பொங்குமாங்கடல்
அமரர் கல்கி
"கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பால கவி அவ்விதம் பரவசமடைந்திருக்க வேண்டும். ஆனால் குற்றாலத்துச் சாரல் காலத்தை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. காரணம் 'சாரல்' 'சாரல்' என்று சார்ந்திருக்கும் ஊர்களிலேயிருந்தெல்லாம் ஜனங்கள் கூடிவிடுவதுதான். இது காரணமாகச் சாரல் காலத்தில் குற்றாலம் பெரிதும் சுகாதாரக் குறைவு அடைந்து விடுகிறது. கோடைக்கானலுக்கும், உதக மண்டலத்துக்கும் வெள்ளைக்கார ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால்...