உத்தர காண்டம்
ராஜம் கிருஷ்ணன்
இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தர காண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடிவெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன்.