Thirukkural

திருக்குறள்

திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.

- திருவள்ளுவர்

Source: thirukkural.gokulnath.com
Licesne: Creative Commons

பொருளடக்கம்

**அறத்துப்பால்** / பாயிரவியல்

இல்லறவியல்

துறவறவியல்

ஊழியல்

**பொருட்பால்** / அரசியல்

அமைச்சியல்

அரணியல்

கூழியல்

படையியல்

நட்பியல்

குடியியல்

**காமத்துப்பால்** / களவியல்

கற்பியல்

கடவுள் வாழ்த்து
குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

**மு.வ உரை**: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

**சாலமன் பாப்பையா உரை**: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

**கலைஞர் உரை**: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

**Couplet**: A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains

**English Explanation**: As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

**Transliteration**: Akara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre Ulaku

கடவுள் வாழ்த்து
குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

**மு.வ உரை**: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

**கலைஞர் உரை**: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

**Couplet**: No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's' feet adore

**English Explanation**: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

**Transliteration**: Katradhanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaaar Enin

கடவுள் வாழ்த்து
குறள் 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

**மு.வ உரை**: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

**சாலமன் பாப்பையா உரை**: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

**கலைஞர் உரை**: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்

**Couplet**: His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain

**English Explanation**: They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds

**Transliteration**: Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai Neetuvaazh Vaar

கடவுள் வாழ்த்து
குறள் 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

**மு.வ உரை**: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

**சாலமன் பாப்பையா உரை**: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

**கலைஞர் உரை**: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை

**Couplet**: His foot, 'Whom want affects not, irks not grief,' who gain Shall not, through every time, of any woes complain

**English Explanation**: To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come

**Transliteration**: Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku Yaantum Itumpai Ila

கடவுள் வாழ்த்து
குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

**மு.வ உரை**: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

**சாலமன் பாப்பையா உரை**: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

**கலைஞர் உரை**: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

**Couplet**: The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well

**English Explanation**: The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

**Transliteration**: Irulser Iruvinaiyum Seraa Iraivan Porulser Pukazhpurindhaar Maattu

கடவுள் வாழ்த்து
குறள் 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

**மு.வ உரை**: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

**சாலமன் பாப்பையா உரை**: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்

**கலைஞர் உரை**: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்

**Couplet**: Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'

**English Explanation**: Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses

**Transliteration**: Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka Nerinindraar Neetuvaazh Vaar

கடவுள் வாழ்த்து
குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

**மு.வ உரை**: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

**கலைஞர் உரை**: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை

**Couplet**: Unless His foot, 'to Whom none can compare,' men gain, 'Tis hard for mind to find relief from anxious pain

**English Explanation**: Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable

**Transliteration**: Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal Manakkavalai Maatral Aridhu

கடவுள் வாழ்த்து
குறள் 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

**மு.வ உரை**: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

**சாலமன் பாப்பையா உரை**: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

**கலைஞர் உரை**: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல

**Couplet**: Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard the further bank of being's changeful sea to attain

**English Explanation**: None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

**Transliteration**: Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal Piravaazhi Neendhal Aridhu

கடவுள் வாழ்த்து
குறள் 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

**மு.வ உரை**: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

**சாலமன் பாப்பையா உரை**: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே

**கலைஞர் உரை**: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்

**Couplet**: Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead

**English Explanation**: The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation

**Transliteration**: Kolil Poriyin Kunamilave Enkunaththaan Thaalai Vanangaath Thalai

கடவுள் வாழ்த்து
குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

**மு.வ உரை**: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

**சாலமன் பாப்பையா உரை**: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்

**கலைஞர் உரை**: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்

**Couplet**: They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty main

**English Explanation**: None can swim the great sea of births but those who are united to the feet of God

**Transliteration**: Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa Thaar

வான்சிறப்பு
குறள் 11

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

**மு.வ உரை**: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

**சாலமன் பாப்பையா உரை**: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

**கலைஞர் உரை**: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

**Couplet**: The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives

**English Explanation**: By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia

**Transliteration**: Vaannindru Ulakam Vazhangi Varudhalaal Thaanamizhdham Endrunarar Paatru

வான்சிறப்பு
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

**மு.வ உரை**: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே

**கலைஞர் உரை**: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது

**Couplet**: The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught supplies

**English Explanation**: Rain produces good food, and is itself food

**Transliteration**: Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth Thuppaaya Thooum Mazhai

வான்சிறப்பு
குறள் 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

**மு.வ உரை**: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

**சாலமன் பாப்பையா உரை**: உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்

**கலைஞர் உரை**: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்

**Couplet**: If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain

**English Explanation**: If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world

**Transliteration**: Vinindru Poippin Virineer Viyanulakaththu Ulnindru Utatrum Pasi

வான்சிறப்பு
குறள் 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

**மு.வ உரை**: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

**சாலமன் பாப்பையா உரை**: மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

**கலைஞர் உரை**: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்

**Couplet**: If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more

**English Explanation**: If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease

**Transliteration**: Erin Uzhaaar Uzhavar Puyalennum Vaari Valangundrik Kaal

வான்சிறப்பு
குறள் 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

**மு.வ உரை**: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

**சாலமன் பாப்பையா உரை**: பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

**கலைஞர் உரை**: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

**Couplet**: 'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise

**English Explanation**: Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

**Transliteration**: Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange Etuppadhooum Ellaam Mazhai

வான்சிறப்பு
குறள் 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

**மு.வ உரை**: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

**சாலமன் பாப்பையா உரை**: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்

**கலைஞர் உரை**: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

**Couplet**: If from the clouds no drops of rain are shed 'Tis rare to see green herb lift up its head

**English Explanation**: 4 If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen

**Transliteration**: Visumpin Thuliveezhin Allaalmar Raange Pasumpul Thalaikaanpu Aridhu

வான்சிறப்பு
குறள் 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

**மு.வ உரை**: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

**சாலமன் பாப்பையா உரை**: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்

**கலைஞர் உரை**: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்

**Couplet**: If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain

**English Explanation**: Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)

**Transliteration**: Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili Thaannalkaa Thaaki Vitin

வான்சிறப்பு
குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

**மு.வ உரை**: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது

**சாலமன் பாப்பையா உரை**: மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது

**கலைஞர் உரை**: வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

**Couplet**: If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore

**English Explanation**: If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials

**Transliteration**: Sirappotu Poosanai Sellaadhu Vaanam Varakkumel Vaanorkkum Eentu

வான்சிறப்பு
குறள் 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

**மு.வ உரை**: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

**கலைஞர் உரை**: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

**Couplet**: If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'

**English Explanation**: If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world

**Transliteration**: Thaanam Thavamirantum Thangaa Viyanulakam Vaanam Vazhangaa Thenin

வான்சிறப்பு
குறள் 20

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

**மு.வ உரை**: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

**சாலமன் பாப்பையா உரை**: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது

**கலைஞர் உரை**: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

**Couplet**: When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'

**English Explanation**: If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water

**Transliteration**: Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum Vaanindru Amaiyaadhu Ozhukku

நீத்தார் பெருமை
குறள் 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

**மு.வ உரை**: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

**கலைஞர் உரை**: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்

**Couplet**: The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood

**English Explanation**: The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire

**Transliteration**: Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu Ventum Panuval Thunivu

நீத்தார் பெருமை
குறள் 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

**மு.வ உரை**: பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

**கலைஞர் உரை**: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

**Couplet**: As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to say

**English Explanation**: To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead

**Transliteration**: Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu Irandhaarai Ennikkon Tatru

நீத்தார் பெருமை
குறள் 23

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

**மு.வ உரை**: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

**சாலமன் பாப்பையா உரை**: இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது

**கலைஞர் உரை**: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

**Couplet**: Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayed

**English Explanation**: The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)

**Transliteration**: Irumai Vakaidherindhu Eentuaram Poontaar Perumai Pirangitru Ulaku

நீத்தார் பெருமை
குறள் 24

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

**மு.வ உரை**: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

**சாலமன் பாப்பையா உரை**: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்

**கலைஞர் உரை**: உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்

**Couplet**: He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains

**English Explanation**: He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven

**Transliteration**: Uranennum Thottiyaan Oraindhum Kaappaan Varanennum Vaippirkor Viththu

நீத்தார் பெருமை
குறள் 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

**மு.வ உரை**: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்

**சாலமன் பாப்பையா உரை**: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்

**கலைஞர் உரை**: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்

**Couplet**: Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell

**English Explanation**: Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses

**Transliteration**: Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan Indhirane Saalung Kari

நீத்தார் பெருமை
குறள் 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

**மு.வ உரை**: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

**கலைஞர் உரை**: பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்

**Couplet**: Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew

**English Explanation**: The great will do those things which is difficult to be done; but the mean cannot do them

**Transliteration**: Seyarkariya Seyvaar Periyar Siriyar Seyarkariya Seykalaa Thaar

நீத்தார் பெருமை
குறள் 27

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

**மு.வ உரை**: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

**சாலமன் பாப்பையா உரை**: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

**கலைஞர் உரை**: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

**Couplet**: Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway

**English Explanation**: The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell

**Transliteration**: Suvaioli Ooruosai Naatramendru Aindhin Vakaidherivaan Katte Ulaku

நீத்தார் பெருமை
குறள் 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

**மு.வ உரை**: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

**கலைஞர் உரை**: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்

**Couplet**: The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim

**English Explanation**: The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world

**Transliteration**: Niraimozhi Maandhar Perumai Nilaththu Maraimozhi Kaatti Vitum

நீத்தார் பெருமை
குறள் 29

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

**மு.வ உரை**: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

**கலைஞர் உரை**: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது

**Couplet**: The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure

**English Explanation**: The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted

**Transliteration**: Kunamennum Kundreri Nindraar Vekuli Kanameyum Kaaththal Aridhu

நீத்தார் பெருமை
குறள் 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

**மு.வ உரை**: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

**கலைஞர் உரை**: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்

**Couplet**: Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give

**English Explanation**: The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness

**Transliteration**: Andhanar Enpor Aravormar Revvuyir Kkum Sendhanmai Poontozhuka Laan

அறன் வலியுறுத்தல்
குறள் 31

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

**மு.வ உரை**: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

**சாலமன் பாப்பையா உரை**: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

**கலைஞர் உரை**: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

**Couplet**: It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain

**English Explanation**: Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

**Transliteration**: Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano Uyirkku

அறன் வலியுறுத்தல்
குறள் 32

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

**மு.வ உரை**: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

**கலைஞர் உரை**: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

**Couplet**: No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws

**English Explanation**: There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it

**Transliteration**: Araththinooungu Aakkamum Illai Adhanai Maraththalin Oongillai Ketu

அறன் வலியுறுத்தல்
குறள் 33

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

**மு.வ உரை**: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

**கலைஞர் உரை**: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்

**Couplet**: To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive

**English Explanation**: As much as possible, in every way, incessantly practise virtue

**Transliteration**: Ollum Vakaiyaan Aravinai Ovaadhe Sellumvaai Ellaanj Cheyal

அறன் வலியுறுத்தல்
குறள் 34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

**மு.வ உரை**: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

**கலைஞர் உரை**: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

**Couplet**: Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim

**English Explanation**: Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show

**Transliteration**: Manaththukkan Maasilan Aadhal Anaiththu Aran Aakula Neera Pira

அறன் வலியுறுத்தல்
குறள் 35

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

**மு.வ உரை**: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

**கலைஞர் உரை**: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்

**Couplet**: 'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path

**English Explanation**: That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

**Transliteration**: Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum Izhukkaa Iyandradhu Aram

அறன் வலியுறுத்தல்
குறள் 36

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

**மு.வ உரை**: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

**கலைஞர் உரை**: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

**Couplet**: Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies

**English Explanation**: Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend

**Transliteration**: Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu Pondrungaal Pondraath Thunai

அறன் வலியுறுத்தல்
குறள் 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

**மு.வ உரை**: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

**கலைஞர் உரை**: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்

**Couplet**: Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear

**English Explanation**: The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein

**Transliteration**: Araththaaru Ithuvena Ventaa Sivikai Poruththaanotu Oorndhaan Itai

அறன் வலியுறுத்தல்
குறள் 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

**மு.வ உரை**: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

**கலைஞர் உரை**: பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

**Couplet**: If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil

**English Explanation**: If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births

**Transliteration**: Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan Vaazhnaal Vazhiyataikkum Kal

அறன் வலியுறுத்தல்
குறள் 39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

**மு.வ உரை**: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

**கலைஞர் உரை**: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது

**Couplet**: What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light

**English Explanation**: Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise

**Transliteration**: Araththaan Varuvadhe Inpam Mar Rellaam Puraththa Pukazhum Ila

அறன் வலியுறுத்தல்
குறள் 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

**மு.வ உரை**: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

**கலைஞர் உரை**: பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

**Couplet**: 'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun

**English Explanation**: That is virtue which each ought to do, and that is vice which each should shun

**Transliteration**: Seyarpaala Thorum Arane Oruvarku Uyarpaala Thorum Pazhi

இல்வாழ்க்கை
குறள் 41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

**மு.வ உரை**: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

**கலைஞர் உரை**: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்

**Couplet**: The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain

**English Explanation**: 7 He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in

**Transliteration**: Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum Nallaatrin Nindra Thunai

இல்வாழ்க்கை
குறள் 42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

**மு.வ உரை**: துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்

**கலைஞர் உரை**: பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்

**Couplet**: To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stay

**English Explanation**: He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead

**Transliteration**: Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum Ilvaazhvaan Enpaan Thunai

இல்வாழ்க்கை
குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

**மு.வ உரை**: தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

**கலைஞர் உரை**: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்

**Couplet**: The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity

**English Explanation**: The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself

**Transliteration**: Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu Aimpulaththaaru Ompal Thalai

இல்வாழ்க்கை
குறள் 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

**மு.வ உரை**: பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

**கலைஞர் உரை**: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது

**Couplet**: Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs

**English Explanation**: His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)

**Transliteration**: Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai Vazhiyenjal Egngnaandrum Il

இல்வாழ்க்கை
குறள் 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

**மு.வ உரை**: இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

**கலைஞர் உரை**: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை

**Couplet**: If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain

**English Explanation**: If the married life possess love and virtue, these will be both its duty and reward

**Transliteration**: Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai Panpum Payanum Adhu

இல்வாழ்க்கை
குறள் 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

**மு.வ உரை**: ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?

**கலைஞர் உரை**: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது

**Couplet**: If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain

**English Explanation**: What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?

**Transliteration**: Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril Pooip Peruva Thevan?

இல்வாழ்க்கை
குறள் 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

**மு.வ உரை**: அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

**கலைஞர் உரை**: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்

**Couplet**: In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place

**English Explanation**: Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state

**Transliteration**: Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan Muyalvaarul Ellaam Thalai

இல்வாழ்க்கை
குறள் 48

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

**மு.வ உரை**: மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

**கலைஞர் உரை**: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்

**Couplet**: Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines

**English Explanation**: The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance

**Transliteration**: Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai Norpaarin Nonmai Utaiththu

இல்வாழ்க்கை
குறள் 49

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

**மு.வ உரை**: அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

**கலைஞர் உரை**: பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்

**Couplet**: The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim

**English Explanation**: The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it

**Transliteration**: Aran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum Piranpazhippa Thillaayin Nandru

இல்வாழ்க்கை
குறள் 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

**மு.வ உரை**: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

**கலைஞர் உரை**: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

**Couplet**: Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed

**English Explanation**: He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven

**Transliteration**: Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu�ryum Theyvaththul Vaikkap Patum

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

**மு.வ உரை**: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

**கலைஞர் உரை**: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்

**Couplet**: As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she

**English Explanation**: She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state

**Transliteration**: Manaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan Valaththakkaal Vaazhkkaith Thunai

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

**மு.வ உரை**: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

**கலைஞர் உரை**: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

**Couplet**: If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life

**English Explanation**: If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing

**Transliteration**: Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai Enaimaatchith Thaayinum Il

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

**மு.வ உரை**: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

**கலைஞர் உரை**: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது

**Couplet**: There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells

**English Explanation**: If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?

**Transliteration**: Illadhen Illaval Maanpaanaal Ulladhen Illaval Maanaak Katai?

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

**மு.வ உரை**: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

**சாலமன் பாப்பையா உரை**: கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

**கலைஞர் உரை**: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

**Couplet**: If woman might of chastity retain, What choicer treasure doth the world contain

**English Explanation**: What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

**Transliteration**: Pennin Perundhakka Yaavula Karpennum Thinmaiun Taakap Perin

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 55

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

**மு.வ உரை**: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

**கலைஞர் உரை**: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்

**Couplet**: No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word

**English Explanation**: If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain

**Transliteration**: Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal Peyyenap Peyyum Mazhai

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

**மு.வ உரை**: கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

**சாலமன் பாப்பையா உரை**: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

**கலைஞர் உரை**: கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

**Couplet**: Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name

**English Explanation**: She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame

**Transliteration**: Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra Sorkaaththuch Chorvilaal Pen

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

**மு.வ உரை**: மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

**கலைஞர் உரை**: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

**Couplet**: Of what avail is watch and ward? Honour's woman's safest guard

**English Explanation**: What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity

**Transliteration**: Siraikaakkum Kaappevan Seyyum Makalir Niraikaakkum Kaappe Thalai

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

**மு.வ உரை**: கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

**கலைஞர் உரை**: நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்

**Couplet**: If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide

**English Explanation**: If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish

**Transliteration**: Petraar Perinperuvar Pentir Perunjirappup Puththelir Vaazhum Ulaku

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 59

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

**மு.வ உரை**: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

**கலைஞர் உரை**: புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

**Couplet**: Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight

**English Explanation**: The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them

**Transliteration**: Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun Erupol Peetu Natai

வாழ்க்கைத் துணைநலம்
குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

**மு.வ உரை**: மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

**கலைஞர் உரை**: குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

**Couplet**: The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament

**English Explanation**: The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness

**Transliteration**: Mangalam Enpa Manaimaatchi Matru Adhan Nankalam Nanmakkat Peru

மக்கட்பேறு
குறள் 61

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

**மு.வ உரை**: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

**கலைஞர் உரை**: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

**Couplet**: Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain

**English Explanation**: Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children

**Transliteration**: Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha Makkatperu Alla Pira

மக்கட்பேறு
குறள் 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

**மு.வ உரை**: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

**சாலமன் பாப்பையா உரை**: பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

**கலைஞர் உரை**: பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது

**Couplet**: Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth

**English Explanation**: The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice

**Transliteration**: Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap Panputai Makkat Perin

மக்கட்பேறு
குறள் 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

**மு.வ உரை**: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

**கலைஞர் உரை**: தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை

**Couplet**: 'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes rise

**English Explanation**: Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

**Transliteration**: Thamporul Enpadham Makkal Avarporul Thamdham Vinaiyaan Varum

மக்கட்பேறு
குறள் 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

**மு.வ உரை**: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

**கலைஞர் உரை**: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

**Couplet**: Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd

**English Explanation**: The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia

**Transliteration**: Amizhdhinum Aatra Inidhedham Makkal Sirukai Alaaviya Koozh

மக்கட்பேறு
குறள் 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

**மு.வ உரை**: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

**கலைஞர் உரை**: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்

**Couplet**: To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear

**English Explanation**: The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear

**Transliteration**: Makkalmey Theental Utarkinpam Matru Avar Sorkettal Inpam Sevikku

மக்கட்பேறு
குறள் 66

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

**மு.வ உரை**: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

**கலைஞர் உரை**: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

**Couplet**: 'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard

**English Explanation**: "The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children

**Transliteration**: Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal Mazhalaichchol Kelaa Thavar

மக்கட்பேறு
குறள் 67

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

**மு.வ உரை**: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

**கலைஞர் உரை**: தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

**Couplet**: Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat

**English Explanation**: The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned

**Transliteration**: Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu Mundhi Iruppach Cheyal

மக்கட்பேறு
குறள் 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

**மு.வ உரை**: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

**கலைஞர் உரை**: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்

**Couplet**: Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast

**English Explanation**: That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves

**Transliteration**: Thammindham Makkal Arivutaimai Maanilaththu Mannuyirk Kellaam Inidhu

மக்கட்பேறு
குறள் 69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

**மு.வ உரை**: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

**கலைஞர் உரை**: நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்

**Couplet**: When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore

**English Explanation**: The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth

**Transliteration**: Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich Chaandron Enakketta Thaai

மக்கட்பேறு
குறள் 70

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

**மு.வ உரை**: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

**கலைஞர் உரை**: ``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்

**Couplet**: To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'

**English Explanation**: (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father

**Transliteration**: Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai Ennotraan Kol Enum Sol

அன்புடைமை
குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

**மு.வ உரை**: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

**சாலமன் பாப்பையா உரை**: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

**கலைஞர் உரை**: உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்

**Couplet**: And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain

**English Explanation**: Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

**Transliteration**: Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar Punkaneer Poosal Tharum

அன்புடைமை
குறள் 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

**மு.வ உரை**: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

**சாலமன் பாப்பையா உரை**: அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

**கலைஞர் உரை**: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

**Couplet**: The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone

**English Explanation**: Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others

**Transliteration**: Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar Enpum Uriyar Pirarkku

அன்புடைமை
குறள் 73

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

**மு.வ உரை**: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்

**கலைஞர் உரை**: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்

**Couplet**: Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone

**English Explanation**: They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

**Transliteration**: Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku Enpotu Iyaindha Thotarpu

அன்புடைமை
குறள் 74

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

**மு.வ உரை**: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

**சாலமன் பாப்பையா உரை**: குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்

**கலைஞர் உரை**: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்

**Couplet**: From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds

**English Explanation**: Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship

**Transliteration**: Anpu Eenum Aarvam Utaimai Adhueenum Nanpu Ennum Naataach Chirappu

அன்புடைமை
குறள் 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

**மு.வ உரை**: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

**சாலமன் பாப்பையா உரை**: இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்

**கலைஞர் உரை**: உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்

**Couplet**: Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love

**English Explanation**: These are the fruits of tranquil life of love

**Transliteration**: Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu Inputraar Eydhum Sirappu

அன்புடைமை
குறள் 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

**மு.வ உரை**: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

**சாலமன் பாப்பையா உரை**: அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

**கலைஞர் உரை**: வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்

**Couplet**: The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain

**English Explanation**: The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice

**Transliteration**: Araththirke Anpusaar Penpa Ariyaar Maraththirkum Aqdhe Thunai

அன்புடைமை
குறள் 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

**மு.வ உரை**: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

**சாலமன் பாப்பையா உரை**: எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

**கலைஞர் உரை**: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

**Couplet**: As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing brings

**English Explanation**: Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms

**Transliteration**: Enpi Ladhanai Veyilpolak Kaayume Anpi Ladhanai Aram

அன்புடைமை
குறள் 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

**மு.வ உரை**: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

**கலைஞர் உரை**: மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது

**Couplet**: The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blow

**English Explanation**: The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert

**Transliteration**: Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan Vatral Marandhalirth Thatru

அன்புடைமை
குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

**மு.வ உரை**: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

**கலைஞர் உரை**: அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

**Couplet**: Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed

**English Explanation**: Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member

**Transliteration**: Puraththurup Pellaam Evanseyyum Yaakkai Akaththuruppu Anpi Lavarkku

அன்புடைமை
குறள் 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

**மு.வ உரை**: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்

**சாலமன் பாப்பையா உரை**: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்

**கலைஞர் உரை**: அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

**Couplet**: Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within

**English Explanation**: That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin

**Transliteration**: Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku Enpudhol Porththa Utampu

விருந்தோம்பல்
குறள் 81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

**மு.வ உரை**: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்

**சாலமன் பாப்பையா உரை**: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

**கலைஞர் உரை**: இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே

**Couplet**: All household cares and course of daily life have this in view Guests to receive with courtesy, and kindly acts to do

**English Explanation**: The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality

**Transliteration**: Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi Velaanmai Seydhar Poruttu

விருந்தோம்பல்
குறள் 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

**மு.வ உரை**: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று

**சாலமன் பாப்பையா உரை**: விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று

**கலைஞர் உரை**: விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல

**Couplet**: Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred

**English Explanation**: It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality

**Transliteration**: Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa Marundheninum Ventarpaar Randru

விருந்தோம்பல்
குறள் 83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

**மு.வ உரை**: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

**கலைஞர் உரை**: விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை

**Couplet**: Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share

**English Explanation**: The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty

**Transliteration**: Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai Paruvandhu Paazhpatudhal Indru

விருந்தோம்பல்
குறள் 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்

**மு.வ உரை**: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

**கலைஞர் உரை**: மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்

**Couplet**: With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling rest

**English Explanation**: Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests

**Transliteration**: Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu Nalvirundhu Ompuvaan Il

விருந்தோம்பல்
குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

**மு.வ உரை**: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

**சாலமன் பாப்பையா உரை**: விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

**கலைஞர் உரை**: விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

**Couplet**: Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests rise

**English Explanation**: Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

**Transliteration**: Viththum Italventum Kollo Virundhompi Michchil Misaivaan Pulam

விருந்தோம்பல்
குறள் 86

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

**மு.வ உரை**: வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்

**சாலமன் பாப்பையா உரை**: வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

**கலைஞர் உரை**: வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்

**Couplet**: The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he

**English Explanation**: He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven

**Transliteration**: Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan Nalvarundhu Vaanath Thavarkku

விருந்தோம்பல்
குறள் 87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

**மு.வ உரை**: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்

**சாலமன் பாப்பையா உரை**: விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

**கலைஞர் உரை**: விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்

**Couplet**: To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain

**English Explanation**: The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure

**Transliteration**: Inaiththunaith Thenpadhon Rillai Virundhin Thunaiththunai Velvip Payan

விருந்தோம்பல்
குறள் 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

**மு.வ உரை**: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்

**சாலமன் பாப்பையா உரை**: விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

**கலைஞர் உரை**: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்

**Couplet**: With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry, Who cherish not their guests, nor kindly help supply

**English Explanation**: Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."

**Transliteration**: Parindhompip Patratrem Enpar Virundhompi Velvi Thalaippataa Thaar

விருந்தோம்பல்
குறள் 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

**மு.வ உரை**: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

**கலைஞர் உரை**: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்

**Couplet**: To turn from guests is penury, though worldly goods abound; 'Tis senseless folly, only with the senseless found

**English Explanation**: That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid

**Transliteration**: Utaimaiyul Inmai Virundhompal Ompaa Matamai Matavaarkan Untu

விருந்தோம்பல்
குறள் 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

**மு.வ உரை**: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

**சாலமன் பாப்பையா உரை**: தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

**கலைஞர் உரை**: அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்

**Couplet**: The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail

**English Explanation**: As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away

**Transliteration**: Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu Nokkak Kuzhaiyum Virundhu

இனியவை கூறல்
குறள் 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

**மு.வ உரை**: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

**கலைஞர் உரை**: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்

**Couplet**: Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern

**English Explanation**: Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous

**Transliteration**: Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

இனியவை கூறல்
குறள் 92

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

**மு.வ உரை**: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது

**கலைஞர் உரை**: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்

**Couplet**: A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred

**English Explanation**: Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind

**Transliteration**: Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu Insolan Aakap Perin

இனியவை கூறல்
குறள் 93

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

**மு.வ உரை**: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

**கலைஞர் உரை**: முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்

**Couplet**: With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity

**English Explanation**: Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue

**Transliteration**: Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam Inso Linadhe Aram

இனியவை கூறல்
குறள் 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

**மு.வ உரை**: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

**கலைஞர் உரை**: இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

**Couplet**: The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found

**English Explanation**: Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech

**Transliteration**: Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum Inpurooum Inso Lavarkku

இனியவை கூறல்
குறள் 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

**மு.வ உரை**: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

**சாலமன் பாப்பையா உரை**: தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா

**கலைஞர் உரை**: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது

**Couplet**: Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth

**English Explanation**: Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)

**Transliteration**: Panivutaiyan Insolan Aadhal Oruvarku Aniyalla Matrup Pira

இனியவை கூறல்
குறள் 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

**மு.வ உரை**: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

**கலைஞர் உரை**: தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்

**Couplet**: Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow

**English Explanation**: If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase

**Transliteration**: Allavai Theya Aramperukum Nallavai Naati Iniya Solin

இனியவை கூறல்
குறள் 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

**மு.வ உரை**: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்

**Couplet**: The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere

**English Explanation**: That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)

**Transliteration**: Nayan Eendru Nandri Payakkum Payaneendru Panpin Thalaippiriyaach Chol

இனியவை கூறல்
குறள் 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

**மு.வ உரை**: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

**கலைஞர் உரை**: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

**Couplet**: Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart

**English Explanation**: Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next

**Transliteration**: Sirumaiyul Neengiya Insol Marumaiyum Immaiyum Inpam Tharum

இனியவை கூறல்
குறள் 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

**மு.வ உரை**: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

**கலைஞர் உரை**: இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

**Couplet**: Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words

**English Explanation**: Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

**Transliteration**: Insol Inidheendral Kaanpaan Evankolo Vansol Vazhangu Vadhu?

இனியவை கூறல்
குறள் 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

**மு.வ உரை**: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

**சாலமன் பாப்பையா உரை**: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

**கலைஞர் உரை**: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்

**Couplet**: When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose

**English Explanation**: To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe

**Transliteration**: Iniya Ulavaaka Innaadha Kooral Kaniiruppak Kaaikavarn Thatru

செய்ந்நன்றியறிதல்
குறள் 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

**மு.வ உரை**: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

**கலைஞர் உரை**: ``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா

**Couplet**: Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid

**English Explanation**: (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received

**Transliteration**: Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum Vaanakamum Aatral Aridhu

செய்ந்நன்றியறிதல்
குறள் 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

**மு.வ உரை**: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்

**கலைஞர் உரை**: தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்

**Couplet**: A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth

**English Explanation**: A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world

**Transliteration**: Kaalaththi Naarseydha Nandri Siridheninum Gnaalaththin Maanap Peridhu

செய்ந்நன்றியறிதல்
குறள் 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

**மு.வ உரை**: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

**சாலமன் பாப்பையா உரை**: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

**கலைஞர் உரை**: என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது

**Couplet**: Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the sea

**English Explanation**: If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea

**Transliteration**: Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin Nanmai Katalin Peridhu

செய்ந்நன்றியறிதல்
குறள் 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

**மு.வ உரை**: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்

**கலைஞர் உரை**: ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்

**Couplet**: Each benefit to those of actions' fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seem

**English Explanation**: Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit

**Transliteration**: Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak Kolvar Payandheri Vaar

செய்ந்நன்றியறிதல்
குறள் 105

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

**மு.வ உரை**: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

**கலைஞர் உரை**: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்

**Couplet**: The kindly aid's extent is of its worth no measure true; Its worth is as the worth of him to whom the act you do

**English Explanation**: The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure

**Transliteration**: Udhavi Varaiththandru Udhavi Udhavi Seyappattaar Saalpin Varaiththu

செய்ந்நன்றியறிதல்
குறள் 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

**மு.வ உரை**: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

**சாலமன் பாப்பையா உரை**: உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

**கலைஞர் உரை**: மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது

**Couplet**: Kindness of men of stainless soul remember evermore Forsake thou never friends who were thy stay in sorrow sore

**English Explanation**: Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless

**Transliteration**: Maravarka Maasatraar Kenmai Thuravarka Thunpaththul Thuppaayaar Natpu

செய்ந்நன்றியறிதல்
குறள் 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

**மு.வ உரை**: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்

**கலைஞர் உரை**: ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது

**Couplet**: Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes

**English Explanation**: (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction

**Transliteration**: Ezhumai Ezhupirappum Ulluvar Thangan Vizhuman Thutaiththavar Natpu

செய்ந்நன்றியறிதல்
குறள் 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

**மு.வ உரை**: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

**கலைஞர் உரை**: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

**Couplet**: 'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day

**English Explanation**: It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)

**Transliteration**: Nandri Marappadhu Nandrandru Nandralladhu Andre Marappadhu Nandru

செய்ந்நன்றியறிதல்
குறள் 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

**மு.வ உரை**: முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

**கலைஞர் உரை**: ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது

**Couplet**: Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by

**English Explanation**: Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred

**Transliteration**: Kondranna Innaa Seyinum Avarseydha Ondrunandru Ullak Ketum

செய்ந்நன்றியறிதல்
குறள் 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

**மு.வ உரை**: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

**கலைஞர் உரை**: எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

**Couplet**: Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free

**English Explanation**: He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit

**Transliteration**: Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai Seynnandri Kondra Makarku

நடுவு நிலைமை
குறள் 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

**மு.வ உரை**: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

**கலைஞர் உரை**: பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்

**Couplet**: If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain

**English Explanation**: That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue

**Transliteration**: Thakudhi Enavondru Nandre Pakudhiyaal Paarpattu Ozhukap Perin

நடுவு நிலைமை
குறள் 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

**மு.வ உரை**: நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்

**கலைஞர் உரை**: நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

**Couplet**: The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure

**English Explanation**: The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity

**Transliteration**: Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri Echchaththir Kemaappu Utaiththu

நடுவு நிலைமை
குறள் 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

**மு.வ உரை**: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

**கலைஞர் உரை**: நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்

**Couplet**: Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retain

**English Explanation**: Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity

**Transliteration**: Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai Andre Yozhiya Vital

நடுவு நிலைமை
குறள் 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர் 
எச்சத்தாற் காணப் படும்

**மு.வ உரை**: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

**கலைஞர் உரை**: ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

**Couplet**: Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear

**English Explanation**: The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings

**Transliteration**: Thakkaar Thakavilar Enpadhu Avaravar Echchaththaar Kaanap Patum

நடுவு நிலைமை
குறள் 115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

**மு.வ உரை**: கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

**கலைஞர் உரை**: ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்

**Couplet**: The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornament

**English Explanation**: Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)

**Transliteration**: Ketum Perukkamum Illalla Nenjaththuk Kotaamai Saandrork Kani

நடுவு நிலைமை
குறள் 116

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

**மு.வ உரை**: தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

**கலைஞர் உரை**: நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்

**Couplet**: If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern

**English Explanation**: Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."

**Transliteration**: Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam Natuvoreei Alla Seyin

நடுவு நிலைமை
குறள் 117

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

**மு.வ உரை**: நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

**சாலமன் பாப்பையா உரை**: நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

**கலைஞர் உரை**: நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

**Couplet**: The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sight

**English Explanation**: The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity

**Transliteration**: Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka Nandrikkan Thangiyaan Thaazhvu

நடுவு நிலைமை
குறள் 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

**மு.வ உரை**: முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

**கலைஞர் உரை**: ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்

**Couplet**: To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praise

**English Explanation**: To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise

**Transliteration**: Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal Kotaamai Saandrork Kani

நடுவு நிலைமை
குறள் 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

**மு.வ உரை**: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

**கலைஞர் உரை**: நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

**Couplet**: Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess

**English Explanation**: Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind

**Transliteration**: Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa Utkottam Inmai Perin

நடுவு நிலைமை
குறள் 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

**மு.வ உரை**: பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

**கலைஞர் உரை**: பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

**Couplet**: As thriving trader is the trader known, Who guards another's interests as his own

**English Explanation**: The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own

**Transliteration**: Vaanikam Seyvaarkku Vaanikam Penip Piravum Thamapol Seyin

அடக்கம் உடைமை
குறள் 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

**மு.வ உரை**: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

**கலைஞர் உரை**: அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்

**Couplet**: Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him there

**English Explanation**: Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)

**Transliteration**: Atakkam Amararul Uykkum Atangaamai Aarirul Uyththu Vitum

அடக்கம் உடைமை
குறள் 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

**மு.வ உரை**: அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

**கலைஞர் உரை**: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை

**Couplet**: Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul

**English Explanation**: Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that

**Transliteration**: Kaakka Porulaa Atakkaththai Aakkam Adhaninooung Killai Uyirkku

அடக்கம் உடைமை
குறள் 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

**மு.வ உரை**: அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்

**Couplet**: If versed in wisdom's lore by virtue's law you self restrain Your self-repression known will yield you glory's gain

**English Explanation**: Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise

**Transliteration**: Serivarindhu Seermai Payakkum Arivarindhu Aatrin Atangap Perin

அடக்கம் உடைமை
குறள் 124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

**மு.வ உரை**: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

**கலைஞர் உரை**: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்

**Couplet**: In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view

**English Explanation**: More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself

**Transliteration**: Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram Malaiyinum Maanap Peridhu

அடக்கம் உடைமை
குறள் 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

**மு.வ உரை**: பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

**கலைஞர் உரை**: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்

**Couplet**: To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diadem

**English Explanation**: Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches

**Transliteration**: Ellaarkkum Nandraam Panidhal Avarullum Selvarkke Selvam Thakaiththu

அடக்கம் உடைமை
குறள் 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

**மு.வ உரை**: ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

**கலைஞர் உரை**: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்

**Couplet**: Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains

**English Explanation**: Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

**Transliteration**: Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin Ezhumaiyum Emaap Putaiththu

அடக்கம் உடைமை
குறள் 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

**மு.வ உரை**: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

**கலைஞர் உரை**: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

**Couplet**: Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weep

**English Explanation**: Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue

**Transliteration**: Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal Sokaappar Sollizhukkup Pattu

அடக்கம் உடைமை
குறள் 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

**மு.வ உரை**: தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

**கலைஞர் உரை**: ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

**Couplet**: Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing

**English Explanation**: If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil

**Transliteration**: Ondraanun Theechchol Porutpayan Untaayin Nandraakaa Thaaki Vitum

அடக்கம் உடைமை
குறள் 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

**மு.வ உரை**: தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

**கலைஞர் உரை**: நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது

**Couplet**: In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth never more

**English Explanation**: The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal

**Transliteration**: Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe Naavinaar Sutta Vatu

அடக்கம் உடைமை
குறள் 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

**மு.வ உரை**: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

**கலைஞர் உரை**: கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்

**Couplet**: Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his path

**English Explanation**: Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger

**Transliteration**: Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi Arampaarkkum Aatrin Nuzhaindhu

ஒழுக்கம் உடைமை
குறள் 131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

**மு.வ உரை**: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது

**Couplet**: 'Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share

**English Explanation**: Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life

**Transliteration**: Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam Uyirinum Ompap Patum

ஒழுக்கம் உடைமை
குறள் 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

**மு.வ உரை**: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

**கலைஞர் உரை**: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்

**Couplet**: Searching, duly watching, learning, 'decorum' still we find; Man's only aid; toiling, guard thou this with watchful mind

**English Explanation**: Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid

**Transliteration**: Parindhompik Kaakka Ozhukkam Therindhompith Therinum Aqdhe Thunai

ஒழுக்கம் உடைமை
குறள் 133

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

**மு.வ உரை**: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

**கலைஞர் உரை**: ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்

**Couplet**: 'Decorum's' true nobility on earth; 'Indecorum's' issue is ignoble birth

**English Explanation**: Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth

**Transliteration**: Ozhukkam Utaimai Kutimai Izhukkam Izhindha Pirappaai Vitum

ஒழுக்கம் உடைமை
குறள் 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

**மு.வ உரை**: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

**சாலமன் பாப்பையா உரை**: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

**கலைஞர் உரை**: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்

**Couplet**: Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermore

**English Explanation**: A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed

**Transliteration**: Marappinum Oththuk Kolalaakum Paarppaan Pirappozhukkang Kundrak Ketum

ஒழுக்கம் உடைமை
குறள் 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

**மு.வ உரை**: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

**கலைஞர் உரை**: பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

**Couplet**: The envious soul in life no rich increase of blessing gains, So man of 'due decorum' void no dignity obtains

**English Explanation**: Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness

**Transliteration**: Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai Ozhukka Milaankan Uyarvu

ஒழுக்கம் உடைமை
குறள் 136

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

**மு.வ உரை**: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

**கலைஞர் உரை**: மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்

**Couplet**: The strong of soul no jot abate of 'strict decorum's' laws, Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause

**English Explanation**: Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them

**Transliteration**: Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin Edham Patupaak Karindhu

ஒழுக்கம் உடைமை
குறள் 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

**மு.வ உரை**: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

**கலைஞர் உரை**: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

**Couplet**: 'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeserved

**English Explanation**: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace

**Transliteration**: Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin Eydhuvar Eydhaap Pazhi

ஒழுக்கம் உடைமை
குறள் 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

**மு.வ உரை**: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

**கலைஞர் உரை**: நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்

**Couplet**: 'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally

**English Explanation**: Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow

**Transliteration**: Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam Endrum Itumpai Tharum

ஒழுக்கம் உடைமை
குறள் 139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

**மு.வ உரை**: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

**கலைஞர் உரை**: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

**Couplet**: It cannot be that they who 'strict decorum's' law fulfil, E'en in forgetful mood, should utter words of ill

**English Explanation**: Those who study propriety of conduct will not speak evil, even forgetfully

**Transliteration**: Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya Vazhukkiyum Vaayaar Solal

ஒழுக்கம் உடைமை
குறள் 140

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

**மு.வ உரை**: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

**கலைஞர் உரை**: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்

**Couplet**: Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well

**English Explanation**: Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant

**Transliteration**: Ulakaththotu Otta Ozhukal Palakatrum Kallaar Arivilaa Thaar

பிறனில் விழையாமை
குறள் 141

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்

**மு.வ உரை**: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

**கலைஞர் உரை**: பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை

**Couplet**: Who laws of virtue and possession's rights have known, Indulge no foolish love of her by right another's own

**English Explanation**: The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property

**Transliteration**: Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu Aramporul Kantaarkan Il

பிறனில் விழையாமை
குறள் 142

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

**மு.வ உரை**: அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை

**கலைஞர் உரை**: பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்

**Couplet**: No fools, of all that stand from virtue's pale shut out, Like those who longing lurk their neighbour's gate without

**English Explanation**: Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door

**Transliteration**: Arankatai Nindraarul Ellaam Pirankatai Nindraarin Pedhaiyaar Il

பிறனில் விழையாமை
குறள் 143

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

**மு.வ உரை**: ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்

**கலைஞர் உரை**: நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்

**Couplet**: They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise

**English Explanation**: 19 Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who

**Transliteration**: Vilindhaarin Verallar Mandra Thelindhaaril Theemai Purindhu Ozhuku Vaar

பிறனில் விழையாமை
குறள் 144

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

**மு.வ உரை**: தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

**கலைஞர் உரை**: பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்

**Couplet**: How great soe'er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour's wife

**English Explanation**: However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

**Transliteration**: Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum Theraan Piranil Pukal

பிறனில் விழையாமை
குறள் 145

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

**மு.வ உரை**: இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

**சாலமன் பாப்பையா உரை**: அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

**கலைஞர் உரை**: எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்

**Couplet**: 'Mere triflel' saying thus, invades the home, so he ensures A gain of guilt that deathless aye endures

**English Explanation**: He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever

**Transliteration**: Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum Viliyaadhu Nirkum Pazhi

பிறனில் விழையாமை
குறள் 146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

**மு.வ உரை**: பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

**கலைஞர் உரை**: பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

**Couplet**: Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four

**English Explanation**: Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife

**Transliteration**: Pakaipaavam Achcham Pazhiyena Naankum Ikavaavaam Illirappaan Kan

பிறனில் விழையாமை
குறள் 147

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

**மு.வ உரை**: அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்

**கலைஞர் உரை**: பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்

**Couplet**: Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously

**English Explanation**: He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder

**Transliteration**: Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal Penmai Nayavaa Thavan

பிறனில் விழையாமை
குறள் 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

**மு.வ உரை**: பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

**கலைஞர் உரை**: வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

**Couplet**: Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of life

**English Explanation**: That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great

**Transliteration**: Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku Aranondro Aandra Vozhukku

பிறனில் விழையாமை
குறள் 149

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

**மு.வ உரை**: கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்

**சாலமன் பாப்பையா உரை**: அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே

**கலைஞர் உரை**: பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்

**Couplet**: Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride

**English Explanation**: Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another

**Transliteration**: Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin Pirarkkuriyaal Tholdhoyaa Thaar

பிறனில் விழையாமை
குறள் 150

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

**மு.வ உரை**: ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது

**சாலமன் பாப்பையா உரை**: அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

**கலைஞர் உரை**: பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்

**Couplet**: Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet not

**English Explanation**: Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another

**Transliteration**: Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal Penmai Nayavaamai Nandru

பொறையுடைமை
குறள் 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

**மு.வ உரை**: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

**சாலமன் பாப்பையா உரை**: தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

**கலைஞர் உரை**: தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

**Couplet**: As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best

**English Explanation**: To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues

**Transliteration**: Akazhvaaraith Thaangum Nilampolath Thammai Ikazhvaarp Poruththal Thalai

பொறையுடைமை
குறள் 152

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

**மு.வ உரை**: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

**கலைஞர் உரை**: அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

**Couplet**: Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;

**English Explanation**: Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that

**Transliteration**: Poruththal Irappinai Endrum Adhanai Maraththal Adhaninum Nandru

பொறையுடைமை
குறள் 153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

**மு.வ உரை**: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது

**கலைஞர் உரை**: வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது

**Couplet**: The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart

**English Explanation**: To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might

**Transliteration**: Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul Vanmai Matavaarp Porai

பொறையுடைமை
குறள் 154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

**மு.வ உரை**: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

**கலைஞர் உரை**: பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்

**Couplet**: Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain

**English Explanation**: If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

**Transliteration**: Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai Potri Yozhukap Patum

பொறையுடைமை
குறள் 155

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

**மு.வ உரை**: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

**கலைஞர் உரை**: தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்

**Couplet**: Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized

**English Explanation**: (The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care

**Transliteration**: Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar Poruththaaraip Ponpor Podhindhu

பொறையுடைமை
குறள் 156

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

**மு.வ உரை**: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

**கலைஞர் உரை**: தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்

**Couplet**: Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away

**English Explanation**: The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world

**Transliteration**: Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup Pondrun Thunaiyum Pukazh

பொறையுடைமை
குறள் 157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

**மு.வ உரை**: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது

**கலைஞர் உரை**: பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

**Couplet**: Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep

**English Explanation**: Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue

**Transliteration**: Thiranalla Tharpirar Seyyinum Nonondhu Aranalla Seyyaamai Nandru

பொறையுடைமை
குறள் 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

**மு.வ உரை**: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

**கலைஞர் உரை**: ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்

**Couplet**: With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail

**English Explanation**: Let a man by patience overcome those who through pride commit excesses

**Transliteration**: Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham Thakudhiyaan Vendru Vital

பொறையுடைமை
குறள் 159

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

**மு.வ உரை**: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

**கலைஞர் உரை**: எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்

**Couplet**: They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure

**English Explanation**: Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics

**Transliteration**: Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai Innaachchol Norkir Pavar

பொறையுடைமை
குறள் 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்

**மு.வ உரை**: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

**கலைஞர் உரை**: பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்

**Couplet**: Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain

**English Explanation**: Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others

**Transliteration**: Unnaadhu Norpaar Periyar Pirarsollum Innaachchol Norpaarin Pin

அழுக்காறாமை
குறள் 161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு

**மு.வ உரை**: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

**கலைஞர் உரை**: மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்

**Couplet**: As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind

**English Explanation**: Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct

**Transliteration**: Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Ilaadha Iyalpu

அழுக்காறாமை
குறள் 162

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

**மு.வ உரை**: யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

**கலைஞர் உரை**: யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை

**Couplet**: If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worth

**English Explanation**: Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others

**Transliteration**: Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum Azhukkaatrin Anmai Perin

அழுக்காறாமை
குறள் 163

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

**மு.வ உரை**: தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்

**கலைஞர் உரை**: அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

**Couplet**: Nor wealth nor virtue does that man desire 'tis plain, Whom others' wealth delights not, feeling envious pain

**English Explanation**: Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."

**Transliteration**: Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam Penaadhu Azhukkarup Paan

அழுக்காறாமை
குறள் 164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து

**மு.வ உரை**: பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

**சாலமன் பாப்பையா உரை**: பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

**கலைஞர் உரை**: தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

**Couplet**: The wise through envy break not virtue's laws, Knowing ill-deeds of foul disgrace the cause

**English Explanation**: (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds

**Transliteration**: Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin Edham Patupaakku Arindhu

அழுக்காறாமை
குறள் 165

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது

**மு.வ உரை**: பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

**சாலமன் பாப்பையா உரை**: பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்

**கலைஞர் உரை**: பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

**Couplet**: Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate

**English Explanation**: To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction

**Transliteration**: Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar Vazhukka�yum Keteen Padhu

அழுக்காறாமை
குறள் 166

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்

**மு.வ உரை**: பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

**கலைஞர் உரை**: உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்

**Couplet**: Who scans good gifts to others given with envious eye, His kin, with none to clothe or feed them, surely die

**English Explanation**: He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment

**Transliteration**: Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum Unpadhooum Indrik Ketum

அழுக்காறாமை
குறள் 167

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

**மு.வ உரை**: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

**கலைஞர் உரை**: செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்

**Couplet**: From envious man good fortune's goddess turns away, Grudging him good, and points him out misfortune's prey

**English Explanation**: Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister

**Transliteration**: Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval Thavvaiyaik Kaatti Vitum

அழுக்காறாமை
குறள் 168

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

**மு.வ உரை**: பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

**கலைஞர் உரை**: பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

**Couplet**: Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery pain

**English Explanation**: Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

**Transliteration**: Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth Theeyuzhi Uyththu Vitum

அழுக்காறாமை
குறள் 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

**மு.வ உரை**: பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை

**சாலமன் பாப்பையா உரை**: பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க

**கலைஞர் உரை**: பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்

**Couplet**: To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ

**English Explanation**: The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered

**Transliteration**: Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan Ketum Ninaikkap Patum

அழுக்காறாமை
குறள் 170

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

**மு.வ உரை**: பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை

**கலைஞர் உரை**: பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை

**Couplet**: No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain

**English Explanation**: Never have the envious become great; never have those who are free from envy been without greatness

**Transliteration**: Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar Perukkaththil Theerndhaarum Il

வெஃகாமை
குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

**மு.வ உரை**: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

**கலைஞர் உரை**: மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்

**Couplet**: With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door

**English Explanation**: If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred

**Transliteration**: Natuvindri Nanporul Veqkin Kutipondrik Kutramum Aange Tharum

வெஃகாமை
குறள் 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

**மு.வ உரை**: நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

**கலைஞர் உரை**: நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்

**Couplet**: Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing

**English Explanation**: Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained

**Transliteration**: Patupayan Veqkip Pazhippatuva Seyyaar Natuvanmai Naanu Pavar

வெஃகாமை
குறள் 173

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

**மு.வ உரை**: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

**கலைஞர் உரை**: அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்

**Couplet**: No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire

**English Explanation**: Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)

**Transliteration**: Sitrinpam Veqki Aranalla Seyyaare Matrinpam Ventu Pavar

வெஃகாமை
குறள் 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

**மு.வ உரை**: ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

**கலைஞர் உரை**: புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்

**Couplet**: Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need

**English Explanation**: The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."

**Transliteration**: Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra Punmaiyil Kaatchi Yavar

வெஃகாமை
குறள் 175

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

**மு.வ உரை**: யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?

**கலைஞர் உரை**: யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

**Couplet**: What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn

**English Explanation**: What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?

**Transliteration**: Aqki Akandra Arivennaam Yaarmaattum Veqki Veriya Seyin

வெஃகாமை
குறள் 176

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

**மு.வ உரை**: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

**கலைஞர் உரை**: அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்

**Couplet**: Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong

**English Explanation**: If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish

**Transliteration**: Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip Pollaadha Soozhak Ketum

வெஃகாமை
குறள் 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

**மு.வ உரை**: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

**கலைஞர் உரை**: பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது

**Couplet**: Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired

**English Explanation**: Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory

**Transliteration**: Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin Maantar Karidhaam Payan

வெஃகாமை
குறள் 178

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்

**மு.வ உரை**: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

**கலைஞர் உரை**: தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்

**Couplet**: What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine

**English Explanation**: If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness

**Transliteration**: Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai Ventum Pirankaip Porul

வெஃகாமை
குறள் 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு

**மு.வ உரை**: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

**கலைஞர் உரை**: பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்

**Couplet**: Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed

**English Explanation**: Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others

**Transliteration**: Aranarindhu Veqkaa Arivutaiyaarch Cherum Thiranarin Thaange Thiru

வெஃகாமை
குறள் 180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு

**மு.வ உரை**: வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

**கலைஞர் உரை**: விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்

**Couplet**: From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still

**English Explanation**: To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory

**Transliteration**: Iraleenum Ennaadhu Veqkin Viraleenum Ventaamai Ennunj Cherukku

புறங்கூறாமை
குறள் 181

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

**மு.வ உரை**: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

**கலைஞர் உரை**: அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது

**Couplet**: Though virtuous words his lips speak not, and all his deeds are ill If neighbour he defame not, there's good within him still

**English Explanation**: Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."

**Transliteration**: Arangooraan Alla Seyinum Oruvan Purangooraan Endral Inidhu

புறங்கூறாமை
குறள் 182

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

**மு.வ உரை**: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.

**கலைஞர் உரை**: ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது

**Couplet**: Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile

**English Explanation**: To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue

**Transliteration**: Aranazheei Allavai Seydhalin Theedhe Puranazheeip Poiththu Nakai

புறங்கூறாமை
குறள் 183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

**மு.வ உரை**: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.

**சாலமன் பாப்பையா உரை**: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

**கலைஞர் உரை**: கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று

**Couplet**: 'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh

**English Explanation**: Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out

**Transliteration**: Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal Arangootrum Aakkath Tharum

புறங்கூறாமை
குறள் 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

**மு.வ உரை**: எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

**கலைஞர் உரை**: நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு

**Couplet**: In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought

**English Explanation**: Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it

**Transliteration**: Kannindru Kannarach Chollinum Sollarka Munnindru Pinnokkaach Chol

புறங்கூறாமை
குறள் 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

**மு.வ உரை**: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

**கலைஞர் உரை**: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

**Couplet**: The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' proclaims

**English Explanation**: The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back

**Transliteration**: Aranjollum Nenjaththaan Anmai Puranjollum Punmaiyaar Kaanap Patum

புறங்கூறாமை
குறள் 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

**மு.வ உரை**: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

**கலைஞர் உரை**: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

**Couplet**: Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell

**English Explanation**: The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published

**Transliteration**: Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum Thirandherindhu Koorap Patum

புறங்கூறாமை
குறள் 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

**மு.வ உரை**: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

**கலைஞர் உரை**: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்

**Couplet**: With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away

**English Explanation**: Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives

**Transliteration**: Pakachchollik Kelirp Pirippar Nakachcholli Natpaatal Thetraa Thavar

புறங்கூறாமை
குறள் 188

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

**மு.வ உரை**: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

**சாலமன் பாப்பையா உரை**: தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

**கலைஞர் உரை**: நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

**Couplet**: Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name

**English Explanation**: What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

**Transliteration**: Thunniyaar Kutramum Thootrum Marapinaar Ennaikol Edhilaar Maattu

புறங்கூறாமை
குறள் 189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை

**மு.வ உரை**: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

**கலைஞர் உரை**: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது

**Couplet**: 'Tis charity, I ween, that makes the earth sustain their load Who, neighbours' absence watching, tales or slander tell abroad

**English Explanation**: The world through charity supports the weight of those who reproach others observing their absence

**Transliteration**: Arannokki Aatrungol Vaiyam Purannokkip Punsol Uraippaan Porai

புறங்கூறாமை
குறள் 190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

**மு.வ உரை**: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

**சாலமன் பாப்பையா உரை**: புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?

**கலைஞர் உரை**: பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்

**Couplet**: If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man

**English Explanation**: If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?

**Transliteration**: Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin Theedhunto Mannum Uyirkku

பயனில சொல்லாமை
குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

**மு.வ உரை**: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

**சாலமன் பாப்பையா உரை**: பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

**கலைஞர் உரை**: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

**Couplet**: Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise

**English Explanation**: He who to the disgust of many speaks useless things will be despised by all

**Transliteration**: Pallaar Muniyap Payanila Solluvaan Ellaarum Ellap Patum

பயனில சொல்லாமை
குறள் 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது

**மு.வ உரை**: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

**கலைஞர் உரை**: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

**Couplet**: Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more

**English Explanation**: To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

**Transliteration**: Payanila Pallaarmun Sollal Nayanila Nattaarkan Seydhalir Reedhu

பயனில சொல்லாமை
குறள் 193

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

**மு.வ உரை**: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

**கலைஞர் உரை**: பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

**Couplet**: Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains

**English Explanation**: That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

**Transliteration**: Nayanilan Enpadhu Sollum Payanila Paarith Thuraikkum Urai

பயனில சொல்லாமை
குறள் 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

**மு.வ உரை**: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

**கலைஞர் உரை**: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்

**Couplet**: Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good

**English Explanation**: 25 The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,

**Transliteration**: Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap Panpilsol Pallaa Rakaththu

பயனில சொல்லாமை
குறள் 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

**மு.வ உரை**: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

**கலைஞர் உரை**: நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்

**Couplet**: Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense

**English Explanation**: If the good speak vain words their eminence and excellence will leave them

**Transliteration**: Seermai Sirappotu Neengum Payanila Neermai Yutaiyaar Solin

பயனில சொல்லாமை
குறள் 196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

**மு.வ உரை**: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

**கலைஞர் உரை**: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

**Couplet**: Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity

**English Explanation**: Call not him a man who parades forth his empty words Call him the chaff of men

**Transliteration**: Payanil Sol Paaraattu Vaanai Makanenal Makkat Padhati Yenal

பயனில சொல்லாமை
குறள் 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

**மு.வ உரை**: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

**கலைஞர் உரை**: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது

**Couplet**: Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle word

**English Explanation**: Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things

**Transliteration**: Nayanila Sollinunj Cholluka Saandror Payanila Sollaamai Nandru

பயனில சொல்லாமை
குறள் 198

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்

**மு.வ உரை**: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

**சாலமன் பாப்பையா உரை**: அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.

**கலைஞர் உரை**: அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்

**Couplet**: The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance

**English Explanation**: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

**Transliteration**: Arumpayan Aayum Arivinaar Sollaar Perumpayan Illaadha Sol

பயனில சொல்லாமை
குறள் 199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

**மு.வ உரை**: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

**கலைஞர் உரை**: மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்

**Couplet**: The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity

**English Explanation**: Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not

**Transliteration**: Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha Maasaru Kaatchi Yavar

பயனில சொல்லாமை
குறள் 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

**மு.வ உரை**: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

**கலைஞர் உரை**: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்

**Couplet**: If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word

**English Explanation**: Speak what is useful, and speak not useless words

**Transliteration**: Solluka Sollir Payanutaiya Sollarka Sollir Payanilaach Chol

தீவினையச்சம்
குறள் 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு

**மு.வ உரை**: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

**கலைஞர் உரை**: தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

**Couplet**: With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin

**English Explanation**: Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin

**Transliteration**: Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar Theevinai Ennum Serukku

தீவினையச்சம்
குறள் 202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

**மு.வ உரை**: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

**கலைஞர் உரை**: தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்

**Couplet**: Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe

**English Explanation**: Because evil produces evil, therefore should evil be feared more than fire

**Transliteration**: Theeyavai Theeya Payaththalaal Theeyavai Theeyinum Anjap Patum

தீவினையச்சம்
குறள் 203

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்

**மு.வ உரை**: தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

**கலைஞர் உரை**: தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்

**Couplet**: Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

**English Explanation**: So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

**Transliteration**: Arivinul Ellaan Thalaiyenpa Theeya Seruvaarkkum Seyyaa Vital

தீவினையச்சம்
குறள் 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

**மு.வ உரை**: பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

**சாலமன் பாப்பையா உரை**: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

**கலைஞர் உரை**: மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்

**Couplet**: Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall

**English Explanation**: Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates

**Transliteration**: Marandhum Piranketu Soozharka Soozhin Aranjoozham Soozhndhavan Ketu

தீவினையச்சம்
குறள் 205

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து

**மு.வ உரை**: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

**கலைஞர் உரை**: வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்

**Couplet**: Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still

**English Explanation**: Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still

**Transliteration**: Ilan Endru Theeyavai Seyyarka Seyyin Ilanaakum Matrum Peyarththu

தீவினையச்சம்
குறள் 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

**மு.வ உரை**: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

**கலைஞர் உரை**: வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்

**Couplet**: What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others done

**English Explanation**: Let him not do evil to others who desires not that sorrows should pursue him

**Transliteration**: Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala Thannai Atalventaa Thaan

தீவினையச்சம்
குறள் 207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்

**மு.வ உரை**: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

**சாலமன் பாப்பையா உரை**: எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

**கலைஞர் உரை**: ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்

**Couplet**: From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay

**English Explanation**: However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill

**Transliteration**: Enaippakai Yutraarum Uyvar Vinaippakai Veeyaadhu Pinsendru Atum

தீவினையச்சம்
குறள் 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று

**மு.வ உரை**: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

**கலைஞர் உரை**: ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்

**Couplet**: Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attends

**English Explanation**: Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not

**Transliteration**: Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai Veeyaadhu Atiurain Thatru

தீவினையச்சம்
குறள் 209

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்

**மு.வ உரை**: ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

**கலைஞர் உரை**: தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது

**Couplet**: Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near

**English Explanation**: If a man love himself, let him not commit any sin however small

**Transliteration**: Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum Thunnarka Theevinaip Paal

தீவினையச்சம்
குறள் 210

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

**மு.வ உரை**: ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

**கலைஞர் உரை**: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க

**Couplet**: The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide

**English Explanation**: Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path

**Transliteration**: Arungetan Enpadhu Arika Marungotith Theevinai Seyyaan Enin

ஒப்புரவறிதல்
குறள் 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு

**மு.வ உரை**: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?

**கலைஞர் உரை**: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்

**Couplet**: Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is given

**English Explanation**: Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?

**Transliteration**: Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu En Aatrung Kollo Ulaku

ஒப்புரவறிதல்
குறள் 212

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

**மு.வ உரை**: ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

**கலைஞர் உரை**: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்

**Couplet**: The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours

**English Explanation**: All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence

**Transliteration**: Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku Velaanmai Seydhar Poruttu

ஒப்புரவறிதல்
குறள் 213

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

**மு.வ உரை**: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

**சாலமன் பாப்பையா உரை**: தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

**கலைஞர் உரை**: பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது

**Couplet**: To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below

**English Explanation**: It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods

**Transliteration**: Puththe Lulakaththum Eentum Peralaridhe Oppuravin Nalla Pira

ஒப்புரவறிதல்
குறள் 214

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

**மு.வ உரை**: ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

**கலைஞர் உரை**: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்

**Couplet**: Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place

**English Explanation**: He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the dead

**Transliteration**: Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan Seththaarul Vaikkap Patum

ஒப்புரவறிதல்
குறள் 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

**மு.வ உரை**: ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

**கலைஞர் உரை**: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்

**Couplet**: The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies

**English Explanation**: The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank

**Transliteration**: Ooruni Neernirain Thatre Ulakavaam Perari Vaalan Thiru

ஒப்புரவறிதல்
குறள் 216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

**மு.வ உரை**: ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

**கலைஞர் உரை**: ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

**Couplet**: A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart

**English Explanation**: The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town

**Transliteration**: Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam Nayanutai Yaankan Patin

ஒப்புரவறிதல்
குறள் 217

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

**மு.வ உரை**: ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

**கலைஞர் உரை**: பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்

**Couplet**: Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him of large and noble heart

**English Explanation**: If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease

**Transliteration**: Marundhaakith Thappaa Maraththatraal Selvam Perundhakai Yaankan Patin

ஒப்புரவறிதல்
குறள் 218

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்

**மு.வ உரை**: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

**கலைஞர் உரை**: தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்

**Couplet**: E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision true

**English Explanation**: The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth

**Transliteration**: Itanil Paruvaththum Oppuravirku Olkaar Katanari Kaatchi Yavar

ஒப்புரவறிதல்
குறள் 219

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு

**மு.வ உரை**: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

**கலைஞர் உரை**: பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்

**Couplet**: The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none

**English Explanation**: The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same

**Transliteration**: Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera Seyyaadhu Amaikalaa Vaaru

ஒப்புரவறிதல்
குறள் 220

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

**மு.வ உரை**: ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

**கலைஞர் உரை**: பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்

**Couplet**: Though by 'beneficence,' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sum

**English Explanation**: If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self

**Transliteration**: Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan Vitrukkol Thakka Thutaiththu

ஈ.கை
குறள் 221

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

**மு.வ உரை**: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

**கலைஞர் உரை**: இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்

**Couplet**: Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense

**English Explanation**: To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

**Transliteration**: Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam Kuriyedhirppai Neera Thutaiththu

ஈ.கை
குறள் 222

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

**மு.வ உரை**: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

**கலைஞர் உரை**: பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்

**Couplet**: Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still

**English Explanation**: To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven

**Transliteration**: Nallaaru Eninum Kolaldheedhu Melulakam Illeninum Eedhale Nandru

ஈ.கை
குறள் 223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

**மு.வ உரை**: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

**கலைஞர் உரை**: தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்

**Couplet**: 'I've nought' is ne'er the high-born man's reply; He gives to those who raise themselves that cry

**English Explanation**: (Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth

**Transliteration**: Ilanennum Evvam Uraiyaamai Eedhal Kulanutaiyaan Kanne Yula

ஈ.கை
குறள் 224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு

**மு.வ உரை**: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

**சாலமன் பாப்பையா உரை**: கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

**கலைஞர் உரை**: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்

**Couplet**: The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright

**English Explanation**: To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance

**Transliteration**: Innaadhu Irakkap Patudhal Irandhavar Inmukang Kaanum Alavu

ஈ.கை
குறள் 225

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

**மு.வ உரை**: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

**கலைஞர் உரை**: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

**Couplet**: 'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gain

**English Explanation**: The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)

**Transliteration**: Aatruvaar Aatral Pasiaatral Appasiyai Maatruvaar Aatralin Pin

ஈ.கை
குறள் 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

**மு.வ உரை**: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

**கலைஞர் உரை**: பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்

**Couplet**: Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure

**English Explanation**: The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth

**Transliteration**: Atraar Azhipasi Theerththal Aqdhoruvan Petraan Porulvaip Puzhi

ஈ.கை
குறள் 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது

**மு.வ உரை**: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

**கலைஞர் உரை**: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை

**Couplet**: Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel

**English Explanation**: The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

**Transliteration**: Paaththoon Mareei Yavanaip Pasiyennum Theeppini Theental Aridhu

ஈ.கை
குறள் 228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

**மு.வ உரை**: தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?

**கலைஞர் உரை**: ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

**Couplet**: Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it so

**English Explanation**: Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?

**Transliteration**: Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai Vaiththizhakkum Vanka Navar

ஈ.கை
குறள் 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

**மு.வ உரை**: பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

**சாலமன் பாப்பையா உரை**: பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

**கலைஞர் உரை**: பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது

**Couplet**: They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread

**English Explanation**: 29 Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more

**Transliteration**: Iraththalin Innaadhu Mandra Nirappiya Thaame Thamiyar Unal

ஈ.கை
குறள் 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை

**மு.வ உரை**: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

**கலைஞர் உரை**: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது

**Couplet**: 'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give

**English Explanation**: Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

**Transliteration**: Saadhalin Innaadha Thillai Inidhadhooum Eedhal Iyaiyaak Katai

புகழ்
குறள் 231

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

**மு.வ உரை**: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

**கலைஞர் உரை**: கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை

**Couplet**: See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain

**English Explanation**: Give to the poor and live with praise There is no greater profit to man than that

**Transliteration**: Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu Oodhiyam Illai Uyirkku

புகழ்
குறள் 232

உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்

**மு.வ உரை**: புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

**கலைஞர் உரை**: போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்

**Couplet**: The speech of all that speak agrees to crown The men that give to those that ask, with fair renown

**English Explanation**: Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor

**Transliteration**: Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru Eevaarmel Nirkum Pukazh

புகழ்
குறள் 233

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்

**மு.வ உரை**: உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

**கலைஞர் உரை**: ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை

**Couplet**: Save praise alone that soars on high, Nought lives on earth that shall not die

**English Explanation**: There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness

**Transliteration**: Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal Pondraadhu Nirpadhon Ril

புகழ்
குறள் 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு

**மு.வ உரை**: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..

**சாலமன் பாப்பையா உரை**: தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌.

**கலைஞர் உரை**: இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது

**Couplet**: If men do virtuous deeds by world-wide ample glory crowned, The heavens will cease to laud the sage for other gifts renowned

**English Explanation**: If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world

**Transliteration**: Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip Potraadhu Puththel Ulaku

புகழ்
குறள் 235

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

**மு.வ உரை**: புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

**கலைஞர் உரை**: துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்

**Couplet**: Loss that is gain, and death of life's true bliss fulfilled, Are fruits which only wisdom rare can yield

**English Explanation**: Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise

**Transliteration**: Naththampol Ketum Uladhaakum Saakkaatum Viththakark Kallaal Aridhu

புகழ்
குறள் 236

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

**மு.வ உரை**: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

**கலைஞர் உரை**: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது

**Couplet**: If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your face

**English Explanation**: If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born

**Transliteration**: Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar Thondralin Thondraamai Nandru

புகழ்
குறள் 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்

**மு.வ உரை**: தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

**கலைஞர் உரை**: உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

**Couplet**: If you your days will spend devoid of goodly fame, When men despise, why blame them? You've yourself to blame

**English Explanation**: Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability

**Transliteration**: Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai Ikazhvaarai Novadhu Evan?

புகழ்
குறள் 238

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

**மு.வ உரை**: தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

**கலைஞர் உரை**: தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்

**Couplet**: Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men

**English Explanation**: Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world

**Transliteration**: Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum Echcham Peraaa Vitin

புகழ்
குறள் 239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

**மு.வ உரை**: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

**கலைஞர் உரை**: புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்

**Couplet**: The blameless fruits of fields' increase will dwindle down, If earth the burthen bear of men without renown

**English Explanation**: The ground which supports a body without fame will diminish in its rich produce

**Transliteration**: Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa Yaakkai Poruththa Nilam

புகழ்
குறள் 240

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

**மு.வ உரை**: தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

**கலைஞர் உரை**: பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்

**Couplet**: Who live without reproach, them living men we deem; Who live without renown, live not, though living men they seem

**English Explanation**: Those live who live without disgrace Those who live without fame live not

**Transliteration**: Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya Vaazhvaare Vaazhaa Thavar

அருளுடைமை
குறள் 241

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள

**மு.வ உரை**: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

**கலைஞர் உரை**: கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது

**Couplet**: Wealth 'mid wealth is wealth 'kindliness'; Wealth of goods the vilest too possess

**English Explanation**: The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men

**Transliteration**: Arutchelvam Selvaththul Selvam Porutchelvam Pooriyaar Kannum Ula

அருளுடைமை
குறள் 242

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

**மு.வ உரை**: நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

**கலைஞர் உரை**: பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்

**Couplet**: The law of 'grace' fulfil, by methods good due trial made, Though many systems you explore, this is your only aid

**English Explanation**: (Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)

**Transliteration**: Nallaatraal Naati Arulaalka Pallaatraal Therinum Aqdhe Thunai

அருளுடைமை
குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

**மு.வ உரை**: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

**கலைஞர் உரை**: அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்

**Couplet**: They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abides

**English Explanation**: They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness

**Transliteration**: Arulserndha Nenjinaark Killai Irulserndha Innaa Ulakam Pukal

அருளுடைமை
குறள் 244

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை

**மு.வ உரை**: தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

**கலைஞர் உரை**: எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்

**Couplet**: Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feel

**English Explanation**: (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)

**Transliteration**: Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa Thannuyir Anjum Vinai

அருளுடைமை
குறள் 245

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி

**மு.வ உரை**: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

**கலைஞர் உரை**: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று

**Couplet**: The teeming earth's vast realm, round which the wild winds blow, Is witness, men of 'grace' no woeful want shall know

**English Explanation**: This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted

**Transliteration**: Allal Arulaalvaarkku Illai Valivazhangum Mallanmaa Gnaalang Kari

அருளுடைமை
குறள் 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

**மு.வ உரை**: அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

**சாலமன் பாப்பையா உரை**: அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

**கலைஞர் உரை**: அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்

**Couplet**: Gain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do

**English Explanation**: (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)

**Transliteration**: Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi Allavai Seydhozhuku Vaar

அருளுடைமை
குறள் 247

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு

**மு.வ உரை**: பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

**சாலமன் பாப்பையா உரை**: பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

**கலைஞர் உரை**: பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது

**Couplet**: As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lot

**English Explanation**: As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness

**Transliteration**: Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku Ivvulakam Illaaki Yaangu

அருளுடைமை
குறள் 248

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

**மு.வ உரை**: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.

**கலைஞர் உரை**: பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது

**Couplet**: Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doom

**English Explanation**: Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change

**Transliteration**: Porulatraar Pooppar Orukaal Arulatraar Atraarmar Raadhal Aridhu

அருளுடைமை
குறள் 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

**மு.வ உரை**: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

**கலைஞர் உரை**: அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்

**Couplet**: When souls unwise true wisdom's mystic vision see, The 'graceless' man may work true works of charity

**English Explanation**: If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom

**Transliteration**: Therulaadhaan Meypporul Kantatraal Therin Arulaadhaan Seyyum Aram

அருளுடைமை
குறள் 250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து

**மு.வ உரை**: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

**கலைஞர் உரை**: தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது

**Couplet**: When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe

**English Explanation**: When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself

**Transliteration**: Valiyaarmun Thannai Ninaikka Thaan Thannin Meliyaarmel Sellu Mitaththu

புலால் மறுத்தல்
குறள் 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

**மு.வ உரை**: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?

**கலைஞர் உரை**: தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்

**Couplet**: How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own

**English Explanation**: How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures

**Transliteration**: Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan Engnganam Aalum Arul?

புலால் மறுத்தல்
குறள் 252

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

**மு.வ உரை**: பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

**கலைஞர் உரை**: பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை

**Couplet**: No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate

**English Explanation**: As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh

**Transliteration**: Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi Aangillai Oondhin Pavarkku

புலால் மறுத்தல்
குறள் 253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்

**மு.வ உரை**: ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

**சாலமன் பாப்பையா உரை**: கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

**கலைஞர் உரை**: படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல

**Couplet**: Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find

**English Explanation**: Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness

**Transliteration**: Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran Utalsuvai Untaar Manam

புலால் மறுத்தல்
குறள் 254

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

**மு.வ உரை**: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

**சாலமன் பாப்பையா உரை**: இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே

**கலைஞர் உரை**: கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது

**Couplet**: 'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfil

**English Explanation**: If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)

**Transliteration**: Arulalladhu Yaadhenin Kollaamai Koral Porulalladhu Avvoon Thinal

புலால் மறுத்தல்
குறள் 255

உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு

**மு.வ உரை**: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

**சாலமன் பாப்பையா உரை**: இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.

**கலைஞர் உரை**: உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன

**Couplet**: If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again

**English Explanation**: Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)

**Transliteration**: Unnaamai Ulladhu Uyirnilai Oonunna Annaaththal Seyyaadhu Alaru

புலால் மறுத்தல்
குறள் 256

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

**மு.வ உரை**: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

**சாலமன் பாப்பையா உரை**: தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

**கலைஞர் உரை**: புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்

**Couplet**: 'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy

**English Explanation**: If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money

**Transliteration**: Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum Vilaipporuttaal Oondraruvaa Ril

புலால் மறுத்தல்
குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

**மு.வ உரை**: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

**கலைஞர் உரை**: புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்

**Couplet**: With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease

**English Explanation**: If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it

**Transliteration**: Unnaamai Ventum Pulaaal Piridhondran Punnadhu Unarvaarp Perin

புலால் மறுத்தல்
குறள் 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

**மு.வ உரை**: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

**கலைஞர் உரை**: மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்

**Couplet**: Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave

**English Explanation**: The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal

**Transliteration**: Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar Uyirin Thalaippirindha Oon

புலால் மறுத்தல்
குறள் 259

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

**மு.வ உரை**: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

**கலைஞர் உரை**: நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது

**Couplet**: Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share

**English Explanation**: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices

**Transliteration**: Avisorin Thaayiram Vettalin Ondran Uyirsekuth Thunnaamai Nandru

புலால் மறுத்தல்
குறள் 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

**மு.வ உரை**: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

**கலைஞர் உரை**: புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்

**Couplet**: Who slays nought,- flesh rejects- his feet before All living things with clasped hands adore

**English Explanation**: All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh

**Transliteration**: Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi Ellaa Uyirun Thozhum

தவம்
குறள் 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

**மு.வ உரை**: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்

**சாலமன் பாப்பையா உரை**: பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.

**கலைஞர் உரை**: எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்

**Couplet**: To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'

**English Explanation**: The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others

**Transliteration**: Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai Atre Thavaththir Kuru

தவம்
குறள் 262

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது

**மு.வ உரை**: தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.

**கலைஞர் உரை**: உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்

**Couplet**: To 'penitents' sincere avails their 'penitence'; Where that is not, 'tis but a vain pretence

**English Explanation**: Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)

**Transliteration**: Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai Aqdhilaar Merkol Vadhu

தவம்
குறள் 263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்

**மு.வ உரை**: துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

**சாலமன் பாப்பையா உரை**: துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

**கலைஞர் உரை**: துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது

**Couplet**: Have other men forgotten 'penitence' who strive To earn for penitents the things by which they live

**English Explanation**: It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

**Transliteration**: Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol Matrai Yavarkal Thavam

தவம்
குறள் 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

**மு.வ உரை**: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.

**கலைஞர் உரை**: மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்

**Couplet**: Destruction to his foes, to friends increase of joy The 'penitent' can cause, if this his thoughts employ

**English Explanation**: If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities

**Transliteration**: Onnaarth Theralum Uvandhaarai Aakkalum Ennin Thavaththaan Varum

தவம்
குறள் 265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

**மு.வ உரை**: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

**கலைஞர் உரை**: உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்

**Couplet**: That what they wish may, as they wish, be won, By men on earth are works of painful 'penance' done

**English Explanation**: Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)

**Transliteration**: Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam Eentu Muyalap Patum

தவம்
குறள் 266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

**மு.வ உரை**: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

**சாலமன் பாப்பையா உரை**: தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.

**கலைஞர் உரை**: அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்

**Couplet**: Who works of 'penance' do, their end attain, Others in passion's net enshared, toil but in vain

**English Explanation**: Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)

**Transliteration**: Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar Rallaar Avanjeyvaar Aasaiyut Pattu

தவம்
குறள் 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

**மு.வ உரை**: புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்

**சாலமன் பாப்பையா உரை**: நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

**கலைஞர் உரை**: தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்

**Couplet**: The hotter glows the fining fire, the gold the brighter shines; The pain of penitence, like fire, the soul of man refines

**English Explanation**: Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities)

**Transliteration**: Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch Utachchuta Norkir Pavarkku

தவம்
குறள் 268

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

**மு.வ உரை**: தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

**கலைஞர் உரை**: ``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்

**Couplet**: Who gains himself in utter self-control, Him worships every other living soul

**English Explanation**: All other creatures will worship him who has attained the control of his own soul

**Transliteration**: Thannuyir Thaanarap Petraanai Enaiya Mannuyi Rellaan Thozhum

தவம்
குறள் 269

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

**மு.வ உரை**: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்

**சாலமன் பாப்பையா உரை**: தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

**கலைஞர் உரை**: எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்

**Couplet**: E'en over death the victory he may gain, If power by penance won his soul obtain

**English Explanation**: Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)

**Transliteration**: Kootram Kudhiththalum Kaikootum Notralin Aatral Thalaippat Tavarkkul

தவம்
குறள் 270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

**மு.வ உரை**: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

**கலைஞர் உரை**: ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்

**Couplet**: The many all things lack! The cause is plain, The 'penitents' are few The many shun such pain

**English Explanation**: Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world

**Transliteration**: Ilarpala Raakiya Kaaranam Norpaar Silarpalar Nolaa Thavar

கூடா ஒழுக்கம்
குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

**மு.வ உரை**: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

**கலைஞர் உரை**: ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்

**Couplet**: Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, decide within

**English Explanation**: The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man

**Transliteration**: Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal Aindhum Akaththe Nakum

கூடா ஒழுக்கம்
குறள் 272

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்

**மு.வ உரை**: தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

**கலைஞர் உரை**: தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை

**Couplet**: What gain, though virtue's semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault

**English Explanation**: What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin

**Transliteration**: Vaanuyar Thotram Evanseyyum Thannenjam Thaanari Kutrap Patin

கூடா ஒழுக்கம்
குறள் 273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

**மு.வ உரை**: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

**கலைஞர் உரை**: மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

**Couplet**: As if a steer should graze wrapped round with tiger's skin, Is show of virtuous might when weakness lurks within

**English Explanation**: The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin

**Transliteration**: Valiyil Nilaimaiyaan Valluruvam Petram Puliyindhol Porththumeyn Thatru

கூடா ஒழுக்கம்
குறள் 274

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

**மு.வ உரை**: தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

**கலைஞர் உரை**: புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை

**Couplet**: 'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks When, clad in stern ascetic garb, one secret evil works

**English Explanation**: He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds

**Transliteration**: Thavamaraindhu Allavai Seydhal Pudhalmaraindhu Vettuvan Pulsimizhth Thatru

கூடா ஒழுக்கம்
குறள் 275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்

**மு.வ உரை**: பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.

**கலைஞர் உரை**: எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்

**Couplet**: 'Our souls are free,' who say, yet practise evil secretly, 'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry

**English Explanation**: The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."

**Transliteration**: Patratrem Enpaar Patitrozhukkam Etretrendru Edham Palavun Tharum

கூடா ஒழுக்கம்
குறள் 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்

**மு.வ உரை**: மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

**கலைஞர் உரை**: உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை

**Couplet**: In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of 'harder eye'

**English Explanation**: Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)

**Transliteration**: Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu Vaazhvaarin Vankanaar Il

கூடா ஒழுக்கம்
குறள் 277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து

**மு.வ உரை**: புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

**சாலமன் பாப்பையா உரை**: குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

**கலைஞர் உரை**: வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு

**Couplet**: Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night

**English Explanation**: (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry

**Transliteration**: Purangundri Kantanaiya Renum Akangundri Mukkir Kariyaar Utaiththu

கூடா ஒழுக்கம்
குறள் 278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

**மு.வ உரை**: மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

**கலைஞர் உரை**: நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்

**Couplet**: Many wash in hollowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fame

**English Explanation**: 35 There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of

**Transliteration**: Manaththadhu Maasaaka Maantaar Neeraati Maraindhozhuku Maandhar Palar

கூடா ஒழுக்கம்
குறள் 279

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

**மு.வ உரை**: நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

**கலைஞர் உரை**: நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்

**Couplet**: Cruel is the arrow straight, the crooked lute is sweet, Judge by their deeds the many forms of men you meet

**English Explanation**: As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated

**Transliteration**: Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna Vinaipatu Paalaal Kolal

கூடா ஒழுக்கம்
குறள் 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

**மு.வ உரை**: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

**சாலமன் பாப்பையா உரை**: உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

**கலைஞர் உரை**: உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்

**Couplet**: What's the worth of shaven head or tresses long, If you shun what all the world condemns as wrong

**English Explanation**: There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned

**Transliteration**: Mazhiththalum Neettalum Ventaa Ulakam Pazhiththadhu Ozhiththu Vitin

கள்ளாமை
குறள் 281

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

**மு.வ உரை**: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

**கலைஞர் உரை**: எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்

**Couplet**: Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pure

**English Explanation**: Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing

**Transliteration**: Ellaamai Ventuvaan Enpaan Enaiththondrum Kallaamai Kaakkadhan Nenju

கள்ளாமை
குறள் 282

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்

**மு.வ உரை**: குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.

**கலைஞர் உரை**: பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்

**Couplet**: 'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.'

**English Explanation**: Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another

**Transliteration**: Ullaththaal Ullalum Theedhe Piranporulaik Kallaththaal Kalvem Enal

கள்ளாமை
குறள் 283

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்

**மு.வ உரை**: களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

**கலைஞர் உரை**: கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்

**Couplet**: The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go

**English Explanation**: The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase

**Transliteration**: Kalavinaal Aakiya Aakkam Alavirandhu Aavadhu Polak Ketum

கள்ளாமை
குறள் 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்

**மு.வ உரை**: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

**கலைஞர் உரை**: களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

**Couplet**: The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain

**English Explanation**: The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

**Transliteration**: Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan Veeyaa Vizhumam Tharum

கள்ளாமை
குறள் 285

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

**மு.வ உரை**: அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

**கலைஞர் உரை**: மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது

**Couplet**: 'Grace' is not in their thoughts, nor know they kind affection's power, Who neighbour's goods desire, and watch for his unguarded hour

**English Explanation**: The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property

**Transliteration**: Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip Pochchaappup Paarppaarkan Il

கள்ளாமை
குறள் 286

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

**மு.வ உரை**: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

**கலைஞர் உரை**: ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்

**Couplet**: They cannot walk restrained in wisdom's measured bound, In whom inveterate lust of fraudful gain is found

**English Explanation**: They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others

**Transliteration**: Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan Kandriya Kaadha Lavar

கள்ளாமை
குறள் 287

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்

**மு.வ உரை**: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

**கலைஞர் உரை**: அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது

**Couplet**: Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' won

**English Explanation**: That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude

**Transliteration**: Kalavennum Kaarari Vaanmai Alavennum Aatral Purindhaarkanta Il

கள்ளாமை
குறள் 288

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

**மு.வ உரை**: அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

**கலைஞர் உரை**: நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்

**Couplet**: As virtue dwells in heart that 'measured wisdom' gains; Deceit in hearts of fraudful men established reigns

**English Explanation**: Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude

**Transliteration**: Alavarindhaar Nenjath Tharampola Nirkum Kalavarindhaar Nenjil Karavu

கள்ளாமை
குறள் 289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

**மு.வ உரை**: களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

**கலைஞர் உரை**: அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்

**Couplet**: Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway die

**English Explanation**: Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression

**Transliteration**: Alavalla Seydhaange Veevar Kalavalla Matraiya Thetraa Thavar

கள்ளாமை
குறள் 290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் 
தள்ளாது புத்தே ளுலகு

**மு.வ உரை**: களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

**சாலமன் பாப்பையா உரை**: திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

**கலைஞர் உரை**: களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

**Couplet**: The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know

**English Explanation**: Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud

**Transliteration**: Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth Thallaadhu Puththe Lulaku

வாய்மை
குறள் 291

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்

**மு.வ உரை**: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

**கலைஞர் உரை**: பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

**Couplet**: You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free

**English Explanation**: Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)

**Transliteration**: Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum Theemai Ilaadha Solal

வாய்மை
குறள் 292

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

**மு.வ உரை**: குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

**சாலமன் பாப்பையா உரை**: குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

**கலைஞர் உரை**: குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்

**Couplet**: Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford

**English Explanation**: Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault

**Transliteration**: Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha Nanmai Payakkum Enin

வாய்மை
குறள் 293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

**மு.வ உரை**: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

**கலைஞர் உரை**: மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்

**Couplet**: Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows

**English Explanation**: Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)

**Transliteration**: Thannenj Charivadhu Poiyarka Poiththapin Thannenje Thannaich Chutum

வாய்மை
குறள் 294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

**மு.வ உரை**: ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

**கலைஞர் உரை**: மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்

**Couplet**: True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind

**English Explanation**: He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men

**Transliteration**: Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar Ullaththu Lellaam Ulan

வாய்மை
குறள் 295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

**மு.வ உரை**: ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

**கலைஞர் உரை**: உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்

**Couplet**: Greater is he who speaks the truth with full consenting mind Than men whose lives have penitence and charity combined

**English Explanation**: He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities

**Transliteration**: Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu Thaananjey Vaarin Thalai

வாய்மை
குறள் 296

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

**மு.வ உரை**: ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

**கலைஞர் உரை**: பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்

**Couplet**: No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously

**English Explanation**: There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue

**Transliteration**: Poiyaamai Anna Pukazhillai Eyyaamai Ellaa Aramun Tharum

வாய்மை
குறள் 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

**மு.வ உரை**: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

**கலைஞர் உரை**: செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்

**Couplet**: If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undone

**English Explanation**: If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue

**Transliteration**: Poiyaamai Poiyaamai Aatrin Arampira Seyyaamai Seyyaamai Nandru

வாய்மை
குறள் 298

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

**மு.வ உரை**: புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

**கலைஞர் உரை**: நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்

**Couplet**: Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow

**English Explanation**: Purity of body is produced by water and purity of mind by truthfulness

**Transliteration**: Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai Vaaimaiyaal Kaanap Patum

வாய்மை
குறள் 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

**மு.வ உரை**: (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

**கலைஞர் உரை**: புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்

**Couplet**: Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright

**English Explanation**: All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise

**Transliteration**: Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup Poiyaa Vilakke Vilakku

வாய்மை
குறள் 300

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

**மு.வ உரை**: யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

**கலைஞர் உரை**: வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்

**Couplet**: Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compare

**English Explanation**: Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness

**Transliteration**: Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum Vaaimaiyin Nalla Pira

வெகுளாமை
குறள் 301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்

**மு.வ உரை**: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?

**கலைஞர் உரை**: தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

**Couplet**: Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein

**English Explanation**: He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

**Transliteration**: Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk Kaakkinen Kaavaakkaal En?

வெகுளாமை
குறள் 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற

**மு.வ உரை**: பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

**கலைஞர் உரை**: வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை

**Couplet**: Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still

**English Explanation**: Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil

**Transliteration**: Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum Iladhanin Theeya Pira

வெகுளாமை
குறள் 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்

**மு.வ உரை**: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

**கலைஞர் உரை**: யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்

**Couplet**: If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget

**English Explanation**: Forget anger towards every one, as fountains of evil spring from it

**Transliteration**: Maraththal Vekuliyai Yaarmaattum Theeya Piraththal Adhanaan Varum

வெகுளாமை
குறள் 304

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற

**மு.வ உரை**: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

**சாலமன் பாப்பையா உரை**: முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

**கலைஞர் உரை**: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்

**Couplet**: Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy

**English Explanation**: What other foe to man works such annoy?

**Transliteration**: Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin Pakaiyum Ulavo Pira

வெகுளாமை
குறள் 305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

**மு.வ உரை**: ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

**கலைஞர் உரை**: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

**Couplet**: If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay

**English Explanation**: If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him

**Transliteration**: Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal Thannaiye Kollunj Chinam

வெகுளாமை
குறள் 306

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்

**மு.வ உரை**: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

**கலைஞர் உரை**: சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்

**Couplet**: Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear

**English Explanation**: The fire of anger will burn up even the pleasant raft of friendship

**Transliteration**: Sinamennum Serndhaaraik Kolli Inamennum Emap Punaiyaich Chutum

வெகுளாமை
குறள் 307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

**மு.வ உரை**: (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

**கலைஞர் உரை**: நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்

**Couplet**: The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing

**English Explanation**: Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail

**Transliteration**: Sinaththaip Porulendru Kontavan Ketu Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru

வெகுளாமை
குறள் 308

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

**மு.வ உரை**: பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

**கலைஞர் உரை**: தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது

**Couplet**: Though men should work thee woe, like touch of tongues of fire 'Tis well if thou canst save thy soul from burning ire

**English Explanation**: Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger

**Transliteration**: Inareri Thoivanna Innaa Seyinum Punarin Vekulaamai Nandru

வெகுளாமை
குறள் 309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்

**மு.வ உரை**: ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

**கலைஞர் உரை**: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்

**Couplet**: If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires

**English Explanation**: If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of

**Transliteration**: Ulliya Thellaam Utaneydhum Ullaththaal Ullaan Vekuli Enin

வெகுளாமை
குறள் 310

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

**மு.வ உரை**: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

**கலைஞர் உரை**: எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்

**Couplet**: Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce, equals of all-renouncing sages they

**English Explanation**: Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)

**Transliteration**: Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith Thurandhaar Thurandhaar Thunai

இன்னா செய்யாமை
குறள் 311

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

**மு.வ உரை**: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

**சாலமன் பாப்பையா உரை**: சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

**கலைஞர் உரை**: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்

**Couplet**: Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure

**English Explanation**: It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness

**Transliteration**: Sirappeenum Selvam Perinum Pirarkku Innaa Seyyaamai Maasatraar Kol

இன்னா செய்யாமை
குறள் 312

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

**மு.வ உரை**: ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

**கலைஞர் உரை**: சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்

**Couplet**: Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure

**English Explanation**: It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil

**Transliteration**: Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa Seyyaamai Maasatraar Kol

இன்னா செய்யாமை
குறள் 313

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

**மு.வ உரை**: தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

**கலைஞர் உரை**: யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்

**Couplet**: Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bring

**English Explanation**: In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow

**Transliteration**: Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin Uyyaa Vizhuman Tharum

இன்னா செய்யாமை
குறள் 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

**மு.வ உரை**: இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

**கலைஞர் உரை**: நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்

**Couplet**: To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by

**English Explanation**: The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides

**Transliteration**: Innaasey Thaarai Oruththal Avarnaana Nannayanj Cheydhu Vital

இன்னா செய்யாமை
குறள் 315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை

**மு.வ உரை**: மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

**கலைஞர் உரை**: பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை

**Couplet**: From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from pain

**English Explanation**: What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?

**Transliteration**: Arivinaan Aakuva Thunto Piridhinnoi Thannoipol Potraak Katai

இன்னா செய்யாமை
குறள் 316

இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்

**மு.வ உரை**: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்

**Couplet**: What his own soul has felt as bitter pain, From making others feel should man abstain

**English Explanation**: Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow

**Transliteration**: Innaa Enaththaan Unarndhavai Thunnaamai Ventum Pirankan Seyal

இன்னா செய்யாமை
குறள் 317

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

**மு.வ உரை**: எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

**கலைஞர் உரை**: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்

**Couplet**: To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise

**English Explanation**: It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time

**Transliteration**: Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam Maanaasey Yaamai Thalai

இன்னா செய்யாமை
குறள் 318

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

**மு.வ உரை**: தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

**கலைஞர் உரை**: பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

**Couplet**: Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man

**English Explanation**: Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

**Transliteration**: Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo Mannuyirkku Innaa Seyal

இன்னா செய்யாமை
குறள் 319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

**மு.வ உரை**: முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

**கலைஞர் உரை**: பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்

**Couplet**: If, ere the noontide, you to others evil do, Before the eventide will evil visit you

**English Explanation**: If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening

**Transliteration**: Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku Innaa Pirpakal Thaame Varum

இன்னா செய்யாமை
குறள் 320

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

**மு.வ உரை**: துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது

**Couplet**: O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill

**English Explanation**: Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others

**Transliteration**: Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar Noyinmai Ventu Pavar

கொல்லாமை
குறள் 321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

**மு.வ உரை**: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

**கலைஞர் உரை**: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்

**Couplet**: What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill

**English Explanation**: Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil

**Transliteration**: Aravinai Yaadhenin Kollaamai Koral Piravinai Ellaan Tharum

கொல்லாமை
குறள் 322

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை

**மு.வ உரை**: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

**கலைஞர் உரை**: இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை

**Couplet**: Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives

**English Explanation**: The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures

**Transliteration**: Pakuththuntu Palluyir Ompudhal Noolor Thokuththavatrul Ellaan Thalai

கொல்லாமை
குறள் 323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

**மு.வ உரை**: இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

**கலைஞர் உரை**: அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன

**Couplet**: Alone, first of goods things, is 'not to slay'; The second is, no untrue word to say

**English Explanation**: Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood

**Transliteration**: Ondraaka Nalladhu Kollaamai Matradhan Pinsaarap Poiyaamai Nandru

கொல்லாமை
குறள் 324

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 
கொல்லாமை சூழும் நெறி

**மு.வ உரை**: நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

**கலைஞர் உரை**: எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்

**Couplet**: You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay

**English Explanation**: Good path is that which considers how it may avoid killing any creature

**Transliteration**: Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum Kollaamai Soozhum Neri

கொல்லாமை
குறள் 325

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

**மு.வ உரை**: வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

**சாலமன் பாப்பையா உரை**: வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

**கலைஞர் உரை**: உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்

**Couplet**: Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who dreading crime of slaughter, study nought to slay

**English Explanation**: Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life

**Transliteration**: Nilaianji Neeththaarul Ellaam Kolaianjik Kollaamai Soozhvaan Thalai

கொல்லாமை
குறள் 326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று

**மு.வ உரை**: கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

**சாலமன் பாப்பையா உரை**: கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

**கலைஞர் உரை**: கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்

**Couplet**: Ev'n death that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill', uphold with reverent care

**English Explanation**: Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life

**Transliteration**: Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel Sellaadhu Uyirunnung Kootru

கொல்லாமை
குறள் 327

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை

**மு.வ உரை**: தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

**கலைஞர் உரை**: தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது

**Couplet**: Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away

**English Explanation**: Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life

**Transliteration**: Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu Innuyir Neekkum Vinai

கொல்லாமை
குறள் 328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

**மு.வ உரை**: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

**கலைஞர் உரை**: பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்

**Couplet**: Though great the gain of good should seem, the wise Will any gain by staughter won despise

**English Explanation**: The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good

**Transliteration**: Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk Kondraakum Aakkang Katai

கொல்லாமை
குறள் 329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

**மு.வ உரை**: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

**கலைஞர் உரை**: பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்

**Couplet**: Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness know

**English Explanation**: To minds of them who what is vileness know

**Transliteration**: Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar Punmai Therivaa Rakaththu

கொல்லாமை
குறள் 330

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

**மு.வ உரை**: நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

**கலைஞர் உரை**: வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்

**Couplet**: Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained

**English Explanation**: (The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)

**Transliteration**: Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin Sellaaththee Vaazhkkai Yavar

நிலையாமை
குறள் 331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

**மு.வ உரை**: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

**கலைஞர் உரை**: நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்

**Couplet**: Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure

**English Explanation**: That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)

**Transliteration**: Nillaadha Vatrai Nilaiyina Endrunarum Pullari Vaanmai Katai

நிலையாமை
குறள் 332

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று

**மு.வ உரை**: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

**கலைஞர் உரை**: சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்

**Couplet**: As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease

**English Explanation**: The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly

**Transliteration**: Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam Pokkum Adhuvilin Thatru

நிலையாமை
குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

**மு.வ உரை**: செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

**கலைஞர் உரை**: நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்

**Couplet**: Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ

**English Explanation**: Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable

**Transliteration**: Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal Arkupa Aange Seyal

நிலையாமை
குறள் 334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்

**மு.வ உரை**: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

**கலைஞர் உரை**: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்

**Couplet**: As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life

**English Explanation**: Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life

**Transliteration**: Naalena Ondrupor Kaatti Uyir Eerum Vaaladhu Unarvaarp Perin

நிலையாமை
குறள் 335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்

**மு.வ உரை**: நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

**கலைஞர் உரை**: வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்

**Couplet**: Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death

**English Explanation**: Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

**Transliteration**: Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai Mersendru Seyyap Patum

நிலையாமை
குறள் 336

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு

**மு.வ உரை**: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

**சாலமன் பாப்பையா உரை**: நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

**கலைஞர் உரை**: இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்

**Couplet**: Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world

**English Explanation**: This world possesses the greatness that one who yesterday was is not today

**Transliteration**: Nerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv Vulaku

நிலையாமை
குறள் 337

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல

**மு.வ உரை**: அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

**சாலமன் பாப்பையா உரை**: உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.

**கலைஞர் உரை**: ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்

**Couplet**: Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours away

**English Explanation**: Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment

**Transliteration**: Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa Kotiyum Alla Pala

நிலையாமை
குறள் 338

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு

**மு.வ உரை**: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

**கலைஞர் உரை**: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்

**Couplet**: Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share

**English Explanation**: The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty

**Transliteration**: Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre Utampotu Uyiritai Natpu

நிலையாமை
குறள் 339

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

**மு.வ உரை**: இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

**கலைஞர் உரை**: நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

**Couplet**: Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep

**English Explanation**: Death is like sleep; birth is like awaking from it

**Transliteration**: Urangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum Pirappu

நிலையாமை
குறள் 340

புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு

**மு.வ உரை**: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

**சாலமன் பாப்பையா உரை**: உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!

**கலைஞர் உரை**: உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது

**Couplet**: The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows

**English Explanation**: It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home

**Transliteration**: Pukkil Amaindhindru Kollo Utampinul Thuchchil Irundha Uyirkku

துறவு
குறள் 341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்

**மு.வ உரை**: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

**கலைஞர் உரை**: ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை

**Couplet**: From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he

**English Explanation**: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain

**Transliteration**: Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal Adhanin Adhanin Ilan

துறவு
குறள் 342

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல

**மு.வ உரை**: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

**சாலமன் பாப்பையா உரை**: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

**கலைஞர் உரை**: ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்

**Couplet**: 'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire

**English Explanation**: After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)

**Transliteration**: Ventin Un Taakath Thurakka Thurandhapin Eentuiyar Paala Pala

துறவு
குறள் 343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

**மு.வ உரை**: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

**கலைஞர் உரை**: ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்

**Couplet**: 'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire

**English Explanation**: Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired

**Transliteration**: Atalventum Aindhan Pulaththai Vitalventum Ventiya Vellaam Orungu

துறவு
குறள் 344

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

**மு.வ உரை**: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

**கலைஞர் உரை**: ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்

**Couplet**: 'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anew

**English Explanation**: To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state

**Transliteration**: Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai Mayalaakum Matrum Peyarththu

துறவு
குறள் 345

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை

**மு.வ உரை**: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.

**சாலமன் பாப்பையா உரை**: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?

**கலைஞர் உரை**: பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?

**Couplet**: To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life

**English Explanation**: What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)

**Transliteration**: Matrum Thotarppaatu Evankol Pirapparukkal Utraarkku Utampum Mikai

துறவு
குறள் 346

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்

**மு.வ உரை**: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

**சாலமன் பாப்பையா உரை**: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

**கலைஞர் உரை**: யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்

**Couplet**: Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine

**English Explanation**: Shall enter realms above the powers divine

**Transliteration**: Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku Uyarndha Ulakam Pukum

துறவு
குறள் 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

**மு.வ உரை**: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

**கலைஞர் உரை**: பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

**Couplet**: Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp

**English Explanation**: Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

**Transliteration**: Patri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa Thavarkku

துறவு
குறள் 348

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

**மு.வ உரை**: முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

**கலைஞர் உரை**: அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்

**Couplet**: Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the net

**English Explanation**: Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births

**Transliteration**: Thalaippattaar Theerath Thurandhaar Mayangi Valaippattaar Matrai Yavar

துறவு
குறள் 349

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

**மு.வ உரை**: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

**கலைஞர் உரை**: பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்

**Couplet**: When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability

**English Explanation**: At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen

**Transliteration**: Patratra Kanne Pirapparukkum Matru Nilaiyaamai Kaanap Patum

துறவு
குறள் 350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

**மு.வ உரை**: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

**கலைஞர் உரை**: எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்

**Couplet**: Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing

**English Explanation**: Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire

**Transliteration**: Patruka Patratraan Patrinai Appatraip Patruka Patru Vitarku

மெய்யுணர்தல்
குறள் 351

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

**மு.வ உரை**: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

**கலைஞர் உரை**: பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது

**Couplet**: Of things devoid of truth as real things men deem;- Cause of degraded birth the fond delusive dream

**English Explanation**: Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real

**Transliteration**: Porulalla Vatraip Porulendru Unarum Marulaanaam Maanaap Pirappu

மெய்யுணர்தல்
குறள் 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

**மு.வ உரை**: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்

**Couplet**: Darkness departs, and rapture springs to men who see, The mystic vision pure, from all delusion free

**English Explanation**: A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)

**Transliteration**: Irulneengi Inpam Payakkum Marulneengi Maasaru Kaatchi Yavarkku

மெய்யுணர்தல்
குறள் 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வான நணிய துடைத்து

**மு.வ உரை**: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

**கலைஞர் உரை**: ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

**Couplet**: When doubts disperse, and mists of error roll Away, nearer is heav'n than earth to sage's soul

**English Explanation**: Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt

**Transliteration**: Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin Vaanam Naniya Thutaiththu

மெய்யுணர்தல்
குறள் 354

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

**மு.வ உரை**: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

**கலைஞர் உரை**: உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை

**Couplet**: Five-fold perception gained, what benefits accrue To them whose spirits lack perception of the true

**English Explanation**: Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things

**Transliteration**: Aiyunarvu Eydhiyak Kannum Payamindre Meyyunarvu Illaa Thavarkku

மெய்யுணர்தல்
குறள் 355

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

**மு.வ உரை**: எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

**சாலமன் பாப்பையா உரை**: எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

**கலைஞர் உரை**: வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்

**Couplet**: Whatever thing, of whatsoever kind it be, 'Tis wisdom's part in each the very thing to see

**English Explanation**: (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing

**Transliteration**: Epporul Eththanmaith Thaayinum Apporul Meypporul Kaanpadhu Arivu

மெய்யுணர்தல்
குறள் 356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

**மு.வ உரை**: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

**கலைஞர் உரை**: துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்

**Couplet**: Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again

**English Explanation**: They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world

**Transliteration**: Katreentu Meypporul Kantaar Thalaippatuvar Matreentu Vaaraa Neri

மெய்யுணர்தல்
குறள் 357

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

**மு.வ உரை**: ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

**சாலமன் பாப்பையா உரை**: பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

**கலைஞர் உரை**: உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்

**Couplet**: The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell

**English Explanation**: Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being

**Transliteration**: Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap Perththulla Ventaa Pirappu

மெய்யுணர்தல்
குறள் 358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு

**மு.வ உரை**: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

**சாலமன் பாப்பையா உரை**: பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

**கலைஞர் உரை**: அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்

**Couplet**: When folly, cause of births, departs; and soul can view The truth of things, man's dignity- 'tis wisdom true

**English Explanation**: True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven

**Transliteration**: Pirappennum Pedhaimai Neengach Chirappennum Semporul Kaanpadhu Arivu

மெய்யுணர்தல்
குறள் 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

**மு.வ உரை**: எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

**கலைஞர் உரை**: துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்

**Couplet**: The true 'support' who knows- rejects 'supports' he sought before- Sorrow that clings all destroys, shall cling to him no more

**English Explanation**: He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)

**Transliteration**: Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch Chaardharaa Saardharu Noi

மெய்யுணர்தல்
குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

**மு.வ உரை**: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

**கலைஞர் உரை**: விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்

**Couplet**: When lust and wrath and error's triple tyranny is o'er, Their very names for aye extinct, then pain shall be no more

**English Explanation**: If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)

**Transliteration**: Kaamam Vekuli Mayakkam Ivaimundran Naamam Ketakketum Noi

அவா அறுத்தல்
குறள் 361

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

**மு.வ உரை**: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

**கலைஞர் உரை**: ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்

**Couplet**: The wise declare, through all the days, to every living thing That ceaseless round of birth from seed of strong desire doth spring

**English Explanation**: (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire

**Transliteration**: Avaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum Thavaaap Pirappeenum Viththu

அவா அறுத்தல்
குறள் 362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

**மு.வ உரை**: ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

**கலைஞர் உரை**: விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்

**Couplet**: If desire you feel, freedom from changing birth require! 'I' will come, if you desire to 'scape, set free from all desire

**English Explanation**: If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire

**Transliteration**: Ventungaal Ventum Piravaamai Matradhu Ventaamai Venta Varum

அவா அறுத்தல்
குறள் 363

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்

**மு.வ உரை**: அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

**கலைஞர் உரை**: தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்

**Couplet**: No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire

**English Explanation**: There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it

**Transliteration**: Ventaamai Anna Vizhuchchelvam Eentillai Aantum Aqdhoppadhu Il

அவா அறுத்தல்
குறள் 364

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

**மு.வ உரை**: தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

**கலைஞர் உரை**: தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்

**Couplet**: Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow

**English Explanation**: Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

**Transliteration**: Thoouymai Enpadhu Avaavinmai Matradhu Vaaaimai Venta Varum

அவா அறுத்தல்
குறள் 365

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்

**மு.வ உரை**: பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

**கலைஞர் உரை**: ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்

**Couplet**: Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty

**English Explanation**: They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free

**Transliteration**: Atravar Enpaar Avaaatraar Matraiyaar Atraaka Atradhu Ilar

அவா அறுத்தல்
குறள் 366

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

**மு.வ உரை**: ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

**கலைஞர் உரை**: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்

**Couplet**: Desire each soul beguiles; True virtue dreads its wiles

**English Explanation**: It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him

**Transliteration**: Anjuva Thorum Arane Oruvanai Vanjippa Thorum Avaa

அவா அறுத்தல்
குறள் 367

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

**மு.வ உரை**: ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

**கலைஞர் உரை**: கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்

**Couplet**: Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed

**English Explanation**: If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them

**Transliteration**: Avaavinai Aatra Aruppin Thavaavinai Thaanventu Maatraan Varum

அவா அறுத்தல்
குறள் 368

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

**மு.வ உரை**: அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

**கலைஞர் உரை**: ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்

**Couplet**: Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide

**English Explanation**: There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more

**Transliteration**: Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel Thavaaadhu Menmel Varum

அவா அறுத்தல்
குறள் 369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்

**மு.வ உரை**: அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

**கலைஞர் உரை**: பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

**Couplet**: When dies away desire, that woe of woes Ev'n here the soul unceasing rapture knows

**English Explanation**: Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed

**Transliteration**: Inpam Itaiyaraa Theentum Avaavennum Thunpaththul Thunpang Ketin

அவா அறுத்தல்
குறள் 370

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

**மு.வ உரை**: ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்

**Couplet**: Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful state

**English Explanation**: The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed

**Transliteration**: Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye Peraa Iyarkai Tharum

ஊழ்
குறள் 371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி

**மு.வ உரை**: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

**கலைஞர் உரை**: ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்

**Couplet**: Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs

**English Explanation**: Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate

**Transliteration**: Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul Pokoozhaal Thondrum Mati

ஊழ்
குறள் 372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை

**மு.வ உரை**: பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

**கலைஞர் உரை**: அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்

**Couplet**: The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom bless

**English Explanation**: An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge

**Transliteration**: Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum Aakaloozh Utrak Katai

ஊழ்
குறள் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்

**மு.வ உரை**: ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

**சாலமன் பாப்பையா உரை**: பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)

**கலைஞர் உரை**: கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்

**Couplet**: In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacy

**English Explanation**: Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail

**Transliteration**: Nunniya Noolpala Karpinum Matrundhan Unmai Yarive Mikum

ஊழ்
குறள் 374

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

**மு.வ உரை**: உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

**சாலமன் பாப்பையா உரை**: உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

**கலைஞர் உரை**: உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்

**Couplet**: Two fold the fashion of the world: some live in fortune's light; While other some have souls in wisdom's radiance bright

**English Explanation**: There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge

**Transliteration**: Iruveru Ulakaththu Iyarkai Thiruveru Thelliya Raadhalum Veru

ஊழ்
குறள் 375

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் 
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

**மு.வ உரை**: செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

**கலைஞர் உரை**: நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்

**Couplet**: All things that good appear will oft have ill success; All evil things prove good for gain of happiness

**English Explanation**: In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)

**Transliteration**: Nallavai Ellaaan Theeyavaam Theeyavum Nallavaam Selvam Seyarku

ஊழ்
குறள் 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

**மு.வ உரை**: ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

**சாலமன் பாப்பையா உரை**: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

**கலைஞர் உரை**: தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா

**Couplet**: Things not your own will yield no good, howe'er you guard with pain; Your own, howe'er you scatter them abroad, will yours remain

**English Explanation**: Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away

**Transliteration**: Pariyinum Aakaavaam Paalalla Uyththuch Choriyinum Pokaa Thama

ஊழ்
குறள் 377

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

**மு.வ உரை**: ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

**கலைஞர் உரை**: வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்

**Couplet**: Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be

**English Explanation**: Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)

**Transliteration**: Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti Thokuththaarkku Thuyththal Aridhu

ஊழ்
குறள் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

**மு.வ உரை**: வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

**கலைஞர் உரை**: நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்

**Couplet**: The destitute with ascetics merit share, If fate to visit with predestined ills would spare

**English Explanation**: The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away

**Transliteration**: Thurappaarman Thuppura Villaar Urarpaala Oottaa Kazhiyu Menin

ஊழ்
குறள் 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

**மு.வ உரை**: நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?

**கலைஞர் உரை**: நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

**Couplet**: When good things come, men view them all as gain; When evils come, why then should they complain

**English Explanation**: How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?

**Transliteration**: Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal Allar Patuva Thevan?

ஊழ்
குறள் 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

**மு.வ உரை**: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

**கலைஞர் உரை**: இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?

**Couplet**: What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still

**English Explanation**: What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)

**Transliteration**: Oozhir Peruvali Yaavula Matrondru Soozhinun Thaanmun Thurum

இறைமாட்சி
குறள் 381

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு

**மு.வ உரை**: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

**சாலமன் பாப்பையா உரை**: வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

**கலைஞர் உரை**: ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்

**Couplet**: An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings

**English Explanation**: He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings

**Transliteration**: Pataikuti Koozhamaichchu Natparan Aarum Utaiyaan Arasarul Eru

இறைமாட்சி
குறள் 382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு

**மு.வ உரை**: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்

**Couplet**: Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore

**English Explanation**: Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character

**Transliteration**: Anjaamai Eekai Arivookkam Innaankum Enjaamai Vendhark Kiyalpu

இறைமாட்சி
குறள் 383

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு

**மு.வ உரை**: காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

**சாலமன் பாப்பையா உரை**: செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

**கலைஞர் உரை**: காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்

**Couplet**: A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong

**English Explanation**: These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country

**Transliteration**: 383 Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum Neengaa Nilanaan Pavarkku

இறைமாட்சி
குறள் 384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு

**மு.வ உரை**: ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

**கலைஞர் உரை**: அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்

**Couplet**: Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintains

**English Explanation**: He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice

**Transliteration**: Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa Maanam Utaiya Tharasu

இறைமாட்சி
குறள் 385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

**மு.வ உரை**: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

**சாலமன் பாப்பையா உரை**: பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

**கலைஞர் உரை**: முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்

**Couplet**: A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends

**English Explanation**: He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it

**Transliteration**: Iyatralum Eettalung Kaaththalum Kaaththa Vakuththalum Valla Tharasu

இறைமாட்சி
குறள் 386

காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

**மு.வ உரை**: காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

**கலைஞர் உரை**: காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்

**Couplet**: Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells

**English Explanation**: The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language

**Transliteration**: Kaatchik Keliyan Katunjollan Allanel Meekkoorum Mannan Nilam

இறைமாட்சி
குறள் 387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

**மு.வ உரை**: இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

**கலைஞர் உரை**: வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்

**Couplet**: With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command

**English Explanation**: The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him

**Transliteration**: Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal Thaankan Tanaiththiv Vulaku

இறைமாட்சி
குறள் 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்

**மு.வ உரை**: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

**கலைஞர் உரை**: நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்

**Couplet**: Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns

**English Explanation**: That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

**Transliteration**: Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku Iraiyendru Vaikkap Patum

இறைமாட்சி
குறள் 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

**மு.வ உரை**: குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

**கலைஞர் உரை**: காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்

**Couplet**: The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure

**English Explanation**: The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear

**Transliteration**: Sevikaippach Chorporukkum Panputai Vendhan Kavikaikkeezhth Thangum Ulaku

இறைமாட்சி
குறள் 390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

**மு.வ உரை**: கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

**சாலமன் பாப்பையா உரை**: தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

**கலைஞர் உரை**: நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்

**Couplet**: Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal

**English Explanation**: He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people

**Transliteration**: Kotaiyali Sengol Kutiyompal Naankum Utaiyaanaam Vendhark Koli

கல்வி
குறள் 391

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக

**மு.வ உரை**: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

**கலைஞர் உரை**: பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்

**Couplet**: So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain

**English Explanation**: Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning

**Transliteration**: Karka Kasatarak Karpavai Katrapin Nirka Adharkuth Thaka

கல்வி
குறள் 392

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

**மு.வ உரை**: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

**கலைஞர் உரை**: எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்

**Couplet**: The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live

**English Explanation**: Letters and numbers are the two eyes of man

**Transliteration**: Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum Kannenpa Vaazhum Uyirkku

கல்வி
குறள் 393

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

**மு.வ உரை**: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

**சாலமன் பாப்பையா உரை**: கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

**கலைஞர் உரை**: கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்

**Couplet**: Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores display

**English Explanation**: The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face

**Transliteration**: Kannutaiyar Enpavar Katror Mukaththirantu Punnutaiyar Kallaa Thavar

கல்வி
குறள் 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

**மு.வ உரை**: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

**கலைஞர் உரை**: மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்

**Couplet**: You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art

**English Explanation**: It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

**Transliteration**: Uvappath Thalaikkooti Ullap Piridhal Anaiththe Pulavar Thozhil

கல்வி
குறள் 395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

**மு.வ உரை**: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

**கலைஞர் உரை**: அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்

**Couplet**: With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place

**English Explanation**: The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy

**Transliteration**: Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar Kataiyare Kallaa Thavar

கல்வி
குறள் 396

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

**மு.வ உரை**: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

**சாலமன் பாப்பையா உரை**: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

**கலைஞர் உரை**: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்

**Couplet**: In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow

**English Explanation**: Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning

**Transliteration**: Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk Katranaith Thoorum Arivu

கல்வி
குறள் 397

யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

**மு.வ உரை**: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

**சாலமன் பாப்பையா உரை**: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

**கலைஞர் உரை**: கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

**Couplet**: The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam

**English Explanation**: How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?

**Transliteration**: Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan Saandhunaiyung Kallaadha Vaaru

கல்வி
குறள் 398

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் 
கெழுமையும் ஏமாப் புடைத்து

**மு.வ உரை**: ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

**கலைஞர் உரை**: ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்

**Couplet**: The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains

**English Explanation**: The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births

**Transliteration**: Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu

கல்வி
குறள் 399

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

**மு.வ உரை**: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

**கலைஞர் உரை**: தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்

**Couplet**: Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore

**English Explanation**: The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it

**Transliteration**: 399 Thaamin Puruvadhu Ulakin Purak Kantu Kaamuruvar Katrarin Thaar

கல்வி
குறள் 400

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

**மு.வ உரை**: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

**சாலமன் பாப்பையா உரை**: கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

**கலைஞர் உரை**: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை

**Couplet**: Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy

**English Explanation**: Learning is the true imperishable riches; all other things are not riches

**Transliteration**: Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku Maatalla Matrai Yavai

கல்லாமை
குறள் 401

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

**மு.வ உரை**: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

**கலைஞர் உரை**: நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்

**Couplet**: Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share

**English Explanation**: To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares

**Transliteration**: Arangindri Vattaati Yatre Nirampiya Noolindrik Kotti Kolal

கல்லாமை
குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

**மு.வ உரை**: (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

**கலைஞர் உரை**: கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது

**Couplet**: Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display

**English Explanation**: The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood

**Transliteration**: Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum Illaadhaal Penkaamur Ratru

கல்லாமை
குறள் 403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

**மு.வ உரை**: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

**சாலமன் பாப்பையா உரை**: கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

**கலைஞர் உரை**: கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்

**Couplet**: The blockheads, too, may men of worth appear, If they can keep from speaking where the learned hear

**English Explanation**: The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned

**Transliteration**: Kallaa Thavarum Naninallar Katraarmun Sollaa Thirukkap Perin

கல்லாமை
குறள் 404

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்

**மு.வ உரை**: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

**கலைஞர் உரை**: கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

**Couplet**: From blockheads' lips, when words of wisdom glibly flow, The wise receive them not, though good they seem to show

**English Explanation**: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

**Transliteration**: Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum Kollaar Arivutai Yaar

கல்லாமை
குறள் 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

**மு.வ உரை**: கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

**கலைஞர் உரை**: கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்

**Couplet**: As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speaks discerned

**English Explanation**: 51 The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of

**Transliteration**: Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu Sollaatach Chorvu Patum

கல்லாமை
குறள் 406

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

**மு.வ உரை**: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

**சாலமன் பாப்பையா உரை**: படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

**கலைஞர் உரை**: கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்

**Couplet**: 'They are': so much is true of men untaught; But, like a barren field, they yield us nought

**English Explanation**: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist

**Transliteration**: Ularennum Maaththiraiyar Allaal Payavaak Kalaranaiyar Kallaa Thavar

கல்லாமை
குறள் 407

நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று

**மு.வ உரை**: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

**கலைஞர் உரை**: அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்

**Couplet**: Who lack the power of subtle, large, and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence

**English Explanation**: The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll

**Transliteration**: Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam Manmaan Punaipaavai Yatru

கல்லாமை
குறள் 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

**மு.வ உரை**: கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

**கலைஞர் உரை**: முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்

**Couplet**: To men unlearned, from fortune's favour greater-evil springs Than poverty to men of goodly wisdom brings

**English Explanation**: Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

**Transliteration**: Nallaarkan Patta Varumaiyin Innaadhe Kallaarkan Patta Thiru

கல்லாமை
குறள் 409

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு

**மு.வ உரை**: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

**சாலமன் பாப்பையா உரை**: படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

**கலைஞர் உரை**: கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்

**Couplet**: Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace

**English Explanation**: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste

**Transliteration**: Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum Katraar Anaiththilar Paatu

கல்லாமை
குறள் 410

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

**மு.வ உரை**: அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

**சாலமன் பாப்பையா உரை**: விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

**கலைஞர் உரை**: மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு

**Couplet**: Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial train

**English Explanation**: As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works

**Transliteration**: Vilangotu Makkal Anaiyar Ilangunool Katraarotu Enai Yavar

கேள்வி
குறள் 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

**மு.வ உரை**: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

**கலைஞர் உரை**: செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

**Couplet**: Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent

**English Explanation**: Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth

**Transliteration**: Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam Selvaththu Lellaan Thalai

கேள்வி
குறள் 412

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

**மு.வ உரை**: செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

**கலைஞர் உரை**: செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்

**Couplet**: When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need

**English Explanation**: When there is no food for the ear, give a little also to the stomach

**Transliteration**: Sevikkuna Villaadha Pozhdhu Siridhu Vayitrukkum Eeyap Patum

கேள்வி
குறள் 413

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

**மு.வ உரை**: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

**சாலமன் பாப்பையா உரை**: செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

**கலைஞர் உரை**: குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்

**Couplet**: Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share

**English Explanation**: Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices

**Transliteration**: Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin Aandraaro Toppar Nilaththu

கேள்வி
குறள் 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை

**மு.வ உரை**: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

**கலைஞர் உரை**: நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்

**Couplet**: Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay

**English Explanation**: Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity

**Transliteration**: Katrila Naayinung Ketka Aqdhoruvarku Orkaththin Ootraan Thunai

கேள்வி
குறள் 415

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

**மு.வ உரை**: ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

**சாலமன் பாப்பையா உரை**: கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

**கலைஞர் உரை**: வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்

**Couplet**: Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways

**English Explanation**: The words of the good are like a staff in a slippery place

**Transliteration**: Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre Ozhukka Mutaiyaarvaaich Chol

கேள்வி
குறள் 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

**மு.வ உரை**: எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

**கலைஞர் உரை**: நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

**Couplet**: Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity

**English Explanation**: Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity

**Transliteration**: Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum Aandra Perumai Tharum

கேள்வி
குறள் 417

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

**மு.வ உரை**: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

**சாலமன் பாப்பையா உரை**: நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

**கலைஞர் உரை**: எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்

**Couplet**: Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard

**English Explanation**: Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)

**Transliteration**: Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn Theentiya Kelvi Yavar

கேள்வி
குறள் 418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

**மு.வ உரை**: கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

**சாலமன் பாப்பையா உரை**: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

**கலைஞர் உரை**: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

**Couplet**: Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear

**English Explanation**: The ear which has not been bored by instruction, although it hears, is deaf

**Transliteration**: Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha Sevi

கேள்வி
குறள் 419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது

**மு.வ உரை**: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

**கலைஞர் உரை**: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது

**Couplet**: 'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard

**English Explanation**: It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction

**Transliteration**: Nunangiya Kelviya Rallaar Vanangiya Vaayina Raadhal Aridhu

கேள்வி
குறள் 420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்

**மு.வ உரை**: செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

**சாலமன் பாப்பையா உரை**: செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

**கலைஞர் உரை**: செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்

**Couplet**: His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live

**English Explanation**: What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

**Transliteration**: Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal Aviyinum Vaazhinum En?

அறிவுடைமை
குறள் 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

**மு.வ உரை**: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

**கலைஞர் உரை**: பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்

**Couplet**: True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy

**English Explanation**: Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy

**Transliteration**: 421 Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum Ullazhikka Laakaa Aran

அறிவுடைமை
குறள் 422

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு

**மு.வ உரை**: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

**கலைஞர் உரை**: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்

**Couplet**: Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good

**English Explanation**: Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom

**Transliteration**: Sendra Itaththaal Selavitaa Theedhoreei Nandrinpaal Uyppa Tharivu

அறிவுடைமை
குறள் 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

**மு.வ உரை**: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

**கலைஞர் உரை**: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

**Couplet**: Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discern

**English Explanation**: To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom

**Transliteration**: Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul Meypporul Kaanpa Tharivu

அறிவுடைமை
குறள் 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

**மு.வ உரை**: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.

**கலைஞர் உரை**: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்

**Couplet**: Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes in

**English Explanation**: To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom

**Transliteration**: Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai Nunporul Kaanpa Tharivu

அறிவுடைமை
குறள் 425

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு

**மு.வ உரை**: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

**சாலமன் பாப்பையா உரை**: உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

**கலைஞர் உரை**: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்

**Couplet**: Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed

**English Explanation**: To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower)

**Transliteration**: Ulakam Thazheeiya Thotpam Malardhalum Koompalum Illa Tharivu

அறிவுடைமை
குறள் 426

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு

**மு.வ உரை**: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

**கலைஞர் உரை**: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

**Couplet**: As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well

**English Explanation**: To live as the world lives, is wisdom

**Transliteration**: Evva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva Tharivu

அறிவுடைமை
குறள் 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

**மு.வ உரை**: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

**கலைஞர் உரை**: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

**Couplet**: The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be

**English Explanation**: The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise

**Transliteration**: Arivutaiyaar Aava Tharivaar Arivilaar Aqdhari Kallaa Thavar

அறிவுடைமை
குறள் 428

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்

**மு.வ உரை**: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

**கலைஞர் உரை**: அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்

**Couplet**: Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part

**English Explanation**: Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared

**Transliteration**: Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu Anjal Arivaar Thozhil

அறிவுடைமை
குறள் 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

**மு.வ உரை**: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

**கலைஞர் உரை**: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது

**Couplet**: The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are free

**English Explanation**: No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils

**Transliteration**: Edhiradhaak Kaakkum Arivinaark Killai Adhira Varuvadhor Noi

அறிவுடைமை
குறள் 430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்

**மு.வ உரை**: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.

**கலைஞர் உரை**: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை

**Couplet**: The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessed

**English Explanation**: Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing

**Transliteration**: Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar Ennutaiya Renum Ilar

குற்றங்கடிதல்
குறள் 431

செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

**மு.வ உரை**: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

**கலைஞர் உரை**: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்

**Couplet**: Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attain

**English Explanation**: 54 Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust

**Transliteration**: Serukkunj Chinamum Sirumaiyum Illaar Perukkam Perumidha Neerththu

குற்றங்கடிதல்
குறள் 432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

**மு.வ உரை**: பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

**கலைஞர் உரை**: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்

**Couplet**: A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brith

**English Explanation**: Avarice, undignified pride, and low pleasures are faults in a king

**Transliteration**: Ivaralum Maanpirandha Maanamum Maanaa Uvakaiyum Edham Iraikku

குற்றங்கடிதல்
குறள் 433

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

**மு.வ உரை**: பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

**கலைஞர் உரை**: பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்

**Couplet**: Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem

**English Explanation**: Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree

**Transliteration**: Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak Kolvar Pazhinaanu Vaar

குற்றங்கடிதல்
குறள் 434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

**மு.வ உரை**: குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

**கலைஞர் உரை**: குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

**Couplet**: Freedom from faults is wealth; watch heedfully 'Gainst these, for fault is fatal enmity

**English Explanation**: Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

**Transliteration**: Kutrame Kaakka Porulaakak Kutrame Atran Tharooum Pakai

குற்றங்கடிதல்
குறள் 435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

**மு.வ உரை**: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

**கலைஞர் உரை**: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்

**Couplet**: His joy who guards not 'gainst the coming evil day, Like straw before the fire shall swift consume away

**English Explanation**: The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire

**Transliteration**: Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar Vaiththooru Polak Ketum

குற்றங்கடிதல்
குறள் 436

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

**மு.வ உரை**: முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

**கலைஞர் உரை**: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

**Couplet**: Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other men

**English Explanation**: What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others

**Transliteration**: Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin Enkutra Maakum Iraikku?

குற்றங்கடிதல்
குறள் 437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

**மு.வ உரை**: செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

**கலைஞர் உரை**: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்

**Couplet**: Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind

**English Explanation**: The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue

**Transliteration**: Seyarpaala Seyyaa Thivariyaan Selvam Uyarpaala Thandrik Ketum

குற்றங்கடிதல்
குறள் 438

பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

**மு.வ உரை**: பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

**கலைஞர் உரை**: எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்

**Couplet**: The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all

**English Explanation**: Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all)

**Transliteration**: Patrullam Ennum Ivaranmai Etrullum Ennap Patuvadhon Randru

குற்றங்கடிதல்
குறள் 439

வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

**மு.வ உரை**: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

**கலைஞர் உரை**: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது

**Couplet**: Never indulge in self-complaisant mood, Nor deed desire that yields no gain of good

**English Explanation**: Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things

**Transliteration**: Viyavarka Egngnaandrum Thannai Nayavarka Nandri Payavaa Vinai

குற்றங்கடிதல்
குறள் 440

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

**மு.வ உரை**: தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.

**கலைஞர் உரை**: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்

**Couplet**: If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless prove

**English Explanation**: If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless

**Transliteration**: Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin Edhila Edhilaar Nool

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

**மு.வ உரை**: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

**கலைஞர் உரை**: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்

**Couplet**: As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care

**English Explanation**: Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge

**Transliteration**: Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai Thiranarindhu Therndhu Kolal

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

**மு.வ உரை**: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

**கலைஞர் உரை**: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்

**Couplet**: Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends

**English Explanation**: Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen

**Transliteration**: Utranoi Neekki Uraaamai Murkaakkum Petriyaarp Penik Kolal

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 443

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

**மு.வ உரை**: பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

**கலைஞர் உரை**: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்

**Couplet**: To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known

**English Explanation**: To cherish great men and make them his own, is the most difficult of all difficult things

**Transliteration**: Ariyavatru Lellaam Aridhe Periyaaraip Penith Thamaraak Kolal

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 444

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

**மு.வ உரை**: தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

**கலைஞர் உரை**: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்

**Couplet**: To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells

**English Explanation**: So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest

**Transliteration**: Thammir Periyaar Thamaraa Ozhukudhal Vanmaiyu Lellaan Thalai

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 445

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

**மு.வ உரை**: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

**கலைஞர் உரை**: கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்

**Couplet**: The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise

**English Explanation**: As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them

**Transliteration**: Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan Soozhvaaraik Soozhndhu Kolal

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 446

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

**மு.வ உரை**: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

**கலைஞர் உரை**: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது

**Couplet**: The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's pride

**English Explanation**: There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men

**Transliteration**: Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich Chetraar Seyakkitandha Thil

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 447

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

**மு.வ உரை**: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

**சாலமன் பாப்பையா உரை**: தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

**கலைஞர் உரை**: இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

**Couplet**: What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs

**English Explanation**: Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?

**Transliteration**: Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare Ketukkun Thakaimai Yavar

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

**மு.வ உரை**: கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

**கலைஞர் உரை**: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்

**Couplet**: The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall

**English Explanation**: The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him

**Transliteration**: Itippaarai Illaadha Emaraa Mannan Ketuppaa Rilaanung Ketum

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 449

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

**மு.வ உரை**: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

**கலைஞர் உரை**: கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்

**Couplet**: Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability

**English Explanation**: 56 There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to

**Transliteration**: Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch Aarpilaark Killai Nilai

பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

**மு.வ உரை**: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

**கலைஞர் உரை**: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்

**Couplet**: Than hate of many foes incurred, works greater woe Ten-fold, of worthy men the friendship to forego

**English Explanation**: It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many

**Transliteration**: Pallaar Pakai Kolalir Paththatuththa Theemaiththe Nallaar Thotarkai Vital

சிற்றினம் சேராமை
குறள் 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

**மு.வ உரை**: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

**சாலமன் பாப்பையா உரை**: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

**கலைஞர் உரை**: பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்

**Couplet**: The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dear

**English Explanation**: (True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends

**Transliteration**: 451 Sitrinam Anjum Perumai Sirumaidhaan Sutramaach Choozhndhu Vitum

சிற்றினம் சேராமை
குறள் 452

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு

**மு.வ உரை**: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

**கலைஞர் உரை**: சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்

**Couplet**: The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom show

**English Explanation**: As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates

**Transliteration**: Nilaththiyalpaal Neerdhirin Thatraakum Maandharkku Inaththiyalpa Thaakum Arivu

சிற்றினம் சேராமை
குறள் 453

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்

**மு.வ உரை**: மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

**கலைஞர் உரை**: ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்

**Couplet**: Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known

**English Explanation**: The power of knowing is from the mind; (but) his character is from that of his associates

**Transliteration**: Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam Innaan Enappatunj Chol

சிற்றினம் சேராமை
குறள் 454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு

**மு.வ உரை**: ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

**கலைஞர் உரை**: ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்

**Couplet**: Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we find

**English Explanation**: Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions

**Transliteration**: Manaththu Ladhupolak Kaatti Oruvarku Inaththula Thaakum Arivu

சிற்றினம் சேராமை
குறள் 455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

**மு.வ உரை**: மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

**கலைஞர் உரை**: ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்

**Couplet**: Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw near

**English Explanation**: Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct

**Transliteration**: Manandhooimai Seyvinai Thooimai Irantum Inandhooimai Thoovaa Varum

சிற்றினம் சேராமை
குறள் 456

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை

**மு.வ உரை**: மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

**கலைஞர் உரை**: மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்

**Couplet**: From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deeds

**English Explanation**: To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good

**Transliteration**: Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku Illainan Raakaa Vinai

சிற்றினம் சேராமை
குறள் 457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்

**மு.வ உரை**: மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

**கலைஞர் உரை**: மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்

**Couplet**: Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain

**English Explanation**: Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men

**Transliteration**: Mananalam Mannuyirk Kaakkam Inanalam Ellaap Pukazhum Tharum

சிற்றினம் சேராமை
குறள் 458

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து

**மு.வ உரை**: மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

**கலைஞர் உரை**: மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்

**Couplet**: To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong

**English Explanation**: Yet good companionship is confirmation strong

**Transliteration**: Mananalam Nankutaiya Raayinum Saandrorkku Inanalam Emaap Putaiththu

சிற்றினம் சேராமை
குறள் 459

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து

**மு.வ உரை**: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

**கலைஞர் உரை**: நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்

**Couplet**: Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong

**English Explanation**: Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good

**Transliteration**: Mananalaththin Aakum Marumaimar Raqdhum Inanalaththin Emaap Putaiththu

சிற்றினம் சேராமை
குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்

**மு.வ உரை**: நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

**கலைஞர் உரை**: நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை

**Couplet**: Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe

**English Explanation**: There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked

**Transliteration**: Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin Allar Patuppadhooum Il

தெரிந்து செயல்வகை
குறள் 461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

**மு.வ உரை**: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

**கலைஞர் உரை**: எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்

**Couplet**: Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed

**English Explanation**: Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act

**Transliteration**: Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum Oodhiyamum Soozhndhu Seyal

தெரிந்து செயல்வகை
குறள் 462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்

**மு.வ உரை**: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

**கலைஞர் உரை**: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை

**Couplet**: With chosen friends deliberate; next use the private thought; Then act By those who thus proceed all works with ease are wrought

**English Explanation**: There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends

**Transliteration**: Therindha Inaththotu Therndhennich Cheyvaarkku Arumporul Yaadhondrum Il

தெரிந்து செயல்வகை
குறள் 463

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்

**மு.வ உரை**: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்

**Couplet**: To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain

**English Explanation**: Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal

**Transliteration**: Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai Ookkaar Arivutai Yaar

தெரிந்து செயல்வகை
குறள் 464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

**மு.வ உரை**: இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

**கலைஞர் உரை**: களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்

**Couplet**: A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fear

**English Explanation**: Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them

**Transliteration**: Thelivi Ladhanaith Thotangaar Ilivennum Edhappaatu Anju Pavar

தெரிந்து செயல்வகை
குறள் 465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

**மு.வ உரை**: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

**கலைஞர் உரை**: முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்

**Couplet**: With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow

**English Explanation**: One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances)

**Transliteration**: Vakaiyarach Choozhaa Thezhudhal Pakaivaraip Paaththip Patuppadho Raaru

தெரிந்து செயல்வகை
குறள் 466

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

**மு.வ உரை**: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

**கலைஞர் உரை**: செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

**Couplet**: 'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring

**English Explanation**: 58 He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to

**Transliteration**: Seydhakka Alla Seyak Ketum Seydhakka Seyyaamai Yaanung Ketum

தெரிந்து செயல்வகை
குறள் 467

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு

**மு.வ உரை**: (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

**கலைஞர் உரை**: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு

**Couplet**: Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,' disgraced shall be

**English Explanation**: Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly

**Transliteration**: Ennith Thunika Karumam Thunindhapin Ennuvam Enpadhu Izhukku

தெரிந்து செயல்வகை
குறள் 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

**மு.வ உரை**: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

**கலைஞர் உரை**: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்

**Couplet**: On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive

**English Explanation**: The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it

**Transliteration**: Aatrin Varundhaa Varuththam Palarnindru Potrinum Poththup Patum

தெரிந்து செயல்வகை
குறள் 469

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

**மு.வ உரை**: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

**கலைஞர் உரை**: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்

**Couplet**: Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid

**English Explanation**: There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men

**Transliteration**: Nandraatra Lullun Thavuruntu Avaravar Panparin Thaatraak Katai

தெரிந்து செயல்வகை
குறள் 470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு

**மு.வ உரை**: தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

**கலைஞர் உரை**: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்

**Couplet**: Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wise

**English Explanation**: Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt

**Transliteration**: Ellaadha Ennich Cheyalventum Thammotu Kollaadha Kollaadhu Ulaku

வலியறிதல்
குறள் 471

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்

**மு.வ உரை**: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

**கலைஞர் உரை**: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்

**Couplet**: The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes

**English Explanation**: Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act

**Transliteration**: Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum Thunaivaliyum Thookkich Cheyal

வலியறிதல்
குறள் 472

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்

**மு.வ உரை**: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

**கலைஞர் உரை**: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை

**Couplet**: Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amiss

**English Explanation**: There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and

**Transliteration**: Olva Tharivadhu Arindhadhan Kandhangich Chelvaarkkuch Chellaadhadhu Il

வலியறிதல்
குறள் 473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

**மு.வ உரை**: தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

**கலைஞர் உரை**: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு

**Couplet**: Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven

**English Explanation**: There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it

**Transliteration**: Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki Itaikkan Murindhaar Palar

வலியறிதல்
குறள் 474

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

**மு.வ உரை**: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

**கலைஞர் உரை**: மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்

**Couplet**: Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes

**English Explanation**: 59 He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does

**Transliteration**: Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai Viyandhaan Viraindhu Ketum

வலியறிதல்
குறள் 475

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

**மு.வ உரை**: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

**சாலமன் பாப்பையா உரை**: மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

**கலைஞர் உரை**: மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்

**Couplet**: With peacock feathers light, you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain

**English Explanation**: The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded

**Transliteration**: Peelipey Saakaatum Achchirum Appantanjjch Aala Mikuththup Peyin

வலியறிதல்
குறள் 476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

**மு.வ உரை**: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

**கலைஞர் உரை**: தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்

**Couplet**: Who daring climbs, and would himself upraise Beyond the branch's tip, with life the forfeit pays

**English Explanation**: There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further

**Transliteration**: Nunikkompar Erinaar Aqdhiran Thookkin Uyirkkirudhi Aaki Vitum

வலியறிதல்
குறள் 477

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

**மு.வ உரை**: தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

**கலைஞர் உரை**: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்

**Couplet**: With knowledge of the measure due, as virtue bids you give! That is the way to guard your wealth, and seemly live

**English Explanation**: Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property

**Transliteration**: Aatrin Aravarindhu Eeka Adhuporul Potri Vazhangu Neri

வலியறிதல்
குறள் 478

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை

**மு.வ உரை**: பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

**கலைஞர் உரை**: எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை

**Couplet**: Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spare

**English Explanation**: Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income

**Transliteration**: Aakaaru Alavitti Thaayinung Ketillai Pokaaru Akalaak Katai

வலியறிதல்
குறள் 479

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

**மு.வ உரை**: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

**கலைஞர் உரை**: இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்

**Couplet**: Who prosperous lives and of enjoyment knows no bound, His seeming wealth, departing, nowhere shall be found

**English Explanation**: The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue

**Transliteration**: Alavara�ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola Illaakith Thondraak Ketum

வலியறிதல்
குறள் 480

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்

**மு.வ உரை**: தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

**கலைஞர் உரை**: தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்

**Couplet**: Beneficence that measures not its bound of means, Will swiftly bring to nought the wealth on which it leans

**English Explanation**: The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property

**Transliteration**: Ulavarai Thookkaadha Oppura Vaanmai Valavarai Vallaik Ketum

காலமறிதல்
குறள் 481

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

**மு.வ உரை**: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

**கலைஞர் உரை**: பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

**Couplet**: A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight

**English Explanation**: A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time

**Transliteration**: Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum Vendharkku Ventum Pozhudhu

காலமறிதல்
குறள் 482

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு

**மு.வ உரை**: காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

**கலைஞர் உரை**: காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்

**Couplet**: The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid

**English Explanation**: Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)

**Transliteration**: Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith Theeraamai Aarkkung Kayiru

காலமறிதல்
குறள் 483

அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்

**மு.வ உரை**: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

**சாலமன் பாப்பையா உரை**: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

**கலைஞர் உரை**: தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

**Couplet**: Can any work be hard in very fact, If men use fitting means in timely act

**English Explanation**: Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

**Transliteration**: Aruvinai Yenpa Ulavo Karuviyaan Kaalam Arindhu Seyin

காலமறிதல்
குறள் 484

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்

**மு.வ உரை**: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

**கலைஞர் உரை**: உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்

**Couplet**: The pendant world's dominion may be won, In fitting time and place by action done

**English Explanation**: Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place

**Transliteration**: Gnaalam Karudhinung Kaikootung Kaalam Karudhi Itaththaar Seyin

காலமறிதல்
குறள் 485

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்

**மு.வ உரை**: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

**கலைஞர் உரை**: கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்

**Couplet**: Who think the pendant world itself to subjugate, With mind unruffled for the fitting time must wait

**English Explanation**: They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

**Transliteration**: Kaalam Karudhi Iruppar Kalangaadhu Gnaalam Karudhu Pavar

காலமறிதல்
குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

**மு.வ உரை**: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

**கலைஞர் உரை**: கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்

**Couplet**: The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress

**English Explanation**: The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt

**Transliteration**: Ookka Mutaiyaan Otukkam Porudhakar Thaakkarkup Perun Thakaiththu

காலமறிதல்
குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

**மு.வ உரை**: அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

**கலைஞர் உரை**: பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்

**Couplet**: The glorious once of wrath enkindled make no outward show, At once; they bide their time, while hidden fires within them glow

**English Explanation**: The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within

**Transliteration**: Pollena Aange Puramveraar Kaalampaarththu Ulverppar Olli Yavar

காலமறிதல்
குறள் 488

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை

**மு.வ உரை**: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

**கலைஞர் உரை**: பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்

**Couplet**: If foes' detested form they see, with patience let them bear; When fateful hour at last they spy,- the head lies there

**English Explanation**: If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low

**Transliteration**: Serunaraik Kaanin Sumakka Iruvarai Kaanin Kizhakkaam Thalai

காலமறிதல்
குறள் 489

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

**மு.வ உரை**: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

**கலைஞர் உரை**: கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

**Couplet**: When hardest gain of opportunity at last is won, With promptitude let hardest deed be done

**English Explanation**: If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)

**Transliteration**: Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye Seydhar Kariya Seyal

காலமறிதல்
குறள் 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

**மு.வ உரை**: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

**கலைஞர் உரை**: காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்

**Couplet**: As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power

**English Explanation**: At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity

**Transliteration**: Kokkokka Koompum Paruvaththu Matradhan Kuththokka Seerththa Itaththu

இடனறிதல்
குறள் 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது

**மு.வ உரை**: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

**கலைஞர் உரை**: ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்

**Couplet**: Begin no work of war, depise no foe, Till place where you can wholly circumvent you know

**English Explanation**: Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him

**Transliteration**: Thotangarka Evvinaiyum Ellarka Mutrum Itanganta Pinal Ladhu

இடனறிதல்
குறள் 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

**மு.வ உரை**: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

**கலைஞர் உரை**: வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்

**Couplet**: Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield

**English Explanation**: Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages

**Transliteration**: Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam Aakkam Palavun Tharum

இடனறிதல்
குறள் 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

**மு.வ உரை**: தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

**சாலமன் பாப்பையா உரை**: பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

**கலைஞர் உரை**: தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்

**Couplet**: E'en weak ones mightily prevail, if place of strong defence, They find, protect themselves, and work their foes offence

**English Explanation**: Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

**Transliteration**: Aatraarum Aatri Atupa Itanarindhu Potraarkan Potrich Cheyin

இடனறிதல்
குறள் 494

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

**மு.வ உரை**: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

**சாலமன் பாப்பையா உரை**: ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.

**கலைஞர் உரை**: ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்

**Couplet**: The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain

**English Explanation**: If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them

**Transliteration**: Enniyaar Ennam Izhappar Itanarindhu Thunniyaar Thunnich Cheyin

இடனறிதல்
குறள் 495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

**மு.வ உரை**: ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

**கலைஞர் உரை**: தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

**Couplet**: The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, 'tis slain by anything beside

**English Explanation**: In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it

**Transliteration**: Netumpunalul Vellum Mudhalai Atumpunalin Neengin Adhanaip Pira

இடனறிதல்
குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

**மு.வ உரை**: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

**கலைஞர் உரை**: ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்

**Couplet**: The lofty car, with mighty wheel, sails not o'er watery main, The boat that skims the sea, runs not on earth's hard plain

**English Explanation**: Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth

**Transliteration**: Katalotaa Kaalval Netundher Katalotum Naavaayum Otaa Nilaththu

இடனறிதல்
குறள் 497

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்

**மு.வ உரை**: (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

**கலைஞர் உரை**: ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை

**Couplet**: Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made

**English Explanation**: You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations

**Transliteration**: Anjaamai Allaal Thunaiventaa Enjaamai Enni Itaththaal Seyin

இடனறிதல்
குறள் 498

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

**மு.வ உரை**: சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

**சாலமன் பாப்பையா உரை**: பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

**கலைஞர் உரை**: சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்

**Couplet**: If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail

**English Explanation**: The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act

**Transliteration**: Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan Ookkam Azhindhu Vitum

இடனறிதல்
குறள் 499

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது

**மு.வ உரை**: அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

**சாலமன் பாப்பையா உரை**: மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

**கலைஞர் உரை**: பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல

**Couplet**: Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack

**English Explanation**: It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress

**Transliteration**: Sirainalanum Seerum Ilareninum Maandhar Urainilaththotu Ottal Aridhu

இடனறிதல்
குறள் 500

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

**மு.வ உரை**: வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

**கலைஞர் உரை**: வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்

**Couplet**: The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men

**English Explanation**: A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down

**Transliteration**: Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa Velaal Mukaththa Kaliru

தெரிந்து தெளிதல்
குறள் 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

**மு.வ உரை**: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

**கலைஞர் உரை**: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்

**Couplet**: How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make

**English Explanation**: Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life

**Transliteration**: Aramporul Inpam Uyirachcham Naankin Thirandherindhu Therap Patum

தெரிந்து தெளிதல்
குறள் 502

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு

**மு.வ உரை**: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

**கலைஞர் உரை**: குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்

**Couplet**: Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide

**English Explanation**: (The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin)

**Transliteration**: Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum Naanutaiyaan Sutte Thelivu

தெரிந்து தெளிதல்
குறள் 503

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

**மு.வ உரை**: அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

**கலைஞர் உரை**: அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது

**Couplet**: Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom free

**English Explanation**: When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance

**Transliteration**: Ariyakatru Aasatraar Kannum Theriyungaal Inmai Aridhe Veliru

தெரிந்து தெளிதல்
குறள் 504

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

**மு.வ உரை**: ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

**கலைஞர் உரை**: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்

**Couplet**: Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man

**English Explanation**: Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails

**Transliteration**: Kunamnaatik Kutramum Naati Avatrul Mikainaati Mikka Kolal

தெரிந்து தெளிதல்
குறள் 505

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்

**மு.வ உரை**: (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

**கலைஞர் உரை**: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்

**Couplet**: Of greatness and of meanness too, The deeds of each are touchstone true

**English Explanation**: A man's deeds are the touchstone of his greatness and littleness

**Transliteration**: Perumaikkum Enaich Chirumaikkum Thaththam Karumame Kattalaik Kal

தெரிந்து தெளிதல்
குறள் 506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

**மு.வ உரை**: சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

**கலைஞர் உரை**: நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்

**Couplet**: Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin

**English Explanation**: Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime

**Transliteration**: Atraaraith Therudhal Ompuka Matravar Patrilar Naanaar Pazhi

தெரிந்து தெளிதல்
குறள் 507

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

**மு.வ உரை**: அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

**கலைஞர் உரை**: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்

**Couplet**: By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly's blind control

**English Explanation**: Yields all his being up to folly's blind control

**Transliteration**: Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal Pedhaimai Ellaan Tharum

தெரிந்து தெளிதல்
குறள் 508

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

**மு.வ உரை**: மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

**கலைஞர் உரை**: ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்

**Couplet**: Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race

**English Explanation**: Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known

**Transliteration**: Theraan Piranaith Thelindhaan Vazhimurai Theeraa Itumpai Tharum

தெரிந்து தெளிதல்
குறள் 509

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

**மு.வ உரை**: யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

**கலைஞர் உரை**: நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது

**Couplet**: Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide

**English Explanation**: Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate

**Transliteration**: Therarka Yaaraiyum Theraadhu Therndhapin Theruka Therum Porul

தெரிந்து தெளிதல்
குறள் 510

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

**மு.வ உரை**: ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

**கலைஞர் உரை**: ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்

**Couplet**: Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal

**English Explanation**: To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow

**Transliteration**: Theraan Thelivum Thelindhaankan Aiyuravum Theeraa Itumpai Tharum

தெரிந்து வினையாடல்
குறள் 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

**மு.வ உரை**: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

**கலைஞர் உரை**: நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்

**Couplet**: Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ

**English Explanation**: He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking

**Transliteration**: Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha Thanmaiyaan Aalap Patum

தெரிந்து வினையாடல்
குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை

**மு.வ உரை**: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

**கலைஞர் உரை**: வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்

**Couplet**: Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand

**English Explanation**: Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)

**Transliteration**: Vaari Perukki Valampatuththu Utravai Aaraaivaan Seyka Vinai

தெரிந்து வினையாடல்
குறள் 513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

**மு.வ உரை**: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

**கலைஞர் உரை**: அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்

**Couplet**: A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be

**English Explanation**: Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness

**Transliteration**: Anparivu Thetram Avaavinmai Innaankum Nankutaiyaan Katte Thelivu

தெரிந்து வினையாடல்
குறள் 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

**மு.வ உரை**: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

**கலைஞர் உரை**: எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்

**Couplet**: Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action tried

**English Explanation**: Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)

**Transliteration**: Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan Veraakum Maandhar Palar

தெரிந்து வினையாடல்
குறள் 515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று

**மு.வ உரை**: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

**கலைஞர் உரை**: ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது

**Couplet**: No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient care

**English Explanation**: (A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment

**Transliteration**: Arindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan Sirandhaanendru Evarpaar Randru

தெரிந்து வினையாடல்
குறள் 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்

**மு.வ உரை**: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

**கலைஞர் உரை**: செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்

**Couplet**: Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed

**English Explanation**: Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it

**Transliteration**: Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu Eydha Unarndhu Seyal

தெரிந்து வினையாடல்
குறள் 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

**மு.வ உரை**: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

**கலைஞர் உரை**: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

**Couplet**: 'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand

**English Explanation**: After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty

**Transliteration**: Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu Adhanai Avankan Vital

தெரிந்து வினையாடல்
குறள் 518

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

**மு.வ உரை**: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

**கலைஞர் உரை**: ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்

**Couplet**: As each man's special aptitude is known, Bid each man make that special work his own

**English Explanation**: Having considered what work a man is fit for, let (the king) employ him in that work

**Transliteration**: Vinaik Kurimai Naatiya Pindrai Avanai Adharkuriya Naakach Cheyal

தெரிந்து வினையாடல்
குறள் 519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு

**மு.வ உரை**: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

**கலைஞர் உரை**: எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்

**Couplet**: Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share

**English Explanation**: Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties

**Transliteration**: Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka Ninaippaanai Neengum Thiru

தெரிந்து வினையாடல்
குறள் 520

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

**மு.வ உரை**: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்

**Couplet**: Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way

**English Explanation**: Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly

**Transliteration**: 520 Naatorum Naatuka Mannan Vinaiseyvaan Kotaamai Kotaa Thulaku

சுற்றந் தழால்
குறள் 521

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள

**மு.வ உரை**: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

**கலைஞர் உரை**: ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்

**Couplet**: When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know

**English Explanation**: Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)

**Transliteration**: Patratra Kannum Pazhaimaipaa Raattudhal Sutraththaar Kanne Ula

சுற்றந் தழால்
குறள் 522

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்

**மு.வ உரை**: அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்

**Couplet**: The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blows

**English Explanation**: If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth

**Transliteration**: Virupparaach Chutram Iyaiyin Arupparaa Aakkam Palavum Tharum

சுற்றந் தழால்
குறள் 523

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

**மு.வ உரை**: சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

**கலைஞர் உரை**: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்

**Couplet**: His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling bound

**English Explanation**: 65 The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a

**Transliteration**: Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak Kotindri Neernirain Thatru

சுற்றந் தழால்
குறள் 524

சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்

**மு.வ உரை**: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

**கலைஞர் உரை**: தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்

**Couplet**: The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peace

**English Explanation**: To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth

**Transliteration**: Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan Petraththaal Petra Payan

சுற்றந் தழால்
குறள் 525

கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்

**மு.வ உரை**: பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

**கலைஞர் உரை**: வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்

**Couplet**: Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surrounding him shall live

**English Explanation**: He will be surrounded by numerous relatives who manifests generosity and affability

**Transliteration**: Kotuththalum Insolum Aatrin Atukkiya Sutraththaal Sutrap Patum

சுற்றந் தழால்
குறள் 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்

**மு.வ உரை**: பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

**கலைஞர் உரை**: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்

**Couplet**: Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gains

**English Explanation**: No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger

**Transliteration**: Perungotaiyaan Penaan Vekuli Avanin Marungutaiyaar Maanilaththu Il

சுற்றந் தழால்
குறள் 527

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்னநீ ரார்க்கே உள

**மு.வ உரை**: காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

**கலைஞர் உரை**: தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு

**Couplet**: The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet

**English Explanation**: The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)

**Transliteration**: Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum Annanee Raarkke Ula

சுற்றந் தழால்
குறள் 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

**மு.வ உரை**: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

**கலைஞர் உரை**: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்

**Couplet**: Where king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happily

**English Explanation**: Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit

**Transliteration**: Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin Adhunokki Vaazhvaar Palar

சுற்றந் தழால்
குறள் 529

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்

**மு.வ உரை**: முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

**கலைஞர் உரை**: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்

**Couplet**: Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more

**English Explanation**: Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him

**Transliteration**: Thamaraakik Thatrurandhaar Sutram Amaraamaik Kaaranam Indri Varum

சுற்றந் தழால்
குறள் 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்

**மு.வ உரை**: தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

**கலைஞர் உரை**: ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்

**Couplet**: Who causeless went away, then to return, for any cause, ask leave; The king should sift their motives well, consider, and receive

**English Explanation**: When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again

**Transliteration**: Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai Vendhan Izhaith Thirundhu Ennik Kolal

பொச்சாவாமை
குறள் 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

**மு.வ உரை**: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

**கலைஞர் உரை**: அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது

**Couplet**: 'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control

**English Explanation**: More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy

**Transliteration**: Irandha Vekuliyin Theedhe Sirandha Uvakai Makizhchchiyir Sorvu

பொச்சாவாமை
குறள் 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

**மு.வ உரை**: நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

**கலைஞர் உரை**: நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்

**Couplet**: Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies

**English Explanation**: Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

**Transliteration**: Pochchaappuk Kollum Pukazhai Arivinai Nichcha Nirappuk Kon Raangu

பொச்சாவாமை
குறள் 533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு

**மு.வ உரை**: மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

**கலைஞர் உரை**: மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்

**Couplet**: 'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school

**English Explanation**: Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world

**Transliteration**: Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu Eppaalnoo Lorkkum Thunivu

பொச்சாவாமை
குறள் 534

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

**மு.வ உரை**: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

**கலைஞர் உரை**: பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை

**Couplet**: 'To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know

**English Explanation**: Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess)

**Transliteration**: Achcha Mutaiyaarkku Aranillai Aangillai Pochchaap Putaiyaarkku Nanku

பொச்சாவாமை
குறள் 535

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்

**மு.வ உரை**: வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

**கலைஞர் உரை**: முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்

**Couplet**: To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring

**English Explanation**: The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault

**Transliteration**: Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai Pinnooru Irangi Vitum

பொச்சாவாமை
குறள் 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்

**மு.வ உரை**: யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

**கலைஞர் உரை**: ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது

**Couplet**: Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain

**English Explanation**: There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons

**Transliteration**: Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai Vaayin Adhuvoppadhu Il

பொச்சாவாமை
குறள் 537

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்

**மு.வ உரை**: மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

**கலைஞர் உரை**: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை

**Couplet**: Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is done

**English Explanation**: There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour

**Transliteration**: Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak Karuviyaal Potrich Cheyin

பொச்சாவாமை
குறள் 538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்

**மு.வ உரை**: சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

**கலைஞர் உரை**: புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை

**Couplet**: Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy

**English Explanation**: Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births

**Transliteration**: Pukazhndhavai Potrich Cheyalventum Seyyaadhu Ikazhndhaarkku Ezhumaiyum Il

பொச்சாவாமை
குறள் 539

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

**மு.வ உரை**: தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

**கலைஞர் உரை**: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்

**Couplet**: Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought

**English Explanation**: Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy

**Transliteration**: Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham Makizhchchiyin Maindhurum Pozhdhu

பொச்சாவாமை
குறள் 540

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்

**மு.வ உரை**: ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

**கலைஞர் உரை**: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்

**Couplet**: 'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain

**English Explanation**: It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it

**Transliteration**: Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan Ulliyadhu Ullap Perin

செங்கோன்மை
குறள் 541

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

**மு.வ உரை**: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

**கலைஞர் உரை**: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்

**Couplet**: Search out, to no one favour show; with heart that justice loves Consult, then act; this is the rule that right approves

**English Explanation**: To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,

**Transliteration**: Orndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum Therndhusey Vaqdhe Murai

செங்கோன்மை
குறள் 542

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி

**மு.வ உரை**: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

**கலைஞர் உரை**: உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது

**Couplet**: All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all

**English Explanation**: When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive

**Transliteration**: Vaanokki Vaazhum Ulakellaam Mannavan Kol Nokki Vaazhung Kuti

செங்கோன்மை
குறள் 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

**மு.வ உரை**: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

**கலைஞர் உரை**: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

**Couplet**: Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king

**English Explanation**: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described

**Transliteration**: Andhanar Noorkum Araththirkum Aadhiyaai Nindradhu Mannavan Kol

செங்கோன்மை
குறள் 544

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

**மு.வ உரை**: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

**சாலமன் பாப்பையா உரை**: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

**கலைஞர் உரை**: குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

**Couplet**: Whose heart embraces subjects all, lord over mighty land Who rules, the world his feet embracing stands

**English Explanation**: The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love

**Transliteration**: Kutidhazheeik Kolochchum Maanila Mannan Atidhazheei Nirkum Ulaku

செங்கோன்மை
குறள் 545

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு

**மு.வ உரை**: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

**கலைஞர் உரை**: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்

**Couplet**: Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields

**English Explanation**: Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice

**Transliteration**: Iyalpulik Kolochchum Mannavan Naatta Peyalum Vilaiyulum Thokku

செங்கோன்மை
குறள் 546

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்

**மு.வ உரை**: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்

**Couplet**: Not lance gives kings the victory, But sceptre swayed with equity

**English Explanation**: It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice

**Transliteration**: Velandru Vendri Tharuvadhu Mannavan Koladhooung Kotaa Thenin

செங்கோன்மை
குறள் 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச் செயின்

**மு.வ உரை**: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

**கலைஞர் உரை**: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்

**Couplet**: The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects

**English Explanation**: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king

**Transliteration**: Iraikaakkum Vaiyakam Ellaam Avanai Muraikaakkum Muttaach Cheyin

செங்கோன்மை
குறள் 548

எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

**மு.வ உரை**: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

**கலைஞர் உரை**: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்

**Couplet**: Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land

**English Explanation**: The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace

**Transliteration**: Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan Thanpadhaththaan Thaane Ketum

செங்கோன்மை
குறள் 549

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்

**மு.வ உரை**: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

**சாலமன் பாப்பையா உரை**: அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.

**கலைஞர் உரை**: குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்

**Couplet**: Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings

**English Explanation**: 68 In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime

**Transliteration**: Kutipurang Kaaththompik Kutram Katidhal Vatuvandru Vendhan Thozhil

செங்கோன்மை
குறள் 550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

**மு.வ உரை**: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

**கலைஞர் உரை**: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்

**Couplet**: By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain

**English Explanation**: For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn

**Transliteration**: Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh Kalaikat Tadhanotu Ner

கொடுங்கோன்மை
குறள் 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து

**மு.வ உரை**: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

**சாலமன் பாப்பையா உரை**: குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

**கலைஞர் உரை**: அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்

**Couplet**: Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing

**English Explanation**: The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer

**Transliteration**: Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu Allavai Seydhozhukum Vendhu

கொடுங்கோன்மை
குறள் 552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

**மு.வ உரை**: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

**கலைஞர் உரை**: ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது

**Couplet**: As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift

**English Explanation**: The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth"

**Transliteration**: Velotu Nindraan Ituven Radhupolum Kolotu Nindraan Iravu

கொடுங்கோன்மை
குறள் 553

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

**மு.வ உரை**: நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

**கலைஞர் உரை**: ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்

**Couplet**: Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring

**English Explanation**: The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin

**Transliteration**: Naatorum Naati Muraiseyyaa Mannavan Naatorum Naatu Ketum

கொடுங்கோன்மை
குறள் 554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

**மு.வ உரை**: (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

**கலைஞர் உரை**: நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்

**Couplet**: Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall lose

**English Explanation**: The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects

**Transliteration**: Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich Choozhaadhu Seyyum Arasu

கொடுங்கோன்மை
குறள் 555

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

**மு.வ உரை**: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

**சாலமன் பாப்பையா உரை**: தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

**கலைஞர் உரை**: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்

**Couplet**: His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away

**English Explanation**: Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?

**Transliteration**: Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre Selvaththaith Theykkum Patai

கொடுங்கோன்மை
குறள் 556

மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

**மு.வ உரை**: அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

**கலைஞர் உரை**: நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்

**Couplet**: To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light

**English Explanation**: Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance

**Transliteration**: Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel Mannaavaam Mannark Koli

கொடுங்கோன்மை
குறள் 557

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

**மு.வ உரை**: மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

**சாலமன் பாப்பையா உரை**: மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

**கலைஞர் உரை**: மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்

**Couplet**: As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe

**English Explanation**: As is the world without rain, so live a people whose king is without kindness

**Transliteration**: Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan Aliyinmai Vaazhum Uyirkku

கொடுங்கோன்மை
குறள் 558

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

**மு.வ உரை**: முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

**கலைஞர் உரை**: வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது

**Couplet**: To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust king

**English Explanation**: Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice

**Transliteration**: Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa Mannavan Korkeezhp Patin

கொடுங்கோன்மை
குறள் 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

**மு.வ உரை**: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

**கலைஞர் உரை**: முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது

**Couplet**: Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain

**English Explanation**: If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers

**Transliteration**: Muraikoti Mannavan Seyyin Uraikoti Ollaadhu Vaanam Peyal

கொடுங்கோன்மை
குறள் 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

**மு.வ உரை**: நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

**கலைஞர் உரை**: ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்

**Couplet**: Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie

**English Explanation**: If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedas

**Transliteration**: Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar Kaavalan Kaavaan Enin

வெருவந்த செய்யாமை
குறள் 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து

**மு.வ உரை**: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

**கலைஞர் உரை**: நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்

**Couplet**: Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he

**English Explanation**: He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed

**Transliteration**: Thakkaangu Naatith Thalaichchellaa Vannaththaal Oththaangu Oruppadhu Vendhu

வெருவந்த செய்யாமை
குறள் 562

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்

**மு.வ உரை**: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

**கலைஞர் உரை**: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்

**Couplet**: For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall

**English Explanation**: Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness

**Transliteration**: Katidhochchi Mella Erika Netidhaakkam Neengaamai Ventu Pavar

வெருவந்த செய்யாமை
குறள் 563

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

**மு.வ உரை**: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

**கலைஞர் உரை**: குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்

**Couplet**: Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure

**English Explanation**: The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin

**Transliteration**: Veruvandha Seydhozhukum Vengola Naayin Oruvandham Ollaik Ketum

வெருவந்த செய்யாமை
குறள் 564

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

**மு.வ உரை**: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

**கலைஞர் உரை**: கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்

**Couplet**: 'Ah! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay

**English Explanation**: The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened

**Transliteration**: Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan Uraikatuki Ollaik Ketum

வெருவந்த செய்யாமை
குறள் 565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து

**மு.வ உரை**: எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

**கலைஞர் உரை**: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்

**Couplet**: Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance

**English Explanation**: The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil

**Transliteration**: Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam Peeykan Tannadhu Utaiththu

வெருவந்த செய்யாமை
குறள் 566

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

**மு.வ உரை**: கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

**கலைஞர் உரை**: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்

**Couplet**: The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die

**English Explanation**: The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him

**Transliteration**: Katunjollan Kannilan Aayin Netunjelvam Neetindri Aange Ketum

வெருவந்த செய்யாமை
குறள் 567

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

**மு.வ உரை**: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

**கலைஞர் உரை**: கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்

**Couplet**: Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might

**English Explanation**: Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies)

**Transliteration**: Katumozhiyum Kaiyikandha Thantamum Vendhan Atumuran Theykkum Aram

வெருவந்த செய்யாமை
குறள் 568

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு

**மு.வ உரை**: அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

**கலைஞர் உரை**: கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்

**Couplet**: Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er

**English Explanation**: The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them

**Transliteration**: Inaththaatri Ennaadha Vendhan Sinaththaatrich Cheerir Sirukum Thiru

வெருவந்த செய்யாமை
குறள் 569

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

**மு.வ உரை**: முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

**கலைஞர் உரை**: முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்

**Couplet**: Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die

**English Explanation**: The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish

**Transliteration**: Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan Veruvandhu Veydhu Ketum

வெருவந்த செய்யாமை
குறள் 570

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை

**மு.வ உரை**: கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

**கலைஞர் உரை**: கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை

**Couplet**: Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bear

**English Explanation**: The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)

**Transliteration**: Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu Illai Nilakkup Porai

கண்ணோட்டம்
குறள் 571

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

**மு.வ உரை**: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

**கலைஞர் உரை**: இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது

**Couplet**: Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides

**English Explanation**: The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour

**Transliteration**: Kannottam Ennum Kazhiperung Kaarikai Unmaiyaan Untiv Vulaku

கண்ணோட்டம்
குறள் 572

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

**மு.வ உரை**: கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

**கலைஞர் உரை**: அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்

**Couplet**: The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear

**English Explanation**: The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth

**Transliteration**: Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar Unmai Nilakkup Porai

கண்ணோட்டம்
குறள் 573

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்

**மு.வ உரை**: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

**கலைஞர் உரை**: இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்

**Couplet**: Where not accordant with the song, what use of sounding chords What gain of eye that no benignant light affords

**English Explanation**: Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness

**Transliteration**: Panennaam Paatarku Iyaipindrel Kanennaam Kannottam Illaadha Kan

கண்ணோட்டம்
குறள் 574

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்

**மு.வ உரை**: தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

**கலைஞர் உரை**: அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்

**Couplet**: The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright

**English Explanation**: Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

**Transliteration**: Ulapol Mukaththevan Seyyum Alavinaal Kannottam Illaadha Kan

கண்ணோட்டம்
குறள் 575

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்

**மு.வ உரை**: ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

**கலைஞர் உரை**: கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்

**Couplet**: Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face

**English Explanation**: Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores

**Transliteration**: Kannirku Anikalam Kannottam Aqdhindrel Punnendru Unarap Patum

கண்ணோட்டம்
குறள் 576

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்

**மு.வ உரை**: கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

**சாலமன் பாப்பையா உரை**: கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

**கலைஞர் உரை**: ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்

**Couplet**: Whose eyes 'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they

**English Explanation**: They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)

**Transliteration**: Manno Tiyaindha Maraththanaiyar Kanno Tiyaindhukan Notaa Thavar

கண்ணோட்டம்
குறள் 577

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

**மு.வ உரை**: கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

**கலைஞர் உரை**: கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்

**Couplet**: Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who've eyes can never lack the light of grace benign

**English Explanation**: Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks

**Transliteration**: Kannottam Illavar Kannilar Kannutaiyaar Kannottam Inmaiyum Il

கண்ணோட்டம்
குறள் 578

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு

**மு.வ உரை**: தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

**கலைஞர் உரை**: கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்

**Couplet**: Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won

**English Explanation**: The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)

**Transliteration**: Karumam Sidhaiyaamal Kannota Vallaarkku Urimai Utaiththiv Vulaku

கண்ணோட்டம்
குறள் 579

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

**மு.வ உரை**: தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

**கலைஞர் உரை**: அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்

**Couplet**: To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace

**English Explanation**: Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions

**Transliteration**: Oruththaatrum Panpinaar Kannumkan Notip Poruththaatrum Panpe Thalai

கண்ணோட்டம்
குறள் 580

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

**மு.வ உரை**: எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

**கலைஞர் உரை**: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்

**Couplet**: They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy

**English Explanation**: Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them

**Transliteration**: Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka Naakarikam Ventu Pavar

ஒற்றாடல்
குறள் 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

**மு.வ உரை**: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

**கலைஞர் உரை**: நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்

**Couplet**: These two: the code renowned and spies, In these let king confide as eyes

**English Explanation**: Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed

**Transliteration**: Otrum Uraisaandra Noolum Ivaiyirantum Thetrenka Mannavan Kan

ஒற்றாடல்
குறள் 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

**மு.வ உரை**: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

**கலைஞர் உரை**: நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்

**Couplet**: Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speed

**English Explanation**: 'Tis duty of the king to learn with speed

**Transliteration**: Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum Vallaridhal Vendhan Thozhil

ஒற்றாடல்
குறள் 583

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்

**மு.வ உரை**: ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

**கலைஞர் உரை**: நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை

**Couplet**: By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king

**English Explanation**: There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy

**Transliteration**: Otrinaan Otrip Poruldheriyaa Mannavan Kotrang Kolakkitandhadhu Il

ஒற்றாடல்
குறள் 584

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று

**மு.வ உரை**: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

**கலைஞர் உரை**: ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்

**Couplet**: His officers, his friends, his enemies, All these who watch are trusty spies

**English Explanation**: He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies

**Transliteration**: Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu Anaivaraiyum Aaraaivadhu Otru

ஒற்றாடல்
குறள் 585

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

**மு.வ உரை**: ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

**கலைஞர் உரை**: சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்

**Couplet**: Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies

**English Explanation**: A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose)

**Transliteration**: Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum Ukaaamai Valladhe Otru

ஒற்றாடல்
குறள் 586

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று

**மு.வ உரை**: துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

**கலைஞர் உரை**: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்

**Couplet**: As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind display

**English Explanation**: He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him

**Transliteration**: Thurandhaar Pativaththa Raaki Irandhaaraaindhu Enseyinum Sorviladhu Otru

ஒற்றாடல்
குறள் 587

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று

**மு.வ உரை**: மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

**கலைஞர் உரை**: மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்

**Couplet**: A spy must search each hidden matter out, And full report must render, free from doubt

**English Explanation**: A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known

**Transliteration**: Maraindhavai Ketkavar Raaki Arindhavai Aiyappaatu Illadhe Otru

ஒற்றாடல்
குறள் 588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

**மு.வ உரை**: ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

**கலைஞர் உரை**: ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்

**Couplet**: Spying by spies, the things they tell To test by other spies is well

**English Explanation**: Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy

**Transliteration**: Otrotrith Thandha Porulaiyum Matrumor Otrinaal Otrik Kolal

ஒற்றாடல்
குறள் 589

ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

**மு.வ உரை**: ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

**கலைஞர் உரை**: ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்

**Couplet**: One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know

**English Explanation**: Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it

**Transliteration**: Otrer Runaraamai Aalka Utanmoovar Sotrokka Therap Patum

ஒற்றாடல்
குறள் 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் 
புறப்படுத்தான் ஆகும் மறை

**மு.வ உரை**: ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

**கலைஞர் உரை**: ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்

**Couplet**: Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to light

**English Explanation**: Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret

**Transliteration**: Sirappariya Otrinkan Seyyarka Seyyin Purappatuththaan Aakum Marai

ஊக்கம் உடைமை
குறள் 591

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று

**மு.வ உரை**: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

**சாலமன் பாப்பையா உரை**: ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?

**கலைஞர் உரை**: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்

**Couplet**: 'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul

**English Explanation**: Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

**Transliteration**: Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar Utaiyadhu Utaiyaro Matru

ஊக்கம் உடைமை
குறள் 592

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

**மு.வ உரை**: ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

**கலைஞர் உரை**: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது

**Couplet**: The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs

**English Explanation**: The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not

**Transliteration**: Ullam Utaimai Utaimai Porulutaimai Nillaadhu Neengi Vitum

ஊக்கம் உடைமை
குறள் 593

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்

**மு.வ உரை**: ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.

**கலைஞர் உரை**: ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்

**Couplet**: 'Lost is our wealth,' they utter not this cry distressed, The men of firm concentred energy of soul possessed

**English Explanation**: They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."

**Transliteration**: Aakkam Izhandhemendru Allaavaar Ookkam Oruvandham Kaiththutai Yaar

ஊக்கம் உடைமை
குறள் 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

**மு.வ உரை**: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

**கலைஞர் உரை**: உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்

**Couplet**: The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwell

**English Explanation**: Wealth will find its own way to the man of unfailing energy

**Transliteration**: Aakkam Adharvinaaich Chellum Asaivilaa Ookka Mutaiyaa Nuzhai

ஊக்கம் உடைமை
குறள் 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

**மு.வ உரை**: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

**சாலமன் பாப்பையா உரை**: நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

**கலைஞர் உரை**: தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

**Couplet**: With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their minds

**English Explanation**: The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds

**Transliteration**: Vellath Thanaiya Malarneettam Maandhardham Ullath Thanaiyadhu Uyarvu

ஊக்கம் உடைமை
குறள் 596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

**மு.வ உரை**: எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.

**கலைஞர் உரை**: நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது

**Couplet**: Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will

**English Explanation**: In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him

**Transliteration**: Ulluva Thellaam Uyarvullal Matradhu Thallinun Thallaamai Neerththu

ஊக்கம் உடைமை
குறள் 597

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

**மு.வ உரை**: உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

**கலைஞர் உரை**: உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்

**Couplet**: The men of lofty mind quail not in ruin's fateful hour, The elephant retains his dignity mind arrows' deadly shower

**English Explanation**: The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows

**Transliteration**: Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir Pattuppaa Toondrung Kaliru

ஊக்கம் உடைமை
குறள் 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

**மு.வ உரை**: ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

**கலைஞர் உரை**: அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை

**Couplet**: The soulless man can never gain Th' ennobling sense of power with men

**English Explanation**: Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality"

**Transliteration**: Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu Valliyam Ennunj Cherukku

ஊக்கம் உடைமை
குறள் 599

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

**மு.வ உரை**: யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

**சாலமன் பாப்பையா உரை**: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

**கலைஞர் உரை**: உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்

**Couplet**: Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed

**English Explanation**: Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger

**Transliteration**: Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai Veruum Pulidhaak Kurin

ஊக்கம் உடைமை
குறள் 600

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு

**மு.வ உரை**: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

**சாலமன் பாப்பையா உரை**: ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

**கலைஞர் உரை**: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை

**Couplet**: Firmness of soul in man is real excellance; Others are trees, their human form a mere pretence

**English Explanation**: Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men

**Transliteration**: Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar Marammakka Laadhale Veru

மடி இன்மை
குறள் 601

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

**மு.வ உரை**: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

**கலைஞர் உரை**: பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்

**Couplet**: Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light

**English Explanation**: By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished

**Transliteration**: 601 Kutiyennum Kundraa Vilakkam Matiyennum Maasoora Maaindhu Ketum

மடி இன்மை
குறள் 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

**மு.வ உரை**: தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

**கலைஞர் உரை**: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

**Couplet**: Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignity

**English Explanation**: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct

**Transliteration**: Matiyai Matiyaa Ozhukal Kutiyaik Kutiyaaka Ventu Pavar

மடி இன்மை
குறள் 603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து

**மு.வ உரை**: அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

**கலைஞர் உரை**: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்

**Couplet**: Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himself

**English Explanation**: The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead

**Transliteration**: Matimatik Kontozhukum Pedhai Pirandha Kutimatiyum Thanninum Mundhu

மடி இன்மை
குறள் 604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

**மு.வ உரை**: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

**கலைஞர் உரை**: சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்

**Couplet**: His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive

**English Explanation**: Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

**Transliteration**: Kutimatindhu Kutram Perukum Matimatindhu Maanta Ugnatri Lavarkku

மடி இன்மை
குறள் 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

**மு.வ உரை**: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

**சாலமன் பாப்பையா உரை**: காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

**கலைஞர் உரை**: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

**Couplet**: Delay, oblivion, sloth, and sleep: these four Are pleasure-boat to bear the doomed to ruin's shore

**English Explanation**: Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction

**Transliteration**: Netuneer Maravi Matidhuyil Naankum Ketuneeraar Kaamak Kalan

மடி இன்மை
குறள் 606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது

**மு.வ உரை**: நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

**கலைஞர் உரை**: தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

**Couplet**: Though lords of earth unearned possessions gain, The slothful ones no yield of good obtain

**English Explanation**: It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it

**Transliteration**: Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar Maanpayan Eydhal Aridhu

மடி இன்மை
குறள் 607

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

**மு.வ உரை**: சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

**சாலமன் பாப்பையா உரை**: சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

**கலைஞர் உரை**: முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

**Couplet**: Who hug their sloth, nor noble works attempt, Shall bear reproofs and words of just contempt

**English Explanation**: Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject

**Transliteration**: Itipurindhu Ellunj Chol Ketpar Matipurindhu Maanta Ugnatri Lavar

மடி இன்மை
குறள் 608

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்

**மு.வ உரை**: சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

**கலைஞர் உரை**: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

**Couplet**: If sloth a dwelling find mid noble family, Bondsmen to them that hate them shall they be

**English Explanation**: If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies

**Transliteration**: Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku Atimai Pukuththi Vitum

மடி இன்மை
குறள் 609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

**மு.வ உரை**: ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

**கலைஞர் உரை**: தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

**Couplet**: Who changes slothful habits saves Himself from all that household rule depraves

**English Explanation**: When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear

**Transliteration**: Kutiyaanmai Yulvandha Kutram Oruvan Matiyaanmai Maatrak Ketum

மடி இன்மை
குறள் 610

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு

**மு.வ உரை**: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

**கலைஞர் உரை**: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்

**Couplet**: The king whose life from sluggishness is rid, Shall rule o'er all by foot of mighty god bestrid

**English Explanation**: The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot

**Transliteration**: Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan Thaaaya Thellaam Orungu

ஆள்வினை உடைமை
குறள் 611

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

**மு.வ உரை**: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,

**சாலமன் பாப்பையா உரை**: நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

**கலைஞர் உரை**: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்

**Couplet**: Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power

**English Explanation**: Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it)

**Transliteration**: Arumai Utaiththendru Asaavaamai Ventum Perumai Muyarsi Tharum

ஆள்வினை உடைமை
குறள் 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

**மு.வ உரை**: தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

**கலைஞர் உரை**: எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்

**Couplet**: In action be thou, 'ware of act's defeat; The world leaves those who work leave incomplete

**English Explanation**: Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work

**Transliteration**: Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai Theerndhaarin Theerndhandru Ulaku

ஆள்வினை உடைமை
குறள் 613

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு

**மு.வ உரை**: பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

**கலைஞர் உரை**: பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்

**Couplet**: In strenuous effort doth reside The power of helping others: noble pride

**English Explanation**: The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts

**Transliteration**: Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre Velaanmai Ennunj Cherukku

ஆள்வினை உடைமை
குறள் 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

**மு.வ உரை**: முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

**கலைஞர் உரை**: ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை

**Couplet**: Beneficent intent in men by whom no strenuous work is wrought, Like battle-axe in sexless being's hand availeth nought

**English Explanation**: The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand

**Transliteration**: Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai Vaalaanmai Polak Ketum

ஆள்வினை உடைமை
குறள் 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

**மு.வ உரை**: தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

**கலைஞர் உரை**: தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்

**Couplet**: Whose heart delighteth not in pleasure, but in action finds delight, He wipes away his kinsmen's grief and stands the pillar of their might

**English Explanation**: He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows

**Transliteration**: Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir Thunpam Thutaiththoondrum Thoon

ஆள்வினை உடைமை
குறள் 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

**மு.வ உரை**: முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

**கலைஞர் உரை**: முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்

**Couplet**: Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness

**English Explanation**: Labour will produce wealth; idleness will bring poverty

**Transliteration**: Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai Inmai Pukuththi Vitum

ஆள்வினை உடைமை
குறள் 617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்

**மு.வ உரை**: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

**சாலமன் பாப்பையா உரை**: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

**கலைஞர் உரை**: திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்

**Couplet**: In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; Where man unslothful toils, she of the lotus flower is there

**English Explanation**: They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious

**Transliteration**: Matiyulaal Maamukati Enpa Matiyilaan Thaalulaan Thaamaraiyi Naal

ஆள்வினை உடைமை
குறள் 618

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி

**மு.வ உரை**: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

**சாலமன் பாப்பையா உரை**: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

**கலைஞர் உரை**: விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்

**Couplet**: 'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man

**English Explanation**: Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace

**Transliteration**: Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu Aalvinai Inmai Pazhi

ஆள்வினை உடைமை
குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

**மு.வ உரை**: ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

**கலைஞர் உரை**: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்

**Couplet**: Though fate-divine should make your labour vain; Effort its labour's sure reward will gain

**English Explanation**: Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward

**Transliteration**: Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan Meyvaruththak Kooli Tharum

ஆள்வினை உடைமை
குறள் 620

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்

**மு.வ உரை**: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

**கலைஞர் உரை**: ``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்

**Couplet**: Who strive with undismayed, unfaltering mind, At length shall leave opposing fate behind

**English Explanation**: They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back

**Transliteration**: Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith Thaazhaadhu Ugnatru Pavar

இடுக்கண் அழியாமை
குறள் 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வ தஃதொப்ப தில்

**மு.வ உரை**: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

**கலைஞர் உரை**: சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்

**Couplet**: Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power

**English Explanation**: If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow

**Transliteration**: Itukkan Varungaal Nakuka Adhanai Atuththoorvadhu Aqdhoppa Thil

இடுக்கண் அழியாமை
குறள் 622

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

**மு.வ உரை**: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

**கலைஞர் உரை**: வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்

**Couplet**: Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is gone

**English Explanation**: A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow

**Transliteration**: Vellath Thanaiya Itumpai Arivutaiyaan Ullaththin Ullak Ketum

இடுக்கண் அழியாமை
குறள் 623

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

**மு.வ உரை**: துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

**சாலமன் பாப்பையா உரை**: வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

**கலைஞர் உரை**: துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

**Couplet**: Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart

**English Explanation**: They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow

**Transliteration**: Itumpaikku Itumpai Patuppar Itumpaikku Itumpai Pataaa Thavar

இடுக்கண் அழியாமை
குறள் 624

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

**மு.வ உரை**: தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

**கலைஞர் உரை**: தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்

**Couplet**: Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away

**English Explanation**: Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a

**Transliteration**: Matuththavaa Yellaam Pakatannaan Utra Itukkan Itarppaatu Utaiththu

இடுக்கண் அழியாமை
குறள் 625

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்

**மு.வ உரை**: விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

**கலைஞர் உரை**: துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்

**Couplet**: When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart

**English Explanation**: The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)

**Transliteration**: Atukki Varinum Azhivilaan Utra Itukkan Itukkat Patum

இடுக்கண் அழியாமை
குறள் 626

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்

**மு.வ உரை**: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

**சாலமன் பாப்பையா உரை**: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?

**கலைஞர் உரை**: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?

**Couplet**: Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart

**English Explanation**: Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth

**Transliteration**: Atremendru Allar Patupavo Petremendru Ompudhal Thetraa Thavar

இடுக்கண் அழியாமை
குறள் 627

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்

**மு.வ உரை**: மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

**சாலமன் பாப்பையா உரை**: உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

**கலைஞர் உரை**: துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்

**Couplet**: 'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects

**English Explanation**: The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble

**Transliteration**: Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik Kaiyaaraak Kollaadhaam Mel

இடுக்கண் அழியாமை
குறள் 628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்

**மு.வ உரை**: இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

**கலைஞர் உரை**: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை

**Couplet**: He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes

**English Explanation**: That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)

**Transliteration**: Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan Thunpam Urudhal Ilan

இடுக்கண் அழியாமை
குறள் 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்

**மு.வ உரை**: இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

**கலைஞர் உரை**: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு

**Couplet**: Mid joys he yields not heart to joys' control Mid sorrows, sorrow cannot touch his soul

**English Explanation**: He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure

**Transliteration**: Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul Thunpam Urudhal Ilan

இடுக்கண் அழியாமை
குறள் 630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு

**மு.வ உரை**: ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

**கலைஞர் உரை**: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்

**Couplet**: Who pain as pleasure takes, he shall acquire The bliss to which his foes in vain aspire

**English Explanation**: The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure

**Transliteration**: Innaamai Inpam Enakkolin Aakundhan Onnaar Vizhaiyunj Chirappu

அமைச்சு
குறள் 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

**மு.வ உரை**: செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

**கலைஞர் உரை**: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்

**Couplet**: A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge

**English Explanation**: The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself)

**Transliteration**: Karuviyum Kaalamum Seykaiyum Seyyum Aruvinaiyum Maantadhu Amaichchu

அமைச்சு
குறள் 632

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

**மு.வ உரை**: அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

**சாலமன் பாப்பையா உரை**: செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

**கலைஞர் உரை**: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்

**Couplet**: A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined

**English Explanation**: The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,

**Transliteration**: Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu Aindhutan Maantadhu Amaichchu

அமைச்சு
குறள் 633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு

**மு.வ உரை**: பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

**சாலமன் பாப்பையா உரை**: நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

**கலைஞர் உரை**: அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்

**Couplet**: A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide

**English Explanation**: The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)

**Transliteration**: Piriththalum Penik Kolalum Pirindhaarp Poruththalum Valla Thamaichchu

அமைச்சு
குறள் 634

தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு

**மு.வ உரை**: (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

**கலைஞர் உரை**: ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்

**Couplet**: A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word

**English Explanation**: The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity)

**Transliteration**: Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach Chollalum Valladhu Amaichchu

அமைச்சு
குறள் 635

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

**மு.வ உரை**: அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

**சாலமன் பாப்பையா உரை**: அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

**கலைஞர் உரை**: அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்

**Couplet**: The man who virtue knows, has use of wise and pleasant words With plans for every season apt, in counsel aid affords

**English Explanation**: He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of

**Transliteration**: Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun Thiranarindhaan Therchchith Thunai

அமைச்சு
குறள் 636

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை

**மு.வ உரை**: இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

**சாலமன் பாப்பையா உரை**: இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?

**கலைஞர் உரை**: நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது

**Couplet**: When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands before

**English Explanation**: What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?

**Transliteration**: Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam Yaavula Munnir Pavai

அமைச்சு
குறள் 637

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்

**மு.வ உரை**: நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

**கலைஞர் உரை**: செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்

**Couplet**: Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act

**English Explanation**: Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly

**Transliteration**: Seyarkai Arindhak Kataiththum Ulakaththu Iyarkai Arindhu Seyal

அமைச்சு
குறள் 638

அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

**மு.வ உரை**: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

**கலைஞர் உரை**: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்

**Couplet**: 'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away

**English Explanation**: Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice

**Transliteration**: Arikondru Ariyaan Eninum Urudhi Uzhaiyirundhaan Kooral Katan

அமைச்சு
குறள் 639

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

**மு.வ உரை**: தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

**கலைஞர் உரை**: தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

**Couplet**: A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings

**English Explanation**: Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin

**Transliteration**: Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor Ezhupadhu Koti Urum

அமைச்சு
குறள் 640

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்

**மு.வ உரை**: (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

**கலைஞர் உரை**: முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்

**Couplet**: For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails

**English Explanation**: Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright

**Transliteration**: Muraippatach Choozhndhum Mutivilave Seyvar Thirappaatu Ilaaa Thavar

சொல்வன்மை
குறள் 641

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று

**மு.வ உரை**: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

**சாலமன் பாப்பையா உரை**: நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

**கலைஞர் உரை**: சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்

**Couplet**: A tongue that rightly speaks the right is greatest gain, It stands alone midst goodly things that men obtain

**English Explanation**: The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness

**Transliteration**: Naanalam Ennum Nalanutaimai Annalam Yaanalaththu Ulladhooum Andru

சொல்வன்மை
குறள் 642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

**மு.வ உரை**: ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்

**சாலமன் பாப்பையா உரை**: அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

**கலைஞர் உரை**: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்

**Couplet**: Since gain and loss in life on speech depend, From careless slip in speech thyself defend

**English Explanation**: Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein

**Transliteration**: Aakkamung Ketum Adhanaal Varudhalaal Kaaththompal Sollinkat Sorvu

சொல்வன்மை
குறள் 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

**மு.வ உரை**: சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)

**கலைஞர் உரை**: கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்

**Couplet**: 'Tis speech that spell-bound holds the listening ear, While those who have not heard desire to hear

**English Explanation**: The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship)

**Transliteration**: Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum Vetpa Mozhivadhaam Sol

சொல்வன்மை
குறள் 644

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்

**மு.வ உரை**: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

**கலைஞர் உரை**: காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை

**Couplet**: Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great

**English Explanation**: Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth

**Transliteration**: Thiranarindhu Solluka Sollai Aranum Porulum Adhaninooungu Il

சொல்வன்மை
குறள் 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

**மு.வ உரை**: வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.

**கலைஞர் உரை**: இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

**Couplet**: Speak out your speech, when once 'tis past dispute That none can utter speech that shall your speech refute

**English Explanation**: Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own

**Transliteration**: Solluka Sollaip Piridhorsol Achchollai Vellunjol Inmai Arindhu

சொல்வன்மை
குறள் 646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

**மு.வ உரை**: பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

**கலைஞர் உரை**: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்

**Couplet**: Charming each hearer's ear, of others' words to seize the sense, Is method wise of men of spotless excellence

**English Explanation**: It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself

**Transliteration**: Vetpaththaanj Chollip Pirarsol Payankotal Maatchiyin Maasatraar Kol

சொல்வன்மை
குறள் 647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

**மு.வ உரை**: தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.

**கலைஞர் உரை**: சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது

**Couplet**: Mighty in word, of unforgetful mind, of fearless speech, 'Tis hard for hostile power such man to overreach

**English Explanation**: It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid

**Transliteration**: Solalvallan Sorvilan Anjaan Avanai Ikalvellal Yaarkkum Aridhu

சொல்வன்மை
குறள் 648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

**மு.வ உரை**: கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

**கலைஞர் உரை**: வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்

**Couplet**: Swiftly the listening world will gather round, When men of mighty speech the weighty theme propound

**English Explanation**: If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them

**Transliteration**: Viraindhu Thozhilketkum Gnaalam Nirandhinidhu Solludhal Vallaarp Perin

சொல்வன்மை
குறள் 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

**மு.வ உரை**: குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

**சாலமன் பாப்பையா உரை**: குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

**கலைஞர் உரை**: குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்

**Couplet**: Who have not skill ten faultless words to utter plain, Their tongues will itch with thousand words man's ears to pain

**English Explanation**: They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones

**Transliteration**: Palasollak Kaamuruvar Mandramaa Satra Silasollal Thetraa Thavar

சொல்வன்மை
குறள் 650

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

**மு.வ உரை**: தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

**கலைஞர் உரை**: கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

**Couplet**: Like scentless flower in blooming garland bound Are men who can't their lore acquired to other's ears expound

**English Explanation**: Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance

**Transliteration**: Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu Unara Viriththuraiyaa Thaar

வினைத் தூய்மை
குறள் 651

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

**மு.வ உரை**: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

**கலைஞர் உரை**: ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்

**Couplet**: The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain

**English Explanation**: The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired

**Transliteration**: Thunainalam Aakkam Tharuum Vinainalam Ventiya Ellaan Tharum

வினைத் தூய்மை
குறள் 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

**மு.வ உரை**: புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

**கலைஞர் உரை**: புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்

**Couplet**: From action evermore thyself restrain Of glory and of good that yields no gain

**English Explanation**: Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)

**Transliteration**: Endrum Oruvudhal Ventum Pukazhotu Nandri Payavaa Vinai

வினைத் தூய்மை
குறள் 653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்

**மு.வ உரை**: மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

**கலைஞர் உரை**: மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்

**Couplet**: Who tell themselves that nobler things shall yet be won All deeds that dim the light of glory must they shun

**English Explanation**: Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)

**Transliteration**: Oodhal Ventum Olimaazhkum Seyvinai Aaadhum Ennu Mavar

வினைத் தூய்மை
குறள் 654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

**மு.வ உரை**: அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்

**Couplet**: Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view

**English Explanation**: Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)

**Transliteration**: Itukkan Patinum Ilivandha Seyyaar Natukkatra Kaatchi Yavar

வினைத் தூய்மை
குறள் 655

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று

**மு.வ உரை**: பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

**கலைஞர் உரை**: `என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று

**Couplet**: Do nought that soul repenting must deplore, If thou hast sinned, 'tis well if thou dost sin no more

**English Explanation**: Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not

**Transliteration**: Etrendru Iranguva Seyyarka Seyvaanel Matranna Seyyaamai Nandru

வினைத் தூய்மை
குறள் 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

**மு.வ உரை**: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

**கலைஞர் உரை**: பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது

**Couplet**: Though her that bore thee hung'ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreed

**English Explanation**: Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)

**Transliteration**: Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka Saandror Pazhikkum Vinai

வினைத் தூய்மை
குறள் 657

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

**மு.வ உரை**: பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

**கலைஞர் உரை**: பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

**Couplet**: Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain

**English Explanation**: Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful

**Transliteration**: Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror Kazhinal Kurave Thalai

வினைத் தூய்மை
குறள் 658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

**மு.வ உரை**: ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

**கலைஞர் உரை**: தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்

**Couplet**: To those who hate reproof and do forbidden thing What prospers now, in after days shall anguish bring

**English Explanation**: The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow

**Transliteration**: Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam Mutindhaalum Peezhai Tharum

வினைத் தூய்மை
குறள் 659

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பா லவை

**மு.வ உரை**: பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்

**Couplet**: What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow

**English Explanation**: All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit

**Transliteration**: Azhak Konta Ellaam Azhappom Izhappinum Pirpayakkum Narpaa Lavai

வினைத் தூய்மை
குறள் 660

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
கலத்துணீர் பெய்திரீஇ யற்று

**மு.வ உரை**: வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

**கலைஞர் உரை**: தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்

**Couplet**: In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintain

**English Explanation**: (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water

**Transliteration**: Salaththaal Porulseydhe Maarththal Pasuman Kalaththulneer Peydhireei Yatru

வினைத்திட்பம்
குறள் 661

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

**மு.வ உரை**: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

**கலைஞர் உரை**: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது

**Couplet**: What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find

**English Explanation**: Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature

**Transliteration**: Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam Matraiya Ellaam Pira

வினைத்திட்பம்
குறள் 662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

**மு.வ உரை**: இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

**சாலமன் பாப்பையா உரை**: பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

**கலைஞர் உரை**: இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்

**Couplet**: 'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,' These two define your way, so those that search out truth declare

**English Explanation**: Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject

**Transliteration**: Oororaal Utrapin Olkaamai Ivvirantin Aarenpar Aaindhavar Kol

வினைத்திட்பம்
குறள் 663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

**மு.வ உரை**: செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

**கலைஞர் உரை**: செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்

**Couplet**: Man's fitting work is known but by success achieved; In midst the plan revealed brings ruin ne'er to be retrieved

**English Explanation**: So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow

**Transliteration**: 663, Kataikkotkach Cheydhakka Thaanmai Itaikkotkin Etraa Vizhuman Tharum

வினைத்திட்பம்
குறள் 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

**மு.வ உரை**: இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

**கலைஞர் உரை**: சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்

**Couplet**: Easy to every man the speech that shows the way; Hard thing to shape one's life by words they say

**English Explanation**: To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said

**Transliteration**: Solludhal Yaarkkum Eliya Ariyavaam Solliya Vannam Seyal

வினைத்திட்பம்
குறள் 665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

**மு.வ உரை**: செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

**கலைஞர் உரை**: செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்

**Couplet**: The power in act of men renowned and great, With king acceptance finds and fame through all the state

**English Explanation**: The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

**Transliteration**: Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan Ooreydhi Ullap Patum

வினைத்திட்பம்
குறள் 666

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

**மு.வ உரை**: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

**கலைஞர் உரை**: எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்

**Couplet**: Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retain

**English Explanation**: If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it

**Transliteration**: Enniya Enniyaangu Eydhu Enniyaar Thinniyar Aakap Perin

வினைத்திட்பம்
குறள் 667

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

**மு.வ உரை**: உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

**கலைஞர் உரை**: உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்

**Couplet**: Despise not men of modest bearing; Look not at form, but what men are: For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car

**English Explanation**: Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car

**Transliteration**: Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku Achchaani Annaar Utaiththu

வினைத்திட்பம்
குறள் 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்

**மு.வ உரை**: மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

**கலைஞர் உரை**: மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்

**Couplet**: What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering, that should man fulfil

**English Explanation**: An act that has been firmly resolved on must be as firmly carried out without delay

**Transliteration**: Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu Thookkang Katindhu Seyal

வினைத்திட்பம்
குறள் 669

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

**மு.வ உரை**: (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

**கலைஞர் உரை**: இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்

**Couplet**: Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at last

**English Explanation**: Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)

**Transliteration**: Thunpam Uravarinum Seyka Thunivaatri Inpam Payakkum Vinai

வினைத்திட்பம்
குறள் 670

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு

**மு.வ உரை**: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

**சாலமன் பாப்பையா உரை**: எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

**கலைஞர் உரை**: எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது

**Couplet**: The world desires not men of every power possessed, Who power in act desire not,- crown of all the rest

**English Explanation**: The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess

**Transliteration**: Enaiththitpam Ey Thiyak Kannum Vinaiththitpam Ventaarai Ventaadhu Ulaku

வினை செயல்வகை
குறள் 671

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

**மு.வ உரை**: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

**கலைஞர் உரை**: ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்

**Couplet**: The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault

**English Explanation**: Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil

**Transliteration**: Soozhchchi Mutivu Thuniveydhal Aththunivu Thaazhchchiyul Thangudhal Theedhu

வினை செயல்வகை
குறள் 672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

**மு.வ உரை**: காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

**கலைஞர் உரை**: நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது

**Couplet**: Slumber when sleepy work's in hand beware Thou slumber not when action calls for sleepless care

**English Explanation**: Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over

**Transliteration**: Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka Thoongaadhu Seyyum Vinai

வினை செயல்வகை
குறள் 673

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

**மு.வ உரை**: இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

**கலைஞர் உரை**: இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

**Couplet**: When way is clear, prompt let your action be; When not, watch till some open path you see

**English Explanation**: Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method

**Transliteration**: Ollumvaa Yellaam Vinainandre Ollaakkaal Sellumvaai Nokkich Cheyal

வினை செயல்வகை
குறள் 674

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

**மு.வ உரை**: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)

**கலைஞர் உரை**: எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்

**Couplet**: With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring

**English Explanation**: When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire

**Transliteration**: Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal Theeyechcham Polath Therum

வினை செயல்வகை
குறள் 675

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

**மு.வ உரை**: வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

**கலைஞர் உரை**: ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

**Couplet**: Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exact

**English Explanation**: Do an act after a due consideration of the (following) five, viz money, means, time, execution and place

**Transliteration**: Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum Iruldheera Ennich Cheyal

வினை செயல்வகை
குறள் 676

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

**மு.வ உரை**: செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

**கலைஞர் உரை**: ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்

**Couplet**: Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done

**English Explanation**: An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion)

**Transliteration**: Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum Patupayanum Paarththuch Cheyal

வினை செயல்வகை
குறள் 677

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்

**மு.வ உரை**: செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

**கலைஞர் உரை**: ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

**Couplet**: Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the task

**English Explanation**: The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof

**Transliteration**: Seyvinai Seyvaan Seyanmurai Avvinai Ullarivaan Ullam Kolal

வினை செயல்வகை
குறள் 678

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

**மு.வ உரை**: ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

**கலைஞர் உரை**: ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

**Couplet**: By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent

**English Explanation**: To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another

**Transliteration**: Vinaiyaan Vinaiyaakkik Kotal Nanaikavul Yaanaiyaal Yaanaiyaath Thatru

வினை செயல்வகை
குறள் 679

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

**மு.வ உரை**: பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

**கலைஞர் உரை**: நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்

**Couplet**: Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you

**English Explanation**: One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends

**Transliteration**: Nattaarkku Nalla Seyalin Viraindhadhe Ottaarai Ottik Kolal

வினை செயல்வகை
குறள் 680

உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் 
கொள்வர் பெரியார்ப் பணிந்து

**மு.வ உரை**: வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

**கலைஞர் உரை**: தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்

**Couplet**: The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head

**English Explanation**: Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation

**Transliteration**: Uraisiriyaar Ulnatungal Anjik Kuraiperin Kolvar Periyaarp Panindhu

தூது
குறள் 681

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

**மு.வ உரை**: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

**சாலமன் பாப்பையா உரை**: நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

**கலைஞர் உரை**: அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்

**Couplet**: Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve

**English Explanation**: The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty

**Transliteration**: Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam Panputaimai Thoodhuraippaan Panpu

தூது
குறள் 682

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று

**மு.வ உரை**: அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

**கலைஞர் உரை**: தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை

**Couplet**: Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings

**English Explanation**: Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador

**Transliteration**: Anparivu Aaraaindha Solvanmai Thoodhuraippaarkku Indri Yamaiyaadha Moondru

தூது
குறள் 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினையுரைப்பான் பண்பு

**மு.வ உரை**: அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

**கலைஞர் உரை**: வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்

**Couplet**: Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory

**English Explanation**: To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks

**Transliteration**: Noolaarul Noolvallan Aakudhal Velaarul Vendri Vinaiyuraippaan Panpu

தூது
குறள் 684

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு

**மு.வ உரை**: இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

**கலைஞர் உரை**: தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்

**Couplet**: Sense, goodly grace, and knowledge exquisite Who hath these three for envoy's task is fit

**English Explanation**: He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three viz, (natural) sense, an attractive bearing and well-tried learning

**Transliteration**: Arivuru Vaaraaindha Kalviim Moondran Serivutaiyaan Selka Vinaikku

தூது
குறள் 685

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது

**மு.வ உரை**: பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

**கலைஞர் உரை**: சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்

**Couplet**: In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord

**English Explanation**: He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign)

**Transliteration**: Thokach Chollith Thoovaadha Neekki Nakachcholli Nandri Payappadhaan Thoodhu

தூது
குறள் 686

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
தக்க தறிவதாந் தூது

**மு.வ உரை**: கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

**சாலமன் பாப்பையா உரை**: அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

**கலைஞர் உரை**: கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்

**Couplet**: An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency

**English Explanation**: He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time

**Transliteration**: Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal Thakkadhu Arivadhaam Thoodhu

தூது
குறள் 687

கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை

**மு.வ உரை**: தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

**கலைஞர் உரை**: ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்

**Couplet**: He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell

**English Explanation**: He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due)

**Transliteration**: Katanarindhu Kaalang Karudhi Itanarindhu Enni Uraippaan Thalai

தூது
குறள் 688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு

**மு.வ உரை**: தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

**கலைஞர் உரை**: துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்

**Couplet**: Integrity, resources, soul determined, truthfulness Who rightly speaks his message must these marks possess

**English Explanation**: The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three

**Transliteration**: Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin Vaaimai Vazhiyuraippaan Panpu

தூது
குறள் 689

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்

**மு.வ உரை**: குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்

**Couplet**: His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king

**English Explanation**: He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter)

**Transliteration**: Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram Vaaiseraa Vanka Navan

தூது
குறள் 690

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
குறுதி பயப்பதாம் தூது

**மு.வ உரை**: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

**கலைஞர் உரை**: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்

**Couplet**: Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king

**English Explanation**: He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message)

**Transliteration**: Irudhi Payappinum Enjaadhu Iraivarku Urudhi Payappadhaam Thoodhu

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 691

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

**மு.வ உரை**: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.

**கலைஞர் உரை**: முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்

**Couplet**: Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof

**English Explanation**: Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof

**Transliteration**: Akalaadhu Anukaadhu Theekkaaivaar Polka Ikalvendharch Cherndhozhuku Vaar

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 692

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்

**மு.வ உரை**: அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்

**Couplet**: To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies

**English Explanation**: For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth

**Transliteration**: Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal Manniya Aakkan Tharum

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

**மு.வ உரை**: .( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.

**கலைஞர் உரை**: தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல

**Couplet**: Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rare

**English Explanation**: Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it

**Transliteration**: Potrin Ariyavai Potral Katuththapin Thetrudhal Yaarkkum Aridhu

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 694

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து

**மு.வ உரை**: வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

**கலைஞர் உரை**: ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்

**Couplet**: All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess

**English Explanation**: While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others

**Transliteration**: Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal Aandra Periyaa Rakaththu

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை

**மு.வ உரை**: (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

**கலைஞர் உரை**: பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்

**Couplet**: Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear

**English Explanation**: (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by

**Transliteration**: Epporulum Oraar Thotaraarmar Rapporulai Vittakkaal Ketka Marai

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 696

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்

**மு.வ உரை**: அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.

**கலைஞர் உரை**: ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்

**Couplet**: Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare

**English Explanation**: Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable

**Transliteration**: Kuripparindhu Kaalang Karudhi Veruppila Ventupa Vetpach Cholal

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

**மு.வ உரை**: அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

**கலைஞர் உரை**: விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்

**Couplet**: Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard

**English Explanation**: Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)

**Transliteration**: Vetpana Solli Vinaiyila Egngnaandrum Ketpinum Sollaa Vital

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 698

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்

**மு.வ உரை**: (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

**கலைஞர் உரை**: எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்

**Couplet**: Say not, 'He's young, my kinsman,' despising thus your king; But reverence the glory kingly state doth bring

**English Explanation**: Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!"

**Transliteration**: Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra Oliyotu Ozhukap Patum

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

**மு.வ உரை**: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்

**Couplet**: 'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view

**English Explanation**: Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within

**Transliteration**: Kolappattem Endrennik Kollaadha Seyyaar Thulakkatra Kaatchi Yavar

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் 700

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும்

**மு.வ உரை**: யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

**கலைஞர் உரை**: நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்

**Couplet**: Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings

**English Explanation**: The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin

**Transliteration**: Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum Kezhudhakaimai Ketu Tharum

குறிப்பறிதல்
குறள் 701

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

**மு.வ உரை**: ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

**கலைஞர் உரை**: ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்

**Couplet**: Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless sea

**English Explanation**: The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea

**Transliteration**: 701 Kooraamai Nokkake Kuripparivaan Egngnaandrum Maaraaneer Vaiyak Kani

குறிப்பறிதல்
குறள் 702

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

**மு.வ உரை**: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்

**Couplet**: Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted man

**English Explanation**: He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind)

**Transliteration**: Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith Theyvaththo Toppak Kolal

குறிப்பறிதல்
குறள் 703

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்

**மு.வ உரை**: (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

**கலைஞர் உரை**: ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்

**Couplet**: Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gain

**English Explanation**: The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another

**Transliteration**: Kurippir Kurippunar Vaarai Uruppinul Yaadhu Kotuththum Kolal

குறிப்பறிதல்
குறள் 704

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

**மு.வ உரை**: ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

**கலைஞர் உரை**: உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்

**Couplet**: Who reads what's shown by signs, though words unspoken be, In form may seem as other men, in function nobler far is he

**English Explanation**: Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally)

**Transliteration**: Kuriththadhu Kooraamaik Kolvaaro Tenai Uruppo Ranaiyaraal Veru

குறிப்பறிதல்
குறள் 705

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

**மு.வ உரை**: (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?

**கலைஞர் உரை**: ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?

**Couplet**: By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtain

**English Explanation**: Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?

**Transliteration**: Kurippir Kurippunaraa Vaayin Uruppinul Enna Payaththavo Kan?

குறிப்பறிதல்
குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

**மு.வ உரை**: தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

**கலைஞர் உரை**: கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்

**Couplet**: As forms around in crystal mirrored clear we find, The face will show what's throbbing in the mind

**English Explanation**: As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind

**Transliteration**: Atuththadhu Kaattum Palingupol Nenjam Katuththadhu Kaattum Mukam

குறிப்பறிதல்
குறள் 707

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

**மு.வ உரை**: ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?

**கலைஞர் உரை**: உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை

**Couplet**: Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still

**English Explanation**: Is there anything so full of knowledge as the face ? (No) it precedes the mind, whether (the latter is) pleased or vexed

**Transliteration**: Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum Kaayinum Thaanmun Thurum

குறிப்பறிதல்
குறள் 708

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

**மு.வ உரை**: உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

**கலைஞர் உரை**: அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது

**Couplet**: To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought

**English Explanation**: If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face

**Transliteration**: Mukamnokki Nirka Amaiyum Akamnokki Utra Thunarvaarp Perin

குறிப்பறிதல்
குறள் 709

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

**மு.வ உரை**: கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

**கலைஞர் உரை**: பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்

**Couplet**: The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan

**English Explanation**: If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship

**Transliteration**: Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum Kannin Vakaimai Unarvaarp Perin

குறிப்பறிதல்
குறள் 710

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற

**மு.வ உரை**: யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

**கலைஞர் உரை**: நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை

**Couplet**: The men of keen discerning soul no other test apply (When you their secret ask) than man's revealing eye

**English Explanation**: The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else

**Transliteration**: Nunniyam Enpaar Alakkungol Kaanungaal Kannalladhu Illai Pira

அவை அறிதல்
குறள் 711

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

**மு.வ உரை**: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

**கலைஞர் உரை**: ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்

**Couplet**: Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourse

**English Explanation**: Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled)

**Transliteration**: Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin Thokaiyarindha Thooimai Yavar

அவை அறிதல்
குறள் 712

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

**மு.வ உரை**: சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

**கலைஞர் உரை**: சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்

**Couplet**: Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their own

**English Explanation**: Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)

**Transliteration**: Itaidherindhu Nankunarndhu Solluka Sollin Nataidherindha Nanmai Yavar

அவை அறிதல்
குறள் 713

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

**மு.வ உரை**: அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

**கலைஞர் உரை**: அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது

**Couplet**: Unversed in councils, who essays to speak Knows not the way of suasive words,- and all is weak

**English Explanation**: Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)

**Transliteration**: Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin Vakaiyariyaar Valladhooum Il

அவை அறிதல்
குறள் 714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்

**மு.வ உரை**: அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

**கலைஞர் உரை**: அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்

**Couplet**: Before the bright ones shine as doth the light Before the dull ones be as purest stucco white

**English Explanation**: Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools

**Transliteration**: Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun Vaansudhai Vannam Kolal

அவை அறிதல்
குறள் 715

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

**மு.வ உரை**: அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

**கலைஞர் உரை**: அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்

**Couplet**: Midst all good things the best is modest grace, That speaks not first before the elders' face

**English Explanation**: The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities

**Transliteration**: Nandrendra Vatrullum Nandre Mudhuvarul Mundhu Kilavaach Cherivu

அவை அறிதல்
குறள் 716

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

**மு.வ உரை**: விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

**கலைஞர் உரை**: அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்

**Couplet**: As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied lore

**English Explanation**: (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue)

**Transliteration**: Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam Etrunarvaar Munnar Izhukku

அவை அறிதல்
குறள் 717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் முன்னர் இழுக்கு

**மு.வ உரை**: குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

**சாலமன் பாப்பையா உரை**: சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

**கலைஞர் உரை**: மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்

**Couplet**: The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it aright

**English Explanation**: The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words

**Transliteration**: Katrarindhaar Kalvi Vilangum Kasatarach Choldheridhal Vallaar Akaththu

அவை அறிதல்
குறள் 718

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று

**மு.வ உரை**: தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

**கலைஞர் உரை**: உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்

**Couplet**: To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain

**English Explanation**: Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)

**Transliteration**: Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin Thatru

அவை அறிதல்
குறள் 719

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

**மு.வ உரை**: நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

**கலைஞர் உரை**: நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்

**Couplet**: In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hour

**English Explanation**: Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low

**Transliteration**: Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul Nankusalach Chollu Vaar

அவை அறிதல்
குறள் 720

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்

**மு.வ உரை**: தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

**கலைஞர் உரை**: அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்

**Couplet**: Ambrosia in the sewer spilt, is word Spoken in presence of the alien herd

**English Explanation**: To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground

**Transliteration**: Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar Allaarmun Kotti Kolal

அவை அஞ்சாமை
குறள் 721

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

**மு.வ உரை**: சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

**கலைஞர் உரை**: சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

**Couplet**: Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse

**English Explanation**: The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body

**Transliteration**: Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin Thokaiyarindha Thooimai Yavar

அவை அஞ்சாமை
குறள் 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்

**மு.வ உரை**: கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

**கலைஞர் உரை**: கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்

**Couplet**: Who what they've learned, in penetrating words heve learned to say, Before the learn'd among the learn'd most learn'd are they

**English Explanation**: Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned

**Transliteration**: Katraarul Katraar Enappatuvar Katraarmun Katra Selachchollu Vaar

அவை அஞ்சாமை
குறள் 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்

**மு.வ உரை**: பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

**கலைஞர் உரை**: அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்

**Couplet**: Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found

**English Explanation**: Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned)

**Transliteration**: Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar Avaiyakaththu Anjaa Thavar

அவை அஞ்சாமை
குறள் 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்

**மு.வ உரை**: கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.

**கலைஞர் உரை**: அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

**Couplet**: What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more

**English Explanation**: (Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning)

**Transliteration**: Katraarmun Katra Selachchollith Thaamkatra Mikkaarul Mikka Kolal

அவை அஞ்சாமை
குறள் 725

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

**மு.வ உரை**: அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

**கலைஞர் உரை**: அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்

**Couplet**: By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt reply

**English Explanation**: In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)

**Transliteration**: Aatrin Alavarindhu Karka Avaiyanjaa Maatrang Kotuththar Poruttu

அவை அஞ்சாமை
குறள் 726

வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு

**மு.வ உரை**: அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?

**கலைஞர் உரை**: கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை

**Couplet**: To those who lack the hero's eye what can the sword avail Or science what, to those before the council keen who quail

**English Explanation**: What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?

**Transliteration**: Vaaloten Vankannar Allaarkku Nooloten Nunnavai Anju Pavarkku

அவை அஞ்சாமை
குறள் 727

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்

**மு.வ உரை**: அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

**கலைஞர் உரை**: அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்

**Couplet**: As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears

**English Explanation**: The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes

**Transliteration**: Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu Anju Mavankatra Nool

அவை அஞ்சாமை
குறள் 728

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்

**மு.வ உரை**: நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

**கலைஞர் உரை**: அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை

**Couplet**: Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall

**English Explanation**: Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements

**Transliteration**: Pallavai Katrum Payamilare Nallavaiyul Nanku Selachchollaa Thaar

அவை அஞ்சாமை
குறள் 729

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்

**மு.வ உரை**: நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.

**கலைஞர் உரை**: ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்

**Couplet**: Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take

**English Explanation**: They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate

**Transliteration**: Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum Nallaa Ravaiyanju Vaar

அவை அஞ்சாமை
குறள் 730

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

**மு.வ உரை**: அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

**சாலமன் பாப்பையா உரை**: அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

**கலைஞர் உரை**: தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்

**Couplet**: Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they

**English Explanation**: Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead

**Transliteration**: Ulareninum Illaarotu Oppar Kalananjik Katra Selachchollaa Thaar

நாடு
குறள் 731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு

**மு.வ உரை**: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

**கலைஞர் உரை**: செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்

**Couplet**: Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land'

**English Explanation**: A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and

**Transliteration**: Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach Chelvarum Servadhu Naatu

நாடு
குறள் 732

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

**மு.வ உரை**: மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

**கலைஞர் உரை**: பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்

**Couplet**: That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare

**English Explanation**: A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes

**Transliteration**: Perumporulaal Pettakka Thaaki Arungettaal Aatra Vilaivadhu Naatu

நாடு
குறள் 733

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு

**மு.வ உரை**: (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

**கலைஞர் உரை**: புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்

**Couplet**: When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land'

**English Explanation**: A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign

**Transliteration**: Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku Iraiyorungu Nervadhu Naatu

நாடு
குறள் 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

**மு.வ உரை**: மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

**கலைஞர் உரை**: பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்

**Couplet**: That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe

**English Explanation**: A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes

**Transliteration**: Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum Seraa Thiyalvadhu Naatu

நாடு
குறள் 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

**மு.வ உரை**: பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

**சாலமன் பாப்பையா உரை**: சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.

**கலைஞர் உரை**: பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்

**Couplet**: From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the 'land'

**English Explanation**: A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign

**Transliteration**: Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum Kolkurumpum Illadhu Naatu

நாடு
குறள் 736

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை

**மு.வ உரை**: பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

**கலைஞர் உரை**: எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்

**Couplet**: Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase

**English Explanation**: The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness

**Transliteration**: Ketariyaak Ketta Itaththum Valangundraa Naatenpa Naattin Thalai

நாடு
குறள் 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

**மு.வ உரை**: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

**கலைஞர் உரை**: ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்

**Couplet**: Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence

**English Explanation**: The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort

**Transliteration**: Irupunalum Vaaindha Malaiyum Varupunalum Vallaranum Naattirku Uruppu

நாடு
குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

**மு.வ உரை**: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.

**கலைஞர் உரை**: மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்

**Couplet**: A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth

**English Explanation**: Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom

**Transliteration**: Piniyinmai Selvam Vilaivinpam Emam Aniyenpa Naattiv Vaindhu

நாடு
குறள் 739

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

**மு.வ உரை**: முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

**சாலமன் பாப்பையா உரை**: தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

**கலைஞர் உரை**: இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்

**Couplet**: That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought

**English Explanation**: The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour

**Transliteration**: Naatenpa Naataa Valaththana Naatalla Naata Valandharu Naatu

நாடு
குறள் 740

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

**மு.வ உரை**: நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.

**கலைஞர் உரை**: நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

**Couplet**: Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace

**English Explanation**: Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects

**Transliteration**: Aangamai Veydhiyak Kannum Payamindre Vendhamai Villaadha Naatu

அரண்
குறள் 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
போற்று பவர்க்கும் பொருள்

**மு.வ உரை**: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

**கலைஞர் உரை**: பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்

**Couplet**: A fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes

**English Explanation**: A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter

**Transliteration**: Aatru Pavarkkum Aranporul Anjiththar Potru Pavarkkum Porul

அரண்
குறள் 742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

**மு.வ உரை**: மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

**கலைஞர் உரை**: ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்

**Couplet**: A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near

**English Explanation**: A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests

**Transliteration**: Manineerum Mannum Malaiyum Aninizhar Kaatum Utaiya Tharan

அரண்
குறள் 743

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்

**மு.வ உரை**: உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

**கலைஞர் உரை**: உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்

**Couplet**: Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess

**English Explanation**: The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility

**Transliteration**: Uyarvakalam Thinmai Arumaiin Naankin Amaivaran Endruraikkum Nool

அரண்
குறள் 744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்

**மு.வ உரை**: காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

**கலைஞர் உரை**: உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்

**Couplet**: A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy

**English Explanation**: A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes

**Transliteration**: Sirukaappir Peritaththa Thaaki Urupakai Ookkam Azhippa Tharan

அரண்
குறள் 745

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்

**மு.வ உரை**: பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

**சாலமன் பாப்பையா உரை**: பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

**கலைஞர் உரை**: முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்

**Couplet**: Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good

**English Explanation**: A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates

**Transliteration**: Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar Nilaikkelidhaam Neeradhu Aran

அரண்
குறள் 746

எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்

**மு.வ உரை**: தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

**கலைஞர் உரை**: போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்

**Couplet**: A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford

**English Explanation**: A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)

**Transliteration**: Ellaap Porulum Utaiththaai Itaththudhavum Nallaal Utaiyadhu Aran

அரண்
குறள் 747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்

**மு.வ உரை**: முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

**கலைஞர் உரை**: முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்

**Couplet**: A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground

**English Explanation**: A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it

**Transliteration**: Mutriyum Mutraa Therindhum Araippatuththum Patrar Kariyadhu Aran

அரண்
குறள் 748

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்

**மு.வ உரை**: முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.

**கலைஞர் உரை**: முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்

**Couplet**: Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within

**English Explanation**: That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it

**Transliteration**: Mutraatri Mutri Yavaraiyum Patraatrip Patriyaar Velvadhu Aran

அரண்
குறள் 749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்

**மு.வ உரை**: போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

**கலைஞர் உரை**: போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்

**Couplet**: At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day

**English Explanation**: A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield

**Transliteration**: Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu Veereydhi Maanta Tharan

அரண்
குறள் 750

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்

**மு.வ உரை**: எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை

**சாலமன் பாப்பையா உரை**: எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

**கலைஞர் உரை**: கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது

**Couplet**: Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies

**English Explanation**: Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action

**Transliteration**: Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi Illaarkan Illadhu Aran

பொருள் செயல்வகை
குறள் 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

**மு.வ உரை**: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

**கலைஞர் உரை**: மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை

**Couplet**: Nothing exists save wealth, that can Change man of nought to worthy man

**English Explanation**: Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance

**Transliteration**: Porulal Lavaraip Porulaakach Cheyyum Porulalladhu Illai Porul

பொருள் செயல்வகை
குறள் 752

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

**மு.வ உரை**: பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

**கலைஞர் உரை**: பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது

**Couplet**: Those who have nought all will despise; All raise the wealthy to the skies

**English Explanation**: All despise the poor; (but) all praise the rich

**Transliteration**: Illaarai Ellaarum Elluvar Selvarai Ellaarum Seyvar Sirappu

பொருள் செயல்வகை
குறள் 753

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

**மு.வ உரை**: பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்

**சாலமன் பாப்பையா உரை**: பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

**கலைஞர் உரை**: பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

**Couplet**: Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's command

**English Explanation**: The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)

**Transliteration**: Porulennum Poiyaa Vilakkam Irularukkum Enniya Theyaththuch Chendru

பொருள் செயல்வகை
குறள் 754

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

**மு.வ உரை**: சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

**கலைஞர் உரை**: தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்

**Couplet**: Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight

**English Explanation**: The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness

**Transliteration**: Araneenum Inpamum Eenum Thiranarindhu Theedhindri Vandha Porul

பொருள் செயல்வகை
குறள் 755

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்

**மு.வ உரை**: அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக

**கலைஞர் உரை**: பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்

**Couplet**: Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace

**English Explanation**: (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love

**Transliteration**: Arulotum Anpotum Vaaraap Porulaakkam Pullaar Purala Vital

பொருள் செயல்வகை
குறள் 756

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

**மு.வ உரை**: இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.

**கலைஞர் உரை**: வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்

**Couplet**: 92 Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,

**English Explanation**: The spoils of slaughtered foes; these are the royal revenues

**Transliteration**: Uruporulum Ulku Porulumdhan Onnaarth Theruporulum Vendhan Porul

பொருள் செயல்வகை
குறள் 757

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

**மு.வ உரை**: அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

**கலைஞர் உரை**: அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்

**Couplet**: 'Tis love that kindliness as offspring bears: And wealth as bounteous nurse the infant rears

**English Explanation**: The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth

**Transliteration**: Arulennum Anpeen Kuzhavi Porulennum Selvach Cheviliyaal Untu

பொருள் செயல்வகை
குறள் 758

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை

**மு.வ உரை**: தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

**கலைஞர் உரை**: தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது

**Couplet**: As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his hand

**English Explanation**: An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top

**Transliteration**: Kundreri Yaanaip Por Kantatraal Thankaiththondru Untaakach Cheyvaan Vinai

பொருள் செயல்வகை
குறள் 759

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்

**மு.வ உரை**: ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

**கலைஞர் உரை**: பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது

**Couplet**: Make money! Foeman's insolence o'ergrown To lop away no keener steel is known

**English Explanation**: Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it

**Transliteration**: Seyka Porulaich Cherunar Serukkarukkum Eqkadhanir Kooriya Thil

பொருள் செயல்வகை
குறள் 760

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

**மு.வ உரை**: சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.

**கலைஞர் உரை**: அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்

**Couplet**: Who plenteous store of glorious wealth have gained, By them the other two are easily obtained

**English Explanation**: To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)

**Transliteration**: Onporul Kaazhppa Iyatriyaarkku Enporul Enai Irantum Orungu

படை மாட்சி
குறள் 761

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

**மு.வ உரை**: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.

**கலைஞர் உரை**: எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்

**Couplet**: A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found

**English Explanation**: The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king

**Transliteration**: Uruppamaindhu Ooranjaa Velpatai Vendhan Verukkaiyul Ellaam Thalai

படை மாட்சி
குறள் 762

உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது

**மு.வ உரை**: போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.

**கலைஞர் உரை**: போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது

**Couplet**: In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show

**English Explanation**: Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength

**Transliteration**: Ulaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth Tholpataik Kallaal Aridhu

படை மாட்சி
குறள் 763

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
நாகம் உயிர்ப்பக் கெடும்

**மு.வ உரை**: எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

**சாலமன் பாப்பையா உரை**: பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

**கலைஞர் உரை**: எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்

**Couplet**: Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die

**English Explanation**: What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra

**Transliteration**: Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai Naakam Uyirppak Ketum

படை மாட்சி
குறள் 764

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

**மு.வ உரை**: (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

**கலைஞர் உரை**: எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்

**Couplet**: That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed

**English Explanation**: That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)

**Transliteration**: Azhivindri Araipokaa Thaaki Vazhivandha Vanka Nadhuve Patai

படை மாட்சி
குறள் 765

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

**மு.வ உரை**: எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

**கலைஞர் உரை**: உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்

**Couplet**: That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands

**English Explanation**: That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury

**Transliteration**: Kootrutandru Melvarinum Kooti Edhirnirkum Aatra Ladhuve Patai

படை மாட்சி
குறள் 766

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு

**மு.வ உரை**: வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.

**கலைஞர் உரை**: வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்

**Couplet**: Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defence

**English Explanation**: Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army

**Transliteration**: Maramaanam Maanta Vazhichchelavu Thetram Enanaanke Emam Pataikku

படை மாட்சி
குறள் 767

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

**மு.வ உரை**: தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.

**கலைஞர் உரை**: களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்

**Couplet**: A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes

**English Explanation**: That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force)

**Transliteration**: Thaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha Pordhaangum Thanmai Arindhu

படை மாட்சி
குறள் 768

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

**மு.வ உரை**: போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

**கலைஞர் உரை**: போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்

**Couplet**: Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled

**English Explanation**: Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance

**Transliteration**: Ataldhakaiyum Aatralum Illeninum Thaanai Pataiththakaiyaal Paatu Perum

படை மாட்சி
குறள் 769

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

**மு.வ உரை**: தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

**சாலமன் பாப்பையா உரை**: எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.

**கலைஞர் உரை**: சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்

**Couplet**: Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory

**English Explanation**: An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty

**Transliteration**: Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum Illaayin Vellum Patai

படை மாட்சி
குறள் 770

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

**மு.வ உரை**: நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

**கலைஞர் உரை**: உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது

**Couplet**: Though men abound, all ready for the war, No army is where no fit leaders are

**English Explanation**: Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals

**Transliteration**: Nilaimakkal Saala Utaiththeninum Thaanai Thalaimakkal Ilvazhi Il

படைச் செருக்கு
குறள் 771

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்

**மு.வ உரை**: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

**கலைஞர் உரை**: போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்

**Couplet**: Ye foes stand not before my lord for many a one Who did my lord withstand, now stands in stone

**English Explanation**: O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues

**Transliteration**: Ennaimun Nillanmin Thevvir Palarennai Munnindru Kalnin Ravar

படைச் செருக்கு
குறள் 772

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

**மு.வ உரை**: காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

**கலைஞர் உரை**: வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது

**Couplet**: Who aims at elephant, though dart should fail, has greater praise Than he who woodland hare with winged arrow slays

**English Explanation**: It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest

**Transliteration**: Kaana Muyaleydha Ampinil Yaanai Pizhaiththavel Endhal Inidhu

படைச் செருக்கு
குறள் 773

பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

**மு.வ உரை**: பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

**கலைஞர் உரை**: பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்

**Couplet**: Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foes

**English Explanation**: The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour

**Transliteration**: Peraanmai Enpa Tharukanon Rutrakkaal Ooraanmai Matradhan Eqku

படைச் செருக்கு
குறள் 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

**மு.வ உரை**: கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

**கலைஞர் உரை**: கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்

**Couplet**: At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast

**English Explanation**: The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly)

**Transliteration**: Kaivel Kalitrotu Pokki Varupavan Meyvel Pariyaa Nakum

படைச் செருக்கு
குறள் 775

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

**மு.வ உரை**: பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

**கலைஞர் உரை**: களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்

**Couplet**: To hero fearless must it not defeat appear, If he but wink his eye when foemen hurls his spear

**English Explanation**: Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?

**Transliteration**: Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin Ottandro Vanka Navarkku

படைச் செருக்கு
குறள் 776

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து

**மு.வ உரை**: வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்

**கலைஞர் உரை**: ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்

**Couplet**: The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustain

**English Explanation**: The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds

**Transliteration**: Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul Vaikkumdhan Naalai Etuththu

படைச் செருக்கு
குறள் 777

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

**மு.வ உரை**: பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

**கலைஞர் உரை**: சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்

**Couplet**: Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife

**English Explanation**: The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves)

**Transliteration**: Suzhalum Isaiventi Ventaa Uyiraar Kazhalyaappuk Kaarikai Neerththu

படைச் செருக்கு
குறள் 778

உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்

**மு.வ உரை**: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

**கலைஞர் உரை**: தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்

**Couplet**: Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager souls

**English Explanation**: The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)

**Transliteration**: Urinuyir Anjaa Maravar Iraivan Serinum Seerkundral Ilar

படைச் செருக்கு
குறள் 779

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்

**மு.வ உரை**: தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

**கலைஞர் உரை**: சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது

**Couplet**: Who says they err, and visits them scorn, Who die and faithful guard the vow they've sworn

**English Explanation**: Who would reproach with failure those who seal their oath with their death ?

**Transliteration**: Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare Pizhaiththadhu Orukkir Pavar

படைச் செருக்கு
குறள் 780

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து

**மு.வ உரை**: தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

**கலைஞர் உரை**: தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு

**Couplet**: If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gain

**English Explanation**: If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging

**Transliteration**: Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu Irandhukol Thakkadhu Utaiththu

நட்பு
குறள் 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

**மு.வ உரை**: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

**சாலமன் பாப்பையா உரை**: சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

**கலைஞர் உரை**: நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை

**Couplet**: What so hard for men to gain as friendship true What so sure defence 'gainst all that foe can do

**English Explanation**: What so sure defence 'gainst all that foe can do?

**Transliteration**: Seyarkariya Yaavula Natpin Adhupol Vinaikkariya Yaavula Kaappu

நட்பு
குறள் 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

**மு.வ உரை**: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

**சாலமன் பாப்பையா உரை**: பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

**கலைஞர் உரை**: அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்

**Couplet**: Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon

**English Explanation**: The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon

**Transliteration**: Niraineera Neeravar Kenmai Piraimadhip Pinneera Pedhaiyaar Natpu

நட்பு
குறள் 783

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

**மு.வ உரை**: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

**கலைஞர் உரை**: படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு

**Couplet**: Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good

**English Explanation**: Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become

**Transliteration**: Navildhorum Noolnayam Polum Payildhorum Panputai Yaalar Thotarpu

நட்பு
குறள் 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு

**மு.வ உரை**: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

**கலைஞர் உரை**: நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்

**Couplet**: Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you stray

**English Explanation**: Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression

**Transliteration**: Nakudhar Poruttandru Nattal Mikudhikkan Mersenaru Itiththar Poruttu

நட்பு
குறள் 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

**மு.வ உரை**: நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது

**Couplet**: Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mind

**English Explanation**: Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it

**Transliteration**: Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan Natpaang Kizhamai Tharum

நட்பு
குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு

**மு.வ உரை**: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

**கலைஞர் உரை**: இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்

**Couplet**: Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near

**English Explanation**: The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship

**Transliteration**: Mukanaka Natpadhu Natpandru Nenjaththu Akanaka Natpadhu Natpu

நட்பு
குறள் 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

**மு.வ உரை**: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

**கலைஞர் உரை**: நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்

**Couplet**: Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps

**English Explanation**: (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him)

**Transliteration**: Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan Allal Uzhappadhaam Natpu

நட்பு
குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

**மு.வ உரை**: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

**சாலமன் பாப்பையா உரை**: பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

**கலைஞர் உரை**: அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்

**Couplet**: As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay

**English Explanation**: (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)

**Transliteration**: Utukkai Izhandhavan Kaipola Aange Itukkan Kalaivadhaam Natpu

நட்பு
குறள் 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

**மு.வ உரை**: நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

**கலைஞர் உரை**: மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்

**Couplet**: And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may find

**English Explanation**: Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth)

**Transliteration**: Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri Ollumvaai Oondrum Nilai

நட்பு
குறள் 790

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

**மு.வ உரை**: இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

**கலைஞர் உரை**: நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்

**Couplet**: Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'

**English Explanation**: Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean

**Transliteration**: Inaiyar Ivaremakku Innamyaam Endru Punaiyinum Pullennum Natpu

நட்பாராய்தல்
குறள் 791

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

**மு.வ உரை**: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

**கலைஞர் உரை**: ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்

**Couplet**: To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endure

**English Explanation**: As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry

**Transliteration**: Naataadhu Nattalir Ketillai Nattapin Veetillai Natpaal Pavarkku

நட்பாராய்தல்
குறள் 792

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்

**மு.வ உரை**: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

**கலைஞர் உரை**: திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்

**Couplet**: Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain

**English Explanation**: The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death

**Transliteration**: Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai Thaansaam Thuyaram Tharum

நட்பாராய்தல்
குறள் 793

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு

**மு.வ உரை**: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

**கலைஞர் உரை**: குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்

**Couplet**: Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to thee

**English Explanation**: Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations

**Transliteration**: Kunamum Kutimaiyum Kutramum Kundraa Inanum Arindhiyaakka Natpu

நட்பாராய்தல்
குறள் 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

**மு.வ உரை**: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

**கலைஞர் உரை**: பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்

**Couplet**: Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claim

**English Explanation**: The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing

**Transliteration**: Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik Kotuththum Kolalventum Natpu

நட்பாராய்தல்
குறள் 795

அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்

**மு.வ உரை**: நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

**கலைஞர் உரை**: தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்

**Couplet**: Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reprove

**English Explanation**: You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach

**Transliteration**: Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya Vallaarnatapu Aaindhu Kolal

நட்பாராய்தல்
குறள் 796

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

**மு.வ உரை**: கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.

**கலைஞர் உரை**: தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது

**Couplet**: Ruin itself one blessing lends: 'Tis staff that measures out one's friends

**English Explanation**: Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations

**Transliteration**: Kettinum Untor Urudhi Kilaignarai Neetti Alappadhor Kol

நட்பாராய்தல்
குறள் 797

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

**மு.வ உரை**: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

**கலைஞர் உரை**: ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்

**Couplet**: 'Tis gain to any man, the sages say, Friendship of fools to put away

**English Explanation**: It is indead a gain for one to renounce the friendship of fools

**Transliteration**: Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar Kenmai Oreei Vital

நட்பாராய்தல்
குறள் 798

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

**மு.வ உரை**: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.

**கலைஞர் உரை**: ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்

**Couplet**: Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake

**English Explanation**: Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity

**Transliteration**: Ullarka Ullam Sirukuva Kollarka Allarkan Aatraruppaar Natpu

நட்பாராய்தல்
குறள் 799

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்

**மு.வ உரை**: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

**சாலமன் பாப்பையா உரை**: கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

**கலைஞர் உரை**: ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்

**Couplet**: Of friends deserting us on ruin's brink, 'Tis torture e'en in life's last hour to think

**English Explanation**: The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death

**Transliteration**: Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai Ullinum Ullanj Chutum

நட்பாராய்தல்
குறள் 800

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு

**மு.வ உரை**: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

**கலைஞர் உரை**: மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்

**Couplet**: Cling to the friendship of the spotless one's; whate'er you pay Renounce alliance with the men of evil way

**English Explanation**: Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world)

**Transliteration**: Maruvuka Maasatraar Kenmaion Reeththum Oruvuka Oppilaar Natpu

பழைமை
குறள் 801

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

**மு.வ உரை**: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

**கலைஞர் உரை**: பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்

**Couplet**: Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act

**English Explanation**: Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)

**Transliteration**: Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum Kizhamaiyaik Keezhndhitaa Natpu

பழைமை
குறள் 802

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்

**மு.வ உரை**: நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

**கலைஞர் உரை**: பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்

**Couplet**: Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise

**English Explanation**: The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise

**Transliteration**: Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku Uppaadhal Saandror Katan

பழைமை
குறள் 803

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை

**மு.வ உரை**: பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?

**கலைஞர் உரை**: பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்

**Couplet**: When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use

**English Explanation**: Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?

**Transliteration**: Pazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai Seydhaangu Amaiyaak Katai

பழைமை
குறள் 804

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

**மு.வ உரை**: உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

**கலைஞர் உரை**: பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்

**Couplet**: When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly part

**English Explanation**: If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability

**Transliteration**: Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar Kelaadhu Nattaar Seyin

பழைமை
குறள் 805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

**மு.வ உரை**: வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

**கலைஞர் உரை**: வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்

**Couplet**: Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress

**English Explanation**: If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy

**Transliteration**: Pedhaimai Ondro Perungizhamai Endrunarka Nodhakka Nattaar Seyin

பழைமை
குறள் 806

எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

**மு.வ உரை**: உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

**கலைஞர் உரை**: நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்

**Couplet**: Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends

**English Explanation**: Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends

**Transliteration**: Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum Thollaikkan Nindraar Thotarpu

பழைமை
குறள் 807

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்

**மு.வ உரை**: அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

**கலைஞர் உரை**: தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்

**Couplet**: True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betrays

**English Explanation**: Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin

**Transliteration**: Azhivandha Seyyinum Anparaar Anpin Vazhivandha Kenmai Yavar

பழைமை
குறள் 808

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

**மு.வ உரை**: பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

**கலைஞர் உரை**: நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்

**Couplet**: In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear

**English Explanation**: To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault

**Transliteration**: Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku Naalizhukkam Nattaar Seyin

பழைமை
குறள் 809

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

**மு.வ உரை**: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

**சாலமன் பாப்பையா உரை**: உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

**கலைஞர் உரை**: தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்

**Couplet**: Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commends

**English Explanation**: They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy

**Transliteration**: Ketaaa Vazhivandha Kenmaiyaar Kenmai Vitaaar Vizhaiyum Ulaku

பழைமை
குறள் 810

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

**மு.வ உரை**: (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்

**சாலமன் பாப்பையா உரை**: பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

**கலைஞர் உரை**: பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்

**Couplet**: Ill-wishers even wish them well, who guard For ancient friends, their wonted kind regard

**English Explanation**: Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends

**Transliteration**: Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan Panpin Thalaippiriyaa Thaar

தீ நட்பு
குறள் 811

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

**மு.வ உரை**: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

**கலைஞர் உரை**: நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது

**Couplet**: Though evil men should all-absorbing friendship show, Their love had better die away than grow

**English Explanation**: The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase

**Transliteration**: Parukuvaar Polinum Panpilaar Kenmai Perukalir Kundral Inidhu

தீ நட்பு
குறள் 812

உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

**மு.வ உரை**: தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?

**கலைஞர் உரை**: தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?

**Couplet**: What though you gain or lose friendship of men of alien heart, Who when you thrive are friends, and when you fail depart

**English Explanation**: Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?

**Transliteration**: Urinnattu Arinoruum Oppilaar Kenmai Perinum Izhappinum En?

தீ நட்பு
குறள் 813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்

**மு.வ உரை**: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

**சாலமன் பாப்பையா உரை**: இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.

**கலைஞர் உரை**: பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்

**Couplet**: These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering train

**English Explanation**: Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character

**Transliteration**: Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu Kolvaarum Kalvarum Ner

தீ நட்பு
குறள் 814

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

**மு.வ உரை**: போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.

**கலைஞர் உரை**: போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்

**Couplet**: A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better far

**English Explanation**: Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle

**Transliteration**: Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar Thamarin Thanimai Thalai

தீ நட்பு
குறள் 815

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

**மு.வ உரை**: காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

**கலைஞர் உரை**: கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்

**Couplet**: 'Tis better not to gain than gain the friendship profitless Of men of little minds, who succour fails when dangers press

**English Explanation**: It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so

**Transliteration**: Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai Eydhalin Eydhaamai Nandru

தீ நட்பு
குறள் 816

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

**மு.வ உரை**: அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

**கலைஞர் உரை**: அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

**Couplet**: Better ten million times incur the wise man's hate, Than form with foolish men a friendship intimate

**English Explanation**: The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool

**Transliteration**: Pedhai Perungezheei Natpin Arivutaiyaar Edhinmai Koti Urum

தீ நட்பு
குறள் 817

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

**மு.வ உரை**: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

**கலைஞர் உரை**: சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்

**Couplet**: From foes ten million fold a greater good you gain, Than friendship yields that's formed with laughers vain

**English Explanation**: What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter

**Transliteration**: Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal Paththatuththa Koti Urum

தீ நட்பு
குறள் 818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

**மு.வ உரை**: முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.

**கலைஞர் உரை**: நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்

**Couplet**: Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew

**English Explanation**: Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do

**Transliteration**: Ollum Karumam Utatru Pavarkenmai Sollaataar Sora Vital

தீ நட்பு
குறள் 819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

**மு.வ உரை**: செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.

**கலைஞர் உரை**: சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்

**Couplet**: E'en in a dream the intercourse is bitterness With men whose deeds are other than their words profess

**English Explanation**: The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams

**Transliteration**: Kanavinum Innaadhu Manno Vinaiveru Solveru Pattaar Thotarpu

தீ நட்பு
குறள் 820

எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு

**மு.வ உரை**: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

**கலைஞர் உரை**: தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்

**Couplet**: In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foes

**English Explanation**: Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public

**Transliteration**: Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei Mandril Pazhippaar Thotarpu

கூடா நட்பு
குறள் 821

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

**மு.வ உரை**: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

**கலைஞர் உரை**: மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்

**Couplet**: Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind

**English Explanation**: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself

**Transliteration**: Seeritam Kaanin Eridharkup Pattatai Neraa Nirandhavar Natpu

கூடா நட்பு
குறள் 822

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்

**மு.வ உரை**: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

**கலைஞர் உரை**: உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்

**Couplet**: Friendship of those who seem our kin, but are not really kind Will change from hour to hour like woman's mind

**English Explanation**: The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women

**Transliteration**: Inampondru Inamallaar Kenmai Makalir Manampola Veru Patum

கூடா நட்பு
குறள் 823

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது

**மு.வ உரை**: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

**கலைஞர் உரை**: அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்

**Couplet**: To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain

**English Explanation**: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart

**Transliteration**: Palanalla Katrak Kataiththu Mananallar Aakudhal Maanaark Karidhu

கூடா நட்பு
குறள் 824

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா 
வஞ்சரை அஞ்சப் படும்

**மு.வ உரை**: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

**கலைஞர் உரை**: சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்

**Couplet**: 'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smile

**English Explanation**: One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart

**Transliteration**: Mukaththin Iniya Nakaaa Akaththinnaa Vanjarai Anjap Patum

கூடா நட்பு
குறள் 825

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று

**மு.வ உரை**: மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

**கலைஞர் உரை**: மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது

**Couplet**: When minds are not in unison, 'its never; just, In any words men speak to put your trust

**English Explanation**: In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart

**Transliteration**: Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum Sollinaal Therarpaatru Andru

கூடா நட்பு
குறள் 826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்

**மு.வ உரை**: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

**கலைஞர் உரை**: பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்

**Couplet**: Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known

**English Explanation**: Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)

**Transliteration**: Nattaarpol Nallavai Sollinum Ottaarsol Ollai Unarap Patum

கூடா நட்பு
குறள் 827

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்

**மு.வ உரை**: வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

**கலைஞர் உரை**: பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது

**Couplet**: To pliant speech from hostile lips give thou no ear; 'Tis pliant bow that show the deadly peril near

**English Explanation**: Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes

**Transliteration**: Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam Theengu Kuriththamai Yaan

கூடா நட்பு
குறள் 828

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து

**மு.வ உரை**: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

**கலைஞர் உரை**: பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்

**Couplet**: In hands that worship weapon ten hidden lies; Such are the tears that fall from foeman's eyes

**English Explanation**: A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature

**Transliteration**: Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar Azhudhakan Neerum Anaiththu

கூடா நட்பு
குறள் 829

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுட் சாப்புல்லற் பாற்று

**மு.வ உரை**: புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

**கலைஞர் உரை**: வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்

**Couplet**: 'Tis just, when men make much of you, and then despise, To make them smile, and slap in friendship's guise

**English Explanation**: It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart)

**Transliteration**: Mikachcheydhu Thammellu Vaarai Nakachcheydhu Natpinul Saappullar Paatru

கூடா நட்பு
குறள் 830

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்

**மு.வ உரை**: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

**கலைஞர் உரை**: பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்

**Couplet**: When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear

**English Explanation**: When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)

**Transliteration**: Pakainatpaam Kaalam Varungaal Mukanattu Akanatpu Oreei Vital

பேதைமை
குறள் 831

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்

**மு.வ உரை**: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

**கலைஞர் உரை**: கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்

**Couplet**: What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claim

**English Explanation**: Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain

**Transliteration**: Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu Oodhiyam Poka Vital

பேதைமை
குறள் 832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்

**மு.வ உரை**: ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

**கலைஞர் உரை**: தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்

**Couplet**: 'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting prove

**English Explanation**: The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden

**Transliteration**: Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai Kaiyalla Thankat Seyal

பேதைமை
குறள் 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

**மு.வ உரை**: தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

**சாலமன் பாப்பையா உரை**: தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

**கலைஞர் உரை**: வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்

**Couplet**: Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the fool will play his part

**English Explanation**: Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool

**Transliteration**: Naanaamai Naataamai Naarinmai Yaadhondrum Penaamai Pedhai Thozhil

பேதைமை
குறள் 834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்

**மு.வ உரை**: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

**கலைஞர் உரை**: படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது

**Couplet**: The sacred law he reads and learns, to other men expounds,- Himself obeys not; where can greater fool be found

**English Explanation**: There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching

**Transliteration**: Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap Pedhaiyin Pedhaiyaar Il

பேதைமை
குறள் 835

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

**மு.வ உரை**: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

**கலைஞர் உரை**: தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்

**Couplet**: The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birth

**English Explanation**: A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births

**Transliteration**: Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum Thaanpuk Kazhundhum Alaru

பேதைமை
குறள் 836

பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்

**மு.வ உரை**: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

**கலைஞர் உரை**: நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்

**Couplet**: When fool some task attempts with uninstructed pains, It fails; nor that alone, himself he binds with chains

**English Explanation**: If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fetters

**Transliteration**: Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap Pedhai Vinaimer Kolin

பேதைமை
குறள் 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

**மு.வ உரை**: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

**கலைஞர் உரை**: அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது

**Couplet**: When fools are blessed with fortune's bounteous store, Their foes feed full, their friends are prey to hunger sore

**English Explanation**: If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve

**Transliteration**: Edhilaar Aarath Thamarpasippar Pedhai Perunjelvam Utrak Katai

பேதைமை
குறள் 838

மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்

**மு.வ உரை**: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

**கலைஞர் உரை**: நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்

**Couplet**: When folly's hand grasps wealth's increase, 'twill be As when a mad man raves in drunken glee

**English Explanation**: A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy

**Transliteration**: Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan Kaiyondru Utaimai Perin

பேதைமை
குறள் 839

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

**மு.வ உரை**: பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!

**கலைஞர் உரை**: அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை

**Couplet**: Friendship of fools is very pleasant thing, Parting with them will leave behind no sting

**English Explanation**: The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be

**Transliteration**: Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan Peezhai Tharuvadhon Ril

பேதைமை
குறள் 840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

**மு.வ உரை**: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

**கலைஞர் உரை**: அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது

**Couplet**: Like him who seeks his couch with unwashed feet, Is fool whose foot intrudes where wise men meet

**English Explanation**: The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed

**Transliteration**: Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror Kuzhaaaththup Pedhai Pukal

புல்லறிவாண்மை
குறள் 841

அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

**மு.வ உரை**: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

**கலைஞர் உரை**: அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

**Couplet**: Want of knowledge, 'mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteem

**English Explanation**: The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such

**Transliteration**: Arivinmai Inmaiyul Inmai Piridhinmai Inmaiyaa Vaiyaa Thulaku

புல்லறிவாண்மை
குறள் 842

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

**மு.வ உரை**: அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

**கலைஞர் உரை**: அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்

**Couplet**: The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver's penance bought

**English Explanation**: (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth)

**Transliteration**: Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum Illai Peruvaan Thavam

புல்லறிவாண்மை
குறள் 843

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

**மு.வ உரை**: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

**கலைஞர் உரை**: எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்

**Couplet**: With keener anguish foolish men their own hearts wring, Than aught that even malice of their foes can bring

**English Explanation**: The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes

**Transliteration**: Arivilaar Thaandhammaip Peezhikkum Peezhai Seruvaarkkum Seydhal Aridhu

புல்லறிவாண்மை
குறள் 844

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

**மு.வ உரை**: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

**கலைஞர் உரை**: ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

**Couplet**: What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'

**English Explanation**: What is called want of wisdom is the vanity which says, "We are wise"

**Transliteration**: Venmai Enappatuva Thiyaadhenin Onmai Utaiyamyaam Ennum Serukku

புல்லறிவாண்மை
குறள் 845

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்

**மு.வ உரை**: அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.

**கலைஞர் உரை**: அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்

**Couplet**: If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw

**English Explanation**: Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered

**Transliteration**: Kallaadha Merkon Tozhukal Kasatara Valladhooum Aiyam Tharum

புல்லறிவாண்மை
குறள் 846

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

**மு.வ உரை**: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

**கலைஞர் உரை**: நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்

**Couplet**: Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled reveal

**English Explanation**: Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them)

**Transliteration**: Atram Maraiththalo Pullarivu Thamvayin Kutram Maraiyaa Vazhi

புல்லறிவாண்மை
குறள் 847

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

**மு.வ உரை**: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

**கலைஞர் உரை**: நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்

**Couplet**: From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery

**English Explanation**: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself

**Transliteration**: Arumarai Sorum Arivilaan Seyyum Perumirai Thaane Thanakku

புல்லறிவாண்மை
குறள் 848

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

**மு.வ உரை**: தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

**கலைஞர் உரை**: சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்

**Couplet**: Advised, he heeds not; of himself knows nothing wise; This man's whole life is all one plague until he dies

**English Explanation**: The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a

**Transliteration**: Evavum Seykalaan Thaandheraan Avvuyir Poom Alavumor Noi

புல்லறிவாண்மை
குறள் 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு

**மு.வ உரை**: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

**கலைஞர் உரை**: அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

**Couplet**: That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows

**English Explanation**: One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit"

**Transliteration**: Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan Kantaanaam Thaankanta Vaaru

புல்லறிவாண்மை
குறள் 850

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்

**மு.வ உரை**: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

**கலைஞர் உரை**: ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்

**Couplet**: Who what the world affirms as false proclaim, O'er all the earth receive a demon's name

**English Explanation**: He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth

**Transliteration**: Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu Alakaiyaa Vaikkap Patum

இகல்
குறள் 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

**மு.வ உரை**: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

**கலைஞர் உரை**: மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்

**Couplet**: Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing

**English Explanation**: The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise

**Transliteration**: Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum Panpinmai Paarikkum Noi

இகல்
குறள் 852

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

**மு.வ உரை**: ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

**கலைஞர் உரை**: வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்

**Couplet**: Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requite

**English Explanation**: Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred

**Transliteration**: Pakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi Innaasey Yaamai Thalai

இகல்
குறள் 853

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

**மு.வ உரை**: ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்

**Couplet**: If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won

**English Explanation**: To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame

**Transliteration**: Ikalennum Evvanoi Neekkin Thavalillaath Thaavil Vilakkam Tharum

இகல்
குறள் 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

**மு.வ உரை**: இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

**கலைஞர் உரை**: துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்

**Couplet**: Joy of joys abundant grows, When malice dies that woe of woes

**English Explanation**: If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight

**Transliteration**: Inpaththul Inpam Payakkum Ikalennum Thunpaththul Thunpang Ketin

இகல்
குறள் 855

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே 
மிகலூக்கும் தன்மை யவர்

**மு.வ உரை**: இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

**கலைஞர் உரை**: மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை

**Couplet**: If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victory

**English Explanation**: Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

**Transliteration**: Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare Mikalookkum Thanmai Yavar

இகல்
குறள் 856

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

**மு.வ உரை**: இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.

**கலைஞர் உரை**: மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்

**Couplet**: The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near

**English Explanation**: Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred

**Transliteration**: Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai Thavalum Ketalum Naniththu

இகல்
குறள் 857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்

**மு.வ உரை**: இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

**கலைஞர் உரை**: பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்

**Couplet**: The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity

**English Explanation**: Who only know to work men woe, fulfilled of enmity

**Transliteration**: Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval Innaa Arivi Navar

இகல்
குறள் 858

இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

**மு.வ உரை**: இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

**கலைஞர் உரை**: மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்

**Couplet**: 'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath mastery

**English Explanation**: Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin

**Transliteration**: Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai Mikalookkin Ookkumaam Ketu

இகல்
குறள் 859

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

**மு.வ உரை**: ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

**கலைஞர் உரை**: ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்

**Couplet**: Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power

**English Explanation**: At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase

**Transliteration**: Ikalkaanaan Aakkam Varungaal Adhanai Mikalkaanum Ketu Thararku

இகல்
குறள் 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

**மு.வ உரை**: ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

**கலைஞர் உரை**: மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்

**Couplet**: From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestow

**English Explanation**: All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues

**Transliteration**: Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam Nannayam Ennum Serukku

பகை மாட்சி
குறள் 861

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை

**மு.வ உரை**: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.

**கலைஞர் உரை**: மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்

**Couplet**: With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray

**English Explanation**: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak

**Transliteration**: Valiyaarkku Maaretral Ompuka Ompaa Meliyaarmel Meka Pakai

பகை மாட்சி
குறள் 862

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

**மு.வ உரை**: ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

**சாலமன் பாப்பையா உரை**: மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?

**கலைஞர் உரை**: உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?

**Couplet**: No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity

**English Explanation**: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

**Transliteration**: Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan Enpariyum Edhilaan Thuppu

பகை மாட்சி
குறள் 863

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

**மு.வ உரை**: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

**சாலமன் பாப்பையா உரை**: பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

**கலைஞர் உரை**: அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

**Couplet**: A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy prey

**English Explanation**: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly

**Transliteration**: Anjum Ariyaan Amaivilan Eekalaan Thanjam Eliyan Pakaikku

பகை மாட்சி
குறள் 864

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

**மு.வ உரை**: ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

**சாலமன் பாப்பையா உரை**: கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

**கலைஞர் உரை**: சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்

**Couplet**: His wrath still blazes, every secret told; each day This man's in every place to every foe an easy prey

**English Explanation**: He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all

**Transliteration**: Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum Yaanganum Yaarkkum Elidhu

பகை மாட்சி
குறள் 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது

**மு.வ உரை**: ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

**கலைஞர் உரை**: நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

**Couplet**: No way of right he scans, no precepts bind, no crimes affright, No grace of good he owns; such man's his foes' delight

**English Explanation**: (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities

**Transliteration**: Vazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan Panpilan Patraarkku Inidhu

பகை மாட்சி
குறள் 866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் 
பேணாமை பேணப் படும்

**மு.வ உரை**: ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

**கலைஞர் உரை**: சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்

**Couplet**: Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well

**English Explanation**: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure

**Transliteration**: Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan Penaamai Penap Patum

பகை மாட்சி
குறள் 867

கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

**மு.வ உரை**: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

**கலைஞர் உரை**: தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்

**Couplet**: Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh: His hate- 'tis cheap at any price- be sure to buy

**English Explanation**: It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment)

**Transliteration**: Kotuththum Kolalventum Mandra Atuththirundhu Maanaadha Seyvaan Pakai

பகை மாட்சி
குறள் 868

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து

**மு.வ உரை**: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

**கலைஞர் உரை**: குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்

**Couplet**: No gracious gifts he owns, faults many cloud his fame; His foes rejoice, for none with kindred claim

**English Explanation**: He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes

**Transliteration**: Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku Inanilanaam Emaap Putaiththu

பகை மாட்சி
குறள் 869

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

**மு.வ உரை**: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.

**கலைஞர் உரை**: அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்

**Couplet**: The joy of victory is never far removed from those Who've luck to meet with ignorant and timid foes

**English Explanation**: There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid

**Transliteration**: Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa Anjum Pakaivarp Perin

பகை மாட்சி
குறள் 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

**மு.வ உரை**: கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

**சாலமன் பாப்பையா உரை**: நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.

**கலைஞர் உரை**: போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்

**Couplet**: The task of angry war with men unlearned in virtue's lore Who will not meet, glory shall meet him never more

**English Explanation**: The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)

**Transliteration**: Kallaan Vekulum Siruporul Egngnaandrum Ollaanai Ollaa Tholi

பகைத்திறம் தெரிதல்
குறள் 871

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று

**மு.வ உரை**: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

**சாலமன் பாப்பையா உரை**: பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.

**கலைஞர் உரை**: பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது

**Couplet**: For Hate, that ill-conditioned thing not e'en in jest Let any evil longing rule your breast

**English Explanation**: The evil of hatred is not of a nature to be desired by one even in sport

**Transliteration**: Pakaiennum Panpi Ladhanai Oruvan Nakaiyeyum Ventarpaatru Andru

பகைத்திறம் தெரிதல்
குறள் 872

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

**மு.வ உரை**: வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

**கலைஞர் உரை**: படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது

**Couplet**: Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes

**English Explanation**: Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words

**Transliteration**: Viller Uzhavar Pakaikolinum Kollarka Soller Uzhavar Pakai

பகைத்திறம் தெரிதல்
குறள் 873

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

**மு.வ உரை**: தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

**கலைஞர் உரை**: தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்

**Couplet**: Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn

**English Explanation**: He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men

**Transliteration**: Emur Ravarinum Ezhai Thamiyanaaip Pallaar Pakaikol Pavan

பகைத்திறம் தெரிதல்
குறள் 874

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு

**மு.வ உரை**: பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

**கலைஞர் உரை**: பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்

**Couplet**: The world secure on his dexterity depends, Whose worthy rule can change his foes to friends

**English Explanation**: Whose worthy rule can change his foes to friends

**Transliteration**: Pakainatpaak Kontozhukum Panputai Yaalan Thakaimaikkan Thangitru Ulaku

பகைத்திறம் தெரிதல்
குறள் 875

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று

**மு.வ உரை**: தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

**கலைஞர் உரை**: தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்

**Couplet**: Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached

**English Explanation**: He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself)

**Transliteration**: Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan Indhunaiyaak Kolkavatrin Ondru

பகைத்திறம் தெரிதல்
குறள் 876

தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

**மு.வ உரை**: இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

**கலைஞர் உரை**: பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்

**Couplet**: Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press

**English Explanation**: Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)

**Transliteration**: Thera�num Theraa Vitinum Azhivinkan Theraan Pakaaan Vital

பகைத்திறம் தெரிதல்
குறள் 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

**மு.வ உரை**: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

**சாலமன் பாப்பையா உரை**: நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

**கலைஞர் உரை**: தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது

**Couplet**: To those who know them not, complain not of your woes; Nor to your foeman's eyes infirmities disclose

**English Explanation**: Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes

**Transliteration**: Novarka Nondhadhu Ariyaarkku Mevarka Menmai Pakaivar Akaththu

பகைத்திறம் தெரிதல்
குறள் 878

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு

**மு.வ உரை**: செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்‌.

**கலைஞர் உரை**: வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்

**Couplet**: Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an end

**English Explanation**: The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance

**Transliteration**: Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum Pakaivarkan Patta Serukku

பகைத்திறம் தெரிதல்
குறள் 879

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

**மு.வ உரை**: முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

**சாலமன் பாப்பையா உரை**: நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

**கலைஞர் உரை**: முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்

**Couplet**: Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, 'twill pierce the hand that plucks it thence

**English Explanation**: A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller

**Transliteration**: Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar Kaikollum Kaazhththa Itaththu

பகைத்திறம் தெரிதல்
குறள் 880

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்

**மு.வ உரை**: பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

**சாலமன் பாப்பையா உரை**: நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

**கலைஞர் உரை**: பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது

**Couplet**: But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy

**English Explanation**: Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe

**Transliteration**: Uyirppa Ularallar Mandra Seyirppavar Semmal Sidhaikkalaa Thaar

உட்பகை
குறள் 881

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்

**மு.வ உரை**: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

**கலைஞர் உரை**: இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்

**Couplet**: Water and shade, if they unwholesome prove, will bring you pain And qualities of friends who treacherous act, will be your bane

**English Explanation**: Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain

**Transliteration**: Nizhalneerum Innaadha Innaa Thamarneerum Innaavaam Innaa Seyin

உட்பகை
குறள் 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

**மு.வ உரை**: வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

**கலைஞர் உரை**: வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

**Couplet**: Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fear

**English Explanation**: Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly

**Transliteration**: Vaalpola Pakaivarai Anjarka Anjuka Kelpol Pakaivar Thotarpu

உட்பகை
குறள் 883

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

**மு.வ உரை**: உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.

**கலைஞர் உரை**: உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்

**Couplet**: Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife

**English Explanation**: Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay

**Transliteration**: Utpakai Anjiththar Kaakka Ulaivitaththu Matpakaiyin Maanath Therum

உட்பகை
குறள் 884

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்

**மு.வ உரை**: மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

**கலைஞர் உரை**: மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்

**Couplet**: If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt

**English Explanation**: The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations

**Transliteration**: Manamaanaa Utpakai Thondrin Inamaanaa Edham Palavum Tharum

உட்பகை
குறள் 885

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

**மு.வ உரை**: உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

**கலைஞர் உரை**: நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்

**Couplet**: Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise

**English Explanation**: If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime

**Transliteration**: Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan Edham Palavum Tharum

உட்பகை
குறள் 886

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

**மு.வ உரை**: ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

**கலைஞர் உரை**: ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்

**Couplet**: If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door

**English Explanation**: If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death

**Transliteration**: Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum Pondraamai Ondral Aridhu

உட்பகை
குறள் 887

செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

**மு.வ உரை**: செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.

**கலைஞர் உரை**: செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்

**Couplet**: As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway

**English Explanation**: Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid

**Transliteration**: Seppin Punarchchipol Kootinum Kootaadhe Utpakai Utra Kuti

உட்பகை
குறள் 888

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி

**மு.வ உரை**: உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

**கலைஞர் உரை**: அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்

**Couplet**: As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway

**English Explanation**: A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away

**Transliteration**: Aramporudha Ponpolath Theyum Uramporudhu Utpakai Utra Kuti

உட்பகை
குறள் 889

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு

**மு.வ உரை**: எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

**கலைஞர் உரை**: எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்

**Couplet**: Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity

**English Explanation**: Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it

**Transliteration**: Etpaka Vanna Sirumaiththe Aayinum Utpakai Ulladhaang Ketu

உட்பகை
குறள் 890

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று

**மு.வ உரை**: அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

**கலைஞர் உரை**: உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

**Couplet**: Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company

**English Explanation**: Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut

**Transliteration**: Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul Paampotu Utanurain Thatru

பெரியாரைப் பிழையாமை
குறள் 891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

**மு.வ உரை**: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

**கலைஞர் உரை**: ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்

**Couplet**: The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will

**English Explanation**: Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)

**Transliteration**: Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar Potralul Ellaam Thalai

பெரியாரைப் பிழையாமை
குறள் 892

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்

**மு.வ உரை**: ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

**கலைஞர் உரை**: பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்

**Couplet**: If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill

**English Explanation**: To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils

**Transliteration**: Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal Peraa Itumpai Tharum

பெரியாரைப் பிழையாமை
குறள் 893

கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

**மு.வ உரை**: அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

**கலைஞர் உரை**: ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்

**Couplet**: Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the might

**English Explanation**: If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)

**Transliteration**: Ketalventin Kelaadhu Seyka Atalventin Aatru Pavarkan Izhukku

பெரியாரைப் பிழையாமை
குறள் 894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்

**மு.வ உரை**: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

**கலைஞர் உரை**: எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்

**Couplet**: When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey

**English Explanation**: The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)

**Transliteration**: Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku Aatraadhaar Innaa Seyal

பெரியாரைப் பிழையாமை
குறள் 895

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

**மு.வ உரை**: மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

**கலைஞர் உரை**: மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது

**Couplet**: Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead

**English Explanation**: Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go

**Transliteration**: Yaantuch Chendru Yaantum Ularaakaar Vendhuppin Vendhu Serappat Tavar

பெரியாரைப் பிழையாமை
குறள் 896

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

**மு.வ உரை**: தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

**கலைஞர் உரை**: நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது

**Couplet**: Though in the conflagration caught, he may escape from thence: He 'scapes not who in life to great ones gives offence

**English Explanation**: Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees)

**Transliteration**: Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar Periyaarp Pizhaiththozhuku Vaar

பெரியாரைப் பிழையாமை
குறள் 897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

**மு.வ உரை**: தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

**சாலமன் பாப்பையா உரை**: குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?

**கலைஞர் உரை**: பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்

**Couplet**: Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown

**English Explanation**: If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?

**Transliteration**: Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam Thakaimaanta Thakkaar Serin

பெரியாரைப் பிழையாமை
குறள் 898

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

**மு.வ உரை**: மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

**சாலமன் பாப்பையா உரை**: மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

**கலைஞர் உரை**: மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்

**Couplet**: If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed

**English Explanation**: If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth

**Transliteration**: Kundrannaar Kundra Madhippin Kutiyotu Nindrannaar Maaivar Nilaththu

பெரியாரைப் பிழையாமை
குறள் 899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

**மு.வ உரை**: உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

**கலைஞர் உரை**: உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்

**Couplet**: When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame

**English Explanation**: Kings even fall from high estate and perish in the flame

**Transliteration**: Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu Vendhanum Vendhu Ketum

பெரியாரைப் பிழையாமை
குறள் 900

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

**மு.வ உரை**: மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

**கலைஞர் உரை**: என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது

**Couplet**: Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost

**English Explanation**: Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless

**Transliteration**: Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar Sirandhamaindha Seeraar Serin

பெண்வழிச் சேறல்
குறள் 901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது

**மு.வ உரை**: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

**கலைஞர் உரை**: கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்

**Couplet**: Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain

**English Explanation**: Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth

**Transliteration**: Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar Ventaap Porulum Adhu

பெண்வழிச் சேறல்
குறள் 902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

**மு.வ உரை**: கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

**கலைஞர் உரை**: எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்

**Couplet**: Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame

**English Explanation**: The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;

**Transliteration**: Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor Naanaaka Naanuth Tharum

பெண்வழிச் சேறல்
குறள் 903

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

**மு.வ உரை**: மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

**கலைஞர் உரை**: நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்

**Couplet**: Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good

**English Explanation**: The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good

**Transliteration**: Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum Nallaarul Naanuth Tharum

பெண்வழிச் சேறல்
குறள் 904

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று

**மு.வ உரை**: மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

**கலைஞர் உரை**: மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை

**Couplet**: No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought

**English Explanation**: The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded

**Transliteration**: Manaiyaalai Anjum Marumaiyi Laalan Vinaiyaanmai Veereydha Lindru

பெண்வழிச் சேறல்
குறள் 905

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

**மு.வ உரை**: மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

**கலைஞர் உரை**: எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்

**Couplet**: Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do

**English Explanation**: He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good

**Transliteration**: Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum Nallaarkku Nalla Seyal

பெண்வழிச் சேறல்
குறள் 906

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்

**மு.வ உரை**: மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

**கலைஞர் உரை**: அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது

**Couplet**: Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender arm

**English Explanation**: They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods

**Transliteration**: Imaiyaarin Vaazhinum Paatilare Illaal Amaiyaardhol Anju Pavar

பெண்வழிச் சேறல்
குறள் 907

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து

**மு.வ உரை**: மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

**கலைஞர் உரை**: ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்

**Couplet**: The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells

**English Explanation**: Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs

**Transliteration**: Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip Penne Perumai Utaiththu

பெண்வழிச் சேறல்
குறள் 908

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்

**மு.வ உரை**: மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்

**Couplet**: Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform

**English Explanation**: Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds

**Transliteration**: Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal Pettaangu Ozhuku Pavar

பெண்வழிச் சேறல்
குறள் 909

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்

**மு.வ உரை**: அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

**கலைஞர் உரை**: ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது

**Couplet**: No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests

**English Explanation**: From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure

**Transliteration**: Aravinaiyum Aandra Porulum Piravinaiyum Peneval Seyvaarkan Il

பெண்வழிச் சேறல்
குறள் 910

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

**மு.வ உரை**: நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

**கலைஞர் உரை**: சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்

**Couplet**: Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found

**English Explanation**: The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom

**Transliteration**: Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum Penserndhaam Pedhaimai Il

வரைவின் மகளிர்
குறள் 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

**மு.வ உரை**: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.

**கலைஞர் உரை**: அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்

**Couplet**: Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove

**English Explanation**: The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow

**Transliteration**: Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar Insol Izhukkuth Tharum

வரைவின் மகளிர்
குறள் 912

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

**மு.வ உரை**: கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.

**கலைஞர் உரை**: ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

**Couplet**: Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart

**English Explanation**: One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them)

**Transliteration**: Payandhookkip Panpuraikkum Panpin Makalir Nayandhookki Nallaa Vital

வரைவின் மகளிர்
குறள் 913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

**மு.வ உரை**: பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

**கலைஞர் உரை**: விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்

**Couplet**: As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charms

**English Explanation**: The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room

**Transliteration**: Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil Edhil Pinandhazheei Atru

வரைவின் மகளிர்
குறள் 914

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

**மு.வ உரை**: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

**கலைஞர் உரை**: அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்

**Couplet**: Their worthless charms, whose only weal is wealth of gain, From touch of these the wise, who seek the wealth of grace, abstain

**English Explanation**: The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches

**Transliteration**: Porutporulaar Punnalan Thoyaar Arutporul Aayum Arivi Navar

வரைவின் மகளிர்
குறள் 915

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்

**மு.வ உரை**: இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

**சாலமன் பாப்பையா உரை**: இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

**கலைஞர் உரை**: இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்

**Couplet**: From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee;

**English Explanation**: Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights

**Transliteration**: Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin Maanta Arivi Navar

வரைவின் மகளிர்
குறள் 916

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் 
புன்னலம் பாரிப்பார் தோள்

**மு.வ உரை**: அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.

**கலைஞர் உரை**: புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்

**Couplet**: From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn away

**English Explanation**: Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay)

**Transliteration**: Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip Punnalam Paarippaar Thol

வரைவின் மகளிர்
குறள் 917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

**மு.வ உரை**: நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.

**கலைஞர் உரை**: உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்

**Couplet**: Who cherish alien thoughts while folding in their feigned embrace, These none approach save those devoid of virtue's grace

**English Explanation**: Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things

**Transliteration**: Nirainenjam Illavar Thoivaar Piranenjir Penip Punarpavar Thol

வரைவின் மகளிர்
குறள் 918

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

**மு.வ உரை**: வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

**கலைஞர் உரை**: வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்

**Couplet**: As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove

**English Explanation**: The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female

**Transliteration**: Aayum Arivinar Allaarkku Anangenpa Maaya Makalir Muyakku

வரைவின் மகளிர்
குறள் 919

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

**மு.வ உரை**: ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.

**கலைஞர் உரை**: விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை

**Couplet**: The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell, where sink degraded souls of men abject

**English Explanation**: The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base

**Transliteration**: Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap Pooriyarkal Aazhum Alaru

வரைவின் மகளிர்
குறள் 920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

**மு.வ உரை**: இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

**கலைஞர் உரை**: இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்

**Couplet**: Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more

**English Explanation**: Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune

**Transliteration**: 920 Irumanap Pentirum Kallum Kavarum Thiruneekkap Pattaar Thotarpu

கள்ளுண்ணாமை
குறள் 921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்

**மு.வ உரை**: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

**கலைஞர் உரை**: மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்

**Couplet**: Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades away

**English Explanation**: Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame)

**Transliteration**: Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum Katkaadhal Kontozhuku Vaar

கள்ளுண்ணாமை
குறள் 922

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்

**மு.வ உரை**: கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

**கலைஞர் உரை**: மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்

**Couplet**: Drink not inebriating draught Let him count well the cost Who drinks, by drinking, all good men's esteem is lost

**English Explanation**: Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great

**Transliteration**: Unnarka Kallai Unilunka Saandroraan Ennap Pataventaa Thaar

கள்ளுண்ணாமை
குறள் 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

**மு.வ உரை**: பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?

**கலைஞர் உரை**: கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்

**Couplet**: The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise

**English Explanation**: Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?

**Transliteration**: Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch Chaandror Mukaththuk Kali

கள்ளுண்ணாமை
குறள் 924

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

**மு.வ உரை**: நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

**கலைஞர் உரை**: மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்

**Couplet**: Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn

**English Explanation**: The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness

**Transliteration**: Naanennum Nallaal Purangotukkum Kallennum Penaap Perungutrath Thaarkku

கள்ளுண்ணாமை
குறள் 925

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்

**மு.வ உரை**: விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

**கலைஞர் உரை**: ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்

**Couplet**: With gift of goods who self-oblivion buys, Is ignorant of all that man should prize

**English Explanation**: To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions)

**Transliteration**: Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu Meyyari Yaamai Kolal

கள்ளுண்ணாமை
குறள் 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

**மு.வ உரை**: உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

**கலைஞர் உரை**: மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்

**Couplet**: Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deem

**English Explanation**: They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters

**Transliteration**: Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum Nanjunpaar Kallun Pavar

கள்ளுண்ணாமை
குறள் 927

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் 
கள்ளொற்றிக் கண்சாய் பவர்

**மு.வ உரை**: கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

**கலைஞர் உரை**: மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்

**Couplet**: Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy

**English Explanation**: Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen

**Transliteration**: Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum Kallotrik Kansaai Pavar

கள்ளுண்ணாமை
குறள் 928

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்

**மு.வ உரை**: கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

**கலைஞர் உரை**: மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்

**Couplet**: No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad

**English Explanation**: Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal

**Transliteration**: Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu Oliththadhooum Aange Mikum

கள்ளுண்ணாமை
குறள் 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

**மு.வ உரை**: கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

**கலைஞர் உரை**: குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்

**Couplet**: Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave Is he who strives to sober drunken man with reasonings grave

**English Explanation**: Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man

**Transliteration**: Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk Kuliththaanaith Theeththureei Atru

கள்ளுண்ணாமை
குறள் 930

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

**மு.வ உரை**: ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

**சாலமன் பாப்பையா உரை**: போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?

**கலைஞர் உரை**: ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

**Couplet**: When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'

**English Explanation**: When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink

**Transliteration**: Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal Ullaankol Untadhan Sorvu

சூது
குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

**மு.வ உரை**: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

**கலைஞர் உரை**: வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்

**Couplet**: Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes in

**English Explanation**: Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook

**Transliteration**: Ventarka Vendritinum Soodhinai Vendradhooum Thoontirpon Meenvizhungi Atru

சூது
குறள் 932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

**மு.வ உரை**: ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

**சாலமன் பாப்பையா உரை**: ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?

**கலைஞர் உரை**: ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

**Couplet**: Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous day

**English Explanation**: That they may good obtain, and see a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?

**Transliteration**: Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol Nandreydhi Vaazhvadhor Aaru

சூது
குறள் 933

உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்

**மு.வ உரை**: ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

**கலைஞர் உரை**: பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்

**Couplet**: If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him away

**English Explanation**: If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands

**Transliteration**: Urulaayam Ovaadhu Koorin Porulaayam Pooip Purame Patum

சூது
குறள் 934

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்

**மு.வ உரை**: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

**கலைஞர் உரை**: பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை

**Couplet**: Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down

**English Explanation**: There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation

**Transliteration**: Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin Varumai Tharuvadhondru Il

சூது
குறள் 935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

**மு.வ உரை**: சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

**சாலமன் பாப்பையா உரை**: சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

**கலைஞர் உரை**: சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்

**Couplet**: The dice, and gaming-hall, and gamester's art, they eager sought, Thirsting for gain- the men in other days who came to nought

**English Explanation**: Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)

**Transliteration**: Kavarum Kazhakamum Kaiyum Tharukki Ivariyaar Illaaki Yaar

சூது
குறள் 936

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்

**மு.வ உரை**: சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

**சாலமன் பாப்பையா உரை**: சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

**கலைஞர் உரை**: சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்

**Couplet**: Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil, They suffer grievous want, and sorrows sore bewail

**English Explanation**: Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world

**Transliteration**: Akataaraar Allal Uzhapparsoo Thennum Mukatiyaan Mootappat Taar

சூது
குறள் 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 
கழகத்துக் காலை புகின்

**மு.வ உரை**: சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

**கலைஞர் உரை**: சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்

**Couplet**: Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments waste

**English Explanation**: To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character

**Transliteration**: Pazhakiya Selvamum Panpum Ketukkum Kazhakaththuk Kaalai Pukin

சூது
குறள் 938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது

**மு.வ உரை**: சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

**கலைஞர் உரை**: பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது

**Couplet**: Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away All grace, and leaves the man to utter misery a prey

**English Explanation**: Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)

**Transliteration**: Porul Ketuththup Poimer Koleei Arulketuththu Allal Uzhappikkum Soodhu

சூது
குறள் 939

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்

**மு.வ உரை**: சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

**கலைஞர் உரை**: சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்

**Couplet**: Clothes, wealth, food, praise, and learning, all depart From him on gambler's gain who sets his heart

**English Explanation**: The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning

**Transliteration**: Utaiselvam Oonoli Kalviendru Aindhum Ataiyaavaam Aayang Kolin

சூது
குறள் 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்

**மு.வ உரை**: பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.

**கலைஞர் உரை**: பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்

**Couplet**: Howe'er he lose, the gambler's heart is ever in the play; E'en so the soul, despite its griefs, would live on earth alway

**English Explanation**: As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it

**Transliteration**: Izhaththoru�um Kaadhalikkum Soodhepol Thunpam Uzhaththoru�um Kaadhatru Uyir

மருந்து
குறள் 941

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

**மு.வ உரை**: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

**கலைஞர் உரை**: வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்

**Couplet**: The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease

**English Explanation**: If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease

**Transliteration**: Mikinum Kuraiyinum Noiseyyum Noolor Valimudhalaa Enniya Moondru

மருந்து
குறள் 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்

**மு.வ உரை**: முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

**கலைஞர் உரை**: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

**Couplet**: No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again

**English Explanation**: No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested

**Transliteration**: Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu Atradhu Potri Unin

மருந்து
குறள் 943

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

**மு.வ உரை**: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

**கலைஞர் உரை**: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்

**Couplet**: Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again

**English Explanation**: If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul

**Transliteration**: Atraal Aravarindhu Unka Aqdhutampu Petraan Netidhuykkum Aaru

மருந்து
குறள் 944

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

**மு.வ உரை**: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

**கலைஞர் உரை**: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

**Couplet**: Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree

**English Explanation**: (First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)

**Transliteration**: Atradhu Arindhu Kataippitiththu Maaralla Thuykka Thuvarap Pasiththu

மருந்து
குறள் 945

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

**மு.வ உரை**: மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

**கலைஞர் உரை**: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை

**Couplet**: With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel

**English Explanation**: There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable

**Transliteration**: Maarupaatu Illaadha Unti Maruththunnin Oorupaatu Illai Uyirkku

மருந்து
குறள் 946

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

**மு.வ உரை**: குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

**கலைஞர் உரை**: அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை

**Couplet**: On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure

**English Explanation**: As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously

**Transliteration**: Izhivarindhu Unpaankan Inpampol Nirkum Kazhiper Iraiyaankan Noi

மருந்து
குறள் 947

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

**மு.வ உரை**: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

**கலைஞர் உரை**: பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்

**Couplet**: Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains

**English Explanation**: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)

**Transliteration**: Theeyala Vandrith Theriyaan Peridhunnin Noyala Vindrip Patum

மருந்து
குறள் 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

**மு.வ உரை**: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

**கலைஞர் உரை**: நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

**Couplet**: Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill

**English Explanation**: Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)

**Transliteration**: Noinaati Noimudhal Naati Adhudhanikkum Vaainaati Vaaippach Cheyal

மருந்து
குறள் 949

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

**மு.வ உரை**: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

**கலைஞர் உரை**: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்

**Couplet**: The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill

**English Explanation**: The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)

**Transliteration**: Utraan Alavum Piniyalavum Kaalamum Katraan Karudhich Cheyal

மருந்து
குறள் 950

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து

**மு.வ உரை**: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

**கலைஞர் உரை**: நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது

**Couplet**: For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide

**English Explanation**: Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions

**Transliteration**: Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru Appaal Naar Kootre Marundhu

குடிமை
குறள் 951

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு

**மு.வ உரை**: நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

**கலைஞர் உரை**: நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது

**Couplet**: Save in the scions of a noble house, you never find Instinctive sense of right and virtuous shame combined

**English Explanation**: Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born

**Transliteration**: Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach Cheppamum Naanum Orungu

குடிமை
குறள் 952

ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

**மு.வ உரை**: உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

**கலைஞர் உரை**: ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்

**Couplet**: In these three things the men of noble birth fail not: In virtuous deed and truthful word, and chastened thought

**English Explanation**: The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty

**Transliteration**: Ozhukkamum Vaaimaiyum Naanum Im Moondrum Izhukkaar Kutippiran Thaar

குடிமை
குறள் 953

நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு

**மு.வ உரை**: உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.

**கலைஞர் உரை**: முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்

**Couplet**: The smile, the gift, the pleasant word, unfailing courtesy These are the signs, they say, of true nobility

**English Explanation**: A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born

**Transliteration**: Nakaieekai Insol Ikazhaamai Naankum Vakaiyenpa Vaaimaik Kutikku

குடிமை
குறள் 954

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

**மு.வ உரை**: பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

**Couplet**: Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin

**English Explanation**: Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming

**Transliteration**: Atukkiya Koti Perinum Kutippirandhaar Kundruva Seydhal Ilar

குடிமை
குறள் 955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பின் தலைப்பிரிதல் இன்று

**மு.வ உரை**: தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

**கலைஞர் உரை**: பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்

**Couplet**: Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace

**English Explanation**: Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality)

**Transliteration**: Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti Panpil Thalaippiridhal Indru

குடிமை
குறள் 956

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்

**மு.வ உரை**: மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்

**Couplet**: Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame

**English Explanation**: Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto

**Transliteration**: Salampatrich Chaalpila Seyyaarmaa Satra Kulampatri Vaazhdhum En Paar

குடிமை
குறள் 957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

**மு.வ உரை**: உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

**கலைஞர் உரை**: பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்

**Couplet**: The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky

**English Explanation**: As spots on her bright orb that walks sublime the evening sky

**Transliteration**: Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin Madhikkan Maruppol Uyarndhu

குடிமை
குறள் 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்

**மு.வ உரை**: ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

**கலைஞர் உரை**: என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்

**Couplet**: If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim

**English Explanation**: If one of a good family betrays want of affection, his descent from it will be called in question

**Transliteration**: Nalaththinkan Naarinmai Thondrin Avanaik Kulaththinkan Aiyap Patum

குடிமை
குறள் 959

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

**மு.வ உரை**: இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

**கலைஞர் உரை**: விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்

**Couplet**: Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birth

**English Explanation**: As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth)

**Transliteration**: Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum Kulaththil Pirandhaarvaaich Chol

குடிமை
குறள் 960

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

**மு.வ உரை**: ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்

**Couplet**: Who seek for good the grace of virtuous shame must know; Who seek for noble name to all must reverence show

**English Explanation**: He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all

**Transliteration**: Nalamventin Naanutaimai Ventum Kulam Ventin Ventuka Yaarkkum Panivu

மானம்
குறள் 961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

**மு.வ உரை**: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

**கலைஞர் உரை**: கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்

**Couplet**: Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain

**English Explanation**: Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death

**Transliteration**: Indri Amaiyaach Chirappina Aayinum Kundra Varupa Vital

மானம்
குறள் 962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

**மு.வ உரை**: புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

**கலைஞர் உரை**: புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்

**Couplet**: Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name

**English Explanation**: Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame

**Transliteration**: Seerinum Seeralla Seyyaare Seerotu Peraanmai Ventu Pavar

மானம்
குறள் 963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

**மு.வ உரை**: செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

**கலைஞர் உரை**: உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்

**Couplet**: Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's power

**English Explanation**: In great prosperity humility is becoming; dignity, in great adversity

**Transliteration**: Perukkaththu Ventum Panidhal Siriya Surukkaththu Ventum Uyarvu

மானம்
குறள் 964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

**மு.வ உரை**: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

**கலைஞர் உரை**: மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்

**Couplet**: Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth

**English Explanation**: They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head

**Transliteration**: Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar Nilaiyin Izhindhak Katai

மானம்
குறள் 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

**மு.வ உரை**: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

**கலைஞர் உரை**: குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

**Couplet**: If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought

**English Explanation**: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing

**Transliteration**: Kundrin Anaiyaarum Kundruvar Kundruva Kundri Anaiya Seyin

மானம்
குறள் 966

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை

**மு.வ உரை**: மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?

**கலைஞர் உரை**: இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?

**Couplet**: It yields no praise, nor to the land of Gods throws wide the gate: Why follow men who scorn, and at their bidding wait

**English Explanation**: Why follow men who scorn, and at their bidding wait?

**Transliteration**: Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru Ikazhvaarpin Sendru Nilai

மானம்
குறள் 967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

**மு.வ உரை**: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

**கலைஞர் உரை**: தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்

**Couplet**: Better 'twere said, 'He's perished!' than to gain The means to live, following in foeman's train

**English Explanation**: It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him

**Transliteration**: Ottaarpin Sendroruvan Vaazhdhala�n Annilaiye Kettaan Enappatudhal Nandru

மானம்
குறள் 968

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து

**மு.வ உரை**: ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

**சாலமன் பாப்பையா உரை**: குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

**கலைஞர் உரை**: சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்

**Couplet**: When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweet

**English Explanation**: For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death

**Transliteration**: Marundhomatru Oonompum Vaazhkkai Perundhakaimai Peetazhiya Vandha Itaththu

மானம்
குறள் 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

**மு.வ உரை**: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

**கலைஞர் உரை**: உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்

**Couplet**: Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day

**English Explanation**: Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs

**Transliteration**: Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar Uyirneeppar Maanam Varin

மானம்
குறள் 970

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு

**மு.வ உரை**: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

**கலைஞர் உரை**: மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்

**Couplet**: Who, when dishonour comes, refuse to live, their honoured memory Will live in worship and applause of all the world for aye

**English Explanation**: The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity

**Transliteration**: Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar Olidhozhudhu Eththum Ulaku

பெருமை
குறள் 971

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்

**மு.வ உரை**: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

**கலைஞர் உரை**: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்

**Couplet**: The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'

**English Explanation**: One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)

**Transliteration**: Olioruvarku Ulla Verukkai Ilioruvarku Aqdhirandhu Vaazhdhum Enal

பெருமை
குறள் 972

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

**மு.வ உரை**: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

**கலைஞர் உரை**: பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்

**Couplet**: All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worth

**English Explanation**: All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions

**Transliteration**: Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa Seydhozhil Vetrumai Yaan

பெருமை
குறள் 973

மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

**மு.வ உரை**: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

**கலைஞர் உரை**: பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்

**Couplet**: The men of lofty line, whose souls are mean, are never great The men of lowly birth, when high of soul, are not of low estate

**English Explanation**: Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base

**Transliteration**: Melirundhum Melallaar Melallar Keezhirundhum Keezhallaar Keezhal Lavar

பெருமை
குறள் 974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

**மு.வ உரை**: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.

**கலைஞர் உரை**: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்

**Couplet**: Like single-hearted women, greatness too, Exists while to itself is true

**English Explanation**: Exists while to itself is true

**Transliteration**: Orumai Makalire Polap Perumaiyum Thannaiththaan Kontozhukin Untu

பெருமை
குறள் 975

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்

**மு.வ உரை**: பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

**கலைஞர் உரை**: அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்

**Couplet**: The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do

**English Explanation**: (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do)

**Transliteration**: Perumai Yutaiyavar Aatruvaar Aatrin Arumai Utaiya Seyal

பெருமை
குறள் 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

**மு.வ உரை**: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.

**கலைஞர் உரை**: பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை

**Couplet**: 'As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soul

**English Explanation**: It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature

**Transliteration**: Siriyaar Unarchchiyul Illai Periyaaraip Penikkol Vemennum Nokku

பெருமை
குறள் 977

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்

**மு.வ உரை**: சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

**கலைஞர் உரை**: சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை

**Couplet**: Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred

**English Explanation**: Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride

**Transliteration**: Irappe Purindha Thozhitraam Sirappundhaan Seeral Lavarkan Patin

பெருமை
குறள் 978

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

**மு.வ உரை**: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

**சாலமன் பாப்பையா உரை**: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

**கலைஞர் உரை**: பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்

**Couplet**: Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with praise

**English Explanation**: The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration

**Transliteration**: Paniyumaam Endrum Perumai Sirumai Aniyumaam Thannai Viyandhu

பெருமை
குறள் 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

**மு.வ உரை**: பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

**கலைஞர் உரை**: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்

**Couplet**: Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme

**English Explanation**: Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness

**Transliteration**: Perumai Perumidham Inmai Sirumai Perumidham Oorndhu Vital

பெருமை
குறள் 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

**மு.வ உரை**: பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்

**சாலமன் பாப்பையா உரை**: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.

**கலைஞர் உரை**: பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்

**Couplet**: Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim

**English Explanation**: The great hide the faults of others; the base only divulge them

**Transliteration**: Atram Maraikkum Perumai Sirumaidhaan Kutrame Koori Vitum

சான்றாண்மை
குறள் 981

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

**மு.வ உரை**: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

**கலைஞர் உரை**: ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்

**Couplet**: All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect way

**English Explanation**: It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good

**Transliteration**: Katanenpa Nallavai Ellaam Katanarindhu Saandraanmai Merkol Pavarkku

சான்றாண்மை
குறள் 982

குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று

**மு.வ உரை**: சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

**கலைஞர் உரை**: நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல

**Couplet**: The good of inward excellence they claim, The perfect men; all other good is only good in name

**English Explanation**: The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights

**Transliteration**: Kunanalam Saandror Nalane Piranalam Ennalaththu Ulladhooum Andru

சான்றாண்மை
குறள் 983

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்

**மு.வ உரை**: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

**கலைஞர் உரை**: அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்

**Couplet**: Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-place

**English Explanation**: Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests

**Transliteration**: Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu Aindhusaal Oondriya Thoon

சான்றாண்மை
குறள் 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு

**மு.வ உரை**: தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

**சாலமன் பாப்பையா உரை**: பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

**கலைஞர் உரை**: உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு

**Couplet**: The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praise

**English Explanation**: Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults

**Transliteration**: Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai Sollaa Nalaththadhu Saalpu

சான்றாண்மை
குறள் 985

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

**மு.வ உரை**: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

**கலைஞர் உரை**: ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்

**Couplet**: Submission is the might of men of mighty acts; the sage With that same weapon stills his foeman's rage

**English Explanation**: Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes

**Transliteration**: Aatruvaar Aatral Panidhal Adhusaandror Maatraarai Maatrum Patai

சான்றாண்மை
குறள் 986

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

**மு.வ உரை**: சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

**கலைஞர் உரை**: சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்

**Couplet**: What is perfection's test? The equal mind To bear repulse from even meaner men resigned

**English Explanation**: The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors

**Transliteration**: Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi Thulaiyallaar Kannum Kolal

சான்றாண்மை
குறள் 987

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

**மு.வ உரை**: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?

**கலைஞர் உரை**: தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

**Couplet**: What fruit doth your perfection yield you, say! Unless to men who work you ill good repay

**English Explanation**: Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

**Transliteration**: Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal Enna Payaththadho Saalpu

சான்றாண்மை
குறள் 988

இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

**மு.வ உரை**: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

**கலைஞர் உரை**: சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

**Couplet**: To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good

**English Explanation**: Poverty is no disgrace to one who abounds in good qualities

**Transliteration**: Inmai Oruvarku Ilivandru Saalpennum Thinmai Un Taakap Perin

சான்றாண்மை
குறள் 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்

**மு.வ உரை**: சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

**கலைஞர் உரை**: தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்

**Couplet**: Call them of perfect virtue's sea the shore, Who, though the fates should fail, fail not for evermore

**English Explanation**: Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change

**Transliteration**: Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku Aazhi Enappatu Vaar

சான்றாண்மை
குறள் 990

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை

**மு.வ உரை**: சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.

**கலைஞர் உரை**: சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது

**Couplet**: The mighty earth its burthen to sustain must cease, If perfect virtue of the perfect men decrease

**English Explanation**: If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden

**Transliteration**: Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan Thaangaadhu Manno Porai

பண்புடைமை
குறள் 991

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

**மு.வ உரை**: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

**கலைஞர் உரை**: யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்

**Couplet**: Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way

**English Explanation**: If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness

**Transliteration**: Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum Panputaimai Ennum Vazhakku

பண்புடைமை
குறள் 992

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

**மு.வ உரை**: அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

**கலைஞர் உரை**: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்

**Couplet**: Benevolence and high born dignity, These two are beaten paths of courtesy

**English Explanation**: Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all

**Transliteration**: Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum Panputaimai Ennum Vazhakku

பண்புடைமை
குறள் 993

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

**மு.வ உரை**: உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.

**கலைஞர் உரை**: நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்

**Couplet**: Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true

**English Explanation**: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract

**Transliteration**: Uruppoththal Makkaloppu Andraal Veruththakka Panpoththal Oppadhaam Oppu

பண்புடைமை
குறள் 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு

**மு.வ உரை**: நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

**கலைஞர் உரை**: நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்

**Couplet**: Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence.'

**English Explanation**: The world applauds the character of those whose usefulness results from their equity and charity

**Transliteration**: Nayanotu Nandri Purindha Payanutaiyaar Panpupaa Raattum Ulaku

பண்புடைமை
குறள் 995

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

**மு.வ உரை**: ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

**சாலமன் பாப்பையா உரை**: விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.

**கலைஞர் உரை**: விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்

**Couplet**: Contempt is evil though in sport They who man's nature know, E'en in their wrath, a courteous mind will show

**English Explanation**: Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated

**Transliteration**: Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum Panpula Paatarivaar Maattu

பண்புடைமை
குறள் 996

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்

**மு.வ உரை**: பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

**கலைஞர் உரை**: உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்

**Couplet**: The world abides; for 'worthy' men its weight sustain Were it not so, 'twould fall to dust again

**English Explanation**: The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish

**Transliteration**: Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel Manpukku Maaivadhu Man

பண்புடைமை
குறள் 997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்

**மு.வ உரை**: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

**கலைஞர் உரை**: அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்

**Couplet**: Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane'

**English Explanation**: He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file

**Transliteration**: Arampolum Koormaiya Renum Marampolvar Makkatpanpu Illaa Thavar

பண்புடைமை
குறள் 998

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை

**மு.வ உரை**: நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.

**கலைஞர் உரை**: நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்

**Couplet**: Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail

**English Explanation**: It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful

**Transliteration**: Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum Panpaatraar Aadhal Katai

பண்புடைமை
குறள் 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்

**மு.வ உரை**: பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

**கலைஞர் உரை**: நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்

**Couplet**: To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth

**English Explanation**: To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light

**Transliteration**: Nakalvallar Allaarkku Maayiru Gnaalam Pakalumpaar Pattandru Irul

பண்புடைமை
குறள் 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

**மு.வ உரை**: பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

**கலைஞர் உரை**: பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்

**Couplet**: Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored

**English Explanation**: The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the

**Transliteration**: Panpilaan Petra Perunjelvam Nanpaal Kalandheemai Yaaldhirin Thatru

நன்றியில் செல்வம்
குறள் 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்

**மு.வ உரை**: ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.

**கலைஞர் உரை**: அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?

**Couplet**: Who fills his house with ample store, enjoying none, Is dead Nought with the useless heap is done

**English Explanation**: He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)

**Transliteration**: Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan Seththaan Seyakkitandhadhu Il

நன்றியில் செல்வம்
குறள் 1002

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

**மு.வ உரை**: பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

**சாலமன் பாப்பையா உரை**: பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.

**கலைஞர் உரை**: யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்

**Couplet**: Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly brings

**English Explanation**: He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon

**Transliteration**: Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum Marulaanaam Maanaap Pirappu

நன்றியில் செல்வம்
குறள் 1003

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

**மு.வ உரை**: சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

**கலைஞர் உரை**: புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்

**Couplet**: Who lust to heap up wealth, but glory hold not dear, It burthens earth when on the stage of being they appear

**English Explanation**: A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame

**Transliteration**: Eettam Ivari Isaiventaa Aatavar Thotram Nilakkup Porai

நன்றியில் செல்வம்
குறள் 1004

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

**மு.வ உரை**: பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

**கலைஞர் உரை**: யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?

**Couplet**: Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray

**English Explanation**: What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?

**Transliteration**: Echchamendru Enennung Kollo Oruvaraal Nachchap Pataaa Thavan

நன்றியில் செல்வம்
குறள் 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

**மு.வ உரை**: பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

**கலைஞர் உரை**: கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை

**Couplet**: Amid accumulated millions they are poor, Who nothing give and nought enjoy of all they store

**English Explanation**: Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches

**Transliteration**: Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya Kotiyun Taayinum Il

நன்றியில் செல்வம்
குறள் 1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்

**மு.வ உரை**: தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

**சாலமன் பாப்பையா உரை**: தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

**கலைஞர் உரை**: தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்

**Couplet**: Their ample wealth is misery to men of churlish heart, Who nought themselves enjoy, and nought to worthy men impart

**English Explanation**: He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth

**Transliteration**: Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru Eedhal Iyalpilaa Thaan

நன்றியில் செல்வம்
குறள் 1007

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று

**மு.வ உரை**: பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

**கலைஞர் உரை**: வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது

**Couplet**: Like woman fair in lonelihood who aged grows, Is wealth of him on needy men who nought bestows

**English Explanation**: The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband

**Transliteration**: Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam Petraal Thamiyalmooth Thatru

நன்றியில் செல்வம்
குறள் 1008

நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

**மு.வ உரை**: பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

**கலைஞர் உரை**: வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!

**Couplet**: When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree

**English Explanation**: The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town

**Transliteration**: Nachchap Pataadhavan Selvam Natuvoorul Nachchu Marampazhuth Thatru

நன்றியில் செல்வம்
குறள் 1009

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

**மு.வ உரை**: பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

**கலைஞர் உரை**: அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்

**Couplet**: Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others take

**English Explanation**: To heap up glittering wealth, their hoards shall others take

**Transliteration**: Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya Onporul Kolvaar Pirar

நன்றியில் செல்வம்
குறள் 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனைய துடைத்து

**மு.வ உரை**: புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.

**கலைஞர் உரை**: சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்

**Couplet**: 'Tis as when rain cloud in the heaven grows day, When generous wealthy man endures brief poverty

**English Explanation**: The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)

**Transliteration**: Seerutaich Chelvar Sirudhuni Maari Varangoorn Thanaiyadhu Utaiththu

நாணுடைமை
குறள் 1011

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற

**மு.வ உரை**: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

**சாலமன் பாப்பையா உரை**: இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.

**கலைஞர் உரை**: ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு

**Couplet**: To shrink abashed from evil deed is 'generous shame'; Other is that of bright-browed one of virtuous fame

**English Explanation**: True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids

**Transliteration**: Karumaththaal Naanudhal Naanun Thirunudhal Nallavar Naanup Pira

நாணுடைமை
குறள் 1012

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு

**மு.வ உரை**: உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

**கலைஞர் உரை**: உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்

**Couplet**: Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is known

**English Explanation**: Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good

**Transliteration**: Oonutai Echcham Uyirkkellaam Veralla Naanutaimai Maandhar Sirappu

நாணுடைமை
குறள் 1013

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு

**மு.வ உரை**: எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

**கலைஞர் உரை**: உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்

**Couplet**: All spirits homes of flesh as habitation claim, And perfect virtue ever dwells with shame

**English Explanation**: As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection

**Transliteration**: Oonaik Kuriththa Uyirellaam Naanennum Nanmai Kuriththadhu Saalpu

நாணுடைமை
குறள் 1014

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை

**மு.வ உரை**: சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

**சாலமன் பாப்பையா உரை**: நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

**கலைஞர் உரை**: நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்

**Couplet**: And is not shame an ornament to men of dignity? Without it step of stately pride is piteous thing to see

**English Explanation**: Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)

**Transliteration**: Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel Piniandro Peetu Natai

நாணுடைமை
குறள் 1015

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு

**மு.வ உரை**: பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

**கலைஞர் உரை**: தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்

**Couplet**: As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their own

**English Explanation**: The world regards as the abode of modesty him who fear his own and other's guilt

**Transliteration**: Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku Uraipadhi Ennum Ulaku

நாணுடைமை
குறள் 1016

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

**மு.வ உரை**: நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

**கலைஞர் உரை**: பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்

**Couplet**: Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retain

**English Explanation**: The great make modesty their barrier (of defence) and not the wide world

**Transliteration**: Naanveli Kollaadhu Manno Viyangnaalam Penalar Melaa Yavar

நாணுடைமை
குறள் 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

**மு.வ உரை**: நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.

**கலைஞர் உரை**: நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்

**Couplet**: The men of modest soul for shame would life an offering make, But ne'er abandon virtuous shame for life's dear sake

**English Explanation**: The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life

**Transliteration**: Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal Naandhuravaar Naanaal Pavar

நாணுடைமை
குறள் 1018

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து

**மு.வ உரை**: ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

**கலைஞர் உரை**: வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

**Couplet**: Though know'st no shame, while all around asha med must be: Virtue will shrink away ashamed of thee

**English Explanation**: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of

**Transliteration**: Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin Aramnaanath Thakkadhu Utaiththu

நாணுடைமை
குறள் 1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

**மு.வ உரை**: ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

**கலைஞர் உரை**: கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்

**Couplet**: 'Twill race consume if right observance fail; 'Twill every good consume if shamelessness prevail

**English Explanation**: Want of manners injures one's family; but want of modesty injures one's character

**Transliteration**: Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum Naaninmai Nindrak Katai

நாணுடைமை
குறள் 1020

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று

**மு.வ உரை**: மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

**கலைஞர் உரை**: உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை

**Couplet**: 'Tis as with strings a wooden puppet apes life's functions, when Those void of shame within hold intercourse with men

**English Explanation**: The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string

**Transliteration**: Naanakath Thillaar Iyakkam Marappaavai Naanaal Uyirmarutti Atru

குடிசெயல் வகை
குறள் 1021

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்

**மு.வ உரை**: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

**கலைஞர் உரை**: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது

**Couplet**: Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand

**English Explanation**: There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)

**Transliteration**: Karumam Seyaoruvan Kaidhooven Ennum Perumaiyin Peetutaiyadhu Il

குடிசெயல் வகை
குறள் 1022

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி

**மு.வ உரை**: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

**கலைஞர் உரை**: ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்

**Couplet**: The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race's line

**English Explanation**: One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances

**Transliteration**: Aalvinaiyum Aandra Arivum Enairantin Neelvinaiyaal Neelum Kuti

குடிசெயல் வகை
குறள் 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

**மு.வ உரை**: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

**சாலமன் பாப்பையா உரை**: என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

**கலைஞர் உரை**: தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்

**Couplet**: 'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way

**English Explanation**: The Deity will clothe itself and appear before him who resolves on raising his family

**Transliteration**: Kutiseyval Ennum Oruvarkuth Theyvam Matidhatruth Thaanmun Thurum

குடிசெயல் வகை
குறள் 1024

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு

**மு.வ உரை**: தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

**கலைஞர் உரை**: தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்

**Couplet**: Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gain

**English Explanation**: Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed

**Transliteration**: Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith Thaazhaadhu Ugnatru Pavarkku

குடிசெயல் வகை
குறள் 1025

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

**மு.வ உரை**: குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

**கலைஞர் உரை**: குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்

**Couplet**: With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim

**English Explanation**: People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means

**Transliteration**: Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich Chutramaach Chutrum Ulaku

குடிசெயல் வகை
குறள் 1026

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

**மு.வ உரை**: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

**கலைஞர் உரை**: நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்

**Couplet**: Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raise

**English Explanation**: A man's true manliness consists in making himself the head and benefactor of his family

**Transliteration**: Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha Illaanmai Aakkik Kolal

குடிசெயல் வகை
குறள் 1027

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை

**மு.வ உரை**: போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

**கலைஞர் உரை**: போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு

**Couplet**: The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong

**English Explanation**: Amid his kindred so the burthen rests upon the strong

**Transliteration**: Amarakaththu Vankannar Polath Thamarakaththum Aatruvaar Metre Porai

குடிசெயல் வகை
குறள் 1028

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்

**மு.வ உரை**: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

**கலைஞர் உரை**: தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்

**Couplet**: Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dear

**English Explanation**: As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family

**Transliteration**: Kutiseyvaark Killai Paruvam Matiseydhu Maanang Karudhak Ketum

குடிசெயல் வகை
குறள் 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு

**மு.வ உரை**: தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?

**கலைஞர் உரை**: தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்

**Couplet**: Is not his body vase that various sorrows fill, Who would his household screen from every ill

**English Explanation**: Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?

**Transliteration**: Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik Kutra Maraippaan Utampu

குடிசெயல் வகை
குறள் 1030

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி

**மு.வ உரை**: துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

**கலைஞர் உரை**: வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்

**Couplet**: When trouble the foundation saps the house must fall, If no strong hand be nigh to prop the tottering wall

**English Explanation**: If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune

**Transliteration**: Itukkankaal Kondrita Veezhum Atuththoondrum Nallaal Ilaadha Kuti

உழவு
குறள் 1031

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

**மு.வ உரை**: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

**கலைஞர் உரை**: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது

**Couplet**: Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem

**English Explanation**: Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer

**Transliteration**: Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal Uzhandhum Uzhave Thalai

உழவு
குறள் 1032

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து

**மு.வ உரை**: உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

**சாலமன் பாப்பையா உரை**: உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

**கலைஞர் உரை**: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்

**Couplet**: The ploughers are the linch-pin of the world; they bear Them up who other works perform, too weak its toils to share

**English Explanation**: Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil

**Transliteration**: Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu Ezhuvaarai Ellaam Poruththu

உழவு
குறள் 1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

**மு.வ உரை**: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

**கலைஞர் உரை**: உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது

**Couplet**: Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they give

**English Explanation**: They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life

**Transliteration**: Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam Thozhudhuntu Pinsel Pavar

உழவு
குறள் 1034

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்

**மு.வ உரை**: நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

**கலைஞர் உரை**: பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்

**Couplet**: O'er many a land they 'll see their monarch reign, Whose fields are shaded by the waving grain

**English Explanation**: Patriotic farmers desire to bring all other states under the control of their own king

**Transliteration**: Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar Alakutai Neezha Lavar

உழவு
குறள் 1035

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்

**மு.வ உரை**: கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

**சாலமன் பாப்பையா உரை**: தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

**கலைஞர் உரை**: தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

**Couplet**: They nothing ask from others, but to askers give, Who raise with their own hands the food on which they live

**English Explanation**: Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

**Transliteration**: Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu Kaiseydhoon Maalai Yavar

உழவு
குறள் 1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை

**மு.வ உரை**: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

**கலைஞர் உரை**: எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்

**Couplet**: For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground

**English Explanation**: If the farmer's hands are slackened, even the ascetic state will fail

**Transliteration**: Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum Vittemen Paarkkum Nilai

உழவு
குறள் 1037

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

**மு.வ உரை**: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

**சாலமன் பாப்பையா உரை**: உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

**கலைஞர் உரை**: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்

**Couplet**: Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure

**English Explanation**: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure

**Transliteration**: Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum Ventaadhu Saalap Patum

உழவு
குறள் 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

**மு.வ உரை**: ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

**கலைஞர் உரை**: உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது

**Couplet**: To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now

**English Explanation**: Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)

**Transliteration**: Erinum Nandraal Eruvitudhal Kattapin Neerinum Nandradhan Kaappu

உழவு
குறள் 1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்

**மு.வ உரை**: நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

**கலைஞர் உரை**: உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்

**Couplet**: When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry mood

**English Explanation**: If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure

**Transliteration**: Sellaan Kizhavan Iruppin Nilampulandhu Illaalin Ooti Vitum

உழவு
குறள் 1040

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

**மு.வ உரை**: எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

**கலைஞர் உரை**: வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்

**Couplet**: The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty

**English Explanation**: The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life

**Transliteration**: Ilamendru Asaii Iruppaaraik Kaanin Nilamennum Nallaal Nakum

நல்குரவு
குறள் 1041

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

**மு.வ உரை**: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

**கலைஞர் உரை**: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை

**Couplet**: You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone

**English Explanation**: There is nothing that afflicts (one) like poverty

**Transliteration**: Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin Inmaiye Innaa Thadhu

நல்குரவு
குறள் 1042

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்

**மு.வ உரை**: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

**கலைஞர் உரை**: பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது

**Couplet**: Malefactor matchless! poverty destroys This world's and the next world's joys

**English Explanation**: When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)

**Transliteration**: Inmai Enavoru Paavi Marumaiyum Immaiyum Indri Varum

நல்குரவு
குறள் 1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை

**மு.வ உரை**: வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

**கலைஞர் உரை**: ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்

**Couplet**: Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fame

**English Explanation**: Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech

**Transliteration**: Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka Nalkuravu Ennum Nasai

நல்குரவு
குறள் 1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்

**மு.வ உரை**: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

**கலைஞர் உரை**: இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்

**Couplet**: From penury will spring, 'mid even those of noble race, Oblivion that gives birth to words that bring disgrace

**English Explanation**: Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words

**Transliteration**: Irpirandhaar Kanneyum Inmai Ilivandha Sorpirakkum Sorvu Tharum

நல்குரவு
குறள் 1045

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்

**மு.வ உரை**: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

**கலைஞர் உரை**: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்

**Couplet**: From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow

**English Explanation**: The misery of poverty brings in its train many (more) miseries

**Transliteration**: Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith Thunpangal Sendru Patum

நல்குரவு
குறள் 1046

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

**மு.வ உரை**: நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

**கலைஞர் உரை**: அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்

**Couplet**: Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away

**English Explanation**: The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression

**Transliteration**: Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar Sorporul Sorvu Patum

நல்குரவு
குறள் 1047

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்

**மு.வ உரை**: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

**சாலமன் பாப்பையா உரை**: நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

**கலைஞர் உரை**: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்

**Couplet**: From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face

**English Explanation**: He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother

**Transliteration**: Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum Piranpola Nokkap Patum

நல்குரவு
குறள் 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

**மு.வ உரை**: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

**சாலமன் பாப்பையா உரை**: நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

**கலைஞர் உரை**: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்

**Couplet**: And will it come today as yesterday, The grief of want that eats my soul away

**English Explanation**: Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

**Transliteration**: Indrum Varuvadhu Kollo Nerunalum Kondradhu Polum Nirappu

நல்குரவு
குறள் 1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது

**மு.வ உரை**: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

**சாலமன் பாப்பையா உரை**: யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

**கலைஞர் உரை**: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்

**Couplet**: Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose

**English Explanation**: One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty

**Transliteration**: Neruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu Aridhu

நல்குரவு
குறள் 1050

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

**மு.வ உரை**: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

**கலைஞர் உரை**: ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு

**Couplet**: Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to die

**English Explanation**: The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water

**Transliteration**: Thuppura Villaar Thuvarath Thuravaamai Uppirkum Kaatikkum Kootru

இரவு
குறள் 1051

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

**மு.வ உரை**: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

**கலைஞர் உரை**: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல

**Couplet**: When those you find from whom 'tis meet to ask,- for aid apply; Theirs is the sin, not yours, if they the gift deny

**English Explanation**: If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours

**Transliteration**: Irakka Iraththakkaark Kaanin Karappin Avarpazhi Thampazhi Andru

இரவு
குறள் 1052

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

**மு.வ உரை**: இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

**கலைஞர் உரை**: வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்

**Couplet**: Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receive

**English Explanation**: Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)

**Transliteration**: Inpam Oruvarku Iraththal Irandhavai Thunpam Uraaa Varin

இரவு
குறள் 1053

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து

**மு.வ உரை**: ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

**கலைஞர் உரை**: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்

**Couplet**: The men who nought deny, but know what's due, before their face To stand as suppliants affords especial grace

**English Explanation**: There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)

**Transliteration**: Karappilaa Nenjin Katanarivaar Munnindru Irappumo Reer Utaiththu

இரவு
குறள் 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

**மு.வ உரை**: உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

**சாலமன் பாப்பையா உரை**: ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

**கலைஞர் உரை**: இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்

**Couplet**: Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream

**English Explanation**: To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

**Transliteration**: Iraththalum Eedhale Polum Karaththal Kanavilum Thetraadhaar Maattu

இரவு
குறள் 1055

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் 
றிரப்பவர் மேற்கொள் வது

**மு.வ உரை**: ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

**சாலமன் பாப்பையா உரை**: கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

**கலைஞர் உரை**: உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்

**Couplet**: Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray

**English Explanation**: As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them

**Transliteration**: Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru Irappavar Merkol Vadhu

இரவு
குறள் 1056

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்

**மு.வ உரை**: உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

**சாலமன் பாப்பையா உரை**: இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

**கலைஞர் உரை**: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்

**Couplet**: It those you find from evil of 'denial' free, At once all plague of poverty will flee

**English Explanation**: All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing

**Transliteration**: Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai Ellaam Orungu Ketum

இரவு
குறள் 1057

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து

**மு.வ உரை**: இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

**கலைஞர் உரை**: இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்

**Couplet**: If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joy

**English Explanation**: Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy

**Transliteration**: Ikazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam Ullul Uvappadhu Utaiththu

இரவு
குறள் 1058

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று

**மு.வ உரை**: இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

**கலைஞர் உரை**: வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை

**Couplet**: If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go

**English Explanation**: If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet

**Transliteration**: Irappaarai Illaayin Eernganmaa Gnaalam Marappaavai Sendruvan Thatru

இரவு
குறள் 1059

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை

**மு.வ உரை**: பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?

**கலைஞர் உரை**: இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்

**Couplet**: What glory will there be to men of generous soul, When none are found to love the askers' role

**English Explanation**: What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them)

**Transliteration**: Eevaarkan Ennuntaam Thotram Irandhukol Mevaar Ilaaak Katai

இரவு
குறள் 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

**மு.வ உரை**: இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

**கலைஞர் உரை**: இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே

**Couplet**: Askers refused from wrath must stand aloof; The plague of poverty itself is ample proof

**English Explanation**: He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing)

**Transliteration**: Irappaan Vekulaamai Ventum Nirappitumpai Thaaneyum Saalum Kari

இரவச்சம்
குறள் 1061

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்

**மு.வ உரை**: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

**கலைஞர் உரை**: இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்

**Couplet**: Ten million-fold 'tis greater gain, asking no alms to live, Even from those, like eyes in worth, who nought concealing gladly give

**English Explanation**: Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good

**Transliteration**: Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum Iravaamai Koti Urum

இரவச்சம்
குறள் 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

**மு.வ உரை**: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

**சாலமன் பாப்பையா உரை**: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

**கலைஞர் உரை**: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்

**Couplet**: If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so

**English Explanation**: If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish

**Transliteration**: Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu Ketuka Ulakiyatri Yaan

இரவச்சம்
குறள் 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்

**மு.வ உரை**: வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

**கலைஞர் உரை**: வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை

**Couplet**: Nothing is harder than the hardness that will say, 'The plague of penury by asking alms we'll drive away.'

**English Explanation**: There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working)

**Transliteration**: Inmai Itumpai Irandhudheer Vaamennum Vanmaiyin Vanpaatta Thil

இரவச்சம்
குறள் 1064

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு

**மு.வ உரை**: வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

**கலைஞர் உரை**: வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது

**Couplet**: Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth

**English Explanation**: Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution

**Transliteration**: Itamellaam Kollaath Thakaiththe Itamillaak Kaalum Iravollaach Chaalpu

இரவச்சம்
குறள் 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்

**மு.வ உரை**: தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

**கலைஞர் உரை**: கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

**Couplet**: Nothing is sweeter than to taste the toil-won cheer, Though mess of pottage as tasteless as the water clear

**English Explanation**: Even thin gruel is ambrosia to him who has obtained it by labour

**Transliteration**: Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu Unnalin Oonginiya Thil

இரவச்சம்
குறள் 1066

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்

**மு.வ உரை**: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

**கலைஞர் உரை**: தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை

**Couplet**: E'en if a draught of water for a cow you ask, Nought's so distasteful to the tongue as beggar's task

**English Explanation**: There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow

**Transliteration**: Aavirku Neerendru Irappinum Naavirku Iravin Ilivandha Thil

இரவச்சம்
குறள் 1067

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று

**மு.வ உரை**: இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

**சாலமன் பாப்பையா உரை**: பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

**கலைஞர் உரை**: கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்

**Couplet**: One thing I beg of beggars all, 'If beg ye may, Of those who hide their wealth, beg not, I pray.'

**English Explanation**: I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."

**Transliteration**: Irappan Irappaarai Ellaam Irappin Karappaar Iravanmin Endru

இரவச்சம்
குறள் 1068

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்

**மு.வ உரை**: இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

**கலைஞர் உரை**: இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்

**Couplet**: The fragile bark of beggary Wrecked on denial's rock will lie

**English Explanation**: The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal

**Transliteration**: Iravennum Emaappil Thoni Karavennum Paardhaakkap Pakku Vitum

இரவச்சம்
குறள் 1069

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

**மு.வ உரை**: இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

**கலைஞர் உரை**: இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது

**Couplet**: The heart will melt away at thought of beggary, With thought of stern repulse 'twill perish utterly

**English Explanation**: To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it

**Transliteration**: Iravulla Ullam Urukum Karavulla Ulladhooum Indrik Ketum

இரவச்சம்
குறள் 1070

கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்

**மு.வ உரை**: இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?

**கலைஞர் உரை**: இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?

**Couplet**: E'en as he asks, the shamefaced asker dies; Where shall his spirit hide who help denies

**English Explanation**: Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?

**Transliteration**: Karappavarkku Yaangolikkum Kollo Irappavar Sollaatap Poom Uyir

கயமை
குறள் 1071

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்

**மு.வ உரை**: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

**கலைஞர் உரை**: குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்

**Couplet**: The base resemble men in outward form, I ween; But counterpart exact to them I've never seen

**English Explanation**: The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)

**Transliteration**: Makkale Polvar Kayavar Avaranna Oppaari Yaanganta Thil

கயமை
குறள் 1072

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்

**மு.வ உரை**: நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.

**கலைஞர் உரை**: எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!

**Couplet**: Than those of grateful heart the base must luckier be, Their minds from every anxious thought are free

**English Explanation**: The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good)

**Transliteration**: Nandrari Vaarir Kayavar Thiruvutaiyar Nenjaththu Avalam Ilar

கயமை
குறள் 1073

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

**மு.வ உரை**: கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

**கலைஞர் உரை**: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்

**Couplet**: The base are as the Gods; they too Do ever what they list to do

**English Explanation**: The base resemble the Gods; for the base act as they like

**Transliteration**: Thevar Anaiyar Kayavar Avarundhaam Mevana Seydhozhuka Laan

கயமை
குறள் 1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

**மு.வ உரை**: கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

**கலைஞர் உரை**: பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்

**Couplet**: When base men those behold of conduct vile, They straight surpass them, and exulting smile

**English Explanation**: The base feels proud when he sees persons whose acts meaner than his own

**Transliteration**: Akappatti Aavaaraik Kaanin Avarin Mikappattuch Chemmaakkum Keezh

கயமை
குறள் 1075

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது

**மு.வ உரை**: கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

**கலைஞர் உரை**: தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்

**Couplet**: Fear is the base man's virtue; if that fail, Intense desire some little may avail

**English Explanation**: (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent

**Transliteration**: Achchame Keezhkaladhu Aasaaram Echcham Avaavuntel Untaam Siridhu

கயமை
குறள் 1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்

**மு.வ உரை**: கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

**கலைஞர் உரை**: மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்

**Couplet**: The base are like the beaten drum; for, when they hear The sound the secret out in every neighbour's ear

**English Explanation**: The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard

**Transliteration**: Araiparai Annar Kayavardhaam Ketta Maraipirarkku Uyththuraikka Laan

கயமை
குறள் 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு

**மு.வ உரை**: கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

**கலைஞர் உரை**: கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்

**Couplet**: From off their moistened hands no clinging grain they shake, Unless to those with clenched fist their jaws who break

**English Explanation**: The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists

**Transliteration**: Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum Koonkaiyar Allaa Thavarkku

கயமை
குறள் 1078

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்

**மு.வ உரை**: அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

**கலைஞர் உரை**: குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்

**Couplet**: The good to those will profit yield fair words who use; The base, like sugar-cane, will profit those who bruise

**English Explanation**: The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death

**Transliteration**: Sollap Payanpatuvar Saandror Karumpupol Kollap Payanpatum Keezh

கயமை
குறள் 1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

**மு.வ உரை**: கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

**சாலமன் பாப்பையா உரை**: பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

**கலைஞர் உரை**: ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்

**Couplet**: If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace

**English Explanation**: The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food

**Transliteration**: Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel Vatukkaana Vatraakum Keezh

கயமை
குறள் 1080

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து

**மு.வ உரை**: கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

**சாலமன் பாப்பையா உரை**: தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?

**கலைஞர் உரை**: ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்

**Couplet**: For what is base man fit, if griefs assail? Himself to offer, there and then, for sale

**English Explanation**: The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?

**Transliteration**: Etrir Kuriyar Kayavarondru Utrakkaal Vitrarku Uriyar Viraindhu

தகை அணங்குறுத்தல்
குறள் 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

**மு.வ உரை**: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

**சாலமன் பாப்பையா உரை**: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

**கலைஞர் உரை**: எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்

**Couplet**: Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear, Is she a maid of human kind? All wildered is my mind

**English Explanation**: Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed

**Transliteration**: Anangukol Aaimayil Kollo Kananguzhai Maadharkol Maalum En Nenju

தகை அணங்குறுத்தல்
குறள் 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

**மு.வ உரை**: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

**கலைஞர் உரை**: அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது

**Couplet**: She of the beaming eyes, To my rash look her glance replies, As if the matchless goddess' hand Led forth an armed band

**English Explanation**: This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me

**Transliteration**: Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu Thaanaikkon Tanna Thutaiththu

தகை அணங்குறுத்தல்
குறள் 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

**மு.வ உரை**: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது

**சாலமன் பாப்பையா உரை**: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

**கலைஞர் உரை**: கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை

**Couplet**: Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyes

**English Explanation**: I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities

**Transliteration**: Pantariyen Kootren Padhanai Iniyarindhen Pentakaiyaal Peramark Kattu

தகை அணங்குறுத்தல்
குறள் 1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

**மு.வ உரை**: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

**சாலமன் பாப்பையா உரை**: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

**கலைஞர் உரை**: பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?

**Couplet**: In sweet simplicity, A woman's gracious form hath she; But yet those eyes, that drink my life, Are with the form at strife

**English Explanation**: These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity

**Transliteration**: Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip Pedhaikku Amarththana Kan

தகை அணங்குறுத்தல்
குறள் 1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

**மு.வ உரை**: எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

**சாலமன் பாப்பையா உரை**: என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

**கலைஞர் உரை**: உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே

**Couplet**: The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams? Or fawn's shy glance? All three appear In form of maiden here

**English Explanation**: Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?

**Transliteration**: Kootramo Kanno Pinaiyo Matavaral Nokkamim Moondrum Utaiththu

தகை அணங்குறுத்தல்
குறள் 1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

**மு.வ உரை**: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

**சாலமன் பாப்பையா உரை**: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

**கலைஞர் உரை**: புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா

**Couplet**: If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now; The shafts that wound this trembling heart Her eyes no more would dart

**English Explanation**: Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows

**Transliteration**: Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar Seyyala Manival Kan

தகை அணங்குறுத்தல்
குறள் 1087

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

**மு.வ உரை**: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

**கலைஞர் உரை**: மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது

**Couplet**: As veil o'er angry eyes Of raging elephant that lies, The silken cincture's folds invest This maiden's panting breast

**English Explanation**: The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant

**Transliteration**: Kataaak Kalitrinmer Katpataam Maadhar Pataaa Mulaimel Thukil

தகை அணங்குறுத்தல்
குறள் 1088

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

**மு.வ உரை**: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

**சாலமன் பாப்பையா உரை**: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

**கலைஞர் உரை**: களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!

**Couplet**: Ah woe is me my might, That awed my foemen in the fight, By lustre of that beaming brow Borne down, lies broken now

**English Explanation**: On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless

**Transliteration**: Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul Nannaarum Utkumen Peetu

தகை அணங்குறுத்தல்
குறள் 1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து

**மு.வ உரை**: பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

**சாலமன் பாப்பையா உரை**: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?

**கலைஞர் உரை**: பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?

**Couplet**: Like tender fawn's her eye; Clothed on is she with modesty; What added beauty can be lent; By alien ornament

**English Explanation**: Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

**Transliteration**: Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku Aniyevano Edhila Thandhu

தகை அணங்குறுத்தல்
குறள் 1090

உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

**மு.வ உரை**: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

**சாலமன் பாப்பையா உரை**: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

**கலைஞர் உரை**: மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

**Couplet**: The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine; But love hath rare felicity For those that only see

**English Explanation**: Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at

**Transliteration**: Untaarkan Alladhu Atunaraak Kaamampol Kantaar Makizhseydhal Indru

குறிப்பறிதல்
குறள் 1091

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

**மு.வ உரை**: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

**கலைஞர் உரை**: காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை

**Couplet**: A double witchery have glances of her liquid eye; One glance is glance that brings me pain; the other heals again

**English Explanation**: There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof

**Transliteration**: Irunokku Ivalunkan Ulladhu Orunokku Noinokkon Rannoi Marundhu

குறிப்பறிதல்
குறள் 1092

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

**மு.வ உரை**: கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

**கலைஞர் உரை**: கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

**Couplet**: The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delight

**English Explanation**: A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)

**Transliteration**: Kankalavu Kollum Sirunokkam Kaamaththil Sempaakam Andru Peridhu

குறிப்பறிதல்
குறள் 1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

**மு.வ உரை**: என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

**கலைஞர் உரை**: கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது

**Couplet**: She looked, and looking drooped her head: On springing shoot of love 'its water shed

**English Explanation**: She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love

**Transliteration**: Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval Yaappinul Attiya Neer

குறிப்பறிதல்
குறள் 1094

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

**மு.வ உரை**: யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

**கலைஞர் உரை**: நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

**Couplet**: I look on her: her eyes are on the ground the while: I look away: she looks on me with timid smile

**English Explanation**: When I look, she looks down; when I do not, she looks and smiles gently

**Transliteration**: Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal Thaannokki Mella Nakum

குறிப்பறிதல்
குறள் 1095

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

**மு.வ உரை**: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

**கலைஞர் உரை**: அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்

**Couplet**: She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayed

**English Explanation**: She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles

**Transliteration**: Kurikkontu Nokkaamai Allaal Orukan Sirakkaniththaal Pola Nakum

குறிப்பறிதல்
குறள் 1096

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

**மு.வ உரை**: புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

**கலைஞர் உரை**: காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்

**Couplet**: Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known

**English Explanation**: Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood

**Transliteration**: Uraaa Thavarpol Solinum Seraaarsol Ollai Unarap Patum

குறிப்பறிதல்
குறள் 1097

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

**மு.வ உரை**: பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

**கலைஞர் உரை**: பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்

**Couplet**: The slighting words that anger feign, while eyes their love reveal Are signs of those that love, but would their love conceal

**English Explanation**: Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers

**Transliteration**: Seraaach Chirusollum Setraarpol Nokkum Uraaarpondru Utraar Kurippu

குறிப்பறிதல்
குறள் 1098

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்

**மு.வ உரை**: யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

**கலைஞர் உரை**: நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்

**Couplet**: I gaze, the tender maid relents the while; And, oh the matchless grace of that soft smile

**English Explanation**: When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me

**Transliteration**: Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap Pasaiyinal Paiya Nakum

குறிப்பறிதல்
குறள் 1099

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

**மு.வ உரை**: புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

**கலைஞர் உரை**: காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்

**Couplet**: The look indifferent, that would its love disguise, Is only read aright by lovers' eyes

**English Explanation**: Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers

**Transliteration**: Edhilaar Polap Podhunokku Nokkudhal Kaadhalaar Kanne Ula

குறிப்பறிதல்
குறள் 1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

**மு.வ உரை**: கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

**கலைஞர் உரை**: ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன

**Couplet**: When eye to answering eye reveals the tale of love, All words that lips can say must useless prove

**English Explanation**: The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

**Transliteration**: Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal Enna Payanum Ila

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

**மு.வ உரை**: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

**சாலமன் பாப்பையா உரை**: விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

**கலைஞர் உரை**: வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன

**Couplet**: All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give, In this resplendent armlets-bearing damsel live

**English Explanation**: The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women)

**Transliteration**: Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum Ondhoti Kanne Ula

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1102

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து

**மு.வ உரை**: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

**சாலமன் பாப்பையா உரை**: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

**கலைஞர் உரை**: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்

**Couplet**: Disease and medicine antagonists we surely see; This maid, to pain she gives, herself is remedy

**English Explanation**: The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure

**Transliteration**: Pinikku Marundhu Piraman Aniyizhai Thannoikkuth Thaane Marundhu

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

**மு.வ உரை**: தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

**கலைஞர் உரை**: தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

**Couplet**: Than rest in her soft arms to whom the soul is giv'n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven

**English Explanation**: Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

**Transliteration**: Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol Thaamaraik Kannaan Ulaku

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1104

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

**மு.வ உரை**: நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

**கலைஞர் உரை**: நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்

**Couplet**: Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtain

**English Explanation**: From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

**Transliteration**: Neengin Theru�um Kurukungaal Thannennum Theeyaantup Petraal Ival?

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1105

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

**மு.வ உரை**: மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

**கலைஞர் உரை**: விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன

**Couplet**: In her embrace, whose locks with flowery wreaths are bound, Each varied form of joy the soul can wish is found

**English Explanation**: Each varied form of joy the soul can wish is found

**Transliteration**: Vetta Pozhudhin Avaiyavai Polume Thottaar Kadhuppinaal Thol

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1106

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்

**மு.வ உரை**: பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

**கலைஞர் உரை**: இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்

**Couplet**: Ambrosia are the simple maiden's arms; when I attain Their touch, my withered life puts forth its buds again

**English Explanation**: The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them

**Transliteration**: Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku Amizhdhin Iyandrana Thol

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1107

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

**மு.வ உரை**: அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

**கலைஞர் உரை**: தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது

**Couplet**: As when one eats from household store, with kindly grace Sharing his meal: such is this golden maid's embrace

**English Explanation**: The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity)

**Transliteration**: Thammil Irundhu Thamadhupaaththu Untatraal Ammaa Arivai Muyakku

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1108

வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

**மு.வ உரை**: காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

**கலைஞர் உரை**: காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்

**Couplet**: Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds

**English Explanation**: To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze

**Transliteration**: Veezhum Iruvarkku Inidhe Valiyitai Pozhap Pataaa Muyakku

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1109

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்

**மு.வ உரை**: ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!

**கலைஞர் உரை**: ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்

**Couplet**: The jealous variance, the healing of the strife, reunion gained: These are the fruits from wedded love obtained

**English Explanation**: Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust

**Transliteration**: Ootal Unardhal Punardhal Ivaikaamam Kootiyaar Petra Payan

புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1110

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

**மு.வ உரை**: செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

**கலைஞர் உரை**: மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது

**Couplet**: The more men learn, the more their lack of learning they detect; 'Tis so when I approach the maid with gleaming jewels decked

**English Explanation**: As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)

**Transliteration**: Aridhoru Ariyaamai Kantatraal Kaamam Seridhorum Seyizhai Maattu

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

**மு.வ உரை**: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

**சாலமன் பாப்பையா உரை**: அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!

**கலைஞர் உரை**: அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி

**Couplet**: O flower of the sensitive plant! than thee More tender's the maiden beloved by me

**English Explanation**: May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you

**Transliteration**: Nanneerai Vaazhi Anichchame Ninninum Menneeral Yaamveezh Paval

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1112

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

**மு.வ உரை**: நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)

**கலைஞர் உரை**: மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது

**Couplet**: You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul, That many may see; it was surely some folly that over you stole

**English Explanation**: O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them

**Transliteration**: Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan Palarkaanum Poovokkum Endru

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1113

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

**மு.வ உரை**: மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

**சாலமன் பாப்பையா உரை**: மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!

**கலைஞர் உரை**: முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!

**Couplet**: As tender shoot her frame; teeth, pearls; around her odours blend; Darts are the eyes of her whose shoulders like the bambu bend

**English Explanation**: The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,

**Transliteration**: Murimeni Muththam Muruval Verinaatram Velunkan Veyththo Lavatku

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1114

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

**மு.வ உரை**: குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

**சாலமன் பாப்பையா உரை**: குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

**கலைஞர் உரை**: என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்

**Couplet**: The lotus, seeing her, with head demiss, the ground would eye, And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'

**English Explanation**: If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."

**Transliteration**: Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum Maanizhai Kannovvem Endru

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

**மு.வ உரை**: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

**சாலமன் பாப்பையா உரை**: என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

**கலைஞர் உரை**: அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்

**Couplet**: The flowers of the sensitive plant as a girdle around her she placed; The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist

**English Explanation**: No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem

**Transliteration**: Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku Nalla Pataaa Parai

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

**மு.வ உரை**: விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!

**கலைஞர் உரை**: மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன

**Couplet**: The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears

**English Explanation**: The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance

**Transliteration**: Madhiyum Matandhai Mukanum Ariyaa Padhiyin Kalangiya Meen

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

**மு.வ உரை**: குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

**சாலமன் பாப்பையா உரை**: நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

**கலைஞர் உரை**: தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

**Couplet**: In moon, that waxing waning shines, as sports appear, Are any spots discerned in face of maiden here

**English Explanation**: Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

**Transliteration**: Aruvaai Niraindha Avirmadhikkup Pola Maruvunto Maadhar Mukaththu

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1118

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

**மு.வ உரை**: திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

**சாலமன் பாப்பையா உரை**: நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

**கலைஞர் உரை**: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

**Couplet**: Farewell, O moon! If that thine orb could shine Bright as her face, thou shouldst be love of mine

**English Explanation**: If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

**Transliteration**: Maadhar Mukampol Olivita Vallaiyel Kaadhalai Vaazhi Madhi

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1119

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

**மு.வ உரை**: திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

**சாலமன் பாப்பையா உரை**: நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

**கலைஞர் உரை**: நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்

**Couplet**: If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me, Shine for my eyes alone, O moon, shine not for all to see

**English Explanation**: O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all

**Transliteration**: Malaranna Kannaal Mukamoththi Yaayin Palarkaanath Thondral Madhi

நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

**மு.வ உரை**: அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

**சாலமன் பாப்பையா உரை**: உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

**கலைஞர் உரை**: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை

**Couplet**: The flower of the sensitive plant, and the down on the swan's white breast, As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed

**English Explanation**: The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji

**Transliteration**: Anichchamum Annaththin Thooviyum Maadhar Atikku Nerunjip Pazham

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்

**மு.வ உரை**: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!

**கலைஞர் உரை**: இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்

**Couplet**: The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow

**English Explanation**: The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey

**Transliteration**: Paalotu Thenkalan Thatre Panimozhi Vaaleyiru Ooriya Neer

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1122

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு

**மு.வ உரை**: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

**சாலமன் பாப்பையா உரை**: என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

**கலைஞர் உரை**: உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு

**Couplet**: Between this maid and me the friendship kind Is as the bonds that soul and body bind

**English Explanation**: The love between me and this damsel is like the union of body and soul

**Transliteration**: Utampotu Uyiritai Ennamar Ranna Matandhaiyotu Emmitai Natpu

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1123

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்

**மு.வ உரை**: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

**சாலமன் பாப்பையா உரை**: என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

**கலைஞர் உரை**: நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!

**Couplet**: For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begone

**English Explanation**: O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved

**Transliteration**: Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum Thirunudharku Illai Itam

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1124

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

**மு.வ உரை**: ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

**சாலமன் பாப்பையா உரை**: என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

**கலைஞர் உரை**: ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்

**Couplet**: Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I die

**English Explanation**: My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me

**Transliteration**: Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal Adharkannal Neengum Itaththu

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1125

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

**மு.வ உரை**: போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.

**சாலமன் பாப்பையா உரை**: ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

**கலைஞர் உரை**: ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு

**Couplet**: I might recall, if I could once forget; but from my heart Her charms fade not, whose eyes gleam like the warrior's dart

**English Explanation**: If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her (Thus says he to her maid)

**Transliteration**: Ulluvan Manyaan Marappin Marappariyen Ollamark Kannaal Kunam

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1126

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்

**மு.வ உரை**: எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

**சாலமன் பாப்பையா உரை**: என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

**கலைஞர் உரை**: காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்

**Couplet**: My loved one's subtle form departs not from my eyes; I wink them not, lest I should pain him where he lies

**English Explanation**: My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal

**Transliteration**: Kannullin Pokaar Imaippin Parukuvaraa Nunniyarem Kaadha Lavar

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து

**மு.வ உரை**: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

**சாலமன் பாப்பையா உரை**: என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

**கலைஞர் உரை**: காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

**Couplet**: My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hide

**English Explanation**: As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself

**Transliteration**: Kannullaar Kaadha Lavaraakak Kannum Ezhudhem Karappaakku Arindhu

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1128

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து

**மு.வ உரை**: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

**சாலமன் பாப்பையா உரை**: என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

**கலைஞர் உரை**: சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்

**Couplet**: Within my heart my lover dwells; from food I turn That smacks of heat, lest he should feel it burn

**English Explanation**: As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him

**Transliteration**: Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal Anjudhum Vepaak Karindhu

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1129

இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்

**மு.வ உரை**: கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

**கலைஞர் உரை**: கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்

**Couplet**: I fear his form to hide, nor close my eyes: 'Her love estranged is gone!' the village cries

**English Explanation**: I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving

**Transliteration**: Imaippin Karappaakku Arival Anaiththirke Edhilar Ennum Iv Voor

காதற் சிறப்புரைத்தல்
குறள் 1130

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்

**மு.வ உரை**: காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

**கலைஞர் உரை**: காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு

**Couplet**: Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village cries

**English Explanation**: My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar

**Transliteration**: Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar Edhilar Ennum Iv Voor

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1131

காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி

**மு.வ உரை**: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

**கலைஞர் உரை**: காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை

**Couplet**: To those who 've proved love's joy, and now afflicted mourn, Except the helpful 'horse of palm', no other strength remains

**English Explanation**: To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse

**Transliteration**: Kaamam Uzhandhu Varundhinaarkku Emam Matalalladhu Illai Vali

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

**மு.வ உரை**: (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

**சாலமன் பாப்பையா உரை**: காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

**கலைஞர் உரை**: எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்

**Couplet**: My body and my soul, that can no more endure, Will lay reserve aside, and mount the 'horse of palm'

**English Explanation**: Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse

**Transliteration**: Nonaa Utampum Uyirum Matalerum Naaninai Neekki Niruththu

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

**மு.வ உரை**: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

**சாலமன் பாப்பையா உரை**: நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

**கலைஞர் உரை**: நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

**Couplet**: I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'

**English Explanation**: Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful

**Transliteration**: Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen Kaamutraar Erum Matal

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1134

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

**மு.வ உரை**: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

**கலைஞர் உரை**: காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

**Couplet**: Love's rushing tide will sweep away the raft Of seemly manliness and shame combined

**English Explanation**: The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust

**Transliteration**: Kaamak Katumpunal Uykkum Naanotu Nallaanmai Ennum Punai

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1135

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

**மு.வ உரை**: மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

**சாலமன் பாப்பையா உரை**: மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

**கலைஞர் உரை**: மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்

**Couplet**: The maid that slender armlets wears, like flowers entwined, Has brought me 'horse of palm,' and pangs of eventide

**English Explanation**: She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night

**Transliteration**: Thotalaik Kurundhoti Thandhaal Matalotu Maalai Uzhakkum Thuyar

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1136

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்

**மு.வ உரை**: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

**கலைஞர் உரை**: காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்

**Couplet**: Of climbing 'horse of palm' in midnight hour, I think; My eyes know no repose for that same simple maid

**English Explanation**: Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse

**Transliteration**: Mataloordhal Yaamaththum Ulluven Mandra Patalollaa Pedhaikken Kan

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்

**மு.வ உரை**: கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

**கலைஞர் உரை**: கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

**Couplet**: There's nought of greater worth than woman's long-enduring soul, Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'

**English Explanation**: There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust

**Transliteration**: Katalanna Kaamam Uzhandhum Mataleraap Pennin Perundhakka Thil

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1138

நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்

**மு.வ உரை**: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.

**சாலமன் பாப்பையா உரை**: இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

**கலைஞர் உரை**: பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்

**Couplet**: In virtue hard to move, yet very tender, too, are we; Love deems not so, would rend the veil, and court publicity

**English Explanation**: Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)

**Transliteration**: Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam Maraiyirandhu Mandru Patum

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1139

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

**மு.வ உரை**: அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

**கலைஞர் உரை**: என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

**Couplet**: 'There's no one knows my heart,' so says my love, And thus, in public ways, perturbed will rove

**English Explanation**: And thus, in public ways, perturbed will rove

**Transliteration**: Arikilaar Ellaarum Endreen Kaamam Marukin Marukum Maruntu

நாணுத் துறவுரைத்தல்
குறள் 1140

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு

**மு.வ உரை**: யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

**கலைஞர் உரை**: காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்

**Couplet**: Before my eyes the foolish make a mock of me, Because they ne'er endured the pangs I now must drie

**English Explanation**: Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered

**Transliteration**: Yaamkannin Kaana Nakupa Arivillaar Yaampatta Thaampataa Aaru

அலர் அறிவுறுத்தல்
குறள் 1141

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

**மு.வ உரை**: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

**கலைஞர் உரை**: எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்

**Couplet**: By this same rumour's rise, my precious life stands fast; Good fortune grant the many know this not

**English Explanation**: My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of

**Transliteration**: Alarezha Aaruyir Na�rkum Adhanaip Palarariyaar Paakkiyath Thaal

அலர் அறிவுறுத்தல்
குறள் 1142

மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்

**மு.வ உரை**: மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

**சாலமன் பாப்பையா உரை**: மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

**கலைஞர் உரை**: அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது

**Couplet**: The village hath to us this rumour giv'n, that makes her mine; Unweeting all the rareness of the maid with flower-like eyne

**English Explanation**: Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me

**Transliteration**: Malaranna Kannaal Arumai Ariyaadhu Alaremakku Eendhadhiv Voor

அலர் அறிவுறுத்தல்
குறள் 1143

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

**மு.வ உரை**: ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

**கலைஞர் உரை**: எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

**Couplet**: The rumour spread within the town, is it not gain to me? It is as though that were obtained that may not be

**English Explanation**: Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)

**Transliteration**: Uraaadho Oorarindha Kelavai Adhanaip Peraaadhu Petranna Neerththu

அலர் அறிவுறுத்தல்
குறள் 1144

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

**மு.வ உரை**: எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

**கலைஞர் உரை**: ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்

**Couplet**: The rumour rising makes my love to rise; My love would lose its power and languish otherwise

**English Explanation**: Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away

**Transliteration**: Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel Thavvennum Thanmai Izhandhu

அலர் அறிவுறுத்தல்
குறள் 1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

**மு.வ உரை**: காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

**கலைஞர் உரை**: காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்

**Couplet**: The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to me

**English Explanation**: As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour

**Transliteration**: Kaliththorum Kalluntal Vettatraal Kaamam Velippatun Thorum Inidhu

அலர் அறிவுறுத்தல்
குறள் 1146

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

**மு.வ உரை**: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

**சாலமன் பாப்பையா உரை**: நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

**கலைஞர் உரை**: காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது

**Couplet**: I saw him but one single day: rumour spreads soon As darkness, when the dragon seizes on the moon

**English Explanation**: It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent

**Transliteration**: Kantadhu Mannum Orunaal Alarmannum Thingalaip Paampukon Tatru

அலர் அறிவுறுத்தல்
குறள் 1147

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்

**மு.வ உரை**: இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

**கலைஞர் உரை**: ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது

**Couplet**: My anguish grows apace: the town's report Manures it; my mother's word doth water it

**English Explanation**: This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

**Transliteration**: Ooravar Kelavai Eruvaaka Annaisol Neeraaka Neelumin Noi

அலர் அறிவுறுத்தல்
குறள் 1148

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்

**மு.வ உரை**: அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

**கலைஞர் உரை**: ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்

**Couplet**: With butter-oil extinguish fire! 'Twill prove Harder by scandal to extinguish love

**English Explanation**: To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee

**Transliteration**: Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal Kaamam Nudhuppem Enal

அலர் அறிவுறுத்தல்
குறள் 1149

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை

**மு.வ உரை**: அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.

**சாலமன் பாப்பையா உரை**: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?

**கலைஞர் உரை**: உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?

**Couplet**: When he who said 'Fear not!' hath left me blamed, While many shrink, can I from rumour hide ashamed

**English Explanation**: When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal

**Transliteration**: Alarnaana Olvadho Anjalompu Endraar Palarnaana Neeththak Katai

அலர் அறிவுறுத்தல்
குறள் 1150

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர்

**மு.வ உரை**: யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

**கலைஞர் உரை**: யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்

**Couplet**: If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desire

**English Explanation**: The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)

**Transliteration**: Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum Kelavai Etukkumiv Voor

பிரிவு ஆற்றாமை
குறள் 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

**மு.வ உரை**: பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

**சாலமன் பாப்பையா உரை**: என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

**கலைஞர் உரை**: பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்

**Couplet**: If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe

**English Explanation**: If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then

**Transliteration**: Sellaamai Untel Enakkurai Matrunin Valvaravu Vaazhvaark Kurai

பிரிவு ஆற்றாமை
குறள் 1152

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

**மு.வ உரை**: அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

**கலைஞர் உரை**: முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

**Couplet**: It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace

**English Explanation**: His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation

**Transliteration**: Inkan Utaiththavar Paarval Pirivanjum Punkan Utaiththaal Punarvu

பிரிவு ஆற்றாமை
குறள் 1153

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்

**மு.வ உரை**: அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

**கலைஞர் உரை**: பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது

**Couplet**: To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart

**English Explanation**: As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible

**Transliteration**: Aridharo Thetram Arivutaiyaar Kannum Pirivo Ritaththunmai Yaan

பிரிவு ஆற்றாமை
குறள் 1154

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு

**மு.வ உரை**: அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

**சாலமன் பாப்பையா உரை**: என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?

**கலைஞர் உரை**: பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?

**Couplet**: If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word

**English Explanation**: If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

**Transliteration**: Aliththanjal Endravar Neeppin Theliththasol Theriyaarkku Unto Thavaru

பிரிவு ஆற்றாமை
குறள் 1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

**மு.வ உரை**: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

**சாலமன் பாப்பையா உரை**: என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

**கலைஞர் உரை**: காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்

**Couplet**: If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again

**English Explanation**: If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible

**Transliteration**: Ompin Amaindhaar Pirivompal Matravar Neengin Aridhaal Punarvu

பிரிவு ஆற்றாமை
குறள் 1156

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

**மு.வ உரை**: பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

**கலைஞர் உரை**: போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்

**Couplet**: To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to me

**English Explanation**: Is hard, when he could stand, and of departure speak to me

**Transliteration**: Pirivuraikkum Vankannar Aayin Aridhavar Nalkuvar Ennum Nasai

பிரிவு ஆற்றாமை
குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

**மு.வ உரை**: என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

**கலைஞர் உரை**: என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

**Couplet**: The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore

**English Explanation**: Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?

**Transliteration**: Thuraivan Thurandhamai Thootraakol Munkai Iraiiravaa Nindra Valai

பிரிவு ஆற்றாமை
குறள் 1158

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு

**மு.வ உரை**: இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

**சாலமன் பாப்பையா உரை**: உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

**கலைஞர் உரை**: நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது

**Couplet**: 'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell

**English Explanation**: Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover

**Transliteration**: Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum Innaadhu Iniyaarp Pirivu

பிரிவு ஆற்றாமை
குறள் 1159

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

**மு.வ உரை**: நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

**சாலமன் பாப்பையா உரை**: தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

**கலைஞர் உரை**: ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!

**Couplet**: Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove

**English Explanation**: Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

**Transliteration**: Thotirsutin Alladhu Kaamanoi Pola Vitirsutal Aatrumo Thee

பிரிவு ஆற்றாமை
குறள் 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

**மு.வ உரை**: பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

**சாலமன் பாப்பையா உரை**: சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

**கலைஞர் உரை**: காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?

**Couplet**: Sorrow's sadness meek sustaining, Driving sore distress away, Separation uncomplaining Many bear the livelong day

**English Explanation**: As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards

**Transliteration**: Aridhaatri Allalnoi Neekkip Pirivaatrip Pinirundhu Vaazhvaar Palar

படர்மெலிந் திரங்கல்
குறள் 1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்

**மு.வ உரை**: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

**கலைஞர் உரை**: இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

**Couplet**: I would my pain conceal, but see! it surging swells, As streams to those that draw from ever-springing wells

**English Explanation**: I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it

**Transliteration**: Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku Ootruneer Pola Mikum

படர்மெலிந் திரங்கல்
குறள் 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்

**மு.வ உரை**: இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.

**கலைஞர் உரை**: காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை

**Couplet**: I cannot hide this pain of mine, yet shame restrains When I would tell it out to him who caused my pains

**English Explanation**: I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it

**Transliteration**: Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku Uraiththalum Naanuth Tharum

படர்மெலிந் திரங்கல்
குறள் 1163

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து

**மு.வ உரை**: துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

**கலைஞர் உரை**: பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது

**Couplet**: My soul, like porter's pole, within my wearied frame, Sustains a two-fold burthen poised, of love and shame

**English Explanation**: (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them

**Transliteration**: Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen Nonaa Utampin Akaththu

படர்மெலிந் திரங்கல்
குறள் 1164

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

**மு.வ உரை**: காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

**கலைஞர் உரை**: காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை

**Couplet**: A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shore

**English Explanation**: There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with

**Transliteration**: Kaamak Katalmannum Unte Adhuneendhum Emap Punaimannum Il

படர்மெலிந் திரங்கல்
குறள் 1165

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்

**மு.வ உரை**: ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

**சாலமன் பாப்பையா உரை**: இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?

**கலைஞர் உரை**: நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

**Couplet**: Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lower

**English Explanation**: What will they prove when angry tempests lower?

**Transliteration**: Thuppin Evanaavar Mankol Thuyarvaravu Natpinul Aatru Pavar

படர்மெலிந் திரங்கல்
குறள் 1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

**மு.வ உரை**: காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.

**கலைஞர் உரை**: காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது

**Couplet**: A happy love 's sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soul

**English Explanation**: The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater

**Transliteration**: Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal Thunpam Adhanir Peridhu

படர்மெலிந் திரங்கல்
குறள் 1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

**மு.வ உரை**: காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

**கலைஞர் உரை**: நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்

**Couplet**: I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I

**English Explanation**: I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live

**Transliteration**: Kaamak Katumpunal Neendhik Karaikaanen Yaamaththum Yaane Ulen

படர்மெலிந் திரங்கல்
குறள் 1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை

**மு.வ உரை**: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!

**கலைஞர் உரை**: `இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'

**Couplet**: All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps

**English Explanation**: The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion

**Transliteration**: Mannuyir Ellaam Thuyitri Aliththiraa Ennalladhu Illai Thunai

படர்மெலிந் திரங்கல்
குறள் 1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா

**மு.வ உரை**: ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

**சாலமன் பாப்பையா உரை**: இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

**கலைஞர் உரை**: இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது

**Couplet**: More cruel than the cruelty of him, the cruel one, In these sad times are lengthening hours of night I watch alone

**English Explanation**: The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me

**Transliteration**: Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal Netiya Kazhiyum Iraa

படர்மெலிந் திரங்கல்
குறள் 1170

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்

**மு.வ உரை**: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

**கலைஞர் உரை**: காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது

**Couplet**: When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim

**English Explanation**: Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears

**Transliteration**: Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer Neendhala Mannoen Kan

கண் விதுப்பழிதல்
குறள் 1171

கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது

**மு.வ உரை**: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

**சாலமன் பாப்பையா உரை**: தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?

**கலைஞர் உரை**: கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

**Couplet**: They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain

**English Explanation**: As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)

**Transliteration**: Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi Thaamkaatta Yaamkan Tadhu

கண் விதுப்பழிதல்
குறள் 1172

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்

**மு.வ உரை**: ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

**சாலமன் பாப்பையா உரை**: வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?

**கலைஞர் உரை**: விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

**Couplet**: How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away

**English Explanation**: The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)

**Transliteration**: Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap Paidhal Uzhappadhu Evan?

கண் விதுப்பழிதல்
குறள் 1173

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

**மு.வ உரை**: அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

**சாலமன் பாப்பையா உரை**: அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

**கலைஞர் உரை**: தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்

**Couplet**: The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile

**English Explanation**: They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

**Transliteration**: Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum Ithunakath Thakka Thutaiththu

கண் விதுப்பழிதல்
குறள் 1174

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

**மு.வ உரை**: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

**சாலமன் பாப்பையா உரை**: மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

**கலைஞர் உரை**: தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன

**Couplet**: Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedy

**English Explanation**: These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up

**Transliteration**: Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa Uyvilnoi Enkan Niruththu

கண் விதுப்பழிதல்
குறள் 1175

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்

**மு.வ உரை**: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

**கலைஞர் உரை**: கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன

**Couplet**: The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose

**English Explanation**: Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness

**Transliteration**: Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak Kaamanoi Seydhaen Kan

கண் விதுப்பழிதல்
குறள் 1176

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது

**மு.வ உரை**: எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

**சாலமன் பாப்பையா உரை**: எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

**கலைஞர் உரை**: ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!

**Couplet**: Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lie

**English Explanation**: The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delighted

**Transliteration**: Oo Inidhe Emakkinnoi Seydhakan Thaaam Itharpat Tadhu

கண் விதுப்பழிதல்
குறள் 1177

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்

**மு.வ உரை**: அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!

**கலைஞர் உரை**: அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்

**Couplet**: Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him

**English Explanation**: The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears

**Transliteration**: Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu Venti Avarkkanta Kan

கண் விதுப்பழிதல்
குறள் 1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்

**மு.வ உரை**: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

**கலைஞர் உரை**: என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

**Couplet**: Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain

**English Explanation**: He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him

**Transliteration**: Penaadhu Pettaar Ularmanno Matravark Kaanaadhu Amaivila Kan

கண் விதுப்பழிதல்
குறள் 1179

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

**மு.வ உரை**: காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

**கலைஞர் உரை**: இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்

**Couplet**: When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear

**English Explanation**: When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony

**Transliteration**: Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai Aaragnar Utrana Kan

கண் விதுப்பழிதல்
குறள் 1180

மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து

**மு.வ உரை**: அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

**சாலமன் பாப்பையா உரை**: அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

**கலைஞர் உரை**: காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல

**Couplet**: It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plain

**English Explanation**: It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums

**Transliteration**: Maraiperal Ooraarkku Aridhandraal Empol Araiparai Kannaar Akaththu

பசப்புறு பருவரல்
குறள் 1181

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற

**மு.வ உரை**: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

**சாலமன் பாப்பையா உரை**: என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?

**கலைஞர் உரை**: என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?

**Couplet**: I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complain

**English Explanation**: I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow

**Transliteration**: Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven Panpiyaarkku Uraikko Pira

பசப்புறு பருவரல்
குறள் 1182

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

**மு.வ உரை**: அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

**சாலமன் பாப்பையா உரை**: இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

**கலைஞர் உரை**: பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

**Couplet**: 'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes

**English Explanation**: Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person

**Transliteration**: Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen Menimel Oorum Pasappu

பசப்புறு பருவரல்
குறள் 1183

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

**மு.வ உரை**: காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.

**கலைஞர் உரை**: காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்

**Couplet**: Of comeliness and shame he me bereft, While pain and sickly hue, in recompense, he left

**English Explanation**: He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness

**Transliteration**: Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa Noyum Pasalaiyum Thandhu

பசப்புறு பருவரல்
குறள் 1184

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

**மு.வ உரை**: யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

**சாலமன் பாப்பையா உரை**: நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

**கலைஞர் உரை**: யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

**Couplet**: I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray

**English Explanation**: I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful

**Transliteration**: Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal Kallam Piravo Pasappu

பசப்புறு பருவரல்
குறள் 1185

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது

**மு.வ உரை**: அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?

**கலைஞர் உரை**: என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்

**Couplet**: My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home

**English Explanation**: Just as my lover departed then, did not sallowness spread here on my person ?

**Transliteration**: Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen Meni Pasappoor Vadhu

பசப்புறு பருவரல்
குறள் 1186

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

**மு.வ உரை**: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

**சாலமன் பாப்பையா உரை**: விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

**கலைஞர் உரை**: விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது

**Couplet**: As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace

**English Explanation**: Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse

**Transliteration**: Vilakkatram Paarkkum Irulepol Konkan Muyakkatram Paarkkum Pasappu

பசப்புறு பருவரல்
குறள் 1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு

**மு.வ உரை**: தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

**சாலமன் பாப்பையா உரை**: முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

**கலைஞர் உரை**: தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!

**Couplet**: I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me

**English Explanation**: I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on

**Transliteration**: Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil Allikkol Vatre Pasappu

பசப்புறு பருவரல்
குறள் 1188

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்

**மு.வ உரை**: இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!

**சாலமன் பாப்பையா உரை**: இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

**கலைஞர் உரை**: இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே

**Couplet**: On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'

**English Explanation**: Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her"

**Transliteration**: Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith Thurandhaar Avarenpaar Il

பசப்புறு பருவரல்
குறள் 1189

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்

**மு.வ உரை**: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

**சாலமன் பாப்பையா உரை**: இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!

**கலைஞர் உரை**: பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!

**Couplet**: Well let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain

**English Explanation**: If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow

**Transliteration**: Pasakkaman Pattaangen Meni Nayappiththaar Nannilaiyar Aavar Enin

பசப்புறு பருவரல்
குறள் 1190

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

**மு.வ உரை**: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

**சாலமன் பாப்பையா உரை**: என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

**கலைஞர் உரை**: என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

**Couplet**: 'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain

**English Explanation**: It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)

**Transliteration**: Pasappenap Perperudhal Nandre Nayappiththaar Nalkaamai Thootraar Enin

தனிப்படர் மிகுதி
குறள் 1191

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி

**மு.வ உரை**: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.

**கலைஞர் உரை**: தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்

**Couplet**: The bliss to be beloved by those they love who gains, Of love the stoneless, luscious fruit obtains

**English Explanation**: The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?

**Transliteration**: Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare Kaamaththuk Kaazhil Kani

தனிப்படர் மிகுதி
குறள் 1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி

**மு.வ உரை**: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

**கலைஞர் உரை**: காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்

**Couplet**: As heaven on living men showers blessings from above, Is tender grace by lovers shown to those they love

**English Explanation**: The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it

**Transliteration**: Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku Veezhvaar Ala� Kkum Ali

தனிப்படர் மிகுதி
குறள் 1193

வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

**மு.வ உரை**: காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

**கலைஞர் உரை**: காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்

**Couplet**: Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.'

**English Explanation**: The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands)

**Transliteration**: Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume Vaazhunam Ennum Serukku

தனிப்படர் மிகுதி
குறள் 1194

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்

**மு.வ உரை**: தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

**சாலமன் பாப்பையா உரை**: தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.

**கலைஞர் உரை**: விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்

**Couplet**: Those well-beloved will luckless prove, Unless beloved by those they love

**English Explanation**: Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved

**Transliteration**: Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar Veezhap Pataaar Enin

தனிப்படர் மிகுதி
குறள் 1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை

**மு.வ உரை**: நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

**சாலமன் பாப்பையா உரை**: நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?

**கலைஞர் உரை**: நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?

**Couplet**: From him I love to me what gain can be, Unless, as I love him, he loveth me

**English Explanation**: He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

**Transliteration**: Naamkaadhal Kontaar Namakkevan Seypavo Thaamkaadhal Kollaak Katai

தனிப்படர் மிகுதி
குறள் 1196

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது

**மு.வ உரை**: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

**கலைஞர் உரை**: காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்

**Couplet**: Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good

**English Explanation**: Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both

**Transliteration**: Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola Irudhalai Yaanum Inidhu

தனிப்படர் மிகுதி
குறள் 1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

**மு.வ உரை**: ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

**சாலமன் பாப்பையா உரை**: ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?

**கலைஞர் உரை**: காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!

**Couplet**: While Kaman rushes straight at me alone, Is all my pain and wasting grief unknown

**English Explanation**: Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

**Transliteration**: Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman Oruvarkan Nindrozhuku Vaan

தனிப்படர் மிகுதி
குறள் 1198

வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்

**மு.வ உரை**: தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

**சாலமன் பாப்பையா உரை**: தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

**கலைஞர் உரை**: பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது

**Couplet**: Who hear from lover's lips no pleasant word from day to day, Yet in the world live out their life,- no braver souls than they

**English Explanation**: There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved

**Transliteration**: Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu Vaazhvaarin Vankanaar Il

தனிப்படர் மிகுதி
குறள் 1199

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு

**மு.வ உரை**: யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.

**கலைஞர் உரை**: என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்

**Couplet**: Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melody

**English Explanation**: 145 Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears

**Transliteration**: Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu Isaiyum Iniya Sevikku

தனிப்படர் மிகுதி
குறள் 1200

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு

**மு.வ உரை**: நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.

**கலைஞர் உரை**: நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்

**Couplet**: Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the sea

**English Explanation**: Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow)

**Transliteration**: Uraaarkku Urunoi Uraippaai Katalaich Cheraaaai Vaazhiya Nenju

நினைந்தவர் புலம்பல்
குறள் 1201

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

**மு.வ உரை**: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

**கலைஞர் உரை**: உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

**Couplet**: From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings

**English Explanation**: Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight

**Transliteration**: Ullinum Theeraap Perumakizh Seydhalaal Kallinum Kaamam Inidhu

நினைந்தவர் புலம்பல்
குறள் 1202

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்

**மு.வ உரை**: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

**கலைஞர் உரை**: விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்

**Couplet**: How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief

**English Explanation**: Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

**Transliteration**: Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar Ninaippa Varuvadhondru El

நினைந்தவர் புலம்பல்
குறள் 1203

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

**மு.வ உரை**: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

**சாலமன் பாப்பையா உரை**: எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?

**கலைஞர் உரை**: வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

**Couplet**: A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray

**English Explanation**: I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

**Transliteration**: Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal Sinaippadhu Pondru Ketum

நினைந்தவர் புலம்பல்
குறள் 1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்

**மு.வ உரை**: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

**கலைஞர் உரை**: என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

**Couplet**: Have I a place within his heart! From mine, alas! he never doth depart

**English Explanation**: He continues to abide in my soul, do I likewise abide in his ?

**Transliteration**: Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu Oo Ulare Avar

நினைந்தவர் புலம்பல்
குறள் 1205

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்

**மு.வ உரை**: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

**சாலமன் பாப்பையா உரை**: தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

**கலைஞர் உரை**: அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

**Couplet**: Me from his heart he jealously excludes: Hath he no shame who ceaseless on my heart intrudes

**English Explanation**: He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine

**Transliteration**: Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol Emnenjaththu Ovaa Varal

நினைந்தவர் புலம்பல்
குறள் 1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்

**மு.வ உரை**: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

**சாலமன் பாப்பையா உரை**: அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?

**கலைஞர் உரை**: நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

**Couplet**: How live I yet? I live to ponder o'er The days of bliss with him that are no more

**English Explanation**: I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

**Transliteration**: Matriyaan Ennulen Manno Avaroti Yaan Utranaal Ulla Ulen

நினைந்தவர் புலம்பல்
குறள் 1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்

**மு.வ உரை**: ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

**சாலமன் பாப்பையா உரை**: அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?

**கலைஞர் உரை**: மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

**Couplet**: If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget

**English Explanation**: I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

**Transliteration**: Marappin Evanaavan Markol Marappariyen Ullinum Ullam Sutum

நினைந்தவர் புலம்பல்
குறள் 1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

**மு.வ உரை**: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

**சாலமன் பாப்பையா உரை**: அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

**கலைஞர் உரை**: எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

**Couplet**: My frequent thought no wrath excites It is not so? This honour doth my love on me bestow

**English Explanation**: 146 He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

**Transliteration**: Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro Kaadhalar Seyyum Sirappu

நினைந்தவர் புலம்பல்
குறள் 1209

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து

**மு.வ உரை**: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

**கலைஞர் உரை**: ``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது

**Couplet**: Dear life departs, when his ungracious deeds I ponder o'er, Who said erewhile, 'We're one for evermore'

**English Explanation**: My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different

**Transliteration**: Viliyumen Innuyir Verallam Enpaar Aliyinmai Aatra Ninaindhu

நினைந்தவர் புலம்பல்
குறள் 1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி

**மு.வ உரை**: தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

**சாலமன் பாப்பையா உரை**: திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

**கலைஞர் உரை**: நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக

**Couplet**: Set not; so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with me

**English Explanation**: May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul

**Transliteration**: Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap Pataaadhi Vaazhi Madhi

கனவுநிலை உரைத்தல்
குறள் 1211

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து

**மு.வ உரை**: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

**சாலமன் பாப்பையா உரை**: என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?

**கலைஞர் உரை**: வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

**Couplet**: It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepare

**English Explanation**: Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?

**Transliteration**: Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku Yaadhusey Venkol Virundhu

கனவுநிலை உரைத்தல்
குறள் 1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்

**மு.வ உரை**: கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

**சாலமன் பாப்பையா உரை**: கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

**கலைஞர் உரை**: நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்

**Couplet**: If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one o'er

**English Explanation**: If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord

**Transliteration**: Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku Uyalunmai Saatruven Man

கனவுநிலை உரைத்தல்
குறள் 1213

நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

**மு.வ உரை**: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

**கலைஞர் உரை**: நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது

**Couplet**: Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes

**English Explanation**: My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours

**Transliteration**: Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal Kaantalin Unten Uyir

கனவுநிலை உரைத்தல்
குறள் 1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

**மு.வ உரை**: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

**கலைஞர் உரை**: நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது

**Couplet**: Some pleasure I enjoy when him who loves not me In waking hours, the vision searches out and makes me see

**English Explanation**: There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness

**Transliteration**: Kanavinaan Untaakum Kaamam Nanavinaan Nalkaarai Naatith Thararku

கனவுநிலை உரைத்தல்
குறள் 1215

நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

**மு.வ உரை**: முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

**கலைஞர் உரை**: காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

**Couplet**: As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet

**English Explanation**: I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant

**Transliteration**: Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan Kanta Pozhudhe Inidhu

கனவுநிலை உரைத்தல்
குறள் 1216

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்

**மு.வ உரை**: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

**சாலமன் பாப்பையா உரை**: கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

**கலைஞர் உரை**: நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே

**Couplet**: And if there were no waking hour, my love In dreams would never from my side remove

**English Explanation**: Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me

**Transliteration**: Nanavena Ondrillai Aayin Kanavinaal Kaadhalar Neengalar Man

கனவுநிலை உரைத்தல்
குறள் 1217

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது

**மு.வ உரை**: நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

**சாலமன் பாப்பையா உரை**: நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

**கலைஞர் உரை**: நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

**Couplet**: The cruel one, in waking hour, who all ungracious seems, Why should he thus torment my soul in nightly dreams

**English Explanation**: The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

**Transliteration**: Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal Enemmaip Peezhip Padhu

கனவுநிலை உரைத்தல்
குறள் 1218

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து

**மு.வ உரை**: தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

**கலைஞர் உரை**: தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்

**Couplet**: And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste

**English Explanation**: When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul

**Transliteration**: Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal Nenjaththar Aavar Viraindhu

கனவுநிலை உரைத்தல்
குறள் 1219

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்

**மு.வ உரை**: கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

**சாலமன் பாப்பையா உரை**: இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

**கலைஞர் உரை**: கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்

**Couplet**: In dreams who ne'er their lover's form perceive, For those in waking hours who show no love will grieve

**English Explanation**: They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours

**Transliteration**: Nanavinaal Nalkaarai Novar Kanavinaal Kaadhalark Kaanaa Thavar

கனவுநிலை உரைத்தல்
குறள் 1220

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்

**மு.வ உரை**: நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

**சாலமன் பாப்பையா உரை**: என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?

**கலைஞர் உரை**: என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

**Couplet**: They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town;

**English Explanation**: The women of this place say he has forsaken me in my wakefulness I think they have not seen him visit me in my dreams

**Transliteration**: Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal Kaanaarkol Ivvoo Ravar

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது

**மு.வ உரை**: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

**சாலமன் பாப்பையா உரை**: பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

**கலைஞர் உரை**: நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!

**Couplet**: Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour

**English Explanation**: Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women

**Transliteration**: Maalaiyo Allai Manandhaar Uyirunnum Velainee Vaazhi Pozhudhu

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை

**மு.வ உரை**: மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

**சாலமன் பாப்பையா உரை**: பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?

**கலைஞர் உரை**: மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

**Couplet**: Thine eye is sad; Hail, doubtful hour of eventide! Of cruel eye, as is my spouse, is too thy bride

**English Explanation**: A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine

**Transliteration**: Punkannai Vaazhi Marulmaalai Emkelpol Vankanna Thonin Thunai

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1223

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்

**மு.வ உரை**: பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

**கலைஞர் உரை**: பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது

**Couplet**: With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows

**English Explanation**: The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow

**Transliteration**: Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith Thunpam Valara Varum

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்

**மு.வ உரை**: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

**கலைஞர் உரை**: காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது

**Couplet**: When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wends

**English Explanation**: In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter

**Transliteration**: Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu Edhilar Pola Varum

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1225

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

**மு.வ உரை**: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

**கலைஞர் உரை**: மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது

**Couplet**: O morn, how have I won thy grace? thou bring'st relief O eve, why art thou foe! thou dost renew my grief

**English Explanation**: O eve, why art thou foe! thou dost renew my grief

**Transliteration**: Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan Maalaikkuch Cheydha Pakai?

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்

**மு.வ உரை**: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

**கலைஞர் உரை**: மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை

**Couplet**: The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew

**English Explanation**: Previous to my husband's departure, I know not the painful nature of evening

**Transliteration**: Maalainoi Seydhal Manandhaar Akalaadha Kaalai Arindha Thilen

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்

**மு.வ உரை**: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

**கலைஞர் உரை**: காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்

**Couplet**: My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour

**English Explanation**: This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening

**Transliteration**: Kaalai Arumpip Pakalellaam Podhaaki Maalai Malarumin Noi

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1228

அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

**மு.வ உரை**: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

**கலைஞர் உரை**: காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது

**Couplet**: The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near

**English Explanation**: The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)

**Transliteration**: Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan Kuzhalpolum Kollum Patai

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

**மு.வ உரை**: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

**சாலமன் பாப்பையா உரை**: இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

**கலைஞர் உரை**: என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது

**Couplet**: If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend

**English Explanation**: When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow

**Transliteration**: Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu Maalai Patardharum Pozhdhu

பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்

**மு.வ உரை**: ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

**கலைஞர் உரை**: பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது

**Couplet**: This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me

**English Explanation**: My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth

**Transliteration**: Porulmaalai Yaalarai Ulli Marulmaalai Maayumen Maayaa Uyir

உறுப்புநலன் அழிதல்
குறள் 1231

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்

**மு.வ உரை**: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

**சாலமன் பாப்பையா உரை**: பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

**கலைஞர் உரை**: பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன

**Couplet**: Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see, Thinking on him, who wand'ring far, leaves us in misery

**English Explanation**: While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers

**Transliteration**: Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli Narumalar Naanina Kan

உறுப்புநலன் அழிதல்
குறள் 1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்

**மு.வ உரை**: பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

**சாலமன் பாப்பையா உரை**: பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

**கலைஞர் உரை**: பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன

**Couplet**: The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears

**English Explanation**: The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved

**Transliteration**: Nayandhavar Nalkaamai Solluva Polum Pasandhu Panivaarum Kan

உறுப்புநலன் அழிதல்
குறள் 1233

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

**மு.வ உரை**: கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

**கலைஞர் உரை**: தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்

**Couplet**: These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial day

**English Explanation**: The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)

**Transliteration**: Thanandhamai Saala Arivippa Polum Manandhanaal Veengiya Thol

உறுப்புநலன் அழிதல்
குறள் 1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்

**மு.வ உரை**: துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

**கலைஞர் உரை**: பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக

**Couplet**: When lover went, then faded all their wonted charms, And armlets' golden round slips off from these poor wasted arms

**English Explanation**: In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose

**Transliteration**: Panaineengip Paindhoti Sorum Thunaineengith Tholkavin Vaatiya Thol

உறுப்புநலன் அழிதல்
குறள் 1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்

**மு.வ உரை**: வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

**கலைஞர் உரை**: வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன

**Couplet**: These wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel one

**English Explanation**: The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one

**Transliteration**: Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu Tholkavin Vaatiya Thol

உறுப்புநலன் அழிதல்
குறள் 1236

தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து

**மு.வ உரை**: வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

**சாலமன் பாப்பையா உரை**: வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

**கலைஞர் உரை**: என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்

**Couplet**: I grieve, 'tis pain to me to hear him cruel chid, Because the armlet from my wasted arm has slid

**English Explanation**: I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened

**Transliteration**: Thotiyotu Tholnekizha Noval Avaraik Kotiyar Enakkooral Nondhu

உறுப்புநலன் அழிதல்
குறள் 1237

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து

**மு.வ உரை**: நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?

**கலைஞர் உரை**: நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

**Couplet**: My heart! say ought of glory wilt thou gain, If to that cruel one thou of thy wasted arms complain

**English Explanation**: Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

**Transliteration**: Paatu Perudhiyo Nenje Kotiyaarkken Vaatudhot Poosal Uraiththu

உறுப்புநலன் அழிதல்
குறள் 1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்

**மு.வ உரை**: தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!

**கலைஞர் உரை**: இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது

**Couplet**: One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet decked

**English Explanation**: When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow

**Transliteration**: Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu Paindhotip Pedhai Nudhal

உறுப்புநலன் அழிதல்
குறள் 1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்

**மு.வ உரை**: தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

**சாலமன் பாப்பையா உரை**: (அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?

**கலைஞர் உரை**: இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன

**Couplet**: As we embraced a breath of wind found entrance there; The maid's large liquid eyes were dimmed with care

**English Explanation**: When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow

**Transliteration**: Muyakkitaith Thanvali Pozhap Pasapputra Pedhai Perumazhaik Kan

உறுப்புநலன் அழிதல்
குறள் 1240

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

**மு.வ உரை**: காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

**சாலமன் பாப்பையா உரை**: குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!

**கலைஞர் உரை**: பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

**Couplet**: The dimness of her eye felt sorrow now, Beholding what was done by that bright brow

**English Explanation**: Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

**Transliteration**: Kannin Pasappo Paruvaral Eydhindre Onnudhal Seydhadhu Kantu

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து

**மு.வ உரை**: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

**கலைஞர் உரை**: எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

**Couplet**: My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable

**English Explanation**: O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

**Transliteration**: Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum Evvanoi Theerkkum Marundhu

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1242

காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு

**மு.வ உரை**: என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

**கலைஞர் உரை**: அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க

**Couplet**: Since he loves not, thy smart Is folly, fare thee well my heart

**English Explanation**: Is folly, fare thee well my heart!

**Transliteration**: Kaadhal Avarilar Aakanee Novadhu Pedhaimai Vaazhiyen Nenju

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1243

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

**மு.வ உரை**: நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

**கலைஞர் உரை**: பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?

**Couplet**: What comes of sitting here in pining thought, O heart? He knows No pitying thought, the cause of all these wasting woes

**English Explanation**: O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow

**Transliteration**: Irundhulli Enparidhal Nenje Parindhullal Paidhalnoi Seydhaarkan Il

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1244

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று

**மு.வ உரை**: நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

**கலைஞர் உரை**: நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன

**Couplet**: O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away

**English Explanation**: O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him

**Transliteration**: Kannum Kolachcheri Nenje Ivaiyennaith Thinnum Avarkkaanal Utru

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1245

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

**மு.வ உரை**: நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

**கலைஞர் உரை**: நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

**Couplet**: O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me

**English Explanation**: O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

**Transliteration**: Setraar Enakkai Vitalunto Nenjeyaam Utraal Uraaa Thavar

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1246

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

**மு.வ உரை**: என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

**கலைஞர் உரை**: நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

**Couplet**: My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain

**English Explanation**: O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so Nay, your displeasure is (simply) false

**Transliteration**: Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai Poikkaaivu Kaaidhien Nenju

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1247

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு

**மு.வ உரை**: நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

**கலைஞர் உரை**: நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது

**Couplet**: Or bid thy love, or bid thy shame depart; For me, I cannot bear them both, my worthy heart

**English Explanation**: O my good soul, give up either lust or honour, as for me I can endure neither

**Transliteration**: Kaamam Vituondro Naanvitu Nannenje Yaano Poreniv Virantu

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1248

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

**மு.வ உரை**: என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!

**கலைஞர் உரை**: நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்

**Couplet**: Thou art befooled, my heart, thou followest him who flees from thee; And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'

**English Explanation**: You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you

**Transliteration**: Parindhavar Nalkaarendru Engip Pirindhavar Pinselvaai Pedhaien Nenju

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1249

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

**மு.வ உரை**: என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

**கலைஞர் உரை**: உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

**Couplet**: My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find

**English Explanation**: O my soul! to whom would you repair, while the dear one is within yourself?

**Transliteration**: Ullaththaar Kaadha Lavaraal Ullinee Yaaruzhaich Cheriyen Nenju

நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்

**மு.வ உரை**: நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

**சாலமன் பாப்பையா உரை**: நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

**கலைஞர் உரை**: சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது

**Couplet**: If I should keep in mind the man who utterly renounces me, My soul must suffer further loss of dignity

**English Explanation**: If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains

**Transliteration**: Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa Innum Izhaththum Kavin

நிறையழிதல்
குறள் 1251

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

**மு.வ உரை**: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

**சாலமன் பாப்பையா உரை**: நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!

**கலைஞர் உரை**: காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது

**Couplet**: Of womanly reserve love's axe breaks through the door, Barred by the bolt of shame before

**English Explanation**: The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty

**Transliteration**: Kaamak Kanichchi Utaikkum Niraiyennum Naanuththaazh Veezhththa Kadhavu

நிறையழிதல்
குறள் 1252

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

**மு.வ உரை**: காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

**சாலமன் பாப்பையா உரை**: எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

**கலைஞர் உரை**: காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது

**Couplet**: What men call love is the one thing of merciless power; It gives my soul no rest, e'en in the midnight hour

**English Explanation**: Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy

**Transliteration**: Kaamam Enavondro Kannindren Nenjaththai Yaamaththum Aalum Thozhil

நிறையழிதல்
குறள் 1253

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்

**மு.வ உரை**: யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

**சாலமன் பாப்பையா உரை**: என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

**கலைஞர் உரை**: எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்

**Couplet**: I would my love conceal, but like a sneeze It shows itself, and gives no warning sign

**English Explanation**: I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze

**Transliteration**: Maraippenman Kaamaththai Yaano Kurippindrith Thummalpol Thondri Vitum

நிறையழிதல்
குறள் 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்

**மு.வ உரை**: யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

**கலைஞர் உரை**: மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே

**Couplet**: In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil

**English Explanation**: I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public

**Transliteration**: Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam Maraiyirandhu Mandru Patum

நிறையழிதல்
குறள் 1255

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று

**மு.வ உரை**: தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

**கலைஞர் உரை**: தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை

**Couplet**: The dignity that seeks not him who acts as foe, Is the one thing that loving heart can never know

**English Explanation**: The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love

**Transliteration**: Setraarpin Sellaap Perundhakaimai Kaamanoi Utraar Arivadhondru Andru

நிறையழிதல்
குறள் 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்

**மு.வ உரை**: வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!

**சாலமன் பாப்பையா உரை**: என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.

**கலைஞர் உரை**: வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே

**Couplet**: My grief how full of grace, I pray you see! It seeks to follow him that hateth me

**English Explanation**: The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

**Transliteration**: Setravar Pinseral Venti Aliththaro Etrennai Utra Thuyar

நிறையழிதல்
குறள் 1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

**மு.வ உரை**: நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

**சாலமன் பாப்பையா உரை**: என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

**கலைஞர் உரை**: நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை

**Couplet**: No sense of shame my gladdened mind shall prove, When he returns my longing heart to bless with love

**English Explanation**: I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)

**Transliteration**: Naanena Ondro Ariyalam Kaamaththaal Peniyaar Petpa Seyin

நிறையழிதல்
குறள் 1258

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை

**மு.வ உரை**: நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?

**சாலமன் பாப்பையா உரை**: என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!

**கலைஞர் உரை**: நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?

**Couplet**: The words of that deceiver, versed in every wily art, Are instruments that break through every guard of woman's heart

**English Explanation**: Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?

**Transliteration**: Panmaayak Kalvan Panimozhi Andronam Penmai Utaikkum Patai

நிறையழிதல்
குறள் 1259

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

**மு.வ உரை**: ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

**கலைஞர் உரை**: ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்

**Couplet**: 'I 'll shun his greeting'; saying thus with pride away I went: I held him in my arms, for straight I felt my heart relent

**English Explanation**: I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!

**Transliteration**: Pulappal Enachchendren Pullinen Nenjam Kalaththal Uruvadhu Kantu

நிறையழிதல்
குறள் 1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்

**மு.வ உரை**: கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?

**சாலமன் பாப்பையா உரை**: கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?

**கலைஞர் உரை**: நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

**Couplet**: 'We 'll stand aloof and then embrace': is this for them to say, Whose hearts are as the fat that in the blaze dissolves away

**English Explanation**: Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?

**Transliteration**: Ninandheeyil Ittanna Nenjinaarkku Unto Punarndhooti Nirpem Enal

அவர்வயின் விதும்பல்
குறள் 1261

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

**மு.வ உரை**: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

**சாலமன் பாப்பையா உரை**: அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

**கலைஞர் உரை**: வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன

**Couplet**: My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlorn

**English Explanation**: My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail

**Transliteration**: Vaalatrup Purkendra Kannum Avarsendra Naalotrith Theyndha Viral

அவர்வயின் விதும்பல்
குறள் 1262

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து

**மு.வ உரை**: தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

**கலைஞர் உரை**: காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி

**Couplet**: O thou with gleaming jewels decked, could I forget for this one day, Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away

**English Explanation**: O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose

**Transliteration**: Ilangizhaai Indru Marappinen Tholmel Kalangazhiyum Kaarikai Neeththu

அவர்வயின் விதும்பல்
குறள் 1263

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

**மு.வ உரை**: வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

**சாலமன் பாப்பையா உரை**: என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.

**கலைஞர் உரை**: ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்

**Couplet**: On victory intent, His mind sole company he went; And I yet life sustain And long to see his face again

**English Explanation**: I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide

**Transliteration**: Urannasaii Ullam Thunaiyaakach Chendraar Varalnasaii Innum Ulen

அவர்வயின் விதும்பல்
குறள் 1264

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு

**மு.வ உரை**: முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.

**கலைஞர் உரை**: காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது

**Couplet**: 'He comes again, who left my side, and I shall taste love's joy,'- My heart with rapture swells, when thoughts like these my mind employ

**English Explanation**: My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love

**Transliteration**: Kootiya Kaamam Pirindhaar Varavullik Kotuko Terumen Nenju

அவர்வயின் விதும்பல்
குறள் 1265

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு

**மு.வ உரை**: என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

**சாலமன் பாப்பையா உரை**: என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

**கலைஞர் உரை**: கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்

**Couplet**: O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies

**English Explanation**: May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders

**Transliteration**: Kaankaman Konkanaik Kannaarak Kantapin Neengumen Mendhol Pasappu

அவர்வயின் விதும்பல்
குறள் 1266

வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

**மு.வ உரை**: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

**சாலமன் பாப்பையா உரை**: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

**கலைஞர் உரை**: என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்

**Couplet**: O let my spouse but come again to me one day! I'll drink that nectar: wasting grief shall flee away

**English Explanation**: May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow

**Transliteration**: Varukaman Konkan Orunaal Parukuvan Paidhalnoi Ellaam Keta

அவர்வயின் விதும்பல்
குறள் 1267

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்

**மு.வ உரை**: என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

**சாலமன் பாப்பையா உரை**: கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?

**கலைஞர் உரை**: கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது

**Couplet**: Shall I draw back, or yield myself, or shall both mingled be, When he returns, my spouse, dear as these eyes to me

**English Explanation**: On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?

**Transliteration**: Pulappenkol Pulluven Kollo Kalappenkol Kananna Kelir Viran

அவர்வயின் விதும்பல்
குறள் 1268

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து

**மு.வ உரை**: அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

**சாலமன் பாப்பையா உரை**: அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

**கலைஞர் உரை**: தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்

**Couplet**: O would my king would fight, o'ercome, devide the spoil; At home, to-night, the banquet spread should crown the toil

**English Explanation**: Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening

**Transliteration**: Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu Maalai Ayarkam Virundhu

அவர்வயின் விதும்பல்
குறள் 1269

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

**மு.வ உரை**: தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

**சாலமன் பாப்பையா உரை**: தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

**கலைஞர் உரை**: நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்

**Couplet**: One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar return

**English Explanation**: To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days

**Transliteration**: Orunaal Ezhunaalpol Sellumsen Sendraar Varunaalvaiththu Engu Pavarkku

அவர்வயின் விதும்பல்
குறள் 1270

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்

**மு.வ உரை**: துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

**கலைஞர் உரை**: துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

**Couplet**: What's my return, the meeting hour, the wished-for greeting worth, If she heart-broken lie, with all her life poured forth

**English Explanation**: After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

**Transliteration**: Perinennaam Petrakkaal Ennaam Urinennaam Ullam Utaindhukkak Kaal

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு

**மு.வ உரை**: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

**சாலமன் பாப்பையா உரை**: நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

**கலைஞர் உரை**: வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்

**Couplet**: Thou hid'st it, yet thine eye, disdaining all restraint, Something, I know not, what, would utter of complaint

**English Explanation**: Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something

**Transliteration**: Karappinung Kaiyikan Thollaanin Unkan Uraikkal Uruvadhon Runtu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1272

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது

**மு.வ உரை**: கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

**கலைஞர் உரை**: கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்

**Couplet**: The simple one whose beauty fills mine eye, whose shoulders curve Like bambu stem, hath all a woman's modest sweet reserve

**English Explanation**: Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo

**Transliteration**: Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup Penniraindha Neermai Peridhu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1273

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு

**மு.வ உரை**: ( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

**கலைஞர் உரை**: மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது

**Couplet**: As through the crystal beads is seen the thread on which they 're strung So in her beauty gleams some thought cannot find a tongue

**English Explanation**: There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems

**Transliteration**: Maniyil Thikazhdharu Noolpol Matandhai Aniyil Thikazhvadhondru Untu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1274

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

**மு.வ உரை**: அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

**கலைஞர் உரை**: மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது

**Couplet**: As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyes

**English Explanation**: There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud

**Transliteration**: Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai Nakaimokkul Ulladhon Runtu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1275

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து

**மு.வ உரை**: காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

**கலைஞர் உரை**: வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது

**Couplet**: The secret wiles of her with thronging armlets decked, Are medicines by which my raising grief is checked

**English Explanation**: The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow

**Transliteration**: Seridhoti Seydhirandha Kallam Urudhuyar Theerkkum Marundhondru Utaiththu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1276

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து

**மு.வ உரை**: பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

**கலைஞர் உரை**: ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே

**Couplet**: While lovingly embracing me, his heart is only grieved: It makes me think that I again shall live of love bereaved

**English Explanation**: The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love

**Transliteration**: Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri Anpinmai Soozhva Thutaiththu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1277

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

**மு.வ உரை**: குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

**சாலமன் பாப்பையா உரை**: குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

**கலைஞர் உரை**: குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

**Couplet**: My severance from the lord of this cool shore, My very armlets told me long before

**English Explanation**: My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore

**Transliteration**: Thannan Thuraivan Thanandhamai Namminum Munnam Unarndha Valai

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1278

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து

**மு.வ உரை**: எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

**சாலமன் பாப்பையா உரை**: என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

**கலைஞர் உரை**: நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே

**Couplet**: My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away

**English Explanation**: It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow

**Transliteration**: Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum Ezhunaalem Meni Pasandhu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது

**மு.வ உரை**: தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

**கலைஞர் உரை**: பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்

**Couplet**: She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet: all this the lady did

**English Explanation**: She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly)

**Transliteration**: Thotinokki Mendholum Nokki Atinokki Aqdhaan Tavalsey Thadhu

குறிப்பறிவுறுத்தல்
குறள் 1280

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு

**மு.வ உரை**: கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

**சாலமன் பாப்பையா உரை**: பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.

**கலைஞர் உரை**: காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது

**Couplet**: To show by eye the pain of love, and for relief to pray, Is womanhood's most womanly device, men say

**English Explanation**: To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence

**Transliteration**: Penninaal Penmai Utaiththenpa Kanninaal Kaamanoi Solli Iravu

புணர்ச்சி விதும்பல்
குறள் 1281

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

**மு.வ உரை**: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு

**சாலமன் பாப்பையா உரை**: நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

**கலைஞர் உரை**: மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்

**Couplet**: Gladness at the thought, rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delight

**English Explanation**: To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust

**Transliteration**: Ullak Kaliththalum Kaana Makizhdhalum Kallukkil Kaamaththir Kuntu

புணர்ச்சி விதும்பல்
குறள் 1282

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்

**மு.வ உரை**: காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

**சாலமன் பாப்பையா உரை**: பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

**கலைஞர் உரை**: பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்

**Couplet**: When as palmyra tall, fulness of perfect love we gain, Distrust can find no place small as the millet grain

**English Explanation**: If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet

**Transliteration**: Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith Thunaiyum Kaamam Niraiya Varin

புணர்ச்சி விதும்பல்
குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்

**மு.வ உரை**: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

**கலைஞர் உரை**: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை

**Couplet**: Although his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I see

**English Explanation**: Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him

**Transliteration**: Penaadhu Petpave Seyyinum Konkanaik Kaanaa Thamaiyala Kan

புணர்ச்சி விதும்பல்
குறள் 1284

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு

**மு.வ உரை**: தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

**கலைஞர் உரை**: ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு

**Couplet**: My friend, I went prepared to show a cool disdain; My heart, forgetting all, could not its love restrain

**English Explanation**: My heart, forgetting all, could not its love restrain

**Transliteration**: Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu Kootarkan Sendradhu En Nenju

புணர்ச்சி விதும்பல்
குறள் 1285

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து

**மு.வ உரை**: மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

**சாலமன் பாப்பையா உரை**: முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

**கலைஞர் உரை**: கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்

**Couplet**: The eye sees not the rod that paints it; nor can I See any fault, when I behold my husband nigh

**English Explanation**: Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him

**Transliteration**: Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan Pazhikaanen Kanta Itaththu

புணர்ச்சி விதும்பல்
குறள் 1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

**மு.வ உரை**: காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

**சாலமன் பாப்பையா உரை**: கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

**கலைஞர் உரை**: அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை

**Couplet**: When him I see, to all his faults I 'm blind; But when I see him not, nothing but faults I find

**English Explanation**: When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults

**Transliteration**: Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal Kaanen Thavaral Lavai

புணர்ச்சி விதும்பல்
குறள் 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

**மு.வ உரை**: வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?

**சாலமன் பாப்பையா உரை**: தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?

**கலைஞர் உரை**: வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

**Couplet**: As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seem

**English Explanation**: Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?

**Transliteration**: Uyththal Arindhu Punalpaai Pavarepol Poiththal Arindhen Pulandhu

புணர்ச்சி விதும்பல்
குறள் 1288

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு

**மு.வ உரை**: கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

**சாலமன் பாப்பையா உரை**: வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

**கலைஞர் உரை**: என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு

**Couplet**: Though shameful ill it works, dear is the palm-tree wine To drunkards; traitor, so to me that breast of thine

**English Explanation**: O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace

**Transliteration**: Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk Kallatre Kalvanin Maarpu

புணர்ச்சி விதும்பல்
குறள் 1289

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

**மு.வ உரை**: காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

**கலைஞர் உரை**: காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

**Couplet**: Love is tender as an opening flower In season due To gain its perfect bliss is rapture known to few

**English Explanation**: Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature

**Transliteration**: Malarinum Mellidhu Kaamam Silaradhan Sevvi Thalaippatu Vaar

புணர்ச்சி விதும்பல்
குறள் 1290

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று

**மு.வ உரை**: கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

**சாலமன் பாப்பையா உரை**: தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்

**கலைஞர் உரை**: விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்

**Couplet**: Her eye, as I drew nigh one day, with anger shone: By love o'erpowered, her tenderness surpassed my own

**English Explanation**: She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own

**Transliteration**: Kannin Thuniththe Kalanginaal Pulludhal Enninum Thaanvidhup Putru

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1291

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது

**மு.வ உரை**: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

**கலைஞர் உரை**: நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

**Couplet**: You see his heart is his alone O heart, why not be all my own

**English Explanation**: O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

**Transliteration**: Avarnenju Avarkkaadhal Kantum Evannenje Neeemakku Aakaa Thadhu

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1292

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

**மு.வ உரை**: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

**சாலமன் பாப்பையா உரை**: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

**கலைஞர் உரை**: நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே

**Couplet**: 'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemy

**English Explanation**: O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

**Transliteration**: Uraaa Thavarkkanta Kannum Avaraich Cheraaarenach Cheriyen Nenju

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1293

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்

**மு.வ உரை**: நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

**கலைஞர் உரை**: நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

**Couplet**: 'The ruined have no friends, 'they say; and so, my heart, To follow him, at thy desire, from me thou dost depart

**English Explanation**: O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

**Transliteration**: Kettaarkku Nattaaril Enpadho Nenjenee Pettaangu Avarpin Selal

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1294

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று

**மு.வ உரை**: நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

**சாலமன் பாப்பையா உரை**: நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

**கலைஞர் உரை**: நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை

**Couplet**: 'See, thou first show offended pride, and then submit,' I bade; Henceforth such council who will share with thee my heart

**English Explanation**: O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?

**Transliteration**: Inianna Ninnotu Soozhvaaryaar Nenje Thuniseydhu Thuvvaaikaan Matru

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1295

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

**மு.வ உரை**: ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

**கலைஞர் உரை**: என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

**Couplet**: I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain

**English Explanation**: My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow

**Transliteration**: Peraaamai Anjum Perinpirivu Anjum Araaa Itumpaiththen Nenju

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1296

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு

**மு.வ உரை**: காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

**சாலமன் பாப்பையா உரை**: காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

**கலைஞர் உரை**: காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது

**Couplet**: My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan

**English Explanation**: My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude

**Transliteration**: Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith Thiniya Irundhadhen Nenju

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1297

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு

**மு.வ உரை**: காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

**கலைஞர் உரை**: அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்

**Couplet**: Fall'n 'neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shame

**English Explanation**: I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him

**Transliteration**: Naanum Marandhen Avarmarak Kallaaen Maanaa Matanenjir Pattu

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1298

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

**மு.வ உரை**: உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

**கலைஞர் உரை**: பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்

**Couplet**: If I contemn him, then disgrace awaits me evermore; My soul that seeks to live his virtues numbers o'er

**English Explanation**: My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him

**Transliteration**: Ellin Ilivaamendru Enni Avardhiram Ullum Uyirkkaadhal Nenju

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1299

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி

**மு.வ உரை**: ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

**சாலமன் பாப்பையா உரை**: ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

**கலைஞர் உரை**: துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

**Couplet**: And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief

**English Explanation**: Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

**Transliteration**: Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya Nenjan Thunaiyal Vazhi

நெஞ்சொடு புலத்தல்
குறள் 1300

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி

**மு.வ உரை**: ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

**கலைஞர் உரை**: நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

**Couplet**: A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own

**English Explanation**: It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger

**Transliteration**: Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya Nenjam Thamaral Vazhi

புலவி
குறள் 1301

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது

**மு.வ உரை**: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

**சாலமன் பாப்பையா உரை**: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

**கலைஞர் உரை**: ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக

**Couplet**: Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove

**English Explanation**: Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not

**Transliteration**: Pullaa Thiraaap Pulaththai Avar Urum Allalnoi Kaankam Siridhu

புலவி
குறள் 1302

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

**மு.வ உரை**: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

**கலைஞர் உரை**: ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்

**Couplet**: A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess

**English Explanation**: A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much

**Transliteration**: Uppamain Thatraal Pulavi Adhusiridhu Mikkatraal Neela Vital

புலவி
குறள் 1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

**மு.வ உரை**: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.

**கலைஞர் உரை**: ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்

**Couplet**: 'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace

**English Explanation**: For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony

**Transliteration**: Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip Pulandhaaraip Pullaa Vital

புலவி
குறள் 1304

ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று

**மு.வ உரை**: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

**சாலமன் பாப்பையா உரை**: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

**கலைஞர் உரை**: ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்

**Couplet**: To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops

**English Explanation**: Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root

**Transliteration**: Ooti Yavarai Unaraamai Vaatiya Valli Mudhalarin Thatru

புலவி
குறள் 1305

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை 
பூவன்ன கண்ணார் அகத்து

**மு.வ உரை**: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

**சாலமன் பாப்பையா உரை**: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.

**கலைஞர் உரை**: மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்

**Couplet**: Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely grace

**English Explanation**: An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands

**Transliteration**: Nalaththakai Nallavarkku Eer Pulaththakai Pooanna Kannaar Akaththu

புலவி
குறள் 1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

**மு.வ உரை**: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

**கலைஞர் உரை**: பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்

**Couplet**: Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature

**English Explanation**: Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit

**Transliteration**: Thuniyum Pulaviyum Illaayin Kaamam Kaniyum Karukkaayum Atru

புலவி
குறள் 1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று

**மு.வ உரை**: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

**சாலமன் பாப்பையா உரை**: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

**கலைஞர் உரை**: கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு

**Couplet**: A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'

**English Explanation**: The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike

**Transliteration**: Ootalin Untaangor Thunpam Punarvadhu Neetuva Thandru Kol Endru

புலவி
குறள் 1308

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி

**மு.வ உரை**: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

**சாலமன் பாப்பையா உரை**: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?

**கலைஞர் உரை**: நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

**Couplet**: What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures

**English Explanation**: What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

**Transliteration**: Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum Kaadhalar Illaa Vazhi

புலவி
குறள் 1309

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

**மு.வ உரை**: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

**சாலமன் பாப்பையா உரை**: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

**கலைஞர் உரை**: நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

**Couplet**: Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love

**English Explanation**: Like water in the shade, dislike is delicious only in those who love

**Transliteration**: Neerum Nizhaladhu Inidhe Pulaviyum Veezhunar Kanne Inidhu

புலவி
குறள் 1310

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா

**மு.வ உரை**: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

**சாலமன் பாப்பையா உரை**: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

**கலைஞர் உரை**: ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்

**Couplet**: Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire

**English Explanation**: It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike

**Transliteration**: Ootal Unanga Vituvaarotu Ennenjam Kootuvem Enpadhu Avaa

புலவி நுணுக்கம்
குறள் 1311

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

**மு.வ உரை**: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

**சாலமன் பாப்பையா உரை**: பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

**கலைஞர் உரை**: பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்

**Couplet**: From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind, I shrink from thine embrace

**English Explanation**: You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace you

**Transliteration**: Penniyalaar Ellaarum Kannin Podhuunpar Nannen Paraththanin Maarpu

புலவி நுணுக்கம்
குறள் 1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

**மு.வ உரை**: காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

**சாலமன் பாப்பையா உரை**: நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)

**கலைஞர் உரை**: ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து

**Couplet**: One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

**English Explanation**: When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life

**Transliteration**: Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai Neetuvaazh Kenpaak Karindhu

புலவி நுணுக்கம்
குறள் 1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

**மு.வ உரை**: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

**கலைஞர் உரை**: கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்

**Couplet**: I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'

**English Explanation**: Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman

**Transliteration**: Kottup Pooch Chootinum Kaayum Oruththiyaik Kaattiya Sootineer Endru

புலவி நுணுக்கம்
குறள் 1314

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

**மு.வ உரை**: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

**சாலமன் பாப்பையா உரை**: காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

**கலைஞர் உரை**: ``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்

**Couplet**: 'I love you more than all beside,' 'T was thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger woke

**English Explanation**: When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky

**Transliteration**: Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal Yaarinum Yaarinum Endru

புலவி நுணுக்கம்
குறள் 1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

**மு.வ உரை**: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

**கலைஞர் உரை**: ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி

**Couplet**: 'While here I live, I leave you not,' I said to calm her fears She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears

**English Explanation**: When I said I would never part from her in this life her eyes were filled with tears

**Transliteration**: Immaip Pirappil Piriyalam Endrenaak Kannirai Neerkon Tanal

புலவி நுணுக்கம்
குறள் 1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

**மு.வ உரை**: நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

**சாலமன் பாப்பையா உரை**: எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

**கலைஞர் உரை**: ``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்

**Couplet**: 'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,' She cried, and then her opened arms, Forthwith embraced me not

**English Explanation**: When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike

**Transliteration**: Ullinen Endrenmar Renmarandheer Endrennaip Pullaal Pulaththak Kanal

புலவி நுணுக்கம்
குறள் 1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

**மு.வ உரை**: யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?

**சாலமன் பாப்பையா உரை**: நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.

**கலைஞர் உரை**: தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்

**Couplet**: She hailed me when I sneezed one day; But straight with anger seized, She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'

**English Explanation**: When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"

**Transliteration**: Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal Yaarullith Thummineer Endru

புலவி நுணுக்கம்
குறள் 1318

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

**மு.வ உரை**: அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

**சாலமன் பாப்பையா உரை**: அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

**கலைஞர் உரை**: ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்

**Couplet**: And so next time I checked my sneeze; She forthwith wept and cried, (That woman difficult to please), 'Your thoughts from me you hide'

**English Explanation**: When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you"

**Transliteration**: Thummuch Cheruppa Azhudhaal Numarullal Emmai Maraiththiro Endru

புலவி நுணுக்கம்
குறள் 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று

**மு.வ உரை**: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

**கலைஞர் உரை**: நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்

**Couplet**: I then began to soothe and coax, To calm her jealous mind; 'I see', quoth she, 'to other folks How you are wondrous kind

**English Explanation**: 'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave

**Transliteration**: Thannai Unarththinum Kaayum Pirarkkumneer Inneerar Aakudhir Endru

புலவி நுணுக்கம்
குறள் 1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று

**மு.வ உரை**: அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

**சாலமன் பாப்பையா உரை**: என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.

**கலைஞர் உரை**: ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்

**Couplet**: I silent sat, but thought the more, And gazed on her Then she Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'

**English Explanation**: Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"

**Transliteration**: Ninaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer Yaarulli Nokkineer Endru

ஊடலுவகை
குறள் 1321

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு

**மு.வ உரை**: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

**சாலமன் பாப்பையா உரை**: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

**கலைஞர் உரை**: எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது

**Couplet**: Although there be no fault in him, the sweetness of his love Hath power in me a fretful jealousy to move

**English Explanation**: Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike

**Transliteration**: Illai Thavaravarkku Aayinum Ootudhal Valladhu Avaralikku Maaru

ஊடலுவகை
குறள் 1322

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

**மு.வ உரை**: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

**கலைஞர் உரை**: காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்

**Couplet**: My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom again

**English Explanation**: His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike

**Transliteration**: Ootalin Thondrum Sirudhuni Nallali Vaatinum Paatu Perum

ஊடலுவகை
குறள் 1323

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

**மு.வ உரை**: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

**சாலமன் பாப்பையா உரை**: நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?

**கலைஞர் உரை**: நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

**Couplet**: Is there a bliss in any world more utterly divine, Than 'coyness' gives, when hearts as earth and water join

**English Explanation**: Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?

**Transliteration**: Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu Neeriyain Thannaar Akaththu

ஊடலுவகை
குறள் 1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை

**மு.வ உரை**: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

**சாலமன் பாப்பையா உரை**: என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

**கலைஞர் உரை**: இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது

**Couplet**: 'Within the anger feigned' that close love's tie doth bind, A weapon lurks, which quite breaks down my mind

**English Explanation**: In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart

**Transliteration**: Pulli Vitaaap Pulaviyul Thondrumen Ullam Utaikkum Patai

ஊடலுவகை
குறள் 1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து

**மு.வ உரை**: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

**சாலமன் பாப்பையா உரை**: ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

**கலைஞர் உரை**: தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது

**Couplet**: Though free from fault, from loved one's tender arms To be estranged a while hath its own special charms

**English Explanation**: Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love

**Transliteration**: Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol Akaralin Aangon Rutaiththu

ஊடலுவகை
குறள் 1326

உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

**மு.வ உரை**: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

**சாலமன் பாப்பையா உரை**: உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.

**கலைஞர் உரை**: உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்

**Couplet**: 'Tis sweeter to digest your food than 'tis to eat; In love, than union's self is anger feigned more sweet

**English Explanation**: To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse

**Transliteration**: Unalinum Untadhu Aralinidhu Kaamam Punardhalin Ootal Inidhu

ஊடலுவகை
குறள் 1327

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்

**மு.வ உரை**: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

**சாலமன் பாப்பையா உரை**: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

**கலைஞர் உரை**: ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்

**Couplet**: In lovers' quarrels, 'tis the one that first gives way, That in re-union's joy is seen to win the day

**English Explanation**: 160 Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which

**Transliteration**: Ootalil Thotravar Vendraar Adhumannum Kootalir Kaanap Patum

ஊடலுவகை
குறள் 1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு

**மு.வ உரை**: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

**சாலமன் பாப்பையா உரை**: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

**கலைஞர் உரை**: நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?

**Couplet**: And shall we ever more the sweetness know of that embrace With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace

**English Explanation**: Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?

**Transliteration**: Ootip Perukuvam Kollo Nudhalveyarppak Kootalil Thondriya Uppu

ஊடலுவகை
குறள் 1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

**மு.வ உரை**: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

**சாலமன் பாப்பையா உரை**: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

**கலைஞர் உரை**: ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக

**Couplet**: Let her, whose jewels brightly shine, aversion feign That I may still plead on, O night, prolong thy reign

**English Explanation**: May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

**Transliteration**: Ootuka Manno Oliyizhai Yaamirappa Neetuka Manno Iraa

ஊடலுவகை
குறள் 1330

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

**மு.வ உரை**: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

**சாலமன் பாப்பையா உரை**: காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

**கலைஞர் உரை**: ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்

**Couplet**: A 'feigned aversion' coy to pleasure gives a zest; The pleasure's crowned when breast is clasped to breast

**English Explanation**: Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike

**Transliteration**: Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam Kooti Muyangap Perin