arrow_back

தற்கொலை

தற்கொலை

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு உயிர் வைத்திருக்கக் கூடும்? ஒரு பாகமேனும் தேறியிருக்கக் கூடாதா? அதிலும் இது இரண்டாம் தடவை. இண்டர்மீடியட் பரீட்சையில் ஜெகந்நாதன் முதல் தரத்தில் தேறியவன். அதுவரை ஒரு வகுப்பிலாவது பரீட்சையில் தவறியது கிடையாது. பி.ஏ. வகுப்பில் முதல் முறை இரண்டு பாகத்திலும் தவறியபோது அவன் அடைந்த ஏமாற்றமும் துயரமும் சொல்லத்தரமல்ல. ஆயினும் எப்படியோ சகித்துக் கொண்டு இரண்டாம் முறை அதிகக் கவலையுடன் படித்தான். ஆயினும் பயனென்ன? 'மேல் மாடி காலி' என்பதற்காக அவன் கேலி செய்த 'மண்டுக்கள்' எல்லாரும் தேறிவிட்டார்கள். அவன் மட்டும் அம்முறையும் தவறிவிட்டான் - இரண்டு பாகத்திலும். அவமானம்! அவமானம்! தற்கொலையினாலன்றி இந்த அவமானம் தீருமா?