திருவழுந்தூர் சிவக்கொழுந்து
அமரர் கல்கி
இரவு எட்டு அடித்து முப்பதாவது நிமிஷம் ரயில் ஐயம்பேட்டை ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது. பளிச்சென்று வீசிய மின்னலில் ஸ்டேஷன் கட்டடம், பிளாட்பாரம், அப்பால் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம் ஒரு கணம் தெரிந்து அடுத்த கணத்தில் மறைந்தன. மின்னலுக்குப் பிறகு இருட்டு முன்னை விடப் பதின்மடங்கு அதிகமாகத் தோன்றிற்று. மினுக் மினுக்கென்று தோன்றிய ஸ்டேஷன் லாந்தர் அந்த இருட்டை எடுத்துக் காட்டுவதற்காகப் போட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது, 'நீ என்ன என்னை எடுத்துக் காட்டுவது?' என்று இருள் கோபங் கொண்டு அந்த லாந்தரை அமுக்கிக் கொன்றுவிடக் கவிந்து வருவது போலிருந்தது.