திருடன் மகன் திருடன்
அமரர் கல்கி
பழைய தகரப் பெட்டிக்குள் வைத்திருந்த பட்டாசுக் கட்டுகளையும் மத்தாப்புப் பெட்டிகளையும் பாலன் எண்ணி வைத்து ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த மாதிரி அவன் எண்ணி வைத்து ஒழுங்கு படுத்தியது, இது முப்பத்திரண்டாவது முறை. பட்டாசு, மத்தாப்பு முதலியவற்றை தொடுவதிலேயே அவனுக்கு ஓர் ஆனந்தம். பெட்டிக்குள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் நகர்த்தி வைத்து ஒழுங்குபடுத்துவதிலே அளவில்லாத சந்தோஷம். தம்பி சீனுவுக்கும், தங்கை அம்புலுவுக்கும் எது எதைக் கொடுக்கலாம் என்பது பற்றிப் பிரமாதமான யோசனை. "சீனுவுக்குப் படபடா, அம்புலுவுக்குப் புஸ்வானம்!" என்று அவனுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.