நானே சொல்லிவிட்டேன் உனக்கு. ஒரு வேளை எங்கள் இருவரையும் முந்திக் கொண்டு இதை நீ அறிந்திருந்தால் உனக்கு மதி நுட்பம் மிகுதிதான். குமாரபாண்டியனை விரைவில் அழைத்து வருவதாக மகாராணிக்கு வாக்களித்து விட்டேன். நான் தேடிக் கொண்டு புறப்பட முடியாதபடி இருக்கிறது சூழ்நிலை. வேறு யாரையும் அனுப்புவதற்குமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. உடனே புறப்படுங்கள். எங்கே எப்படிப் புறப்பட வேண்டுமென்று தயங்காதே. உனக்கு அது தெரியும்! உன் உள்ளத்துக்கும் அது தெரியும். சேந்தனுக்கும் சேந்தனுடைய உள்ளத்துக்கும் கூடத் தெரியும். உரிமையோடும், உரியவனோடும் திரும்பி வாருங்கள். படித்து முடித்ததும் நீ எந்த விளக்கின் ஒளியிலிருந்து இதைப் படிக்கிறாயோ, அதன் சுடர்ப் பசிக்கு இதை இரையாக்கி விடு."

அவள் அப்படியே செய்து விட்டாள்.

11. முள்ளால் எடுத்த முள்

மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைச் சாதாரண மனிதராக சாதாரண உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிப் பார்க்க வேண்டுமென்று விதிக்கு என்ன தான் ஆசையோ? தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

கரவந்தபுரத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது தூதுவன் அரண்மனைக்கு வந்த போது அவர் மேலும் வியப்புக்கு உள்ளானார். கொற்கைக் கலவரங்களும், வடக்கு எல்லைப் பூசல்களும் பற்றிய செய்திகள் அந்த இரண்டாவது தூதன் மூலம் வந்து சேர்ந்தன. ஏற்கனவே அனுப்பப்பட்ட மானகவசன் என்னும் தூதன், தான் அங்கிருந்து புறப்படுகிற வரையில் கரவந்தபுரத்துக்குத் திரும்பி வந்து சேரவில்லை என்பதையும் புதிதாக வந்தவன் கூறினான்.

அவற்றைக் கேள்விப்பட்ட போது, உணர்வுகள் பதிந்தறியாத அந்த நெற்றியில் உணர்ச்சிகளைக் காண முடிந்தது. இரண்டாம் முறையாக அந்தத் தூதுவன் வந்திருப்பதையும், அவன் கூறிய செய்திகளையும் மகாராணியாருக்கு அறிவிக்கவில்லை அவர். புதுப் புதுத் துன்பங்களைக் கூறி முன்பே கவலைகள் பெருகியிருக்கும் அந்த மலர் நெஞ்சத்தை மேலும் வாடவிடுவதற்கு விரும்பவில்லை அவர். எல்லைக் கற்களை உடைக்கிற அளவு வடக்கே பூசல் நடப்பது அவருடைய பொறுமையையே சோதித்தது.

"உன்னிடமும் ஒரு பதில் ஓலை கொடுத்து அனுப்புகிறேன். ஆனால் நீ அதைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு செல்லும் போது இடை வழியில் எங்காவது, யாராவது உன்னிடமிருந்து பறிக்க முயன்றால் சிரமப்பட்டு அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டாம். தாராளமாக விட்டுக் கொடுத்துவிடு."

இடையாற்று மங்கலம் நம்பி இப்படிக் கூறிய போது வந்திருந்த தூதுவன் திகைத்துப் போனான். அவனுக்கு அவர் என்ன நோக்கத்தோடு அப்படிச் சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. அவன் விழித்தான். அவரோ சிறிதும் தாமதம் செய்யாமல் பதில் ஓலை எழுதி உறையிலிட்டு அரக்கு இலச்சினை பொறித்து அவன் கையில் கொடுத்து விட்டார். கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் தூதுவன் அங்கே அதிக நேரம் தங்கியிருப்பதையே விரும்பாதவர் போல் துரத்தினார். அவனும் புறப்பட்டு விட்டான். அவனை அனுப்பிய பின் மகாமண்டலேசுவரர் சிந்தனையில் மூழ்கினார்.

அவருடைய சிந்தனையில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு நின்ற ஒரே கேள்வி இதுதான்:

'நெருங்கி வந்து கொண்டிருக்கும் போரை இன்னும் சிறிது காலம் பொறுத்துத் தாமதமாக வரச் செய்வதற்கு வழி என்ன?'

இந்தச் சில நாட்களுக்குள் எத்தனையோ துன்பங்களையும் அதிர்ச்சிகளையும் தாங்கி அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் உடனுக்குடன் நினைத்து முடிவு செய்திருக்கிறார் அவர். ஆனால் மலை போல் எழுந்து நிற்கும் இந்தப் பெரிய கேள்விக்கு அவ்வளவு எளிமையாக விடை கண்டுபிடிக்க முடியவில்லை. சிந்தனை பல கிளைகளாய்க் கிளைத்து எங்கெங்கோ சுற்றிப் படர்ந்தது. எத்தனையோ பெரிய படையெடுப்புகளின் திடுக்கிடத் தக்க நிலைமைகளையெல்லாம் அவர் சமாளித்திருக்கிறார். போரில் வெற்றிகளையும் பார்த்திருக்கிறார், தோல்விகளும் உண்டு. இதே இராசசிம்மன் இப்போது இருப்பதை விட இளைஞனாக இருந்த காலத்தில் போர்கள் ஏற்பட்டிருக்கின்றன. பராந்தக பாண்டியர் மறைந்த நாளிலிருந்து எங்கேயாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு காரணம் பற்றிப் போர் உண்டாகிக் கொண்டுதான் இருக்கிறது.

உப்பிலிமங்கலத்துப் போரைக் காட்டிலுமா பெரிய போர் இனிமேல் ஏற்படப் போகிறது? வடதிசை அரசர்களுக்கு ஒத்துழைத்து அந்தப் போருக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளூர் மன்னன் பாண்டி நாட்டை வென்று விடலாமென்று எத்தனை நம்பிக்கை வைத்திருந்தான். கடைசியில் மேலாடையையும் உடை வாளையும் கூடக் களத்தில் எறிந்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று தோற்று ஓடும் நிலையை அடைந்தான் அவன்.

அதன் பின் வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த போர்களில் தஞ்சைப் பெரு மன்னனை இரண்டு முறை ஓடஓட விரட்டினோம். அப்போது பாண்டி நாட்டின் எல்லை விரிந்து பரந்திருந்தது. போர் வீரர்களும் ஏராளமாக இருந்தார்கள். இராசசிம்மனுக்கு அது மிகவும் இளமைப் பருவமாதலால் எதற்கும் அஞ்சாத துணிவும் வாலிபச் செருக்கும் இருந்தன. தளபதி வல்லாளதேவனும் அவனும் உற்சாகமாகப் போர் வேலைகளில் ஈடுபட்டார்கள். பாண்டிய மண்ணின் பெருமையைக் காத்திட வேண்டும் என்ற ஒரு வீராவேச வெறி அப்போது எங்கும் பரவியிருந்தது. இப்போது மட்டும் அந்தத் துடிப்பு இல்லாமலா போய் விட்டது?

துடிப்பும், துணிவும் இருந்து என்ன செய்வது? சரியான தலைமையில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த படையெடுப்புகளால் படை வசதிகள் அழிவுபட்டுக் குறைந்து போயின. நாட்டு எல்லை தென்கோடி வரை குறுகிவிட்டது. அன்றைய நிலையில் வஞ்சிமாநகரம் வரை சென்று பெரும் படையோடு தனியாக நின்று தனது தாய்வழிப் பாட்டனுக்கு வெற்றி தேடித் தரும் அளவுக்குக் குமாரபாண்டியன் தீரனாக இருந்தான். கடைசியாக வடதிசை அரசர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு செய்த போரில் வடபாண்டி நாடாகிய பகுதி முழுவதும் தோற்றுப் போக நேரிட்டுவிட்டது. தோற்றால்தான் என்ன? எப்போதும் வெற்றியடைந்து கொண்டிருக்க முடியுமா? குமாரபாண்டியன் நாடு தோற்றது பெரிதன்று. மனம் தோற்றுப் பயந்து போய் கடல் கடந்து ஓடினானே, அதுதான் பெரிய தவறு. அவனுடைய இந்தத் தவறு வடதிசையரசர்களைப் பெரிய அளவுக்கு ஊக்கமுறச் செய்து மேலும் மேலும் படையெடுத்து வரத் தூண்டுகின்றது. அவன் நாட்டில் இல்லாமல் எங்கோ மறைந்திருப்பது கூடாதென்று அரிய முயற்சியால் ஈழ நாட்டிலிருந்து வரவழித்தேன்; வந்தான். அவனை இரகசியமாக மறைத்து வைத்திருந்து என்னென்னவோ செய்ய எண்ணினேன். காலம் வரும் வரை பொறுத்திருந்து சரியான படைபலத்தை உருவாக்கிக் கொண்டு வடபாண்டி நாட்டை மீண்டும் கைப்பற்றியிருக்க முடியும். மகாராணி வானவன்மாதேவியின் இரண்டு பெரிய கனவுகளை நனவாக்கிவிட எண்ணியிருந்தேன்.

"செந்தமிழ் தென்பாண்டி நாட்டின் அரசனாக இராசசிம்மனுக்கு முடிசூட்ட வேண்டும். மணவினை மங்கலம் முடிவெடுக்க வேண்டும்."

இராசசிம்மனோ என் திட்டங்களையும் தன் அருமந்த அன்னையின் கனவுகளையும் காற்றில் பறக்கவிட்டுக் கடலைக் கடந்து போய்விட்டான். நான் சேந்தனிடம் கூறியனுப்பியிருக்கும் திட்டப்படி குழல்வாய்மொழியும் அவனும் இளவரசனைத் தேடிக் கொண்டு வரப் புறப்பட்டிருப்பார்கள். தளபதி வல்லாளதேவன் கோட்டாறிலுள்ள தென் திசைப் பெரும் படையைப் போருக்குத் தயார் செய்து கொண்டிருப்பான். எப்படியிருந்தாலும் நமக்கு பிறருடைய உதவி வேண்டும். இராசசிம்மன் மனம் வைத்தால் ஈழ நாட்டுக் காசிப மன்னரிடமிருந்து கூடப் படை உதவி பெற்றுக் கொண்டு வரமுடியும்.

பார்க்கலாம்! எப்படி எப்படி எது எது நடக்கிறதோ? இப்போது செய்ய வேண்டிய முதல் வேலை வந்து கொண்டிருக்கிற போரை உடனடியாக வரவிடாமல் தடுப்பது. மகாமண்டலேசுவரருடைய நினைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. அவர் மனத்தில் தென் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்கத் துடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக மானசீகத் தோற்றத்தில் தோன்றிக் குழம்பிக் கொண்டிருந்தனர். கோப்பரகேசரி பராந்தக சோழன், கொடும்பாளூரான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன், அரசூருடையான் சென்னிப் பேரரையன் - அந்த நான்கு எதிரிகள் தாம் படையெடுப்பு ஏற்பாட்டில் ஒரு முகமாக முனைந்திருப்பதாகக் கரவந்தபுரத்திலிருந்து வந்த செய்தி கூறியது. ஆனால் மகாமண்டலேசுவரருக்கு எட்டியிருந்த வேறு சில செய்திகளால் இதில் பரதூருடையான் என்னும் மற்றோர் பெருவீரனும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. படைகளிலும், போர்ப் பழக்கத்திலும் வல்லவர்களான இந்த ஐந்து பேரும் ஒன்று கூடிய கூட்டணியை முறியடிப்பது எளிமையானதல்லவென்று அவரும் உணர்ந்தார். ஆகையால் தான் அந்தப் போர் விரைவில் நெருங்கி வந்து விடாதபடி எப்படித் தடுப்பதென்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்து மூழ்க நேர்ந்தது. எதிரிகள் எவ்வாறு நேரடியாகப் போருக்கு வந்து விடாமல் கலவரங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திச் சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ, அப்படி நாமும் ஏதாவது செய்தால் என்னவென்று அவருக்குத் தோன்றியது.

சிந்தித்துக் கொண்டே இருந்தவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவர் போல் அரண்மனை மெய்க்காவலர் படைத்தலைவன் சீவல்லபமாறனை அழைத்து வருமாறு ஒரு சேவகனை அனுப்பினார். அவரால் அனுப்பப்பட்ட சேவகன் சீவல்லபமாறனைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்கு அவசரமாகச் சென்றான்.

மகாமண்டலேசுவரர் குறுக்கும், நெடுக்குமாக உலாவுவது போல நடந்தார். 'முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வேறு வழி இல்லை' - வாய்க்குள்ளேயே இந்தச் சொற்களை மெல்லச் சொல்லிக் கொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அளவு பிசகாமல் காலடி பெயர்த்து வைத்து அவர் நடந்த நிமிர்வான நடை உள்ளத்துச் சிந்தனையின் தெளிவைக் காட்டியது.

சீவல்லபமாறன் வந்து அடக்க ஒடுக்கமாக வணங்கி விட்டு நின்றான். மகாமண்டலேசுவரர் அவனை வரவேற்றார். "வா அப்பா! உன்னை வரவழைத்த காரியம் மிக அவசரம். அதற்கு நீ தயாராக இருப்பாய் என்றே நினைக்கிறேன்" என்று கூறினார்.

"மகாமண்டலேசுவரரின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதற்கு அடியேன் தயாராக இருந்துதான் ஆகவேண்டும்."

"கட்டளை இருக்கட்டும். அதற்கு முன்பு வேறோரு எச்சரிக்கை. நீயோ மெய்க்காவற் படைத்தலைவன்; மெய்க் காவலனுக்கு மெய்யைக் காக்க தெரிந்திருக்க வேண்டும். இப்போது நான் கூறப்போகும் மெய், உன்னையும் என்னையும் தவிர்த்துப் புறம் போகக்கூடாத மெய். ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கப் போகிற மெய்."

"புறம் போகக் கூடாதென்பது தங்கள் விருப்பமாயின் அப்படியே மனத்தில் பாதுகாத்துக் கொள்வேன்."

"நல்லது! ஏற்பாட்டைச் சொல்லட்டுமா?"

"சொல்லுங்கள்."

"பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்தவர்களாகவும், எங்கும், எந்த விதத்திலும் வேடமிட்டு நடிக்கத் தெரிந்தவர்களாகவும், உயிருக்கு அஞ்சாதவர்களாகவும், ஓர் ஐம்பது வீரர்கள் இப்போது உன்னிடமிருந்து எனக்குத் தேவை!"

அவரையும், அவருடைய வார்த்தைகளையும் விளங்கிக் கொள்ள முடியாமல் திணறிப் போய் மருண்டு பார்த்துவிட்டுக் கேட்டான் அவன்:

"ஐம்பது வீரர்களா வேண்டும்?"

"ஆம்! எண்ணி ஐம்பது பேர்கள் வேண்டும் எனக்கு."

"அரண்மனை மெய்க் காவற் படையினரில் இருந்து தான் ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு ஆட்கள் இல்லை!"

"செய்! ஆனால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நான் கூறிய தகுதிகளுக்குப் பொருந்தியிருக்க வேண்டியது மிகவும் அவசியம்."

சீவல்லபமாறன் அதற்கு ஒப்புக் கொண்டு போனான். மகாமண்டலேசுவரர் எதை எண்ணியோ சிரித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் வண்ணமகள் புவன மோகினி அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தாள்.

"சுவாமி! தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதியைக் காணவில்லை. இன்று காலை மகாராணியார் பார்த்து அழைத்து வரச் சொன்னார்கள். போய்ப் பார்த்தேன்; இல்லை. அரண்மனையில் எங்குமே தளபதியின் தங்கையைக் காணாததால் எங்களுக்கு ஒரே கவலையாக இருக்கிறது. செய்தியை அறிந்து மகாராணியாரும் மனக் கலவரமடைந்தார்கள். தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்."

"அதங்கோட்டாசிரியர் மகள் விலாசினியைக் கேட்டால் தெரியுமே? அந்தப் பெண்கள் இருவரையும் எப்போதும் சேர்ந்தே காண்கிறேன் நான்!" - வியப்பை மறைத்துக் கொண்டு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.

"விலாசினி இங்கு இல்லை. இன்று காலை ஆசிரியரும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் போகும் போது அந்தப் பெண்ணும் போய்விட்டாள்" என்று மீண்டும் பரபரப்பான குரலில் முறையிட்டாள் வண்ணமகள்.

"அந்தப் பெண் காணாமல் போய்விட்டாளே என்று மகாராணியோ நீங்களோ யாருமே கவலைப்பட வேண்டாம். அவள் தைரியசாலி. ஏமாறுகிறவள் இல்லை. ஏமாற்றும் ஆற்றலுள்ளவள். காரியமாகத்தான் அவள் காணாமல் போயிருப்பாள்."

பெரிதாகக் கவலைப்படும்படி எதுவும் நடந்து விடாத மாதிரி அலட்சியமாகப் பேசினார் அவர். மகாமண்டலேசுவரர் அந்தப் பெண் காணாமற் போனது பற்றி அக்கறையில்லாமல் பேசுவது ஏனென்று வண்ணமகளின் சிற்றறிவுக்கு எட்டவில்லை! அவள் திரும்பிச் சென்றாள்.

'ஆண்களும் பெண்களும், சிறியவர்களும் பெரியவர்களுமாகத் தெரிந்தும், தெரியாமலும் என்ன என்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அரண்மனையில் காணாமற் போகிறார்கள், வருகிறார்கள். என்னைப் போல் பொறுப்பும், பதவியும் உள்ளவனுக்குத்தான் மாபெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் இருப்பதாக நான் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். கூர்ந்து நோக்கினால் வேறு சிலரும் இந்தப் பெருமைக்குப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா தெரிய வருகிறது!' வேடிக்கையாக இவ்வாறு எண்ணி நகைத்துக் கொண்டார் அவர்.

அப்போது சீவல்லபமாறன் திரும்ப வந்து, "மகாமண்டலேசுவரரின் திருவுள்ளப்படி திறமையான வீரர்களைத் தயார் செய்துவிட்டேன். அவர்கள் எல்லோரும் காவற்படை மாளிகையில் தங்கள் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இனி மேலே செய்ய வேண்டியதென்ன?" என்றான். அவர் புன்னகை பூத்தார்.

"மேலே செய்ய வேண்டியதா!... இதோ என் அருகில் வா... சொல்கிறேன்." சீவல்லபன் மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான்.

"உன் வலது உள்ளங்கையை நீட்டு!" அவன் நீட்டினான். குபீரென்று ஒரு நீளமான கருவேல முள்ளை எடுத்து அவனது சிவந்த உள்ளங்கையில் பதியும்படி குத்தினார் அவர். அவன் வலி பொறுக்க முடியாமல் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அவருடைய செயலின் பொருள் புரியாமல் முகத்தை சுளித்துக் கொண்டான்.

"வேறொரு கருவியின் துணையின்றி இதை எப்படி எடுப்பாய்?" ஒன்றுமறியாத பச்சைக் குழந்தையை வினாவுவது போல் வினவினார்.

"..." அவன் பதில் கூறவில்லை. "இதோ இப்படி எடுக்க வேண்டும்" என்று மற்றொரு கூரிய முள்ளால் அதைக் கிளறி வெளியே எடுத்துவிட்டுச் சிரித்தார் அவர். குன்றிமணி பழுத்தது போல் ஒரு துளி குருதி உருண்டு எழுந்தது அவன் கையில்.

மகாமண்டலேசுவரரின் அதிசயிக்கத்தக்க இந்தச் செயல் மெய்க்காவலர் படைத் தலைவனான சீவல்லபமாறனைத் திகைக்க வைத்தது. குழம்பிய உள்ளத்துடன் அவன் அவரைப் பணிவோடு நிமிர்ந்து பார்த்தான். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறியும் ஆவல் அவன் முகத்தில் நிறைந்திருந்தது.

"சீவல்லபமாற! நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் இது போன்றதொரு வேலையைத்தான் செய்ய வேண்டும். இது உனக்கு விளங்கியிருக்காது. விளக்கமாகச் சொல்கிறேன் கேள்!" என்று ஆரம்பித்தார் அவர்.

12. கொடும்பாளூர் உடன்படிக்கை

கோனாட்டின் பெரு நகரமாகிய கொடும்பாளூர் அன்று வைகறையிலிருந்தே புதுமணப் பெண் போல் அழகு பொலிந்து விளங்கியது. அரண்மனைச் சுற்றுப்புறங்களும் வீதிகளும் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வரும் அகன்ற வீதியில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். உயர்ந்தோங்கி நின்ற பெரிய மலையைப் போன்ற கோட்டையின் பிரதான வாசலில் பூரண கும்பங்களோடும், பொற்பாலிகைகளுடனும், அரண்மனையைச் சேர்ந்த உடன் கூட்டத்துப் பெருமக்கள் சூழக் கொடும்பாளூர் மன்னன் நின்று கொண்டிருந்தான். யாரோ மதிப்புக்குரிய பெரியவர்களை மரியாதையாக வரவேற்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தென்பட்டது. கோட்டைச் சுவரின் மேல் பக்கத்துக்கு ஐந்து பேராக நுழைவாயிலின் இருபுறமும் நின்று கொண்டு திருச்சின்னம் எனப்படும் நீண்ட வளைந்த இசைக் கருவியையும் முரசங்களையும் முழக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த மகத்தான வரவேற்பு ஏற்பாடுகள் எல்லாம் யாருக்காக, எதன் பொருட்டு - என்று நேயர்களுக்குச் சந்தேகமாக இருக்கிறதல்லவா. இதுவரை கதையுடனும் கதாபாத்திரங்களுடனும் தென்பாண்டி நாட்டுப் பகுதிகளிலும், கடற் பிரதேசத்திலுமே சுற்றிக் கொண்டிருந்து விட்டோம். கதையின் தொடக்கத்தில் ஒரே ஒரு முறை உறையூரில் நடந்த வடதிசையரசர் சதிக் கூட்டத்தையும் அதன் விளைவாக நாகப்பட்டினத்திலிருந்து மகாராணியையும் குமாரபாண்டியனையும் கொலை செய்யவும் தென்பாண்டி நாட்டு நிலையை அறியவும், ஒற்றர்கள் அனுப்பப்பட்டதையும் காண்பதற்காகப் பாண்டி நாட்டு எல்லையைக் கடந்து செல்ல நேரிட்டது. இதுவரை இந்த வரலாற்றுப் பெருங்கதையில் நமக்கும், கதைக்கும் வேண்டிய தன்மையான மனிதர்களை மட்டுமே அதிகமாகச் சந்தித்துக் கொண்டு வந்தோம். எதிரிகளையும் சந்திக்க வேண்டாமா? உறையூரில் முன்பு சந்தித்த பின் இப்போது இரண்டாவது முறையாகக் கொடும்பாளூரில் சந்திக்கப் போகிறோம்.

ஆம்! சோழ கோப்பரகேசரி மகாமன்னர் பராந்தகரும் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையானும் இன்னும் இது வரையில் நமக்கு அறிமுகமாகாத பரதூருடையான், கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன் என்னும் இருவரும் அன்று காலை கொடும்பாளூருக்கு வருகிறார்கள். அதற்காகத்தான் அத்தனை வரவேற்பு ஏற்பாடுகள். அன்று உறையூரில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு தென் திசைப் படையெடுப்பைப் பற்றிய மேல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்காக இந்த இரண்டாவது கூட்டத்தைக் கொடும்பாளூரில் கூட்டியிருந்தான் அதன் சிற்றரசன். சோழ நாடும், பாண்டி நாடும் சந்திக்குமிடத்தில் இரண்டையும் இணைக்கும் நிலப்பகுதி போல் விளங்கிய கோனாடும் அதன் ஆட்சிப் பொறுப்பும் கொடும்பாளூரானிடம் இருந்தன.

தங்கள் தலைநகரத்துக்கு வரும் சோழனையும் மற்றவர்களையும் ஆசை தீரக் கண்டு களிப்பதற்குத்தான் கோனாட்டு மக்கள் கொடும்பாளூர் அரண்மனைக்கும், கோட்டைக்கும் போகும் சாலையில் அவ்வாறு திரண்டு கூடியிருந்தார்கள். சாலையின் கிழக்குக் கோடியில் நான்கு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்தோடி வந்தன. எல்லோருடைய கண்களிலும் ஆவல் நிறைந்திருந்தது. திருச்சின்னங்களும், முரசங்களும் திசைகள் அதிர ஒலித்தன. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிலர் வருகிற மன்னர்களுக்குத் தங்கள் மனக்களிப்பையும், ஆர்வத்தையும் தெரிவித்துக் கொள்ள எண்ணி முன்னேற்பாடாக வாங்கிக் கொண்டு வந்திருந்த மலர்களை வாரித் தூவினர். சிலர் பெரிய பெரிய வெண்தாமரைப் பூக்களையும், செந்தாமரைப் பூக்களையும் தூக்கி எறிந்த போது அவை வெண்ணிறமும் செந்நிறமும் பொருந்திய புறாக்கள் பறந்து போகிற மாதிரிப் போய்க் குதிரை மேல் செல்லும் அரசர்கள் போல் விழுந்தன. சோழனையும், ஏனையோரையும் வரவேற்று வாழ்த்தும் குரல்கள் கடலொலி போல் அதிர்ந்தன.

உடலை ஒட்டினாற் போன்று இறுக உடையணிந்திருந்த நான்கு ஆடல் மகளிரிடம் பூரண கும்பங்களைக் கொடுத்து முன் நிறுத்தினான் கொடும்பாளூர் மன்னன். இன்னும் சில கன்னிகைகள் பொற் பாலிகைகளை ஏந்தி அழகு படையெடுக்க நிற்பது போல் அணிவகுத்து நின்றனர். மங்கல விளக்குகளை உயர்த்திப் பிடித்தனர். பனைமரக் கொடிகள் எங்கும் பறந்து கொண்டிருந்தன. குதிரைகள் வந்து நின்றதும், அவற்றின் மேலிருந்தவர்கள் சிரித்த முகத்தோடு கீழே இறங்கி எல்லோருக்கும் வணக்கம் செலுத்தினர். கொடும்பாளூரான் ஆசையோடு ஓடி வந்து சோழனை மார்புறத் தழுவிக் கொண்டான். பின்பு மற்ற மூவரையும் அதே போல் மார்புறத் தழுவி வரவேற்றான்.

"புலியின் பாதுகாப்பில் இந்தப் பனைமரம் வளர்ந்து வருகிறது. சோழ மண்டலப் பேரரசின் அன்பும், ஆதரவும் இந்தப் பனைமரத்துக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்" - மலர்ச்சியும், சிரிப்பும் கொஞ்சிக் குழையும் முகத்துடனே இப்படிக் கூறிக் கொண்டே கொடும்பாளூரான் சோழனுக்கு மாலை சூட்டினான். மற்றவர்களுக்கு உடன் கூட்டத்துப் பெருமக்களும், அமைச்சர்களும் மாலையிட்டனர்.

எல்லோரையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான் கொடும்பாளூரான். சோழனுக்குப் பக்கத்தில் நடந்து சென்ற அவன், "அரசே! நாம் நாகைப்பட்டனத்திலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பிய ஆட்கள் தெற்கேயிருந்து ஏதேனும் இரகசியச் செய்திகள் அனுப்பினார்களா? அவர்கள் போன காரியம் என்ன ஆயிற்று?" - என்று காதருகில் மெல்லக் கேட்டான்.

"அதைப் பற்றி நம்முடைய தனிக் கூட்டத்தில் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்" என்று சுருக்கமான மறுமொழி கிடைத்தது சோழனிடமிருந்து. உரிமை கொண்டாடி ஆர்வத்தோடு கேட்ட தன் கேள்விக்கு அங்கே அப்போதே சோழன் விடை சொல்லாதது கொடும்பாளூர் மன்னனுக்குக் கொஞ்சம் வருத்தத்தை அளித்தது.

கொடும்பாளூர் அரண்மனையில் மிக ரகசியமானதொரு பகுதியில் ஐந்து அரசர்கள் சந்தித்தார்கள். முன்றையக் கூட்டத்தைக் காட்டிலும் இது முக்கியமான கூட்டமாகையினால் அமைச்சர்கள் பிரதானிகளைக் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு விடவில்லை.

சோழன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தான். "உறையூரில் சந்திக்கும் போது நாம் மூவராயிருந்தோம். இப்பொழுது கொடும்பாளூரில் ஐந்து பேராக வளர்ந்திருக்கிறோம். இது நம்முடைய எண்ணத்தின் வெற்றிக்கு ஒரு சிறிய அறிகுறிதான். காவிரிக் கரையிலிருந்து காந்தளூர்ச் சாலையீறாக அவ்வளவு பிரதேசமும் சோழப் பேராட்சி ஒன்றுக்கே உட்பட்டிருக்க வேண்டும் என்பதில் நம்மையெல்லாம் காட்டிலும் கொடும்பாளூர் அரசருக்கு அவா அதிகம். மூன்று பேராக இருந்த நாம் ஐந்து பேராக வளர்ந்திருப்பது கூட அவருடைய முயற்சியின் விளைவேயாகும். கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதனையும், பரதூருடையானையும் நாம் நல்வரவு கூறி நம்முடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். அவ்வாறு சேர்த்துக் கொள்வதில் உங்களில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காதென்று எண்ணுகிறேன்."

கருத்து மாறுபாடு இல்லை என்பதற்கு அடையாளமாக எல்லோரும் தலையை ஆட்டித் தங்கள் இணக்கத்தைக் காட்டினர்.

"நம்முடைய நோக்கமெல்லாம் சோழ நாட்டுக்குத் தெற்கே வேறு ஒருவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வேறொரு நிலப்பரப்பு இருக்கக் கூடாதென்பது தான். அதற்கு ஒத்து உழைக்க எத்தனை பேர் சேர்ந்தாலும் நம்மோடு அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று கொடும்பாளூரான் அந்தக் கருத்தை ஆதரித்தான்.

சோழன் மேலும் கூறலானான்: "கூடியவரை போர் செய்து துன்பப்படாமலே நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு விடலாம் என்று உறையூரில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் செய்தோம். கொடும்பாளூர் மன்னர் அன்று உறையூரில் கூறிய திட்டப்படி இளவரசன் இராசசிம்மனையும், மகாராணி வானவன்மாதேவியையும் சூழ்ச்சியாக அழித்து விடுவதற்கும் மகாமண்டலேசுவரரை நம் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம். கப்பல் மார்க்கமாக நம் ஆட்களைத் தென்பாண்டி நாட்டுக்கும் ஈழத் தீவுக்கும் அனுப்பினோம். ஆனால் அந்தப் பழைய ஏற்பாடுகளெல்லாம் நமக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை." இடையில் அரசூருடையான் குறுக்கிட்டு ஏதோ கேட்கத் தொடங்கவே சோழன் பேச்சுத் தடைப்பட்டது.

"அந்தச் சூழ்ச்சிகள் வெற்றியளிக்குமென்றுதான் அவற்றைச் செய்தோம். இல்லையானால் உடனே படையெடுப்புக்கு வழி செய்வதைத் தவிர வேறு முயற்சியில்லை."

"அவசரப்படாதீர்கள். நான் தான் ஒவ்வொரு விவரமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேனே! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின் அவரவருடைய கருத்துக்களைச் சொல்லுங்கள், போதும். நாம் நாகைப்பட்டனத்திலிருந்து கப்பலில் அனுப்பிய ஆறு ஆட்களில் மூன்று பேரைத் தென்மேற்குக் கோடியிலுள்ள விழிஞம் துறைமுகத்தில் இறக்கி விட்டு விட்டு மற்ற மூவரோடு கப்பல் ஈழ நாட்டுக்குப் போய்விட்டதாம். விழிஞத்தில் இறங்கிய நம் ஆட்களான செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகிய மூவரும் தென்பாண்டி நாட்டுக்குள் புகுந்து கன்னியாகுமரிக் கோயிலில் வானவன்மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. நாம் இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்குமாறு அனுப்பிய ஓலையை நம் ஆட்களோடு போரிட்டுத் தளபதி வல்லாளதேவன் கைப்பற்றிக் கொண்டு விட்டானாம். வடதிசைப் பேரரசுக்கு உட்பட்டு நம்மோடு சமரசமாக அடங்கியிருக்க விரும்பினால் திருப்புறம்பியத்தில் வந்து நம்மைச் சந்திக்குமாறு இடையாற்று மங்கலம் நம்பியைக் கேட்டுக் கொண்டு அந்த ஓலையை எழுதியிருந்தோம் நாம். வானவன்மாதேவியைக் கொலை செய்ய இயலாததனாலும், இடையாற்று மங்கலம் நம்பி இதுவரையில் சந்திக்க வராததனாலும் அந்தத் திட்டம் இனிமேற் பயன்படாது. எனினும் நம்முடைய ஒற்றர்கள் மூவரும் இன்னும் தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேதான் மறைவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எனக்கு அடிக்கடி போதுமான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன."

"குமார பாண்டியனைக் கொல்லுவதற்காக ஈழ நாட்டுக்குப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றித் தாங்கள் ஒன்றுமே கூறவில்லையே?"

அதுவரையில் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கொடும்பாளூர் மன்னன் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.

"அவர்களைப் பற்றித்தான் எனக்கும் இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விரைவில் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் வந்தால் நாகைத் துறைமுகத்தில் இறங்கியதும் உடனே இங்கு வருமாறு கூறியிருக்கிறேன். தாமதமின்றி இங்கே கூப்பிட்டுக் கொண்டு வருவதற்கு துறைமுகத்துக்கே ஆட்களை அனுப்பி எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கச் செய்திருக்கிறேன்."

"தென்பாண்டி நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் நம் ஒற்றர்கள் போதுமான செய்திகளை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே, அந்தச் செய்திகளையெல்லாம் நாங்களும் அறிந்து கொள்ளலாமோ?"

அரசூருடையானின் இந்தக் கேள்விக்குச் சோழன் சிரித்துக் கொண்டே பதில் கூறினான்:

"நம்முடைய புதிய நண்பர்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்துக் கேட்பது போல் பழைய நண்பர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள். யோசனைகளைக் கூறுகிறார்கள். நம் அரசூருடைய சென்னிப் பேரரையர் கேட்பதற்கு முன் தென்பாண்டி நாட்டிலிருந்து ஒற்றர்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நானே விரிவாகச் சொல்ல வேண்டுமென்றிருந்தேன். அதற்கு முன்னால் உங்களையெல்லாம் கலந்தாலோசித்துக் கொள்ளாமல் நான் செய்திருக்கும் ஒரு சில செயல்களுக்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். 'நாம் மிக விரைவில் படையெடுத்துவிடப் போகிறோம்' என்ற பெரும் பீதியைத் தென்பாண்டி நாடு எங்ஙணும் உண்டாக்குவதற்காக ஒரு தந்திரம் செய்தேன். நம் வீரர்களை வணிகர்கள் போலவும், தலயாத்திரை செய்பவர்கள் போலவும் நிறைய அனுப்பியிருக்கிறேன். தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையான கரவந்தபுரத்துப் பகுதிகளில் நம் ஆட்கள் திடீர் திடீரென்று கலகங்களையும், குழப்பங்களையும் செய்து போர் நெருங்கி வருவது போல் அச்சுறுத்துகிறார்கள். கொற்கையில் நடந்த முத்துக்குளி விழாவின் போது நம்மிடமிருந்து போன ஆட்கள் உண்டாக்கிய கலவரம் தென்பாண்டி நாட்டையே நடுங்கச் செய்திருக்கிறது. வட எல்லைக் காவலனும், கரவந்தபுரத்து அரசனுமாகிய பெரும்பெயர்ச்சாத்தன் அஞ்சிப் போய் மகாமண்டலேசுவரருக்குத் தூது அனுப்பி விட்டான். அந்தத் தூதுவன் மகாமண்டலேசுவரரிடமிருந்து கரவந்தபுரத்துக்கு வாங்கிக் கொண்டு போன பதில் செய்தியை நம் ஆட்கள் எப்படியோ கைப்பற்றி, இங்கே எனக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். அதில் முக்கியமான விவரம் ஒன்றுமில்லாவிட்டாலும் உண்மையிலேயே நாம், இன்றோ நாளையோ படையெடுத்து வந்து விடப் போகிற மாதிரி எண்ணி அரண்டு படை ஏற்பாடுகளைத் தயார் செய்யும் முனைப்பு தெற்கே உண்டாகிவிட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது. இதே போல் கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் நடக்கும் செய்தித் தொடர்புகளைக் கண்காணித்தோ, கைப்பற்றியோ அனுப்பவேண்டுமென்று நம் ஆட்களுக்குக் கூறி அனுப்பியிருக்கிறேன். சாமர்த்தியமும், திறமையும் போதாத காரணத்தினால், நம் ஆட்களில் சிலர் அகப்பட்டு விட்டனர். அவர்கள் கரவந்தபுரத்துச் சிறைச்சாலையில் சிக்கி விழித்துக் கொண்டிருக்கிறார்களாம்..."

"புலி வருகிறது, புலி வருகிறதென்று பயமுறுத்திக் கொண்டிருப்பதனால் மட்டும் நமக்கு பயன் என்ன? படையெடுத்துப் போய்விட வேண்டும்."

பேசுவதற்குக் கூச்சப்படுகிறவனைப் போலப் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்டன் அமுதன் மேற்கண்டவாறு உடனே படையெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.

"நிதானமாகச் செய்வோம். இன்று ஒரு நாளில் செய்து விட முடிகிற முடிவில்லை இது. இங்கே கொடும்பாளூரிலேயே தங்கி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவோம். அதற்குள் நமக்கு ஏதாகிலும் நம்பிக்கையூட்டும் புதிய செய்திகள் தெற்கேயிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம்." சோழன் விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிச் சமாளித்தான். அதன் பின் சோழனும், கொடும்பாளூர் மன்னனும் சிறிது தொலைவு தள்ளிப் போய் நின்று தனியாகத் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு திரும்பவும் பழைய இடத்துக்கு வந்து எல்லோரோடும் அமர்ந்தார்கள்.

அப்படி அமர்ந்தவுடன் தனக்கே சொந்தமான முரட்டுக் குரலில் கனைத்துக் கொண்டு ஏதோ இன்றியமையாத விஷயத்தைப் பேசுகிறவனின் முகச்சாயலோடு தொடங்கினான் கொடும்பாளூரான்:

"நண்பர்களே! நம் எல்லோருக்கும் நோக்கமும் நினைவும் ஒன்றானாலும் அரசும், ஆட்சியும் வேறு வேறாக இருப்பவை. 'நன்றாற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை' என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். எல்லாவகையிலும் ஒருவருக்கொருவர் முழு மனத்தோடு ஒத்துழைப்பதென்று முதலில் நாம் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும். இன்று கொடும்பாளூர் அரச மாளிகையின் ஒரு மூலையில் நாம் ஐவருக்குள்ளே செய்து கொள்ளும் இந்த உடன்படிக்கைதான் எதிர்காலத்தில் தமிழ் வழங்கும் நிலம் முழுவதும் சோழ நாடாக ஒருமை பெற்று விரிவடையினும் நம்மை பிரிக்க முடியாத உடன்படிக்கை. கை விரல்கள் ஐந்து, ஆனால் கை ஒன்றுதான். தனித் தனியாகச் சொந்த நன்மைகளைப் பொருட்படுத்துவதில்லை என்றும் வெற்றிகள் அடைந்தால் அந்த வெற்றிக்காகத் தனித்தனியே பெருமைப்படுவதில்லை என்றும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது கூட்டணியின் மாபெரும் படைக்கு அரசூருடையாரையும், பரதூருடையாரையும் தளபதிகளாக்கி மற்ற மூவரும் போர்த்தலைவர்களாக இருக்கட்டும் என்றே மதிப்புக்குரிய சோழமன்னர் கருதுகிறார். அந்தக் கோரிக்கைக்கு இணங்குகிறோம் என்பதற்கு அடையாளமாக வாள்களை உறைகழித்து நீட்டிச் சத்தியம் செய்வோம்" என்று சொல்லிக் கொண்டே தன் வாளை உருவி நீட்டினான் கொடும்பாளூரான். அடுத்த கணம் மற்ற நான்கு கைகளும் ஒரே சமயத்தில் வாள்களை உருவும் ஒலி உண்டாயிற்று. ஐந்து வாள்கள் நுனி கூடி உறவாடுவது போல் கூடாரமிட்டுக் கொண்டு நின்றன. அந்த வாள்களின் நுனி கூடுமிடத்தில் எங்கிருந்தோ ஒரு வண்டு பறந்து வந்து உட்கார்ந்தது. பாண்டியர் பலத்தையே அடித்து வீழ்த்துகிறவனைப் போல் கடுப்போடு அந்த வண்டை அடித்துத் தள்ளினான், கொடும்பாளூரான். "அரசே அவசரமாக ஓர் ஒற்றன் வந்திருக்கிறான்" என்று சோழனை விளித்துக் கொண்டு உள்ளே வேகமாக வந்த ஒரு வீரன் முகத்தில் போய் விழுந்தது அந்தச் செத்த வண்டு.

13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை

குணவீரபண்டிதர் வந்து உரையாடி விட்டுப் போன மறுநாள் காலை மகராணி வானவன்மாதேவிக்கு அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. அரசபோக ஆடம்பரங்களின் நடுவே எல்லோரும் வணங்கத்தக்க நிலையில் இருந்தும் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி நிறையாமலே இருந்து கொண்டிருந்தது. நிறைந்த வசதிகள் நிறையாத நெஞ்சம், உயர்ந்த எதிர்கால நினைவுகள், உயராத நிகழ்காலச் சூழ்நிலை இப்படித் தவித்துக் கொண்டிருந்தது அந்தப் பேருள்ளம். அந்தத் தவிப்பை மாற்ற விலாசினியும், பகவதியும் உடன் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அந்த ஒரே ஆறுதலும் இப்போது இல்லை.

அன்று விடிந்ததும் வானவன்மாதேவிக்கு விலாசினி திடீரென்று தந்தையோடு ஊருக்குச் சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. பகவதியாவது அரண்மனையில் இருப்பாள் என்று எண்ணி அவளை அழைத்து வரச் சொல்லி வண்ணமகளை அனுப்பினார் மகாராணி. பகவதி அரண்மனை எல்லையிலேயே காணப்படவில்லை என்று அறிந்ததும் அவருக்குப் பயமும் கவலையும் உண்டாயிற்று. புவன மோகினியின் மூலம் அந்தச் செய்தியை மகாமண்டலேசுவரருக்குச் சொல்லி அனுப்பினார்.

கோட்டாற்றுத் துறவி எழுதிக் கொடுத்துவிட்டுப் போன அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடச் சொல்லிக் கேட்க வேண்டுமென்று தோன்றியது மகாராணிக்கு. உலக வாழ்வின் அடிமூலத்துக்கும் அடிமூலமான கருத்தை அந்தப் பாட்டுக்குள் பொதிந்து வைத்திருப்பதாக அதைக் கேட்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு மனத்தோற்றம் உருவாயிற்று.

குமார பாண்டியனைப் பற்றி மகாமண்டலேசுவரர் வந்து கூறிய விவரங்கள் அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருந்தன. மகனைப் பற்றிய கவலை, மகன் ஆளவேண்டியதாயிருந்தும் அவனால் ஆளப்படாமல் இருக்கிற நாட்டைப் பற்றிய கவலை, மலர் போன்ற உள்ளம் கொண்ட மகாராணிக்கு இத்தனை கவலைகளையும் சற்றே மறந்து புனிதமான சிந்தனைகளில் ஈடுபட அந்தப் பாடல் உதவி செய்தது. விலாசினியாவது, பகவதியாவது உடனிருந்தால் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது ஆடல் பாடல்களில் சுவையான அனுபவத்தில் தன்னை மறக்கலாம். அவர்களும் அரண்மனையில் இல்லை? மகாமண்டலேசுவரர் அந்தப்புரப் பகுதிக்குள் அதிகம் வருவதில்லை! அன்று குமார பாண்டியனைப் பற்றிய உண்மை நிலைகளை அவர் வந்து தனிமையில் கூறிய போதே, மகாராணிக்குத் தாங்க முடியாத துயரம் அழுகையாகப் பொங்கிக் கொண்டு வந்தது. வீணாக அடிக்கடி மகாராணியாரைச் சந்திக்கச் சென்று எதையாவது கூறி அவர் மனத்தில் உணர்ச்சி நெகிழுமாறு புண்படுத்தக் கூடாதென்று மகாராணியைக் காணாமல் இருந்தார் மகாமண்டலேசுவரர். கோட்டாற்றுப் பண்டிதரையும் நினைத்த போதெல்லாம் வரவழைத்து அவர் பெருமை குறையும்படியாக நடந்து கொள்ள முடியாது.

சொன்னதைக் கேட்கவும், கேட்டதைக் கொடுக்கவும் எத்தனை பணிப்பெண்களோ இருந்தார்கள்? யார் இருந்தால்தான் என்ன? யார் போனால் என்ன? நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலைய வேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழை போல் வெறுமை சூழ்கிறது. ஒரே சுவைக் கலப்பற்ற தனிமை! உள்ளும் புறமும், நினைவும் கனவும், எங்கும் எதுவும் சூனியமாய்ப் பாழ்வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக் கொள்ள முடியாதது போல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்டமாட்டேனென்கிறது.

மகாராணி அந்தப் பெரிய மாளிகையில் சிறிதும் நிம்மதியின்றி இருந்தார். குமார பாண்டியனைப் பற்றிய நினைவுகள், நாட்டின் எதிர்காலம், போர் வருமோ என்ற பயம் எல்லாம் ஒன்றாய்க் கூடி நின்று, 'ஓடு! ஓடு!' என்று அந்தத் தனிமையிலிருந்து எங்கோ துரத்துவது போல் இருந்தது. சொற்களின் பொருள் வரம்புக்குள் இழுத்துப் பிடித்து விளக்க முடியாத ஒரு தாபம் - ஆத்மதாபம், அகன்ற மாளிகையின் நீண்ட இடங்களைக் கடந்து உயர்ந்த மதில்களுக்கு அப்பால் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட வேண்டும் என்று உந்தித் தள்ளுவது போல் உள்ளத்தில் குமிழியிட்டது.

"தேவி! உணவருந்துவதற்கு எழுந்தருள வேண்டும்" என்று ஒரு பணிப்பெண் வந்து அழைத்தாள். மகாராணி பதில் சொல்லவில்லை!

"நீ போய் வண்ணமகள் புவன மோகினியை வரச்சொல்" பணிப்பெண் உணவருந்துவதற்கு அழைத்ததையே காதில் போட்டுக் கொள்ளாமல் அவளை வேறொரு பணிக்கு ஏவினார் மகாராணி. சிறிது நேரத்தில் வண்ணமகள் வந்தாள்.

"புவன மோகினி! நான் உடனே தாணுமாலய விண்ணகரத்துக்குப் புறப்பட வேண்டும். சுசீந்திரத்துக்குச் சிவிகை ஏற்பாடு செய். நீயும் உடன் வரவேண்டும்."

முன் தகவல் இல்லாமல், உணவருந்தாமல், திடீரென்று இப்படி மகாராணி கோவிலுக்குப் புறப்பட வேண்டுமென்று கூறியதைக் கேட்டுப் புவன மோகினி திகைத்தாள்.

"தேவி தாங்கள் இன்னும் உணவைக் கூட முடித்துக் கொள்ளவில்லையே? அதற்குள்..."

"பசி இப்போது வயிற்றுக்கு அல்ல, ஆன்மாவுக்கு! கேள்வி கேட்டுக் கொண்டு நிற்காதே, போய் உடனே ஏற்பாடு செய்."

வண்ணமகள் பதில் பேச வாயிழந்து சிவிகை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றாள். படைவீரர்கள் துணை வராமல் தனியாக மகாராணி எங்கும் புறப்படக் கூடாதென்று அன்று கன்னியாகுமரியில் வந்த ஆபத்துக்குப் பின் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் யாருக்கும் தெரியாமல், யாருடைய பாதுகாப்பும் இன்றிச் சுசீந்திரத்துக்குப் போய் வர முடிவு செய்திருந்தார் மகாராணி. மகாமண்டலேசுவரருக்கோ, மெய்க்காவற் படை வீரர்களுக்கோ தன் புறப்பாட்டைப் பற்றி அவர் தெரிவிக்கவே இல்லை! பரிவாரங்கள் புடைசூழ ஆரவாரம் நிறைந்த அரச மரியாதைகளோடு கோயிலுக்குச் செல்வது, 'நான் மகாராணி... எனக்குப் பெருமை, பீடு, பதவி எல்லாம் உண்டு' என்று பெருமையை அநாவசியமாக அறிவித்துக் கொண்டு போவது போல் வெறுப்பை உண்டாக்கிற்று. அவர் எண்ணினார்:

'உலகத்தின் கண்களுக்கு நான் பாண்டிமாதேவி. இராசசிம்மனின் கண்களுக்கு அன்னை. ஆனால் தெய்வத்தின் கண்களுக்கு நான் ஓர் அபலைப் பெண். எளியவன் செல்வந்தனுக்கு முன் இரவல் நகைகளையும் ஆடை அணிகளையும் பூண்டு தன்னைப் பெரிதாகக் காண்பித்துக் கொள்ள முயல்வது போல் அபலையாக இருந்து கொண்டு அரசியாகப் பெருமை கொண்டாடக் கூடாது.'

சிவிகையில் புவன மோகினி ஒருத்தியை மட்டும் துணைக்கு ஏற்றிக் கொண்டு தனிமையாகப் புறப்பட்டார் வானவன்மாதேவி. கோட்டையின் இரண்டு வாயில்களிலும் மிகுந்த காவல் வீரர்கள். 'ஐயோ! இப்ப மகாராணி தனிமையாகப் போகிறார்களே?' என்று வருந்தத்தான் முடிந்தது. தடுப்பதற்கு அவர்கள் யார்? எல்லாப் பெருமையும் உள்ளவள், இல்லாதவளைப் போல் போக விரும்பும் போது யார் தான் அதைத் தடுத்து நிறுத்த முடியும்?

அது நன்றாகப் பட்டுத் திரையிட்டு மூடப்பெற்ற சிவிகையாதலால் சுசீந்திரத்தை அடைகிற வரையில் அதில் மகாராணி வானவன்மாதேவியார் போகின்றார் என்ற பெரிய உண்மை இடைவழி ஊர்களில் இருந்த மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. தெரிந்திருந்தால் எவ்வளவு பெரிய கோலாகலமான வரவேற்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை ஆரவாரமும் மக்கட் கூட்டமும் சிவிகையின் இருபுறமும் நிரம்பி வழிந்திருக்கும்? அந்த மாதிரிச் சாலைகளில் எத்தனையோ செல்வக் குடும்பத்துப் பெண்கள் அந்த மாதிரிப் பல்லக்குகளில் போவது வழக்கம். அது போல் நினைத்துக் கொண்டு அதை விசேடமாகக் கவனிக்கவில்லை மக்கள். சிவிகை சுமந்து செல்வோருக்கும் கூறக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

தாணுமாலய விண்ணகரத்தின் கோபுர வாயிலில் மகாராணியும், புவன மோகினியும் இறங்கிக் கொண்டார்கள். கோயில் முன்புறமும், உள்ளேயும் கூட்டம் அதிகமாக இருந்தது.

"தேவி! இன்றைக்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வ நீதி மண்டபத்தில் ஏதோ ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்புக் கூறி 'கைமுக்குத் தண்டனை' நிறைவேற்றப் போகிறார்களாம். இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையைக் காண்பதற்குக் கூடியிருக்கிறது" என்று புவன மோகினி விசாரித்துக் கொண்டு வந்து கூறினாள். சாதாரண உடையில் சாதாரணப் பெண்கள் போல் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற அவர்கள் யாருடைய பார்வைக்கும் படாமல் தப்பியது வியப்புதான்.

"புவனி மோகினி! இந்தக் கோயிலுக்கு வந்தால் மட்டும் இரு சிறப்பு. இங்கே படைத்துக் காத்து அழிக்கும் முப்பெருங்கடவுளரின் ஒன்றுபட்ட அம்சத்தைத் தெய்வமாக வணங்குகிறோம்" - மகாராணி வண்ணமகளிடம் கூறிக் கொண்டே சந்நிதிக்கு முன் சென்று வணங்கினார். அர்ச்சகர் அருகில் வந்து பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். அவருக்குக் கையும், காலும் பதறி நடுங்கின.

"தேவி! இதென்ன கோலம்...? இப்படித் தனியாக..." சரியாகப் பேச முடியாமல் வாய் குழறியது அவருக்கு. ஆள் காட்டி விரலை இதழ் வாயிற் பொறுத்திப் பேசாமல் இருக்குமாறு அர்ச்சகருக்குச் சாடை காட்டினார் மகாராணி. அவர் அடங்கினார். கைகூப்பி வணங்கிக் கொண்டே நெடுநேரம் நின்றிருந்தார் மகாராணி. முகத்திலும், கண்களிலும் தெய்விக நிலை ஒளிர்ந்தது. உலகத்தில் மறந்த பெருநிம்மதியில் திளைக்கும் ஓர் அருள் இன்பம் சிறிது நாழிகை தொடர்ந்தது. வழிபாடு முடிந்தது.

"அர்ச்சகரே இன்று ஏதோ கைமுக்குத் தண்டனை நடைபெறுகிறதாமே? வரும் வழியில் இருந்த கூட்டத்தைப் பார்த்து இவள் விசாரித்துக் கூறினாள். அது என்னவென்று விவரம் சொல்லுங்கள்" மகாராணி கேட்டார்.

"தேவி! தங்களுக்குத் தெரியாததொன்றும் இல்லை. நாஞ்சில் நாட்டின் எப்பகுதியில் தெய்வக் குற்றம், ஒழுக்கக்கேடு முதலிய பேரநீதிகள் செய்தவர் மீது அவ்வநீதிக்கு ஆளான எவர் வழக்குத் தொடர்ந்தாலும் அவ்வழக்கைப் பன்னெடுந் தலைமுறைகளாக இந்த கோயிலில் உள்ள தெய்வ நீதிமன்றத்தார் தீர விசாரித்துத் தீர்ப்புக் கூறி வருகிறார்கள். குற்றம் செய்தவர்கள் 'கைமுக்குத் தண்டனை' - பெறுகிறார்கள். இக்கோவிலில் தெய்வ நீதிமன்றத்தார் கைமுக்குத் தண்டனைக்கென்றே ஒரு பெரிய நெய்க் கொப்பரையும் பொன்னாற் செய்த நந்திச்சிலை ஒன்றும் வைத்திருக்கின்றதைத் தாங்கள் அறிவீர்கள். தண்டனைக்குரியோராகத் தீர்ப்புப் பெறுவோர் கொப்பரை நிறையக் காய்ந்து கொதிக்கும் நெய்க்குள் கையை விட்டு, அடியில் கிடக்கும் பொன் நந்தியை வெளியே எடுக்க வேண்டும். தென்பாண்டி நாட்டிலேயே பெரிதாக நினைக்கப்படும் இந்தத் தண்டனையை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் எவருக்குமே அளிக்கப்படவில்லை. அதாவது 'கைமுக்குத் தண்டனை' பெறும் அளவுக்கு இந்தச் சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் யாரும் குற்றம் செய்யவில்லை.

"சென்ற திங்களில் திருவட்டாறு ஆதிகேசவ விண்ணகரத்தில் வழிபாட்டுரிமை பெற்ற சோழிய அந்தணர் ஒருவருடைய புதலவன் அதே விண்ணகரக் கோயிலின் விலைமதிப்பற்ற பொன் அணிகலன்களைத் திருடிக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று எங்கோ மறைந்து விட்டான். சோழிய அந்தணர் தம் மகன் தான் திருடிச் சென்றிருக்கிறான் என்பதனை அறிந்து கொண்டு விட்டார். புதல்வன் செய்தது குற்றமே என்று தயக்கமின்றிச் சுசீந்திரம் தெய்வ நீதிமன்றத்தாருக்கு அக்குற்றத்தை அறிவித்துவிட்டார் அவர். எனினும் குற்றம் செய்த சோழிய இளைஞன் அகப்படவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் காந்தளூரில் ஒரு பொற்கொல்லன் வீட்டில் விண்ணகரத்துப் பொன் நகைகளை அழித்து உருக்கி விடுவதற்கு முயன்று கொண்டிருந்த போது அந்தச் சோழிய இளைஞனைப் பிடித்து விட்டார்கள். இன்று தீர்ப்புக் கூறுகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் 'கைமுக்குத் தண்டனை' யாகையால் மக்கள் திருவிழாக் கூட்டம் போல் பார்ப்பதற்குக் கூடிவிட்டார்கள். கைமுக்கு மண்டபத்துப் பக்கம் போவதற்கே பரிதாபமாக இருக்கிறது" என்றார் அர்ச்சகர்.

"கல்மனம் படைத்த அந்தச் சோழிய அந்தணர், 'என் மகனானால் என்ன? வேறெவனானால் என்ன? செய்தது தவறு. பெற வேண்டியது தண்டனை தான்' என்று பாசத்தை மறந்து நியாயத்தை ஒப்புக் கொள்கிறார். ஆனால்... நான் உங்களிடம் எப்படிச் சொல்வேன், மகாராணி! அவனைப் பெற்ற அந்தச் சோழிய நங்கையின் கதறல் அந்த மண்டபத்தையே சோக வெள்ளத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. அந்தத் தாய் தூணில் முட்டிக் கொள்கிறாள், முறையிடுகிறாள். 'என் மகன் கையை நெய்க் கொப்பரைக்குள் விடு முன் நானே கொப்பரையின் கொதிக்கும் நெய்க்குள் பாய்ந்து உயிரை விட்டு விடுவேன்' என்று அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரே மகன் அவன். தந்தைக்கு நியாயம் பெரிதாகத் தெரிகிறது. தாய்க்குப் பாசம் பெரிதாகத் தெரிகிறது. தாய் ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவள். என்ன செய்வது, தேவி! தாயாக இருந்தால் தான் மகனை உணர முடிகிறது. அடியானாக இருந்தால் தான் தெய்வத்தை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால் தான் அடியாளின் வேதனை தெரிகிறது. வாழ்க்கை நியதி அப்படி அமைந்து கிடக்கிறது."

அர்ச்சகர் உணர்ச்சிகரமாக, உருக்கமாகத் தம் மனத்தில் புதைந்து கிடந்த துன்பங்களை மகாராணிக்கு முன் கொட்டினார். அவர் முடித்ததும் மகாராணி ஆவலோடு கேட்டார்: "அதெல்லாம் சரி! முடிவு என்ன ஆயிற்று? 'கைமுக்குத் தண்டனை'யை நிறைவேற்றினார்களா, இல்லையா?"

"நீதி மன்றத்தார் தண்டனையை அளித்து விட்டார்கள். ஆனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் ஒரு தாயின் இரண்டு கைகள் தடுத்து அடம் பிடிக்கின்றன. நெய்க்கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கூட்டமும் அதைத்தான் வேடிக்கை பார்க்கப் போகிறது. முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை."

அர்ச்சகருடைய வார்த்தைகளைக் கேட்டு முடிந்ததும், மகாராணி வானவன்மாதேவியார் பெருமூச்சுவிட்டார். அவருடைய பேச்சு மகாராணியின் மனத்தில் இரண்டொரு சொற்களை ஆழப் பதித்து விட்டது.

'தாயாக இருந்தால் தான் மகனை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால் தான் அடியானின் வேதனை தெரிகிறது.'

யாரும் அறியாமல் புதையல் எடுத்து எளியவன் அதனைத் திரும்பத் திரும்பத் தனிமையில் தான் மட்டும் பார்த்து மகிழ்வது போல் இந்த உயிரோட்டமுள்ள வாக்கியங்கள் அவர் மன ஆழத்தைத் தொட்டுத் துடிப்பு ஊட்டின.

தெய்வ நீதிமன்றம் அந்தக் கோவிலின் வேறொரு பகுதியில் இருந்தது. ஏக்கத்தோடும், அனுதாபத்தோடும் நிராசையோடும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார் மகாராணி. கூட்டம் திரள்திரளாகத் தெய்வ நீதிமன்றம் இருந்த பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையை வேடிக்கை பார்க்கப் போகிறது. ஆனால் இவ்வளவு பேரும் அடையாத சோக உணர்ச்சி தண்டனை அடைந்தவனைப் பெற்ற தாய்க்கு மட்டும் ஏற்படுகிறது. உலகத்துக்கு வேடிக்கை. தாய்க்கு வேதனை. தாயாக இருந்தால் எத்தனை துன்பங்கள்? ஆனாலும் தாயாக இருப்பதில்தான் எவ்வளவு பெருமை!

யாரையோ அடிப்பதற்காக ஓங்கிய கை, யார் மேலேயோ விழுந்தது போல், எந்தத் தாயையோ நினைத்துக் கொண்டு அர்ச்சகர் கூறிய அந்த வாக்கியம் தம் இதயத்தையே கசக்கிப் பிழிவதை வானவன்மாதேவி உணர முடிந்தது. அந்த விநாடி வானவன்மாதேவியின் மனத்தில் மின்னலைப் போல் ஓர் எண்ணம் உண்டாயிற்று. முகம் மலர விழிகளில் சத்தியம் ஒளிர அர்ச்சகரை நிமிர்ந்து பார்த்தார்.

"அர்ச்சகரே! நீங்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கடந்து உள்ளே போய்க் 'கைமுக்குத் தண்டனை' நிறைவேறும் இடத்தில் நான் இங்கு வந்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் தயவு செய்து இந்தப் பணிப் பெண்ணையும் உடன் அழைத்துச் சென்று அந்தச் சோழிய நங்கையை மட்டும் இங்கே தனியாகக் கூப்பிட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்."

அர்ச்சகருக்கு மகாராணியின் அந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, "அப்படியே அழைத்து வர முயல்கிறேன் தேவி" என்று கூறி புவன மோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு கூட்டத்துக்குள் புகுந்தார். சந்நிதிக்கு முன் தனியாக நின்ற மகாராணி பிறருடைய கவனம் தம்மால் கவரப்படக் கூடாதென்று நினைத்து யாரோ தரிசனத்துக்கு வந்தவள் போலத் தோன்றும்படி ஒரு தூண் ஓரமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள். பாண்டி நாட்டின் மாபெருந் தாய் போன்ற அந்தத் தேவியின் மனம் எங்கோ ஒரு சிறிய ஊரில் கோவிலில் தொண்டு செய்யும் அர்ச்சகரின் மனைவியான மற்றொரு தாய்க்காக நெகிழ்ந்து உருகியது. உலகத்தில் எங்குமே எதற்காகவும் தாய்க்குலம் மனவேதனைப்படக் கூடாதென்கிற மாதிரி ஒரு பரந்த கருணை அந்த மகாராணியின் நெஞ்சில் அந்தச் சில கணங்களில் வந்து நிறைந்து கொண்டது. ஒரு தாயின் துன்பத்தை உணர இன்னொரு தாய். ஆகா! உலகத்துத் தாய்க் குலத்தின் இணையற்ற பெருமை அது.

அர்ச்சகரும், புவன மோகினியும் எப்படியோ அந்தச் சோழிய நங்கையை அழைத்து வந்துவிட்டனர். அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டமும் வந்தது. அழுது அழுது சிவந்த கண்கள், வெளிறிய முகம், கலைந்த கூந்தல், முகம் முழுவதும் தன் மகனின் உயிர் காப்பதற்கு வீறு கொண்டெழுந்த தாய்மை வெறி. 'பார்! இதுதான் உலகத்தின் தாய்மைத் துடிப்பின் உண்மை ஓவியம்' என்று எழுதி ஒட்டியிருப்பது போன்ற முகம் அவளுக்கு. அவளைச் சுற்றிலும் பைத்தியத்தைப் பார்க்க வருவது போல் தொடர்ந்து வந்த கூட்டத்தை அர்ச்சகர் ஏதோ சொல்லி அதட்டி விரட்டினார்.

அந்தத் தாயும் அர்ச்சகரும் புவனமோகினியும், மகாராணி நின்று கொண்டிருந்த தூணுக்கு அருகே வந்தனர். அர்ச்சகரையும், புவன மோகினியையும் ஒதுங்கிச் செல்லுமாறு குறிப்புக் காட்டிவிட்டு அவளை நோக்கி, "வா அம்மா! உன் துன்பத்தைக் கேள்விப்பட்டேன். என் மனம் பெரிதும் கலங்கியது. எனக்கு மட்டுமல்லை, அம்மா! உலகத்துத் தாய்மார்களெல்லாரும் துன்பப்படவே பிறந்திருக்கிறோம். இந்த நாட்டு மகாராணி வானவன்மாதேவியைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அவர் கூடத் தம் மகனை எண்ணித்தான் ஓயாமல் கலங்கிக் கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்வது? நாம் பெற்ற பிள்ளைகள் அசடுகளாக இருந்து விட்டால் அவர்களுக்கும் சேர்த்து நாம் தாம் வருத்தப்பட வேண்டியிருக்கிறது" என்று, தாம் இன்னாரெனக் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது மனிதர் தற்செயலாக அனுதாபப்படுவது போல் பேசினார் மகாராணி.

அந்தச் சோழிய நங்கை விக்கலும், விசும்பலுமாக வெடித்துக் கொண்டு வரும் அழுகையோடு சீறினாள்:

"இவ்வளவு ஆறுதல் சொல்கிறீர்களே? உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவனும் இம்மாதிரித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டு விட்டால் அவன் கைமுக்குத் தண்டனை அடைவதைக் கண்டு உங்களால் பொறுமையாக இருந்து விட முடியுமா? பெரிய ஔவை மூதாட்டியைப் போல் கூப்பிட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து கொண்டே எனக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டீர்களே!... யார் நீங்கள்? உங்களுக்கென்ன அக்கறை இதில்?"

"அம்மா! நானும் உன்னைப் போல் ஒரு தாய். எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்!" மகாராணி ஒவ்வொரு சொல்லாக நிறுத்திப் பதில் கூறினாள். வானவன்மாதேவியின் உள்ளத்தில் பேரிடியைப் பாய்ச்சியிருந்தால் அந்தச் சோழிய நங்கை - "உனக்கும் ஒரு மகன் இருந்து அவனும் இப்படித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டிருந்தால்" சரியாகக் கேட்டிருந்தாள் அவள். 'ஆம்! எனக்கும் மகன் இருக்கிறான். அவனும் ஒருவிதத்தில் திருடியிருக்கிறான்!' மகாராணி மனத்துக்குள் சொல்லிக் கொண்டார். அவருடைய மனம் வலித்தது, மிகவும் வலித்தது.

14. தாயாகி வந்த தவம்

திருவட்டாற்றிலிருந்து சுசீந்திரத்துக்கு வந்திருந்த அந்தத் தாய் தன் சொற்களால் மகாராணியின் உள்ளத்தில் ஓங்கி அறைந்து விட்டிருந்தாள். எழுத்தாகிச் சொல்லாகி ஒலியாகிப் பொருள்படப் புரிந்த வெறும் சொற்களா அவை? ஒரு தாயுள்ளத்தின் கொதிப்பு, பெற்றவளின் பீடு - அன்னையின் ஆணவம் - அவளுடைய வார்த்தைகளில் சீறிக் குமுறின.

அந்த வார்த்தைகள் நெஞ்சில் கிளப்பிய வலியைத் தாங்கிக் கொண்டு அதிலிருந்து விடுபட்டுத் தன் நிதானத்துக்கு வரச் சிறிது நேரம் ஆயிற்று வானவன்மாதேவிக்கு. ஒரு தாய் இன்னொரு தாய்க்கு விடுத்த அறைகூவலாக இருந்தது திருவட்டாற்றுப் பெண்ணின் கேள்வி. அதன் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டு நின்ற மகாராணி நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பெண்ணும், அர்ச்சகரும், புவன மோகினியும் தமது முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் இன்னும் வேதனையாக இருந்தது அவருக்கு.

மற்றவர்கள் தன் முகத்தைப் பார்க்கவில்லையே என்று ஏங்கும் மனநிலையும் வாழ்வில் உண்டு. மற்றவர்கள் தன் முகத்தைப் பார்க்கிறார்களே என்று ஏங்கும் மனநிலையும் வாழ்வில் உண்டு. அன்று அவ்வளவு அவசரமாக யாருக்கும் தெரியாமல் சசீந்திரத்துக்குப் புறப்பட்டு வந்திருக்காவிட்டால் இந்த இரண்டாவது நிலை மகாராணிக்கு ஏற்பட்டிருக்காது. அந்தக் 'கைமுக்குத் தண்டனை'யைக் காணவும், அதற்காளான மகனின் தாயைச் சந்திக்கவும் நேர்ந்திருக்காது. அந்தத் தாயைச் சந்தித்திருக்கா விட்டால் அவள் அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கவும் மாட்டாள்.

வானவன்மாதேவி ஆத்திரமும் அலங்கோலமுமாக நின்ற அந்தத் தாயின் அருகே சென்று, அவளைத் தம் தோளோடு தோள் சேரத் தழுவிக் கொண்டார். புன்முறுவலும், சாந்தமும் தவழும் முகத்தோடு அவளை நோக்கி ஆறுதலாகப் பேசினார்:

"அம்மா! தாயானாலும் நீதி நியாயங்களுக்குக் கட்டுப்படுத்தானே ஆக வேண்டும்? நீ அழுதும், அலறியும் என்ன பயன் விளையப் போகிறது?"

"நீதியாம்! நியாயமாம்! அவைகளை உண்டாக்கியவர்களைப் பெற்றவரும் தாய்தான். இந்த வறட்டு அறிவுரைகளை என் செவிகளில் திணிப்பதற்குத்தான் என்னை இங்கே கூப்பிட்டு அனுப்பினீர்களா?"

"பதறாதே, அம்மா! என் வார்த்தைகளை முழுவதும் கேள். உலகத்து உயிர்களைப் படைத்ததால் கடவுளுக்கும், ஒரு மகா காவியத்தை எழுதியதால் கவிஞனுக்கும், எவ்வளவு பெருமை உண்டோ, அதை விட அதிகமான பெருமை ஒரு மகனைப் பெற்றதால் தாய்க்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமையை நாம் அடைவதற்கு நாம் பெற்ற பிள்ளைகளும் தகுதி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டாமா?"

மகாராணியின் கேள்விக்கு அந்தப் பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடித்தன. பளிங்குக் கண்ணாடியில் முத்துகள் உருள்வதைப் போல் அவளுடைய கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டன. மகாராணி உரிமையையும், பாசத்தையும் தாமாகவே உண்டாக்கிக் கொண்டு நடுங்கும் கையால் அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னார்:

"உன் அழுகை என் நெஞ்சை வருத்துகிறது. அம்மா நீ அழாதே. தாயாக வாழ்வதே பெண்ணுக்கு ஒரு தவம். அந்தத் தவத்தில் சுகபோக ஆடம்பர இன்பங்களுக்கு இடமே இல்லை. பெறுவதற்கு முன்னும் துன்பம்! பெறும் போதும் துன்பம்! பெற்ற பின்னும் துன்பம்! ஒரே துன்பம் - ஓயாத துன்பம்! அந்தத் துன்பம் தான் தாய்மை என்கிற தவம்! எந்தப் பொருள்களின் மேல் அதிகமாகப் பற்றும், பாசமும் இருக்கிறதோ, அந்தப் பொருளைக் கூட இழக்கத் துணிவதுதான் தவம்!"

அந்தத் தாய் மகாராணியின் தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். பதவியும், பொறுப்பும் பெருமையுமாகச் சேர்ந்து கொண்டு எந்த ஓர் அழுகையைத் தான் அழ முடியாமல் தடைப்படுத்தி வைத்திருக்கின்றனவோ, அந்த அழுகையை - மகனுக்காகத் தாய் அழும் அழுகையை - அந்தப் பெண் தம்முன் அழுது கொண்டிருப்பதை மகாராணி இரு கண்களாலும் நன்றாகக் கண்டார்.

'இந்த ஏழைச் சோழியப் பெண்ணும் ஒரு தாய், நானும் ஒரு தாய். இவள் ஏழையாயிருப்பதன் பெரிய நன்மை துன்பம் வந்தால் மனம் விட்டு அழ முடிகிறது. நான் மகாராணியாயிருப்பதனால் அப்படி அழக்கூடச் சுதந்திரமில்லை. நல்ல பதவி! நல்ல பெருமை! அழவும் உரிமையில்லை, சிரிக்கவும் உரிமையில்லை!' மகாராணி தம் மனத்துக்குள் நினைத்துக் கொண்டு வேதனைப்பட்டார். தம் தோளில் சாய்ந்திருந்த அந்தத் தாயை ஆறுதலாக அணைத்துக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுத்தார். தாயும் தாயும் அணைத்துக் கொண்டு நின்ற அந்தக் காட்சி கங்கையும், காவிரியும் கலந்தாற் போல் புனிதமாகத் தோன்றியது.

விலகி நின்று கொண்டிருந்த அர்ச்சகரும், புவன மோகினியும் அந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் உருகினர்.

"அம்மா! தெய்வத்தின் சந்நிதியில் உலகத்தையெல்லாம் காக்கும் ஆதிபராசக்தி போல் வலுவில் வந்து என்னைக் கூப்பிட்டு எனக்கு அறிவுரை கூறினீர்கள். நீங்கள் யார்? எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் திருப்பெயர் என்ன? மறுக்காமல் எனக்குச் சொல்லுங்கள். என்னிடம் கூச்சமோ, தயக்கமோ கொள்ள வேண்டாம் நீங்கள்" என்று மகாராணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள் அந்தச் சோழியப் பெண். அர்ச்சகரும் புவன மோகினியும் பொருள் பொதிந்த பார்வையால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தனக்கு ஆறுதல் கூறிக் கொண்டு தன் முன் நிற்கும் தாய் யாரென்று தெரிந்து கொண்டால் அந்த ஏழைப் பெண் எவ்வளவு பரபரப்பும், பதற்றமும் அடைவாளென்று புவன மோகினி மனத்துக்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.

மகாராணி அந்தப் பெண்ணுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் நின்றார். உதடுகள் பிரியாமல் சிரிக்கும் தன்னடக்கம் நிறைந்த கண்ணியமான சிரிப்பை மட்டும் மகாராணியின் இதழ்களில் காணமுடிந்தது. அவருடைய உள்ளத்திலோ அந்தத் தன்னடக்கச் சிரிப்புக்குப் பின்புலமான சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருந்தன. மகனைக் கொதிக்கும் நெய்க் கொப்பரைக்குப் பலி கொடுத்து இழக்கப் போகிறோமே என்ற துடிதுடிப்போடு தம்முன் கதறி நிற்கும் அந்தச் சோழியப் பெண்ணின் நிலையில் தம்மை எண்ணிப் பார்த்தார் மகாராணி. எண்ணம் நிரம்பிப் பெருகியது.

'தாய்க்குப் பெண்ணாகப் பிறந்து, தானும் தாயாகித் தனக்குப் பிறந்த பெண்களையும் தாயாக்கித் தன் தாய் போன இடத்துக்குப் போய்ச் சேருவதுதான் உலகத்துப் பெண் இனத்தின் அவலக் கதை. உலகத்தின் முதல் பெண் பிறந்த நாளிலிருந்து இந்தத் துன்பக் கதை தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்தத் தொடர்பு முடியும் போது உயிர்க்குலமே அழிந்துவிடும். கனமான பெரிய மாங்காய் கனமற்ற சிறிய காம்பில் தொங்கிக் கொண்டிருப்பது போல் தாய்மை என்ற ஒரு மெல்லிய அடிப்படையில் இந்தத் தொல்லைப் பழம்பெரும் பூமி இன்னும் தன் உயிர்த்துடிப்பை இழந்து விடாமல் இருந்து கொண்டிருக்கிறது.'

சிந்தனைப் பெருக்கின் ஊடே எப்போதோ கேள்விப்பட்டிருந்த தாயைப் பற்றிய செய்யுள் ஒன்று மகாராணியாரின் நினைவில் குமிழியிட்டது.

"எனக்குத் தாயாகியான் என்னை யீங்கிட்டுத்
தனக்குத் தாய்நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண்
டேகும் அளித்திவ் வுலகு."

'நீராழி யுடுத்த நெடும்புவனமாகிய இந்த மண்ணுலகம்' - இது தாய்க்குலம் அளித்த பிச்சை. அந்த தாய்க்குலத்தில் ஒருத்தி துன்பம் அடைய அதை தாயாக இருந்தால் - உனக்கும் ஒரு மகன் இருந்தால் - அவனும் திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டிருந்தால்? - இப்படிக் குத்திக் காட்டிக் குமுறிக் கேட்ட பின்பும் வாளா இருக்கலாமா?

மகாராணியின் உள்ளத்தில் ஒரு பெரிய போராட்டம்; நினைவில் வேதனை. சிந்தனையில் தடுமாற்றம். அப்படியே பிரமை பிடித்தவர் போல் சிந்தனையிலிருந்து விடுபடாமல் நின்றார் அவர்.

"என்னம்மா திகைக்கிறீர்கள்? என் கேள்விக்கு மறுமொழி சொல்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா?" அந்தப் பெண் மறுபடியும் கேட்டாள். அவள் குரல் பணிவோடு குழைந்து ஏங்கியது.

"பெண்ணே! நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்வதை விடத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆனால் ஒன்று மட்டும் நான் உனக்குச் சொல்ல முடியும். நானும் உன்னைப் போல் ஒரு துர்ப்பாக்கியவதி, கொஞ்சம் அதிகமான புகழும் பெருமையும் உள்ள துர்ப்பாக்கியவதி. வேறுபாடு அவ்வளவுதான். உன்னைப் போலவே பிள்ளையைப் பெற்றதால் தொல்லையை அடைந்து கொண்டிருக்கும் தாய் தான் நானும். இதைத் தவிர வேறு என்ன நான் உனக்குச் சொல்ல வேண்டும்?"

சொல்லிவிட்டுப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணின் கண்களைக் கூர்ந்து பார்த்தார் மகாராணி. அவைகளில் ஏமாற்றம் தேங்கிப் பதிந்திருந்தது.

"நான் வருகிறேன். ஆத்திரத்தால் உங்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்து மறந்து விடுங்கள்!" அந்தப் பெண் மகாராணியிடம் விடைபெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிக் கைமுக்குத் தண்டனை நடக்கும் மண்டபத்தை நோக்கி நடக்கலானாள்.

"உன்னை மன்னித்து விடுகிறேன். ஆனால் மறந்து விடச் சொல்கிறாயே, அதுமட்டும் என்னால் முடியவே முடியாது. உன்னை என்றுமே நான் மறக்க மாட்டேன்."

மகாராணியின் இந்தச் சொற்கள் வேகமாக நடந்து சென்ற அவள் செவிகளில் விழுந்தனவோ, இல்லையோ? அவள் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்து சென்று கூட்டத்தில் கலந்துவிட்டாள்.

புவன மோகினியும், அர்ச்சகரும் மகாராணி வானவன்மாதேவிக்கு அருகில் நெருங்கி வந்தார்கள்.

"தேவி! அந்தப் பெண்ணிடம் தாங்கள் இன்னாரென்ற உண்மையைக் கூறாததே நல்லதாயிற்று. கூறியிருந்ததால் உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு தன் மகனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருப்பாள்" என்றார் அர்ச்சகர்.

"அர்ச்சகரே! அவள் நிலையில் யார் இருந்தாலும் அப்படிக் கெஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?"

மகாராணியிடமிருந்து இந்தப் பதில் கேள்வியை அர்ச்சகர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

"வேறொன்றும் செய்ய முடியாதுதான். ஆனால் அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இங்கே வந்திருக்கும் உங்களிடம் மகனைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்?"

"என்ன செய்ய முடியுமோ, அதை இப்போதும் நான் செய்யத்தான் போகிறேன், அர்ச்சகரே! ஆனால் நான் தான் செய்தேன் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள மட்டும் எனக்கு விருப்பமில்லை."

"என்ன செய்யப் போகிறீர்களோ?" அர்ச்சகர் பரபரப்படைந்து வினவினார்.

"நான் செய்யப் போவதில்லை. எனக்காக நீங்களே அதைச் செய்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்து போனது யாருக்குமே தெரிய வேண்டாம்."

இப்படிக் கூறிக்கொண்டே தமது வலது கை விரலில் அணிந்திருந்த அரச முத்திரையோடு கூடிய கணையாழி மோதிரத்தைக் கழற்றினார் மகாராணி. அர்ச்சகர், புவன மோகினி இருவருக்கும் விழிகள் ஆச்சரியத்தால் அகன்றன.

"கைமுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இருக்கும் தெய்வநீதி மன்றத்துத் தலைவரிடம் இந்த மோதிரத்தைக் காண்பியுங்கள். அந்தத் தாயின் மகன் திருடிய பொன் அணிகலன்களைப் போல் நான்கு மடங்கு பெறுமானமுள்ள பொன்னை அவன் அபராதமாகச் செலுத்தினால் போதும், கைமுக்குத் தண்டனை வேண்டாமென்று நான் கூறியனுப்பியதாகச் சொல்லுங்கள். அந்தத் தாயின் பெருமையைக் காப்பாற்றுவதற்காக அபராதம் விதிக்கப்பெறும் நான்கு மடங்கு பொன்னை நானே அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பி விடுகிறேன். இது உமக்கும் நீதி மன்றத்தின் தலைவருக்கும் தவிர வேறெவர்க்கும் தெரிய வேண்டாம்."

சிறிய மகரமீன் இலச்சினையோடு கூடிய அந்த மோதிரத்தைப் பயபக்தியோடு இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.

"காரியம் முடிந்ததும் மோதிரம் பத்திரமாக எனக்குத் திரும்பி வந்து சேர்ந்து விட வேண்டும்."

"அப்படியே செய்கிறேன், தேவி!" என்றார் அர்ச்சகர்.

"புவன மோகினி! இனி நமக்கு இங்கு வேலை இல்லை. வா நாம் போகலாம்." மகாராணி புவன மோகினியை உடன் அழைத்துக் கொண்டு சிவிகையில் ஏறுவதற்காக வெளியேறினார். அர்ச்சகர் முத்திரை மோதிரத்தோடு கைமுக்கு மண்டபத்துப் பக்கம் சென்றார்.

15. 'யாரோ ஓர் இளைஞன்'

தன் தந்தையிடமிருந்து நாராயணன் சேந்தன் கொண்டு வந்த அந்தரங்கத் திருமுகத்தைப் படித்த மறுநாள் காலையிலே குழல்வாய்மொழி திருமுகத்தில் கண்ட கட்டளையை நிறைவேற்றுவதற்குப் புறப்பட்டுவிட்டாள். நாராயணன் சேந்தன் அவளோடு துணையாகச் சென்றான். தாங்கள் புறப்பட்டுச் செல்லும் செய்தி இடையாற்று மங்கலம் மாளிகையை விட்டு வெளியே பரவி விடாமல் எச்சரிக்கையும், ஏற்பாடும் செய்து விட்டுத்தான் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள். 'மகாமண்டலேசுவரருடைய ஏற்பாட்டின்படி தாங்கள் இருவரும் குமார பாண்டியனைத் தேடிக் கொண்டு செல்வது' எவருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று கருதியதனால் தான் அவர்கள் அதில் அவ்வளவு கண்டிப்பாக இருக்கும்படி நேர்ந்தது.

விழிஞம் துறைமுகத்துக்குப் போய் அங்கிருந்து தனியாக ஒரு கப்பல் ஏற்பாடு செய்து கொண்ட பின் பயணத்தை மேலே தொடர வேண்டுமென்பது அவர்கள் திட்டம். நாராயணன் சேந்தன் வைகறையில் சற்று முன்னதாகவே இடையாற்று மங்கலத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு விழிஞத்துக்குப் போய்விட்டான். அவன் சென்ற பின்பு குழல்மொழி சிவிகை மூலமாகப் பயணம் செய்தாள். இடையாற்று மங்கலத்துக்கும் விழிஞத்துக்கும் இடையில் பரந்து கிடந்த தொலைவைக் கடந்து வழிப்பயணம் செய்வதில் தான் எவ்வளவு இன்பம். கடல் அருகில் இருந்ததனால் சுகமான காற்று வீசியது. ஓவியன் அளவு பார்த்து, அழகு பார்த்து, இடப் பொருத்தம் பார்த்து, அள்ளிச் சிதறிய வர்ணங்களைப் போல் அவள் பயணம் செய்த அந்த நெடுவழியில் பல நிறங்களில், பல விதங்களில், பல அடிப்படைகளில், உயிர் வாழ்க்கை என்ற பேரியக்கம் பரவிக் கிடந்தது. காடுகளும், கூட்டம் கூட்டமாகப் பசுக்களை மேய்க்கும் ஆயர்களும் சூழ்ந்த முல்லை நிலம். குன்றமும், அருவியும், தினைப்புலமும், வேடர்களும் நிறைந்த குறிஞ்சி நிலம். நிலம் என்னும் நல்லாள் நெடும் பசுமை சூழ்கொண்டு தோன்றும் வயல் வெளிகளும், தாமரைப் பொய்கைகளும், சிற்றூர்களும் செறிந்த மருத நிலம். தாழம்புதரும் மீனவர் குடியிருக்கும் பரதவர் பாக்கமும் மலிந்த நெய்தல் நிலம். இத்தகைய நானிலங்களின் அழகையும், நானாவிதமான வாழ்க்கை முறைகளையும் சிவிகையின் இருபுறமும் பார்த்துக் கொண்டே போனாள் குழல்வாய்மொழி. மண்ணில் உள்ள மேடு பள்ளங்களைப் போல் மனித வாழ்க்கையிலுள்ள மேடு பள்ளங்களையும் அவள் பார்த்தாள். குறிஞ்சி நில வாழ்வின் செழிப்பு மருத நிலத்தில் இல்லை. மருத நில வாழ்வின் வளம் முல்லை நிலத்தில் இல்லை. முல்லை நில வாழ்வின் ஊட்டம் நெய்தல் நிலத்தில் இல்லை! ஆனால் மொத்தமாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா இடத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. நிற்காமல் ஓடிக் கொண்டும் ஓடாமல் நின்று கொண்டும் நிலத்துக்கேற்ப, வளத்துக்கேற்ப, இன்ப துன்பங்களின் மிகுதிக்கேற்ப, உயிரியக்கம் நடை பெயர்ந்து கொண்டிருந்தது.

வேகமாகச் செல்லும் சிவிகையில் பட்டு மெத்தைமேல் அமர்ந்து கொண்டு மழை பெய்வதை வேடிக்கை பார்க்கும் சிறு பிள்ளையின் ஆசையோடு அந்த நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் பரவிக் கிடக்கும் வளமுறைகளையும் வாழ்க்கையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு போனாள் மகாமண்டலேசுவரரின் செல்லப் பெண்.

இடையிடையே எதை நினைத்துக் கொண்டோ பெருமூச்சு விட்டாள் அவள். நீண்டு பிறழ்ந்து குறுகுறுத்து நெஞ்சின் நளினமெல்லாம் நிழலாடும் அவள் நயனங்களில் பெருமூச்சு விடும்போதெல்லாம் ஏக்கம் படர்ந்து, விழிகள் ஏங்கும் போதெல்லாம் வதனம் வாடியது. வதனம் வாடும் போதெல்லாம் வட்டப் பிறை நெற்றி சுருங்கியது. நெற்றி சுருங்கும் போதெல்லாம் நெற்றிக்குக் கீழே நாசிக்கு மேலே புருவ நுனிகளின் கூடுவாயில் எதிரெதிரே இரண்டு நெளி கோடுகள் இறங்கித் தோன்றின. நாகலிங்க மலருக்கு மடிப்பு மடிப்பான இதழ்கள் எப்படி அழகோ, அப்படி அவள் நெற்றிக்கு இது ஒரு தனி அழகு.

அவள் நினைத்தாள்: 'நான் மறுபடியும் இந்தச் சாலை வழியே திரும்பும் போது குமார பாண்டியரோடு திரும்புவேனானால்தான் என் உள்ளத்தில் நிறைவு இருக்கும். என்னை அனுப்பிய என் தந்தையின் உள்ளம் பெருமை கொள்ளும். அவரைத் தேடிச் செல்லும் முயற்சியில் நான் வெற்றி பெறுவேனா? தெய்வமே! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு வெற்றியைக் கொடு. என் மனத்துக்குப் பூரிப்பைக் கொடு. நான் யாரைத் தேடிச் செல்கிறேனோ, அவரை நாங்கள் அதிகம் அலைந்து திரிய நேரிடாமல் எங்கள் கண்களுக்கு முன்னால் காட்டிவிடு. கடலைக் கடந்து சென்றதும் என் உள்ளத்தைக் கடந்து செல்லாமல் உறைந்து, பதிந்து போனவரை ஒளிக்காதே' என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டாள் குழல்வாய்மொழி. விழிஞத்துக்குப் போய்ச் சேருகிறவரை அவளுக்கு அதே எண்ணம்தான்.

நண்பகலை எட்டிக் கொண்டிருக்கும் போது அவளுடைய சிவிகை விழிஞத்தை அடைந்தது. முன்பே அங்கு வந்திருந்த சேந்தன் அவளை எதிர்பார்த்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தான். மேற்றிசைத் தேசங்களிலிருந்து குதிரைகளும், மதுவகைகளும் கொண்டு வந்து இறக்குமதி செய்யும் கப்பல்கள் இரண்டு மூன்று சேர்ந்தாற் போல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருந்ததனால் அன்றைக்கு அதிகமாக கலகலப்பு இருந்தது. கீழ்த்திசை தீவுகளிலிருந்து கற்பூரம், கண்ணாடிப் பொருள் முதலியவற்றை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல்களும் சில அன்றைக்குத் துறையை அடைந்திருந்தன. சுங்க வரி தண்டுவோராகிய அரசாங்கச் சுங்கக் காவலர்கள் வரும் பொருள்களுக்கும், போகும் பொருள்களுக்கும் மகர மீன் முத்திரை குத்தி வரி வாங்கிக் கொண்டிருந்தனர்.

அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை கலகலப்புக் கிடையிலும் நாராயணன் சேந்தனுடைய திருவுருவம் தனியாகத் தெரிந்தது. குழல்வாய்மொழியின் பல்லக்கு வருவதைப் பார்த்து விட்டு முன்னால் ஓடிவந்து வரவேற்பதற்காகக் கூட்டத்தில் முண்டி இடித்துக் கொண்டு வந்தான் சேந்தன். சுங்க வரி செலுத்தாமல் பொருள்களைக் கள்ளத்தனமாக கடத்திக் கொண்டு போகிறவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டு பிடிப்பதற்காக மாறு வேடத்தோடு பல காவலர்கள் கூட்டத்துக்கிடையே உலாவிக் கொண்டிருப்பார்கள். அவசரமாக இடித்து முந்திக் கொண்டு விரைந்து வந்த சேந்தன் அத்தகைய சுங்கக் காவலன் ஒருவன் மேல் மோதிக் கொண்டான். அந்தக் காவலன் சேந்தனுடைய இரண்டு கைகளையும் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவனையே உற்றுப் பார்த்தான். மார்புக்குக் கீழ் இடுப்புக்கு மேல் சரிந்து முன் தள்ளிய சேந்தனின் தாழிப் பெரு வயிற்றில் அவனுடைய பார்வை நிலைத்தது. அவனுடைய பார்வையைக் கண்டதும் நாராயணன் சேந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

"என்ன அப்படிப் பார்க்கிறாய்?" சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் நாராயணன் சேந்தன்.

"மரியாதையாக வெளியில் எடுத்து விடு! சுங்கம் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக எந்தப்பொருளை இப்படி இடுப்பில் மறைத்து வைத்துக் கட்டிக் கொண்டு போகிறாய்?" அவன் மிரட்டினான்.

இரண்டு விலாப்புறமும் வெடித்துவிடும் போல் பெரிதான சிரிப்பை அடக்கிக் கொள்ளச் சிரமமாய் இருந்தது சேந்தனுக்கு. 'உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நடமாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதே போல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப் பார்க்கிற எல்லோரையும் காவற்காரர்களென்று பயப்படுகிறார்கள்' என்று சேந்தன் தன் மனத்தில் நினைத்துக் கொண்டான்.

"உண்மையைச் சொல்லப் போகிறாயா? உதைக்கட்டுமா?" காவற்காரனுடைய குரலில் கடுமை ஏறியது. கண்களை உருட்டிக் கோபம் தோன்ற விழித்தான் அவன்.

"ஆகா! என்ன அற்புதமான கேள்வி கேட்டாய் அப்பா நீ? உன் கண் பார்வையின் கூர்மையே கூர்மை. உலகத்தில் இதுவரையில் எந்த மன்னருடைய அரசாட்சியிலும் நான் இடுப்பில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்தப் பொருளுக்குச் சுங்கம் கேட்டதில்லை. இதோ நன்றாகப் பார்த்துக் கொள்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தன் மேல் அங்கியை விலக்கிக் காட்டினான் சேந்தன்.

தொந்தி முன் தள்ளிய அவன் வயிற்றைப் பார்த்து அந்தக் காவலன் விழுந்து விழுந்து சிரித்தான்.

"பூ! வயிறுதானா இவ்வளவு பெரிதாக முன்னால் துருத்திக் கொண்டிருக்கிறது? நான் எதையோ ஒளித்துக் கொண்டு போகிறாய் என்றல்லவா நினைத்தேன்?"

"நினைப்பாய் அப்பா! நன்றாக நினைப்பாய்! நீ ஏன் நினைக்க மாட்டாய்? சுய நினைவோடுதான் பேசுகிறாயா அல்லது அதோ கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் யவனத்து மதுத்தாழியைப் பதம் பார்த்துவிட்டுப் பேசுகிறாயா?"

காவலன் சிறிது நாணமுற்றுத் தலை குனிந்து நின்றான். சேந்தன் விலாவிரியச் சிரித்தான். அந்தச் சிரிப்பால் காவற்காரன் பொறுமையிழந்தான்.

"ஏன் ஐயா! சும்மா விழுந்து விழுந்து சிரிக்கிறாய்? ஆனாலும் மனிதன் உன்னைப் போல் இப்படிப் பருமனாக இருக்கக் கூடாது. உனக்கு ஒரு விஷயம் எச்சரிக்கை செய்து வைக்கிறேன். கேட்டுக் கொண்டு பேசாமல் போய்ச் சேர். குதிரை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக யவன வணிகர்கள் சேர நாட்டு யானைக் குட்டிகளை ஏற்றுமதி செய்து கொண்டு போக வேண்டுமென்று நெடு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'யானைக்குட்டி பருமனாகக் குட்டையாக இருக்கும்' என்பதைத் தவிர அவர்களுக்கு அதைப்பற்றி வேறு விவரம் தெரியாது. நீ எங்கேயாவது தப்பித் தவறி யவனக் கப்பல்களுக்குப் பக்கமாகப் போய் நின்று தொலைக்காதே. 'யானைக்குட்டி' என்று உன் முதுகில் மகர முத்திரை குத்தச் சொல்லிக் கப்பலில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறார்கள்" என்று சுடச்சுடச் சேந்தனைப் பதிலுக்குக் கேலி செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான் அந்தக் காவலன்.

இந்தச் சமயத்தில் பல்லக்கிலிருந்து இறங்கிய குழல்வாய்மொழி சேந்தனைக் கைதட்டிக் கூப்பிடவே, நாராயணன் சேந்தன் அந்தக் காவலனோடு வம்பளப்பதை நிறுத்திக் கொண்டு விரைந்து நடந்தான்.

"அம்மணி! வாருங்கள், நேரமாக்கி விட்டீர்களே? நான் அப்போதிருந்து உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். சிவிகையை இன்னும் விரைவாகக் கொண்டு வரச் சொல்லி ஆட்களை விரைவு படுத்தி வந்திருக்கலாம் நீங்கள்" என்று குழல்வாய்மொழியின் அருகில் சென்று சேந்தன் அடக்க ஒடுக்கமாகக் கூறினான்.

"சுமப்பவர்களும் மனிதர்கள்தானே? அவர்களை அடித்தா துரத்த முடியும்?... சரி! நீங்கள் முன்னால் வந்து கப்பலுக்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா இல்லையா?" என்று அவள் கேட்டாள்.

"ஓ! அந்த ஏற்பாடெல்லாம் வந்தவுடனேயே முடித்து விட்டேன். அதோ கப்பல் தயாராக நிற்கிறது. நாம் புறப்பட வேண்டியதுதான்" என்றான் சேந்தன்.

சிவிகையையும் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டுக் கப்பல் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள் சேந்தனும், குழல்வாய்மொழியும். சிறிதானாலும் உயர்ந்த வசதிகள் நிறைந்த அழகான கப்பல் அது. தாங்கள் போகிற காரியத்தின் இரகசியத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தக் கப்பலைத் தனியாகத் தங்களுக்கென்று மட்டும் ஏற்பாடு செய்திருந்தான் சேந்தன். குழல்வாய்மொழியையும், அவனையும் தவிர மாலுமியும், இரண்டொரு கப்பல் ஊழியர்களும் மட்டுமே அதில் இருந்தனர்.

கப்பல் புறப்படுவதற்கு முன் சேந்தனும் குழல்வாய்மொழியும் கரையில் நின்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிரிப்பு மலர்ந்த முகத்தோடு கவர்ச்சி நிறைந்த உடையணிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன் அவர்களுக்கு அருகில் வந்தான். பெண்மைச் சாயல் கொண்ட அந்த இளைஞனின் நீண்ட முகம் பார்க்கிற எவரையும் ஒரு கணம் மயக்காமல் போகாது. ஆடவர் பெண்மையை அவாவும் தோற்றம் அது. பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒளிவு மறைவு உட்பொருளுள்ள சிரிப்பும் இதழ்களின் சிவப்பும் அந்த வாலிபனுக்கு இருப்பதைச் சேந்தன் வியப்போடு பார்த்தான்.

"ஐயா! இந்தக் கப்பலில் உங்களோடு பிரயாணம் செய்ய என்னையும் அனுமதிப்பீர்களா?"

'அடடே! குரல் கூட இனிமை சொட்டுகிறது. இந்தப் பயல் மட்டும் பெண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் உலகத்திலுள்ள அத்தனை அரசகுமாரர்களும் இவளை யார் மணந்து கொள்வதென்ற போட்டியில் அடித்துக் கொண்டு கிடப்பார்கள்' என்று மனத்துக்குள் எண்ணியவனாய், "தம்பி, இந்தக் கப்பலில் வேறு யாரையும் ஏற்றிக் கொள்வதற்கில்லை. நீ போய் வேறு கப்பல்களைப் பார்" என்று பதில் சொன்னான் சேந்தன். அந்த இளைஞன் சேந்தன் கூறியதைக் கேட்டுக் கொண்ட பின்னும் அங்கிருந்து போகாமல் நின்றான்.

"சகோதரி! நீங்களாவது மனம் இரங்குங்கள். நான் பயந்த சுபாவம் உள்ளவன். உங்களைப் போல் துணையோடு பயணம் செய்தால் எனக்கும் நல்லது" என்று குழல்வாய்மொழிக்கு அருகில் போய் நின்று கொண்டு கெஞ்சினான். பெண்மையின் எழிலும் ஆண்மையின் மிடுக்கும் ஒன்றுபட்டுத் தோன்றிய அந்த விடலைப் பிள்ளையை நிமிர்ந்து நன்றாகப் பார்த்தாள் குழல்வாய்மொழி. அவள் கண்களைக் கூச வைத்தன அவன் பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும். சினத்தோடு முகத்தைச் சுளித்துப் பார்வையைக் கடுமையாக்கினாள் குழல்வாய்மொழி. அதன் பின்பே இளைஞன் சிரிப்பதை நிறுத்தினான்.

"தம்பி! நீ பயந்த சுபாவம் உள்ளவன் என்கிறாய்! ஆனால் இடையில் பெரிதாக உறையிட்ட வாள் தொங்குகிறது. பொய்யும் புரட்டும் பேசுவதற்குக் கொஞ்சம் வயதான பின்னர் கிளம்பியிருக்கலாமே நீ! உன் முகத்தைப் பார்த்தால் பால் வடிகிறது. பேச்சைப் பார்த்தால் சூது இருக்கிறதே! மீசை கூட இன்னும் அரும்பவில்லை. அதற்குள் இதெல்லாம் எங்கேயப்பா கற்றுக் கொண்டாய் நீ?" என்று சேந்தன் கடுமையான குரலில் இரைந்தான்.

"ஐயோ! கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பார்த்தால் நல்லவர் மாதிரி தெரிந்தது. உதவி செய்வீர்களென்று நம்பிக் கேட்டேன்."

"போ! போ! அதெல்லாம் முடியாது. இந்தக் கப்பலில் இடம் கிடையாது."

"மனத்தில் இடமிருந்தால் கப்பலில் இடம் இருக்கும். கொஞ்சம் தயவு செய்யுங்கள்."

"பேசாமல் போகிறாயா? கப்பல் ஊழியனைக் கூப்பிட்டுப் பூசைக்காப்பு முதுகில் போடச் சொல்லட்டுமா?"

சேந்தனின் ஆத்திரத்தைக் கண்டு அந்த இளைஞன் கன்னங் கனியச் சிரித்தான். குழல்வாய்மொழி தன் மனத்தை எவ்வளவுதான் அடக்கிக் கட்டுப்படுத்திப் பார்த்தாலும் அவள் விழிகள் அவளையும் மீறி அந்தச் சிரிப்பை ஆவலோடு ஓரக் கண்ணால் காண விரைந்தன. பொல்லென்று பூத்து மறையும் முல்லைப்பூ வரிசை போல் அப்படி ஓர் அழகிய சிரிப்பு அது. சிரித்துக் கொண்டே அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான் அந்த இளைஞன். அவன் சிறிது தள்ளிச் சென்ற பின்பு சேந்தன், குழல்வாய்மொழியைப் பார்த்து, "அம்மணி இந்த மாதிரி விடலைப் பயல்களை நம்பவே கூடாது. சிரிப்பையும், பேச்சையும், முகமலர்ச்சியையுமே முதலாக வைத்துக் கொண்டு வஞ்சகம், ஏமாற்று ஆகிய பண்டங்களை விற்பனை செய்யும் அறவிலை வணிகர்கள் இப்போது உலகத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டும். புலியையும் சிங்கத்தையும் பார்த்துப் பயந்து கொண்டிருந்தது போய் இப்போது மனிதர்களைப் பார்த்தே மனிதர்கள் பயப்பட வேண்டியிருக்கிறது. புலிக்கும், சிங்கத்துக்கும், கெட்டவற்றைத் திட்டமிட்டுக் கொண்டு செய்வதற்கு மனம் என்ற ஒன்று இல்லை. மனிதர்களுக்கு அது இருக்கிறது" என்று பெரிய அற நூலாசிரியனைப் போல் பேசினான் சேந்தன்.

"கீழே நின்று கொண்டிருந்தால் மறுபடியும் அந்த இளைஞன் வந்து ஏதாவது கேட்டுக் கெஞ்சுவான். அல்லது வல்வழக்குப் பேசி வம்பு செய்வான். வாருங்கள்! கப்பலில் போய் இருந்து கொண்டு பேசலாம்" என்று சேந்தனைக் கூப்பிட்டுக் கொண்டு கப்பலுக்குள் ஏறிச் சென்றாள் குழல்வாய்மொழி.

கப்பலுக்குள் சென்ற பின் அவர்கள் பேச்சு, 'குமார பாண்டியனை எந்தெந்த தீவுகளில் தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?' என்பது பற்றி நிகழ்ந்தது. சிறிது நாழிகைக்குப் பின் கப்பல் மாலுமி வந்து, 'புறப்படலாமா?' என்று கேட்ட போது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். நங்கூரக் கயிற்றை அவிழ்த்து விட்டதும் கப்பல் மெல்ல நகர்ந்தது. கப்பலுக்கும் கரைக்கும் நடுவே கடலின் பரப்பு அதிகமாகி விரிந்து கொண்டே வந்தது.

"வாருங்கள்! கீழ்த்தளத்தில் நீங்கள் தங்கிக் கொள்வதற்கென்று ஓர் அறையை எல்லா வசதிகளோடும் தனியே ஒழித்து வைக்கச் செய்திருக்கிறேன். அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்" என்று குழல்வாய்மொழியைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்றான் நாராயணன் சேந்தன். எந்தக் கப்பலிலும் இருக்க முடியாத அளவு அலங்கரிக்கப்பட்டு அரசகுமாரிக்கு ஒப்பான ஓர் இளம்பெண் தங்குவதற்குரிய சகல வசதிகளுடனும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே அந்த அறையின் கதவைத் திறந்தான் நாராயணன் சேந்தன்.

கதவைத் திறந்ததும் கலகலவென்று சிரிப்பொலியுடன் அந்த அறைக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது சேந்தனும் குழல்வாய்மொழியும் பேயறைபட்டவர்களைப் போல் முகம் வெளிறிப் போய்த் திகைத்து நின்றார்கள். "நானாகவே இந்தக் கப்பலில் இடம் தேடி எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் என்ன செய்வேன்? நேர்வழி மூடியிருந்தது. குறுக்கு வழியை நானே திறந்து கொண்டேன்!" பெரிய காரியத்தைச் சாதித்து விட்டவன் போலச் சிரித்துக் கொண்டே கூறினான் அந்த எழில் வாலிபன்.

16. பேசாதவர் பேசினார்

ஏதோ பெரிய காரியத்தைச் சொல்லப் போகிறவர் போல் தன்னைக் கூப்பிட்டனுப்பித் தன் உள்ளங்கையில் கருவேல முள்ளைக் குத்திய மகாமண்டலேசுவரரின் செயலைக் கண்டு வெளியே பொறுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குளே அடக்கமுடியாத வெகுளி உண்டாயிற்று சீவல்லபமாறனுக்கு. அவன் மனம் உணர்ச்சி வசப்பட்டுக் கொதித்தது.

'சே! சே! பொம்மை செய்வதற்காகக் களிமண்ணைப் பிசைந்து வைத்த குயவன் தன் நிலை சோர்ந்து அதே களி மண்ணில் தலைகுப்புற வழுக்கி விழுவது போல் அறிவின் ஆற்றலால் எட்டுத் திக்கும் விட்டெறிந்து ஆள்வதாக எண்ணிக் கொண்டு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு விடுகிறார்கள் சிலர். அரிய பெரிய அறிவாளியின் மனமும் கைகளும், சில சமயங்களில் எளிய சிறிய காரியங்களை நினைத்தும் செயல்பட்டும் தடுமாறி விடுகின்றன. அறிவில்லாதவனிடத்தில் இருக்க முடியாத அவ்வளவு பலவீனங்களும் அறிவுள்ளவனிடத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. தேனைக் குடிப்பதற்குப் போன ஈ தேனுக்குள்ளே விழுந்து முழுகி விடுவது போல், நீர் அருந்தப் போய் தண்ணீரில் விழ நேர்வது போல் காமம், குரோதம், பொறாமை, சுயநலம் இவையெல்லாம் கூடாதென்று சொல்லிக் கொண்டே இவைகளைத் தவிர வேறு பண்பையே கடைப்பிடிக்காத அறிவாளிகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் உலகில்? இந்த உலகத்தில் சாதாரண மனிதன் கவலையில்லாமல் வயிற்றுக்குச் சோறும், உடலுக்குத் துணியும் பெற்று ஊருக்குக் கெடுதல் செய்யாத சாதாரண அறிவுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் முதல் காரியமாக அறத்தையும் கருணையையும் மறந்து மனம் மரத்துப் போன அறிவாளிகள் அத்தனை பேரையும் கழுவில் ஏற்றிக் கொன்று விட வேண்டும். உலகத்துக்கு அத்தனை கெடுதல்களையும் நினைவுபடுத்திச் சொல்லிக் கொடுப்பவர்கள் இவர்கள்.'

உள்ளங்கையில் குமிழியிட்டு உருண்டு நின்ற ஒரு துளி இரத்தத்தைப் பார்த்துக் கொண்டே இவ்வளவு ஆவேசமான நினவுகளையும் நினைத்துப் பார்த்துவிட்டான் சீவல்லபன். கையைப் போலவே அவன் முகமும் கோபத்தால் சிவப்பேறிவிட்டது. பேசத் துடிக்கும் வாயோடும் பேசுவதற்குப் பயந்த மனத்தோடும் மகாமண்டலேசுவரருக்கு முன்பு நின்று கொண்டிருந்தான் அவன். அம்புகள் பாய்வது போல் ஊடுருவிப் பார்க்கும் அவருடைய இணைவிழிகள் பார்வை அவனைக் கட்டுப்படுத்தி நிறுத்தியிருந்தது.

அமைதியாக அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்ற மகாமண்டலேசுவரர் மெல்ல நகை புரிந்தார்.

"சீவல்லபா! நீ நினைத்தது சரிதான். வரம்புக்குட்படாத அறிவின் கனம் உள்ளவர்களால் உலகத்தில் மற்றவர்களுக்கு எப்போதுமே வேதனைதான். உங்களைப் போல் உடல் வன்மையையும், உடல் உழைப்பையும் நம்பி வாழும் வீரர்கள் வாழ்க்கை வேகமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். என்னைப் போல் மனத்திண்மையும், மன உழைப்பையும் நம்பி வாழ்பவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நின்று நிதானித்துச் சிந்தனையோடு தேங்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அறிவுக்கும், ஆண்மைக்கும் அவையிரண்டும் தோன்றிய நாளிலிருந்து நடந்து வரும் போராட்டம் தான் இது."

அவருடைய சொற்களைக் கேட்டதும் சீவல்லபமாறன் திடுக்கிட்டான். 'ஏ! அப்பா! இவருடைய இவருடைய கண்களுக்கு முன்னால் நிற்கிறவன் மனத்தில் கூட ஒன்றும் நினைக்க முடியாது போலிருக்கிறதே! என் எண்ணங்களை எனது முகத்திலிருந்தே எப்படித் தெரிந்து கொண்டார் இவர்?' என்று மலைத்தான் அவன்.

சிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து அவன் அருகே வந்து சுதந்திரமான உரிமையோடு அவனை முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர்.

"மெய்க் காவற்படைத் தலைவனே! நீ கவலைப்படாதே. என்னுடைய அறிவின் கனம் உனக்கு எந்தவிதமான கெடுதலையும் எப்போதும் உண்டு பண்ணாது. அதை எண்ணி நீ அஞ்ச வேண்டியதே இல்லை. 'ஆயிரம் வேல்களாலும், வாள்களாலும் நாம் சாதிக்க முடியாத காரியத்தை ஒரு சொல்லால், ஓர் எழுத்தால் அறிவாளி சாதித்து விடுகிறானே' என்ற பொறாமை படை வீரனுக்கு ஏற்படுமானால் அதன்பின் உலகில் அரசர்கள் இருக்கமாட்டார்கள். அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். என்னைப் போல் மகாமண்டலேசுவரர்கள் இருக்க மாட்டார்கள். தளபதி வல்லாளதேவனையும், உன்னையும் போல் ஆள்கட்டுள்ள படைத்தலைவர்கள் மக்களையும், அறிவாளிகளையும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களைத் தாங்களே அரசர்களாக்கிக் கொண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் பல நூறு தலைமுறைகளுக்குப் பின் இப்படிப்பட்ட படைவீரர் ஆட்சி உலகெங்கும் ஏற்பட்டாலும் ஏற்படும். ஆனால், இந்தத் தலைமுறையில் மகாராணி வானவன்மாதேவியும், என் போன்றோரும் உயிரோடு இருக்கிறவரை இந்த நிலை வரவேண்டாம். வரக்கூடாது. வரவிடவும் மாட்டேன்." இந்தச் சொற்களைக் கூறும் போது மகாமண்டலேசுவரருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே? என்ன ஒளி! என்ன அழுத்தம்! எவ்வளவு உறுதி!

ஏனடா இந்த மனிதரிடம் அகப்பட்டுக் கொண்டோமென்று எண்ணி வெலவெலத்து நடுங்கிப் போனான் மெய்க்காவற் படைத்தலைவன். மகாமண்டலேசுவரருடைய மனத்தில் ஒரு விஷயம் தைத்து அதைப்பற்றி அவர் பேசத் தொடங்கி விட்டாரென்றால் பின்பு அதை எதிர்த்துப் பேசி வாதாடுவதற்கு இன்னொரு மகாமண்டலேசுவரர் பிறந்து வந்தால் தான் உண்டு.

'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.'

என்று சொல்வன்மையைப் பற்றிக் கூறியது அவருக்கே பொருந்தும். இடையாற்றுமங்கலம் நம்பி கூறுகிற ஒரு வார்த்தையை வெற்றி கொள்ளும் மற்றோர் வார்த்தையை மற்றொரு மனிதர் கண்டுபிடித்துப் பேசுவதற்கும் இல்லை. தம் சொல்லை வெல்லும் மற்றொரு சொல்லை அவரே கண்டுபிடித்துச் சொன்னால் தான் உண்டு. நினைப்பில், பேச்சில், செயலில் அப்படி ஓர் ஈடு இணையற்ற சாமர்த்தியம் அமைவது மிகவும் அபூர்வம்.

முதல் முதலாகக் கடலைப் பார்க்கும் சிறுபிள்ளையின் பிரமிப்போடு மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்று கொண்டிருந்தான் அவன்.

"சீவல்லபா! நீ பச்சைக் குழந்தையில்லை. உன்னைக் கூப்பிட்டு உன் கையில் ஒரு முள்ளைக் குத்தி அதை இன்னொரு முள்ளால் எடுத்துக் காட்டி இவ்வளவு செய்த பின்புதான் உனக்கு உண்மையை விளக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாயாற் சொல்லி விளக்கியிருந்தாலே உனக்குப் புரிந்திருக்கும். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன் தெரியுமா? ஒரு கருத்தை மனத்தில் பதிக்க வேண்டுமானால் அந்தக் கருத்தின் நினைவு பசுமையாக இருக்கும்படி எதையாவது செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. குழந்தைத்தனமான காரியங்களானாலும் அவற்றைச் செய்துதான் சில மெய்களைப் புரியவைக்க முடிகிறது. இந்த மாதிரிக் குழந்தைத்தனம் இருப்பதால் தானே சத்தியத்தையும் தருமத்தையும் காப்பாற்றுவதற்காகச் சில அறிவாளிகள் கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது? உன் கையில் முள் குத்தி விட்டதாக நீ என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே. வா, போகலாம். நான் கூறியபடி நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் ஐம்பது பேர்களையும் போய்க் காண்போம். அவர்கள் காவற்படை மாளிகையில் தானே தங்கியிருக்கிறார்கள்?" என்று அவனை உடன் அழைத்துக் கொண்டு அரண்மனைக் காவற்படை மாளிகைக்கு விரைந்தார் மகாமண்டலேசுவரர்.

"சீவல்லபா! வடக்கு எல்லையில் கரவந்தபுரம், கொற்கைப் பகுதிகளில் நம் பகைவர்கள் உண்டாக்கும் கலவரங்களையும், குழப்பங்களையும் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாம் அவர்களை எண்ணிப் பயமும், பதற்றமும் அடைவதற்காக உடனடியாகப் படையெடுப்பு நடக்க இருப்பது போல் ஒரு மிரட்டலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கன்னம் வைத்துத் திருடப் போகிற திருடன் தந்திரசாலியாக இருந்தால் கன்னத் துவாரத்துக்குள் முதலில் தன் தலையை நீட்டமாட்டான். உள்ளே சொத்துக்கு உரியவர் விழித்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்று சோதிப்பதற்காக ஒரு குச்சியில் பழைய மண் சட்டியை மாட்டித் துவாரத்தின் வழியே நீட்டுவான். ஆள் விழித்திருந்தால் அவன் நீட்டிய சட்டியைத் திருடனின் தலையாக எண்ணி உள்ளிருப்பவர் ஓங்கிப் புடைப்பார். சட்டி உடைகிற சத்தம் கேட்டுத் திருடன் ஓடித் தப்பித்துக் கொள்ளுவான். இது போன்ற வேலையைத்தான் வடதிசை அரசர்கள் இப்போது நம்மிடத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றுமே அறியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோமென்பது அவர்கள் நினைப்பு. வைரத்தை வைரத்தால் அறுக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லப் போகிறேன். அவர்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவர்களுக்கே திரும்பக் கற்பிக்கப் போகிறேன். சிந்திக்கவும், சூழ்ச்சி செய்யவும், திட்டமிடவும் அறிவுள்ளவர்கள் தென்பாண்டி நாட்டில் கிடையாதென்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. சோழ நாட்டில் சோறு இருக்கிறது. சேர நாட்டில் யானைகள் இருக்கின்றன. பாண்டி நாட்டில் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாவலந் தீவிலேயே சிறிந்த அறிவாளிகள் தொண்டை நாட்டிலும், தென்பாண்டி நாட்டிலும் இருக்கிறார்கள். தொண்டை நாட்டு அறிவாளிகள் எதையும் மன்னித்துவிடும் இயல்புள்ள சான்றோர்கள். ஆனால், பாண்டி நாட்டான் பாதகத்தை மன்னிக்க மாட்டான். தென் திசை எல்லாத் தீமைகளையும் அழித்தொழிக்கும் காலனுக்குச் சொந்தமென்பார்கள். அதே தென் திசையில்தான் இப்போது நாமும் இருக்கிறோம்." - காரியங்களைக் கண் பார்வையிலேயே சாதித்துக் கொண்டு போகிற மகாமண்டலேசுவரர் அன்று மெய்க்காவற் படைத் தலைவனிடம் சற்று அதிகமாகவே பேசினார்.

நாட்டின் உயிர் நாடியான படைகளை ஆளும் பொறுப்புள்ளவர்கள் தம் மேற் சந்தேகப்படும்படியாகத் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மகாமண்டலேசுவரருக்கு ஒரு பயம் உண்டாகி விட்டிருந்தது. தளபதி வல்லாளதேவன் மனத்தில் தம்மைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லையென்று அவரே அறிந்திருந்தார். ஆபத்துதவிகள் படைத்தலைவன் மகர நெடுங்குழைக்காதனுக்கும் அவர் மேல் ஓரளவு பகை இருந்தது. சீவல்லபமாறனையும் அப்படிப் பகைத்துக் கொண்டால் இந்த மூவருமே தமக்கு எதிராக ஒன்று கூடி மாறுபடுவார்களோ என்ற உள்பயம் அவருக்கு ஏற்பட்டது. தொடக்கத்தில் சீவல்லபனும் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளவே அவனும் ஆகாதவனாகி விடுவானோ என்ற அச்சம் அந்தக் கணமே சூழ்ந்து கொண்டது அவரை.

அந்தக் கணத்திலிருந்தே அவனைத் தட்டிக் கொடுத்து அவனோடு அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டார் அவர். துணிவு வந்துவிட்டால் அறிவுள்ளவனுக்கு ஆயிரம் யானைப் பலம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால் அவனை விடக் கோழை உலகத்தில் வேறு எவனும் இருக்கமுடியாது. மகாமண்டலேசுவரர் அன்று நடந்து கொண்ட விதம் இந்த உண்மைக்குப் பொருத்தமாக இருந்தது.

சீவல்லபமாறனோ உண்மையில் அவருடைய கண் பார்வைக்கே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். தளபதி, ஆபத்துதவிகள் தலைவன், எல்லோருக்குமே அவர் மேல் பிணக்கு இருந்தாலும் அந்தப் பேரறிவுக்கு முன்னால் தலைவணங்கி விடுகிற நடுக்கம் நிச்சயமாக உண்டு. ஆனால் அப்படியிருந்தும் அவர் அவர்களை எண்ணிப் பயந்து கொண்டு தான் இருந்தார். யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா? சங்க காலத்தில் கிள்ளி வளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண்பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் இருந்ததை,

"நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ நயந்து நோக்குவாய் பொன்பூப்ப
செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண்திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை"

என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் மிகையாகப் புகழ்ந்து பாடியிருந்தார். அப்படிப்பட்ட வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் நம் கண்களுக்கு இருந்தும் மனத்தின் ஒரு மூலையில் வேண்டாத வீண் பயத்தை எண்ணிப் பயப்படும் அறிவுள்ளவனுக்கே சொந்தமான தாழ்வு மனப்பான்மையும் வெளிக்குத் தெரியாமல் மகாமண்டலேசுவரரிடம் ஒளிந்து கொண்டிருந்தது.

பேசிக் கொண்டே சென்று அவரும் சீவல்லபமாறனும் அரண்மனைக் காவற்படை மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகை முன்றிலில் சீவல்லபன் தேர்ந்தெடுத்து நிறுத்திவிட்டு வந்திருந்த வீரர்கள் ஐம்பதின்மரும் அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர்.

"இதோ இவர்கள் தான், தாங்கள் கூறிய செயலுக்காகத் தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்கள்" - சீவல்லபன் அவர்களைச் சுட்டிக் காட்டினான். மகாமண்டலேசுவரர் அந்த வீரர்களுக்கு முன்னால் ஒரு சொற்பொழிவே செய்து விட்டார்.

"அன்பார்ந்த மெய்க்காவற் படை வீரர்களே! நீங்கள் சூழ்ச்சியும், சாதுரியமும் மிக்க பெரிய காரியத்தைச் செய்யப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறீர்கள். உயிரின் மேலும் உடலின் மேலும் பற்றுள்ளவராக இருந்தாலும் துணிவோடு செல்லுங்கள். முன்பு பாண்டி நாடாக இருந்து இப்போது வடதிசையரசர்களினால் கைப்பற்றி ஆளப்படும் பகுதிகளிலும், கோனாட்டுக் கொடும்பாளூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கூட்டமாகவோ, தனித் தனியாகவோ சென்று மறைந்திருந்து உங்களால் இயன்ற குழப்பங்களையும் கலவரங்களையும் செய்யுங்கள். நாம் அவர்கள் மேல் படையெடுக்கப் போவதாகவும், பிறகு ஈழத்திலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், நமக்குப் பெரும் படையுதவி கிடைக்கப் போவதாகவும் செய்திகளைப் பரப்பி அவர்களை நம்பவையுங்கள். நீங்கள் ஒருவர் கூட முடிந்தவரை, எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு விடாமல், இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். தப்பித் தவறி யாராவது அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக் கூடாது. நம் நாட்டு வடக்கு எல்லையில் கொற்கையிலும், கரவந்தபுரத்திலும், அவர்கள் செய்கின்ற குழப்பங்களைப் போல் நீங்கள் அங்கே போய்ச் செய்ய வேண்டும். அவ்வப்போது அங்கே உங்களுக்குக் கிடைக்கும் உளவுச் செய்திகளை இங்கே எனக்குத் தெரியுமாறு அனுப்ப வேண்டும். இந்தக் காரியங்களையெல்லாம் நன்றாகச் செய்து உயிர் தப்புவதற்கு உங்களுக்கு என்னென்ன திறமைகள் வேண்டுமென்று தெரியுமா? முதலாவதாகப் பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சமயத்துக்கு ஏற்றாற் போல் வேடமிட்டு நடிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமான மூன்றாவது திறமை, உயிர், உடல், பொருள் எதையும் எந்த விநாடியும் இழக்கத் தயாராகயிருக்க வேண்டும். அவ்வளவு தான்! இறுதியாக உங்களுக்கு நான் கூறும் எச்சரிக்கை ஒன்று உண்டு. இங்கிருந்து இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது கூடியவரையில் பரம இரகசியமாகவே இருக்க வேண்டும்... நீங்கள் எல்லோரும் புறப்பட்டுச் செல்வதற்கு முன் கடைசியாக மிக வேடிக்கையான முறையில் உங்கள் திறமையைப் பரீட்சை செய்து பார்க்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தார்.

"அந்தச் சோதனை யாதோ?" சீவல்லபமாறன் விநயமாகக் கேட்டான்.

"உங்களில் யாருக்கு அதிகப் பொய் கூறும் திறமை இருக்கிறதென்று பரீட்சை செய்யப் போகிறேன்."

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டு எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.

"சுவாமி! மெய்க்காவற் படை வீரர்களிடம் பொய் சொல்லும் திறமையை எதிர்பார்த்தால் தங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிட்டும்!"

"பரவாயில்லை, சீவல்லபா! உலகத்தில் பொய் சொல்லத் தெரியாத ஆட்களே கிடையாது. நன்றாகப் பொய் கூறத் தெரிந்த கூட்டத்தில் இருந்து தான் கவிகள், கதாசிரியர்கள், பௌராணிகர்களெல்லாம் உருவாகிறார்கள். எங்கே, பார்க்கலாம்? முதலில் உன் திறமையைக் காண்கிறேன். அழகாக ஒரு பொய் சொல்."

சீவல்லபன் நாணித் தலை குனிந்தான். அவனால் முடியவில்லை.

"நீ தோற்றாய்" என்று சொல்லிவிட்டு அடுத்த வீரனைக் கேட்டார் அவர். அவன் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் ஏதோ உளறினான்.

"சே! சுகமில்லையே? உங்களில் ஒருவருக்குக் கூட அழகாகப் பொய் சொல்லத் தெரியவில்லையே?" என்று உதட்டைப் பிதுக்கினார் மகாமண்டலேசுவரர். அப்போது அந்த வீரர்களில் கோமாளி போன்ற முக அமைப்பும் கோணிய வாயும் நீளமான மூக்குமுள்ள ஒரு வீரன் முன் வந்தான்.

"நான் சொல்லுகிறேன் ஒரு பொய்!"

"எங்கே சொல் பார்க்கலாம்!"

அவன் சிரித்து விடாமல் சொன்னான்: "என்னைப் பெற்ற அப்பாவுக்கும் அம்மாவுக்கு கல்யாணமாகும் போது நான் சிறு பையனாயிருந்தேன். அப்பா அம்மாவுக்குத் தாலி கட்டுகிற போது நான் அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு பக்கத்தில் வைத்திருந்த உலக்கையின் கொழுந்தை கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஊர்வலத்துக்குக் கொம்புள்ள குதிரை ஒன்றாவது கிடைக்கவில்லையே என்று எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உடனே ஓடிப் போய்த் தெருக்கோடியிலிருந்த மலடியின் எட்டாவது மகனிடம் சொல்லிக் கொம்புள்ள குதிரைக்கு ஏற்பாடு செய்தேன்..."

"அபாரம்! அற்புதம்! இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இதே திறமையோடு இந்த தமிழ்நாட்டில் நீ பிறந்தால் அந்தக் காலத்துக்கே நீதான் மகாகவியாக இலங்குவாய். என்ன அருமையான பொய்!" - மகாமண்டலேசுவரர் கூறினார். அவரும் மற்றவர்களும் நெடுநேரம் அடக்க முடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும் மகாமண்டலேசுவரரின் கண் பார்வை சீவல்லபமாறனுக்குக் கட்டளையிட்டது. அவன் அந்த வீரர்களை அவர்களிடம் ஒப்படைத்த காரியத்தைச் செய்யப் புறப்படுமாறு ஆணையிட்டான்.

17. காந்தளூர் மணியம்பலம்

ஓர் ஏழைத் தாயின் கண்ணீரைத் துடைத்த மகிழ்ச்சியோடு சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்திலிருந்து வெளியேறிய மகாராணி வானவன்மாதேவி நேரே அரண்மனைக்குத்தான் திரும்பிச் செல்வாரென்று புவன மோகினி எண்ணினாள்.

இருவரும் சிவிகையில் ஏறி அமர்ந்து கொண்டதும், "நேரே காந்தளூர் மணியம்பலத்துக்குப் போக வேண்டும். வேகமாகச் செல்லுங்கள்" என்று சிவிகை தூக்குவோருக்குக் கட்டளை பிறந்த போதுதான் புவன மோகினிக்கு மகாராணியின் நோக்கம் புரிந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி மகாராணிக்கு அரண்மனையில் அடைபட்டுக் கிடப்பதில் வெறுப்பு ஏற்பட்டு விட்டதென்பதை வண்ணமகள் நினைத்து உணர முடிந்தது.

எவ்வளவுதான் துன்பம் நிறைந்த சூழ்நிலையாக இருந்தாலும் மகாராணியின் முகத்தில் ஏக்கத்தைக் காட்டிலும் சாந்த குணத்தை வெளிக்காட்டும் சால்பு மிக்க மலர்ச்சி ஒன்று பதிந்திருக்கும். ஆனால் இன்று சுசீந்திரம் கோவிலில் அந்தத் தாயைச் சந்தித்துவிட்டு வந்த பின் தெய்வத்தின் திருவடிகளில் அர்ச்சிப்பதற்கு மலர்ந்த பெரிய செந்தாமரைப் பூவைப் போன்ற மகாராணியின் முக மண்டலத்தில் எதையோ மீண்டும் மீண்டும் எண்ணி மனத்துக்குள்ளேயே நினைவுகளின் சூட்டினால் வெந்து புழுங்கித் தவிக்கும் சோகச் சாயை கோடிட்டிருந்தது. அந்த முகத்துக்கு எதிரே அமர்ந்து கொண்டு அந்த முகத்தையே பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது வண்ணமகளுக்கு. தன் மன வேதனைகளைத் தெரிந்து கொண்டு தனக்கு வேண்டியவர்கள் தன்னை எண்ணி வருந்தக் கூடாதே என்கிற அளவுக்குக் கூச்சம் நிறைந்த மெல்லிய மனம் மகாராணியுடையது.

அந்த முகத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு அஞ்சித் தன் பார்வையைப் பல்லக்கின் வெளிப்பக்கத்திற்கு மாற்றிக் கொண்டாள் புவன மோகினி. பல்லக்கு விரைந்து கொண்டிருந்தது.

பெருமூச்சோடு மெல்ல விம்மி அழுவது போன்ற ஒலியைக் கேட்டுத் திகைத்துத் திரும்பினாள் வண்ணமகள். அவள் கண்களுக்கு எதிரே சிவிகையில் வீற்றிருந்த மகாராணி ஓசைப்படாமல் மெல்ல அழுது கொண்டிருந்தார். அந்தத் தாமரைப் பூ முகத்தில் கண்ணீர்த் துளிகளைக் கண்ட போது புவன மோகினி திடுக்கிட்டாள். அவளுக்குத் துயரங் கலந்த ஒருவகைப் பயத்தினால் மெய் சிலிர்த்தது. 'மகாராணியிடம் என்ன பேசுவது? - ஏன் அழுகிறீர்கள்? என்று எப்படிக் கூசாமல் கேட்பது?' ஒன்றும் புரியாமல் திகைத்துக் கலங்கும் மனநிலையோடு மகாராணியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த எளிய வண்ணமகள்.

"புவன மோகினி! என் அழுகையின் காரணம் புரியாமல் தானே நீ இப்படி என்னைப் பார்க்கிறாய்! கேட்டால் நான் 'வருந்துவேன்' என்று தயங்குகிறாய் இல்லையா?"

சாம்பலை ஊதிக் கனிய வைத்த மங்கலான நெருப்பின் ஒளி போல் அழுகையின் நடுவே ஒரு புன்னகையோடு கேட்டார் மகாராணி.

"தாயே! தங்கள் முகத்தையும், கண்ணீரையும் பார்க்கும் போது, எனக்குப் பெரிதும் வேதனையாயிருந்தது. அதே சமயத்தில் தங்களைக் கேட்பதற்கும் பயமாக இருக்கிறது."

"பயம் என்ன வந்தது? உனக்குத் தோன்றிய எண்ணத்தை நீ கேட்க வேண்டியதுதானே?"

"திருவட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மைத் துன்பத்தை எண்ணி உங்கள் மனம் கலங்குகிறதென்று நான் அனுமானிக்கிறேன். நீங்கள் தான் அந்தப் பெண்ணின் துன்பத்தைப் போக்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டீர்களே! இனியும் ஏன் கலங்க வேண்டும்?"

"கலக்கமல்ல பெண்ணே, இது! உலகத்தின் கசப்பு நிறைந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு அழுகை வருகிறது. எனக்கு அழுகை வரும் போதெல்லாம் உண்மைகளை அடைகிற தகுதியும் வருகிறது. புவன மோகினி! இந்த மாதிரித் தத்துவங்களெல்லாம் உனக்குப் புரியாது. என்றாலும் சொல்லுகிறேன். மெய்யைத் தெரிந்து கொள்வதற்கு நூல்களைப் படித்தலும் அறிவுரைகளைக் கேட்டலுமே போதுமான கருவிகளென்று பல பேர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலகத்துத் துன்பங்களையெல்லாம் உணர்ந்துணர்ந்து உருகி அழுகின்ற மனம் வேண்டும். உள்ளம் உருகி அழுதால் உண்மை விளங்கும். நெஞ்சம் கலங்கிக் குமுறினால் நியாயம் பிறக்கும். பிறவி என்ற பிணி வாசனை தொலைக்கும் மணிவாசகர் ஒரே வாக்கியத்தில் இதை, "அழுதால் உன்னைப் பெறலாமே" என்று விளக்குகிறார். இப்போது சில சமயங்களில் இறைவனைப் பெறுவதற்கு அழுவதை விட நம்மைப் புரிந்து கொள்வதற்கே நாம் அழுதாக வேண்டும். நான் அழுகின்ற அழுகை உண்மையை அறிந்தும், அறிய முயன்றும் அழுவதே தவிர வேறென்று நீ வருந்த வேண்டாம்."

மகாராணியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் புவன மோகினிக்கு ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவியது. கண்களில் பக்திப் பரவசத்தின் ஒளி சுடர்க்கோடிட்டது. மின்னல் மின்னும் நேரத்தில், ஒரு கணத்தின் ஒரு சிறு பகுதிப் பொழுதில், அந்த வண்ணமகளின் கண்களுக்கு முன்னால் மகாராணி வானவன்மாதேவியாரின் கண்ணீர் சிந்திய முகம் தெரியவில்லை. நீலத்திரைக் கடலோரத்தில் கோலக்கன்னிமை யெனும் தவம் பூண்டு நிற்கும் வாலைக்குமரி வடிவம் சிவிகையினுள் வந்தமர்ந்து கொண்டு 'ஐயோ! தலைமுறைக்குத் தலைமுறை உலகில் தாய்க் குலத்தின் துன்பங்கள் பெருகி வருகின்றனவே' என்று கதறிக் குமுறிக் கலங்குவது போல் ஒரு பொய்த் தோற்றம் - ஒரு பிரமைக் காட்சி - புவன மோகினியின் கண்களுக்கு முன்பு தெரிந்து மறைந்தது. புவன மோகினி தன் வசமிழந்த நிலையில் அந்த ஒரு கணம் உடலெங்கும் பரவி நின்ற எல்லையற்ற பரவசத்தினால் என்ன செய்கிறோமென்ற நினைவேயன்றி இரண்டு கைகளும் மேல் எழுப்பிக் கைகூப்பி வணங்குவதற்குத் தயாராகி விட்டாள்.

'ஆகா! எவ்வளவு விந்தையான பரந்த மனம் இவருக்கு வாய்த்திருக்கிறது? உலகத்தில் முக்கால்வாசிப் பேருக்கு தங்கள் சொந்தத் துன்பத்தை எண்ணி வருந்துவதற்கே நேரமில்லை. கால்வாசிப் பேருக்குத் துன்பங்களே நிரந்தரமாகப் பழகிவிட்டதால் அவற்றையே இன்பங்களாக எண்ணிச் சிரித்துக் கொண்டே வாழப் பழகி விட்டார்கள். கண்களின் பார்வைக்கு இவர் பாண்டிமாதேவி மட்டும் தான். கருணையின் பார்வையில் இவர் உலகமாதேவி! நாட்டையும், மகனையும், கண்ணீரையும் அடக்கிக் காக்க முடியாத சூழ்நிலை. உலகத்தையே துன்பமின்றிக் காக்க வேண்டுமென்ற ஆவல். உண்மைக்காக அழுது உயர உயரப் போகும் உலகளாவிய மனம், இந்த மனம்?... இது மனிதப் பெண்ணின் மனமில்லை!' தெய்வப் பெண்ணின் மனத்தோடும் மனிதத் தாயின் உடலோடும் அந்தச் சமயத்தில் புவன மோகினியின் கண்களுக்குத் தோன்றினார் மகாராணி.

"தாயே! உணவைக் கூட முடித்துக் கொள்ளாமல் அரண்மனையிலிருந்து கிளம்பினீர்கள். சுசீந்திரத்திலிருந்து நேரே அரண்மனைக்கே திரும்பி விடலாமென்று எண்ணியிருந்தேன். தாங்களோ திடீரென்று காந்தளூர் மணியம்பலத்துக்குப் புறப்பட்டு விட்டீர்கள்" என்று வண்ணமகள் கவலையோடு வினவினாள்.

"உணவுக்கென்ன? எங்கும் கிடைக்கக் கூடியதுதான். நிம்மதியை அல்லவா நான் தேடிக் கொண்டு போகின்றேன். திரும்பத் திரும்பக் கட்டுக்குள் அடைபடும் பறவையைப் போல் மறுபடியும் நான் அரண்மனைக்குள் போய் அடைபட்டுக் கொண்டிருக்க என் மனம் ஒப்ப மாட்டேன் என்கிறதே! ஆசிரியர், பவழக்கனிவாயர் போன்றவர்கள் அரண்மனையில் வந்து தங்கியிருந்தார்கள். அவர்களும் திரும்பிச் சென்று விட்டார்கள். என்னோடு உடன் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் விலாசினி. அவளும் திடீரென்று தந்தையோடு புறப்பட்டுப் போய்விட்டாளே. வல்லாளதேவனின் தங்கைக்கு என்னிடம் சொல்லிக் கொள்வதற்குக் கூட நேரமில்லை போலிருக்கிறது. அவளும் போய்விட்டாள். மனம் விட்டுப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் அரண்மனையில்? காந்தளூர் மணியம்பலத்துக்குப் போய் நிம்மதியாக இரண்டு நாட்கள் தங்கிவிட்டுக் கொஞ்சம் மெதுவாகத்தான் திரும்பிப் போகலாமே. இப்போது என்ன அவசரம்?"

"அவசரம் இல்லை? ஆனால் நாம் கூடியவரையில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டிருக்கிறோமே என்று தான் கவலைப்படுகிறேன்."

"ஒரு கவலையும் உனக்கு வேண்டாம். பேசாமல் என்னோடு வா!"

கண்களைத் துடைத்துக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு மகாராணி இவ்வாறு உறுதிமொழி கூறியதும் புவன மோகினி அமைதியடைந்தாள்.

மகாராணியையும், வண்ணமகளையும் சுமந்து கொண்டு அந்தப் பல்லக்கு அப்படியே காந்தளூரை அடைவதற்குள் நேயர்களுக்கு ஒருவாறு காந்தளூர் மணியம்பலத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்தி வைத்துவிடுகிறேன்.

பல்லாயிரங் காலத்துப் பேரெல்லைவரை பரவிக் கிடக்கும் தமிழக வரலாற்றுப் பெருக்கில் தமிழ் மூவேந்தர்களிற் சிறப்பெய்திய எவரும் காந்தளூருடன் தொடர்புற்றிருப்பர். எந்த மகா மன்னனுடைய மெய்க் கீர்த்தியும் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்தருளிய பெருமையைப் பறை சாற்றத் தவறியதில்லை. எத்தனை முறைகள் தோல்வியடைந்தாலும் பாண்டியனை எதிர்த்துக் காந்தளூரை வென்றிடும் ஆசையை எவரும் விடத் தயாராயில்லை. இவ்வாறு மன்னாதி மன்னர்களின் ஆசைகளை வளர்க்கும் அழகுக்கு கனவாகத் தென்பாண்டி நாட்டில் இலங்கி வந்தது காந்தளூர்.

'செருவல ரானதானற் சிந்தியார் போலும்
மருவலராய் வாள்மாறன் சீறக் - கருவிளை
கண்தோற்ற வண்டரவம் கார் தோற்று காந்தளூர்
மண்தோற்ற வேந்தர் மனம்.'

சாலை என்றும், காந்தளூர்ச் சாலை என்றும் இதே இடத்துக்கு வேறு பெயர்கள் வழங்கும். இராசசிம்மனின் தந்தை பராந்தக பாண்டியனுடைய காலத்தில் விழிஞத்தையும், காந்தளூரையும் சேர மன்னனிடமிருந்து கைப்பற்றினார் பராந்தக பாண்டியர். மிக இளைஞராயிருக்கும் காலத்திலே முதல் முதலாகச் செய்த கன்னிப் போர் காந்தளூரில்தான் நிகழ்ந்தது. கன்னிப் போர் திருமணமாகாமல் இளைஞராயிருந்த அவருக்கு ஒரு கன்னிகையையே அளித்து விட்டது. சேர மன்னன் பராந்தகனுக்குத் தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தான். அந்தப் பெண்ணே பட்டமகிஷியாய் வானவன்மாதேவி என்னும் பெயரோடு பராந்தகன் வாழ்வில் பங்கு பற்றினாள். விழிஞத்தில் நிறையக் கடற்போர்களைச் செய்து, பகைவர்கள் கப்பல்களை அழித்து வாகை சூடும் பெருமை பராந்தகனுக்குக் கிடைத்தது. அதையெல்லாம் விடப் பெரிய பெருமை அவன் காந்தளூரில் திருத்தியமைத்து நிறுவிய மணியம்பலமே ஆகும்.

இந்த மணியம்பலத்தில் ஆயிரத்தெட்டுப் பேர் எல்லாக் கலைகளிலும் வல்லவர்களாக இருந்தார்கள். மறையவர்கள் பெருபாலோரும், கவிஞர்களும், கலைஞர்களும், தர்க்க நியாய சாத்திரங்களில் வல்லவர்களுமாகச் சிலரும் காந்தளூர் மணியம்பலத்தில் இருந்ததனால் தென்பாண்டி நாட்டின் பல்கலைக் கழகம் போன்றிலங்கி வந்தது இது. பவழக்கனிவாயர் இந்த மணியம்பலத்தின் அறங்காவலராகவும், அதங்கோட்டாசிரியர் கலை, கல்வி, தமிழ் போன்ற அறிவுத் துறைகட்குக் காவலராகவும் பொறுப்பேற்றிருந்தனர்.

அதேபோல் திருநந்திக் கரையிலும் குழித்துறையாற்றங் கரையில் திருச்சேரண நகரிலும் சமணர்களின் கலாசாலைகள் இருந்தன. அவற்றையும் பராந்தகன் ஆதரித்தான். காந்தளூர் மணியம்பலத்திலிருந்து மறையவர்களும் அற நூலாசிரியர்களும் மிக உயர்ந்த கருத்துக்களைக் கல்லில் செதுக்கச் செய்து நாட்டின் பல பகுதிகளிலும் அக்கற்களை நடுவித்தனர். காந்தளூரில் மரங்களும், செடி கொடிகளும், மலர்வனங்களும் நிறைந்த அற்புதமான இயற்கைச் சூழலின் நடுவே மணியம்பலம் அமைந்திருந்தது. இந்த மணியம்பலத்தில் இருந்த ஆயிரத்தெட்டு மறையவர்களும், பிறரும் போட்டி பொறாமை, புலமைக் காய்ச்சலின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதில் பராந்தகனுக்கு அக்கறை அதிகமாயிருந்தது.

திருச்சேரணத்துச் சமணர்களும் தங்கள் கலாசாலை மூலம் பெரிய காரியங்களைச் சாதித்தனர். தெய்வங்களின் கோவில்கள் பல இருந்தன போல் அறிவின் ஆலயங்களாக மணியம்பலமும் பிறவும் விளங்கி வந்தன.

எனவே, மகாராணியாகிய வானவன்மாதேவி தாணுமாலய விண்ணகரமென்னும் சுசீந்திரம் தேவாலயத்தைத் தரிசனம் செய்த பின் அறிவாலயமாகிய மணியம்பலத்துக்குப் புறப்பட்டது மிகவும் பொருத்தமும் ஆகிவிட்டது.

பவழக்கனிவாயர் முதலியவர்களும் கூட அன்று அதிகாலையில் தான் அரண்மனையிலிருந்து அங்கே திரும்பி வந்திருந்தார்கள். யாருக்கும் தெரியாமல், யாரும் எதிர்பாராத போது அப்படித் திடீரென்று மகாராணி அங்கே வருவார் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சுசீந்திரத்திலிருந்து புறப்பட்ட சிவிகை காந்தளூர் மணியம்பலத்தை அடையும் போது மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியிருந்தது.

இயற்கையின் அழகான பசுமைக் கோலத்தின் நடுவே தீப ஒளியில் அமைதியாகக் காட்சியளித்தது மணியம்பலம். பகுதி பகுதியாகப் பிரிந்திருந்த அந்தப் பேரம்பலத்தில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு வகைக் கலையைக் கற்பிக்கும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஒருபுறம் மறை யொலி, இன்னொரு புறம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் விரிவுரை, வேறோர் பகுதியில் பாதச் சிலம்புகள் குலுங்கும் நாட்டிய ஒலி, இசைக் குரல்களின் இனிமை - எல்லா ஒலிகளுமாகச் சேர்ந்து வேறு வகையில் அந்த இடத்தின் அமைதியைத் தெளிவுபடுத்தின.

சிவிகையை விட்டு இறங்கி மணியம்பலத்துக்குள் நடந்தனர் மகாராணியும், புவன மோகினியும்.

"நான் முன்னால் ஓடிப்போய்த் தங்கள் வரவைப் பவழக்கனிவாயருக்கு அறிவித்து விடுகிறேன்" என்று சிறிது விரைவாக முன்னால் நடக்க முயன்ற புவன மோகினியைத் தடுத்து நிறுத்தினார் மகாராணி.

"நமக்குக் கால் இருக்கிறது. நாமே நடந்து செல்லலாம். அவரவர் கடமைகளை அந்தந்த நேரத்துக்கு ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் இந்தக் கலைக்கோயிலில் இப்போது நீ போய் என் வரவைக் கூறினால் இங்குள்ள அத்தனை மறையவர்களும், கலைஞர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் பரபரப்படைந்து என்னை வரவேற்பதற்கு ஓடி வந்து வீண் கூட்டம் போடுவார்கள். அந்த ஆடம்பர ஆரவாரத்தை எதிர்நோக்கி நான் இங்கு வரவில்லை."

புவன மோகினி பதில் சொல்ல வாயின்றி உடன் நடந்தாள். மணியம்பலத்தில் யாருமே இவர்கள் உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.

தர்க்க நியாய சாத்திரங்களையும், சமய நூல்களையும் கற்பிக்கும் ஒரு பகுதிக்கு அருகே வந்ததும் மகாராணியும், புவனமோகினியும் நின்றார்கள். அங்கே ஒரு முதுபெரும் புலவர் மணியம்பலத்தைச் சேர்ந்த சீடர்களைத் தம்மைச் சுற்றிலும் உட்கார வைத்துக் கற்பித்துக் கொண்டிருந்தார். அதில் சில வார்த்தைகள் உள்ளத்தைத் தொடவே, தாம் நிற்பது தெரியாமல் மறைந்து நின்று கேட்கத் தொடங்கினார் மகாராணி.

"துன்பங்கள் குறைவதற்கு எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும். 'இது வேண்டும், அது வேண்டும்' என்று ஆசையை வளர்த்துக் கொண்டு போகிறவனைக் காட்டிலும் எதுவுமே வேண்டாமென்று மனத்தைக் கட்டுகிறவன் பெரிய செல்வன். வேண்டாமையைப் போன்ற சிறந்த செல்வம் வேறில்லை. எந்தப் பொருளை அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்தப் பொருள்களை விரும்புவதால், பெறுவதால் வரும் துயரங்கள் நமக்கு இல்லை.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்."

"மாணவர்களே! சமயநெறி ஒப்புக் கொண்ட வாழ்க்கை இதுதான். இதுவே தவம்" என்று மூதறிஞர் கூறி முடித்தார்.

'எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும்.' மகாராணி தமக்குள் மெல்லக் கூறிக் கொண்டார் அந்த வாக்கியத்தை. விளக்கைக் கண்டவுடன் மாயும் இருள் போல் நெடுநேரமாக மனத்தை வதைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்றை அந்த முதுபெரும் புலவர் கூறிய திருக்குறள் கருத்து நீக்கிவிட்டது போலிருந்தது. "புவன மோகினி வா... நாம் அரண்மனைக்கே திரும்பிப் போய்விடலாம்." இவ்வாறு கூறிவிட்டு இருளில் மறைந்து நின்று கொண்டிருந்த மகாராணி புறப்பட்ட போது புவன மோகினிக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. மகாராணியின் மனம் ஒரு நிலையில் நிற்காமல் ஏதோ காரணத்தால் அலை பாய்ந்து கொண்டிருக்கும் போலுமென்று அவளுக்குத் தோன்றியது.

"இரண்டு நாட்கள் இங்கே நிம்மதியாகத் தங்கி விட்டுப் போக வேண்டுமென்று கூறினீர்களே! இப்போது உடனே புறப்பட வேண்டுமென்கிறீர்களே? சுசீந்திரத்திலிருந்தே அரண்மனைக்குத் திரும்பியிருந்தால் இதற்குள் போய்ச் சேர்ந்திருக்கலாமே?" என்று மெல்லிய குரலில் மகாராணியைக் கேட்டாள் வண்ணமகள்.

"பெண்ணே! அப்போது அப்படித் தோன்றியது, சொன்னேன். இப்போது இப்படித் தோன்றுகிறது, சொல்கிறேன். இரண்டு நாட்கள் இந்த மணியம்பலத்தில் தங்கி என்னென்ன தெரிந்து கொண்டு நிம்மதி அடைய வேண்டுமென்று எண்ணி வந்தேனோ அந்த நிம்மதி இரண்டு கணங்களில் இந்தப் புலவரின் சொற்களில் கிடைத்துவிட்டது."

"போகுமுன் பவழக்கனிவாயரைப் பார்க்க வேண்டுமல்லவா?"

"யாரையும் பார்க்க வேண்டாம்! யாருக்கும் தெரியாமல் நாம் திரும்பி விடுவோம்!"

ஓசைப்படாமல் திரும்பிச் சென்று, வந்தது போலவே வெளியேறினார்கள் அவர்கள். மணியம்பலத்தின் வாயிலில் அலுத்துப் போய் உட்கார்ந்திருந்த பல்லக்குத் தூக்குவோர் களைப்பையும் பொருட்படுத்தாமல் புறப்பட்டு விட்டார்கள். இருளின் நடுவே ஒளி நிறைந்த மனத்தோடு மகாராணியின் பயணம் தொடர்ந்தது.

18. வீரர் திருக்கூட்டம்

அரண்மனைத் தோட்டத்து மாமரத்தடியில் யாருக்கும் தெரியாமல் தங்கை பகவதியைச் சந்தித்து விட்டுச் சென்ற தளபதி வல்லாளதேவன் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போய் ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டான்.

அன்று வரை உண்பதும், உறங்குவதும், விளையாட்டான பொழுது போக்குகளில் ஈடுபடுவதுமாக இருந்த ஐந்நூறு பத்திப்படை வீரர்களுக்கும் தளபதியின் வரவு சுறுசுறுப்பூட்டியது. விரைவாகவும், தீவிரமாகவும் தளபதி செய்யும் ஏற்பாடுகளைக் கவனிக்குமுன் அந்தப் பிரம்மாண்டமான படைத்தளத்தில் ஒவ்வொரு பகுதியையும் சற்றே சுற்றிப் பார்த்து விடலாம்.

தென் பாண்டி நாட்டின் அறிவுக்கு முன்மாதிரியாக இடையாற்று மங்கலத்தைச் சுட்டிக் காட்டலாமென்றால் ஆண்மைக்கு முன்மாதிரியாகக் கோட்டாற்றுப் படைத் தளத்தைத் தான் சொல்ல வேண்டும். பல்வகைப் பெரும் படைகளும், படைக்கருவிகளும் ஆயுதச் சாலைகளும் நிறைந்த படைத் திருமாளிகை அது. தமிழ்நாட்டுப் பொதுவான படைவீரர்கள் தவிர மோகர், மழவர், யவனர் போன்ற சிறப்புப் பிரிவினரான வீரர்களும் அங்கு இருந்தார்கள்.

யானை, குதிரை, தேர்கள் உட்பட எல்லாப் படைவீரர்களும் அணிவகுத்து நிற்பதற்கேற்ற பெரும் பரப்புள்ள திறந்தவெளி முற்றம் தான் படைத்தளத்தின் முக்கியமான இடம்.

அதோ, சிற்ப வேலைப்பாடு மிக்க பளிங்குமேடையின் மேல் குன்று போல் பெரிய முரசம் ஒன்று வார்களால் இறுக்கிக் கட்டப்பட்டு விளங்குகிறதே, அது ஒலிக்கப்பட்டால் அந்த முற்றம் படைகளால் நிரம்பி வழியும்.

யானைகள் பிளிறும் ஓசை, குதிரைகளின் கனைப்பொலி படைத்தளத்தில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். படையைச் சேர்ந்த யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தனித் தனியே கொட்டங்கள் அங்கிருந்தன. போருக்குரிய தேர்கள் ஒருபுறம் வரிசையாக அழகாக இலங்கின. அங்கிருந்த பெரிய ஆயுதச்சாலைக்குள் கோழைகள் நுழைந்தால் மயக்கம் போட்டுத் தலைசுற்றி விழுந்து விட வேண்டியதுதான். அப்பப்பா! மனிதனுக்கும் மனிதனுக்கும் பகை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதற்கு எத்தனை கருவிகள். ஒளியுறத் தீட்டிச் செம்மை செய்யப்பட்ட வாள்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. வேல்கள், ஈட்டிகள், வில், அம்பறாத் தூணிகள், கேடயங்கள், இரும்புக் கவசங்கள் இன்னும் எத்தனையோ வகைப் போர்க் கருவிகள் குன்று குன்றாகக் குவிக்கப்பட்டு நிறைந்திருக்கிறது கோட்டாற்றுப் படைத்தளத்தின் ஆயுதச்சாலை.

எல்லாக் கேடயங்களிலும் அவற்றை எதிர்த்துப் பிடிக்கும் பக்கத்துக்குப் பின்னால் இருந்த குழியில் ஒரு சிறு கண்ணாடி பதிந்திருந்தது. கேடயத்தைப் பிடித்துக் கொண்டு போர் புரியும் போது முறையற்ற விதத்தில் எவரேனும் பின்புறமாகத் தாக்க வந்தால் அதில் பதிந்திருக்கும் கண்ணாடியின் மூலம் போரிடுபவன் அதைத் தெரிந்து கொள்வான். வீரர்களின் வசதிக்காக இந்தப் புதிய நுணுக்கத்தை அறிந்து கேடயத்தில் பொருந்தியிருந்தனர்.

போர் வீரர்கள் முழக்கும் துடி, பறை, கொம்பு, வளை, வயிர் முதலிய போர்க்கால வாத்தியங்களும் கோட்டாற்றுப் படைக்கோட்டத்தில் குறைவின்றி இருந்தன. யானைகளுக்குப் போர்த்தும், முகபாடங்களும், அவற்றை அடக்கும் அங்குசங்களும், அவற்றின் மேல் வைக்கும் அம்பாரிகளும் ஒருபுறம் பெருகிக் கிடந்தன. குதிரைகளை அலங்கரிக்கும் நெற்றிப் பட்டங்களும், கடிவாளங்களும், சேணங்களும் மற்றோர் புறம் நிறைந்திருந்தன. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடிப்பெருமை அந்தப் பெரும்படைச் சாலையின் ஆயுதங்களில் விளங்கிற்று.

'எத்தனை போர்களில் எத்தனை வீரர்களுடைய தசையைத் துளைத்துக் குருதியைக் குடித்திருக்கும் இந்த ஆயுதங்கள்? இன்னும் எத்தனை போர்களில் அப்படிச் செய்ய இருக்கின்றனவோ? மண்ணைக் காப்பதற்குச் சில போர்கள். மண்ணைப் பறிப்பதற்குச் சில போர்கள். பெண்ணைக் காப்பதற்குச் சில போர்கள். பெண்ணைப் பறிப்பதற்குச் சில போர்கள். போர் செய்யத் தெரிந்த நாளிலிருந்து ஆயுதங்கள் புதிது புதிதாக வந்தன. ஆயுதங்கள் புதிது புதிதாக வந்த நாளிலிருந்து போர்களும் புதிது புதிதாகப் புதுப்புதுக் காரணங்களுக்காக உண்டாகிவிட்டன.

தளபதி வல்லாளதேவன் அன்று படைத்தளத்துக்கு வந்த போது அங்கிருந்த எல்லாப் பிரிவுகளிலும் பரபரப்பும் வேகமும் உண்டாயின. மேல்மாடத்தில் கோட்டையின் உயரமான கொடி மரம் அமைந்திருந்த மேடையில் ஏறி நின்று பார்த்தால் பரிமாளிகை (குதிரைகள் இருக்குமிடம்) கரிமாளிகை (யானைகள் இருக்குமிடம்) உட்பட யாவும் நன்றாகத் தெரியும். வீரர்களையும் படைத் தலைவர்களையும் ஒன்று கூட்டி நிலைமையை விளக்கி ஏற்பாடுகள் செய்வதற்காக அங்கே வந்திருந்த தளபதி கொடி மரத்து மேடையில் ஏறி நின்று கொண்டு அன்று தான் புதிதாகப் பார்க்கிறவனைப் போல் அந்தப் படைத்தளத்தின் மொத்தமான தோற்றத்தைப் பார்த்தான். படைத்தளமே ஒரு சிறிய நகரம் போல் காட்சியளித்தது.

'தென் பாண்டி நாட்டையும், மகாராணியையும் காப்பாற்றும் விதியின் வலிமை இந்தப் படைக் கோட்டத்திலும் இதில் நான் செய்யப் போகிற ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கின்றன. ஆனால் தம்முடைய மூளையிலும் சிந்தனைகளிலும் அடங்கியிருப்பதாக மகாமண்டலேசுவரர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அதைக் காணும் போது ஒரு நினைவு அவன் மனத்தில் உண்டாயிற்று. மகாமண்டலேசுவரர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி அசூயையும், காழ்ப்பும், காய்ச்சலும் தன்மனத்தில் உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவரை நேரில் பார்த்து விட்டாலோ பயம், அடக்கம், பணிவு எல்லாம் அவனையும் மீறி அவனிடத்தில் வந்து பொருந்திக் கொண்டு விடுகின்றன. துணிந்து ஓரிரு முறை அவரை சந்தித்துப் பேசியிருக்கிறானென்றாலும் அவ்வாறு பேசி முடிந்த பின் 'ஏன் பேசினோம்' என்று தன்னை நொந்து கொண்டிருக்கிறான். ஆழமும் அழுத்தமும் நிறைந்த அவருடைய கண்களின் முன் அவன் தனக்குத் தானே சிறு பிள்ளையாய்ப் போய்விடுவான். அவருடைய பார்வைக்கு முன்னால் அவனுக்கு உண்டாகிற தாழ்வு மனப்பான்மையை அவன் தவிர்க்க முடிவதில்லை. கணவனின் முகத்தைக் காணாத போது ஏற்பட்ட ஊடல் அவனைப் பார்த்து விட்டதுமே மறைந்துவிடும் பலவீனமான பெண் மனநிலையைத்தான் அவனுக்கு உவமை கூற வேண்டும்.

அவருடைய கட்டளைக்குத்தான் அவன் கீழ்ப்படிந்தான். அவன் என்ன? மகாராணியே அப்படித்தானே? ஆனால் எவருடைய கண்களுக்கு முன்னால் அவன் தலைகுனிவானோ, எவருடையோ கட்டளை அவனை ஆளுமோ, எவருடைய அறிவு அவனை மலைக்க வைத்ததோ, அவர் மேலேயே அவன் சந்தேகப்பட்டான்; பொறாமை கொண்டான். பிறருக்குத் தெரியாமல் அவர் நடவடிக்கைகளை நேரிலும், தன்னைச் சார்ந்தவர்களைக் கொண்டும் இடைவிடாமல் கண்காணித்தான்.

பெரிய அரசன் அரண்மனையின் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின் ஒளியால் அவனால் ஆளப்படும் நாட்டின் பல காதப் பரப்புக்குள்ளும் அவன் ஆணைகள், சட்டதிட்டங்கள் ஒழுங்காக நடப்பதற்குக் காரணம் என்ன? அவன் ஆளுமிடம் எங்கும் அவனுடைய ஆற்றல் ஒளி காக்கிறது.

'உறங்கமாயினும் மன்னவன் தன்னொளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்.'

கறங்கு சிந்தாமணியாசிரியர் கூறிய தொடர்தான் மகாமண்டலேசுவரரைப் பொறுத்த மட்டில் தளபதியின் தத்துவமாக இருந்தது. மகாமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் மன்னர் இல்லை. ஆனால் இடையாற்று மங்கலத்திலோ அரண்மனையின் ஒரு மூலையில் இருந்து கொண்டு தம் எண்ணத்தின் ஒளியால் நாடு முழுவதும் காத்துக் கண்காணிக்க முடிகிறது. மந்திரவாதிகளுடைய கண் பார்வைக்கு எதிராளியைக் கட்டிவிடும் ஆற்றல் இருப்பது போல் அவரிடம் ஏதோ ஒரு அதீத ஆற்றல் இருப்பதாகத் தளபதிக்குப் பட்டது. கோட்டாற்றின் மாபெரும் படைத் தளத்தின் தலைவனாக இருந்தும் மகாமண்டலேசுவரரின் அந்த ஈடு இணையற்ற சதுரப் பாட்டில் நாலில் ஒரு பங்குகூடத் தனக்கு வரவில்லையே என்ற புகைச்சல் அவனுக்கு உண்டாயிற்று.

கண்ணுக்கு மையெழுதும் எழுதுகோலைத் தொலைவில் இருக்கும் போது கண்ணால் பார்க்க முடிகிறது. அதே எழுதுகோலால் மைதீட்டும் போது கண்களாலேயே அதைக் காண முடிவதில்லை. மகாமண்டலேசுவரரைக் காணாத போது பொறாமையைக் கண்ட தளபதிக்கு அவரை நேரில் கண்டால் அவரது பெருமைதான் தெரிந்தது.

கொடி மரத்து மேடையில் நின்று கொண்டு கண் பார்வையில் படுமிடம் வரை பரவியிருக்கும் அப்பெரும் படைத்தளத்தைப் பார்வையிட்ட போதும் மகாமண்டலேசுவரரைத்தான் அவன் நினைக்க முடிந்தது. தன் சிந்தனை அத்தனை பெரிய படைத்தளத்தையும் அந்த ஒரே ஒரு மனிதரையும் சமமாக நிறுத்துப் பார்ப்பது ஏனென்றே அவனுக்குப் புரியவில்லை.

அதோ! பூண் பிடித்த எடுப்பான தந்தங்கள் ஒளிரக் கருமலைகள் போல் நூற்றுக்கணக்கான யானைகள், வெண்பட்டுப் போல் பளபளக்கும் கொழுத்த உடல் வனப்புள்ள குதிரைகள், தேர்கள் - அவ்வளவையும் ஆளும் அந்த வீரத் தளபதியும் ஒரே மனிதரின் அறிவானச் சுழலை நினைக்கும் போது கொஞ்சம் நினைவு துவளாமல் இருக்க முடியவில்லை. உடலின் வன்மையால் வாழத் துடிக்கிறவனுக்கு எப்போதாவது ஏற்பட்டே தீரவேண்டிய சோர்வு இது.

கோட்டாற்றிலுள்ள ஆயுதச் சாலையில் இருந்தது போல் முன்பு நான் இடையாற்று மங்கலத்து விருந்தினர் மாளிகையில் தங்கின இரவில் அதன் அடியில் கண்ட பாதாள மண்டபத்தில் மகாமண்டலேசுவரர் ஆயுதங்கள் சேர்த்துக் குவித்து வைத்திருந்ததை நினைவுபடுத்திக் கொண்டான் வல்லாளதேவன்.

மனத்தில் நிகழும் போராட்டத்துக்கு ஓர் ஏற்பாடும் தோன்றாமல் நாட்டுக்கு வரப்போகும் போராட்டத்தைத் தாங்க வேண்டியதைச் செய்வதற்காகக் கொடி மரத்து மேடையிலிருந்து கீழிறங்கிப் படை முற்றத்துக்கு வந்தான் அவன். ஐநூறு பத்தி (பத்தியென்பது குறிப்பிட்ட தொகையினரைக் கொண்ட படையணி) வீரர்களின் சிறு தலைவர்களும் முரசமேடையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தன்னை வணங்கி வரவேற்ற வரவேற்பை ஏற்றுத் தளபதி படைகளை முற்றத்தில் அணிவகுத்து நிறுத்த வேண்டுமென்று கட்டளையிட்டான்.

கட்டளை பிறந்த அடுத்த கணம் ஊழிக்காலப் பேரிடிகள் ஏககாலத்தில் முழங்கிச் சாடுதல் போல் அந்தப் பெரும் முரசு முழங்கியது. நான்கு பக்கமும் நெடுந்தூரத்துக்குப் பரந்திருந்த படைக்கோட்டத்துப் பகுதிகளில் எல்லாம் அம் முரசொலி கேட்டது. பக்கத்துக்கு ஒருவராக இருபுறமும் நின்று கொண்டு அந்த முரசை முழக்கிய வீரர்கள் கை ஓயுமட்டும் முழக்கினர்.

அரை நாழிகைக்குள் அந்த முற்றம் பத்தி பத்தியாக அணிவகுத்த வீரர்கள் திருக்கூட்டத்தால் நிறைந்துவிட்டது. முரச முழக்கம் நின்றதும் அமைதி சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிபெற்று நிற்கும் அந்தப் படைவெள்ளத்தில் ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கும், அவ்வளவு நுண்ணிய அமைதி பரவி நின்றது. முரசு மேடையில் அவர்களின் சிறு தலைவர்களோடு ஏறி நின்று கொண்டு படைகளை நிதானித்துப் பார்த்தான் தளபதி வல்லாளதேவன்.

சோழனுக்கும், அவனோடு சேர்ந்திருக்கும் வடதிசை அரசர்களுக்கும் உள்ள படைகளின் மொத்தமான தொகையை மனம் அனுமானித்துக் கொண்டபடி ஒப்பு நோக்கித் தன் கண்ணெதிர் நிற்கும் படைப் பரப்போடு இணை பார்க்க முயன்றான் அவன். இணை பொருந்தவில்லை. ஏதாவது வெளியிலிருந்து படை உதவி கிடைத்தாலொழியத் தென்பாண்டிப் படை வடதிசைப் பெரும் படைகளின் கூட்டணியைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காதென்று அவன் மதிப்பில் தோன்றியது. தன்னைச் சூழ்ந்து கொண்டு நின்ற அணித் தலைவர்களை நோக்கி அவன் ஆவேச உணர்ச்சியோடு பேசலானான்:

"நண்பர்களே! வெற்றியும், தோல்வியுமாகப் பல போர்களில் அனுபவப்பட்டுள்ள நாம் இப்போது மலைப்பு அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம். வடக்கே சோழப் பேரரசின் படை பெரிது. அதோடு கொடும்பாளூர்ப் படை, கீழைப் பழுவூர்ப்படை ஆகிய சிறுபடைகளும் ஒன்று சேரப் போகின்றன. ஐந்து அரிய திறமைசாலிகள் ஒன்றுபட்டுக் கூட்டுப்படை அணியாக அது அமையலாம். சோழ கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளூரானும், கீழைப் பழுவூர் கண்டன் அமுதனும், பரதூருடையானும், அரசூருடையானும் ஒவ்வொரு வகையில் போர் அனுபவம் மிகுந்தவர்கள். அவர்கள் ஒன்றுபட்டுக் கூட்டாகப் படையெடுக்கும் இந்தப் போரை வன்மம் பாராட்டிக் கொண்டு செய்யப் போகிறார்கள்.

"நாம் எல்லாருமே கடமையிற் கருத்துள்ள வீரர்கள் தாம். போர் செய்து மார்பிற் புண்களைப் பெறாத நாட்களெல்லாம் நம் வாழ்க்கையிலே பயனற்றுக் கழிந்த நாட்களென்று கருதுபவர்கள்தாம். கண்களுக்கு நேரே வேலை ஓங்கினால் இமைகள் மூடினும் அதையே தோல்வியாக எண்ணி நாணப்படும் அளவுக்குத் தன்மானமும், மறப்பண்புள்ள மகாவீரர்களும் நம்மில் அநேகர் இருக்கின்றனர்.

"கொற்கை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசையரசர் மறைமுகமாக நடத்திய குழப்பங்களைக் கொண்டு விரைவில் படையெடுப்பு நிகழலாமென்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. கரவந்தபுரத்துக் கோட்டையில் பெரும்பெயர்ச் சாத்தனிடமுள்ள படையும் தயாராகவே இருக்கிறது. வடக்கு எல்லையில் போர் தொடங்கும் என்ற தகவல் உறுதிப் பட்டவுடன் எந்தக் கணத்திலும் நமது பெரும் படை வடக்கே புறப்படத் தயாராயிருக்க வேண்டும். இப்போது வடக்கேயிருந்து ஒற்றுமையாகச் சேர்ந்து படையெடுக்கும் இந்த வடதிசையரசர்கள் முன்பு தனித்தனியாகப் போர் செய்த போது நாம் பலமுறைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் குமாரபாண்டியர் உடனிருந்து போருக்குத் தலைமை தாங்கியதனால் நமக்கு உற்சாகமும், நம்பிக்கையும் இருந்தன. இப்போதோ, குமாரபாண்டியரும் நம்முடன் இல்லை. ஒரு வேளை போர் தொடங்கும் நாள் நீடித்தால் அவர் வந்து விடலாம். உறுதி இல்லை. வந்தால் நமது நல்வினையாகும்.

"எப்படியிருப்பினும் குறைவோ, நிறைவோ நமது அவநம்பிக்கைகள் மறந்து ஊக்கமோடு போரில் ஈடுபடுகிற வீரம் நம்மை விட்டு ஒரு போதும் போய்விடாது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டுக்காக என் உயிரைக் கொடுக்க எந்த விநாடியும் நான் தயாராயிருக்கிறேன். செஞ்சோற்றுக் கடனும், செய்நன்றிக் கடனும் பட்டிருக்கிறோம் நாம். இந்தப் போரில் எவ்வளவு ஊக்கத்தோடு நீங்கள் ஈடுபடுவீர்களென்பதை இப்போது நீங்கள் செய்யும் வீரப்பிரமானம் மூலமும் சூளுரை மூலமும் நான் அறியப் போகின்றேன்" என்று சொல்லி நிறுத்தினான் தளபதி.

அவன் பேச்சு நின்றது. வீரர்கள் வாளை உருவி வணங்கி வீரப்பிரமாணம் செய்தனர். "செஞ்சோற்றுக் கடன் கழிப்போம், செய்நன்றி மறவோம்" என்ற சூளுரைக் குரலொலி கடல் ஒலி போல் எழுந்தது.

தளபதி நின்று கொண்டிருந்த முரசு மேடைக்கு நேரே படைக்கோட்டத்தின் தலைவாயில் இருந்தது. தற்செயலாக வாயிற் பக்கம் சென்ற பார்வை அங்கே நிலைத்தது தளபதிக்கு. ஆபத்துதவிகள் தலைவன் குதிரையில் கனவேகமாக வந்து இறங்கித் தன்னைத் தேடிப் படைக்கோட்டத்துக்குள் நுழைவதைத் தளபதி பார்த்தான். அவன் மனத்தில் ஆவல் துள்ளி எழுந்தது.

19. கருணை வெள்ளம்

காந்தளூர் மணியம்பலத்திலிருந்து இருளில் புறப்பட்ட சிவிகைப் பயணம் தொடர்ந்தது. பல்லக்குத் தூக்குகிறவர்களுடைய துவண்ட நடையையும் வாடித் தொங்கினாற் போல் இருந்த புவன மோகினியின் முகத்தையும் கவனித்த போது தான் மகாராணிக்குத் தான் செய்து விட்ட பெருந்தவறு புரிந்தது.

தன் ஒருத்தியோடு போகாமல் காலையில் புறப்பட்டதிலிருந்து அவர்கள் வயிற்றைக் காயப்போட்டு விட்டோமே என்ற உணர்வு அப்போதுதான் அவர் நெஞ்சில் உறைத்தது. அவருடைய மிக மெல்லிய மனம் வருத்தமுற்றது. அரண்மனையிலிருந்து சுசீந்திரத்துக்கும், சுசீந்திரத்திலிருந்து காந்தளூருக்கும், காந்தளூரிலிருந்து மீண்டும் அரண்மனைக்குமாக பல்லக்குத் தூக்கும் ஆட்களை இழுத்தடித்து அலைய வைக்கிறோம் என்ற உணர்வைத் தாங்கிக் கொள்ளக்கூட முடியவில்லை.

'எனக்குத்தான் ஏதேதோ கவலைகளில் பசியே தோன்றவில்லை யென்றால் எல்லோருக்குமா அப்படி இருக்கும்? இதோ இந்த வண்ண மகளின் முகத்தில் பசியின் சோர்வுக் களை படர்ந்து பரிதாபகரமாகத் தோன்றுகிறதே. என்னிடம் பசியைச் சொல்வதற்குப் பயப்பட்டுக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிறாளென்று தெரிகிறது. பல்லக்குத் தூக்கிகள் பாவம்! மகாராணி சொல்லும் போது மறுக்கக் கூடாதேயென்று பயத்தினாலும், பதவி, பெருமை காரணமாக உண்டாக்கிக் கொண்ட மரியாதைகளாலும் பசியை, நடையை - சுமைக்களைப்பைக் கூறாமல் ஏவியபடி நடக்கிறார்கள். அடடா! சிலபேர் பதவியினாலும், அறிவு மிகுதியினாலும், வயது மூப்பினாலும் மற்றவர்களுடைய துன்பங்களையும், எண்ணங்களையும் பொருட்படுத்தாமல், புரிந்து கொள்ளாமல் தங்களை அறியாமலே பிறருக்குத் துன்பம் தருவது போல், நானும் நடந்து கொண்டு விட்டேனே. அழுதாலும் வாய்விட்டுக் கதறினாலும் தான் துன்பமா? அழாமலும் கதறாமலும் விளாம்பழத்துக்கு வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே வரும் நோய் போல் நெஞ்சிலேயே ஏங்கி மாய்ந்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?'

மகாராணி பல்லக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு அதைச் சுமப்பவர்களை விசாரிப்பதற்காகத் தலையை வெளியே நீட்டி கேட்டார், "அப்பா! நீங்களெல்லாம் எப்போது சாப்பிட்டீர்கள்? எனக்குப் பயந்து கொண்டு ஒளிக்காமல் மறைக்காமல் உங்கள் துன்பங்களை சொல்லுங்கள். உங்களுக்கு களைப்பும் பசியும் அதிகமாயிருக்குமே?"

"தாயே! நாங்கள் காலையில் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது சாப்பிட்டதுதான். பசியையும், களைப்பையும் பற்றி நாங்கள் கவலையே படவில்லை. மகாராணியாருக்குப் பணிபுரியும் பாக்கியமே போதும்" என்று விநயமாக மறுமொழி கூறினான். பல்லக்கின் முன்கொம்பைச் சுமந்து கொண்டு நின்ற இருவரில் ஒருவன்.

"புவன மோகினி! உன் முகத்திலும் பசிக்களை படர்ந்து விட்டது. நீ சொல்லாமல் இருந்தாலும் எனக்குத் தெரிகிறது. 'மகாராணியோடு இனிமேல் எங்குமே வெளியில் புறப்பட்டு வரக்கூடாது. வந்தால் வயிறு காய வேண்டியதுதான்' என்று உன் மனத்துக்குள் என்னைத் திட்டிக் கொண்டிருப்பாய்" என்றார் மகாராணி.

"தாங்களே வெறும் வயிற்றோடு இவ்வளவு சுற்றிக் கொண்டிருக்கும் போது நாங்கள் அப்படியெல்லாம் நினைக்க முடியுமா? பயண அலுப்பினால் கொஞ்சம் தளர்ந்து போனேன். வேறொன்றுமில்லை" என்று சிறிது வெட்கத்தோடு தலை தாழ்த்திக் கொண்டு பதில் சொன்னாள் புவன மோகினி. தான் சொல்லக்கூடாதென்று அடக்கிக் கொண்டிருந்தாலும் தன் வயிற்றுப் பசி வேதனை மகாராணிக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று நாணினாள் அவள்.

'இவர்களுடைய பசிக்கு ஏதாவது வழி செய்து தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பாவத்தைச் செய்தவள் ஆவேன்' என்ற உடனடியான உணர்ச்சித் துடிப்பு மகாராணியின் மனத்தில் ஏற்பட்டது. அந்தக் காந்தளூர் நெடுஞ்சாலையில் ஒரு கேந்திரமான இடத்தில் நான்கு கிளை வழிகள் பிரிந்தன. நான்கில் எந்த வழியாகச் சென்றாலும் பாதை சுற்றி அரண்மனைக்குப் போய்ச் சேர முடியும். வழிகள் பிரிகிற இடத்துக்கு வந்ததும், "முன்சிறை வழியாக அரண்மனைக்குச் செல்லும் பாதையில் செல்லுங்கள்" என்று ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்த கருத்தோடு சுமப்பவர்களிடம் கூறினார் மகாராணி. புவன மோகினி குறுக்கிட்டு அதைத் தடுத்துக் கூறினாள்:

"முன்சிறை வழியாகச் சுற்றிக் கொண்டு சென்றால் அரண்மனையை அடைவதற்கு நள்ளிரவு ஆகிவிடுமே! வேண்டாம் தேவி! எங்களுடைய பசியைப் பற்றி ஏதோ நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு நீங்கள் முன்சிறைப் பாதையாகப் போகலாமென்று சொல்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தப் பசி ஒன்றும் பிரமாதமில்லை. இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும். நாங்களாவது ஒரு வேளை சாப்பிட்டிருக்கிறோம். பச்சைத் தண்ணீரால் கூட வயிற்றை நனைத்துக் கொள்ளாமல் மகாராணியாரே எங்களோடு வரும் போது எங்கள் பசியும் களைப்புமா எங்களுக்குப் பெரிது?"

"இல்லை அம்மா! நீ சொல்வது தவறு. என்னையறியாமலே இன்று காலையிலிருந்து இந்தக் கணம் வரை உங்களையெல்லாம் துன்புறுத்திக் கொண்டிருந்து விட்டேன் நான். நீங்கள் எல்லாம் பசியும் களைப்பும் அடைந்திருக்கிறீர்கள் என்பதை நான் உணராமலும், நினைக்காமலும் இருந்தது எவ்வளவு பெரிய தவறு? பிறரைத் துன்புறுத்துகிறதை உணராமல் நாகரிகமாகவும், கௌரவமாகவும் இருந்து விடுகிறோம் சில சமயங்களில்."

"தேவி! தங்கள் கவலைகள் ஆயிரமாயிரம். அவற்றுக்கிடையிலும் கருணையும், இரக்கமும் எங்கள் மேலிருக்கின்றன என்று அறிவதே எங்களுக்கெல்லாம் வயிறு நிறைந்த மாதிரி. முன்சிறைக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம். தவிர, நமது சிவிகை போய்ச் சேருகிற நேரத்துக்கு அறக்கோட்டத்தில் உணவு வைத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்!"

"எல்லாம் வேண்டிய உணவு இருக்கும். என் சொற்படி கேளுங்கள் தடுத்துப் பேசாமல் முன்சிறைக்கே செல்லுங்கள்" என்று உறுதியான குரலில் மகாராணி உத்தரவிட்ட பின் புவன மோகினியால் தடுக்க முடியவில்லை. சிவிகை வழிமாறி விரைந்தது. வெள்ளம் போல் பெருகும் இந்தக் கருணை உள்ளத்தை நினைத்த போது சிவிகை சுமப்பவர்களுக்குக் கூட மனம் உருகியது. அதிகாரம் செய்பவர்களுக்கு அநுதாபப்படும் பண்பு குறைவாயிருக்கும். ஆனால் மகாராணி வானவன்மாதேவிக்கு அநுதாப்படும் பண்பு அதிகமாக இருந்தது. அதிகாரம் செய்யும் பண்பு மிகக் குறைவு என்பது அவரோடு சிறிது நேரம் பழகினாலும் தெளிவாகத் தெரிந்து விடும்.

20. எதையும் இழக்கும் இயல்பு

இரவு ஒன்பது, பத்து நாழிகை இருக்கும். முன்சிறை அறக்கோட்டத்தின் முன்வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. அறக்கோட்டத்து வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டிருந்தனர் அண்டராதித்தனும் கோதையும்.

"இன்னும் ஒரு நாள் கொற்கையில் தங்கி முத்து மாலை வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம். கலவரத்தை சாக்குக் காட்டிப் பயமுறுத்தி என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்கள். இப்படித் தொடர்ந்து என்னை ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்கள். இது கொஞ்சங் கூட உங்களுக்கு நன்றாயில்லை" என்று கோதை வம்புக்குக் கொடி கட்டி பறக்கவிட்டாள்!

"அதுதானே கேட்டேன்! காரியத்தோடுதான் பேசுவதற்கு வந்தாயா! அன்றைக்கு நாம் இருவரும் கொற்கையிலிருந்து அந்த நேரத்தில் திரும்பியிருக்கா விட்டால் அந்தக் கரவந்தபுரத்துப் பிள்ளையாண்டான் பாழ்மண்டபத்தில் அழுதுகொண்டே கிடந்து திண்டாடியிருப்பான். பாவம்! அவனுக்கு அப்படியா நேரவேண்டும்? எந்தப் பயல்களோ திருமுகத்தைப் பறித்துக் கொண்டு அடித்துப் போட்டுவிட்டுப் போயிருக்கும் போது நாம் சென்றதால் அவனுக்கு உதவ முடிந்தது கோதை! இந்த மாதிரி மற்றவர்களுக்குத் துன்பத்தைப் போக்கி உதவுவதில் கிடைக்கும் பெருமை ஒரு முத்துமாலையைக் கழுத்தில் அணிந்து கொள்வதால் கிடைக்குமா?"

"அடடா! என்ன சாமர்த்தியமான பதில்! உலகத்திலுள்ள ஆண்பிள்ளைகள் அத்தனை பேரும் எங்கெங்கோ நன்றாகப் பேசிப் பெயர் வாங்கிவிடுகிறார்கள். வீட்டுப் பெண்களிடம் பேசும் போது மட்டும் இப்படி அசடு வழிந்து விடுகிறதே? 'எனக்கு முத்துமாலை வாங்கித் தருவதற்கு வக்கில்லை' என்று ஒப்புக் கொள்ளுங்களேன். ஏன் இப்படி பூசி மெழுகிப் பதில் சொல்கிறீர்கள்?"

"அம்மா தாயே! பரதேவதை! உன் வெண்கல நாக்கைக் கொஞ்சம் அடக்கியே பேசு. மூலைக்கு மூலை படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் யாத்திரிகர்கள் விழித்துக் கொண்டு விடப் போகிறார்கள். உன்னிடம் நான் படும்பாட்டை வேறு ஆண்பிள்ளைகள் பார்த்துவிட்டால் வெட்கக் கேடுதான்!"

"இந்தப் பயம் மட்டும் உங்களுக்கு இருக்கிறதே, ஒரு முத்துமாலை வாங்கிக் கொடுத்து விடுவதுதானே?"

"கோதை உனக்கு ஒரு 'அறிவுரை' சொல்கிறேன் கேள். 'உன்னுடைய மனைவி உனக்கு அடங்கிய கற்பும் புகழும் உடையவளாய் இருந்தால் நீ உன் பகைவர்களுக்கு முன் பீடு நடை நடக்கலாம்' என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இந்த அறிவுரையை உன்னைப் போன்ற அடங்காப்பிடாரிப் பெண்களை நினைத்துக் கொண்டுதான் அவர் கூறியிருக்கிறார்."

"ஆகா! அறிவுரைக்கு ஒன்றுமே குறைவில்லை. உலகில் மலிவாக வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கும் அளவுக்குக் கிடைக்கக்கூடிய பொருளாயிற்றே அது! உங்களுக்குப் பகைவர்களும் இல்லை, நீங்கள் அவர்கள் முன் பீடு நடை நடக்கவும் வேண்டாம்."

"நீ இப்படி முரண்டு பிடித்தால் கூறாமற் சந்நியாசம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை!"

"சந்நியாசம் கொள்கிற ஆளைப் பார். ஒரு பானை புளிக்குழம்பும், புளித்த தயிரும், பழைய சோறும் படுகிற பாட்டில் சந்நியாசமாம், சந்நியாசம்!"

"ஐயோ! மானம் போகிறதடி... மெல்லப் பேசேன்."

இந்த வேடிக்கைத் தம்பதிகள் இப்படி இரசமாகப் பேசிக் கொண்டிருக்கிற கட்டத்தில் அறக்கோட்டத்தின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இருவரும் எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தார்கள். அந்த அகாலத்தில் இருளில் வாயிலில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்ததுமே அவர்கள் திகைப்பின் எல்லையை அடைந்தனர்.

மகாராணி வானவன்மாதேவியாரும் மற்றொரு பெண்ணும் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். பல்லக்கை இறக்கிவிட்டு ஓய்ந்து போய் நிற்கும் நாலு போகிகளையும் (பல்லக்குத் தூக்கிப் போவோர்) அண்டராதித்தனும் கோதையும் கண்டனர்.

"தேவீ! வரவேண்டும், வரவேண்டும் இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகத் தாங்கள் வந்தருளியது அறக்கோட்டத்துக்கே பெருமை" என்று பரபரப்படைந்து கூறினான் அண்டராதித்தன். கோதை ஒன்றும் பேசத் தோன்றாமல் பயபக்தியோடு மகாராணியைக் கைகூப்பி வணங்கினாள். அவசரம் அவசரமாக உள்ளே ஓடிப்போய்க் கைவிளக்கைப் பொருத்தி ஏற்றிக் கொண்டு வந்தான் அண்டராதித்தன். அவன் விளக்கை முன்னால் பிடித்துக் கொண்டு மகாராணியையும் வண்ண மகளையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

கோதை ஓடிப் போய் மகாராணி அமர்வதற்கேற்ற ஆசனம் ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். மகாராணி அமர்ந்து கொண்டார். அண்டராதித்தன் மகாராணி என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்பதற்குச் சித்தமாகக் கைக்கட்டி வாய் பொத்திப் பவ்யமாக அருகில் நின்றான். புவன மோகினி தரையில் மகாராணிக்கு அருகே உட்கார்ந்து கொண்டாள். மருண்ட பார்வையோடு கோதை அண்டராதித்தனின் முதுகுக்குப் பின்னால் அடக்க ஒடுக்கமாகத் தோற்றமளித்தாள். அவளுடைய கலகலப்பான சுபாவத்துக்கும், குறுகுறுப்பான பேச்சுக்கும் முற்றிலும் மாறாக இருந்தது, அவள் செயற்கையாக வருவித்துக் கொண்ட அந்த அடக்கம்.

"என்ன ஐயா, அறக்கோட்டத்து மணியக்காரரே! பசியோடு உங்கள் அறக்கோட்டத்தைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் வயிற்றை நிரப்புவதற்கு ஏதாவது வைத்திருக்கிறீரா?"

மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கிறாரென்று நினைத்துக் கொண்டான் அண்டராதித்தன்.

"தேவி! தாங்கள் உத்தரவிட்டால் இப்போதே அறுசுவை உண்டி தயாரித்து அளிக்கிறோம்."

"தயாரிக்கவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இந்த வேளையல்லாத வேளையில் உம்மையும் உமது மனைவியையும் சிரமப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. கைவசம் என்ன உணவு இருந்தாலும் அது போதும்!"

"கைவசம் ஒன்றும் வகையாக இல்லை. ஒரு நொடியில் அட்டிற்சாலையில் மடைப் பரிசாரகம் புரியும் பணிப்பெண்களை எழுப்பி வந்து அடுப்பு மூட்டச் சொல்லிவிடுகிறேன்."

"அடுப்பு மூட்டச் சொல்வது இருக்கட்டும். கையில் என்ன உணவு இருந்தாலும் நாங்கள் உண்ணத் தயார். வகையாக வேண்டுமென்று இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை."

மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கவில்லை, உண்மையாகவே கேட்கிறாரென்று அவனுக்கு அப்போதுதான் விளங்கியது.

"தேவீ! நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது? பொறுத்திருந்து நாங்கள் தயாரிக்கும் அறுசுவை உணவை ஏற்றுக் கொண்டு தான் போக வேண்டும். வராதவர் வந்திருக்கிறீர்கள்" என்று கோதை பணிவான குரலில் முன்னால் வந்து வேண்டினாள். அவள் குரலில் ஆவல் கிளர்ந்து ஒலித்தது!

"நான் சாப்பிட வேண்டுமென்பதற்காகக் கேட்கவில்லை பெண்ணே! எனக்கு அது முக்கியமில்லை. பல்லக்குச் சுமந்து கொண்டு வந்தவர்களின் பசியை முதலில் தீர்த்து விட வேண்டும்! அப்புறம் இந்தப் பெண் காலையிலிருந்து என்னிடம் சொல்லாமல் பட்டினி கிடக்கிறாள். இவள் பசியையும் தீர்க்க வேண்டும்!"

"நீரில் இட்ட பழைய சோறும், புளிக் குழம்பும் தான் இருப்பவை. அவை இந்த நேரத்தில் வாய்க்குச் சுவையாக இருக்காது. தயவு செய்து அடிசில் ஆக்கியே அளித்து விட அனுமதிக்க வேண்டும்" என்று கெஞ்சினாள் கோதை. மகாராணி கேட்கவில்லை. இருந்த உணவே போதும் என்றார். அண்டராதித்தன் வாயிற்புறம் போய்ப் பல்லக்குத் தூக்கிகளை அழைத்து வந்து உட்கார்த்தினான்.

கோதை சோற்றைப் பிசைந்து ஒவ்வொருவருக்கும் இலையில் கொண்டு வந்து வைத்தாள். புவன மோகினிக்குக் கூட அதையே அளித்தாள் அவள். மகாராணிக்கு மட்டும் அந்தப் பழைய சோற்றைக் கொடுக்கவில்லை. பயந்து கூசிப் பேசாமல் இருந்துவிட்டாள். அரண்மனையில் முக்கனிகளும், பாலும், தேனும், நறு நெய்யும், அறுசுவை உண்டிகளும் உண்ணும் மகாராணியிடம் சில்லிட்டுக் குளிர்ந்த பழைய சோற்றையும், ஆறிப்போன புளிக் குழம்பையும் எப்படிக் கொடுப்பது? புதிதாகத் தயாரிக்கவும் மகாராணி சம்மதிக்க மாட்டேனென்கிறார்.

குழந்தைகள் உண்பதைக் கருணை ததும்பி வழிந்து அகமும் புறமும் தளும்ப இருந்து காணும் தாய் போல, அவர்கள் உண்பதைப் பார்த்துக் கொண்டே வீற்றிருந்தார் மகாராணி. அவர் உள்ளம் நிறைந்தது.

எல்லோரும் உண்டு எழுந்த பின் கோதை சோறு பிசைந்த உண்கலத்தில் ஒரு சிறு தேங்காயளவு பழைய சோறு மீதம் இருந்தது. மகாராணி அதைப் பார்த்தார். கோதையை அருகில் கூப்பிட்டு, "பெண்ணே! அந்தச் சோற்றை ஓர் இலையில் திரட்டி வைத்து எடுத்துக் கொண்டு வா" என்று கூறினார்.

"தேவி... அது..." ஏதோ சொல்லித் தடுக்க முயன்றாள் கோதை.

"சொன்னால் சொன்னபடி எடுத்துக் கொண்டு வா" என்று அழுத்தமான தொனியில் மகாராணி இடையிட்டுக் கூறியதால் கோதை மறுபேச்சுப் பேச வழியில்லை. அப்படியே இலையில் திரட்டி எடுத்துக் கொண்டு வந்தாள்.

மகாராணி தின்பண்டத்துக்காக கையை நீட்டி ஒரு செல்லக் குழந்தையைப் போல் இரு கைகளையும் நீட்டி ஆசையோடு இலையை வாங்கிக் கொண்டார். அடுத்த கணம் அவருடைய வலக்கை விரல்கள், இடது கையில் ஏந்திக் கொள்ளப்பட்ட இலையிலிருந்து சோற்றுத் திரளை அள்ளி வாய்க்குக் கொண்டு போயின.

பல்லக்குத் தூக்கிகள், வண்ணமகள், கோதை, அண்டராதித்தன் - அத்தனை பேருக்கும் ஒரே திகைப்பு. பிடிவாதமாக அந்தச் சோறுதான் வேண்டுமென்று மகாராணி வற்புறுத்திக் கேட்டு வாங்கிச் சாப்பிடும் போது எப்படித் தடுக்க முடியும்?

எல்லோரும் இரக்கமும், பரிதாபமும் ததும்பும் விழிகளால் இலையை ஒரு கையால் ஏந்தி மற்றொரு கையால் உண்ணும் அந்தப் பேரரசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

"ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்? பாற்சோறு உண்கிறவள் பழைய சோறு உண்கிறேனே என்று தானே வியக்கிறீர்கள்? பாற்சோறானால் என்ன? பழைய சோறானால் என்ன? பார்த்தால் இரண்டும் ஒரே நிறந்தான்!" - சிரித்துக் கொண்டே அவர்களுக்குச் சொன்னார் மகாராணி.

'எதையும் இழக்கத் துணிகிற மனம் வேண்டும்' என்று காந்தளூர் மணியம்பலத்தில் மகாராணி தனக்குத் தானே சொல்லிக் கொண்ட வாக்கியம் புவனமோகினிக்கு இப்போது நினைவுக்கு வந்தது.

சிறிது நேரம் அறக்கோட்டத்தில் இருந்து விட்டு, இரவே பயணத்தை மீண்டும் தொடங்கி அரண்மனைக்குப் போய் விட்டார்கள் அவர்கள்.

21. சதி உருவாகிறது

கொடும்பாளூர் அரச மாளிகையின் ஒரு புறத்தே தனியாக அமர்ந்து, பல செய்திகளையும் பேசிய பின் வடதிசையரசர்கள் வாளை உருவி நீட்டிச் சூளுரை செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த வீரன் வந்து அப்படிக் கூறியது பரபரப்பை உண்டாக்கிவிட்டது.

"அரசே! அவசரமாக ஓர் ஒற்றன் தேடிக் கொண்டு வந்திருக்கிறான். அவனை இங்கே அனுப்பலாமா?" என்று சோழனிடம் மட்டும் தான் கேட்டுத் தெரிந்து கொண்டு போக வந்தான் அவன். கொடும்பாளூர் மன்னன் தன் வாள் நுனியால் அடித்துத் தள்ளிய வண்டு வந்தவன் முகத்தில் போய் விழுந்ததனால் அவன் 'என்னவோ, ஏதோ' என்று எண்ணி ஒரு கணம் பொறி கலங்கிப் போய்விட்டான்.

"ஒற்றன் எங்கிருந்து வந்திருக்கிறானாம்?" என்று சோழன் கேட்ட கேள்விக்குத் தன்னை சமாளித்துக் கொண்டு மறுமொழி சொல்லச் சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு.

"அந்த ஒற்றனை இங்கேயே அனுப்பிவை" என்று வந்தவனுக்குக் கூறி அனுப்பினான் சோழன். ஒற்றன் கொண்டு வரும் செய்தி என்னவாக இருக்குமோ என்ற பரபரப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது. ஒவ்வொருவருடைய கண்களும் தங்கள் முகத்தைத் தவிர மற்ற நான்கு பேருடைய முகங்களையும் பார்ப்பதில் ஆவல் காட்டின. எல்லோரும் எல்லோரையும் பார்த்துவிட முயல்கின்ற அந்த நிலை ஒருவர் மனத்தையும், உணர்ச்சியையும் அறிய முற்படுவதில் மற்றவருக்கு எவ்வளவு துடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டியது. அந்தத் துடிப்பின் வேகத்துக்கு உச்சநிலை உண்டாக்குகிறவனைப் போல் ஒற்றன் அவர்களுக்கு முன்னால் வந்து பணிவாக வணங்கியபடியே நின்றான்.

இப்போது எல்லோர் கண்களும் ஒற்றன் முகத்தை ஊடுருவின. சோழன் உரிமையையும், அதிகாரம் செய்யும் ஆற்றலையும் காட்டும் பாவனையில், "என்ன செய்தி கொண்டு வந்தாய்? விரைவில் சொல். எங்கள் ஆவலை வளர்க்காதே" என்று ஒற்றனை அதட்டினான். நடுங்கும் குரலில் ஒற்றன் கூறத் தொடங்கினான்.

"வேந்தர் வேந்தே! தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் முன்பு போல் இப்போது எங்களால் கலவரமும், குழப்பமும் செய்ய முடியவில்லை. கரவந்தபுரத்து வீரர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் விழிப்புடன் காத்து நிற்கிறார்கள். முத்துக்குளிக்கும் துறையைச் சுற்றித் தேவையான படை வீரர்களைக் காவல் வைத்துக் கொண்டு, முத்துக் குளிப்பைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். 'நாம் படையெடுக்கப் போகிறோம்' என்ற செய்தியைப் பரவ விட்ட போது தொடக்கத்தில் அங்கேயிருந்த பரபரப்பு இப்போது இல்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி அரண்மனையிலே வந்து தங்கியிருந்து எல்லாக் காரியங்களையும் தம்முடைய நேரடி மேற்பார்வையில் செய்கின்றாராம். போர் நேரிட்டால் ஈழ நாட்டுப் படைகளும், சேர நாட்டுப் படைகளும் தென்பாண்டி நாட்டுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொள்ளலாமென்று ஒரு தகவல் காதில் விழுகிறது. இதோ அந்தச் செய்திக்கு ஆதாரமாக ஓர் ஓலையையும் கைப்பற்றினோம்" என்று சொல்லிக் கொண்டே, தான் கொணர்ந்திருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான் ஒற்றன்.

சோழன் அதை வாங்கி விரித்தான். மற்ற நால்வரும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்தத் திருமுகவோலை இடையாற்று மங்கலம் நம்பியால் கரவந்தபுரத்துச் சிற்றரசனுக்கு அனுப்பப்பட்டதாகும். மிகமிக முக்கியமான இரகசிய ஓலை என்பதைக் காட்டும் அரசாங்க இலச்சினைகளெல்லாம் அதில் இருந்தன. 'வடதிசையரசர் படையெடுப்பு நேர்ந்தாலும் அதை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லையென்றும் ஈழப் பெரும் படையும், மலைநாட்டுச் சேரர் படையும் தங்களுக்கு உதவி புரியும்' என்றும் மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் பரம இரகசியமாக எழுதியிருந்தார் அந்த ஓலையில்.

"கரவந்தபுரத்துத் தூதனிடமிருந்து கைப்பற்றியதென்று முன்பே ஒரு செய்தித் திருமுகத்தை நம் ஆட்கள் அனுப்பியிருந்தார்கள். அதில் கண்ட செய்திகளுக்கும், இதில் காணும் செய்திகளுக்கும் முழு அளவில் முரண்பாடு இருக்கிறதே? நாம் படையெடுக்கப் போகிறோமென்ற செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியும் பரபரப்பும் அடைந்திருப்பதை அந்த ஓலையிலிருந்து அனுமானித்தோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த ஓலையிலோ போரைப் பற்றியே கவலைப்படாமல் 'பாராமுகமாக இருப்பது போலத் தெரிகிறது'. இதன் மர்மம் என்னவாக இருக்கும்?"

சோழ கோப்பரகேசரி பராந்தகன் அந்த ஓலையைப் படித்து முகத்தில் சிந்தனைக் குறியுடன் மற்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டான்:

"எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு அந்தரங்கமான அரசாங்கச் செய்தி அடங்கிய திருமுகத்தை நம் ஒற்றர் கையில் சிக்கிவிடுகிற அளவு சாதாரணமான முறையில் மகாமண்டலேசுவரர் எப்படிக் கொடுத்தனுப்பினார்? நாம் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்!" என்று கொடும்பாளூரான் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். உடனே ஒற்றன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான்: "அரசே! முன்பு கைப்பற்றிய திருமுகத்தையாவது அதிகம் சிரமப்பட்டு அந்தத் தூதனைப் பாழ்மண்டபத்து இருளில் நடுக்காட்டில் அடித்துப் போட்டு விட்டுக் கைப்பற்றினோம். ஆனால் இரண்டாவது திருமுகத்தைக் கொண்டு வந்த தூதன் சரியான பயந்தான்கொள்ளிப் பயல் போலிருக்கிறது. நடுவழியில் நாங்கள் அவனுடைய குதிரையை மறித்துக் கொண்டதுமே, 'ஐயோ என்னை விட்டுவிடுங்கள். ஒன்றும் செய்யாதீர்கள். நான் என்னிடம் இருக்கும் அரசாங்க ஓலையைக் கொடுத்து விடுகிறேன்' என்று அவனாகவே ஓலையை எடுத்துக் கொடுத்துவிட்டு ஓடிப்போய் விட்டான்."

"யார் யார் சேர்ந்துகொண்டு அவனை வழி மறித்தீர்கள்? எந்த இடத்தில் வழி மறித்தீர்கள்?" - கொடும்பாளூரான் அந்த ஒற்றனைக் குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினான்.

"கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் செய்தித் தொடர்பு தொடங்கிய நாளிலிருந்து நம் ஆட்களாகிய செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகியோரும் நானும் கரவந்தபுரம், கொற்கை ஆகிய பகுதிகளிலும் இவற்றுக்கும் நடுவழியிலுள்ள வனாந்தரப் பிரதேசங்களிலும் ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறோம். தெற்கேயிருந்து கரவந்தபுரத்துக்கு வரும் வழியில் மேற்கு மலைச் சரிவிலுள்ள காடுகள் தான் நம் திட்டங்களை மறைந்திருந்து செய்ய ஏற்ற இடமென்று தீர்மானித்துக் கொண்டு பெரும் பகுதி நேரம் அங்கேயே இருக்கிறோம். நம்முடைய மற்ற ஆட்கள் பொதியமலைப் பகுதிகளிலும் பொருநை நதிக் கரையோரங்களிலுள்ள சிற்றூர்களிலும் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து மறைந்திருக்கிறார்கள்."

"போதும்! நீ போய் வெளியே இரு. நாங்கள் மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினால் மட்டும் உள்ளே வா."

சோழனுடைய குரல் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருந்தது. அந்த ஒற்றன் வணங்கிவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவர்கள் ஐந்து பேரும் தனிமையில் மறுபடியும் ஒன்றுபட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். சற்று முன் வீராவேசமாக வாட்களை உருவி உயர்த்திச் சபதமும், உடன்படிக்கையும் செய்து கொண்ட போது இருந்த வீறாப்பு இப்போது அவர்களிடம் இல்லை. சோழன் கேட்டான்: "கொடும்பாளூர் மன்னரே! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இலங்கை மன்னனும், சேரன் அவர்களுக்குப் படை உதவி செய்வார்களென்று நம்புகிறீர்களா?"

"நம்பாமல் எப்படி இருக்க முடியும்? குமார பாண்டியனுக்குச் சேரன் தாய்வழிப் பாட்டன் முறையினன், ஈழநாட்டுக் காசிபன் குமாரபாண்டியனைத் தன் உயிரினும் இனிய நண்பனாகக் கருதி வருகிறான். இராசசிம்மனுக்கும் காசிப மன்னனுக்கும் இந்தக் கெழுதகைமை நட்பு எப்போது, எதன் மூலம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் துன்பங்களும், தோல்விகளும் ஏற்படும் போதெல்லாம் இராசசிம்மனைத் தன்னிடம் வரவழைத்து இருக்கச் செய்து கொள்கிறான் ஈழ நாட்டு மன்னன். ஈழ மண்டலப் பெரும் படையின் தலைவனாகிய சக்கசேனாபதி ஒரு பழம் புலி. கடற்போரிலும் தரைப்போரிலும் பலமுறை வெற்றி பெற்ற அநுபவமுள்ளவன். ஆகவே இவர்கள் எல்லோரும் ஒன்று சேருவதாயிருந்தால் அந்த ஒற்றுமையின் விளைவைப் பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டியிருக்கிறது" என்று மற்ற நான்கு பேர் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.

"இந்த ஒற்றுமையே ஏற்பட முடியாதபடி இதைத் தகர்ப்பதற்கு நாம் முயற்சி செய்தால் என்ன?" - அரசூருடையானின் கேள்வி இது.

"நமக்குள் நம் நன்மைக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிற ஒவ்வொரு கூட்டமும், ஒவ்வொரு இனமும், அடுத்தவர்கள் அப்படி ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்யவே முயல்கிறது. வடக்கே நமக்குள் பெருங் கூட்டணி ஒன்று அமைத்து நாம் உடன்படிக்கை செய்து கொள்கிற மாதிரி தெற்கேயும் செய்ய நினைப்பார்கள் அல்லவா?" என்று குறும்புத்தனமாக - ஆனால் கோபத்தோடு - மறுமொழி சொன்னான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன்.

"எனக்கென்னவோ இப்படித் தோன்றுகிறது; தெற்கே அவர்கள் மூவரும் ஒன்றுபடுவதால் படைபலம் பெருகினாலும் அதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது இல்லை. நம் ஐவருடைய உடன்படிக்கை, ஒற்றுமை சாதிக்கிறதை விட அவைகள் அதிகமாகச் சாதித்து விட முடியாது!" என்று பரதூருடையானின் கருத்து வெளிப்பட்டது.

"யார் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். முன்பு உறையூரில் நடந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் நான் கூறி ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்திருந்தால் இப்போது இப்படியெல்லாம் நடந்திருக்காது. இந்தப் புதிய கவலைகளும் கிளம்பியிருக்க வழியில்லை" என்று சிறிது படபடப்போடு பேசிய கொடும்பாளூர் மன்னனைச் சோழன் கையமர்த்தி நிறுத்தினான். "நாம் என்ன செய்ய முடியும்? உங்கள் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு குமாரபாண்டியனையும், மகாராணியையும் ஒழித்து விடுவதற்கு ஆட்களை அனுப்பினோம். மகாராணியைக் கொலை செய்யும் முயற்சியும், இடையாற்று மங்கலம் நம்பியை நம்மவராக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. உங்கள் திட்டத்தில் ஒரே ஓர் அம்சத்தைப் பற்றிய முடிவு தான் இன்னும் தெரியவில்லை. அதாவது குமாரபாண்டியனைக் கொல்வதற்காகத் தேடிச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களும் திரும்பி வந்துவிட்டால் உங்கள் திட்டம் முழு வெற்றியா, அல்லது முழுத் தோல்வியா என்பது தெரிந்து விடும்" என்று சோழன் விவரமாகப் பதில் கூறிய பின்பே கொடும்பாளூரானின் படபடப்பு அடங்கியது. அப்படியிருந்தும் அவன் விட்டுக் கொடுக்காமல் பேசினான்: "என் திட்டம் தோல்வியா, வெற்றியா என்பதற்காக இங்கு வாதிடுகிற நோக்கம் எனக்கு இல்லை. நம்முடைய கனவுகள் விரைவில் நனவாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தைக் கூடச் சொன்னேன். இளவரசன் இராசசிம்மனும் மகாராணி வானவன்மாதேவியும் உயிரோடு இருக்கிறவரை சேரப் படை உதவி, இலங்கைப் படை உதவி முதலிய உதவிகளெல்லாம் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தே தீரும். பாண்டிய மரபின் எஞ்சிய இரு உயிர்களான மகாராணியும், இளவரசனும் அழிந்து போய்விட்டால் அதன் பின்னர் மகாமண்டலேசுவரருக்காகவோ, தளபதி வல்லாளதேவனுக்காகவோ, கரவந்தபுரத்தானுக்காகவோ யாரும் படை உதவி செய்ய மாட்டார்கள். உதவியற்ற அந்தச் சூழ்நிலையில் மிக எளிதாக தென்பாண்டி நாட்டை நாம் கைப்பற்றி விடலாம். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையே அப்போது நான் கூறினேன்.

"இப்போதும் காரியம் ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை. இராசசிம்மனைத் தேடிச் சென்ற நம் ஆட்கள் காரியத்தை முடித்து விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இராசசிம்மனே இறந்த பின் தென்பாண்டி நாட்டுக்கு எவன் படை உதவி செய்யப் போகிறான்?" என்று கூறிய அரசூருடையானை வன்மையாக எதிர்த்துப் பேசினான் கண்டன் அமுதன். "அரசூருடைய சென்னிப் பேரரையரே நீங்கள் இப்போது போடுகிற கணக்குத்தான் தப்புக் கணக்கு. இராசசிம்மன் இருப்பதால் எவ்வளவு கெடுதலோ அதைப் போல் நான்கு மடங்கு கெடுதல் அவன் இறப்பதால் ஏற்படும். அவன் உயிருக்குயிராகப் பழகும் இலங்கைக் காசிபனும், பாட்டனாகிய சேரனும் அவனுடைய சாவுக்கு வடதிசையரசராகிய நாம் காரணமாயிருந்தோமென்று அறிந்து கொள்ள நேர்ந்தால் எவ்வளவு கொதிப்படைவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! அந்தக் கொதிப்பின் பயன் யார் தலையில் விடியுமென்று நீங்கள் சிறிதாவது சிந்தித்தீர்களா?" - கண்டன் அமுதனுடைய பேச்சை ஆதரிப்பவன் போல் சோழனும் தலையாட்டினான்.

"கீழைப் பழுவூரார் சொல்வதையும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும். இப்போதிருக்கிற சூழ்நிலையை மட்டும் வைத்துக் கொண்டு இராசசிம்மனுடைய பெருமையை நாம் கேவலமாக மதிப்பிட்டு விடுவதற்கு இல்லை. இப்போதிருக்கிறதை விட இன்னும் இளைஞனாயிருந்த அந்தக் காலத்திலேயே வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த இரண்டு பெரிய போர்களில் இராசசிம்மன் என்னைத் தோற்கச் செய்திருக்கிறான். உவப்பிலிமங்கலத்தில் நடந்த போரில் நம் எல்லோரையுமே வென்றிருக்கிறான். இதோ இன்றைக்கு நம்மிடையே இவ்வளவு வீரமாகப் பேசுகிறாரே, இந்தக் கொடும்பாளூர் மன்னரையே பாண்டிநாட்டுப் படைகள் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அதை அவரும் மறந்திருக்க மாட்டாரென்றே நினைக்கிறேன்!" - இப்படிச் சொல்லியவாறே விஷமத்தனமாக நகைத்துக் கொண்டே கொடும்பாளூரானின் முகத்தைப் பார்த்தான் சோழன். அந்த முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளித் தூவினால் பொரிந்து வெடிக்கும் போலிருந்தது. அவ்வளவு ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது.

"தஞ்சைப் பெருமன்னர் அவர்கள் இன்னொரு போரை கூற மறந்துவிட்டார்கள். வஞ்சமாநகரத்தில் நடந்த மாபெரும் போரில் இராசசிம்மன் தன் பாட்டனுக்கு உதவி செய்து வாகை சூடியிருக்கிறான். கடைசியாக அவன் நம்மிடம் ஒருமுறை மதுரையில் தோற்று, நாட்டின் ஒரு சிறு பகுதியை இழந்து விட்டிருப்பதனால் பலத்தைக் குறைவாக மதிக்கக் கூடாது" என்று மேலும் தன் கருத்தை வற்புறுத்தினான் கீழைப் பழுவூர்ச் சிற்றரசன்.

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு அமர்ந்திருந்த போது வாயிற் பக்கம் தெரிகிறாற் போன்ற இடத்தில் அமர்ந்திருந்த அரசூருடையான் திடீரென்று, "ஆ! அதோ, நல்ல சமயத்தில் அவர்களே வந்து விட்டார்கள்!" என்று வியப்புடன் கூறிக் கொண்டே வாசற் பக்கம் கையைக் காட்டினான்.

22. கொற்றவைக் கூத்து

அதோ அவர்களே வந்துவிட்டார்கள் என்று அரசூருடையான் வாயில் பக்கமாகத் தன் கையைச் சுட்டிக் காட்டிய போது மற்ற நான்கு பேருடைய எட்டுக் கண்களும் தணிக்க இயலாத ஆர்வத் துடிப்போடு விரைந்து நோக்கின. நான்கு முகங்களின் எட்டு விழிகள் ஒருமித்துப் பாய்ந்த அந்தத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தவர்கள் சோர்ந்து தளர்ந்து தென்பட்டனர். பார்த்தவர்களது உற்சாகமும், ஆவலும் பார்க்கப்பட்டவர்களிடம் காணோம். அவர்களுடைய முகத்தில் களை இல்லை, கண்களில் ஒளி இல்லை, பார்வையில் மிடுக்கு இல்லை, நடையில் உற்சாகமில்லை. பயந்து நடுங்கிக் கொண்டே வருவது போல் தோன்றியது, அவர்கள் வந்த விதம். வந்தவர்கள் வேறு யாரும் இல்லை. முன்பு நாகைப்பட்டினத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆறு ஒற்றர்களில் தெற்கே குமாரபாண்டியனைக் கொல்வதற்காக ஈழத்துக்குச் சென்ற மூன்று பேர்தான் வந்து கொண்டிருந்தார்கள். மெல்லத் தயங்கி வந்து நின்ற அவர்கள் அங்கே வீற்றிருந்த வடதிசையரசர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டுத் தலை குனிந்தனர். தென் திசைப் படையெடுப்பைப் பற்றிய முக்கிய ஆலோசனையில் இருந்த அந்த ஐவரின் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதற்குத் தெம்பில்லாதவர்கள் போல் நடந்து கொண்டனர் வந்தவர்கள்.

"எப்பொழுது வந்தீர்கள்?" என்று சோழன் அவர்களை நோக்கிக் கேட்டான்.

"நாகைப்பட்டனத்தில் வந்து இறங்கியதும் நேரே இங்குதான் புறப்பட்டு வருகிறோம். நாங்கள் வந்தால் அங்கிருந்து உடனே கொடும்பாளூருக்கு வரச் சொல்லிக் கட்டளை என்று துறைமுகத்தில் காத்திருந்தவர்கள் கூறினார்கள். அதன்படி வந்து விட்டோம்" என்று அந்த மூவரில் ஒருவன் பதில் கூறினான்.

சோழன் முகத்தில் கடுமை படர்ந்தது. குரலில் கண்டிப்பு ஏறியது. "நீங்கள் வந்த வரலாற்றை விவரிக்கச் சொல்லி இப்போது உங்களைக் கேட்கவில்லை. எந்தக் காரியத்தைச் செய்வதற்காகக் கடல் கடந்து போய் இத்தனை நாட்கள் சுற்றினீர்களோ அந்தக் காரியம் என்ன ஆயிற்று? அதை முதலில் சொல்லுங்கள். உங்களுடைய குனிந்த தலைகளும் பயந்த பார்வையும் நல்ல விடை கிடைக்குமென்று எனக்குச் சிறிதும் நம்பிக்கையூட்டவில்லையே?"

சோழனுடைய கேள்விக்கு அந்த மூன்று பேருமே பதில் கூறவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லத் தயங்கி நின்றனர்.

"என்னடா! ஒருவருக்கொருவர் பார்த்துத் திருட்டு விழி விழித்துக் கொண்டு நிற்கிறீர்கள்! எனக்குத் தெரியுமே! நீங்கள் போன காரியத்தைக் கோட்டை விட்டு விட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் நெற்றியில் தோல்விக் களை பதிந்து போய்க் கிடப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே?" என்று தன் முரட்டுக் குரலை உரத்த ஒலியில் எழுப்பி, அவர்களை விரட்டினான் கொடும்பாளூரான். அவர்கள் தலைகள் இன்னும் தாழ்ந்தன.

"என்ன நெஞ்சழுத்தம் இந்தப் பயல்களுக்கு! நான் கேட்கிறேன். பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு ஊமை நாடகம் நடத்துகிறார்களே!" என்று முன்னிலும் உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டு புலி பாய்ந்து வருவது போல் அவர்கள் அருகே பாய்ந்து வந்தான் கொடும்பாளூர் மன்னன். கடுங்குளிரில் உதறல் எடுத்து நடுங்கும் மணிப் புறாவைப் போல் அந்த மூன்று பேருடைய உடல்களும் பயத்தால் நடுங்கின.

"குமாரபாண்டியனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொன்றீர்களா இல்லையா? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? பதில் சொல்லேன்." இவ்வாறு ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே முன்னால் பாய்ந்து வந்த கொடும்பாளூரான், அந்த மூவரில் ஒருவனுடைய கன்னத்தில் பளீரென்று ஓங்கி அறைந்தான். அவனுடைய ஆத்திரத்தின் வேகத்துக்கு அளவு கூறியது அந்த அறை. வெடவெடவென்று நடுங்கிக் கீழே விழுந்து விடும்போல் ஆடியது அறை வாங்கியவனின் உடல். பேசுவதற்காக அவன் உதடுகள் துடித்தன. ஆனால் பயத்தினால் பேச்சு வரவில்லை.

"இப்படிக் கேட்டால் உன்னிடமிருந்து பதில் கிடைக்காது. இரு, அப்பனே! கேட்கிற விதமாகக் கேட்கிறேன். 'உண்டு' இல்லை என்று பதில் வந்தால் உங்கள் தலைகள் உங்களுக்கு உண்டு. 'இல்லை' என்று பதில் வந்தால் உங்கள் தலைகள் உங்களுக்கு இல்லை" என்று மறுபடியும் கையை மடக்கி ஓங்கிக் கொண்டு அறைவதற்கு வந்தான் கொடும்பாளூரான். அந்த அறை தன்மேல் விழுவதற்குள் பேசத் துடித்துக் கொண்டும் பேச முடியாமலும் நின்ற அவன் பேசிவிட்டான்.

"ஈழ நாட்டை அடையுமுன்பே சற்றும் எதிர்பாராத விதமாகச் 'செம்பவழத்தீவு' என்ற தீவில் குமாரபாண்டியனைக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால் எங்கள் வாளுக்கு இறையாகிச் சாவதற்கு முன் மாயமாக மறைந்து எப்படியோ தப்பி விட்டான் அவன். பின்பு அந்தத் தீவு முழுவதும் விடாமல் தேடிப் பார்த்தும் எங்களால் அவனைக் கண்டு பிடித்துக் கொல்வதற்கு முடியவில்லை."

குரலில் இருந்த நடுக்கத்தின் காரணமாக ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையான வார்த்தையாக முழுமையான ஒலியோடு அவனால் கூற முடியவில்லை. வார்த்தைகள் ஒவ்வோர் எழுத்தின் ஒலிப்பிலும் தயங்கித் தேங்கி நடுங்கின. பசியோடு தன் கோரப் பெருவாயைத் திறந்து நிற்கும் வேங்கைப் புலியின் காலடியில் நிற்கும் சிறிய மான் குட்டிகளைப் போல் அரண்டு போய் நின்று கொண்டிருந்தனர் அந்த மூன்று பேரும். எதிர்பார்த்த பதிலில் கிடைத்த ஏமாற்றம் கொடும்பாளூர் மன்னனைக் கோபத்தின் உருவமாக மாற்றியது. அவனுடைய விழி வட்டங்களில் அனல் கனன்றது. சிங்க முகத்தில் சிவப்புப் பரவியது. நினைப்பிலும் முழங்காலைத் தொடும் நீண்ட கைகளிலும் வெறி வந்து குடி புகுந்தது. முகிலுறை கிழித்து வெளிப்பாயும் மின்னல் ஒளிக்கோடு போல் அவன் தன் உறையிலிருந்து வாளை வெளியே உருவினான்.

பின்புறமிருந்து அரசூருடையானது கேலிச் சிரிப்பின் ஒலி கிளர்ந்து எழுந்தது. "இனிமேல் சந்தேகத்துக்கு இடமே இல்லை. கொடும்பாளூருடையாரின் திட்டம் முழுக்கத் தோற்றுவிட்டது. இப்போது அவருக்கு உண்டாகும் தோல்விக்கு அடையாளம் தான் இது."

அரசூருடையானின் இந்தச் சொற்கள் கொடும்பாளூர் மன்னனின் கொதிப்பை மிகைப்படுத்தின. அவன் வலக்கையில் துடித்த வாளின் நுனியிலிருந்து சிதறிய ஒளிக்கொழுந்துகள் பயந்து நின்று கொண்டிருந்த அந்த மூன்று பேருடைய கண்களையும் கூசச் செய்தன. அந்த ஒளியும் அதை உண்டாக்கும் வாளின் நுனியும் இன்னும் சில கணங்களில் தங்கள் நெஞ்சுக் குழியை நறுக்கிக் குருதிப் பெருக்கில் குளித்தெழுந்துவிடப் போகிறதே என்று அவர்களுடைய தேகத்தின் ஒவ்வோர் அணுவும் புல்லரித்து நடுங்கிக் கொண்டிருந்தன. தங்கள் மூவரின் உயிருக்கும் மொத்தமாக உருப்பெற்ற காலன் அந்த வாள் வடிவில் மின்னிக் கொண்டிருப்பதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இன்னும் ஒரு நொடியில் அற்றுப் போக இருக்கும் உயிருக்கும் தங்களுக்கும் நடுவேயிருந்த பந்தத்தைக்கூட ஏறக்குறைய அவர்கள் மறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தச் சமயத்தில் கொடும்பாளூரானின் கோபத்தைச் சோழ மன்னன் தணிக்க முன் வந்தான்.

"ஐயா! கொடும்பாளூர் மன்னரே! கோபத்தை இடம் தவறி, இலக்குத் தவறி, தகுதி தவறி, அநாவசியமாக இவர்களிடம் செலவழித்து என்ன பயன்? எவர்களுடைய தலைகளை வாங்க வேண்டுமோ அவர்களுடைய தலைகள் கிடைக்காவிட்டால் அதைச் செய்வதற்குச் சென்ற இவர்களுடைய தலைகளை வாங்கி என்ன பெருமைப்பட்டுவிட முடியும்? புலி வேட்டையாடப் போனவன் குழிமுயலை அடித்துக் கொண்டு திரும்புகிற மாதிரி, பெரியது கிடைக்காததனால் சிறியதை எண்ணிச் சிறியதைச் செய்யும் அற்ப மகிழ்ச்சி பண்புக்குப் பலவீனம். வாளையும், கோபத்தையும் ஒன்றாகச் சேர்த்து உறையில் போடுங்கள். இப்போது நமக்குத் தேவையான பொருள் நிதானம். இந்தத் தடியர்கள் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்திருப்பதைப் பார்த்ததும் எனக்கும் சினம் தான் உண்டாயிற்று. ஆனால் என்ன நன்மையைச் சினத்தால் அடையப் போகிறோம்? நெருப்பைத் தண்ணீர் அவித்து அணைக்கிற மாதிரி நெருப்பு தண்ணீரை விரைவாக அவித்து அணைக்க முடியாது. கோபம், குமுறல், பொறாமை போன்ற எதிர்மறையான குணங்கள், அன்பு, அறம், பொறுமை போல் காரியத்தை விரைவாகச் சாதித்துக் கொள்ளப் பயன்படா. இந்த மாதிரி அறிவுரைக் கருத்துகளெல்லாம் நம்மைப் போன்று சூழ்ச்சியும், போரும், மண்ணாசையும் விரும்புகிறவர்களுக்குப் பயன்படாதென்றாலும், இப்போதைக்குப் பயன்படுத்துவோம். நாம் கூறியதைச் செய்யாததற்காக இந்த மூன்று பேரையும் கொடும்பாளூர் அரண்மனையின் இந்த இரகசியமான இடத்தில் கொன்று அந்தக் கொலையை மறைத்து விடுவதும் நமக்கு எளிதுதான். ஆனாலும் வேண்டாம். கோபத்தையும், ஆத்திரத்தையும் பெரிய சாதனைகளுக்காக மீதப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வோம்."

சோழனுடைய பேச்சு முடிவு பெற்று நின்ற போது கொடும்பாளூரானுடைய வாள் உறைக்குள் சென்று அடங்கிக் கொண்டது. வளர்த்துப் பால் வார்க்கும் நன்றிக்காகப் பாம்பாட்டியின் பெட்டிக்குள் அடங்கும் பாம்பு போல் சீறிக் கொண்டு வெளிவந்த சினமும் செயற்கையாக அடங்கி மனத்தில் போய்ப் புகுந்து கொண்டது. அதைப் பார்த்து அரசூருடையான் ஓசைப்படாமல் மெல்லச் சிரித்துக் கொண்டான். பரதூருடையானும், கண்டன் அமுதனும் அந்தக் கூட்டத்துக்குப் புதியவர்களாகையினால் அதற்குரிய அடக்கத்தோடு அமைதியாக இருந்தார்கள்.

கொடும்பாளூரானுடைய ஆத்திரத்துக்கு ஆளாகாமல் அந்த மட்டில் தங்கள் தலைகள் தப்பினவே என்று நிறைவுடன் அந்த இடத்திலிருந்து மெதுவாக நழுவி நகர முற்பட்டனர் அம் மூன்று ஆட்களும்.

"நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள் இவ்வளவு அவசரமாக?" சோழமன்னன் குரல் அவர்கள் நடையைத் தடைப்படுத்தி நிறுத்தியது. அடுத்த விநாடி கொடும்பாளூர் மன்னனைக் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தனியே ஒரு மூலைக்குச் சென்றான் சோழ மன்னன். அந்த மூலையில் சித்திர வேலைப்பாடுகளோடு கூடிய பெரிய கிளிக்கூண்டு ஒன்று கைக்கெட்டுகிற உயரத்தில் தொங்கியது. கூண்டின் கதவு திறந்திருந்தது. கூண்டில் வசிக்கும் பல நிறக் கிளிகளும், கிளிக் குஞ்சுகளும், அதன் இருபுறமும் இருந்த மரச் சட்டங்களில் சுதந்திரமாக உட்கார்ந்திருந்தன. திறந்து விட்டதும் வெளியேறி, அடைகிற நேரத்துக்குத் தாமாகவே கூண்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்படி பழக்கப்படுத்தப்பட்ட கிளிகள் அவை. அந்தக் கிளிக்கூண்டின் அடியில் வந்து நின்று கொண்டதும், "சொன்ன காரியத்தைச் செய்து கொண்டு வரத் திறமையில்லாத அந்த அறிவிலிகளை அழித்து ஒழித்து விடுவதற்காக என் கைகள் துடித்தன. அந்தத் துடிப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் அத்தனை பேருக்கும் நடுவில் என்னைத் தடுத்து அவமானப் படுத்தி விட்டீர்கள்?" என்று ஏக்கமும், ஏமாற்றமும் மேலிட்ட குரலில் சோழனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான் கொடும்பாளூரான். சோழன் அதைக் கேட்டு மெல்ல நகைத்தான்.

"கொடும்பாளூர் மன்னரே! வேகமாகக் கையை ஓங்க வேண்டும். ஆனால் இலேசாக அறைய வேண்டும். கல்லை எறிவதற்கு முன்னுள்ள வேகம் எறியும் போது மெதுவாகிவிடுவது நல்லது.

"கடிதோச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்."

என்ற பொய்யில் புலவர் பொருளுரை நம்மைப் போன்ற அரசர்களை மனத்தில் வைத்துக் கொண்டு கூறப்பட்டது அல்லவா? இதோ கொஞ்சம் என் பக்கமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, நான் என்ன செய்கிறேனென்று கவனியுங்கள்."

சோழனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறிது வெறுப்பு நிழலாடும் பார்வையோடு திரும்பி நோக்கினான் கொடும்பாளூர் மன்னன். மரச் சட்டத்திலிருந்து ஒவ்வொன்றாக மூன்று கிளிக் குஞ்சுகளை எடுத்துக் கூண்டுக்குள் விட்டுக் கதவை அடைத்த பின், குறிப்பாக எதையோ சொல்லும் பொருள் செறிந்த நோக்கினால் சோழ மண்ணன் கொடும்பாளூரானின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையை விளங்கிக் கொள்ளாமல், "உங்களுடைய இந்தச் செயலுக்கு என்ன அர்த்தமென்று எனக்கு விளங்கவில்லையே?" என்று கேட்டான் கொடும்பாளூரான்.

"கொடும்பாளூர் மண்ணுக்கே குறிப்பறியும் உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் அந்த மண்ணை ஆளும் அரசராகிய உங்களுக்கே என் குறிப்புப் புரியவில்லையே?"

சோழன் குத்திக் காட்டிப் பேசியது வேதனையைக் கொடுத்தாலும், அந்தக் குறிப்புச் செய்கையின் பொருள் புரியக் கொடும்பாளூர் மன்னனுக்குச் சிறிது நேரமாயிற்று. அது புரிந்ததும் தான் அவன் முகத்தில் மலர்ச்சி வந்தது.

"புரிந்து விட்டது. அப்படியே செய்து விடுகிறேன்" என்று கிளிக் கூண்டையும் அடைப்பட்ட மூன்று குஞ்சுகளையும் பார்த்து விஷமத்தனமாகச் சிரித்துக் கொண்டே வெளியேறினான் கொடும்பாளூர் மன்னன். அடுத்த கால் நாழிகைக்குள் கொடும்பாளூர்க் கோட்டையின் ஒளி நுழைய முடியாத பாதாள இருட்டறைகளின் இரகசிய அறை ஒன்றில் அந்த மூன்று ஒற்றர்களையும் கொண்டு போய் அடைத்து விட்டுத்தான் திரும்பி வந்தான் அவன்.

நீண்ட நேரமாகச் சூழ்ச்சிகளிலும், அரசியல் சிந்தனைகளிலுமே ஆழ்ந்து போயிருந்ததன் காரணமாக, வடதிசையரசரின் கூட்டணியைச் சேர்ந்த அந்த ஐவருக்கும் களைப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு மாறுதல் - மனமகிழ்ச்சிக்குரிய ஒரு பொழுது போக்கு - அப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது. தங்களையும் தங்கள் அரசியல் கவலைகளையும் மறந்து ஏதாவதொரு கலையின் சுவை அநுபவத்தில் மிதக்க வேண்டும் போலிருந்தது அவர்களுக்கு.

"கொடும்பாளூர் மன்னரே! வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் நாங்கள் நால்வரும் இங்கேயிருக்கிறவரை உம்முடைய விருந்தாளிகள். உற்சாகமும் மன எழுச்சியும் வெற்றியில் நம்பிக்கையும் ஊட்டத்தக்க ஒரு பொழுது போக்கு இப்போது எங்களுக்குத் தேவை. அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்" என்று சோழன் வேண்டிக் கொண்டான். "அப்படியானால் 'தேவராட்டியின்' கொற்றவைக் கூத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எல்லோரும் கண்டு களிக்க வேண்டிய கலை அது. இந்தச் சோர்ந்த சூழ்நிலையில் அதைக் கண்டு புதிய எழுச்சியும் பெற முடியும்" என்றான் கொடும்பாளூரான்.

"அது யார் தேவராட்டி?"

"அவள் இந்தக் கொடும்பாளூர் அரண்மனையில் தனிச் சிறப்பு வாய்ந்த ஓர் ஆடல் மகள். தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குத் தெய்வ ஆவேசத்தால் அருள் வந்து விடும். அந்தச் சமயத்தில் அவள் வாயிலிருந்து எதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தேவி சந்நதத்தில் வாய் சோர்ந்து நமக்கு வேண்டிய உண்மைகள் அவளிடமிருந்து வரும். கையில் திரிசூலம் ஏந்திச் சுழற்றிக் கொண்டே அவள் கொற்றவைக் கூத்தாடும்போது, அவளே காளியாக மாறிக் காட்சியளிப்பாள் நம் கண்களுக்கு."

"இது என்ன நம்ப முடியாத வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!"

"வேடிக்கையில்லை. அந்த ஆடல் மகள் இன்னும் தூய்மையான கன்னியாகவே வாழ்கிறாள். தேவதைக்கு உள்ள மதிப்பு அவளுக்கு இந்த அரண்மனையில் உண்டு" என்று கொடும்பாளூர் மன்னன் பயபக்தியோடு மறுமொழி கூறினான்.

"அதற்கே ஏற்பாடு செய்யுங்கள். அந்தக் கொற்றவைக் கூத்தைக் காணும் பாக்கியத்தை நாங்களும் பெறுகிறோம்." சோழ மன்னனின் விருப்பப்படி கொடும்பாளூர் மன்னன் கூத்தரங்கத்தை வகுத்து அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் உட்கார்த்தினான். கொற்றவைக் கூத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் கோவில் போலத் தூய்மையாகப் புனிதப் பொருள்கள் நிறைந்திருந்தது. தீபச் சுடர்கள் பூத்திருந்தன. தூபக் கலசங்கள் கொடி படரச் செய்தன. எல்லோரும் பயபக்தியோடு அரங்கில் வீற்றிருந்தனர். மத்தளம் கொட்ட வரிசங்கம் ஊத, அரங்கின் எழினி (திரைச்சீலை) மெல்ல விலகியது. ஆ! அதென்ன தோற்றம்? புவனகோடியைப் போக்குவரவென்னும் கவன ஊஞ்சலிட்டு ஆட்டும் கௌரியே அங்கு நிற்கிறாளா? தேவராட்டி மும்முகச் சூலம் ஏந்திய கோலத்தோடு அரங்கில் வந்து நின்றாள்.

23. திரிசூலம் சுழன்றது

சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் தேவதேவனைத் தன் இருவிழிகளால் ஆட்டி வைத்த உமையே சின்னஞ்சிறு கன்னிப் பெண்ணாய் உருக்கொண்டு, கூத்துடை தரித்து வந்து நிற்பதுபோல் வலக்கையில் திரிதோரியாய்க் கம்பீரமாக அரங்கில் காட்சியளித்தாள் தேவராட்டி. அவள் கொடும்பாளூர் அரசவையில் ஆடல் மகளாய்ப் பணிபுரியும் ஒரு சாதாரண மானிடப் பெண் தான் என்ற உணர்வு அரங்கில் கூடியிருந்த அரசர்களுக்கு ஏற்படவே இல்லை. இமையா விழிகளால் அரங்கின் மேற் சென்ற பார்வையை மீட்க மனமின்றி வீற்றிருந்தனர். அழகொழுக எழுதிய நிருத்திய உயிரோவியமாய்த் தோன்றிய அவள் கூத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் மனங்களை வென்றுவிட்டாள்.

தேவராட்டியின் தோற்றத்தைப் பற்றி இங்கே சிறிது கூற வேண்டும். மறக்குலத்துப் பெண்கள் அணிந்து கொள்வது போல் முழங்காலுக்கு மேல் கச்சம் வைத்துக் கட்டிய புடவை. பாதங்களுக்கு மேல் இரண்டு பாம்புகள் சுருண்டு கிடப்பது போல் பாடகங்கள் (ஒரு வகைச் சிலம்பு). இல்லையோ உண்டோவெனத் திகழ்ந்த இடையில் மேகலை போல் இறுகப் பிணித்த புலித்தோல். கழுத்திலும், தோளிலும் முன் கைகளிலும் பல நிறப் பூமாலைகள் அணிந்திருந்தாள். கூந்தலைத் தலை கீழாக நிறுத்திய சங்கின் தோற்றம் போல் உச்சந்தலையில் தூக்கி அழகாக முடிந்து கொண்டிருந்தாள். அந்தக் கொண்டையைச் சிறிய கொன்றைப் பூச்சரம் ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் திருநீறு பூசிய வெண்மை. வலது கரத்தில் நீளமாக ஒளி மின்னும் கூர்மையான திரிசூலத்தைப் போல இடது கையில் சிறியதாக அழகாக ஓர் உடுக்கு. இந்தக் கோலத்தில் ஒரு பக்கமாகத் துவண்டு சிங்காரமாக அவள் நின்ற அபிநய அலங்காரம் பார்க்கும் கண்களிலெல்லாம் தெய்வத்தைப் படரவிட்டது. கொற்றவைக் கூற்றத்துக்குரிய வீராவேசத்தோடு தேவராட்டி தன் ஆடலைத் தொடங்கினாள். பாறைகளுக்கு நடுவேயுள்ள சுனைத் தண்ணீரில் கூழாங்கல்லை வீசி எறிவது போன்ற இன்ப ஒலியை எழுப்பியது உடுக்கு. கால் பாடகத்தின் உள்ளேயிருந்த பரல்கள் (சிறு சிறு மணிகள்) ஒலித்தன. சூலம் ஒளி கக்கிச் சுழன்றது, துள்ளியது.

ஆட்டத்தின் ஒன்பது வகைக் கூத்துக்களில் ஒன்றாகிய 'வீரட்டானக் கூத்'தின் கம்பீரமான துரித கதியில் தெய்வ ஆவேசத்தோடு சுழன்று சுழன்று ஆடினாள் அந்தப் பெண். காளிதேவியாகிய கொற்றவையே அந்தப் பெண்ணின் உடலில், உணர்வுகளில் தன் மயமாகிக் கலந்து விட்டது போல் ஒரு தத்ரூபம் அவள் ஆடலில் இருந்தது. வீரட்டான அபிநயத்தின் முடிவில் முத்திரை பிடித்துக் காட்ட வேண்டிய 'குனிப்பு' என்னும் விகற்பத்தைத் தாண்டி, அற்புதமான 'உள்ளாளக் கூத்தில் தன்னை மறந்து லயித்துக் கொண்டிருந்தாள் அவள். தெய்விகம் கலையாக மாறித் திகழ்ந்து கொண்டிருந்தது அவளிடம்.

சோழகோப்பரகேசரி தன்னை மறந்து, தன் நினைவை இழந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண்டன் அமுதன், அரசூருடையான், பரதூருடையான் எல்லோரும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இலயித்திருந்தார்கள். ஆனால், கூத்து அரங்குக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளூர் மன்னனின் கண்கள் மட்டும் ஒன்றிலும் ஊன்றிப் பார்க்காமல், நாற்புறமும் அலை பாய்ந்து கொண்டிருந்தன. கனற்கோளங்களைப் போன்ற அவனுடைய பெரிய கண்கள் அரங்கின் மேலும், தன்னோடு உடன் வீற்றிருந்த சோழன் முதலியவர்கள் மேலும் அரங்கின் வெளிப்புறத்து நுழைவாயில் மேலும் மாறி மாறி நிலைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இயற்கையிலேயே அவனுக்கு அப்படி ஒரு சுபாவம். குட்டி போட்ட பூனை மாதிரிச் சாதாரணமான காரியங்களுக்காகக் கூடப் பதறி அலை பாய்கின்ற மனம் அவனுக்கு. கலைகளை அநுபவிக்க ஆழ்ந்து ஈடுபட்டுத் தோயும் மனம் வேண்டும். அலைபாயும் மனமுள்ளவர்களால் எந்தக் கலையிலும் இந்த மாதிரி ஈடுபட்டு இலயிக்க முடியாது. கொடும்பாளூரானிடம் அந்த ஈடுபாடு இல்லை என்பதை அவன் கண்களே விளக்கின. குணரீதியாகவே இப்படி எதிலும் ஆழ்ந்து ஈடுபட முடியாதவர்கள் முன் கோபக்காரர்களாகவும், ஆத்திரமும் உணர்ச்சி வெறியும் உடையவர்களாகவும் இருப்பார்கள். தேவராட்டியின் ஆடல் சுவையநுபவத்தின் உயர்ந்த எல்லையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அருளாவேசமுற்றுத் தானே கொற்றவை என்ற முனைப்பால் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள். அவள் மட்டுமா ஆடிச் சுழன்றாள்! அவள் ஆடும் போது கொண்டையாக முடிந்திருந்த சடாமகுடத்தின் கொன்றை மலர்க்கொத்தும், பிறைச்சந்திரனைப் போல் தங்கத்தில் செய்து புனைந்திருந்த அணியும், செவிகளின் நாக குண்டலங்களும் எல்லாம் ஆடிச் சுழன்றன.

பார்த்துக் கொண்டேயிருந்த சோழனுக்குக் கண்களில் நீர் பனித்து விட்டது. உள்ளம் நெக்குருகி உடல் சிலிர்த்தது. மகாமன்னனான கோப்பரகேசரி பாராந்தக சோழன் எத்தனையோ அற்புதமான ஆடல்களை உறையூரிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் கண்டிருக்கிறான். நாட்டியக் கலையில் தலைக்கோல் பட்டமும் (அக்காலத்தில் நாட்டியக் கலையில் சிறந்த ஆடல் மகளிர்க்கு அரசனால் அளிக்கப்படும் விருதுப்பெயர்), பொற்பூவும், பொன் மோதிரமும் பெற்ற பெரிய பெரிய ஆடல் மகளிரின் ஆடல்களையெல்லாம் அவன் கண்டிருக்கிறான். அவையெல்லாம் அவன் உணர்வுக்குக் கிளர்ச்சி மட்டுமே ஊட்டின. அவைகளில் இல்லாத - அவைகளிலும் மேம்பட்ட ஏதோ ஒன்று இந்தத் தேவராட்டியின் ஆடலில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தேவராட்டியின் ஆடற்கலையில் வெயில் படாத நீரின் குளிர்ச்சி போல் தெய்விகப் பண்பு விரவியிருந்தது. நீரைச் சுடவைத்துக் குளிர்ச்சியை நீக்கிச் செயற்கையாகச் சூடாக்குவது போல் பாட்டு, கூத்து, புலமை, ஒவ்வொரு துறையையும் அறிவின் வெம்மையால் சூடேற்றி அவைகளிலிருந்தும் தெய்விகப் பண்பை நீக்கிவிடும் போது அவை சாதாரணமாகி விடுகின்றன. அரங்கில் ஆடிக்கொண்டிருந்த அந்தத் தேவராட்டியின் முகத்தைப் பார்க்கும் போதே மலையரசன் மகளாகத் தோன்றிய உமையின் கன்னித் தவக்கோலம் தான் நினைவுக்கு வந்தது. எப்போதும் ஏதோ பெரிய இலட்சியங்களுக்காகக் கனவு கண்டு கொண்டிருப்பது போல் இடுங்கிய கண்கள் நீளமும், கன்னிப் பருவத்துப் பேதைமையின் அழகு நிழலாடும் நெற்றி, வடிந்த நாசி, வளர்ந்த புருவங்கள், கரந்து நிற்கும் சிரிப்பு, கனிந்து சரிந்த கன்னங்கள்.

தேவராட்டி சந்நத நிலையில் அருளுற்று ஏதேதோ பிதற்றினாள். தங்களுடைய கூட்டணியைப் பற்றியும், தென் திசைப் படையெடுப்பைப் பற்றியும் அதில் வெற்றி ஏற்படுமா தோல்வி ஏற்படுமா என்பதைப் பற்றியும் தேவராட்டியிடம் குறி கேட்டு நிமித்தம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சோழன் எண்ணியிருந்தான். தனக்குப் பழக்கமில்லாத காரணத்தால் கொடும்பாளூர் மன்னனைவிட்டே அவைகளைத் தேவராட்டியிடம் கேட்கச் செய்யலாமென்று மனத்துக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன் பக்கத்தில் கொடும்பாளூரான் வீற்றிருந்த ஆசனத்தைப் பார்த்த சோழன் ஏமாற்றமடைந்தான்.

அங்கே கொடும்பாளூரானைக் காணவில்லை. அவன் வீற்றிருந்த இருக்கை காலியாயிருந்தது. மற்ற மூவரையும் பார்த்தான். அவர்கள் இந்த உலகத்தையே மறந்து, தேவராட்டியின் கூத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவ்வளவு அற்புதமான கூத்தை இரசிக்காமல் நடுவில் எழுந்திருந்து கொடும்பாளூரான் எங்கே போயிருப்பான் என்ற கேள்வியும், சந்தேகமும் சோழன் மனத்தில் உண்டாயின. சோழனுடைய கண்கள் கொடும்பாளூரானைத் தேடிச் சுழன்றன. அவனைக் காணோம். கூத்தரங்கின் வாயிற்புறம் போய் அங்கு யாராவது ஆட்களிருந்தால் அவர்களை அனுப்பிக் கொடும்பாளூரானை அழைத்துக் கொண்டு வரச் செய்யலாமென்ற நோகத்தோடு சோழன் மெல்ல எழுந்தான்.

ஆனால், அந்தக் கணமே அவன் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. கொடும்பாளூரானே மிக வேகமாக வாயிற்புறத்திலிருந்து கூத்தரங்கத்துக்குள் வந்து கொண்டிருந்தான். அவன் முகச்சாயலும் நடையின் வேகமும் பரபரப்பையும், அவசரத்தையும் காட்டின. வெளியே செல்வதற்காக எழுந்திருந்த சோழன் மறுபடியும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டான். வேகமாக உள்ளே பிரவேசித்த கொடும்பாளூர் மன்னன் சோழன் காதருகே போய்க் குனிந்து மெதுவாகப் பேசினான்: "அரசே! தென்பாண்டி நாட்டின் பலவீனத்தை மிகைப்படுத்தக் கூடிய வேறொரு செய்தி சற்று முன்புதான் என் காதுக்கு எட்டியது."

"அப்படி என்ன செய்தி அது?" சோழனும் மெதுவான குரலிலேயே கேட்டான். "சில நாட்களுக்கு முன்னால், இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் திடீரென்று காணாமற் போய்விட்டனவாம்."

"யார் வந்து கூறினார்கள் இந்தச் செய்தியை?"

"தெற்கேயிருந்து நம் ஒற்றர்களில் ஒருவன் வந்து கூறினான். நீங்களெல்லாம் கூத்தில் ஈடுபட்டிருந்த போது இடையில் நான் கொஞ்சம் வெளியே எழுந்து சென்றேன். அதே நேரத்துக்கு அந்த ஒற்றனும் வந்து சேர்ந்ததனால் அவனை அங்கேயே நிறுத்திச் செய்தியை விசாரித்துக் கேட்டுக் கொண்டு வந்தேன்."

"ஒருவேளை இந்தச் செய்தி இப்படியும் இருக்கலாமல்லாவா? நம்மைப் போன்ற வடதிசையரசர்கள் தெற்கே படையெடுத்துத் தென்பாண்டி நாட்டை வென்று விட்டால் இடையாற்று மங்கலத்தில் போய் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் தேடி எடுத்துக் கொண்டு விடுவோமோ என்பதற்காக இப்படி ஒரு பொய்ச் செய்தியை மகாமண்டலேசுவரர் பரப்பியிருப்பார்."

"இருக்காது, அரசே! வந்திருக்கும் ஒற்றன் கூறுவதைப் பார்த்தால் உண்மையாகவே அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போயிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது."

"எப்படியிருந்தாலும் நாம் படையெடுப்புக்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறோம். நமக்கு ஏன் இந்தக் கவலை?" - சோழனும் கொடும்பாளூரானும் மேற்கண்டவாறு மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்த போதும் தேவராட்டியின் கொற்றவைக் கூத்து நடந்து கொண்டுதான் இருந்தது. அவள் வலக்கையில் திரிசூலத்தின் சுழற்சியும், இடக்கையில் உடுக்கின் ஒலியும் குன்றவில்லை, குறையவில்லை.

சோழனும் கொடும்பாளூரானும் வீற்றிருந்த இடத்தின் பின்புறத்துச் சுவரில் அவர்கள் தலைக்கு மேல் மானின் கண்களைப் போல் துவாரங்கள் அமைந்த பலகணி ஒன்று இருந்தது.

அருளுற்று ஆடிக் கொண்டேயிருந்த தேவராட்டி திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்த மான்விழிப் பலகணியைச் சுட்டிக் காட்டி 'வீல்' என்று அலறிக் கூச்சலிட்டாள். அந்தப் பலகணியை நோக்கித் தன் திரிசூலத்தை ஓங்கிச் சுழற்றினாள்; பற்களைக் கடித்தாள்; கால்களை உதைத்தாள். திரிசூலத்தைக் குறி பார்த்துச் சுழற்றி அந்தப் பலகணியை நோக்கி எறிந்தாள். எல்லோரும் அவளுடைய கோபத்தின் காரணம் விளங்காமல் எழுந்திருந்து அந்தப் பலகணியைப் பார்த்த போது அதன் நடுத்துவராத்திலிருந்து ஒளி மின்னும் இரு கண்கள் வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தன.

24. கூடல் இழைத்த குதூகலம்

அன்றைக்கொரு நாள் செம்பவழத் தீவின் கடை வீதியில் அந்த மூன்று முரட்டு மனிதர்கள் பேசிக் கொண்டு போன பேச்சைக் கேட்டதிலிருந்து மதிவதனிக்குக் கவலையும் பயமும் அதிகமாயிருந்தன. அந்தப் பேச்சை ஒட்டுக் கேட்பதனால் இப்படிப் புதுக் கவலைகளும், பயமும் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் முதலிலேயே ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பாள்.

கொம்பு முளைக்காத குட்டிப் பருவத்துப் புள்ளிமான் போல் அவலமற்றுக் கவலையற்று அந்தத் தீவின் எழிலரசியாய்த் துள்ளித் திரிய வேண்டிய அவளுக்குக் கவலை ஏன்? பயம் ஏன்? கலக்கம் ஏன்? எவனைப் பற்றிய நினைவுகள் அவள் நெஞ்சில் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கின்றனவோ, அவனையே கொலை செய்வதற்கு முயல்கிறவர்களைப் போல அவர்கள் பேசிக் கொண்டு சென்றதனால்தான் அவள் கவலைப்பட்டாள், பயந்தாள், கலங்கினாள். அந்த முரடர்களுடைய பேச்சை ஒட்டுக் கேட்ட நாளிலிருந்து அவளுக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.

'ஐயோ! அந்த முரடர்களால் நடுக்கடலில் அவருடைய கப்பலுக்கு ஒரு துன்பமும் நேராமலிருக்க வேண்டுமே! அவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டால் அவரைக் கொல்லாமல் விடமாட்டார்களே? அவருடைய விரோதிகள் எவரோ அவரைக் கொன்று விடுவதற்கென்றே அந்த முரட்டு ஆட்களைத் தூண்டி விட்டு அனுப்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எல்லா நன்மையும் கொடுக்கும் அந்த வலம்புரிச் சங்கு அவர் கையிலிருக்கிற வரை அவரை எந்தப் பகை என்ன செய்து விட முடியும்? கடவுளின் கருணையும், அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் எனது நல்ல காலமும் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்' என்று தானே தனக்குள் சிந்தித்துச் சிந்தனைச் சூட்டில் வெந்து கொண்டிருந்தாள் மதிவதனி. அதன் காரணமாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் சுய நினைவு இன்றிச் செய்து கொண்டிருந்தாள் அவள். சிந்தனை ஓரிடத்திலும், செயல் ஓரிடத்திலுமாகப் பைத்தியக்காரி போல் கடையிலும் வீட்டிலும், கடற்கரை மணற்குன்றுகளிலும் திரிந்து கொண்டிருந்தாள் அவள். அந்தத் தீவின் கரையோரத் தென்னை மரங்களிலிருந்து பறந்து செல்லும் கிளிகளின் கூட்டங்களைப் பார்க்கும் போதெல்லாம், 'என் மனத்துக்கும் இப்படி வானவெளியில் நீந்திக் கீழேயுள்ள கடலைக் கடந்து பறந்து செல்லும் ஆற்றல் இருந்தால் வேகமாகப் பறந்து போய் அவருடைய தோளின் மீது உரிமையோடு உட்கார்ந்து கொண்டு, அந்த முரடர்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும் இரகசியத்தைக் காதோடு சொல்லி எச்சரித்து விடுவேன்' என்று எண்ணி ஏங்குவாள். அவளும் ஒரு கிளிதான். ஆனால் பறக்கும் கிளி இல்லையே, பேசிச் சிரித்து உணர்ந்து நடக்கும் பெண் கிளியாயிற்றே அவள்!

'தலையை அழுத்தும் பாரமான சுமைகளைத் தாங்கிக் கொண்டு கூடப் பொறுமையாக நீண்ட தூரம் நடந்து விட முடிகிறது. ஆனால் கனமோ, பாரமோ உறைக்காத எண்ணங்களையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் சுமந்து கொண்டு மட்டும் பொறுமையாக வாழ முடிவதில்லையே? நினைவின் சுமைகளுக்கு அவ்வளவு கனமா? அவ்வளவு பாரமா?' மதிவதனியால் தாங்க முடியவில்லை.

சில நாட்களாகவே அவள் ஒரு மாதிரி ஏக்கம் பிடித்துப் போய்க் கிடப்பதை அவளுடைய தந்தையும், அத்தையும் உணர்ந்து கொண்டனர். அந்தப் பெண்ணின் முரண்டுக்கும் பிடிவாதத்துக்கும் பயந்து அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை அவர்கள். எதையாவது வற்புறுத்திக் கேட்டால் அழுதுவிடுவாளோ என்று பயம் அவர்களுக்கு.

அன்று நண்பகலில் மதிவதனியின் அத்தை ஒரு குடலை நிறைய அடுக்கு மல்லிகைப் பூக்களைக் கொண்டு வந்து கொடுத்து, "மதிவதனி! இவற்றை உன் கையால் அழகாகத் தொடுத்துக் கொடு, பார்க்கலாம். இன்று மாலை நான் கடற்கரையிலுள்ள ஏழு கன்னிமார் கோவிலுக்குப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டுவிட்டு வரவேண்டும். எல்லாம் உனக்கு நல்ல இடத்தில் கொழுநன் வாய்த்துப் பெரு வாழ்வு வாழவேண்டுமே என்பதற்காகத்தான்" என்று கூறி வேண்டிக் கொண்டாள்.

அத்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் மதிவதனி உட்கார்ந்து கொண்டு நாரை எடுத்து மலரைத் தொடுக்க ஆரம்பித்தாள். கை மலர்களைத் தொடுத்துக் கொண்டிருக்கும் போதே மனம் நினைவுகளைத் தொடுக்க ஆரம்பித்தது. மனம் ஏதாவதொன்றில் ஒருமையாகக் குவியும் போது அந்த ஒன்றைத் தவிர இரண்டாவதாகச் செய்யப்படும் காரியம் சரியாக நடைபெறாது. பராக்குப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கியிருந்த மதிவதனி பூக்களை எடுத்து முடிவதை மறந்து வெறும் நாரையே மாற்றி மாற்றிச் சுருக்கிட்டு முடிந்து கொண்டிருந்தாள். தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த அவளுடைய அத்தை, அவள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த அழகைப் பார்த்ததும் பொறுக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

"நீ பூத்தொடுக்கிற சீரைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏதோ நினைவில் எங்கேயோ கவனத்தை வைத்துக் கொண்டு வெறும் நாரை வளைத்து வளைத்து முடிந்து கொண்டிருக்கிறாயே அம்மா! நீ காரியம் செய்கிற அழகு மிகவும் நன்றாக இருக்கிறது. நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன், நாலைந்து நாட்களாக நீ பித்துப் பிடித்தவளைப் போல் இருக்கிறாய். வேளா வேளைக்கு உண்ண வருவதில்லை. இந்த வயதான காலத்தில் அண்ணனுக்கு உதவியாகக் கடைக்குப் போக மாட்டேனென்கிறாய். கால் கடுக்கச் சுற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவாய், எப்போது வெளியே போவாய் என்பதே எனக்கும் அண்ணனுக்கும் தெரியாமற் போய்விட்டது. உன்னைப் போல் பருவம் வந்த பெண்ணுக்கு இந்தப் போக்கு நல்லதில்லை."

அவளைப் பற்றித் தன் மனத்திலிருந்த குறைகளை அவள் முன்பே சொல்லித் தீர்த்து விட்டாள் அத்தை.

பூக்களையே தொடாமல் தான் வெறும் நாரை முடிந்து கொண்டிருப்பதை உணர்ந்த போது மதிவதனிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முதலில் ஐந்தாறு கண்ணிகள் பூ வைத்துத் தொடுத்திருந்தாள். அதன் பின்பு வெறும் நாரில் தான் வரிசையாக முடிச்சுகள் விழுந்திருந்தன. தப்பித்தவறி இது மாதிரி அத்தையின் வாயில் விழுந்து விட்டால் நிறையப் பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் மீள முடியாதென்று அவளுக்குத் தெரியும்.

"ஏதோ தெரியாமல் செய்து விட்டேன் அத்தை! கொஞ்சம் நினைவு தடுமாறி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லாப் பூக்களையும் விரைவாகத் தொடுத்துக் கொடுத்து விடுகிறேன்" என்று முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு கூறினாள் மதிவதனி.

"கொஞ்சம் என்ன? சில நாட்களாகவே நீ முழுக்க முழுக்க நினைவுத் தடுமாறிப் போய்த்தானே திரிகிறாய்? அந்த வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிக் கொண்டு போன இளைஞனை நீ இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது. அவனை நினைத்துக் கொண்டு தான் நீ இவ்வளவு ஆட்டமும் போடுகிறாய். நானும் அண்ணனும் உன்னை எவ்வளவோ கண்டித்துப் பார்த்துவிட்டோம். நீ எங்கள் கண்டிப்பைக் கேட்டுத் திருந்துகிற பெண்ணாகத் தெரியவில்லை. நடக்கக்கூடிய காரியத்தையா நீ நினைக்கிறாய்? நீயும் உன் தந்தையும் சொல்வதிலிருந்து அந்த இளைஞன் பெரிய செல்வக் குடும்பத்துப் பிள்ளையாயிருக்க வேண்டுமென்று தெரிகிறது. தென் திசைக் கடலில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்தச் சிறு தீவில் உன்னைப் போல் ஒரு பெண்ணைச் சந்தித்ததை எப்போதோ மறந்து போயிருப்பான் அவன். அவனையே நினைத்துக் கொண்டு ஏங்கும் அசட்டு எண்ணங்களை இந்த விநாடியிலேயே விட்டுவிடு. நமக்கு எட்டாத பொருளை, நம்மால் எட்டி எடுக்க முடியாத உயரத்தில் இருக்கும் அழகை, நாம் நினைத்து உருகிப் பயனென்ன? இரண்டு கைகளும் முடமாகிக் கால் நொண்டியான ஊமை ஒருவன் தனக்கு எதிரே உள்ள பாறையில் சுவையான 'பசுவெண்ணெய்' உருட்டி வைத்திருப்பதைப் பார்க்கிறான். வெயிலில் வெண்ணெய் உருகிப் பாறையில் வீணாகி வழிகிறது. அவனால் என்ன செய்ய முடியும். தான் உண்ணக் கைகள் இல்லை; நடந்து செல்லக் கால்கள் இல்லை, பிறரைக் கூப்பிடலாமென்றாலோ வாய் ஊமை. சாத்தியமில்லாத ஆசைகளோடு போராடி என்ன நன்மை விளையப் போகிறது, பெண்ணே? அந்த இளைஞனைப் பற்றிய ஆசைகளைத் தொலைத்துத் தலைமுழுகிவிட்டு எப்போதும் போல் நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. நான் உன் முகத்தில் மலர்ச்சியைக் காண வேண்டும். உன் உதட்டில் சிரிப்பைக் காண வேண்டும். உன் வாயில் கலகலப்பு நிறைந்த பழைய குறும்புப் பேச்சைக் கேட்க வேண்டும். உன் நடையில் பழைய துள்ளலைக் காணவேண்டும். இன்றே இந்தக் கணமே நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. கடைக்குப் போ; பழைய சுறுசுறுப்போடு விற்பனையைக் கவனி. அண்ணனுக்கு மகள், மகன் இரண்டாகவும் இருப்பவள் நீ ஒருத்திதான். இப்படிச் சோக நாடகம் நடித்து அண்ணனையும் என்னையும் வேதனைப்படுத்தாதே." அத்தை தன் உள்ளத்தின் உணர்ச்சிகளாயிருந்த ஆத்திரம், வேதனை, ஆவல் எல்லாவற்றையும் அடக்க முடியாமல் அந்தப் பெண்ணின் முன்பு கொட்டித் தீர்த்து விட்டாள். அத்தையின் பேச்சுக்கு மதிவதனியிடமிருந்து பதில் வரவில்லை. முழங்காலைக் குத்தவைத்து அதன்மேல் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். மெல்லிய விசும்பல் ஒலி அத்தையின் செவிகளில் விழுந்தது.

"என்னடி, பெண்ணே? இதற்காகவா அழுகிறாய்? அழுகை வரும்படி நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது?" என்று கேட்டுக் கொண்டே கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தினாள் அத்தை. அவளுடைய விழிகள் கண்ணீர்க் குளங்களாக மாறியிருந்தன. கண்களில் அரும்பிய கண்ணீர் அரும்புகள் செடிகளில் அரும்பி மலர்ந்த மலர்களில் உதிர்ந்தன.

"யாராவது இதற்காக அழுவார்களா? கோவிலுக்குக் கொண்டு போக வேண்டிய மலர்களின் தூய்மை கெடும்படியாக இப்படி இவற்றின் மேல் கண்ணீரைச் சிந்துகிறாயே? நீ செய்கிற காரியம் உனக்கே நன்றாயிருந்தால் சரிதான்" என்று கடிந்து கொண்டே அவள் கூந்தலைக் கோதிவிட்டுச் சரி செய்தாள் அத்தை.

அந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த மதிவதனியின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார்.

"மதிவதனி! எதற்காக அம்மா இப்படி உன் அத்தையிடம் அழுது முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அவர் கேட்டார்.

"அண்ணா! உங்கள் பெண்ணுக்கு நீங்கள் தான் சொல்ல வேண்டும். அவளுடைய நினைவுகளும், கனவுகளும் இப்போது இந்தத் தீவிலேயே இல்லை. முன்னைப் போல் சிரிக்காமல், பேசாமல், கலகலப்பாக இருக்காமல், எப்போதும் 'அவனை'யே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். கடற்கரைக் கன்னிமார் கோயிலுக்குப் போவதற்காகப் பூத்தொடுக்கச் சொன்னேன். தொடுப்பதற்காக உட்கார்ந்தவள் சுய நினைவே இல்லாமல் பூவை மறந்து வெறும் நாரை முடிந்து கொண்டிருக்கிறாள். 'இப்படியெல்லாம் இருக்காதே. அவனை மறந்துவிட்டு முன்போல் இரு' என்று கண்டித்தேன். அதற்குத்தான் இந்தப் பலமான அழுகை!"

தன் தங்கை கூறியதைக் கேட்டு மதிவதனியின் தந்தை சிரித்தார். "இந்த மாதிரி வயதுப் பெண்களை இத்தகைய அநுபவங்களிலிருந்து கண்டித்து மட்டும் திருத்தி விட முடியாது. தன்னை நினைக்காதவனைத் தான் நினைத்து ஏமாந்த பெண்களின் கதைகள் உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. அந்தக் கதைகளில் ஒன்றாக என் அருமைப் பெண்ணின் நினைவுகளும் ஆகிவிடக்கூடாதே என்பதுதான் என்னுடைய கவலை. நினைப்பதை அடைவது ஒரு தவம்; ஒரு புனிதமான வேள்வி அது. நினைத்து நினைத்து அந்த நினைவுகளை உருவேற்றி வலுவேற்றி எண்ணியதை அடைந்தே தீரும் ஆசைத் தவத்துக்குப் பிடிவாதம் நிறைய வேண்டும். அந்த அன்புமயமான தவத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வெல்லும் தெம்பு இதிகாச காலத்துப் பெண்களுக்கு இருந்தது. சீதைக்கும், பாஞ்சாலிக்கும், ஓரளவு சகுந்தலைக்கும் இருந்த அந்தத் தெம்பு செம்பவழத் தீவின் ஏழைப் பரதவனான என்னுடைய மகளுக்கு இருந்தால் அவளுடைய நல்வினைதான் அது. சீதையும் பாஞ்சாலியும் சகுந்தலையும் நினைத்தவர்களை அடைய மட்டும் தான் முடிந்தது. சாவித்திரியோ அவர்களினும் ஒரு படி மேலே போய்விட்டாள். தான் அடைந்த ஆடவனைத் தன் நினைவுத் தவத்தால் கூற்றுவனிடமிருந்தே மீட்க முடிந்தது அவளால். தெய்விகக் காதலின் வெற்றிக்கு இத்தகைய நினைவு வன்மை பெண்களுக்கு வேண்டும். சிறிய ஆசைகளில் மனம் வைத்துவிட்டால் நினைவுகளுக்கு ஆற்றலே உண்டாவதில்லை. நீயும் நானும் இவளைக் கண்டிப்பதை இன்றோடு விட்டுவிட வேண்டும். இவ்வளவு வயது வந்த பெண்ணைக் கண்டிப்பதும் அநாகரிகமானது. இவளுடைய நினைவுகளே இவளுக்கு விளைவு கற்பிக்கட்டுமென்று விட்டு விடுவதுதான் நல்லது." ஒன்றிலும் பட்டுக் கொள்ளாதவர் போல் தன் தங்கையிடம் கூறிய அவர் மதிவதனியின் பக்கமாகத் திரும்பி, "மதிவதனீ! நீ ஏன் அழுகிறாய்? நீ இன்னும் குழந்தையில்லையே? தாயைத் தவிர வேறு நினைவில்லாதவரை பெண் பேதையாயிருக்கிறாள். தந்தை உடன்பிறந்தோர், விளையாட்டுப் பொருள் - எல்லாவற்றையும் கடந்து தன்னைத் தவிர இன்னொரு ஆண்மகனை நினைக்கத் தொடங்கும் போது பேதை முழுமைபெற்ற பெண்ணாகி விடுகிறாள். இப்போது நீ ஒரு பெண். உன் நினைவுக்கு நீ ஒர் ஆண்மகனைத் தேடி உறுதியாக்கு. அதுதான் நான் உனக்குக் கூறும் அறிவுரை. இனிமேல் நான் உன்னைக் கண்டிக்கப் போவதில்லை. பயமுறுத்தப் போவதில்லை. அந்த இளைஞன் உன்னை மறந்து விடுவானென்று சொல்லிக் கலக்கமடையச் செய்யும் வழக்கத்தையும் இந்த விநாடியிலிருந்து நான் விட்டுவிடுகிறேன்."

தந்தையின் அந்தப் பேச்சைக் கேட்டவுடன் மதிவதனிக்கு உடல் சிலிர்த்தது. தை மாதத்து வைகறையில் கடலில் நீராடினது போல் இருந்தது.

"அப்பா..." என்று உணர்ச்சி மேலிட்டுக் கூவிக் கொண்டே எழுந்து ஓடி வந்து அவர் காலடியில் சுருண்டு விழுந்தாள் அவள். "நினைவை உறுதியாக்கு. நினைப்பதை அடைவது ஒரு தவம்" என்ற சொற்கள் அவள் செவியை விட்டு நீங்காமல் நித்திய ஒலியாகச் சுழன்று கொண்டிருந்தன. தன் எண்ணத்தின் இலட்சியமான காதலில் வெற்றிபெற ஒரு புதிய கருவி கிடைத்துவிட்டது. அவனை அடைவதற்கு அவளுக்கு ஒரு புதிய உண்மையை அவள் தந்தை கூறிவிட்டார்.

"அப்பா! 'இதிகாச காலத்துக்குப் பின்பும் நினைவைத் தவமாக்கி, நினைத்தவனை அடையும் இலட்சியக் காதலுக்கு உதாரணமாகச் செம்பவழத் தீவில் ஒரு பெண் பிறந்திருந்தாள்' என்று என்னையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதற்குத் தகுந்தபடி நான் வாழ்ந்து காட்டிவிடப் போகிறேன். அப்பா! அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டுமென்று பிடிவாதம் இப்போதே எனக்கு உண்டாகிவிட்டது" - அவருடைய பாதங்களில் தன் கண்ணீர் ஒழுக ஆவேசத்தோடு உறுதியான குரலில் கதறினாள் மதிவதனி.

"எழுந்திரு, அம்மா! காலம் உன் நினைவுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்" என்று அமைதியாகக் கூறி, அவள் பிடியிலிருந்து தம் பாதங்களை விடுவித்துக் கொண்டு வீட்டின் உட்பக்கமாக நடந்தார் அவர். மதிவதனியின் அத்தை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் சூனியத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அன்றைக்கு மாலையில் தன் அத்தையோடு கடற்கரையிலுள்ள ஏழு கன்னிகைகளின் கோயிலுக்குப் போயிருந்தாள் மதிவதனி. ஏழு கன்னியர் கோவிலின் வாசலில் ஒரு பழைய புன்னை மரம் இருந்தது. மிகவும் வயதான மரம் அது. அதனடியில் மணற் பரப்பில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்கள் மனத்திலுள்ள எண்ணம் நிறைவேறுமா என்றும், நினைவுக்கு இசைந்த கணவன் கிடைப்பானா என்றும் 'கூடல் இழைத்து'ப் பார்ப்பது வழக்கம். கூடல் இழைத்துப் பார்த்தலாவது: மணற்பரப்பில் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்து கொண்டு, இரண்டு கண்களையும் மூடி வழிபடும் தெய்வத்தை மனத்தில் தியானித்து, வலது கை ஆள் காட்டி விரலால் மணற்பரப்பில் குருட்டாம் போக்கில் ஒரு வட்டம் போடுவது. கோட்டைத் தொடங்கிய நுனியில் விலகாமல் ஒழுங்காக வந்து பொருந்தி வட்டம் முழுமையாக முடிவு பெற்றால் எண்ணிய காரியம் வெற்றி பெறும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.

அத்தைக்குத் தெரியாமல் புன்னை மரத்தடியில் கூடல் இழைத்துப் பார்த்து விட வேண்டும் போல் ஆவல் குறுகுறுத்தது மதிவதனிக்கு. வரிசையாக இருந்த ஏழு கன்னியரின் சிலைகளுக்கும் பூ அணிவித்து விட்டு அத்தை கண்களை மூடித் தியானித்துக் கொண்டு நின்ற போது மெல்ல வெளிப் பக்கமாக நழுவிப் புன்னை மரத்தடி மணற்பரப்புக்கு வந்தாள் அவள். அத்தை திரும்பி வந்து பார்த்துவிடப் போகிறாளே என்ற பயமும், வெட்கமும் பதற்றத்தை உண்டாக்கின. கண்களை மூடினாள். பளபளப்பான இமைத் தோள்களின் கரும் பசுமைச் சிறு நரம்புகள் மூடிய கண்களின் அழகைக் காட்டின. வலது கை விரல்கள் பயத்தால் நடுங்கின. உடல் வியர்த்தது. நெஞ்சு ஆவலால் வேகமாக அடித்துக்கொண்டது. வலது கை ஆள் காட்டி விரலால் வட்டத்தை மணலில் கீறிவிட்டுக் கண்களை ஆசையோடு திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்? ஆரம்பித்த நுனியோடு கோடு சரியாகப் போய்ப் பொருந்தி வட்டம் ஒழுங்காக முடிந்திருந்தது. அந்த வட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் அன்புக்குரியவன் அன்று கப்பல் மேல் தளத்திலிருந்து ஊதிய சங்கின் ஒலி மறுபடியும் கேட்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. கூடல் கூடியதால் உண்டான குதூகலத்தால் மதிவதனி அதையே பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்த போது பின்னால் யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தாள். அவளுடைய அத்தை நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை.

25. கடற் காய்ச்சல்

சக்கசேனாபதி பதறிப் போனார். நடுக்கடலில் குமார பாண்டியனுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சிலருடைய உடல் இயல்புக்குத் தொடர்ந்தாற் போல் கடலில் பயணம் செய்வது ஒத்துக் கொள்ளாது. இராசசிம்மனுக்குக் கடற் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் இருந்ததை முன் கூட்டியே அவர் உணர்ந்து கொண்டார். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வதையும், சோர்வடைந்து தென்படுவதையும் கொண்டே கடற் காய்ச்சல் வரலாமென்று அநுமானித்திருந்தார். ஆனால் அது இவ்வளவு கடுமையான நிலைக்கு வந்துவிடுமென்று அவர் நினைக்கவில்லை.

அன்று மாலை நேரத்துக்குள் காய்ச்சல் மிகுதியாகி விட்டது. குமார பாண்டியன் தன் நினைவின்றிக் கிடந்தான். ஏற்கெனவே அவனுக்கு ஒற்றை நாடியான உடல். காய்ச்சலின் கொடுமையால் அந்த உடல் அல்லித் தண்டாகத் துவண்டு போய்விட்டது. வெறும் காய்ச்சலோடு மட்டும் இருந்தால் பரவாயில்லை. மன உளைச்சலும் சேர்ந்து கொண்டது. 'தன் செயலைப் பற்றித் தாய் என்ன நினைப்பாள்? மகாமண்டலேசுவரர் என்ன நினைப்பார்? அன்பை எல்லாம் அள்ளிச் சொரிந்து ஒட்டிக் கொண்டு பழகிய மகாமண்டலேசுவரரின் அருமைப்பெண் குழல்வாய்மொழி என்ன எண்ணுவாள்?' என்று இத்தகைய கவலைகள் வேறு குமாரபாண்டியன் மனத்தைக் கலக்கியிருந்தன. அவன் கப்பல் தளத்தில் படுத்துக் கொண்டு தன்னை மறந்து உறங்கிய போது ஒரு கனவு கண்டிருந்தானே, அந்தக் கனவும் அவன் உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது.

காய்ச்சல், சோர்வு, கலக்கம், குழப்பம் எல்லாவற்றுக்கும் நடுவில் அவன் நெஞ்சுக்கு ஆறுதலான நினைவு ஒன்றும் கோடையின் வெப்பத்தினிடையே சிலுசிலுக்கும் தென்றலைப் போல் ஊடுருவிக் கொண்டிருந்தது. அந்த நினைவு...? அது தான் மதிவதனி என்ற இனிய கனவு! பழுத்த மாங்காயில் காம்போரத்துச் செங்கனிகளின் செழுமை போல் கன்னங் குழியச் சிரிக்கும் மதிவதனியின் கன்னிச் சிரிப்பு மூடினாலும் திறந்தாலும் அவன் இமைகளுக்குள்ளேயே நிறைந்து நின்றது. பூவுக்குள் மர்மமாக மறைந்து நிற்கும் நறுமணம் போல அந்தப் பெண்ணின் சிரிப்புக்குள் 'ஏதோ ஒன்று' மறைந்திருந்து தன்னைக் கவர்வதை அவன் உணர்ந்தான். காய்ச்சலின் வெப்பம் அவன் உடலெங்கும் கனன்றது. மதிவதனியைப் பற்றிய நினைவோ அவன் உள்ளமெங்கும் குளிர்வித்தது. சக்கசேனாபதி அவன் தலைப்பக்கத்தில் கன்னத்தில் ஊன்றிய கையுடன் அமர்ந்திருந்தார்.

குமார பாண்டியனையும் அவன் கொண்டு வரும் பாண்டிய மரபின் அரசுரிமைச் சின்னங்களையும் பத்திரமாக ஒரு குறைவுமின்றி ஈழ நாட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு அவருடையது தானே? அவர் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்? இலங்கைப் பேரரசன் காசிபனின் உயிர் நண்பனான இராசசிம்மனைக் கடற் காய்ச்சலோடு அழைத்துக் கொண்டு போய் அவன் முன் நிறுத்தினால் அவனுடைய கோபம் முழுவதும் சக்கசேனாபதியின் மேல் தான் திரும்பும்.

காசிபனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடாமல், கப்பல் ஈழமண்டலக் கரையை அடையுமுன்பே குமார பாண்டியனுக்குச் சுகம் ஏற்பட்டு அவன் பழைய உற்சாகத்தைப் பெற வேண்டுமென்று எல்லாத் தெய்வங்களையும் மனத்துக்குள் வேண்டிக் கொண்டிருந்தார் சக்கசேனாபதி. இளவரசன் இராசசிம்மனின் உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கப்பலைக் கூட வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செலுத்த வேண்டுமென்று மாலுமியைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருந்தார். கடற் காய்ச்சலை விரைவாகத் தணிப்பதற்குப் போதுமான மருந்துகள் கப்பலிலேயே இருந்த போதும் அவருக்குக் கவலை என்னவோ ஏற்படத்தான் செய்தது. எல்லோருக்குமே கப்பலில் அந்த ஒரே கவலைதான் இருந்தது. கப்பலைச் செலுத்தும் மாலுமி, கப்பலின் பொறுப்பாளனான கலபதி, சாதாரண ஊழியர்கள் எல்லோரும் குமார பாண்டியனுக்குச் சீக்கிரமாக உடல் நலம் ஏற்பட வேண்டுமே என்ற நினைவிலேயே இருந்தனர். இன்னும் இரண்டொரு நாள் பயணத்தில் கப்பல் இலங்கைக் கரையை அடைந்து விடும். கப்பலின் வேகத்துக்கும் வேகமின்மைக்கும் ஏற்பக் கூடக் குறைய ஆகலாம்.

நீண்ட பகல் நேரம் முழுவதும் இராசசிம்மன் அன்றைக்குக் கண் விழிக்கவேயில்லை, உணவும் உட்கொள்ளவில்லை. தூக்கத்தில் அவன் என்னென்னவோ பிதற்றினான். மாலையில் பொழுது மங்கும் நேரத்திற்கு அவன் கண் விழித்தான். தாமரையின் சிவப்பான உட்புறத்து அகவிதழைப் போல் அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. ஈரக்கசிவும் கலக்கமும் கூடத் தென்பட்டன.

"இளவரசே! காய்ச்சல் உடம்போடு நீங்கள் இப்படிப் பசியையும் சேர்த்துத் தாங்கிக் கொண்டிருப்பது நல்லதில்லை. ஏதாவது கொஞ்சம் உணவு உட்கொள்ளுங்கள்" என்று சக்கசேனாபதி கெஞ்சினார்.

"நான் என்ன செய்யட்டும்? எனக்கு உணவு வேண்டியிருக்கவில்லை. வாயெல்லாம் சுவைப் புலன் மரத்துப் போய்க் கசந்து வழிகிறது. என்னை வற்புறுத்தாதீர்கள்" என்று குமார பாண்டியனிடமிருந்து பதில் வந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டே தளத்தில் விரித்திருந்த விரிப்பில் தள்ளாடி எழுந்து உட்கார்ந்தான். அவனுக்கு இருந்த தளர்ச்சியைக் கண்டு பதறிக் கீழே சாயந்து விடாமல் சக்கசேனாபதி முதுகுப் பக்கமாகத் தாங்கிக் கொண்டார். நோயுற்றுத் தளர்ந்திருக்கும் அந்த நிலையிலும் இராசசிம்மனின் முக மண்டலத்தில் யாரையும் ஒரு நொடியில் கவர்ந்து தன்வயமாக்கிக் கொள்ளும் அந்த அழகுக் குறுகுறுப்பு மட்டும் குன்றவேயில்லை. சக்கசேனாபதியின் பருத்த தோளில் சாய்ந்து கொண்டு பெருமூச்சு விட்டான் அவன்.

"ஈழ நாட்டுக்கரையை அணுகுவதற்கு முன் உங்களுக்கு உடல் தேறவில்லையானால் காசிப மன்னருக்கு நான் காரணம் சொல்லி மீள முடியாது. நான் சரியாகக் கவனித்து அழைத்துக் கொண்டு வராததனால் தான் உங்களுக்குக் காய்ச்சல் வந்திருக்க வேண்டுமென்று என்னைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கிவிடுவார்" என்று சக்கசேனாபதி கூறியதற்கு இராசசிம்மன் உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது நேரம் நிதானமாக எதையோ சிந்தித்துவிட்டுப் பதில் சொல்லுகிறவனைப் போல், "சக்கசேனாபதி! உடற் காய்ச்சலை விட இப்போது மனக் காய்ச்சல் தான் அதிகமாகிவிட்டது" என்று தழுதழுக்கும் குரலில் சொன்னான். அந்தச் சொற்களைச் சொல்லும் போது உணர்ச்சிக் குமுறலின் வேதனையால் வார்த்தைகள் தடைப்பட்டு வந்தன. நெஞ்சு பலமாக விம்மித் தணிந்தது. சக்கசேனாபதி அதைக் கண்டு பயந்தார். அவனது நெஞ்சை மெதுவாகத் தடவி விட்டுக் கொண்டே, "இளவரசே! காய்ச்சல் உள்ள போது இப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசவோ, நினைக்கவோ கூடாது. எதைப்பற்றியும் மனத்தைக் கவலைப்பட விடாமல் நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

"என்னால் அப்படி நிம்மதியாக இருக்க முடியாவில்லையே, சக்கசேனாபதி! முள்ளில் புரண்டு கொண்டு பஞ்சணையாக நினைத்துக் கொள்வதற்கு நான் யோகியாக இருந்தால் அல்லவா முடியும்? ஆசையும் பாசமும் ஆட்டிவைக்க ஆடும் சாதாரண மனிதன் தானே நானும்? நான் செய்துவிட்டனவாக என்னாலேயே உணரப்படும் என் தவறுகள் நிழல் போல் என்னைச் சாடுகின்றனவே?" இராசசிம்மன் மனவேதனையோடு இப்படிச் சொல்லிய போது அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சக்கசேனாபதிக்கு விளங்கவில்லை.

அவர்கள் இருவருக்கும் இடையே சில விநாடிகள் மௌனம் நிலவியது. இருந்தாற் போலிருந்து இராசசிம்மன் திடீரென்று குமுறி அழ ஆரம்பித்து விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். அவனை வேதனைக் குள்ளாக்கியிருக்கும் எண்ணம் என்னவென்று சக்கசேனாபதியினால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. உடலில் நோய் வேதனை அதிகமாகும் போது சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அசட்டுத்தனமாக வாய்விட்டு அழுது கொள்வதுண்டு. 'குமார பாண்டியனுடைய அழுகையும் அந்த வகையைச் சேர்ந்ததுதானோ?' என்று எண்ணி வருந்தினார்.

"இளவரசர் இப்படி வரவரச் சிறு குழந்தையாக மாறிக் கொண்டு வந்தால் நான் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? எதற்காக, எதை நினைத்துக் கொண்டு இப்போது நீங்கள் அழுகிறீர்கள்?" அவன் முகத்தருகே நெருங்கிக் குனிந்து விசாரித்தார் அவர்.

"இத்தனை நாட்களாக இடையாற்று மங்கலம் மாளிகையில் போய் யாருக்கும் தெரியாமல் திருடனைப் போல் ஒளிந்திருந்தேனே! என் அன்னையைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று என் பாழாய்ப் போன மனத்துக்குத் தோன்றவே இல்லையே? சக்கசேனாபதி! 'பெற்றம் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று என் தாய் அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்லுவாள். அதற்கேற்றாற் போலவே நானும் நடந்து கொண்டிருக்கிறேன். என் செயல்களையெல்லாம் தெரிந்து கொண்டால் என் தாயின் மனம் என்ன பாடுபடும்? என்னால் யாருக்கு என்ன பயன்? எல்லோருக்குமே கெட்ட பிள்ளையாக நடந்து கொண்டு விட்டேன். இதையெல்லாம் நினைத்தால் எனக்கே அழுகை அழுகையாக வருகிறது. மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவோ நம்பிக்கையும் நல்ல எண்ணமும் வைத்துக் கொண்டு இடையாற்று மங்கலத்தில் கொண்டு போய்த் தங்கச் செய்திருந்தார். நான் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றி அரசுரிமைப் பொருள்களைக் கவர்ந்து கொண்டு வந்துவிட்டேனே!" என்று சக்கசேனாபதியிடம் அழுதுகொண்டே சொல்லிப் புலம்பினான் அவன். என்ன கூறி எந்த விதத்தில் அவனைச் சமாதானப்படுத்துவதென்றே அவருக்குத் தெரியவில்லை.

"இல்லாததையெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அழாதீர்கள். சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி நடத்திக் கொண்டு போகின்றனவோ, அப்படித்தானே நாம் நடக்க முடியும்? உங்கள் மேல் என்ன தவறு இருக்கிறது. மகாமண்டலேசுவரர் உங்களை அவ்வளவு கட்டுக்காவலில் இரகசியமாக வைக்காவிட்டால் நீங்கள் உங்கள் அன்னையைச் சந்தித்திருப்பீர்கள் அல்லவா? அப்போது என்னவாகியிருக்கும்? போரும், பகைவர் பயமும் உள்ள இந்தச் சூழலில் அரசுரிமைச் சின்னங்கள் இடையாற்று மங்கலத்தில் இருப்பதை விட இலங்கையில் இருப்பதே நல்லது" என்று ஒருவிதமாக ஆறுதல் சொன்னார்.

"என்னை அங்கே கூட்டிக் கொண்டு போய் அவற்றைக் காண்பியுங்கள்" என்று கப்பலில் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருக்கும் அறையைச் சுட்டிக் காட்டிப் பிடிவாதம் பிடித்தான் அவன்.

மெல்ல எழுந்திருக்கச் செய்து நடத்திக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தார். குழந்தை ஆச்சரியத்தோடு பார்ப்பது போல் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தான் இராசசிம்மன். அந்த அறையிலிருந்து வெளிவந்ததும், 'என்னை உடனே மேல் தளத்துக்குக் கூட்டிக் கொண்டு போனால்தான் ஆயிற்று!' என்று முரண்டு பிடித்தான். அந்தத் திறந்த வெளிக் காற்று காய்ச்சல் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று அவர் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். அவன் கேட்கவில்லை. மேல் தளத்தில் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினார். மேலே மாலை நேரத்து வானின் செம்பொன்னிறச் செம்முகில்கள் ஆகாய வெளியைத் தகத்தகாயம் செய்து கோலமிட்டிருந்தன. வானின் பிறைச்சந்திரனை எட்டிப் பிடித்து விடுவது போல் அலைக் கைகளை மேல் எழுப்பியது நீலக் கடல். இராசசிம்மன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விழிகளை இமைக்காமல், கடலையும், வானவெளியையும், நாற்புறத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அந்த வானில், கடலில், அலைகளில், மேகங்களில், பிறைச்சந்திரனில் அவன் எதைக் கண்டானோ?

"சக்கசேனாபதி? கீழே போய் அந்த வலம்புரிச் சங்கை எடுத்து வாருங்கள்" என்றான். அவர் கீழே சென்றார். திரும்பிய பக்கமெல்லாம் செம்பவழத் தீவில் சந்தித்த அந்த அழகியின் முகமே தெரிவது போலிருந்தது இராசசிம்மனுக்கு. அந்த அற்புதமான இயற்கையின் சூழல் அவனை என்னவோ செய்தது. அவனுடைய நாவின் நுனியில் சில சொற்கள் துடித்தன. அவன் உள்ளம் ஏதோ ஒன்றை உணர்ந்து எதையோ அழகாக வெளியிடக் கிளர்ந்தது. அடுத்த விநாடி அவன் பாடத் தொடங்கினான். அலை ஓசையை இடையிட்டு அவன் இனிய குரல் ஒலித்தது. அந்த இனிமையில் 'மதிவதனி'யின் நினைவு அவனுள் சுழன்றது.

"மின்னலின் ஒளியெடுத்து முகில்தனில்
குழல் தொடுத்துப்
பொன்னில் நிறம்படைத்துப்
பிறையினில் நுதல் மடுத்துப்
புன்னகை முல்லையாகிப்
புருவங்கள் விற்களாகிக்
கன்னலின் சுவை குயிற்றிக்
கருவிளைக் கண்களாக்கி
மென்நடை பரதமாகி
மெல்லிதழ் பவழமாகிப்
பன்னெடுங் காலமென்றும்
படைப்பினுங் கழகுகாட்டிக்
கன்னிமை யென்னுமோர்
கற்பகம் பழுத்ததம்மா."

சங்கோடு வந்து நின்ற சக்கசேனாபதி அந்த இன்னிசை வெள்ளத்தில் சொக்கி நின்றார். "உங்களுக்கு இவ்வளவு நன்றாகப் பாடவருமா?" என்ற அவர் கேள்விக்குப் பதில் கூறாமலே அவரிடமிருந்து சங்கை வாங்கிக் கொண்டான் அவன்.

26. வம்புக்கார வாலிபன்

குழல்வாய்மொழிக்காக ஏற்பாடு செய்திருந்த கப்பலின் அலங்கார அறைக்குள்ளிருந்து அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே எதிரே வந்ததைப் பார்த்த போது நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்ட திகைப்பு உடனே கோபமாக மாறியது. வேடிக்கையும், குறும்புத்தனமும் தென்படுகிற சேந்தன் முகத்தில் முதன் முதலாகக் கடுமையான சீற்றத்தைக் காணமுடிந்தது. "தம்பி! நீ சரியான திருட்டுப் பயல் என்பதைக் காட்டி விட்டாயே! நீ பெரிய கள்ளன். இந்தக் கப்பலில் ஏறக் கூடாதென்று கண்டித்துச் சொல்லியும் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படியோ மாயமாக உள்ளே புகுந்துவிட்டாய். இவ்வளவு தூரம் வம்புக்கு வந்துவிட்ட பின்பு உனக்கெல்லாம் இனிமேல் மதிப்பும் மரியாதையும் கொடுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நீ என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு தான் போகப் போகிறாய்" என்று தன்னுடைய மத்தளம் போன்ற புயங்களை மடக்கி அங்கியை மடித்து விட்டுக் கொண்டு அந்த வாலிபனை நெருங்கினான் சேந்தன். அவனுடைய உருண்டை முகத்திலும் பெரிய வட்டக் கண்களிலும் சினம் முறுக்கேறியிருந்தது.

குழல்வாய்மொழி பயந்து மருண்ட பார்வையோடு அறை வாயிலிலேயே நின்றுவிட்டாள். அந்த இளைஞன் எப்படி, எப்போது கப்பல் அறைக்குள் புகுந்திருக்க முடியுமென்பது அவள் அனுமானத்துக்கு எட்டவே இல்லை. அவளுக்கும் அந்த இளைஞன் மேல் ஆத்திரம் உண்டானாலும், சேந்தன் அவனை அடிப்பதற்காகக் கையை ஓங்கிக் கொண்டு போன போது சிறிது வேதனையாக இருந்தது. உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த இளைஞனுக்காக அநுதாபத்தின் மிகச் சிறிய ஊற்றுக் கண் திறந்து வருவதை அவளால் தடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சேந்தனிடம் அந்த இளைஞன் நடந்து கொள்ளத் தொடங்கிய விதத்தைப் பார்த்த போது அவள் தன் அநுதாபத்தையே மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அவள் எண்ணியதைப் போல் அவன் சாதுப் பிள்ளையாண்டானாக இருக்கவில்லை. பெரிய வம்புக்காரனாக இருந்தான். தன்னை நோக்கிக் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்த சேந்தனை எதிர்த்துக் கொண்டு முறைத்தான் அவன். "ஐயா! சும்மா மிரட்டிப் பார்க்காதீர்கள். நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். 'ஏதோ இளம் பிள்ளைதானே' என்று கையை ஓங்கிக் கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆத்திரம் உண்மையானால் நானும் உங்களிடம் பொல்லாதவனாக நடந்து கொள்ள வேண்டியதுதான்" என்று அவன் விறைப்பாக நிமிர்ந்து நின்று வலது கையால் இடையிலிருந்த வாளின் பிடியைத் தொட்டுக் கொண்டே கூறினான். அது நாராயணன் சேந்தனுடைய கோப நெருப்பைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. அவன் சினத்தோடு கூச்சலிட்டான். "அடே, பொட்டைப் பயலே! நீயும் உன் கீச்சுக் குரலும் நாசமாய்ப் போக! கடவுள் உன் திமிருக்கு ஏற்றாற்போல் தொண்டையை அளந்துதான் வைத்திருக்கிறார் உனக்கு. வாளைக் கையில் உருவிக் கொண்டு என்னை ஏமாற்றி விடலாமென்றா பார்க்கிறாய்? ஏதாவது வம்பு செய்தாயோ, உன்னை அப்படியே குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கீழ்த்தளத்தில் இருந்தபடியே கடலில் எறிந்து விடுவேன். என்னுடைய இந்தக் கைகளில் ஒளிந்து கொண்டிருக்கும் வலிமையை நீ அறியமாட்டாய். நேற்று பயல் நீ கொஞ்சம் வணக்கமாகவே பேசு. இந்த விறைப்பெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே!"

"சரிதான், ஐயா! கொஞ்சம் நாக்கை உள்ளுக்குள்ளே அடக்கியே பேசுங்கள். நீங்கள் இருப்பது முழங்கால் உயரம்! ஆகாயத்தைப் பிளக்கும்படி பெரிதாகக் கூச்சல் போடுகிறீர்களே! கடவுள் எனக்குத்தான் தொண்டையைக் குட்டையாகப் படைத்து என் திமிரை மட்டம் தட்டிவிட்டார்; உங்களுக்கு என்ன காரணத்துக்காக உடம்பையே இப்படிக் கட்டையாகப் படைத்தாரோ தெரியவில்லை! போகட்டும். இதோ அறைவாசலில் நின்று கொண்டிருக்கும் இந்தச் சகோதரிக்கு முன்னால் உங்களை அநாவசியமாக அவமானப்படுத்த வேண்டாமென்று பார்க்கிறேன். இல்லையானால்...?" அவன் முடிக்கவில்லை. அதற்குள் சேந்தன் குறுக்கிட்டு, "இல்லையானால் என்ன செய்துவிடுவாயாம்?" என்று கொதிப்போடு கேட்டுக் கொண்டே இன்னும் அருகில் நெருங்கினான். ஆனால் அந்த இளைஞனோ சேந்தன் நெருங்க நெருங்க அவன் கைக்கெட்டாதபடி ஒரு பாக தூரம் பின்னுக்கு நகர்ந்து நின்று கொண்டான். அறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழல்வாய்மொழி அந்த இளைஞனின் செயலைக் கண்டு மெல்லச் சிரித்துக் கொண்டாள். வீராதி வீரனைப் போல் பேசிக் கொண்டே பின்னுக்கு நகரும் அந்த வாலிபன் முகத்தில் பயமும், பதற்றமும் தோன்றுவதைக் குழல்வாய்மொழி கவனித்தாள். சேந்தனும் பெரிய ஆள்தான். பிரமாதமாக அடித்து நொறுக்கி விடப் போகிறவனைப் போலக் கையை ஓங்கிவிட்டு அடிக்கப் பயந்து தயங்குவதையும் குழல்வாய்மொழி கவனித்தாள். இரண்டு ஆண்பிள்ளைகளுமே ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிக்கும் அந்த நிலையைக் கூர்ந்து கவனித்த போது அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சேந்தன் அந்த வாலிபனை அதட்டினான். "அடேய்! பேசாமல் நான் சொல்கிறபடி கேள். இப்போது கப்பல் போய்க் கொண்டிருக்கும் இந்த இடத்திலிருந்து துறைமுகம் அதிக தூரமில்லை. கடலில் குதித்துக் கரைக்கு நீந்திப் போய்விடு. இல்லாவிட்டால் நானே பிடித்துத் தள்ளிவிடுவேன். என்னால் முடியாவிட்டால் கப்பல் மீகாமனையும், மற்ற ஆட்களையும் கூப்பிட்டு உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளச் சொல்வேன். உன் மேல் சிறிது கூடக் கருணை காட்ட மாட்டேன். நீ கெட்ட குறும்புக்காரப் பயல்."

"ஆகா! அதற்கென்ன? உங்களால் மட்டும் முடியுமானால் தாராளமாகப் பிடித்துத் தள்ளிவிடுங்கள். அதற்கு முன்னால் உங்களிடம் ஒரு வார்த்தை. நான் திருடுவதற்கோ, வேறெந்த வகைகளிலாவது ஏமாற்றி வஞ்சகம் செய்வதற்காகவோ இந்தக் கப்பலில் ஏறவில்லை. இன்றைக்கு விழிஞத்தில் நின்ற கப்பல்களில் வேறெந்தக் கப்பலிலும் எள் விழ இடமில்லை. ஒரே கூட்டம். நானோ இலங்கைத் தீவு வரை பயணம் செய்ய வேண்டும். மிகவும் அவசரம். துறைமுகத்தில் விசாரித்ததில் இந்தக் கப்பல் இலங்கைத் தீவுக்குப் போனாலும் போகலாமென்று கூறி, அருகில் நின்ற உங்களையும் இந்தச் சகோதரியையும் விசாரிக்கச் சொன்னார்கள். நான் வந்து விசாரித்தேன். நீங்கள் இடம் இல்லையென்று கண்டிப்பாக மறுத்துச் சொல்லி விட்டீர்கள். எனக்கோ அவசரம். இந்தக் கப்பலை விட்டால் வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நீங்களும் சகோதரியும் மேல்தளத்தில் பேசிக் கொண்டு நின்ற போது உங்களுக்குத் தெரியாமல் ஏறிக் கீழ்த்தளத்திலுள்ள இந்த அறைக்குள் ஒளிந்து கொண்டேன். இப்போது நீங்கள் வந்து பார்த்து விட்டீர்கள். கடலில் தள்ளுவேன் என்கிறீர்கள். அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன் நான். இவ்வளவு பெரிய கப்பலில் நீங்கள் இரண்டே இரண்டு பேர்கள் தானே பயணம் செய்கிறீர்கள். நான் ஒருவன் கூட இருந்து விட்டதனால் உங்களுக்கு என்ன குடி முழுகி விடப் போகிறது? என்னால் உங்களுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகிறது?"

"இரண்டு பேர்கள் போகிறோம். அல்லது வெறுங் கப்பலை ஓட்டிக் கொண்டு போகிறார்கள். அதைப் பற்றிக் கேட்க நீ யார் தம்பீ? உனக்கு இடமில்லையென்றால் பேசாமல் போக வேண்டியது தானே? இந்தக் குறுக்குக் கேள்வியெல்லாம் உன்னை யார் கேட்கச் சொன்னார்கள்?" என்றான் நாராயணன் சேந்தன்.

தொடக்கத்தில் சேந்தனிடம் எரிந்து பேசி வம்பு செய்த அந்த வாலிபனின் முகத்தில் இப்போது சிறிது கலவரமும் பதற்றமும் தோன்றின. "சகோதரி! என்னை உங்கள் கூடப் பிறந்த தம்பி போல் நினைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு நெகிழ்ந்த மனமும் பிறருக்கு விட்டுக் கொடுத்து இரங்கும் பண்பும் அதிகம் என்பார்கள். நீங்களே இப்படிப் பாராமுகமாக இருக்கிறீர்களே. இப்படி நடுக்கடலில் வைத்துக் கொண்டு, 'உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளிவிடுவேன் என்று பயமுறுத்தினால் நான் என்ன செய்வேன்? இந்த மனிதரிடம் கொஞ்சம் நீங்கள் எனக்காகச் சொல்லுங்கள். இந்தப் பிரயாணத்தின் போது நடுநடுவே நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியாக இருப்பேன். நான் உங்கள் மனிதன், உங்கள் ஊழியனைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்."

அந்த வாலிபனுடைய திடீர்ப் பணிவைக் கண்டு குழல்வாய்மொழி சிரித்தாள். சேந்தன் ஏளனம் நிறைந்த குரலில், "கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது என்கிற விவகாரம் வைத்துக் கொள்ளாதே. சிறிது நேரத்துக்கு முன்னால் அசகாயசூரனைப் போல் வாளை உருவத் தயாராகி விட்டாய். இப்போது என்னடாவென்றால் சரணாகதி நாடகம் போடுகிறாய். நான் உன்னை இதுவரை ஒன்றுமே செய்யாமல் நின்று பேசிக் கொண்டிருப்பதனால்தான் நீ எனக்குப் பயப்பட மாட்டேனென்கிறாய். கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. இரு, இரு. இப்போதே ஆட்களைக் கூப்பிட்டு உன்னைக் கடலில் தூக்கி எறியச் சொல்லுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஆட்களைக் கூப்பிடுவதற்காகக் கைகளைச் சேர்த்துத் தட்டப் போனான். அப்போது அந்த வாலிபன் விருட்டென்று அருகில் பாய்ந்து சேந்தனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு மேலும் குழைவான குரலில் கெஞ்சத் தொடங்கிவிட்டான். சேந்தன் திகைத்துப் போனான். குளிர்ந்த செந்தாமரைப் பூக்கள் இரண்டு தன் கைகளைக் கவ்விக் கொண்டிருப்பது போல் சுகமாகவும் மிருதுவாகவும் இருந்தன, நாராயணன் சேந்தனுக்கு அந்த வாலிபனின் கைகள்.

"ஐயா! ஆரம்பத்தில் நான் உங்களிடம் சிறிது வரம்பு கடந்து தான் பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். இந்தத் தென்கடலில் எங்கு போக வேண்டுமானாலும் எனக்கு வழிகள் நன்றாகத் தெரியும். அநேகமாக ஒவ்வொரு தீவிலும் சில நாட்கள் இருந்திருக்கிறேன் நான். இலங்கை போன்ற பெரிய தீவுகளில் என்னால் எவ்வளவோ உதவிகள் செய்ய முடியும். தென்கடலில் அங்கங்கே கடம்பர்கள் என்ற ஒரு வகைக் கடற் கொள்ளைக்காரர்கள் கப்பலை நடுக்கடலில் கொள்ளையடித்துத் துன்புறுத்தி வருகிறார்கள். அந்தக் கொள்ளைக்காரர்கள் எப்படியிருப்பார்கள், எப்போது வருவார்கள் என்ற நெளிவு சுளிவெல்லாம் எனக்குத் தெரியும். உங்கள் கப்பலுக்கு அவர்களால் தொல்லைகள் வராதபடி நான் காப்பாற்றுவேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுங்கள். தயவு செய்து இந்தக் கப்பலிலேயே உங்களோடு என்னையும் பிரயாணம் செய்ய விடுங்கள்."

இதைக் கேட்டுச் சேந்தன் பலமாக 'ஓகோ'வென்று சிரித்தான். குழல்வாய்மொழியும் சிரித்துக் கொண்டு தான் நின்றாள். "சரியான பயல் தான் அப்பா நீ! பெரிய சூரனைப் போல் நடித்து விட்டுக் கடைசியில் இந்த முடிவுக்குத்தானா வந்தாய்? இவ்வளவு பணிவையும் தொடக்கத்திலேயே எங்களிடம் காட்டிக் கப்பலில் அனுமதியின்றி ஏறி விட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தாயானால் விவகாரம் இவ்வளவு முற்றியிருக்காதே. உன்னைச் சொல்லி என்ன தம்பி, குற்றம்? உலகம் முழுவதுமே பண்பாட்டுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. எதையும் செய்ய முடிந்த தீரன் பணிவாக அடங்கி ஒடுங்கிப் பணிவாக வாழ்ந்தால் அந்தப் பணிவைப் போற்றலாம். கையாலாகாதவன் பணிவது தான் உலக வழக்கமாகி விட்டது. முடிகிற வரை ஆண்மையும் வீராப்பும் காட்டுவது, முடியாவிட்டால் பணிந்து அடங்கி விடுவது. மனிதர்கள் பழகிப் பழகி வாழத் தெரிந்து கொண்டுவிட்ட இரகசியம் தான் இந்தப் பணிவு. இதனால் தான் உலகத்தில் உண்மை வீரர்களே குறைந்துவிட்டார்கள்" என்று சொல்லிவிட்டுக் குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி, "அம்மணீ! நீங்களும் பார்த்துக் கொண்டுதானே நிற்கிறீர்கள்! புலியாக இருந்த பயல் அதற்குள் இப்படிப் பூனையாக மாறிவிட்டான்! இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எதிலுமே உறுதி கிடையாது. அலைபாயும் செயல்கள், அதனால் தான் எதிலும் தோல்வி மனப்பான்மையும் நம்பிக்கை வறட்சியும் அடைந்து கெட்டுப் போகிறார்கள். மனத்தை எந்தச் செயலிலும் ஆழமாகக் குவிந்து ஈடுபட விடமாட்டேனென்கிறார்கள். மேலோட்டமான அகலத்தையும் பரபரப்பையும் பார்த்தே உணர்ச்சி மயமாக வாழ்ந்து அழிகிறார்கள். இதோ இந்த வாலிபனையே எடுத்துக் கொள்ளுங்களேன். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறான். பண்பில் எவ்வளவு மோசமாயிருக்கிறான்!" என்றான் நாராயணன் சேந்தன்.

குழல்வாய்மொழி தான் சிரிப்பதை நிறுத்திக் கொண்டு அந்த வாலிபனை நோக்கி, "உன் பெயர் என்ன அப்பா?" என்று கேட்டாள். வாலிபன் மனத்தில் எதையோ சிந்திப்பவனைப் போல் சிறிது தயங்கினான். பின்பு குழல்வாய்மொழியைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே, "சகோதரி! என் பெயர் கூத்தன்" என்றான்.

"உனக்குப் பொருத்தமான பெயர் தான் தம்பி! சில பேருக்குப் பொருத்தமான பெயர் கிடைப்பதில்லை. இன்னும் சிலர் பெயருக்குப் பொருத்தமாக நடந்து கொள்வதே இல்லை. நீ இரண்டு வகையிலும் கொடுத்து வைத்தவன். கூத்தன் என்ற பெயருக்கு நடிப்பவன் என்று பொருள். நீ நடப்பது, சிரிப்பது, பெண் குரலில் பேசுவது, பயமுறுத்துவது, கெஞ்சுவது, உன்னுடைய தோற்றம் எல்லாமே செயற்கையாக நடிப்பது போல் இருக்கின்றன. உன் இயல்போடு ஒட்டியதாகவே தெரியவில்லை. நீ கூத்தனேதான்!" சேந்தன் தற்செயலாக அவன் பேரைக் கேட்டதும் தன் மனத்தில் பட்டதைத் தான் மேற்கண்டவாறு கூறினான். ஆனால் அதைச் செவியுற்றதும் அந்த வாலிபனது முகத்தில் அவ்வளவு பீதியும் பரபரப்பும் ஏன் உண்டாயினவோ? சற்றுக் கூர்ந்து கவனித்தால் அவன் உடல் மெல்ல நடுங்கிப் புல்லரித்து ஓய்வது கூடத் தெரியும். சேந்தன் குழல்வாய்மொழியைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டான்: "அம்மணி நீங்கள் சொல்லுங்கள். இவனை என்ன செய்யலாம்? போனால் போகிறானென்று இப்படியே நம் கூட இந்தக் கப்பலில் பயணம் செய்வதற்கு அநுமதித்து விடலாமா? அல்லது கடலில் பிடித்துத் தள்ளிவிடலாமா?"

சேந்தனுடைய கேள்விக்குக் குழல்வாய்மொழி பதில் சொல்லு முன் அந்த வாலிபனே முந்திக் கொண்டு, "கடலில் தள்ளிவிடுங்கள். இந்தக் கடலில் அல்ல. உங்களுடைய கருணைக் கடலில் என்னையும் தள்ளிக் கொண்டு காப்பாற்றுங்கள்" என்றான். அதைக் கேட்டு மகாமண்டலேசுவரரின் அருமை மகள் உள்ளம் பூரித்தாள். சேந்தனோ முகத்தைச் சுளித்துக் கொண்டு சொன்னான்: "பயல் விநயமாகப் பேசுவதில் உலகத்தை விலைபேசி விற்றுச் சுருட்டிக் கொண்டு போய் விடுவான் போலிருக்கிறது. அதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் அம்மணி!"

"ஆனாலும் பரவாயில்லை! கப்பலில் எத்தனையோ ஊழியர்கள் இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் உதவியாக ஓர் ஆள் வேண்டுமல்லவா? இவனும் இருந்து விட்டுப் போகட்டும். இவன் தான் பழைய முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு நம் வழிக்குப் பணிந்து வந்து விட்டானே! இனிமேல் இவனால் நமக்குக் கெடுதல் இருக்காது" என்றாள் குழல்வாய்மொழி. அவளுடைய ஆதரவான சொற்களைக் கேட்ட பின்புதான் அந்த வாலிபனுடைய முகத்தில் மலர்ச்சி வந்தது.

"என்னமோ, உங்கள் பாடு, இவன் பாடு. இவனைக் கட்டி மேய்ப்பதற்கு என்னால் முடியாது. நான் மேல் தளத்துக்குப் போகிறேன்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டான் நாராயணன் சேந்தன்.

"சகோதரி! இந்தக் குட்டை மனிதர் யார்? கொதிக்கிற எண்ணெயில் கடுகு வெடிக்கிற மாதிரி ஏன் இப்படித் திடீர் திடீர் என்று இவருக்குக் கோபம் வந்து விடுகிறது? இவர் உங்களுக்கு உறவா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் வாலிபன்.

"கூத்தா! அது அவர் சுபாவம். அதை நாம் மாற்ற முடியாது. எனக்குக் களைப்பாக இருக்கிறது. நான் படுத்து உறங்கப் போகிறேன். நீயும் மேல்தளத்துக்குப் போ. நான் கூப்பிடுகிற போது வந்தால் போதும்" என்றாள் குழல்வாய்மொழி. கூத்தன் என்ற அந்த வாலிபன் கப்பலின் மேல் தளத்துக்கு ஏறிப் போனான். அவன் சேந்தனோடு ஒட்டிக் கொண்டு நெருங்கிப் பழக முயன்றான். ஆனால் சேந்தன் நெருங்க விடவில்லை. யாரோ சொல்லி வைத்து ஏற்பாடு செய்திருந்தது போல் கப்பல் ஊழியர்களும் அந்த வாலிபனோடு ஒட்டுதல் இன்றியே பழகினார்கள். அவனுடன் பேச நேரும்போதெல்லாம் 'பொட்டைப் பயல்', 'பொட்டைப் பயல்' என்று வாய்க்கு வாய் திட்டினான் சேந்தன்.

27. குழைக்காதன் திரும்பி வந்தான்

கோட்டாற்றுப் படைத்தளத்தின் பிரும்மாண்டமான முரச மேடையில் நின்று கொண்டு கண்களின் எதிரே கடல் போல் பரந்து தோன்றும் படையணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவன், படைக்கோட்டத்தின் வாசலில் ஆபத்துதவிகள் தலைவனின் உருவத்தைப் பார்த்ததுமே பரபரப்படைந்தான். அவனைச் சந்தித்து அவன் கொண்டு வரும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலினாலும், பரபரப்பினாலும் ஒரு கணம் தன் நிலை, தான் நின்று கொண்டிருந்த சூழல் எல்லாவற்றையுமே மறந்துவிட்டான் தளபதி. அப்படியே இறங்கி ஓடிப்போய்க் குழைக்காதன் கொண்டு வரும் செய்திகளை அங்கேயே அவனை நிறுத்தித் தெரிந்து கொண்டுவிட வேண்டும் போலிருந்தது. பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் தனக்கு மரியாதை செய்வதற்காகக் கூடி அணிவகுத்து நிற்கும் சூழ்நிலையை உணர்ந்து அப்படி இறங்கிச் செல்லாமல் சமாளித்துக் கொண்டான். பெரிய சூழ்நிலைகளில் சிறிய ஆசைகளை அடக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

முரச மேடை மேல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த படையணித் தலைவர்களில் ஒருவனைக் குறிப்புக் காட்டி அருகே அழைத்தான். "அதோ, வாயிற்புறமாகக் குதிரையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்துதவிகள் தலைவனை நேரே இங்கே அழைத்து வா" என்று சொல்லி அனுப்பி வைத்தான். அவன் மேடையிலிருந்து இறங்கி வேகமாக வாயிற் பக்கம் நடந்தான். அந்த மாபெரும் அணிவகுப்பின் நடுவே - அசையாது நிற்கும் சிலைகளைப் போன்று வரிசை வரிசையாக நிற்கும் வீரர்களை வகிர்ந்து கொண்டு ஒரே ஓர் ஆள் நடந்து சென்றது, நெற்குவியலினிடையே ஒரே ஓர் எறும்பு ஊர்கிற மாதிரித் தெரிந்தது. உயரமான மேடை மேலிருந்து பார்க்கும் போது தளபதிக்கு அப்படித்தான் மனத்துக்குள் உவமை தோன்றியது. அத்தனை ஆயிரம் வீரர்களின் கூட்டத்தில் மூச்சுவிடுகிற ஓசையாவது கேட்க வேண்டுமே! அவ்வளவு அமைதி. தளபதி என்ற ஒரு மனிதனுக்கு அத்தனை மனிதர்களும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. அவனுடைய ஒரு சுட்டு விரலின் அசைவுக்குக் கூட அந்தக் கூட்டத்தில் விளைவு உண்டு. இதை நினைத்துக் கொண்ட போது திடீரென்று தான் மிகமிகப் பெரியவனாக மாறி உயர்ந்து விட்டது போலவும், அந்த உயரத்தின் நீண்ட நிழலில் மகாமண்டலேசுவரர் என்ற அறிவின் கூர்மை சிறியதோர் அணுவாய்த் தேய்ந்து குறுகி மங்கி மறைந்துவிட்டது போலவும் தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு பொய்யான பூரிப்பு ஏற்பட்டது. ஒரே ஒரு கணம் தான் அந்தப் பூரிப்பு நிலைத்தது. அடுத்த கணம் ஆழங்காண முடியாத மகாமண்டலேசுவரரின் அந்தக் கண்களும், ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எட்டுத் திசையை உணர்ந்து கொள்ளும் பார்வையும், உரு வெளியில் பெரிதாகத் தோன்றி அவன் சிறுமையை அவனுக்கு நினைவுபடுத்தின. தென்பாண்டி நாட்டின் எத்தனையோ ஆயிரம் வீரர்களுக்கு வாய்க் கட்டளையிடும் அவனை, வாய் திறவாமல் கண் பார்வையாலேயே நிற்கவும், நடக்கவும், செயலாற்றவும் ஏவுகிற அரும்பெரும் ஆற்றல் அந்த இடையாற்று மங்கலத்து 'மலைச்சிகர'த்தினிடம் இருந்தது.

மனத்தைத் தடுக்க முயன்றாலும், முடியாமல் மறுபடியும் அவன் சிந்தனை இடையாற்று மங்கலம் நம்பியையே சுற்றிக் கொண்டு மலைத்தது. ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக் கொண்டு வர வாயிற்புறம் சென்றவன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.

நெடுந்தூரம் பயணம் செய்து வந்த அலுப்பும், களைப்பும் குழைக்காதனிடம் தெரிந்தன. அலைந்து திரிந்து வந்தவன் முகத்தில் காணப்படும் ஒரு கருமை அவன் முகத்தில் பதிந்து ஒளி மங்கியிருந்தது. மேடையில் ஏறி அருகில் வந்து தளபதியை வணங்கினான் அவன்.

"நேரே அங்கிருந்து தான் வருகிறீர்களா?" தளபதி கேட்டான். 'ஆம்' என்பதற்கு அறிகுறியாகக் குழைக்காதனின் தலை அசைந்தது. அந்த இடத்தில் பொதுவாக எல்லோரும் காணும்படி நின்று கொண்டு குழைக்காதனிடம் ஒரு அந்தரங்கமான செய்தியைப் பற்றி விசாரிப்பது நாகரிகமற்ற செயலாகும் என்று தளபதிக்குத் தோன்றியது.

"குழைக்காதரே! கொஞ்சம் இப்படி என் பின்னால் வாருங்கள்" என்று குறிப்பாக மெதுவான குரலில் கூறிவிட்டு முரச மேடையின் பின்புறத்துப் படிகளில் இறங்கி ஆயுதச் சாலையை நோக்கி நடந்தான் வல்லாளதேவன். குழைக்காதனும் மௌனமாக அவனைப் பின்பற்றிப் படியிறங்கிச் சென்றான். அந்த இரண்டு பேர்கள் படியிறங்கி நடந்து செல்லும் திசையில் அங்கே கூடியிருந்த வீரர்களின் பல ஆயிரம் விழியிணைகளின் பார்வைகள் இலயித்துப் பதிந்தன. ஆயுதச் சாலையின் தனிமையான ஒரு மூலையில் வந்து தளபதியும் குழைக்காதனும் நின்றார்கள்.

"குழைக்காதரே! இரகசியமான செய்திகளைப் பொதுவான இடங்களில் பேசுவது காய்ந்த வைக்கோற்போரில் நெருப்பைப் பத்திரப்படுத்தி வைக்க முயல்வது போல மடமையான செயல். சில சந்தர்ப்பங்கள் நம்மைத் தவறாக பயன்படுத்திக் கொண்டு விடும். அதனால் தான் இவ்வளவு முன்னெச்சரிக்கை. சரி, நீங்கள் போன காரியம் என்ன ஆயிற்று? அதைப் பற்றிச் சொல்லுங்கள்."

"ஆவது என்ன? இந்த விநாடி வரை எல்லாம் சரியாகத்தான் நடைபெற்றிருக்கின்றன. இனிமேல் எப்படியோ? காரியத்தை முடித்துக் கொண்டு வெற்றியை நம்முடையதாக்கிக் கொண்டு வரவேண்டிய திறமை தங்களுடைய திருத்தங்கையாரின் கைகளில் தான் இருக்கிறது."

"நீங்கள் எதுவரை உடன் சென்றிருந்தீர்கள்?"

"விழிஞம் வரை நானும் கூடப் போயிருந்தேன். அவர்களுடைய கப்பலில் தங்கள் தங்கையார் ஏறிக் கொள்கிற வரை மறைந்திருந்து பார்த்து விட்டுத் தான் திரும்பினேன்."

"தங்கள் கப்பலில் ஏறக்கூடாதென்று அவர்கள் மறுக்கவில்லையா?"

"மறுக்கவில்லையாவது? மறுக்காமல் விடுவதாவது. மகாமண்டலேசுவரருக்கு மதியமைச்சன் போல் திரிகிறானே அந்தக் குட்டையன், அவன் தங்கையாருக்கு இடமில்லை என்று கடைசி வரையில் சாதித்து விட்டான்."

"அடடே! அப்புறம் எப்படி இடம் கிடைத்தது?"

"நேர்மையாக இடம் கிடைக்கவே இல்லை. அவர்கள் பார்க்காத நேரத்தில் தங்கள் தங்கையார் கப்பலின் கீழ்த்தளத்தில் ஏறி ஒளிந்து கொண்டு விட்டார்கள். கப்பல் புறப்படுகிற வரை நான் மறைந்திருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தேன். விழிஞத்தில் புறப்பட்டவன், நேரே இங்கே குதிரையை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்."

"குழைக்காதரே! என் தங்கையின் ஆண் வேடத்தைப் பார்த்து மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமற் போய்விட்டதே என்று இந்த நெருக்கடியான நிலையிலும் எனக்குச் சிறிது மனக்குறைவு உண்டாகத்தான் செய்கிறது" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் தளபதி.

"மகாசேனாபதி அப்படி ஒரு குறையை உணர வேண்டியது அவசியம் தான். ஏனென்றால் தங்கள் உடன் பிறந்த தங்கையார் அவ்வளவு தத்ரூபமாக ஆண் வேடத்தோடு பொருந்திக் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் அந்த மாறு வேடத்தோடு அன்றிரவு அரண்மனைத் தோட்டத்தில் வந்து என் முன் நின்ற போது எனக்கே அடையாளம் புரியவில்லையே? மிக அருமையாக நடிக்கிறார்கள். விழிஞத்தில் அந்தக் குறுந்தடியனுக்கும் மகாமண்டலேசுவரரின் புதல்விக்கும் முன்னால் ஆண் வேடத்தோடு தங்கள் தங்கையார் சிரித்துப் பேசிய சீரைப் பார்த்து அடியேன் அயர்ந்து போனேன்."

"என்ன செய்யலாம்? வேடம் போட்டு நடித்துப் பிறரை ஏமாற்றி வாழ்வதெல்லாம் அறத்தின் நோக்கத்தில் பாவம் தான். சில சமயங்களில் வாழ்வதற்காகப் பொய்யாக நடிக்க வேண்டியிருக்கிறது. நடிப்பதற்காகவே வாழ்கிற வாழ்வை மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களே வைத்துக் கொண்டிருக்கிறார்களே!"

"ஆ! தாங்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிப் பேச்செடுத்ததும் தான் எனக்கு நினைவு வருகிறது. இப்போது அரண்மனையின் எல்லா அரசியல் காரியங்களும் அவர் பொறுப்பில் தான் நடக்கின்றன. அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மகாராணியாருடைய நினைவுகளெல்லாம் சமயத் தத்துவங்களில் திரும்பியிருக்கின்றன. கூற்றத் தலைவர்கள் இருந்தாலாவது ஏதாவது கேள்வி கேட்டு அவர் மண்டையில் குட்டிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களும் திரும்பி வந்து விட்டனர். கரவந்தபுரத்துக்குச் செய்தி அனுப்புவது, வடதிசைப் போர் நிலவரங்களைக் கண்காணிப்பது எல்லாம் மகாமண்டலேசுவரரே பார்த்துச் செய்கிறார்."

"செய்யட்டும், நன்றாக அவரே முழுச் சர்வாதிகாரமும் நடத்தட்டும். நான் ஒருவன் அங்கேயிருந்தால் தனக்கு இடையூறாக இருக்குமென்றோ என்னவோ என்னையும் 'படை ஏற்பாடுகளைக் கவனி' என்று இங்கே அனுப்பிவிட்டார். எதற்கெடுத்தாலும் மகாராணி கூட அவர் பக்கமே தலையசைக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நாய்களைக் காவலுக்கு மட்டும் தான் வைத்துக் கொள்வார்கள். குளிப்பாட்டி மஞ்சள் தடவி மரியாதை செலுத்துவதற்கு பசுமாட்டை வைத்திருப்பார்கள்." தளபதி வல்லாளதேவன் தாழ்வு மனப்பான்மையோடு பேசினான்.

தகுதியாற் பெரியவர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்களிடம் பலவீனமான சமயங்களில் மனம் திறந்து தங்களைத் தாழ்வாகச் சொல்லிவிட நேர்ந்தால், அதைக் கேட்பவர் பதில் கூறாமல் அடக்கமாக இருந்து விடுவது தான் அழகு. ஆபத்துதவிகள் தலைவன் அந்த மாதிரி தளபதிக்குப் பதில் கூறாமல் அடக்கமாக நின்றான்.

சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல் நின்ற தளபதி திடீரென்று முகபாவத்தை மாற்றிக் கொண்டு, "பரவாயில்லை? மகாமண்டலேசுவரர் அரண்மனையிலிருந்தும், குழல்வாய்மொழி நாராயணன் சேந்தன் ஆகியோர் தெற்கேயிருந்தும் இடையாற்று மங்கலத்துக்குத் திரும்பு முன் நீங்கள் அங்கே போய் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொண்டு வரவேண்டும். இடையாற்று மங்கலம் தீவில் வசந்த மண்டபத்துக்கு அருகில் விருந்தினர் மாளிகைக்குக் கீழே ஒரு நிலவறை உண்டு. அதில் ஏராளமான ஆயுதங்களை மகாமண்டலேசுவரர் சேர்த்து வைத்திருக்கிறார். எப்படியாவது அவற்றை இங்கே கிளப்பிக் கொண்டு வந்துவிட வேண்டும். பரம இரகசியமாக இதைச் செய்யுங்கள். வேண்டிய ஆட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அறிவு தங்கியிருக்கிற இடத்தில் ஆயுதங்களும் தங்க வேண்டாம்" என்றான் தளபதி வல்லாளதேவன்.

28. 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'

[இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் மேல் கொண்டு வருகிற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மாதிரி அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் அரசர்கள் மீதோ, பொறுப்பு ஒதுக்கப்பட்ட மகாமண்டலேசுவரர் போன்றவர் மீதோ கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 'ஒப்புரவு மொழி மாறா ஓலை' என்று பெயர். கூற்றத் தலைவர்கள் ஒன்று கூடி ஒப்புரவு மொழி மாறா ஓலை கொண்டு வருவர். Ref. No. 73 Olai document of Kollam 878 T.A.S. Vol. V.P.215]

காய்ந்த மரத்தில் நான்கு புறத்திலிருந்தும் கல்லெறி விழும் என்பார்கள். பழுத்த மரமாக இருந்து விட்டாலோ இன்னும் அதிகமான துன்பம்தான். எதற்கும் அடங்காத அறிவின் கூர்மையை வைத்துக் கொண்டு வாழ்கிறவர்கள் எவ்வளவோ எதிரிகளை உண்டாக்கிக் கொள்ளவும் தயாராகத்தான் இருக்க வேண்டும். எட்ட முடியாத உயரத்தில் புரிந்து கொள்ள முடியாத சாமர்த்தியத்தோடு நெஞ்சின் பலத்தால் நிமிர்ந்து நிற்பவர்களுக்குச் சுற்றியுள்ளவர்களின் பகைமையும் வெறுப்பும் கிடைக்கத்தான் செய்யும்.

பொருட்செறிவுள்ள செழுமையான சொற்களால் உட்பொருள் நயம் பொருந்த ஒரு மகாகவி காவியம் ஒன்று எழுதியிருந்தால் அதைப் புரிந்து கொள்ளத் தகுதியற்றவர்களும், புரிந்து கொள்ள முடியாதவர்களும் காரணமின்றி அதன் மேல் வெறுப்படைவது போல் தென்பாண்டி நாட்டின் மகாமண்டலேசுவரர் மேல் சிலருக்கு வெறுப்பு உண்டாகியிருந்தது.

"மக்களின் மனப் பண்பு தாழ்ந்து கீழ்த்தரமாகப் போய்விட்டால் உயர்வும், தரமும் உள்ள எல்லாப் பொருள்களின் மேலும் ஏதோ ஒருவகை வெறுப்பு வந்துவிடுகிறது. மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மனத்தில் மண்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பேதமையின் காரணமாகப் பெரும்பாலோர் மனத்தையும் மண்ணில் புரட்டிக் கொண்டு விடுகிறார்கள்" என்று கோட்டாற்றுச் சமணப் பண்டிதர் அடிக்கடி மகாராணியிடம் சொல்லுவார்.

அன்றைக்குக் காலையில் இந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலை மகாராணி வானவன்மாதேவிக்கு ஏற்பட்டது. சுசீந்திரம், காந்தளூர் முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு முன்சிறை வழியாக அரண்மனைக்குத் திரும்பி வந்து சில நாட்கள் ஆகியிருந்தன.

திரும்பி வந்த அன்றைக்கு மறுநாளே திருவட்டாற்றுத் தாயின் மகனுக்காகச் செலுத்த வேண்டிய அபராதப் பொன் அனுப்பப்பட்டது. உதவியைத் தாம் செய்வது யாருக்கும் தெரியாமல் செய்தார் வானவன்மாதேவி. அபராதப் பொன் அனுப்பப்பட்ட தினத்தன்று மாலையே சுசீந்திரம் அர்ச்சகர் அரண்மனைக்கு வந்து மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து அங்கு நடந்ததையெல்லாம் விவரித்துவிட்டுச் சென்றார். 'ஒரு தாயின் உள்ளமும் அவள் மகனின் கைகளும் வெந்து போகாமல் காப்பாற்றி விட்டோம்' என்ற நினைவு இன்பமாகத்தான் இருந்தது மகாராணிக்கு. அருள் மயமான வானவன்மாதேவியின் மனம் அப்படிப் பிறருக்கு உதவி செய்தும், பிறருக்காகத் தன்னை இழந்தும் வாழும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்தது. வெயில் பட்டவுடன் வாடும் பூப்போலப் பிறர் துன்பத்தை உணர்ந்து இரங்கும் மனம் அது.

சுசீந்திரத்திலிருந்து திரும்பிய பின்பு சில நாட்கள் மகாராணி அந்தப்புரப் பகுதியிலிருந்து வெளியேறவே இல்லை. கோட்டாற்றுப் பண்டிதர் அன்றொரு நாள் ஓலையில் எழுதிக் கொடுத்துச் சென்றிருந்த அந்தச் செய்யுளையும் காந்தளூர் மணியம்பலத்தில் மறைந்து நின்று கேட்ட அறிவுரைகளையும் நினைத்துக் கொண்டே பொழுதைப் போக்கினார். அரண்மனையிலேயே மற்றொரு பகுதியில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரரைக் கூட அவர் சந்திக்க விரும்பவில்லை. எண்ணங்கள் பழுத்து முதிரும் ஒரு குறிப்பிட்ட நிலையில் யாரையும் சந்திக்காமல், யாரோடும் பேசாமல் தனக்குள்ளேயே, தன்னைத்தானே உள்முகமாக ஆழ்ந்து பார்க்கும் உயர்ந்த நிலை ஏற்படும். அந்த நிலையில் தான் தென்பாண்டி நாட்டின் மாதேவியார் இப்போது இருந்தார்.

ஆனால் அவரது பேரின்ப மோன நிலையைக் கலைக்க அந்த அதிர்ச்சி தரும் ஓலையோடு அன்று காலையில் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் வந்து சேர்ந்தார். தென்பாண்டி நாட்டின் மற்றக் கூற்றத் தலைவர்களெல்லோரும் சேர்ந்து தங்களுடைய ஏகப் பிரதிநிதியாக அந்த ஓலையோடு அவரை மகாராணியாரிடம் அனுப்பியிருந்தனர்.

வைகறையில் நீராடி வழிபாடு முடித்துக் கொண்டு, புனிதமான நினைவுகளில் திளைத்துப் போய் வீற்றிருந்த மகாராணிக்கு முன் புவன மோகினி தோன்றி அந்தச் செய்தியைக் கூறினாள்.

"தேவீ! மிக முக்கியமான காரியமாகப் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் அவசரமாகத் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்."

"கூற்றத் தலைவர் கூட்டம் முடிந்த அன்றே அவர்களெல்லாரும் திரும்பிப் போய்விட்டார்களே! இப்போது கழற்கால் மாறனார் மட்டும் மறுபடியும் எதற்காக வந்திருக்கிறார்? தனியாக வந்திருக்கிறாரா? அவரோடு வேறு யாராவது வந்திருக்கிறார்களா?" என்று திகைப்புத் தொனிக்கும் குரலில் மகாராணி வண்ணமகளைப் பார்த்துக் கேட்டார்.

"தேவீ! அவர் மட்டும் தான் தனியாக வந்திருக்கிறார்" என்று புவன மோகினி பதில் கூறியதும், "அப்படியானால் நீ ஒன்று செய், புவன மோகினி! அவரை அழைத்துக் கொண்டு போய் நேரே மகாமண்டலேசுவரர் தங்கியிருக்கும் மாளிகையில் விட்டு விடு. ஏதாவது அரசாங்க சம்பந்தமாகத்தான் பேசுவதற்கு வந்திருப்பார். நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிம்மதியாகத் தெய்விகச் சிந்தனையில் ஈடுபட்டிருக்கிற மனத்தை அரசியல் சேறு படவிடுவதற்கு இப்போது நான் சித்தமாயில்லை. திருவாசகத்தையும், திருக்குறளையும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தெற்கேயும், வடக்கேயும் யார் படையெடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு புதிய கவலைகளைச் சுமக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் சரி; வந்திருப்பவரை மகாமண்டலேசுவரரிடமே கூட்டிக் கொண்டு போய் விட்டுவிடு. அவர் பாடு, வந்திருப்பவர் பாடு. பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்" என்று ஒட்டுதல் இல்லாமல் கூறினார் மகாராணி வானவன்மாதேவி.

புவன மோகினி திரும்பிச் சென்றாள். 'எந்த எந்தப் பற்றுகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோமோ அந்தந்தப் பற்றுகளால் வரும் துன்பங்கள் நமக்கு இல்லை' என்று முன்பொரு நாள் காந்தளூர் மணியம்பலத்தில் கேட்ட அந்தச் சொற்களை நினைத்துப் பெருமூச்சு விட்டார் மகாராணி. நெஞ்சின் சுமையைக் குறைக்க அந்தப் பெருமூச்சு வெளியேறின போது நிம்மதி உள்ளே குடிபுகுந்தாற் போல் இருந்தது. சிறிது நேரந்தான் அந்த நிலை. இரண்டாவதாக மற்றொரு பெருமூச்சை வெளியேற்றும் செய்தியைத் தாங்கிக் கொண்டு புவன மோகினி திரும்பி வந்தாள். "தேவீ! அவர் மகாமண்டலேசுவரரைச் சந்திக்க விரும்பவில்லையாம். தங்களைத்தான் சந்தித்துப் பேசியாக வேண்டுமாம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக உங்களையே காண வேண்டுமென்கிறார்."

அவளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவதென்று சிறிது தயங்கிய பின், "சரி! வேறென்ன செய்ய முடியும்? நீ போய் அவரை இங்கேயே கூட்டிக் கொண்டு வா" என்று சொல்லி அனுப்பினார் மகாராணி. 'மகாமண்டலேசுவரரைப் பார்க்க விரும்பவில்லை' என்று வெறுத்துச் சொல்கிற அளவு கழற்கால் மாறனாருக்கு அவர் மேல் அப்படி என்ன மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க முடியும்' என்ற ஐயம் மகாராணிக்கு ஏற்பட்டது. திடீர் திடீரென்று தம்மைச் சுற்றியிருப்பவர்கள் இருப்பவைகள் எல்லாம் புதிர்களாக மாறிக் கொண்டு வருவதாகப் பட்டது அவருக்கு. 'உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் கண்ணின் நோக்கத்தில் எப்படிப் படுகிறார்களோ அப்படிக் கருத்தின் நோக்கத்தில் படுவதில்லையா? அல்லது மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் அளந்து பார்த்து விளங்கிக் கொள்ளும் ஆற்றல் என்னுடைய மென்மையான மனத்துக்கு இல்லாமல் போய்விட்டதா' என்று திகைத்தார் மகாராணி வானவன்மாதேவியார்.

அந்தச் சமயத்தில் புவன மோகினி, கழற்கால் மாறனாரை கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினாள். தென்பாண்டி நாட்டின் ஐம்பெருங் கூற்றத் தலைவர்களுக்குள் செல்வாக்கு மிகுந்தவரும், பொன்மனைக் கூற்றத்துத் தலைவரும், வயது மூத்தவரும், தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவரும் ஆகிய கழற்கால் மாறனார் முன்வந்து மகாராணியை வணங்கினார். அவர் கையில் உறையிட்டு இலைச்சினை பொறித்த ஓலைச் சுருள் இருந்தது. அவருடைய வயதுக்கும், அநுபவத்துக்கும் மரியாதை கொடுத்து எழுந்து நின்று வணங்கினார் மகாராணி.

"வரவேண்டும், பெரியவரே! அதிகாலையில் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள். அரசாங்க காரியமாக இருக்குமானால் மகாமண்டலேசுவரரைப் பார்த்தாலே போதுமானதென்று தான் உங்களை அவரிடம் அழைத்துப் போகச் சொன்னேன். நீங்கள் என்னையே பார்க்க வேண்டுமென்று கூறினீர்களாம்."

"ஆமாம்! நான் பார்க்க வந்தது தென்பாண்டி நாட்டு மகாராணியாரைத்தான்" என்று கழற்கால் மாறனார் கூறிய பதிலில் கடுமையும், சிறிது அழுத்தமும் ஒலித்தாற் போல் தோன்றியது மகாராணிக்கு.

"அது சரிதான்! ஆனால் ஓர் அரசாங்கக் காரியமாக என்னைச் சந்தித்து நீங்கள் அடைய முடிந்த பயனைக் காட்டிலும் மகாமண்டலேசுவரரைச் சந்தித்து அதிகமான பயனை அடையலாமே என்பதற்காகத்தான் சொன்னேன்."

"இல்லை மகாராணி! நாங்கள் இனி என்றுமே மகாமண்டலேசுவரர் என்ற முறையில் அந்தப் பதவியில் வைத்து அவரைச் சந்திக்க விரும்பவில்லை. காரணம், அவர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய செயல்களையும் நாங்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை."

இதைக் கேட்டதும் அமைதியான மகாராணியின் விழிகள் நீண்டு உயர்ந்து அகன்று விரிந்தன. தம் செவிகளையே அவரால் நம்ப முடியவில்லை. மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார். "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?"

"மகாமண்டலேசுவரர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறேன்."

"'எங்களுக்கு' என்றால்...? உங்களுக்கும், இன்னும் வேறு யாருக்கும்? நீங்கள் ஒருவராய்த்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்?"

"மகாராணியவர்கள் என்னுடைய துணிச்சலுக்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் ஒருவனாக இங்கு வந்திருந்தாலும் மற்றக் கூற்றத் தலைவர்களோடு கூடிக் கலந்து கொண்டு, பேசி அவர்கள் கையொப்பமிட்ட 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'யையும் கொண்டு தான் வந்திருக்கிறேன். இதோ எங்கள் ஓலை."

அவர் தாம் கையோடு கொண்டு வந்திருந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையை மகாராணியிடம் நீட்டினார். அந்த விநாடி வரையில் சாந்தமும், அமைதியும், கருணையும் கலந்து ஒரு பெரு மலர்ச்சி நிலவிக் கொண்டிருந்த மகாராணியின் முகத்தில் மண்ணுலகத்து உணர்ச்சிகளின் சிறுமைகள் படிந்தன. பயமும், கலவரமும், பதற்றமும் நெற்றியில் சுருக்கங்கள் இட அந்த ஓலையை அவரிடமிருந்து வாங்கினார் மகாராணி. அப்படி வாங்கும் போது அவருடைய கைகள் மெல்ல நடுங்கின. மேலே இட்டிருந்த இலச்சினைகளை நீக்கி அரக்கை உதிர்த்து, அதைப் பிரிக்கும் போது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின. நீர்ப்பரப்பில் ஏதேனும் ஒரு பொருள் விழுந்தால் முதலில் சிறிதாக உண்டாகும் அலைவட்டம் வளர்ந்து விரிந்து பெரிதாகிக் கரைவரையில் நீள்வதைப் போல் அந்தப் பயங்கர ஓலைச் சுருள் விரிய மகாராணியின் பயமும் அதற்கேற்ப விரிந்தது.

'ஐயோ! ஒரு மனிதர் மிக உயர்ந்த நிலையில் சாதாரண அறிவால் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தால் அவருக்குத்தான் எத்தனை கெடுதல்கள்! எவ்வளவு பேருடைய பகை! முதுகைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டி விட்டுக் கால்களை வாரிவிடுகிற உலகமாகவல்லவா இருக்கிறது! மடையனைப் பார்த்து அறிவாளியாக வேண்டுமென்று உபதேசிக்கிறார்கள். அறிவாளியைப் பார்த்து அவன் ஏன் அவ்வளவு அறிவாளியாயிருக்கிறானென்று பொறாமைப்படுகிறார்கள். வளர்ச்சிக்குப் பாடுபட்டுக் கொண்டே தளர்ச்சி அடைகிறார்களே! பழங்காலப் புலவர் ஒருவர் திரி சொற்களால் பாடி வைத்த கடினமான அங்கதப் பாடல் பொருள் ஒளித்து வைக்கப்பட்ட பாடல் போல், சாமானியமானவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதவராக இருக்கிறார் மகாமண்டலேசுவரர். அதனால்தான் இத்தனை குழப்பமும் ஏற்படுகிறது. இது என்ன கேவலமான உலகம்! உட்படாததாக, உயர்ந்ததாக மேலே உள்ள பொருள்களையெல்லாம் கீழே புழுதியிலும் அழுக்கிலும் புரளும்படி தரையில் இறக்கிப் பார்த்து விட ஆசைப்படுகிறார்களே! என்ன செய்வது? மனித இயல்பே அப்படி அமைந்து விட்டது. உயரமான மரக்கிளைகளிலும், செடி, கொடிகளின் கொம்புகளிலும் இருக்கும் பழங்களையும் பூக்களையும் தரையில் உதிரச் செய்து பயன்படுத்துகிற வழக்கம் போலச் சில மேலான மனிதர்களையும் கீழே இறக்கித் தள்ளிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் போலும். பெருமையும் வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் கீழே இருப்பவர்களையும் மேலே போகச் செய்ய வேண்டும். மேலே இருப்பவர்களையும் கீழே இழுத்துத் தள்ளி என்ன பயன்? ஒரு நொண்டி, 'ஊரிலுள்ள கால் பெற்ற மனிதரெல்லாம் நொண்டியாக மாறவேண்டும்' என்று ஆசைப்படுவது போலன்றோ இருக்கிறது?'

'நாம் சாவதற்குள் ஒரு நாளாவது அல்லது ஒரு சில நாழிகைக்காவது 'தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர்' என்ற பெயரோடு பதவி வகித்துவிட்டுச் சாக வேண்டுமென்று இந்தக் கழற்கால் மாறனாருக்கு ஆசை. அந்த ஆசையின் விளைவுதான் வயது முதிர்ந்த காலத்தில் இப்படி மனம் முதிராத செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. பெரிய மனிதராக இருந்து கொண்டு சிறிய காரியத்தைச் செய்கிறாரே! பாவம் இவர் என்ன செய்வார்? பதவி ஆசை, பெயர் ஆசை, அதிகார ஆசை! மற்றக் கூற்றத் தலைவர்களின் தூண்டுதல் எல்லாம் சேர்ந்து இந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு இவரை இங்கே அனுப்பியிருக்கின்றன.'

கையில் வாங்கிய ஓலையைச் சிறிது சிறிதாக விரித்துக் கொண்டே இவ்வளவு நினைவுகளையும் மனத்தில் ஓடவிட்டுச் சிந்தித்தார் மகாராணி. ஓலையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னால் தலையை நிமிர்த்தி எதிரே நின்று கொண்டிருந்த கழற்கால் மாறனாரை வானவன்மாதேவி கூர்ந்து நோக்கினார். நோக்கிக் கொண்டே கேட்டார்: "இந்த ஓலையை நான் படித்துத்தானாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நன்றாகச் சிந்தித்து விட்டு என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். அவசரமில்லை." மகாராணியாரின் இந்தக் கேள்வியைச் செவியுற்றுக் கழற்கால் மாறனார் சிறிது மிரண்டார். பின்பு சமாளித்துக் கொண்டு கூறினார்:

"மகாராணியவர்கள் உடனடியாக இந்த ஓலையைப் படித்து மகாமண்டலேசுவரருடைய பொறுப்புகளைக் கைமாற்றி அமைக்க வேண்டுமென்பது என் விருப்பம் மட்டும் இல்லை; எல்லாக் கூற்றத் தலைவர்களும் ஒரு மனத்தோடு அப்படி விரும்பியே என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இதில் இனிமேலும் சிந்திக்க எதுவுமில்லை."

அவருடைய பதிலைக் கேட்டதும் மகாராணி அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கிவிட்டார்.

"திருவளர, நலம் வளர, குமரி கன்னியா பகவதியார் அருள் பரவி நிற்கும் தென்பாண்டி நாட்டின் மகாராணியார் திருமுன்பு பொன்மனையிற் கூடிய கூற்றத் தலைவர்கள் தம்முள் ஒரு நினைவாய், ஒருமனதாய், ஒன்றுபட்டு நிலை நிறுவி நிறைவேற்றி அனுப்பும் ஒப்புரவு மொழி மாறா ஓலை.

"காலஞ்சென்ற மகாமன்னர் நாள் தொட்டு இது காறும் நம்முள் தலை நின்று அறிவும், சூழ்ச்சியும் வல்லாராய் மருங்கூர்க் கூற்றத்து முதன்மை பூண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து மகாமண்டலேசுவரராயிருக்கும் நம்பியானவர் அண்மையிற் சிறிது காலமாய் மற்றக் கூற்றத் தலைவர்களைக் கலக்காமலும், பொருட்படுத்தாமலும், தாமே நினைத்து தாமே செயற்பட்டு வருதலை நினைத்து வருந்துகிறோம்.

"கன்னியாகுமரித் தேவ கோட்டத்தில் இந்த நாட்டு அரசியைப் பகைவர் வேலெறிந்து கொல்ல முயலும் அளவுக்கு கவனக் குறைவாக இருக்க நேர்ந்தது, காணாமற் போன இளவரசரைத் தேடி அழைத்து வர முயற்சி செய்யாமலிருந்தது. பாண்டி நாட்டின் மதிப்புக்குரிய அரசுரிமைப் பொருள்களைத் தம்முடைய மாளிகையிலிருந்து கொள்ளை போகும்படி விட்டது, கரவந்தபுரத்தார் கண்காணிப்பில் இருக்கும் கொற்கை முத்துச் சலாபத்தில் பகைவர் புகுந்து குழப்பம் விளைவிக்கும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் இனி மகாமண்டலேசுவரர் மேல் நாங்கள் நம்பிக்கை கொள்வதற்கில்லை என்பதை எல்லோரும் கூடிக் கையொப்பம் நாட்டிய இந்த ஒப்புரவு மொழி மாறா ஓலை மூலம் மாதேவியாகிய மகாராணியாருக்கு அறிவித்துக் கொள்கிறோம். இவ்வோலை கொண்டு சமூகத்துக்கு வருபவர், முதியவரும் பொன்மனைக் கூற்றத் தலைவருமாகிய கழற்கால் மாறனார் ஆவார். இவ்வண்ணம் இவ்வோலை கூடியெழுதுவித்த நாளும், எழுதுவித்தவர் பெயர்களும் வருமாறு" என்று முடிந்திருந்த அந்த ஓலையின் கீழே இடையாற்று மங்கலம் நம்பி நீங்கலாக மற்ற நால்வருடைய பெயர்களும், எழுதிய நாளும் காணப்பட்டன. மகாராணி வேதனையோடு கூடிய சிரிப்புடன், "நல்லது; உங்கள் ஓலையை நான் படித்துவிட்டேன், பெரியவரே" என்று கழற்கால் மாறனாரைப் பார்த்துச் சொன்னார்.

"படித்ததும் மகாராணியாருக்கு என்ன தோன்றுகிறதென்று எளியேன் அறியலாமோ?" என்று அவர் கேட்டார்.

"ஆகா! தாராளமாக அறியலாம். இதோ சொல்கிறேன்! கேளுங்கள். எந்த ஒரே ஒரு மனிதருடைய சிந்தனைக் கூர்மையினால் இந்த நாடும், நானும், நம்பிக்கைகளும் காப்பாற்றப் படுகின்றோமோ அந்த ஒரு மனிதரை அந்தப் பதவியிலிருந்து இறக்க எனக்கு விருப்பமில்லை."

"அப்படியானால் தென்பாண்டி நாட்டு மகாராணியார் எங்களையெல்லாம் இழந்துவிடத்தான் நேரும்."

"நான் உங்களை இழந்துவிடுவது தான் நல்லதென்றோ அல்லது நீங்கள் என்னை இழந்துவிடுவதுதான் உங்களுக்கு நல்லதென்றோ தோன்றினால் அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்!" என்றார் மகாராணி.

"எங்கள் ஒத்துழையாமையின் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்குமென்பதை இப்போதே கூறிக் கொள்ள விரும்புகிறேன்."

"அதற்கு நான் என்ன செய்யட்டும்! நீங்களே உங்களைப் பயங்கரமாக்கிக் கொள்கிறீர்கள்?"

"சரி! நான் வருகிறேன்." கிழட்டுப் புலி பின்நோக்கிப் பாய்வது போல் விறுட்டென்று கோபமாகத் திரும்பினார் கழற்கால் மாறனார்.

"எங்கே அவ்வளவு அவசரம்? கொஞ்சம் இருங்கள், போகலாம்" என்று கூறி சிரித்துக் கொண்டே அப்போதுதான் உள்ளே நுழைந்த மகாமண்டலேசுவரரைப் பார்த்த போது பூதம் கண்ட சிறு பிள்ளை போல் நடுங்கினார் கழற்கால் மாறனார்.

29. கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி

கொடும்பாளூர்க் கோட்டைக்குள் அரண்மனைக் கூத்தரங்கத்தில் ஆடிக் கொண்டிருந்த தேவராட்டி பயங்கரமாக அலறிக் கொண்டே தன் கையிலிருந்த திரிசூலத்தை மான்கண் சாளரத்தை நோக்கிச் சுழற்றி எறிந்த போது அந்தச் சாளரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தவனைப் பிடிப்பதற்காக ஐந்து பேருடைய பத்துக் கால்கள் விரைந்து சென்றன.

ஓடத் தொடங்கிய அந்தப் பத்துக் கால்கள் யாருடையவை என்று இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இடையாற்று மங்கலத்து மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்து தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்கள் காணாமற் போய்விட்டன என்ற செய்தியைக் கொடும்பாளூர் மன்னன் வாயிலிருந்து கேட்டு வியந்து நின்று கொண்டிருந்த சோழன் உள்பட மற்ற நான்கு பேரும் ஓடினார்கள்.

அந்த மான்கண் பலகணியின் மறுபுறம் கொடும்பாளூர் அரண்மனையின் சித்திரக் கூடம் அமைந்திருந்தது. கோனாட்டு அரச பரம்பரையின் வீரச் செயல்களை விளக்கும் அற்புதமான ஓவியங்கள் அந்தக் கூடத்துச் சுவர்களை நிறைத்துக் கொண்டிருந்தன. சித்திரக் கூடத்தின் பின்புறம் கோட்டை மதிற்சுவரை ஒட்டினாற் போல் பெரிய தோட்டம் இருந்தது. மதிற்சுவரின் உட்புறத்தைப் போலவே வெளிப்புறத்திலும் அகழிக் கரையை ஒட்டித் தென்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.

ஒளிந்திருந்தவனைப் பிடிப்பதற்காகச் சித்திரக் கூடத்துக்குள் ஓடி வந்தவர்கள், நாற்புறமும் மூலைக்கொருவராகச் சிதறிப் பாய்ந்தனர். ஆனால் அங்கே ஒளிந்து கொண்டிருந்த ஆள் அவர்கள் வருவதற்குள் சித்திரக்கூடத்து எல்லையைக் கடந்து தோட்டத்துக்குள் புகுந்துவிட்டான் என்பது அவர்களுக்குத் தெரியாது. சித்திரக் கூடத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு ஓரளவு ஏமாற்றத்தோடு அவர்கள் தோட்டத்துக்குள் நுழைந்த போது, "அதோ! அங்கே பாருங்கள், மதில் சுவர் மேல்" என்று ஒரு துள்ளுத் துள்ளிக் கொண்டே சுட்டிக் காட்டிக் கூச்சலிட்டான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன். அந்தக் கணமே மற்ற நான்கு பேருடைய பார்வையும் நான்கு வில்களிலிருந்து ஒரே குறியை நோக்கிப் பாயும் அம்புகள் போல் அவன் சுட்டிக் காட்டிய திசையிற் போய்ப் பதிந்தன. அங்கே ஒரு மனிதன் மதில் மேலிருந்து சுவரை ஒட்டி வளர்ந்திருந்த அகழிக்கரைத் தென்னை மரம் ஒன்றின் வழியாக வெளிப்புறம் கீழே இறங்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய முதுகுப்புறம் தான் சித்திரக் கூடத்துக் கொல்லையில் நின்று கொண்டு பார்த்த அவர்களுக்குத் தெரிந்தது. முகம் தெரியவில்லை. உட்பக்கத்திலும் மதில் சுவர் அருகே அதே மாதிரி மற்றொரு தென்னை மரம் இருந்ததனால் அந்த ஆள் அதன் வழியாகத்தான் மதில் மேல் ஏறியிருக்க வேண்டுமென்று அவர்கள் அனுமானித்துக் கொண்டார்கள். மிக வேகமாகத் தென்னை மரங்களில் ஏறிப் பழக்கப்பட்டவனாக இருந்தாலொழிய அவ்வளவு விரைவில் மேலே ஏறி மதில் சுவரை அடைந்திருப்பது சாத்தியமில்லை.

"திருட்டு நாய்! மதில் மேலிருந்தே செத்துக் கீழே விழட்டும்!" என்று கடுங்கோபத்தோடு இரைந்து கத்திக் கொண்டே பாம்பு படமெடுத்து நெளிவது போல் இருந்த ஒரு சிறு குத்துவாளை இடையிலிருந்து உருவிக் குறிவைத்து வீசுவதற்கு ஓங்கினான் கொடும்பாளூர் மன்னன். சோழன் அருகிற் பாய்ந்து வந்து வாளை வீசுவதற்கு ஓங்கிய அவனது கையைப் பிடித்துக் கொண்டான்.

"பொறுங்கள்! நீங்கள் விவரம் தெரிந்த மனிதராக இருந்தால் இப்படிச் செய்யமாட்டீர்கள். திருட்டுத்தனமாக இங்கே அவன் எப்படி நுழைந்தான் என்பதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவன் வந்த வழியே அவன் போக்கில் அவனை வெளியேற விட்டுக் கடைசியில் பிடித்துக் கொண்டு உண்மை அறிய வேண்டும். கையில் அகப்பட்ட ஒரு காடையை (ஒரு வகைப் பறவை) வெளியே விட்டால் காட்டிலுள்ள காடைகளையெல்லாம் அதைக் கொண்டே பிடித்து விடலாம். ஓசைப்படாமல் திரும்பி வாருங்கள். அவன் சுதந்திரமாகக் கவலையின்றித் தென்னைமரத்தின் வழியாக மறுபடியும் அகழிக்கரையில் போய் இறங்கட்டும். நாம் அங்கே போய் காத்திருந்து அவனைப் பிடித்துக் கொள்ளலாம்" என்றான் சோழ மன்னன். எல்லோரும் உடனே அங்கிருந்து அகழிக்கரைக்கு விரைந்தனர்.

"கொடும்பாளூராரே! எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு வேகமாகத் தென்னை மரம் ஏறி இறங்கத் தெரிந்தவனாக இருந்தால் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். ஒரு வேளை தென்பாண்டி நாட்டு நாஞ்சிற் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கலாம்" என்று அகழிக்கரைக்குப் போகும் போது சோழன் கொடும்பாளூர் மன்னனிடம் சந்தேகம் தொனிக்கும் குரலில் மெதுவாகச் சொன்னான்.

"சந்தேகமே இல்லை! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்று கொடும்பாளூரானிடமிருந்து பதில் வந்தது.

அகழிக்கரைத் தென்னை மரத்திலிருந்து அவன் கீழே இறங்கவும் அவர்கள் ஐந்து பேரும் ஓடிப் போய்ச் சுற்றி வளைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவன் தப்பி ஓட முடியவில்லை. ஆ! இப்போது அவனுடைய முகத்தையும் முழு உருவத்தையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. இந்தக் கோணல் வாயையும், நீள மூக்கையும், கோமாளித்தனமான தோற்றத்தையும் பார்த்ததுமே நமக்கு இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறாற் போன்ற நினைவு வருகிறதல்லவா? ஆம்! இந்தக் கோமாளி ஏற்கனவே நமக்கு அறிமுகமானவன் தான்.

வடதிசையில் ஒற்றறிவதற்கும், வேறு சில இரகசியக் காரியங்களுக்காகவும் மெய்க்காவற் படை வீரர்கள் ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து மகாமண்டலேசுவரர் வடக்கே அனுப்பினாரல்லவா? அப்போது பொய் கூறுவதில் சிறந்தவனைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர் வைத்த சோதனையில் வெற்றிபெற்ற கோமாளிதான் இப்போது சிக்கிக் கொண்டு விழிக்கிறான்.

தன்னைச் சுற்றி நான்கு புறமும் ஓடமுடியாமல் எதிரிகளால் வளைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அன்று தாங்கள் புறப்பட்ட போது வழியனுப்பிய மகாமண்டலேசுவரரின் சில சொற்களை அவனுடைய அகச்செவிகள் மானசீகமாகக் கேட்டன.

"அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக் கூடாது. உயிர், உடல், பொருள் எதையும் இழக்கத் தயாராயிருக்க வேண்டும்." இந்தக் கணீரென்ற குரலோடு அந்தக் கம்பீரமான முகம் தோன்றி எதிரிகளிடையே மாட்டிக் கொண்ட அவன் மனத்துக்கு உறுதியின் அவசியத்தை நினைப்பூட்டி வற்புறுத்தின.

"அடே! அற்பப் பதரே! இந்தக் கொடும்பாளூர்க் கோட்டைக்குள் புகுந்து ஒற்றறிய முயன்றவர்கள் எவரையும் இதுவரையில் நான் உயிரோடு திரும்ப விட்டதில்லை. நீ யார், எங்கிருந்து வந்தாய் என்பதையெல்லாம் மரியாதையாகச் சொல்லிவிடு. என்னுடைய கோட்டைக் கழுமரத்துக்கு நீண்ட நாட்களாக இரத்தப் பசி ஏற்பட்டிருக்கிறது. அதைத் தணிக்கத்தான் நீ வந்து சேர்ந்திருக்கிறாய்" என்று தன் இரும்புப் பிடியில் அகப்பட்டவனின் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இரைந்தான் கொடும்பாளூர் மன்னன். ஆனால் அகப்பட்டவனோ முற்றிலும் ஊமையாக மாறிவிட்டான். அன்றிரவு நெடுநேரம் வரையில் அவனை ஓரிடத்தில் கட்டிப் போட்டு என்னென்னவோ சித்திரவதைகளெல்லாம் செய்தார்கள். அவன் பேசவே இல்லை. கடைசியாகக் கொடும்பாளூரான் ஒரு பயங்கரமான கேள்வி கேட்டான்: "அடே! ஊமைத் தடியா நாளைக் காலையில் இரத்தப் பசியெடுத்துக் காய்ந்து உலர்ந்து கிடக்கும் இந்தக் கோட்டையின் கழுமரத்தில் நீ உன் முடிவைக் காண வேண்டுமென்றுதான் விரும்புகிறாயா?"

"செய்யுங்கள் அப்படியே!" - எல்லோரும் ஆச்சரியப்படுமாறு அதுவரை பேசாமல் இருந்த அவன் இந்த இரண்டே வார்த்தைகளை மட்டும் முகத்தில் உறுதி ஒளிர உரக்கப் பேசிவிட்டு மீண்டும் வாய் மூடிக் கொண்டு ஊமையானான். அவனிடமிருந்து உண்மையைக் கறக்கும் முயற்சியில் அவர்கள் ஐந்து பேருமே தோற்றுப் போனார்கள். கொடும்பாளூரான் பயமுறுத்தி மிரட்டினான். சோழன் நயமாகப் பேசி அரட்டினான். கண்டன் அமுதனும், பரதூருடையானும், அரசூருடையானும் அடியடியென்று கைத்தினவு தீர அடித்தார்கள். பார்ப்பதற்குக் கோமாளி போல் இருந்த அந்த ஒற்றனோ தன் கொள்கையில் தளராமல் திடமாக இருந்தான்.

கோட்டைக்குள் ஏறிக் குதிக்க வசதியாக உள்ளும் புறமும் வளர்ந்திருந்த அந்த இரண்டு தென்னை மரங்களையும் இரவோடிரவாக வெட்டிச் சாய்க்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவு போட்டான் கொடும்பாளூர் மன்னன். மறுநாள் வைகறையில் கீழ்வானில் செம்மை படர்வதற்கு முன்னால் கொடும்பாளூர்க் கோட்டைக் கழுமரத்தில் செம்மை படர்ந்து விட்டது. கோட்டாற்றுப் படைத் தளத்தில் வீரனாக உருவாகி அரண்மனையில் மெய்க் காவலனாகப் பணியாற்றிய தென்பாண்டி நாட்டு வீரன் ஒருவனின் குருதி அந்தக் கழுமரத்தை நனைத்துச் செந்நிறம் பூசிவிட்டது.

30. இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு

இடையாற்று மங்கலத்துக்குப் போய் அங்கே நிலவறையில் மகாமண்டலேசுவரர் ஒளித்து வைத்திருக்கும் ஆயுதங்களைக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கிளப்பிக் கொண்டு வந்து விட வேண்டுமென்று தளபதி தனக்குக் கட்டளை இட்ட போது ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் அதற்கு உடனே ஒப்புக் கொள்ளவில்லை.

"மகாசேனாதிபதி அவர்கள் கூறுவது போல் இது அவ்வளவு இலேசான காரியமாகப் படவில்லையே எனக்கு? இடையாற்று மங்கலத்துக்குப் போய் நிலவறைக்குள் புகுந்து ஆயுதங்களை வெளியேற்றிப் பறளியாற்றைக் கடந்து இங்கே கொண்டு வர விடுகிற அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக மகாமண்டலேசுவரர் வைத்திருக்க மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது!" என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் அவன்.

"குழைக்காதரே! நீங்கள் சொல்வது சரிதான். இது ஒன்று மட்டுமில்லை; மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் அது நமக்கு இலேசான காரியமாக இருக்காது, கடினமாகத்தான் இருக்கும். ஆனால் கடினமாக இருக்குமென்பதற்காக நாம் சும்மா இருந்து விடவும் கூடாது. முடிந்ததைச் செய்துதானாக வேண்டும்."

"என்னால் முடிந்தவரை முயன்று பார்க்கிறேன். உதவிக்கு இங்கிருந்தும் சிலரை அழைத்துக் கொண்டு போகிறேன்" என்று குழைக்காதன் இணங்கியதும் தளபதி அவனுக்குச் சில விவரங்களை விளக்கினான். நிலவறைக்குள் எப்படிப் போவது, எவ்வாறு ஆயுதங்களை வெளியேற்றுவது என்பதையெல்லாம் விவரித்துச் சொன்னான். அன்றிரவு அங்கே படைத்தளத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் வேறு சிலரையும் அழைத்துக் கொண்டு இடையாற்று மங்கலத்துக்குப் புறப்பட்டு விட்டான் குழைக்காதன்.

பறளியாற்றைக் கடப்பதற்கும் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கும் சொந்தமாக ஒரு தனிப் படகை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென்றும் இடையாற்றுமங்கலத்தில் அவர்கள் பிரவேசிக்கும் நேரம் இரவு நேரமாயிருக்க வேண்டுமென்றும் தளபதி வற்புறுத்திச் சொல்லியனுப்பியிருந்தான். ஆபத்துதவிகள் தலைவனும், அவனோடு சென்றவர்களும் அந்தி மயங்குவதற்குச் சில நாழிகைக்கு முன்பே பறளியாற்றங்கரையை அடைந்து விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே மெதுவாகப் பயணம் செய்து வந்ததனால் தான் அவ்வளவு நாழிகையாயிற்று. இல்லையானால் இன்னும் விரைவான நேரத்திலேயே அங்கு வந்திருக்க முடியும். இடையாற்று மங்கலத்துக்குப் பக்கத்தில் பறளியாற்றின் இக்கரையில் கிழக்கு மேற்காகச் சிறிது தூரத்துக்கு ஒரே ஆலமரக்காடு. ஆலமரங்களென்றால் சாதாரண ஆலமரங்கள் இல்லை. ஒவ்வொரு மரமும் படர்ந்து, பரந்து, வளர்ந்து, பற்பல விழுதுகளை இறக்கிக் கொண்டு மண்ணின் மேல் தனக்குள் ஊன்றிக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் வயதான மரம். இத்தகைய மூத்த முதிர்ந்த ஆலமரங்களைத் 'தொன் மூதாலயம்' என்று பழைய கவிகள் புகழ்ந்திருந்தார்கள். அந்தப் பகுதியின் நதிக்கரை மண்ணில் வெயிலின் கதிர்கள் படக்கூடாதென்று இயற்கை தானாகவே அக்கறை கொண்டு வேய்ந்து வைத்த பசுமைப் பந்தல் போல் மண்ணுக்கு விண்ணையும், விண்ணுக்கு மண்ணையும் தெரியவிடாமல் அடர்ந்து செழுமையாய்ச் செம்மையாய்த் தன்மையாய் வளர்ந்திருந்தன அந்த ஆலமரங்கள்.

அந்த இடத்தில் இடையாற்று மங்கலத்தை ஒட்டிப் பறளியாற்றங் கரையில் சிறிது தொலைவு வரை பரவி நிற்கும் இயற்கையின் எழில்களை, பசுமையின் செல்வங்களை, வளமையின் வகைகளை உண்மையாக அனுபவிக்க வேண்டுமானால் ஓவியனின் கண்களும், கவியின் உள்ளமும், ஞானியின் உள்ளுணர்வும், குழந்தையின் பேதைமையும் வேண்டும். அறிவின் எல்லைக் கோடாகிய மகாமண்டலேசுவரரின் இருப்பிடத்தைச் சுற்றிலும் இயற்கை செலுத்துகிற மரியாதைகள் தான் இப்படி மலர்ச் செடிகளாகவும், மரக் கூட்டங்களாகவும், பசுமைப் பெருமை பரப்பாய்த் தோன்றிப் பிரகிருதி என்னும் காணாக் கவிஞன் எழுதாத எழுத்தால் இயற்றி வைத்த பயிலாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கின்றனவோ? இவ்வளவு அழகிலும் அந்தச் சூழ்நிலையில் பறளியாற்று நீர் ஒலி, பறவைகளின் குரல்கள், மரங்கள் ஆடும் ஓசை தவிர செயற்கையான வேறு மண்ணுலக ஓசைகளே இல்லாத ஒரு தனிமையின் அடக்கம் இடையாற்று மங்கலம் நம்பியின் மன ஆழத்தில் விளங்கிக் கொள்ள முடியாத தன்மை போல் வியாபித்திருந்தது.

'மங்கலம்' என்றால் நிறைந்தது, தூயது, அழகியது என்று பொருள். இடையாற்று மங்கலம் அந்தப் பொருட் பொருத்தப் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டு காட்சியளித்தது.

ஆபத்துதவிகள் தலைவனும் அவனுடன் வந்தவர்களும் பறளியாற்றங்கரை ஆலமரக் கூட்டத்தின் இடையே நுழைந்த போது, மாலை நேரமாக இருந்தாலும் பெரிதும் ஒளி குன்றி இருள் படர ஆரம்பித்திருந்தது. வழக்கமாகக் கரையிலிருந்து இடையாற்று மங்கலத்துக்குப் படகு புறப்பட்டுப் போகும் நேரடியான துறை வழியே செல்வதற்கு அவர்கள் தயங்கினார்கள். ஆற்றில் சிறிது தொலைவு தள்ளிக் குறுக்கு வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய் இடையாற்று மங்கலம் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் இறங்குவதற்கு ஏற்றாற் போல் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தனர் அவர்கள். அதற்கு முன்னேற்பாடாகத் தங்களுக்கு வேண்டிய படகோட்டி ஒருவனை படகோடு புறப்பட வேண்டிய இடத்தில் மறைந்து காத்திருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். இருட்டிச் சில நாழிகைகள் கழிந்த பின் புறப்படலாமென்று சொல்லி, நதிக்கரை நாணற்புதரிலும் தாழை மரங்களின் அடர்த்தியிலும் படகும் படகோட்டியும் மறைந்திருக்கச் செய்துவிட்டு ஆலமரக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

தன்னோடு கூட வந்தவர்களைக் கீழே நிறுத்தி விட்டு ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு தாவி ஏறினான் ஆபத்துதவிகள் தலைவன். மிக உயரமான உச்சிக் கிளையில் ஏறித் தலைக்கு மேல் குடை போல் மூட்டம் போட்டிருந்த இலைகளின் அடர்த்தியை விலக்கிக் கொண்டு தலையை நீட்டிப் பார்த்தான். பறளியாற்றுக்கு அப்பால் இடையாற்று மங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும், அதன் சுற்றுப்புறங்களும் நன்றாகத் தெரிந்தன. 'தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் இரவில் தீவுக்குள் போய் நிலவறையில் புகுந்து ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு எப்படி வெளியேறித் தப்புவது?' என்று மனத்தில் முறையாகத் திட்டத்தை வகுத்துக் கொண்டே, ஆலமரத்துக் கிளையில் நின்று மகாமண்டலேசுவரர் மாளிகையையும், அதன் சுற்றுப்புறங்களையும் கண்காணித்தான் அவன். நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. எவனோ கண்ணுக்குத் தெரியாத மாயாவி ஒருவன் தன் முரட்டுக் கைகளால் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் போர்வையை எட்டுத் திசையிலும் எடுத்து விரித்துப் போர்த்துவது போல் உலகத்தை இருள் தழுவிக் கொண்டு வந்தது. இருள் மாயாவியின் பயங்கரமான சூனியத்தனத்துக்கு வாழ்த்தொலி வழங்குவது போல் ஆந்தைகளின் குரல்கள் பலவாகப் பரந்து மூலைக்கு மூலை ஒலித்தன. இருட்டில் நடமாடும் பிசாசுகளைப் போல் மகர நெடுங்குழைக்காதனும் அவனோடு வந்திருந்தவர்களும் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் சில நாழிகைகள் கழிந்ததும், தாழை மரங்களின் மறைவில் நாணற் புதருக்குள் மறைக்கப்பட்டிருந்த படகை அதிகம் ஒலியுண்டாக்கி விடாமல் மெல்ல வெளிக் கிளப்பிக் கொண்டு வந்தான் அதற்கு உரியவன். மகர நெடுங்குழைக்காதனும், அவனோடு இருந்தவர்களும் படகில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். படகு பறளியாற்றில் நகர்ந்து முன்னேறியது. பழக்கமில்லாத அந்தப் புதிய படகோட்டி படகை மெதுவாகச் செலுத்திக் கொண்டு போய் இடையாற்று மங்கலத்துக் கரையில் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் புதர் அடர்ந்த பகுதியில் நிறுத்தினான். படகு நின்ற இடத்துக்கு நேரே விருந்தினர் மாளிகையின் பின்புறத்து வாயில் கதவு அடைத்திருந்தது. கதவுக்குக் கீழே வரிசையாகப் படிகள். படிகளில் நாலைந்தை நீரில் முழுகச் செய்து பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது.

"நீங்கள் எல்லோரும் இப்படியே இந்த இடத்தில் இருங்கள். நான் முன்பக்கமாக விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து வந்து இந்தப் பின்புறத்துக் கதவைத் திறந்து விடுகிறேன்" என்று மற்றவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு முன்புறம் சென்றான் மகர நெடுங்குழைக்காதன். மரங்களிலிருந்து உதிர்ந்திருந்த இலைச் சருகுகளில் கால் பதித்தால் எழுகிற சலசலப்பு ஒலி கூடக் கேட்கவிடாமல், பம்மிப் பம்மி நடந்து போய் விருந்தினர் மாளிகையில் புகுந்து விட்டான் அவன். காவல் வீரர்களெல்லாம் அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு தள்ளியிருந்த மகாமண்டலேசுவரர் மாளிகையைச் சுற்றியிருந்தார்கள். அரசுரிமைப் பொருள்கள் காணாமல் போன சமயத்தில் மட்டும் தொடர்ந்து சில நாட்களுக்குத் தீவைச் சுற்றிலும் எல்லா இடங்களிலும் காவல் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பின்பு நாளாக ஆக அந்தக் காவல் ஏற்பாடு சுருங்கித் தீவின் பிரதான மாளிகை அளவில் நின்று விட்டிருந்தது. அதனாலும், செறிந்து கனத்த இருட்டும், மரங்களின் அடர்த்தியும் தனக்குச் சாதமாக இருந்ததனாலும் ஆபத்துதவிகள் தலைவன் இடையாற்று மங்கலத்தில் அந்த இரவில் அதிகம் துன்பப்படவில்லை. ஒருவன் வைத்து விட்டுப் போன பொருளை அவனே திரும்பி அடையாளமாக எடுத்துக் கொண்டு போகிற மாதிரிக் காரியம் சுலபமாக நடந்தது. சொல்லி விட்டிருந்தபடியே எல்லாவற்றையும் செய்தான். விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் படகை நிறுத்தி அதற்கு நேரே இருந்த கதவையும் திறந்து வைத்துக் கொண்டது, அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. அவன் முன்னேற்பாடாக கையோடு கொண்டு வந்திருந்த தீப்பந்தத்தைக் கூட நிலவறைக்குள் கொண்டு போய்த் தீக்கடையும் கற்களைத் தட்டிக் கொளுத்திக் கொண்டான். விறகுக் கட்டைகளை மணிக்கயிற்றால் கட்டுவது போல் இரண்டொரு நாழிகைக்குள் அங்கிருந்த ஆயுதங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டதற்கு ஆகிய காலத்தில் நான்கில் ஒரு பங்கு கூட அவற்றைப் படகில் கொண்டு வந்து வைப்பதற்கு ஆகவில்லை. பின்புற வாயிலை ஒட்டி நின்ற படகில் கொண்டு வந்து அடக்கிவிட்டார்கள்.

படகில் பாரம் அதிகமாகிவிட்டது. தன்னைத் தவிர இன்னும் ஓர் ஆள்தான் ஏறிக் கொள்ள முடியும் என்று படகோட்டி உறுதியாகச் சொல்லிவிட்டான். அக்கரைக்குப் போய் அடர்த்தியான ஆலமரக் காட்டில் ஆயுதங்களை எங்காவது ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டால் பின்பொரு நாளிரவில் வசதியான வாகனத்தோடு வந்து அவைகளை கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கொண்டு போய்விடலாமென்பது குழைக்காதனின் திட்டம். தன் திட்டப்படி செய்து வெற்றிகரமாக நடந்து தளபதியிடம் செல்வாக்குப் பெறலாம் என்று அவன் நம்பினான். மனத்தையும், சிந்தனைகளையும், அறிவையும் நம்பாமல் உடல் வன்மையாலேயே வெற்றிகளைக் கணக்கிட்டுக் கொண்டு போகும் மனம் அவனுக்கு.

படகோட்டி ஓர் ஆள்தான் ஏறி வர முடியும் என்று சொன்னவுடன் "ஆற்றில் வேகம் அதிகமில்லை; நீங்களெல்லாம் மெதுவாக நீந்தி அக்கரைக்கு வந்துவிடுங்கள். நான் படகில் போய் விடுகிறேன்" என்று தன்னோடு வந்தவர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டுப் படகில் ஏறிக் கொண்டான் குழைக்காதன். 'கவிழ்ந்து விடுமோ' என்று பயப்படுகிற அளவு பாரம் இருந்ததனால் நத்தை ஊர்வதை விட மெதுவாகப் படகு செலுத்தப்பட்டது. அதன் காரணமாக ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தவர்கள் படகு நடு ஆற்றைக் கடப்பதற்கு முன்பே அக்கரையை அடைந்து விட்டார்கள்.

"மகாமண்டலேசுவரரையும், அவருடைய சாமர்த்திய சாலியான அந்தரங்க ஒற்றனையுமே கண்களில் விரலைவிட்டு ஆட்டி ஏமாற்றியிருக்கிறேன் நான். கேவலம், இந்த இடையாற்றுமங்கலத்தில் வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நாலைந்து யவனக் 'காவல் நாய்'களா என்னைப் பிடித்துவிடப் போகின்றன? நீ சும்மா பயப்படாமல் படகை ஓட்டிக் கொண்டு போ, அப்பா!" என்று படகோட்டிக்குத் தைரியமூட்டிக் கொண்டிருந்தான் குழைக்காதன். அவனுடைய அந்த இருமாப்பான பேச்சின் ஒலி அடங்குவதற்கு முன் இருபுறமும் நெருங்கி வந்த ஆபத்துகள் அவன் ஆணவத்தை அடக்கி முற்றுப்புள்ளி வைத்தன. சற்று முன் அவனால் 'நாய்கள்' என்று வருணிக்கப்பட்ட இடையாற்று மங்கலம் மாளிகையைச் சேர்ந்த யவனர் காவல் வீரர்கள் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலுமாக இரண்டு படகுகளில் வேகமாக வளைத்துக் கொண்டு அவனது ஆயுதங்கள் நிறைந்த படகை அணுகிக் கொண்டிருந்தனர். ஆபத்துதவிகள் தலைவன் படகை ஓட்டிக் கொண்டு கரைக்குப் போய்விட முடியாமல் பாரம் தடுத்தது. அகப்பட்டுக் கொண்டாலோ அதைவிடக் கேவலம் வேறு இல்லை. அவனுக்கு மட்டும் கேவலமில்லை. அவனால் தளபதியின் பெயருக்கும் கேவலம். அவன் திகைத்தான். கள்ளிப்பழம் போல் சிவந்து கொடுமை குடியிருக்கும் அவன் கண்கள் கொடூரமாக உருண்டு புரண்டு விழித்தன. ஏற்கெனவே கடுமையான முகத்தில் கொடுமை வெறி கூத்தாடியது. அடுத்த கணம் முன்புறம் பார்த்துப் படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டியின் முதுகுக்கு மேல் பிடரியைத் தன் இரும்புக் கரங்களால் பிடித்துத் தலைகுப்புறத் தண்ணீரில் தள்ளினான். படகோட்டியின் அலறல் தண்ணீர் ஓசையில் சிறிதாக மங்கிவிட்டது. படகின் ஒரு மூலையைக் காலால் ஓங்கி மிதித்து அது கவிழத் தொடங்கியதும் தண்ணீரில் பாய்ந்து மூழ்கினான் குழைக்காதன்.

தண்ணீர்ப் பரப்பில் வேகமாக நீந்தினால் தெரிந்துவிடும் என்பதற்காக மூச்சடக்கிக் கரையைக் குறிவைத்து நீரின் ஆழத்திலேயே முக்குளித்து நீந்தினான் அவன். கடத்திக் கொண்டு வந்த ஆயுதங்களோடு படகைக் கவிழ்த்தது பற்றி அவனுக்குக் கவலை இல்லை. யவனக் காவல் வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு மானத்தையும், பெருமையையும் கவிழ்த்து மூழ்கடித்துக் கொண்டு கேவலப்பட்டு நிற்க நேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் இப்போது அவனுடைய ஒரே கவலை. எத்தனையோ ஆபத்துகளைக் காத்து உதவ வேண்டியவன் அவன். இப்போது அவனுடைய ஆபத்துக்கு உதவ ஆளின்றி ஆபத்தில் மூழ்கி வேகமாக நீந்திக் கொண்டிருந்தான். கனமான பருத்த சரீரம் உடைய அவனுக்குத் தண்ணீரில் மூழ்கி மூச்சடக்குவது கடினமாயிருந்தது. இடையிடையே தலையை வெளியே நீட்டி மூச்சுவிட்டுக் கொண்டு மறுபடியும் மூழ்கி நீந்தினான். ஒருவழியாக ஆய்ந்தோய்ந்து போய்த் தள்ளாடிக் கொண்டே கரையை அடைந்து விட்டான். அங்கே முன்பே நீந்தி வந்திருந்தவர்கள் நாணற் புதரில் பதுங்கிக் காத்திருந்தார்கள். குழைக்காதனுக்கு நீந்தி வந்த களைப்புத் தீர ஓய்வு கொள்ளக்கூட நேரமில்லை. தன் ஆட்களையும் கூட்டிக் கொண்டு ஆலமரக் காட்டில் புகுந்து ஓட்டம் எடுத்தான்.

மறுநாள் உலகைப் போர்த்த மெல்லிருட்டுப் போர்வை விலகும் அருங்காலை நேரத்தில் மகர நெடுங்குழைக்காதனும் அவன் ஆட்களும் கோட்டாற்றுப் படைத்தளத்தில் தளபதிக்கு முன்னால் நின்றார்கள். குழைக்காதன் கூறியவற்றையெல்லாம் கேட்டு முடித்த வல்லாளதேவன் பெருமூச்சோடு பேசினான்: "குழைக்காதரே! நீங்கள் படகை மட்டும் பறளியாற்றில் தலைகுப்புறக் கவிழ்க்கவில்லை. நீங்களே கவிழ்ந்து விட்டீர்கள். நம்முடைய திட்டத்தையும் கவிழ்த்து விட்டீர்கள். ஆனாலும் பரவாயில்லை. இதை நான் மன்னித்துதானாக வேண்டும்."

"மகாசேனாபதிக்கு என் நிலை புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். அந்த ஆபத்தான சூழ்நிலையில் படகைக் கவிழ்த்து விட்டு நான் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை."

"படகோட்டி என்ன ஆனான்?"

"அவன் அநேகமாக நீந்தித் தப்பியிருப்பான். அவன் அகப்பட்டுக் கொண்டாலும், தப்பினாலும் அவன் மூலம் நம்முடைய எந்த இரகசியமும் வெளிவராது. அவன் எனக்கு மிகவும் வேண்டியவன். 'உன் வாயிலிருந்து இரகசியம் வெளியேறினால் கழுத்திலிருந்து தலையை வெளியேற்றி விடுவேன்' என்று முன்பே பயமுறுத்தி வைத்திருக்கிறேன்."

"எப்படியானால் என்ன? ஆயுதங்களை அங்கிருந்து வெளியேற்றியாயிற்று. இனிமேல் கவலை இல்லை. நீங்கள் வழக்கம் போல் அரண்மனையில் போய் இருங்கள். மகாராணியாரைப் பாதுகாத்து வரவேண்டும். மகாமண்டலேசுவரருடைய செயல்களிலும் உங்கள் கண்காணிப்பு மறைமுகமாக இருக்கட்டும்" என்று சொல்லி, மகரநெடுங்குழைக்காதனை அரண்மனைக்கே மீண்டும் அனுப்பி வைத்தான் தளபதி.

31. ஏனாதி மோதிரம்

மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கையில்லையென்று தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களின் சார்பில் தாம் கொண்டு வந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையை மகாராணியார் ஒப்புக் கொள்ளவில்லை என்றதுமே பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனாருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் தான் அவர், 'இனிமேல் மகாராணியாருக்கும் நாட்டுக்கும் எங்கள் ஒத்துழைப்புக் கிடைக்காது' என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

ஆனால் அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மகாமண்டலேசுவரரே திடீரென்று அங்கே வந்து விட்டதால் அப்படியே அயர்ந்து போய் நின்று விட்டார் கழற்கால் மாறனார். மகுடியோசையில் மயங்கிக் கடிக்கும் நினைவை மறந்து படத்தை ஆட்டிக் கொண்டிருக்கும் நாகப் பாம்பைப் போல் எந்த மகாமண்டலேசுவரரை அடியோடு கீழே குழிபறித்துத் தள்ளிவிட நினைத்தாரோ, அவரையே எதிரே பார்த்து விட்டதும் ஒன்றும் தோன்றாமல் அடங்கி நின்றார் அவர்.

எதிரே நிற்பவர்களை அப்படி ஆக்கிவிடுவதற்கு மகாமண்டலேசுவரர் என்ற மனிதரின் நெஞ்சிலும், நினைவுகளிலும், கண்களிலும், பார்வையிலும், அவ்வளவேன், ஒவ்வொரு அசைவிலும் தன்னைப் பிறர் அசைக்க முடியாததான பிறரை அசைக்க முடிந்த ஒரு வலிமை இருந்தது. பகைவர்களை அடக்கிவிடவும், நண்பர்களை ஆக்கிக் கொள்ளவும் முடிந்த இந்தப் பெரும் பேராற்றலைத் தவம் செய்து அடைந்த சித்தியைப் போல் வைத்திருந்தார் அவர்.

"ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்."

என்று துறவியின் ஆற்றலாகச் சொல்லப்பட்ட அதைத் துறவியாக வாழாமலே இடையாற்று மங்கலம் நம்பி பெற்றிருந்தார்.

"பொன்மனைக் கூற்றத்துத் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளாராகிய கழற்கால் மாறனார் அவர்கள் இன்று அரண்மனைக்கு வரப்போகிறாரென்று எனக்குத் தெரியவே தெரியாதே" என்று அவருடைய எல்லாப் பட்டப் பெயர்களையும் சேர்த்து நீட்டிச் சொல்லி அவரிடமே கேட்டார் மகாமண்டலேசுவரர். அந்தக் கேள்வியில் இயல்பான பேச்சின் தொனி கொஞ்சமாகவும், குத்தல் அதிகமாகவும் இருப்பது போல் பட்டது. கழற்கால் மாறனார் அதைக் கேட்டு மிரண்டு போய் நின்றார். அந்த மிரட்சி மகாராணியாருக்கு வேடிக்கையாக இருந்தது. எதிரே கம்பீரமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும் மகாமண்டலேசுவரரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் தவறான காரியத்தை மறைவாகச் செய்து கொண்டிருக்கும் போது வயதானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு குழந்தை மருண்டு விழிப்பதைப் போல் விழித்துக் கொண்டு நின்றார் கழற்கால் மாறனார்.

"ஓ! இதென்ன கையில்?... என் மேல் நம்பிக்கையேயில்லை என்று மகாராணியிடம் கொடுப்பதற்காகக் கூடி எழுதிக் கொண்டு வந்த ஒப்புதல் மொழி மாறா ஓலையா?" என்று கேட்டுக் கொண்டே உரிமையோடு மிகவும் சுவாதீனமாக வானவன்மாதேவியின் கையிலிருந்து அந்த ஓலையை வாங்கினார் மகாமண்டலேசுவரர். 'அதை அவர் வாங்கிப் படிக்க நேர்ந்தால் அவருடைய மனம் புண்படும்' என்பதனால் அவரிடம் கொடுக்கக் கூடாதென்று நினைத்திருந்த மகாராணி மகாமண்டலேசுவரர் கேட்ட போது மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார்.

தன்மேல் நம்பிக்கையில்லை என்று கூற்றத்தலைவர்கள் கூடி நிறைவேற்றியிருந்த அந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையைப் படித்து முடிந்ததும் புன்னகை செய்து கொண்டே தலைநிமிர்ந்தார் மகாமண்டலேசுவரர். ஒரே விதமான வார்த்தைக்குப் பல பொருள்கள் கிடைக்கும் சிலேடைப் பாட்டைப் போல் அவருடைய அந்த ஒரு புன்னகைக்குப் பல பொருள்கள் உண்டு. புன்னகை தவழும் முகத்துடனேயே பேசினார் அவர்.

"ஐயா, கழற்கால் மாறனாரே! இப்படி, இங்கே என் முகத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த இடத்துக்குள் நான் நுழையுமுன் என் கால்களில் அணிந்திருந்த பாதக் குறடுகளை (மரச் செருப்புகள்) எப்படிக் கழற்றி எறிந்துவிட்டுச் சுலபமாக காலை வீசிக் கொண்டு நடந்து வந்திருக்கிறேனோ, அவ்வளவு இலேசாகப் பதவியையும் என்னால் கழற்றி எறிந்து விட முடியும்."

"எறிந்து விட முடியுமானால் நீங்கள் இதற்குள் கழற்றி எறிந்திருக்க வேண்டுமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?" துணிவை வரவழைத்துக் கொண்டு எதிர்த்துக் கேட்டு விட்டார் கழற்கால் மாறனார்.

"நல்ல கேள்வி கேட்டீர்கள், கழற்கால் மாறனாரே! உங்களைப் போல், 'தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார்' பட்டம் பெற்ற ஒருவரால் தான் இந்தக் கேள்வி என்னிடம் கேட்க முடியும்! அதற்காகப் பாராட்டுகிறேன். தங்களுடைய கால்களின் அளவுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ! மற்றவர்களுடைய பாதக் குறடுகளைத் திருடிக் கொண்டு போக ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதே மாதிரி, மற்றவர்களுடைய பதவிகளைத் தங்கள் தகுதிக்குப் பொருந்தாவிட்டாலும் அடையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் நான் என்ன செய்வது? என்னுடைய காலுக்கு அளவான பாதக் குறடுகளை நான் தானே அணிந்து கொள்ள முடியும்! நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதற்காக என் பாதக்குறடுகளை உங்களிடம் நான் எப்படிக் கொடுக்கலாம்?"

மகாமண்டலேசுவரர், கழற்கால் மாறனாரைச் செருப்புத் திருடுகிறவனோடு ஒப்பிட்டு மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசிய போது வானவன் மாதேவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்துப் பழக்கமில்லாத அவர் அப்போது அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

"தானாகக் கனியாவிட்டால் தடி கொண்டு அடித்துக் கனிய வைப்போம். எங்களுடைய ஒப்புரவு மொழி மாறா ஓலை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்." கழற்கால் மாறனார் ஆத்திரத்தோடு இரைந்தார்.

"உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சரியான எதிரிகள் பக்கத்தில் இல்லாத காரணத்தால் சிறிது காலமாக என் சிந்தனைக் கூர்மை மழுங்கிப் போயிருக்கிறது. நீங்களெல்லாம் கிளம்பினால் அதைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்."

"அறிவின் திமிர் உங்களை இப்படி என்னை அலட்சியமாக எண்ணிக் கொண்டு பேசச் செய்கிறது!"

"ஆசையின் திமிர் உங்களை இப்படி ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு ஓடி வரச் செய்கிறது!" கன்னத்தில் அறைவது போல் உடனே பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.

"உங்கள் ஆட்சியின் மேல் எனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்காக மகாமன்னர் பராந்தக பாண்டியர் காலத்தில் எனக்கு அளிக்கப்பட்ட 'தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளான்' என்ற பட்டத்தையும் அதற்கு அறிகுறியாக என் விரலில் அணிவிக்கப்பட்ட ஏனாதி மோதிரத்தையும் இப்போதே கழற்றி எறியப் போகிறேன் நான்." கொதிப்போடு கத்தினார் கழற்கால் மாறனார்.

"தாராளமாகக் கழற்றி எறியுங்கள். அவைகளை நீங்கள் கழற்றி எறிந்து விட்டால், உங்களைச் சார்ந்திருந்த காரணத்தால் அந்தப் பட்டத்துக்கும் மோதிரத்துக்கும் ஏற்பட்டிருந்த களங்கமாவது நீங்கும். ஒரு காலத்தில் தென்பாண்டி நாட்டிலேயே சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஏனாதி மோதிரம் என்ற மரியாதைப் பரிசு இப்போது உங்களைப் போல் ஒரு பதவி ஆசை பிடித்த கிழட்டு மனிதரின் கைவிரலில் கிடப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்" என்று மகாமண்டலேசுவரர் சொல்லி முடிப்பதற்குள் அவருடைய காலடியில் 'ணங்'கென்று சொல்லி அந்த அந்த மோதிரம் கழற்றி வீசி எறியப்பட்டு வந்து விழுந்தது. கழற்றி வீசி எறிந்தவர் கழற்கால் மாறனார்.

மகாமண்டலேசுவரர் கீழே குனிந்து அந்த மோதிரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது கழற்கால் மாறனார் கோபத்தோடு வேகமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போய்க் கொண்டிருந்தார்.

"பாவம்! முதிர்ந்த வயதில் முதிராத மனத்தோடு பதவி ஆசைக்கு ஆளாகி என்னென்னவோ பேசுகிறார்" என மகாமண்டலேசுவரரை நோக்கிக் கூறினார் மகாராணி.

"ஆமாம்! வீடு போ போ என்கிறது. காடு வா வா என்கிறது. இந்த வயதில் இப்படிக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கெட்டலைய வேண்டாம் இவர்! மகாராணி! இந்த ஓலையும் இந்த மோதிரமும் என்னிடமே இருக்கட்டும். நான் உங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்ட போது, "நீங்கள் இந்தச் சிறுபான்மையாளர்களின் செயலை மனத்தில் வைத்துக் கொண்டு புண்படக்கூடாது" என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி.

"அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம், மகாராணி!" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு நடந்தார் மகாமண்டலேசுவரர். அவர் போகும் போது வெளி வாசலில் ஒரு புறமாக நின்று கொண்டிருந்த புவன மோகினியை அருகில் கூப்பிட்டு, "தொடர்ந்து இது மாதிரியே இங்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நீதான் அவ்வப்போது எனக்கு வந்து சொல்ல வேண்டும்! கவனமாக நடந்து கொள்" என்று சொல்லிவிட்டுப் போனார். பயபக்தியோடு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டாள் அவள்.

நாளுக்கு நாள் மகாமண்டலேசுவரரின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வந்த சமயம் அது. கொற்கையிலும், கரவந்தபுரத்துப் பகுதிகளிலும் கலவரமும், குழப்பமும் ஓய்ந்து அமைதி நிலவியது. முத்துக்குளிப்பு ஒழுங்காக நடைபெற்றது. அவர் செய்த இரகசிய ஏற்பாட்டின்படி குழல்வாய்மொழியும் சேந்தனும் கடல் கடந்து போய் இளவரசன் இராசசிம்மனையும் அரசுரிமைப் பொருள்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். அவர் மெய்க்காவற் படையிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய ஐம்பது ஒற்றர்களும் வடக்கே கொடும்பாளூர்ப் பகுதியில் சென்று பயனுள்ள வேலைகளை மறைந்திருந்து செய்து கொண்டிருந்தார்கள். வடதிசைப் படையெடுப்புப் பயமுறுத்தல் தற்காலிகமாக நின்று போயிருந்தது. அந்த நிலையில்தான் கழற்கால் மாறனாரின் ஒப்புறவு மொழி மாறா ஓலை வந்து அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு மறுநாள், கொடும்பாளூரில் உளவறிய முயன்ற போது அன்று ஒருநாள் அழகாகப் பொய் சொல்லி அவரை மகிழ்வித்த வீரன் அகப்பட்டுக் கொண்டு கழுவேறி இறந்த செய்தி அவருக்கு வந்தது. சீவல்லப மாறனை விட்டுக் கோட்டாற்றிலிருந்த அந்த வீரனின் மனைவியையும், மகனையும் வரவழைத்து ஆறுதல் கூறினார் அவர். கழற்கால் மாறனார் திருப்பிக் கொடுத்த ஏனாதி மோதிரத்தை இறந்த வீரனுக்கு செலுத்தும் மரியாதைப் பரிசாக அவன் மகனுக்கு அளித்தார் மகாமண்டலேசுவரர். அன்று மாலை இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்து இரவோடு இரவாக யாரோ ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று அம்பலவன் வேளான் வந்து புதிதாக ஒரு செய்தியைச் சொன்ன போது அவர் பலவாறு சந்தேகப்பட்டார்.

32. பழைய நினைவுகள்

"சக்கசேனாபதி! மனத்தையும் கண்களையும் திறந்து வைத்துக் கொண்டு எழிலுணர்ச்சியோடு பார்க்கிறவனுக்கு உலகம் எவ்வளவு அழகாயிருக்கிறது பார்த்தீர்களா?"

கையில் வலம்புரிச் சங்கும், உடலில் கடற் காய்ச்சலுமாகக் கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த இராசசிம்மன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சக்கசேனாபதியை நோக்கி இப்படிக் கேட்டான்.

"பார்த்தேன் இளவரசே! நன்றாகப் பார்த்தேன். இந்த அழகின் தூண்டுதலால் நீங்கள் சற்று முன் கவிதையே பாடி விட்டீர்களே? உங்கள் கவிதையின் இனிய ஒலியிலிருந்து என் செவிகள் இன்னும் விடுபடவில்லை. அதைக் கேட்ட வியப்பிலேயே இன்னும் ஆழ்ந்து போய் நின்று கொண்டிருக்கிறேன் நான்."

"என்னவோ மனத்தில் தோன்றியது; நாவில் வார்த்தைகள் கூடித் திரண்டு வந்து எங்களை முறைப்படுத்தி வெளியிடு என்று துடித்தன. பாடினேன்."

"இப்படி ஏதாவது தத்துவம் பேசிக் குமார பாண்டியர் என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. உங்களை கவிஞராக மாற்றிய அழகின் வனப்பு நீங்கள் கப்பலில் நின்று பார்க்கும் இந்தக் கடலிலும் வானத்திலும் மட்டும் இல்லை."

"வேறு எங்கு இருக்கிறதாம்?"

"எனக்குத் தெரியும். நேற்று உறக்கத்தில் எத்தனை முறை அந்தப் பெயரைப் பிதற்றினீர்கள்! உங்களைக் கவியாக மாற்றிப் பாடவைக்கும் அழகு செம்பவழத் தீவில் இருக்கிறது. அந்த அழகுக்குப் பெயர் மதிவதனி."

சக்கசேனாபதி மேற்கண்டவாறு உண்மையைக் கூறியதும், 'இந்த வயதான மனிதர் நம் மனத்தில் உள்ளதைச் சொல்லி விட்டாரே!' என்று வெட்கமடைந்தான் இராசசிம்மன்.

"ஏன் வெட்கப்படுகிறீர்கள் இளவரசே! நான் உள்ளதைத்தானே கூறினேன்? சில மலைகள், சில நதிகளுக்குத் தொடர்ந்து தண்ணீரை அளித்துப் பல நிலங்களைக் காப்பது போல் இயற்கை சில பேருக்கு அளவிட முடியாத அழகைக் கொடுத்துப் பல கவிகளை உண்டாக்கி விடுகிறது. பெண்களின் வனப்பும், மலைமகளின் வளமும், மலர்களின் மணமும், கடலின் பரப்பும் இல்லாமலிருந்தால் இந்த உலகத்தில் கவிதையே உண்டாகியிருக்காது. செம்பவழத் தீவில் சந்தித்த அந்தப் பெண்ணின் அழகு உங்களைக் கவியாக்கியிருக்கிறது."

"உங்கள் புகழ்ச்சியை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நீங்கள் சொல்வது போல நான் கவியில்லை."

"நீங்கள் இல்லையென்று சொன்னால் எனக்கென்ன? என்னுடைய கருத்தின்படி அழகை உணரும் நெஞ்சின் மலர்ச்சி இருந்தாலே அவன் முக்கால் கவியாகிவிடுகிறான். நீங்களோ அந்த மலர்ச்சியை வார்த்தைகளாக்கி வெளிப்படுத்தி விட்டீர்கள்" என்று சக்கசேனாபதி தம்முடைய அபிப்பிராயத்தை வற்புறுத்தினார்.

அவருக்குப் பதில் சொல்லாமல் கையில் வைத்திருந்த வலம்புரிச் சங்கை மேலும் கீழுமாகத் திருப்பிப் புரட்டி வலது கை விரல்களை மெல்ல வருடிக் கொண்டிருந்தான் இராசசிம்மன். ஒன்றிரண்டு முறை விளையாட்டுப் பிள்ளை ஆர்வத்தோடு செய்வது போல் அந்தச் சங்கை ஊதி ஒலி முழக்கினான்.

"போதும், நன்றாக இருட்டி விட்டது. இவ்வளவு நேரம் காய்ச்சல் உடம்போடு கடற்காற்றுப் படும்படி இங்கு நின்றாகிவிட்டது. உங்கள் பிடிவாதம் பொறுக்க முடியாமல் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தேன். இனிமேலும் இப்படி நிற்பது ஆகாது. வாருங்கள், கீழே போய் விடலாம்" என்று இங்கிதமாகச் சொல்லி, அவனைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் அவர்.

சிறு சிறு தீபங்கள் எரிந்து கொண்டிருந்தாலும் கப்பலில் கீழ்த்தளத்தில் இருளே மிகுதியாக இருந்தது. சக்கசேனாபதியின் வற்புறுத்தலுக்காகச் சிறிது 'உணவு உட்கொண்டோம்' என்று பேர் செய்துவிட்டுப் படுத்துக் கொண்டான் இராசசிம்மன்.

பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் முன் நினைவுகள் அவனை மொய்த்துக் கொண்டன. இருந்தாற் போலிருந்து, 'நான் யார்? எங்கே பிறந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? ஏன் இப்படி நிலையில்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்? இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? ஏன் போய்க் கொண்டிருக்கிறேன்?' என்பது போல் தன் நிலை மறந்த, தன் நினைப்பற்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன. சோர்ந்த மனநிலையும் தன் மேல் தனக்கே வெறுப்பும் உண்டாகிற சில சமயங்களில் சில மனிதர்களுக்கு இத்தகைய கேள்விகள் நினைவுக் குமிழிகளாய் மனத்தில் முகிழ்த்து மனத்திலேயே அழியும். வளர்ச்சியும், தளர்ச்சியும், இன்பமும், துன்பமும் நிறைந்த தன் வாழ்க்கையின் நாட்களை விலகி நின்று எண்ணிப் பார்க்கும் போது சோகத்தின் வேதனை கலந்த ஒருவகை மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அந்த இருளில் காய்ச்சலோடு படுக்கையில் கிடந்தவாறே மனத்தின் நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்தினான் அவன். வெற்றிப் பெருமிதத்தோடு வாழ்ந்த பழைய நாட்களை இப்போதைய தோல்வி நிலையில் எண்ணிப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

தூரில் தொடங்கிச் சாப்பிட்டுக் கொண்டு போகிற கரும்பு முடிவில் உப்புக்கரிக்கிற மாதிரிச் செல்வத்தோடும், செல்வாக்கோடும் அரச குடும்பத்து வாழ்க்கை வாழ்ந்து விட்டு இன்றைய நிலையில் அந்தப் பழைய சிறப்பை நினைக்கிற போது வெறுப்பளிக்கிறது. பழகப்பழக, அநுபவிக்க அநுபவிக்க வெறுப்பைக் கொடுக்கிறது என்ற காரணத்தாலோ என்னவோ தமிழ் மொழியில் செல்வத்துக்கு 'வெறுக்கை' என்று ஒரு பெயர் ஏற்பட்டு விட்டது. அநுபவிக்கிறவன் ஞானமுள்ளவனாக இருந்தால் செல்வத்தின் சுகங்களை வெறுத்துவிட்டு அதைவிடப் பெரியதைத் தேடிக் கொண்டு ஓடும் நிலை ஒரு நாள் வந்துதான் தீரும்.

இராசசிம்மன் நினைத்துப் பார்த்தான். பேரரசராகிய சடையவர்ம பராந்தக பாண்டியருக்கும், பேரரசியாகிய வானவன்மாதேவிக்கும் புதல்வனாகப் பிறந்து மதுரை மாநகரத்து அரண்மனையில் தவழ்ந்த நாட்களை நினைத்தான். தந்தையின் தோள் வலிமையும், வாள் வலிமையும், ஆள் வலிமையும் அன்றையப் பாண்டிய நாட்டைப் பெரும் பரப்புள்ளதாகச் செய்திருந்தன. அப்போது மதுரை கோநகரமாக இருந்தது. அவன் சிறுவனாக இருந்த போது, அரசகுல வீர வழக்கத்தின்படி, சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்னும் ஐந்து ஆயுதங்களையும் போல் சிறிதாகப் பொன்னிற் செய்து நாணில் தொடுத்து அவனுடைய கழுத்தில் தம் கையாலேயே கட்டினார் அவனுடைய தந்தை. வீரத்துக்குச் சின்னமாகச் சிறுவர்களுக்கு அரச குலத்தில் கட்டப்படும் 'ஐம்படைத்தாலி' அது. ஒரு நாள் தந்தை பராந்தகரும், தாய் வானவன்மாதேவியும் அருகில் இருக்கும் போது அவன் எதற்காகவோ முரண்டு பிடித்துக் கொண்டே கழுத்தில் கிடந்த ஐம்படைத் தாலியை அறுத்துச் சிதற விட்டான். அப்போது பராந்தகர் தம் மனைவியை நோக்கி, "மாதேவி, இந்தப் பயல் எதிர்காலத்தில் நாட்டையும் ஆட்சியையும் கூட இப்படித்தான் அறுத்துச் சிதறவிட்டுத் திரிந்து கொண்டிருக்கப் போகிறான். எனக்கென்னவோ இவன் என்னைப் போல் இவ்வளவு சீராக ஆளமாட்டான் என்று தான் தோன்றுகிறது!" என்றார். மாதேவிக்கு அதைக் கேட்டதும் தாங்கமுடியாமல் கோபம் வந்துவிட்டது.

"நீங்களாகவே வேண்டுமென்று இவனைக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள். உங்களை விடப் பெரிய வீரனாக எட்டுத் திசையும் வென்று ஆளப்போகிறான் இவன்" என்று கணவனுக்கு மறுமொழி கிடைத்தது வானவன்மாதேவியிடமிருந்து.

இன்னொரு சம்பவம். இராசசிம்மனுக்கு ஆறாண்டுகள் நிறைந்து முடிந்து ஏழாவது ஆண்டின் 'நாண்மங்கலம்' (பிறந்த நாள்) வந்தது. பிறந்த நாளைக் கொண்டாடும் நாண்மங்கல விழாவன்று காலையில் அவனைப் புனித நீராட்டிப் புத்தாடை அணிவித்துப் பொன்முடி சூட்டி வழிவழி வந்த பொற்சிம்மாசனத்தில் உட்கார்த்தி, ஒரு கையிலே திருக்குறள் ஏட்டுச் சுவடியையும், மற்றொரு கையிலே வீரவாளையும் கொடுத்தார்கள். சிம்மாசனத்தின் இருபுறமும் பராந்தக பாண்டியரும் வானவன்மாதேவியும் நின்று நாண்மங்கலத் திருக்கோலத்தில் தங்கள் செல்வனை அழகு பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தனர். அப்போது இராசசிம்மன் கை தவறி வாளைக் கீழே போட்டுவிட்டான். இசைவு பிசகாமல் கீழே விழுந்த அந்த வாளின் நுனியின் ஒரு சிறு பகுதி உடைந்து விட்டது.

"அபசகுனம் போல் நல்ல நாளும் அதுவுமாக இப்படிச் சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும் வாளைக் கீழே போட்டு உடைத்து விட்டானே" என்று கவலையோடு கூறினார் பராந்தக பாண்டியர். "போதும்! உங்களுக்கு எது நடந்தாலும் அபசகுனமாகத்தான் படுகிறது. சிறு குழந்தை கை தவறிப் போட்டு விட்டான்" என்று மகாராணி கூறிய சமாதானத்தினால் தான் பராந்தகர் திருப்தியடைந்தார்.

தந்தை பராந்தக பாண்டியரின் வீரக்களை பொருந்திய அந்த முகத்தைக் கப்பல் தளத்தின் இருட்டில் படுத்துக் கொண்டு நினைத்துப் பார்க்க முயன்றான் இராசசிம்மன். தந்தை உயிரோடிருந்த காலத்தில் அலங்காரத்தோடு கூடிய தன் அன்னையின் 'வாழுங்கோல'த்தை நினைத்துப் பார்த்தான். அன்று தங்களுக்குச் சொந்தமாக இருந்த மதுரைப் பெருநகரத்தைப் பகுதி பகுதியாக நினைத்துப் பார்த்தான். மதுரை நகரத்து அரண்மனையையும், இளமையில் தான் அங்கே கழித்த நாட்களையும் நினைத்தான். கடைசியாக தந்தையின் மரணத்துக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகள் அவன் நினைவைப் பற்றிக் கொண்டு வரிசையாகத் தொடர்ந்து உள்ளத்தில் ஓடின.

'தந்தை காலமாகும் போது கோனாட்டின் தென் பகுதியிலிருந்து குமரி வரை பரந்து விரிந்த பாண்டிய நாட்டை எனக்கு வைத்து விட்டுப் போனார். நான் என்ன செய்தேன். என் கண் காணக் கரவந்தபுரத்திலிருந்து குமரி வரை குறுகிவிட்டதே அந்த நாடு! தந்தை காலஞ்சென்ற சிறிது காலத்துக்குப் பின் நானும் வீராவேசமும், உரிமை வேட்கையும் கொண்டு சில போர்களில் வெற்றி பெறத்தான் செய்தேன். உவப்பிலி மங்கலத்தில் நடந்த போரில் இருவர் மூவராகச் சேர்ந்து கொண்டு வந்த வடதிசையரசர்களைக் கூட வென்றேன். அப்போது பாண்டி மண்டலப் பெரும்படை மிகப் பெரியதாகவும் வலுவுள்ளதாகவும் இருந்தது. தஞ்சாவூர் சோழன் வைப்பூரில் நடந்த போரிலும், நாவற் பதியில் நடந்த போரிலும் இரண்டு முறை என் தலைமையில் பாண்டி மண்டலப் படைக்குத் தோற்றோடியிருக்கிறான். இப்பொழுது கொழுத்துப் போய்த் திரியும் இந்தக் கொடும்பாளூர்க்காரனும் ஒரு முறை என்னிடம் தோற்றிருக்கிறான்.

'அன்று என் வெற்றிகளைப் புகழ்ந்து மெய்க்கீர்த்திகளையும், பாமாலைகளையும் புலவர்கள் பாடினார்கள். நீள நீளமான சிறப்புப் பெயர்களை எனக்குக் கொடுத்தார்கள். சடையன் மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்திர கௌரவ மேரு, விகட பாலன் என்றெல்லாம் புகழ்ந்தார்கள். தந்தையின் காலத்திற் செய்தது போலவே நானும் அன்னையையும் கலந்தாலோசித்துக் கொண்டு எண்ணற்ற தேவதானமும் (கோயில்களுக்கு மானியம்), பள்ளிச்சந்தமும் (சமணப் பள்ளிகளுக்கு மானியம்), பிரமதேயமும் (அந்தணர்களுக்கு மானியம்) அளித்தேன். மதுரை வட்டாரத்தில் இருக்கும் நற்செய்கை புத்தூர் என்னும் சின்னமனூர் முழுவதையுமே ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்த ஓர் அந்தணருக்குப் பிரம்மதேயமாகக் கொடுத்தேன். அதனால் என் சிறப்புப் பெயரோடு மந்தர கௌரவ மங்கலம் என்றே அவ்வூர் பெயர் பெற்று விட்டது. அந்த நாளில்தான் முதன்முதலாக இலங்கைக் காசிப மன்னரின் நட்பு எனக்குக் கிடைத்து. பின்பு என் போதாத வேளை என் வரலாற்றையே மாற்றிவிட்டது. வடக்கே சோழன் வலுவான கூட்டரசர்களைச் சேர்த்துக் கொண்டு நானும் அன்னையும் வடபாண்டி நாட்டை இழக்கச் செய்தான். தென்பாண்டி நாடும் அதன் திறமையான மகாமண்டலேசுவரரும் இல்லையானால் நான் தோற்று ஓடும் போதெல்லாம் அன்னையையும் அழைத்துப் போக வேண்டியதாயிருந்திருக்கும். மகாமண்டலேசுவரரும், கடமையில் கருத்துள்ள தளபதி வல்லாளதேவனும் அவ்வப்போது அன்னைக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்! வடதிசைப் பகை வலுப்பதற்கு முன் நான் பெற்ற வெற்றிகளையெல்லாம் மறந்து விட்டு இரண்டு மூன்று முறை தோற்று இலங்கைக்கு ஓடியதுமே 'போர்த்திறமும், அநுபவமும் இல்லாத இளைஞன்' என்று என்னைக் கேவலமாகப் பேசத் தொடங்கி விட்டார்களே! பழைய புகழை விடப் புதிய பழியே வேகமாக நிலைத்து விடுகிறது. எஞ்சியுள்ள தென்பாண்டி நாட்டுக்காவது என்னை அரசனாக்கி முடிசூட்டி மணவினை முடிக்க வேண்டுமென்று அன்னைக்கு முன் மகாமண்டலேசுவரருக்கும் தாங்காத ஆசை. மகாமண்டலேசுவரர் யாருக்குமே தெரியாமல் என்னை இரகசியமாக இலங்கையிலிருந்து வரவழைத்து மாறுவேடத்தில் இடையாற்று மங்கலத்தில் வைத்துக் கொண்டார். நான் அவரிடமும் தங்கவில்லை. நான் தங்காமற் போனது மட்டுமில்லாமல் என் முன்னோரின் அரசுரிமைச் சின்னங்களையும் தங்கவிடாமல், அவரிடமிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் எதையெதையோ திடீர் திடீரென்று செய்து பெயரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறேன் நான். அருமை அன்னையாரையும் மகாமண்டலேசுவரரையும் தென்பாண்டி நாட்டு மக்களையும் மட்டுமா நான் ஏங்க வைத்து விட்டுப் போகிறேன்? இடையாற்று மங்கலத்திலும் செம்பவழத் தீவிலுமாக இரண்டு பெண் உள்ளங்களை வேறு ஏங்க வைத்துவிட்டுப் போகிறேன். அதே ஏக்கங்களின் மொத்தமான எதிரொலி என் உள்ளத்திலும் உருவெடுத்துப் பேரொலி செய்கிறதே! இடையாற்று மங்கலத்துப் பெண்ணாவது தன்னளவில் அதிகமாக ஏங்கியிருப்பாள். செம்பவழத் தீவின் செல்வியோ என்னையே ஏங்கச் செய்து கொண்டிருக்கிறாள். என் உயிரையே காப்பாற்றி எனக்கு வாழ்வு கொடுத்த பெண் அல்லவா மதிவதனி! சந்திரனுடைய ஒளியில் உலகத்துக்குக் குளிர்ச்சியளித்து மயங்குகின்ற மென்மையைப் போல் மதிவதனியின் சிரிப்பில் மாபெரும் காவியங்களின் அலங்கார நளினங்களை ஒளித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்து என்னை மயக்கிக் கொண்டிருக்கிறது. அவளுடைய மோகனச் சிரிப்பு வந்து முடியுமிடத்தில் இதழோரத்தில் அழகாகச் சுளி விழுகிறதே1 அந்தச் சுளியில் என் உள்ளம் சுழலுகிறது. நான் செம்பவழத் தீவில் அந்தப் பெண்ணைப் பார்த்த பின் கவிஞனாக மாறிவிட்டேனென்று சக்கசேனாபதி கூறியது எவ்வளவு பொருத்தமான வார்த்தை! அவர் அப்படிச் சொன்னபோது வீம்புக்காக அவரை மறுத்தேனே நான். உண்மைதான்! சில பெண்களின் கண்களும், சிரிப்பும், சில ஆண்களைக் கவியாக்கி விடுகின்றன. தம்மை மோந்து பார்க்கும் போதே மேலான எண்ணங்களை உண்டாக்கும் ஆற்றல் சில பூக்களுக்கு உண்டு. சில பெண்களின் கண்ணியமான அழகுக்கும் இந்த ஆற்றல் உண்டு போலும்.'

எண்ண அலைகளின் கொந்தளிப்பில் இராசசிம்மன் நெட்டுயிர்த்தான்.

அழகையும், கவிதையையும், அரசாட்சியையும், போரில் வெற்றி தோல்விகளையும் சேர்த்து நினைத்த போது அவனுக்கு ஒன்று தோன்றியது. 'வீரனாகவும் தீரனாகவும் வேந்தனாகவும் வாழ்ந்து செல்வம் பெறுவதை விட விவேகியாகவும், கவிஞனாகவும் வாழ்ந்து ஏழையாகச் செத்துப் போகலாம். பார்க்கப் போனால், எது செல்வம்? எது ஏழ்மை? நுண்ணுணர்வும் அறிவும் தான் செல்வம், அவை இல்லாமல் இருப்பதுதான் ஏழைமை!'

இப்படி எதை எதையோ எண்ணிக் குமுறிக் கொண்டு அந்த இரவின் பெரும்பகுதியைத் தூங்காமல் கழித்தான் இராசசிம்மன். மறுநாள் பொழுது விடிந்தது. கடற் காய்ச்சல் தணிவதற்கு மாறாக அதிகமாயிருந்தது. சக்கசேனாபதி இரவில் தூங்காமல் இருந்ததற்காக அவனை மிகவும் கண்டித்தார்.

"அநேகமாக நாம் நாளைக்கே இலங்கைக் கரையை அடைந்து விடலாம். உங்கள் உடம்பு நாளுக்கு நாள் இப்படிப் போய்க் கொண்டிருக்கிறதே. கூடிய வரையில் பயணத்தை நீட்டாமல் சுருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் நான். நாம் மாதோட்டத்தில் போய் இறங்க வேண்டாம். அது மிகவும் சுற்றுவழி. அனுராதபுரத்துக்கு மேற்கே புத்தளம் கடல் துறையிலேயே இறங்கி விடுவோம். ஏற்கெனவே நாம் விழிஞத்தில் புறப்பட்டதால் மிகவும் சுற்றிக் கொண்டு பயணம் செய்கிறோம். கோடியக்கரையிலிருந்தோ, நாகைப்பட்டினத்திலிருந்தோ புறப்பட்டிருந்தால் தொண்டைமானாற்றுக் கழிமுகத்தின் வழியே விரைவில் ஈழ மண்டலத்தின் வடகரையை அடைந்துவிடலாம். சேதுக்கரையிலிருந்து புறப்பட்டால் மாதோட்டம் மிகவும் பக்கம். நான் இதற்கு முன்பெல்லாம் உங்களை இலங்கைக்கு அழைத்து வந்த போது கடலில் வடக்கே நீண்ட வழி சுற்றாக இருந்தாலும் மாதோட்டம் வழியாகத்தான் அழைத்துச் சென்றிருக்கிறேன். இம்முறை அப்படி வேண்டாம். உங்கள் உடம்புக்கு நீண்ட பயணம் ஏற்காது. புத்தளத்தில் இறங்கி அனுராதபுரம் போய் விடுவோம். அரசர் கூடப் பொலன்னறுவையிலிருந்து இப்போது அனுராதபுரத்துக்கு வந்திருப்பார்" என்று சக்கசேனாபதி கூறிய போது இராசசிம்மனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

"சக்கசேனாபதி! சோழமண்டலக் கடற்கரையாகிய நாகைப்பட்டினத்திலிருந்தும் கோடியக்கரையிலிருந்தும் அவ்வளவு விரைவாக இலங்கையை அடைந்து விடலாமென்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சோழனின் புலிச் சின்னமும் கொடும்பாளூர்ப் பனைமரச் சின்னமுமுள்ள கொடியோடு அன்றிரவு செம்பவழத் தீவில் நான் ஒரு கப்பலைப் பார்த்தேன். அவர்கள் கூட ஈழநாட்டுக்குப் போகிறவர்கள் போல் தான் தெரிந்தது. ஆனால் தொண்டைமானாற்றுக் கழிமுகத்தையும், மாதோட்டத்தையும் விட்டுவிட்டு ஏன் அவர்கள் தெற்கே வந்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை!" - அந்த ஆட்கள் தன் மேல் வேல் எறிந்து துரத்திக் கொல்ல முயன்றதையும், அப்போது மதிவதனி தன்னைக் காப்பாற்றியதையும் மட்டும் அவரிடம் இராசசிம்மன் கூறவில்லை.

"அது சோழ நாட்டுக் கப்பலானால் அப்படிச் சுற்றி வளைத்து வந்தது ஆச்சரியந்தான். ஒரு வேளை அவர்களுக்கு விழிஞத்தில் ஏதாவது காரியம் இருந்திருக்கும். அதை முடித்துக் கொண்டு இலங்கை வருவதற்குப் புறப்பட்டிருப்பார்கள். அப்படி அந்தக் கப்பல் இலங்கை வருவதாயிருந்தால் நம் கப்பலுக்குப் பின்னால் தானே வரவேண்டும்? அப்படியும் காணவில்லையே!" என்று சந்தேகத்தோடு பதில் சொன்னார் சக்கசேனாபதி.

"நாகைப்பட்டினத்துக்கே திரும்பி விட்டார்களோ, என்னவோ? அப்படியானாலும் நம் கப்பல் செல்லும் திசையிலேயே வந்துதானே வடமேற்கு முகமாகத் திரும்ப வேண்டும்?" என்று மீண்டும் கேட்டான் இராசசிம்மன்.

"யாரோ! என்ன காரியத்துக்காக வந்தார்களோ? ஒருவேளை கீழ்க்கரையை ஒட்டிப் பாம்பனாறு வழியாகவும் போயிருக்கலாம். நீங்கள் சொல்வதையெல்லாம் சிந்தித்தால் எனக்குப் பல வகைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன இளவரசே! இப்படி ஒரு கப்பலைப் பார்த்தேன் என்று நீங்கள் அன்றே செம்பவழத் தீவில் என்னிடம் கூறியிருக்கலாமே! தாங்கள் கூறாமல் மறைத்துவிட்டது ஏனோ?" சக்கசேனாபதி சற்றே சினந்து கொள்வது போன்ற குரலுடன் இவ்வாறு கேட்ட போது இராசசிம்மன் விழித்தான்.

"சரி! அவர்கள் பேச்சு நமக்கு எதற்கு? அந்தக் கப்பல் எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும். நாம் நம்முடைய காரியத்தைக் கவனிப்போம். நீங்கள் கூறுகிறபடி புத்தளத்திலேயே இறங்கிவிடலாம்" என்று பேச்சை மாற்றினான் இராசசிம்மன்.

33. நினைப்பென்னும் நோன்பு

தன் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதா என்று அறிவதற்காகத் தான் கூடல் இழைத்ததை அத்தை பார்த்துவிட்டாளே என்ற வெட்கம் கூடிய மகிழ்ச்சியில் சிறிது சிறிதாகப் புதைந்து விட்டாள் மதிவதனி. தன் எண்ணங்களை நோன்புகளாக்கி வலிமையான அன்புத் தவத்தை உறுதியாக நோற்றுக் கொண்டிருந்தாள் அவள். செம்பவழத் தீவில் நாட்கள் வழக்கம் போலத்தான் கழிந்து கொண்டிருந்தன. மதிவதனி கவலையே இல்லாதவளைப் போல மகிழ்ச்சியோடு துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள். இடையில் சில நாட்களாக அவளுக்கு ஏற்பட்டிருந்த சோர்வு இப்போது இல்லை. தன் நினைவுக்குத் தன் உள்ளத்தைக் கேள்விக் களமாக்கி, இடைவிடாமல் தான் இயற்றிக் கொண்டிருக்கும் நினைவாகிய வேள்வி நோன்பிற்குப் பயன் உண்டு என்ற திடநம்பிக்கை அவளுக்குத்தான் அன்றே வந்துவிட்டதே.

உற்சாகமாகக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு சங்குகளையும் பவழங்களையும் விற்றாள். தந்தை கடையைப் பார்த்துக் கொண்ட சமயங்களில் தனது சிறிய தோணியைச் செலுத்திக் கொண்டு தீவின் கரையோரமாகக் கடலைச் சுற்றி வந்தாள். இன்னும் சில சமயங்களில் ஏழு கன்னிமார் கோயில் புன்னை மரத்தடியில் போய்ப் பெரிய முனிவர் போல் கண் மூடி உட்கார்ந்து தியானம் செய்தாள். பைத்தியக்காரப் பெண் போல் தன் அருகில் யாருமில்லாத தனிமையான சமயங்களில் 'நினைப்பதை அடைவது ஒரு தவம்' என்று மெதுவாகத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

மதிவதனி அன்று மாலையில் ஒருவிதமான மகிழ்ச்சியோடு தோணியில் ஏறிக்கொண்டு கரையோரமாகவே அதைச் செலுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அலங்காரமான சிறிய கப்பல் ஒன்று தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள். அதில் வருவது யாரென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று இயல்பாக அவள் மனத்தில் ஓர் ஆசை உண்டாயிற்று. தற்செயலாகச் செலுத்திக் கொண்டு போகிறவளைப் போல் அந்தக் கப்பலுக்கு அருகில் தன் தோணியைச் செலுத்திக் கொண்டு போனாள் மதிவதனி.

முன் குடுமியும், பருத்த உடம்பும், குட்டைத் தோற்றமுமாக ஓர் ஆள் அந்தக் கப்பலின் தளத்தில் நின்று கொண்டிருப்பதை மதிவதனி தோணியில் நின்று பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கப்பலின் தளத்தில் அரசகுமாரி போன்ற அலங்காரத்தோடு அழகிய இளம்பெண் ஒருத்தியும், பெண்மைச் சாயல்கொண்ட முகமுடைய இளைஞன் ஒருவனும் வந்து அந்த முன் குடுமிக்காரருக்குப் பக்கத்தில் நின்றார்கள். மதிவதனி கடலில் துணிவாகத் தோணி செலுத்திக் கொண்டு வரும் காட்சியை ஏதோ பெரிய வேடிக்கையாக எண்ணிப் பார்க்கிறவர்களைப் போல் அந்த மூன்று பேரும் கப்பல் தளத்தில் நின்று பார்த்தார்கள்.

முன்குடுமிக்காரர் அவளை நோக்கிக் கைதட்டிக் கூப்பிட்டு ஏதோ விசாரித்தார். கடல் அலைகளின் ஓசையில் அவர் விசாரித்தது மதிவதனியின் செவிகளில் விழவில்லை. தோணியை இன்னும் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, "ஐயா! என்ன கேட்டீர்கள்? காதில் விழவில்லை" என்று அண்ணாந்து நோக்கி வினவினாள் அவள்.

"தோணிக்காரப் பெண்ணே! இதோ அருகில் தெரியும் இந்தத் தீவுக்குப் பெயர் என்ன? கப்பலோடு இரவில் தங்குவதற்கு இங்கே வசதி உண்டா?" என்று முன்குடுமிக்காரர் அவளிடம் இரைந்து கேட்டார்.

"ஆகா! தாராளமாகத் தங்கிவிட்டுப் போகலாம். இந்தத் தீவுக்குப் பெயர் செம்பவழத் தீவு! பார்த்தாலே உங்களுக்குத் தெரியுமே!" என்று மதிவதனி பதில் சொன்னாள். அந்தக் குட்டையான முன்குடுமிக்காரரைப் பார்க்கப் பார்க்க வேடிக்கையாக இருந்தது அவளுக்கு.

"கூத்தா! இடையாற்று மங்கலத்தில் எங்கள் மாளிகைக்கும் அக்கரைக்கும் இடையிலுள்ள பறளியாற்றைப் படகில் கடப்பதற்கே எனக்குப் பயமாக இருக்கும். தண்ணீரை மொத்தமாகப் பரப்பாகப் பார்க்கும் போது அவ்வளவு தூரம் பயப்படாமல் இவ்வளவு பெரிய கடலில் சிறிய தோணியைச் செலுத்திக் கொண்டு எவ்வளவு உரிமையோடு சிரித்துக் கொண்டே மிதந்து வருகிறாள் பார்த்தாயா எனக்கு வியப்பாக இருக்கிறது!" என்று கப்பலின் தளத்தில் நின்ற பெண் தன் அருகில் இருந்த பெண் முகங்கொண்ட இளைஞனிடம் கூறினாள். தோணியிலிருந்த மதிவதனி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தாள்.

"பெண்ணே! நீ ஏன் சிரிக்கிறாய்?" என்று அந்த இளைஞன் மதிவதனியைப் பார்த்துக் கேட்டான். அந்தக் குரல் அசல் பெண் குரல் போலிருப்பதை எண்ணி வியந்து கொண்டே, "ஒன்றுமில்லை, உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அம்மையார் சற்று முன் உங்களிடம் கூறிய வார்த்தைகளைக் கேட்டேன். சிரிப்பு வந்தது. இவ்வளவு தூரம் தண்ணீருக்குப் பயப்படுகிறவர்கள் கப்பலில் வர எப்படித் துணிந்தார்களென்று எனக்குத் தெரியவில்லை!" என்று பதில் கூறினாள் மதிவதனி.

"அதற்கென்ன செய்வது? எதற்கெல்லாம் பயப்படுகிறோமோ, அதை வாழ்வில் செய்யாமலா இருந்து விடுகிறோம்? பயப்படுவது வேறு, வாழ்க்கை வேறு!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் இளைஞன். அந்த இளைஞனுடைய உதடுகள் பெண்ணினுடையவை போல் சிவப்பாகச் சிறிதாய், அழகாய் இருப்பதை மதிவதனி கவனித்தாள்.

அவர்களுடைய கப்பலுடனேயே தன் தோணியையும் செலுத்திக் கொண்டு கரைக்குத் திரும்பினாள் அவள். அந்தக் கப்பலில் வந்தவர்கள் யார் என்பதை நேயர்கள் இதற்குள் புரிந்து கொண்டிருப்பார்கள். விழிஞத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் அவர்களிடம் வம்பு செய்து அந்தக் கப்பலிலேயே தனக்கும் இடம் பிடித்துக் கொண்ட கூத்தன் என்னும் வாலிபனும் தான். இப்போது செம்பவழத் தீவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். கப்பலை நிறுத்திவிட்டுக் கரையில் இறங்கியதும், "பெண்ணே! உன்னோடு கூட வந்தால் எங்களுக்கு இந்தத் தீவை சுற்றிக் காண்பிப்பாய் அல்லவா" என்று மதிவதனியைப் பார்த்துக் கேட்டான் நாராயணன் சேந்தன். "ஆகட்டும்" என்று புன்னகையோடு பதில் சொன்னாள் மதிவதனி. கப்பலைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஊழியர்களிடம் சொல்லிவிட்டுச் சேந்தனும், குழல்வாய்மொழியும், கூத்தனும் மதிவதனியோடு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்.

எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்து விட்டு இறுதியாகத் தீவின் கடைவீதிக்கு அவர்களை அழைத்து வந்தாள் மதிவதனி. அணிகலன்களிலும், அலங்காரத்திலும் அதிகம் பிரியமுள்ளவளாகிய குழல்வாய்மொழி நவரத்தின நவமணிகளும், பொன்னும், புனைபொருள்களும் விற்கும் ஒரு பெரிய கடைக்குள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஆவலோடு நுழைந்தாள். செம்பவழத் தீவிலேயே பெரிய கடை அது.

சாத்ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதகம், பவழம், முத்து - என்னும் ஒன்பது வகை மணிகளும் நிறைந்திருந்தன அங்கே.

ஆடவர் அணிந்து கொள்ளும் தாழ்வடம், கண்டிகை, கரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீர பட்டம், திருக்கு தம்பைத் தகடு, திரள்மணி வடம் ஆகியவைகள் ஒரு புறம் இலங்கின. பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காறை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, சூடகம், திருமாலை, வாகுவலயம், திருக்கைப்பொட்டு, பொன்னரிமாலை, மேகலை ஆகியவை மற்றொரு புறம் இலங்கின.

வயிரத்தின் பன்னிரு குற்றமும் ஐந்து குணமும், மரகதத்தின் எட்டுக் குற்றமும் எட்டுக் குணமும், மாணிக்கத்தின் பதினாறு குற்றமும் பன்னிரு குணமும், நீலத்தின் எட்டுக் குற்றமும் பதினாறு குணமும், முத்துகளின் இரண்டு குணமும் நான்கு குற்றமும் தெரிந்து சொல்லவல்ல இரத்தினப் பரிசோதக வித்தகர்கள் அங்கு நிறைந்திருந்தனர். குழல்வாய்மொழி அந்தக் கடையில் வெகுநேரம் நின்று நிதானித்து ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது சேந்தனுக்குப் பிடிக்கவில்லை. வெறுப்போடு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்று விட்டான் அவன். மதிவதனியும், குழல்வாய்மொழியும், கூத்தனும், சுற்றிப் பார்த்து விட்டு நாராயணன் சேந்தன் நின்று கொண்டிருந்த மூலைக்குத் திரும்பி வந்தனர்.

"இந்த மாபெரும் செல்வக் களஞ்சியம் போன்ற கடையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று வியப்பு நிறைந்த குரலில் சேந்தனை நோக்கிக் கேட்டாள் குழல்வாய்மொழி.

"பெண்களின் நகை ஆசையால் உலகம் எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்க் கொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். இவைகளால், ஏழைகளாகப் போனவர்களின் தொகையை நினைக்கிறேன்" என்று சேந்தன் கடுகடுப்போடு பதில் சொன்னான். அவனுடைய முரட்டுத் தனமான பதிலைக் கேட்டுக் கூத்தன் உட்பட மற்ற மூவரும் முகத்தைச் சுளித்தார்கள்.

"அம்மணி! நீங்கள் ஏன் முகத்தைச் சுளிக்கிறீர்கள்? சில பேர்கள் தங்களுக்குக் கிடைக்காத பொருள்களைக் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கிடைக்கிற வரை பொறுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த மனிதர் கூறிய கடுமையான பதிலிலிருந்து இவர் திருமணமாகாதவர் என்று நினைக்கிறேன்" என்று அந்தக் கடையின் வணிகர் சேந்தனைக் கேலி செய்தார். சேந்தன் அவரை வெறுப்போடு பார்த்தான்.

"சகோதரி! நம் ஐயாவுக்கு நகை என்றால் ஏன் இவ்வளவு வெறுப்போ? தெரியவில்லையே?" என்று குழல்வாய்மொழியிடம் நாராயணன் சேந்தனைக் குறிப்பிட்டு நகைத்துக் கொண்டே கேட்டான் கூத்தன்.

அவனை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்து விட்டான் சேந்தன். அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் மதிவதனிக்கும் குழல்வாய்மொழிக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. கடைவீதியில் தங்களுடைய கடைக்கும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தாள் மதிவதனி.

"ஐயா! பெண்கள்தான் ஆடம்பரத்துக்காக கைமீறிச் செலவு செய்வார்கள் என்று நீங்கள் தவறாகக் கருதுவதாகத் தெரிகிறது. அது தவறு. உதாரணமாக நான் ஒன்று சொல்கிறேன். கேளுங்கள்; சில தினங்களுக்கு முன் செல்வச் செழிப்புள்ள அழகிய இளைஞர் ஒருவர் ஒரு முதியவரோடு இலங்கைக்குப் போகிற வழியில் கப்பலை நிறுத்தி இந்தத் தீவில் இறங்கியிருந்தார். எங்கள் கடையில் வந்து ஆயிரம் பொற்கழஞ்சுகள் விலை மதிப்புள்ள ஒரு வலம்புரிச் சங்கை வீண் பெருமையைக் காட்டுவதற்காக இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போனார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதாவது ஒப்புக் கொள்ளுங்கள் ஆடவர்களிலும் கைமீறிய செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள்" என்று அந்த மூவரையும் கப்பலில் கொண்டு போய் விடுவதற்காகத் திரும்பிச் சென்ற போது மதிவதனி சேந்தனிடம் ஒரு பேச்சுக்காகச் சொன்னாள். உடனே, "அந்த இளைஞர் எப்படியிருந்தார்? அவரை நீ பார்த்ததிலிருந்து ஏதாவது அடையாளம் கூறமுடியுமா, பெண்ணே?" என்று மூன்று பேருமாக மதிவதனியைத் துளைத்தெடுத்து விட்டார்கள். அவர்களிடம் அதை ஏன் கூறினோம் என்றாகிவிட்டது அவளுக்கு.

"ஐயா! எனக்கு அவருடைய அடையாளம் ஒன்றும் நினைவில்லை. சும்மா பார்த்த நினைவுதான்" என்று கூறி மழுப்பிவிட்டு, அதற்குமேல் அவர்களோடு தங்கியிருக்க விரும்பாமல் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.

மறுநாள் காலை அவள் கடற்கரைக்கு வந்த போது புறப்படத் தயாராயிருந்த கப்பலிலிருந்து முன் குடுமிக்காரர் மீண்டும் அவளைத் தூண்டிக் கேட்டார். அவள் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டாள்.

34. தளபதி திடுக்கிட்டான்

இடையாற்று மங்கலத்து நிலவறையிலிருந்து ஆயுதங்களை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்தி தெரிவிப்பதற்கு அரண்மனைக்கு வந்த அம்பலவன் வேளானை நிதானமாகத் தங்கச் செய்து மறுநாள் காலை வரை நிறுத்தி வைத்து விவரமாகச் சொல்லும்படி கேட்டார் மகாமண்டலேசுவரர். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆழமாகச் சிந்திப்பவருக்கே உரிய இயல்பான நிதானம் அவருக்கு வந்துவிடும்.

"அப்பா! மற்றவர்கள் அரைக்கால் நாழிகையில் உண்டு முடித்துவிடக்கூடிய ஓர் உணவுப் பொருளை நீங்கள் சாப்பிட்டால் அரை நாழிகை உட்கார்ந்து நிதானமாக மென்று தின்கிறீர்களே?" என்று அவருக்கு உணவு பரிமாறும் போதெல்லாம் அவரது செல்வக் குமாரி குழல்வாய்மொழி அவரைக் கேட்பாள். அவர் அப்போது தம் புதல்வியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே ஒரு விதமாகச் சிரித்தவாறு மறுமொழி கூறுவார்:

"குழல்வாய்மொழி! உணவை மட்டுமல்ல; காதிலும், கண்ணிலும், மனத்திலும் படுகிற விஷயங்களைக் கூட இப்படி மென்று தின்று உண்டால் தான் சீரணமாகிறது எனக்கு. அறிவும் சிந்தனையும் உள்ளவர்களுக்கு இந்த நிதானம் ஒரு பலவீனம் தான், அம்மா! ஆனால் எங்களுடைய ஒரே பலமும் இந்த நிதானத்தில் தான் அடங்கியிருக்கிறது."

அடுத்தடுத்துத் தொடர்ந்து இடையாற்று மங்கலத்தில் கொள்ளையும், திருட்டும் நடப்பது பரபரப்பூட்டக் கூடியதொரு செய்தியானாலும் அவர் பரபரப்படைகிற மாதிரி வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

"வேளான்! பதற்றப்படாதே! நடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல்" என்று அவனைக் கேட்டார் அவர்.

"சுவாமி ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்கள் யார்? அவர்கள் எப்போது தீவின் எல்லைக்குள் பிரவேசித்தார்கள் என்ற விவரங்களெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆயுதங்களையெல்லாம் படகில் ஏற்றிப் பறளியாற்றைக் கடந்து சென்று கொண்டிருந்த போது தற்செயலாகக் கரைப் பக்கம் வந்த யவனக் காவல் வீரர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் ஓடி வந்து தோணித்துறைக்கு அருகில் குடிசையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பி, ஆற்றில் போகும் படகு யாருடையதென்று விசாரித்தார்கள். நான் எனக்குத் தெரியாது என்றேன். உடனே எல்லோருமாக ஓடிப் போய்ப் பார்த்தோம். நிலவறை, விருந்து மாளிகை எல்லாம் திறந்து கிடந்தன. அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்து பார்த்தோம். என்ன நடந்திருக்க வேண்டுமென்று எங்களுக்குப் புரிந்து விட்டது. விரைவாக இரண்டு படகுகளில் ஏறிக் கொண்டு சென்று, அந்தப் படகு நடு ஆற்றைக் கடப்பதற்குள் அதை வளைத்துக் கொண்டோம். படகில் ஆயுதங்களை ஏற்றிக் கனம் உண்டாக்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் வேகமாகச் செலுத்தித் தப்பிக் கொண்டு போக முடியவில்லை. அந்தத் திருட்டுப் படகில் இரண்டே ஆட்கள் தான் இருப்பது போல் தெரிந்தது. நாங்கள் அருகில் நெருங்கிப் பிடிப்பதற்குள் ஆயுதங்களோடு படகை ஆற்றில் கவிழ்த்து விட்டுத் தாங்களும் குதித்து நீந்தித் தப்பி விட்டார்கள் அந்த ஆட்கள்."

"வேளான்! அவர்கள் யாராயிருக்க முடியுமென்று உனக்குத் தோன்றுகிறது? வந்து போனவர்களை இன்னாரென்று கண்டு கொள்வதற்கு ஏற்ற அடையாளங்கள் எவற்றையாவது அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்களா?" இப்படிக் கேட்டுக் கொண்டே வேளானுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் மகாமண்டலேசுவரர்.

"சுவாமி! ஆயுதங்களைத் திருடிக் கொண்டு போக வந்தவர்கள் மிகவும் சாமர்த்தியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்களை இனம் தெரிந்து கொள்வதற்கேற்ற எந்த அடையாளங்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. வந்தவர்களில் யாரோ ஒருவர் இடுப்புக் கச்சையாக அணிந்த வெண்பட்டுத் துணி ஒன்று மட்டும் நீரிலும், சேற்றிலும் நனைந்து விருந்து மாளிகைப் பின்புறமுள்ள பறளியாற்றுப் படித்துறையில் கிடைத்தது. அதை அடையாளமாக வைத்துக் கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை."

மகாமண்டலேசுவரர் மெல்லச் சிரித்தார். "வேளான்! அந்த வெண்பட்டுத் துணியை இப்போது இங்கே கொண்டு வந்திருக்கிறாயா?" என்று அவர் கேட்டவுடன் வேளான் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டிருந்த அந்த வெண்பட்டுத் துணியை எடுத்து அடக்க ஒடுக்கமாக அளித்தான். அவர் அதை விரித்துப் பார்க்க முயன்றார். ஆற்று நீரோடு செம்மண் சேறும் படிந்து உலர்ந்து போயிருந்ததால் அதில் ஒன்றுமே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

"சிறிது நேரம் நீ இங்கேயே காத்துக் கொண்டிரு" என்று வேளானிடம் கூறிவிட்டு அந்தப் பட்டுத் துணியுடன் உள்ளே சென்றார் அவர். வேளான் வியப்பும் பயமும் போட்டியிடும் மன உணர்ச்சியோடு அங்கேயே காத்திருந்தான்.

அரை நாழிகைக்குப் பின் மகாமண்டலேசுவரர் மறுபடியும் சிரித்துக் கொண்டே அவன் முன் தோன்றினார்.

"வேளான்! யார், எவருடைய தூண்டுதலால் ஆயுதங்களைத் திருடுவதற்கு வந்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரிந்து விட்டது. இதில் கவலைப்படுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை. நீ உடனே இடையாற்று மங்கலத்துக்குத் திரும்பிப் போய் நான் சொல்கிறபடி செய். பறளியாற்றில் எந்த இடத்தில் படகு கவிழ்க்கப்பட்டதோ, அங்கே ஆட்களை மூழ்கச் செய்து ஆயுதங்களைக் கிடைத்த வரையில் வெளியே எடுத்து விட வேண்டும். ஆற்றின் வேகத்தினால் இழுத்துக் கொண்டு போகிற அளவுக்கு இப்போது வெள்ளம் கடுமையாக இராது. ஆகவே கவிழ்ந்து மூழ்கிய ஆயுதங்களைப் பெரும்பாலும் குறைவின்றி எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்த ஆயுதங்களையும், இப்போது நான் உன்னிடம் எழுதிக் கொடுக்கப் போகும் ஓலையையும் கொண்டு போய் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்தில் இருக்கும் தளபதி வல்லாளதேவனிடம் சேர்த்து விட வேண்டும்."

"அப்படியே செய்துவிடுகிறேன் சுவாமி!"

"செய்வது பெரிதில்லை, வேளான்! நான் சொல்கிறபடி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். என் ஓலையையும் ஆயுதங்களையும் தளபதியிடம் கொடுத்த பின் அங்கே ஒரு நொடிப்போது கூட அநாவசியமாக நீ தாமதிக்கக் கூடாது. தளபதி உன்னிடம் தூண்டித் துளைத்து ஏதாவது கேட்க முயன்றாலும் நீ அவற்றுக்கு மறுமொழி கூறாமல் உடனே நழுவி வந்து விட வேண்டும்."

வேளான் பயபக்தி நிறைந்த முகத்தில் மிரண்ட பார்வையோடு 'ஆகட்டும்' என்பதற்கு அறிகுறியாக மகாமண்டலேசுவரருக்கு முன் தலையசைத்தான்.

"சரி, அப்படியானால் நீ இப்போதே புறப்பட வேண்டியதுதான்" என்று அவர் விடை கொடுத்த பின்பும் அவன் தயங்கி நின்றான். எதையோ அவரிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளேயே எண்ணப் போராட்டத்துடன் அவன் தயங்கி நிற்பதாகத் தோன்றியது.

"வேளான்! ஏன் தயங்கி நிற்கிறாய்? மனத்தில் பட்டதைக் கேள்!"

"சுவாமீ! அந்தப் பட்டுத் துணியிலிருந்து ஏதாவது அடையாளம் புரிந்ததா?" என்று மென்று விழுங்கும் வார்த்தைகளோடு பயந்து கொண்டே கேட்டான் அவன்.

"அடையாளமெல்லாம் நன்றாகத்தான் புரிந்திருக்கிறது. ஆனால் அதை நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை" என்று புன்னகையோடு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர். வேளான் மறுபேச்சுப் பேச வாயின்றித் தளபதிக்காக அவர் எழுதிக் கொடுத்த ஓலையை வாங்கிக் கொண்டு சென்றான். அம்பலவன் வேளானை இடையாற்று மங்கலத்துக்கு அனுப்பிய பின்பு வண்ணமகள் புவனமோகினியைத் தம்முடைய இருப்பிடத்துக்கு வரவழைத்தார் அவர்.

புவனமோகினி வந்து வணங்கினாள். "பெண்ணே! உன்னிடம் ஒரு செய்தி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காகக் கூப்பிட்டேன். ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் இங்கே அரண்மனையில் தான் இருக்கிறானா? உனக்குத் தெரிந்திருக்குமே?" என்று அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டார். ஆபத்துதவிகள் தலைவனின் பெயரை அவருடைய வாயிலிருந்து கேள்விப்பட்ட உடனே அந்தப் பெண்ணின் முகத்தில் பயத்தின் உணர்ச்சியலைகள் குமிழியிட்டுப் பரவுவது போன்றதொரு சாயல் பரவியது.

"பயப்படாமல் சொல் அம்மா!" மீண்டும் அவளைத் தூண்டினார் அவர்.

"சுவாமி! சென்ற சில நாட்களாக அந்த முரட்டு மனிதரை அரண்மனை எல்லையிலேயே நான் காணவில்லை. ஆனால் மறுபடியும் இன்று காலையில் இங்கு பார்த்தேன்" என்று மருண்ட பார்வையோடு முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டே மெல்ல அவருக்குப் பதில் சொன்னாள் வண்ணமகள்.

"இவ்வளவுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரிய வேண்டும். இனிமேல் நீ போகலாம்."

புவன மோகினி மறுபடியும் அவரை வணங்கிவிட்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் சென்ற பின் சிறிது நேரம் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு அளவாக அடிபெயர்த்து வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர். மனத்தில் அளவாகத் தெளிவாக வேகமாகச் சிந்தனைகள் ஓடும் போது இப்படி நடந்து கொண்டே திட்டமிடுவது அவரது வழக்கம். சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக அங்கிருந்த காவலன் ஒருவனைக் கைதட்டி அழைத்தார். அவன் அருகில் வந்ததும், "இதோ பார்! நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள். இன்னும் கால் நாழிகைக்குள் ஆபத்துதவிகள் தலைவன் இந்த அரண்மனையின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி அழைத்துக் கொண்டு வா. இதை உடனே செய்" என்றார்.

கருங்கல்லின் மேல் வரிசையாக நிறுத்தி நிறுத்தித் தாளகதி பிழையாமல் உளியை அடித்தாற் போல் ஒலித்த அந்த வார்த்தைகளின் கம்பீரத்துக்குத் தலைவணங்கி நடந்தான் அவன். மீண்டும் அளவாக அடியெடுத்து வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர். ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக் கொண்டு வர எவ்வளவு நேரமாகுமென்று அவர் எதிர்பார்த்தாரோ அவ்வளவு நேரம் ஆகவில்லை. அவரால் அனுப்பப்பட்ட காவலன் மிகச் சில விநாடிகளுக்குள்ளேயே மகரநெடுங்குழைக்காதனை அழைத்துக் கொண்டு வந்து அவர் முன் நிறுத்தி விட்டான். வேங்கைப் புலி போல் வாட்ட சாட்டமான தோற்றத்தையுடைய அந்த மாவீரன் துணிவு ஓய்ந்து ஒடுங்கித் தலைதாழ்த்தி நாணத்தோடு அவர் முன் வந்து நின்றான். தம்முன் வருகிற பெண்களையெல்லாம் நாணப் புன்னகை பூக்கச் செய்யும் ஆற்றல், அழகும் வீரமும் உள்ள சில ஆண்களுக்கு உண்டு. அதைப் போலவே அறிவும் அறமும் ஒழுக்கமும் உள்ள சில பெரியவர்கள் தமக்கு முன் நிற்கும் ஆண்களைக் கூட ஒடுங்கிப் பெண் தன்மை எய்தச் செய்து விடுவார்கள். கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு இமையா விழிப்பார்வையுடன் நிமிர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த மனிதருக்கு முன்னால் ஆபத்துதவிகள் தலைவன் பெண் தன்மை எய்தினாற் போல் தான் நாணி நின்றான்.

காவலனை அங்கிருந்து வெளியேறுமாறு சைகை செய்தார் மகாமண்டலேசுவரர். அவன் வெளியேறினான்.

"குழைக்காதா! இதோ, என் கையிலிருக்கும் இந்தப் பொருளைக் கொஞ்சம் பார்" என்று சொல்லிக் கொண்டே பின்புறம் இருந்த கையை உயர்த்தி அவன் முகத்துக்கு நேர் எதிரே கொண்டு வந்து நீட்டினார் அவர். அவருடைய கையிலிருந்து விரிந்த வெண்பட்டுத் துணியைப் பார்த்த போது அவன் முகம் ஏன் அப்படிப் பயந்து வெளிறிப் போகிறது? அழுக்கும் சேறுமாக இருந்த அந்தத் துணி நீரில் நன்றாகக் கழுவப்பட்டிருந்தது. இப்போது ஆபத்துதவிகளின் அடையாளச் சின்னங்கள் அதில் தெளிவாகத் தெரிந்தன. அவருடைய கையில் அந்தத் துணி ஆடி அசைந்து நடுங்கினாற் போல் அவனுடைய உடல் விதிர் விதிர்ப்புற்று நடுங்கியது.

"இம்மாதிரிச் சின்னங்களோடு கூடிய வெண்பட்டுத் துணியை ஆபத்துதவிகள் தம் இடுப்புக் கச்சையில் அணிவது வழக்கமல்லவா?"

"ஆம் சுவாமி! வழக்கம் தான்."

அவனுடைய பதிலைக் கேட்டு அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டே "கொஞ்ச நாட்களாகவே ஆபத்துதவிகளுக்கெல்லாம் ஞாபக மறதி அதிகமாகிவிட்டது போலிருக்கிறது. இடுப்பில் அணிந்து கொள்வதற்குப் பதிலாக எங்கெங்கோ நினைத்த இடங்களிலெல்லாம் இந்தத் துணியைப் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்" என்று குத்தலாகச் சொன்னார். அவருடைய குத்தல் அவனுக்குப் புரிந்தது. முன்பு ஒரு முறை அந்தத் துணியைத் தவற விட்டு விட்டு அவர் கையில் அகப்பட நேரும்படி இடங்கொடுத்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு நின்றான் அவன். அவ்வளவு விரைவாக அது கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய இடத்தைத் தேடி எப்படி வந்து சேர்ந்ததென்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை. திகைப்போடு வெட்கி விழித்துக் கொண்டு நின்றான் அவன்.

"பரவாயில்லை! உனக்கு உரிமையான பொருள் என் கையில் கிடைத்தால் உடனே உன்னைக் கூப்பிட்டு அதை உன்னிடம் ஒப்படைக்க வேண்டியது என் கடமையல்லவா? அதனால் தான் உன்னை வரவழைத்தேன். வேறொன்றுமில்லை. இந்தா இதைக் கொண்டு போ. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்!" - ஒன்றுமே நடவாதது போல் சர்வசாதாரணமாக அவனைக் கூப்பிட்டு அதைக் கொடுத்து எச்சரித்து அனுப்புபவர் போல் தான் பேசினார் அவர். அந்தச் சூழ்நிலையில் அப்படியொன்றும் தெரியாதது போல் நடந்து கொள்வதுதான் நல்லதென்று அவருக்குப் பட்டது. 'அரசியல் வாழ்வில் ஒன்றும் தெரியாதவன் எல்லாம் தெரிந்தது போல் நடித்தால் ஈரம் புலராத பச்சை மண்குடத்தில் வைத்த தண்ணீர் போல் பலவீனங்கள் விரைவில் வெளிப்பட்டுத் தோற்றுவிடுவான். எல்லாம் தெரிந்தவன் ஒன்றும் தெரியாதது போல் நடித்தால் இறுதிவரை வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு விடுவான். இந்தத் தத்துவத்தில் மகாமண்டலேசுவரருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. எண்ணங்களையும் அனுபவங்களையும் நான்கு மடங்கு தற்பெருமையோடு கலந்து காண்பவர்களிடமெல்லாம் அளந்து கொண்டு திரியும் சாமானிய மனித ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர்.

ஆபத்துதவிகள் தலைவன் கையில் அவர் அந்தப் பட்டுத் துணியைக் கொடுத்த போது ஒன்றுமே தெரியாதவர் போல் சிரித்துக் கொண்டு கொடுத்தார். ஆனால் அவனோ அதிர்ச்சியடைந்து கூனிக் குறுகி நடுங்கி அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றுச் சென்றான். பகைவர்களிடமும் அநாகரிகமாகப் பகைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு இல்லை. யார் யாரெல்லாம் பொறாமையால் தமக்கே குழிபறித்துக் கொண்டிருப்பதாக அவர் உணர்கிறாரோ, அவர்களிடம் கூட நாகரிகமாக நடந்து கொள்ளும் பண்பை அறிவு அவருக்குக் கற்பித்திருந்தது. பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு வந்ததை அறிந்த போது கூட நாகரிகமாகவே நடந்து கொண்டார் அவர். தன் கழுத்தை அறுக்க வாளை ஓங்கி வருபவனிடம் கூட "போர் இலக்கணப்படி வாளை ஓங்க வேண்டிய முறை இது" என்று முறையைச் சொல்லிக் கொடுத்து விட்டு அதன்பின் எதிர்ப்பதற்குத் தயாராகும் அறிவின் நாகரிகம் அது! வாளின் கூர்மைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக ஆற்றல் அந்த நாகரிகத்துக்கு உண்டு!

மகாமண்டலேசுவரரிடம் விடைபெற்றுக் கொண்டு இடையாற்று மங்கலம் திரும்பிய படகோட்டி அம்பலவன் வேளான் உடனே பறளியாற்றில் மூழ்கிய ஆயுதங்களை வெளியேற்ற ஏற்பாடு செய்தான். அவைகளை முறையாக வெளியேற்றி ஒழுங்குபடுத்த இரண்டு நாட்கள் ஆயின அவனுக்கு. மறுநாளே ஆயுதங்களையும், மகாமண்டலேசுவரர் தளபதிக்கென்று கொடுத்து அனுப்பிய ஓலையையும் கோட்டாற்றுப் படைத்தளத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டான் அவன். அவருடைய கட்டளைப்படியே தளபதியிடம் அதிகம் பேசாமல் ஆயுதங்களை அளித்த கையோடு ஓலையையும் அளித்து விட்டுத் திரும்பினான் அம்பலவன் வேளான்.

'குழைக்காதன் கடத்திக் கொண்டு வர முயன்று முடியாமற் போய்ப் பறளியாற்றில் கவிழ்க்கப்பட்ட ஆயுதங்களை மகாமண்டலேசுவரரே சிரத்தையாக எடுத்துத் தனக்கு அனுப்பிய நோக்கமென்ன?' - என்று புரியாமல் பயமும் திகைப்பும் கொண்டு, அவர் தனக்குக் கொடுத்தனுப்பியிருந்த ஓலையைப் பிரித்தான் தளபதி.

"அன்புள்ள தளபதி வல்லாளதேவனுக்கு, இடையாற்று மங்கலம் நம்பி எழுதும் திருமுகம். இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்த ஆயுதங்களை இரகசியமாகக் கடத்திக் கொண்டு போவதற்காகக் குழைக்காதன் மூலம் நீ இவ்வளவு பெரிய காரியங்கள் செய்திருக்க வேண்டாம். உனக்கு அவற்றில் விருப்பம் இருப்பதாக எனக்கு ஒரு வார்த்தை தெரிவித்திருந்தால் நானே மூட்டை கட்டி உனக்கு அனுப்பியிருப்பேன். என்னுடைய பலம் கேவலம் அந்த வாள்களின் நுனியில் அடங்கியிருப்பதாக நீ கணக்கிட்டிருந்தால் அது தப்புக் கணக்கு என்பதை இப்போதாவது உணர்ந்து கொள். வாளும், வேலும் எதிரிகளைத் தேடிச் சென்று தன் நுனியால் குத்த வேண்டும். ஆனால், தளபதி! அறிவின் நுனியில் எதிரிகள் தாமாகவே வந்து தங்களைக் குத்திக் கொண்டு மாய்கிறார்கள். இதை உனக்கு இப்போது கூறி வைக்கிறேன். கொள்ளைக் கூட்டத்தார் செய்வது போல் இப்படி ஒரு காரியத்தைத் தென்பாண்டி நாட்டுத் தளபதி செய்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து."

திருமுகத்தைப் படித்தவுடன் தளபதி திடுக்கிட்டான். அதிலிருந்த வார்த்தைகளெல்லாம் தேள்களாக மாறி அவனை ஒரே சமயத்தில் கொட்டுவது போலிருந்தது.

35. போர் முரசு முழங்கியது

கொற்கை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசை அரசர்களால் இரகசியமாக ஏவப்பட்ட ஆட்கள் என்னென்ன செயல்களைச் செய்தார்களோ, இதே வகையைச் சேர்ந்த செயல்களை மகாமண்டலேசுவரரால் தேர்ந்தெடுத்து அனுப்பப் பெற்ற ஆட்கள் வடக்கே செய்தனர். கோனாட்டு ஊர்ப்புறங்களிலும், கீழைப்பழுவூரைச் சேர்ந்த இடங்களிலும், சோழ மண்டலத்து எல்லைப் புறங்களிலும், பலப்பல மாறு வேடங்களில் சுற்றி வந்தனர் தென்பாண்டி நாட்டு ஆட்கள். தங்களைச் சேர்ந்த வீரன் ஒருவன் கொடும்பாளூர் அரண்மனையில் உளவறியும் போது பிடிபட்டு உயிர் இழக்க நேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்ட பின்பும் அவர்கள் தளர்ச்சியோ, பயமோ அடையவில்லை. அடிக்கடி மகாமண்டலேசுவரருக்குச் செய்தியனுப்பிக் கொண்டிருந்தனர் அவர்கள்.

இந்த நிலையில் கொடும்பாளூரில் ஒன்று கூடித் தங்கியிருந்த வடதிசையரசர்கள் நன்றாக விழிப்படைந்து விட்டார்கள். தென்பாண்டி நாட்டின் மேல் படையெடுப்பது பற்றி உண்மையிலேயே அவர்களுக்கு இப்போது பயமும், மலைப்பும் ஏற்பட்டிருந்தன. இலங்கைப் படை உதவியும், சேரர் படை உதவியும் தென்பாண்டி நாட்டுக்குத் கிடைத்தால் தங்கள் படையின் கூட்டணி என்ன ஆவதென்ற அச்சம் அவர்களுக்கு மெல்ல மெல்ல உண்டாகியிருந்தது. தேவராட்டியின் கொற்றவைக் கூத்தைக் கண்டுகளித்த மறுநாள் காலை தென் திசை ஒற்றனைக் கழுவேற்றிக் கொன்ற பின் அவர்கள் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தனர்.

மூன்றாம் முறையாகப் போர்த் திட்டங்களைப் பற்றிக் கலந்து பேச ஒன்று கூடிய போது முதல் இரண்டு கூட்டங்களிலும் இருந்த சுறுசுறுப்பும், ஆவலும் குன்றிச் சோர்ந்து தென்பட்டனர் அவர்கள். அந்த விதமான சோர்வையும் அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையையும் வளர விடக் கூடாதென்று கவலைப்பட்டவன் சோழன் ஒருவன் தான். தென் திசைப் படையெடுப்புக்கு வசதியாக இருக்குமென்று முன்பு உறையூரில் நடந்த முதற் கூட்டத்தில் தான் கூறிய வழிகள் அறவே தோற்று விட்டதனால் கொடும்பாளூரான் கூடத் தளர்ந்து ஒடுங்கியிருந்தான். அந்த நிலையில் சோழன் அவர்களுக்கு ஊக்கமூட்டிப் பேசத் தொடங்கினான்.

"நண்பர்களே! என் பாட்டனார் விஜயாலய சோழர் தொண்ணூற்றாறு விழுப்புண்களைத் தம் திருமேனியில் தாங்கிப் புகழ் பெற்றார். எந்தையார் ஆதித்த சோழர் பொன்னிவள நாட்டில் பாண்டியர்களையும், பல்லவர்களையும் களையென நீக்கித் தனிப்பெருஞ் சோழமண்டலங் கண்டு மகிழ்ந்தார். என்னுடைய ஆட்சிக் காலத்துக்குள் 'மதுரை கொண்ட கோப்பரகேசரி' என்ற சிறப்புப் பெயரை அடைய விரும்பினேன். ஓரளவு அடைந்தும் விட்டேன். மதுரை நகரத்தை வென்றது மட்டும் போதாது; பாண்டிய நாடு முழுவதும் வென்றால் தான் எனக்குப் பெருமை; என்னைச் சூழ்ந்துள்ள உங்களுக்கும் பெருமை. பின்னால் ஒரு சமயம் நமது வலிமையும், சூழ்நிலையும் இடங்கொடுக்குமானால் ஈழநாடு வரை படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூட எனக்கு ஆவல் இருக்கிறது. சில காரியங்களை நாம் எதிர்பார்த்தபடி நடத்தி வெற்றி பெற முடியவில்லை என்பதற்காக இப்படிச் சோர்ந்து போய்விடக் கூடாது. நாம் ஐந்து பேரும் யாருக்கு எந்த வகையில் குறைந்தவர்கள்? கீழைப்பழுவூர்ச் சிற்றரசரிடமும், கொடும்பாளூர் குறுநில மன்னரிடமும் வலிமையும் திறமையும் வாய்ந்த படைகள் இருக்கின்றன. இவற்றுடன் எனது சோழ மண்டலப் பெரும் படையும் சேர்ந்தால் நாம் பெருகி விடுகிறோம். அரசூருடையானும், பரதூருடையானும் படைத் தலைமை பூண்டு அருமையாகப் போர் புரிவதில் இணையற்றவர்கள். தென்பாண்டி நாட்டாருக்கு எவ்வளவுதான் படையுதவி கிடைக்கட்டுமே! நமக்கென்ன கவலை? நம்முடைய படைக் கூட்டுறவின் முன் அவர்கள் என்ன செய்ய முடியும்? மேலும் தென்பாண்டி நாட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்திகளால் அங்கும் நிலைமை அவ்வளவு தெளிவாக இருப்பதாகத் தெரியவில்லையே? இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்த பாண்டிய ம்ரபின் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போய்விட்டதாக நேற்று கொற்றவைக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொடும்பாளூரார் வந்து ஒரு செய்தி சொன்னார். நேற்றைக்குப் பிடிபட்ட அந்த ஒற்றனிடமிருந்து எவ்வளவோ இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்திருந்தேன். அவனோ கழுமரத்தில் உயிரைப் பலி கொடுக்கிற வரை ஒரு வார்த்தை கூட நமக்குச் சொல்லவில்லை. இராசசிம்மன் இலங்கையிலும், தாய்வழி மூலம் சேரர்களிடமும் படை உதவி பெறலாமென்று நம் காதில் செய்திகள் விழுகின்றன. அது எப்படியானாலும் நம்முடைய படையெடுப்பை நாம் உறுதி செய்து கொண்டு விட வேண்டியதுதான். உங்கள் கருத்துகளையும் மனம் விட்டுச் சொல்லிவிடுங்கள்."

சோழன் முகத்தையே பார்த்தவாறு பேச்சை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த நால்வரும் பேச்சு நின்றதும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"நேற்று நடந்த சம்பவத்திலிருந்து நம்முடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பாண்டி நாட்டு ஒற்றர்கள் போதுமான அளவு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே என்னால் அநுமானிக்க முடிகிறது" என்றான் கண்டன் அமுதன்.

"அதில் என்ன சந்தேகம்? நமது வசதிக்காக நாம் நம்முடைய ஒற்றர்களைத் தெற்கே அனுப்பியிருக்கிறோமல்லவா? அவர்களும் அதே வசதிக்காக ஒற்றர்களை இங்கே அனுப்பத்தானே செய்வார்கள்?" என்று சோழன் பதில் கூறினான்.

"இளவரசன் இராசசிம்மன் படை உதவி கோரி இலங்கைக்குப் போயிருக்கிறானா? அல்லது வஞ்சி மாநகரத்துக்குப் போய் மலைநாட்டுச் சேரர் படையைக் கொண்டு வரச் சென்றிருக்கிறானா? இரண்டுமே இல்லாமல் தான் தங்கியிருப்பது வெளியே பரவிவிடாமல் தென் பாண்டி நாட்டிலேயே தங்கியிருக்கிறானா?" என்று அரசூருடையான் கேட்டான்.

"எப்படியும் குமாரபாண்டியன் தென்பாண்டி நாட்டு எல்லைக்குள் இருக்க முடியாது! ஏனென்றால் நாம் அனுப்பிய ஆட்கள் இலங்கை போகும் வழியில் செம்பவழத் தீவில் அவனைச் சந்தித்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். ஒன்று அவன் இலங்கைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும் அல்லது இலங்கையிலிருந்து திரும்பி செம்பவழத் தீவிலேயே தங்கி மறைந்து வசிக்க வேண்டும்" என்று கொடும்பாளூரான் தன் அநுமானத்தைச் சொன்னான்.

"நாம் இன்னும் அநுமானங்களிலேயே உழன்று கொண்டிருப்பதில் பயனில்லை. சிந்தித்துக் கொண்டே இருக்கும் வரையில் அநுமானங்கள் பயன்படும். செயலில் இறங்கும் போது தீர்மானங்களுக்கு வந்து விட வேண்டும். இப்போது நாம் முடிவான திட்டத்துக்கு வந்து எண்ணங்களாலும் செயல்களாலும் ஒருமுகமாக ஒன்றுபடுகிற நேரம். எப்படியானாலும் படையெடுத்துச் சென்று பாண்டி நாட்டின் தென் கோடி வரை வென்றே தீருவது என்பது நம் நோக்கமாகிவிட்ட பின் தயங்குவதற்கு இடமில்லை. என் தீர்மானத்தை இப்போதே உங்களிடம் சொல்லி விடுகிறேன். தஞ்சையிலும், பழையாறையிலும், உறையூரிலுமாகப் பிரிந்திருக்கும் மூன்று பிரிவான சோழ நாட்டுப் படைகளும் இன்னும் சிறிது காலத்தில் கொடும்பாளூருக்கு வந்து சேர்ந்து விட ஏற்பாடு செய்யப் போகிறேன். முடிந்தால் இந்தப் படைகளில் ஒரு பகுதியைக் கடல் வழியாக விழிஞத்துக்கு அனுப்பித் தெற்கே இருந்தும் திடீர்த் தாக்குதலைச் செய்யலாம். அதைப் பற்றிப் பின்பு யோசிக்கலாம். கீழைப்பழுவூர்ச் சேனைகளையும் விரைவில் கொடும்பாளூருக்குக் கொண்டு வந்து விட வேண்டும். நமது வடதிசைப் பெரும்படை முதலில் ஒன்று கூடுமிடம் கொடும்பாளூராக இருப்பதில் உங்களில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. படைகளெல்லாம் கொடும்பாளூரில் வந்து கூடிய பின் அவைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். படையெடுப்பின் போது மொத்தமாக எல்லாப் படைகளையும் ஒரே வழியாகச் செலுத்திக் கொண்டு போய்ப் பாண்டி நாட்டில் நுழையக் கூடாது. கிழக்கு வழியாக ஒரு படையும், மேற்கு வழியாக ஒரு படையும் - இயன்றால் தெற்கே கடல் வழியாக ஒரு படையுமாக ஒரே சமயத்தில் போய் வளைத்துக் கொள்ள வேண்டும்" என்று சோழ மன்னன் திட்டத்தை விவரித்தான்.

"அப்படியானால் பறம்பு நாட்டில் தொடங்கித் திருவாதவூர் வழியாக ஒரு பகுதிப் படையையும், சிறுமலை, திருமால்குன்றம் வழியாக மற்றொரு பகுதிப் படையையும் அனுப்பலாம். இருபகுதிப் படைகளும் மதுரையில் சந்தித்துக் கலந்து பேசிக் கொண்டு மீண்டும் கிழக்கிலும், மேற்கிலுமாகப் பிரிந்து தென்பாண்டி நாட்டுக்குள் பிரவேசிக்கலாம்" என்று கண்டன் அமுதன் சோழனின் திட்டத்தையே மேலும் விளக்கினான்.

"செய்யலாம்! ஆனால் தென் பாண்டிப் படைகளும், நம் படைகளும் எந்த இடத்தில் சந்திக்குமென்று உறுதி சொல்வதற்கில்லை. எந்த இடத்திலும் திடீரென்று எதிர்ப்பட்டு நம்மைத் தாக்கலாம் அவர்கள்!" - இப்படிக் கூறியவன் பரதூருடையான். "மதுரையை நாம் வென்றிருந்தாலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அந்த நகரைக் காக்கவில்லை. ஆகவே அவர்கள் படை வலிமையால் மதுரையையும் கடந்து வந்து நம்மை எதிர்த்தாலும் அதைச் சமாளிக்க நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும்" என்று சோழன் மீண்டும் வற்புறுத்தினான்.

எல்லோரும் தம் படைகளைக் கொடும்பாளூருக்குக் கொண்டு வர ஒப்புக் கொண்டனர். உடனே அரண்மனை நிமித்தக்காரரை வரவழைத்துப் படை கொண்டு வருவதற்கு நல்ல நாளும், கோளும், வேளையும், குறித்துக் கொண்டனர் அவர்கள் ஐவரும். எல்லாப் படைகளும் வந்து தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு சோழன் கொடும்பாளூர் மன்னனை வேண்டிக் கொண்டான்.

எப்படியும் சில வாரங்கள் அல்லது சில தினங்களுக்குள் படையெடுப்பை ஆரம்பித்து விட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டனர். இரண்டு மண்டல காலம் என்று காலத்தை எல்லை கட்டி வரையறுத்தான் கண்டன் அமுதன். இரண்டு பிரிவாகப் பிரிந்து தென் திசை செல்லும் படைகளுக்கு அரசூருடையானும், பரதூருடையானும் தளபதிகளாக இருக்க வேண்டுமென்று மற்ற மூவரும் வேண்டிக் கொண்டனர். அவர்களும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்கள்.

"நம் படையெடுப்பில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்த எடுப்பிலேயே நமக்கு நல்ல சகுனந்தான் கிடைத்திருக்கிறது. நம்முடைய கழுமரம் போர் தொடங்கு முன்பே தென் பாண்டி நாட்டு வீரனொருவனைப் பலி வாங்கிவிட்டது!" என்று சொல்லிச் சிரித்தான் கொடும்பாளூர் மன்னன்.

"இந்த ஒரு பலி மட்டும் போதாது, இன்னும் எத்தனை தென் பாண்டி நாட்டு ஒற்றர்கள் சிக்கினாலும் உங்கள் கழுமரத்துக்குப் பலி கொடுக்கலாமே!" என்றான் அரசூருடையான்.

"படையெடுப்புத் தொடங்குவதற்கு முன் தெற்கே திரியும் நம் ஆட்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை இங்கே வரவழைத்து விட வேண்டும்" என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தான் சோழ மன்னன்.

அன்று மாலை கொடும்பாளூர்க் கோட்டையின் முன் புறத்து வாயிலுக்கு மேலே மதிலின் மாடத்தில் போருக்கு வீரர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அடையாளமான முரசம் இடி போல் ஒலித்தது. 'சேர வாரும் போர் வீரர்களே!' என்று அந்த முரசொலி அறை கூவிய போது கொடும்பாளூர் நகரை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் கூட்டமாகக் கோட்டையைச் சுட்டிக்காட்டி நின்று அந்த முரசு ஒலிப்பதை வேடிக்கைப் பார்த்தனர்.

36. கூற்றத் தலைவர்கள் குறும்பு

மகாராணியாரிடமும், மகாமண்டலேசுவரரிடமும் அவமானப்பட்டு, ஒப்புரவு மொழி மாறா ஓலை ஏற்றுக் கொள்ளப்படாமல் ஊர் திரும்பிய பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் தம் குறும்புகளைத் தொடங்கினார்.

ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் பண்புகளையும், செல்வத்தையும் கெடுத்துக் கொண்டு, தன்னையும் தீயவழியில் ஈடுபடுத்திக் கொள்கிற அளவு பொறாமை அவனைக் கெடுத்துவிடும்.

'அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.'

என்று குறளாசிரியர் பாடியதற்கு இலக்கியமாக மாறியிருந்தார் கழற்கால் மாறனார். தம்முடைய சதிக்கு உடந்தையான கூற்றத் தலைவர்களை மறுபடியும் பொன்மனைக்கு வரவழைத்தார் அவர். அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள், தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர் ஆகிய மூவரும் இரண்டாம் முறையாகப் பொன்மனைக்கு வந்தார்கள்.

கழற்கால் மாறனாருக்குச் செல்வாக்கைக் காட்டிலும் செல்வம் அதிகமாக இருந்தது. ஒளியும் அழகும் நிறைந்து ஊருக்கே தனிக் கவர்ச்சி பூட்டிக் கொண்டிருக்கும் அவருடைய மாளிகைக்கே அந்த ஊரின் பெயரை இட்டுச் சொல்லலாம் போலிருந்தது. அத்தகைய ஒளி நிறைந்த மாளிகையில் கூடி இருள் நிறைந்த எண்ணங்களைச் சிந்தித்தார்கள் கூற்றத் தலைவர்கள்.

"நான் அப்போதே நினைத்தேன்; பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இடையாற்று மங்கலம் நம்பி நம்முடைய எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார் என்று முன்பே எனக்குத் தெரியும்" என்று பரிமேலுவந்த பெருமாள் பேச்சைத் தொடங்கினார்.

"அது பெரிய மலை ஐயா! அதைச் சரிய வைக்க வேண்டுமானால் பூகம்பத்தைப் போல் வலிமையான பெரிய எதிர்ப்புகள் ஒன்று கூடி வீழ்த்த வேண்டும். நாம் நான்கு பேர்கள் அந்த மலைக்கு முன் எந்த மூலையோ!" என்றார் நன்கணிநாதர்.

"இப்படி வெளிப்படையாக ஒப்புரவு மொழி மாறா ஓலையைக் கொண்டு போய் மகாராணியாரிடம் கொடுத்து அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தது நமது பெரும் பலவீனம். நாம் யாரை எதிர்க்கிறோமோ அவருக்கே நம்முடைய எதிர்ப்புத் தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் வருமென்று தெரிந்திருந்தால் வெளிப்படையாக எதையும் செய்யாமல் மறைமுகமாக எதிர்ப்பு வேலைகளைச் செய்திருக்கலாம் நாம்" என்றார் அழகிய நம்பியார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வீற்றிருந்த கழற்கால் மாறனாருக்கு எரிச்சல் வந்தது. மகாமண்டலேசுவரரைப் பற்றி அப்போது யாராவது வாய் ஓயாமல் தூற்றிப் பேசினால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் போலிருந்தது. ஆனால் எல்லாரும் அவரைத் தூற்றுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய பெருமையை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சினால் தான் அவருடைய மனத்தில் கொதிப்பு மூண்டது. கொதிப்போடு பேசலானார் அவர்: "முதலில் மகாமண்டலேசுவரருக்கு வேண்டாதவர்கள் எல்லோரையும் நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். கட்சி கட்டிக் கொண்டு கிளம்பினால் தான் எதையும் திடமாக எதிர்க்க முடியும். தளபதி வல்லாளதேவனுக்கும், மகாமண்டலேசுவரருக்கும் ஏதோ சில பிணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. தென்பாண்டி நாட்டின் படைத் துறையைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இதே போல் அவர் மேல் ஒரு விதமான வெறுப்பு இருக்கும் போலும். அவற்றையெல்லாம் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."

"மாறனாரே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தளபதி வல்லாளதேவன் மகாமண்டலேசுவரரை வெறுக்கிறான் என்பதற்காக நம்மை ஆதரிப்பான் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. மகாமண்டலேசுவரர் என்ற பதவியையும் வளைந்து கொடுக்காத அறிவையும் தான் அவன் வெறுக்கிறான். நாமோ அந்தப் பதவியையும், அந்த மனிதரையும், அந்த அறிவையும் எல்லாவற்றையுமே வெறுக்கிறோம். வல்லாளதேவன் சூழ்ச்சிகளையும் அதிகாரத்தையும் எதிர்ப்பவனாக இருந்தாலும் கடமையையும் நேர்மையையும் ஓரளவு போற்றுகிறவனாக இருப்பான்" என்று பரிமேலுவந்த பெருமாள் கழற்கால் மாறனாருக்கு மறுமொழி கூறினார்.

"நான் சொல்லுவது என்னவென்றால் எட்டுத் திசையிலிருந்தும் ஒரே குறியில் கூர்மையான அம்புகளைப் பாய்ச்சுவது போல் மகாமண்டலேசுவரர் மேல் எதிர்ப்புகளையும், துன்பங்களையும் பாய்ச்ச வேண்டும். அவற்றைத் தாங்க முடியாமல் அவராகவே பதவியிலிருந்து விலகி ஓட வேண்டும்."

"மாறனாரே! அவர் அப்படித் தாங்க முடியாமல் விலகி ஓடிவிடுவாரென்று நீங்கள் நினைப்பதே பிழையான நினைவு. நாமெல்லாம் சில சந்தர்ப்பங்களில் விழித்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவோம். ஆனால் அவரோ தூங்கிக் கொண்டிருக்கும் போதும் விழித்திருப்பார். அவரை ஏமாற்றுவது அவ்வளவு எளிதில்லை" என்று நன்கணிநாதர் மறுபடியும் மகாமண்டலேசுவரரின் புகழ் பாடத் தொடங்கிய போது கழற்கால் மாறனாரின் முகம் சுருங்கிச் சிறுத்தது. அந்த முகத்தில் கடுமையான வெறுப்புப் பரவியது.

"முதல் காரியமாக எதிரியின் பெருமையைப் புகழும் இந்த ஈனத்தனம் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்" என்று உரத்த குரலில் எரிந்து விழுந்தார் பொன்மனைக் கூற்றத் தலைவர். அந்தக் குரலிலிருந்த வெறுப்பின் வேகம் மற்ற மூன்று பேரையும் நடுங்கச் செய்தது. மூன்று பேரும் தாங்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு மௌனமாக இருக்கத் தலைப்பட்டனர். கழற்கால் மாறனாரும் அந்த மௌனத்தைத்தான் விரும்பினார். அம்மூன்று பேரும் தமக்கு அடங்கியிருந்து தாம் சொல்பவற்றை மட்டும் கட்டளைகளைப் போல் கேட்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். அவர்கள் பதில் சொல்வதையோ சொந்த அபிப்பிராயங்களைச் சொல்வதையோ அவர் விரும்பவில்லை.

"'ஒப்புரவு மொழி மாறா ஓலையை ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று கூறியதுமே நாம் ஒத்துழையாமையும் எதிர்ப்பும் புரிவோம் என்பதை மகாராணியிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நான் மகாமண்டலேசுவரரையும் அருகில் வைத்துக் கொண்டே முன்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்த 'தென்னவன் தமிழ்வேள் பாண்டிய மூவேந்த வேளார்' என்ற பட்டத்தையும், ஏனாதி மோதிரத்தையும், திருப்பியளித்து விட்டேன். அப்போது அந்த இடையாற்று மங்கலத்து மனிதர் என்னைக் கேவலப்படுத்திப் பேசிய பேச்சுக்களை நினைத்தால் இப்போது கூட என் இரத்தம் கொதிக்கிறது" என்று சொல்லிக் கொண்டே வந்தவர், பேச்சை நடுவில் நிறுத்திக் கொண்டே அந்த மூன்று பேருடைய முகங்களையும் பார்த்துக் கொண்டார்.

பின்பு மேலும் தொடர்ந்து கூறலானார்: " இனிமேல் மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் சொல்கிறேன். தென்பாண்டி நாடு முழுவதும் பரவலாக அவர் மேல் ஒரு விதமான அதிருப்தி உண்டாகும்படி செய்ய வேண்டும். பாண்டிய மரபின் அரசுரிமைப் பொருள்கள் காணாமல் போனதற்கு மகாமண்டலேசுவரருடைய கவனக் குறைவுதான் காரணமென்று எல்லோரும் நினைக்கும்படி செய்ய வேண்டும். இளவரசன் இராசசிம்மன் நாட்டுக்கு வந்து மகாராணியாரைச் சந்திக்க விடாமல் அவனை எங்கோ கடல் கடந்து போகும்படி துரத்தியிருப்பவரும் அவர்தானென்று செய்தியைத் திரித்துப் பரப்பவேண்டும். அவருடைய கவனக்குறைவால் தான் கொற்கையில் குழப்பம் விளைந்தது, அவருடைய கவனக் குறைவால் தான் பகைவர் படையெடுப்பு நிகழப் போகிறது, அவருடைய கவனக் குறைவால் தான் மகாராணியின் மேல் யாரோ வேலெறிந்து கொல்ல முயன்றார்கள் என்று எல்லாச் செய்திகளையும் அவர் மேல் அதிருப்தி உண்டாக்குவதற்கு ஏற்ற விதத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போர் ஏற்பட்டு அதற்காகப் படை வீரர்கள் திரட்டுவதற்கு நம்முடைய கூற்றங்களுக்கு மகாமண்டலேசுவரரின் பிரதிநிதிகளாக எவரேனும் வந்தால், படைவீரர்களை அவர்களோடு சேர விடாமல் நாம் தடுக்க வேண்டும். அந்தத் துணிவு எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

"மாறனாரே! எங்களுக்கு அந்தத் துணிவு இதுவரையில் ஏற்படவில்லை. இப்போது நீங்கள் வற்புறுத்திச் சொல்கிறீர்கள். அதனால் நாங்களும் அந்தத் துணிவை ஏற்படுத்திக் கொள்கிறோம். போராடத் துணிந்த பின் தயங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா?" என்று நிதானமாக மறுமொழி கூறினார் பரிமேலுவந்த பெருமாள்.

"முடிந்தால் உங்களில் யாராவது ஒருவர் தளபதி வல்லாளதேவனையும் இரகசியமாகச் சந்தித்துப் பேசிப் பாருங்கள். அவனும் மகாமண்டலேசுவரரை எதிர்க்கும் ஒரு காரியத்திலாவது நம்மோடு சேருவானா இல்லையா என்பது தெரிந்துவிடும்" என்று கழற்கால் மாறனார் சொன்ன போது, வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளுகிறார் போல் அந்த மூன்று பேருடைய தலைகளும் மெல்ல அசைந்தன.

அன்று பொன்மனைக் கூற்றத் தலைவர் மாளிகையில் மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் பிரமாதமான விருந்து உபசாரம் நடைபெற்றது. நால்வகை உண்டிகளும், அறுசுவைப் பண்டங்களும், முக்கனிகளுமாக அப் பெருவிருந்தை உண்டபோது மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் அந்த வயதான மனிதர் மேல் நன்றி சுரக்கத்தான் செய்தது. அவ்வளவு உபசாரங்களைச் செய்கிறவருக்காக நன்றியோடு உழைக்க வேண்டுமென்ற ஆவலும் எழுவது இயற்கைதானே? கழற்கால் மாறனாரைச் சில நாட்களாவது மகாமண்டலேசுவரர் பதவியில் இருக்கச் செய்து பார்க்க ஆசைப்பட்டார்கள் அவர்கள்.

அந்தக் கூட்டம் நடந்த சில தினங்களுக்குப் பின் சூரியோதயத்துக்கு முன் நாய்கள் குரைப்பது போல், ஒவ்வொரு கூற்றத்திலும் மக்கள் மதிப்புக்குரியவராயிருந்த மகாமண்டலேசுவரரைப் பற்றிக் குறும்புத்தனமான கெடுதல் பிரசாரங்கள் இரகசியமாக ஆரம்பமாயின.

37. காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்

எதிலும் மனம் பொருந்தாமல், எண்ணங்கள் ஒட்டாமல் அந்த அரண்மனைக்குள் அதே நிலையில் நாட்களைக் கடத்த முடியாது போல் தோன்றியது மகாராணி வானவன்மாதேவிக்கு. நான்கு புறமும் நீந்தி மீளமுடியாதபடி பொங்கிப் பெருகும் வெள்ளப் பிரவாகத்தினிடையே அகப்பட்டுக் கொண்ட நீந்தத் தெரியாத மனிதனைப் போல் சிறுமை நிறைந்த சாமானிய மனிதக் குணங்களுக்கு நடுவே திகைத்து நின்றார் அவர். கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு வந்து பயமுறுத்திவிட்டுப் போனதிலிருந்து மனத்தின் சிறிதளவு நிம்மதியையும் இழந்து தவித்தார் அவர். அரண்மனைக்கு வெளியே போய்க் கோவில், குளம் என்று விருப்பம் போல் சுற்றவும் முடியவில்லை. உள்ளேயும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

மாலையில் புவனமோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு அரண்மனை நந்தவனத்தில் போய்ச் சிறிது நேரம் உலாவினார் மகாராணி. பூக்களையும், செடி கொடிகளையும் பார்க்கும் போதெல்லாம் மகாராணியின் மனத்தில் சற்றே உற்சாகத் தென்றல் வீசியது. ஒவ்வொரு பூவைப் பார்க்கும் போதும் ஓர் அழகான குழந்தையின் புன்முறுவல் பூத்த முகம் நினைவு வந்தது அவருக்கு. அடடா! அந்தப் பூக்களைப் பார்க்கும் போது இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் அவர் மனத்தில் பொங்குகின்றனவே! எல்லையற்றுப் பரந்த பேருலகத்தில் அங்கங்கே மனித வாழ்க்கையில் தென்படும் சிறுமைகளைக் காணாதது போல் கண்டு அளவிலும், உருவிலும் அடங்காத இயற்கைப் பெருந்தாய் இப்படிப் பல்லாயிரம் பல்லாயிரம் மலர்களாக மாறி ஏளனச் சிரிப்புக்களை எங்கும் வாரி இறைக்கின்றாளோ? அவை வெறும் பூக்களல்ல. பிரகிருதியின் அர்த்தம் நிறைந்த புன்னகைகள்!

நந்தவனத்துத் தடாகத்தில் இருந்த சில பெரிய செவ்வல்லிப் பூக்களையும் மூடும் நிலையிலிருந்த கமலங்களையும் பார்த்த போது மழலை மொழி பேசிக் கன்னங்குழியச் சிரிக்கும் குழந்தைப் பருவத்து இராசசிம்மனின் முகம் நினைவு வந்தது அவருக்கு. தடாகம் நிறைய மலர்ந்து தெரிந்த அத்தனை மலர்களும் குழந்தைப் பருவத்து இராசசிம்மனின் முகங்களாக மாறிச் சிரிப்பன போல் அவருக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. நெஞ்சத்து உணர்வுகளைக் கனிச் சாறாகப் பிழிந்து களிப்பூட்டும் அந்த இனிய பிரமையில் தம்மை முற்றிலும் மூழ்கச் செய்து கொண்டு பூக்களையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றார் மகாராணி. புவனமோகினியும் அருகில் நின்றாள். அப்போது ஒரு பணிப்பெண் ஓடி வந்து, "தேவி! கோட்டாற்றிலிருந்து அந்தச் சமணப் பண்டிதர்கள் தங்களைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தாள்.

"அவர்களையும் இங்கேயே நந்தவனத்துக்கு அழைத்துக் கொண்டு வா, அம்மா!" என்றார் மகாராணி. பணிப்பெண் போய் அழைத்துக் கொண்டு வந்தாள்.

"அடிகளே, வாருங்கள்! பயிர் வாடுகிற போதெல்லாம் தானாகவே வந்து பெய்கிற மழை மாதிரி வெளியே சொல்ல முடியாத ஊமைக் கவலைகளால் நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற சமயங்களிலெல்லாம் நீங்கள் காட்சியளித்து எனக்கு நம்பிக்கையளிக்கிறீர்கள்" என்று அவர்களை வரவேற்றார் மகாராணி.

"துன்பத்தைப் போக்குவதற்கு நான் யார் தாயே? உலகில் பிறந்து வாழ்வதே பெருந் துன்பம். நடக்கத் தெரிகிற வரை எழுவதும் விழுவதுமாகத் தள்ளாடும் குழந்தையைப் போலப் பிறவியை வென்று வீட்டையடைய பழகுகிற வரையில், பிறப்பும் வாழ்வும் துன்பங்களே தரும்.

'பிறந்தோர் உறுவது பெருகி துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது...'

என்று புலவர் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் எவ்வளவு அழகாக இந்தத் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்!" என்று சொல்லிக் கொண்டே, உடன் வந்த மற்றொரு துறவியோடு புல்தரையில் உட்கார்ந்தார் கோட்டாற்று பண்டிதர். மகாராணியும், புவன மோகினியும் அதே புல்தரையில் சிறிது தூரம் தள்ளி அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டனர்.

"அந்தப்புரத்துக் கட்டடங்களுக்குள்ளேயே அடைந்து கிடக்கப் பொறுக்காமல் நந்தவனத்துக்கு வந்தேன். அடிகளே! நல்லவேளையாக நீங்களும் வந்தீர்கள். இன்று உங்களைக் காணும் பேறு கிட்டுமென்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை."

"எங்கே அடைந்து கிடந்தால் என்ன அம்மா? இது சிறிய நந்தவனம். உலகம் பெரிய நந்தவனம். இங்கே செடிகளின் கிளைகளில் நாட்களை எல்லையாகக் கொண்டு பூக்கள் பூத்து உதிர்கின்றன. அங்கேயோ காலத்தின் கிளைகளில் விதியை எல்லையாகக் கொண்டு உயிர்ப் பூக்கள் பூத்து உதிர்கின்றன. இன்று உதிர்ந்துள்ள பூக்களே நாளை உதிரப் போகும் பூக்களுக்கு உரமாகும். இந்த உயிர்ப் பூக்களின் நந்தவனத்தில் எதையும் நடுவராக நின்று பார்த்துக் கொண்டே நடந்து போய்விட வேண்டும். இல்லாவிட்டால் துன்பம் தான்!" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கோட்டாற்றுப் பண்டிதர்.

"என்னைப் போன்றவர்களால் ஆசைகளையும் பாசங்களையும் சுமந்து கொண்டு அப்படி நடுவாக நடந்து போய்விட முடிவதில்லையே அடிகளே!"

"முடிகிற காலம் ஒன்று வரும், தாயே! அப்போது நானே உங்களைச் சந்தித்து நினைவூட்டுவேன். இன்று நான் இங்கே வந்தது உங்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பதற்காக அல்ல. நானும் இதோ உடன் வந்திருக்கும் இந்தத் துறவியும் மறுபடியும் வடதிசையில் யாத்திரை போகிறோம். அதற்கு முன் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாமென்று வந்தேன்."

"அடிகள் திரும்ப எவ்வளவு காலமாகுமோ?"

"யார் கண்டார்கள்? நான் திரும்புவதற்குள் எங்கெங்கே எத்தனை மாறுதல்களோ? தாயே! எப்போதும் நாளைக்கு நடப்பதை எண்ணித் திட்டமிடுகிற வழக்கமே எனக்கு இல்லை. நீரின் வேகத்தில் விழுந்த துரும்பு போல் கால ஓட்டத்தில் என்னைத் தள்ளிக் கொண்ட பின் என்னை இழுத்துச் செல்ல வேண்டியது அதன் பொறுப்பு. நாளைய தினத்தைப் பற்றிப் பெரிதாக எண்ணாதீர்கள். அது உங்கள் நினைப்பைப் போல் இல்லாமலும் போகலாம்!" எதையோ சுருக்கமாக மறைத்துச் சொல்லிச் சிரிப்பவர் போல் சிரித்தார் அவர்.

"அடிகளே! இன்றைய தினத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. அதனால் அதைப் பற்றி எண்ணுவதற்கு ஒன்றும் மீதமில்லை. நாளைய தினம் தான் எனக்கு தெரியாதது. என் கற்பனைகளுக்கு இடமளிப்பது. என் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு இன்பம் தருவது. நான் எப்படி அதை நினையாமல் இருக்க முடியும்?"

இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்பு விடைபெற்றுக் கொண்டு உடன் வந்தவரோடு திரும்பிப் போய்விட்டார். அந்தச் சில விநாடிகளில் இன்னதென்று புரியாத ஏதோ ஒரு பேருண்மையைத் தனக்குத் தெரியாமல், தனக்கு விளங்காமல், தானறிந்து கொள்ள முடியாமல் தன் மனத்தில் அவர் பதித்து விட்டுப் போய்விட்டது போல் மகாராணிக்கு ஓர் உணர்வு ஏற்பட்டு வளர்ந்தது.

இருட்டி நெடுநேரமாகி நந்தவனத்திலிருந்து திரும்பி இரவு உணவு முடித்துப் படுத்துக் கொண்ட பின்னும் அந்தச் சிந்தனை மகாராணியை விட்டு நீங்க மறுத்தது. முன்னும் பின்னும் தொடர்பற்ற, பல சிந்தனைகள், பல முகங்கள், பலருடைய பழக்கங்கள் எல்லாம் அவருக்கு நினைவு வந்தன. கழற்கால் மாறனாரின் பதவி ஆசை, மகாமண்டலேசுவரரின் கம்பீரம், சுசீந்திரத்தில் சந்தித்த திருவட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மை கனிந்த முகம், காந்தளூர் மணியம்பலத்தில் அந்த முதுபெரும் புலவர் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரை - எல்லாம் அவர் நினைவில் தோன்றி மறைந்தன. நினைவுகளின் வெள்ளத்தில் அவர் மனம் நீந்தத் தொடங்கியது.

நந்தவனத்துக் குளத்தில் பார்த்த செவ்வல்லிப்பூ சிறிது சிறிதாக விரிந்து, வடிவு பெருகி ஓர் அழகிய ஆண் குழந்தையின் முகமாக மாறிச் சிரிக்கிறது. சிரித்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மாறி மாறி வளர்ந்து அது ஒரு இளைஞனின் முகமாக விரிவடைகிறது. அந்த முகத்துக்குக் கீழே கைகளும், கால்களும், உடம்பும் உண்டாகி, ஒரு வாலிபன் எழுந்து நிற்கிறான். அந்த வாலிபன் வேறு யாருமில்லை, குமார பாண்டியன் இராசசிம்மன் தான்.

'அம்மா! உங்கள் எண்ணங்களை நான் நிறைவேற்றுவேனா, மாட்டேனா என்று கவலைப்படாதீர்கள். என்னுடைய வலிமை வாய்ந்த கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இருக்கின்றன' என்று இராசசிம்மன் அருகில் வந்து கைகூப்பி வணங்கிக் கொண்டே சொல்கிறான்.

'குழந்தாய்! நான் அவநம்பிக்கையடைந்து விடக் கூடாதென்பதற்காக நீ இப்படிக் கூறுகிறாய். நாளைக்கு நடக்கப் போவதைப் பற்றிச் சொல்ல உன்னால் எப்படி அப்பா முடியும்? அது நினைப்பைப் போல் இல்லாமலும் போகலாம். உனக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. நீயோ ஒரு பொறுப்பும் நினைவில்லாமல் மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறாய். முதலில் நீ தாய்க்கு மகனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு நாட்டுக்கு அரசனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பெண்ணுக்கு நாயகனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அப்பால் குழந்தைகளுக்குத் தந்தையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறந்தும் ஆண்டும் பெற்றும் பெறுவித்தும் முடிவதுதான் வாழ்க்கை. தாயைக் கூடச் சந்திக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் நீ பொறுப்புக்களை உணர்ந்து கொள்வது எப்போது? பொறுப்புகளை உணர்வதற்கே தெம்பில்லாத நீ அவற்றைச் சுமப்பது என்றைக்கோ? மகாமண்டலேசுவரர் நல்லெண்ணத்துடன் உன்னை இடையாற்று மங்கலத்துக்கு அழைத்து வந்து இரகசியமாகத் தங்க வைத்தால், நீ அவர் கண்களிலேயே மண்ணைத் தூவி விட்டு அரசுரிமைப் பொருள்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டாய். இலங்கை இலங்கை என்று நினைத்த போதெல்லாம் அங்கே ஓடி விடுகிறாய். அப்படி உனக்கு என்னதான் வைத்திருக்கிறதோ அங்கே? காசிப மன்னன் உனக்கு வேண்டியவனாக இருக்கலாம். அதற்காக எப்போதும் அவன் நிழலிலே போய் ஒதுங்கலாமா? முயற்சியும் ஊக்கமும் உள்ள ஆண் மகனுக்குப் பிறருடைய நிழலில் போய் ஒதுங்குவது என்பது இழுவு அல்லவா? வெளியில் யாருக்கும் தெரியாமல் உன்னையும் அரசுரிமைப் பொருள்களையும் தேடி அழைத்து வருவதற்கு அந்தரங்கமாக ஏற்பாடு செய்திருப்பதாக மகாமண்டலேசுவரர் கூறினார். அதனால் தான் ஆசைகளையும், பாசங்களையும் மனத்திலிருந்து களைந்தெறிந்து அழித்து விடாமல் வைத்துக் கொண்டு இன்னும் காத்திருக்கிறேன். 'உலகம் உயிர்ப் பூக்களின் நந்தவனம்! அங்கே எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் நடுவாக நடந்து போய்விட வேண்டும்' என்று கோட்டாற்றுப் பண்டிதர் எனக்குச் சொல்லுகிறார். குழந்தாய், உன் மேலும், உன் எதிர்காலத்தின் மேலும், நான் கண்டு கொண்டிருக்கும் கனவுகளாலும் நம்பிக்கையாலும் அவருடைய தத்துவத்தைக் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதற்காக மகாமேதையான அந்தப் பண்டிதரைக் கூட எதிர்த்து வாதம் புரிந்தேன் நான். நீ இங்கு இல்லாததால் அரசாங்கக் கவலைகளும் என்னிடமே வந்து சேர்கின்றன. உன்னைக் காண முடியாமல் படும் கவலைகளோடு சேர்த்து அந்தக் கவலைகளையும் நானே பட வேண்டியிருக்கிறது. நம்முடைய மகாமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் அறிவு வளத்துக்கும் சிந்தனைச் செழுமைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். பொறாமையின் காரணமாக அவரை அந்தப் பெரும் பதவியிலிருந்து கீழே இறக்கி விடுவதற்குச் சிலர் முயற்சி செய்கிறார்கள். பொன்மனைக் கூற்றத்துக் கிழவர் ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு என்னிடம் வந்து, மகாமண்டலேசுவரரைப் பற்றி என்னென்னவோ புறங் கூறினார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மகாமண்டலேசுவரரைப் பற்றி அவ்வளவு கேவலமாகப் புறங்கூறிய அந்தக் கிழட்டு மனிதர் அவரையே நேரில் பார்த்ததும் எப்படி நடுங்கிப் போனார் தெரியுமா? இராசசிம்மா! இடையாற்று மங்கலத்துப் பெரியவருக்கு மட்டும் அந்த இணையற்ற ஆற்றல் இருக்கிறது. அவரை எதிர்ப்பவர்களும், வெறுப்பவர்களும் கூட அவருடைய கண்களின் சால்பு நிறைந்த பார்வைக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி நின்று விடுகிறார்கள். பகைவரையும் பிணிக்கும் பேராற்றல் அந்தப் பார்வைக்கு இருக்கிறது. தென்பாண்டி நாட்டு அரசியல் தொடர்புடைய எல்லோருக்குமே காரணமற்ற ஒரு வகை அசூயை மகாமண்டலேசுவரர் மேல் இருக்கிறது. குழந்தாய்! அவரைப் போல் ஒரு திறமையான மனிதர் இல்லாவிட்டால் உடனடியாக நேர இருந்த வடதிசைப் பகைவர் படையெடுப்பைக் காலந்தாழ்த்தியிருக்க முடியாது. அவர் மகாமண்டலேசுவரராயிருக்கிற காலத்திலேயே நீ வந்து முடிசூட்டிக் கொண்டு பொறுப்பேற்றால் உனக்கு எத்தனையோ வகையில் பயன்படும். உலகம் நிலையாதது, நம்முடைய எண்ணங்களின் படியே எதுவும் நடப்பதில்லை என்பதையெல்லாம் நான் உணர்கிறேன், குழந்தாய்! ஆனால் உன்னைப்பற்றி நினைவு வரும் போது மட்டும் என்னால் அவற்றை நம்ப முடிவதில்லை. 'உலகம் நிலையானது. என் அருமைப் புதல்வனைப் பொறுத்த வரையில் நான் எண்ணியிருக்கிற படியே எல்லாம் நடைபெறும்' என்றே நினைத்து வருகிறேன் நான். நீ என்னை ஏமாற்றி விடாதே. என் நினைவுகளையும் கனவுகளையும் ஏமாற்றி விடாதே.' யாரோ கூப்பிடுவது போலிருந்தது.

"தேவி! இதென்ன? என்னென்னவோ பிதற்றுகிறீர்களே! நீங்களாகவே பேசிக் கொள்கிறீர்களே! உங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா? ஒரு வேளை மாலையில் குளிர்ந்த காற்றுப் படும்படி நந்தவனத்தில் உலாவியது ஒத்துக் கொள்ளவில்லையா?" என்று கேட்டுக் கொண்டே புவன மோகினி கட்டில் அருகே நின்றாள். மகாராணிக்கு நாணமாக இருந்தது. இராசசிம்மனிடம் பேச நினைத்தவைகளையெல்லாம் தூக்கத்தில் வாய் சோர்ந்து உளறி விட்டிருக்கிறோம் என்று அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

புவன மோகினி மகாராணிக்கு துணையாகக் கட்டிலுக்குக் கீழே தரையில் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். மகாராணிக்கு மறுபடியும் கோட்டாற்றுப் பண்டிதர் கூற்று நினைவுக்கு வந்தது.

'நாளைக்கு நடப்பதைப் பற்றி இன்றைக்கே திட்டமிடாதீர்கள். நாளைய தினம் என்பது இனிமேல் வருவது. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லாமலும் போகலாம் அது!'

மகாராணியின் அறிவுமயமான உள்ளம் இந்தத் தத்துவத்தை ஒப்புக் கொண்டது. ஆனால் உணர்வு மயமான உள்ளமோ ஒப்புக் கொள்ள மறுத்தது. 'நாளை என்ற ஒன்று இல்லாவிட்டால் அப்புறம் இந்த உலகத்தில் என்ன இருக்கிறது? அறிய முடியாத உண்மைகளும், தெரிய முடியாத எதிர்காலமும் இருப்பதனால் அல்லவா வாழ்க்கை சாரமாக இருக்கிறது? தாம் சுமக்கின்ற பொருள்களின் உயர்வும் பெருமையும் தெரியாமல் குங்குமமும், கற்பூரமும் சுமக்கும் கழுதைகளைப் போல் வாழ்வதனால் தான் சாதாரண மனிதர்களால் வாழ்க்கையின் நாளைய தினங்களைக் கற்பனை செய்ய முடிகிறது.'

இப்படி என்னென்னவோ எண்ணிக் கொண்டு படுக்கையில் புரண்டார், மகாராணி. சிந்தனைகளைத் தனக்குச் சாதகமாகத் தன் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் வளைத்துச் சிந்திக்கத் தொடங்கும் போது மனத்துக்கு ஒருவிதமான போலி உற்சாகம் மகிழ்ச்சி மயக்கமாக ஏற்படும். மகாராணியின் மனத்தில் அப்படி ஓர் உற்சாகம் அப்போது ஏற்பட்டிருந்தது. மறுநாள் பொழுது விடிந்ததுமே இராசசிம்மன் ஓடி வந்து விடப் போகிற மாதிரியும், உடனே அவனுக்கு முடிசூட்டிக் கண்டு மகிழப் போவதாகவும், தன் மனம் கற்பனை செய்கிற எல்லா நிகழ்ச்சிகளுமே உடனே நடந்து விடப் போவது போலவும் ஒரு மனநிலை ஏற்பட்டது. கண்களை விழித்துக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தவருக்கு எதிரே சிறிதாக மங்கலாக எரிந்து கொண்டிருந்த தூண்டா விளக்கின் சுடர் தெரிந்தது. இருட்டில் மலர்ந்த தங்க மலர் ஒன்றின் ஒற்றைத் தனி இதழ் காற்றில் அசைவது போல் கண்ணுக்கு அழகாகத் தெரியும் அந்தச் சுடரையே பார்ப்பது இன்பமாக இருந்தது மகாராணிக்கு. சுடரா அது? நெருப்புத் தாயின் பெண் குழந்தை. நெருப்பில் ஏதோ தெய்விக ஆற்றல் இருக்கிறது. அதனால் தான் அதை வணங்குவதற்கு ஏற்ற பொருளாக முன்னோர்கள் தேர்ந்திருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தச் சுடர் பெரிதாக எரிவது போல் அவருக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று.

பயத்தால் அவர் முகம் வெளிறுகிறது. கண்களை மூடிக் கொள்கிறார். ஆருயிர்க் கணவர் பராந்தக பாண்டியரின் சிதையில் அடுக்கிய சந்தனக் கட்டைகள் எரிந்த காட்சியை அவர் கண்களில் அவருடைய விருப்பமின்றியே நினைவுக்குள் கொண்டு வந்து தள்ளுகிறது ஏதோ ஒரு சக்தி. எட்டுத் திசையும் புகழ் மணக்கச் செங்கோல் நடத்திய அந்த மாபெரும் உடலை நெருப்புச் சூழ்ந்த போது, வானவன்மாதேவி நெருப்பைத் திட்டியிருக்கிறார்; தெய்வங்கள் தன்னை வஞ்சித்து ஏமாற்றியதாகத் தூற்றியிருக்கிறார். அதே நெருப்பின் சுடரையா இப்போது தெய்வமாக எண்ணினேன் என்று நினைக்கும் போதே உடல் புல்லரித்தது அவருக்கு. கண்களில் தன்னுணர்வு இல்லாமலே ஈரம் கசிந்து விட்டது. எத்தனை ஈமச் சிதைகளில் எத்தனை மனித உடல்களின் இரத்தத்தைக் குடித்த கொழுப்போ? அதனாலல்லவோ இந்தச் சுடர் இப்படிச் சிவப்பாக இரத்தத்தில் நனைந்த வெண்தாமரை இதழ் போல் எரிகிறது. அந்தத் தூண்டா விளக்கின் சுடரில் அழகு தெரியவில்லை அவருக்கு; தெய்வமும் தெரியவில்லை. அப்படியே எழுந்து பாய்ந்து அந்தச் சுடர்ப் பிழம்பைக் கைவிரல்களால் அமுக்கி நசுக்கி அழித்து விட வேண்டும் போல் வெறி உண்டாயிற்று. அந்த நெருப்பின் சவலைக் குழந்தையைக் கழுத்தை நெரித்து விட வேண்டும் போல் இருந்தது.

இப்படி ஏதேதோ சம்பந்தா சம்பந்தமின்றி நினைத்துக் கொண்டே தூங்கிப் போனார் மகாராணி. தூக்கத்தில் எத்தனையோ வேண்டிய, வேண்டாத கனவுகள் கவிழ்ந்தன. அகல - நீளங்களுக்குள் அடங்காமல் விளிம்பும் வேலியுமற்றுப் பரந்து கிடக்கும் காலம் என்னும் பெரு வெளியில் தம் கனவுப் பறவைகளைப் பறக்கச் செய்தார் மகாராணி. அலுப்பின்றிச் சலிப்பின்றிக் காலப் பெருவெளியின் தொடமுடியாத உயரத்தில் தூக்கம் கலைகிற வரை அந்தப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன.

இராசசிம்மன் எட்டுத் திசையும் வெற்றி வாகை சூடித் திரிபுவனச் சக்கரவர்த்தியாகிறான். திருமணம் புரிந்து கொள்கிறான். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. வானவன்மாதேவி தம் பேரனைக் கொஞ்சுகிறார். 'இராசசிம்மா! நீ குழந்தையாக இருந்த போது சிரித்ததைப் போலவே உன் மகனும் சிரிக்கிறான்' என்று புதல்வனிடம் வேடிக்கையாகச் சொல்கிறார் மகாராணி. 'அம்மா! என் மகனை என்னைக் காட்டிலும் பெரிய வீரனாக்கப் போகிறேன் பாருங்கள். ஈழத்தையும் கடாரத்தையும் கூட அவன் வென்று வாகை சூடுவான்' என்று மகனைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறான் இராசசிம்மன்.

'செய்தாலும் செய்வான், அப்பா! வாளாலும் வேலாலும் வெல்வதற்கு முன் சிரிப்பாலேயே அவைகளை வென்று விடுவான் போலிருக்கிறது உன் மகன்' என்று புன்னகையோடு பதில் சொல்கிறார் மகாராணி...

இவ்வளவில் மகாராணி கண் விழித்தார். விடிந்து வெயில் பரவி வெகு நேரமாயிருந்தது. படுத்த நிலையிலேயே கட்டிலில் கண் விழித்த அவர் பார்வையில் எதிரேயிருந்த அந்தத் தீபம் தான் பட்டது. அவர் திடுக்கிட்டார். அந்த ஒளியின் குழந்தை அணைந்து அழுது புகையாகி, நூலிழைத்துக் கொண்டிருந்தது. என்றுமே அணையாத விளக்கு அது. அன்று அணைந்திருந்தது. கண்ட கனவுக்கும் அதற்கும் பொருத்தமில்லாமல் பட்டது. மனத்தின் வேதனை அலைகளை அடக்கிக் கொண்டு அந்த அன்னை காலத்தின் அலைகளில் மிதப்பதற்காக எழுந்தாள். நீராடிய ஈரக் கூந்தலோடு கையில் பூக்குடலையுடன் புவன மோகினி அப்போது அங்கே வந்தாள்.

"பெண்ணே! இன்றைக்கு இந்த அணையா விளக்கு அணையும்படி விட்டு விட்டாயே! நீ பார்க்கவேயில்லையா?" என்று கேட்டார் மகாராணி.

"ஐயோ! அணைந்து விட்டதா? நான் பார்க்கவே இல்லையே?..." என்று பதறி, அதை ஏற்றுவதற்காக ஓடினாள் வண்ணமகள்.

பிரமை பிடித்தவர் போல் சூனியத்தை வெறித்து நோக்கியபடி மறுபடியும் கட்டிலிலேயே உட்கார்ந்து கொண்டார் மகாராணி.

"இரவில் எண்ணங்கள் உற்சாகமாக, நம்பிக்கையளிப்பவையாக, விரும்பத்தக்கவையாக இருந்தன. பகல் விடிந்ததுமே ஒளியின்றிப் புகைகிறது" என்று மெல்ல தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார் அவர். சாளரத்தின் வழியே நுழைந்த ஒளிக்கதிர்கள் அவருடைய நெற்றியில் படிந்து மினுமினுப்புக் காட்டின.

அன்றைய நாளின் விடிவு காலத்தின் வேகமான அலைகளில் தன்னை வேறொரு திசையில் இழுப்பதற்காக விடிந்தது போல் ஏதோ மனத்தில் அவருக்கு ஒரு குழப்பம் எழுந்தது. அப்போது கோட்டாற்றுப் பண்டிதர் பதில் பேசாமல் சிரித்து விட்டுப் போன அந்தச் சிரிப்பு அவருக்கு நினைவு வந்தது. முன்பொரு சமயம் அவர் ஓலையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போன பாட்டு நினைவு வந்தது.

"மகாராணி! வெயில் ஏறி வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே" என்று நீராடுவதற்கு நினைப்பூட்டும் நோக்கத்தோடு ஒரு பணிப்பெண் கூறினாள்.

"ஆமாம்! 'வெப்பம்' அதிகமாகிக் கொண்டுதான் போகிறது" என்று அதே வார்த்தைகளை வேறு பொருள் தொனிக்கத் திருப்பிச் சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவி.

1. நாளைக்கு நாண்மங்கலம்

கடலின் அடி மூலையும், தொடுவானமும் ஒன்று படுகிற இடத்தில் அளவும், பரப்புமற்ற பொன்னிறத்துப் பேரொளிப் பெருமலர் ஒன்று பல்லாயிரம் சோதிக் கதிர்களை நீட்டிக் கொண்டு மேலெழுந்தது! அந்த ஒளியின் எழுச்சியில் கடல் நீர் மாணிக்கக் குழம்பென மாறிச் செம்மை ஒளிர மின்னியது. அலைகள் கரையில் மோதும் ஒலியும், ஊழியர்கள் கப்பலை இழுத்து நங்கூரம் பாய்ச்சும் போது பாடும் ஒருவகைப் பாட்டின் கூட்டமான குரல்களும் கேட்டன. வைகறைக் காலத்தின் கீதமென்காற்று உடலைத் தழுவித் தண்மை பூசிச் சென்றது. கடற் பறவைகளின் குரல்களும் கேட்டன.

குமாரபாண்டியன் இராசசிம்மன் உறக்கம் கலைந்து புரண்டு படுத்தான். கண் இமைகள் கனத்துப் போய் விழிகளுக்குள் எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

"இளவரசே! எழுந்திருங்கள்; கரை வந்து விட்டது" என்று மெல்லத் தட்டி எழுப்பினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் கண்களைத் திறந்தான்.

அடடா! என்ன அற்புதமான காட்சி அவன் கண்களுக்கு முன் விரிகிறது! நீலக்கடல் முடியுமிடத்தில் தரைமேல் ஒரு பசுமைக் கடல் தென்படுகிறதே! கரைக்கு மேல் கண்பார்வை எட்டிப் பிடிக்கிற தொலைவு வரை அடர்த்தியான பசுமைக்காடு தெரிகிறது. கரைமேல் பிரயாணத்துக்கு ஏற்ற முறையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு உயர்ந்த சாதிக் குதிரைகளோடு நாலைந்து வீரர்கள் நின்று கொண்டிருப்பதையும் இராசசிம்மன் பார்த்தான்.

"சக்கசேனாபதி! காசிப மன்னர் வரவில்லை போலிருக்கிறது! யாரோ வீரர்கள் தான் குதிரையோடு வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு கணக்காக நாம் இன்று வருவோமென்று தெரிந்து கொண்டார்கள்? நாம் இந்தத் துறையில் இறங்குவோமென்று இவர்களுக்கு எப்படித் தெரிந்தது!" என்று கேட்டான் குமாரபாண்டியன்.

"நான் இங்கிருந்து புறப்படும்போதே இரண்டு மூன்று நாட்களைக் குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒரு நாள் வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் இடையாற்று மங்கலத்துக்கு உங்களைச் சந்திக்க வந்தேன். எந்த இடத்தில் இறங்குவதென்று அப்போது நான் உறுதி செய்யாததால் மாதோட்டம், புத்தளம் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் குதிரைகளும் ஆட்களும் காத்திருக்குமாறு ஏற்பாடு செய்து விட்டு வந்தேன். காசிப மன்னர் இன்றைக்கு அனுராதபுரத்தில் இருப்பார். நாம் அனுராதபுரத்தில் அவரைச் சந்திக்கலாம். அடடா! உங்களிடம் நான் முன்பே சொல்ல மறந்து விட்டேனே! நாளைக்குக் காசிப மன்னரின் பிறந்த நாள். வெள்ளணி விழாவாகிய நாண்மங்கல திருநாளைக் கொண்டாட அனுராதபுரத்தில் பிரமாதமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். தம்முடைய வெள்ளணி விழாவன்று பௌத்த பிட்சுக்களையெல்லாம் அவர்கள் இருப்பிடம் சென்று வணங்கி ஆசிபெற வேண்டுமென்பதால் தான் கோநகரமாகிய பொலன்னறுவையில் கொண்டாட வேண்டிய இவ்விழாவை அனுராதபுரத்துக்கு வந்து கொண்டாடுகிறார் அரசர்."

"சக்கசேனாபதி! அந்த ஒரு நாளிலாவது உள்ளும் புறமும் வெள்ளையாகத் தூய்மையோடு இருக்க எண்ணிப் பிறந்த நாளை வெள்ளணி விழாவாக அமைத்திருக்கும் நம் முன்னோர் மரபு எவ்வளவு அற்புதமானது பார்த்தீர்களா? 'வாழ்நாளெல்லாம், பொய்க்காக வாழ்ந்தாலும் அந்த ஒரு நாளாவது உண்மைக்காக வாழு' என்று அறிவுறுத்துவது போலல்லவா அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறினான் இராசசிம்மன்.

"இளவரசே! தென்பாண்டி நாட்டுக்குரியவர் என்பதை நீங்கள் தமிழைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நிரூபித்து விடுகிறீர்கள். நேற்றுக் கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டு பாடிய கவிதையோ உங்கள் நாவன்மையையும் எனக்குப் புரியவைத்துவிட்டது. உங்கள் கவித் திறனைப் பற்றி இதுவரை காசிப மன்னருக்குத் தெரியாது. தெரிந்தால் மிகவும் பெருமைப்படுவார்."

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கப்பல் முழுமையாக நங்கூரம் பாய்ச்சப்பட்டுக் கரையை அணுகியிருந்தது.

"இங்கிருந்து அனுராதபுரம் வரையில் நாம் குதிரையில்தான் போக வேண்டும். கடற்காய்ச்சலோடு உங்களால் குதிரைப் பயணம் செய்ய முடியுமா என்று தான் தயங்குகிறேன்" என்று கூறி, அருகில் நெருங்கிக் குமாரபாண்டியனின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார், சக்கசேனாபதி.

"அது ஒன்றும் எனக்கு அவ்வளவு சிரமமான காரியமில்லை. பசுமையும், வனப்பும், குளிர்ச்சியும் நிறைந்த இந்தக் காட்டு வழியில் பயணம் செய்யும் போது கடற்காய்ச்சலையே மறந்து விடுவேன் நான். உங்கள் நாட்டின் வனங்களில் வழி நெடுகப் பௌத்த ஆலயங்களும், பிட்சுக்களின் சாதுசங்கங்களும் நிறைய இருக்குமே. அன்புள்ள இடங்களும், அன்பு நிறைந்த மனிதர்களும் இருக்கும் போது துன்பங்களை யாராவது பொருட்படுத்துவார்களா?"

"அப்படியானால் இறங்கி வாருங்கள். அதோ குதிரைகளை வைத்துக் கொண்டு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். நாம் போகலாம்."

"நாம் போவது சரி, கப்பல் அறைக்குள் இருக்கும் பாண்டி நாட்டின் அரசுரிமைப் பொருள்களை முதலில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்பதை மறந்து விட்டீர்களா?"

"அதைப் பற்றித் தங்களுக்கு கவலையே வேண்டாம் இளவரசே! கப்பல் ஊழியர்களும், நம்மை வரவேற்க வந்திருக்கும் ஈழ நாட்டு வீரர்களும் அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று அரண்மனையில் சேர்த்து விடுவார்கள். அதற்கு நான் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்று சக்கசேனாபதி உறுதிமொழி கூறியதும் தான் குமாரபாண்டியனுக்கு மனச் சமாதானம் ஏற்பட்டது.

கப்பலிலிருந்து இறங்கி ஈழ நாட்டு மண்ணில் கால் வைக்கு முன் கடைசியாகத் திரும்பிப் பார்த்தான் இராசசிம்மன். கடந்து வந்த கடல் ஆர்ப்பரவம் செய்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தப் பெரிய கடல் முழுவதும் தன் தாய் வடித்த கண்ணீரோ என அவன் மனத்தில் ஒரு பிரமை எழுந்தது. துயரத்தை மனத்துக்குள்ளேயே அடக்கிக் கொண்டு மேல் தளத்திலிருந்து கீழே சென்று சக்கசேனாபதியுடன் கரையில் இறங்கினான்.

"சக்கசேனாபதி! இந்த இடத்தில் கடல்துறை மிக அழகாக இருக்கிறதே? இதற்கு முன் சில முறை உங்கள் நாட்டுக்கு வந்திருந்தும் இதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவே இல்லையே!" என்று அந்தப் பகுதியின் அழகைப் பார்த்து வியந்து வினவினான் இராசசிம்மன்.

"இதுவரை பார்க்க வாய்ப்பில்லாமல் போனதால் தானே இப்போது உங்களால் இதைப் பார்த்து வியக்க முடிகிறது. இளவரசே! இந்தப் புத்தளம் துறைக்குப் பழமையான பெயர் 'தமனன் தோட்டம்' என்பதாகும். உங்கள் நாட்டில் கடற்கரைத் துறைகளெல்லாம் பாலைவனம் போல் மணல் வெளிகளாகவோ, வறண்ட பனைமரக் காடுகளாகவோ இருக்கின்றன. ஆனால் இங்கே கடற்கரையிலும் பசுமை வளம் இருக்கும் துறைகள் உண்டு. அதனால் தான் அவற்றை மா(ந்)தோட்டம், தமனன் தோட்டம் என்றெல்லாம் வளமாகப் பெயர் சூட்டி அழகாக அழைக்கின்றோம் நாங்கள்."

"ஏதேது? உங்கள் நாட்டு மண்ணுக்கு வந்து இறங்கியவுடன் தற்பெருமை பேசும் பண்பு உங்களைப் பற்றிக் கொண்டுவிட்டதே! உங்கள் இலங்கையை நீங்களே புகழத் தொடங்கிவிட்டீர்கள்!" என்று சக்கசேனாபதியை வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன். ஆனால் அவரோ பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். "இளவரசே! செம்பவழத் தீவில் ஏதோ ஒரு சோழ நாட்டுக் கப்பலைப் பார்த்ததாக நீங்கள் கூறினீர்கள் அல்லவா? அந்தக் கப்பலைப் பற்றி எழும் சில சந்தேகங்கள் இன்னும் என் மனத்தில் நீங்காமல் இருந்து கொண்டே பயமுறுத்துகின்றன. எந்த வகையிலாவது சூழ்ச்சி செய்து உங்களைத் துன்புறுத்துவதற்கென்று சோழ நாட்டு ஆட்கள் அந்தக் கப்பலில் மறைவாகப் பின் தொடர்ந்து வருகிறார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, குமாரபாண்டியனின் முகத்தை உற்றுப் பார்த்தார் சக்கசேனாபதி. அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் இராசசிம்மன் திகைத்தான். அவன் முகத்தில் மருட்சியும், அச்சமும் தென்பட்டன. சக்கசேனாபதியால் அவ்வளவு சரியாக எப்படி அனுமானிக்க முடிந்தது என்றே அவன் வியந்தான். தான் தற்செயலாக அந்தச் சோழ நாட்டுக் கப்பலைப் பற்றிக் கூறியதை அவர் ஏன் இன்னும் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டு கவலைப்படுகிறார் என்பது தான் அவனுக்கு திகைப்பையளித்தது.

"சக்கசேனாபதி! அந்தக் கப்பல் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? நமக்கு இனிமேல் அதைப் பற்றிக் கவலை இல்லை. நாம் தான் வரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோமே!" என்று அவரிடம் பதிலுக்குக் கேட்டான் அவன்.

"அப்படியல்ல, இளவரசே! எப்போது நம் பகைவர்களின் கப்பல் நம்முடைய வழிகளில் தென்பட்டு விட்டதோ, அப்போதே அது கடைசிவரை நம்மைப் பின் தொடரலாம் என்று நாம் சந்தேகப்பட வேண்டியதுதான். அந்த மாதிரிக் கப்பல்கள் எவையேனும் வந்தால் தடுத்து நிறுத்தி, அதிலிருக்கும் ஆட்களைச் சிறைபிடிக்குமாறு ஏற்பாடு செய்து விடுவதற்காகத்தான் உங்களைக் கேட்கிறேன். அந்தத் தடுப்பு ஏற்பாட்டை இப்போதே இங்கேயே செய்து விடுவேன் நான்."

"அந்த மாதிரி ஓர் ஏற்பாடு நீங்கள் செய்ய முடியுமானால் நல்லதுதான்" என்று அதற்கு ஒப்புக் கொண்டான் குமார பாண்டியன். உடனே சக்கசேனாபதி அங்கிருந்த கடல்துறை ஆட்களிடம், "நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த இடத்திலோ அல்லது மாதோட்டத்திலோ இறங்குவதற்காக இன்றிலிருந்து இன்னும் சில நாட்களுக்குள் தமிழ்நாட்டுக் கப்பல்கள் எவையேனும் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு எங்களுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். இந்தக் கட்டளை அவசரமும், அவசியமும் வாய்ந்தது. நினைவிருக்கட்டும்" என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார். பின்பு குதிரைகளோடு காத்திருந்த ஈழ நாட்டு வீரர்களிடம் "நீங்களும் கப்பல் ஊழியர்களுமாகச் சேர்ந்து கப்பல் அறையில் இருக்கும் பாண்டிய நாட்டு அரசுரிமைப் பொருள்களைத் தக்க பாதுகாப்புடன் அரண்மனையில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார். குமார பாண்டியனின் வரவை அனுராதபுரத்திலிருக்கும் காசிப மன்னருக்கு முன் சென்று அறிவிப்பதற்காக அவர்கள் இருவரும் புறப்படுவதற்கு முன்பே ஒரு வாலிப வீரன் குதிரையிற் பறந்தான்.

அங்கே பசுமையான தென்னை மரங்களுக்கு நடுவே மிகப் பெரிய தேங்காய் மூடியொன்றைக் குடுமியோடு தலைகீழாகக் கவிழ்த்தது போல் வெண்ணிறத்துடன் கூடிய பௌத்த விஹாரக் கட்டடம் ஒன்று தெரிந்தது. குதிரையில் ஏறிக்கொள்வதற்கு முன்னால் அந்த ஆலயத்துக்குப் போய்க் குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் புத்தர் பெருமானை வணங்கிவிட்டு வந்தார்கள்.

மொட்டைத் தலையும் ஒளி நிறைந்த மஞ்சள் நிற ஆடையுமாகக் காட்சியளித்த புத்தபிட்சு ஒருவர் அந்த ஆலயத்தில் இருந்தார். அவர்களை அன்புடன் வரவேற்று, "உங்களுடைய பிரயாணம் சுகம் நிறைந்ததாக இருக்கட்டும்" என்று புன்னகையோடு வாழ்த்துக் கூறி அனுப்பினார் அவர்.

குதிரைகள் புறப்பட்டன. வெயில் படாத காட்டில் விரைவாகச் செல்லவல்ல சாதிப் புரவிகளில் பயணம் செய்வது காற்றில் பறப்பது போல் இன்பமாக இருந்தது. நண்பகல் நேரத்துக்கு ஒரு காட்டுச் சிற்றூரில் இருந்த பிட்சுக்களின் சங்கம் ஒன்றில் தங்கி, நாட் கடன்களையும் உணவையும் முடித்துக் கொண்டனர். பழகிய மனிதருக்கே வழிகள் மறந்து போகக்கூடிய காடு அது! கொஞ்சம் வழி தவறி, இடம் தவறி நடுக்காட்டில் போய் மாட்டிக் கொண்டால் கூட்டம் கூட்டமாகத் திரியும் யானை மந்தைகளிடம் சிக்கித் திண்டாட வேண்டியதுதான்.

"இளவரசே! இருட்டுகிற சமயத்தில் எந்த ஊர் வருகிறதோ அங்கே தங்கிவிட்டு, மறுபடியும் காலையில் பயணத்தைத் தொடங்கி அரசருடைய வெள்ளணி விழாவுக்கு அனுராதபுரம் போய்விடுவோம். இந்தக் காடுகளில் இரவுப் பயணம் ஆபத்தானது!" என்றார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "கண்ட இடங்களில் தங்கித் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கிடப்பதை விட இரவிலும் பயணம் செய்தால் சற்று முன்பாகவே போய் அரசருடைய நாண்மங்கலத்தில் கலந்து கொண்டு வெள்ளணிக் கோலத்தில் அவரைக் கண்டு மகிழலாம்" என்றான் அவன்.

"இரவில் தங்கி விடிவதற்கு ஐந்து நாழிகை இருக்கும் போது புறப்பட்டாலும் விழாவுக்கு நாம் போய்விட முடியும். இந்தப் பக்கத்துக் காடுகளின் நிலவரத்தை நன்கு தெரிந்து கொண்டு நான் சொல்கிறேன். என் வார்த்தையைத் தட்டாதீர்கள். இரவுப் பயணத்துக்கு இந்தக் காடு ஏற்றதில்லை" என்று மீண்டும் இராசசிம்மனைக் கெஞ்சினார் அவர். அவனோ 'இரவே போக வேண்டும்' என்று பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்றான்.

அப்போது மாலை மயங்குகிற நேரம் ஆகியிருந்தது. ஆதிபுரம் என்ற ஊரைக் கடந்து வடகிழக்காக அனுராதபுரத்துக்குச் செல்லும் காட்டுப் பாதையில் அவர்களுடைய குதிரைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதி மிக மிக அடர்ந்த பயங்கரமான வனப் பகுதி. நாகராகப் பெருவனம் என்று வழங்கும் அந்த இருண்ட காட்டில் அவர்கள் புகுந்த போது கதிரவன் மறைந்தான். ஏற்கெனவே இருந்த இருள் பெருகிக் கனத்தது.

குமாரபாண்டியனின் பிடிவாதத்தை எண்ணி மனம் வருந்திய சக்கசேனாபதி, 'கருணை நிறைந்த எங்கள் புத்தர் பெருமானே! எங்களுக்கு ஒரு துன்பமும் நேராமல் காப்பாற்றுங்கள்' என்று மனத்தில் தியானம் செய்தவாறே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தார். காட்டில் அங்கங்கே பிரும்மாண்டமான புத்தர் சிலைகளையும், பௌத்த விஹாரங்களையும் கண்ட போதெல்லாம் திரும்பத் திரும்ப இந்த ஒரே தியானம் தான் ஈழ நாட்டுப் படைத்தலைவரின் மனத்தில் உண்டாயிற்று.

காட்டில் ஓரிடத்தில் பௌத்த விஹாரத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்த புத்த பிட்சு ஒருவர் விளக்கோடு ஓடி வந்து அவர்கள் குதிரைகளை வழிமறித்து நிறுத்தினார். விளக்கோடு பதறிப் போய் ஓடி வந்த அவரைக் கண்டு என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவர்களும் குதிரைகளை நிறுத்தினார்கள். "பெரியவரே! நான் சொல்வதைக் கேளுங்கள். இந்த இருட்டில் பயணம் வேண்டாம். என்னோடு நீங்களும் இந்த இளைஞரும் இந்தப் பௌத்த விஹாரத்தில் தங்கிவிட்டு அதிகாலையில் போகலாம். நான் கூட அரசரின் வெள்ளணி விழாவைக் காண்பதற்காகக் காலையில் அனுராதபுரம் புறப்படலாமென்றிருக்கிறேன்" என்று சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னார் புத்த பிட்சு. சக்கசேனாபதி இராசசிம்மனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

"அடிகளே! உங்களுடைய அன்புக்கு நன்றி. பயத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும். புதிய இடத்தில் இந்தக் காட்டுக் குளிரில் எங்களுக்கு உறக்கம் வரப் போவதில்லை. ஆகவே எங்களுக்கு விடை கொடுங்கள்" என்று இராசசிம்மனே முகத்திலடித்தாற் போல் மறுத்துப் பதில் சொல்லிவிட்டான்.

"உங்கள் விருப்பம் அதுவானால் சரி! மறுப்பதற்கு நான் யார்?" என்று வழியை விட்டு விலகி நின்று கொண்டார் புத்த பிட்சு. குதிரைகள் மீண்டும் ஓடின.

"இளவரசே! அந்தப் புத்த பிட்சு வலுவில் ஓடிவந்து கூறியதைக் கேட்டீர்களா? இந்தக் காடுகளைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் யாரும் நம்முடைய பிரயாணத்தை அநுமதிக்க மாட்டார்கள்" என்றார் சக்கசேனாபதி. அதற்குக் குமாரபாண்டியன் மறுமொழி கூறவில்லை. அந்தச் சமயத்தில் தொலைவில் எங்கோ கூட்டமாக யானைகள் பிளிறும் ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது. மேலே தலையில் இடிக்கிறார் போல மரக்கிளைகள் பின்னிப் பிணைந்திருந்த ஒரு பகுதியில் தேர் வடம் போலப் பெரிய மலைப் பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்து அதைக் கண்டு கொண்டார் சக்கசேனாபதி. இராசசிம்மன் அதன் மேலே இடித்துக் கொள்கிறாற் போலக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போவதற்கு இருந்தான். நல்லவேளையாக சக்கசேனாபதி அவனைத் தடுத்து நிறுத்திக் குதிரையை விலக்கிச் செலுத்திக் கொண்டு போகச் செய்தார். வனத்தின் அந்த அடர்ந்த பகுதிக்குள் போகப் போகத்தான் தன்னுடைய துணிவு அசட்டுத்தனமானதென்று இராசசிம்மனுக்குப் புரிந்தது. அப்போதே சக்கசேனாபதி சொன்னதைக் கேட்டிருக்கலாமென்பதை அவன் உணரலானான். இரண்டாவதாக அந்தப் புத்த பிட்சு வந்து தடுத்த போதாவது கேட்டிருக்கலாமே என்று தன்னையே நொந்து கொள்ளும் நிலை அவனுக்கு ஏற்பட்டது. பயங்கரமான காட்டு மிருகங்களின் கூக்குரல்களெல்லாம் பாதைக்கு மிக அருகில் கேட்கத் தொடங்கின. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே குதிரைகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். இருள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்கவிடாமல் செய்தது. 'இளங்கன்று பயமறியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. அப்போதே கண்டித்துச் சொல்லித் தடுக்காமல் உடன் புறப்பட்டது என் தவறு' என்று சக்கசேனாபதி சிறிது சினத்தோடு நினைத்தார். அவருடைய கண்களின் பார்வை கூர்மையாகி, எதிரே வழியையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தன.

'இன்னும் சிறிது தொலைவு சென்றால் தென் கிழக்கே விசிதபுரத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வரும் சாலையொன்று காட்டுச் சாலையோடு ஒன்று கூடும். அந்த இடத்துக்குப் போனதும் இளவரசரைக் கடுமையாகக் கண்டித்து விசிதபுரத்துக்குக் குறுக்கு வழியாக அழைத்துப் போய்விட வேண்டும்' என்று மனத்துக்குள் திட்டமிட்டிருந்தார் சக்கசேனாபதி. விசிதபுரத்தில் ஆயிரம் பிட்சுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட மகாபௌத்த சங்கம் ஒன்று உண்டு. அந்தச் சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகளைச் சக்கசேனாபதிக்கு நன்கு தெரியும். அங்கே தங்கிவிட்டு விடிந்ததும் அனுராதபுரப் பயணத்தைத் தொடரலாமென்பது அவர் திட்டமாயிருந்தது. ஆனால் அந்தத் திட்டப்படி எதுவும் நடைபெறவில்லை. முற்றிலும் வேறான பயங்கர நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

காட்டுச் சாலையும் விசிதபுரத்துச் சாலையும் சந்திக்கிற இடம் வந்த போது இடிமுழக்கம் போல் யானைகள் பிளிறும் ஒலிகளும், மரக்கிளைகள் முறிகிற சத்தமும் காடே கிடுகிடுக்கும்படி எழுந்தன.

"இளவரசே! குதிரையை நிறுத்துங்கள்..." என்று கூச்சலிட்டார் சக்கசேனாபதி. குதிரைகள் நின்றன. எதிரே வழி மறிக்கிறார்போல் பத்திருபது கருங்குன்றுகள் நீண்ட தந்தங்களை ஆட்டிக் கொண்டு நின்றன. அந்த யானைகளின் தந்தங்கள் அவ்வளவு இருட்டிலும் 'பளிச்'சென்று தெரிந்தன. சக்கசேனாபதி "பேசாமல் நான் செய்வது போல் செய்யுங்கள்" என்று இராசசிம்மனிடம் கூறிவிட்டுக் குதிரை மேல் எழுந்து நின்றார். அப்படி நின்றவுடன் மேலே தாழ்வாக இருந்த ஒரு மரக்கிளை அவர் கைகளுக்கு எட்டியது. அதைப் பற்றிக் கொண்டு மரத்தில் ஏறினார் அவர். இராசசிம்மனும் அதே வழியைப் பின்பற்றி அதே மரத்தில் ஏறினான். யானைகளின் மதம் மரக்கிளைகளைச் சாடிக் கொண்டிருந்தது. "உயிரைப்பற்றி உறுதியாக நம்புவதற்கில்லை. குலதெய்வங்களைத் தியானித்துக் கொள்ளுங்கள்! விதி இருந்தால் பிழைப்போம்" என்று நடுங்கும் குரலில் குமாரபாண்டியனுக்குச் சொன்னார் சக்கசேனாபதி. தங்கள் உயிர்களைப் பற்றி அவர்கள் நம்பிக்கையிழந்து விட்ட அந்தச் சமயத்தில் விசிதபுரத்துச் சாலையில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது.

2. வெள்ளணி விழா

குமாரபாண்டியன் இராசசிம்மனும் சக்கசேனாபதியும் ஏறி உட்கார்ந்திருந்த மரக்கிளை பூகம்பம் ஏற்பட்டு ஆடுவது போல் ஆடியது! ஒரு யானைக் கூட்டமே சுற்றி மொய்த்துக் கொண்டு ஆட்டினால் மரம் பிழைக்குமா? அவர்கள் ஏறக்குறையத் தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கிய சமயத்தில்தான் விசிதபுரத்துச் சாலையில் அந்த ஒளி உதயமாயிற்று.

கையில் தீப்பந்தங்களோடு ஒரே மாதிரி மஞ்சள் உடை அணிந்த பௌத்த மதத் துறவிகளின் பெருங்கூட்டமொன்று அந்தச் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு ஒலி வேறுபாடின்றி ஒரே விதமான தொனியில் அந்தத் துறவிகள் சேர்ந்து பாடிக் கொண்டு வந்த பௌத்த சமய சுலோகங்கள் அந்தக் காடு முழுவதும் சாந்தி உணர்வை அள்ளிப் பரப்புவது போலிருந்தது. 'அமைதி அமைதி' என்று பெருங் குரலெடுத்து முழங்கிய அந்த இனிமை முழக்கம் கருணை மயமாக ஒலித்தது. உயிரினங்களின் வெறித்தனங்களையெல்லாம் அடக்கிக் கட்டுப்படுத்தித் தன் வசமிழக்கச் செய்து முடிவற்ற பேரமைதியில் ஆழ்த்தும் ஆற்றல் அந்த இன்னொலியில் இருந்தது போலும். "ஐயோ! பாவம் இத்தனை பிட்சுக்களும் வந்து இந்த யானைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறார்களே" என்று மெல்லிய குரலில் இராசசிம்மன் சக்கசேனாபதியின் காதருகில் சொன்னான். சக்கசேனாபதி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"பார்த்துக் கொண்டே இருங்கள், என் சிரிப்பின் காரணம் உங்களுக்குப் புரியும்."

விளக்கொளியும், கீத ஒலியும், பிட்சுக்களின் கூட்டமும் அருகில் நெருங்க நெருங்க அங்கே ஓர் அற்புதமான மாறுதல் ஏற்பட்டது. யானைகளின் பிளிறல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து, முடிவில் ஒலியற்று ஓய்ந்தன. மரங்கள் ஆட்டப்படவில்லை; கிளைகள் முறிக்கப்பட வில்லை. ஒலி ஓசைகளையெல்லாம் அடக்கிக் கொண்டு நிற்கும் ஒரு பேரமைதி தானாகத் திடீரென்று அந்தக் காட்டின் மேல் கவிழ்வது போல் இருந்தது. குமாரபாண்டியன் வியப்புடன் கீழே பார்த்தான். மந்தை மந்தையாகச் சாலையை அடைத்துக் கொண்டு நின்ற யானைக் கூட்டம் மெதுவாக அடங்கி, ஒடுங்கி, விலகி, காட்டுக்குள் புகுந்து மறைவது தெரிந்தது. யானைகள் நடந்து போவதற்குரிய முரட்டுத் தனமும், கூப்பாடும் சிறிதாவது இருக்க வேண்டுமே! இருளில் வாயும், உணர்வுமில்லாத கருங்குன்றுகள் சில எதன் போக்கிலோ கவரப்பட்டு விலகிச் செல்வது போல் மெல்ல மறைந்தது யானைக் கூட்டம். புத்த பிட்சுக்கள் அந்த இடத்தை அணுகும் போது சாலை வெறிச்சோடித் தூய்மையாக இருந்தது.

"சக்கசேனாபதி! இது என்ன விந்தை?" என்று வியப்பு மேலிட்ட குரலில் கேட்டான் இராசசிம்மன்.

"விந்தையுமல்ல, தந்திரமுமல்ல! புலன் உணர்வுகளை வென்ற தூய்மைக்கு உயிர்களின் மரியாதை! அன்பும், கருணையும் நிறைந்த குரல்கள் ஆயிரக்கணக்கில் ஒலிக்கும் போது அந்த ஒலி வெள்ளத்தில் மிருகத் தன்மை தேய்ந்து நெகிழ்ந்து விடுகிறது. தவத்துக்கு மட்டுமே உள்ள வலிமை இது."

"ஆச்சரியமான நிகழ்ச்சி தான்!"

"இப்போதே நாமும் கீழே இறங்கி இந்தப் புத்த பிட்சுக்களைத் தொடர்ந்தே அனுராதபுரம் போய்விடுவது நல்லது. இவர்கள் கூட அரசருடைய நாண்மங்கலத்துகாக அனுராதபுரம் போகிறவர்களாகத் தான் இருக்க வேண்டும். வாருங்கள், இறங்கி விசாரிக்கலாம்" என்று சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கீழே இறங்கினார்கள். அவர்களுடைய குதிரைகள் மரத்தின் கீழிலிருந்து சிறிது தொலைவு தள்ளி மூலைக்கொன்றாக நின்று கொண்டிருந்தன. புத்தபிட்சுக்கள் அவர்களிருவரும் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் வந்துவிட்டனர். சாலையில் நெடுந்தூரத்துக்குத் தெரிந்த பிட்சுக்களின் வரிசையைப் பார்த்த போது ஆயிரம் பேருக்குக் குறையாமல் இருக்கும் போல் தோன்றியது.

"இளவரசே! இவர்கள் எல்லோரும் விசிதபுரத்து மகாபௌத்த சங்கத்தைச் சேர்ந்த பிட்சுக்கள். இதோ, கூட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் கையில் சுவடியோடு நடந்து வருகிறாரே, இவர் தான் மகாபௌத்த சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகள். வாருங்கள்...! உங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்" என்று குமாரபாண்டியனின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு பிட்சுக்களின் கூட்டத்துக்கு முன்னால் சென்றார் சக்கசேனாபதி.

மரத்தடி இருட்டிலிருந்து யாரோ இருவர் வேகமாகத் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், சாலையில் முன்னேறிக் கொண்டிருந்த பிட்சுக்களின் கூட்டம் தயங்கி நின்றது. சக்கசேனாபதியும், குமாரபாண்டியனும் தத்துவசேன அடிகளுக்கு முன்னால் போய் வணங்கி நின்றார்கள்.

"நான் என் கண்களுக்கு முன்னால் காண்பது உண்மைதானா? விடிந்தால் அரசருடைய நாண்மங்கல விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டிய ஈழநாட்டுப் படைத்தலைவர் காட்டில் காட்சியளிக்கிறாரே?" என்று கலகலவென்று சிரித்தவாறே சக்கசேனாபதியை நோக்கிக் கேட்டார் பிட்சுக்களின் தலைவரான தத்துவசேன அடிகள்.

"அடிகளே! கடந்த சில நாட்களாகத் தென்பாண்டி நாட்டில் சுற்றிக் கொண்டு இருந்துவிட்டு இன்றுதான் இலங்கை மண்ணிலேயே கால் வைத்தேன். இதோ என் அருகே நிற்கும் இளைஞர் குமாரபாண்டியர் இராசசிம்மன் ஆவார்" என்று தொடங்கி, காட்டில் வந்து கொண்டிருக்கும் போது யானைகள் குறுக்கிட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் முதலானவற்றையும் கூறினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியனை அன்புடன் அருகில் அழைத்துத் தட்டிக் கொடுத்து ஆசி கூறினார் அடிகள். அவருடைய கருணை நிறைந்த மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போது அனுராதபுரத்துக் காட்டில் அங்கங்கே கண்ட புத்தர் சிலைகளின் முகங்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்ப்பது போலிருந்தது குமார பாண்டியனுக்கு.

"பரவாயில்லை! நீங்கள் இருவரும் விரும்பினால் எங்களுடனேயே அனுராதபுரத்துக்கு வரலாம். நாண்மங்கல விழாவுக்காக நாங்களும் அனுராதபுரம் தான் போகிறோம். கூட்டமாகப் போகும்போது வனவிலங்குகளின் தொல்லை இருக்காது!" என்று கூறிவிட்டுச் சிரித்தார் அவர். அந்தத் துறவியின் மலர்ந்த முகத்தில் சிரிப்புத் தோன்றி மறையும் அந்த ஒரு கணம் எதிரே இருந்து காண்பவர்களின் கண்களில் ஒரு புனிதமான ஒளியைக் காட்டி மறைத்தது. தூய வெள்ளை நிறத்துப் பூ ஒன்று மலர்ந்த வேகத்தில் மறைந்து விடுவது போன்றிருந்தது அந்தச் சிரிப்பு. இராசசிம்மன் கையில் இருந்த வலம்புரிச் சங்கைச் சற்று வியப்புடன் பார்த்தார் அடிகள்.

"இது நல்ல பயன்களைத் தரும் உயர்ந்த சாதி வலம்புரிச் சங்காயிற்றே? உங்களுக்கு எங்கே கிடைத்ததோ?" என்று குமாரபாண்டியனை நோக்கிக் கேட்டார் அவர். துறவிக்கு மறுமொழி சொல்லத் தயங்கிக் கொண்டே சக்கசேனாபதியின் முகத்தைப் பார்த்தான் அவன்.

"அடிகளே! குமாரபாண்டியர் இந்தச் சங்கின் மேல் மிகவும் ஆசைப்பட்டு இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை வாரிக் கொடுத்து இதை வாங்கியிருக்கிறார்கள். யானைக் கூட்டத்துக்குப் பயந்து கொண்டு மரத்தில் ஏறும் போது கூட இதைக் கீழே போட்டுவிட்டு ஏற மனம் வரவில்லை இவருக்கு. இதையும் இடுப்பில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு ஏறினாரே பார்க்கலாம்!" என்று பிட்சுக்களின் தலைவருக்கு மறுமொழி கூறிவிட்டு ஓரக் கண்ணால் குறும்புத்தனமாகக் குமார பாண்டியனைப் பார்த்தார் சக்கசேனாபதி. இராசசிம்மன் அந்தப் பார்வைக்கு நாணி எங்கோ நோக்குவது போல் தலையைக் குனிந்தான். குதிரைகளை அவரவர் பக்கத்தில் நடத்திச் செலுத்திக் கொண்டே அவர்களும் பிட்சுக்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள். பிட்சுக்களின் பிரயாண காலத்தில் பாடிக் கொண்டு சென்ற கீதங்களை அவர்களும் சேர்ந்து பாடினார்கள். அருள் நிறைந்த மனிதர்களோடு நடந்து சென்ற அந்தப் பயணத்தில் பொழுது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கு வெளுக்கத் தொடங்கும் புலர் காலை நேரத்தில் அவர்கள் அனுராதபுரத்துக்குள் நுழைந்தார்கள். அந்தப் பெரும் நகரம் தான் அன்றைக்கு வைகறையிலே எவ்வளவு கோலாகலமாக இருந்தது! எங்கு பார்த்தாலும் புதுமணல் பரப்பிய அலங்காரப் பந்தல்கள், வாழையும், பனையும், கமுகும், மாவிலையும் கட்டிய திருத்தோரணங்கள், செவிகள் நிறைய இடைவிடாமல் கேட்கும் மங்கல வாத்தியங்களின் இனிய ஒலிகள்; நகரம் முழுவதும் பூக்களின் நறுமணமும் அகிற்புகை வாசனையும் பரவின. தெருக்களெல்லாம் ஒரே கூட்டம். முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்து கொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு காட்சிகளும் சேர்ந்து கொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன.

பௌத்த விஹாரங்களிலெல்லாம் ஒளிச் சுடர்கள் பூத்தது போல் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். பிட்சுக்களின் கீத ஒலிகள், 'அரசருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமாறு' வேண்டிக் கொண்டிருந்தன. தெரு ஓரங்களிலும் பௌத்த விஹாரங்களுக்கு அருகிலும் வண்ணக் காடுகள் முளைத்துப் படர்ந்து மலர்ந்தது போல் பூக்களை மலை மலையாகக் குவித்திருந்தார்கள். பொன் நிற உடலும், மின்னலென இடையும், புன்னகை இதழ்களும், அன்ன நடையுமாகத் தேவலோகத்து நாட்டிய சுந்தரிகளைப் போல் இளம் பெண்கள் இரண்டு உள்ளங் கைகளிலும் மலர்களை ஏந்திக் கொண்டு புத்தர் பெருமானை வழிபடச் சென்று கொண்டிருந்தார்கள்.

அக நகரத்துக்குள் நுழையும் எல்லை வந்தவுடனே பௌத்தத் துறவிகள் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். அவர்களுடைய மடம் புறநகரத்தில் இருந்ததால் அங்கே போய் நீராடல் முதலிய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அதன் பின் அரசரைக் காண வருவதாகக் கூறிச் சென்றார் தத்துவசேன அடிகள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் தங்கள் குதிரைகளில் ஏறிக் கொண்டு அரசரைக் காண விரைந்தார்கள். வீதிகளில் கூட்டமாக இருந்தவர்களில் அடையாளம் புரிந்து கொண்டு சிலரும், புரிந்து கொள்ளாமற் சிலரும் குதிரைகளில் செல்லும் அவர்களை வியப்போடு ஏறிட்டு நோக்கினார்கள். நன்றாக ஒளி பரவாத அந்த மெல்லிருள் நேரத்தில் நகரத்தின் அலங்கார ஒளிகள் அங்கங்கே இருந்த ஏரிகளின் நீர்ப் பரப்பில் பிரதிபலித்தன. நகரின் கிழக்கே தொலைவில் மகிந்தலைக் குன்றத்தின் உச்சியில் பெரிதாக எரிந்து கொண்டிருந்த சோதியைக் காணும் போது குமாரபாண்டியனுக்கு ஏதேதோ முன் நினைவுகள் உண்டாயின. பழமையான காலத்தின் சுவடுகளும், கலைச் சுவடுகளும் படிந்த பௌத்த நாகரிகத்தின் கம்பீரத்தைக் காட்டும் அந்த நகரத்தின் வீதிகளில் குதிரையில் சென்ற போது சோர்வை விரட்டும் உற்சாகமும், சுறுசுறுப்பும் வந்து விட்டாற் போலிருந்தது இராசசிம்மனுக்கு.

அவர்களுடைய குதிரைகள் அரச மாளிகையின் அண்மையில் திரும்பிய போது முற்றிலும் யானைத் தந்தத்தினால் இழைத்துச் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகிய பல்லக்கு ஒன்று எதிரே வந்தது. பூம்பட்டுத் திரையை விலக்கிக் கொண்டு அந்தப் பல்லக்கிலிருந்து ஒரு செந்தாமரை முகம் வெண் முல்லைச் சிரிப்போடு கருங்குவளைக் கண்களை விழித்துக் குமாரபாண்டியனைப் பார்த்தது. "அடேடே! கனகமாலையல்லவா? நீ எப்போது இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்தாய்?" என்று பல்லக்கிலிருந்து தலை நீட்டிய அந்தப் பெண்ணை விசாரித்துக் கொண்டே குதிரையை நிறுத்திக் கீழே குதித்தான் இராசசிம்மன்.

"ஓ! இளவரசி பௌத்த விஹாரத்துக்கு வழிபாடு செய்வதற்குப் புறப்பட்டு விட்டாற் போலிருக்கிறது" என்று புன்சிரிப்புடன் அந்தப் பெண்ணை நோக்கிக் கூறியவாறே சக்கசேனாபதியும் கீழே இறங்கினார்.

காணும் கண்களை மயக்கி அறிவிழக்கச் செய்யும் அபூர்வ எழில் நிறைந்த அந்த இளம் பெண் மேட்டிலிருந்து பள்ளத்துக்குத் தாவும் புள்ளி மானைப் போல் பல்லக்கிலிருந்து துள்ளிக் குதித்துக் கீழே இறங்கினாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. பனித்துளி நீங்காத புது மலர்ச்சியோடு கூடிய தாமரைப் பூக்கள் அந்தக் கூடையில் நிறைந்திருந்தன. நிலவின் குளிர்ச்சியும், கதிரின் ஒளியும், பூவின் மலர்ச்சியும், கருவண்டின் துறுதுறுப்பும் பொருந்திய தன் காவிய நயனங்களால் தலையை ஒரு பக்கத்தில் நளினமாகச் சாய்த்துக் குமாரபாண்டியனை நோக்கி முறுவல் பூத்தாள் அந்தப் பெண். சிவந்த வாயிதழ்களுக்கு நடுவே வரிசையாக முல்லை மலர்ந்தது. அந்தச் சிரிப்பில், அந்தப் பார்வையில் இங்கிதமான நளினத் தலையசைப்பில் இளம் பெண்ணுக்கே உரிய நாணத்தின் கனிவு துடித்தது.

"சக்கசேனாபதி! காசிப மன்னரின் பெண் கனகமாலைதானா என் முன்னே நிற்கிறாள்? இவ்வளவு நாணமும், வெட்கமும் வாய் திறந்து பேச முடியாத கூச்சமும் இவளுக்கு எங்கிருந்து வந்தன?" என்று கேட்டான் குமாரபாண்டியன்.

"சேனாபதித் தாத்தா! குமாரபாண்டியருக்காக அரசர் அரண்மனையில் காத்துக் கொண்டிருக்கிறார். விரைவாக அவரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்" என்று குமார பாண்டியனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு, பேச வெட்கப்படுகின்றவளைப் போல் சக்கசேனாபதியிடம் கூறினாள் கனகமாலை.

மதமதவென்று வளர்ந்து கனிந்து நிற்கும் அந்தப் பெண்மையின் செழிப்பு இராசசிம்மனின் கண்களைக் கூசச் செய்தது. தன் கையிலிருந்து பூக்கூடையை அவர்கள் இருவருடைய கையிலும் கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டாள் அவள். கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது எதிரே தங்களுக்கு வேண்டிய மனிதர்களைச் சந்தித்தால் பூக்களை அவர்கள் கையில் கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொள்வது ஒரு மரியாதையான வழக்கம். குமார பாண்டியன் பூக்கூடையைக் கையிலே வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுப்பதற்குள் ஒரு குறும்பு செய்தான்.

"கனகமாலை! இந்த நாண நாடகங்களெல்லாம் என்னிடம் வேண்டாம்! நான் உனக்கு அந்நியனில்லை. என்னிடம் வாய் திறந்து பேசினாலொழிய கூடை திரும்பக் கிடைக்காது!" என்றான்.

"ஆகா! அதற்கென்ன? இப்போது பூக்கூடையைத் திருப்பிக் கொடுங்கள். கோவிலுக்குப் போய்விட்டு அரண்மனைக்குத் திரும்பியதும் உங்களிடம் வட்டியும் முதலுமாகப் பேசித் தீர்த்து விடுகிறேன்" என்று தலையைக் குனிந்து கொண்டு வெட்கத்தோடு பதில் கூறினாள் அவள். குமாரபாண்டியன் சிரித்துக் கொண்டே பூக்கூடையை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவள் துள்ளிக் குதித்துப் பல்லக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பல்லக்குப் புறப்பட்டது. அவர்கள் குதிரைகளும் அரச மாளிகையை நோக்கி முன்னேறின.

சக்கசேனாபதி இராசசிம்மனை நோக்கிக் கேட்டார். "இளவரசே, நீங்கள் முதன் முறையாக இலங்கைக்கு வந்திருந்த போது இந்தப் பெண்ணுக்குச் சிறிது காலம் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தீர்களே நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது! ஆனால் இவ்வளவு மாறுதல்களை எதிர்பார்க்கவில்லை" என்றான் இராசசிம்மன்.

"பெண்கள் பருவ காலத்தில் கலியாண முருங்கை மரம் போல் மிக வேகமாக வளர்வது இயல்பு இளவரசே!" என்று கூறி நகைத்தார் சக்கசேனாபதி.

அரச மாளிகையின் வாசலில் காசிப மன்னர் பிறந்த நாளுக்குரிய வெள்ளணித் திருக்கோலத்துடன் அமைச்சர்கள் பிரதானிகள் புடை சூழ இராசசிம்மனைக் கோலாகலமாக வரவேற்றார். அவன் குதிரையிலிருந்து இறங்கியதுமே ஓடிவந்து அன்போடு அணைத்துத் தழுவிக் கொண்டார் ஈழ நாட்டு மன்னர். "இராசசிம்மா! நீ இன்று வந்தது மிகப் பொருத்தமான வரவு. என்னுடைய பாக்கியம்" என்று பெருமிதத்தோடு கூறினார். அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாகச் செய்யப் பட்டிருந்தன. அதன் பின் அன்று முழுவதும் குமாரபாண்டியனுக்குத் தன்னை நினைத்துப் பார்க்கவே நேரம் இல்லை. வெள்ளணி விழாவின் உற்சாகத்தில் மூழ்கிப் போனான் அவன். காசிப மன்னர் அனுராதபுர நகரத்திலுள்ள ஒவ்வொரு பௌத்த விஹாரத்துக்கும் அவனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தார். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் பிறந்த நாள் பரிசளிப்புகளை வழங்கினார். அந்த ஆரவாரங்களுக்கு நடுவே குமாரபாண்டியனுக்கு அவரிடம் அதிகம் பேச நேரமில்லை. அவருக்கும் குமாரபாண்டியனிடம் விரிவாக எதையும் விசாரித்துத் தெரிந்து கொள்ள அவகாசமில்லை. கனகமாலை இரண்டொரு முறை அவனைச் சந்தித்த போது புன்முறுவல் புரிந்தாள். இப்படியாகக் குமாரபாண்டியன் அந்த நாட்டில் கால் வைத்த முதல் நாள் உல்லாசமாகக் கழிந்தது.

3. கனகமாலையின் புன்னகை

இந்தக் கதையில் திடீரென்று எழிலோவியமாக வந்து தோன்றிக் குமாரபாண்டியனையும், நமது நேயர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் 'கனகமாலை' என்னும் பேரழகியைப் பற்றி இங்கே சிறிது விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைய ஈழநாடு மூன்று பெரும் பிரிவுகளாக இலங்கியது. தென் கிழக்குப் பகுதி 'உரோகண ரதம்' என்றும், நடுப்பகுதி 'மாயா ரதம்' என்றும், வடபகுதி 'இராச ரதம்' என்றும் பெயர் பெற்றிருந்தன. வடக்குப் பகுதியாகிய இராச ரத நாட்டில் தான் அனுராதபுரம், பொலன்னறுவை முதலிய கோநகரங்கள், கலைவளம் நிறைந்த ஊர்கள் எல்லாம் இருந்தன. தென்கீழ்ப்பகுதியாகிய உரோகண ரதத்திலிருந்து சிற்றரசன் ஒருவனின் புதல்வியைக் காசிப மன்னர் தம் இளமையில் காதலித்து மணம் புரிந்து கொண்டிருந்தார். அவளிடம் அவருக்குப் பிறந்த பெண் தான் கனகமாலை. காசிப மன்னரின் உள்ளத்தில் அந்தப் பெண்ணின் மேல் தனிப்பட்ட பாசமும் உரிமையும் உண்டு. அவருடைய செல்லப் பெண் கனகமாலை.

கனகமாலைக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போதுதான் முதன்முறையாகக் குமாரபாண்டியன் இலங்கைக்கு வந்திருந்தான். அப்போது காசிப மன்னருடைய வேண்டுகோளின்படி சிறிது காலம் கனகமாலைக்குத் தமிழ் கற்பித்தான் அவன். கனகமாலைக்கு நினைவு மலராத பேதமைப் பருவம் அது. இரண்டாவது முறையும், அதன் பின்பும் அவன் ஈழ நாட்டுக்கு வந்த போது கனகமாலையைச் சந்திக்க முடியவில்லை. அப்போதெல்லாம் தன் தாயோடு கனகமாலை உரோகண தேசத்துக்குச் சென்று தங்கியிருந்ததால் குமாரபாண்டியன் அவளைக் காண முடியாமற் போயிற்று. மீண்டும் இப்போது பருவச் செழுமை கனிந்த கன்னியாக அவளைத் தன் முன் கண்ட போது அவனுக்கு அளவிலடங்காத வியப்பு ஏற்பட்டது. அவன் ஏறக்குறைய மனத்துக்குள்ளேயே மறந்து போய்விட்ட அழகிய உண்மை ஒன்று 'நான் வளமாக வளர்ந்து எழில் கனிந்து நிற்கிறேன்' என்று முன் வந்து நினைவூட்டுவது போலிருந்தது கனகமாலையை மீண்டும் சந்தித்தது. சிரிப்பும், விளையாட்டும், கேலியும், கும்மாளமுமாகப் பொலன்னறுவையின் அரண்மனையில் அந்தச் சிறுமிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த பழைய நாட்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்த நினைப்பு ஆறுதலாக, இனிமையாக, நிறைவுடையதாக அவன் மனத்தில் விளங்கியது. வெள்ளணி விழா முடிந்த மறுநாள் மாலையில்தான் இராசசிம்மனும், காசிப மன்னரும் தனியே சந்தித்து விரிவாகப் பேசுவதற்கு நேரம் வாய்த்தது. தென்பாண்டி நாட்டு நிலையை அவருக்கு விளக்கிச் சொன்னான் இராசசிம்மன். வடக்கேயிருந்து பகையரசர்கள் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவரிடம் குறிப்பிட்டான் அவன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவர் கூறலானார்: "இராசசிம்மா இதுவரையில் நீ கூறியவற்றையெல்லாம் கேட்டேன். தென் பாண்டி நாட்டின் உண்மையான நிலை இப்போது எனக்குப் புரிகிறது. இம்மாதிரி பகைவர் படையெடுப்பு ஏற்படும் நிலை வந்து முடிவு எப்படி எப்படி ஆகுமோ என்று பயந்துதான் தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்களையும் உங்களுடன் இங்கேயே எடுத்துக் கொண்டு வந்து விடும்படி சக்கசேனாபதியிடம் நான் கூறியனுப்பினேன். வெற்றியோ, தோல்வியோ விளைவு எப்படி இருந்தாலும், நாம் நம்முடைய பொருள்களைத் தற்காப்பாக வைத்துக் கொண்டு விட வேண்டும்." காசிப மன்னர் இப்படிக் கூறிக் கொண்டு வந்த போது குமாரபாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னான்: "என் உயிரினும் மேலான மதிப்புக்குரிய பொருளை நான் இன்னும் பாதுகாக்கவே இல்லை, காசிப மன்னரே! இந்தப் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும், சுந்தர முடியையும் பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து விட்டதற்காக நான் பெருமைப் பட்டுக் கொள்வது பெரிதன்று; என் அன்னையைக் காப்பாற்ற வேண்டும், நான் பிறந்த குடியின் மானத்தையும் மதிப்பையும் காப்பாற்ற வேண்டும். அவைகளைக் காப்பாற்றிப் பாதுகாக்காத வரையில் நான் பெருமைப்படுவதற்கே தகுதியற்றவன்."

"உன் மனக்குறை எனக்குப் புரிகிறது, இராசசிம்மா! இப்போது சொல்கிற வார்த்தைதான். நீ என்னை உறுதியாக நம்பலாம். தென்பாண்டி நாட்டுக்கோ, உன் அன்னைக்கோ ஒரு சிறு துன்பம் பகையரசர்களால் ஏற்படுகிறதென்று தெரிந்தாலும் உனக்கு உதவியாகச் சக்கசேனாபதியின் தலைமையில் ஈழ மண்டலப் பெரும்படை முழுவதையும் கடல் கடந்து அனுப்பி வைப்பதற்கு நான் எந்த விநாடியும் சித்தமாக இருக்கிறேன். அதற்காக நீ கவலைப்படாதே!" என்று உறுதியான அழுத்தம் ஒலிக்கும் குரலில் காசிப மன்னர் மறுமொழி கூறிய போது குமாரபாண்டியனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அதன் பின் இடையாற்று மங்கலம் நம்பி, தளபதி வல்லாளதேவன் என்று தென்பாண்டி நாட்டு அரசியலில் தொடர்புடைய முக்கியமானவர்களையெல்லாம் பற்றிக் காசிப மன்னர் அவனிடம் விசாரித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கை அவரும் பார்த்தார். சிரித்துக் கொண்டே அதைப் பற்றி ஆவலுடன் விசாரித்தார். அதைக் கையில் வாங்கிப் பார்த்து வியந்தார். வருகிற வழியில் ஒரு தீவில் விலைக்கு வாங்கியது என்பதற்கு மேல் அதிகமாக அவரிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை அவன். அவரும் அதற்குமேல் அதைப் பற்றித் தூண்டிக் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது ஓட்டமும், நடையுமாகத் துள்ளிக் கொண்டு கனகமாலை அங்கு வந்தாள். தந்தை மட்டும்தான் அந்த இடத்தில் இருப்பாரென்ற எண்ணத்தில் சுதந்திரமாகத் துள்ளிக் குதித்து வந்த கனகமாலை, குமாரபாண்டியனும் அங்கிருந்ததைப் பார்த்தவுடன் வெட்கமடைந்தாள்.

"கனகமாலை! குமாரபாண்டியர் உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததெல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயா! எல்லோருக்கும் சாதாரணமாக ஆசிரியர்கள் தாம் கற்பிப்பதற்குக் கிடைப்பார்கள். உனக்கோ தமிழ் மொழி சுரக்கும் பாண்டி நாட்டு இளவரசே ஆசிரியராகக் கிடைத்தார். இவரை விட்டுவிடாதே, இன்னும் என்னென்ன கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ, அவ்வளவையும் இவர் இங்கிருக்கும் போதே கேட்டுத் தெரிந்து கொண்டு விடு" என்றார்.

"இந்தச் சில ஆண்டுகளுக்குள் நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி வளர்ந்து விட்டாளே, என் மாணவி! அந்த நாட்களில் நான் ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் ஒன்பது கேள்விகளைக் கேட்டுத் திணறச் செய்த உங்கள் பெண் இப்போது என் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கே வெட்கப்படுகிறாள்."

"இவரிடம் பேசுவதற்கு வெட்கமென்ன அம்மா? இவர் நம் வீட்டு மனிதர் மாதிரி. அந்த நாளில் தமிழ்ச் சுவடியும் கையுமாக நான் கூப்பிட்டாலும் என்னவென்று கேட்காமல் சதாகாலமும் இவரையே சுற்றிக் கொண்டிருப்பாய் நீ. இப்போது திடீரென்று என்ன வந்துவிட்டது உனக்கு? நீ கூடக் கலகலப்பாக இவரிடம் பழகாவிட்டால் இவருக்கு வந்த இடத்தில் எப்படித்தான் பொழுது போகும்?"

"சுத்தப் பொய், அப்பா! இவர் சொல்வதை நீங்கள் நம்பவே நம்பாதீர்கள். நான் ஒன்றும் இவரோடு பேச மாட்டேனென்று சொல்லவில்லை. பௌத்த விஹாரத்துக்கு வழிபாடு செய்யப் போய்க் கொண்டிருந்த போது இவரும் சேனாபதி தாத்தாவும் குதிரையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போதே நடுத்தெருவில் நின்று கொண்டு இவரோடு எப்படி அப்பா பேச முடியும்? இவரானால் அங்கேயே தெருவில் நின்று கொண்டு என்னைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்" என்று பொய்க் கோபத்தின் சாயல் திகழும் முகத்தோடு படபடப்பாக மறுமொழி கூறினாள்.

"ஆ! இப்போதுதான் உன்னைக் கனகமாலை என்று ஒப்புக் கொள்ள முடிகிறது. துடுக்குத்தனமான பேச்சும் சுறுசுறுப்பும் உள்ள பெண் திடீரென்று ஊமையாக நின்றால் யாருக்குத்தான் கோபம் வராது?" என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டுச் சிரித்தான் இராசசிம்மன். கனகமாலைக்கு அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் பார்க்க வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. இராசசிம்மனுக்குக் கனகமாலையிடம் ஏற்பட்ட கவர்ச்சியைக் காதல் என்று சொல்வதற்கில்லை. அது ஒருவகைக் கவிதைக் கவர்ச்சி. இராசசிம்மனுக்குச் சுவையான பாடல் கிடைத்தால் ஏற்படுகிற நிறைவு போல், கனகமாலையின் நளினப் புன்னகையில் அவன் காவியச் சுவையைக் கண்டான். தத்துவசேன அடிகளோடு உரையாடும் போதும், சக்கசேனாபதியோடு பேசும் போதும், காசிப மன்னரோடு பழகும் போதும் மரியாதையும், கௌரவமும் அவனைப் பொறுப்புள்ளவன் என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தன. ஆனால், கனகமாலையின் புன்னகை என்னும் கவிதையைச் சுவைக்க நேரும் போதெல்லாம் அவன் சிறு குழந்தையாகி, அந்தக் காவிய அழகில் மயங்கித் தன் பொறுப்புக்களையும் கவலைகளையும் மறந்து விடுகிறான். அந்த மறதி மயக்கம் அப்போதைய சூழ்நிலையில் அவனுக்குத் தேவையாக இருந்தது. அனுராதபுரத்துக்கு வந்த புதிதில் இரண்டொரு நாட்கள் தான் அவனும், கனகமாலையும் ஒருவரையொருவர் காணாமலும், பேசாமலும் நாணம் திரையிட்டிருந்தது. பின்பு அந்தப் பெண்ணாகவே வலுவில் கலகலப்போடு பழகத் தொடங்கி விட்டாள். பழையபடி தமிழ்ச் சுவடிகளும் கையுமாக அவனைச் சுற்றி வரத் தொடங்கினாள். அந்தக் கனவுக் கன்னிகையோடு மகிந்தலைக் குன்றின் உச்சி வரையில் ஏறிச் சுற்றினான். அனுராதபுரத்து ஏரிகளில் படகில் ஏறிக் கொண்டு மிதந்தான். சிம்மகிரிக்குகை ஓவியங்களைப் போய்ப் பார்த்தான்.

"நீங்கள் ஏன் எப்போதும் இந்தச் சங்கைக் கையில் வைத்துக் கொண்டே சுற்றுகிறீர்கள்?" என்று ஒரு நாள் கனகமாலையும் அவனைக் கேட்டு விட்டாள்.

"கனகமாலை! இந்தச் சங்கில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு இனிய நினைவு மறைந்திருக்கிறது. இது என் கையில் இல்லாவிட்டால் மனம் ஏழையாகி, நினைவுகள் சூனியமாகி விட்டது போல் ஒரு பெருங் குறைபாட்டை உணர்கிறேன் நான்" என்றான் உருக்கமாக.

வெள்ளணி விழா முடிந்த சில நாட்களில் அவர்கள் எல்லோரும் பொலன்னறுவைக்குப் பயணமானார்கள். அங்கே குமாரபாண்டியனின் நாட்கள் கனமாலைக்குத் தமிழ் கற்பிப்பதிலும், அவளுடைய அமுதத்தன்மை நிறைந்த காவியச் சிரிப்பில் தன் கவலைகளை மறந்து விடுவதிலும் கழிந்து கொண்டிருந்தன. வனங்களிலும், மலைகளிலும் அந்தக் கவிதைப் பெண்ணோடு சுற்றினான் அவன். அப்படிச் சுற்றுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஒரு நாள் மாலை கனகமாலையும், அவனும் ஒரு பௌத்த விஹாரத்துக்குப் போய் வழிபாடு செய்து விட்டு இருட்டுகிற நேரத்துக்கு அரண்மனைக்குத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கசேனாபதி அவசரமாக ஓடி வந்து, "இளவரசே! நான் அன்று 'தமனன் தோட்டத்து'க் கப்பல் துறை ஊழியர்களிடம் எச்சரித்துவிட்டு வந்தது நல்லதாகப் போயிற்று. நேற்றுத் தமிழ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம். அதில் சந்தேகப்படத்தக்க ஆட்களும் இருக்கிறார்களாம். தகவல் வந்திருக்கிறது" என்று இராசசிம்மனிடம் கூறினார்.

4. கப்பல் கைப்பற்றப்பட்டது

செம்பவழத் தீவில் மதிவதனி என்ற பெண்ணிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட பின்பு சேந்தனும், குழல்வாய்மொழியும் அந்தப் பெண் தங்களிடம் கூறிய ஒரு முக்கியமான செய்தியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். கூத்தன் ஒன்றும் பேசாவிட்டாலும், அவர்கள் இருவரும் பேசுவதையெல்லாம் அருகிலிருந்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"அம்மணி! அந்தப் பெண் மதிவதனி கூறுவதைக் கேட்டதிலிருந்து எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஒரு இளைஞன் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் கொடுத்துச் சங்கு வாங்கிக் கொண்டு சென்றதாக அவள் குறிப்பிட்டாள் அல்லவா? அப்படி வாங்கிச் சென்றவர் நம்முடைய இளவரசராக இருக்கலாமென்று நான் நினைக்கிறேன். குமாரபாண்டியருக்கு அப்படி ஒரு பண்பு உண்டு. அழகுணர்ச்சியும் கலை நுணுக்கமும் அவருக்கு அதிகம். ஒரு பொருள் அவருடைய மனத்துக்குப் பிடித்து விட்டதானால் அதன் விலை மதிப்பை எவ்வளவு உயர்வாக்கவும் அவர் தயாராகி விடுவார்!" என்று கப்பலில் போய்க் கொண்டிருக்கும் போது குழல்வாய்மொழியிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் சேந்தன்.

"நீங்கள் சொல்வது போலவே எனக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த இளைஞர் எப்படி இருப்பாரென்று நீங்களும் நானும் அடையாளம் கேட்க ஆரம்பித்த உடனேயே அந்தப் பெண் வாயை மூடிக் கொண்டு போய்விட்டாளே!"

"அவள் சாமர்த்தியக்காரப் பெண் அம்மணீ! பிறருடைய வாயிலிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டு வருகிற திறமை எனக்கு அதிகம் என்று தங்கள் தந்தையாரிடம் நல்ல பெயர் வாங்கிய என்னையே ஏமாற்றிவிட்டாளே அந்தப் பெண்!" என்று சேந்தன் கூறிய போது பக்கத்தில் அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த கூத்தன் சிரித்து விட்டான்.

"ஐயா! சாமர்த்தியசாலிகள், அறிவாளிகள் எல்லோரும் அனேகமாகப் பெண்பிள்ளைகளுக்கு முன்னால் ஏமாந்து போகிறவர்களாகத்தான் இருப்பார்கள்" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சேந்தன் அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு வருவதை எதிர்பார்க்கிறவனைப் போலப் பயந்து ஒதுங்கினான் அவன்.

"பொட்டைப் பயலே! வரவர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. நாக்கு துளிர்த்து விட்டது. மட்டுமரியாதை இல்லாமலா பேசுகிறாய்?" என்று சேந்தன் கூப்பாடு போட்டான். "கூத்தா! நாங்கள் முக்கியமான செய்தி ஒன்றைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். சமயம் தெரியாமல் நீ ஏதாவது குறுக்கிட்டுப் பேசி நேரத்தை வீணாக்காதே" என்று குழல்வாய்மொழி கூத்தனைக் கடிந்து கொண்டாள். கூத்தன் அடங்கி நின்றான். அவளுடைய பேச்சு மேலே தொடர்ந்தது. சேந்தன் மிக மிக அந்தரங்கமானவற்றையெல்லாம் மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் விவரிக்கலானான்.

"அம்மணி! விரைவாகவும், திட்டமிட்டுக் கொண்டு செய்ய வேண்டிய செயல்கள் இனிமேல் தான் நம்மை நெருங்குகின்றன. விழிஞத்துக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள தொலைவில் ஏறக்குறைய சரிபாதிக்கு மேல் கடந்து விட்டோம். மகாமண்டலேசுவரரும், மகாராணியாரும் ஒவ்வொரு நாளும் நாம் குமாரபாண்டியரை அழைத்துக் கொண்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இளவரசரை அழைத்து வருவதற்காக நாம் தான் அனுப்பப் பட்டிருக்கிறோம் என்ற விவரம் மகாராணியாருக்குத் தெரியாது. ஆனால் இளவரசரை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பது தம் பொறுப்பென்று உங்கள் தந்தை மகாராணியாருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். இன்னொரு பரம இரகசியமான செய்தியையும் இப்போது நான் உங்களிடம் சொல்லப் போகிறேன். உங்கள் தந்தைக்கு இப்போது மறைமுகமாக எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். தளபதி வல்லாளதேவனுக்குக் காரணம் கூறமுடியாத ஒருவகை வெறுப்பு உங்கள் தந்தை மேல் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் தந்தையின் ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மறைமுகமாகத் தகர்த்து அவமானப்படுத்துவதற்குத் தளபதி முயற்சி செய்கிறான். இந்த முயற்சியில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனின் ஒத்துழைப்பும் மிக இரகசியமாகத் தளபதிக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரண்மனையில் நடந்த கூட்டத்துக்குப் பின்பு கூற்றத் தலைவர்களும் உங்கள் தந்தை மேல் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். வேறொருவராயிருந்தால் இவ்வளவு எதிர்ப்புகளைத் தாங்கிக் கொண்டு இருக்கவே இயலாது, அம்மணி! என் மதிப்பிற்குரியவரும், உங்கள் தந்தையுமாகிய மகாமண்டலேசுவரரைப் பற்றி நினைக்கும் போது நான் கேள்விப்பட்டிருக்கும் விநோதமான பறவையைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேலைக் கடலின் தீவுகளில் நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தேசங்களில் 'நெருப்புக் கோழி' என்ற பெயரில் விந்தையானதொரு தீப்பறவை இருக்கிறதாம். அது கங்குகங்காக நெருப்புத் துண்டுகளை விழுங்கினாலொழிய அதற்கு வயிறு நிறையாதாம். அந்தத் தீப்பறவையைப் போல் வெம்மையும் கொடுமையும் நிறைந்த எதிர்ப்புகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டுப் பசியாறி வளர்ந்து கொண்டிருக்கிறார் மகாமண்டலேசுவரர். உங்கள் தந்தை நம்மை இலங்கைக்கு அனுப்புகிற விவரம் தெரிந்திருந்தால், தளபதி அதைத் தடுக்கவும் ஏதாவது சூழ்ச்சி செய்திருப்பான். அரண்மனையில் நடக்கிற எந்த அந்தரங்கமான செய்தியும் தன் காதுக்கு எட்டச் செய்து கொள்கிற அளவுக்கு வசதியுள்ளவன் தளபதி."

"அது எந்த வசதியோ?" என்று குழல்வாய்மொழி இடைமறித்துக் கேட்டாள்.

"உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மணீ! தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு தங்கக இருக்கிறாள்; எமகாதகப் பெண் பிள்ளை அவள். 'மகாராணிக்குத் துணையாக அரண்மனையில் தங்கியிருக்கிறேன்' என்று பேர் செய்து கொண்டு, அரண்மனையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உளவறிந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்."

"பகவதி தானே? அந்தப் பெண்ணை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவள் இப்போது அவ்வளவு சாமர்த்தியக்காரியாகி விட்டாளா?" என்று குழல்வாய்மொழி நாராயணன் சேந்தனைக் கேட்ட போது கூத்தன் 'அச்' என்று இரைந்து ஒரு தும்மல் தும்மினான். சேந்தனும் குழல்வாய்மொழியும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு கூத்தனை ஒரு கணம் கூர்ந்து நோக்கினார்கள். கூத்தன் உடனே வேறு எங்கோ கவனிப்பது போல் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். சேந்தன் குழல்வாய்மொழியின் காதருகே நெருங்கி, "அம்மணீ! ஊர் பேர் தெரியாத இந்தப் பயலைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நாம் இருவரும் எதையெதையோ ஒளிவு மறைவின்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என்னவோ தொடக்கத்திலிருந்தே இவன் மேல் நம்பிக்கையில்லை" என்று மெல்லச் சொன்னான்.

"கூத்தா! இப்போது இங்கே உனக்கு ஒரு காரியமும் இல்லை. நீ மேல் தளத்தில் போய் இரு. உன் உதவி எதற்காவது தேவையானால் நான் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்று குழல்வாய்மொழி அவனுக்குக் கட்டளையிட்டாள். கூத்தன் அந்த இடத்திலிருந்து மேல் தளத்துக்குப் போக மனமில்லாதவனைப் போல் தயங்கித் தயங்கி நடந்து படியேறிச் சென்றான்.

"அம்மணி! இந்தப் பிள்ளையாண்டானால் நமக்குக் கெடுதல்கள் தான் வருமே ஒழிய நன்மையில்லை என்று என் மனத்தில் ஏதோ குறளி சொல்கிறது. நம்மை ஏமாற்றக் கூடிய மர்மமான அம்சம் ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு வார்த்தை 'சரி' என்று சொல்லிவிட்டால் நாளைக்கே நடுவழியில் ஏதாவது ஒரு தீவில் இவனை இறக்கி விட்டுவிடுவேன். இவன் நம்மோடு இலங்கை வரை வந்து இறங்குவதில் எனக்குச் சம்மதமே இல்லை. நாம் போகிற காரியத்தின் இரகசியம் இவனால் வெளியாகவும் கூடும்" என்று சேந்தன் சொன்ன போது அதற்கு இணங்கி விடலாமா, வேண்டாமா என்று குழல்வாய்மொழி மனப் போராட்டத்துக்கிடமானாள். அந்தச் சமயத்தில் மேல் தளத்துக்கு ஏறுகிற படியின் திருப்பத்தில் அடக்கிக் கொள்ள முடியாமல் யாரோ தும்முகிற ஒலி கேட்டு சேந்தன் விரைவாக நடந்து போய்ப் பார்த்தான். கூத்தன் அந்த இடத்திலேயே திருப்பத்தின் முதல் படியில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சேந்தனுக்குக் கோபம் அளவின்றிப் பொங்கியது.

"பொட்டைப் பயலே! ஒட்டுக் கேட்டுக் கொண்டா நிற்கிறாய் இங்கே?" என்று அவன் இரையத் தொடங்கிய போது, தடதடவென்று படியேறி மேலே ஓடினான் கூத்தன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் குழல்வாய்மொழிக்குக் கூட மனம் மாறிவிட்டது. அந்தப் பிள்ளையின் மேல் அவளுக்கு உண்டாகியிருந்த சிறிது நல்ல எண்ணமும் போய் விட்டது.

"உங்கள் விருப்பம் போலவே கப்பலிலிருந்து இறக்கி விட்டு விடுங்கள். ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அந்த வாலிபன் விழித்திருக்கும் போது கீழே இறக்கி விட நேர்ந்தால் அவனுடைய எதிர்ப்பையும் கலகம் முதலிய வம்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது காதும் காதும் வைத்தாற்போல் நம் ஆட்களிடம் சொல்லிப் படுக்கையோடு அப்படியே தூக்கி ஏதாவது ஒரு தீவில் வைத்துவிட ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள் குழல்வாய்மொழி. அன்றிரவே அதைச் செய்து விடுவதாக மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் ஒப்புக் கொண்டான் சேந்தன். ஆனால் அன்றிரவு சேந்தனின் சூழ்ச்சி பலிக்காதபடி கூத்தன் தப்பித்துக் கொண்டான். கீழ்த்தளத்திலிருந்த குழல்வாய்மொழியின் அலங்கார அறைக்குள் படுத்துக் கொண்டு கதவையும் உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டான் அவன். குழல்வாய்மொழி முன்னதாகவே படுத்துத் தூங்கிவிட்டதால் அவளுக்கு இதொன்றும் தெரியாது. அறைக் கதவை இடித்துக் கூத்தனை வெளியேற்ற முயன்றால் குழல்வாய்மொழியின் தூக்கம் கெட்டுவிடுமோ என்பதற்காகச் சேந்தன் அன்றிரவு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டான். மறுநாள் காலை கப்பல் இலங்கைக் கரையை நெருங்கிக் கொண்டிருந்த போது சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. கப்பல் மீகாமன் 'குய்யோ முறையோ'வென்று அலறிக் கொண்டு கீழ்த்தளத்துக்கு ஓடி வந்தான். சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் மூன்று பேரும் அங்கே இருந்தனர்.

"ஐயோ! கப்பலைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இந்த அநியாயத்தை வந்து பாருங்கள்" என்று மீகாமன் முறையிட்டான். பேச்சு சுவாரசியத்தில் ஈடுபட்டுப் போயிருந்த அந்த மூவரும் அப்போது தான் கப்பல் நின்று போயிருப்பதைக் கவனித்து உணர்ந்தார்கள். உடனே மாலுமியைப் பின் தொடர்ந்து குழல்வாய்மொழி உள்பட மூன்று பேரும் மேல் தளத்துக்கு ஏறி ஓடினார்கள்.

அந்தக் கப்பலைச் சுற்றிலும் ஐந்தாறு படகுகள் வழியை மறைப்பது போல வளைத்துக் கொண்டு நின்றன. அந்தப் படகுகளில் ஆயுதபாணிகளாக முரட்டு வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றத்திலிருந்தும், அந்தப் படகுகளில் கட்டியிருந்த சிறு சிறு கொடிகளிலிருந்தும் அந்த வீரர்கள் ஈழநாட்டுக் கடற்படையைச் சேர்ந்தவர்களென்று நாராயணன் சேந்தன் நிதானித்துப் புரிந்து கொண்டான்.

"அம்மணீ! ஏதோ சில காரணங்களுக்காகக் கப்பல்களைச் சோதனை செய்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களெல்லாம் ஈழநாட்டுக் கடற்படை வீரர்கள்" என்று பீதி கலந்த குரலில் குழல்வாய்மொழியிடம் சொன்னான் சேந்தன். குழல்வாய்மொழி கூத்தனை விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். "கூத்தா! ஈழ நாட்டு நடைமுறைகளும், கடற்பயணமும் எனக்கு நன்றாகத் தெரியுமென்று அப்போது பெருமையடித்துக் கொண்டாயே, இதெல்லாம் என்ன? நம்முடைய கப்பலை எதற்காக இந்த வீரர்கள் இப்படித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஏன் ஊமையாக நிற்கிறாய்? பதில் சொல்லேன்."

கூத்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'திரு திரு'வென்று விழித்தான். அவனுக்குத் தெரிந்தால் தானே சொல்வதற்கு! ஆரம்பத்தில் கப்பலில் இடம் பிடிப்பதற்காக அளந்த பொய் இவ்வளவு தூரத்துக்குத் தன்னைப் பாதிக்குமென்று தெரிந்திருந்தால் அவன் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்கவே மாட்டான்.

"கப்பல் புறப்படும் போதே அபசகுனம் மாதிரி இந்தப் பயல் வந்து வம்பு பண்ணினான். அப்போதே இது மாதிரி ஏதாவது தொல்லை வருமென்று நான் நினைத்தேன்" என்று சேந்தன் படபடப்போடு கூத்தனை நோக்கிச் சீறினான். குழல்வாய்மொழி சினம் பொங்கப் பார்த்தாள். எல்லோருடைய கோபமும் கூத்தனின் மேல் திரும்பி அடிகள் உதைகளாக உருவெடுப்பதற்கு இருந்த சமயத்தில் அப்படி நடக்க விடாமல் ஈழ நாட்டு வீரர்களெல்லாம் கப்பலுக்குள் ஏறி வந்து கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

"இந்தக் கப்பல் எங்கே இருந்து வருகிறது?" சேந்தனைப் பார்த்து அதிகார மிடுக்குடன் இப்படிக் கேட்டார்கள், கப்பலுக்குள் ஏறி வந்த கடற்படை வீரர்கள்!

கேள்விக்குப் பதில் சொல்லலாமா, வேண்டாமா என்ற பாவனையில் சேந்தன் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான்; குழல்வாய்மொழி கூத்தனின் முகத்தைப் பார்த்தாள்; கூத்தன் கடலைப் பார்த்தன். இந்த மௌனம் கேள்வி கேட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.

"இந்தா, ஐயா! முன்குடுமிக்காரரே! உம்மைத்தான் கேட்கிறோம். பதில் சொல்லும்" என்று கடுமையான குரலில் மீண்டும் கேட்டார்கள் அவர்கள். சேந்தன் பதில் சொன்னான். "கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறது!"

"என்ன காரியமாக வருகிறதோ?"

"சொந்தக் காரியமாக."

"எங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் வருத்தப்பட நேரிடும்."

"மறைப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை."

"அப்படியானால் நீங்கள் எல்லோரும் யார்? என்ன காரியமாக ஈழநாட்டுக்குப் புறப்பட்டீர்கள் என்பதையெல்லாம் உடனே கூறுங்கள்.

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான் சேந்தன். குழல்வாய்மொழி அந்த வீரர்களை நோக்கித் துணிவோடு கேட்டாள்: "நீங்கள் எங்களுடைய கப்பலைத் தடுத்து நிறுத்திக் கொண்டு எங்களை இவ்வாறு மிரட்டுவது அநாகரிகமாக அல்லவா இருக்கிறது? நாங்கள் யாராயிருந்தால் என்ன? நாங்கள் என்ன காரியமாக ஈழநாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை!"

அவள் சினத்தோடு படபடப்பாக எதிர்வாதம் புரிந்ததைக் கேட்டதும் வீரர்கள் இன்னும் ஆத்திரம் அடைந்தனர்.

"எங்கள் மேல் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அம்மா! ஈழ மண்டலத்து மகா சேனாபதியின் உத்தரவுப்படி நாங்கள் இந்தக் கப்பலை இப்போது கைப்பற்றுகிறோம். எங்கள் கண்காணிப்பில் அப்படியே இந்தக் கப்பலைச் செலுத்திக் கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விடுவோம். எங்கள் மகாசேனாபதி வந்து பரிசோதித்து விசாரணை செய்கிறவரை யாரும் இந்தக் கப்பலிலிருந்து கீழே இறங்க விடமாட்டோம்."

"கப்பலிலே சிறை வைத்துப் பார்ப்பதற்கு நாங்கள் கொள்ளையடித்து விட்டோ, கொலைக் குற்றம் செய்து விட்டோ இங்கு ஓடி வர வில்லையே?" என்று அமைதியாக நின்று கொண்டிருந்த கூத்தனும் கொதிப்படைந்து கேட்டான். அவர்கள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. படகுகளையும் கப்பல்களையும் தங்கள் பொறுப்பில் செலுத்திக் கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நிறுத்தினார்கள். கப்பலைச் சுற்றிலும் யாரும் வெளியேற முடியாமல் வீரர்கள் காவல் நின்று கொண்டனர். கப்பல் பிடித்துக் கொண்டு வரப்பட்ட செய்தி உடனே ஈழநாட்டுப் படைத்தலைவனுக்கு அனுப்பப்பட்டது. குழல்வாய்மொழியும் சேந்தனும் மேல்தளத்தில் நின்று கூத்தனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

5. கூத்தன் தப்பினான்

யாரிடமோ காண்பிக்க வேண்டிய கோபதாபங்களையெல்லாம் தங்களுடன் அகப்பட்டுக் கொண்ட கூத்தனிடம் காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள் சேந்தனும் குழல்வாய்மொழியும். கூத்தன் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தான். இன்னும் சில நாழிகைகளில் அவர்கள் பேசிப் பேசித் தன்னை உயிரோடு சித்திரவதை செய்து விடுவார்களோ என்று நினைத்து அஞ்சுகிற அளவுக்கு அவனைப் பாடாய்ப் படுத்திவிட்டார்கள். தன் 'குட்டு' வெளிப்பட்டு அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆகுமோ என்ற பயமும் கூத்தனுக்கு ஏற்பட்டு விட்டது. ஈழ மண்டலப் படைத் தலைவர் வந்து விசாரணை செய்யும் முன்பே குழல்வாய்மொழியும், சேந்தனும் தன்னை இன்னாரென்று புரிந்து கொள்ள நேர்ந்தால் தனக்கு அது பெருத்த அவமானமாகிவிடும் என்பதைக் 'கூத்தன்' உணர்ந்து கொண்டான். அப்படியில்லாமல் படைத்தலைவர் வந்து விசாரணை செய்த பின் அகப்பட்டுக் கொண்டாலும் அவமானம் தான். மேலும், முன்கூட்டியே அந்தக் கப்பலிலிருந்து தப்பிக் கரையேறினால் அதனால் 'கூத்தனுக்கு' எவ்வளவோ நன்மை உண்டு.

'கூத்தன்' நேரம் எப்போது வாய்க்கப் போகிறதென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை கூர்மையாகித் தப்பும் வழிகளை ஒவ்வொன்றாகச் சிந்தித்தது. சாத்திய அசாத்தியங்களை ஆராய்ந்தது. சற்றே அதிகமான துணிச்சலும் உண்டாகியிருந்தது. தப்புவதற்காக எப்படிப்பட்ட காரியத்தை வேண்டுமானாலும் செய்வதற்கு உறுதி பூண்டிருந்தான் அவன். நண்பகலில் உச்சி வெயில் கொடுமையாக இருந்தது. கரையிலிருந்த காட்டின் காற்றும், நீரின் குளிர்ச்சியும் அந்த வெம்மையைச் சிறிது தணிக்க முயன்றன. அப்போது கூத்தன் தப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோரும் உணவு உட்கொண்டு முடித்து சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு அல்லவா? சேந்தன் மேல்தளத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலேயே ஒரு பாய்மரக் கம்பத்தில் சாய்ந்து கொண்டு காலை நீட்டிக் கண்ணயர்ந்திருந்தான். குழல்வாய்மொழி கீழ்த் தளத்திலிருந்த தனது அறைக்குள் இருந்தாள். மற்றக் கப்பல் ஊழியர்கள் எல்லோரும் சேந்தனைப் போலவே மேல்தளத்தில் அயர்ந்து போய்க் கிடந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் தூங்காமல் உட்கார்ந்திருந்த ஆள் கூத்தன் ஒருவன் தான்.

ஒரு திடமான முடிவுடன் அவன் எழுந்தான். ஓசைப்படாமல் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்து, கீழ்த்தளத்துக்கு இறங்கிப் போனான். குழல்வாய்மொழியின் அறை திறந்துதான் இருந்தது. கூத்தனுக்கு உடம்பெங்கும் வியர்த்தது. ஒரு கையால் வாளின் நுனியைப் பற்றிக் கொண்டே ஓரமாக ஒதுங்கி நின்று மெதுவாகத் தலையை நீட்டி அறைக்குள் எட்டிப் பார்த்தான். குழல்வாய்மொழி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கூத்தன் விருட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து கதவை உட்புறத்தில் தாழிட்டுக் கொண்டான். அந்த அறையில் ஒரு மூலையில் இருந்த பெரிய தந்தப் பெட்டியைத் திறந்தான். பெட்டிக்குள் மகாமண்டலேசுவரரின் அருமைக் குமாரிக்குச் சொந்தமான பட்டுப் புடவைகளும், மற்ற அலங்காரப் பொருள்களும் அடுக்கடுக்காக இருந்தன அவற்றில் ஒரு புடவையையும் பட்டுக் கவசமும் எடுத்துக் கொண்டு குழல்வாய் மொழியின் தூக்கம் கலைந்து அவள் எழுந்துவிடாமல் மெதுவாக நடந்து அதே அறையின் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் போய் மறைந்தான் கூத்தன்.

அவன் மறைந்த இடம் பெண்கள் கப்பலில் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக மறைவிடம் போல் பட்டுத் திரைகளால் தடுக்கப்பட்டிருந்த ஒதுக்கிடமாகும். அவன் அந்தத் திரை மறைவில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் தற்செயலாக விழித்துக் கொண்ட குழல்வாய்மொழி படுக்கையில் எழுந்திருந்து உட்கார்ந்து கொண்டாள். தான் காற்றுக்காகத் திறந்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்ட அறைக் கதவை எப்போது யார் உட்புறம் வந்து தாழிட்டிருக்க முடியுமென்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது. படுக்கையில் உட்கார்ந்தபடியே அறைக்குள் நான்கு பக்கமும் மேலோட்டமாகப் பார்த்து வேறு யாரும் தன் அறைக்குள் இல்லையென்று தீர்மானித்தாள் குழல்வாய்மொழி. ஆனால் அதே சமயம் தன்னுடைய 'கலிங்கங்'களும் (ஆடைகளும்) அலங்காரப் பொருள்களும் அடங்கிய தந்தப் பெட்டி திறந்து கிடந்ததைப் பார்த்தவுடன் அவளுடைய சந்தேகமும், பயமும் மேலும் வளர்ந்தன. அவள் முதுகுக்கு நேரே பின்புறம் தான் அந்த மறைவிடம் இருந்தது. எழுந்திருந்து வாசல் கதவைத் திறந்து சேந்தனையாவது, கூத்தனையாவது கூப்பிட்டு அறையை நன்றாகச் சுற்றிப் பார்க்கச் சொல்லலாமென்று நினைத்தாள் குழல்வாய்மொழி.

எழுந்திருப்பதற்காகப் படுக்கையிலிருந்து வலது காலை எடுத்து வைத்தாள் அவள். திடீரென்று பின்பக்கமிருந்து இரு மென்மையான கைகள் முரட்டுத்தனமாக அவள் வாயைப் பொத்தின. பயந்து வீறிட்டு 'ஓ'வென்று கூக்குரலிட நினைத்தால் குழல்வாய்மொழி. முடியவில்லை. அவளது மென்மையான பொன்னிற உடல் பயத்தால் நடுங்கியது. கண்விழிகள் பிதுங்கின. தலையைச் சிரமப்பட்டுத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். வனப்பே வடிவமாக ஒரு பெண் நின்று கொண்டு அவளை அந்தப் பாடு படுத்திக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் உடுத்தியிருந்த பட்டுப்புடவையையும், கச்சையையும் (மார்பணி) குழல்வாய்மொழி கவனித்தாள். அவை தன் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிந்தது. 'ஒரு பெண்ணுக்கா அவ்வளவு துணிவு? ஒரு பெண்ணின் கைகளுக்கா அந்த முரட்டுத்தனம்?' - பயத்துக்கும் நடுக்கத்துக்கும் ஊடே இப்படி ஒரு பெண்ணிடம் நடுங்கி நிற்கிறோமே என்ற ஆச்சரியமும் அவளை ஆட்கொண்டது.

அந்தப் பெண் ஒரு கையால் குழல்வாய்மொழியின் வாயைத் திறக்க முடியாதபடி அழுத்திப் பொத்திக் கொண்டே, இன்னொரு கையால் கூர்மையான வாளை அவள் முகத்துக்கு நேரே காட்டி, "இடையாற்று மங்கலத்து அழகியே! உன் பயம் அநாவசியமானது. கொஞ்சம் என் முகத்தையும், குரலையும் கவனித்துப் பார். நான் யாரென்பது தெரியும். உன் உயிருக்கோ, உடலுக்கோ என்னால் ஒரு துன்பமும் ஏற்படாது. ஆனால் நீ மட்டும் கூச்சல் போட்டு என்னைக் காட்டிக் கொடுக்க முயன்றாயோ, நான் எப்படி நடந்து கொள்வேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது" என்று கூறினாள். குழல்வாய்மொழி நன்றாகத் தலையைத் திருப்பி மருண்ட விழிகளால் அந்த முரட்டுப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு அந்த உண்மை புரிவதற்குச் சில விநாடிகள் தேவைப்பட்டன. 'ஆகா! இந்தக் கீச்சுக் குரலும் அழகு முகமும் கூத்தனுடையவை அல்லவா? கூத்தன் ஆணா? பெண்ணா? இப்போது நான் காண்பது தான் அவனுடைய உண்மைக் கோலமா அல்லது காலை வரையில் கண்ட ஆண் கோலம் தான் உண்மையா?' என்று எண்ணி மனம் குழம்பினாள் குழல்வாய்மொழி. அவளுடைய நினைவுகள் தடுமாறின.

"இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தால் என்னை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் அம்மா! எந்த வல்லாள தேவனின் தங்கையைப் பற்றி நேற்று நீங்கள் சேந்தனிடம் மிக அலட்சியமாக விசாரித்தீர்களோ, அந்தப் பெண் பகவதிதான் இப்போது உங்களைப் பயமுறுத்திக் கொண்டு நிற்கிறாள்" என்று சிரித்துக் கொண்டே அந்தப் பெண் தன்னைப் பற்றிக் கூறிய போது குழல்வாய்மொழியின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றன. பகவதி மேலும் பேசினாள்: "இன்னும் கேள்! நீயும் சேந்தனும் சந்திப்பதற்கு முன்பே நான் குமாரபாண்டியரைச் சந்தித்து விடுவேன். அப்படிச் சந்தித்தால் உங்கள் வரவைப் பற்றிச் சொல்கிறேன். என்னை இதே கப்பலில் பிரயாணம் செய்ய விட்டதற்காக நான் உனக்கு எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டியதிருக்க இப்படிக் கத்தியைக் காட்டிப் பயமுறுத்துகிறேனே என்று கோபிக்காதே. இப்போது செய்திருப்பது போல் உன் வாயை அடைக்காமல் விட்டிருந்தால் இந்தச் சமயத்தில் வியப்புமயமான உன் உள்ளத்து உணர்ச்சிகள் என்னை நோக்கி எவ்வாறு வார்த்தைகளாக வெளியேறுமோ? என்னென்ன கேள்விகள் என்னிடம் நீ கேட்பாயோ? எப்படி எப்படிச் சீறுவாயோ? அவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நான் இப்போது இந்தக் கப்பலிலிருந்து அவசரமாகத் தப்பிச் செல்லப் போகிறேன். இதோ இந்தக் கீழத்தளத்திலிருந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு பின்புறமாகக் கடலில் இறங்கிச் சிறிது தூரம் நீந்திக் கரை சேர்ந்து விடுவேன். அதற்குள் கூச்சல் போட்டு நீ என்னைக் காட்டிக் கொடுத்து விடலாமென்று நினைக்காதே! கூச்சல் போடவோ, நகரவோ முடியாமல் உன்னை இந்த அறையில் கட்டிப் போட்டு விட்டுத்தான் நான் புறப்படுவேன். 'ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்ள முடியுமா?' என்று என்னைப் பற்றிக் கேவலமாக நினைக்காதே! சந்தர்ப்பம் தான் காரணம், அம்மா. வாயை அடைக்காமலும் கத்தியைக் காட்டாமலும் இருந்தால் நீயே எனக்குப் பயப்பட மாட்டாய். அதனால் தான் நான் இப்படி நடந்து கொள்ள வேண்டியதாயிற்று."

இவ்வாறு சொல்லிக் கொண்டு குழல்வாய்மொழியைப் படுக்கையில் தள்ளிக் கட்டிலோடு கட்டிலாகக் கயிற்றினால் கட்டி விட்டாள் பகவதி. குழல்வாய்மொழியின் மென்மையான கொடியுடல் வீர ரத்தம் ஓடும் தளபதியின் தங்கையை எதிர்த்துத் திமிறிக் கொண்டு போராட முடியவில்லை. ஆகவே கட்டுண்டாள்.

அவள் கண் காணவே அறைக் கதவைத் திறந்து கொண்டு கப்பலின் பின்புறத்து வழியே கயிறு கட்டி இறங்கிக் கடலில் பாய்ந்து விட்டாள் பகவதி. கயிற்றைப் பிடித்துக் கொண்டு இறங்கு முன் கடைசியாக நிமிர்ந்து பார்த்து, "இடையாற்று மங்கலத்துப் பெண்ணே! நாராயணன் சேந்தன் வந்தால் 'கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக் கொண்டு போய் விட்டான்' என்று சொல்லிவிடு!" என்று பகவதி கூறிச் சென்ற சொற்கள் குழல்வாய்மொழியின் உள்ளத்தைக் கொதிக்க வைத்தன. 'ஏமாற்றப் பட்டோம்' என்று நினைக்கும் போது குழல்வாய்மொழிக்கு வேதனையாக இருந்தது.

கட்டிலோடு கட்டியிருந்த கட்டுகளை நெகிழ்க்க முயன்றாள்; முடியவில்லை. அரை நாழிகைக்குப் பின் சேந்தன் தூக்கம் கலைந்து எழுந்த சோர்வோடு கொட்டாவி விட்டுக் கொண்டே கீழ்த்தளத்துக்கு வந்தான். அங்கே குழல்வாய்மொழி இருந்த நிலையைப் பார்த்ததும் பெரியதாகக் கூக்குரலிட நா எழுந்தது அவனுக்கு. அதை வலுவில் அடக்கிக் கொண்டு, கட்டுகளை அவிழ்த்துத் தன் நினைவற்றுத் துவண்டு கிடந்த குழல்வாய்மொழிக்கு மூர்ச்சை தெளிவித்தான். நிதானமாக - ஆனால் கலவரமுற்ற மனத்தோடு "என்ன நடந்தது?" என்று அவளிடம் கேட்டான். அவள் 'கோ'வென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட்டாள். அவள் அழுகையைத் தணித்து ஆறுதல் கூறி மெல்ல நடந்ததை அறிந்தான் சேந்தன். "கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்" என்று அவள் அதைச் சொல்லி முடித்த போது, "எனக்கு அப்போதே தெரியும்!" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் சேந்தன்.

6. பொல்லாத மழைப் புயல்

சக்கசேனாபதி வந்து கூறிய செய்தியைக் கேட்டதும் குமாரபாண்டியனின் மனத்தில் உணர்ச்சியலைகள் மேலெழுந்து பொங்கின. 'தமனன் தோட்டத்து'த் துறையில் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் கப்பல் யாருடையதாக இருக்கும்? அதில் வந்திருப்பவர்கள் யாராயிருப்பார்கள்?' என்ற சந்தேகம் அவன் நினைவுகளை வளர்த்தது.

ஆனால், சக்கசேனாபதி அந்த நினைவுகளை வளர விடவில்லை. "நாளைக்கு அதிகாலையில் நாமிருவருமே தமனன் தோட்டத்துக்குப் போய்ப் பார்க்கலாம். நீங்கள் செம்பவழத் தீவில் கண்ட எதிரிகளின் கப்பலாக இருந்தால் அதிலிருப்பவர்களைக் கீழிறக்கி விசாரிக்கிற முறைப்படி விசாரிப்போம்" என்று கூறினார் அவர். அப்போது அவர்களுடன் அங்கிருந்த கனகமாலை "சேனாபதித் தாத்தா! நானும் நாளைக்கு உங்களோடு தமனன் தோட்டத்துக்கு வரப் போகிறேன். நீங்கள் மறுப்புச் சொல்லாமல் என்னையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும்!" என்று பிடிவாதம் பிடித்தாள்.

"ஐயோ, நீ கூட வருகிற சந்தர்ப்பமில்லை அம்மா இது! நாங்கள் ஒரு முக்கியமான காரியமாகப் போய்விட்டுத் திரும்பி விடுவோம்" என்று சேனாபதி அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்தார். பின்பு சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் காசிப மன்னரிடம் போய்ச் சொல்லிக் கொண்டார்கள்.

"இப்படி ஒரு கப்பல் உங்களை இரகசியமாகத் தொடர்ந்து பின்பற்றி வந்ததென்ற விவரத்தை இங்கு வந்ததுமே நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கலாமே! சொல்லாததனாலும் பரவாயில்லை. இப்போது உடனே போய் அந்தக் கப்பலைக் கவனியுங்கள். அதிலிருப்பவர்கள் குமாரபாண்டியனின் எதிரிகள் என்று சந்தேகப்படுவதற்கு ஏற்றவர்களாயிருந்தால் அவர்களைச் சிறைப்பிடித்து இங்கேயே கொண்டு வாருங்கள்" என்று கூறி, அவர்களுக்கு விடை கொடுத்தார் ஈழ நாட்டு மன்னர். பயணம் தொடங்குவதற்கு முன் நினைவாகத் தன் வலம்புரிச் சங்கை உடனெடுத்துக் கொண்டான் இராசசிம்மன்.

வைகறை மெல்லிருள் விலகுவதற்கு முன் அவர்கள் இருவரும் பொலன்னறுவையிலிருந்து புறப்பட்டார்கள். என்றுமில்லாதபடி அவர்களுக்கென்றே வாய்த்தது போல் அன்றைக்கு இயற்கைச் சூழ்நிலை மிக அற்புதமாக இருந்தது. மெல்லச் சுழன்று வீசும் குளிர்ந்த காற்றுடனே ஊசி ஒழுகுவது போல் சாரல் பெய்து கொண்டிருந்தது. வானம் பிறந்த மேனியாய்த் தனது நீலநிறத்தைத் திறந்து காட்டிக் கொண்டிராதபடி மேகச் சுருள்கள் திட்டுத் திட்டாக அடைந்திருந்தன. எல்லோருடைய கவனத்தையும் கவரத்தக்க மிகப் பெரிய காரியமொன்றைத் திடீரென்று செய்வதற்கு இருக்கிற மனிதன் மாதிரி, இயற்கை அமைந்து அடங்கித் தன் ஆற்றலை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

"இன்றைக்கு மாலைக்குள் பெருமழை வரலாம் போலிருக்கிறது!" என்று குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டே சொன்னார் சக்கசேனாபதி. இராசசிம்மன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஒரே மேகக் குழப்பம். அத்தனையும் கனிந்த சூல் கொண்ட கருமேகங்கள்.

பொலன்னறுவையிலிருந்து நேர் மேற்கே சென்றால் தமனன் தோட்டம் தான். அனுராதபுரத்துக்குச் செல்லாமல் சிம்மகிரி, விசிதபுரம் ஆகிய ஊர்களைக் கடந்து நேர்வழியாகவே பயணம் செய்வதென்று முடிவு செய்து கொண்டார்கள் அவர்கள். எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு வேக மிகுதி அவர்களுடைய குதிரைப் பயணத்தில் இருந்தது. இருவரும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு செலுத்துவது போல் குதிரைகளைச் செலுத்தினர்.

"சக்கசேனாபதி! எனக்கென்னவோ நான் இங்கே அதிக நாட்கள் தங்கியிருக்க முடியுமென்று நம்பிக்கை ஏற்படவில்லை. எந்த விநாடியிலும் என்னைத் தேடிக் கொண்டு தென்பாண்டி நாட்டிலிருந்து ஆட்கள் வரலாம். விரைவாக நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்குமென்று என் மனத்தில் ஒரு தோற்றம் ஏற்படுகிறது" என்று போகும் போது இருந்தாற் போலிருந்து அவரிடம் கூறினான் இராசசிம்மன்.

"போர் ஏற்பட்டாலொழிய அவ்வளவு அவசரமாக உங்களைத் தேடிக் கொண்டு யாரும் வரப்போவதில்லை. தவிர, உங்களைத் தேடி வருவதற்கு நீங்கள் இங்கே தான் வந்திருக்கிறீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நீங்களாக எதையாவது மனத்தில் நினைத்துப் பதற்றமடையாதீர்கள், இளவரசே!" என்று அவர் அவனுக்குப் பதில் சொன்னார்.

அதைக் கேட்டு இராசசிம்மன் சிரித்தான். "காணாமல் போன நான் எங்கே சென்றிருப்பேன் என்று அனுமானிக்க முடியாத அளவுக்குத் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரும், என் அன்னையும், தளபதியும் சிந்தனை குன்றியவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் அங்கில்லையென்றால் இங்கேதான் இருப்பேனென்று அவர்கள் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளுவார்கள்" என்று இராசசிம்மன் கூறிய போது சக்கசேனாபதி அதைக் கவனித்துக் காதில் வாங்கிக் கொள்ளாமல், கலக்கம் நிறைந்த பார்வையால் வானவெளியை நிமிர்ந்து பார்த்தார். "இன்றைக்கு நம்முடைய பயணம் நடுவழியில் எங்கேயாவது தடைப்படத்தான் போகிறது. வானம் இருக்கிற சீரைப் பார்த்தால் தன் ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொள்ளப் போகிற மாதிரி இருக்கிறது" என்று கவலை நிறைந்த குரலில் கூறினார். "மழை வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு நாம் யார்? ஈழ நாட்டுப் படைத் தலைவரும், பாண்டி நாட்டு இளவரசனும் பயணம் செய்கிறார்களென்றால் மழை கூட அவர்களுக்குப் பயப்பட வேண்டுமென்கிற அவசியம் உண்டா?" என்று சற்றே வேடிக்கையாகச் சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னான் குமாரபாண்டியன். கவலை நிழல் படியத் தொடங்கியிருந்த அவர் முகத்தில் அந்த வேடிக்கைப் பேச்சு கூட மலர்ச்சியை உண்டாக்கவில்லை.

சூரிய ஒளியே உறைக்காத மேக மூட்டம் உச்சிப் போது கழிந்து சில நாழிகைகளான பின்னும் நீடித்தது. அதனால் அந்திக்கு இன்னும் நெடுநேரம் மீதமிருந்த போதும் அப்போது இருட்டத் தொடங்கிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இரவு நேரத்தில் தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டால் மழையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிராதென்று சக்கசேனாபதி நினைத்திருந்தார்.

ஆனால் மழை அவருடைய நினைவை முந்திக் கொண்டு வந்து விட்டது. தனி மழையாக வரவில்லை. பயங்கரமான காற்றும், மழையும் ஒன்று சேர்ந்து கொண்டன. அந்தச் சமயத்தில் நடுக்காட்டில் கடல் போலப் பரந்து தேங்கிக் கிடந்த ஓர் ஏரியை ஒட்டி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பாளம் பாளமாக யாரோ சீவி எறிவது போல் அலைமோதியது. ஏரியின் நான்கு புறமும் காது செவிடுபடுகிறாற் போல் ஒரே பிரளயப் பேரொலியில் மூழ்கி விட்டனவா? காற்றுக் கடவுளுக்கும் மழைக் கடவுளுக்கும் போர் மூண்டு விட்டதா இடி ஓசையும், காட்டு மரங்கள் முறிந்து விழும் ஓசையும், காற்றொலியிலும் மழை ஒலியிலும் கலந்து சிறிதாகி ஒலித்தன. ஊழிக் காற்று, ஊழி மழை என்றெல்லாம் சொல்லுவார்களே அவையிரண்டும் ஒரே சமயத்தில் ஊழி எல்லையைக் காண ஆசைப்பட்டு விட்டவை போலக் கிளர்ந்து எழுந்து விட்டன என்று சொல்லத்தக்க நிலை.

ஏரியின் இக்கரையில் அவர்களுடைய வழிமேல் ஒரு பௌத்தப் பள்ளியும், அருகில் உயரமான பெரிய புத்தர் சிலையும் தெரிந்தன.

"இளவரசே! வேறு வழியில்லை. இங்கே தங்கிவிட வேண்டியதுதான். இந்த இடம் ஏரி நீர்ப்பரப்பைக் காட்டிலும் மேட்டுப் பாங்கானது. இதே வழி போகப் போக தாழ்ந்து பள்ளமான நிலத்தில் செல்கிறது. இந்தக் காற்றிலும், மழையிலும் எப்படி ஆகுமோ? இப்படியே தங்குவது தான் நல்லது" என்றார் சக்கசேனாபதி.

இந்தத் தீர்மானத்துக்கு வருவதற்குள் அவர்கள் இருவருடைய உடல்களும் தெப்பமாக நனைந்து விட்டன. இருவரும் தங்கள் குதிரைகளை விரட்டிக் கொண்டு போய் அந்தப் பௌத்தப் பள்ளிக்கு முன்பாக நிறுத்தினார்கள். ஆள் புழக்கமில்லாத காரணத்தால் கட்டடம் இருண்டு பாழடைந்திருந்தது.

"மழைக்கும் புயலுக்கும் பயந்து கொண்டு நடு வழியில் தங்கி நாம் ஆர அமரப் போய்ச் சேருவதற்குள் தமனன் தோட்டத்தில் பிடிபட்ட கப்பலும் ஆட்களும் தப்பிப் போனால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை" என்று சொல்லிக் கொண்டே குதிரையிலிருந்து இறங்கிக் கட்டடத்துக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன்.

"அப்படித் தப்ப விட்டு விடுவதற்கு ஈழ நாட்டுக் கடற்படை வீரர்கள் முட்டாள்கள் அல்லர்!" என்று பதில் கூறிக் கொண்டே அவனைப் பின்பற்றி உள்ளே சென்றார் சக்கசேனாபதி.

ஈர ஆடையோடு சோர்ந்து போய் ஓரிடத்தில் உட்காருவதற்காகக் குனிந்த குமாரபாண்டியன் ஒருவிதமாகப் பயங்கலந்த கூப்பாட்டோடு அந்த இடத்திலிருந்து துள்ளித் தாவினான்.

"என்ன? ஏன் இவ்வளவு பயம்" என்று அந்த இடத்தில் சிறிது குனிந்து பார்த்த சக்கசேனாபதியும் முதலில் மலைத்துப் பின் வாங்கினார். அடுத்த கணம் துணிவாக முன் சென்று கயிற்றைப் புரட்டி இழுப்பது போல் எதையோ சரசரவென்று பிடித்து இழுத்தார். ஓங்கிச் சுழற்றி வீசி எறிந்தார்.

பளபளவென்று நெளிந்து கருமை மின்னும் அந்தப் பொருள் போய் விழுந்த இடத்தில் சீறி எழுந்து படத்தைத் தூக்கியது! அப்பப்பா! எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! அவர் வீசி எறிந்தது ஒரு கருநாகம்!

"சக்கசேனாபதி! உங்களுடைய துணிவு ஈடு சொல்ல முடியாதது. எனக்கானால் நீங்கள் அதன் வாலைப் பிடித்து இழுத்த போது குடல் நடுங்கியது" என்று அவரைப் பார்த்து வியந்து கூறினான் இராசசிம்மன்.

ஓங்கிய படத்தைத் தரையில் அடித்துவிட்டுப் புதரில் புகுந்து மறைந்தது அது.

"ஐயோ! வேண்டவே வேண்டாம். மழையில் நனைந்து துன்புற்றாலும் சரி. மேலே பயணத்தைத் தொடரலாம். இந்தக் கட்டடத்தில் தங்கிக் கடிபட வேண்டாம். அந்தக் கருநாகத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு இந்த மண்டபம் முழுவதிலும் பாம்பு இருக்கும் போலத் தோன்றுகிறது" என்றான் குமாரபாண்டியன்.

"அதெல்லாம் வீண் பிரமை. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த இடத்தை விட்டு நகர்வது நடவாத காரியம்" என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார். குமாரபாண்டியன் அந்த இடத்தில் உட்காருவதற்கே பயமும் அருவருப்பும் அடைகிறவனைப் போல் ஒதுங்கி நின்றான்.

"அதோ! இன்னும் யாரோ நமக்குத் துணையாக இதே கட்டடத்தில் தங்குவதற்கு ஓடி வருகிறார், பாருங்கள்" என்று வெளியே கையை நீட்டிக் காண்பித்தார் சக்கசேனாபதி. நடுத்தர வயது மதிக்கத்தக்க தோற்றமுள்ள புத்தபிட்சு ஒருவர் ஓடி வந்து கட்டடத்துக்குள் நுழைந்தார்.

"அடிகளே! இந்த மழையிலும், காற்றிலும் ஏன் இப்படித் துன்பப்பட்டுக் கொண்டு ஓடி வருகிறீர்கள்? ஏரிக்கு அக்கரையில் இருக்கிற தவப்பள்ளியிலேயே தங்கியிருக்கலாமே! இப்போது ஏரிக்கரையோரமாக நடந்து வழியைக் கடப்பதே பயப்பட வேண்டிய செய்தியாயிற்றே?" என்று அனுதாபத்தோடு வந்தவரை விசாரித்தார் சக்கசேனாபதி.

மொட்டைத் தலையில் வழிந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டே பதில் சொன்னார் பிட்சு: "அப்படித்தான் செய்ய நினைத்தேன், ஐயா! யாரோ ஒரு சிறு பெண்பிள்ளைக்கு இரக்கப்படப் போக இந்தக் கதிக்கு வர நேர்ந்தது. நிமிர நிமிர தண்ணீரோடு அலை பாய்ந்து கொண்டிருக்கிற ஏரிக்கரையில் சிறு வயதுப் பெண் ஒருத்தி வழி தெரியாமல் தயங்கி நின்று கொண்டிருந்தாள். எனக்குப் பரிதாபமாக இருந்தது. 'எங்கே அம்மா போக வேண்டும்?' என்று கேட்டேன். 'எனக்கு இந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குப் போக வேண்டும்' என்று துணிச்சலோடு சொன்னாள் அவள். நடுக்காட்டில் நின்று கொண்டு அரண்மனைக்குப் போக ஆசைப்படும் அந்தப் பெண் பைத்தியமோ என்று எனக்குத் தோன்றியது.

"மழையும் காற்றுமாக வருகிறது. பக்கத்திலிருக்கிற தவப்பள்ளியில் போய்த் தங்கிவிட்டுக் காலையில் அரண்மனைக்குப் புறப்படு அம்மா! நானுன் உன்னோடு கூட அரண்மனைக்கு வருகிறேன் என்றேன். அந்தப் பாவிப் பெண் என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டு காட்டுப் பாதையில் மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று அவளையுமறியாமல் பின் தொடர்ந்தேன். நான் பின்பற்றுவதை அவள் கண்டு கொண்டாள். என்னைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டு எங்கோ ஓடி மறைந்து விட்டாள். இவ்வளவு தொலைவு வந்த பின் அக்கரையிலுள்ள தவப்பள்ளிக்குப் போக வேண்டாமென்றுதான் இங்கே ஒண்டிக் கொள்ள வந்தேன்" என்று அவர் கூறி முடித்ததும், "ஐயோ பாவம்! அந்தப் பெண் இந்தப் பக்கமாக வந்தால் நாம் மூன்று பேருமாகச் சமாதானப்படுத்தி யாரென்று விசாரிக்கலாமே?" என்று அநுதாபத்தோடு சொன்னார்கள் சக்கசேனாபதியும் இராசசிம்மனும்.

"அவளைப் பார்த்தால் வெகு தொலைவிலிருந்து வந்த வேற்று நாட்டுப் பெண் மாதிரி இருந்தது. அதனால் தான் நான் உதவி செய்யப் போனேன். அந்த முரட்டுத் துணிச்சல்காரி என் மேலேயே சந்தேகப்பட்டு விட்டாள்" என்று கூறிக் கொண்டே இருண்ட மூலை ஒன்றில் சாய்ந்து கொள்ளப் போனார் புத்தபிட்சு.

கருநாகம் இருந்த செய்தியைச் சொல்லி அவரை எச்சரித்தார்கள் அவர்கள். பிட்சு சிரித்தார். "நாமாக ஏற்படுத்திக் கொள்கிற பயங்கள் தான் வாழ்க்கையின் துன்பத்தை வளர்ப்பன. தூங்கும் போது என் உடல் பற்றிய நினைவு எனக்கு உரிமை இல்லை. ஆகவே நான் பாம்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அது என்னைத் தீண்டும் உரிமை பெற்றிருந்தால் அதைத் தடுக்க நான் யார்?" என்று கணீரென்று பதில் சொன்னார் அவர். கால் நாழிகைக்குப் பின் பிட்சு நன்றாகத் தூங்கும் குறட்டை ஒலி கேட்டது. இருந்த பாம்பு போன பின்பு இல்லாத பாம்பை நினைத்துத் தூங்காமல் விழித்திருந்த அவர்கள் இருவருக்கும் அவர் மேல் பொறாமையாக இருந்தது. அவ்வளவு தூய்மையான துறவி மேல் சந்தேகப்பட்ட பெண்ணை மனத்தில் சபித்தார்கள் அவர்கள். மழையும் தணியவில்லை, காற்றும் தணியவில்லை. எங்கோ ஒரு மூலையில் ஏரி உடைத்துக் கொண்டு தண்ணீர் பாய்கிற ஓசையை அவர்கள் கேட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் பயங்கர ஓலமும் எழுந்தது. சக்கசேனாபதி பிட்சுவை எழுப்பி அந்த ஓலத்தைக் கேட்கச் சொன்னார். சிறிது நேரம் உற்றுக் கேட்ட பிட்சு, "அவளுடைய குரல் போலத்தான் இருக்கிறது" என்று தீர்மானமாகச் சொன்னார்.

7. இருளில் எழுந்த ஓலம்

"பிட்சுவையும் கூட்டிக் கொண்டு வாருங்கள். மூன்று பேருமாக ஓடிப் போய்ப் பார்க்கலாம். அந்த அறியாப் பெண் எங்கே தவிக்கிறாளோ?" என்று இராசசிம்மன் சக்கசேனாபதியைத் துரிதப்படுத்தினான். அத்தனை ஓசைகளுக்குமிடையே அந்தப் பெண் குரலின் ஓலம் இன்னும் அவர்கள் செவிகளில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

"ஓர் உயிரைக் காப்பாற்ற உதவும் திருப்பணியில் இந்த ஏழையின் உடல் எந்த விதத்திலானாலும் தன்னை இழக்கத் தயாராயிருக்கிறது" என்று கூறிக் கொண்டு தாமாகவே எழுந்து வந்தார் புத்த பிட்சு. அந்த மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மூன்று பேரும் சிறிது தூரம் ஓடிப் போய் தேடிப் பார்த்தார்கள். அதற்கு மேல் ஓடுவதற்குப் பாதையே இல்லை. ஏரி உடைப்பெடுத்துக் குறுக்கே பாய்ந்து கொண்டிருந்தது. "இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அவளுக்கு வகுத்த வினைப்பயனின்படி ஆகும்" என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடந்தார் பிட்சு. அவர்களும் திரும்பி நடந்தார்கள். பிட்சு மறுபடியும் நிம்மதியாகத் தூங்கினார். பாம்புப் பயத்தை மறந்து சக்கசேனாபதி கூடத் தூங்கத் தொடங்கி விட்டார். தண்ணீரைத் தாங்குகிற பளிங்குக் கிண்ணம் மாதிரி உணர்ச்சிகளை உணர்ந்தும் அவற்றுக்கு இரையாகாமல் வாழ இந்த இரண்டு வயதான மனிதர்களும் எங்கே தான் கற்றார்களோ என்று விழித்திருந்த இராசசிம்மன் எண்ணி வியந்தான். அந்தப் பெண்ணின் ஓலம் நின்று விட்டாலும் கேட்டுக் கொண்டே இருப்பதாக விழித்திருந்த அவன் செவிகளுக்குப் பிரமை உண்டாயிற்று. காற்றிலும், மழையிலும், இருளிலும் அந்தக் காட்டுக் கட்டடத்தில் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் மேல் தானாகவே ஒரு வெறுப்பு உண்டாயிற்று அவனுக்கு.

'மழை பெய்த ஈர மண்ணில், அனுபவமில்லாத சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாகக் கீறி வைத்த அரைகுறைச் சித்திரங்கள் மாதிரி இருக்கிறது இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை. வாழ்வின் உணர்ச்சிகளில் ஒன்றிலாவது முழுமையின் ஆழத்தைப் பார்க்கவில்லையே! பொறுப்பில், வீரத்தில், வெற்றியில் - எதிலும் முழுமை தெரியவில்லையே. அன்பு அல்ல காதல்; காதலும் அல்ல பாசம். இவற்றில் கூட முழுமையாக வாழவில்லை நான். எத்தனை நாட்களை இப்படிக் கழிக்க முடியும்? கல்பகோடிக் காலம் வாழ வேண்டாம். ஒரு திங்கட் காலம் வாழ்ந்தாலும் ஏதாவதொரு உணர்ச்சியில் முழுமையாகத் தோய்ந்து வாழ வேண்டும். ஊழியூழியாக வாழ்வதை விட இந்தச் சிறிது காலத்து முழுமை உயர்ந்தது, பெரியது, இணையற்றது.'

முழுமையைப் பற்றி நினைத்த போது அவனுக்கு மதிவதனியின் நினைவு வந்தது. இடுப்பில் இடைக் கச்சத்துடன் சேர்த்துப் பிணைத்துக் கொண்டிருந்த சிறிய பட்டுப் பையைத் திறந்தான். இருளிலும் தன் நிறத்தையும், ஒளியையும் தனியே காட்டும் அந்தப் பொன்னிற வலம்புரிச் சங்கை எடுத்தான். பித்தன் செய்வது போல் கண்களில் ஒற்றிக் கொண்டான். கைவிரல்களால் வருடியவாறு மடியில் வைத்துக் கொண்டான். கப்பலில் தான் பாடிய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. உணர்ச்சித் துடிப்பைச் சொற்களின் நளினமாக்கிய விந்தையை நினைத்த போது மட்டும் மனத்தில் முழுமை தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. அரசாட்சியையும் வெற்றி தோல்விகளையும் எண்ணிப் பார்த்த போது அவன் உணர்ச்சிகளில் முழுமை தோன்றவில்லை.

'அருமை அன்னையும் மகாமண்டலேசுவரரும் தன்னிடமிருந்து எதிர்பார்த்த கடமைகளை நினைத்த போது அவற்றில் முழுமை தோன்றவில்லை. ஏனென்றால் அந்தக் கடமைகளை அவன் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இடையாற்று மங்கலத்தின் அழகிய சூழ்நிலையில் குழல்வாய்மொழி என்ற பெண்ணோடு பழகிய பழக்கத்தை நினைக்கும் போது முழுமை ஏற்படவில்லை. மதிவதனி என்ற பெண்ணைச் சந்திக்க நேராமலிருந்திருந்தால் ஒரு வேளை இடையாற்று மங்கலத்து அழகியாவது, கனகமாலை என்ற பேரெழில் நங்கையாவது அவனைக் கவர்ந்திருக்கலாமோ என்னவோ? வெள்ளத்தில் பழைய தண்ணீர் அடித்துக் கொண்டு போகப் படுகிற மாதிரி அவன் மனத்தின் அரைகுறை நினைவுகளையெல்லாம் 'மதிவதனி' என்ற முழுமை இழுத்துக் கொண்டு விட்டதா? அல்லது அந்த முழுமையில் அவன் மூழ்கி விட்டானா? பார்க்கப் போனால் முழுமையான வாழ்வு என்பதுதான் என்ன? என்னைப் போல் அரச குடும்பத்தில் பிறந்தவனுக்குப் போர்களும், அவற்றில் வெற்றி வாகை சூடுவதும் தான் முழுமையான வாழ்வு என்று அரசியல் அறம் சொல்லலாம். அப்படிச் சொல்லுவது இதற்கு இலக்கணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் எனக்கு முழுமையான வாழ்வாகத் தோன்றவில்லையே? முழுமையாவது மண்ணாங்கட்டியாவது? அரசனாகப் பிறந்தாலென்ன ஆண்டியாகத் தோன்றினாலென்ன? பிறப்பது மண்ணில்தானே வாழ்வதும் மனிதனாகத்தானே! மனிதனுடைய வாழ்க்கை, அது ஒரு ஓட்டைப் பானை. ஒரு பக்கம் முழுமை கண்டால் இன்னொரு பக்கமாக ஒழுகி விடுகிறதே! ஒன்றை நிறைவாக அனுபவித்தால் இன்னொன்றை இழக்க வேண்டியதுதான். நிறைவு, முழுமையெல்லாம் அமர வாழ்க்கையில் தான் உண்டு போலிருக்கிறது. தேனீக்களை விரட்டாமல் தேனடையிலுள்ள தேனைக் குடிக்க முடியுமா? வாழ்விலுள்ள துன்பங்களைப் போக்காமல், குறைகளை நீக்காமல் முழுமையும் நிறைவும் காண்பது எங்கே?

'அறத்தையும், அன்பையும், கருணையையும் கொண்டே வாழ்ந்து விட என் தாய்க்கு ஆசை. அறிவையும், சூழ்ச்சியையும் கொண்டே வாழ்ந்து விட மகாமண்டலேசுவரருக்கு ஆசை. படைகளையும், போர்க்களங்களையும், உடல் வன்மையையும் கொண்டே வாழ்ந்துவிட வல்லாளதேவனுக்கு ஆசை. இந்த ஆசைகள் தான் முழுமையான வாழ்வா? குழல்வாய்மொழி என்ற பெண்ணுக்குக் கூட என்னையும் எனது அரச போக ஆடம்பரங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையிருக்கிறது. என்னுடைய பதவியும், பெருமையும், தகுதியும் தெரியாமலே என் மேல் அன்பு செலுத்தவும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு என் மேல் இருக்கும் அன்போ எனக்கு அவள் மேலிருக்கும் அன்போதான் முழுமையானதா?

'எது முழுமை? எது நிறைவு? அழியாதது எது? பரிபூரணமான வாழ்வு எது? என்னைப் போன்று பெரிய அரச மரபின் வழித் தோன்றலாக வந்த ஓர் இளைஞனுக்கு அது எப்படிக் கிடைக்கும்?' என்று இப்படி உருக்கமான பல நினைவுகளை மனத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தான் இராசசிம்மன்.

பொழுது விடிவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் சக்கசேனாபதியும் புத்தபிட்சுவும் தூக்கம் விழித்து எழுந்திருந்த போது வாசற்படியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே இராசசிம்மன் கண்ணயர்ந்திருப்பதைக் கண்டனர். அவன் மடியில் சிறிய குழந்தை ஒன்று படுத்துத் தூங்குவது போல் அந்தச் சங்கு கிடப்பதைப் பார்த்துச் சக்கசேனாபதி சிரித்துக் கொண்டார்.

முதல் நாள் காற்றும், மழையும் ஓய்ந்து போயிருந்தன. எனினும், அந்த மழையும் புயலும் உண்டாக்கிய சீரழிவுகளும் அலங்கோலங்களும் கண்பார்வை சென்ற இடமெல்லாம் தெரிந்தன. வானம் அழுக்கு நீக்கி வெளுத்து விரித்த நீலத்துணி போல் வெளிவாங்கியிருந்தது. அவர்களுடைய குதிரைகள் நனைந்து நிறங்கலைந்த மேனியோடு கட்டடத்துக்கு அருகில் ஒண்டிக் கொண்டு நின்றன. குமாரபாண்டியனைத் தொட்டு எழுப்புவதற்காக அருகில் சென்றார் சக்கசேனாபதி. ஆழ்ந்த தூக்கமில்லாமல் கண்களை மூடிச் சோர்ந்து உட்கார்ந்திருந்ததால் அவருடைய காலடி ஓசையைக் கேட்டே விழித்துக் கொண்டான் அவன். சங்கை எடுத்துப் பட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். சக்கசேனாபதியைப் பார்த்து, "அடடா! பொழுது விடியப் போகிறது போலிருக்கிறது. நாம் புறப்படலாமா? நண்பகலுக்குள் எப்படியும் தமனன் தோட்டத்தில் இருக்க வேண்டும் நாம்" என்றான்.

"அவசரப்படாதீர்கள், இளவரசே! நேற்று மழையிலும் காற்றிலும் மரங்கள் ஒடிந்து பாதையெல்லாம் சீர்கெட்டிருக்கிறது. ஏரி உடைப்பினால் வேறு வழிகள் அழிந்திருக்கலாம். முதலில் சிறிது தொலைவு சுற்றித் திரிந்து பாதைகளைச் சரிபார்த்துக் கொண்டு வருவோம்" என்றார் சக்கசேனாபதி.

"தம்பி! பெரியவர் சொல்கிறபடி கேள். நிதானமாகப் பாதையைப் பார்த்துக் கொண்டு புறப்படுவதுதான் நல்லது! அவசரம் வேண்டாம். நானும் உங்களோடு தான் வரப் போகிறேன்" என்று புத்தபிட்சுவும் கூறினார்.

குதிரைகளை அங்கேயே விட்டு விட்டு மூவரும் வழிகளைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். பெரிய பெரிய மரங்களெல்லாம் வேரொடு சாய்ந்திருந்தன. அங்கங்கே தண்ணீர் தேங்கி வழியெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. ஏரி உடைத்துக் கொண்டு பாய்ந்தோடிய நீர்ப்பிரவாகம் சில இடங்களில் பாதையைப் பயங்கரமாக அறுத்துக் குடைந்திருந்தது. காற்றும் மழையும் கொண்ட கோபத்திற்கு ஆளாகி அந்தக் காட்டின் அமைதியான அழகு தாறுமாறாகித் தோற்றமளித்தது.

"கண்ணுக்குத் தெரிகிற காட்சிகளைப் பார்த்தால் நேற்றிரவு அந்தப் பெண் உயிர் பிழைத்திருக்க முடியுமென்று என்னால் நம்பமுடியவில்லை. பாவம்! அவள் தலையில் எழுதியிருந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது" என்று புத்தபிட்சு பரிதாபமான குரலில் கூறினார். அவர் தம் வார்த்தையைச் சொல்லி முடிக்கவும், "அதோ பாருங்கள் அடிகளே! யாரோ விழுந்து கிடக்கிறாற் போலிருக்கிறது" என்று முகத்தில் பயமும், வியப்பும் படரச் சக்கசேனாபதி ஒரு புதரைக் கைநீட்டிக் காட்டிக் கூச்சலிடவும் சரியாக இருந்தது. முதல் நாளிரவு தண்ணீர் பாய்ந்து ஓடிய அடையாளம் அங்கே தெரிந்தது. மரக்கிளைகளின் முறிவுகளும் செடி கொடித் தூர்களும் அடர்ந்து பின்னிக் கிடந்த புதரில் தண்ணீர் இழுத்து வந்து செருகினாற் போல் அந்த உடல் கிடந்தது. தோற்றத்திலிருந்து பெண்ணுடல்தான் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

"அந்தப் பாவிப் பெண்ணாகத்தான் இருக்கும். நேற்று நான் எவ்வளவு ஆதரவோடு அவளிடம் பேசினேன். எப்படியாவது அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் என் உள்ளத்தில் உறுதியாயிருந்தது. ஆனால் புத்த பகவான் திருவுள்ளம் வேறாயிருந்திருக்கிறது. அடப் பாவமே! நேற்றே நான் சொல்லியபடி கேட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காதே! வாருங்கள் போய்ப் பார்க்கலாம்" என்று முன்னால் ஓடினார் புத்தபிட்சு. இராசசிம்மனும், சக்கசேனாபதியும் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். பிட்சு அந்தப் பெண்ணின் உடைகளைச் சரி செய்துவிட்டு, "அவள் தான் ஐயா! அநியாயமாகச் செத்துத் தொலைத்திருக்கிறாள்!" என்று கூறிக் கொண்டே, அந்த உடலைப் புதருக்குள்ளிருந்து வெளியே தூக்கி வந்து முகம் தெரியும்படி தரையில் கிடத்தினார். சக்கசேனாபதியின் விழிகளில் அநுதாபம் மின்னியது.

கண்களில் சந்தேகமும் பீதியும் மிளிரக் கொஞ்சம் கீழே குனிந்து அந்த முகத்தை உற்றுப் பார்த்தான் இராசசிம்மன். அவன் முகம் பயத்தால் வெளிறி வாய் கோணியது. அடுத்த கணம் அவன் வாயிலிருந்து வெளியேறிய ஒரு பெயர் அந்தக் காடு முழுவதும் எதிரொலித்து அலறிக் கொண்டிருந்தது.

8. ஒரு துயர நிகழ்ச்சி

வெள்ளத்திலும், புயலிலும் சிக்கிக் கொண்டு மீளும் வழி தெரியாமல் இறந்து போன அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்துக் குமாரபாண்டியன் பெயர் சொல்லி அலறியதைக் கண்டதும் சக்கசேனாபதிக்கும் புத்தபிட்சுவுக்கும் அடக்க முடியாத வியப்பு ஏற்பட்டது.

முகத்தைப் பார்த்து இனங்கண்டு கொண்டதும் அவன் வாயிலிருந்து அலறலாக ஒலித்தது அந்த ஒரே ஒரு வார்த்தைதான். அதன் பின் அவன் வாயிலிருந்து வார்த்தையே பிறக்கவில்லை. விழிகள் விரிய முகத்தில் மலைப்பும், பீதியும் தெரிய, வாய் பேசும் ஆற்றல் இழந்து விட்டது போல் அப்படியே அசையாமல் நின்றான் அவன்.

"இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? இவள் யார்?" என்று ஒரே சமயத்தில் சக்கசேனாபதியும் பிட்சுவும் அவனை நோக்கிக் கேட்டார்கள். சிறிது நேரம் அவர்கள் கேள்வியையே காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் மலைத்தது மலைத்தபடியே நின்ற இராசசிம்மன் பின்பு மெல்ல தலை நிமிர்ந்தான்.

"சக்கசேனாபதி! இது என்ன பரிதாபம்! தென்பாண்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வந்து இறங்கி இந்தப் பெண் தனியாக எப்படி இங்கே வந்தாள்? இவளுடைய விதி இங்கே வந்து முடிய வேண்டுமென்று தான் இருந்ததா?" என்று பரிதாபம் மிக்க குரலில் அவரை நோக்கிக் கூறினான்.

"இந்தப் பெண் யாரென்றே நீங்கள் இன்னும் எனக்குச் சொல்லவில்லையே?" என்று கேட்டார் அவர்.

"சந்தேகமேயில்லை! இவள் தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் தங்கை! பகவதி என்று பெயர்! இவள் எப்படி எதற்காக யாருடைய உதவியால் இங்கே வந்தாள் என்பதல்லவா எனக்குப் புதிராக இருக்கிறது. எப்படியானாலும் இந்த அவலக் காட்சி என் நெஞ்சை உருக்குகிறது. இந்த வயதில் இந்தப் பெண்ணுக்கு இப்படி ஏற்பட்டிருக்க வேண்டாம்" என்று நா தழுதழுக்கக் கூறிவிட்டுக் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டான் குமாரபாண்டியன்.

"இளவரசே! நீங்கள் பிழையாக அனுமானம் செய்கிறீர்கள். இவள் அந்தப் பெண்ணாக இருப்பாளென்று என்னால் நம்பமுடியவில்லை. அவளாவது, தென்பாண்டி நாட்டிலிருந்து இங்கே ஓடி வருகிறதாவது. தளபதியின் தங்கை மாதிரியே முக அமைப்பும், தோற்றமுமுள்ள யாரோ ஒரு பெண்ணாக இருப்பாள் இவள்" என்றார் சக்கசேனாபதி.

"எனக்கும் அப்படிச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்மை மதர்ப்பும் பெண்மை நளினமும் கலந்த அழகு முகம் அந்தப் பெண்ணுடையது போலவே இருக்கிறதே!" என்று இராசசிம்மன் கூறிய போது, 'சாவும், நோவும் கூடத் தனக்கு வேண்டியவர்களுக்கு வந்தால் தான் மனிதனுக்கு அனுதாபப்பட முடிகிறது. வேண்டாத, முன் பின் தெரியாதவருக்காக அனுதாபத்தைக் கூட அநாவசிய செலவு செய்ய மனிதன் தயாராயில்லை' என்று மனத்துக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டார் பிட்சு.

"நான் சொல்வதை நம்புங்கள். இது நிச்சயமாகத் தளபதியின் தங்கையாக இருக்க முடியாது. தோற்றத்திலுள்ள ஒற்றுமையே உங்கள் கண்களை ஏமாற்றுகிறது. கவலையை விடுங்கள்" என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார்.

"நீங்கள் சொல்கிற மாதிரி இருந்தால் நல்லதுதான். ஆனால் நமக்காக அப்படி இருக்குமா? இந்தப் பாவிப் பெண் நேற்றிரவு அடிகள் சொன்னதைக் கேட்டு அவரோடு வந்திருக்கக் கூடாதோ? இப்படி உயிர் விடவா அடிகள் மேல் சந்தேகப்பட்டு மழையிலும் புயலிலும் திண்டாடினாள்? ஐயோ! விதியின் கொடுமையே!" என்று புத்த பிட்சுவிடம் பிரலாபித்தான் இராசசிம்மன். "துயரம் பொதுவானது, யாராயிருந்தாலும் மனம் வருந்திக் கலங்க வேண்டிய இளமைச் சாவு இது. ஆனாலும் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் துன்பங்களைக் காணவும், நுகரவும், உண்டாக்கவுமே பிறந்தவர்கள். வெறும் மனிதர்கள்" என்று உணர்ச்சி கொந்தளிக்கும் சொற்களால் இராசசிம்மனுக்கு ஆறுதல் கூறினார் பிட்சு.

"நாம் என்ன செய்யலாம்? நேற்றிரவு அவ்வளவு மழையிலும் காற்றிலும் இந்தப் பெண்ணின் ஓலம் கேட்டதும் நம் உயிர்களைக் கூடப் பொருட்படுத்திப் பயப்படாமல் எழுந்து உதவ ஓடி வந்தோம். தண்ணீர் உடைப்பு நம்மைத் தடுத்து விட்டதே. புத்திசாலிப் பெண்ணாயிருந்தால் பிட்சு கூப்பிட்ட போதே இக்கரைக்கு வந்திருக்க வேண்டும். பாவம், விதி முடிகிற சமயத்தில் அறிவு கூட நல்லது கெட்டதைப் பகுத்துணராமல் பிறழ்ந்து விடுகிறதே! இல்லையானால் கள்ளங்கபடமறியாத இந்த அடிகளைப் பற்றி ஐயமுற்றுப் பயந்திருப்பாளா இவள்?" என்று சக்கசேனாபதியும் சோகத்தோடு சொன்னார்.

ஆறுதல்களையும் மீறி இறந்து கிடக்கும் அந்தப் பெண்ணுடல் பகவதியினுடையதுதான் என்று குமாரபாண்டியனின் மனம் உறுதியாக எண்ணியது. ஆனால் அதைத் திடப்படுத்திக் கொள்ள இன்னும் சரியான சான்று இருந்தால் சந்தேகம் தீர்ந்து விடும். 'தளபதி வல்லாளதேவனின் தங்கையை நன்றாகப் பார்த்துப் பழக்கப்பட்டு அடையாளம் சொல்லக் கூடிய ஒருவர் இருந்தால் அவள் தானா என்பதை இப்போதே உறுதிப் படுத்திக் கொண்டு விடலாம். ஆனால் அவன் ஒருவனைத் தவிர அவளை அடையாளம் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே?'

இராசசிம்மன் மனத்தின் உணர்ச்சிப் பரப்பெல்லாம் சோகம் கவ்விட, மேலே என்ன நினைப்பதென்று தோன்றாமல் மயங்கி நின்றான்.

"சக்கசேனாபதி! எனக்குத் தெரிந்த பெண்களுக்குள்ளே வல்லாளதேவனின் தங்கைக்கு ஒரு தனிக் குணம் உண்டு. பெண்ணின் அழகும், ஆணின் நெஞ்சு உரமும் கொண்டவள் பகவதி. ஒரு பெரிய வீரனின் தங்கை என்று சொல்வதற்கு ஏற்ற எல்லா இலட்சணங்களும் பகவதியிடம் உண்டு" என்று கண்களில் நீர் மல்க அவன் கூறினான்.

"நீங்கள் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்து கிடப்பது அந்தப் பெண்ணாக இருக்க முடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது. நாம் இந்த விவரத்தைத் தமனன் தோட்டத்தில் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம். இவள் பகவதியாயிருக்கும் பட்சத்தில் தமனன் தோட்டத் துறையில் வந்து இறங்கினால் தான் இந்தப் பாதையாகப் புறப்பட்டிருக்க முடியும். இந்தப் பெண்ணை அடையாளம் சொல்லி, 'இவள் எப்போது, யாருடன் எந்தக் கப்பலில் வந்து இறங்கினாள்' என்று கப்பல் துறை ஊழியர்களிடம் விசாரிப்போம். அந்த விசாரிப்புக்குக் கூட அவசியமில்லை. ஏனென்றால் இவள் பகவதியாயிருந்து கப்பலில் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்திருந்தால் தமனன் தோட்டத் துறையிலேயே கப்பலை விட்டுக் கீழிறங்க முடியாமல் நம் வீரர்கள் சிறைப்பிடித்து நிறுத்தியிருப்பார்கள். நான் தான் கப்பலைத் தடுத்து நிறுத்தும்படி கண்டிப்பான கட்டளையிட்டு வந்திருக்கிறேனே. நேற்றைக்கு முன் தினம் இரவு தமனன் தோட்டத்திலிருந்து எனக்கு வந்த தகவலிலிருந்து ஒரே ஒரு கப்பல் தான் பிடிபட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கப்பலில் வந்திருந்தால் இந்தப் பெண்ணை இறங்கி வர விட்டிருக்க மாட்டார்களே!" என்று சக்கசேனாபதி விளக்கமாகச் சொன்ன போது, அவர் சொல்கிற படியே இருக்கலாமென்று இராசசிம்மனுக்கும் தோன்றியது.

'ஒரே மாதிரி முக அமைப்பும், தோற்றமும் உள்ள பெண்கள் வேறு இடங்களில் இருக்க முடியும். இறந்து கிடக்கும் பெண் பகவதியைப் போன்ற தோற்றமுடைய வேறொருத்தியாகவும் இருக்கலாம்' என்று நினைத்து மன அமைதி அடைய முயன்றான். மனத்தின் வேதனையும், குழப்பமும், பிடிவாதமாகத் தணிவதற்கு மறுத்தன. சலனமில்லாத முகபாவத்தோடு நின்று கொண்டிருந்தவர் புத்த பிட்சு ஒருவர் தான். 'நன்றாகப் பழுத்த பழங்களெல்லாம் உதிராமல் இருக்கும் போது காற்றின் கொடுமையால் பிஞ்சுகளும், காய்களும் மரத்திலிருந்து உதிர்ந்து விடுவது போல் தோல் சுருங்கி நரை திரை மூப்பு கண்டவர்களுக்கெல்லாம் வராத சாவு இளைஞர்களுக்கு வந்து விடுகிறது. அவரவர்களுக்கென்று அளந்து வகுத்த நாட்களுக்கு மேல் யாரும் வாழப் போவதில்லை' என்று உலக நியாயங்களை எண்ணிப் பார்த்துக் கலக்கத்தைத் தவிர்த்தவர் அவர் ஒருவர் தாம்.

"இந்தச் சோக முடிவை எண்ணிக் கலங்கி இப்படியே நின்று கொண்டிருந்தால் செயலும், பயனும் நிறைந்த நம் நேரம் கடந்து போய்விடும். நாம் தமனன் தோட்டம் போக வேண்டுமே!" என்று தங்கள் காரியத்தை நினைவுபடுத்தினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் குனிந்த தலை நிமிராமல் நீண்ட பெருமூச்சு விட்டான்.

"இனியும் இப்படியே செயலிழந்து கவலைப்பட்டு நிற்பதில் பயனில்லை. வாருங்கள்! யாராயிருந்தாலும் இறந்து கிடக்கும் இந்தப் பெண் கொழுந்து நம்முடைய பரிதாபத்துக்கும் இரக்கத்துக்கும் உரியவள். செய்ய வேண்டியதைச் செய்து விட்டு நம் வழிகளில் நாம் நடப்போம்" என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் ஓடி அரித்திருந்த ஒரு பள்ளத்தில் அந்தப் பெண்ணின் உடலை எடுத்து இட்டார் புத்தபிட்சு. சக்கசேனாபதியும் அவருமாக இரு பக்கங்களிலும் உட்கார்ந்து கைகளால் மண்ணைத் தள்ளிக் குழியை மூட ஆரம்பித்தார்கள். மண்ணோடு அவர்கள் கண்ணீரும் குழியில் சிந்தியது. புதரில் மலர்ந்திருந்த காட்டுப் பூக்கள் சிலவற்றைக் கை நிறையப் பறித்துக் கொண்டு வந்து அந்தக் குழிக்குள் சொரிந்து விட்டு முகத்தை மூடிக் கொண்டு விசும்பினான் இராசசிம்மன்.

"தம்பீ! உணர்ச்சியை அடக்கு. நீ முகத்தை மூடிக் கொண்டு அழுவதைப் பார்த்தால் இவள் நீ நினைக்கிற பெண்ணென்றே உன் மனம் நம்பிவிட்டதாகத் தெரிகின்றது. மண்ணைச் சொரிந்தாலும், மலரைச் சொரிந்தாலும் வேறுபாடு தெரியாத நிலையை இந்தப் பெண் அடைந்து விட்டாள். உன் அனுதாபத்துக்குரிய உயிர் இப்போது இந்த உடம்பில் இல்லை. இது எலும்புச் சட்டம் வேய்ந்து நரம்பு நூலிட்டுத் தைத்த தோல் பை. இந்தக் கரிய கூந்தலும், நீல நெடுங் கண்களும், கோலப் புருவமும், காலக்கனலெரியில் அழியும் மாயங்கள். இந்தப் பெரியவர் அடிக்கடி உன்னை 'இளவரசே' என்று கூப்பிடுவதிலிருந்து நீ ஓர் அரசகுமாரனென்று தெரிகிறது. ஆளுங்குடியிற் பிறந்தவனுக்கு இறுகிய மனம் வேண்டுமென்று அரசியல் நூல்கள் சொல்லும். நீயோ துன்பங்களைக் கண்டபோதெல்லாம் இப்படி நெகிழ்ந்து விடுவாய் போலிருக்கிறது. உன் மனத்தில் நான் சொல்லும் உரைகளைப் பதித்துக் கொள்ளப்பா" என்று குழியில் மண்ணைத் தள்ளிக் கொண்டே கூறினார் புத்த பிட்சு. அப்போது,

"நீல நிறத்தனவாய் நெய்யணிந்து போதவிழ்ந்து
கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே!
கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
காலக் கனலெரியில் வேம்வாழி நெஞ்சே
காலக் கனலெரியில் வேவன கண்டாலும்
சால மயங்குவ தென் வாழி நெஞ்சே..."

என்று அவர் 'கையறு நிலையாக' (ஒருவர் மரணத்துக்கு வருந்திப் பாடும் பாட்டு) பாடிய பாட்டு தன் நெஞ்சுக்கென்றே பாடியது போல் தோன்றியது இராசசிம்மனுக்கு.

குழியை மண் மூடிக் கொண்டது. உடம்பு மறைந்தது. எங்கோ சிறிது தூரம் நடந்து போய் ஒரு சிறு அரசங் கன்றை வேரோடு பிடுங்கி வந்து அந்த இடத்தில் ஊன்றினார் புத்த பிட்சு. பக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரையும் வாரி இறைத்தார். பின்பு தலை நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்துச் சொன்னார்: "நாம் போகலாம். ஓர் உயிரின் கதையை மண்ணுக்குள் பத்திரப் படுத்தி விட்டோம். இதற்கு முன்னும் இப்படி எத்தனையோ உயிர்களின் கதைகளை மண் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ? மண்ணுக்கு ஒன்றும் புதிதில்லை."

மூன்று பேரும் மௌனமாகத் திரும்பி நடந்தார்கள். இரவு தங்கியிருந்த கட்டடத்தின் வாயிற்படிக்குப் பக்கத்தில் போன போது முதல் நாளிரவு உறக்கம் வராமல் அந்தப் படியில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றித் தான் பைத்தியக்காரத்தனமாகச் சிந்தித்த சிந்தனைகள் இராசசிம்மனுக்கு நினைவுக்கு வந்தன. 'முழுமையாம் முழுமை! எங்கே இருக்கிறது அது?'

"உங்கள் இருவருக்கும் குதிரைகள் இருக்கின்றன. நான் நடந்து போக வேண்டியவன். எனக்கு விடை கொடுங்கள்" என்று அந்த இடத்துக்கு வந்ததும் புத்தபிட்சு விடை பெற்றுக் கொண்டார். பிரிந்து போகும் போது மீண்டும் அவர் இராசசிம்மன் முகத்தைப் பார்த்து, "தம்பீ! கவலையை விடு. நீ அரசகுமாரன்; ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும் போரில் கூடக் கலங்காமலிருக்க வேண்டியது உனக்கு அறம். இந்த ஓர் உயிருக்காகவே இப்படி மயங்கிச் சோர்கிறாயே? போ! உன் காரியத்தைப் பார்க்கக் கிளம்பு!" என்றார்.

சிறிது நேரத்தில் மழையாலும், காற்றாலும் சிதைந்த காட்டு வழியில் அவர்கள் குதிரைப் பயணம் தொடங்கியது. 'காலக் கனலெரியில் வேம் வாழி நெஞ்சே' என்ற புத்த பிட்சுவின் சொற்கள் மனத்தாளத்திலிருந்து நீங்காமல் ஒலிக் கூத்தாட சிந்தனை கவியும் மனத்தோடே சென்றான் குமாரபாண்டியன்.

நடுவழியில் நிகழ்ந்த அந்தத் துயர நிகழ்ச்சி பொலன்னறுவையிலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது. புத்த பிட்சுவின் வார்த்தைகள், வாழ்க்கையின் முழுமையைப் பற்றி அவன் முதல் நாள் நினைத்த அதே நினைவுகளை வேறொரு விதத்தில் அவனுக்குத் திருப்பிக் கூறுவன போல் ஒலித்தன.

அந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இந்தச் சோக நிகழ்ச்சியை உண்டாக்குவதற்கென்றே நேற்று மழையும், காற்றும் வந்தனவா? இந்தச் சோகத்தை எதிர்பார்த்தே நேற்றிரவு அவன் மனத்தில் வாழ்வின் முழுமையைப் பற்றிய அந்தத் தோற்றங்கள் உண்டாயினவா? ஒன்றும் புரியவில்லை. அப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் போல் சக்கசேனாபதியும் பேசாமல் உடன் வந்து கொண்டிருந்தார்.

அவர்களிருவரும் தமனன் தோட்டத்துக் கப்பல் துறையை அடைவதற்குச் சிறிது தொலைவு இருக்கும் போதே ஈழ நாட்டுக் கப்பற்படை வீரர்கள் சிலர் எதிரே வந்து அவர்களைச் சந்தித்து விட்டனர். அவர்களைச் சந்தித்த உடனே ஆவலோடு, "நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கும் கப்பலில் வந்திருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இந்த ஒரு கப்பலைத் தவிர வேறு ஏதாவது கப்பல் வந்ததா? இந்தச் சில நாட்களில் யாராவது ஓர் இளம் பெண் கப்பலில் வந்து இறங்கித் தனியாக இந்தக் காட்டு வழியில் புறப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று எத்தனை சந்தேகங்கள் தன் மனத்தில் இருந்தனவோ அத்தனைக்கும் சேர்த்துக் கேள்விகளைக் கேட்டார் சக்கசேனாபதி.

"இந்தச் சில நாட்களுக்குள் இங்கு வந்ததே இப்போது பிடிபட்டுள்ள ஒரே கப்பல்தான். கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறதென்று அறிந்தோம். அதில் ஒரு முன்குடுமிக்கார மனிதரும், ஓர் இளம் பெண்ணும், இன்னொரு இளைஞனும் ஆக மூன்று பேர்கள் வந்தார்கள். ஆனால் கப்பலில் பிடிபட்ட தினத்தன்று மாலை அந்த இளைஞன் மட்டும் காணாமல் போய்விட்டான்" என்று கடற்படை வீரர்கள் பிடிபட்ட கப்பலின் நிலைமையை விவரித்து மறுமொழி கூறினர்.

9. அவசரப் பயணம்

பாதி வழியில் எதிர்கொண்டு சந்தித்த தமனன் தோட்டத்துக் கடற்படை வீரர்கள் கூறிய செய்தியிலிருந்து இறந்த பெண் கப்பலில் வந்து இறங்கியவளாக இருக்க முடியாதென்று தெரிந்தது. அவ்வளவில் தாற்காலிகமான திருப்தி ஒன்று ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. 'கப்பலில் வந்த மூன்று பேர்களில் ஒரே ஓர் இளைஞன் தான் காணாமற் போய்விட்டானென்று இவர்கள் கூறுகிறார்கள். எனவே பகவதி இந்த கப்பலில் வந்து இறங்கியிருக்க முடியாது' என்று தன் மனத்தை ஆற்றிக் கொண்டு, "சக்கசேனாபதி! என்னைத் துன்புறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, என் பகைவர்கள் அனுப்பிய முரட்டு ஒற்றர்கள் சிலர், பிடிபட்டிருக்கும் இந்தக் கப்பலில் வந்திருக்கலாம் என்று நீங்களும் நானும் வந்து பார்த்தோம். ஆனால் கப்பல் விழிஞத்திலிருந்து வந்தது என்றும் அதில் ஏற்கெனவே தப்பிச் சென்ற இளைஞனைத் தவிர ஒரு முன்குடுமிக்காரரும், இளம் பெண்ணொருத்தியும் இருக்கிறார்களென்றும் இவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் யாராயிருக்கலாம் என்பதை இப்போதே நான் கூறிவிட முடியும்" என்று அவரிடம் சொன்னான் இராசசிம்மன்.

"முடியுமானால் சொல்லுங்கள், பார்க்கலாம். யார் அவர்கள்?" என்று அவர் அவனைக் கேட்டார்.

"வேறு யாராயிருக்க முடியும்? மகாமண்டலேசுவரர்தான் தம் பெண்ணையும் நாராயணன் சேந்தனையும் அனுப்பியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"அவர் அவ்வாறு அனுப்புவதற்கு இப்போது என்ன அவசியம் வந்து விட்டது?"

"எனக்கு ஏதாவது அந்தரங்கமான செய்தியை அவர் சொல்லி அனுப்பியிருக்கலாம் அல்லவா?"

"அவரிடம் தங்கியிருப்பது போல் இருந்து அவரையும் ஏமாற்றி விட்டு அரசுரிமைப் பொருள்களையும் சொல்லாமல் கடத்திக் கொண்டு என்னோடு இங்கு ஓடி வந்திருக்கிறீர்கள் நீங்கள். இவ்வளவு அவமதிப்பாக நடந்து கொண்ட பின்பும் உங்களைத் தேடிக் கடல் கடந்து தம் பெண்ணையும், அந்தரங்க ஒற்றனையும் அவர் எப்படி அனுப்புவார்?"

"எல்லா மனித உணர்ச்சிகளையும் அளவிடுவது போல் மகாமண்டலேசுவரருடைய உணர்ச்சிகளையும் சாதாரணமாக அளவிட முயல்கிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு இப்படித் தோன்றுகிறது சக்கசேனாபதி."

"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இளவரசே! முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏறக்குறைய தீர்ந்து விட்டது. இந்தத் துறையில் நாம் வந்து இறங்கிச் சென்ற நாளுக்குப் பின் எந்தக் கப்பலிலும் வல்லாளதேவனின் தங்கை பகவதி வந்து இறங்கிச் சென்றதாக யாரும் அடையாளம் கூறவில்லை. அதனால் நேற்றிரவு காட்டில் இறந்த பெண்ணைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட்டு அழுதது வீண் மனப்பிரமை தான். உருவ ஒற்றுமை உங்கள் கண்களை ஏமாற்றிவிட்டது."

"இல்லை, சக்கசேனாபதி! நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் இப்போதைக்கு அதை நான் தீர்மானிப்பதற்கு இயலாது. இறந்தது அந்தப் பெண்ணில்லை என்பதை அங்கே சென்று அவளை உயிருடன் பார்த்தாலொழிய நான் நம்பமாட்டேன்" என்ற இராசசிம்மன் அப்போதும் பிடிவாதமாகத்தான் அவருக்குப் பதில் கூறினான்.

தமனன் தோட்டத்துக் கப்பல் துறை நெருங்க, நெருங்க அவர்கள் இருவருடைய மனத்திலும் ஆவல் அடித்துக் கொண்டது.

அவர்களுடைய குதிரைகளுக்குப் பக்கத்திலேயே அடக்கமாகக் கடற்படை வீரர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

"பிடிபட்ட கப்பலிலிருந்து யாரோ ஓர் இளம் பிள்ளை மட்டும் தப்பி விட்டதாகக் கூறுகிறீர்களே! நீங்கள் ஏன் அவ்வளவு கவனக் குறைவாக நடந்து கொண்டீர்கள்? உங்களுக்குத் தெரியாமால் அவன் எப்படித் தப்பினான்?" என்று அந்த வீரர்களிடம் கடுமையான குரலில் கேட்டார் சக்கசேனாபதி.

"அதை எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. கப்பல் பிடிபட்ட அன்று நடுப்பகலில் அந்த இளைஞன் கீழ்த்தளத்திலுள்ள அறைக்குப் போனான். அதன் பின் அவனை நாங்கள் காணவேயில்லை. முன்குடுமிக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் விசாரித்ததில், 'அந்த இளைஞன் கப்பலிலிருந்து தப்பிச் சென்று விட்டான்' என்றும், எப்படித் தப்பினான், எங்கே போனான் என்பது தங்களுக்குத் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் முடிந்த வரையில் தேடிப் பார்த்தோம். அந்த இளைஞன் அகப்படவேயில்லை" என்று கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் கூறினர்.

"முன் குடுமிக்காரரும், அந்தப் பெண்ணுமே அவனை உங்களுக்குத் தெரியாமல் தப்பச் செய்துவிட்டு உங்களிடம் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார்களென்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் உங்கள் பாதுகாப்புக் குறைவுதான் காரணம்."

"அப்படியிருப்பதற்கில்லை, மகாசேனாபதி! ஏனென்றால் முன்குடுமிக்காரரும் அந்தப் பெண்ணும் தப்பிச் சென்ற இளைஞன் மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த இளைஞனைப் பற்றித் தங்களுக்குள் வெறுப்பாகவும், கேவலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் அவர்களுக்கு வேண்டியவனாக இருக்க முடியாது."

"இவர்கள் சொல்வதைக் கேட்டால் எல்லாம் ஒரே புதிராக அல்லவா இருக்கிறது?" என்றான் அதுவரையில் குறுக்கிட்டுப் பேசாமல் அமைதியாகக் குதிரையைச் செலுத்தி வந்த குமாரபாண்டியன்.

தமனன் தோட்டம் வந்தது. எதிரே கடலும், நிறுத்தப் பட்டிருந்த அந்தக் கப்பலும், துறையும் தெரிந்தன.

"நேற்று மழையால் இந்தப் பகுதியில் ஒன்றும் அழிவு நேரவில்லையா?"

"இங்கே கப்பலின் பாய்களையெல்லாம் இறக்கி, நங்கூரத்தை வன்மையாகக் கட்டி வைத்தோம். அதனால் ஒன்றும் அழிவு இல்லை" என்று ஊழியர்களிடமிருந்து அவருக்கு மறுமொழி கிடைத்தது.

"சக்கசேனாபதி! அதோ பாருங்கள். நான் அனுமானித்துக் கூறியபடிதான் நடந்திருக்கிறது. நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் தான் வந்திருக்கிறார்கள். கப்பல் மேல்தளத்தில் நிற்கிறார்கள் பாருங்கள்..." என்று வியப்போடு சுட்டிக் காட்டினான் குமாரபாண்டியன். அவர் பார்த்தார். தங்கள் இளவரசனைக் கண்ட மகிழ்ச்சியோடு முகம் மலரக் கப்பல் மேல்தளத்தில் நின்றார்கள் சேந்தனும் குழல்வாய்மொழியும். சக்கசேனாபதிக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. குமாரபாண்டியனின் பகைவர்களால் அனுப்பப் பெற்றவர்கள் அந்தக் கப்பலில் வந்திருக்கலாமென்று எதிர்பார்த்த அவருக்கு உண்மையிலேயே வந்திருப்பவர்களைப் பார்த்தவுடன் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் உண்டாகவில்லை.

குதிரையை விட்டு இறங்கியதும் சக்கசேனாபதியையும் முந்திக் கொண்டு குமாரபாண்டியன் ஓட்டமும் நடையுமாகக் கப்பலை நோக்கிச் சென்றான். ஆவலின் உள்ளத் துடிப்பும், கால்களின் வேகமும் போட்டியிடும் நடை அது.

"அடடா! நான் எவ்வளவு பாக்கியசாலி... மகாமண்டலேசுவரரின் அருமைப் புதல்வியும் அந்தரங்க ஒற்றரும் சேர்ந்து என்னைப் பார்க்கக் கடல் கடந்து வந்திருக்கிறார்களே?... வரவேண்டும்... வர வேண்டும்..." என்று புன்னகை செய்து கொண்டே அவர்களுடன் போய் மேல் தளத்தில் நின்றான் இராசசிம்மன்.

குழல்வாய்மொழியும் சேந்தனும் மரியாதை செய்து வரவேற்கிற பாவனையில் வணங்கினர். குழல்வாய்மொழி பேசவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். அவன் இடையாற்று மங்கலத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டதற்காகத் தன் மேல் கோபம் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் இராசசிம்மன். அந்தப் பெண்மைத்தனமான பொய்க் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தச் சமயத்தில் சேந்தன் அருகில் வந்து கூறலானான்: "குமார பாண்டியருக்கு மிக அவசரமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கேயிருக்கும் கடற்படை வீரர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அநியாயமாக எங்களைத் தடுத்து நிறுத்தித் தாமதமாக்கி விட்டார்கள். நாங்கள் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது. அவசியத்தோடு கூடிய அவசரம் நிறைந்தது. மகாமண்டலேசுவரர் எங்களை அனுப்புவதற்கு முன் இந்த அவசரத்தை மிகவும் வற்புறுத்தியிருக்கிறார்."

சேந்தன் இராசசிம்மனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது சக்கசேனாபதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் நாராயணன் சேந்தன் பேச்சை நிறுத்தி விட்டான். குழல்வாய்மொழி மருண்டு நின்றாள்.

"நான் எதிரிகளின் கப்பல் ஒன்றை நினைத்து இந்தக் கட்டளை இட்டிருந்தேன். இவர்கள் விவரம் தெரியாத குறையினால் உங்கள் கப்பலைத் தடுத்து நிறுத்தி, அநாவசியமாக உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து விட்டார்கள். நீங்கள் இருவரும் தயவு செய்து மன்னிக்க வேண்டும்" என்று வந்து நின்றவுடன் சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் மன்னிப்புக் கேட்டார் அவர். மன்னிப்புக் கேட்டவருக்குக் கேட்கப்பட்ட இருவருமே பதில் எதுவும் சொல்லவில்லை.

இரண்டு மூன்று விநாடிகள் அமைதியில் கரைந்தன. "சேந்தா, மகாமண்டலேசுவரர் ஏதோ அவசரமான செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறாரென்றாயே! அதை இன்னும் நீ எனக்குச் சொல்லவே இல்லையே?" என்று அந்த அமைதியைக் கலைத்து இராசசிம்மன் கேட்டான்.

"மன்னியுங்கள், அதை உங்களிடம் கூறுவதற்கு நீங்கள் என்னோடு இப்படிக் கொஞ்சம் தனியே வரவேண்டும்." சேந்தனின் இந்த சொற்களைக் கேட்டு இராசசிம்மன் சிறிது தயங்கினான். சக்கசேனாபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

"போய் வாருங்கள்! எனக்குப் பிறருடைய இரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் அக்கறை கிடையாது. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்" என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

சேந்தன் குமாரபாண்டியன் பின் தொடரக் கீழ்த் தளத்துக்கு இறங்கிக் குழல்வாய்மொழியின் அறைக்குள் போனான். குழல்வாய்மொழியும், அவர்கள் இருவருக்குப் பின்னால் சென்றாள். அவர்களை கப்பல் அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் சேந்தன். சேந்தனின் இந்தச் செயல் இராசசிம்மனைத் திகைக்க வைத்தது. குழல்வாய்மொழிக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது.

"என்னுடைய அறைக்குள் நான் நுழைவதை நீங்கள் யார் தடுப்பதற்கு?" என்று சிவந்த உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு சேந்தனைக் கேட்டாள் குழல்வாய்மொழி.

"இது உங்களுடைய அறை தான் என்பதில் சந்தேகமில்லை, அம்மணி! ஆனால் இப்போது நாங்கள் பேச வேண்டிய செய்தி எங்களுடையது" என்று அழுத்தமாகக் கூறிவிட்டுத் தானும் உள்ளே போய்க் கொண்டு, கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டான் சேந்தன்.

முகத்தில் அறைந்தது போல், 'படீ'ரென்று அடைபட்ட கதவுக்கெதிரே நின்ற குழல்வாய்மொழியின் அழகிய முகத்தில் கோபம் விளையாடியது.

'நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக் கூடாது என்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது' என்று ஆத்திரந் தீரத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். கோபத்தில் இரண்டு கைவிரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடுக்கிக் கொண்டே வேகமாக மேல் தளத்துக்கு ஏறிப் போனாள் குழல்வாய்மொழி. அங்கே சக்கசேனாபதி நின்று கொண்டிருந்தார். வேறொரு பக்கமாகப் பாய்மரத்தில் சாய்ந்தபடி அவளும் போய் நின்று கொண்டாள்.

"அம்மா! நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையை எனக்குத் தெரிவித்து விட்டால் நல்லது. இதே கப்பலில் உங்களோடு யாரோ ஓர் இளைஞனும் வந்தானாமே? இப்போது அவன் எங்கே தப்பி ஓடினான்? அவனாகத் தப்பியிருந்தாலும், நீங்களாகத் தப்பவிட்டிருந்தாலும் நடந்ததை மறைக்காமல் என்னிடம் கூறிவிடுங்கள். அந்த வாலிபன் யாரென்பதையும் எனக்குச் சொல்லிவிடுங்கள்" என்று சக்கசேனாபதி குழல்வாய்மொழியிடம் கேட்டார்.

"எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் அந்தக் குட்டை மனிதரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது அவர் தான் இங்கே சர்வாதிகாரி!" என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் அவள். அதே சமயத்தில் சேந்தன் பின் தொடர இராசசிம்மன் அங்கே வந்தான். அவன் முகம் இருண்டிருந்தது.

"சக்கசேனாபதி! மிக அவசரமான சூழ்நிலை என்னை இப்பொழுது அழைக்கிறது. நான் உடனே இதே கப்பலில் தாய்நாடு திரும்பப் போகிறேன். காசிப மன்னர் எனக்கு வாக்களித்தபடி இன்னும் எட்டு நாட்களுக்குள் ஈழத்துப் படையோடு உங்களை எனக்கு உதவியாக அனுப்புவார்" என்று பதற்றத்தோடு கூறினான் இராசசிம்மன்.

10. பயங்கர உண்மை

இராசசிம்மன் பதற்றத்தோடு 'இப்போதே தாய்நாடு திரும்பப் போகிறேன்' என்று கூறியதைக் கேட்டதுமே சக்கசேனாபதிக்கு நிலைமை புரிந்து விட்டது. 'தென்பாண்டி நாட்டில் பகைவர் படையெடுப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது போலும்' என்பதை அவரால் உணர முடிந்தது.

சேந்தன் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த தன்னுடைய கப்பல் ஊழியர்களையும் மாலுமிகளையும் கூப்பிட்டு, "பாய் மரங்களைச் சரி செய்து பாய்களை விரியுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தயாராகட்டும்" என்று இரைந்து உத்தரவுகள் போட ஆரம்பித்தான். சக்கசேனாபதி இராசசிம்மனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார்.

"வந்ததும் வராததுமாக இப்படி உடனே திரும்பிப் போகிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். என் தாயையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டுமானால் நான் போய்த்தான் ஆக வேண்டும். நெருக்கடியான சமயம் இது. காசிப மன்னரிடம் சொல்லுங்கள் அவருடைய படை உதவி தேவை. அதற்கு நீங்கள் தலைமை தாங்கி வந்தால் தான் எனக்கு நம்பிக்கை பிறக்கும். இருக்கிற நிலைமையைக் கேள்விப்பட்டால் நான் போவதற்குள்ளேயே அங்கே போர் மூண்டு விடுமோ என்று பயமாயிருக்கிறது" என்று அவரிடம் உணர்ச்சிகரமாக வேண்டிக் கொண்டான் அவன். அதைக் கேட்டுக் கொண்டு அவர் கூறினார், "இளவரசே! காசிப மன்னர் கூட நீங்கள் சொல்லாமலும் விடைபெற்றுக் கொள்ளாமலும் திரும்பிச் செல்வதை மன்னித்து விடுவார். ஆனால் அந்தப் பெண் கனகமாலைதான் நான் திரும்பிச் சென்றதும், என்னைக் கேள்விகளைக் கேட்டுத் திணற அடிக்கப் போகிறாள். குறும்புக்காரப் பெண்ணாயிற்றே அவள்!"

"கனகமாலையிடமும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். பிழைத்துக் கிடந்தால் எல்லோரும் எல்லோரையும் மறுபடியும் சந்திப்போம்" என்று சொல்லும் போதே குரல் தழுதழுத்துக் கண்களில் ஈரம் கசிந்து விட்டது இராசசிம்மனுக்கு.

கப்பல் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக சேந்தன் வந்து தெரிவித்தான். சக்கசேனாபதி குமார பாண்டியனின் காதருகில் ஏதோ சொல்லிச் சற்று ஒதுக்குப் புறமாக ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போனார். "இளவரசே! இவர்களோடு கப்பலில் வந்து தப்பி ஓடிப்போன வாலிபன் யாரென்று கொஞ்ச நேரத்துக்கு முன் இடையாற்று மங்கலத்து அம்மணியிடம் கேட்டேன். அது சேந்தனுக்குத் தான் தெரியுமென்று வெறுப்போடு பதில் சொல்லிவிட்டார்கள். நீங்கள் அது பற்றிச் சேந்தனிடம் கேட்டீர்களா?" என்று கேட்ட அவருக்கு, "நான் சேந்தனைக் கேட்ட முதல் கேள்வியே அதுதான். ஆனால் அவன் அந்த வாலிபனைப் பற்றிய இரகசியத்தைக் கப்பலில் போகும் போது விரிவாகச் சொல்வதாகக் கூறிவிட்டான். அந்த வாலிபனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலை விடக் காட்டில் இறந்த பெண்ணைப் பற்றியே எனக்கு அதிகம் கவலையாயிருக்கிறது!" என்று குமாரபாண்டியன் பதில் சொன்னான்.

"சரி விடை தாருங்கள். இன்னும் சில நாட்களில் படையோடு வந்து விழிஞத்தில் சந்திக்கிறேன்" என்று கைகூப்பி வணங்கிவிட்டுச் சக்கசேனாபதி கப்பலிலிருந்து கீழே இறங்கினார். கப்பலின் நங்கூரக் கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. குழல்வாய்மொழி கோபத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதை இராசசிம்மான் பார்த்துக் கொண்டான்.

"கோபப்படுகிறவர்களெல்லாம் அதை என் மேலேயே செலுத்துவதென்று வைத்துக் கொண்டால் நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? குழல்வாய்மொழியின் கோபமில்லாத முகத்தையும், சிரிப்பையும் நான் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான் இராசசிம்மன். அதே நேரத்தில் கப்பல் துறையிலிருந்து மெதுவாக நகர்ந்தது.

எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டு நின்ற குழல்வாய்மொழி விருட்டென்று திரும்பினாள். அப்பப்பா! அந்த முகத்தில் தான் எவ்வளவு கோபம்?

"மகாமண்டலேசுவரருடைய கண் பார்வைக்குத் தான் ஆற்றல் அதிகம். இப்போது பார்த்தால் அவருடைய பெண்ணின் கண்கள் அதை விட அழுத்தமாகப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?"

"நினைப்பீர்கள்! நினைப்பீர்கள்! ஏன் நினைக்க மாட்டீர்கள்? துறவியைப் போல் வேடம் போட்டு வேண்டியதைத் திருடிக் கொண்டு சொல்லாமல் ஓடிப் போகிற இளவரசருக்கு எது வேண்டுமானாலும் நினைக்க முடியுமே? ஆண்களுக்கே வஞ்சகக் குணம் அதிகம். நெஞ்சு அழுத்தம் அதிகம். இல்லாவிட்டால் அந்தக் குட்டை மனிதர் என்னுடைய அறையிலேயே என்னை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டு, உங்களோடு இரகசியம் பேசுவதற்குத் துணிய முடியுமா? திடீரென்று இரகசிய விஷயங்களை அறியத் தகுதியற்ற மூன்றாவது பேராக மாறிவிட்டேன் போலிருக்கிறது நான்! அப்படித்தானே?"

"சேந்தன் செய்ததில் தவறென்ன குழல்வாய்மொழி! அரசாங்கக் காரியங்களைப் பேசும் போது பெண்கள் கூட இருப்பது நல்லதில்லை தானே?"

"அப்படியானால் என் தந்தை சேந்தனை மட்டுமே தனியாக இந்தக் கப்பலில் அனுப்பியிருக்கலாமே!"

"உண்மைதான்! நீ ஏன் வீணாக அலைய வேண்டும்?" என்று இராசசிம்மன் சொன்னதும் குழல்வாய்மொழியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! குங்குமச் சிவப்பில் திளைத்த அந்த முகம் சினத்தின் எல்லை இதுதான் என்று சொல்வது போலிருந்தது.

"குழல்வாய்மொழி! இப்போது உன்னுடைய முகம் இந்தச் சங்கின் நிறத்தைப் போல் அழகாக இருக்கிறது" என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டே, தன் பட்டுப் பையிலிருந்து வலம்புரிச் சங்கை வெளியே எடுத்தான் குமாரபாண்டியன்.

அந்தச் சங்கை அவனுடைய கையில் பார்த்ததும் அவள் முகத்தில் கோபத்தின் சுவடு குன்றி வியப்பின் சாயல் படர்ந்தது. செம்பவழத் தீவில் வரும் போது சந்தித்த படகுக்காரப் பெண் கூறியதை நினைத்துக் கொண்டாள் அவள். அப்போது சேந்தனும் அங்கே வந்தான்.

"ஆ! செம்பவழத் தீவில் அந்தப் பெண் கூறிய போதே நினைத்தேன். இதை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகவே இருக்கிறது" என்று சேந்தன் கூறினான்.

இராசசிம்மனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் வருகிற வழியில் தாங்கள் செம்பவழத் தீவில் இறங்கியதையும், அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டு வந்ததையும் கூறினார்கள்.

"அவள் ஓர் அபூர்வமான பெண்1 ஒரு விதத்தில் நான் இப்போது உயிருடன் இருப்பதற்குக் கூட அவள் தான் காரணம். அவளை என்னால் மறக்கவே முடியாது" என்று குமாரபாண்டியன் மதிவதனியைப் பற்றி உருக்கமாகப் புனைந்து சொன்ன போது குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்து கண்கள் சுருங்கின.

'ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண்ணைப் பற்றி மனம் விட்டுப் புகழ்ந்து பேசுவதில் எவ்வளவு இடர்ப்பாடு இருக்கிறது?' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு வாய்த் துடிப்பை அடக்கினான் இராசசிம்மன்.

"குமாரபாண்டியருக்கு என்ன? எல்லாப் பெண்களும் அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்ய முன் வருகிறார்கள்! தெரிந்தும், தெரியாமலும், சுய உருவிலும், மாறு வேடத்திலும் அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். பெண்களின் உதவியை அமோகமாக பெறுகின்ற இந்த ஓர் அம்சத்தில் அவர் கொடுத்து வைத்தவர் தான்" என்று கண்களிலும், இதழ்களிலும் குறும்பு மிளிரக் குத்தலாகச் சொன்னாள் குழல்வாய்மொழி.

"எந்தப் பெண்ணும் நீ சொல்லுகிற மாதிரி மாறுவேடம் போட்டுக் கொண்டு எனக்கு உதவி செய்ய இதுவரை வரவில்லையே, குழல்வாய்மொழி! நீ உள்படச் சுய உருவுடன் தான் எனக்கு உதவி செய்திருக்கிறாய்!" என்று நகைத்தவாறே அவளுக்குப் பதில் சொன்னான்.

"ஏன் தங்களுக்கு மாறுவேடத்தில் அதிகப் பற்று உண்டென்று சமீபகாலத்து நிகழ்ச்சிகளால் தெரிய வருகிறதே" என்றான் சேந்தன். அவன் சொற்களை இடைமறித்துக் குழல்வாய்மொழி, "ஐயா, தென்பாண்டி நாட்டு இளவரசே! கொஞ்சம் நான் சொல்கிறபடி கேட்டு என்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வந்தீர்களானால் உங்களை ஆண் வேடத்தோடு சந்திக்க வருகிற பெண்களும் உண்டு என்பதற்குச் சரியானதொரு அடையாளம் என்னால் காட்டமுடியும்" என்று இராசசிம்மனை அறைகூவி அழைத்தாள். அவள் ஏதோ விளையாட்டுத் தனமான பொய்க் கோபத்தோடு அப்படிச் சொல்கிறாள் என்று எண்ணிக் கொண்டு, "ஆகா! நான் தாராளமாக உன்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வரத் தயாராயிருக்கிறேன்! கப்பல் விழிஞத்தை அடைகிற வரையில் நீயும் சேந்தனும் எதை எதைச் சொல்கிறீர்களோ அதையெல்லாம் அப்படியே கேட்டு விடுவதென்று இருக்கிறேன். விழிஞத்தை அடைந்து அரண்மனைக்குப் போன பின்பு தான் என் தாயாரும் மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடி கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கித் தளத்துக்குப் போவதற்காக நடந்தான் இராசசிம்மன். குழல்வாய்மொழியும், சேந்தனும் அவன் பின்னால் சென்றார்கள்.

"அம்மணி! சற்று முன் குமாரபாண்டியரிடம் தங்கள் தந்தையின் அவசரச் செய்தியைக் கூறுவதற்காக அழைத்துப் போனபோது தங்களை அறைக்குள் விடாமல் கதவைத் தாழிட்டதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை அவமானப்படுத்த வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. தங்கள் தந்தையின் கட்டளைக்கு மரியாதை செய்யவே அப்படிச் செய்தேன். தாம் கூறியனுப்பிய செய்தியை இளவரசரிடம் நான் சொல்லும் போது எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் உடனிருக்கலாகாதென்பது மகாமண்டலேசுவரரின் கட்டளை" என்று போகும் போது குழல்வாய்மொழியின் அருகில் நடந்து கொண்டே கூறினான் சேந்தன்.

குழல்வாய்மொழி அதற்கு ஒன்றும் பதிலே சொல்லவில்லை. வேகமாகத் தன் அறைக்குள் போய் ஆண்கள் அணிந்து கொள்ளக்கூடிய அங்கி, தலைப்பாகை முதலிய சில உடைகளை எடுத்துக் கொண்டு வந்து குமாரபாண்டியனுக்கு முன்னால் போட்டாள். சேந்தனும் அருகில் நின்றான்.

அவற்றைப் பார்த்து விட்டு, "இவை யாருடையவை?" என்று கேட்டான் இராசசிம்மன்.

"எங்கள் கப்பலில் எங்களுக்குத் தெரியாமல் மாறுவேடம் போட்டுக் கொண்டு ஏறிக் கடைசியில் எங்களையே ஏமாற்றி விட்டுப் போன ஒரு நயவஞ்சகப் பெண்ணினுடையவை இவை. அந்தப் பெண் இவ்வேடத்தில் உங்களைத்தான் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள். இதற்குள் உங்களைச் சந்தித்தாலும் சந்தித்திருப்பாள். என் வாயில் துணியைத் திணித்து என்னைக் கட்டிப் போட்டு விட்டுத் தப்பிப் போகும் போது அந்த நன்றி கெட்டவள் உங்களைச் சந்திப்பதற்குப் போவதாகத்தான் கூறினாள்" என்று சினம் பொங்கப் படபடப்போடு வார்த்தைகளை இறைத்தாள் மகாமண்டலேசுவரரின் பெண்.

"குமாரபாண்டியரே! தப்பிப்போன இளைஞனைப் பற்றி என்னிடம் தனியாகக் கேட்டீர்களல்லவா? அதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இந்த உடைகளில் தான் அந்த இரகசியம் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சேந்தனும் சேர்ந்து கொண்டு சிரித்தான்.

"விளங்கும்படியாகத்தான் சொல்லுங்களேன்! நீங்கள் இரண்டு பேருமாக என் சிந்தனையைக் குழப்புகிறீர்களே? இந்த உடைகளை அணிந்திருந்தது யார்? இப்போது எங்கே?" என்று கேட்டான் இராசசிம்மன்.

"வேறு யாராயிருக்க முடியும்? தீரச் செயல்களையும் முரட்டுக் காரியங்களையும் வீரர்களின் உடன் பிறந்தவர்களால்தானே செய்ய முடியும்? தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் அருமைத் தங்கை பகவதிதான் இந்த வேடத்தில் வந்து, இந்தக் கப்பலில் கூத்தன் என்று பெயர் பூண்டு நடமாடினாள். கப்பல் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களிடம் பிடிபட்டதும் வேடத்தைக் கலைத்துவிட்டுத் தப்பி விட்டாள். அந்த வேடத்தைக் கலைத்த இரகசியம் எங்கள் இருவருக்கும் தான் தெரியும்."

இவ்வாறு சேந்தன் அப்போது சொல்லிக் கொண்டே வந்த போது குமாரபாண்டியனின் வாயிலிருந்து சோகக் குரல் ஒன்று எழுந்து ஒலித்தது. பொறியற்ற பாவை போல் சோர்ந்து கப்பலின் தளத்தில் வீழ்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன். சேந்தனும் குழல்வாய்மொழியும் இராசசிம்மனின் நிலையைக் கண்டு பதறிப் போனார்கள்.

"என்ன? அந்தப் பெண் உங்களையும் சந்தித்து ஏதாவது ஏமாற்றி விட்டாளா? ஏன் இப்படிச் சோர்ந்து போய்த் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டீர்கள்? அல்லது கப்பல் செல்கிற வேகத்தில் மயக்கம் உண்டாகிறதா?" என்று கேட்டான்.

"ஐயோ! இதென்ன? இப்படி அல்லித் தண்டு மாதிரித் துவண்டு விழுகிறீர்கள்? உங்கள் உடம்புக்கு இருந்தாற் போல் இருந்து என்ன வந்து விட்டது?" என்று கூறிக் கொண்டே கீழே குனிந்து ஆதரவாகக் குமாரபாண்டியனின் உடம்பைத் தாங்கிக் கொண்டாள் குழல்வாய்மொழி.

குமாரபாண்டியன் விழிகள் இமையாமல் சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே தலையில் வைத்த கைகளை எடுக்காமல் நெடுநேரம் கிடந்தான்.

பின்பு நிதானமாக வாய் திறந்து அவர்கள் இருவரையும் பார்த்து ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னான்: "தமனன் தோட்டத்துக்கும் பொலன்னறுவைக்கும் இடையிலுள்ள காட்டில் மரணமென்று அந்தப் பெண்ணுக்கு விதி இருந்தது போலிருக்கிறது. பாவம்! இங்கிருந்து தப்பியோடி என்னைச் சந்திக்க வந்த வழியில் இயற்கையின் கூத்துக்குப் பலியாகி இறந்து போய் விட்டாள் அவள்!"

11. படைகள் புறப்பட்டன

வடதிசை மன்னர்களின் பெரும் படையை அணி வகுக்கவும், திட்டமிடவும், கொடும்பாளூரில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டன. தெற்கேயுள்ள குழப்பமான நிலைகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தெரிய வடதிசையரசர்களின் மனத்திடம் அதிகமாயிற்று.

படையெடுப்புக்கு முன்னால் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த செய்தி, 'மகாமண்டலேசுவரருக்கும், தென்பாண்டி நாட்டின் ஏனைய கூற்றத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது' என்பது ஆகும்.

'இராசசிம்மன் அரசுரிமைப் பொருள்களைத் திருடிக் கொண்டு ஓடிப் போய்விட்டான். முத்துக்குளி விழாவில் குழப்பம் நடந்து விட்டது. மகாமண்டலேசுவரரைக் கூற்றத் தலைவர்கள் மதிக்கவில்லை. கரவந்தபுரத்துப் படையும், தங்கள் படையும் தவிர வேறு படையுதவி இதுவரையில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தரங்கமான பிணக்கு ஒன்று தளபதி வல்லாளதேவனுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் மனத்தளவில் இருக்கிறது' என்று இந்தச் செய்திகளெல்லாம் மொத்தமாகச் சேர்ந்து தங்களுடைய வெற்றிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையைத் தென் திசையில் உண்டாக்கி வருவதாகச் சோழன் முதலிய ஐந்து வடதிசையரசர்களும் எண்ணினர்.

திட்டமிட்டிருந்தபடியே படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள் அவர்கள். சோழனும், கொடும்பாளூரானும் எதிர்பார்த்தது போல் தென் பாண்டி நாட்டுப் படைகள் மதுரைக்கோ, அதற்கு அப்பாற்பட்ட இடத்துக்கோ எதிர்கொண்டு வந்து தாக்கவில்லை. நெல்வேலிக் கோட்டத்துக்குள் புகுந்து தென்பாண்டி நாட்டு எல்லையை நெருங்குகிற வரையில் அவர்களுக்கு எதிர்ப்பே இல்லை.

ஆனால் வெள்ளூருக்கு அருகில் கரவந்தபுரத்துப் படை எதிர்த்து நின்றது. அதோடு சேர நாட்டுப் படை வீரர்களும் பெருவாரியான அளவில் தென்பட்டனர். வடதிசைப் படையை நடத்திக் கொண்டு வந்தவர்களுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. "ஓகோ! விட்டுப் பிடிக்கும் சூழ்ச்சியை மனத்திற் கொண்டு பாண்டி நாட்டு படைகள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன. ஆனாலும் மகாமண்டலேசுவரர் கெட்டிக்காரர்தான். சேரநாட்டுப் படை உதவி இவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது என்று நாம் நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வந்து பார்த்தால் எதிர்த்து நிற்கும் படைகளில் அதிகமானவை சேரநாட்டிலிருந்து வந்திருக்கின்றன" என்று போர் ஆரம்பமாகு முன் களத்தில் நின்று கொண்டு தன் நண்பர்கள் நால்வரிடமும் கூறினான் சோழ மன்னன்.

"இன்னொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும். இது வரையில் தளபதி வல்லாளதேவனும், அவன் பொறுப்பிலுள்ள படைகளும் களத்துக்கு வந்து சேரவில்லையென்று தெரிகிறது. இதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்!" என்றான் கொடும்பாளூர் மன்னன்.

அவன் கூறியது மெய்தான்! வடதிசைப் படைகளைத் தடுத்துப் போர் செய்வதற்காக நெல்வேலிக்கும் கரவந்தபுரத்துக்கும் இடையே எதிர்கொண்ட பாண்டியப் பெரும் படையில் தளபதி வல்லாளதேவன் தென்படவில்லை. கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனும், சேர நாட்டிலிருந்து வந்து படையை நடத்திக் கொணர்ந்த படைத் தலைவன் ஒருவனும் தான் போர்க்களத்தில் பொறுப்பானவர்களாக முன்னால் நின்றார்கள். சேர நாட்டுப் படை பொதியமலை வழியாகக் கரவந்தபுரத்தில் வந்து பெரும்பெயர்ச்சாத்தனின் படையோடு சேர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு படைகளும் சந்தித்த இடத்தில் தாமதமின்றிப் போர் தொடங்கிவிட்டது. தளபதி வல்லாளதேவன் களத்தில் தென்படாததனால் அவன் எந்தக் கணத்திலும் வேறொரு திசையிலிருந்து படைகளுடன் வந்து தங்களைத் திடீர்த் தாக்குதலுக்கு ஆளாக்கலாமோ என்று வடதிசை மன்னர்களுக்கு உள்ளூர பயம் இருந்தது. எந்த விதத்தில் எத்திசையிலிருந்து திடீர்த் தாக்குதல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தக்கபடி தங்கள் பெரும் படையைப் பிரித்து வகுத்துக் கொண்டு போரைச் செய்தனர் வடதிசை மன்னர்கள்.

அதே நிலையில் அதே இடத்தில் சில நாட்கள் போர் நீடித்தது. முதலில் இரு பக்கத்திலும் வெற்றி தோல்விகள் அதிகமின்றி மந்தமாக இருந்த போர் மூன்றாம் நாள் காலையில் நிலை மாறிவிட்டது. முதல் இரண்டு நாட்களிலும் தாக்குதலை நன்றாகச் சமாளித்த கரவந்தபுரத்துப் படை சற்றே தளர்ந்தது. சேரர் படை உடனிருந்தும் பயனின்றிப் பின் வாங்குகிற நிலைமை ஏற்படும் போலிருந்தது. பெரும்பெயர்ச்சாத்தன் நிலைமையின் நெருக்கடியை உடனே மகாமண்டலேசுவரருக்குச் சொல்லியனுப்பினான். பாவம்! மகாமண்டலேசுவரருக்கு உண்டாகியிருந்த வேறு நெருக்கடிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதல்லவா? போர்க்களத்திலிருந்து பெரும்பெயர்ச்சாத்தன் அனுப்பிய அவசரத் தூதன் போய்ச் சேருவதற்கு முன் மகாமண்டலேசுவரரும், மற்றவர்களும் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை முன்னாற் சென்று காணலாம்.

மனிதனுக்கு அறிவின் பலம் அதிகமாக ஆக தன் மேலுள்ள நம்பிக்கையும் சுயபலமும் குறைவன போல் ஒரு பயம் அந்தரங்கமாக உண்டாவது இயற்கை.

கூற்றத் தலைவர்களின் எதிர்ப்பால் தமக்கு எத்தகைய தொல்லைகள் விளையுமென்பதை மிகக் குறுகிய காலத்திலேயே மகாமண்டலேசுவரர் புரிந்து கொள்ள நேர்ந்தது.

"குமாரபாண்டியனும் திரும்பி வரவில்லை! கொடும்பாளூரில் வடதிசைப் படைகள் ஒன்று சேர்ந்து விட்டதாகத் தகவல் தெரிகிறது. நம்மிடம் இருக்கிற படைவீரர்களின் தொகை குறைவு. ஆகவே தென்பாண்டி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிடைத்தவரை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு படையின் தொகையைப் பெருக்குவது உன் கடமை. எனவே என்னுடைய இந்தத் திருமுகத்தைப் படித்தவுடன் நீயே ஊர் ஊராகச் சென்று என் விருப்பத்தைச் சொல்லிப் புதிய படை வீரர்களைச் சேர்க்கவும்" என்று மகாமண்டலேசுவரர் கோட்டாற்றுப் படைத் தளத்திலிருந்த தளபதிக்கு ஓர் அவசரக் கட்டளை அனுப்பியிருந்தார். அதற்கு முதல் நாள் தான் அம்பலவன் வேளான் இடையாற்று மங்கலத்திலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, மகாமண்டலேசுவரரின் திகைப்பான உண்மையடங்கிய ஓலையையும் தந்து போயிருந்தான். அவற்றால் அவர் மீது பயமும், வெறுப்பும் தளபதிக்கு உண்டாகியிருந்தாலும், கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு படைத் தலைவர்களில் சிலரையும் உடன் அழைத்துக் கொண்டு முக்கியமான ஊர்களில் சுற்றினான் அவன்.

மூன்று தினங்களுக்குப் பின் தளபதியிடமிருந்து மகாமண்டலேசுவரருக்குக் கீழ்க்கண்ட பதில் ஓலை வந்து சேர்ந்தது.

"தங்கள் கட்டளைப்படியே படைவீரர்களை சேர்ப்பதற்கு ஊர் ஊராகச் சென்று அலைந்தேன். அலைந்ததற்குப் பயனில்லை. தங்கள் பிரதேசமாகிய மருங்கூர்க் கூற்றம் ஒன்றில்தான் சில நூறு ஆட்கள் படையில் சேர்ந்தனர். மற்ற கூற்றங்களிலெல்லாம் படையிற் சேர முன்வரவில்லை. அங்கங்கே கூற்றத் தலைவர்களைச் சந்தித்துப் படைக்கு வீரர்கள் சேர்க்கும் முயற்சியில் எங்களோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டு தங்கள் கட்டளையைக் காண்பித்தேன். அவர்களில் எவரும் ஒத்துழைக்க இணங்கவில்லை. தங்கள் பகுதியிலிருந்து யாரும் போருக்கு ஆட்கள் சேர்க்க விருப்பமில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர். நான் திரும்பிவிட்டேன். தங்களுடைய அடுத்த கட்டளையை எதிர்பார்த்துக் கோட்டாற்றுப் படைகளோடு காத்திருக்கிறேன்." இந்தப் பதிலைக் கண்டு அவர் திகைக்கவில்லை. ஏனென்றால் தளபதியின் மேற்கண்ட பதில் கிடைக்கு முன்பே மகாமண்டலேசுவரர் வேறு ஒரு வகையிலும் படை உதவிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகாராணி வானவன்மாதேவி கைப்படவே படை உதவி செய்யுமாறு வேண்டுதல் திருமுகம் ஒன்று எழுதி வாங்கி, அதை மிக அவசரமாகச் சேர நாட்டுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அவர் எதிர்பார்த்ததை விடச் சேர மன்னனிடமிருந்து மறுமொழி கிடைத்தது. தனக்கு உடல் நலமில்லாமையால் தானே நேரில் போரில் உதவி செய்ய வரமுடியவில்லை யென்றும், தன் படைகளைப் பொதிகை மலை வழியாகக் கரவந்தபுரத்துக் கோட்டைக்கு உடனே அனுப்பி வைப்பதாகவும் சேர மன்னன் தெரிவித்திருந்தான். அதன்படியே சேரர் படைகள் கரவந்தபுரத்துக்குப் புறப்பட்டு விட்டன.

உடனே மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனுக்குச் சேரர் படை உதவி வருவதைக் குறிப்பிட்டு, எந்தக் கணத்தில் வடக்கேயிருந்து பகைவர் வந்தாலும் எதிர்க்கத் தயாராயிருக்குமாறு அறிவித்து ஒரு தூதனை அனுப்பினார்.

தென்பாண்டி நாட்டுப் படைகளையும் தளபதி வல்லாளதேவனையும் மட்டும் வடக்கு எல்லையில் எதிர்த் தாக்குதலுக்குப் போகவிடாமல் கோட்டாற்றிலேயே நிறுத்தி வைத்திருந்தார் அவர். அதற்கும் ஒரு காரணமிருந்தது. சேந்தனும் குழல்வாய்மொழியும் குமாரபாண்டியனுடன் விழிஞத்துக்கு வந்து சேரும் கப்பலை அவர் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பற்றி மகாராணியிடமும் கூறி அவருடைய ஆவலை வளர்த்து விட்டிருந்தார். குமாரபாண்டியன் வந்ததும், அவனைக் கலந்து கொண்டு கோட்டாற்றிலுள்ள படைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பலாமென்பது மகாமண்டலேசுவரரின் நினைப்பாயிருந்தது. எந்த விநாடியில் குமாரபாண்டியன் கப்பல் தம் பெண்ணுடனும் சேந்தனுடனும் வந்து இறங்கினாலும் உடனே ஓடி வந்து அதைத் தமக்குத் தெரிவிப்பதற்காக விழிஞத்துக்கு ஆள் அனுப்பியிருந்தார் அவர். தளபதிக்குத் தெரியாமல் அவருடைய ஆள் விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவருக்குத் தெரியாமலே தன்னுடைய சார்பில் ஆபத்துதவிகள் தலைவனை விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தான் தளபதி. குமாரபாண்டியன், தம் மகளுடனும், சேந்தனுடனும் வந்து சேர வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். குமாரபாண்டியன் தன் தங்கை பகவதியோடு விழிஞத்தில் வந்து இறங்க வேண்டுமென்று வல்லாளதேவன் எதிர்பார்த்தான். அவர்கள் இருவருக்கும் அப்பால், ஒவ்வொரு கணமும் ஆசையும் பாசமும் துடிக்கத் தாய்மைப் பேராவலுடன் மகாராணியும் அந்த வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் வெள்ளூருக்கு அருகில் இரண்டு படைகளும் கைகலந்த செய்தி தெரிந்தது. நிலைமை அவ்வளவுக்கு முற்றிய பின்பும் கோட்டாற்றிலுள்ள சேனைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பாமல் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று எண்ணித் தயங்கினார் மகாமண்டலேசுவரர். போர் தொடங்கிச் சில நாட்கள் கழிந்த பின்பும் குமாரபாண்டியன் வரவு பற்றி ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த போது, போர் முனையிலிருந்து பெரும்பெயர்ச்சாத்தன் அனுப்பிய தூதன் அவசரமாக வந்து அபாய நிலையைத் தெரிவித்தான். அவன் தெரிவித்ததிலிருந்து வடதிசைப் படையை எதிர்க்கக் கரவந்தபுரத்து வீரர்களும், சேரநாட்டுப் படைகளும் காணவில்லை என்று தெரிந்தது. மகாமண்டலேசுவரரே நேரில் புறப்பட்டுக் கோட்டாற்றுப் படைத் தளத்துக்குப் போனார். அவசரமாகத் தளபதியைச் சந்தித்தார். போர் முனை நிலையைக் கூறினார்.

"தளபதி! படைகளை மட்டும் இப்போதே அவசரமாகக் கரவந்தபுரத்துக்கு அனுப்பு. நீ சிறிது பின் தங்கிப் போகலாம். எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றார் மகாமண்டலேசுவரர். அவர் சொற்படியே தான் போகாமல், படைகளை மட்டும் அனுப்பிவிட்டு அவரைத் தனியே சந்தித்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தார்.

"குமாரபாண்டியர் வந்து உன்னை விசாரித்துத் தீர்ப்புக் கூறுகிற வரையில் போருக்குத் தளபதியாக நீ தலைமை தாங்கி நிற்க விட மாட்டேன் நான். நீ குற்றவாளி. என் ஆணையை மீறி எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல சதிக் குற்றங்களை நீ செய்திருக்கிறாய்" என்று திடீரென்று எரிமலை வெடித்தது போல் கடுங்குரலில் இரைந்தார் அவர். அறிவின் அடக்கத்தை மீறி அவர் ஆத்திரமாகப் பேசுவதை வல்லாளதேவன் அப்போதுதான் முதன்முறையாகக் கண்டான். அவனுடைய கண்களும் சினக் குறிப்பைக் காட்டின. அவன் முகத்தில் கோபம் படர்ந்தது.

12. அறிவும் வீரமும்

படைகளைப் போர்முனைக்கு அனுப்பச் செய்கிறவரை தன்னிடம் கோபித்துக் கொள்ளாமல் தந்திரமாக நடந்து கொண்ட மகாமண்டலேசுவரர், காரியம் முடிந்ததும் அவ்வாறு கண்டிப்பும், கடுமையும் காட்டுவாரென்று தளபதி எதிர்பார்க்கவே இல்லை. பொங்கும் சினத்தோடு அவர் வாரி இறைத்த வரம்பு கடந்த ஆத்திரச் சொற்கள் அவனது இயற்கைக் குணமான முரட்டுத் தனத்தைக் கிளர்ந்தெழச் செய்தன. பழக்கப்படாத புதுப் பாகன் பயந்து கொண்டே பெரிய மத யானையை நெருங்குகிற மாதிரித் தயங்கும் மனத்தோடும், தயங்காமல் சிவந்து சினம் கனலும் கண்களோடும் மகாமண்டலேசுவரரைப் பார்த்தான் தளபதி. அந்தப் பார்வையைப் பொறுக்காமல் சீறினார் மகாமண்டலேசுவரர். "அப்படிப் பார்க்காதே, நீ. உன் கோபம் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. அன்று கன்னியாகுமரியிலிருந்து நீ இடையாற்று மங்கலத்துக்கு என்னைத் தேடிக் கொண்டு வந்த இரவிலிருந்து இந்த விநாடி வரை ஒவ்வொன்றாக எத்தனைத் தவறுகள் புரிந்திருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டே வந்திருக்கிறேன் நான். ஒழுக்கத்தையும், பண்பையும் போற்றி ஆளத் தெரியாத நீ படைகளை ஆளத் தகுதியற்றவன்."

"நிறுத்துங்கள். மகாமண்டலேசுவரர் என்ற பதவிக்கும் அறிவிக்கும் என் நெஞ்சம் செலுத்தி வந்த மரியாதையை நான் விட வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. இந்தக் கணம் முதல் அந்த மகாமேதையை நான் ஒரு சாதாரண எதிரியாகப் பாவிக்க வேண்டியதுதான். நான் சாதாரண எதிரியாகப் பாவிக்கத்தக்க மனித உணர்ச்சிக்கு அவரும் ஆளாகி விட்டார்" என்று தளபதி அவர் முகத்தைத் துணிவுடன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கூறினான். அவன் வார்த்தைகள் அவருடைய கோபத்தை மேலும் தூண்டிவிட்டன.

"முட்டாள்களின் மரியாதையை அறிவாளிகள் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை, தளபதி! என்னை எதிரியாக ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நீ பெரியவன் என்பதைக் கூட நான் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. ஓர் இரகசியத்தை நீ இந்தச் சமயத்தில் என்னிடமிருந்து தெரிந்து கொள். அறிவின் நுனி மிகவும் கூர்மையானது. நன்றாகத் தீட்டப்பட்ட கத்தியைப் போல் சந்தர்ப்பமும் வீசும் இலக்கும் கிடைத்தால் அதற்கு எதையும் குத்தி அழிக்க வலிமை உண்டு. சந்தர்ப்பமும் இலக்கும் தவறிவிட்டால் கை தவறி விழுந்து தானே கூரழியும் கத்தியைப் போல் தன்னையே அழித்துக் கொள்ள வேண்டியதுதான்."

தளபதியின் முகத்தில் கோப வெறி கூத்தாடியது. கைகள் எதற்காகவோ துடித்தன. முகம் முழுவதும் கருணைக் கலப்பற்ற கொடுமை மறம் வந்து குடி கொண்டிருந்தது. அவன் வெறியனாக மாறினான்.

"மகாமண்டலேசுவரரே! எனக்கு அறிவின் வலிமையைப் பற்றிய இரகசியம் தெரிய வேண்டியதே இல்லை. ஆனால் வீரத்தின் இரகசியம் இது தான் என்பதை இப்போதே உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தான் அழிவதாயிருப்பினும் அப்படி அழியுமுன் தன் எதிரியை முதலில் அழித்துத் தீர்ப்பது தான் வீரத்தின் வலிமை" என்று கூறிக் கொண்டே குபீரென்று வாளை உருவிக் கொண்டு அவர் மேல் பாய்ந்தான்.

அவன் நினைத்தது போல் அவர் பயந்து ஓடவோ, திடுக்கிட்டுக் கூச்சலிடவோ இல்லை. அவன் அப்படிச் செய்வான் என்பதை முன்பே எதிர்பார்த்தவர் போல் அசையாமல் நின்றார். அளப்பரிய ஆற்றல் நிறைந்த தம் கண்களை இமைக்காமல் குத்துவதற்கு வாளை ஓங்கிக் கொண்டு வரும் அவனையே பார்த்தார். சலனமும் அசைவுமற்ற சிலையாகி விட்டாரா அவர்? பின்னால் கட்டிக் கொண்ட கைகளை எடுக்காமல் மார்பை நிமிர்த்திக் கொண்டு நின்ற அந்தத் தோற்றத்தை நெருங்கி நெஞ்சுக்குக் குறிவைத்து வாளை ஓங்கிய போது தளபதியின் கை வெடவெடவென்று நடுங்கியது. மனமும் நடுங்கியது. கால்களும் நடுங்கின. நேர்கொண்டு பார்க்கும் அந்தக் கண்கள் இரண்டும் கணத்துக்குக் கணம் பெரியதாய்ப் பிரம்மாண்டமாய் அகன்று விரிந்து தன்மேற் கவிந்து தன்னை அமுக்குவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு.

அந்தப் பிரமை ஏற்பட்ட அடுத்த விநாடி அவன் முகம் வெளிறியது. கண்கள் மருண்டன. உடல் நடுங்கி ஓய்ந்தது. கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது. ஏதோ ஒரு பயம். காரணமற்ற பயம் அவனைத் தடுத்தது. ஒவ்வோர் அடியாக நகர்ந்து பின்வாங்கினான் அவன். என்ன செய்கிறோம் என்ற உணர்வேயின்றிப் பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் என்ற அகண்ட மா தோற்றம் அப்படியே நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.

"தளபதி! ஏன் தயங்குகிறாய்? எதற்காகப் பின் வாங்குகிறாய்? என்னை அழித்து விடுவதற்கு இதைப் போல தனிமையான சந்தர்ப்பம் இனி வேறு எப்போது உனக்கு வசதியாகக் கிடைக்கப் போகிறது? இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்" என்று மகாமண்டலேசுவரர் வாய் திறந்து சொன்ன போது தளபதி அவருக்கு அருகிலேயே இல்லை. சிறிது தொலைவு தள்ளி ஒதுங்கிப் பயந்து நிற்பவன் போல் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வியர்வை அரும்பி வழிந்தது. தெரியாமல் பாம்புப் புற்றை மிதித்து விட்டு இடறி விழுந்தவன் பயத்தோடு எழுந்து நிற்கிற மாதிரி நின்றான் வல்லாளதேவன்.

வானத்துக்கும் பூமிக்குமாக நிறுத்தி வைத்த சிலை போல் அசையாமல் நின்று கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் மெல்லக் கீழே குனிந்தார். நழுவி விழுந்து கிடந்த தளபதியின் வாளைக் கையில் எடுத்துக் கொண்டார். நிதானமாக அடியெடுத்து வைத்து நடந்தார். அவனை அணுகினார். ஒருவர் மூச்சுக் காற்றை மற்றொருவர் உணர முடிந்த அளவுக்கு நெருங்கி நின்று கொண்டார்.

"இந்தா, உன்னுடைய வாள்! இப்போது என் நெஞ்சுக் குழி உன் கைக்கு மிக அருகில் இருக்கிறது. பாய்வதற்கும், வாளை ஓங்குவதற்கும் வேண்டிய சிரமத்தைக் கூட உனக்கு நான் அளிக்கச் சித்தமாயில்லை. என்னை இந்த வாளால் கொன்று விடு. நான் அழிந்து போக வேண்டிய காலம் வந்து விட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் அழிவது உன்னைப் போலவே இன்னும் பல பேருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கழற்கால் மாறனாரும், அவரோடு சேர்ந்த கூற்றத் தலைவர்களும் என்னை இவ்வளவு சுலபமாகக் கொன்றதற்காக உன்னைப் பாராட்டுவார்கள். படையெடுத்து வந்திருக்கும் பகையரசர்கள் பெருமை கொள்வார்கள். என்னுடைய அறிவின் கூர்மைக்குப் பயந்து தங்களுடைய எண்ணற்ற பேராசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தெரியாமல் தயங்கிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்குத் திருப்தியளிக்கும் தெரியுமா, இந்தக் கொலை?" அவருடைய சொற்களின் வேகத்தையும், கண்களின் கூர்மையான பார்வையையும் மிக அருகில் தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்தான் தளபதி.

"இவ்வளவுதானா உன் துணிவு! நீ உண்மை வீரன் இல்லை! உணர்ச்சியால் முரடன்! மனத்தால் கோழை! என்னை எதிரியாகக் கொள்வதற்கேற்ற தகுதியும், பெருமையும் கூட உனக்குக் கிடையாது. நீ சாமான்யமானவன்" என்று ஏளனமாகச் சொல்லிக் கொண்டே கையிலிருந்த வாளை அலட்சியத்தோடு சுழற்றி மூலையில் வீசியெறிந்து விட்டார் மகாமண்டலேசுவரர். வல்லாளதேவன் தலை நிமிரவே இல்லை.

"உன் உணர்ச்சிகளை என் சாமர்த்தியத்தினால் கிளறி வேடிக்கைப் பார்க்க விரும்பவில்லை நான். ஆயிரக்கணக்கான வீரர்களின் மதிப்புக்குரிய படைத்தலைவனே! நீ உண்மைக் குற்றவாளி. நான் உன்மேல் கொண்ட ஆத்திரம் நியாயமானது. நீ பதிலுக்கு ஆத்திரப்படுகிறாயே, அதுதான் நியாயமற்றது. என் மேல் அவ்வப்போது உனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் உன்னை என்னென்னவோ செய்யத் தூண்டியிருக்கின்றன. அறியாமையால் தாயின் ஒழுக்கத்தைப் பற்றியே சந்தேகப்படும் பேதைப் புதல்வனைப் போல நீ என்னைச் சந்தேகத்தோடு நோக்கி வந்திருக்கிறாய். உன்னுடைய சந்தேகங்களை இதுவரை மன்னித்து வந்திருக்கிறேன். நீ கடைசியாகச் செய்த தவறு, குமாரபாண்டியனைக் காண்பதற்காக உன் தங்கையை இரகசியமாக ஈழ நாட்டுக்கு அனுப்பியது. இவையெல்லாம் எனக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். முகத்தின் கண்களால் முதுகுக்குப் பின் நடப்பதையும் உணர எனக்குத் தெரியும்."

"எல்லாம் தெரிந்த உங்களுக்கு நீங்களே செய்கிற சில தவறுகள் மட்டும் ஏன் தெரியவில்லையோ? நேற்று வரை தென்பாண்டி நாட்டின் படைகளைக் கட்டிக்காத்து அணி வகுத்தவன் நான். போருக்குப் பயிற்சி கொடுத்தவன் நான். இப்போது தீடீரென்று படைகளை முன்னால் அனுப்பிவிட்டு என்னைத் தனியே நிறுத்தி அவமானப் படுத்துகிறீர்கள். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்கிறீர்கள். குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டும் என்கிறீர்கள். விசாரித்துத் தீர்ப்புக் கூறுமளவிற்கு நான் என்ன தப்புச் செய்திருக்கிறேனென்று எனக்கே தெரியவில்லை." தலை குனிந்து நின்ற தளபதி வல்லாளதேவன் சற்றே நிமிர்ந்து அவரைக் கேட்டான்.

"தெரியவில்லையா? நீ செய்தவற்றில் எது ஒழுங்கு, எது தவறு என்று உன்னால் பகுத்துணர முடிந்தால்தானே உன் குற்றங்களை நீ தெரிந்து கொள்ள முடியும்! முதன் முதலாக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்திலிருந்து ஓடி வந்தாயே, அந்த இரவிலிருந்தே உன் தவறுகள் ஆரம்பமாகிவிட்டன. அரண்மனையில் உளவறிவதற்கு ஆபத்துதவிகள் தலைவனை உன் கையாளாகப் பயன்படுத்தினாய். இடையாற்று மங்கலத்தில் என் மாளிகையிலிருந்து இரவோடு இரவாக ஆயுதங்களைத் திருட ஏற்பாடு செய்தாய்! குமாரபாண்டியரை அழைத்து வர நான் ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதை நம்பாமல் நீ உன் தங்கையை அனுப்பினாய்."

"இதே வகையில் எனக்குத் தாங்களும் சில தவறுகளையும் குற்றங்களையும் செய்திருக்கிறீர்களென்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்."

"செய்திருக்கலாம் மறுக்கவில்லை. எனக்குப் பொறுப்புகள் அதிகம். என் நிர்வாகம் பெரியது. நான் உன்மேல் சந்தேகப்பட்டு உன்னைச் சோதனை செய்திருந்தால் அது நியாயமானது. படைகளைத் தவிர வேறெந்தப் பொறுப்பையும் பற்றிக் கவலைப்பட வேண்டாத நீ அநாவசியமான கவலைகளை உண்டாக்கிக் கொண்டு இப்படியெல்லாம் செய்தது மன்னிக்க முடியாத தவறு."

"நான் நினைத்தால் இன்னும் ஒரு பெரிய தவற்றையும் செய்ய முடியும். இப்போதே ஓடிப்போய் என் அதிகாரத்துக்கு அடங்கிய அத்தனை படைகளையும் போர் முனைக்குப் போகாமல் தடுத்து நிறுத்தி விட முடியும். மகாமண்டலேசுவரர் அப்போது என்னைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை."

"கனவிலும் அப்படி நினைக்காதே, தளபதி! உன்னால் அதைச் செய்ய முடியாது. நீ இப்போது என் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நிற்கும் சாதாரணக் குற்றவாளி. அகந்தையினால் உன் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே!"

"முடிகிறதா இல்லையா என்று தான் பாருங்களேன்" எனத் தன்மானத்தோடு சொல்லிவிட்டு வெளியேறினான் அவன். பின்னால் அவர் சிரிக்கும் ஒலி அவனுடைய செவிக்கு எட்டியது. மகாமண்டலேசுவரரிடம் வீறாப்பாகப் பேசி வெளியே வந்த அவன், மேலே நகர முடியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றான். வெளியே அந்த இடத்தைச் சுற்றிலும் இடையாற்று மங்கலத்து யவனக் காவல் வீரர்கள் உருவிய வாளுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் தளபதி. மகாமண்டலேசுவரரின் முன்னேற்பாடு அவனுக்குப் புரிந்தது. எப்போது, எப்படி அந்த வீரர்களை அங்கே வரவழைத்துக் காவல் போட்டாரென்று அநுமானிக்கவே முடியாதபடி அவ்வளவு சாதுரியமாகச் செய்திருந்தார்.

"ஓகோ! புரிகிறது..." என்று கடுமையாகக் கூறிக் கொண்டே பின்னால் சிரித்தவாறு நின்ற மகாமண்டலேசுவரரைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

"வேறொன்றுமில்லை, தளபதி! உன் அதிகாரத்துக்குட்பட்ட படைக் கோட்டத்திலேயே உன்னைச் சிறை வைத்துப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அதை நிறைவேற்றிக் கொண்டேன்" என்றார் அவர்.

"இது கேவலமான சூழ்ச்சி!"

"இருக்கட்டுமே. அப்படியே பார்த்தாலும், நீ செய்த காரியங்களை விடக் கேவலமானதில்லை இது. குமாரபாண்டியர் வருகிற நாளாயிற்று. நான் விழிஞத்தில் போய் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவர் வந்ததும் இங்கே அழைத்து வருகிறேன். அதுவரையில் உன் நிலை இதுதான்" என்று சிறிதும் இரக்கமின்றிச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் மகாமண்டலேசுவரர். கூண்டிலடைபட்ட புலிபோல் வெகுண்டு நின்றான் தளபதி வல்லாளதேவன். போர்க்களத்தில் படைகளை ஆண்டு போர் புரிய வேண்டிய நல்ல சமயத்தில் அநாதையைப் போல் தனியே நிறுத்திக் காவலில் வைக்கப்பட்ட சூழ்ச்சியை எண்ணிக் குமுறினான் அவன்.

மகாமண்டலேசுவரரோ தளபதி என்ற வீரப் புலியைச் சாமர்த்தியமாகச் சிறைப்படுத்திவிட்ட பெருமிதத்தோடு மகாராணியைச் சந்திப்பதற்காக அரண்மனைக்குச் சென்றார். நாடு முழுவதும் வெள்ளூரில் நடந்து கொண்டிருக்கும் போரின் முடிவு என்ன ஆகுமோ என்ற பயமும், கலவரமும் நிலவிக் கொண்டிருந்தன. நாட்டின் வடக்கு எல்லையில் மாபெரும் போர் நடந்து கொண்டிருப்பதன் அறிகுறியாக அங்கங்கே வளமிகுந்த நாஞ்சில் நாட்டு ஊர்கள் களையிழந்து கலகலப்புக் குன்றிக் காணப்பட்டன. பண்டங்கள் விலையேறி விட்டன. எங்கிருந்தாலும் இந்தப் போர்க் காலத்தில் குமாரபாண்டியர் திரும்பி வந்து விடுவாரென்ற நம்பிக்கை நாட்டு மக்கள் எல்லோருக்கும் இருந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தான் கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிய தீய செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாக் குழப்பங்களுக்கும் மனத்தை ஈடுகொடுக்க முடியாமல் அரண்மனை அந்தப்புரமே கதியென்று கிடந்தார் மகாராணி. கருணையும், அன்பும் நிறைந்து சாந்தம் தளும்பும் அவருடைய மனத்துக்கு மகாமண்டலேசுவரருக்கு இருந்தது போல் துன்பங்களை விழுங்கிவிட்டு நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் இல்லை. உணர்ச்சிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்து விடும் மெல்லிய பெண் மனம் அவருடையது. "குமாரபாண்டியனை அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் தாங்கள் அவரைக் காணலாம்" என்று மகாமண்டலேசுவரர் கூறிய சில வார்த்தைகள் தாம் மகாராணியின் உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தன. அதுவும் அன்று மாலை கோட்டாற்றுப் பண்டிதர் வந்து சென்ற பின் மறுநாள் காலை தூண்டா மணிவிளக்கு அணைந்ததிலிருந்து மகாராணியின் மனம் நிம்மதியாகவே இல்லை. ஊமைக் குழப்பங்கள் மனத்தைச் செல்லரித்தன. குமாரபாண்டியனின் கப்பல் வந்ததும் தகவல் சொல்லி அனுப்புமாறு விழிஞத்தில் ஆள் நிறுத்தியிருந்தாலும் மகாராணியின் மனத்துக்கு உற்சாகமூட்டுவதற்காகத் தாமே அவரையும் அழைத்துக் கொண்டு விழிஞத்துக்குச் செல்லலாம் என்று மகாமண்டலேசுவரர் நினைத்தார். அதனால்தான் யாரும் அறியாமல் தளபதியைச் சிறைப்படுத்தி விட்டுத் தாம் மட்டும் அரண்மனைக்குப் புறப்பட்டார் அவர்.

மகாமண்டலேசுவரர் அரண்மனைக்கு வந்து சேர்ந்த போது காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகியோர் ஏற்கெனவே அங்கு வந்திருப்பதைக் கண்டார். அவர்கள் எப்போது எதற்காக வந்தார்கள் என்று புவன மோகினியிடம் விசாரித்தார். மகாராணியே ஆள் அனுப்பி அவர்களை வரவழைத்திருப்பதாகப் புவன மோகினி தெரிவித்தாள். பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் ஆகியோருக்கும் மகாமண்டலேசுவரருக்கும் எப்போதும் அவ்வளவு சுமுகமான உறவு இல்லை. காய்ந்த மண் பிண்டத்தோடு மற்றொரு காய்ந்த மண் பிண்டம் ஒட்டாத மாதிரி முற்றிய அறிவுக்கும் முதிர்ந்த அறிவுக்கும் இடையேயுள்ள பொறாமை அவர்களுக்குள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது. சந்திக்கும் போதோ, பழக நேரும் போதோ, அதைக் காட்டிக் கொள்ளாமல் நாகரிகமாக நடந்து கொண்டு விடுவார்கள். ஒருவர் காரியத்தில் மற்றொருவர் அநாவசியமாகத் தலையிட மாட்டார்கள். காந்தளூர் மணியம்பல நிர்வாகத்தில் மகாமண்டலேசுவரரோ, மகாமண்டலேசுவரருடைய நிர்வாகத்தில் அவர்களோ குறுக்கிடாமல் கண்ணியமாக நடந்து கொண்டு விடுவது வழக்கம்.

அன்றைக்கு அந்தச் சூழ்நிலையில் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை அவர். சந்தித்த போது வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இல்லை. மகாராணியைச் சந்தித்துப் போர்க்கள நிலைமையையும் படை ஏற்பாடுகளையும் கூறிவிட்டு, 'விழிஞத்துக்குப் போகலாம்' என்பதையும் தெரிவித்தார். தளபதியைத் தடுத்து நிறுத்திக் காவல் வைத்ததை மட்டும் சொல்லவில்லை.

"ஆகா! இது என் வாழ்க்கையிலேயே நல்ல நாள். குமாரபாண்டியனை வரவேற்க நாம் எல்லோருமே விழிஞத்துக்குப் போகலாம். விழிஞத்தில் என் மகனை நான் சந்திக்காவிட்டால், அவன் நேரே போர்க்களத்துக்குப் போனாலும் போய் விடுவான். அப்புறம் போர் முடிகிற வரை எனக்கு அவனைச் சந்திக்க அவகாசமே இராது. கப்பல் எப்போது வந்தாலென்ன? இன்றே விழிஞத்தில் போய்க் காத்திருப்போம்" என்று மகாராணி மற்றவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார். அவர்கள் உடன் வரவேண்டாம் என்று எண்ணியும் மகாமண்டலேசுவரரால் அதைத் தடுக்க முடியவில்லை.

13. குமார பாண்டியன் வந்தான்

இறந்து போன பெண் பகவதிதான் என்ற உண்மையைத் தெரிந்து தாங்கிக் கொள்வது கடினமாயிருந்தது குமாரபாண்டியனுக்கு. ஏற்றுக் கொள்ள முடியாத அந்தத் துயர உண்மையிலிருந்து மீள வழியறியாது தவித்தான் அவன். கப்பல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தளத்தில் அவனருகே குழல்வாய்மொழியும் சேந்தனும் மௌனமே உருவாய்க் கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தனர்.

"தளபதிக்கு முன்னால் எந்த முகத்தோடு போய் நிற்பேன்! இப்படி அநியாயமாக அந்தப் பெண் இறக்கும்படி நேர்ந்து விட்டதே? போரும், படையெடுப்பும் ஏற்பட்டுத் தளபதியின் ஊக்கமும் உற்சாகமும் நன்றாகப் பயன்பட வேண்டிய சமயத்தில் இந்தச் செய்தியைப் போய்ச் சொன்னால் அவனுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் மட்டும் கவனமாக இருந்திருந்தால் அந்தப் பெண் கப்பலிலிருந்து தப்பி ஓடி இப்படித் துர்மரணமடைந்திராமல் தவிர்த்திருக்க முடியும்" என்று சேந்தனையும் குழல்வாய்மொழியையும் நோக்கித் துக்கத்தோடு சொன்னான் இராசசிம்மன். துயர வேதனையினால் பேசும் போது தொண்டை தடுமாறி நா குழறியது அவனுக்கு.

"இளவரசே! நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களைக் கேட்டுக் கொண்டா அந்தப் பெண் இந்தக் காரியங்களைச் செய்தாள்? அவளுடைய முரட்டுத்தனம் அவளுக்கே அழிவைத் தேடிக் கொடுத்து விட்டது. விழிஞத்தில் அந்தப் பெண் ஆண் வேடத்தோடு வந்த போதே சந்தேகப்பட்டுக் கப்பலில் இடங்கொடுக்க மறுத்தேன் நான். மகாமண்டலேசுவரருடைய திருப்புதல்வியாரின் நல்ல மனத்தால் கப்பலில் இடம் பெற்றுத் தன் பெயர் கூத்தனென்று பொய் கூறி நடித்தாள் அந்தப் பெண். கப்பலில் பலமுறை என்னுடைய சந்தேகம் வலுத்தும், பேசாமல் அடக்கிக் கொண்டிருந்தேன் நான். கடைசியில் தனக்கு இடங்கொடுத்த இடையாற்று மங்கலத்து நங்கையிடமே கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப் போட்டு விட்டுத் தப்பியிருக்கிறாள் அவள். நாங்கள் ஒரு குற்றமும் அறியோம்" என்று அந்தச் சோகமயமான சந்தர்ப்பத்திலும் தெளிவாகப் பதில் சொன்னான் நாராயணன் சேந்தன்.

"நீங்கள் ஏன் வீணாக அவருக்குப் பதில் சொல்லிச் சிரமப் படுகிறீர்கள்? இப்போது அந்தப் பெண்ணுக்குப் பதிலாக நானே இறந்து போயிருந்தால் கூடக் குமாரபாண்டியர் இவ்வளவு துக்கப்பட மாட்டார். பொய்யும் வஞ்சகமும் நிறைந்தவளாயிருந்தாலும் அவள் கொடுத்து வைத்தவள். அதிர்ஷ்டக்காரி. இல்லாவிட்டால் குமார பாண்டியரை இவ்வளவு தூரம் அநுதாபத்துக்கு ஆளாக்க முடியுமா?" என்று சற்றே அசூயை தொனிக்கும் குரலில் சேந்தனை நோக்கிச் சொன்னாள் குழல்வாய்மொழி. இந்தச் சொற்களைக் கேட்டுச் சினமும் வெறுப்பும் அடைந்த இராசசிம்மன், "நீங்கள் இருவரும் பேசுகிற விதம் கொஞ்சம் கூட நன்றாயில்லை. அந்தப் பெண் பகவதி என்னதான் பொய்யாக நடந்து ஏமாற்றியிருக்கட்டுமே! அதற்காக இப்படியா ஈவிரக்கமின்றிப் பேசுவீர்கள்? உங்களுக்கு மனித மனத்துக்குரிய நெகிழ்ச்சியே இல்லையா? மரணத்துக்குப் பின்னும் பகைகளை மறந்து துக்கப்படத் தெரியாமல் இப்படியா விலகிப் பேசுவது?" என்று அவர்கள் இருவரையும் கடிந்து பேசினான்.

"குமார பாண்டியர் என்னை மன்னிக்க வேண்டும். நான் வெளிப்படையாக மனம் விட்டுக் கூறுகிறேன். நெஞ்சில் துக்கம் ஊறாமல் துக்கப்படுவது போல் நடிக்க எனக்குத் தெரியாது!" என்று வெடுக்கெனச் சொன்னாள் குழல்வாய்மொழி.

"குழல்வாய்மொழி! நீ கல்நெஞ்சுக்காரி."

"நீங்களும் சில சமயம் கல்நெஞ்சுக்காரராக இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்."

"போதும், நிறுத்து! இதற்கும் மேல் இப்போது உன்னுடன் நான் பேச விரும்பவில்லை."

"ஓ! தாராளமாக நிறுத்தி விடுகிறேன். எனக்குங்கூட விருப்பமில்லைதான்."

"உங்கள் இருவருடனும் இந்தக் கப்பலில் நான் புறப்பட்டதே தப்பு. அதை இப்போது உணர்கிறேன்" என்று வெறுப்போடு சொன்னான் இராசசிம்மன்.

"நீங்கள் எங்களுக்காகப் புறப்படவில்லை. உங்கள் சொந்த நாட்டையும் அருமைத் தாயையும் காப்பாற்றுவதற்காகப் புறப்பட்டிருக்கிறீர்கள்" என்றாள் குழல்வாய்மொழி.

அங்கேயிருந்து அவர்கள் இருவருடனும் மேலும் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாதவன் போல் விருட்டென்று எழுந்து மேல் தளத்துப் படிகளில் ஏறினான் குமாரபாண்டியன். அவன் கையில் எடுத்துச் சென்ற வலம்புரிச் சங்கை கடுப்புடன் நோக்கினாள் குழல்வாய்மொழி. சேந்தனும் வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். குமார பாண்டியனின் உருவம் மேல்தளத்துப் படிகளில் ஏறி மறைந்ததும் குழல்வாய்மொழி அவசரமாகச் சேந்தன் பக்கம் திரும்பினாள்.

"இடைவழியில் செம்பவழத் தீவு வராமல் கப்பலை வேறு மார்க்கமாக விலக்கிச் செலுத்திக் கொண்டு போகவேண்டுமென்று உடனே மீகாமனுக்கு இரகசியமாகத் தெரிவித்து விடுங்கள்." அவளுடைய குரலிலிருந்த உணர்ச்சிக் கொதிப்பைக் கண்டு சேந்தனே திகைத்துப் போனான்.

"அப்படியே தெரிவித்து விட்டு வருகிறேன், அம்மணி!" என்று உடனே மீகாமனைச் சந்திப்பதற்குச் சென்றான். குழல்வாய்மொழி ஆத்திரத்தோடு இரண்டு கைவிரல்களையும் சேர்த்துக் கோத்து முறித்துச் சொடுக்கினாள். விரல்கள் நெரிந்த ஒலி அவள் சினத்தை எல்லையிட்டுக் காட்டியது. தந்தைக்கு அறிவில் இறுமாப்பு என்றால் மகளுக்கு அன்பில் இறுமாப்பு. தான் உரிமை கொண்டாடி அனுபவிக்கும் அழகைத் தன்னைத் தவிர வேறொருவர் உரிமை கொண்டாட விடக்கூடாது. பிடிவாதத்திலும், இறுமாப்பிலும் அவள் தன் அருமைத் தந்தையைக் கொண்டிருந்தாள்.

"அம்மணி! கவலை வேண்டாம். கப்பல் செம்பவழத் தீவு வழியே போகாது" என்று சேந்தன் திரும்பி வந்து உறுதி கூறிய போதுதான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. அதன் பின் அந்தப் பயணத்தின் போது குழல்வாய்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. பயணம் தொடங்கிய மூன்றாம் நாள் மாலை, "போகிற வழியில் இந்தக் கப்பலைச் செம்பவழத் தீவில் சிறிது நேரம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று நாராயணன் சேந்தனை அழைத்துக் கூறினான் இராசசிம்மன்.

"குமார பாண்டியர் என்னை மன்னிக்க வேண்டும். செம்பவழத் தீவு கடந்து விட்டது. அவசரமாக விழிஞத்தை அடைய வேண்டுமென்பதற்காகக் கப்பலை வேறு வழியாக விலக்கிச் செலுத்திக் கொண்டு வந்து விட்டோம்" என்று கவலைப்படுவது போன்ற முகபாவத்தை வருவித்துக் கொண்டு சொன்னான் நாராயணன் சேந்தன்.

"நல்லது அப்படியானால் விழிஞத்தை எப்போது அடையலாம்?" என்று தன் மனவேதனையைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான் இராசசிம்மன்.

"வழக்கமாக ஆகிய நாட்களைக் காட்டிலும் இரண்டு நாட்கள் முன்னதாகவே போய்விடலாம்" என்று சேந்தனிடமிருந்து பதில் வந்தது. குமாரபாண்டியன், சேந்தன், குழல்வாய்மொழி ஆகிய இவர்கள் மூவரும் இப்படி அவசரமாகக் கப்பலில் வந்து கொண்டிருந்த இதே சமயத்தில் இவர்களை எதிர்பார்த்து விழிஞத்தில் காத்திருந்தவர்களின் நிலை என்ன என்று இனிமேல் கவனிக்கலாம்.

மகாராணி, பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகிய எல்லோருடனும் விழிஞத்துக்குப் புறப்பட்டு வந்திருந்தார் மகாமண்டலேசுவரர். போர்க்களத்திலிருந்த வீரர்கள் எவரேனும் அவசரச் செய்தி கொண்டு வந்தால், அவர்கள் தம்மை விழிஞத்தில் வந்து சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டு அதன் பின்பே புறப்பட்டிருந்தார் அவர். கோட்டாற்றுப் பெரும்படைகளையெல்லாம் திரட்டி அனுப்பியிருப்பதால் உடனடியாகக் கவலைப்படும்படியான நிகழ்ச்சி எதுவும் போர்க்களத்தில் நடந்து விடாது என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாகியிருந்தது.

விழிஞத்துக்குப் போனதும் போகாததுமாக அவருடைய கண்கள் ஆபத்துதவிகள் தலைவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதைத் தான் தேடின. மகாராணி முதலியவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டுத் தாம் மட்டும் தனியே புறப்பட்டுத் துறைமுகப் பகுதிகளில் சுற்றினார் அவர். தளபதியின் ஏற்பாட்டால் ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் அங்கே எங்கேயாவது மறைந்து காத்திருப்பானென்று அவர் எதிர்பார்த்தார்.

அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ஏற்றுமதிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மிளகுக் குவியல்களுக்கப்பால் ஒரு பெரிய சுரபுன்னை மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தான் குழைக்காதன். பூதாகாரமான தோற்றத்தையுடைய நாலைந்து யவனக் கப்பல் மாலுமிகள் குடித்து விட்டு மாமிச பர்வதங்கள் உருளுவன போல் அந்த மரத்தடியில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தனர். குழைக்காதனும் கொஞ்சம் யவனத்து மதுவைச் சுவைத்திருப்பான் போலவே தோன்றியது.

ஆனாலும் அவன் தன் நினைவிழந்து விடவில்லை. திடீரென்று மகாமண்டலேசுவரரைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். தள்ளாடிக் கொண்டே வணங்கினான். அந்த நிலையில் அவர் தன்னை கண்டு கொண்டாரே என்று நாணமடைந்தான்.

"ஓகோ! நீயும் பெருங்குடிமகனாகி (நிறைய குடிப்பவன்) விட்டாயா? பரவாயில்லை. கொஞ்சம் என் பின்னால் நடந்து வா... உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்" என்று மகாமண்டலேசுவரர் கூப்பிட்ட போது அவன் மறுக்காமல் அவர் பின்னால் அடக்கமாக நடந்து சென்றான். அப்படிச் சிறிது தொலைவு நடந்து சென்றதும் சற்றும் தளர்ச்சியில்லாத குரலில் அவனை நோக்கிக் கூறினார் அவர்: "நான் இப்போது படைத்தளத்தில் தளபதியைச் சந்தித்து விட்டுத்தான் வருகிறேன். உன்னை இங்கே அனுப்பியிருப்பதைப் பற்றியும் அவன் என்னிடம் சொன்னான். படைகளெல்லாம் போர் முனைக்கு அனுப்பியாயிற்று. புறப்படுகிற சமயத்தில் திடீரென்று உடல் நலங்குன்றிப் போய் வல்லாளதேவன் மட்டும் படைக்கோட்டத்திலேயே தங்கிவிட்டான், பாவம்! அதைக் கண்டு எனக்கே பரிதாபமாக இருந்தது. இடையாற்று மங்கலத்திலிருந்து என்னுடைய காவல் வீரர்கள் சிலரை வரவழைத்து ஒத்தாசைக்கு வைத்து விட்டு வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீயும் அங்கு போனால் உதவியாயிருக்கும். தளபதி எல்லா விவரமும் என்னிடம் சொன்னான். கப்பலில் அவன் தங்கை பகவதி வந்தால் அவளை நானே அங்கு அழைத்து வந்து விடுவேன். படைத்தளத்தைச் சுற்றிக் காவல் பலமாக இருக்கிறது. ஆனாலும் தளபதியைக் கவனித்துக் கொள்வதற்காக உன்னை மட்டும் உள்ளே விடச் சொல்லி நான் அனுமதி ஓலை எழுதித் தருகிறேன். நீ உடனே புறப்படு."

இதைக் கேட்டதும் குழைக்காதனுக்கு உடம்பு விதிர் விதிர்த்துப் போய்விட்டது. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிவின் சிகரமென விளங்கிய மகாமண்டலேசுவரர் மட்டும் இந்தச் செய்தியைச் சொல்லியிராமல் வேறு யாரேனும் சொல்லியிருந்தால் அவன் சிறிதும் நம்பியிருக்க மாட்டான். தென்பாண்டி நாட்டு வீரத் தளபதி வல்லாளதேவனுக்கா உடல் நலம் சரியில்லை? எத்தனையோ போர்க்களங்களில் பெரும் படையுடன் சென்று பகைவர்களைப் புறம்கண்டு வெற்றி வாகை சூடிய வல்லாளதேவனுக்கா திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது? என்று பல கேள்விகள் அவன் உள்ளத்தில் எழுந்து பெரும் ஐயத்தை உண்டாக்கியிருக்கும். மகாமண்டலேசுவரரின் வாய்ச் சொல்லாகவே வருகின்ற விஷயம் எதுவாயினும் அதை நம்பித்தானேயாக வேண்டும்? இந்த நல்ல சமயத்திலா தளபதிக்கு உடல் நலமில்லாது போக வேண்டும்? என்று மனம் கலங்கினான் அவன்.

"இங்கே நின்று கொண்டிரு. இன்னும் சிறிது நேரத்தில் ஓலையை எழுதிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார் மகாமண்டலேசுவரர். அவன் அங்கே இருந்தான். சிறிது நேரத்தில் உறையிட்டு அரக்குப் பொறி வைத்த ஓலையோடு வந்தார் அவர். அதை அவனிடம் கொடுத்து விட்டு, "போய் வா! இந்த ஓலையைக் கொடுத்ததும் உன்னை உள்ளே அழைத்துப் போய் விட்டு விடுவார்கள்" என்றார். அவன் அவசரமாகப் புறப்பட்டான். வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு புன்னகை பூத்தார் மகாமண்டலேசுவரர்.

மகாமண்டலேசுவரருடைய ஓலையோடும், தளபதியின் உடல் நிலை எப்படியிருக்கிறதோ என்ற பயத்தோடும் அவசரமாகப் பயணம் செய்து கோட்டாற்றுக்குப் போய்க் கொண்டிருந்த மகரநெடுங்குழைக்காதனுக்கு இடைவழியில் என்ன சந்தேகம் உண்டாயிற்றோ தெரியவில்லை. மகாமண்டலேசுவரரின் ஓலையைப் பிரித்துப் படித்து விட்டான்.

'இந்த ஓலையைக் கொண்டு வரும் ஆபத்துதவிகள் தலைவனையும், தளபதியைச் செய்தது போலவே செய்யவும் - இப்படிக்கு மகாமண்டலேசுவரர்' என்ற ஓரே வாக்கியம் தான் அந்த ஓலையில் இருந்தது. ஆபத்துதவிகள் தலைவன் திகைத்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. 'ஏதோ சூழ்ச்சிக்கு இரையாகப் போகிறாய்' என்று மனம் எச்சரித்தது. என்ன ஆனாலும் மகாமண்டலேசுவரர் சொற்படிக் கேட்பதில்லை என்ற மன உறுதியுடன் விழிஞத்துக்கே திரும்பி, அந்த ஓலையையும் கிழித்தெறிந்து விட்டான்.

14. கல்லில் விழுந்த கௌரவம்

முதல் நாள் இரவிலிருந்தே விழிஞத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை மறுநாள் காலை வரை நிற்கவே இல்லை. தேய்பிறைக் காலத்து இருட்டு முகில் மூட்டத்தின் கவிந்த நிலை. அதிகாலை மூன்றரை நாழிகைக்கு மேல் இருக்கலாம். அலைகள் பேய்த்தனமாகக் குமுறி வீசிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் தெற்கேயிருந்து ஒரு கப்பல் துறைக்கு வந்து நின்றது. மழையில் நனையாமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த சிலர் தீபங்களோடு ஓடிப்போய்க் கப்பலைப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவுடன் அவர்களிடமிருந்து ஆரவாரமும், மகிழ்ச்சியும் நிறைந்த குரல்கள் எழுந்தன. அமைதியில் ஆழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்த அந்த நேரத்தில் அந்தக் கப்பலின் வருகையை எதிர்பார்த்தே அவர்கள் காத்திருந்தார்கள் போலிருக்கிறது. 'குமாரபாண்டியருடைய கப்பல் வந்துவிட்டது!' என்ற ஆனந்தமயமான வார்த்தைகள் அந்த இருளிலும் மழையிலும் ஒலித்தன. அவர்களில் சிலர் ஓடிப்போய்த் துறைமுகத்துக்கு அண்மையிலிருந்த விழிஞத்து அரச மாளிகையில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரர் முதலியவர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். மகாமண்டலேசுவரர் மற்றவர்களை எழுப்பினார். மகாராணி, அதங்கோட்டாசிரியர், விலாசினி, பவழக்கனிவாயர் முதலியவர்கள் மகாமண்டலேசுவரரைப் பின் தொடர்ந்து சென்றனர். இருட்டையும் மழைக் குளிரையும் பொருட்படுத்தாமல் கப்பல் நின்று கொண்டிருக்கும் துறையை நோக்கி அவர்கள் கால்கள் விரைந்தன.

பகற்பொழுதில் மக்கள் கூட்டமும், பலமொழி பேசும் பல நாட்டு மக்களின் நாகரிகக் கலப்பும் வெள்ளமாக வழிந்து ஓடும் அந்தத் துறைமுகப் பகுதியில் அப்போது மழைத் தண்ணீர்தான் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. மழைத் தண்ணீரில் நனையாமல் சுங்கச் சாவடிக்குள் அடுக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகளின் ஓரமாக ஒன்றிப் படுத்திருந்த மனிதன் ஒருவன் மெல்ல எழுந்தான். மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் எந்தக் கப்பலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்களோ, அதே கப்பலை நோக்கி அவனும் இருளில் பதுங்கி நடந்தான். யாருடைய கண்களிலும் தான் தென்பட்டு விடாமல் நடந்து செல்ல வேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருக்கும் போலும். முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் வெளிச்சத்துக்காகப் பிடித்துச் செல்லப்பட்ட தீப்பந்தத்து ஒளி பின்னால் பதுங்கி நடந்தவனுடைய முகத்தில் படுகிறது. அப்போது அவன் முகத்தை நன்றாகக் காணமுடிகிறது.

ஆ! அது ஆபத்துதவிகள் தலைவனின் முகம் அல்லவா? தளபதிக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லி அவனை விழிஞத்திலிருந்து கிளப்பி விட்டார் மகாமண்டலேசுவரர். அவனோ நடுவழியிலேயே அவர் கொடுத்து அனுப்பிய ஓலையைப் பிரித்துப் பார்த்து, அதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விழிஞத்துக்கே திரும்பியிருந்தான்.

'ஐயோ, பாவம்! தம்முடைய பெண்ணும், நாராயணன் சேந்தனும் குமாரபாண்டியரை அழைத்துக் கொண்டு இந்தக் கப்பலில் வந்திருப்பார்களென்று மகாமண்டலேசுவரர் கனவு காண்கிறார். நானும், தளபதியும் பகவதியை அனுப்பியிருக்கிற நோக்கம் இவருக்குத் தெரியாது போலும்' என்று நினைத்துக் கொண்டே அவர்களுக்குப் பின்னால் நடந்தான் மகரநெடுங்குழைக்காதன். மழை பெய்து சேறாகியிருந்த தரையில் இருளில் வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டியிருந்தது. முன்னால் சென்றவர்களும் நிதானமாகவே நடந்து சென்றதால், குழைக்காதனும் அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துக் கொண்டான். கப்பலிலிருந்து குமாரபாண்டியனும், பகவதியும் இறங்குவதையும், அதைக் கண்டு மகாமண்டலேசுவரரின் முகத்தில் ஏமாற்றம் படர்வதையும் ஒருங்கே காணப்போகிற ஆவல் அவன் மனத்தின் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது.

அந்த ஆவலுடன் அவன் சென்று கொண்டிருந்த போது இருட்டில் பின்புறமிருந்து ஒரு கை நீண்டு அவன் முகத்தைத் தொட்டது. சிறிதளவு பயமும், பெரும்பகுதி ஆத்திரமுமாகத் திடுக்கிட்டுத் திரும்பினான் ஆபத்துதவிகள் தலைவன். பின்னால் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மரியாதையும் திகைப்பும் முகத்தில் மிளிர, 'நீங்களா?' என்ற வினா அவன் வாயிலிருந்து மெல்ல வெளிப்பட்டது. மழையில் நனைந்த உடம்போடு தளபதி வல்லாளதேவன் அங்கே அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.

'இரையாதீர்கள், மெல்லப் பேசுங்கள்!' என்று சொல்லும் பாவனையில் உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்துக் காட்டினான் தளபதி வல்லாளதேவன்.

"படைகள் புறப்படுகிற சமயத்தில் உங்களுக்குத் திடீரென்று உடல் நலமில்லாமற் போய்விட்டதாகவும், நீங்கள் படைக்கோட்டத்திலேயே தங்கி விட்டதாகவும் அல்லவா மகாமண்டலேசுவரர் என்னிடம் சொன்னார்?" என்று குரலை மேலும் சிறிதாக்கிக் கொண்டு தன் துடிப்பை அடக்க முடியாமல் கேட்டான் குழைக்காதன்.

"எல்லா விவரமும் சொல்கிறேன். பொறுமையாக இருங்கள்" என்று மெல்லக் கூறிவிட்டுக் குழைக்காதனின் கைகளைப் பற்றி ஒரு மூலைக்கு இழுத்துக் கொண்டு சென்றான் தளபதி.

"மகாசேனாபதி! இப்போது நாம் இங்கே தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க அவகாசமில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த கப்பல் துறையில் வந்து நின்று விட்டது. மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் இளவரசரை வரவேற்பதற்காக அதோ முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்" என்று பரபரப்போடு சொன்னான் மகரநெடுங்குழைக்காதன்.

"பரவாயில்லை, குழைக்காதரே! அவர்களெல்லாம் கப்பலிலிருந்து இறங்கி வருவதற்குள் நாமும் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். குமாரபாண்டியனோடு பகவதி உடன் வருவாளாகையினால் எல்லாம் அவள் கவனித்துக் கொள்வாள்."

"பகவதி கப்பலில் வருகிற விவரத்தைச் சொல்லி அவளையும் சேர்த்து அழைத்து வந்துவிட வேண்டுமென்று தாங்களே மகாமண்டலேசுவரரிடம் வேண்டிக் கொண்டீர்களாமே?"

"அவர் உங்களிடம் சொன்னாரா அப்படி?"

"சொல்லியது மட்டுமில்லை, உங்கள் உடல் நலனைக் கவனிப்பதற்காக நான் உடனே படைக்கோட்டத்துக்குப் போயாக வேண்டுமென்று என்னிடம் ஓர் ஓலை கொடுத்து இங்கிருந்து துரத்தினார். நானும் முதலில் அதை நம்பிப் புறப்பட்டு விட்டேன்..." என்று தொடங்கி, நடந்த விவரத்தைத் தளபதிக்குச் சொன்னான்.

"நீங்கள் செய்தது நல்லதாய்ப் போயிற்று. மகாமண்டலேசுவரர் கொடுத்த ஓலையை நம்பிப் படைக்கோட்டத்துக்கு வந்திருந்தால் என்னைப் போலவே நீங்களும் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பீர்கள். இடைவழியிலேயே அவருடைய ஓலையைக் கிழித்துப் போட்டு விட்டு விழிஞத்துக்கே திரும்பிய உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன் குழைக்காதரே! மகாமண்டலேசுவரர் பெரிய சூழ்ச்சி செய்து என்னை ஏமாற்றி விட்டார். நயமாகப் பேசி படைகளை முன்னால் அனுப்பச் செய்துவிட்டுத் தனியே என்னை அழைத்துக் கொண்டு போனார். நான் முட்டாள்தனமாய் அவரிடம் தனிமையில் மாட்டிக் கொண்டு விட்டேன். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்றும் என்னால் எவ்வளவோ தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் எரிந்து விழுந்தார். நானும் என் ஆத்திரத்தை அவரிடம் காட்டினேன், பலிக்கவில்லை. தந்திரமாக என்னைப் படைக்கோட்டத்திலேயே சிறை வைத்துவிட்டு விழிஞத்துக்குப் புறப்பட்டார் அவர். அங்கே என்னை ஏமாற்றியது போதாதென்று இங்கே வந்து உங்களையும் ஏமாற்றியிருக்கிறாரென்று தெரிகிறது. இல்லாவிட்டால், படை புறப்படும் நேரத்தில் எனக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது என்று சொல்லி உங்களை அங்கே அனுப்பியிருப்பாரா? என்ன இருந்தாலும் பிறரை அஞ்சி நிற்கச் செய்யும் சூழ்ச்சித் திறமை அவரிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இருக்க முடியாது. நான் அவருக்கு எதிராகச் செய்த ஒவ்வொரு தவற்றையும் வரிசையாக எண்ணி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறாரே அவர்! பகவதியை ஈழ நாட்டுக்கு அனுப்பியிருக்கும் இரகசியம் உங்களையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாதென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரோ அதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவினால் அவரை வெல்ல நம்மால் முடியாது, குழைக்காதரே! ஆனால் எப்படியும் அந்த மலைச்சிகரத்தை வீழ்த்தியாக வேண்டும். அதைச் செய்வதற்காகத்தான் நான் தப்பி ஓடி வந்தேன். வலிமையான யவனக் காவல் வீரர்களை எனக்குக் காவல் போட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். என் சாமர்த்தியத்தையெல்லாம் பயன்படுத்தி என்னைக் காவல் செய்த வீரர்களை ஏமாற்றிவிட்டு இங்கு ஓடி வந்தேன். அவர் என்னை இவ்வளவு தூரத்துக்கு அவமானப்படுத்திய பின்பும் போர்க்களத்துக்குப் போய்ப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போர் செய்ய விருப்பமில்லை எனக்கு. நான் போருக்குத் தலைமை தாங்கலாமா, இல்லையா என்பதைக் குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்?" என்று ஆபத்துதவிகள் தலைவனிடம் தம் மனக் குமுறலை வெளியிட்டான் தளபதி வல்லாளதேவன். அதைக் கேட்டுவிட்டுக் குழைக்காதன் கூறினான்:

"மகாமண்டலேசுவரர் ஒருவரை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு தாங்கள் அப்படியெல்லாம் செய்து விடக் கூடாது. தங்கள் தங்கையார் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிகளையும், சர்வாதிகார மனப்பான்மையையும் குமாரபாண்டியரிடம் இதற்குள் விவரித்துச் சொல்லியிருக்கலாம். அதைக் கேட்டு குமாரபாண்டியரே மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கை இழந்திருப்பார்."

"அப்படிச் சொல்வதற்கில்லை, குழைக்காதரே! குமார பாண்டியருடைய மனத்தை என் தங்கை பகவதி எவ்வளவுதான் மாற்றியிருந்தாலும் இங்கு வந்து இறங்கியவுடன் மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடிதான் கேட்பார் அவர். ஆகவே, இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே காரியம் தான். மகாமண்டலேசுவரர் என்ற இறுமாப்பு சக்தியை ஒரேயடியாக வீழ்ச்சியுறச் செய்து விட வேண்டும்."

"முயன்று பார்க்கலாம். அதோ அவர்கள் கப்பலை நெருங்கி விட்டார்கள். வாருங்கள், நாமும் போகலாம், மற்றவற்றைப் பின்பு பேசிக் கொள்வோம்" என்று கூறித் தளபதியையும் கூட்டிக் கொண்டு துறையில் வந்து நின்ற கப்பலை நோக்கிச் சென்றான் குழைக்காதன்.

தளபதிக்கும், குழைக்காதனுக்கும் இருளும் மழையும் போதுமான அளவு மறைந்து செல்வதற்கு ஒத்துழைத்தன. கப்பல் நின்று கொண்டிருந்த துறைக்கு அருகில் ஒரு பாறை மறைவில் அவர்கள் இருவரும் மறைவாக நின்று கொண்டனர். அந்த இடத்தில் நின்று கொண்டு கப்பலிலிலிருந்து இறங்குபவர்களை அவர்கள் பார்க்க முடியும்! அங்கே பேசுகிற பேச்சையும் கேட்க முடியும். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மறைவிடம் அது.

கப்பலின் அருகே தீப்பந்தங்களின் ஒளியில் மகாராணி மகாமண்டலேசுவரர், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், விலாசினி ஆகியோர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் மழைத் தூறலில் நனைந்து கொண்டு தான் நின்றார்கள். நங்கூரக் கயிறுகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தாலும் அலைக் குழப்பத்தால் கப்பல் ஆடிக் கொண்டிருந்தது.

அடடா! அப்போது மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் தான் எத்தனை ஆவல் நிறைவு பொங்கி நிற்கிறது! கப்பலிலிருந்து இறங்கிவரும் வழியையே பார்த்து நிற்கும் அவருடைய கண்களில் தென்படும் புனிதமான உணர்ச்சி தாய்மைப் பாசத்துக்கே சொந்தமான உணர்ச்சியல்லவா? அந்த உணர்ச்சிச் சாயல் மூலமாக அவருடைய தூய உள்ளத்தில் அப்போது எத்தனை எண்ணங்கள் பொங்கி எழுந்தனவோ?

விலாசினி, அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயார் எல்லோருடைய முகங்களிலும் குமார பாண்டியரைக் காணப்போகும் ஆவல் நிலவியது. மகாமண்டலேசுவரருடைய முகம் ஒன்று மட்டுமே உணர்ச்சி நிழல் படியாமல் வழக்கம் போல் இயல்பாக இருந்தது. பக்கத்திலிருந்து படர்ந்த தீப்பந்தத்தின் ஒளிச் சாயலில் அவருடைய கூர்மையான மூக்கு, முகத்திலிருந்து நீண்ட சக்தி ஒன்றின் நுனி போல் பளபளத்தது. அவருடைய சக்தி வாய்ந்த கண்களும் கப்பலிலிருந்து இறங்கி வரும் மரப்படிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. ஆ! அவர்கள் எதிர்பார்த்த இணையற்ற அந்த விநாடி இதோ வந்துவிட்டது. சேந்தனும், குழல்வாய்மொழியும் பின் தொடர குமார பாண்டியன் இறங்கி வந்தான். ஏனோ அவன் முகத்தில் சிறிது சோர்வு தென்பட்டது. சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் கூட அவ்வளவாக உற்சாகம் தென்படவில்லை. வரவேற்றவர்களிடம் இருந்த உற்சாகமும் பரபரப்பும் வரவேற்கப்பட்டவர்களிடம் இல்லை. குமாரபாண்டியன் கடைசிப் படியிலிருந்து இறங்கித் தென்பாண்டி நாட்டு மண்ணில் கால் வைத்தான். தீப்பந்த ஒளியில் அவன் அழகிய முகமும் வலது கையில் இருந்த வலம்புரிச் சங்கும் தெரிந்து மின்னின. யாரோ ஒரு கந்தர்வ உலகத்துச் சுந்தர இளைஞன் போல் எழிலார்ந்து காட்சியளித்தான் அவன். இறங்கியதும் கீழே நின்ற யாவரையும் வணங்கினான். அப்போது, "குழந்தாய்! வந்தாயா?" என்று ஒரு பாசம் நிறைந்த குரல் அவன் செவி வழிப் புகுந்து மனத்தின் இடமெல்லாம் நிறைந்து அவனைக் குழந்தையாக்கி விட்டது. அடுத்த விநாடி, "அம்மா!" என்ற சொல் அவன் நாவிலிருந்து உணர்ச்சி மயமாகக் கனிந்து குழைந்து தோன்றி ஒலித்தது. அந்த ஒலி எழுந்து அடங்குவதற்குள் தன் தாயின் கரங்களுக்கிடையே தழுவப்பட்டு நின்றான் அவன். தாய்மை என்ற பாற்கடலில் விழுந்து முழுகிப் பருகியும், நனைந்தும், உணர்ந்தும், தன்னை இழந்து அதிலேயே ஆழ்ந்து விட்டது போல் ஒரு பரவச நிலை. தங்கமே தசையாகத் திரண்டு நீண்டாற் போன்ற குமாரபாண்டியனின் அழகிய தோளில் மகாராணி வானவன்மாதேவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. தாயின் அந்தக் கண்ணீர் தன் உடம்பையும் உள்ளத்தையும் அழுக்கு நீக்கிப் பரிசுத்தமாக்கி விட்டது போல் ஒரு மகத்தான உணர்வு ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. பின்பு குழல்வாய்மொழியையும் அன்போடு தழுவி வரவேற்றார் மகாராணி.

தன் தந்தை அதங்கோட்டாசிரியரின் முதுகுக்குப் பின் வெட்கத்தோடு ஒன்றிக் கொண்டு நின்ற விலாசினி வியப்போடு பார்த்தாள். அவ்வளவு வயதான மகாராணி தம் மகனைக் கண்டதும் சிறு பிள்ளை போல் தழுவிக் கொண்டு கண்ணீர் சோர நின்ற காட்சி அவள் உள்ளத்தை உருக்கியது. 'குழந்தைத் தன்மை என்ற அபூர்வமான உணர்ச்சியை உலகத்துக்குக் கொடுத்துக் கொண்டு வருபவள் தாய். அதனால் தான் அந்தத் தன்மை தாயிடமிருந்தே சில சமயம் வெளிப்பட்டு விடுகிறது போலும்' என்று நினைத்து வியந்தார் அதங்கோட்டாசிரியர். மகாமண்டலேசுவரர் முதலியவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினான் குமாரபாண்டியன்.

"இராசசிம்மா! நல்ல சமயத்தில் நீ தாய் நாட்டுக்கு வந்திருக்கிறாய். வடக்கே நம்முடைய எல்லையில் போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய வருகையால் நம் படைவீரர்கள் உற்சாகமும் அடையப் போகிறார்கள். சேர வீரர் படை உதவியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி வெற்றி நம்முடையதாகத்தான் இருக்கும்" என்று அவனைச் சந்தித்து விட்ட மகிழ்ச்சியோடு கூறினார் மகாமண்டலேசுவரர். அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்க வெட்கினான் அவன். கீழே குனிந்து கொண்டு பார்த்தவாறு, "சுவாமி! படைக்கும், உதவிகளுக்கும் ஒன்றும் குறைவே இல்லை. ஈழ நாட்டுக் காசிப மன்னரின் படை கூட இன்னும் சில நாட்களில் நம் உதவிக்கு வரலாம்" என்றான் இராசசிம்மன்.

"உன்னுடைய முகத்தில் போரைப் பற்றிப் பேசும் போது ஆவேசம் ஏற்படவில்லையே? இந்தச் சோர்வும், சோகமும் எங்கிருந்து உன் முகத்தில் வந்து படிந்தனவோ?" என்று அவன் முகத்தை வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்துவிட்டுக் கேட்டார் மகாராணி. மகாராணி இவ்வாறு கேட்டதும் இராசசிம்மனுடைய முகத்தில் மேலும் சோகக் களை வந்து கவிந்தது. அவன் நெட்டுயிர்த்தான். அவனுடைய கண்கள் கலங்கின. எதையோ கூறுவதற்கு அவன் உதடுகள் தயங்கித் தயங்கித் துடித்தன.

அவன் என்ன கூறப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எல்லோருடைய விழிகளும் அவனுடைய முகத்தையே உற்று நோக்கின. ஆனால் அவன் வாய் திறந்து பேசுவதற்கு முன் கண்களின் குறிப்பினாலேயே வேறு ஒரு பேச்சும் அங்கு நிகழ்ந்தது. பயந்து மிரளும் கண்களால் ஏதோ ஒரு குறிப்புத் தோன்றச் சேந்தன் முகத்தைப் பார்த்தாள் குழல்வாய்மொழி.

சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சிறிது தள்ளி அழைத்துக் கொண்டு போய் ஏதோ சொல்லிவிட்டு வந்தான். அதைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்த மகாமண்டலேசுவரர், "குமாரபாண்டியரிடம் ஒரு விநாடி தனியாகப் பேச விரும்புகிறேன். இப்படிக் கொஞ்சம் என்னுடன் வரலாமா?" என்று பதறாத குரலில் தெளிவாகக் கூப்பிட்டார். குமாரபாண்டியன் மறுப்பின்றி அவருடன் சென்றான். கப்பல் துறைக்கு அருகேயிருந்த ஒரு பாறைக்குச் சமீபத்தில் போய் மகாமண்டலேசுவரரும் குமாரபாண்டியனும் நின்றனர். மகாமண்டலேசுவரர் இருளில் அவன் காதருகே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திச் சொன்னார்: "இராசசிம்மா! சற்று முன் நீ எல்லோரிடமும் சொல்லி விடுவதற்கு இருந்த சோகச் செய்தி என்னவென்று நான் இப்போதுதான் சேந்தனிடம் அறிந்து கொண்டேன். 'பகவதி இறந்து போனாள்' என்ற செய்தியை இன்னும் சிறிது காலத்துக்கு வெளியிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் வெளியிடச் சொல்கிறவரை அதை வெளியிடுவதில்லை என்று எனக்கு வாக்குத் தத்தம் செய்து கொடு."

இதைச் சொல்லிவிட்டு, வாக்குறுதியாக வலது கையை நீட்டினார் அவர். "சுவாமி! என்னைச் சோதிக்காதீர்கள். நீங்கள் மிகப் பெரியவர். எவ்வளவு பெரிய துக்கத்தையும் அங்கீகரித்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் நிமிர்ந்து நிற்கிற தெம்பு உங்களுக்கு உண்டு. நான் அப்படி மறைத்துக் கொண்டு நிற்கும் உறுதியற்றவன். என்னை மன்னித்து விடுங்கள். அந்தப் பெண்ணின் துர்மரணத்தை என்னால் ஒளிக்க முடியாது. உங்கள் பெண்ணும் சேந்தனும் கூட அந்தத் துயர உண்மையை மறைத்துக் கொண்டு இருந்து விடுவார்கள். என்னால் முடியாதே!" என்று நாத் தழுதழுக்கச் சொன்னான் குமாரபாண்டியன்.

"நீ கட்டாயம் அதை மறைத்துத்தான் ஆக வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரில் தென்பாண்டி நாடு வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த வாக்கை நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன் விருப்பம் போல் செய். இதற்கு மேல் உன்னைக் கெஞ்சிக் கொண்டிருக்க எனக்குத் தெரியாது." - ஒரு கணம் குமாரபாண்டியன் என்ன பதில் கூறுவதென்று தயங்கினான். அடுத்த விநாடி, "உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்" என்று அவருடைய வலது கையில் தன் வலது கையை வைத்துச் சத்தியம் செய்து கொடுத்தான். மகாமண்டலேசுவரர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா?" என்று கேட்டான் இராசசிம்மன்.

"இல்லை! கோட்டாற்றுப் படைத் தளத்தில் தனியே சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். இதைக் கேட்டு ஆச்சரியப்படாதே. இந்த உண்மையும் இப்போதைக்கு உன் மனத்தோடு இருக்கட்டும்."

"இதெல்லாம் என்ன விபரீதங்களோ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?"

"கவலைப்படாதே, இராசசிம்மா? எல்லாம் போகப் போக விளங்கும்."

அவர் இப்படிச் சொல்லி வாய் மூடவில்லை. அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை ஒட்டி அமைந்த பாறையின் மறுபுறமிருந்து தேங்காய் பருமனுக்கு ஒரு கல் 'விர்'ரென்று வீசி எறியப்பட்டுப் பறந்து வந்தது. அந்தக் கல் மகாமண்டலேசுவரரின் மகுடத்தில் விழுந்து அதைக் கீழே வீழ்த்தியது. குமாரபாண்டியன் வாளை உருவிக் கொண்டு ஓடினான். ஓசை கேட்டுச் சேந்தனும் ஓடி வந்தான்.

"நில்லுங்கள். மகுடம் தான் விழுந்தது. என் தலை இன்னும் இருக்கிறது!" என்று சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்து நிறுத்தினார் மகாமண்டலேசுவரர். பாறையின் மறுபுறத்திலிருந்து யாரோ இருவர் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது.

15. ஒரு பிடி மண்

"சுவாமி! இதென்ன அநியாயம்? எவனோ அக்கிரமம் செய்து விட்டு ஓடுகிறான். அவனைப் பிடிக்கலாமென்றால் போகவிட மாட்டேன் என்கிறீர்கள்!" என்று இராசசிம்மனும் சேந்தனும் மகாமண்டலேசுவரரோடு மன்றாடிக் கொண்டிருந்த போது அவர் பதில் சொல்லாமல் இருட்டில் கீழே விழுந்த மகுடத்தைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார்.

"இந்த முடியை நானே ஒரு நாள் கீழே கழற்றி வைக்கத்தான் போகிறேன். அதற்குள் என் எதிரிகள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்களோ, தெரியவில்லை!" என்று அவர் கூறிய போது அதில் எத்தனையோ அர்த்தங்கள் தொனித்தன. அவர் இதைக் கூறிய போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமென்று சேந்தனுக்கும், இராசசிம்மனுக்கும் ஆசையாயிருந்தது. ஆனால் இருளில் முகம் தெரியவில்லை.

"வாருங்கள், போகலாம்!" என்று எதுவும் நடக்காதது போல் கூறியபடி அவர்கள் இருவரும் பின் தொடரக் கப்பலுக்கு அருகே வந்தார் அவர்.

"அது என்ன? அங்கே நீங்கள் போய்ப் பேசிக் கொண்டிருந்த இடத்தில் ஏதோ ஓசை கேட்டதே?" என்று மகாராணி வானவன்மாதேவியார் வினவினார்.

"ஒன்றுமில்லை! ஏதோ ஒரு கல் காலில் இடறியது. அதைத் தூக்கி எறிந்தேன்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் குமாரபாண்டியனுடைய முகத்தையும் சேந்தனுடைய முகத்தையும் பார்த்தார் மகாமண்டலேசுவரர்.

அப்போது தூறிக் கொண்டிருந்த மழை நின்று போயிருந்தது. கப்பலிலிருந்து பொருள்களெல்லாம் இறக்கப்பட்டு விட்டன. "இங்கேயே நின்று கொண்டிருப்பானேன்? வாருங்கள் எல்லோரும் விழிஞத்து அரச மாளிகையில் போய்த் தங்கலாம்" என்று முன்னால் நடந்தார் மகாராணி. எல்லோரும் சென்றார்கள். விடிவதற்குச் சிறிது நேரமே இருந்தது. யாரும் உறங்கவில்லை. குழல்வாய்மொழியும் விலாசினியும் ஒரு மூலையில் உட்கார்ந்து மகாராணி வானவன்மாதேவியாரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும், குமாரபாண்டியனுக்குக் காந்தளூர் மணியம்பலத்து நிலைகளைப் பற்றி விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வேறொரு மூலையில் சேந்தனும், மகாமண்டலேசுவரரும் இரகசியமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். விடிகிற நேரம் நெருங்க நெருங்கத் துறைமுகத்தில் வழக்கமான ஒலிகளும், கலகலப்பும், ஆள் நடமாட்டமும் அதிகமாயின.

இவர்களெல்லோரும் விழிஞத்து அரச மாளிகையில் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சமயத்தில் விழிஞத்தின் ஒதுக்குப்புறமான மற்றொரு பகுதியில் நடந்து கொண்டிருந்த மற்றொரு சம்பவத்தைக் கவனிக்கலாம். அந்த இடம் கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவு விலகியிருந்தது. செடி, கொடிகளும், பெயர் வேறுபாடு தெரியாத பலவகைக் காட்டு மரங்களும் அடர்ந்த பகுதி அது. பகற்போதிலேயே மயான அமைதி நிலவுகிற இடம் அது.

அங்கே குருதிக் கொழுந்துகள் போல் பூத்திருந்த ஒரு செவ்வரளிப் புதரின் கீழே தளபதி வல்லாளதேவனும், ஆபத்துதவிகள் தலைவனும் உட்கார்ந்திருந்தனர். தளபதி குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தான். அவன் கண்கள் கள்ளிப் பழங்களைப் போலச் சிவந்திருந்தன. குழைக்காதன் தளபதிக்கு ஏதோ ஆறுதல் கூறித் தேற்ற முயன்று கொண்டிருந்தான்.

"குழைக்காதரே! என் அருமைத் தங்கையின் முடிவு இப்படியா ஆக வேண்டும். அன்பையும், ஆதரவையும், செலுத்த எனக்கு இனிமேல் யார் இருக்கிறார்கள்? அவள் போன பின்பும் நான் இனி எதற்காக உயிர் வாழ வேண்டும்? கடல் கடந்து போய் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டு வரப்போகிறாள் என்று கனவு கண்டு கொண்டிருந்தேனே! அங்கே போய் உயிர் விடுவதற்காகவா அவளை அனுப்பினேன்?" என்று தளபதி அழுது புலம்பிய அவலக் குரல் மனித நடமாற்றமற்ற அந்தக் காட்டில் எதிரொலித்தது.

"மகாசேனாபதி! அந்தச் செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளம் எவ்வளவு கொதிப்படைந்திருக்கிறது, தெரியுமா? கப்பலிலிருந்து குமாரபாண்டியருடன் தங்கள் தங்கையார் இறங்குவாரென்று எவ்வளவு ஆவலோடு பாறை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம் நாம்? மகாமண்டலேசுவரர் நாம் ஒளிந்திருந்த பாறைக்கு அருகில் வந்து குமாரபாண்டியரிடம் அந்த இரகசியத்தை வெளியிடக் கூடாதென்று கேட்டுக் கொண்ட போது தானே நமக்கே அந்த உண்மை தெரிந்தது? அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட கொதிப்பில் எவ்வளவு பெரிய கல்லைத் தூக்கி மகாமண்டலேசுவரர் மேல் வீசினேன்? அந்தப் பாழாய்ப் போன கல் அவர் மண்டையை உடைத்து நொறுக்கியிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். மகுடத்தைக் கீழே தள்ளியதோடு போய்விட்டதே!" என்று சோக வெடிப்பில் உண்டான கோபத்தோடு சொன்னான் குழைக்காதன்.

அதுகாறும் பொங்கி எழும் அழுகையோடு சோகத்தில் துவண்டு போய் வீற்றிருந்த மாவீரன் வல்லாளதேவன் திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் எழுந்து நின்றான். அழுகை ஓய்ந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். முகத்தில் வைரம் பாய்ந்த உணர்ச்சி ஒன்று கால்கொண்டு பரவியது. கண்களில் பழிவாங்கத் துடிக்கும் உணர்வொளி மின்னியது. முகம் சிவந்து, மீசையும் உதடுகளும் துடித்தன. ஆவேசமுற்ற வெறியாட்டக்காரன் போல் விறைப்பாக நின்று கொண்டு சூளுரைத்தான் அவன்.

"குழைக்காதரே! இந்தக் கணத்திலிருந்து நான் அயோக்கியனாக மாறப் போகிறேன். கடமை, நன்றி, நியாயம், அறம் இவைகளைப் பற்றி நான் இனிமேல் கவலைப்படப் போவதில்லை. கருணையும், அன்பும், எனக்கு இனிமேல் தேவையில்லை. அவைகளை நான் யார் மேல் செலுத்த முடியுமோ, அந்த அருமைச் சகோதரி போய்விட்டாள். என் ஒரே உறவு அழிந்து விட்டது. இல்லை! சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு விட்டது. என் உடன்பிறந்த இரத்தம் துடிக்கிறது. பறி கொடுத்த மனம் பதறுகிறது. இனி யாரும் எனக்கு வேண்டியவரில்லை. நான் இரத்தப் பசி மிகுந்த கோர ராட்சசனாக உருவெடுக்கப் போகிறேன். ஞானிக்குத் துன்பம் வந்தால் அதே மாதிரித் துன்பம் பிறருக்கு வராமல் காப்பான். முரடனுக்கு ஒரு துன்பம் வந்தால் ஆயிரம் பேருக்கு ஆயிரக்கணக்கான துன்பங்களை விளைவிப்பான். நான் முரடன். எனக்கு எதிரி மகாமண்டலேசுவரர் ஒருவர் மட்டும் இல்லை. மகாராணி, இளவரசர், அந்தக் குட்டைச் சேந்தன், மகாமண்டலேசுவரரின் பெண், இந்த நாடு, இந்தத் துன்பத்தை எனக்கு அளித்த எதிரிகளின் தலையாய விதி என்னும் எதிரி - எல்லோரையும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கப் போகிறேன் நான். என் தங்கைக்கு இல்லாத உயிரும் வாழ்வும் எவருக்கும் இல்லாமல் செய்து விடப் போகிறேன். என்னை இதுவரையில் தலை நிமிர முடியாமல் செய்து வந்த அறிவின் பரம்பரையைப் பூண்டோடு அழித்தே விடப் போகிறேன், பாருங்கள்!" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு கீழே குனிந்து வலது கையால் ஒரு பிடி மண்ணை அள்ளிக் காற்றில் தூவினான் தளபதி. குழைக்காதன் பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான். தளபதியின் வெறியை என்ன கூறி எப்படி ஆற்றுவதென்றே அவனுக்கு விளங்கவில்லை. மூட்டாத காலக்கடைத் தீயாக, ஊழி நெருப்பாக, உக்கிரமான கொதிப்பின் கம்பீர பிம்பமாக எழுந்து நின்றான் தளபதி.

"மகாசேனாபதி! இந்த அழிக்கும் வேலையில் நம்மோடு ஒத்துழைப்பதற்கு வேறு மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சந்தித்து நம்மோடு சேர்த்துக் கொள்ளலாமோ?" என்று அருகில் நெருங்குவதற்குப் பயந்து கொண்டே மெதுவாகக் கேட்டான் குழைக்காதன்.

"யார் அவர்கள்?"

"கழற்கால் மாறனாரும் அவரைச் சேர்ந்தவர்களும்."

"எங்கே சந்திக்கலாம் அவர்களை?"

"பொன்மனைக்குப் போனால் அவர்களைச் சந்திக்கலாம்!"

"புறப்படுங்கள் பொன்மனைக்கு!"

தளபதி வேகமாக நடந்தான். குழைக்காதனும் பின்பற்றினான். காட்டு எல்லை கடந்து மக்கள் புழக்கம் மிகுந்த இடம் நெருங்கியதும் தங்கள் தோற்றங்களைப் பிறர் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இயலாதபடி மாற்றிக் கொண்டு பொன்மலைக்கு விரைந்தனர் இருவரும். போது நன்றாக விடிந்து விட்டது. பகல் பவனி வரத் தொடங்கியிருந்தது அப்போது.

16. 'வாகை சூடி வருக!'

விழிஞத்து அரச மாளிகையில் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தில் கடல் கடந்து பயணம் செய்த போது தனக்கும், சேந்தனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் மகாராணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் குழல்வாய்மொழி. பகவதி மாறுவேடத்தில் உடன் வந்தது, கப்பலிலிருந்து தப்பியோடி இலங்கைக் காட்டில் மாண்டது - ஆகிய சம்பவங்களை மட்டும் சொல்லாமல் தவிர்த்து விட்டாள் அவள். செம்பவழத் தீவைப் பற்றிச் சொன்னாள். ஆனால் மதிவதனியைப் பற்றிச் சொல்லவில்லை.

"பெண்ணே! இவ்வளவு அரும்பாடுபட்டுக் கடல் கடந்து சென்று என் குமாரனை அழைத்து வந்ததற்காக உனக்கும் சேந்தனுக்கும் நான் எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். எனக்குத் தெரிந்த பெண்களுக்குள் தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதி ஒருத்திதான் துணிவும், சாமர்த்தியமும் கொண்டு காரியங்களைச் சாதிக்கும் திறமை உள்ளவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது பார்த்தால் நீ அவளை விடக் கெட்டிக்காரி என்று தெரிகிறது" எனக் குழல்வாய்மொழியைப் பாராட்டினார் மகாராணி. அவருடைய பாராட்டுரையில் பகவதியைப் பற்றிப் பேச்சு வந்த போது குழல்வாய்மொழியின் முகம் பயத்தால் வெளிறியது. உடல் மெல்ல நடுங்கியது. சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள் அவள்.

"தேவி! பகவதியை எங்கே காணவில்லை? நானும் என் தந்தையும் அரண்மனையிலிருந்து காந்தளூர் சென்றபின் அவளைச் சந்திக்கவேயில்லை. இப்போது அவள் எங்கே இருக்கிறாள்? நான் பார்த்து வெகுநாள் ஆயிற்று. பார்க்க வேண்டும் போல் ஆவலாயிருக்கிறது?" என்று அப்போது உடனிருந்த விலாசினி மகாராணியைக் கேட்கவே, குழல்வாய்மொழி தன் உணர்வின் பதற்றத்தை அடக்க இயலாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

"விலாசினி! நீங்களெல்லாம் ஊருக்குப் போன மறுநாள் காலையே அந்தப் பெண் பகவதியும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள் போலிருக்கிறது. மறுநாள் காலையிலிருந்து நான் அரண்மனையில் அவளைப் பார்க்கவில்லை. அவளுக்கு என்னிடம் என்ன கோபமோ தெரியவில்லை, போகும்போது சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாள். கோட்டாற்றுப் படை மாளிகைக்குத் தன் தமையனோடு போய் இருப்பாளென்று நினைத்துக் கொண்டேன். மறுபடியும் தளபதியைச் சந்திக்கிற போது அந்தப் பெண்ணை வரச் சொல்லியனுப்ப நினைத்திருந்தேன். சந்தர்ப்பமே வாய்க்கவில்லை" என்று விலாசினிக்கு மறுமொழி கூறினார் மகாராணி.

"பகவதி உடனிருந்தால் பொழுது போவதே தெரியாது, தேவி! கலகலப்பான பெண்" என்று மேலும் கூறினாள் விலாசினி.

"ஆமாம்! நீங்கள் இரண்டு பேரும் என்னைத் தனியாகவிட்டு விட்டுப் போய்விட்டீர்கள். எனக்குத் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை. புவனமோகினியும் இல்லாமற் போயிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்" என்று மகாராணிக்கும், விலாசினிக்கும் பேச்சு வளர்ந்தது. ஓர் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டே தெரியாதது போல் நடிப்பது எவ்வளவு கடினமான காரியமென்பதை அப்போதுதான் குழல்வாய்மொழி உணர்ந்தாள்.

"குழல்வாய்மொழி! உன்னையும் பகவதியையும் போல் பெரிய சாமர்த்தியமெல்லாம் இதோ என்னருகில் உட்கார்ந்திருக்கும் இந்தப் பெண் விலாசினிக்குக் கிடையாது. மிகவும் அடக்கமான பெண் இவள். காந்தளூர் மணியம்பலத்தில் எத்தனை கலைகள் சொல்லிக் கொடுக்கிறார்களோ அவ்வளவிலும் தேர்ந்தவள். நன்றாக நாட்டியமாடுவாள்" என்று விலாசினியைப் பற்றிப் புகழ்ந்து கூறினார் மகாராணி. தங்கள் பேச்சில் கவனம் செலுத்தாமல் எங்கோ முகத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த குழல்வாய்மொழியின் கவனத்தை மீட்கவே மகாராணி இப்படிக் கூறினார். "தேவி! இடையாற்று மங்கலத்து நங்கைக்கு முன் என்னை இப்படியெல்லாம் புகழாதீர்கள். எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று விலாசினி கூறிய சொற்கள் இயல்பானவையா, தன்னைக் கேலி செய்யும் தொனியுடையவையா என்று குழல்வாய்மொழிக்கே சந்தேகமாக இருந்தது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரும் சேந்தனும் அங்கே வந்தார்கள். மகாமண்டலேசுவரரைக் கண்டதும் மகாராணி உள்பட மூவரும் எழுந்து நின்றனர். மாளிகையின் மற்றோரிடத்தில், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயரோடு உரையாடிக் கொண்டிருந்த குமாரபாண்டியனும் அவர்களோடு மரியாதையாக மகாமண்டலேசுவரருக்கு அருகில் வந்து நின்றான்.

மகாமண்டலேசுவரரின் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வரப் போகின்றன என்பதை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பொழுது விடிந்து விட்டது. நீங்கள் எல்லோரும் அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். குமாரபாண்டியரையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். நானும் சேந்தனும் இடையாற்று மங்கலம் வரை போய்விட்டு அப்புறம் அரண்மனைக்கு வருகிறோம். நான், அரண்மனைக்கு வந்த பின் குமாரபாண்டியரைப் போர்க்களத்துக்கு அனுப்புகிறேன். அதற்கு முன் இலங்கையிலிருந்து வரவேண்டிய படைகளும் வந்து விடலாம்!" என்று கூறிக் கொண்டே வந்த மகாமண்டலேசுவரர், மாளிகை வாசலில் குதிரைகள் வந்து நிற்கிற ஒலியைச் செவியுற்றுப் பேச்சை நிறுத்தினார். அவர் கண்களும் ஏனையோர் கண்களும் வாயிற் பக்கமாகத் திரும்பின.

போர்க்களத்திலிருந்து செய்தி கொண்டு வரும் தென்பாண்டி நாட்டுப் படைவீரர் இருவர் அவசரமாகக் குதிரைகளிலிருந்து இறங்கி உள்ளே வந்தனர். அவர்கள் முகங்களில் பரபரப்பு தென்பட்டது. அவர்களில் ஒருவன் முன்னால் நடந்து வந்து மகாமண்டலேசுவரரைத் தலைதாழ்த்தி வணங்கிவிட்டு ஒரு திருமுக ஓலைச் சுருளை அவரிடம் அளித்தான். எல்லோருடைய முகங்களிலும் ஆர்வம் படர்ந்து நிற்க அவர் பிரித்துப் பார்த்தார்.

"மதிப்புக்குரிய மகாமண்டலேசுவரருக்குக் கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தன் போர்க்களத்துப் பாசறையிலிருந்து கொண்டு எழுதும் அவசர ஓலை! தாங்கள் கோட்டாற்றுத் தளத்திலிருந்து அனுப்பி வைத்த ஐந்நூறு பத்திப் படை வீரர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் என்ன காரணமோ, தளபதி வல்லாளதேவனை மட்டும் தாங்கள் அனுப்பவில்லை. நம்மிடம் படைவீரர்கள் நிறைய இருந்தும், தலைமை தாங்கி நடத்த ஏற்ற தளபதிகள் இல்லை. நானும், சேர நாட்டிலிருந்து வந்திருக்கும் தளபதியும் ஆக இரண்டு பேரே இருக்கிறோம். நம்மை எதிர்க்கும் வடதிசைப் பெரும்படையிலோ, ஐந்து திறமை வாய்ந்த படைத் தலைவர்கள் இருக்கிறார்கள். சோழ மன்னனும், கொடும்பாளூரானும், கண்டன் அமுதனும், அரசூருடையானும், பரதூருடையானும் எவ்வளவு பெரிய படைத் தலைவர்கள் என்பது தங்களுக்குத் தெரியாததன்று. நம் கை சிறிது தளர்ந்தாலும் பகைவர்கள் வெள்ளூரைப் பிடித்துக் கொண்டு தெற்கே முன்னேறி விடுவார்கள்.

"நேற்று நடந்த போரில் சேர நாட்டிலிருந்து வந்துள்ள படைத்தலைவன் ஏராளமான விழுப்புண்கள் பெற்றுத் தளர்ந்து போயிருக்கிறான். இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு அவன் போர்க்களத்தில் நிற்க முடியாதபடி பலவீனமாக இருக்கிறான். எனவே இந்தத் தகவல் கண்டதும் தளபதி வல்லாளதேவனைக் களத்துக்கு அனுப்பி வைக்கவும். அவன் வந்து விட்டால் நம் படைகளுக்கும் புதிய ஊக்கம் பிறக்கும். நம் வீரர்கள் குமாரபாண்டியருடைய வரவையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தளபதியை அவசரமாக அனுப்பவும்.

இங்ஙனம், தங்கள் கட்டளை மேற்கொண்டு நடக்கும் பெரும்பெயர்ச்சாத்தன்."

படித்து முடித்ததும் ஓலைச் சுருளைப் பத்திரமாகத் தம் கையில் சுருட்டி வைத்துக் கொண்டார் அவர். மகாராணியை நோக்கிக் கூறலானார்:

"தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். வந்ததும் வராததுமாகத் தங்கள் புதல்வரை இங்கிருந்தே போர்க்களத்துக்குப் போகச் சொல்லவேண்டிய அவசரம் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அரண்மனைக்குச் சென்று தங்கி நீண்ட நாள் பிரிவால் மனங் கலங்கியிருக்கும் தங்களை ஆற்றுவித்த பின்பு களத்துக்குப் புறப்படச் செய்யலாம் என்று நான் சற்று முன் கூறினேன். இப்போது ஏற்பாட்டை மாற்றி இங்கிருந்தே இளவரசரை அனுப்பப் போகிறேன். நம் படைகள் உற்சாகமின்றி இருக்கின்றனவாம். குமாரபாண்டியரைக் கண்டால் ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுமென்று கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் எழுதியிருக்கிறான்."

"மகாமண்டலேசுவரரே! இதில் மன்னிப்பதற்கு என்ன குற்றமிருக்கிறது! போர் செய்வதற்கும், தன் நாட்டைக் காப்பாற்றி முடிசூடிக் கொள்வதற்கும் தானே இவ்வளவு அரிய முயற்சி செய்து இராசசிம்மனை இலங்கையிலிருந்து அழைத்து வரச் செய்திருக்கிறீர்கள். மகனைக் கண்குளிரப் பார்த்து விட்டேன். நெடு நாட்களாக என் நெஞ்சை வாட்டிப் பிழிந்து கொண்டிருந்த தாய்மைத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். இனி அவன் போரை முடித்துக் கொண்டு வெற்றி வாகை சூடித் திரும்புகிற வரை எவ்வளவு காலமானாலும் காத்திருப்பேன். தயவு செய்து அதுவரை உங்கள் பெண்ணையும், ஆசிரியர் மகள் விலாசினியையும் என்னோடு அரண்மனையில் வைத்துக் கொள்ள இருவரும் இணங்க வேண்டும். சிறு வயதுப் பெண்கள் இருவர் உடனிருந்தால் எனக்கு என் கவலைகளை மறந்து விட முடிகிறது" என்று மகாராணி முகத்தில் மலர்ச்சியோடு கூறினார்.

"மகாராணி! கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா யாராவது? என் மகள் விலாசினியும், மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியும் தங்களோடு அரண்மனையில் இருப்பதைப் பெரும் பாக்கியமாக ஒப்புக் கொள்வார்களென்பதில் ஐயமில்லை" என்றார் அதங்கோட்டாசிரியர்.

குமாரபாண்டியன் தாயின் அருகிற் சென்றான். குழல்வாய்மொழியும், விலாசினியும் விலகி நின்று கொண்டார்கள். மகாராணிக்குக் கண்கள் கலங்கின. "அம்மா! எனக்கு ஆசி கூறி விடையளியுங்கள். நான் வெற்றியோடு திரும்பி வருவேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்கள் மனத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆசைகளை நிறைவேற்றுவேன். வெற்றியோடு திரும்பியவுடன் இலங்கையிலிருந்து நம்முடைய சுந்தர முடியையும், பொற்சிம்மாசனத்தையும், வீரவாளையும் காசிப மன்னர் கொடுத்தனுப்பி விடுவார். பின்பு எப்போதும் போல் இந்தத் தென் பாண்டிய மரபு வளர்ந்தோங்கச் செய்யும் பொறுப்பை மேற்கொள்வேன். மகாமண்டலேசுவரரும் நீங்களும் அவ்வப்போது எனக்குப் பயன்படும் அறிவுரைகளையெல்லாம் போர்க்களத்துக்குச் சொல்லி அனுப்ப வேண்டும். சிறிதும் தயக்கமில்லாத நிறைமனத்தோடு கண்கலங்காமல் என்னை அனுப்புங்கள், அம்மா!" அன்னையின் காலடியில் மண்டியிட்டு வணங்கினான் அவன்.

"போய் வா. வெறும் இராசசிம்மனாகத் திரும்பி வராதே! வெற்றி வீரன் இராசசிம்மனாக வாகை சூடி வா. பல்லூழிக் காலமாக இந்தத் தென் பாண்டி நாட்டைக் காத்துக் கொண்டு கடல் மருங்கே நின்று தவம் செய்யும் குமரித்தாய் உன்னைக் காத்து உனக்குத் துணை நின்று அருள் புரிவாள்." கண்களில் நீர் பனிக்கத் தொண்டை கரகரத்துக் குரல் ஒலி மழுங்க இந்தச் சொற்கள் மகாராணியின் வாயிலிருந்து வெளிவந்தன. இந்த வார்த்தைகள் செவியில் விழுந்த அதே சமயத்தில் அவன் பிடரியில் அன்னையின் கண்ணீர் முத்துகள் சில உதிர்ந்து சிதறின. இராசசிம்மன் எழுந்து மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான்.

"சுவாமி! ஈழ நாட்டுச் சேனை சக்கசேனாபதியின் தலைமையில் வந்து சேர்ந்தால், அதை வெள்ளூர்ப் போர்க்களத்துக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போதே புறப்படுகிறேன்" என்று கூறி முடிக்கு முன்னே, "அதெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்! நீ தாமதம் செய்யாமல் புறப்படு. இதோ இந்த வீரர்கள் உன்னை அழைத்துப் போகக் காத்திருக்கிறார்கள். நான் போர்க்களத்தில் இருக்கும் உனக்கு மிக முக்கியமான செய்தி ஏதாவது சொல்லி அனுப்ப வேண்டியிருந்தால் சேந்தனை அனுப்புவேன்! போய் வா... தோல்வியோடு திரும்பாமல் இருக்கத் தெய்வம் துணைபுரியட்டும்" என்று அவசரத்தோடு இடைமறித்துச் சொன்னார் மகாமண்டலேசுவரர். அவன் அதிகம் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாத மாதிரி அவசரப்படுத்தினார். ஆசிரியரையும், பவழக்கனிவாயரையும் வணங்கினான் அவன்.

"வெற்றியோடு திரும்பி வந்து தங்கள் பராந்தக பாண்டியர் போல் பெரும் புகழ் பெற்று வாழுங்கள்" என்று வாழ்த்தினார்கள் அவர்கள்.

"சேந்தா! இளவரசர் புறப்படுவதற்கு நல்ல குதிரை ஒன்று கொண்டு வா. இங்கே அரச மாளிகையில் யவனத்திலிருந்து வந்த உயர்தரமான குதிரைகள் நிறைய இருக்கும்!" என்று தம் ஒற்றனைத் துரத்தினார் மகாமண்டலேசுவரர். அதே மாளிகையின் பின்புறமிருந்த பரிமாளிகைக்கு ஓடிப்போய் ஒரு குதிரையை அவிழ்த்துக் கொண்டு வந்து நிறுத்தினான் சேந்தன்.

புறப்படுவதற்கு முன் கடைசியாக, "இதோ ஒரு விநாடியில் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தான் மட்டும் தனியாக அந்த மாளிகையின் பின்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு சென்றான் இராசசிம்மன். அங்கே குதிரைகளை மேற்பார்த்துக் கொள்ளும் கிழவன் ஒருவன் இருந்தான்.

"பெரியவரே! நான் மறுபடியும் வந்து கேட்கிற வரை இந்தப் பொருளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று தன் வலம்புரிச் சங்கை அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றான் இராசசிம்மன்.

குதிரைகள் புறப்பட்டன. எல்லோரும் மாளிகை வாயில் வரை வந்து நின்று இளவரசரை வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மகாராணியும் மற்றவர்களும் அங்கிருந்து பல்லக்குகளில் அரண்மனைக்குக் கிளம்பி விட்டனர். சேந்தனும், மகாமண்டலேசுவரரும் மட்டுமே விழிஞத்து அரச மாளிகையில் எஞ்சியிருந்தனர். மகாமண்டலேசுவரர் சேந்தனை அனுப்பி விழிஞத்துக் கடல்துறை அதிகாரிகளை வரவழைத்தார். அவர்கள் வந்தனர்.

"அதிகாரிகளே! உங்களிடம் ஒரு பொறுப்பான காரியத்தை இப்போது ஒப்படைக்கப் போகிறேன். நாளை அல்லது நாளன்றைக்குள்ளாக ஈழ நாட்டுப் படைக் கப்பல்கள் சக்கசேனாபதியின் தலைமையில் இத்துறைக்கு வந்து சேரும். அப்போது நீங்கள் சக்கசேனாபதியைச் சந்தித்து, 'இராசசிம்மன், படைகளை இறக்கிக் கொண்டு உங்களை வெள்ளூர்ப் போர்க்களத்துக்கு நேரே வரச்சொல்லியிருக்கிறார்' என்று தெரிவித்து விட வேண்டும். இது முக்கியமான பொறுப்பு" என்று மகாமண்டலேசுவரர் கூறிய போது அந்த அதிகாரிகள் தலை வணங்கி ஒப்புக் கொண்டனர். அவர்களை அனுப்பிய பின் அவர் சேந்தன் பக்கம் திரும்பினார். "சுவாமி! இதுவரை மற்றவர்கள் உடனிருந்ததற்காகப் பொறுத்துக் கொண்டிருந்தேன். இனி என்னால் ஒரு கணம் கூட என் ஆத்திரத்தைத் தவிர்க்க முடியாது. நேற்றிரவு இளவரசருக்கு முன் தங்கள் முடியில் கல்லெறிந்து தங்களை அவமானப்படுத்தியவன் யார் என்று கண்டுபிடித்து அந்த முட்டாளின் மண்டையை உடைத்தால் தான் என் ஆத்திரம் தீரும். அப்போதே ஓடிப்போய்த் தடுத்துப் பிடித்திருப்பேன். நீங்கள் கூடாதென்று நிறுத்தி விட்டீர்கள்!" என்று ஆத்திரத்தோடு கூறினான் சேந்தன். மகாமண்டலேசுவரர் சிரித்தார்.

"சேந்தா, பொறு! எனக்கு அவர்கள் யாரென்பது தெரியும். இன்னும் சில நாட்கள் கழித்துப் பார். இப்படி இருட்டில் மறைந்து எறியாமல் நேரடியாகவே வந்து என் மேல் கல் எறிவார்கள் அவர்கள்" என்றார் அவர்.

அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவருடைய குரல் தொய்ந்து நைந்து ஒலிப்பதை நாராயணன் சேந்தன் உணர்ந்தான்.

"சுவாமி! எதற்கும் வருத்தப்படாத உங்களையும் வருந்தச் செய்து விட்டார்களே? அவர்கள் யாரென்று மட்டும் சொல்லுங்கள். இப்போதே போய்க் கழுத்தைத் திருகிக் கொண்டு வருகிறேன்" என்று துடிப்போடு சொன்னான் அவன்.

"கோபத்தை அடக்கிக் கொள்! என்னோடு புறப்படு. என்னுடைய அனுமானம் சரியாயிருந்தால் வாழ்க்கையிலேயே மகத்தான காரியம் ஒன்றை நாளைக்கு நான் செய்ய வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் நடக்க நடக்கப் பார்த்துக் கொண்டிரு! ஒன்றையும் கேட்காதே" என்று கூறிவிட்டுச் சேந்தனையும் உடன் அழைத்துக் கொண்டு விழிஞத்திலிருந்து புறப்பட்டார் அவர். அன்று இரவு நெடு நேரத்துக்குப் பின் அவர்கள் இருவரும் கோட்டாற்றுப் படைத் தளத்தை அடைந்தனர்.

அங்கே தூங்கி வழிந்து கொண்டிருந்த யவனக் காவல் வீரர்கள் எழுந்து வந்து தளபதி வல்லாளதேவன் தப்பிப் போய்விட்டானென்ற செய்தியை நடுங்கிக் கொண்டே சொன்னார்கள்.

"என் ஓலையோடு ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதன் இங்கு வந்தானா?" என்று கேட்டார் அவர். "வரவில்லை" என்ற பதில் அவர்களிடமிருந்து கிடைத்தது. "சேந்தா! இன்னுமா உனக்குச் சந்தேகம்? என் மேல் கல்லெறிந்துவிட்டு ஓடியவர்கள் யார் என்று இப்போது கூடவா உனக்குத் தெரியவில்லை?" என்று சேந்தனிடம் காதருகில் மெல்லச் சொன்னார் மகாமண்டலேசுவரர்.

"புரிகிறது, சுவாமி! கல்லெறிந்த கைகளை முறிக்க ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும்."

மகாமண்டலேசுவரர் நகைத்தார். "அப்பனே! சூழ்ச்சிகளைக் கடந்த நிலையில் இப்போது நான் நிற்கின்றேன். வா, இடையாற்று மங்கலத்துக்குப் போகலாம். நீ எந்த நேரமும் எனக்கு அந்தரங்கமானவனல்லவா? புறப்படு" என்றார்.

17. குமுறும் உணர்ச்சிகள்

பிறரிடம் சேர்க்க வேண்டிய செல்வங்களை அபகரித்து ஒளித்து வைத்துக் கொண்டு வாழ்கிறவன் கூட நிம்மதியாக இருந்து விட முடியும். ஆனால் பிறரிடம் சொல்ல வேண்டிய உண்மையை மறைத்து வைத்துக் கொண்டு அப்படி நிம்மதியாக இருந்து விட முடியுமா? உண்மை என்பது நெருப்பைப் போல் பரிசுத்தமானது. தன்னை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சுட்டுக் கொண்டே இருக்கும் அது!

பகவதியின் மரணம் என்ற எதிர்பாராத உண்மைதான் மறைத்து வைக்கப்பட்ட உள்ளங்களைச் சுட்டுக் கொண்டே இருந்தது. குமார பாண்டியனுக்கு எப்போதுமே அவனுடைய அன்னையைப் போல் நெகிழ்ந்து இளகிவிடும் மனம் வாய்த்திருந்தது. இந்த நெகிழ்ச்சியே அரசியல் வாழ்க்கையில் அவனுடைய பலவீனங்களுக்குக் காரணமாக இருக்கலாம். அரசியல் நூல்கள் அரசனின் இலக்கணமாகக் கூறும் ஆண்மையின் கடுமையும், தன் கீழ்நிலையை எண்ணித் தனது பகைமையை அழித்து உயரக் கருதும் வைரம் பாய்ந்த கொதிப்பும் ஆரம்பம் முதல் அவனுக்கு இல்லாமல் போயின. தோற்றச் சாயலில் தந்தையைக் கொண்டிருந்த அவன், பண்பில் தாயைக் கொண்டு பிறந்திருந்தான். எதையும் மறைக்கத் தெரியாதவனாக யாரையும் கெடுக்க நினைக்காதவனாக இருந்தான் அவன். விரைவில் உணர்ச்சிகளுக்கு இலக்காகி அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தன்மை அவனிடம் இருந்தது.

தங்கள் கப்பல் விழிஞத்தை அடைந்து கரையில் இறங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லித் தன் துயர உணர்ச்சிகளை எல்லோரோடும் கலந்து கொண்டு விட வேண்டுமென்று துடித்தான் அவன். அவனோடு வந்த குழல்வாய்மொழியோ, சேந்தனோ அந்த உண்மை தெரிந்திருந்தும் அவனைப் போல் அதை வெளியிடுவதற்குத் துடிக்கவில்லை. அதை அப்போது வெளியிடக் கூடாதென்றே நினைத்தனர் அவர்கள் இருவரும். மகாராணி முதலியவர்களிடம் பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லி விடுவதற்குக் குமாரபாண்டியனின் வாய் துடிப்போடு முனைந்ததைக் கவனித்து விட்டாள் குழல்வாய்மொழி. அதைச் சொல்லிவிடாமல் தடுக்க வேண்டும் என்ற குறிப்பைத் தன் கண் பார்வையாலே சேந்தனுக்குத் தெரிவித்தாள் அவள். உடனே மகாமண்டலேசுவரர் குமாரபாண்டியனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போய், 'பகவதியின் மரணத்தைப் பற்றிய செய்தியைத் தாம் சொல்லுமுன் வெளியிடக் கூடாதென்று' வாக்குறுதி பெற்றுக் கொண்டு விட்டார். அந்த ஒரு வாக்குறுதி மட்டுமன்று. தளபதி வல்லாளதேவனைக் கோட்டாற்றுப் படைக் கோட்டத்திலேயே தாம் சிறை வைத்துவிட்ட திடுக்கிடும் செய்தியையும் அவனிடம் தெரிவித்து, அதையும் வெளியிடக் கூடாதென்று மற்றொரு வாக்குறுதியும் பெற்றுக் கொண்டார். மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு எவராக இருந்தாலும் அத்தகைய நெருக்கடியான சமயத்தில் குமார பாண்டியனிடமிருந்து அந்த இரண்டு வாக்குறுதிகளையும் பெற்று விடமுடியாது.

ஆனால் மழுங்காத கூர்மை பெற்ற அந்த அறிவின் செல்வர் எந்தெந்த விளைவுகளைத் தடுப்பதற்காக குமார பாண்டியனிடம் அந்த வாக்குறுதிகளைப் பெற்றாரோ, அந்த விளைவுகள் அப்போதே அங்கேயே அவருக்கருகில் நின்றன என்பது பின்புதான் அவருடைய அறிவுக்கே எட்டியது. தாமும், குமாரபாண்டியனும் எந்தப் பாறையருகில் நின்று பேச நேர்ந்ததோ, அதன் மறைவில் இருளில் தளபதியும், குழைக்காதனும் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். மேலும் திடீரென்று தமது மகுடத்தில் கல் விழுந்த போது அந்த இடத்திலேயே அந்தக் கணத்திலேயே அப்படி எறிந்து விட்டு ஓடும் எதிரிகள் யார் என்று பிடித்துக் கொணர்ந்து பார்த்துத் தம்முடைய அவமானத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பவில்லை அவர். அதனால் தான் பிடிப்பதற்காக ஓடிய சேந்தனையும், குமாரபாண்டியனையும் கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினார் அவர். ஊழி பெயரினும் தாம் பெயராத சான்றாண்மையோடு சிரித்துக் கொண்டே கீழே விழுந்த மகுடத்தை எடுத்துக் கொள்ள அவரால்தான் முடியும்; முடிந்தது. வெளியில் உணர்ச்சிகளைக் காட்டாமல் நடந்து கொண்டாலும் இதயத்துக்கும் இதயமான நுண்ணுணர்வின் பிறப்பிடத்தில் அந்தக் கல் விழுந்த நினைவு உரசிய போது ஒரு கனற்பொறி எழுந்தது. உள்ளே குமுறலும் வெளியே பரம சாந்தமுமாக நடந்து கொண்டார்.

'இத்தனை காலமாகக் கண்பார்வையையும், பேச்சையும் கொண்டு ஒரு தேசத்தையே ஆட்டி வைத்த என் அறிவின் கௌரவம் இந்தக் கல்லினால் விழுந்துவிட்டதா? ஏன் இப்படி என் மனம் கலங்குகிறது? எத்தனை தான் மேதையாக இருந்த போதிலும் நல்வினைப் பயன் தீர்கிற காலம் வரும்போது ஒரு மனிதனுடைய அறிவு பயனற்றுப் போகும் என்கிற மாதிரி நிலையில் வந்து விட்டேனோ நான்?' என அவருடைய மனத்தில் உணர்ச்சிகள் குமுறின. அப்போது இருளில் விளக்கு அணைந்ததும் பயந்து அழுகிற குழந்தையைப் போல் முதல் முதலாக அவருடைய மனம் தன்னையும் தன் வினைகளின் பயனையும் உள் முகமாகத் திரும்பிப் பார்த்தது. ஒரு தேசத்தையே மலைக்கச் செய்த அந்த அறிவு தனக்காகவும் சிறிது மலைத்தது. ஆனால் அதன் ஒரு சிறு சாயை கூட வெளியில் தெரிந்து கொள்ளுமாறு காட்டப்படவில்லை. இதுவரை பிறருடைய உணர்ச்சிகளைக் கலக்கி ஆழம் பார்த்த மனம் இப்போது உணர்ச்சிகளால் கலங்கியது.

குமாரபாண்டியனுடைய கப்பல் வந்த பின் நேர்ந்த நிகழ்ச்சிகள் ஒவ்வோர் உள்ளத்திலும் ஒவ்வோர் விதமான உணர்ச்சிகளைக் குமுறச் செய்திருந்தன. தெய்வத்துக்கும் மேலாக மதித்து, தான் பக்தி செலுத்திப் பணிபுரிந்து வந்த மகாமண்டலேசுவரரின் மேல் கல்லெறிந்து விட்டு ஓடியவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைக்க முடியாமல் போய் விட்டதே என்று சேந்தன் கொதித்தான். சேந்தன் வீர வணக்கம் செய்யும் பிடிவாதக் குணமுடையவன். தன்னை முழுவதுமே ஒரே ஒரு மனிதருக்கு மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் அடிமையாக்கிக் கொண்டிருந்தான் அவன். காலஞ்சென்ற தன் தந்தைக்கும், முன்சிறையில் அறக்கோட்ட மணியக்காரனாக இருக்கும் தன் தமையனுக்கும் கூட இவ்வளவு அடங்கி ஒடுங்கிப் பணிவிடை புரிந்ததில்லை அவன். மகாராணி, குமாரபாண்டியன் ஆகியவர்களிடம் அவனுக்கு அன்பும், மரியாதையும் மட்டும் தான் இருந்தன. மகாமண்டலேசுவரர் என்ற ஒரே ஒரு மேதையிடம் தான் வசப்பட்டு மெய்யடிமையாகிக் கலந்திருந்தான். எவராலும் மாற்ற முடியாதபடி இந்த வீர வணக்கப் பண்பு அவனிடம் பதிந்து விட்டது. உலகம் முழுவதுமே மகாமண்டலேசுவரருக்கு எதிராகத் திரண்டு வந்தாலும் மூன்றரை முழ உயரமுள்ள அந்தக் குள்ளன் அவர் அருகில் மெய்க்காவலனாக நின்று கொண்டிருப்பான். மகாமண்டலேசுவரருடைய செல்லப் பெண் குழல்வாய்மொழிக்குக் கூட அவர் முகத்தை மட்டும் தான் பார்க்கத் தெரியும். ஆனால் சேந்தன் அவருடைய அகத்தையும் நெருங்கி உணர முடிந்தவன்.

அதனால் தான் மகாமண்டலேசுவரர் அவமானப்பட நேர்ந்ததைக் கண்டு அவன் உள்ளம் அவ்வளவு அதிகமாகக் குமுறியது. குமாரபாண்டியனும் அதைக் கண்டு மனம் கொதித்தானென்றாலும் அந்தக் கொதிப்பு எவ்வளவு வேகமாக உண்டாயிற்றோ, அவ்வளவு வேகமாகத் தணிந்து மறந்து மறைக்கப்பட்டு விட்டது அவன் மனத்தில். அதற்குக் காரணம் நினைப்பதற்கும் குமுறிக் கொதிப்பதற்கும் வேறு நிகழ்ச்சிகளும் இருந்தன. அவன் மனத்தில், பகவதியின் மரணம் என்ற உண்மையை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால், அத்துன்பமே போர்க்களத்துக்குப் போகிற வழியெல்லாம் அவன் மனத்தைச் சுட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு செய்தியும் அவன் மனத்தை உறுத்தியது. 'ஒருவருக்கும் தெரியாமல் தளபதியை மகாமண்டலேசுவரர் ஏன் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்?' என்று குழம்பும் நிலையும் குமாரபாண்டியனுக்கு இருந்தது. அவசரமாக விழிஞத்திலிருந்தே போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது இத்தனை மன உணர்ச்சிகளையும் எண்ணச் சுமைகளாகச் சுமந்து கொண்டு தான் புறப்பட்டான் அவன். ஆனால் போருக்குப் போகிறோம் என்ற உணர்வு பெரிதாகப் பெரிதாக இவை மங்கிவிட்டன.

மகாராணி வானவன்மாதேவியுடன் அரண்மனைக்குப் புறப்பட்ட குழல்வாய்மொழியின் மனத்திலும் உணர்ச்சிகள் குமுறின. மகாராணியும், விலாசினியும் பகவதியைப் பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கினால் அவளுக்கு உடனிருக்கவே முடியாது போல் ஒரு வேதனை ஏற்பட்டது. தெரிந்த உண்மையை வெளியிட முடியாமல் தவித்தாள். மகாராணியுடன் அரண்மனைக்கு வராமல் தந்தையோடு இடையாற்றுமங்கலம் போகலாமென்று நினைத்திருந்த அவளை மகாராணி தான் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு வந்து விட்டாரே! இன்னொரு வருத்தமும் அவளுக்கு இருந்தது. கப்பலில் வரும் போது அவளிடம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்த இளவரசர் விழிஞம் வந்த பின்னும் போருக்குப் புறப்பட்டுப் போகிறவரை ஒரு வார்த்தை கூடச் சுமுகமாகப் பேசவில்லை! போர்க்களத்துக்குப் புறப்படுகிற போது கண்குறிப்பாலாவது விடை பெற்றுக் கொள்வது போலத் தன்னைப் பார்ப்பாரென்று அவள் எதிர்பார்த்தாள். அதுவும் இல்லை. இளவரசரின் இந்தப் புறக்கணிப்பு அவள் மனத்தைப் புண்ணாக்கியிருந்தது. அரண்மனையில் மகாராணி, விலாசினி, புவன மோகினி என்று கலகலப்பாகப் பலருக்கு நடுவிலிருந்தாலும் குழல்வாய்மொழியின் மனம் எங்கோ இருந்தது. அரண்மனையில் தங்கியிருந்த போது ஒரு நாள் பேச்சுப் போக்கில் மகாராணி, "புவன மோகினி! கோட்டாற்றுக்கு யாரையாவது அனுப்பித் தளபதியின் மாளிகையில் பகவதி இருக்கிறாளா? என்று விசாரித்து அழைத்து வரச் சொல்லேன்" என்று கூறிய போது உடனிருந்த குழல்வாய்மொழி துணுக்குற்றாள். தன் உணர்ச்சியை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். இராசசிம்மனைப் பற்றியும், அவன் போரில் வெற்றி பெற்றுத் திரும்பப் போவதைப் பற்றியும், வெற்றியோடு வரும்போது அரண்மனையை எப்படி அலங்கரித்து, அவனை எவ்வாறு வரவேற்பது என்பதைப் பற்றியும் குதூகலமாக அவர்களோடு பேசினார் மகாராணி. அந்த மாதிரிப் பேச்சுகளிலெல்லாம் குழல்வாய்மொழியும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டாள். குழல்வாய்மொழியைப் பொறுத்த வரையில் 'விலாசினி' என்ற பெண் புதிராக இருந்தாள். அவ்வளவாக மனம் விட்டுப் பழகவில்லை. மகாராணி விலாசினியையும், புவன மோகினியையும் தன்னுடன் சமமாக வைத்துப் பழக விடுவதும், பேசுவதும் குழல்வாய்மொழிக்குப் பிடிக்கவில்லை. அவள் இடையாற்று மங்கலம் நம்பியின் பெண். அன்பைக் கூடத் தனக்கென்று தனி மரியாதையோடு எதிர்பார்த்தாள். இடையாற்று மங்கலம் என்ற அழகின் கனவில் இளவரசி போல் அறிவின் கர்வத்தோடு சுற்றித் திரிந்தவளுக்கு எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மகாராணியோடு அரண்மனையில் தானும் ஒருத்தியாக இருப்பது என்னவோ போலிருந்தது.

புவன மோகினியே மகாராணிக்காகப் பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரக் கோட்டாற்றுக்குப் புறப்பட்ட போது குழல்வாய்மொழியின் பயம் அதிகமாயிற்று. எந்த வகையிலாவது மகாராணிக்கு உண்மை தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மனம் புழுங்கினாள் அவள்.

'என் மனம் இந்த உண்மையை மறைப்பதற்காக ஏன் இப்படிப் பயப்படுகிறது? நான் அந்தப் பெண்ணைக் கொலையா செய்தேன்? திமிர் பிடித்தவள் தானாக ஓடிப்போய் இறந்தால் அதற்கு நான் என்ன செய்வேன்?' என்று நினைத்துத் தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள். ஆனாலும் ஏதோ பெரிய கேடுகளெல்லாம் அந்த மறைக்கப்பட்ட உண்மை மூலம் வர இருப்பது போல் உண்டாகும் பீதி அவளை மீறி வளர்ந்தது. யாரிடமும் சொல்லாமல் அரண்மனையை விட்டு இடையாற்று மங்கலத்திற்கு ஓடிப் போய் விடலாம் போலிருந்தது. ஒரு சமயம் மகாராணி அவளைக் கேட்டார்: "என்னோடு இருப்பதில் உனக்கு ஒரு கவலையும் இருக்கக் கூடாதம்மா! இந்த அரண்மனையை உங்கள் இடையாற்றுமங்கலம் மாளிகையைப் போல நினைத்துக் கொள். என்னை உன் தாய் மாதிரி எண்ணிக் கொள். வந்தது முதல் நீ திடீர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாய் போலிருக்கிறது. உன் தந்தையைப் பிரிந்து என்னோடு இங்கு வந்து விட்டதால் வருத்தப்படுகிறாயா? இதற்கே இப்படி வருந்துகிற நீ அவ்வளவு நாட்கள் தந்தையைப் பிரிந்து இலங்கை வரை எப்படித்தான் போய் வந்தாயோ?"

மகாராணி இப்படிக் கேட்ட போது தன் உணர்ச்சிகள் அவருக்குத் தெரியுமாறு நடந்து கொண்டோமே என்று வெட்கப்பட்டாள் குழல்வாய்மொழி.

சிவிகையில் புறப்பட்டுத் தளபதியின் தங்கையைப் பற்றி விசாரித்து வருவதற்குக் கோட்டாறு சென்ற புவன மோகினி நள்ளிரவாகியும் அரண்மனை திரும்பவில்லை. மறுநாள் பொழுது விடிகிற நேரத்தில் பரபரப்பான நிலையில் அரண்மனைக்கு ஓடி வந்த புவன மோகினியைக் கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

18. வெள்ளூர்ப் போர்க்களம்

வெள்ளூர்ப் போர்க்களத்தில் இருந்த பாண்டியப் பெரும்படையும், அதற்கு உதவியாக வந்திருந்த சேர நாட்டுப் படையும், குமார பாண்டியனுடைய எதிர்பாராத திடீர் வருகையைக் கண்டு பெருமகிழ்ச்சி எய்தின. இளவரசனின் வரவு அவர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் துணிவையும் அளித்தது. அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் ஏன் இன்னும் வரவில்லை என்ற ஐயப்பாடும் எல்லோருடைய மனங்களிலும் உண்டாயிற்று. சாதாரண வீரர்கள் மனத்துக்குள்ளேயே அந்தச் சந்தேகத்தை அடக்கிக் கொண்டு விட்டார்கள். பெரும்பெயர்ச்சாத்தனும், அவனுக்கு அடுத்த நிலையிலிருந்த சிறு படையணித் தலைவர்களும் 'தளபதி ஏன் போர்க்களத்துக்கு வரவில்லை?' என்ற கேள்வியைக் குமாரபாண்டியனிடமே கேட்டு விடுவதற்குச் சமயத்தை எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் காலை விழிஞத்திலிருந்து புறப்பட்டிருந்த குமார பாண்டியனும் அவனுடன் வந்த வீரர்களும் மறுநாள் அதிகாலையில் வெள்ளூரை அடைந்து விட்டார்கள்.

அவர்கள் அங்கே சென்ற நேரம் பொருத்தமானது. அன்றைய நாட் போர் தொடங்குவதற்குச் சில நாழிகைகள் இருந்தன. இரு தரப்புப் படைகளும் களத்தில் இறங்கவில்லை. அவரவர்களுடைய பாசறையில் தங்கியிருந்தனர். அதனால் மகிழ்ச்சியோடு ஒன்று கூடி ஆரவாரம் செய்து குமாரபாண்டியனை வரவேற்பதற்கு வசதியாக இருந்தது. பாண்டியப் படைகளுக்கு நீண்ட தொலைவு பரந்திருந்த படைகளின் கூடாரங்களில் தனித் தனியே தங்கியிருந்த வேறு வேறு பிரிவைச் சேர்ந்த வீரர்களெல்லாரும் ஆவலோடு ஓடி வந்தனர். சிரித்த முகமும் இனிய பேச்சுமாகக் குதிரையிலிருந்து கீழே இறங்கி வந்த குமாரபாண்டியனைப் பார்த்த போது சில நாட்களாகத் தொடர்ந்து போர் செய்து களைத்திருந்த வருத்தமெல்லாம் போய்விட்டது போல் இருந்தது அவர்களுக்கு. குமாரபாண்டியனை வரவேற்கு முகமாக வாள்களையும், வேல்களையும் வலக் கரங்களால் உயர்த்திப் பிடித்து வாழ்த்தொலிகளை முழக்கினார்கள். முகத்தில் மலர்ச்சி நிறையத் தன் வீரர்களை நோக்கி ஆரவாரத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கையமர்த்தினான் இராசசிம்மன். பெரும்பெயர்ச்சாத்தனும், படையணித் தலைவர்களும் அவன் தங்குவதற்கு அமைத்திருந்த பாசறைப்பாடி வீட்டுக்கு அவனை அழைத்துச் சென்றனர். "இளவரசே! தளபதி இதுவரை ஏன் போர்க்களத்துக்கு வரவே இல்லை? என்ன காரணமென்று தெரியாமல் மனம் கலங்கிக் கொண்டிருக்கிறோம் நாங்கள்!" என்று எல்லோருடைய சார்பாகவும் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் அந்தக் கேள்வியைக் கேட்ட போது, அதுவரை குமாரபாண்டியனுடைய முகத்தில் நிலவிக் கொண்டிருந்த மலர்ச்சி மங்கி மறைந்தது. அந்தக் கேள்விக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தயங்கிக் கொண்டே பெரும்பெயர்ச்சாத்தன் முதலியவர்களுடைய முகங்களை ஏறிட்டுப் பார்த்தான் அவன். மகாமண்டலேசுவரர் விழிஞத்துக் கடற்பாறைக்கருகில் தன்னிடம் தனிமையில் பெற்றுக் கொண்ட வாக்குறுதிகள் அவன் மனத்தில் தோன்றிப் பயமுறுத்தின. "கரவந்தபுரத்துக் குறுநில மன்னரே! நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வகையில் குறிப்பான பதிலை மட்டும் தான் இப்போது என்னால் கூற முடியும். அதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள். தளபதி வல்லாளதேவன் எதிர்பாராத சில காரணங்களால் இந்தப் போரில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது. அதற்காகக் கவலைப்படாமல் நன்றாகப் போர் செய்து வெற்றியோடு திரும்ப வேண்டியது நம் கடமையாகும்" என்று பொதுவாகப் பதில் சொல்லித் தன்னை அவர்களுடைய சந்தேகச் சூறாவளியிலிருந்து மீட்டுக் கொண்டான் குமாரபாண்டியன்.

அவன் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் அதற்கு மேல் அதைப் பற்றி அவனிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாது என்று மௌனமானான் பெரும்பெயர்ச்சாத்தன். 'தளபதி வரவில்லை. இனி வரவும் மாட்டார்' என்ற செய்தி மெல்ல மெல்ல எல்லாப் படை வீரர்களுக்கும் தெரிந்து ஓரளவு பரவியது. பின்பு அவர்களுடைய பேச்சு போர்க்களத்து நிலைகளைப் பற்றிச் சுற்றி வளர்ந்தது. அன்று வரையில் நடந்திருக்கும் போரில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வு விவரங்களைக் குமாரபாண்டியனுக்கு விவரித்துச் சொன்னார்கள் பெரும்பெயர்ச்சாத்தன் முதலியவர்கள். அதிகக் காயங்களை அடைந்து போர் செய்யும் ஆற்றல் குன்றி பாசறையில் படுத்த படுக்கையாக இருந்த சேர நாட்டுப் படைத் தலைவனைப் போய்ப் பார்த்து ஆறுதல் கூறினான் குமாரபாண்டியன். தன் தரப்புப் படைகளின் அணித் தலைவர்கள் எல்லோரையும் கலந்து சிந்தித்த பின் எதிர்த் தரப்புப் படைகளின் வலுவை முறியடிப்பதற்கு ஏற்ற விதத்தில் இரண்டு விதமாகப் படை வியூகத்தைப் பிரித்தான். கரவந்தபுரத்து வீரர்களும் சேர நாட்டு வீரர்களும் அடங்கிய கூட்டத்துக்குப் பெரும்பெயர்ச்சாத்தன் தலைவனானான். தென்பாண்டிப் படை வீரர்கள் அடங்கிய ஐந்நூறு பத்திச் சேனைக்கும் குமாரபாண்டியன் தானே தலைமை தாங்குவதென்று ஏற்பாடு செய்து கொண்டான். சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்தால், அப்படியே மூன்றாவது படைவியூகமாக அமைத்துக் கொள்ளலாம் என்பது அவன் தீர்மானமாயிருந்தது. எதிர்த் தரப்புப் படைகளோ ஐந்து வியூகங்களாக ஐம்பெரும் தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குமாரபாண்டியன் பெரும்பெயர்ச்சாத்தனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். ஐந்து வியூகப் படைக்கும் மூன்று வியூகப் படைக்கும் ஏற்றத் தாழ்வு அதிகம் தான். ஆனாலும் போர்த் திறனும், சூழ்ச்சி வன்மையும் இருந்தால் மூன்று வியூகப் படை வீரர்களால் ஐந்து வியூகப் படை வீரர்களை ஏன் வெல்ல முடியாது? முடியும் என்றே நம்பினான் குமாரபாண்டியன்.

பயணம் வந்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் அன்றைக்குப் போரிலேயே தானும் களத்தில் தோன்றுவதென்று உறுதி செய்து கொண்டான் அவன். பாசறையிலேயே நாட்கடன்களை முடித்துக் கொண்டு போர்க்கோலம் பூண்டான். மார்பில் கவசங்களை அணிந்த போது பழைய போர்களின் நினைவுகளும், வெற்றி அனுபவங்களும் மனக்கண் முன் தோன்றின.

குமரித் தெய்வத்தையும், தன் அன்னையையும் நினைத்து கண் இமைகளை மூடித் தியானத்தோடு கைகூப்பி வணங்கினான். பட்டு உறை போர்த்த வட்டத் தட்டில் வைத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் மரியாதையோடும் பணிவோடும் அளித்த வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்ட போதே குமாரபாண்டியனின் கரங்கள் போர்த் துடிப்பை அடைந்து விட்டன. அவன் உடலிலும் உள்ளத்திலும் வீராவேச உணர்ச்சி பொங்கி நின்றது. பாசறைக்கு வெளியே நின்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் குமாரபாண்டியனைப் போர்க் கோலத்தில் காண்பதற்குக் காத்திருந்தார்கள்.

மிக உயரமான பட்டத்து யானையின் பிடரியில் அம்பாரி வைத்துப் பாசறை வாயிலில் கொணர்ந்து நிறுத்தியிருந்தான் பாகன். அரசவேழமாகிய அந்தப் பிரம்மாண்டமான யானையின் பொன் முகபடாம் வெயிலொளியில் மின்னிற்று. அதற்கப்பால் நூல் பிடித்து வரிசை நிறுத்தினாற் போல் குதிரைப் படைகளும், யானைப் படைகளும் அணிவகுத்து நின்றன. காலாட் படை வீரர்கள் பிடித்த வேள்களின் நுனிகள் கூரிய நேர்க்கோடு போல் வரிசை பிழையாமல் தெரிந்தன. அதற்கும் அப்பால் தேர்ப் படைகள் நின்றன. குமாரபாண்டியன் போர்க்கோலத்தோடு பாசறை வாசலில் வந்து நின்ற போது உற்சாக ஆரவாரம் திசை முகடுகளைத் துளைத்தது.

உடனிருந்த பெரும்பெயர்ச்சாத்தன் பட்டத்து யானையில் ஏறிக் கொள்ளுமாறு வேண்டினான். "எனக்கு ஒரு நல்ல குதிரை இருந்தால் போதுமே! போர்க்களத்தில் இந்த ஆடம்பரங்களெல்லாம் எதற்கு?" என்றான் குமார பாண்டியன்.

"இளவரசே! நாளைக்கு உங்கள் விருப்பம் போல் குதிரையோ, தேரோ எடுத்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் யானையில் தான் களத்துக்கு எழுந்தருள வேண்டும். தென்பாண்டிப் படைகளுக்குப் பொறுப்பான தலைமையில்லை என்றெண்ணி இறுமாந்து கிடக்கும் நம் பகைவர்களெல்லாம் நீங்கள் வந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைய வேண்டும். குதிரையோ, தேரோ வைத்துக் கொண்டால் உங்களை யானையின் மேற் பார்க்கிற மாதிரி அவ்வளவு நன்றாக அவர்களால் பார்க்க முடியாது. மேலும் உயரமான இடத்திலிருந்து தாங்கள் காட்சியளித்துக் கொண்டேயிருந்தால் தான் நம் வீரர்கள் பார்த்து உற்சாகம் அடைய முடியும்" என்று பெரும்பெயர்ச்சாத்தன் வேண்டிக் கொண்டான். குமாரபாண்டியனால் மறுக்க முடியவில்லை. யானை மேல் ஏறி அம்பாரியில் அமர்ந்து கொண்டான். மற்றப் படை முதன்மையாளர்கள் குதிரைகளில் ஆரோகணித்துச் சூழ்ந்தனர். போர் தொடங்குவதற்கு அறிகுறியான கருவிகள் முழங்கின. யானை மேல் அமர்ந்து களம் நோக்கிச் சென்ற போது குமாரபாண்டியனுடைய முகத்தில் வீரம் விரவிய ஒருவகை அழகின் கம்பீரம் தவழ்ந்தது. தென்பாண்டி வீரர்களின் ஊக்கம் அந்த முகத்தை அண்ணாந்து பார்க்கும் போதெல்லாம் நான்கு மடங்காகப் பெருகியது.

எதிர்ப்பக்கத்தில் வடதிசைப் பெரும் படையும் பெரு முழக்கங்களோடு களத்தை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றோடொன்று குமுறிக் கலக்க வரும் இரண்டு கடல் விளிம்புகளெனப் பயங்கரமாகத் தோன்றியது. படைகளின் சங்கமம், வீரர்களின் குரல்கள், வாத்திய முழக்கங்கள், ஓடும் கரி, பரிகளின் ஓலம், தத்தம் தரப்பின் வாழ்த்து ஒலி - எல்லாமாகச் சேர்ந்து களம் பிரளய ஓசையின் நிலையை அடைந்தது. படைக் கடல்கள் ஒன்று கலந்தன. போர் தொடங்கி விட்டது. வழக்கம் போல் அலட்சியமாகப் பாசறைகளிலிருந்து திரும்பிப் போர்க்களத்துக்கு வந்த வடதிசை மன்னர்கள் ஐவரும் எதிர்ப்பக்கத்தில் யானை மேல் ஆரோகணம் செய்து வரும் குமாரபாண்டியன் இராசசிம்மனைக் கண்டு திகைத்தனர். மருண்ட கண்களால் சோழன் கொடும்பாளூரானைப் பார்க்க, அவன் கண்டன் அமுதனைப் பார்த்தான். கண்டன் அமுதன் அரசூருடையானைப் பார்க்க, அவன் பரதூருடையானைப் பார்த்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அந்தப் பார்வை, "இனி நாம் அலட்சியமாக இருப்பதற்கில்லை" என்று தங்களுக்குள் குறிப்பாலேயே பேசிக் கொள்வது போலிருந்தது. ஒரு கணம் தான் வியப்பு, திகைப்பு, எல்லாம். போர்க்களத்தின் பிரளயத்துக்கு நடுவே ஆச்சரியப்பட்டுக் கொண்டு நிற்க நேரம் ஏது? போரைக் கவனித்து அதில் ஈடுபட்டார்கள் அவர்கள். புதிய துணிவும், ஊக்கமும் பெற்ற காரணத்தால் அன்றைக்குப் போரில் தென் பாண்டிப் படைகளின் கைகள் தான் ஓங்கியிருந்தன. மறுநாளும் அதே நிலை. குமாரபாண்டியன் வந்த மூன்றாவது நாள் காலைப் போர் தொடங்குகிற சமயத்தில் சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள். வடதிசைப் படைத் தலைவர்களுக்கு அது இரண்டாவது அதிர்ச்சியாக அமைந்தது. கொதிப்போடு போர் செய்தனர் அவர்கள்.

தீவினை வயத்தால் அன்றைக்குப் போர் முடிந்தது. பாசறைக்குத் திரும்பும் போது குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும், அவர்களுடைய வீரர்களும் சோர்வும் துயரமுமாகத் திரும்பினர். காரணம்...? அன்று நடந்த போரில் கரவந்தபுரத்து அரசனும், மாவீரனுமாகிய பெரும்பெயர்ச்சாத்தன் மாண்டு போனான். எதிர்த் தரப்புப் படையிலிருந்த கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதன் குறி வைத்து எறிந்த வேல் பெரும்பெயர்ச்சாத்தனின் உயிரைக் குடித்தது. சக்கசேனாபதி தன் படைகளோடு வந்து சேர்ந்து கொண்டிருக்காவிட்டால், பெரும்பெயர்ச்சாத்தன் மரணத்துக்குப் பின் தன்னம்பிக்கையையே இழந்திருப்பான் குமாரபாண்டியன். பெரும்பெயர்ச்சாத்தனையடுத்து பாசறையில் படுத்த படுக்கையாக இருந்த சேர நாட்டுப் படைத்தலைவனும் உயிர் விட்டுவிட்டான். இந்த இரு அதிர்ச்சிகளிலிருந்தும் மீட்டுப் படைகளைத் தைரியப்படுத்துவதற்காக அன்று இரவு முழுவதும் குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் உறக்கமின்றி அலைந்து உழைத்தனர். வாட்டமடைந்திருந்த கரவந்தபுரத்து வீரர்களையும், சேர வீரர்களையும் ஊக்கமூட்டுவதற்காக பெரும்பாடுபட்டனர். சோர்வும், சோகமும் கொண்டிருந்த படை வீரர்களுடைய பாசறைக்குத் தானே நடந்து போய்த் தைரியம் கூறினான் இராசசிம்மன். இவ்வளவும் செய்த பின்பே கலக்கமில்லாமல் மறுநாள் விடிந்ததும் களத்திற் புகுந்து போர் செய்ய முடிந்தது அவர்களால். பெரும்பெயர்ச்சாத்தன் இறந்து போனதால் பழையபடி படைகள் இரண்டே வியூகங்களாகக் குறுக்கப்பட்டன. அப்போது சக்கசேனாபதியே அவனைக் கலங்க வைக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார். "தலைமையேற்கப் படைத் தலைவர்கள் இல்லையென்று ஏன் படை வியூகங்களைக் குறுக்குகிறீர்கள்? தளபதி வல்லாளதேவனை வரவழைத்து நெருக்கடியைத் தவிர்க்கலாமே?" என்று சக்கசேனாபதி கேட்டபோது, அவருக்கு மறுமொழி கூறும் வகையறியாது தயங்கினான் அவன்.

"சக்கசேனாபதி! அதைப் பற்றி இப்போது உங்களிடம் பேசும் சக்தியற்றவனாக இருக்கிறேன் நான். ஆனால் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சமயம் வரும் போது அந்தச் செய்தியை உங்களிடம் சொல்வேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள்" என்று பதில் கூறிய போது அவரிடம் ஏதோ ஒரு துயரமான வேண்டுகோளைக் கேட்பது போன்றிருந்தது அவன் குரல்.

சக்கசேனாபதிக்கும் அவனுக்கும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்த அன்று இரவு நடுயாமத்தில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாண்டிப் படைகளின் பாசறைகள் இருந்த பகுதியில் திடீரென்று ஒரு பெருங் குழப்பம் உண்டாயிற்று. கூக்குரல்களும், கூட்டமுமாகச் சிலர் திடுதிடுவென ஓடுகிற ஓலியும், தீப்பந்த வெளிச்சமுமாகக் கலவரம் எழுந்தது. சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் எழுந்து அது என்னவென்று பார்ப்பதற்காகச் சென்றனர்.

19. ஊழிப் புன்னகை

மகாமண்டலேசுவரர் அந்த மாதிரித் தளர்ந்து பேசிச் சேந்தன் அதற்கு முன்பு கேட்டதில்லை. கம்பீரத்தின் சாயை குன்றி துயர அமைதியோடு கூடிய சாந்தம் நிலவுவதை அந்த முகமண்டலத்தில் அன்று தான் கண்டான் அவன். புரிந்து கொள்ள முடியாத புதிர்த்தன்மை நிறைந்த அந்தக் கண்களில் ஏக்கம் படர்வதை முதல் முதலாகச் சேந்தன் பார்த்தான். நிமிர்ந்து அகன்று நீண்டு மேடிட்டுப் படர்ந்த அவருடைய நெற்றியில் மேதா கர்வம் மறைந்து சுருக்கங்கள் தெரிந்தன. சேந்தன் மனத்தில் அதையெல்லாம் பார்த்துக் காரணமற்ற பயங்கள் கிளர்ந்தன.

"சுவாமி! இன்று தங்களுடைய பேச்சும் தோற்றமும் இதற்கு முன்பு நான் காணாத விதத்தில் இருக்கின்றனவே! என் மனம் எதை எதையோ நினைத்து அஞ்சுகிறதே!" - துணிவை வரவழைத்துக் கொண்டு அவரிடமே கேட்டான். அவன் இப்படிக் கேட்டதும் அவர் நேருக்கு நேர் திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்தார்! மெல்லச் சிரித்தார். வாடிய பூவைக் காண்பது போல் மங்கித் தென்பட்டது அந்தச் சிரிப்பு. சேந்தன் பயபக்தியுடனே அந்த முகத்தையும், அந்தச் சிரிப்பையுமே பார்த்துக் கொண்டு நின்றான். மெல்ல நடந்து அருகில் வந்து தம் சொந்தக் குழந்தை ஒன்றைத் தடவிக் கொடுப்பது போல் அவன் முதுகை இரு கைகளாலும் வருடினார் அவர்.

"சேந்தா! உன்னைப் போல் என்னிடம் நன்றி விசுவாசங்களோடு உழைத்த மனிதர் வேறு யாருமில்லை. உன்னிடம் எந்த அந்தரங்கத்தையும் நான் மறைக்கக் கூடாது. ஆனாலும் இப்போது என்னிடம் எதுவும் கேட்காதே... பேசாமல் என்னுடன் இடையாற்று மங்கலத்துக்கு வா." இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கி ஈரம் கசிந்து பளபளப்பதை அவன் பார்த்து விட்டான். அதைப் பார்த்ததும் சேந்தனுடைய மனத்தை ஏதோ ஓர் அவல உணர்வு இறுக்கிப் பிழிந்தது. அழுகை வந்து விடும் போலிருந்தது. அரிய முயற்சியின் பேரில் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அவரோடு இடையாற்று மங்கலம் சென்றான். இடைவழியிலுள்ள ஊர்களிலெல்லாம் போர்க்காலத்தில் நிலவும் பயமும், பரபரப்பும் நிலவிக் கொண்டிருந்தன. வேளாண்மைத் தொழில் சரியாக நடைபெறவில்லை. ஊர்கள் கலகலப்புக் குறைந்து காணப்பட்டன. பறளியாற்றில் நீர் குறைந்து காலால் நடந்து அக்கரை சேர்ந்து விடுமளவுக்கு ஆழமற்றிருந்தது. கரையோரத்து ஆலமரங்களில் இலைகள் பழுத்தும், உதிர்ந்தும் விகாரமாகத் தென்பட்டன. சோகமயமான பெரிய நிகழ்ச்சி ஒன்று வருவதற்கு முன் கூத்தரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவையினரின் அமைதி போல இடையாற்று மங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும் நிசப்தமாயிருந்தன.

சேந்தனும் மகாமண்டலேசுவரரும் பறளியாற்றைக் கடந்து இடையாற்று மங்கலத்தை அடையும் போது நண்பகலாகிவிட்டது. வெயில் நன்றாய்க் காய்ந்து கொண்டிருந்தது. அம்பலவன் வேளானையும், இரண்டொரு காவல் வீரர்களையும் தவிர இடையாற்று மங்கலம் மாளிகையில் வேறு யாரும் இல்லை.

"சேந்தா! இப்போது இந்த இடம் மயானம் போல் அமைதியாயில்லை?" என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே அவர் கேட்டார். அவன் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான். அந்தச் சமயத்தில் அம்பலவன் வேளான் வந்து அவர்களெதிரே வணங்கி நின்றான்.

"வேளான்! நீ உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுப் போ. அங்கே மகாராணியோடு குழல்வாய்மொழி தங்கியிருக்கிறாள். நான் அழைத்து வரச் சொன்னதாக உடனே அவளை அழைத்து வா" என்று மகாமண்டலேசுவரர் கட்டளையிட்டார். அவரே குழல்வாய்மொழியை மகாராணியோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு ஏன் இப்போது இவ்வளவு அவசரமாக அழைத்து வரச் சொல்கிறாரென்று விளங்காமல் சேந்தன் திகைத்தான். அவர் கட்டளை கிடைத்தவுடன் வேளான் புறப்பட்டு விட்டான். மகாமண்டலேசுவரர் சேந்தன் பின் தொடர, மாளிகைக்குள் போய் ஒவ்வோர் இடமாக அன்று தான் புதிதாகச் சுற்றிப் பார்ப்பவர் போல் சுற்றிப் பார்த்தார். நந்தவனத்துக்குப் போய் ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கொடியாக நின்று நோக்கினார். அவருடைய நோக்கம் என்னவாக இருக்குமென்று சேந்தனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையில் மேல்மாடத்து நிலா முற்றத்தில் உயர்ந்த இடத்தில் ஏறி நான்கு புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அப்போதும் மகாமண்டலேசுவரர் சிறு குழந்தை மாதிரி கண்கலங்கி நிற்பதைச் சேந்தன் கண்டான். அவனால் பொறுக்க முடியவில்லை. சகலத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அந்த அரிய மலை கண்கலங்கி நிற்பதைக் காணப் பொறுக்காமல், "சுவாமி! மறுபடியும் இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னியுங்கள். உங்கள் செயல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று அழுகையின் சாயை பதிந்த குரலில் கேட்டான் சேந்தன். மெதுவாகத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்து முன் போலவே சிரித்தார் அவர். "சேந்தா! நீ மிகவும் நல்லவன்" என்று அவன் கேட்ட கேள்விக்குத் தொடர்பின்றிப் பதில் வந்தது அவரிடமிருந்து.

சிறிது நேரத்தில் இருவரும் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கி வந்தனர். "சேந்தா நீ போய் நந்தவனத்திலிருந்து எத்தனை வகை மலர்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் குடலை நிறைய கொய்து கொண்டு வா. நான் போய் நீராடி வருகிறேன்" என்று கூறிச் சேந்தனை நந்தவனத்திற்கு அனுப்பிவிட்டு பறளியாற்றை நோக்கி நடந்தார் மகாமண்டலேசுவரர். குழந்தைத்தனமாக வெகுநேரம் துளைந்து முங்கி முழுகி நீராடினார். ஈரம் புலராத ஆடையோடு இடையாற்று மங்கலம் மாளிகையிலிருந்த சிவன் கோயில் வாயிலுக்கு வந்தார். சேந்தன் குடலை நிறையப் பல நிறப் பூக்களோடு எதிரே வந்து நின்றான். அவற்றை வாங்கிக் கொண்டு ஆலயத்துக்குள் சென்றவர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. மேலாடையை அரையில் பயபக்தியோடு கட்டிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தான் சேந்தன். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. சிவலிங்கத்திற்கு முன்னால் மகாமண்டலேசுவரர் தியானத்தில் அமர்ந்திருந்தார். சற்றே மூடிக் குவிந்திருந்த அவருடைய விழிப் பள்ளங்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தம் சிரத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த முடியைக் கழற்றி மலர்களோடு சிவலிங்கத்தின் பீடத்தில் இட்டிருந்தார் அவர். சேந்தன் அதைக் கண்டு மெய்யும், மனமும் குழைத்து உரோம புளகமெய்தி, கண்ணீரரும்ப நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ அவன்? தன்னை மறந்து நின்று கொண்டே இருந்தான்.

மகாமண்டலேசுவரர் தியானங் கலைந்து எழுந்து நின்றார். அப்போது தான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் அவருடைய முகத்தில் தெய்விகமானதொரு ஒளி மலர்ந்து இலங்கியது. அந்த ஒளியின் மலர்ச்சியில் அறிவின் அகங்காரம் எரிந்து சாம்பலாகி விட்டது போல் திருநீறு துலங்கியது நெற்றியில்.

"சேந்தா! மகாமண்டலேசுவரரை, அதோ அந்த இடத்தில் கழற்றி வைத்து விட்டேன். இனி என் தலையில் யாரும் கல்லெறிய மாட்டார்கள்" என்று சிவலிங்கத்தின் பீடத்தை சுட்டிக்காட்டிச் சொன்னார் அவர். அப்போது அவருடைய முகத்தில் மலர்ந்த சிரிப்பில் கருணை பூத்திருந்தது. சேந்தன் பேசும் உணர்விழந்து நின்றான்.

"என்னோடு வா!" என்று அவனைக் கைப்பற்றி அழைத்துச் சென்று சிவ ஆலயத்துக்கு முன் குறட்டில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டுத் தாமும் எதிரே உட்கார்ந்தார். அப்போது ஒளி மங்கி இருள் சூழ ஆரம்பித்திருந்த சமயம். காற்று இதமாகக் குளிர்ந்து வீசிக் கொண்டிருந்தது. சிவாலயத்துக்குள்ளிருந்து அகிற்புகையின் மணமும் மலர்களின் வாசனையும் கலந்து வெளிவந்து பரவின. அந்த அற்புதமான சூழலில் இடையாற்று மங்கலம் நம்பியின் குரல் சேந்தனை நோக்கி ஒலித்தது.

"சேந்தா, கேள்! நீயும் உன் மனமும் எந்தப் பேரறிவின் முன்னால் பணிந்து வீர வணக்கம் செலுத்தி வருகிறீர்களோ அந்த அறிவு இப்போது அழிந்து விட்டது. அல்லது தன்னை அழித்துக் கொண்டு விட்டது என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள். கயிற்றால் கட்டப்பட்டுக் கையும் காலும் ஆடும் மரப்பாவை கயிற்றின் இணைப்பறும் போது ஆட்டமற்றுப் போவது போலும் நம் வினைகளின் கழிவு காலத்தில் அறிவும் மனிதனுக்குப் பயன்படுவதில்லை. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள எனக்கு இத்தனை காலம் வாழ்ந்து பார்க்க வேண்டியிருந்தது, அப்பா! அறிவு அளவற்றுப் பெருகிக் கூர்மையாகும் போது அதை நமக்களிக்கும் தெய்வத்தை நோக்கிச் செலுத்தும் பக்தியாக மாற்றிக் கொண்டு விட வேண்டும். அதை நான் செய்யத் தவறி விட்டேன். கத்தியை நீட்டிப் பயமுறுத்தும் வழிப்பறியாளனைப் போல் என் அறிவைப் பிறர் அஞ்சும் கருவியாக்கினேன். அளவற்ற அறிவின் கூர்மைக்கு எதிரிகளும், பொறாமைப்படுபவர்களும் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் அதைப் பக்தியாக மாற்றிக் கொண்டு விட வேண்டும். நான் இறுமாந்து, செம்மாந்து திரிந்தேன். என் கண் பார்வையால் மனிதர்களை இயக்கினேன். நல்வினை துணை நின்ற வரையில் என் அறிவு பயன்பட்டது. தளபதியும், கழற்கால் மாறனாரும் என் மேல் அசூயைப் படத் தொடங்குகிற சமயத்திலேயே என் நல்வினையின் விளைவு குன்ற ஆரம்பித்து விட்டது.

"நான் சிறைப்படுத்தி வைத்த தளபதி தப்பி வந்தான். நான் தந்திரமாக அடக்க எண்ணிய ஆபத்துதவிகள் தலைவனோடு சேர்ந்து கொண்டான். நான் மறைக்க விரும்பிய பகவதியின் மரணத்தைத் தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனுமே கேட்டுத் தெரிந்து கொண்டு என் மேல் கல்லெறிந்து விட்டு ஓடினார்கள். உங்கள் கப்பலில் உங்களோடு தற்செயலாக மாறுவேடத்தில் வந்து தன் திமிரால் இறந்து போன பகவதி என் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டாளென்றே தளபதி நினைத்து விட்டான். என் நல்வினை கழிகிற காலம் வந்ததனால்தான் அவன் மனத்தில் இந்த நினைவு உண்டாயிற்று. இப்போது அவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களும் ஒன்று சேர்ந்து என்னை அழிக்க முயன்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அதை எதிர்த்துச் சூழ்ச்சி செய்ய என் அறிவுக்கு இப்போது ஆற்றலில்லை. நல்வினைப் பயனை அது இழந்து விட்டது. ஒவ்வொருவருடைய அறிவுக்கும் 'ஆகூழ்' (வளர்ச்சி), 'போகூழ்' (அழிவு) என இரண்டு நிலைகளுண்டு. எனக்கு இப்போது போகூழ் நிலை. என் அறிவு இனிமேல் பயன்படாது. என் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயப்படுகிறவர்கள், என் நெஞ்சுக்குக் குறிவைத்துக் கத்தியை ஓங்கவும், தலையில் கல்லெறியவும் துணிந்து விட்டார்களென்றால், என் அறிவு அவர்களைத் தடுக்கும் நல்வினைத் துணையை இழந்துவிட்டது என்றுதான் பொருள். அதன் விளைவாக இந்தத் தென்பாண்டி நாட்டுக்கே துன்பங்களை வளர்த்து விட்டேன் நான். பக்தியாக மாறாத காரணத்தால், ஞானமாகப் பழுக்காத இயல்பால் எத்தனை பிரிவினைச் சக்திகளை இங்கே உண்டாக்கிவிட்டது என் அறிவு? தளபதியின் முரட்டு வீரத்தைப் போலவே என் முரட்டு அறிவும் எவ்வளவு கெடுதலானதென்பதை இன்று உணர்கிறேன். ஆனால் இது காலங்கடந்த உணர்வு. மகாமண்டலேசுவரர் என்ற அந்தப் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்திலேயே எனக்கு இந்த உணர்வு இருந்திருந்தால் எவ்வளவோ பயன்பட்டிருக்கும். ஒழுக்கம், நேர்மை, 'அறிவின் அகந்தை அழியாத தெய்வபக்தி' இவற்றை வைத்துக் கொண்டிருந்தேன். இதுவரை இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவிலில் நான் செய்த அத்தனை வழிபாடும் அறிவின் ஆணவத்தோடு செய்தவை. ஏனென்றால் அந்த வழிபாடுகளின் போது நான் மனமுருகிக் கண்ணீர் சிந்தியதில்லை. இன்று செய்த வழிபாடுதான் உண்மையான வழிபாடு. இன்றைக்கு வடித்த கண்ணீரில் என் அறிவுக் கொழுப்பெல்லாம் கரைந்து விட்டது. அப்பா! ஒவ்வொரு தலைமுறைகளிலும் மனிதனுக்குக் காலங்கடந்து புத்தி வருவதால் தான் விதியின் வெற்றிகள் அதிகமாகிவிடுகின்றன. சேந்தா! நான் மறுபடியும் ஒரு பிறவி எடுத்தால் அறிவாளியாகப் பிறக்க மாட்டேன். பக்திமானாகப் பிறப்பேன். பாடியும், அழுதும், தொண்டு செய்தும் என்னை அழித்துக் கொண்டு இன்பம் காண்பேன்." இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது இடையாற்று மங்கலம் நம்பியின் குரலில் அழுகை குமுறிப் பாய்ந்தது. குரல் தழுதழுத்துப் பேச்சு தடைப்பட்டது. இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் முத்துகள் உருண்டு வடிந்தன.

அதுவரை சிலைபோல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த சேந்தன், வாய் திறந்தான். "சுவாமி! இந்த விநாடியே தாங்கள் உத்தரவு கொடுத்தால் தங்கள் எதிரிகளை அழித்தொழித்து விட என்னாலான முயற்சியைச் செய்கிறேன். தாங்கள் இப்படி நைந்து மனம் புண்பட்டுப் பேசுவது நன்றாகயில்லை!" இதைக் கேட்டு அவர் பலமாக வாய்விட்டுச் சிரித்தார். "சேந்தா! நீ நன்றியுள்ள ஊழியன். ஆனால், என் எதிரிகளால் என்னென்ன சீரழிவுகள் வரப் போகின்றன என்பதை நீ உடனிருந்து காணப் போவதில்லை! அதற்குள் ஒரு மாபெரும் சன்மானத்தை - நீ கனவிலும் எதிர்பார்த்திராத சன்மானத்தை உனக்குக் கொடுத்து, உன்னிடம் நான் பட்டிருக்கும் நன்றிக் கடனைத் தீர்த்து, உன்னை இங்கிருந்து அனுப்பி விடுவேன்" என்றார்.

"சுவாமி! அப்படியெல்லாம் சொல்லி என் மனத்தைப் புண்படுத்தாதீர்கள். நன்றியுமில்லை; கடனுமில்லை. இந்த உடல் உங்களுக்குச் சொந்தம். உங்களுக்கே உழைத்துச் சாவதற்குக் கடமைப்பட்டது" என்று உருக்கமாகச் சொன்னான் சேந்தன்.

"அதெல்லாமில்லை! நான் எதை உனக்குக் கொடுக்கிறேனோ அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனென்று சத்தியம் செய்து கொடு. இந்த நாட்டு மகாராணிக்கும் குமாரபாண்டியனுக்கும் கூட நான் இவ்வளவு நன்றிக் கடன் படவில்லை. ஆனால் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன் சேந்தா!" அவர் கூறியதைக் கேட்டுச் சேந்தன் தயங்கினான். அவர் சிரித்துக் கொண்டே மேலும் கூறினார்: "பார்த்தாயா? எனது நல்வினைப் பயன் தீர்கிற காலத்தில் நீ கூட நான் சொல்கிறபடி கேட்க மாட்டேனென்கிறாயே!"

"ஐயா! சுவாமி! அந்தக் குற்றத்தை என் மேல் சுமத்தாதீர்கள். நான் நீங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் சொல்கிறபடியே கேட்கிறேன். இது சத்தியம்! இது சத்தியம்!" என்று கைகூப்பிச் சொன்னான் சேந்தன்.

"சிவன் கோவில் குறட்டில் உட்கார்ந்து என்னை வணங்கிக் கொண்டே நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உறுதிதானே? எந்தக் காரணத்துக்காகவும் நீ கொடுத்த சத்தியத்தை மீற மாட்டாயே?"

"என் மேல் இன்னும் சந்தேகமா சுவாமி?" என்று கூறிய அவனை விளக்கருகே கூட்டிக் கொண்டு போய், அவன் முகத்தை உற்றுப் பார்த்தார் அவர். சில விநாடிகள் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றவர், "சேந்தா உன் சத்தியத்தை நம்புகிறேன்" என்று தீர்மானமான குரலில் சொன்னார்.

"என் பாக்கியம்" என்றான் சேந்தன். "இப்போது கேட்டுக்கொள்! அதிர்ச்சியோ கூச்சமோ அடையாதே. நான் பட்ட நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்வதற்காக என் பெண் குழல்வாய்மொழியை உனக்குக் கொடுக்கப்போகிறேன்!"

"சுவாமி! அபசாரம்... என்ன வார்த்தை கூறினீர்கள்? மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வி எங்கே? இந்த அடிமை ஊழியன் எங்கே? நான் தகுதியற்றவன். குரூபி... மேலும் தங்கள் அருமைக் குமாரி அல்லும் பகலும் குமாரபாண்டியனின் நினைவிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அலறிக் கொண்டே, நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் வீழ்ந்து பற்றிக் கொண்டான் நாராயணன் சேந்தன்.

"அவள் குமாரபாண்டியனைக் காதலிப்பதை நான் அறிவேன். ஆயினும் என் விருப்பம் அவளை நீ ஏற்க வேண்டும் என்பதுதான். இதை மாற்ற முடியாது. எழுந்திரு!" சிரித்தவாறே கூறினார். அந்தச் சிரிப்பு! அது ஊழிக் காலத்தின் புன்னகையா?

20. தீவினை பரவுகிறது

புவன மோகினி பேயறையப்பட்டு ஓடி வருகிறவளைப் போல் ஓடி வந்ததைக் கண்டவுடன் மகாராணி, குழல்வாய்மொழி, விலாசினி எல்லோரும் திகைப்போடு விரைந்து வந்து அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

"என்னம்மா? ஏன் இப்படி நிலைகெட்டுத் தடுமாறி ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?" என்று அந்தப் பெண்ணை நிறுத்தி நிதானப்படுத்தி விசாரித்தார்கள், பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும். பயந்து வெளிறிய கண் பார்வையால் தன்னைச் சூழ்ந்து நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தாள் புவன மோகினி. மகாராணியாரையும், விலாசினியையும் பார்த்து விட்டுக் குழல்வாய்மொழியின் மேல் அவள் பார்வை திரும்பிய போது அவள் கண்கள் சுருங்கி வெறுப்புப் படர முகம் சிறுத்தது. அவளைப் பார்க்க விருப்பம் இல்லாதவள் போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விட்டாள் புவன மோகினி.

இதைக் கண்டு குழல்வாய்மொழியின் உள்ளம் அவமானப்பட்டு விட்டது போலக் கொதித்தது. புவன மோகினி என்ற சாதாரணமான வண்ணமகள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு. 'பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரப்போன புவன மோகினி உண்மையைத் தெரிந்து கொண்டு வந்து விட்டாளோ? அதனால்தான் என் முகத்தை இப்படி வெறுப்போடு பார்க்கிறாள் போலும்! ஐயோ, நான் ஏன் இந்தச் சமயத்தில் இங்கே இருக்க நேர்ந்தது? நான் மறைத்து வைத்த உண்மை என் முன்னாலேயே வெளிப்பட்டு என்னைத் தலைகுனிய வைக்க வேண்டுமா?' என்று மனத்துக்குள் எண்ணிப் பதற்றமடைந்தாள் குழல்வாய்மொழி.

"வண்ணமகளே! ஏன் இப்படிப் பதற்றமும் பயமும் அடைந்து வாய் பேசாமல் நிற்கிறாய்? நீ பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரச் சென்ற இடத்தில் என்ன நடந்தது? சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்? சொல் அம்மா?" என்று மகாராணி புவன மோகினியைக் கேட்டார். புவன மோகினி வெறுப்பும் அச்சமும் கலந்த முகபாவத்தோடு மறுபடியும் குழல்வாய்மொழியை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்துவிட்டு பதில் சொல்லத் தயங்குவது போல் நின்றாள். இனிமேலும் தான் அங்கேயே நின்று கொண்டிருந்தால் வெளிப்படையாக அவமானப்பட்டுத் தலைகுனிய நேர்ந்து விடும் என்று அஞ்சினாள் குழல்வாய்மொழி.

"உள்பக்கம் போய்விட்டு இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்" என்று ஏதோ அவசர காரியமாகச் செல்கிறவளைப் போல் சொல்லிவிட்டு மெல்ல நழுவிச் சென்றாள் குழல்வாய்மொழி. முகத்திலோ, குரலிலோ, தான் அங்கிருந்து செல்வது மற்றவர்களுக்கு அநாகரிகமாகத் தோன்றிவிடுவதற்குரிய குறிப்பே காட்டாமல் சுபாவமாகச் சொல்கிறவளைப் போல் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உட்புறமாகச் சென்றுவிட்டாள் அவள். சென்றுவிட்டாள் என்று முடித்துச் சொல்வது தவறு. செல்வது போல் போக்குக் காட்டிவிட்டு அருகேயிருந்த ஒரு கதவுக்குப் பின் மறைந்து நின்று கொண்டாள். புவன மோகினி என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு இருக்குமல்லவா? செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு விநாடிக்கு விநாடி விரைவாகத் துடிக்கும் நெஞ்சத் துடிப்புடன் கதவு மறைவில் நின்றாள் அவள்.

"இன்னும் ஏன் அம்மா தயங்குகின்றாய்? இடையாற்று மங்கலத்துப் பெண் இருக்கும் போதுதான் அவள் முகத்தைப் பார்த்துப் பேசக் கூசி மருண்டு நின்றாய்? அவளோ உள்ளே போய்விட்டாள். பயப்படாமல் நீ சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்" என்று பவழக்கனிவாயர் புவன மோகினியைத் தூண்டிக் கேட்டார்.

"பெண்ணே! இன்னும் எங்கள் பொறுமையைச் சோதித்துக் கொண்டு நிற்காதே! சொல்" என்று மகாராணியும் தூண்டவே புவனமோகினி வாய் திறந்தாள்.

"அதை நான் எப்படிச் சொல்வேன், தேவி! சொல்வதற்கே நாக் கூசுகிறது எனக்கு. கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போகிற பாதையில் மகாமண்டலேசுவரருக்கு எதிராக கலவரங்களும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பெரியவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பற்றி மிகக் கேவலமான முறையில் பேசிக் கொள்கிறார்கள். குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் ஈழத்துக்குப் பயணம் செய்த கப்பலில் பகவதியும் சென்றாளாம். மகாமண்டலேசுவரர் தம்முடைய சூழ்ச்சியால் அந்தப் பெண் பகவதியை ஈழ நாட்டிலிருந்து திரும்ப முடியாதபடி அங்கேயே இறக்கும்படி செய்துவிட்டாராம். தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு போகக்கூடாதென்று தடுத்துச் சிறைப்படுத்தினாராம். மகாமண்டலேசுவரருடைய காவலிலிருந்து தப்பித் தளபதியும் ஆபத்துதவிகள் தலைவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெரிய கலகக் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முரட்டுக் கொள்ளைக் கூட்டத்தைப் போல் ஆயுதபாணிகளாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். நான் தப்பி ஓடி வரத் தெய்வம்தான் துணை புரிந்தது. போகிற வழியில் இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டேன். ஆனால், இவை எவ்வளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் பலர் கூறக்கேட்ட போது நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த நிலையில் கலக்கமுற்றுப் பதறி ஓடி வந்த போது கலகக்காரரிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் உயிர் பிழைத்து வரவேண்டுமே என்ற பயம் இங்கு வந்து சேர்கிற வரை என்னை விடவில்லை. ஒரு வழியாக அரண்மனைக்கு வந்து உங்களிடமே நடந்ததைக் கூறிவிட்டேன்." பேசி முடிப்பதற்குள் புவன மோகினிக்கு மூச்சு இரைத்தது. அச்சத்தினாலும் குழப்பமான மன நிலையினாலும் சொற்கள் தடைப்பட்டு உருக்குலைந்து வெளிவந்தன. அவள் அவ்வாறு பேசி நிறுத்திய பின் அங்கு ஒரு விதமான அமைதி நிலவியது.

அவள் சொல்லி முடித்த பின்பும் சிறிது நேரம் வரையும் மகாராணிக்கும் முதியவர்களுக்கும் அவளுடைய சொற்களில் நம்பிக்கை உண்டாகவே இல்லை. மகாராணி சோகம் தோய்ந்த குரலில் கூறலானார்:

"பவழக்கனிவாயரே! இதெல்லாம் உண்மையாயிருக்கு மென்றே என்னால் நம்பமுடியவில்லையே? பகவதி எப்போது இலங்கைக்குப் போனாள்? மகாமண்டலேசுவரர் ஏன் அவளைக் கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்? தளபதிக்கும் அவருக்கும் அவ்வளவு பெரிய பகைமை இருப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே? இந்த மாதிரிச் செய்திகளையெல்லாம் மகாமண்டலேசுவரர் மேல் வெறுப்புக் கொண்ட கூற்றத் தலைவர்கள் யாராவது பொய்யாகத் திரித்து விட்டிருப்பார்களோ? இது என்ன கெட்ட காலம்? ஒரு பக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தையே முடிவு செய்து நிர்ணயிக்கும்படியான போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் இன்னொரு பக்கத்தில் இப்படி உள்நாட்டுக் குழப்பம் எழுந்தால் எவ்வளவு கேவலம்?"

"மகாராணி! நீங்கள் கூறுவது போல் எனக்கும் இதில் நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. பகவதி ஈழ நாட்டில் போய் மரணமடைந்திருந்தால் குமாரபாண்டியருக்குத் தெரியாமலா போகும்? அவ்வளவேன்? நம்மோடு இங்கேயே தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியைக் கேட்டால் எல்லா விவரமும் தானே தெரிந்து விடுகிறது. எங்கே அந்தப் பெண்ணை உள்ளேயிருந்து இப்படிக் கொஞ்சம் கூப்பிட்டு அனுப்புங்களேன். உடனே விசாரித்து விடலாம்" என்று பவழக்கனிவாயர் கூறியவுடன், "இதோ நான் போய் உடனே இடையாற்று மங்கலத்து நங்கையை உள்ளேயிருந்து கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்" என்று விலாசினி சென்றாள். அப்போது அதங்கோட்டாசிரியர் கூறினார்: "மகாராணி! நம்பிக்கை உண்டாவதும், உண்டாகாததும் நம் எண்ணங்களின் அடிப்படையைப் பொறுத்தது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாது. வெளியில் இவ்வளவு பெரிய கலவரம் எழ வேண்டுமானால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் வேண்டும்."

"காரணம் இருக்கிறதோ இல்லையோ? இவையொன்றும் நல்ல காலத்துக்கு அறிகுறியாகத் தோன்றவில்லை. மனக்கலக்கம்தான் அதிகமாகிறது" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் மகாராணி. அந்தச் சமயத்தில் குழல்வாய்மொழியைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றிருந்த விலாசினி திரும்பி வந்தாள்.

"மகாராணி! இடையாற்று மங்கலத்து நங்கையைக் காணவில்லை. அநேகமாக அரண்மனையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிப் பார்த்து விட்டேன். எங்கே போனாளென்று தெரியவில்லை" என்று திரும்பி வந்து விலாசினி கூறிய போது எல்லாரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

"உள்ளே சென்று வருகிறேன் என்று போனவள் அதற்குள் எங்கே சென்று விட முடியும்? நன்றாகத் தேடிப் பாருங்கள். அரண்மனைக்குள்ளே தான் எங்காவது இருப்பாள்!" என்றார் அதங்கோட்டாசிரியர். அவர்கள் இவ்வாறு திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனையின் பிரதான வாயிலான பராந்தகப் பெருவாயிலைக் காக்கும் காவலர்களில் ஒருவன் அங்கு வந்து வணங்கி நின்றான். அவன் மகாராணியை நோக்கிக் கூறினான்:

"சற்று முன் இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளான் என்ற படகோட்டி மகாமண்டலேசுவரரின் புதல்வியாரைச் சந்தித்து ஏதோ முக்கியமான செய்தி தெரிவிக்க வேண்டுமென அவசரமாக வந்தான்! நான் அவனை உள்ளே அனுப்புவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரின் திருப்புதல்வியாரே அந்தப் பக்கமாக வந்து விட்டார்கள். சந்தித்துப் பேசிக் கொண்டதும் அவசரமாக இடையாற்று மங்கலம் போவதாகத் தங்களிடம் கூறிவிடுமாறு என்னிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள் இடையாற்று மங்கலத்து நங்கை" என்று தெரிவித்துவிட்டுக் காவலன் போய்விட்டான்.

"மகாராணியாரைச் சந்தித்து விடைபெற்றுக் கொள்ளாமல் போவதற்கு அவ்வளவு அவசரமான காரியம் என்ன தான் வந்து விட்டதோ? இருந்தாலும் இடையாற்று மங்கலத்து நங்கைக்கு இவ்வளவு அலட்சியம் ஆகாது!" என்று உதட்டைக் கடித்துக் கொண்டு சொன்னாள் விலாசினி.

"பரவாயில்லை! அது அந்தப் பெண்ணின் சுபாவம். அதைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. புவன மோகினி வந்து தெரிவித்த செய்திகள் உண்மைதானா? என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கேட்டு என் மனம் ஒரேயடியாகக் கலங்கிப் போயிருக்கிறது. போர்க்களத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. இடையாற்று மங்கலத்துக்குச் சென்றுவிட்டுக் கூடிய விரைவில் அரண்மனைக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்ற மகாமண்டலேசுவரரை இன்னும் காணோம்" என்று மகாராணி வானவன்மாதேவியார் கூறினார்.

"மகாராணிக்கு அந்தக் கவலை வேண்டாம். புவன மோகினி கூறியவை உண்மையா, இல்லையா என்பதை இன்று மாலைக்குள் நானும் அதங்கோட்டாசிரியர் பிரானும் விசாரித்துக் கூறிவிடுகிறோம்" என்று உறுதி தெரிவித்த பவழக்கனிவாயர் ஆசிரியரையும் அழைத்துக் கொண்டு அப்போதே வெளிக் கிளம்பினார். ஒரு நினைவிலும் மனம் பதியாமல் அவர்கள் உண்மையை விசாரித்துக் கொண்டு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் மகாராணி. விலாசினியும் புவன மோகினியும் உடனிருந்து ஆறுதல் தோன்றப் பேசிக் கொண்டிராவிட்டால் அன்றைய தினம் மகாராணிக்குத் தன் நினைவு தடுமாறிப் பித்துப் பிடித்திருக்கலாம். அந்த அளவுக்கு மனம் குழம்பியிருந்தது.

அந்தி மயங்கிய சிறிது நேரத்துக்குப் பின் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் என்ன கூறப் போகிறார்களோ என்று அறியப் பதை பதைத்துக் கொண்டிருந்தது மகாராணியின் நெஞ்சம். திரும்பி வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ தென்படவில்லை. வாட்டமே மிகுந்திருந்தது.

"மகாராணி! காலையில் புவன மோகினி வந்து கூறியவற்றில் பொய் எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலகம் விளைவிப்பதற்குப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்களும், தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், இந்தக் கலகக் கூட்டத்துக்கு முதன்மையாளர்களாயிருக்கிறார்கள். தளபதியின் தங்கை ஈழ நாட்டில் இறந்தது உண்மைதானாம். அதற்கும், தளபதி போர்க் களத்துக்குப் போய்த் தலைமை தாங்கிப் போர் செய்ய முடியாமற் போனதற்கும் மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிதான் காரணமென்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.

"பொய்! முழுப் பொய்! நான் இவற்றை நம்பவே மாட்டேன். அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்" என்று ஆவேசமுற்றவர் போல் கூச்சலிட்டார் மகாராணி. மற்றவர்கள் அவரிடம் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

மகாராணியே மீண்டும் பேசினார். "நான் இப்போதே இடையாற்று மங்கலத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன். அவரைப் பார்த்துக் கேட்கிறேன். அப்போதாவது உண்மை தெரிகிறதா, இல்லையா என்று பார்க்கிறேன்."

"எங்கும் கலகக்காரர்கள் ஆயுதங்களோடு திரிகிற இச்சமயத்தில் தாங்கள் தனியே இடையாற்று மங்கலம் புறப்படுவது கூடாது" என்று எல்லோருடைய குரல்களும் ஒன்றாக எழுந்து ஒலித்து மகாராணியைத் தடுத்தன. மகாராணி அதைக் கேட்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்ததும், புவன மோகினியை உடன் அழைத்துக் கொண்டு சிவிகையில் இடையாற்று மங்கலம் புறப்படுவதற்கு உறுதி செய்து கொண்டு விட்டார் அவர். அந்தப் பிடிவாதத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் ஆசிரியரும், பவழக்கனிவாயரும், விலாசினியும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்களையெல்லாம் இதே நிலையில் விட்டு விட்டு மறுபடியும் போர்க்களத்துக்குச் சென்றால், அங்கே குமாரபாண்டியனின் நிலையைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விடலாம்.

நள்ளிரவில் படைவீரர்களின் பாசறைகள் இருந்த பகுதியில் கலவரமும் குழப்பமும் எழுந்ததாகச் சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? "படை வீரர்களுக்குள் ஏதாவதொரு சாதாரணமான தகராறு உண்டாயிருக்கலாம். அதை நாமிருவரும் போய் உடனே தீர்த்து விடலாம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து சென்ற குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அங்கே போய்ப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்கள்.

படை வீரர்களல்லாத வெளி மனிதர்கள் பாசறைப் பகுதிகளில் வந்து வீரர்களைக் கூட்டம் கூட்டி ஏதேதோ கூறி மனத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த இடத்தை அணுகியவுடன் ஒரே எதிர்ப்புக் குரல்களாக எழும்பின.

"மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியமாட்டேன்" என்றது ஒரு குரல்.

"தளபதி வல்லாளதேவர் வராவிட்டால் நாளையிலிருந்து களத்தில் இறங்கிப் போர் செய்ய மாட்டோம்!" என்றது மற்றொரு குரல். தொடர்ந்து அதே இரண்டு எதிர்ப்பு வாக்கிய ஒலிகள் நூற்றுக்கணக்கில் பெருகி ஒலித்தன. எந்தக் காரியங்களுக்காகப் பயந்து மகாமண்டலேசுவரர் தன்னிடம் வாக்குறுதிகள் வாங்கினாரோ அவை பயனில்லாமற் போய்விட்டதைக் குமாரபாண்டியன் அந்த நள்ளிரவில் அங்கு கண்டான்.

21. பொருள்மொழிக் காஞ்சி

சேந்தன் மகாமண்டலேசுவரரின் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தான்; கதறினான். அழுது அலறினான். தொழுது புலம்பினான். "சுவாமி! நான் ஒரு வகையிலும் தங்கள் குமாரிக்குத் தகுதியற்றவன். அழகும், இளமையும் நிறைந்த தங்கள் பெண்ணின் இன்பக் கனவுகள் என்னால் சிதையக் கூடாது" என்றெல்லாம் அவன் கூறிய வார்த்தைகளை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

"அதிகம் பேசாதே! நீ எனக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். நான் கொடுப்பதை வாங்கிக் கொண்டு தான் ஆகவேண்டும். என் பெண்ணின் கைகளை ஒரு நாட்டின் இளவரசனிடம் பிடித்துக் கொடுப்பதை விட உனக்குக் கொடுப்பதில் ஆயிரம் மடங்கு இன்பமடைகிறேன் நான். ஒரு காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்துக் கொண்ட பின் மாற்றவே மாட்டேன்! எனக்காக நீ இன்று வரை அடிமை போல் உழைத்திருக்கிறாய். பொருளை வாரிக் கொடுத்து மட்டும் ஈடு செய்ய முடியாத நன்றி இது" என்றார் மகாமண்டலேசுவரர்.

சேந்தன் அதற்கு மேல் அவருடைய கட்டளையை மறுத்துப் பேசும் சக்தி இழந்தான். சிவன் கோவில் குறட்டில் ஒரு தூண்டில் கல்லோடு கல்லாகச் சமைந்து போய் உட்கார்ந்து விட்டான். தாங்கிக் கொள்ள முடியாத சோதனையைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றே அந்த இரவு அவன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்த்ததா? தங்கத்துக்கு இரும்பால் பூண் பிடிக்கிறது போல் செல்வச் செருக்குடன் கூடிய இறுமாப்பு நிறைந்த குழல்வாய்மொழிக்குத் தான் தகுதியற்றவன் என்பது தோன்றித் தோன்றி நினைவு நெருப்பாக அவன் உள்ளத்தை வாட்டியது. 'செழிப்பும், கொழிப்புமாக உயர்ந்து நிற்கும் தங்கச் சிலை போன்ற குழல்வாய்மொழி எங்கே? நேற்று வரை அவளை இடையாற்று மங்கலத்து இளவரசியாகக் கருதி ஊழியனைப் போல் பணிபுரிந்த நான் எங்கே? அவளோ நானோ இப்படி ஒரு நினைவைக் கனவில் கூட நினைத்திருக்க முடியாதே! மகாமண்டலேசுவரர் ஏன் இப்படிப் பிடிவாதமாகச் சோதனை செய்கிறார்' என்று எண்ணியவாறே நெடுநேரம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். இரவு நீண்டு வளர்ந்தது. சேந்தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு இருளில் எதிரே பார்த்தான். மகாமண்டலேசுவரர் உட்கார்ந்த இடத்திலேயே தூணில் சாய்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மகுடத்தை எடுத்த பின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வாறு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன். அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் கிரங்கி இளைத்துத் தளர்ந்து விட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, "சுவாமி!" என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, "என்ன வேண்டும், சேந்தா?" என்று புன்னகையோடு கேட்டார்.

"தாங்கள் சாப்பிட வேண்டும்."

"சேந்தா! நம்முடைய வள்ளுவர் பெருமான் இந்தச் சமயத்தில் நான் நினைத்துப் பார்ப்பதற்கென்றே ஓர் அழகான குறளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்."

"என்ன குறள் சுவாமி, அது?"

"'மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து'

என்பது தான் அப்பா அந்தக் குறள். இனிமேல் நான் சாப்பிடுகிற சாப்பாடு அடுத்த பிறவியில் இருக்கும். என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ போய்ப் பேசாமல் தூங்கு."

சேந்தன் இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் அழுதுவிட்டான்.

"அழாதே! நீ ஏன் அழுகிறாய்? ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு நடுவே தன் தாய்ப் பசுவை இனம் கண்டு அடையும் கன்றுக் குட்டி போல் வினைப் பயன் யாரையும் தவறவிடாது. மேலே வீசி எறியப்பட்ட பொருள் கீழே வீழ்ந்துதான் ஆக வேண்டும். இதுவரையில் நல்வினைகள் என்னை மேலே வீசி எறிந்திருந்தன. நான் உயர்ந்த நிலையில் இருந்தேன். இப்போது அவை கைவிட்டு விட்டன. அதனால் நான் வீழ்ந்து விட்டேன்."

"சுவாமி! இப்படியெல்லாம் பேசாதீர்கள். நீங்கள் பேசப் பேச எனக்கு அழுகை குமுறிக் கொண்டு வருகிறது."

"தான் அறியுமுன் உலகத்துக்குத் தன் அனுபவ உண்மைகளில் முடிந்தவற்றை மொழிந்து விட்டுப் போவது நம் தமிழ்நாட்டு மரபு அப்பா! அதைப் 'பொருள்மொழிக் காஞ்சி' என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக் கொள். போ! நீ போய்த் தூங்கு! என்னைக் கொஞ்சம் தனிமையில் மூழ்க விடு."

சேந்தன் எழுந்து போனான். தூக்கம் வரக்கூடிய நிலையா அது? அத்தனை ஆண்டுகளாக அந்த மேதையின் நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை மனத்தில் அசை போட்டுக் கொண்டே தூண்டிலில் விழுந்து கிடந்தான் அவன். கண்ணீர், கோவில் குறட்டை ஈரமாக்கியது.

விடிந்தது. முதல் நாள் மாலை செய்தது போலவே பறளியாற்றில் போய் நெடுநேரம் நீராடிவிட்டு ஈர உடையோடு வந்தார் மகாமண்டலேசுவரர். பிறகு சிவன் கோவிலுள் போய்த் தியானத்தில் அமர்ந்தார். சேந்தனும் நீராடிவிட்டு அவருக்குப் பூக்கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சேந்தனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்து கொடுத்தான். ஏதோ எழுதத் தொடங்கினார்.

கதிரவன் மேற்கே சாய்கிற நேரத்துக்கு குழல்வாய்மொழியோடு அம்பலவன் வேளான் அங்கே வந்து சேர்ந்தான். வருகிற போது இருவருமே பெரிய அளவில் பதற்றமும் பரபரப்பும் அடைந்திருந்தனர்.

"சுவாமி! தளபதியும் கழற்கால்மாறனாரும், ஒரு பெரிய கலகக் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை நோக்கி வெறியோடு தாக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் தங்கள் புதல்வியாரும் அவர்களிடம் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்ததே தெய்வத்துணையால்தான்" என்று அம்பலவன் வேளான் கூறியதைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அதிர்ச்சியடைந்து விடவில்லை.

"நான் எதிர்பார்த்ததுதான். வரட்டும், விரைவாக வரட்டும்" என்று சர்வசாதாரணமாகப் புன்முறுவலோடு பதில் சொன்னார் அவர். "அப்பா மகாராணிக்குக் கூட இதெல்லாம் தெரிந்து விட்டது. புவன மோகினி என்ற பணிப் பெண் போய்ப் பார்த்துக் கொண்டு வந்து கூறினாள்" என்று குழல்வாய்மொழி சொன்னபோதும் வியப்படையவில்லை அவர்.

"பெண்ணே! உலகம் முழுவதும் தெரியட்டும். தெரிய வேண்டியதுதானே? மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது? நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது!" என்று தம் பெண்ணிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த சேந்தனையும், அம்பலவன் வேளானையும் சிறிது தொலைவு விலகிப் போய் இருக்குமாறு குறிப்புக் காட்டினார்; அவர்கள் சென்றார்கள்.

"நான் என்ன அப்பா செய்ய வேண்டும்!" என்று கேட்டாள் குழல்வாய்மொழி.

"எனக்காக நீ மகத்தான தியாகம் செய்ய வேண்டும் மகளே!"

குழல்வாய்மொழி கண்களில் நீர் அரும்ப மருண்டு தயங்கி நின்றாள். மகுடமிழந்து, கம்பீரமற்றுச் சாதாரண மனிதரைப் போல் சிவன் கோவிலில் கிடக்கும் தந்தையைக் கண்டு பிழையப் பிழியக் கண்ணீர்ச் சிந்தி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"என்னம்மா அப்படி என்னைப் பார்க்கிறாய்? இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்று தானே பார்க்கிறாய்? போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல்!"

"நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும், அப்பா?" குழல்வாய்மொழியின் குரலில் துயரம் கரகரப்படைந்து ஒலி மங்கியது.

"நான் ஒரு மனிதனுக்குத் தவிர்க்க முடியாதபடி கடன்பட்டிருக்கின்றேன், மகளே! அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்து விட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும் தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்து விட்டது. அது போலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியதுதான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்டு இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா?"

"உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அப்பா!"

"இப்போது சொன்ன வார்த்தை மெய்தானே மகளே? எனக்காக எதையும் செய்வாய் அல்லவா?"

தந்தையின் இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் குழல்வாய்மொழி விசும்பலோடு அழத் தொடங்கிவிட்டாள். "நான் எப்போது அப்பா உங்கள் சொல்லை மீறியிருக்கிறேன்? என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே?" என்று அவள் அழுகைக்கிடையே கேட்ட போது அவர் சிரித்துக் கோண்டே சொன்னார்:

"அப்படியானால் கேள்! இந்தக் கணமே குமாரபாண்டியனைப் பற்றிய உன் கனவுகளை அழித்து விடு. தன் வாழ்நாளில் எனக்காகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டு உழைத்த இந்த நன்றியுள்ள மனிதன் சேந்தனை மணந்து கொண்டு அவனோடு செல்; இது என் கட்டளை?"

"அப்பா...!" என்று அலறினாள் குழல்வாய்மொழி. அதற்கு மேல் வார்த்தைகளே எழவில்லை அவளுக்கு. அப்படியே மின்னற்கொடி போல் சுருண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள். 'கோ'வென்று கதறியழுத மகளின் தவிப்பு அவர் மனத்தை மாற்றவில்லை. "அப்பா என்னைக் கொன்று விடுங்கள். என்னால் இந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது" என்று அவள் கதறிய போது அவர் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேசுபவர் போல் அவளைத் தூக்கி நிறுத்தி முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசினார்.

"உன்னை ஏன் கொல்ல வேண்டும் அம்மா? என்னைக் கொன்று கொள்கிறேன் நான். சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்று கொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக் கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது. கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்? நீ போ. உன் விருப்பம் போல வாழு!" என்று சொல்லிவிட்டு மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடை தள்ளாடித் துவண்டது.

"நில்லுங்கள்."

நடந்து சென்றவர் நின்று திரும்பிப் பார்த்தார். குழல்வாய்மொழிதான் கூப்பிட்டிருந்தாள். அருகில் வந்து நின்று தந்தையின் முகத்தையே பார்த்தாள் அவள். விநாடிகள் உணர்ச்சிகளில் கரைந்து கொண்டிருந்தன. அவர் முகத்தையும் கண்களையும் பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் கல்லாக இருந்த ஏதோ ஓர் உணர்வின் இறுக்கம் இளகி நெகிழ்ந்தது. அடுத்த கணம் அழுக்குத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் அவள் முகபாவம் புனிதமானதொரு மாறுதல் அடைந்தது. கண்களில் உறுதியான ஒளி வந்து குடி கொண்டது.

"அப்பா! நான் சேந்தனை மணந்து கொள்கிறேன்" என்று திடமான குரலில் சொன்னாள் குழல்வாய்மொழி. அவர் ஆச்சரியத்தோடு முகமலர்ந்து அவளைப் பார்த்தார். அவளைச் சிறுகுழந்தை போல் கருதி அருகில் அழைத்துத் தழுவி உச்சிமோந்தார். "சேந்தா! இங்கே வா!" என்று உற்சாகத்தோடு அழைத்தார் அவர். சேந்தன் ஓடிவந்து வணங்கினான்.

"இந்தா! உன் மனைவியை அழைத்துக் கொண்டு போ! இருவரும் பறளியாற்றில் நீராடி வாருங்கள்..." பல நாட்கள் பழகிய காதலனை அணுகுவது போல் குழல்வாய்மொழி அவனை அணுகி வந்தாள். சேந்தன் கூசிப் பயந்து ஒதுங்க முயன்றான். அவள் விடவில்லை.

"ஒதுங்கினால் மட்டும் உறவு போகாது; வாருங்கள்!" குழல்வாய்மொழி துணிவாக அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போனாள். அந்தக் கை தன் மேல் பட்ட போது மலர்க்கொத்து ஒன்று தீண்டியது போன்ற உணர்வை அடைந்தான் சேந்தன். அவன் உடல் சிலிர்த்தது. வயிற்றுப் பசியுள்ள பிச்சைக்காரனுக்குப் பட்டுப் பீதாம்பரம் கிடைத்தது போல் அவன் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் உண்டாயின. குழல்வாய்மொழி கலகலப்பாகப் பேசிப் பழக முயன்றும் சேந்தன் கூசிக் கொண்டேயிருந்தான். அவளால் அவ்வளவு சுலபமாகத் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்ததென்று அவனுக்குப் புரியவே இல்லை.

இருவரும் நீராடி விட்டுச் சிவன் கோயில் அடைவதற்குள் இடையாற்று மங்கலம் தீவைச் சுற்றி ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. கூட்டம் கூட்டமாக ஆயுதம் தாங்கிய முரட்டு மனிதர்கள் ஓடிவந்தார்கள். மரங்களெல்லாம் வெட்டப்படும் ஓசை காதைப் பிளந்தது. ஒரே கலகம், ஓலம் தான்; கலகக் கும்பல் தீவை நெருங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குழல்வாய்மொழியையும், சேந்தனையும் சிவன் கோவிலுக்குள் அழைத்துப் போய் மலர் தூவி ஆசி கூறினார் மகாமண்டலேசுவரர். பின்பு இருவரையும் வெளியே அழைத்து வந்தார். "இங்கிருந்து போய் எங்கேயாவது நன்றாக வாழுங்கள். அது போதும். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். கலகக் கூட்டம் வந்துவிட்டது. வேறு வழியாகத் தப்புங்கள்" என்று அவர்களை அவசரப்படுத்தினார் மகாமண்டலேசுவரர்.

"அப்பா! நீங்களும் எங்களோடு வந்து விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்" என்றாள் குழல்வாய்மொழி.

"இல்லை! நான் வரப்போவதில்லை. நீங்கள் புறப்படுங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஓர் ஓலையை எடுத்து வந்து சேந்தனிடம் கொடுத்தார். "சேந்தா, எப்போதாவது முடிந்தால் இந்த ஓலையை மகாராணியிடம் கொடுத்துவிடு" என்று சொன்னவர் இருவரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்து விட்டு விருட்டென்று சிவன் கோவிலுள் நுழைந்து கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். வெறித்தனமாக கூச்சல்களோடு ஆட்கள் ஓடிவரும் ஓசை மிக அருகில் கேட்டது.

சேந்தன் குழல்வாய்மொழியை இழுத்துக் கொண்டு ஓடினான். புதர்களிலும் மரக்கூட்டங்களின் அடர்த்தியிலும் பதுங்கிப் பதுங்கி ஆற்றைக் கடந்து இரவோடு இரவாக முன்சிறைக்குப் போகிற வழியில் நடந்தார்கள் அவர்கள்.

மகாமண்டலேசுவரர் சிவன் கோயில் கதவைத் திறந்து கொண்டு வந்த போது இடையாற்று மங்கலம் மாளிகை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அழகான நந்தவனமும், வசந்த மண்டபமும் சீரழிக்கப்பட்டிருந்தன. உருக்குலைந்து சீரழிந்து எரிந்து கொண்டிருக்கும் அந்தத் தீவைப் பார்த்துக் கொண்டே கோவில் குறட்டில் நின்ற மகாமண்டலேசுவரர் கால் தளர்ந்து போனதன் காரணமாக மெதுவாக உட்கார்ந்தார். தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தொண்டைக் குழியை ஏதோ அடைத்தது. கண்கள் விழி தெரியும்படி சொருகின. வாய் கோணியது. மெல்லச் சாய்ந்து படுத்துக் கொண்டார். பின்பு எழுந்திருக்கவேயில்லை. மறுநாள் காலையில் தளபதி வல்லாளதேவனும் கழற்கால் மாறனாரும் தற்செயலாக அங்கே வந்து அவருடைய சடலத்தைக் கண்டனர்.

"மனிதர் நம்மை முந்திக் கொண்டு விட்டார்!" என்று கூறிக் கொடுமையாகச் சிரித்தவாறே அந்த உடலைப் புரட்டித் தள்ளினான் தளபதி. பழி வாங்கி விட்ட பெருமிதம் அவனுக்கு!

அருணோதயத்தின் அழகை அனுபவித்துக் கொண்டே முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை யாரோ வருகிற காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தாள்.

அவள் எதிரே நாராயணன் சேந்தனும் குழல்வாய்மொழியும் வந்து நின்று கொண்டிருந்தனர். கோதைக்கு மைத்துனனைக் கண்ட மகிழ்ச்சி பிடிபடவில்லை. "வாருங்கள், மைத்துனரே! ஓய்வாக வந்திருக்கிறீர்களே..." என்று ஆர்வத்தோடு வரவேற்றாள்.

"ஓய்வுதான்! நிரந்தரமான ஓய்வு - நெடுங்காலத்துக்கு ஓய்வு" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சேந்தன். அதற்குள் அண்டராதித்தனும் அங்கு வந்துவிட்டான். சேந்தனும் குழல்வாய்மொழியும் அண்டராதித்தனையும் கோதையையும் வணங்கி ஆசி பெற்று உள்ளே சென்றார்கள்.

22. கலகக் கனல் மூண்டது

போர்க்களத்தில் அந்த இரவில் மூண்ட கலவரங்களை அடக்கி விட முயன்றனர் குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும். கலகம் அடங்கவில்லை. மேலும் மேலும் பெருகி வளர்ந்தது. கலகத்துக்குக் காரணமான செய்திகளைப் போர்க்களத்துப் பாசறைகளில் பரப்புவதற்கு வந்த வெளியாட்கள் எல்லோரையும் இருளில் சரியாகப் பார்க்க முடியவில்லையாயினும் அதில் முக்கியமான ஒருவனைக் குமாரபாண்டியன் பார்த்துவிட்டான். அவ்வாறு பார்க்கப்பட்டவன் வேறு யாருமில்லை, ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தான்! ஆபத்துக் காலங்களில் நன்றியுணர்ச்சியோடு அரச குடும்பத்துக்கு உதவி புரிந்து பாதுகாக்க வேண்டிய அவன் இப்படிக் கலகக்காரனாக மாறியிருப்பதைக் கண்டு குமாரபாண்டியன் உள்ளம் கொதித்தான். கோட்டாற்றிலிருந்து வந்திருந்த தென்பாண்டிப் படைவீரர்களில் பெரும்பாலோர் பாசறைகளை விட்டு வெளியேறிக் கலகக்காரர்களோடு சேர்ந்து கொண்டு விட்டனர். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தத் துரோகம் நடந்தது. சாம, தான, பேத, தண்ட முறைகளில் எதனாலும் அவர்களால் அதைத் தடுக்க இயலவில்லை.

"இளவரசே! காரியம் கை மீறிப் போய்விட்டது. பார்த்துக் கொண்டே சும்மாயிருப்பதில் பயனில்லை. உடனே தளபதியைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி அரண்மனைக்கோ, மகாமண்டலேசுவரருக்கோ தூதனுப்புங்கள். தளபதி வந்துவிட்டால் இந்தக் கலகம் அடங்கிப் போகும்" என்றார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! தளபதியைப் போர்க்களத்துக்கு வரவழைத்து விடுவது அவ்வளவு எளிய காரியமல்ல. அதில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன்."

"நீங்கள் சொல்லாவிட்டாலும் நானாகச் சிலவற்றைப் புரிந்து கொண்டேன், இளவரசே! மகாமண்டலேசுவரருக்கும் தளபதிக்கும் உள்ளூரப் பெரிய பகைமை ஏதோ இருக்க வேண்டும். தளபதி இந்தப் போரில் கலந்து கொள்ள முடியாமற் போனதற்குக் கூட மகாமண்டலேசுவரர் காரணமாயிருக்கலாம். அதனால் தான் இந்தக் கலகமே மூண்டிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது."

"சக்கசேனாபதி! உங்களுக்குத் தெரிந்தது சிறு பகுதிதான். ஆனால் அவை சரியான அனுமானங்களே! அதற்கு மேற்பட்டவற்றைத் தெரிவிக்க ஆவல் இருந்தும் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்ட காரணத்தால் இயலாத நிலையில் இருக்கிறேன்."

"வேண்டாம்! அவற்றை தெரிந்து கொள்ளும் அவசியம் எனக்கு இப்போது இல்லை. ஆனால் இந்தக் கலகத்தைத் தடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தளபதி எங்கேயிருந்தாலும் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு வரவழைக்கச் செய்யுங்கள்."

"நான் மகாமண்டலேசுவரருக்கும் என் அன்னைக்கும் இங்குள்ள நிலைமையை விவரித்து உடனே திருமுகங்கள் எழுதுகிறேன்."

"சொல்லிக் கொண்டே நிற்காதீர்கள், இளவரசே! உடனே உங்கள் பாசறையில் போய் அமர்ந்து எழுதத் தொடங்குங்கள். நான் இங்கே சிறிது நேரம் கவனித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி குமாரபாண்டியனைப் பாசறைக்கு அனுப்பி விட்டுத் தாம் மட்டும் தனியே இருளில் நடந்தார் சக்கசேனாபதி. கலகத்தின் காரணம் பற்றிக் குமாரபாண்டியர் தம்மிடம் கூறாமல் மறைக்கும் மர்மச் செய்திகள் எவையோ அவற்றைத் தெரிந்து கொண்டு விடவேண்டுமென்று கிளம்பி விட எண்ணினார். தமது தோற்றத்தைத் தென்பாண்டி நாட்டின் சாதாரணமான ஒரு படைவீரனின் தோற்றம் போல எளிமையாக்கிக் கொண்டு பாசறைகளைப் புறக்கணித்துக் கலகக்காரர்களோடு ஓடிப்போன பாண்டியப் படையைப் பின்பற்றி அவரும் சென்றார். தாமும் அவர்களில் ஒருவனைப் போலக் கலந்து கொண்டு அவர்களோடு பேச்சுக் கொடுத்துப் பார்த்ததிலேயே எல்லாக் காரணங்களும் அவருக்கு ஒருவாறு விளங்கிவிட்டன. குமாரபாண்டியர் சொல்லத் தயக்கியவற்றையும் அவர் தெரிந்து கொண்டார். எல்லாம் தெரிந்து கொண்டு திரும்பி வந்த அவர் நேரே குமாரபாண்டியனின் பாசறைக்குச் சென்றார். பாசறையில் தீப ஒளி எரிந்து கொண்டிருந்தது. மகாமண்டலேசுவரருக்கும் தன் தாய்க்கும் எழுத வேண்டிய திருமுக ஓலைகளை எழுதி விட்டுக் காத்திருந்தான் குமாரபாண்டியன்.

"வாருங்கள் சக்கசேனாபதி! நான் வந்து எழுத வேண்டிய அவசர ஓலைகளை எழுதிவிட்டு இவ்வளவு நேரமாக நீங்கள் வருவீர்களென்று விழித்துக் கொண்டு காத்திருக்கிறேன். அதற்குள் நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?" என்று தன்னை நோக்கிக் கேட்ட குமாரபாண்டியனின் முகத்தைச் சிரித்தவாறே கூர்ந்து பார்த்தார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! இந்த நெருக்கடியான நிலைமையில் என் முகத்தைப் பார்த்தால் சிரிப்புக்கூட வருகிறதா உங்களுக்கு?"

"உங்கள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கவில்லை இளவரசே! சில முக்கியமான செய்திகளை இவ்வளவு நேர்ந்த பின்பும் என்னிடம் கூடச் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்."

"அப்படி எவற்றை நான் உங்களிடம் மறைத்தேன்?"

"சொல்லி விடட்டுமா?"

"நீங்கள் அவற்றைத் தேடித் தெரிந்து கொண்டிருந்தால் சொல்லித் தானே ஆக வேண்டும்?" என்று சோர்ந்த குரலில் சொன்னான் குமாரபாண்டியன்.

"மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சியில்தான் பகவதி ஈழ நாட்டில் இறந்து போனாளென்று கலகக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் அவருடைய சூழ்ச்சியால் படைகள் போருக்குப் புறப்படுகிற சமயத்தில் தளபதி மட்டும் இரகசியமாகச் சிறை வைக்கப்பட்டானாம். அதே போல் ஆபத்துதவிகள் தலைவனையும் சூழ்ச்சி செய்து சிறைப்படுத்த முயன்றாராமே அவர்? நீங்கள் கப்பலில் வந்து விழிஞத்தில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் உங்களைத் தனியே அழைத்துக் கொண்டு போய், 'பகவதியின் மரணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது' என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாராமே? தளபதியை இரகசியமாகச் சிறைப்படுத்தியிருக்கிற அந்தரங்கத்தையும் சொல்லி அதையும் யாரிடத்திலும் கூற வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக் கொண்டாராம். ஆனால், அதே சமயத்தில் இருளில் அதே இடத்தில் நின்று கொண்டு, காவலைத் தாண்டி தப்பி ஓடிவந்த தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், நீங்களும் மகாமண்டலேசுவரரும் பேசியவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு கல்லைக் கூட மகாமண்டலேசுவரர் மேல் தூக்கி எறிந்தார்களாமே?" இவ்வாறு கூறிக் கொண்டே வந்த சக்கசேனாபதியை இடைமறித்து, "இவற்றையெல்லாம் இப்போது உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று குமாரபாண்டியன் கேட்டான்.

"யாரும் என்னிடம் வந்து கூறவில்லை. கலகக்காரர்களுக்கு நடுவே போய்க் கலந்து கொண்டு அவற்றைத் தெரிந்து கொண்டேன்!" என்றார் சக்கசேனாபதி.

"தெரிந்து கொண்டவை இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?"

"நிறைய உண்டு! மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளையெல்லாம் தங்களிடம் கூறி தங்களை அழைத்து வருவதற்காகவே தன் தங்கை பகவதியை இலங்கைக்கு மாறு வேடத்தில் அனுப்பினானாம் தளபதி. அவள் தங்களோடு திரும்பி வரும் காட்சியைக் காணவே காவலிலிருந்து தப்பி விழிஞத்துக்கு ஓடி வந்து பார்த்தானாம். அவன் தங்கை இறந்த செய்தியைக் கேட்டவுடன் அவனுக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்பட்டதாம். போதாதக்குறைக்குத் தாங்களும் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிக்கு இணங்கி அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்தது அவனுக்குச் சினம் மூட்டியதாம். அவனும் ஆபத்துதவிகள் தலைவனும் போய்க் கழற்கால்மாறனாரைப் பார்த்தார்களாம். எல்லோருமாக ஒன்று சேர்ந்து முயன்று ஒரு பெரிய கலகக் கூட்டத்தைத் திரட்டினார்களாம். அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தளபதியும் கழற்கால் மாறனாரும் தலைமை தாங்கிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை வளைத்துத் தாக்குவதற்குப் போயிருக்கிறார்களாம். மற்றொரு பகுதியைத்தான் ஆபத்துதவிகள் தலைவன் இங்கே கூட்டிக் கொண்டு வந்து படை வீரர்களை மனம் மாற்றுவதற்கு முயன்றதை நாம் பார்த்தோமே?"

"சக்கசேனாபதி! தளபதியின் தங்கை இறந்து போனதற்கு மகாமண்டலேசுவரர் எந்த விதத்திலும் காரணமில்லை என்பது உங்களுக்கும் தெரியும்!"

"இப்போதுதான் உறுதியாகத் தெரியும். ஏனென்றால் நீங்கள் ஈழ நாட்டிலிருந்து கப்பலில் புறப்படுகிறவரை காட்டில் இறந்து போன பெண் பகவதியா, இல்லையா என்ற சந்தேகத்திலிந்து மீளவில்லையே. அதனால் எனக்கும் அது உறுதியாகத் தெரியாமற் போய்விட்டது, இளவரசே!"

"சக்கசேனாபதி! தமனன் தோட்டத்துத் துறையிலிருந்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் விசாரித்து இறந்த பெண் பகவதிதான் என்று நான் உறுதியாகத் தெரிந்து கொண்டு விட்டேன். அதனால் என் கடற்பயணம் முழுவதும் சோகத்திலேயே கழிந்தது. விழிஞத்தில் வந்து இறங்கியதும் அந்தத் துயர உண்மையை எல்லோரிடமும் சொல்லிக் கதறிவிட வேண்டுமென்றிருந்தேன். மகாமண்டலேசுவரர் வாய்ப்பூட்டுப் போட்டு விட்டார். அதன் காரணமாகத்தான் நீங்களாகத் தெரிந்து கொள்கிற வரையில் உங்களிடம் கூடச் சொல்ல முடியாமல் போயிற்று. இவ்வளவு பெரிய கலகங்களெல்லாம் அதன் மூலம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை!"

"நாம் எதிர்பார்க்கிறபடியே எல்லாம் நடந்தால் விதி என்று ஒன்று இல்லாமலே போய்விடும் இளவரசே!"

"பாசறையிலுள்ள படை வீரர்களை மனம் மாற்றிக் கலைத்துக் கொண்டு போகிற அளவுக்குத் தளபதி வல்லாளதேவன் கெட்டவனாக மாறுவானென்று நான் நினைக்கவே இல்லை!"

"எவ்வளவு நல்ல மனிதனையும் சந்தர்ப்பம் நன்றி கெட்டவனாக மாற்றலாம். அந்த ஒரு மனிதனுக்காக இத்தனை ஆயிரம் படை வீரர்களும் மனம் மாறுகிறார்களே! அதற்கென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?"

"விட்டுத் தள்ளுங்கள்! உங்களுடைய ஈழத்துப் படைகளும், கரவந்தபுரத்து வீரர்களும், சேரப் படைகளும் இருக்கின்றன. தென்பாண்டிப் படைகளில் சில பத்தி வீரர்கள் போரைப் புறக்கணித்து விட்டு ஓடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து விடாது!"

"இப்படி அலட்சியமாகப் பேசுவதுதான் தவறு! ஆயிரமிருந்தாலும் சொந்தப் படைகளைப் பிரிந்து போகவிடுவது கூடாது. நீங்கள் எந்த வகையில் முயற்சி செய்வீர்களோ எனக்குத் தெரியாது. தளபதியையும் ஆபத்துதவிகள் தலைவனையும், அவர்களோடு சேர்ந்திருக்கும் கழற்கால் மாறனார் முதலியவர்களையும் நம்முடன் தழுவிக் கொள்ள வேண்டும். நம்முடைய இந்த உட்பகையை எதிர்த்தரப்பினர் தெரிந்து கொள்ள நேர்ந்தால் பின் இரண்டே நாட் போரில் அவர்கள் நம்மை வென்று விட முடியும்?"

"நீங்கள் சொல்வதெல்லாம் நியாயந்தான்! ஆனால் அவர்களைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்வது எளிதில் முடிகிற காரியமல்லவே?"

"இளவரசே! நீங்களே நேரில் போனால் இரண்டு நல்ல காரியங்கள் முடியும். தளபதி வெறிபிடித்துப் போய் இடையாற்று மங்கலத்தைத் தாக்கச் சென்றிருக்கிறானாம். அதனால் மகாமண்டலேசுவரரும் நீங்களும் சேர்ந்தே தளபதியைச் சந்தித்துச் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்து வந்து விடலாம். நீங்கள், உங்களுடைய அன்னையார், மகாமண்டலேசுவரர் மூவருமாகச் சேர்ந்து சமாதானப்படுத்துகிற போது தளபதி ஒப்புக் கொள்வான்."

"நான் போய் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஒருவராகவே இரண்டு நாளைக்குப் போரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் போய் வர இரண்டு நாட்களாகலாம்."

"ஒருவாறு இரண்டு நாட்கள் சமாளித்துக் கொள்ள முடியும். நம் படைகளின் கை தளர்ந்து பின் வாங்க நேர்ந்தாலும் மூன்றாம் நாள் காலை நீங்கள் தளபதியோடும் படைகளோடும் வரவில்லையானால் முடிவுக்கு நான் பொறுப்பில்லை."

"பயங்கரமான நிபந்தனை விதிக்கிறீர்களே, சக்கசேனாபதி!"

"அதைத் தவிர வேறு வழியில்லை, இளவரசே! நீங்கள் தளபதியைச் சந்தித்து அழைத்து வரப் போகாவிட்டால் அதை விட விரைவிலேயே நாம் தோற்றுவிடுவோம்."

"இந்த வார்த்தையைச் சொல்லத்தான் இவ்வளவு படைகளோடு கடல் கடந்து வந்தீர்களோ? நீங்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கை இதுதானா?"

"உங்கள் நாட்டின் உட்பகைக் குழப்பங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? புறப்பட்டுப் போய் உட்பகைக் கலகங்களைத் தவிர்த்து ஒற்றுமையை ஏற்பாடு செய்ய முயன்று பாருங்கள். ஏற்பாடு முடிந்தால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகை வர என்னால் முடிந்த மட்டும் இந்தப் போர்க்களத்தைச் சமாளிக்கிறேன். அதற்குள் வர இயலாமற் போனால் பின்பு நீங்கள் இங்கு வரவே வேண்டாம். நானும் என்னோடு வந்த வீரர்களில் உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடிக் கப்பலேறி விடுவோம்!"

"நீங்கள் இப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம்?"

"அந்த அர்த்தத்தை வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? உங்களுக்குப் புரியவில்லையா?"

"புரிகிறதே! தோற்று விடுவேன் என்கிறீர்கள்."

"அதை ஏன் என் வாயாற் சொல்ல வேண்டும்? ஒரு வேளை நீங்கள் சமாதானப்படுத்தித் தளபதி வல்லாளதேவனை அழைத்து வந்தால் நமக்கே வெற்றியாக முடியலாம்!"

"சக்கசேனாபதி! அப்படியானால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகை வரை இந்தப் போர்க்களத்தில் தோல்வி நிழல் நம் பக்கம் படர விடாமலிருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?"

"ஆகா! உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்."

"நான் உங்களை நம்பிப் போய்விட்டு வரலாமா?"

"தாராளமாகப் போய்வரலாம்!"

"யாரங்கே! என்னுடைய பிரயாணத்துக்குக் குதிரை கொண்டு வா!" என்று குமாரபாண்டியன் பாசறைக்குள்ளிருந்து தன் ஏவலனைக் கூவிக் கட்டளையிட்டான். குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் வெளியே வந்து ஏறிக் கொண்டான். "சக்கசேனாபதி! வருகிறேன். விதி இருந்தால் சந்தித்து வெற்றி பெறுவோம்" என்று பாசறை வாயிலில் நின்றவரிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு குதிரையைச் செலுத்தி இருளில் மறைந்தான் குமாரபாண்டியன்.

23. மாதேவியின் கண்ணீர்

மகாமண்டலேசுவரரைப் பற்றி யார் சொல்லியும் அதை நம்பாமல் பொழுது விடிந்ததும் இடையாற்று மங்கலத்துக்குப் புறப்படுவதற்கிருந்த மகாராணி, அப்படிப் புறப்பட வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. பொறி கலங்க வைக்கும்படியான அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மகாராணி வானவன்மாதேவி மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பலவித மனக் குழப்பங்களாலும், முதல் நாளிரவு நன்றாக உறக்கம் வராததாலும், தளர்ந்து போயிருந்த அவருக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

'இடையாற்று மங்கலத்தையும், அதைச் சுற்றியுள்ள அழகான இடங்களையும், கலகக்காரர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட்டார்கள். முதல் நாள் இரவு முழுவதும் மகாமண்டலேசுவரர் யார் கையிலும் அகப்படவில்லையாம். காலையில் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவில் குறட்டில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்களாம்' என்று கேள்விப்பட்ட இந்தச் செய்திதான் மகாராணியை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டது.

புவன மோகினியும், விலாசினியும், மகாராணியின் உடலைத் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிந்து நினைவு வருவதற்கேற்ற சைத்தியோபசாரங்களைச் செய்தனர். பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வந்த அரண்மனை மெய்க்காவற் படை ஒற்றனை மேலும் சில கேள்விகளைத் தூண்டிக் கேட்டார் பவழக்கனிவாயர்.

"நேற்று காலையில் தானே அந்தப் பெண் குழல்வாய்மொழி இங்கிருந்து புறப்பட்டு இடையாற்று மங்கலத்துக்குப் போனாள்? அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டாளோ? அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே?" என்று பவழக்கனிவாயர் கேட்ட கேள்விக்கு ஒற்றன் கீழ்க்கண்டவாறு மறுமொழி கூறினான்.

"சுவாமி! மகாமண்டலேசுவரரின் புதல்வியும் அந்தரங்க ஒற்றன் நாராயணன் சேந்தனும் கலகக்காரர்கள் கையில் சிக்கவில்லையாம். அவர்களையும் எப்படியாவது பிடித்து விடுவதென்று கலகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!" இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்த பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. "மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது! நீங்களும் போய் உடன் இருங்கள்" என்று புவன மோகினியையும் விலாசினியையும் அனுப்பினார் அதங்கோட்டாசிரியர். அந்தப் பெண்கள் இருவரும் மகாராணி வானவன்மாதேவியாரின் அறைக்குள் தயங்கித் தயங்கிச் சென்றார்கள்.

அறை நடுவே உட்கார்ந்து பச்சைக் குழந்தை போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மகாராணி. அவர் மடியில் ஒரு பழைய ஓலை கிடந்தது. விலாசினியையும் புவன மோகினியையும் நிமிர்ந்து பார்த்து மகாராணியார் குறிப்புக் காட்டி அவர்களை உட்காரச் சொன்னார். கண்களைத் துடைத்துக் கொண்டு தன் மடியில் கிடந்த ஓலையை விலாசினியின் கையில் எடுத்துக் கொடுத்தார் மகாராணி. அவள் அதை வாங்கிக் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பது போல் மகாராணியின் முகத்தைப் பார்த்தாள்.

"விலாசினி! இந்த ஓலையில் எழுதியிருக்கும் பாட்டைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஓலையிலிருந்த பாட்டை ஒரு முறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக் கொண்டே விலாசினி, "மகாராணி! இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா? பகவதி இங்கே தங்கியிருக்கும் போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே?" என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணீர் அரும்பியது மகாராணியின் கண்களில். "இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி! நான் இப்போது சொல்லப் போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மனவேதனை தாங்க முடியாமல் அரண்மனை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக் கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா? அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிராவிட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும்? அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலகமிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம்? மகாமண்டலேசுவரர் இறந்து போய் விட்டார் என்று கேட்கும் போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே! நேற்று நாமெல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்துக்கு ஓடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ? போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ? தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து விட்டானா வல்லாளதேவன்? இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா! கரிக் குப்பைக்கு நடுவில் வைரத்தைப் பார்ப்பது போல் இத்தனை துன்பத்துக்கும் நடுவில் இந்த ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால் எனக்குச் சிறிது மெய்யுணர்வு உண்டாகிறது. கொஞ்சம் இதைப் படி, கேட்டு ஆறுதல் அடைகிறேன்" என்று சோகம் கனிந்த உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார் மகாராணி. விலாசினி படிக்கலானாள்:

"இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொள்மின்!"

பாட்டைக் கேட்டு விட்டு மகாராணி கூறலானார்:

"நிலையாத பொருள்களை நிலைப்பனவாக எண்ணி மயங்கியிருந்தால் இப்படித்தானே அந்தப் பொருள்கள் அழியும் போது துக்கப்பட வேண்டியிருக்கிறது? நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக் கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா? உணர்ச்சி நப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக் கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே? விலாசினி! துக்கத்தையும், ஏமாற்றங்களையும் அனுபவிக்க இந்தப் பாட்டின் அர்த்தம் கடல் போல் விரிவடைந்து கொண்டே போவது போல் ஒரு பிரமை உண்டாகிறது, பார்த்தாயா?" அந்தப் பாட்டைக் கேட்டு மகாராணி பேசிய வார்த்தைகளால் அவருடைய மனம் எந்த அளவுக்கு வேதனையும், விரக்தியும் அடைந்து போயிருக்கிறதென்பதையும் விலாசினி உணர்ந்தாள்.

அறை வாயிலில் அந்தச் சமயத்தில் ஒரு காவலன் அவசரமாக வந்து வணங்கி நின்றான். "தேவி! குமாரபாண்டியர் அவசரமாகப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்" என்று அந்தக் காவலன் கூறியதும், விலாசினியும், புவன மோகினியும் விருட்டென எழுந்து அந்த இடத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். மகாராணியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கண்கள் அறை வாயிலை நோக்கிப் பதித்து நிலைத்தன.

வாட்டமடைந்த தோற்றத்தோடு பயணம் செய்து களைத்துக் கறுத்த முகத்தில் கவலையும் பரபரப்பும் தென்பட வேகமாக அறைக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். அவனைக் கண்டதும் துயரம் பொங்க, "குழந்தாய்! இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறி கொடுத்து விட்டோமே!" என்று கதறினார் மகாராணி.

"அம்மா! என்ன நடந்து விட்டது? நிதானமாகச் சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழப்பங்களையும், கவலைகளையும் சுமந்து கொண்டு போர்க் களத்திலிருந்து இங்கே ஓடி வந்திருக்கிறேன். நீங்கள் எதையோ சொல்லிக் கதறுகிறீர்களே?" என்று அருகில் வந்து அமர்ந்து வினவினான் இராசசிம்மன்.

"சொல்லிக் கதறுவதற்கு இனி என்ன இருக்கிறது? இலங்கையில் உன்னைத் தேடி வந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா? எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கலகம் எழுந்து விட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்று மங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்க வேண்டும் அப்பா? எல்லாவற்றையும் கேட்ட பின்பும் துக்கத்தையும் உயிரையும் தாங்கிக் கொண்டு சாக மாட்டாமல் உட்கார்ந்திருக்கிறேன் நான்" என்று தன் தாயின் வாயிலிருந்து மகாமண்டலேசுவரரின் மரணச் செய்தியைக் கேட்ட போது அப்படியே திக்பிரமை பிடித்துப் போய் அயர்ந்து கிடந்தான் இராசசிம்மன். பயமும் திகைப்பும் உண்டாக்கும் அந்தத் துயரச் செய்தி மனத்தில் உறைந்து நாவுக்குப் பேசும் ஆற்றல் உண்டாகச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அவனால் அதை நம்புவதற்கே முடியவில்லை.

"அம்மா! மகாமண்டலேசுவரர் இறந்து விட்டார் என்று உண்மையாகவே சொல்கிறீர்களா அல்லது என்னைச் சோதனை புரிகிறீர்களா?"

"சோதனை நான் செய்யவில்லையப்பா! உன்னையும் என்னையும் இந்த தேசத்தையும் விதி சோதனை செய்கிறது. தெய்வம் சோதனை செய்கிறது. நம்பிக்கைகள் சோதனை செய்கின்றன" என்று சொல்லிக் கொண்டே குலுங்கக் குலுங்க அழுதார் மகாராணி.

"மகாராணி மனங் குழம்பிப் போயிருக்கிறார்கள். நடந்தவற்றை நாங்கள் சொல்கிறோம்" என்று அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் அங்கு வந்தார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்த போது அவனும் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனுக்கும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

"அம்மா! விழிஞத்தில் இறங்கியதும் பகவதியின் மரணத்தை யாருக்கும் கூற வேண்டாமென்று மகாமண்டலேசுவரர்தான் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று அவர் தான் சொன்னாரம்மா! தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர் மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை. அம்மா! இங்கே தான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலாமென்று நான் ஓடி வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்ன தான் செய்யப் போகிறேனோ? இப்போதுள்ள படைகளை வைத்துக் கொண்டு இரண்டு நாள் போரைக் கூடச் சமாளிக்க முடியாதென்று சக்கசேனாபதி கையை விரித்து விட்டார்."

"போரைச் சமாளித்து வெற்றி பெற்றாலும் இனி என்ன பயம் மகனே? கடமையையும், நன்றியையும் போற்றி வந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மையும் அழித்துக் கொண்டு விட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினையின் விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே!" என்று மகாராணி விரக்தியோடு மறுமொழி கூறினார்.

"அம்மா நீங்களும் இப்படி மனம் வெறுத்துப் பேசினால் நான் என்ன செய்வது? சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்த சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது? வாருங்கள்! நானும் நீங்களுமாகப் போயாவது தளபதியைக் கெஞ்சிப் பார்க்கலாம். அவன் மனம் இரங்காமலா போய்விடுவான்? அம்மா! எல்லாத் துன்பங்களையும் மறந்து புறப்படுங்களம்மா, கடைசியாக முயல்வோம்" என்று தாயின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சினான் இராசசிம்மன். மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகைக்குள் தளபதியோடு போர்க்களத்துக்கு வரவில்லையானால் வெற்றியைப் பற்றி நினைப்பதற்கில்லை யென்று சக்கசேனாபதி கூறியனுப்பியிருந்த நிபந்தனையையும் தாயிடம் கூறி முறையிட்டான் அவன்.

அவனுக்குப் பதில் சொல்வதற்காக மகாராணி வாயைத் திறந்தார். அவர் பேசத் தொடங்குமுன் அரண்மனை வாயிலில் 'விடாதே! பிடி! கொல்லு' என்ற வெறிக் குரல்களோடு பலர் ஓடிவரும் ஓசையும் "ஐயோ! காப்பாற்றுங்கள்" என்று ஓர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஓலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். "இராசசிம்மா! ஓடு; அது என்னவென்று போய்ப் பார்!" என்று மகனைத் துரத்தினார் மகாராணி. இராசசிம்மன் உட்பட எல்லோருமே அந்தக் குழப்பம் என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து வாசற்புறம் ஓடினார்கள். மகாராணி, விலாசினி, புவன மோகினி ஆகிய பெண்கள் மட்டும் போகவில்லை.

அரண்மனையில் பராந்தகப் பெருவாயிலில் மூடு பல்லக்கு ஒன்று கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னால் உருவிய வாள்களும், வேல்களுமாக யாரோ சில முரட்டு மனிதர்கள் துரத்தி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். மூடு பல்லக்கு அருகிலிருந்து குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் அபயக் குரல் கொடுத்து அலறியவாறு உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். என்ன கூப்பாடு என்று பார்ப்பதற்காக வெளியே வந்த குமாரபாண்டியனும் மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு திகைப்பும் வியப்பும் அடைந்து மருண்டு போய் நின்றனர். இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பின்னால் துரத்தி வந்த கூட்டம் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று. ஆயுதபாணிகளாகத் தாக்குவதற்கு ஓடி வருவது போல் வந்த அவர்களுடைய வெறித்தனமும் கூப்பாடுகளும் பெருகின. உள்ளே உட்கார்ந்திருந்த மகாராணி முதலியவர்களும் ஆவலை அடக்க முடியாமல் பார்ப்பதற்காக எழுந்து ஓடி வந்து விட்டார்கள். 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொண்டே ஓடி வந்த குழல்வாய்மொழியும், சேந்தனும் மகாராணியின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி முகத்தில் கொலையச்சம் பரவியது போல் தோற்றமளித்ததை எல்லோரும் கண்டனர். இருவரும் ஓயாமல் அழுதிருந்த சாயல் தெரிந்தது.

"தாயே! எங்களைக் கொல்ல ஓடிவருகிறார்கள். நீங்கள் தான் அடைக்கலம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்" என்று மகாராணியிடம் முறையிட்டுக் கதறினார்கள், குழல்வாய்மொழியும் சேந்தனும். எல்லோருக்கும் அவர்கள் நிலை ஒருவாறு புரிந்து விட்டது.

உடனே குமாரபாண்டியன் வாயிற்புறம் பார்த்தான். கலகக் கூட்டம் வரம்பு மீறிக் காவலைக் கடந்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது.

"காவலர்களே! பராந்தகப் பெருவாயிலை மூடிவிட்டு உட்புறம் கணைய மரங்களை முட்டுக் கொடுங்கள். கோட்டைக்குள் யாரும் நுழைய விடாதீர்கள்" என்று சிங்க முழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டன் இராசசிம்மன். அடுத்த விநாடி ஒன்றரைப் பனை உயரமும் முக்காற்பனை அகலமும் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கதவுகள் மூடப்படும் ஒலி அரண்மனையையே அதிரச் செய்து கொண்டு எழுந்தது.

"குழல்வாய்மொழி! எங்களையெல்லாம் தவிக்க விட்டுப் போய் விட்டாரே அம்மா உன் தந்தை? அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர்பார்த்தோமா?" என்று தணிக்க முடியாமல் கிளர்ந்தெழும் துக்கத்தோடு அந்தப் பெண்ணைத் தழுவிக் கொண்டு கதறினார் மகாராணி. குழல்வாய்மொழி குமுறிக் குமுறி அழுதாள்.

"தேவி! அவருடைய காலம் முடிந்து விட்டது. எங்களைத் தப்பி வாழச் செய்துவிட்டு அவர் போய்விட்டார். இரவோடு இரவாக இடையாற்று மங்கலத்திலிருந்து நாங்கள் இருவரும் முன்சிறைக்குப் போய்விட்டு இப்போது ஒரு முக்கிய காரியமாக வந்தோம். யாருக்கும் தெரியாமல் மூடு பல்லக்கில் வந்தோம். அரண்மனைக்கு அருகில் வந்த போது இந்தக் கலகக்காரர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு துரத்தத் தொடங்கி விட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பாற்றி அபயமளித்தீர்கள். தம்முடைய அந்திம நேரத்தில் மகாமண்டலேசுவரர் தங்களிடம் சேர்த்து விடச் சொல்லி ஓர் ஓலையை என்னிடம் அளித்துச் சென்றார்" என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலிருந்து அந்த ஓலையை எடுத்தான் சேந்தன். துக்கம் அவன் குரலையே மாற்றியிருந்தது.

24. சிதைந்த கனவுகள்

அரண்மனைக் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. வெளிப்புறம் பராந்தகப் பெரு வாயிலுக்கு அப்பால் கலகக் கூட்டம் வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருந்தது. கலகக்காரர்களின் வெளிக் கூப்பாடுகள் பயங்கரமாக ஒலித்தன. சேந்தனையும், குழல்வாய்மொழியையும் வெளியே அனுப்பாவிட்டால் கதவை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்து விடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய பயங்கரமான சூழ்நிலை வெளியே நிலவிக் கொண்டிருக்கும் போதுதான் சேந்தன் தான் கொண்டு வந்திருந்த மகாமண்டலேசுவரரின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுருளை விரித்து மகாராணியிடம் கொடுத்தான்.

"இராசசிம்மா! இதைப் படித்துச் சொல்" என்று குமாரபாண்டியனிடம் அதைக் கொடுத்தார் மகாராணி. துக்கம் அடைக்கும் நலிந்த குரலும், நீரரும்பும் கண்களுமாக அவர் அப்போது தோற்றமளித்த நிலை எல்லோருடைய உள்ளங்களையும் உருக்கியது. சேந்தனும் கண்கலங்கிப் போய் வாட்டத்தோடு காட்சியளித்தான். குழல்வாய்மொழி தலை நிமிரவே இல்லை. கண்கள் சிவந்து முகம் வீங்கி அழுதழுது சோகம் பதிந்த கோலத்தில் நின்றாள் அவள். மற்றவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியன் எல்லோரும் கேட்கும்படியாக மகாமண்டலேசுவரரின் இறுதித் திருமுக ஓலையை இரைந்து படித்தான்.

"அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மகாராணி வானவன்மாதேவிக்கு, இடையாற்று மங்கலம் நம்பி இறுதியாக எழுதும் திருமுகம். தேவி, இந்தத் திருமுக ஓலையை நீங்கள் படிக்கு முன் நான் இவ்வுலக வாழ்வினின்று விடைபெற்றுச் சென்று விடுவேன். என்னுடைய மரணத்துக்காக நீங்களோ, குமாரபாண்டியரோ சற்றேனும் வருந்த வேண்டியதில்லை. இந்த விநாடிக்குப் பின் இனி ஒரு கணம் வாழ்ந்தாலும் நானோ என் அறிவோ எதிலும் வெற்றி பெற முடியாது. தீபத்தில் எண்ணெய் வற்றியதும் திரியும், சுடருமே அழிந்து விடுகிற மாதிரி நல்வினைப் பயன் நீங்கியதும் எவ்வளவு பெரிய மனிதராயிருந்தாலும் அறிவும், முயற்சியும் பயன்படாது! அருள் கலக்காத முரட்டு அறிவுக்கு என்றாவது ஒருநாள் இந்தத் தோல்வி ஏற்படத்தான் செய்யும். தளபதி வல்லாளதேவன் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே என்னென்னவோ செய்து விட்டான். அதைப் போல் இறுதியில் சில சமயம் நானும் அவனைப் புரிந்து கொள்ளாமல் என்னென்னவோ செய்து விட்டேன். அறிவும் வீரமும் பகைத்துக் கொண்டதால் ஒரு நாட்டுக்கு எவ்வளவு கெடுதல்கள்? எப்போதாவது முடிந்தால் ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நீங்கள் தளபதிக்குத் தெளிவு செய்து விட வேண்டும். 'அவன் தங்கையின் மரணத்துக்கு நான் காரணமில்லை' என்பது தான் நீங்கள் அவனுக்குத் தெளிவு செய்ய வேண்டிய மெய். பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியாமல் இலட்சிய பங்கமும் மானக்கேடும் ஏற்பட்டால் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது நம் தமிழ்க் குலத்து மரபு. நானும் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோயில் குறட்டில் அமர்ந்து வடக்கு நோக்கி இந்த வாழ்வை முடித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டேன். சாவு தீர்மானப்படிதான் வரவேண்டு மென்பதில்லையே? என் தீர்மானத்தை முந்திக் கொண்டு வந்தாலும் அதை வரவேற்க நான் தயங்க மாட்டேன்.

"இந்தக் கடைசி நேரத்தில் யாரும், எப்போதும், எதிர்பாராத ஒரு காரியத்தை நான் செய்யப் போகிறேன். இத்தனைக் காலமாக என்னிடம் உண்மையாக ஊழியம் செய்த நாராயணன் சேந்தனுக்கு என் மகள் குழல்வாய்மொழியை மணம் முடித்துக் கொடுத்து விடப் போகிறேன். இதை விடப் பெரிய நன்றி அவனுக்கு நான் வேறென்ன செய்ய முடியும்?..."

இரைந்த குரலில் படித்துக் கொண்டே வந்த குமார பாண்டியன் படிப்பதை நிறுத்தி விட்டுத் தலை நிமிர்ந்து சேந்தனையும், குழல்வாய்மொழியையும் மாறிமாறிப் பார்த்தான். அடாடா! அப்போது குமாரபாண்டியனின் முகத்தில்தான் எத்தனை விதமான உணர்ச்சிச் சாயல்கள் சங்கமமாகின்றன. அவனைப் போலவே மற்றவர்களுடைய பார்வையும் சேந்தன் மேலும் குழல்வாய்மொழியின் மேலும் தான் திரும்பிற்று. சேந்தனும், குழல்வாய்மொழியும் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டவர்களைப் போல் தலை நிமிராமலிருந்தார்கள். முகத்தில் உணர்ச்சிகளின் சூறாவளி தோன்றி விழிகள் சிவந்து போய்க் குழல்வாய்மொழியிடம் எதையோ கேட்டு விடுவதற்குத் துடித்தன குமாரபாண்டியனின் உதடுகள். அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அந்தச் சமயத்தில், "மேலே படி" என்று மகாராணியின் தழுதழுத்த குரல் அவனைத் தூண்டியது. குமாரபாண்டியன் மேலே படிக்கலானான். முதற் பகுதியைப் படித்ததை விட இப்போது அவன் குரல் நைந்திருந்தது. "எனக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் குழல்வாய்மொழிக்கு இருக்கிற அகந்தையும், ஆணவமும் இந்தப் புதிய உறவு மூலம் அழிந்து விட வேண்டுமென்பது என் ஆசை. என் பெண்ணையும், சேந்தனையும் துன்பங்களும், பகைகளும் பெருகி வரும் சூழலில் தனியே ஒரு பாதுகாப்புமின்றி விட்டுச் செல்கிறேன். அவர்கள் வாழ வேண்டும். நாட்டில் எனக்கிருக்கும் எதிர்ப்பின் பகைமை அவர்களை அழிக்க முயலாமல் உங்களுக்கு அடைக்கலமாக அவர்களை அளிக்கிறேன். எப்படியாவது அவர்களை வாழவிடுங்கள். என்னுடைய அறிவின் பிடிவாதங்களால் இந்த நாட்டுக்கு விளைந்த துன்பங்களுக்காக என்னை மன்னியுங்கள். குமாரபாண்டியரையும் மன்னிக்கச் சொல்லுங்கள். 'மகாமண்டலேசுவரர்' என்ற மனிதரை ஒரு கெட்ட சொப்பனம் கண்டது போல் மறக்க முயலுங்கள்!"

குமாரபாண்டியன் அதைப் படித்து முடித்தான். மழை பெய்து ஓய்ந்தாற் போன்ற ஒரு வகை அமைதி அவர்களிடையே நிலவியது. அந்த அமைதிக்கு நேர்மாறாக வெளியே கலகக்காரர்களின் வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. பராந்தகப் பெருவாயிலை இடித்துத் தகர்த்து விட்டு உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

மகாமண்டலேசுவரரின் ஓலையைப் படித்து முடித்த பின் சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றார் மகாராணி. குழல்வாய்மொழியின் உள்ளம் எப்படி அந்த மணத்துக்கு உட்பட்டதென்று புரியாமல் மனங் குமுறி நின்றான் குமாரபாண்டியன். "இராசசிம்மா! வீரமும் வெற்றியும் அரியணையேறி ஆளும் திருவும் இன்னும் உனக்குக் கிடைக்கிற காலம் வரவில்லை போலிருக்கிறது! மகாமண்டலேசுவரரோ போய்விட்டார். அவருடைய இந்த ஓலையைப் படித்த பின் என் நம்பிக்கைகளே அழிந்து விட்டன போல் துயரமாயிருக்கிறது எனக்கு. தளபதி ஆகாதவனாகிவிட்டான். கூற்றத்தலைவர்களும் ஆகாதவர்களாகி விட்டார்கள். இனி யாரை நம்பி, எதை நம்பி நாம் வெற்றியை நினைக்க முடியும்? எனக்கு ஒரு வழியும் தோன்றவில்லை அப்பா! போ, உன்னால் முடியுமானால் இன்னும் சிறிது நேரத்துக்குள் இந்த அரண்மனையைக் கலகக்காரர் கையில் சிக்கிவிடாமல் காப்பாற்று. அதற்குள் நான் மகாமண்டலேசுவரரின் பெண்ணையும், அவள் கணவன் சேந்தனையும் இங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுகிறேன்" என்று குமாரபாண்டியனை நோக்கி வேண்டிக் கொண்டார் மகாராணி.

"அம்மா! இப்படி ஒரேயடியாக நம்பிக்கையிழந்து பேசினால் என்ன செய்ய முடியும்? நாம் இருவரும் தளபதியையும் கூற்றத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிச் சமாதானப்படுத்தலாம்" என்றான் இராசசிம்மன்.

"மகனே! இந்த நாட்டின் வெற்றியைப் பற்றிக் கவலைப்பட்டால் என்னிடம் அடைக்கலம் அளிக்கப்பட்ட இவர்களை யார் காப்பாற்றுவது? இவர்களுக்கு அழிவு வராமல் வாழவைக்க வேண்டுமென்பது மகாமண்டலேசுவரருடைய கடைசி ஆசை. அதை நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்றிய பின் நாட்டைக் காப்பாற்ற வருகிறேன். நீ போய் நான் கூறியபடி வாயிற்புறத்துக் காவலை உறுதியாக்கு... நிற்காதே... உடனே செல்!" - மகாராணியின் குரலில் பரபரப்பு நிறைந்திருந்தது. கடைசியாக ஒருமுறை குழல்வாய்மொழியைப் பார்த்துவிட்டு நடந்தான் இராசசிம்மன். அவன் காவலை கெட்டிப் படுத்துவதற்காக பராந்தகப் பெருவாயிலுக்குச் சென்றதும், சேந்தனையும், குழல்வாய்மொழியையும் தழுவி அழைத்துக் கொண்டு தமது அந்தரங்க அறைக்குச் சென்றார் மகாராணி. புவன மோகினியைக் கூப்பிட்டு, "புவன மோகினி! இந்த அரண்மனைக் கருவூலத்திலுள்ள விலைமதிப்பற்ற உயர்ந்த ஆடையணிகலன்களையெல்லாம் தேர்ந்தெடுத்து இந்தப் பெண்ணை அலங்கரித்து வா" என்று சொல்லிக் குழல்வாய்மொழியை அவளுடன் ஆவலோடு அனுப்பினார்.

சேந்தன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவனையும் பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தி மணக்கோலம் பூண்டு வரச் செய்தார். பவழக்கனிவாயர், ஆசிரியர், விலாசினி எல்லோரையும் சூழ இருக்கச் செய்து குழல்வாய்மொழியையும் சேந்தனையும் மாலை மாற்றிக் கொள்ளுமாறு செய்து மணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எல்லோருமாகச் சேர்ந்து மணமக்களுக்கு மங்கல வாழ்த்துக் கூறினார்கள். அந்தச் சமயத்தில் இராசசிம்மன் வேகமாகவும், பரபரப்பாகவும் அங்கே ஓடி வந்தான். அவன் முகத்தில் பயமும், குழப்பமும் தென்பட்டன.

"அம்மா! பராந்தகப் பெருவாயில் தகர்ந்து விட்டது. கலகக்காரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். இப்போதிருக்கிற வெறியையும் ஆவேசத்தையும் பார்த்தால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது போலிருக்கிறது. 'மகாமண்டலேசுவரரின் மகளையும் ஒற்றனையும் கொன்று பழிவாங்குவோம்' என்று கூச்சலிட்டுக் கொண்டு கொலை வெறியோடு ஓடி வருகிறார்கள். ஒரு விநாடி கூட இனிமேல் இங்கே தாமதிப்பதற்கில்லை. எப்படியாவது இவர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று கலவரம் மிகுந்த குரலில் பதற்றத்தோடு கூறினான் குமாரபாண்டியன். குழல்வாய்மொழியை மணக்கோலத்தில் கண்ட போது அந்தக் குழம்பிய சூழ்நிலையிலும் ஏதோ சில மெல்லிய உணர்ச்சிகள் அவன் உள்ளத்தைக் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவன் தன் மனத்தையும் கண்களையும் அடக்கிக் கொண்டான். ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளித் தள்ளினான். எங்கோ வெறித்து நோக்கியவாறு நின்ற மகாராணி அவனைப் பார்த்துக் கூறினார்:

"இராசசிம்மா! எல்லோரும் வெளியேறி விடலாம். உனக்கும் எனக்கும் இந்த அரண்மனையில் ஒரு வேலையும் இல்லை. உன்னுடைய எண்ணங்களும், என்னுடைய ஆசைகளும் நிறைவேறும் காலம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. பாண்டியப் பேரரசின் பெருமையும், புகழும் பரவுவதற்குரிய நிலை உன் தந்தையின் காலத்துக்குப் பின் இல்லையோ என்னவோ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். கவலைப்பட்டுப் பயனில்லை. நீ போய் அந்தப்புரத்துக்குள் நுழையும் பிரதான வாயில்களை அடைத்து விட ஏற்பாடு செய். போர்க்காலங்களில் அரண்மனைப் பெண்கள் தப்பி வெளியேறுவதற்காக நந்தவனத்து நீராழி மண்டபத்துக்கருகிலிருந்து ஒரு சுரங்க வழி போகிறது. நீயும் வா! நாமெல்லோரும் அந்த வழியாக வெளியேறி விடலாம். சுசீந்திரத்துக்கு அருகிலுள்ள பாதிரித் தோட்டத்தில் கொண்டு போய்விடும் அந்த வழி. அங்கிருந்து பவழக்கனிவாயர் முதலியவர்களோடு சேந்தனையும் குழல்வாய்மொழியையும் பாதுகாப்பாக முன்சிறைக்கு அனுப்பி வைத்து விடலாம். அறக்கோட்டத்தில் போய்த் தங்கிக் கொண்டால் பின்பு அவர்கள் பாடு கவலையில்லை" என்று மகாராணி கூறிய போது சேந்தன் குறுக்கிட்டான்: "தேவி! எங்கள் இருவருக்காகவும் தாங்கள் துன்பப்படக்கூடாது. நாங்கள் முன்சிறையில் என் தமையனோடு போய்த் தங்கிவிட்டால் பின்பு எங்களுக்கு ஒரு குறையும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கலகக்காரர்களின் பகைமையும், பழிவாங்கும் வெறியும் உள்ளவரை நாங்களும் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம்" என்று நாராயணன் சேந்தன் பணிவுடனும் குழைவுடனும் மேற்கண்டவாறு பேசினான்.

"எப்படியோ நன்றாக வாழவேண்டும் நீங்கள். அது மகாமண்டலேசுவரரின் கடைசி ஆசை. அதைக் காப்பாற்றுவதற்கும், நிறைவேற்றுவதற்கும் நான் கடமைப்பட்டவள். வாருங்கள், நாம் இங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. புவன மோகினி! நீ அந்தத் தீபத்தை எடுத்துக் கொள். சுரங்கப் பாதைக்குள் இருட்டு அதிகமாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே முன்னால் நடந்தார் மகாராணி. குமாரபாண்டியன் அந்தப்புரத்துக் கதவை அடைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய முகத்தைக் காண்பவர்களுக்கு உலகத்திலுள்ள நிராசையெல்லாம் அங்கே வந்து குடி கொண்டு விட்டது போல் தோன்றியது. போர்க்களத்தில் சக்கசேனாபதியிடம் வாக்களித்து விட்டு இரவோடு இரவாகக் கிளம்பியபோது அவன் மனத்தில் உருவாகி எழுந்து ஓங்கி நின்ற நம்பிக்கை மாளிகை இப்போது தரைமட்டமாகி விட்டதைப் போல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மகாமண்டலேசுவரரின் மரணம், குழல்வாய்மொழியின் வினோதமான திருமணம், கலகக் கூட்டத்தின் பழிவாங்கும் வெறி, மகாராணியின் அவநம்பிக்கை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நினைக்கும் போது தன்னுடைய இனிய கனவுகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது போல் உணர்ந்தான் அவன். அன்றொரு நாள் மழையும், புயலும் வீசிய இரவில் ஈழ நாட்டுக் காட்டில் பாழ்மண்டபத்து இருளில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றிச் சிந்தித்ததை மறுபடியும் நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன்.

அவர்கள் எல்லோரும் நந்தவனத்துக்குப் போய்ச் சுரங்கப்பாதை ஆரம்பிக்கிற இடத்தை அடைந்தனர். விதியைப் பின் தொடரும் பேதை மனிதனைப் போல் குமாரபாண்டியனும் அவர்களைப் பின்பற்றி அங்கே சென்றான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே துக்கம் வடியும் குரலில் "செல்வா! உன் முன்னோர் மன்னாதிமன்னராக வாழ்ந்து இறந்த இந்த அரண்மனையை இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொள். இனி இந்த மாபெரும் அரண்மனை இருப்பதும், இல்லாததும் உனக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் விதியின் ஆணையைப் பொறுத்தது" என்றார் மகாராணி. இராசசிம்மன் நிமிர்ந்து பார்த்தான். கதவுகள் உடையும், சுவர்கள் இடிபடும் ஒலியுமாக அந்த அரச மாளிகை முடிவின் எல்லையில் இருந்தது. எல்லாரும் சுரங்க வழிக்குள் இறங்கிவிட்டனர். புவன மோகினி தீபத்தோடு முன்னால் சென்றாள். கடைசியாகக் குமாரபாண்டியனும் அதற்குள் இறங்கி மறைந்தான். ஊழ்வினையே சுரங்கமாகி வழிநடத்திச் செல்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றம் உண்டாயிற்று.

எல்லோரும் சுரங்க வழியில் நடந்து செல்லும் போது ஓரிடத்தில் சேந்தன் விரைவாக நடந்து முன்சென்று விட்டதால் குழல்வாய்மொழி சற்றுப் பின் தங்கிச் சென்றாள். தளர்ந்து துவண்டு மென்னடையில் மெதுவாகச் சென்று அவளை நெருங்கினான் குமாரபாண்டியன். கொதிக்கும் மனத்துடன் ஏதோ ஒரு கேள்வியை அவளிடம் கேட்டு விடத் துடித்தான் அவன். ஆனால் குழல்வாய்மொழி அவனை அருகில் நெருங்கவிடவில்லை. அவன் விரைந்து வருவது கண்டு தான் முந்திக் கொண்டு சென்றுவிட்டாள். அப்படி அவள் நடையை வேகப்படுத்திக் கொண்டு முந்தின போது அவளுடைய கூந்தலிலிருந்து இரண்டு மல்லிகைப் பூக்கள் உதிர்ந்தன. அவளை நெருங்கி ஏதோ கேள்வி கேட்கும் துடிப்புடனே வந்த குமாரபாண்டியனின் காலடியில் அந்த மல்லிகைப் பூக்கள் மிதிப்பட்டதும் அப்படியே தயங்கி நின்றுவிட்டான். காலில் மிதிபட்ட பூக்களையும் முன்னால் விரைந்து சென்று சேந்தனை ஒட்டி நடக்கும் குழல்வாய்மொழியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றான் அவன். அவனுடைய மனத்துக்குள் ஏதோ ஒரு மெல்லிய உணர்வும் அப்படி மிதிபட்டு விட்டது போலிருந்தது. மிதிபட்ட பூக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே மேலே நடந்தான் குமாரபாண்டியன். சுரங்கப் பாதை முடிந்து வெளியேறுகிற வரையில் யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை.

சுசீந்திரம் பாதிரித் தோட்டம் வந்தது. மகாராணி குழல்வாய்மொழியையும், சேந்தனையும் கையைப் பற்றிப் பவழக்கனிவாயரிடம் ஒப்படைத்தார். "பவழக்கனிவாயரே! அதங்கோட்டாசிரியரே! இவர்களை முன்சிறை அறக்கோட்டத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கலைகளுக்கும், மணியம்பலத்துக்கும் என்றும் அழிவில்லை. நீங்கள் உள்ளவரை சேந்தனும், குழல்வாய்மொழியும் வாழ்வதைக் கண்டு வாழ்ந்து மகிழுங்கள்!" என்று மகாராணி கூறிய போது, "தேவி! தாங்களும் காந்தளூர் மணியம்பலத்தில் வந்து எங்களுடனே இருந்து விடலாமே!" என்றார் பவழக்கனிவாயர்.

"நான் இருக்க வேண்டிய இடத்தை நானே முடிவு செய்து கொண்டு விட்டேன். நீங்கள் போய் வாருங்கள்" என்று கண்டிப்பாகச் சொன்னார் மகாராணி. யாரும் மறுத்துப் பேச முடியவில்லை. மகாராணியையும், குமாரபாண்டியனையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். புவன மோகினி ஒருத்தி மட்டும் மகாராணியாரோடு இருந்து கொண்டாள்.

"மகனே! மேகத்தால் மறைக்கப்படும் சந்திரனைப் போல் இன்னும் சிறிது காலம் பாண்டி நாடு பகைவர் ஆட்சியில் தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. என்னைப் பிறந்த வீட்டில் - சேர நாட்டு வஞ்சமாநகரத்தில் கொண்டு போய்விட ஏற்பாடு செய். இந்தப் பெண் புவனமோகினி என்னோடு துணை வருவாள். எங்கு போய் என்ன செய்வாயோ? மறுபடியும் நீ ஆளாகி இந்த நாட்டை வென்று ஆள்வதற்கு வந்தால் அப்போது நான் உயிரோடு இருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம்" என்று மகாராணி கூறிய போது குமாரபாண்டியன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு பிள்ளைபோல் அழுது விட்டான். வஞ்சிமாநகர் புறப்படு முன் தென்பாண்டி நாட்டுக் கோவில்களுக்கெல்லாம் கடைசியாக ஒரு முறை சென்று தரிசனம் செய்ய வேண்டுமென்று மகாராணி ஆசைப்பட்டார். அந்த ஆசையை நிறைவேற்ற இரண்டு நாட்கள் செலவழித்தான் குமாரபாண்டியன். மூன்றாம் நாள் காலை ஒரு பல்லக்கும் சுமப்பதற்கு ஆட்களும் தேடி மகாராணியையும், புவனமோகினியையும் ஏற்றி அனுப்பினான். அப்போது, "அம்மா! வஞ்சிமாநகரத்துக்கு இங்கிருந்து அதிக நாட்கள் பயணம் செய்ய வேண்டும். கவனமாகப் போய்ச் சேருங்கள். நான் போர்க்களத்துக்குப் போய் போரைக் கவனிக்கிறேன். நல்வினை இருந்தால் மறுபடியும் சந்திப்போம்!" என்று மனங் கலங்கிக் கூறினான்.

"இராசசிம்மா! உனக்கு என் பயணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம் - வஞ்சிமாநகரப் பயணத்தை விட நீண்ட வாழ்க்கைப் பயணத்தை நான் கண்டாயிற்று. இனிப் பயமில்லை. போய் வா! வெற்றியானால் வென்று வா. தோல்வியானால் எங்கேயாவது போய் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்" என்று அவன் மனக் கலக்கத்தைத் தேற்றி வாழ்த்திவிட்டு நிம்மதியாக வஞ்சிமாநகரத்துக்குப் புறப்பட்டார் மகாராணி. தாயைத் தன்னிடமிருந்து பிரிக்கும் அந்தப் பல்லக்குப் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற குமாரபாண்டியன் அதன் தோற்றம் கண் பார்வையிலிருந்து மறைந்ததும் கண்ணில் துளிர்த்த நீர் முத்துக்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினான். நான்கு புறமும் விழிகள் பார்க்க முடிந்த அளவு சுற்றிலும் பார்த்தான். மேலே வானத்தை அண்ணாந்து நோக்கினான். அந்தத் தென் பாண்டி நாடு, அதன் வளம், அதன் அழகு, அதன் செல்வங்கள், அதன் தெய்வத் திருக்கோவில்கள் எல்லாம் சூனியமாய்ப் பாழ் வெளியாய் ஒன்றுமற்ற பழம் பொய்களாகத் திடீரென்று மாறிவிட்டன போலிருந்தது. தன் பெருமையையும், புகழையும், இளவரசன் என்ற பதவியையும் மறந்து எவனோ ஒரு பேதை இளைஞன் போல் நடந்தான் அவன்.

25. புதியதோர் பெருவாழ்வு

மகாராணியை வஞ்சிமா நகரத்துக்குச் சிவிகை ஏற்றியனுப்பி விட்டு போர்க்களம் நோக்கிப் புறப்பட்ட குமாரபாண்டியன் நடு வழியிலேயே அந்தத் துன்பச் செய்தியைத் தெரிந்து கொண்டான். வேதனைப்படுகிற அளவு கூட அவன் உள்ளத்தில் அப்போது தெம்பில்லை. 'முதல் நாள் காலை பதினொரு நாழிகையளவில் வெள்ளூரை வடதிசைப் படைகள் கைப்பற்றி விட்டனவாம். சக்கசேனாபதியும் அவரோடு எஞ்சியிருந்த ஈழநாட்டு வீரர்களும் விழிஞத்துக்கு ஓடிக் கப்பலேறி விட்டார்களாம்' என்ற செய்திதான் அது. அதைத் தெரிந்து கொண்டவுடன், 'சக்கசேனாபதியின் மேல் குற்றமில்லை! அவர் என்ன செய்வார்? பாவம், பதினொரு நாழிகை வரை என்னை எதிர்பார்த்திருப்பார். நான் மட்டுமென்ன? நானும் போக வேண்டியதுதான். எனக்கு மட்டும் இங்கே என்ன வைத்திருக்கிறது? வெற்றியை நினைத்து வந்தேன். எல்லா வகையிலும் தோல்விதான் கிடைத்தது. பரவாயில்லை. இந்தப் பரந்த உலகத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் என் ஏக்கங்களையும் நிராசைகளையும் சுமந்து கொண்டு வாழ்வதற்கு இடமில்லாமலா போய்விடப் போகிறது? ஏக்கங்களும், நிராசைகளும், தோல்விகளும், அவநம்பிக்கைகளும் இருக்கின்றவரை நான் வெற்றியை எண்ணித் துடித்துக் கொண்டே இருப்பேன்!' என்று தனக்குத் தானே மெல்லச் சொல்லிக் கொண்டான். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேறு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் திரும்பி விழிஞத்துக்குப் புறப்பட்டான் அவன். சோர்வும், துயரமும் தன் மனத்திலிருந்து நீங்கித் தோல்விகளை மறந்து போக வேண்டுமானால் அப்படி மறக்கச் செய்வதற்குரிய ஏற்ற பரிபூரணமான உல்லாச நினைவு ஒன்று அப்போது அவனுக்குத் தேவைப்பட்டது. முழுமையும், செழுமையும் நிறைந்த அந்த உல்லாசம் தனக்குக் கிடைக்க முடியுமென்றே அவனுக்குத் தோன்றியது. கண்களை மெல்ல மூடி மனத்திலிருந்த மற்ற எண்ணக் குப்பைகளையெல்லாம் ஒதுக்கியெறிந்து நினைவை ஒருமைப்படுத்தி எதையோ நினைக்க முயன்றான் அவன்.

அடுத்த கணமே அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கொவ்வைச் செவ்வாயும் அதில் குமிண் சிரிப்புமாக மண்ணுலகத்துச் சூதுவாதுகள் பதியாத மதிவதனம் ஒன்று குமாரபாண்டியனின் உருவெளித் தோற்றத்தில் தெரிந்தது. 'காலம் காலமாய் வளர்ந்தோடும் நாட்களின் சுழற்சியைக் கணக்கிட்டுக் கொண்டு உங்களுக்காகவே தேய்ந்து ஓய்ந்து போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வந்து என் தவத்துக்கு வெற்றியைக் கொடுக்கப் போகிறீர்கள்?' - என்று அந்த அழகு முகத்தின் பவழ இதழ்கள் திறந்து தன் காதருகே மெல்ல வினவுவது போல் ஓர் உணர்ச்சிப் பிரமை அவனுக்கு ஏற்பட்டது. 'மின்னலில் ஒளியெடுத்து முகில்தனில் குழல் தொடுத்து' என்று அந்த மகா சௌந்தரியத்தை வியந்து அதனால் தூண்டப்பெற்றுத் தான் முன்பு பாடிய கவிதையை அவன் முணுமுணுத்தான். இவ்வாறாக விழிஞத்துக்குச் செல்லும் போது அவன் நடந்து செல்லவில்லை. மதிவதனி என்னும் இனிய நினைவுகளைத் தென்றல் காற்றின் அலைகளாக்கித் தன் உணர்வுகளை மிதக்கச் செய்து விரைந்தான். அந்த விரைவில் அவன் மனம் தாங்கிக் கொண்டிருந்த நினைவும், கனவும், உணர்வும் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மதிவதனி என்னும் எழில்.

குமாரபாண்டியன் விழிஞத்தை அடையும் போது இரவு நீண்டு வளர்ந்திருந்தது. விழிஞத்து அரச மாளிகைக்குப் போய் அங்கிருந்த குதிரைக்காரக் கிழவனை எழுப்பி அவனிடம் இருந்து வலம்புரிச் சங்கைப் பெற்றுக் கொண்டு துறைமுகத்துக்குச் சென்றான் அவன். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த அந்த இரவு நேரத்தில் தன்னை இன்னாரென்று எவரும் அடையாளம் கண்டு கொள்ள விடாமல் ஒதுங்கித் தயங்கி நடந்தான் அவன். 'தென்பாண்டி நாட்டின் வளமும் பெருமையும் மிக்க ஒரே துறைமுகப் பட்டினமாக மேற்குக் கடற்கரையில் இலங்கும் அந்த நகரம் இன்னும் இரண்டொரு நாட்களில் வடதிசையரசர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு விடும். அதன் பின் எங்கு நோக்கினும் சோழர் புலிக்கொடி பறக்கும்! அதற்கப்புறம் சிறிது காலத்தில் அவ்வழகிய துறைமுக நகரம் ஒரு காலத்தில் பாண்டியர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று பழங்கதை பேசுவதோடு நின்று போகும்' என்று இப்படியெல்லாம் நினைத்த போது குமாரபாண்டியனுக்கு மனம் கொதிக்கத்தான் செய்தது. துயரத்தோடு நடந்து போய்ப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஒரு யவனக் கப்பலில் ஏறினான் அவன். இருளாயிருந்தாலும் அவன் ஏறுவதைக் கப்பலின் தளத்திலிருந்து பார்த்து விட்ட மீகாமன் ஓடி வந்து ஏறக்கூடாதென்று விழிகளை உருட்டிக் கோபத்தோடு பார்த்துப் பயமுறுத்தினான்.

அவன் தடுப்பதன் குறிப்பைப் புரிந்து கொண்ட குமாரபாண்டியன் மெல்லச் சிரித்துக் கொண்டே தன் இரண்டு முன் கைகளையும் அழகு செய்திலங்கும் விலை மதிப்பற்ற பொற் கடகங்களைக் கழற்றி, "இந்தா, இதை வைத்துக் கொள்! என்னை இக் கப்பலில் பயணம் செய்ய விடு" என்று சொல்லிக் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்டதும் கண்கள் வியப்பால் விரியக் குமாரபாண்டியனைப் பார்த்தான் அந்த மீகாமன். மரியாதையோடு விலகி நின்று ஏறிக் கொள்ள வழிவிட்டு வணங்கினான். குமாரபாண்டியன் கப்பலில் ஏறி அதிகம் ஒளி பரவாத ஓரிடம் தேடித் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது, அந்த இருளில் விழிஞம் துறைமுகமும் அதற்கு அப்பால் பன்னெடுந் தொலைவு இரவால் மூடுண்டிருக்கும் தென்பாண்டி நாடும், தன்னைக் கைவிட்டு நீக்கி எங்கோ விலக்கி அனுப்புவது போல் அவனுக்கு ஓர் ஏக்கம் உண்டாயிற்று. அந்த ஏக்கம் சில சொற்களாக உருப்பெற்றது. நிராசையைச் சொற்களாக்கிக் கப்பலிலுள்ள மற்றவர்கள் காதில் விழுந்து விடாதபடி மெல்லத் தனக்குள் முணு முணுத்தான் அவன்.

'திருமுடியும் அரியணையும் பெருவீரத்
திருவாளும் நினைப்பொழியக்
கருதரிய தென்பாண்டி நிலம் மறந்து
கருணைமிகு தாய் மறந்து
சிறுதெரிவை மதிவதனி சிரிப்பினுக்குச்
செயல்தோற்று நினைவலைந்து
பொருதுமனம் பிடித்திழுக்கப் பிடித்திழுக்கப்
போகின்றேன் போகின்றேன்.'

உணர்ச்சித் துடிப்பில் உருவான சொற்களைத் திரட்டி இப்படி முணுமுணுத்த போது இந்தச் சொற்களின் மூலம் தாய்த் திருநாடாகிய தென்பாண்டி நாட்டினிடமே விடைபெற்றுக் கொண்டு விட்டது போல் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. கப்பல் புறப்பட்டு விட்டது. செம்பவழத் தீவில் தன்னை இறக்கிவிடுமாறு மீகாமனிடம் போய்ச் சொல்லிவிட்டு மறுபடியும் அந்த இருண்ட மூலைக்கு வந்தான். தன்னிடமிருந்த வலம்புரிச் சங்கை மார்போடு சேர்த்துத் தழுவினாற் போல் வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்தான். அந்தக் கப்பலில் யாரோ ஏளனமாகச் சிரித்துக் கொண்டே பேசிய சில வார்த்தைகளை அவன் செவிகள் கேட்டன.

"மறுபடியும் தென்பாண்டி நாடு போரில் தோற்றுவிட்டதாம் ஐயா! தளபதியே பாண்டியப் பேரரசுக்கு எதிராக மாறிவிட்டானாம். எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் இறந்து விட்டாராம். மகாராணி வஞ்சிமா நகரத்துக்குத் தப்பிப் போய்விட்டாராம். அந்தப் பயந்தாங்கொள்ளி இளவரசன் இராசசிம்மன் எங்கோ போய்விட்டானாம்."

"தெரிந்த விஷயம் தானே ஐயா! யார் தோற்றாலென்ன? யார் வென்றாலென்ன? நம்முடைய கப்பல் விழிஞத்துக்கு வந்து போவது நிற்கப் போவதில்லை. பேச்சை விடுங்கள்!" என்று மீகாமன் அலட்சியமாகப் பதிலளித்ததையும் இருளில் முடங்கிப் படுத்திருந்த குமாரபாண்டியன் கேட்டான். அந்தச் சொற்கள் 'சுளீர் சுளீரெ'ன்று தன் நெஞ்சில் அறைவது போலிருந்தது அவனுக்கு. தென்பாண்டி நாடு, வெற்றி, தோல்வி, போர், இளவரசுப்பட்டம், மரபு எல்லாவற்றையும் பழங் கனவுகள் போல் மறந்து விடத் துடித்தது அவன் உள்ளம்.

'மறக்கத்தான் போகிறேன்! நாளைக்குச் செம்பவழத் தீவில் இறங்கி அந்த வெண்முத்துப் பற்களின் சிரிப்பைப் பார்த்த பின் எல்லாவற்றையும் மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத்தான் போகிறேன்!' என்று வற்புறுத்தி நினைத்துக் கொண்டு மனச்சாந்தி பெற்று உறங்கினான் அவன். உறக்கமென்றால் தானாக உண்டாக்கிக் கொண்ட உறக்கம் தான் அது. அந்தப் போலி உறக்கத்திலும் நினைவுகளின் மூட்டத்திலுமாகக் கப்பலின் இரவுப் பயணத்தைக் கழித்து விட்டான் குமாரபாண்டியன். விடிந்ததும், "ஐயா! எழுந்திரு! இதோ செம்பவழத் தீவு வந்துவிட்டது" என்று மீகாமன் வந்து எழுப்பினான். கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீகாமனும் மற்றவர்களும் தன் முகத்தைப் பார்த்து விடாமல் மேலாடையால் தலையைப் போர்த்தியது போல் முக்காடிட்டுக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கினான் குமாரபாண்டியன். அவன் உள்ளம் இன்பக் கிளர்ச்சி கொண்டு பொங்கியது. அவலக் கவலைகளற்ற, வெற்றி தோல்விகள் இல்லாத ஒரு புதிய போக பூமியை மிதித்துக் கொண்டு நிற்பது போல் அவன் பாதங்கள் உணர்ந்தன. கவலையற்றுப் பொங்கும் உற்சாகத்துடன் வலம்புரிச் சங்கின் ஊதுவாயை இதழ்களில் வைத்து முழக்கினான் அவன். நீராடி எழுந்த கன்னிகை போல் வைகறையின் மலர்ச்சியில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு சோபித்தது. அந்தத் தீவின் கடைவீதித் திருப்பத்தில் நின்று கொண்டு கப்பல் வந்து நிற்பதையும், அதிலிருந்து ஒருவர் இறங்குவதையும் பார்த்தவாறு இருந்தாள் ஓர் இளம்பெண். குமாரபாண்டியனின் சங்கொலி அந்தப் பெண்ணின் செவிகளில் அமுதமாகப் பாய்ந்தது. அந்த ஒலியைக் கேட்ட மறுகணமே அவள் பேதைப் பருவத்துச் சிறுமிபோல் உற்சாகத்தோடு கடற்கரையை நோக்கி ஓடலானாள். அந்தப் பெண்ணின் ஓட்டம் காட்டில் தன் போக்கில் ஓடும் புள்ளிமானை நினைவு படுத்தியது. அவள் அவனை நெருங்கிவிட்டாள். சங்கநாதம் செய்து கொண்டு மணல் திடலில் நின்ற குமாரபாண்டியன் அவளைக் கண்டதும், "மதிவதனீ!" என்று கூவினான். அந்தக் கூவலில் தான் ஊழிஊழியாகத் தேங்கி நின்று சுமந்து போனது போன்ற அன்புத் துடிப்பின் தொனி எத்தனை உருக்கமாக ஒலிக்கிறது? அவள் வந்து அவனெதிரே நின்று பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள். முழு மதியைக் கறைதுடைத்தாற் போன்ற முகத்தில் மலர்ந்து அகன்ற கயல்விழிகளால் அவனைப் பருகிவிடுவது போல் நோக்கிய நோக்கம் பெயரவே இல்லை. கல்பகோடி காலம் பிரிந்து நின்று விரகதாபத்தில் நலிந்து அன்பு தாகத்தால் வாடிய காதலி போல் அவள் கண்கள் காட்சியளித்தன.

"மதிவதனி! நான் வந்து விட்டேன். இனி உன்னைப் பிரிந்து போகமாட்டேன். அன்றொரு நாள் நீ என் உயிரைக் காப்பாற்றினாய். உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன்!" என்று கூறியவாறே அவள் அருகில் நெருங்கி அவளைத் தழுவிக் கொண்டான் குமாரபாண்டியன். அன்புப் பெருக்கில் பேச்செழாமல் வாய்மூடி நின்ற மதிவதனி "என் தவம் வெற்றி பெற்று விட்டது" என்று மெல்ல வாய்திறந்து நாக்குழறச் சொன்னாள்.

"வா, போகலாம்! நம்முடைய வாழ்க்கை இனி இந்தத் தீவின் எல்லைக்குள் ஆரம்பமாகிறது!" என்று அவளைத் தழுவி அணைத்தவாறே நடந்தான் குமாரபாண்டியன்.

அவளோடு அப்படி நடந்த போது அன்பையும் இன்பத்தையும் அனுபவித்துச் சுதந்திரமான எளிமையுடன் காதல் வாழ்வு வாழ்வதற்காகவே ஒரு புதிய பிறவி எடுத்திருப்பது போல் குமாரபாண்டியனுக்குத் தோன்றியது. கடல் அலைகளும், இளைஞாயிற்றின் மாணிக்கச் செங்கதிர்களும், காற்றும், வானமும், பூமியும் அந்தக் காதலர்களுக்கு நல்வரவு கூறுவது போல் அதியற்புதமானதொரு சூழ்நிலை அன்று காலையில் அந்தத் தீவில் நிலவியது. எல்லா இன்பமும் துய்த்துப் பல்லூழி காலம் வாழட்டுமென்று அந்தக் காதலர்களை வாழ்த்திவிட்டு வஞ்சிமா நகருக்குச் செல்வோம். நாம் மகாராணி வானவன்மாதேவியைப் பார்க்க வேண்டுமல்லவா?

தென்பாண்டி நாட்டை வடதிசை மன்னர்கள் கைப்பற்றிய பின் சோழப் பேரரசுக்குட்பட்ட நிலமாகிவிட்டது அது. தளபதியும், கழற்கால் மாறனாரும் கலகக் கூட்டத்தைக் கலைத்து விட்டு எங்கோ ஓடிப் போய்விட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்து முடிந்து ஆறு திங்கட் காலம் கழிந்து விட்டது. சேந்தனும் குழல்வாய்மொழியும், அன்பு மயமான இல்லற வாழ்க்கையை முன்சிறையில் நடத்தி வருகிறார்கள். காந்தளூர் மணியம்பலத்தில் சோழ அரசின் ஆட்சிக்குட்பட்டு அதங்கோட்டாசிரியரும் பவழக்கனிவாயரும் எப்போதும் போல் தமிழ்ப்பணி புரிந்து வருகிறார்கள். அதங்கோட்டாசிரியர் விலாசினிக்குத் திருமணம் முடிப்பதற்காகத் தக்க மணமகனைத் தேடிக் கொண்டிருக்கிறார். தென்பாண்டி நாடு பழைய அமைதியும், வளமும் பெற்றுச் செழிப்பாக இருக்கிறது. இவ்வளவும் தெரிந்த பின், இனி வஞ்சிமாநகருக்குப் போனால் நம்முடைய உள்ளத்தை உருக்கும் உண்மை ஒன்றை தெரிந்து கொள்ள நேருகிறது. வஞ்சிமாநகரத்தின் கீழ்பால் ஊர்ப்புறத்தில் குணவாயிற் கோட்டமென்னும் தவப்பள்ளி ஒன்று நெடுங்காலமாக இருந்து வருகிறது. தூய தோற்றமும், அருளொளி திகழும் முகமும் கொண்ட துறவியர் பலர் அக்கோட்டத்தில் வசித்து வருகின்றனர். இதோ அக்கோட்டத்தினுள் நுழைந்து உள்ளே போகிறோம் நாம். திருக்குண வாயிலாகிய இத் தவச் சாலையின் வாயிலில் பிரம்மாண்டமான மரங்களின் நிழலில் இதோ ஆடவரும் பெண்டிருமாக எத்தனை துறவியர் வீற்றிருக்கின்றனர், பாருங்கள். மரங்கள் அடர்ந்த இம் முன் பகுதியைக் கடந்து உள்ளே செல்வோம். அதோ, தாமரைப்பூ வடிவமாக அமைந்த ஒரு பெரிய பளிங்கு மேடை! அதன் மேல் அமர்ந்திருக்கும் மூதாட்டியை நன்றாக உற்றுப் பார்த்தால் இன்னாரென்று தெரிந்து கொள்ளலாம். நன்றாகக் கூர்ந்து பாருங்கள்.

ஆம்! மகாராணி வானவன்மாதேவி அங்குத் தவக்கோலம் பூண்டு வீற்றிருக்கிறார். வேறோர் இளம் பெண்ணும் தவக்கோலத்தில் அவரருகே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருக்கிறாள். சற்று நெருங்கிப் பார்த்தால் அவளைப் புவன மோகினி என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். மகாராணி விழிகளை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அமைதியான இந்தச் சமயத்தில் அங்கு ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. சீரழிந்து உருத் தெரியாது தோற்றம் மாறிப் போய் வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அங்கு ஓடி வருகிறார்கள். "தேவீ! எங்களை மன்னிக்க வேண்டும். எங்களுடைய வெறியால் எத்தனையோ கெடுதல்களைச் செய்துவிட்டோம். மகா பாவிகள் நாங்கள்" என்று கதறியவாறே ஓடி வந்து வணங்கினார்கள்! அவர்கள் கண்கள் கலங்கி அழுகை முட்டிக் கொண்டு வர இருந்தது. மகாராணி கண்களைத் திறந்து அவர்களைச் சிரித்துக் கொண்டே பார்த்தார். அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை. ஒரே சாந்தம் நிலவியது, "ஓ நீங்களா? உட்காருங்கள்" என்று அருளின் கனிவு நிறைந்த குரலில் கூறினார் அவர்.

"நாங்கள் பாவிகள், கெட்டவர்கள். உங்களுக்கு முன் உட்காரக் கொஞ்சமும் தகுதியற்றவர்கள்!"

"சந்தர்ப்பம் மனிதர்களைப் பாவிகளாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கலாம். இனியாவது நல்லதாக இருக்கட்டும். போய் நல்வினையைத் தேட முயலுங்கள் இந்த விசாலமான தவப்பள்ளியில் இன்னும் நிறைய இடம் இருக்கிறது. உங்களையும் உங்களைப் போல வர இருக்கும் இன்னும் எத்தனையோ பேரையும் இந்தத் திருக்குண வாயிலின் கதவுகள் எப்போதும் திறந்த வண்ணம் வரவேற்கக் காத்திருக்கின்றன" என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பாராமல் மறுபடியும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் மகாராணி.

வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அந்தத் தவக்கோலத்தை வணங்கிவிட்டு அந்தக் குணவாயிற் கோட்டத்தின் உள்ளே சென்றனர். சில நாழிகைகளுக்குப் பின் அவர்களும் தவக்கோலத்தோடு வந்து அமர்ந்த போது தியானத்தில் ஆழ்ந்திருந்த மகாராணி கண் திறந்து பார்த்தார். அவர் வதனத்தில் அருள் நகை மலர்ந்தது. ஒரு கணம் தான்! மறுபடியும் அவர் விழிகள் மூடிக் கொண்டன. அப்போது அந்தப் பக்கமாகக் குணவாயிற் கோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த வஞ்சிமாநகரத்துப் பொதுமக்கள் சிலர் கீழ்க்கண்டவாறு தங்களுக்குள் உரையாடிக் கொண்டு சென்றது அவர் செவியிலும் விழுந்தது.

"அதோ பத்மப் பளிங்கு மேடையில் அருளொலி திகழ வீற்றிருக்கும் அந்தத் தவ மூதாட்டி யார் தெரியுமா?"

"யார்?"

"அவர் சேரநாட்டு மன்னன் மகளாய்ப் பிறந்து பாண்டி நாட்டு மன்னன் பராந்தகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகப் பெருவாழ்வு வாழ்ந்தவர். இப்போது தவவாழ்வு வாழ்கிறார் இங்கே!"

இந்த உரையாடலைச் செவியுற்ற போது துன்பம் நிறைந்த முன் பிறவி ஒன்றை யாரோ நினைவுபடுத்தினாற் போலிருந்தது அவருக்கு. அவர் சிரித்துக் கொண்டார்.

'உலகம் உயிர்ப் பூக்களின் நந்தவனம்! அங்கே துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் நடுவாக நடந்து போய்விட வேண்டும்' என்று தியானத்துக்கு நடுவே நினைத்துக் கொண்டு மெய்யுணர்வில் மூழ்கினார் அவர். காலம் சுழன்று வளர்ந்து பெருகிக் கனத்து நீண்டு கொண்டே இருந்தது.